Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - பகுதி 12
6. தக்ஷ காண்டம் / படலம் 14 -20 (908-1562 )

kantapurANam of kAcciyappa civAccAriyAr
part 12 /canto 6 taksha kANTam (verses 908 - 1562)
In tamil script, Unicode/UTF-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections.
Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format.

Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2008.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - பாகம் 11

6. தக்ஷ காண்டம்/ படலம் 14-20 (908 -1562)


14. கயமுகன் உற்பத்திப் படலம் 908 - 1172

15. அனந்தன் சாப நீங்கு படலம் 1173 - 1210

16. தானப் படலம் 1211 - 1256

17. வேள்விப் படலம் 1257 - 1265

18. உமைவரு படலம் 1266 - 1326

19. வீரபத்திரப் படலம் 1327 - 1386

20. யாகசங்காரப் படலம் 1387 - 1562



14. கயமுகன் உற்பத்திப் படலம் (908-1172)




    908 - பாக சாதனன் தொல்லைநாள் வானவப் படையோ
    டேகி யேயசு ரர்க்கிறை தன்னைவென் றிகலில்
    வாகை சூடியே விஞ்சையர் முதலினோர் வாழ்த்தப்
    போக மார்தரும் உலகிடை மீண்டுபோய்ப் புகுந்தான். - 1



    909 - பொன்ன கர்க்கிறை போதலும் பொறாமையிற் புழுங்கி
    வன்னி யுற்றிடும் அலங்கல்போ லுளநனி வாடி
    வென்ன ளித்திடும் அவுணர்தங் கோமகன் வினையேற்
    கென்னி னிச்செயல் எனப்பெரி துன்னியே இனைந்தான். - 2



    910 - பொன்ன கர்க்கிறை போதலும் பொறாமையிற் புழுங்கி
    வெருவ ரும்படி மலைந்திடும் அமரர்பான் மேவிப்
    பொருது வென்றிகொண் டேனக்குமப் பெரும்புகழ் புனைய
    ஒருவ ரெங்குலத் தில்லைகொ லோவென உரையாக்
    குருவி ருந்துழி அணுகியே வணங்கினன் கொடியோன். - 3



    911 - பொன்ன கர்க்கிறை போதலும் பொறாமையிற் புழுங்கி
    பொற்றை யின்சிறை தடிந்தவன் கரரொடும் போர்மேல
    உற்ற காலையில் படையுடன் யான்பொரு துடைந்து
    மற்ற வற்குவென் னளித்தனன் நம்பெரு மரபிற்
    கொற்ற வீரர்க ளியாவரு முடிந்தனர் கூற்றால். - 4



    912 - கழிய மாசினை அடைந்தனம் இன்னலே கரையாம்
    பழிகொள் வேலையில் அழுந்தினம் உடைந்திடு பகைவர்க்
    கழிவும் உற்றனம் பெருந்திறல் அற்றம் அவுணர்
    ஒழியும் எல்லைவந் தெய்திய தோவிவண உரைத்தி. - 5



    913 - சிறுவ ராயினோர் பெருமையிற் பிழைப்பரேல் தெருட்டி
    உறுதி பற்பல கொளுத்திமற் றவர்தமை உயர்ந்த
    நெறியின் ஆக்குதல் குரவர்தங் கடனது நீயே
    அறிதி யாதலின் உய்யுமா றுரைத்தியென் றறைந்தான். - 6



    914 - உரைத்த வாசகங் கேட்டலும் மன்னநீ உளத்தில்
    வருத்த முற்றிடல் என்னவே தேற்றிமேல் வருவ
    கருத்தி லுன்னினன் தெரிதலும் வெதும்பிய காயத்
    தரைத்த சாந்தினை அப்பினன் போலஒன் றறைந்தான். - 7

    (1. பாகசாதனன் - இந்திரன். விஞ்சையர் - வித்தியாதரர்.
    2. வினையேற்கு - பாவியாகிய எனக்கு.
    3. குரு - சுக்கிரன். கொடியோன் - அசுரர் அரசன்.
    4. பொற்றை - மலை.
    7. வெதும்பிய - வெப்பமுற்று. சாந்து - சந்தனம்.)



    915 - வேறு
    ஆதியம் பரமன் தாளே அடைதரு புனிதன் தொல்லை
    வேதியர் தலைவ னான வி£¤ஞ்சன்மெய் யுணர்விற் பூத்த
    காதலன் புலன்க ளாய பகைஞரைக் கடந்த காட்சி
    மாதவ முனிவர்க் கீசன் வசிட்டனென் றுரைக்கும் வள்ளல். - 8



    916 - அன்னவன் மரபின் வந்தோன் அறிஞர்க்கும் அறிஞன் மேலாய்
    மன்னிய நெறிக்கண் நின்றோன் மாகதன் என்னும் பேரோன்
    உன்னரு மறைகள் யாவும் உணர்ந்தவன் உயர்ந்த வீடு
    தன்னையிங் கடைவன் என்னாத் தவந்தனை இயற்ற லுற்றான். - 9



    917 - ஆயவன் தன்பால் இன்றோர் அசுரகன் னிகையைத் தேற்றி
    ஏயினை என்னின் அன்னாள் எய்தியே அவன்ற னோடு
    மேயின காலை ஆங்கோர் வேழமா முகத்தன் உங்கள்
    நாயகன் ஆகத் தோன்றி நற்றவம் புரிவன் அன்றே. - 10



    918 - நற்றவம் புரிதல் காணா நண்ணலர் புரங்கள் மூன்றுஞ்
    செற்றவன் மேவி மேலாஞ் செல்வமுந் திறலும் நல்க
    மற்றவன் வானோர் தொல்சீர் மாற்றியெவ் வுலகும் ஆளுங்
    கொற்றவ னாவன் என்று கூறினான் குரவ னானோன். - 11



    919 - அவ்வுரை கேட்ட லோடும் அடித்துணை இறைஞ்சி ஈது
    செவ்விது செவ்வி தெந்தாய் செய்வல்நீ பணித்த தென்ன
    எவ்வமில் புகரும் அற்றே இயற்றிய சென்மோ என்ன
    மைவரை அனைய மேனி மன்னவன் கடிது மீண்டான். - 12



    920 - மீண்டுதன் னிருக்கை எய்தி விபுதையென் றொருத்தி அன்னாள்
    காண்டகும் எழிலின் மிக்க கன்னிதன் குலத்தில் வந்தாள்
    பூண்டகு நாணி னோடும் பொருந்தினள் அவளை எய்தி
    ஈண்டொரு மொழிகேட் டன்னாய் என்னிடர் சீர்த்தி யென்றான். - 13



    921 - மன்னவர் மன்னன் கூறும் மாற்றமங் கதனைக் கேளாக்
    கன்னிகை யாகி நிற் காமரு வல்லி அன்னாள்
    நின்னடித் தொண்டு செய்யும் நிருதர்தங் குலத்து வந்தேன்
    என்னுனக் கியற்றுஞ் செய்கை இசைந்தன இசைத்தி என்றாள். - 14



    922 - உரையென லோடு மன்னன் உன்குலத் தோரை விண்ணோர்
    பொருதுவென் கண்டு மீண்டு போனதை அறிதி அன்றே
    மருவருங் குழலாய் போரில் வானவர் தம்மை வெல்ல
    ஒருவரும் இல்லை நின்னால் உற்றிட வேண்டுங் கண்டாய். - 15



    923 - ஆங்கதற் கேதுக் கேட்டி அம்பொன்மால் வரைத்தெ னாது
    பாங்கரில் அரிய நோன்பு பயிலுமா கதன்பாற் சென்று
    நீங்கல்செல் லாது பன்னாள் நினைவறிந் தொழுகிக் காலந்
    தீங்கற நாடி அன்னான் செய்தவஞ் சிதைத்துச் சேர்தி. - 16



    9243 - சேருதி யென்னின் அங்கோர் சிறுவன்நின் இடத்தில் தோன்றிப்
    பாருல கனைத்தும் மேலாம் பதங்களும் வலிதிற் கொண்டு
    வீரரில் வீர னாகி வெம்பகை வீட்டி எங்கள்
    ஆரஞர் துடைக்கும் அன்னாய் அன்னவா றமைதி என்றான். - 17

    (8. விரிஞ்சன் : காதலன் - சனகாதியோர்.
    9. அன்னவன் - அவ்வசிட்டன்.
    மாகதன் - ஒரு முனிவன்.
    12. புகர் - சுக்கிரன். 13. விபுதை - இவள் ஒரு அசுர கன்னிகை.
    15. வென் - முதுகு. 16. ஏது - காரணம்.)



    925 - வேந்தன் துரையைக் கேட்ட விபுதையம் முனிவன் தன்பால்
    போந்துன தெண்ண முற்றப் புதல்வனை அளித்து மீள்வல்
    ஏந்தல்நீ இரங்கல் என்றே ஏகினள் இறைவன் வானோர்
    மாய்ந்தனர் இனியென் றுன்னி மகிழ்ச்சியோ டிருந்தான் அங்கண். - 18



    926 - ஏகிய அசுர கன்னி ஏமமால் வரையின் சார்போய்
    மாகதன் பாற்சென் றன்னான் மாதவத் திறத்தை நோக்கி
    ஆகொடி திவனே அல்லா தாரிது புரியும் நீரார்
    மோகமிங் கிவனை யாக்கி முயங்குவ தெவ்வா றென்றாள். - 19



    927 - நேமிகள் அனைத்தும் ஆர நிவந்தெழும் வடவை தன்னை
    மாமுகில் மாற்ற அற்றோ மாற்றவே வல்ல தென்னில்
    காமவேள் எடுத்த செய்ய கணையெலாம் ஒருங்கு சென்றித்
    தோமில்சீர் முனியை வாட்டித் துறவையும் மாற்றும் என்றாள். - 20



    928 - வானுயர் தவத்தின் நிற்கும் மாகதன் யானே யல்ல
    மேனகை வரினும் நோக்கான் விண்ணவர் பகைஞர் தங்கள்
    கோனி· துணரான் போலுங் குறுகிநீ புணர்தி என்றால்
    நானதற் சிசைந்த வாறும் நன்றென நகைத்து நின்றாள். - 21



    929 - போந்தனென் மீண்டும் என்னிற் போற்றலர்க் குடைந்து சோரும்
    வேந்தனென் னுற்றாய் என்று மீளவும் விடுப்பன் அம்மா
    ஏய்ந்தநே யத்தி லென்பால் எய்திமற் றிவனே எற்குக்
    காந்தனே யாக நோற்றுக் காலமும் பார்ப்பன் என்றாள். - 22



    930 - என்றிவை உன்னி உற்றோர்க் கினிதருள் புரியும் வௌ¢ளிக்
    குன்றுறை பெருமான் செய்ய குரைகழல் கருத்துட் கொண்டு
    வன்றிறல் நோன்பின் மிக்க மாகத முனிவன் நேரா
    நின்றருந் தவத்தை யாற்ற நெடும்பகல கழிந்த தன்றே. - 23



    931 - மாதுசெய் தவத்தி னாலும் வரன்முறை வழாத ஊழின்
    ஏதுவி னாலும் அங்கண் இருங்களிற் றொருத்தல் ஒன்று
    காதலம் பிடியி னோடு கலந்துடன் புணரக் காணுஉ
    ஆதரம் பெருகப் பல்கால் நோக்கினன் அருந்த வத்தோன். - 24



    932 - மறந்தனன் மனுவின் செய்கை மனப்படு பொருளை வாளா
    துறந்தனன் காமம் என்னுஞ் சூழவலைப் பட்டுச் சோர்வுற்
    றிறந்தனன் போல மாழ்கி இன்னுயிர் சுமந்தான் இன்று
    பிறந்தனன் இனைய கூட்டம் பெற்றிடு வேனேல் என்றான். - 25



    933 - என்றிது புகன்று முன்செய் தவக்குறைக் கிரங்கி என்றும்
    நின்றது பழியே யேனும் நீடுமேற் காமச் சூர்நோய்
    தின்றுயிர் செகுக்கும் அந்தோ செய்வதிங் கெவனோ என்னா
    வென்றிகொள் முனிவன் தானும் மனத்தொடு வினவல் உற்றான். - 26

    (18. மீள்வல் - திரும்புவேன். 20. நேமிகள் - கடல்கள்.
    21. மேனகை - தேவ மாதரில் ஒருத்தி.
    22. காந்தன் - காதலன். 24. களிறு ஒருத்தல் - ஆண் யானை.
    பிடி - பெண் யானை.
    25. மனுவின் செய்கை - மந்திரம் செபிக்கும் தொழில்.
    26. சூர் - அச்சம்.)



    934 - தீவிடந் தலைக்கொண் டாங்கே தெறுதரு காமச் செந்தீ
    ஓய்வது சிறிதும் இன்றி உள்ளுயிர் அலைக்கும் வேலை
    யாவதென் றாக்கின் இன்னும் அருந்தவங் கூடும் ஆவி
    போவதிற் பயனியா தென்னாப் புணர்ச்சிமேற் புந்தி கொண்டான். - 27



    935 - பேவதற் கெண்ணுப் போதில் பொருவில்சீர் அசுரர்க் கெல்லாங்
    காவலின் ஏவல் போற்றும் கன்னிகை முனிவன் காமத்
    தோய்வதும் பிறவும் எல்லாம் ஒருங்குடன் நோக்கி எண்ணம்
    யாவதும் முடிந்த தென்னா எல்லையில் மகிழ்ச்சி பெற்றாள். - 28



    936 - ஈங்கிது கால மாகும் இடனுமாம் இதற்கு வேறு
    தீங்கிலை இனைய கூட்டஞ் செய்தவஞ் செய்த தென்னா
    வாங்கிய நுதலி னாளும் வல்விரைந் தெழுந்து தூயோன்
    பாங்கரின் அணுகிப் பொற்றாள் பணிந்தனள் பரிவு கூர. - 29



    937 - மின்னிடை பணிந்து நிற்ப மெய்யுறுப் பனைத்தும் நோக்கிப்
    பின்னரும் மால்மீக் கொள்ளப் பித்தரின் மயங்கா நின்று
    கன்னியும் என்னை வெ·குங் காந்தரு வத்தி னாளும்
    இன்னவ ளாயின் அன்றோ என்னுயிர் உய்யும் என்னா. - 30



    938 - கருத்திடை உன்னி யார்நீ கன்னியோ என்ன லோடும்
    அருத்திகொள் முனியை நோக்கி அன்னதாம் என்ன நம்பால்
    வரத்தகுங் கருமம் என்கொல் வல்லையில் இயம்பு கென்றான்
    விரத்தரில் தலைவ னாகி வீடுபெற் றுய்ய நோற்றான். - 31



    939 - முருந்தெனும் முறுவ லாளும் முனிவநீ கணவ னாக
    இருந்தவம் புரிந்தேன் பன்னாள் இன்றது முடிவ தாகப்
    பொருந்தினன் ஈண்டு நின்னைப் புல்லிய வந்தேன் என்ன
    வருந்துறா தமுதம் பெற்ற மாக்கள்போல் மகிழ்ச்சி உற்றான். - 32



    940 - என்பெருந் தவமும் பன்னாள் என்பொருட் டாக நோற்ற
    நின்பெருந் தவமும் அன்றோ நின்னுடன் என்னை ஈண்டே
    அன்புறக் கூட்டிற் றம்மா அடுகளி றென்னப் புல்லி
    இன்புற வேண்டும் நீயும் இரும்பிடி யாதி என்ன. - 33



    941 - மெல்லியல் தானும் அங்கோர் வெம்பிடி யாகித் தோன்றி
    எல்லையில் காதல் பின்னும் ஈதலும் முனிவன் தானும்
    மல்லலங் களிற தாகி வானுயர் புழைக்கை நீட்டிப்
    புல்லினன் ஊற்றந் தானே புணர்ச்சியிற் சிறந்த தன்றே. - 34



    942 - நையுறும் உள்ளம் ஆதி நான்மையும் பொறியில் நண்ணி
    ஐயுறு புலனோர் ஐந்தும் ஆவியின் ஒருங்க அன்னாள்
    மெய்யுறு புணர்ச்சித் தாய வேட்கையின் மேவ லுற்லுச்
    செய்யுறு காம முற்றித் தீர்ந்திடு காலை தன்னில். - 35

    (29. கூட்டம் - சேர்க்கை. பரிவு கூர - அன்புமிக.
    32. முருந்து - மயிலிறகின் அடி.
    35. உள்ளம் ஆதீ நான்மை - மனம் முதலிய அந்தக் கரணங்கள் நான்கும்.)



    943 - அயன்முதல் தலைவர் வானத் தமர்தரு புலவர் ஆற்றுஞ்
    செயன்முறைக் கடன்கள் யாவுஞ் சிந்தினன் சிதைக்கும் வண்ணம்
    வயமுகத் தடவு கொண்ட வயிர்த்திடு மருப்பின் நால்வாய்க்
    கயமுகத் தவுணன் ஆங்கே கதுமென உதயஞ் செய்தான். - 36



    944 - பற்றிய பலகை ஔ¢வாள் விதிர்த்தனன் பரவை ஞாலஞ்
    சுற்றினன் வரைகள் யாவுந் துகள்பத் துணைத்தாள் உந்தி
    எற்றினன் உருமே றஞ்ச இரட்டினன் உலக மெல்லாஞ்
    செற்றிடுங் கடுவ தென்னத் திரிந்தனன் சீற்றம் மிக்கான். - 37



    945 - அன்னதோர் பிடியு ரோமம் அளப்பில அவற்றில் ஆங்கே
    மின்னிலங் கெயிற்றுப் பேழ்வாய் விளங்கெழில் செக்கர் வாய்ந்த
    சென்னியங் குடுமி வீரர் தெழித்தெழீஇச் செங்கை தன்னில்
    துன்னிரும் படைக ளோடுந் தோன்றினர் தொகையில் ஆன்றோர். - 38



    946 - இன்னவ ரோடு கூடி இபமுகத் தவுணன் ஆர்ப்பத்
    தன்னையும் பயந்தோன் தானுந் தளர்ந்தனர் இரியல் போகி
    முன்னுறும் உருவங் கொள்ள முனிவரன் உணர்வு தோன்ற
    உன்னிநின் றிரங்கி யேங்கி ஊழ்முறை நினைந்து நைந்தான். - 39



    947 - மாயமாங் காமம் என்னும் வலையிடைப் பட்டு நீங்குந்
    தூயவன் முன்னம் நின்ற தோகையைச் சுளித்து நோக்கி
    நீயெவர் குலத்தில் வந்தாய் நினைந்ததென் கழறு கென்னச்
    சேயிழை மரபும் வந்த செய்கையும் உணர்த்தி நின்றாள். - 40



    948 - வரன்முறை ணர்த லோடும் மாகத முனிவன் யானே
    தரணியில் உயிர்க ளான சராசரந் தனக்கு மேலாஞ்
    சுரகுலந் தனக்கும் இன்றே துன்புறு வித்தேன் என்னா
    எரியுறு தளிர்போல் வாடி இன்னலங் கடலுட் பட்டான். - 41



    949 - சிலபொழு திரங்கித் தேறிச் செயிழை மடந்தை நுங்கோன்
    மெலிவுநின் னெண்ணந் தோனும் வீடுபெற் றுய்ய யான்முன்
    பலபகல் புரிந்த நோன்பும் பாருல கனைத்தும் வானோர்
    உலகமு முடிந்த வேநீ ஒல்லையிற் போதி என்றான். - 42



    950 - போதிநீ என்ன லோடும் பொன்னடி வணங்கிச் சென்று
    தாதுலாந் தெரிய லாகத் தயித்தியர்க் கிறைபால் எய்தி
    ஈதெலாம் உரைத்த லோடும் எல்லையின் மகிழ்ச்சி யாகிக்
    காதல்கூர் தபனற் காணுங் காலையங் கமலம் போன்றான். - 43

    (36. வய - பெருமை. தடவு - வளைவு. வயிர்த்திடும் - வைரம்
    பொருந்திய. நால்வாய் - தொங்குகின்ற வாய்.
    37. பலகை - கேடகம்.
    39. இபமுகம் - யானைமுகம்.
    40. தூயவன் - இங்கு மாகத முனிவன். சுளித்து - கோபித்து.
    சேயிழை - இங்கு விபுதை.
    41. சராசரம் - சரம் + அசரம். சரம் - அசையும் பொருள்; இது இயங்கியற்
    பொருள் (இயங்குதிணை) அல்லது சங்கமம் எனவும் பெயர்பெறும்.
    அசரம் - அசையாப்பொருள் இது நிலையியற் பொருள் (நிலைத்திணை)
    அல்லது தாவரம் எனவும் பெயர்பெறும்.
    43. தாது - மகரந்தம். தயிர்த்தியர் - அசுரர். தபனன் - சூரியன்.
    காணும் காலை - உதயகாலம்; கண்டபொழுதுமாம்.)



    951 - தாங்கரும் உவகை யோடுந் தானவர்க் கரசன் நண்ண
    ஈங்குறு முனிவன் முன்போல் இனிதுநோன் பியற்றப் போனான்
    ஆங்கவண் உதித்த மைந்தர் அனைவரும் முதல்வன் தன்னோ
    டோங்கலின் குலங்கள் மேரு வுடன்நடந் தென்னச் சென்றார். - 44



    952 - சீற்றங்கெகள் தறுகண் நாகம் ஒருவழித் திரண்ட தென்னக்
    கூற்றம்பல் லுருவு கொண்டு குலாயகொட் பென்ன ஊழிக்
    காற்றெங்கும் பரவிற் றென்னக் கடலிடைப் பிறந்த நஞ்சம்
    ஊற்றங்கொண் டுலாய தென்ன உலகெலாந் திரிதந் துற்றார். - 45



    953 - மலையிஆ¨பி பொடிப்பர் ஏனை மண்ணினை மறிப்பர் வாரி
    அலையினைக் குடிப்பர் கையால் ஆருயிர்த் தொகையை அள்ளி
    உலையினைப் பொருவு பேழ்வாய் ஓச்சுவா¢ பரிதி யோடு
    நிலையினைத் தடுப்பர் சேடன் நெறிதரப் பெயர்வர் மாதோ. - 46



    954 - தக்கதோர் அவுண ரோடுந் தந்திமா முகத்து வீரன்
    திக்கெலாம் உலவி யெல்லாத் தேயமும் ஒருங்கே சென்று
    மக்களே யாதி யான மன்னுயிர் வாரி நுங்கித்
    தொக்கதோர் செந்நீர் மாந்தித் துண்ணெனத் திரியும் அன்றே. - 47



    955 - அத்திறம் வைகல் தோறும் அவுணரும் இறையும் ஏகிக்
    கைத்துறும் உயிர்கள் யாவுங் கவர்ந்தனர் மிரைந்தா ராகப்
    பொய்த்தவர் வெறுக்கை என்னப் பொயின உயிர்கள் சால
    எய்த்தனர் முனிவர் தேவர் இறந்தது மறையின் நீதி. - 48



    956 - முகரிமை அடைந்த வன்தோன் முகத்தவன் அவுண ரோடும்
    அகலிட மிசையே இவ்வா றமர்தலும் அனைய தன்மை
    தகுவர்கள் முதல்வன் ஓர்ந்து தமதுதொல் குரவ னான
    புகரினை விடுப்ப அன்னான் போந்திவை புகலல் உற்றான். - 49



    957 - வேறு
    ஔ¢ளி தாகிய உங்குலத் துற்றுள
    மள்ளர் யார்க்குமொர் வான்குரு வாயினேன்
    தௌ¢ளு பன்மறைத் திட்பமுந் தேர்ந்துளேன்
    வௌ¢ளி என்பதொர் மேதகு பேரினேன். - 50



    958 - உங்கு லத்துக் கொருமுத லாகிய
    சிங்க மன்ன திறலினன் உய்த்திட
    இங்கு நின்புடை எய்தினன் மேல்நெறி
    தங்கு நன்னயஞ் சாற்றுதற் கேயென்றான். - 51



    959 - குரவ னாகிக் குறுகிய சல்லியன்
    பரிவொ டீது பகர்தலும் ஆங்கவன்
    திருவ டித்துணை சென்று வணங்கியே
    கரிமு கத்தன் கழறுதல் மேயினான். - 52

    (45. தறுகண் - அஞ்சாமை. கொட்புஎன்ன - உலவினாற்போல்.
    46. சேடன் - ஆதி சேடன்.
    47. நுங்கி - விழுங்கி. செந்நீர் - இரத்தம்.
    48. பொய்த்தவர் - பொய்யுரைப்போர்.
    49. முகரிமை - முதன்மை. தோல்முகத்தவன் - கயமுகாசுரன்.
    50. மள்ளர் - வீரர். 52. சல்லியன் - சுக்கிரன்.)



    960 - இறுவ தின்றிய எங்குலத் தோர்க்கெலாம்
    அறிவ நீஅரு ளால்அடி யேற்கிவண்
    உறுதி கூறுகின் றாய்இதன் ஊங்கினிப்
    பெறுவ தொன்றுள தேயெனப் பேசினான். - 53



    961 - அந்த வேலை அவுணர்கள் யாவருஞ்
    சிந்தைமேல் கொண்ட தீதினை நீத்திடா
    எந்தை யார்தங் குரவர் இவரெனா
    வந்து பார்க்கவன் தாளில்வ ணங்கினார். - 54



    962 - சீத வான்முகிற் கோள்எனுஞ் செவ்வியோன்
    ஆதி தன்னரு ளால்அவு ணர்க்கிறை
    போத கன்முகம் நோக்கிப் பொருவிலா
    ஓதி மாண்பின் இவையுரைக் கின்றனன். - 55



    963 - வேறு
    மீயுயர் தவத்தை ஆற்றாய் விமலனை உணராய் ஒல்லார்
    மாயமுந் திறலுஞ் சீரும் வன்மையுஞ் சிறிதுந் தேராய்
    ஏயவிவ் வுடலம் நில்லா தென்பதுங் கருதாய் வாளா
    போயின பன்னாள் என்நீ புரிந்தனை புந்தி இல்லாய். - 56



    964 - முப்பகை கடந்து மற்றை முரட்பகை முடித்திட் டைம்பான்
    மெய்ப்பகை கடந்து நோற்று விழுத்தகும் ஆற்றல் பெற்றுத்
    துப்பகை தொண்டைச் செவ்வாய்ச் சூரொடு புணரும் வானாட்
    டப்பகை கடந்து தொல்சீர் அடைந்திலை போலும் அன்றே. - 57



    965 - இம்மையில் இன்பந் தன்னைப் புகழொடும் இழத்தி மேலை
    அம்மையில் இன்பந் தானும் அகன்றஆ போலும் அன்றே
    உம்மையும் இன்பம் என்ப துற்றிலை என்னிறி¢பின்னை
    எம்மையில் இன்பந் துய்க்க இசைந்துநீ இருக்கின் றாயால். - 58



    966 - ஆக்கமுந் திறலுஞ சீரும் ஆயுவும் நலனும் மேலாம்
    ஊக்கமும் வீடும் எல்லாம் தவத்தின தூற்றம அன்றோ
    நோக்குறும் இந்நாள் காறும் நோற்கலா தினை வெல்லாம்
    போக்குவ தென்னை கொல்லோ புகலுதி இகலும் வேலோய். - 59



    967 - ஆற்றிடு தருமம் விஞ்சை அரும்பெறல் மகவும் சீர்த்தி
    ஏற்றிடு கொற்றம் ஆற்றல் இருநிதி பெருமை இன்பம்
    நோற்றிடு விரதஞ் சீலம் நூவலரும் போதம் யாவுங்
    கூற்றுவன் கூவும் ஞான்று குறித்திடிற் கூடு மோதான். - 60

    (53. இறுவது - அழிவது. அறிவ - ஞானாசிரியனே.
    54. பார்க்கவன் - சுக்கிரன்.
    55. முகிற்கோள் எனும் செவ்வியோன் - சுக்கிரன்.
    57. முப்பகை - காமம், வெகுளி, மயக்கம் என்னும் முப்பகை.
    முரட்பகை - வலியபகை. ஐம்பால் மெய்ப்பகை - ஐம்புலனாகிய உட்கபகை.
    58. அம்மை - அவ்வுலகம். உம்மை - நடுவணதான இக்காலம்.
    எம்மை - எந்தச்சென்மம்.
    60. விஞ்சை - வித்தை. மகவு - புத்திரப்பேறு. சீலம் - ஒழுக்கம்.
    போதம் - நல்லுணர்வு. குறித்திடில் - கருதினால்.)



    968 - காலனா கியதோர் சேர்ப்பன் காலமாம் வலையை வீசி
    ஞாலமாந் தடத்தில் வைகும் நல்லுயிர் மீன்கள் வாரி
    ஏலவே ஈர்த்து நின்றான் இறுதியாங் கரைசேர் காலை
    மேலவன் கையுட் பட்டு மெலிவொடு வீடும் அன்றே. - 61



    969 - சீரிர துடலம் என்கை தெரிந்திலை நிலைத்தல் செல்லா
    தாருயிர் வகையும் என்ப தறிந்திலை ஆயுட் பன்னாட்
    சாருதல் வேண்டு மென்னுந் தகைமையும் நினைத்தி அல்லை
    பாருயிர் இறப்ப நுங்கி இருப்பதோ பரிசு மாதோ. - 62



    970 - மந்திரம் இல்லை மாயம் இல்லையோர் வரமும் இல்லை
    தந்திரம் இல்லை மேலோர் தருகின்ற படையொன் றில்லை
    அந்தர வமர ரெல்லாம் அனிகமாய்ச் சூழ நின்மேல்
    இந்திரன் போருவான் செல்லின் யாதுநீ செய்தி மாதோ. - 63



    971 - சிறியதோர் பயனைத் தூக்கித் தீயவர் செய்யுஞ் சூழ்ச்சி
    அறிகில வாகி வீழவுற் றகப்படு மாவும் மீனும்
    பறவையும் என்ன எல்லார் புணர்ப்பினிற் படுதி இன்னே
    விறலொடு வலியுஞ் சீரும் மேன்மையும் இன்றி உற்றாய். - 64



    972 - ஆதலின் எவர்க்கும் மேலாம் அரன்றனை உன்னி ஆற்ற
    மாதவம் புரிதி அன்னான் வரம்பல கேட்ட வெல்லாந்
    தீதற உதவும் பின்னர்த் தேவர்உன் ஏவல் செய்வார்
    மேதகும் உலகுக் கெல்லாம் வேந்தனாய் இருத்தி என்றான். - 65



    973 - சொன்னவை கேட்ட லோடுந் தொழுதகை அவுணர் தோன்றல்
    முன்னிவை யாவ ரேனும் மொழிந்தனர் இல்லை யானும்
    இன்னவை புரிதல் தேற்றேன் இனித்தவம் இயற்று கின்றேன்
    அன்னவை புரியுந் தன்மை அருள்செயல் வேண்டும் என்றான். - 66

    (61. காலன் - எமன். சேர்ப்பன் - நெய்தனிலத்தவனான செம்படவன்.
    மேல் - பின்னர். அவன் - அந்த எமன். வீடும் - அழியும்.
    63. அனிகம் - சேனை.
    64. வீழவுற்று அகப்படும் - வலையிலும், தூண்டிலிலும், கண்ணியிலும்
    முறையே அகப்பட்டுக் கொள்ளுகின்ற. விறல் - வெற்றி. )



    974 - வேறு
    ஐயவினைசெய் பொறிகளெலாம் அரங்கமெனக்
          கறங்கும்அறி வடங்கு கின்ற
    மெய்வினைய மந்திரமுந் தந்திரமும்
          அங்கமுறு விதியி னோடு
    கைவினையும் உட்கோளும் புறங்காப்பும்
          விரதஞ்செய் கடனும் ஏனைச்
    செய்வினையும் உணர்வித்து மேருவின்பால்
          தவம்புரியச் செல்லு கென்றான். - 67



    975 - ஏவுதலுங் கயமுகத்தோன் அவுணரொடும்
          புகரடியின் இறைங்சி அங்கண்
    மேவுவன்யான் எனவுரையா விடைகொண்டு
          நோற்றிடுவான் விரைவின் ஏகக்
    காவதமங் கோரிரண்டு கடப்பளவுந்
          தானின்று கண்ணின் நோக்கிப்
    போவனினி எனமகிழ்ந்து மீண்டுபோய்
          அவுணர்பதி புகுந்தான் அன்றே. - 68



    976 - அக்காலத் தெதிர்வந்த இறைவனுடன்
          புகுந்தவெலாம் அறைய அன்னான்
    இக்காலந் தானன்றோ அருள்செய்தீர்
          எனவியம்ம்பி ஏத்தி அன்பால்
    முக்கால்வந் தனைசெய்து விடுத்திடப்போய்த்
          தன்பதத்தின் முன்ன மேபோல்
    மிக்கானும் வீற்றிருந்தான் கடவுளரும்
          புரந்தரனும் விழுமங் கொள்ள. - 69



    977 - மாண்டகுமவ் வலியகலன் மருப்பதனை
          எதிர்ந்துதொல்லை வைப்பின் ஈங்கு
    மீண்டியதிண் காழிரும்பின் எ·கமுதல்
          வியன்படைகள் இயற்சை என்னக்
    காண்டகைய தங்குரவ னானபுகர்
          உரையதனைக் கருத்துட் சேர்த்தி
    ஆண்டகைசேர் இபமுகத்தோன் அவுணருடன்
          தவம்புரிவான் அகலல் உற்றான். - 70



    978 - அங்கண்முகில் படிந்தறியா மேருவினுக்
          கொருசார்போய் அவுணர் வேந்தன்
    துங்கமிகு கருவிகளாய் வேண்டுவன
          கொணர்வித்துத் தூநீர் ஆடிச்
    செங்கதிரோன் தனைநோக்கி ஆற்றுகடன்
          முடித்துமுன்னைத் தீர்வு நேர்ந்து
    தங்கள்குர வன்பணித்த பெற்றியினால்
          மிக்கதவந் தன்னைச் செய்வான். - 71



    979 - பொறியிலுறு புலனவித்து நவைநீக்கிக்
          கரணவியல் போக்கி ஆசான்
    குறிவழியே தலைநின்று மூலவெழுத்
          துடனைந்துங் கொளுவி எண்ணி
    அறிவுதனில் அறிவாகி உயிர்க்குயிராய்ப்
          பரம்பொருளாய் அமல மாகிச்
    செறிதருகண் ணுதற்கடவுள் அடிபோற்றி
          அவனுருவைச் சிந்தை செய்தான். - 72

    (68. காவதம் - காதம்; ஓர் அளவு. 69. விழுமம் - துன்ப
    70. அகலம் - மார்பு. கயமுகன் தவத்திற்குச் செல்கை, அவன் தந்தங்களில்
    பட்டுத் திரும்பும் எ·கம் முதலிய ஆயுதத்தின் மீட்சியை ஒத்து என்க.
    71. செங்கதிரோன்தனை நோக்கி ஆற்றுகடன் - சூரிய நமஸ்காரம்.
    72. முதல் இரண்டடிகள் இறைவனைத் தியானிக்க வேண்டும் முறையினை
    விளக்குகின்றன. கரணம் - அந்தக் கரணம். மூவவெழுத்து - பிரணவம்.
    ஐந்து - பட்சாட்சரம். கொளுவி - கலந்து.)



    980 - வேறு
    ஆயிரம் ஆண்டுபுல் லடகு மேயினான்
    ஆயிர மாண்டுசில் புனல்அ ருந்தினான்
    ஆயிர மாண்டள வனிலம் நுங்கினான்
    மாயிரும் புவியுயிர் மடுக்கும் வாயினான். - 73



    981 - காலமூ வாயிரங் கழிந்த பின்முறை
    மாலுறு மருத்தெனும் மாவைத் தூண்டியே
    மூலவெங் கனலினை முடுக்கி மூட்டுறா
    மேலுறும் அமிர்தினை மிசைதல் மேயினான். - 74



    982 - கண்டனர் அதுசுரர் கவலுஞ் சிந்தையர்
    திண்டிறல் அவுணன்இச் செய்கை முற்றுமேல்
    அண்டமும் புவனமும் அலைக்கு மேயெனாக்
    கொண்டனர் தம்பதி அறியக் கூறினார். - 75



    983 - கூறிய செயலினைத் தேர்ந்து கொற்றவன்
    ஆறிய வெகுட்சியன் அயர்ந்து சோர்வுறா
    வீறியல் வாய்மையும் விறலும் ஆண்மையும்
    மாறிய வோவெனா மறுக்கம் எய்தினான். - 76



    984 - புலர்ந்தனன் இரங்கினன் பொருமல் எய்தினான்
    அலந்தனன் உயிர்த்தனன் அச்சங் கொண்டனன்
    உலந்தனன் போன்றனன் ஒடுங்கித் தன்னுளங்
    குலைந்தனன் அவன்செயல் கூறற் பாலதோ. - 77



    985 - ஈசனை யன்றுகா றெதிரக் கண்டிலன்
    காய்சினம் அகன்றிடு கயமு கத்தினான்
    தேசிகன் அருளினால் தீயின் கண்ணுறீஇ
    மாசறு தவஞ்செய மனத்து முன்னினான். - 78



    986 - சுற்றுற நாற்கனல் சூழ நள்ளிடை
    மற்றொரு பேரழ வதிய அன்னதில்
    கொற்றவெங் கயமுகக் குரிசில் தாள்நிறீஇ
    நற்றவம் இயற்றினான் நாதற் போற்றியே. - 79

    (73. அடகு - இலைகள். அனிலம் - காற்று.
    74. மருத்தெனும் மாவை - பிராண வாயு என்னும் குதிரையை.
    மூல வெங்கனல் - மூலாக்கினி. மூட்டுறா - (பிரம நாடியில்) மூட்டச்செய்து.
    75. தம்பதி - தமது அரசன்; இந்திரன்.
    76. வெகுட்சி - கோபம். 77. புலந்தனன் - வருந்தி. பொருமல் - அழுதல்.
    அலந்தனன் - துன்பமுற்று. உலந்தனன் - வாடி.
    78. தேசிகன் அருளால் - (தவத்திற்கு இரங்கி இறைவன் வராவிடில்
    தீயினின்று தவம்செய் என்று) சுக்கிரன் அருளியபடி.
    79. நள்ளிடை - நடுவிடம்.)



    987 - மேயின கொழும்புகை மிசைக்கொண் டாலெனத்
    தீயழல் நடுவுறச் செந்நின் றையிரண்
    டாயிரம் ஆண்டையின் அவதி ஆருயிர்
    நோயுற இபமுகன் நோற்றல் ஓம்பினான். - 80



    988 - புழைக்கையின் முகத்தினன் புனித மார்தரு
    தழற்சிகை மீக்கொளத் தனது தாள்நிறீஇ
    விழுத்தக நோற்றலை வியந்து நோக்குறீஇ
    அழற்பெருங் கடவுளும் அருள்செய் தானரோ. - 81



    989 - அன்னதோர் அமையில் அவுணன் மாசுடல்
    வன்னியில் உறுத்துகார் இரும்பின் மாண்டது
    பொன்னினும் மணியினும் பொலிந்து பூத்தது
    மின்னிவர் வச்சிர மிடலுஞ் சான்றதால். - 82



    990 - ஏற்றநந் தொன்மர பியல்வ ழாமலே
    போற்றிய வருமிவன் பொறையும் மேன்மையும்
    நோற்றிடு திட்பமும் நுவலற் பாலவோ
    நூற்றுதும் அலரெனா அவுணர் தோன்றினார். - 83



    991 - வீசினர் நறுமலர் வியப்பின் நன்மொழி
    பேசினர் புகழ்ந்தனர் பிறங்கும் ஆர்வத்தால்
    ஆசிகள் புகன்றனர் அமரர் தானையை
    ஏசினர் அவர்தம தின்னல் நோக்குவார். - 84



    992 - தளப்பெரும் பங்கயத் தவிசின் மீமிசை
    அளப்பருங் குணத்துடன் அமா¢ந்த நாயகன்
    உளப்பட நோக்கினன் உவந்து பூமுடி
    துளக்கினன் அமரர்கள் துணுக்கம் எய்தினார். - 85



    993 - இன்னணம் அருந்தவம் இயற்றும் எல்லையில்
    பொன்னவிர் சடைமுடிப் புனித நாயகன்
    அன்னது நாடியே அவுண ருக்கிறை
    முன்னுற வந்தனன் மூரி யேற்றின்மேல். - 86

    (80. அவதி - காலம். 81. புழைக்கை - துதிக்கை.
    82. கார் இரும்பின் - காய இரும்பைப்போல.
    மாண்டது - மாட்சிமையுற்றது. மிடல் - வலிமை.
    83. பொறை - சாந்த குணம். திட்பம் - திண்மை.
    85. நாயகன் - சிவன்; கயமுகனுமாம்.
    86. மூரி - வலிமை; திமிலுமாம்.)



    994 - வேறு
    வந்து தோன்றலும் மற்றது நோக்கியத்
    தந்தி மாமுகத் தானவன் நோன்பொரீஇச்
    சிந்தை அன்பொடு சென்னியிற் கைதொழு
    தெந்தை தன்னை இறைஞ்சிநின் றேத்தினான். - 87



    995 - போற்று கின்றுழிப் புங்கவன் இன்றுகா
    றாற்று நோன்பில் அயர்ந்தனை நீயினிப்
    பேற்றை வேண்டுவ பேசினை கொள்கெனத்
    தேற்ற மிக்கவன் செப்புதல் மேயினான். - 88



    996 - வேறு
    மாலயன் இந்திரன் முதல்வ ரம்பிலோர்
    மேலுறு தகையினர் வெய்ய போரிடை
    ஏலுவர் என்னினும் எனக்கு வென்னிட
    ஆலமர் கடவுள்நீ அருளல் வேண்டுமால் - 89



    997 - எற்றுவ வெறிகுவ ஈர்வ எய்குவ
    குற்றுவ முதலிய குழுக்கொள் வான்படை
    முற்றுற வரினும்யான் முடிவு றாவகை
    அற்றமில் பெருமிடல் அளித்தல் வேண்டுமால். - 90



    998 - மிக்கதோர் அமரரால் வியப்பின் மானுட
    மக்களால் அவுணரால் மற்றை யோர்களால்
    தொக்குறு விலங்கினால் துஞ்சி டாவகை
    இக்கணந் தமியனேற் கீதல் வேண்டுமால். - 91



    999 - என்னிக ராகிவந் தொருவன் என்னொடு
    முன்னுற வெஞ்சமர் முயலும் என்னினும்
    அன்னவன் படையினும் அழிவு றாவகை
    பொன்னவிர் வேணியாய் புரிதல் வேண்டுமால். - 92



    1000 - வரந்தரு கடவுளர் முனிவர் மற்றையோர்
    இருந்திடும் உலகெலாம் என்ன தாணையில்
    திரிந்திடும் ஆழியுங் கோலுஞ் சென்றிடப்
    புரிந்திடும் அரசியல் புரிதல் வேண்டுமால். - 93



    1001 - அன்றியும் ஒன்றுள தடியன் சூழ்ச்சியால்
    பொன்றினும் பிறவியுட் புகாமை வேண்டுமால்
    என்றலு நோற்றவர்க் கேதும் ஈபவன்
    நன்றவை பெறுகென நல்கி யேகினான். - 94



    1002 - பெற்றனன் படைகளும் பிறவுந் தன்புறஞ்
    சுற்றிடு கிளையெலாந் தொடர்ந்து சூழ்தர
    உற்றனன் காண்டகும் உம்பர் உங்குவன்
    மற்றொரு கயமுகன் என்று மாழ்கினார். - 95



    1003 - காழுறு பெருந்தரு நாறு காசினி
    வீழுறு தூரொடு மெலிந்து நின்றன
    ஊழுறு பருவம்வந் துற்ற காலையில்
    சூழுறு தொன்னிலை என்னத் தோன்றினான். - 96

    (89. ஆலமர் கடவுள் - கல்லால் நிழலில் அமரும் கடவுள்; தக்ஷ¢ணாமூர்த்தி.
    93. ஆழி - ஆக்கினா சக்கரம். கோல் - செங்கோல்.
    94. சூழ்ச்சி - பகைவர் வஞ்சனை.
    95. தவம் செய்யு முன் இரும்பென விளங்கிய உடலம் தவம்செய்த
    பின் பொன்னென விளங்கியதால் கயமுகனை,
    “மற்றொரு கயமுகன்” என்றார். 96. பெருந்தரு - ஆலமரம்.
    நாறு - நாறுகள். தூர் - சிறு வேர்களான விழுதுகள்.
    ஊழுறு பருவம் - நற்பருவம். கயமுகன் பிற்காலத்தில் தவப்
    பெருமையால் சேனை வன்மை, ஆயுத வன்மை முதலியவற்றுடன்
    விளங்கினான் என்பது இச்செய்யுளின் உட்கருத்து.)



    1004 - அற்புதம் எய்தினன் அலைகொள் வாரியில்
    புற்புத மாமெனப் புளகம் பூத்துளான்
    சொற்பகர் வரியதோர் மதர்ப்பின் சும்மையான்
    சிற்பரன் கருணையில் திளைத்தல் மேயினான். - 97



    1005 - அன்னது தேர்வுறீஇ அவுணர் தொல்குல
    மன்னனும் வௌ¢ளியும் மதங்க மாமுகன்
    தன்னைவந் தெய்தியே சயமுண் டாகெனப்
    பன்னரும் ஆசிகள் பகர்ந்து மேயினார். - 98



    1006 - தண்ணளி யில்லதோர் தந்தி மாமுகன்
    அண்ணலங் கடகளிற் றமரர் கோனையும்
    விண்ணவர் பிறரையும் வென்று மீண்டுபின்
    மண்ணுல கதனிடை வல்லை எய்தினான். - 99



    1007 - வேறு
    புவனி தன்னிடைப் போந்துபின், அவுணர் கம்மிய அறிஞனை,
    நுவலும் அன்பொடு நோக்குறா, உவகை யால்இவை யுரைசெய்வான். - 100



    1008 - நாவ லந்தரு நண்ணுமத்,
    தீவின் மேதகு தென்றிசைப்,
    பூவி லோர்நகர் புரிதியால்,
    மேவ வென்று விளம்பவே. - 101



    1009 - பூவின் மேல்வரு புங்கவத்,
    தேவு நாணுறு செய்கையில்,
    காவன் மாநகர் கண்டதிற்,
    கோவி லொன்று குயிற்றினான். - 102



    1010 - வேறு
    வெங்கண் மேதகு வேழமு கத்தனைத்
    தங்கள் தொல்பகை தாங்குவ தாமெனச்
    சிங்க மாற்றுந் திருமணிப் பீடமொன்
    றங்கவன் வைக ஆற்றினன் அவ்விடை. - 103



    1011 - இனைத்தி யாவும் இமைப்பினில் கம்மியன்
    நினைப்பி னில்செய் நிலைமையை நோக்கியே
    சினத்தின் நீங்கிய செய்தவத் தேசிகன்
    மனத்தி னூடு மகிழ்ச்சியின் மேயினான். - 104



    1012 - காமர் தங்கிய காப்பியன் அந்நகர்
    தூம தங்கெழு தோல்முகற் காதலான்
    மாம தங்க புரம்என மற்றொரு
    நாமம் அங்கதற் கெய்திட நாட்டினான். - 105

    (98. அவுணர் தொல்குல மன்னன் - அசுரேந்திரன்.
    104. தேசிகன் - சுக்கிரன்.
    105. காப்பியன் - சுக்கிரன். தூ - சிந்துகின்ற. மதங்கபுரம் -
    இது கயமுகன் நகரம்.)



    1013 - அந்த மாநகர் ஐதெனக் கம்மியன்
    சிந்தை நாடினன் செய்திடு காலையில்
    தந்தி மாமுகத் தானவன் கண்ணுறீஇ
    அந்தம் இல்லதொ ரார்வமொ டேகினான். - 106



    1014 - காத மங்கொரு பத்தெனக் கற்றவர்
    ஓதுகின்ற ஒழுக்கமும் ஒன்றெனும்
    பாதி யெல்லைப் பரப்பும் பெறுநகர்
    வீதி நோக்னின் விம்மிதம் எய்தினான். - 107



    1015 - அரக்கர் தொல்லை அவுணர்க் கரசொடு
    தருக்கு தானவர் தம்முடன் எய்தியே
    பெருக்க முற்றதன் பின்னவர் இன்னவர்
    இருக்க நல்கினன் இந்நகர் யாவையும். - 108



    1016 - அங்கண் மேவும் அணிமணிக் கோயிலின்
    மங்க லத்தொடு வல்லையின் ஏகியே
    சிங்க ஏற்றின் சிரங்கெழு பீடமேல்
    வெங்கை மாமுகன் வீற்றிருந் தானரோ. - 109



    1017 - போந்து பின்னர்ப் பொருவருந் தானவர்
    வேந்தன் மாமக ளான விசித்திர
    காந்தி தன்னைக் கருதுநன் னாளினில்
    ஏந்தல் முன்வரைந் தின்புற மேவினான். - 110



    1018 - விண்ணின் மாந்தர்கள் மேதகு தன்குலம்
    நண்ணு மாதர்கள் நாகர்தம் மாதர்கள்
    வண்ண விஞ்சையர் மாதர்க ளாதியாம்
    எண்ணில் மாதரைப் பின்வரைந் தெய்தினான். - 111



    1019 - பொன்ன கர்க்கும் பொலங்கெழு புட்பக
    மன்ந கர்க்குமவ் வானவர் ஈண்டிய
    எந்ந கர்க்கும் இலாவளம் எய்திய
    அந்ந கர்க்கண் அமர்ந்திடல் மேயினான். - 112



    1020 - சூழும் வானவர் தானவர் துன்னியே
    தாழ ஏழுல குந்தன தாணையால்
    வாழி சேர்கொடுங் கோலொடு மன்னுபேர்
    ஆழி செல்ல அரசுசெய் தானவன். - 113



    1021 - ஆவுஞ் சங்கமும் அம்புய மும்மலர்க்
    காவும் மாமணி யுங்கம லாலயத்
    தேவும் பின்வருந் தேவரும் மாதரும்
    ஏவல் செய்ய இனிதிருந தானரோ. - 114

    (106. ஐது என - அழகென. 109. வெங்கைமாமுகன் - கயமுகன்.
    110. விசித்திர காந்தி - இவள் கயமுகன் மனைவி; அசுரேந்திரன் மகள்.
    111. வரைந்து - மணந்து.
    112. புஷ்பக மன் - குபேரன். 114. ஆ - காமதேனு. சங்கம் - சங்கநிதி.
    அம்புயம் - பதுமநிதி. கா - கற்பகத்தரு.)



    1022 - புந்தி மிக்க புகரும் புகருடன்
    அந்த மற்ற அவுணர்கள் மன்னனும்
    தந்தி யின்முகத் தானவ னுக்குநன்
    மந்தி ரத்துணை யாய்அவண் வைகினார். - 115



    1023 - அன்ன காலை அடுகரி மாமுக
    மன்னன் முன்வரும் வாசவ னாதியாந்
    துன்னு வானவர் சூழலை நோக்கியே
    இன்ன தொன்றை இயம்புதல் மேயினான். - 116



    1024 - வைக லும்மிவண் வந்துழி நுங்கள்தம்
    மொய்கொள் சென்னியில் மும்முறை தாக்கியே
    கைகள் காதுறக் கால்கொடு தாழ்ந்தெழீஇச்
    செய்க நம்பணி தேவர்கள் நீர்என்றான். - 1170



    1025 - அன்ன தோதலும் அண்டர்கள் யாவரும்
    மன்னன் தானும் மறுப்பதை அஞ்சியே
    முன்னரே நின்று மொய்ம்புடைத் தோல்முகன்
    சொன்ன தோர்புன் தொழின்முறை ஆற்றினார். - 118



    1026 - எழிலி யூர்தியும் ஏனைய வானவர்
    குழுவி னோர்களுங் குஞ்சர மாமுகத்
    தழித கன்பணி அல்கலும் ஆற்றியே
    பழியெ னும்பர வைப்படிந் தாரரோ. - 119



    1027 - கரிமு கத்துக் கயவன தேவலால்
    பருவ ரற்பழி மூழ்குறு பான்மையைச்
    சுரர்க ளுக்கிறை தொல்லைவி ரிஞ்சன்மால்
    இருவ ருக்கும் இயம்பி இரங்கினான். - 120



    1028 - இரங்கும் எல்லையில் இந்திர முற்றுளந்
    தரங்க மெய்தித் தளர்ந்திடல் நீயெனா
    உரங்கொள் பான்மை உணர்த்தி அவனொடும்
    புரங்கள் அட்டவன் பொற்றையிற் போயினார். - 121



    1029 - மாகர் யாவரும் வாசவ னும்புடை
    யாக வந்திட அம்புயன் மாலுமை
    பாகன் மேய பனிவரைக் கோயிலுள்
    ஏகி னார்நந்தி எந்தை விடுப்பவே. - 122



    1030 - கண்டு நாதன் கழலிணை தாழ்ந்துநல்
    தொண்டு காணத் துதித்தலும் ஆங்கவன்
    அண்ட ரோடும் அலமரல் எய்தியே
    வண்டு ழாய்முடி வந்ததென் னென்னவே. - 123

    (119. எழிலி ஊர்தி - இந்திரன். அல்கலும் - நாடோறும்.
    பழியெனும் பரவை - துன்பக்கடல்.
    122. மாகர் - தேவர். 123. அலமரல் - துன்பம்.)



    1031 - வேறு
    ஆனதோர் பொழுதின்மால் அரனை நோக்கியோர்
    தானவன் கயமுகன் என்னுந் தன்மையான்
    வானவர் தமையெலாம் வருத்தி னானவன்
    ஊனமில் தவம்புரிந் துடைய வன்மையால். - 124



    1032 - வெங்கய முகத்தினன் விறலை நீக்குதல்
    எங்களுக் கரியதால் எவர்க்கும் ஆதியாம்
    புங்கவ நினக்கது பொருளன் றாகையால்
    அங்கவன் உயிர்தொலைத் தருள வேண்டுநீ. - 125



    1033 - என்றுரை செய்தலும் ஈசன் யாமிவண்
    ஒன்றொரு புதல்வனை யுதவித் தோல்முக
    வன்றிறல் அவுணனை மாய்த்து மற்றவன்
    வென்றிகொண் டேகுவான் விடுத்துமேல் என்றான். - 126



    1034 - வீடிய பற்றுடை விரதர்க் கென்னினும்
    நாடிய அரியவன் நவின்ற வாய்மையைச்
    சூடினர் சென்னிமேல் தொழுத கையராய்
    ஆடினர் பாடினர் அமரர் யாருமே. - 127



    1035 - பாங்கரில் அனையரைப் பரிந்து நோக்கியே
    ஈங்கினி நும்பதிக் கேகு வீரென
    ஆங்கவர் எம்பிரான் அடியில் வீழ்ந்தனர்
    வீங்குறு காதலால் விடைகொண் டேகினார். - 128



    1036 - ஏகிய எல்லையில் எண்ணி லாவிதி
    சேகரம் மிலைச்சிய சென்னி வானவன்
    பாகமுற் றுலகெலாம் பயந்த சுந்தரத்
    தோகையை நோக்கியே இதனைச் சொல்லுவான். - 129



    1037 - யாம்பெரு விருபபுடன் இயற்று வித்திடுந்
    தேம்படு தருவனந் தெரித்துஞ் செல்கென
    வாம்பரி சருளினை வருவன் ஆங்கெனாக்
    காம்படு தோளுடைக் கவுரி கூறினாள். - 130



    1038 - ஆயது கேட்டனன் அகிலம் யாவையுந்
    தாயென அருளுமத் தையல் தன்னொடுஞ்
    சேயுயர் விசும்பினைச் செறிதண் சோலையில்
    போயினன் மறைக்கெலாம் பொருள தாயினான். - 131



    1039 - நீணுதற் கனல்விழி நிமலத் தேவெனுந்
    தாணுவைப் போலவே தனது பாதமுஞ்
    சேணுடைச் சென்னியுந் தேவர் யாரினுங்
    காணுதற் கரியதக் கடிகொள் சோலையே. - 132

    (125. விறலை - வெற்றியை. 129. விதி சேகரம் - பிரமகபாலம்.
    உலகெலாம் பயந்த சுந்தரத் தோகை - உமாதேவியார்.
    130. காம்படு தோள் - மூங்கிலைப்பழிக்கும் தோள்.
    131. தையல் - உமாதேவியார். 132. கடி - வாசனை;
    இது முதல் சோலை வருணனை ஆகும்.)



    1040 - தேசுடைத் தருநிரை திருமென் போதொடு
    பாசடைத் தொகுதியும் பரித்து நிற்பன
    ஈசனுக் கருச்சனை இயல்பின் ஆற்றிட
    நேசமுற் றுடையவர் நிலைய தொக்குமால். - 133



    1041 - பாலுற வருவதோர் பரைதன் மெய்யொளி
    மேலுறு பைங்கொடி வேத நாயகன்
    ஏலுறு தாருக வனத்தில் எய்தமுன்
    மாலுறு மங்கையர் வடிவம் போலுமால். - 134



    1042 - கொடிகளுந் தருக்களின் குழுவு மாதுடன்
    அடிகளங் கேகலும் அனையர் செம்மையுஞ்
    சுடர்கெழு பசுமையந் துவன்றி அன்னதோர்
    வடிவுகொண் டிருந்திடும் வண்ணம் போலுமால். - 135



    1043 - பூந்தரு நிரைகளில் பொருவில் கோட்டிடைச்
    சேந்திடு நனைபல திகழ்வ பார்ப்பதி
    காந்தனை அன்பொடு கண்டு பாங்குளார்
    ஏந்திய தீபிகை என்ன லானவே. - 136



    1044 - வான்தரு ஓர்சில மலரின் கண்டொறுந்
    தேன்றுளி விடுவன சிவனைக் கண்டுழி
    ஆன்றதோர் அன்பினார் அகம்நெ கிழ்ந்துகட்
    கான்றதோர் புனலெனக் கவின்று காட்டிய. - 137



    1045 - வண்தரு ஓர்சில மருப்பில் வானிறங்
    கொண்டிடு மதுமலர் குழுமி யுற்றன
    எண்டிரு மலையிடை வீழுங் கங்கையில்
    தண்டுளி சிதறிய தன்மை போன்றவே. - 138



    1046 - கற்றையஞ் சுடர்மணி கனகம் ஏனைய
    பிற்றையென் னாதருள் பெரியர் வண்மைபோல்
    மற்றவ ணுள்ளபவன் மரமுந் தம்பயன்
    எற்றையும் உலப்புறா தீகை சான்றவே. - 139



    1047 - காவதன் இயல்பினைக் கண்டு தன்னொரு
    தேவியொ டேயருள் செய்து சிற்பரன்
    ஆவியுள் ளுணர்வென அதனுள் வைகுமோர்
    ஓவிய மன்றிடை ஒல்லை ஏகினான். - 140



    1048 - எண்டகு பெருநசை எய்தி ஐம்புலன்
    விண்டிடல் இன்றியே விழியின் பாற்படக்
    கண்டனள் கவுரிஅக் கடிகொள் மண்டபங்
    கொண்டிடும் ஓவியக் கோலம் யாவுமே. - 141

    (133. பாசடை - பசியஇலை.
    135. கொடிகளின் பசுமையும் தருக்களின் செம்மையும் அம்மை
    அப்பரை ஒத்து விளங்குகின்றன.
    136. தீபிகை - தீபத்தட்டு. 138. வான்நிறம் - வெண்ணிறம்.
    மதுமலர் - தேன்மலர்.
    140. கா - சோலை. ஓவிய மன்று - சித்திர மண்டபம்.
    141. பெருநசை - பெருவிருப்பம். விண்டிடம் - விலகாமல்.
    ஓவியக்கோலம் - சித்திர வடிவம்.)



    1049 - பாங்கரில் வருவதொர் பரமன் ஆணையால்
    ஆங்கதன் நடுவணில் ஆதி யாகியே
    ஓங்கிய தனியெழுத் தொன்றி ரண்டதாய்த்
    தூங்குகைம் மலைகளில் தோன்றிற் றென்பவே. - 142



    1050 - அன்னவை உமையவள் காண ஆங்கவை
    முன்னுறு புணர்ச்சியின் முயற்சி செய்தலும்
    என்னைகொல் இதுவென எண்ணித் தன்னொடு
    மன்னிய முதல்வனை வணங்கிக் கூறுவாள். - 143



    1051 - மூலமாம் எழுத்திவை முயங்கி மால்கரிக்
    கோலமாய்ப் புணர்வதென் கூறு கென்றலும்
    ஏலவார் கருங்குழல் இறைவி கேளென
    ஆலமார் களத்தினன் அருள்செய் கின்றனன். - 144



    1052 - வேறு
    முன்புநீ காண்டலின் மூலமாய் உடையதோர்
    மன்பெருந் தொல்பொறி மருவியீர் உருவுறீஇ
    அன்பினால் ஆனைபோற் புணருமால் ஆகையால்
    நின்பெருந் தகவினை நினைகிலாய் நீயுமே. - 145



    1053 - காட்சியால் இதுசெயுங் காரணம் பெற்றநின்
    மாட்சிதான் யாமலான் மற்றியார் உணர்குவார்
    ஆட்சியாய் உற்றதொல் அருமறைக் காயினுஞ்
    சேட்செலா நிற்குநின் திருவருட் செய்கையே. - 146



    1054 - என்னவே முகமனால் எம்பிரான் அம்பிகை
    தன்னொடே மொழியஅத் தந்தியும் பிடியுமாய்த்
    துன்னியே புணர்வுறுந் தூயசெய் தொழில்விடா
    முன்னமே போன்றதால் முடிவிலாக் குடிலையே. - 147



    1055 - அக்கணத் தாயிடை ஐங்கரத் தவன்அருள்
    முக்கண்நால் வாயினான் மும்மதத் தாறுபாய்
    மைக்கருங் களிறெனும் மாமுகத் தவன்மதிச்
    செக்கர்வார் சடையன்ஓர் சிறுவன்வந் தருளினான். - 148



    1056 - ஒருமையால் உணருவோர் உணர்வினுக் குணா¢வதாம்
    பெருமைதயான் எங்கணும் பிரிவரும் பெற்றியான்
    அருமையான் ஏவரும் அடிதொழுந் தன்மையான்
    இருமையாம் ஈசனே என்னநின் றருளுவான். - 149

    (142. தனி எழுத்து - ஏகாட்சரம்; பிரணவம்.
    தூங்கும் - தொங்குகின்ற. கைம்மலைகள் - யானைகள்.
    144. மூலமாம் எழுத்து பிரணவாட்சரங்கள். 147. குடிலை - ஓங்காரம்.
    148. மும்மதம் - கன்னமதம், கபோலமதம், பீசமதம்; சிலர் பீசமதத்தை
    நீக்கிக் கைம்மதம் என்றும் கூறுவர்.)



    1057 - மருளறப் புகலுநான் மறைகளில் திகழுமெய்ப்
    பொருளெனப் படுமவன் புவனமுற் றவர்கள்தம்
    இருளறுத் தவர்மனத் திடர்தவிர்த் தருளவோர்
    அருளுருத் தனைஎடுத் தவதரித் துளனவன். - 150



    1058 - வந்துமுன் னிருவர்தம் மலரடித் தலமிசைச்
    சிந்தையார் வத்தொடுஞ சென்னிதாழ்த் திடுதலுந்
    தந்தையுந் தாயுமுன் தழுவிமார் புறவணைத்
    தந்தமில் கருணைசெய் தருளினார் அவ்வழி. - 151



    1059 - என்னரே யாயினும் யாவதொன் றெண்ணுதல்
    முன்னரே உனதுதாள் முடியுறப் பணிவரேல்
    அன்னர்தஞ் சிந்தைபோல் ஆக்குதி அலதுனை
    உன்னலார் செய்கையை ஊறுசெய் திடுதிநீ. - 152



    1060 - சேயநன் மலர்மிசைத் திசைமுகன் மால்முதல்
    ஆயபண் ணவர்தமக் காருயிர்த் தொகையினுக்
    கேயபல் கணவருக் கெத்திறத் தோர்க்குநீ
    நாயகம் புரிதியால் நல்லருட் டன்மையால். - 153



    1061 - கானுறுங் கரடவெங் கயமுகத் தவனெனுந்
    தானவன் வன்மையைச் சாடியே தண்டுழாய்
    வானவன் சிறுமையும் மாற்றியே வருகெனா
    ஆனையின் முகவனுக் கைம்முகன் அருள்செய்தான். - 154



    1062 - மோனமே குறியதா முதலெழுத் தருளிய
    ஞானமா மதலைபால் நண்ணவே பூதவெஞ்
    சேனையா யினஅருள் செய்துசிற் பரையொடும்
    ஆனைமா முகனொடும் அமலன்மீண் டருளினான். - 155



    1063 - புங்கவர்க் கிறைவனாம் புதல்வனை நோக்கிடா
    நங்கடைத் தலையினில் நாயகம் புரிகெனா
    அங்கருத் தியொடிருத் தினன்அணிக் கோயிலுட்
    சங்கரக் கடவுள்சுந் தரியொடு மருவினான். - 156



    1064 - தந்திமா முகமுடைத் தனயன்அங் கணுகியே
    முந்துபா ரிடமெலாம் மொய்த்துமுன் சூழ்தர
    நந்திவந் தனைசெய நான்முகன் முதலினோர்
    வந்துவந் தடிதொழ மகிழ்வொடே வைகினான். - 157

    (152. என்னரே ஆயினும் - எத்தகையோராயினும்.
    அன்னவர்தம் சிந்தை போல் - அவர் எண்ணம்போல.
    உன்னலார் - நினைந்துவழிபடாதவர். ஊறு - இடையூறு.
    153. நாயகம் - தலைமைத்தன்மை.
    154. கான் - நாற்றம். கரடம் - மதம். சாடி - அழித்து.
    ஆனையின்முகவன் - விநாயகன். ஐம்முகன் - சிவபெருமான்.
    155. மோனம் - மௌனம். முதலெழுத்து - பிரணவம்.
    ஞானமாமதலை - விநாயகன்.
    156. அருந்தி - விருப்பம். மருவினான் - சென்றான்.)



    1065 - அன்னதற் பின்னரே ஆயிரம் பெயருடைப்
    பொன்னுலாம் நேமியான் புனிதனைக் காணிய
    மின்னுதண் சுடர்விடும் வௌ¢ளிமால் வரைமிசைக்
    துன்னினான் ஆலயச் சூழல்முன் அணுகினான். - 158



    1066 - அந்தியார் சடைமுடி அண்ணல்தன் அருளினால்
    நந்திதே வுய்த்திட நங்கையோர் பங்கனாம்
    எந்தைபா லெய்தியே இணைமலர்த் தாள்தொழாப்
    புந்தியார் வத்தொடும் போற்றிசெய் தருளவே. - 159



    1067 - வேறு
    நிருத்தனவ் விடைதனில் நேமி யான்தனை
    இருத்தியென் றருள்புரிந் திடத்தின் மேவிய
    ஒருத்தியை நோக்கிஒன் றுரைப்பங் கேளெனா
    அருத்திசெய் ஆடல்ஒன் றருளிற் கூறுவான். - 160



    1068 - சூதனை எம்மொடே பொருதி தோற்றனை
    ஆதியேல் நீபுனை அணிகள் யாவையும்
    ஈதியால் வென்றனை என்னின் எம்மொரு
    பாதியாஞ் சசிமுதற் கலவுங் கோடியால். - 161



    1069 - என்னலும் உமையவள் இசைவு கோடலும்
    அன்னதொ ரெல்லையின் அரியை நோக்கியே
    தன்னிகர் இல்லவன் இதற்குச் சான்றென
    மன்னினை இருத்தியான் மாயநீ என்றான். - 162



    1070 - பற்றிகல் இன்றியே பழவி னைப்பயன்
    முற்றுணர்ந் துயிர்களை முறையின் வைப்பவன்
    மற்றிது புகறலும் வனசக் கண்ணினான்
    நற்றிறம் இ·தென நவின்று வைகினான். - 163



    1071 - இந்தவா றாயிடை நிகழும் எல்லையில்
    சுந்தரன் முதலிய உழையர் சுற்றினோர்
    அந்தமில் பெருங்குணத் தாதி ஏவலில்
    தந்தனர் காசொடு பலகை தன்னையே. - 164



    1072 - அதுபொழு தண்ணலும் அரியை நோக்கியிம்
    முதிர்தரு கருவியை முறையின் வைக்கெனக்
    கதுமென வைத்தலுங் கவுரி நீநமக்
    கெதிருறு கென்றுமுன் னிருத்தி னானரோ. - 165

    (158. நேமியான் - திருமால். 160. ஒருத்தி - ஒப்பற்ற உமாதேவியார்.
    161. சூது - சூதாட்டம். சசி - சந்திரன். கோடி - கொள்வாய்.
    162. சான்று - சாட்சி. மன்னினை - பொருந்தி.
    163. இகல் - வெறுப்பு. வனசக்கண்ணினான் - திருமால்.
    164. உழையர் - ஊழியர்கள். காசு, பலகை - இவை சூதாடு கருவிகள்.)



    1073 - கவற்றினை முன்னரே உய்ப்பக் கண்ணுதல்
    அவற்றினைப் பின்னுற அவளும் உய்த்தனள்
    தவற்றியல் பல்லதோர் வல்ல சாரியால்
    எவற்றினும் மேலையோர் இனிதின் நாடினார். - 166



    1074 - பஞ்சென வுரைசெய்வர் பாலை என்பர்ஈர்
    அஞ்சென மொழிவர் அஞ்சென்பர் அன்றியுந்
    துஞ்சலின் நடம்என்பர் துருத்தியீ தென்பர்
    விஞ்சிய மகிழ்வொடு வெடியென் றோதுவார். - 167



    1075 - அடியிது பொட்டைஈ தென்பர் அ·தென
    முடிவில குழூஉக்குறி முறையின் முந்துறக்
    கடிதினில் கழறினர் கவறு சிந்தினார்
    நொடிதரு கருவிகள் எதிரிகள் நூக்கினார். - 168



    1076 - வேறு
    ஏற்றா னவன்எய்திய இன்னருள் யாவ தேயோ
    தேற்றாம் அ·தியார்க்கு மளப்பருஞ செய்கை யாலே
    மேற்றான் எதிராவுடன் ஆடிய மெல்லி யற்குத்
    தோற்றான் நெடுமாலயன் நாடவுந் தோற்றி லாதான். - 169



    1077 - ஒன்றாய பரஞ்சுட ரோன்உமை தன்னை நோக்கி
    நன்றா யதுநின் வலியென்று நகைத்து நம்மை
    வென்றா யலைதோற் றனைமுன்னர் விளம்பு மாற்றால்
    நின்றா ரொடுபூணும் எமக்கினி நேர்தி என்றான். - 170



    1078 - மூன்றாம் உலகங்களும் ஆருயிர் முற்று முன்னம்
    ஈன்றாள் அதுகேட்டலுந் தான்இகல் ஆடல் அஞ்சி
    வான்றா வியபே ரடிமாயனை வல்லை நோக்கிச்
    சான்றா மெனவை கினைநீயிது சாற்று கென்றாள். - 171



    1079 - சொல்லும் அளவிற் சுடர்நேமியன் சூது டைப்போர்
    வெல்லுந் தகையோன் பரனென்று விளம்ப லோடும்
    நல்லுண்மை சொற்றாய் திறநன்றிது நன்றி தென்னாச்
    செல்லுண்ட ஐம்பால் உமைஆற்றச் சினம்பு ரிந்தாள். - 172



    1080 - பாராயலை கண்ணனு மாயினை பாலி னுற்றாய்
    தேராதது ஒன்றிலை யாவருந் தேர ஒண்ணாப்
    பேராதி யோன்நவை கூறினும்நீயிது பேச லாமோ
    காராமெய் என்பர் மனமுங்கரி யாய்கொல் மன்னோ. - 173

    (166. கவறு - சூதாடுகருவி.
    167. பஞ்சு, பாலை, ஈரைஞ்சு, அஞ்சு, நடம், துருத்தி,
    வெடி - இவை சூதாட்டத்தின் குழூஉக் குறிகள்.
    168. அடி, பெட்டை - இவை சூதாட்டத்தின் குழூஉக்குறிகள்.
    கவறுசிந்துதல் - காய்களைவெட்டுதல். நூக்கினார் - தள்ளினார்.
    169. ஏற்றான் - இடபத்தையுடையவன்.
    170. வென்றாய் அலை - வெற்றி பெறவில்லை. தார் - மாலை. நேர்தி - அளித்தி.
    171. இகல்ஆட - பகைத்து நானே வென்றேன் என்று கூற.
    172. செல் - மேகம். ஐம்பால் - கூந்தல். ஆற்ற - மிகவும்.
    173. கண்ணனுமாயினை - இங்கு, நீ கண்ணுடையவனான் இருந்தும்
    அதற்குரிய செயலினை இழந்தாய் என்பது குறிப்பு.பாலினுற்றாய் - பக்கத்திலிருந்தாய்;
    பாற்கடலிலிருந்தாய்; பாலை வைத்துக்கொண்டு பொய் சொல்லலாகாது என்பது கருத்து.)



    1081 - ஏம்பா லிதுசொற் றனைஆதலின் என்று மாயை
    ஓம்பா வருவா யுறுகைதவத் தூற்ற மிக்காய்
    பாம்பாதி யென்னப் பகர்ந்தாள் பகர்கின்ற எல்லை
    ஆம்பால் உருவம் அ·தங்கண் அடைந்த தன்றே. - 174



    1082 - அவ்வா றவன்பால் அணைகின்றதொர் போழ்தில் ஆழிக்
    கைவா னவனும் அதுகண்டு கவற்சி எய்திச்
    செவ்வான் உறழும் முடியோன்அடி சென்று தாழா
    எவ்வா றெனக்கிவ் வுருநீங்கும் இசைத்தி என்றான். - 175



    1083 - காலாய் வௌ¤யாய்ப் புனலாய்க் கனலோடு பாராய்
    மேலாகி யுள்ள பொருளாய்எவற் றிற்கும் வித்தாய்
    நாலாய வேதப் பொருளாகி நண்ணுற்ற நாதன்
    மாலா யவனுக் கி·தொன்று வகுத்து ரைப்பான். - 176



    1084 - என்பால் வருமன்பின் இசைத்தனை ஈது பெற்றாய்
    நின்பால் வருமின் னலைநீக்குவன் நீங்கு கின்றாய்
    தென்பா லுலகந்தனில் அன்னதொர் தேய மீதில்
    முன்பால வனம்மென ஒன்றுள மொய்ம்பின் மிக்காய். - 177



    1085 - ஆங்கே யினிநீ கடிதேகினை அன்ன கானில்
    பாங்கே ஒருதொன்மரம் நின்றது பார்த்த துண்டே
    ஊங்கே பராரையின் மேயபொந் தொன்றி னூடு
    தீங்கே குறப்போய்ப் பெருமாதவஞ செய்து சேர்தி. - 178



    1086 - அஞ்சேல் அவண்நீ உறைகின்றதொர் காலை யானே
    எஞ்சே யவனாங் கயமாமுகன் எய்து வானச்
    செஞ்சே வகனுக் கெதிர்கொண்டனை சென்று காண்டி
    மஞ்சே யனையாய் உனக்கிவ்வுரு மாறும் அன்றே. - 179



    1087 - வேறு
    என்னுமள வில்தொழுதி றைஞ்சிஇனி தேத்தி
    அன்னதொர் வனத்திடை அமர்ந்ததொன் மரத்தில்
    துன்னுவன் எனக்கடிது சொல்லுதலும் யார்க்கும்
    முன்னவ னுமேகென முராரியை விடுத்தான். - 180



    1088 - விட்டிடுத லுங்கயிலை நீங்கினன் விரைந்தே
    கட்டழகின் மேதகைய காமனது தாதை
    சிட்டர்கள் பயின்றுறை தெனாதுபுலம நண்ணி
    மட்டொழுகு தொன்மர வனத்தினிடை உற்றான். - 181

    (174. ஏம்பால் - மகிழ்ச்சியால். கைதவம் - வஞ்சனை.
    பாம்பு ஆதி - பாம்பாகக்கடவாய்.
    175. கவற்சி - கலக்கம். செவ்வான் - செவ்வானம்.
    176. கால் . காற்று. வௌ¤ - ஆகாயம். நாதன் - சிவன்.
    177. இசைத்தனை - தவறுகூறினை. ஈது - பாம்பு வடிவாகும் இச்சாபத்தினை.
    ஆலவனம் - திருவாலங்காடு. 178. தொன்மரம் - ஆலமரம்.
    பராரை - பெரிய அடிப்பாகம்.
    179. கயமுகன் - விநாயகன். சேவகன் - வீரன். மஞ்சே அனையாய் - மேக வண்ணனே!
    இவ்வுரு - இப்பாம்பு வடிவம். 180. முரா£¤ - திருமால்.
    181. காமனது தாதை - திருமால். சிட்டர்கள் - மேலானவர்கள்.
    தெனாது புலம் - தென்னாடு. மட்டு - தேன்.)



    1089 - நன்மதி யுடைப்புலவர் நால்வர்களும் உய்யச்
    சின்மயம் உணர்த்தியருள் தேவன்அமர் தாருத்
    தன்மையது பெற்றுநனி தண்ணிழல் பரப்புந்
    தொன்மர வியற்கைஅத னிற்சிறிது சொல்வாம். - 182



    1090 - பசுந்தழை மிடைந்தஉல வைத்திரள் பரப்பி
    விசும்பளவு நீடியுயர் வீழினிரை தூங்கத்
    தசும்பனைய தீங்கனிகள் தாங்கியது தாளால்
    வசுந்தரை அளந்தநெடு மாயவனை மானும். - 183



    1091 - அண்டநடு வாயவுல கேழினையும் அந்நாள்
    உண்டருளி ஒல்லைதனில் ஓர்சிறுவ னாகிப்
    பண்டுகரி யோன்தயில்கொள் பாசடைகள் தன்பாற்
    கொண்டவட மன்னதொரு கொள்கைய துடைத்தால். - 184



    1092 - மழைத்தபசு மேனியது மாதிர வரைப்பில்
    விழுத்தகைய வீழினிரை வீசுவட தாருத்
    தழைக்குல மருப்புமிசை தாங்கியிடை தூங்கும்
    புழைக்கைகொடு மால்களிறு நாடுகரி போலும். - 185



    1093 - பாசடை தொடுக்கப்பட லைப்பழு மரத்தின்
    வீசிநிமிர் கின்றபல வீழின்விரி கற்றை
    பூசலிடு கூளியொடு பூதநிரை பற்றி
    ஊசல்பல ஆடியென ஊக்கியன அன்றே. - 186



    1094 - ஆல்வரையின் வீழ்நிரைகள் ஆசுகம் உடற்றப்
    பால்வரையின் எற்றிவரு மாறிரவி பாகன்
    கால்வரையின் ஏகவெழு கந்துகம தென்னும்
    மால்வரையின் வீசுபல மத்திகைய தொத்த. - 187



    1095 - ஆசறுதெ னாதுதிசை ஆளுமிறை எண்ணில்
    பாசமொடு நின்றதொரு பான்மைய· தன்றேல்
    வாசவனும் ஆகமிசை மாலிகையு மாமால்
    வீசுபழு மாமர விலங்கலும்அவ் வீழும். - 188



    1096 - மாநிலமெ லாந்தனை வழுத்தவரு மன்னற்
    கூனமுறு காலைதனில் ஒண்குருதி வாரி
    வானமுகில் கான்றனைய மாண்டதொன் மரத்தின்
    மேனிதரு செய்யபல வீழின்விரி மாலை. - 189

    (182. புலவர் - அறிஞர். தாரு - கல்லால விருட்சம்.
    183. இது முதல் ஆல மரத்தின் வருணனை ஆகும்.
    உலவ¨திதிரன் - கிளைகள். வீழின் நிரை - விழுதின் வரிசை.
    தசும்பு - குடம். வசுந்தரை - பூமி.
    184. வடம் அன்ன - அந்த ஆலேபோல.
    185. கரி - இங்குப் பெண் யானை.
    186. படலை - மாலை. பழுமரம் - ஆலமரம். பூசல் - சிறுசண்டை.
    187. ஆல்வரை - ஆலமரமாகிய மலை. ஆசுகம் - காற்று.
    இரவிபாகன் - அருணன். கந்துகம் - சத்தமா என்னும் குதிரைகள்.
    மத்திகை - குதிரைச் சம்மட்டி; சவுக்கு.
    188. தெனாதுதிசை யாளும் இறை - எமன். மாலிகை - பூமாலை.
    பழுமாமர விலங்கல் - ஆலமரமாகிய மலை.
    189. ஊனம் - அழிவு. கான்றல் - பெய்தல்.
    மாண்ட - மாட்சிமை வாய்ந்த.)



    1097 - இரும்பறை ஆலமிசை எம்முருவு கொள்ளா
    வம்புலவு தண்டுவள மாயன்வரும் என்னா
    வெம்பணிகள் தம்பதியின் மேவுவன போலாம்
    தம்பமென வேதரை புகுந்ததனி வீழ்கள். - 190



    1098 - கடித்தன எயிற்றின்அழல் காலவர வின்மேல்
    நடிக்குமொரு கட்செவி நமைக்குறுகும் என்னாத்
    துடித்தன எனத்தலை துளக்கின உரோமம்
    பொடித்தன நிகர்த்துள புனிற்றினுறு புன்காய். - 191



    1099 - கிளர்ப்புறு கவட்டிலை கிடைத்த கிளையாவும்
    அளப்பில்புகை சுற்றிட அனற்கெழுவு கற்றை
    துளக்குறு தரக்குழுவு தோன்றியது போன்ற
    விளக்கழல் நிகர்த்துள விரிந்தமுகை யெல்லாம். - 192



    1100 - செருப்புகு சினத்தெதிர் செறுத்தமத வெற்பின்
    மருப்பின் ஒசிப்பவன் வரத்தினியல் காணா
    விருப்பமலி வுற்றதன் விழித்தொகைகள் எங்கும்
    பரப்பிய நிகர்த்துள பயங்ககெழுவு பைங்காய். - 193



    1101 - வௌ¢ளிபடு கின்றமதி விண்படர் விமானங்
    கள்ளிபடு பால்கெழு கவட்டினிடை தேய்ப்பத்
    துள்ளிபடு கின்றளவி லோர்திவலை தொத்தப்
    புள்ளிபடு மாறுமுயல் என்பர் புவிமேலோர். - 194



    1102 - காவதமொ ரேழுள பராரை கணிப்பின்றால்
    தாவறும் உயர்ச்சியத னுக்குமதி சான்றே
    பூவுலகம் எங்குநிழல் போக்கிநெடி தோம்புங்
    கோவதென நின்றதுயர் கோளியெனுங் குன்றம். - 195



    1103 - அவ்வகைய தாருவினை நோக்கினன் அணைந்தான்
    பவ்வநிற வண்ணல் துயில் பாசடை கள்தம்மோ
    டெவ்வகை கமத்திரென வேவினவ என்றே
    வெவ்வரவி னுக்கிறைவன் மேவியது மான. - 196



    1104 - அந்தமில் பெருங்கடல் வளாகம்அனைத் துந்தன்
    உந்தியில் அடைந்ததென ஓங்கல்கெழும் ஔ¢வாள்
    வந்துறை யினிற்புகுவ தென்ன வடதாருப்
    பொந்தினிடை யேயணுகி னான்உலகு பூத்தோன். - 197

    (190. வெம்பணிகள் - கொடிய பாம்புகள். தம்பதி - பாதாளம்.
    191. கட்செவி - கண்ணே காதாக உடையது; பாம்பு. புனிறு - இளமை.
    192. கவடு - பெருங்கிளை. முகை - மொட்டு.
    193. பயம் - பால். கெழுவு - பொருந்திய.
    194. கள்ளிபடு - கள்ளியிலும் அதிகமாக உண்டாகின்ற.
    தொத்த - பட. முயல் - முயல் என்னும் களங்கம்.
    195. மதிசான்று என்றது ஆல மரக்கிளைகள் சந்திர மண்டலத்தை முட்டியதை.
    கோ - இறைவன். அது : பகுதிப்பொருள் விகுதி. கோளி - ஆலமரம்.
    196. நோக்கினன் - நோக்கி. வினவஎன்றே - வினவி அறிதற்கு என்றே.
    அரவினுக்கு இறைவன் - ஆதிசேடன்.
    197. உந்தியில் - வயிற்றில். ஓங்கல் - உயர்ந்த. வாள் - வாட்படை.
    ஓங்கல் கெழும் ஔ¢வாள் வந்துறையினில் புகுவதென்ன - உதயி கிரியில் உதித்து
    விளங்கிய சூரியன் சென்று கடலுள் புகுந்தாற்போல எனவும் பொருள்கொள்ளலாம்.)



    1105 - சத்தியுரை யால்அரி தனிப்பணிய தான
    இத்திறமி சைத்தனம் இனிச்சுரரை வாட்டும்
    அத்திமுக வெய்யவனை ஆதியருள் செய்யும்
    வித்தக முதற்புதல்வன் வென்றமை உரைப்பாம். - 198



    1106 - வேறு
    முந்து வேழ முகத்தவன் ஏவலால்
    நொந்து சிந்தை நுணங்கிய தேவரும்
    இந்தி ராதிபர் யாவரும் ஐங்கரன்
    வந்த தோர்ந்து மகிழச்சியின் மேயினார். - 199



    1107 - ஏத மில்மகிழ் வெய்திய இந்திரன்
    ஆதி யோர்கயி லாயத் தணுகியே
    போத கத்துப் புகர்முகப் புங்கவன்
    பாத முற்றுப் பணிந்து பரவினார். - 200



    1108 - பரவல் செய்திடுக பான்மையை நோக்கியே
    கருணை செய்த கயமுகத் தெம்பிரான்
    உரையும் நுங்கட் குறுகுறை என்றலும்
    வரன்மு றைப்பட வாசவன் கூறுவான். - 201



    1109 - தொல்லை நாண்மதி சூடிய சோதிபால்
    எல்லை நீங்கும் வரந்தனை எய்தினான்
    கல்லென் வெஞ்சொற் கயாசுரன் என்பவன்
    அல்லல் செய்தனன் ஆற்றவும் எங்களை. - 202



    1110 - பின்னும் நங்களைப் பீடற வைகலுந்
    தன்னை வந்தனை செய்யவுஞ் சாற்றினான்
    அன்ன செய்தனம் அன்றியும் எங்கள் பால்
    மன்ன வேபுதி தொன்று வகுத்தனன். - 203



    1111 - கிட்டித் தன்முன் கிடைத்துழி நெற்றியிற்
    குட்டிக் கொண்டு குழையிணை யிற்கரந்
    தொட்டுத் தாழ்ந்தெழச் சொற்றனன் ஆங்கதும்
    பட்டுப் பட்டுப் பழியிடை மூழ்கினேம். - 204



    1112 - கறுத்து மற்றவன் கட்டுரைக் கின்றசொல்
    மறுத்த லஞ்சி வரும்பழி தன்னையும்
    பொறுத்து நாணமும் போகஇன் றந்தமுஞ்
    சிறப்பி லாவச் சிறுதொழில் செய்தனம். - 205

    (198. சத்தி உரை - தேவியின் சாபமொழி. ஆதி - சிவன்.
    விததக முதற்புதல்வன் - ஞானவடிவினனாகிய விநாயகன்.
    199. ஐங்கரன் - விநாயகன். 200. போதகம் - இளமை. புகர் - புள்ளி.
    204. கிடைத்துழி - அடைந்தபோது. குழைஇணை - இரு காது.)



    1113 - ஆங்க வன்தன் தாவியொ டெங்குறை
    நீங்கு வித்திட நீவரு வாயென
    ஓங்கல் நல்கும் உமையவள் தன்னொரு
    பாங்கர் வைகும் பராபரன் கூறினான். - 2063



    1114 - ஆத லால்நின் னடைந்தனம் எம்முடை
    ஏத மாற்றுதி என்று வழிபடீஇ
    மோத காதிகள் முன்னுற வார்த்திடப்
    பூத நாதன் அருளில் புகலுவான். - 207



    1115 - அஞ்சல் அஞ்சல் அவுணர்க் கரசனாம்
    விஞ்சு வேழ முகமுடை வீரனைத்
    துஞ்சு வித்துந் துயர்தவிர்ப் போமெனாக்
    குஞ்ச ரத்திரு மாமுகன் கூறவே. - 208



    1116 - இறைவ னோடும் இமையவர் எம்முடைச்
    சிறுமை நீங்கின செல்லலும் நீங்கின
    மறுமை இன்பமும் வந்தன வால்இனிப்
    பெறுவ தொன்றுள தோவெனப் பேசினார். - 209



    1117 - வேறு
    துன்பினை உழந்திடு சுரர்கள் இவ்வகை
    இன்புறு காலையில் ஈசன் தந்திடும்
    அன்புடை முன்னவன் ஆனை மாமுக
    முன்பனை யடுவது முன்னி னானரோ. - 210



    1118 - பொருக்கெனத் தவிசினின் றெழுந்து பூதர்கள்
    நெருக்குறு வாய்தலின் எய்தி நீள்கதிர்
    அருக்கனின் இலகிய அசலன் என்பவன்
    தருக்கிய புயத்தின்மேற் சரண்வைத் தேறினான். - 211



    1119 - ஏறியங் கசலன்மே லிருந்து செல்லுழிக்
    காறொடர் முகிலினங் கவைஇய காட்சிபோல்
    மாறில்வெம் பூதர்கள் வந்து சுற்றியே
    கூறினர் அவன்புகழ் குலாய கொள்கையார். - 212



    1120 - சாமரை வீசினர் தணப்பில் பன்மணிக்
    காமரு தண்ணிழல் கவிகை ஏந்தினர்
    பூமரு மதுமலர் பொழிதல் மேயினர்
    ஏமரு பூதரில் எண்ணி லோர்களே. - 213



    1121 - துடியொடு சல்லரி தோமில் தண்ணுமை
    கடிபடு கரடிகை கணையம் சல்லிகை
    இடியுறழ் பேரிகை இரலை காகளங்
    குடமுழ வியம்பினர் கோடி சாரதர். - 214

    (206. ஓங்கல் - இமயமலை.
    207. ஏதம் - துன்பம். மோதகாதிகள் - மோதகம் முதலியபொருள்கள்.
    208. துஞ்சுவித்து - இறக்கச்செய்து. 210. முன்னவன் - விநாயகப்பெருமான்.
    211. அசலன் - பூதகணங்களில் ஒருவன். 213. ஏமரு - மகிழ்வுற்ற.
    214. துடி - உடுக்கை. தோம்இல் - குற்றமில்லாத. தண்ணுமை - மத்தளம்.
    இரலை, ஊதுகொம்பு, சல்லரி, கரடிகை, கணையம், சல்லிகை காகளம் குட முழவு
    - இவைகள் வாத்திய வகைகள்.)



    1122 - சிந்தையில் உன்னினர் தீமை தீர்ப்பவன்
    வந்திடு காலையின் மகத்தின் வேந்தனும்
    அந்தர அமரரும் அடைந்து போற்றியே
    புந்திகொள் உவகையால் போதல் மேயினார். - 215



    1123 - தாருவின் நறுமலர் தத்தங் கைகொடு
    பேரருள் நுதல்விழிப் பிள்ளை மீமிசை
    சேருற வீசியே புடையிற் சென்றனர்
    காரினை யடைதரு கடவுள் வில்லென. - 216



    1124 - விரைந்தெழு சாரத வௌ¢ளம் எண்ணில
    நிரந்தன சூழ்தர நிமலன் மாமகன்
    பெருந்தரை ஏகியே பிறங்கு தோல்முகன்
    புரந்திடு மதங்கமா புரமுன் போயினான். - 217



    1125 - ஆயது கயமுகத் தவுணர் கோடியே
    வேயினர் புகறலும் வெகுட்சி கொண்டெழீஇ
    ஏயதன் படையெலாம் எடுத்து மற்றவன்
    சேயுயர் தனதுபொற் றேரில் ஏறினான். - 218



    1126 - பல்லியம் இயம்பின பரிகள் சுற்றின
    சில்லிகொள் ஆழியந் தேர்கள் சூழ்ந்தன
    எல்லையில் இபநிரை யாவும் மொய்த்தன
    வல்லியல் அவுணர்கள் வரம்பின் றீண்டினார். - 219



    1127 - ஆயிர வௌ¢ளமாம் அனிகஞ் சுற்றிடக்
    காய்கனல் விழியுடைக் கயமு காசுரன்
    ஏயெனும் அளவையில் ஏகிக் கண்ணுதல்
    நாயகன் மதலைதன் படைமுன் நண்ணினான். - 220



    1128 - நண்ணிய காலையின் நவையில் பூதரும்
    அண்ணலங் கழலடி அவுண ருங்கெழீஇப்
    பண்ணினர் பெருஞசமர் படையின் வன்மையால்
    விண்ணவர் யாவரும் வியந்து நோக்கவே. - 221



    1129 - புதிதெழு வெயிலுடன் பொங்கு பேரிருள்
    எதிர்பொரு மாறுபோல் இனங்கொள் தானவர்
    அதிர்கழற் பூதரோ டமர்செய் தாற்றலர்
    கதுமென அழிந்தனர் கலங்கி ஓடினார். - 222



    1130 - ஓடினர் அளப்பிலர் உயிரைச் சிந்தியே
    வீடினர் அளப்பிலர் மெய்கு றைந்துபின்
    ஆடினர் அளப்பிலர் அகலு தற்கிடந்
    தேடினர் அளப்பிலர் தியக்கம் எய்தினார். - 223

    (216. கடவுள்வில் - இந்திரவில்.
    218. வேயினர் - ஒற்றர். சேய் - செவ்விய.
    219. சில்லிகொள் - தகடுகள் பதித்த. 223. தியக்கம் - கலக்கம்.)



    1131 - ஒழிந்தன கரிபரி உலப்பில் தேர்நிரை
    அழிந்தன இத்திறம் அவுணர் தம்படை
    குழிந்திடு கண்ணுடைக் குறள்வெம் பூதர்கள்
    மொழிந்திட அரியதோர் விசய முற்றினா£¢. - 224



    1132 - உயர்தரு தானவர் உடைந்த தன்மையும்
    புயவலி கொண்டுள பூதர் யாவருஞ்
    சயமுடன் மேல்வரு தகவு நோக்கியே
    கயமுக அவுணர்கோன் கனலிற் சீறினான். - 225



    1133 - உளத்தினில் வெகுண்டுசென் றொருதன் கைக்சிலை
    வளைத்தனன் அத்துணை வளைத்துப் பேரமர்
    விளைத்தனர் பூதர்கள் அனையர் மெய்யெலாந்
    துளைத்தனன் கணைமழை சொரிந்து துண்ணென. - 226



    1134 - அரந்தெறு பகழிகள் ஆகம் போழ்தலும்
    வருந்தினர் திறலொடு வன்மை நீங்கினர்
    இரிந்தனர் பூதர்கள் யாரும் ஓடினார்
    புரந்தரன் இமையவர் பொருமல் எய்தவே. - 227



    1135 - கணநிரை சாய்தலுங் கண்டு மற்றது
    மணிகிளர் கிம்புரி மருப்பு மாமுகன்
    இணையறும் அசலன்மேல் ஏகி வல்லையில்
    அணுகினன் இபமுகத் தவுணர் கோனையே. - 228



    1136 - காருடை இபமுகக் கடவுள் மேலையோன்
    ஏருற வருதலும் நின்ற தூதரைச்
    சீருறு கயமுகத் தீயன் நோக்கியே
    யாரிவண் பொருவதற் கணுகுற் றானென. - 229



    1137 - பரவிய ஒற்றர்கள் பணைம ருப்புடைக்
    காரிமுக முடையன்முக் கண்ணன் ஐங்கரன்
    உருகெழு பூதன்மேல் உறுகின் றான்சிவன்
    பெருமக னாகும்இப் பிள்ளைதான் என்றார். - 230



    1138 - அன்னது கேட்டலும் அவணன் சீறியே
    பன்னருங் கலைதெரி பாகை நோக்கிநம்
    பொன்னி ரதத்தினை புழைக்கை மாமுகன்
    முன்னுறக் கடவுதி மொய்ம்ப என்னவே. - 231



    1139 - கேட்டிடு கலவையோன் கிஞ்சு கக்குரத்
    தாட்டிறற் பரியினந் தன்னின் மத்திகை
    காட்டினன் தவறிலாக் கனகத் தேரினை
    ஓட்டினன் ஐங்கரத் தொருவன் முன்னுற. - 232

    (224. குறள் - குறுகிய. விசயம் - வெற்றி.
    227. அரம்தெறு - அரத்தால் கூராக்கிய.
    ஆகம் - உடல். 228. கிம்புரி - பூண். 230. பணை - பருமை.
    231. கடவுதி - செலுத்து வாயாக.)



    1140 - ஆயிடைக் கரிமுகத் தவுணன் ஐங்கரத்
    தூயனை யழல்விழ சுழல நோக்கியே
    காயெரி எயிறுகக் கறைகொள் பற்களால்
    சேயிதழ் அதுக்கியே இனைய செப்புவான். - 233



    1141 - நுந்தையென் மாதவம் நோக்கி முன்னரே
    தந்திடு பெருவரந் தன்னைத் தேர்கிலை
    உய்ந்தனை போதிநின் னுயிர்கொண் டென்னெதிர்
    வந்தனை இறையது மதியி லாய்கொலோ. - 234



    1142 - அன்றிநீ யமர்செய அமைதி யென்னினும்
    வன்றிறல் உனக்கிலை மைந்த என்னெதிர்
    பொன்றினர் அல்லது போர்செய் தென்னைமுன்
    வென்றவர் இவரென விளம்ப வல்லையோ. - 235



    1143 - தேன்பெறு தருநிழல் திருவின் வைகிய
    வான்பெறு தேவரால் மக்க ளாலவர்
    ஊன்பெறு படைகளால் ஒழிந்தி டேன்இது
    நான்பெறு வரத்தியல் நவிலக் கேட்டியேல். - 236



    1144 - பின்னரும் பலவுள பெற்ற தொல்வரம்
    என்னைவெல் பவர்எவர் இந்தி ராதிபர்
    தன்னிடர் தணிப்பவர் போலச் சார்ந்தனை
    உன்னைவென் றன்னவர் உயிரும் உண்பனால். - 237



    1145 - பொருதெனை வென்றனை போக வல்லையேல்
    வருதியென் றுரைத்தலும் வானு லாவிய
    புரமெரி படுத்தவன் புதல்வன் அவ்விடை
    அருளுட னொருமொழி அறைவ தாயினான். - 238



    1146 - வேறு
    நிரந்தபல் படையும் நாளும் நிலைபெற நினக்குத் தொன்னாள்
    வரந்தரு கின்ற எந்தை வல்லைநின் னுயிரை வவ்விப்
    புரந்தரன் முதவி னோர்க்குப் பொன்னினா டுதவி அன்னார்
    அரந்தையும் அகற்றிச் செல்கென் றருளினன் எனக்கும் அன்றே. - 239



    1147 - உன்னுயிர் காத்தி என்னின் உறுதியொன் றுரைப்பன் கேண்மோ
    பொன்னக ரதனை இந்தப் புரந்தரன் புரக்க நல்கி
    இந்நிலத் தரசு செய்தே இருத்திய· திசையா தென்னின்
    நின்னுயிர் முடிப்பான் நேர்ந்து நின்றனன் இனைவென் னென்றான். - 240

    (232. வலவையோன் - சாரதி. கிஞ்சுகம் - செந்நிறம்.
    234. நுந்தை - உனது தந்தை. இறையது - சிறிதும்.
    236. ஊன் - மாமிசம். படை - ஆயுதம்.
    239. நிரந்த - வரிசையான. எந்தை - சிவன். அரந்தை - துன்பம்.)



    1148 - என்னலும் அவுணன் பொங்கி எரியுக விழிழிழிழித்துச் சென்றோர்
    பொன்னெடுஞ் சிலையை வாங்கிப் பொருக்கெனப் புரிநாண் ஏற்றி
    மின்னுடை வடிம்பின் வாளி வீசலும் விமலன் நல்கும்
    முன்னவன் எழுவொன் றேந்தி முரணொடு சிந்தி நின்றான். - 241



    1149 - பொற்றனு முரிந்து வீழப புழைக்கையிற் பிடித்த தண்டால்
    எற்றினன் அனைய காலை இபமுகத் தசுரன் என்போன்
    மற்றொரு சிலையைக் கையால் வாங்கினன் வாங்கு முன்னர்ச்
    செற்றனன் அதனை மைந்தன் திசைமுகன் முதலோர் ஆர்ப்ப. - 242



    1150 - திண்டிறல் பெற்ற வீரச் சிலைமுரிந் திட்ட பின்னர்த்
    தண்டமொன் றேந்தி ஈசன் தனயனோ டெதிர்த லோடும்
    விண்டது சோரும் வண்ணம் வெய்தெனப் புடைத்து மாயாக்
    கண்டகன் உரத்தில் தாக்கக் கையற வெய்தி நின்றான். - 243



    1151 - நடுங்கினன் சிந்தை ஒன்று நவில்கிலன் நாணத் தாலே
    ஒடுங்கினன் கயவெஞ் சூரன் உலந்தனன் போல நின்றான்
    அடும்பரி களிறு திண்டேர் அணிகெழு தானை பாரிற்
    படும்படி நினைந்து முன்னோன் பாரம்ஒன் றுய்த்தான் அன்றே. - 244



    1152 - விட்டவெம் பாசம் அங்கண் வெய்யதோர் சேனை முற்றுங்
    கட்டிய தாக மைந்தன் கணிச்சியும் அதற்பின் ஏவ
    அட்டதால் அதனை நோக்கி ஆடினர் அமரர் தானை
    பட்டன உணர்ந்து தீயோன் பதைபதைத் துயிர்த்து நொந்தான். - 245



    1153 - முந்துதன் கரத்தி லுள்ள முரண்கெழு படைகள் யாவுஞ்
    சிந்தினன் அவைகள் எல்லாஞ் சேர்ந்தன திங்கள் சூடும்
    எந்தையை வலஞ்செய் தேத்தி ஏவலின் இயன்ற மாதோ
    வெந்திறல் அவுணன் மேன்மேல் வெகுளித்தீக் கனல நின்றான். - 246



    1154 - நின்றவன் தன்னை நோக்கி நெடியபல் படைகள் ஏவில்
    சென்றிவன் தன்னைக் கொல்லா சிவனருள் வரத்தின் சீரால்
    இன்றினிச் செய்வ தென்னென் றிறைவரை உன்னி எந்தை
    யூன்றிருக் கோட்டில் ஒன்று தடக்கையின் முரித்துக் கொண்டான். - 247



    1155 - தடக்கையி லேந்து கோட்டைத் தந்தியாம் அவுணன் மீது
    விடுத்தலும் அனையன் மார்வை வெய்தெனக் கீண்டு போகி
    உடல்படி மிசையே வீழ்த்தி ஒல்லையில் ஓடித் தெண்ணீர்க்
    கடல்படிந் தமலன் மைந்தன் கரத்தில்வந் திருந்த தன்றே. - 248



    1156 - புயலினத் தொகுதி ஒன்றிப் புவிமிசை வழுக்கிற் றென்னக்
    கயமுகத் தவுணன் முந்நீர்க் கடலுடைந் தென்ன ஆர்த்திட்
    டியலுடைத் தேர்மேல் வீழா எய்த்தனன் அவன்தன் மார்பில்
    வியனதித் தாரை என்ன விரிந்தன குருதி வௌ¢ளம். - 249

    (241. பொன் - அழகு. எழு - ஓர் ஆயுதம். முரண் - வலிமை.
    243. கண்டகன் - கொடியன்; கயமுகன். கையறவு - துன்பம்.
    244. பாசம் - கயிறு. 245. அட்டது - அழித்தது.
    247. எந்தை - எந்தையாகிய விநாயகர். தன் திருக்கோட்டில் ஒன்று -
    தனது கொம்புகளில் ஒன்றான வலது கொம்பை.
    248. கரத்தில் - வலது கரத்தில்.)



    1157 - ஏடவிழ் அலங்கல் திண்டோள் இபமுகத் தவுணன் மார்பின்
    நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
    பாடுற வருங்கான் ஒன்றில் பரத்தலின் அதுவே செய்ய
    காடெனப் பெயர்பெற் றின்னுங் காண்டக இருந்த தம்மா. - 250



    1158 - ஆய்ந்தநல் லுணர்வின் மேலோர் அறிவினும் அணுகா அண்ணல்
    ஈந்ததொல் வரத்தால் மாயா இபமுகத் தவுணன் வீழ்ந்து
    வீந்தனன் போன்று தொல்லை மெய்யொரீஇ விண்ணும் மண்ணுந்
    தீந்திட எரிகண் சிந்தைச் சீற்றத்தோ ராகு வானான். - 251



    1159 - தேக்கிய நதிசேர் கின்ற சென்னியன் செம்மல் தன்னைத்
    தாக்கிய வருத லோடுஞ் சாரதன் தோளின் நீங்கி
    நீக்கருந் துப்பின் தாக்கி நீநமைச் சுமத்தி என்று
    மேக்குயர் பிடரில் தாவி வீற்றிருந் தூர்தல் உற்றான். - 252



    1160 - மற்றது கண்ட தேவர் வாசவன் முதலோர் யாரும்
    இற்றனன் கயவெஞ் சூரன் எம்மிடர் போயிற் றன்றே
    அற்றதெம் பகையும் என்னா ஆடினர் பாடா நின்றார்
    சுற்றிய கலிங்கம் வீசித் துண்ணென விசும்பு தூர்த்தார். - 253



    1161 - காமரு புயலின் தோற்றங் காண்டலுங் களிப்பின் மூழ்கி
    ஏமரு கலாப மஞ்ஞை இனமெனக் குலவு கின்றார்
    தேமரும் இதழி அண்ணல் சிறுவனைத் தெரியா வண்ணம
    பூமலர் பொழிந்து நின்று புகழினைப் போற்றல் உற்றார். - 254



    11621 - காப்பவன் அருளும் மேலோன் கண்ணகல் ஞாலம் யாவுந்
    தீப்பவன் ஏனைச் செய்கை செய்திடும் அவனும் நீயே
    ஏப்படுஞ் செய்கை யென்ன எமதுளம் வெதும்பும் இன்னல்
    நீப்பது கருதி யன்றோ நீயருள் வடிவங் கொண்டாய். - 255



    1163 - உன்னிடைப் பிறந்த வேதம் உன்பெரு நிலைமை தன்னை
    இன்னதென் றுணர்ந்த தில்லை யாமுனை அறிவ தெங்ஙன்
    அன்னையும் பயந்தோன் தானும் ஆயினை அதனால் மைந்தர்
    பன்னிய புகழ்ச்சி யாவும் பரிவுடன் கேட்டி போலாம். - 256



    1164 - என்றிவர் எகினம் ஊரும் இறையொடும் இறைஞ்சி ஏத்தி
    நன்றிகொள் சிந்தை யோடு நகையொளி முகத்த ராகி
    மன்றவர் குமரன் தன்பால் வந்தனர் சூழ்த லோடும்
    ஒன்றிய கருணை நோக்கால் உலப்பிலா அருள்பு ரிந்தான். - 257

    (250. செய்யகாடு - செங்காடு; இது தற்போது திருச்செங்காட்டாங்குடி
    என வழங்குகிறது. 251. தொல்லைமெய் - யானைவடிவு. ஒரீஇ - நீங்கி.
    ஆகு - பெருச்சாளி. 252. பிடரி - முதுகு. 253. இற்றனன் - இறந்தனன்.
    கலிங்கம் - ஆடை. 254. கலாபம் - தோகை. மஞ்ஞை - மயில்.
    257. எகினம் - அன்னம்.)



    1165 - உய்ந்தனம் இனிநாம் என்னா ஓதிமம் உயர்த்தோன் வௌ¢ளைத்
    தந்தியன் யாரும் பேற்றிச் சார்தலுஞ சமரின் முன்னம்
    வெந்தொழில் அவுணன் காயம் வீந்திடு பூதர் தம்மை
    எந்தையங் கினிது நோக்கி எழுதிரென் றருளிச் செய்தான். - 258



    1166 - அவ்வகை அருள லோடும் அரவென எழுந்து போற்றி
    மைவரை மிடற்றுப் புத்தேள் மைந்தனை வணங்கி ஏத்தி
    எவ்வமில் பூதர் யாரும் ஈண்டினர் இனைய எல்லாஞ்
    செவ்விதில் உணர்ந்து கொண்டான் தேசிலா நிருதர்க் கீசன். - 259



    1167 - மந்திரி யோடுஞ் சூழ்ந்து வருந்தினன் புலம்பி மாழகி
    உய்ந்தனன் போவல் யானென் றுன்னிஓர் பறவை யாகி
    அந்தரத் திறந்த புள்ளோ டணுகியப் பதியை நீங்கிச்
    சிந்தையிற் செல்லல் கூரச் செம்பொன்மால் வரையிற் சென்றான். - 260



    1168 - தாழுறு சார லூடு தபனனும் உணராத் தாருச்
    சூழலொன் றுண்டால் அங்கட் சுருங்கையோ டிருந்த சேமப்
    புழையுட் புலம்பி உற்றான் பொன்னகர் இறைக்கும் அங்கண்
    ஊழிவெங் காலிற் சூழும் உலப்பில்பூ தர்க்கும் அஞ்சி. - 261



    1169 - வானவர் பகைஞன் அந்த மதங்கமா புரியை நீங்கிப்
    போனதோர் காலை மற்றைப் புகருமோர் புள்ள தாகித்
    தானுறை உலகு நண்ணித் தவமறைந் தல்ல தாற்றி
    ஊனுட லோம்பு வார்போல் ஒருப்படா யோகில் உற்றான். - 262



    1170 - பூதரும் அன்ன வேலைப் புரிசைசூழ் நகரம் போகி
    நீதியில் அவுண ராகி நிறங்கிளர் படைகொண் டோரைக்
    காதிவெஞ் சினப்போர் முற்றிக் களத்திடை வருத லோடும்
    ஆதிதந் தருளும் மைந்தன் அவ்விடை அகன்று மீண்டான். - 263



    1171 - மீண்டுசெங் காட்டி லோர்சார் மேவிமெய்ஞ் ஞானத் தும்பர்
    தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத் தாபித் தேத்திப்
    பூண்டபே ரன்பிற் பூசை புரிந்தனன் புவியு ளோர்க்குக்
    காண்டகும் அனைய தானங் கணபதீச் சரம தென்பார். - 264



    1172 - புரமெரி படுத்தோன் தன்னைப் பூசனை புரிந்த பின்னர்
    எரிவிழி சிதறும் ஆகு எருத்தமேல் இனிதின் ஏறிச்
    சுரபதி அயன்விண் ணோர்கள் தொழுதுடன் சூழந்து போற்ற
    அரவென மாலோன் வைகும் ஆலமா வனத்திற் புக்கான். - 265

    (258. ஒதிமம் - அன்னம். வௌ¢ளைத் தந்தியன் - இந்திரன்.
    259. அரவென - ஹரஹர என்ற ஒலியுடன்.
    260. மந்திரி - இங்குச் சுக்கிரன். பதியை - மங்கத புரத்தை. செல்லல் - வருத்தம்.
    261. சாரல் - மலை அடிவாரம். தபனன் - சூரியன். சுருங்கை - சிறு துவாரம்.
    சேமம் - காவல். புழையுள் - மரப்பொந்தில். 262. வானவர் பகைஞன் - அசுரேந்திரன்.
    264. கணபதீச்சரம் - இது திருச்செங் காட்டாங்குடியில் உள்ள சிவாலயத்தின் பெயர்.)

    ஆகத் திருவிருத்தம் - 1172
    ------

    15. அனந்தன் சாப நீங்கு படலம் (1173- 1210)




    1173 - புக்கதொரு பொழுதிலங்கண் முந்தோ ராலம்
          பொந்தினிடை இருந்தமலன் பொற்றாள் உன்னி
    மிக்கதவம் புரிமாலைங் கரத்து முன்னோன்
          மேவியது மனங்கொண்டு விரைவின் ஆங்கே
    அக்கணமே எதிர்சென்று வழுத்திக் காண
          அம்மையளித் தருள்சாபம் அகற லோடுஞ்
    சக்கரமே முதலியஐம் படைக ளேந்தித்
          தனாதுதொல்லைப் பேருருவந் தன்னைப் பெற்றான். - 1



    1174 - மாலோன்தொல் லுருவுதன்பால் மேவக் கண்டு
          மகிழ்சிறந்து சிவனருளை மனங்கொண் டேத்தி
    மேலோன்தன் முன்னரெய்தி வணக்கஞ் செய்து
          மீண்டுமவன் தனைத்துதித்து விமல நீயென்
    பாலோங்கு பூசனைகொண் டருளல் வேண்டும்
          பணித்தருள்க ஆதிபரா பரத்தின் பாலாய்
    மூலோங்கா ரப்பொருளாய் இருந்தாள் ன்னம்
          மொழிந்தருள்சா பந்தொலைத்த முதல்வ என்றான். - 2



    1175 - ஐங்கரன்றான் மாலுரைத்த மாற்றங் கேளா
          அன்னதுசெய் கெனஅருளி அங்கண் மேவக்
    கொங்குலவு மஞ்சனநீர் சாந்த மாலை
          கொழும்புகையே முதலியன கொண்டு போந்து
    சங்கரனார் மதலைதனை அருச்சித் தன்பால்
          தாவறுபண் ணியம்பலவுஞ் சால்பில் தந்து
    பொங்கியபால் அவியினொடு முன்ன மார்த்திப்
          போற்றியே இ·தொன்று புகலல் உற்றான். - 3



    1176 - வின்னாமம் புகல்கின்ற திங்கள் தன்னில்
          மிக்கமதி தனிலாறாம் பக்க மாகும்
    இந்நாளில் யானுன்னை அருச்சித் திட்ட
          இயறகைபோல் யாருமினி ஈறி லாவுன்
    பொன்னாரும் மலரடியே புகலென் றுன்னிப்
          பூசைபுரிந் திடவுமவர் புன்கண் எல்லாம்
    அந்நாளே அகற்றிநீ யுலவாச் செல்வம்
          அளித்திடவும் வேண்டுமி· தருள்க வென்றான்.

    (1. அமலன் - சிவன். ஐம்படை - சங்கு, சக்கரம், வாள், வில்,
    கதை என்பன.
    2. மேலோன் - இங்கு விநாயகக் கடவுள். 3. பண்ணியம் - பலகாரங்கள்.
    பாலவி - பாற்சோறு. ஆர்த்தி - நிவேதித்து.
    4. வில் நாமம் புகல்கின்ற திங்கள் - மார்கழி மாதம். மிக்கமதி - சுக்கிலபட்சம். ஆறாம் பக்கம் - சஷ்டிதிதி.) - 4



    1177 - மாயனுரை கேட்டலுநீ மொழிந்தற் றாக
          மகிழ்ந்தனநின் பூசையென மதித்துக் கூறி
    ஆயவனும் அயன்முதலா வுள்ளோர் யாரும்
          அன்பினொடு வாழ்த்திசைப்ப ஆகு என்னுந்
    தூயதொரூர் தியிலெய்திக் கணங்க ளானோர்
          சூழ்ந்துரக் கயிலையெனுந் துகடீர் வெற்பின்
    நேயமுடன் போந்தரனை வணக்கஞ் செய்து
          நீடருள்பெற் றேதொல்லை நிலையத் துற்றான். - 5



    1178 - வேறு
    அற்றை நாளில் அரியயன் ஆதியோர்
    நெற்றி யங்கண் நிமலன் பதங்களின்
    முற்று மன்பொடு மும்முறை தாழ்ந்தருள்
    பெற்று நீங்கினர் பேதுறல் நீங்கினார். - 6



    1179 - கரிமு கம்பெறு கண்ணுதற் பிள்ளைதாள்
    பரவி முன்னம் பணிந்தனர் நிற்புழி
    அருள்பு ரிந்திட அன்னதொர் வேலையில்
    பரிவி னாலொர் பரிசினைக் கூறுவார். - 7



    1180 - எந்தை கேண்மதி எம்மை அலைத்திடுந்
    தந்தி மாமுகத் தானவற் செற்றியால்
    உய்ந்து நாங்கள் உனதடி யோமிவண்
    வந்து நல்குகைம் மாறுமற் றில்லையே. - 8



    1181 - நென்னல் காறும் நிகரில் கயாசுரன்
    முன்ன ராற்று முறைப்பணி எந்தைமுன்
    இன்ன நாட்டொட் டியற்றுதும் யாமென
    அன்ன செய்திரென் றான்அருள் நீர்மையான். - 9



    1182 - இத்தி றம்படும் எல்லையின் நின்றிடும்
    அத்த லைச்சுரர் யாவரும் அன்புறீஇக்
    கைத்த லத்தைக் கபித்தம தாக்கியே
    தத்தம் மத்தகந் தாக்கினர் மும்முறை. - 10



    1183 - இணைகொள் கையை யெதிரெதிர் மாற்றியே
    துணைகொள் வார்குழை தொட்டனர் மும்முறை
    கணைகொள் காலுங் கவானுஞ் செறிந்திடத்
    தணிவி லன்பொடு தாழந்தெழுந் தேத்தினார். - 11



    1184 - இணங்கும் அன்புடன் யாருமி தாற்றியே
    வணங்கி நிற்ப மகிழ்சிறந் தான்வரை
    அணங்கின் மாமகன் அவ்வியல் நோக்கியே
    கணங்க ளார்த்தன கார்க்கட லாமென.

    (6. செற்றி - கொன்றருளினீர். மதி - முன்னிலையசை.
    10. கபித்த மது ஆக்கி - மூடிக்கொண்டு. மத்தகம் - நெற்றி.
    11. துணை - இரண்டு. கணைகொள்கால் - கணைக்கால். கவான் - தொடை.) - 12



    1185 - நின்ற தேவர் நிமலனை நோக்கியே
    உன்றன் முன்னம் உலகுளர் யாவரும்
    இன்று தொட்டெமைப் போலிப் பணிமுறை
    நன்று செய்திட நல்லருள் செய்கென. - 13



    1186 - கடனி றத்துக் கயமுகன் அத்திற
    நடைபெ றும்படி நல்கிஅ மரர்கோன்
    நெடிய மாலயன் நின்றுள ருக்கெலாம்
    விடைபு ரிந்து விடுத்தனன் என்பவே. - 14



    1187 - அம்பு யக்கண் அரியயன் வாசவன்
    உம்பர் அவ்வரை ஒல்லையின் நீக்குறாத்
    தம்ப தந்தொறுஞ் சார்ந்தனர் வைகினார்
    தும்பி யின்முகத் தோன்றல் அருளினால். - 15



    1188 - முந்தை வத முதலெழுத் தாகிய
    எந்தை தோற்றம் இயம்பினம் இங்கினி
    அந்த மில்குணத் தாண்டகைக் கோர்குணம்
    வந்ததென் னென்றி மற்றது கேட்டிநீ. - 16



    1189 - வேறு
    நற்குண முடைய நல்லோரும் நாடொணாச்
    சிற்குணன் ஆகுமச் சிவன்ப ராபரன்
    சொற்குண மூவகைத் தொடர்பும் இல்லதோர்
    நிர்க்குணன் அவன்செயல் நிகழ்த்தற் பாலதோ. - 17



    1190 - பரவிய வுயிர்க்கெலாம் பாசம் நீக்குவான்
    அருளினன் ஆகியே அமலன் மாலயற்
    கிருதொழின் முறையினை ஈந்து மற்றவைக்
    குரியன குணங்களும் உள்ள வாக்கினான். - 18



    1191 - முடித்திடல் இயற்றுஎம முதல்வன் அத்தொழில்
    தடுப்பரும் வெஞ்சினந் தன்னில் முற்றுமால்
    அடுத்தவப் பான்மையால் அதன்கண் தாமதம்
    படுத்தினன் அத்திறம் பலருந் தேர்வரால். - 19



    1192 - மாமறை அளப்பில வரம்பில் ஆகமந்
    தோமற உதவியோர் தொன்ம ரத்திடைக்
    காமரு முனிவரர் கணங்கட் கன்னவை
    தாமத குணத்தனேல் சாற்ற வல்லனோ.

    (13. நிமலனை - விநாயகப் பெருமானை.
    இப்பணிமுறை - குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வழிபடுதலை.
    15. தும்பியின் முகத்தோன்றல் - கணபதி.
    16. அந்தமில் குணத்து ஆண்டகை - சிவபெருமான்.
    17. மூவகைக் குணம் - சாத்து விதம், இராசதம், தாமதம் என்னும் மூவகைக் குணம்.
    18. இருதொழில் - காத்தல், படைத்தல் என்பன.
    19. சங்காரத் தொழில் தாமத குணம் அமைந்துள்ளது என்க.
    20. அன்னவை - வேதசிவாகமங்கள். தாமத குணத்தனேல் - தாமதகுணத்தராயின்.) - 20



    1193 - வாலிய நிமலமாமம் வடிவங் கண்ணுதல்
    மேலவன் எய்துமோ வேதம் விஞ்சையின்
    மூலமென் றவனையே மொழியு மோவிது
    சீலமில் லார்க்கெவன் தேற்றும் வண்ணமே. - 21



    1194 - இமையவர் யாவரும் இறைஞ்சுங் கண்ணுதல்
    விமலன்அன் றிறுதியை விளைக்கும் பண்பினால்
    தமகுணன் என்றியத் தன்மை செய்கையால்
    அமைகுண மியற்குணம் அறியற் பாலதோ. - 22



    1195 - ஈத்தலும் அளித்தலும் இயற்று வோர்க்குவ
    சாத்திக ராசதந் தத்தஞ் செய்கையின்
    மாத்திரை யல்லது மற்ற வர்க்கவை
    பார்த்திடின் இயற்கையாப் பகர லாகுமோ. - 23



    1196 - அக்குண மானவை அளிக்குஞ் செய்கையால்
    தொக்குறும் இயற்கையத் தொல்லை யோர்கள்பால்
    இக்குண மல்லதோர் இரண்டுஞ் சேருமால்
    முக்குண நெறிசெலும் முனிவர் தேவர்போல். - 24



    1197 - நேமியாற் குருவெலாம் நீல மாயதுந்
    தோமறு கடலிடைத் துயில்கொள் பான்மையும்
    மேமுறும் அகந்தையும் பிறவு மெய்துமேல்
    தாமத ராசதந் தானு முற்றவே. - 25



    1198 - அறிவொருங் குற்றுழி அனையன் கண்ணுதல்
    இறைவனை வழிடீஇ ஏத்தி இன்னருள்
    நெறிவரு தன்மையும் நீடு போதமும்
    பெறுதலிற் சாத்திக முறையும் பெற்றுளான். - 26



    1199 - மேனிபொற் கென்றலின் விமல வான்பொருள்
    நானெனும் மருட்கையின் நவையில் ஈசனைத்
    தானுணர் தௌ¤வினில் தவத்திற் பூசையில்
    ஆனது குணனெலாம் அயன்ற னக்குமே. - 27



    1200 - ஆதலின் விருப்புடன் அல்ல தெய்தினோர்
    ஓதிய குணவிதத் துவர் கண்ணுதல்
    நாதனுக் கனையது நணுகு றாமையால்
    பேதைமை ஒருகுணம் அவன்கட் பேசுதல். - 28



    1201 - மூன்றென உளபொருள் யாமும் முன்னமே
    ஈன்றவன் கண்ணுதல் என்னும் நான்மறை
    சான்றது வாகுமால் தவத்தர்க் கென்னினும்
    ஆன்றதோர் அவன்செயல் அறியற் பாலதோ.

    (23. படைத்தல் தாழிலில் சாத்துவித குணமும், காத்தல் தொழிலில்
    இராசத குணமும் உள்ளன என்க. 27. மருட்கை - மயக்கம்.
    28. மூன்றென உள பொருள் யாவும் - மும்மாயா தத்துவப் பொருள்
    அனைத்தையும்.) - 29



    1202 - செங்கண்மால் முதலிய தேவர் ஏனையோர்
    அங்கவர் அல்லவை அகத்துள் வைகியே
    னுங்குமா யாவையும் இயற்று கின்றதோர்
    சங்கரன் ஒருகுணச் சார்பின் மேவுமோ. - 30



    1203 - ஈறுசெய் முறையினை எண்ணித் தாமதங்
    கூறினர் அல்லது குறிக்கொள் மேலையோர்
    வேறொரு செய்கையின் விளம்பி னாரலர்
    ஆறணி செஞ்சடை அமல னுக்கரோ. - 31



    1204 - வேறு
    என்றிவை பலவுந் தூயோன் இசைத்தலும் இனைய வெல்லம்
    வன்றிறல் வெறுக்கை எய்தி மயங்கலால் தக்கன் என்னும்
    புன்றொழில் புரியுந் தீயோன் பொறுத்திலன் புந்தி மீது
    நன்றென அறிதல் அதற்றான் ஒருசில நவிலல் உற்றான். - 32



    1205 - முனிவகேள் பலவும் ஈண்டு மொழிவதிற் பயனென் வௌ¢ளிப்
    பனிவரை உறையும் நுங்கோன் பகவனே எனினு மாக
    அனையவன் தனக்கு வேள்வி அவிதனை உதவேன் நீயும்
    இனியிவை மொழியல் போதி என்செயல் முடிப்பன் என்றான். - 33



    1206 - வேறு
    வளங்குலவு தக்கனிது புகன்றிடலுந்
          ததீசிமுனி மனத்திற் சீற்றம்
    விளைந்ததுமற் றவ்வளவில் வெருவியது
          வடவையழல் விண்ணோர் நெஞ்சந்
    தளர்ந்ததுபொன் மால்வரையுஞ் சலித்தந்தக்
          குலகிரியுந் தரிப்பின் றாகி
    உளைந்தனவே லைகள்ஏழும் ஒடுங்கியன
          நடுங்கியதிவ் வுலகம் எல்லாம். - 34



    1207 - அக்கணமே முனிவரன்தன் பெருஞ்சீற்றந்
          தனைநோக்கி அந்தோ என்னால்
    எக்குவடும் எக்கிரியும் எக்கடலும்
          எவ்வுலகும் யாவும் யாருந்
    தக்கன்ஒரு வன்பொருட்டால் தளர்ந்திடுமோ
          எனமுனிவு தணிந்து தற்சூழ்
    ஒக்கலாடும் அவணெழுந்து சிறுவிதியின்
          முகநோக்கி ஒன்று சொல்வான். - 35



    1208 - சங்கரனை விலக்கியின்று புரிகின்ற
          மகஞ்சிதைக தக்க நின்னோ
    டிங்குறையும் அமரரெலாம் அறிவுறவின்
          னேயென்னா இசைத்துப் பின்னர்
    அங்கணுறு மறையோர்தம் முகநோக்கி
          அந்தணரில் அழிதூ வானீர்
    உங்கள்குலத் தலைமைதனை இழந்திட்டீர்
          கேண்மினென உரைக்கல் உற்றான். - 36



    1209 - பேசரிய மறைகளெலாம் பராபரன்நீ
          எனவணங்கிப் பெரிது போற்றும்
    ஈசனையும் அன்பரையும் நீற்றொடுகண்
          டிகையினையும் இகழ்ந்து நீவிர்
    காசினியின் மறையவராய் எந்நாளும்
          பிறந்திறந்து கதியு றாது
    பாசமத னிடைப்பட்டு மறையுரையா
          நெறியதனிற் படுதிர் என்றான். - 37



    1210 - இனையநெறி யாற்சாபம் பலவுரைத்துத்
          ததீசிமுனி இரண்டு பாலும்
    முனிவர்தொகை தற்சூழத் தானுறையும்
          ஆச்சிரம முன்னிச் சென்றான்
    அனையவன்தன் பின்னாகத் தக்கனென்போன்
          பெருந்தகவும் ஆற்றும் நோன்பும்
    புனைபுகழுஞ் செழுந்திருவும் ஆற்றலுமாம்
          மனச்செருக்கும் போயிற் றன்றே.

    (31. ஈறு செய்முறை - சங்காரத் தொழில்.
    33. மொழியல் - உரையாதே.
    போதி - போவாய். 35. முனிவு - கோபம். ஒக்கல் - சுற்றத்தினர்.
    36. அழிதூவானீர் - பேடியாயுள்ளவர்களே.
    37. மறையுரையாநெறி - அவைதிக மார்க்கம். படுதிர் - புகுதிர்.) - 38

    ஆகத் திருவிருத்தம் - 1210
    ------

    16. தானப் படலம் ( 1211- 1256 )




    1211 - போனதோர் பொழுதிலவன் துவசமிற்ற
    மகத்தூணிற் பொருக்கென் றெய்திக்
    கானுலா வியகொடியுங் கழுகுமிடைந்
    தனயாருங் கலங்கத் தானே
    மானமார் வேதவல்லி மங்கலநா
    ணுங்கழன்ற மற்றித் தன்மை
    ஆனதோர் துன்னிமித்தம் பலவுண்டால்
    முடிவோன்கண் அவையு றாவோ. - 1



    1212 - வேறு
    இந்த வாறுதுன் னிமித்தங்கள் பலநிகழ்ந் திடவுஞ்
    சிந்தை செய்திலன் சிறுவதும் அஞ்சிலன் தீயோன்
    தந்தை தன்னையும் நாரணன் தன்னையுந் தகவால்
    முந்து பூசனை புரிந்தனன் முகமன்கள் மொழியா. - 2



    1213 - மற்றை வானவர் யாவர்க்கும் முனிவர்க்கும் மரபால்
    எற்று வேண்டிய அவையெலாம் நல்கியே இதற்பின்
    பெற்ற மங்கையர் தமக்கும்மா மருகர்க்கும் பெரிதும்
    அற்ற மில்லதோர் மங்கலத் தொல்சிறப் பளித்தான். - 3



    1214 - நாலு மாமுகக் கடவுள்சேய் இத்திறம் நல்கி
    மாலும் யாவருங் காத்திடத் தீத்தொழில் மகஞ்செய்
    வேலை நோக்கியே தொடங்கினன் அவ்விடை வேள்விச்
    சாலை தன்னிடை நிகழ்ந்தன சாற்றுவன் தமியேன். - 4



    1215 - முன்னரே தக்கன் ஏவலும் வினைசெயல் முறையால்
    மன்னு தேனுவோ ராடகச் சாலையின் மாடே
    பொன்னின் மால்வரை நடுவுசேர் வௌ¢ளியம் பொருப்பை
    அன்ன தாமென அன்னமாம் பிறங்கலை அளித்த. - 5



    1216 - ஏதம் நீங்கிய தீயபால் அடிசிலும் எண்ணில்
    பேத மாகிய முதிரையின் உண்டியும் பிறவாம்
    ஓத னங்களும் வீற்றுவீற் றாகவே உலகின்
    மாதி ரங்களிற் குலகிரி யாமென வகுத்த. - 6



    1217 - நெய்யி னோடளாய் விரைகெழு நுண்டுகள் நீவிக்
    குய்யின் ஆவியெவ் வுலகமும் நயப்புறக் குழுமி
    வெய்ய தாகிய கருனைகள் திசைதொறும் மேவும்
    மையல் யானைக ளாமென வழங்கிற்று மாதோ. - 7



    1218 - அண்ணல் சேர்வெந்தை (1)தோயவை நொலையலே ஆதிப்
    பண்ணி யங்களுந் தாரமுங் கனிவகை பலவும்
    மண்ணின் மேலுறு கிரியெலாங் குலகிரி மருங்கு
    நண்ணி னாலெனத் தொகுத்தன யாவரும் நயப்ப.
    *பா-ம் - (1) தோசையே) - 8



    1219 - விருந்தி னோர்கொள விழுதுடன் பால்தயிர் வௌ¢ளந்
    திருந்து கங்கையும் யமுனையு மாமெனச் செய்த
    அருந்தும் உண்டிகள் யாவையும் வழங்குகோ அதனில்
    பொருந்து கின்றது தந்ததென் றாலது புகழோ. - 9



    1220 - தாவில் பாளித மான்மதஞ் சாந்துதண் பனிநீர்
    நாவி வௌ¢ளடை செழும்பழுக் காயொடு நறைமென்
    பூவு மேனைய பொருள்களும் நல்கின புகழ்சேர்
    தேவர் கோமகன் பணிபுரி கின்றதோர் தேனு. - 10

    - (1. துவசம் - கொடி. கொடி - காகம். மங்கல நாண் - திருமங்கலியம்.
    2. சிறுவதும் - சிறிதும். மொழியா - மொழிந்து. 4. தமியேன் - அடியேன்.
    5. ஆடகச்சாலை - பொன்மயமான பாகசாலை.
    அன்னமாம் பிறங்கல் - சோறாகிய மலை. 6. முதிரை - கடலை.
    ஓதனம் - சோறு. 7. நீவி - கலந்து. குய் - தாளிப்பு.
    கருனைகள் - பொரிக்கறிகள்.
    8. வெந்தை - பிட்டு. தோயவை - தோசை. நொலையல் - அப்பம்.
    பண்ணியங்கள் - பலகாரங்கள். தாரம் - அருமைப் பண்டங்கள்.
    9. விழுது - நெய். கோ - காமதேனு. 10. பாளிதம் - கர்ப்பூரம்.
    மான்மதம் - கஸ்தூரி. நாவி புனுகு. வௌ¢ளடை - வெற்றிலை.
    பழுக்காய் - பாக்கு. நறை - தேன். தேனு - காமதேனு.)



    1221 - ஆவ திவ்வகை யாவது நல்கியே அங்கண்
    மேவு கின்றது மணியும்அச் சங்கமும் வியன்சேர்
    காவும் அம்புய நிதியமுந் தக்கனாங் கடியோன்
    ஏவ லாலருட் சாலையில் அடைந்தன இமைப்பில். - 11



    1222 - கணித மில்லதோர் பரிதிகள் மேனியிற் கஞலும்
    மணிக ளோர்புடை தொகுத்தன ஆடக வரைபோல்
    அணிகொள் காஞ்சன மோர்புடை தொகுத்தன அம்பொற்
    பணிக ளாடைக ளோர்புடை தொகுத்தன படைத்தே. - 12



    1223 - மற்றும் வேண்டிய பொருளெலாம் உதவிஅம் மருங்கில்
    உற்ற வேலைஅத் தக்கன தேவலின் ஒழுகா
    நிற்றல் போற்றிய முனிவரர் யாவரும் நிலத்தோர்க்
    கிற்றெ லாமிவண் வழங்குதும் யாமென இசைத்தார். - 13



    1224 - வேறு
    இன்ன வேலையில் இச்செயல் யாவையும்
    முன்ன மேயுணர் முப்புரி நூலினர்
    துன்னி மேயமனந் தூண்டவந் தொல்லையில்
    அன்ன சாலை தனையணைந் தாரரோ. - 14



    1225 - சாலை காண்டலுந் தக்கனை ஏத்தியே
    பாலர் தன்மையிற் பாடினர் ஆடினர்
    கோல மார்பிற் குலாவிய வெண்டுகில்
    வேலை யாமென வீசிநின் றார்த்துளார். - 15



    1226 - மிண்டு கின்றஅவ் வேதியர் தங்களைக்
    கண்டு வம்மின் கதுமென நீரெனாக்
    கொண்டு சென்று குழுவொடி ருத்தியே
    உண்டி தன்னை உதவுதல் மேயினார். - 16



    1227 - மறுவில் செம்பொன் மணிகெழு தட்டைகள்
    இறுதி யில்லன யாவர்க்கும் இட்டுமேல்
    நறிய உண்டிகள் நல்கியின் னோர்தமக்
    குறவி னாரென ஊட்டுவித் தார்அவண். - 17



    1228 - அன்ன காலை அரும்பசி தீர்தரத்
    துன்ன வுண்டுஞ் சுவையுடைத் தாதலால்
    உன்னி உன்னியிவ் வுண்டிகள் சாலவும்
    இன்னம் வேண்டு மெனவுரைப் பார்சிலர். - 18

    - (11. மணி - சிந்தாமணி. சங்கம் - சங்கநிதி. கா - கற்பகத்தரு.
    அம்புயநிதி - பதுமநிதி. 12. கஞலும் - விளங்குகின்ற. ஆடகம்,
    காஞ்சனம் - இவைகள் பொன்களின் வகைகள்.
    17. தட்டைகள் - தாம்பாளங்கள்.)


    1229 - குற்ற மொன்றுள கூறுவ தென்னினி
    நற்றவஞ் செய்து நான்முக னால்இவண்
    உற்ற உண்டி யெலாமுண ஓர்பசி
    பெற்றி லோமெனப் பேதுறு வார்சிலர். - 19



    1230 - வீறு முண்டி மிசைந்திட வேண்டும்வாய்
    நூறு நூற தெனநுவல் வார்தமை
    ஏற வேண்டு மிதிலமை யாதெனச்
    சீறி யேயிகல் செய்திடு வார்சிலர். - 20



    1231 - புலவர் கோன்நகர் போற்றிய தேனுவந்
    தலகில் இவ்வுண வாக்கிய தாலெனாச்
    சிலர்பு கன்றனர் தேக்கிட உண்மினோ
    உலவ லீரென ஓதுகின் றார்சிலர். - 21



    1232 - அறிவி லாத அயன்மகன் யாகம்இன்
    றிறுதி யாமென் றிசைத்தனர் அன்னது
    பெறுதி யேனுமிப் பேருண வேநமக்
    குறுதி வல்லையில் உண்மினென் பார்சிலர். - 22




    1233 - உண்டி லேம்இவண் உண்டதில் ஈதுபோற்
    கண்டி லேம்ஒரு காட்சியும் இன்பமுங்
    கொண்டி லேம்இன்று கொண்டதில் ஈசனால்
    விண்டி லேம்எனின் மேலதென் பார்சிலர். - 23



    1234 - எல்லை யில்லுண வீயும்இத் தேனுவை
    நல்ல நல்லதொர் நாண்கொடி யாத்திவண்
    வல்லை பற்றிநம் மாநக ரிற்கொடு
    செல்லு தும்மெனச் செப்புகின் றார்சிலர். - 24



    1235 - மக்கள் யாவரும் வானவர் யாவரும்
    ஒக்கல் யாவரும் உய்ந்திட வாழ்தலால்
    தக்கன் நோற்ற தவத்தினும் உண்டுகொல்
    மிக்க தென்று விளம்புகின் றார்சிலர். - 25



    1236 - மைந்தன் இட்டன மாந்திட நான்முகன்
    தந்தி லன்வயின் சாலவும் ஆங்கவன்
    சிந்தை மேலழுக் காறுசெய் தானெனா
    நொந்து நொந்து நுவலுகின் றார்சிலர். - 26



    1237 - குழுவு சேர்தரு குய்யுடை உண்டிகள்
    விழைவி னோடு மிசைந்தன மாற்றவும்
    பழுதி லாவிப் பரிசனர் தம்மொடும்
    எழுவ தெப்படி என்றுரைப் பார்சிலர். - 27

    - (20. வீறும் - மிக்க. இகல் - சண்டை.
    21. புலவர்கோன் - இந்திரன்.
    25. ஒக்கல் - சுற்றம்.
    27. குழுவு - (வாசனைப்) பொருள்களின் கூட்டம்.பரிசனர் - நட்பினர்.)



    1238 - இந்த நல்லுண வீண்டு நுகர்ந்திட
    நந்தம் மைந்தரை நம்மனை யாங்கொடு
    வந்தி லம்மினி வந்திடு மோவெனாச்
    சிந்தை செய்தனர் செப்புகின் றார்சிலர். - 28



    1239 - அன்ன பற்பல ஆர்கலி யாமெனப்
    பன்னி நுங்கும் பனவர்கள் கேட்டனர்
    என்ன மற்றவை யாவையும் ஆர்தர
    முன்ன ளித்து முனிவர் அருத்தினார். - 29



    1240 - அருத்தி மிச்சில் அகற்றி அருந்தவ
    விருத்தி மேவிய வேதியர் தங்களை
    இருத்தி மற்றொர் இருக்கையில் வாசநீர்
    கரைத்த சந்தின் கலவை வழங்கினார். - 30



    1241 - நளிகு லாவிய நாவி நரந்தம்வெண்
    பளிதம் வௌ¢ளடை பாகுடன் ஏனவை
    அளியு லாவும் அணிமலர் யாவையும்
    ஔ¤று பீடிகை உய்த்தனர் நல்கினார். - 31



    1242 - அரைத்த சாந்தம் அணிந்துமெய் எங்கணும்
    விரைத்த பூந்துணர் வேய்ந்துபைங் காயடை
    பரித்து நின்ற பனவர்புத் தேளுறுந்
    தருக்க ளாமெனச் சார்ந்தனர் என்பவே. - 32



    1243 - ஆன பான்மையில் அந்தணா யாவரும்
    மேன காதலின் வெய்தென ஏகியே
    வான மண்ணிடை வந்தென ஏர்கெழு
    தான சாலை தனையடைந் தார்களே. - 33



    1244 - அடையும் வேலை அயனருள் காதலன்
    விடையி னால்அங்கண் மேவு முனிவரர்
    இடைய றாதவர்க் கீந்தனர் ஈந்திடுங்
    கொடையி னால்எண்ணில் கொண்டலைப் போன்றுளார். - 34



    1245 - பொன்னை நல்கினர் பூணொடு பூந்துகில்
    தன்னை நல்கினர் தண்சுட ரோனென
    மின்னை நல்கும் வியன்மணி நல்கினர்
    கன்னி யாவுங் கறவையும் நல்கினார். - 35



    1246 - படியி லாடகப் பாதுகை நல்கினர்
    குடைகள் நல்கினர் குண்டிகை நல்கினர்
    மிடையும் வேதியர் வேண்டிய வேண்டியாங்
    கடைய நல்கினர் அங்கைகள் சேப்பவே. - 36

    - (29. ஆர்கலி - கடல். பன்னி - கூறி. நுங்கும் - உண்ணும்.
    பனவர்கள் - அந்தணர்கள். 30. மிச்சில் - எச்சில்.
    31. நாவி - புனுகு. நரந்தம் - கஸ்தூரி.
    33. தானசாலை - தானம் வழங்கும் இடம்.
    34. இங்குத் தானங்களை வரையறை இன்றி வழங்கினார்கள் என்க.
    35. கன்னிஆ - கன்னிப் பசு; கடாரி. கறவை - கன்றுடைய பசு.)



    1247 - இந்த வண்ணம் இறையதுந் தாழ்க்கிலர்
    முந்து நின்ற முனிவரர் ஆண்டுறும்
    அந்த ணாளர்க் கயினியொ டாம்பொருள்
    தந்து நின்று தயங்கினர் ஓர்புடை. - 37



    1248 - அற்ற மில்சிறப் பந்தணர் ஆயிடைப்
    பெற்ற பெற்ற பெருவளன் யாவையும்
    பற்றி மெல்லப் படர்ந்தனர் பற்பல
    பொற்றை செய்தனர் போற்றினர் ஓர்புடை. - 38



    1249 - வரத்தி னாகும் வரம்பில் வெறுக்கைதம்
    புரத்தி னுய்த்திடும் புந்தியில் அன்னவை
    உரத்தி னால்தமக் கொப்பரும் வேதியர்
    சிரத்தின் மேற்கொடு சென்றனர் ஓர்புடை. - 39



    1250 - அரிதன் ஊர்தியும் அன்னமும் கீழ்த்திசை
    அரிதன் ஊர்தியும் ஆங்கவன் மாக்களும்
    அரிதன் ஊர்தியும் ஆருயிர் கொண்டிடும்
    அரிதன் ஊர்தியும் ஆர்ப்பன ஓர்புடை. - 40



    1251 - தான மீது தயங்கிய தேவரும்
    ஏனை யோர்களும் இவ்விடை ஈண்டலின்
    மீன மார்தரு விண்ணென வெண்ணிலா
    மான கோடி மலிகின்ற ஓர்புடை. - 41



    1252 - நரம்பின் வீணை ஞரலுறும் வேய்ங்குழல்
    பரம்பு தண்ணுமை பண்ணமை பாடல்நூல்
    வரம்பின் ஏய்ந்திட வானவர் வாடவே
    அரம்பை மார்கள்நின் றாடினர் ஓர்புடை. - 42



    1253 - தேவர் மாதருஞ் சிற்சில தேவருந்
    தாவி லாமகச் சாலையின் வைகிய
    காவு தோறுங் கமல மலர்ந்திடும்
    ஆவி தோறும்உற் றாடினர் ஓர்புடை. - 43



    1254 - வேத வல்லி வியப்புடன் நல்கிய
    காதல் மாதருங் காமரு விண்ணவர்
    மாத ராருஞ் சசியும் மகத்திரு
    ஓதி நாடியங் குற்றனர் ஓர்புடை. - 44



    1255 - இனைய பற்பல எங்கணும் ஈண்டலிற்
    கனைகொள் பேரொலி கல்லென ஆர்த்தன
    அனையன் வேள்விக் ககன்கடல் யாவையுந்
    துனைய வந்தவண் சூழ்ந்தன போலவே. 45 - 18



    1256 - ஊன மேலுறும் உம்பரும் இம்பரும்
    ஏன காதலின் மிக்கவண் ஈண்டுவ
    வான யாறு வருந்தி யும்புவித்
    தான யாறுந் தழீஇயின போன்றவே. - 46

    - (37. அயினி - சோறு. 38. பொற்றை - மலை.
    39. வெறுக்கை - செல்வம். 40. கீழ்த்திசை அரி - இந்திரன்; இவன்
    ஊர்தி ஐராவதம். மாக்கள் - இங்கு உச்சைச் சிரவ முதலிய குதிரைகள்.
    அரிதன் ஊர்தி அக்கினி தேவன் வாகனமான ஆட்டுக்கடா.
    41. தானமீது - சுவர்க்கத்தில். 42. ஞரலுறும் - ஒலிக்கும்.
    43. மகச்சாலை - யாகசாலை. ஆவி - வாவிகள்.
    46. ஊனம் மேலுறும் - வருங்காலத்தில் துன்பமடையும்.)
    ஆகத் திருவிருத்தம் - 1256
    -----

    17. வேள்விப் படலம் (1257- 1265)




    1257 - இகந்த சீர்பெறும் இப்பெருஞ் சாலையில்
    அகந்தை மிக்க அயன்பெருங் காதலன்
    மகம்பு ரிந்தது மற்றது சிந்திடப்
    புகுந்த வாறும் பொருக்கெனக் கூறுகேன். - 1



    1258 - வேறு
    மருத்து ழாய்முடி மாலயன் பாங்குற மகத்தின்
    கருத்த னாகிய தீயவன் முன்னமே கருதி
    வரித்த மேலவர் தங்களை நோக்கியே மரபின்
    இருத்து முத்தழல் என்றலும் நன்றென இசைந்தார். - 2



    1259 - முற்றும் நாடிய இருத்தினோர் அரணியின் முறையால்
    உற்ற அங்கியை வேதிகைப் பறப்பைமேல் உய்த்துச்
    சொற்ற மந்திர மரபினால் பரிதிகள் சூழ்ந்து
    மற்று முள்ளதோர் விதியெலாம் இயற்றினர் மன்னோ. - 3



    1260 - ஆங்கு முத்தழல் விதிமுறை செய்தலும் அயன்சேய்
    பாங்கர் உற்றிடும் இருத்தினர் யாரையும் பாரா
    நீங்கள் உங்களுக் காகிய செய்கையை நினைந்து
    தூங்கல் இன்றியே புரிமினோ கடிதெனச் சொன்னான். - 4



    1261 - சொன்ன வாசகங் கேட்டலும் இருத்தினோர் தொகையின்
    முன்ன மாகிய அம்மகந் தனக்கவி முழுதும்
    வன்னி யாதியாஞ் சமிதையுந் தருப்பையும் மற்றும்
    இன்ன போல்வதுங் கொடுவழங் கினர்களா றிருவர். - 5



    1262 - அந்த வேள்விசெய் வித்தனர் ஒருவரால் அவிகள்
    எந்தை எல்லவர் கொள்ளவே அவரவர்க் கிசைத்த
    மந்தி ரந்தனைப் புகன்றனர் ஒருவர்அவ் வானோர்
    தந்த மைக்குறித் தழைத்தனர் ஒருவர்பேர் சாற்றி. - 6



    1263 - மற்ற வார்க்கெலாம் அமைந்திடும் அவிகளை மலர்க்கை
    பற்றி யங்கிவாய் அளித்தனர் ஒருவர்அப் பரிசின்
    அற்றம் நோக்கியே இருந்தனர் ஒருவர்அங் கதற்கு
    முற்றும் நல்லருள் புரிந்தனர் ஒருவரம் முதல்போல். - 7



    1264 - இருத்தி னோர்களும் பிறரும்ஈ தியற்றுழி யாக
    கருத்த னாகிய தக்கன்அத் தேவரைக் கருதிப்
    பரித்து நுங்குதிர் என்றவி புரிதொறும் பகர்ந்தே
    அருத்தி உற்றனன் கடவுளர் தமக்கெலாம் அமுதின். - 8



    1265 - திருந்து கின்றநற் சுவையினால் தூய்மையால் திகழும்
    மருந்து போன்றன என்னினும் உயிர்தொறும் மனத்தும்
    இருந்த எம்பிரான் அன்றியே மிசைதலின் இமையோர்க்
    கருந்தும் நீரலா நஞ்சென லாகிய அவிகள். - 9

    - (1. இகந்த - அளவு கடந்த. 2. மரு - வாசனை. மகத்தின் கருத்தன் -
    யாக கருத்தா.
    3. இருத்தினோர் - வேள்வியில் ஆசாரியனுக்கு ஒத்தாசை செய்பவர்;
    சாதகாசாரியர். அரணி - தீக்கடைக்கோல். அங்கி - அக்கினி.
    பறப்பை - நெய் விடு கருவிகள். பரிதிகள் - யாக மேடைகள்.
    5. வன்னியாதியாம் சமிதை - வன்னி முதலிய சமித்துக்கள்.
    இருத்தினோர் ஆறு இருவர் என்க.
    7. அங்கிவாய் அளித்தனர் - அக்கினிமூலமாக அளித்தனர்.
    9. உயிர்தொறும் மனத்தும் இருந்த எம்பிரான் - சிவபெருமான்.
    அருந்தும் நீரலா - உண்ணத்தகாத.)

    ஆகத் திருவிருத்தம் - 1265
    ------

    18. உமைவரு படலம் (1266 - 1326 )




    1266 - பேசுமிவ் வேள்வி பிதாமகன் மைந்தன்
    நாசம் விளைந்தட நாடி இயற்ற
    மாசறு நாரத மாமுனி யுற்றே
    காசினி மேலிது கண்டனன் அன்றே. - 1



    1267 - கண்டனன் ஆலமர் கண்டனை நீக்கிப்
    புண்டரி கந்திகழ் புங்கவன் மைந்தன்
    அண்ட ருடன்மகம் ஆற்றினன் அன்னான்
    திண்டிறல் கொல்லிது செய்திடல் என்னா. - 2



    1268 - எண்ணிய நாரதன் எவ்வு லகுஞ்செய்
    புண்ணிய மன்னதொர் பூங்க யிலாயம்
    நண்ணிமுன் நின்றிடு நந்திகள் உய்ப்பக்
    கண்ணுதல் சேவடி கைதொழு துற்றான். - 3



    1269 - கைதொழு தேத்திய காலஅன் னானை
    மைதிகழ் கந்தர வள்ளல்கண் ணுற்றே
    எய்திய தென்னிவண் இவ்வுல கத்தில்
    செய்திய தென்னது செப்புதி என்றான். - 4



    1270 - எங்கணு மாகி இருந்தருள் கின்ற
    சங்கரன் இம்மொழி சாற்றுத லோடும்
    அங்கது வேலையில் அம்முனி முக்கட்
    புங்கவ கேட்டி யெனப்புகல் கின்றான். - 5



    1271 - அதிர்தரு கங்கை அதன்புடை மாயோன்
    விதிமுத லோரொடு மேதகு தக்கன்
    மதியிலி யாயொர் மகம்புரி கின்றான்
    புதுமையி தென்று புகன்றனன் அம்மா. - 6



    1272 - ஈங்கிது கூறலும் எம்பெரு மான்றன்
    பாங்கரின் மேவு பராபரை கேளா
    ஆங்கவன் மாமகம் அன்பொடு காண்பான்
    ஓங்கு மகிழ்ச்சி உளத்திடை கொண்டாள். - 7



    1273 - அங்கணன் நல்லரு ளால்அனை யான்றன்
    பங்குறை கின்றனள் பாங்கரின் நீங்கி
    எங்கள் பிரானை எழுந்து வணங்கிச்
    செங்கை குவித்திது செப்புத லுற்றாள். - 8



    1274 - தந்தை எனபடு தக்கன் இயற்றும்
    அந்த மகந்தனை அன்பொடு நோக்கி
    வந்திடு கின்றனன் வல்லையில் இன்னே
    எந்தை பிரான்விடை ஈகுதி என்றாள். - 9



    1275 - என்றலும் நாயகன் ஏந்திழை தக்கன்
    உன்றனை எண்ணலன் உம்பர்க ளோடும்
    வன்றிறல் எய்தி மயங்குறு கின்றான்
    இன்றவன் வேள்வியில் ஏகலை என்றான். - 10



    1276 - இறையிது பேசலும் ஏந்திழை வேதாச்
    சிறுவ னெனப்படு தீயதொர் தக்கன்
    அறிவிலன் ஆகும் அவன்பிழை தன்னைப்
    பொறுமதி என்றடி பூண்டனள் மாதோ. - 11



    1277 - பூண்டனள் வேள்வி பொருக்கென நண்ணி
    மீண்டிவண் மேவுவல் வீடருள் செய்யுந்
    தாண்டவ நீவிடை தந்தருள் என்றாள்
    மாண்டகு பேரருள் வாரிதி போல்வாள். - 12



    1278 - மாதிவை கூறலும் வன்மைகொள் தக்கன்
    மேதகு வேள்வி வியப்பினை நோக்குங்
    காதலை யேலது கண்டனை வல்லே
    போதுதி என்று புகன்றனன் மேலோன். - 13

    - (1. பிதாமகன் - பிரமன். 4. மைதிகழ் கந்தரம் - நீலகண்டம்.
    6. கங்கை அதன்புடை - கங்கா நதிக்கரையில்.
    7. பராபரை - அம்பிகை. 10. ஏந்திழை - உமாதேவியே!
    வன்திறல் - மிக்க செருக்கு. ஏகலை - போகாதே.
    11. இறை - சிவபெருமான். பொறுமதி பொறுப்பாயாக.மதி : முன்னிலையசை.
    12. மாண்டகு - மாட்சிமை மிக்க. வாரிதி - கடல்.)



    1279 -
    வேறு
    அரன்பிடை புரிதலும் அம்மை ஆங்கவன்
    திருவடி மலர்மிசைச் சென்னி தாழ்ந்தெழா
    விரைவுடன் நீங்கியோர் விமானத் தேறினாள்
    மரகத வல்லிபொன் வரையுற் றாலென. - 14



    1280 - ஐயைதன் பேரருள் அனைத்தும் ஆங்கவள்
    செய்யபொன் முடிமிசை நிழற்றிச் சென்றெனத்
    துய்யதொர் கவுரிபாற் சுமாலி மாலினித்
    தையலார் மதிக்குடை தாங்கி நண்ணினார். - 15



    1281 - துவரிதழ் மங்கலை சுமனை யாதியோர்
    கவரிகள் இரட்டினர் கவுரி பாங்கரில்
    இவர்தரும் ஒதிமம் எண்ணி லாதஓர்
    அவிர்சுடர் மஞ்ஞைபால் அடைவ தாமென. - 16



    1282 - கால்செயும் வட்டமுங் கவின்கொள் பீலியும்
    மால்செயும் நறுவிரை மல்க வீசியே
    நீல்செயும் வடிவுடை நிமலை பாற்சிலர்
    வேல்செயும் விழியினர் மெல்ல ஏகினார். - 17



    1283 - கோடிகம் அடைப்பைவாள் குலவு கண்ணடி
    ஏடுறு பூந்தொடை ஏந்தி யம்மைதன்
    மாடுற அணுகியே மானத் தேகினார்
    தோடுறு வரிவிழித் தோகை மார்பலர். - 18



    1284 - நாதன தருள்பெறு நந்தி தேவியாஞ்
    சூதுறழ் பணைமுலைச் சுகேசை என்பவள்
    மாதுகை திருவடி மலர்கள் தீண்டிய
    பாதுகை கொண்டுபின் படர்தல் மேயினாள். - 19



    1285 - கமலினி அனிந்திதை என்னுங் கன்னியர்
    அமலைதன் சுரிகுழற் கான பூந்தொடை
    விமலமொ டேந்தியே விரைந்து செல்கின்றார்
    திமிலிடு கின்றதொல் சேடி மாருடன். - 20



    1286 - அடுத்திடு முலகெலாம் அளித்த அம்மைசீர்
    படித்தனர் ஏகினர் சிலவர் பாட்டிசை
    எடுத்தனர் ஏகினர் சிலவர் ஏர்தக
    நடித்தனர் ஏகினர் சிலவர் நாரிமார். - 21

    - (15. ஐயை - அம்பிகை.
    16. துவர் - செந்நிறம். இவர்தரு - செல்லாநின்ற.
    17. கால் - காற்று. பீலி - மயில்விசிறி. நீல் - நீலநிறம். நிமலை - அம்பிகை.
    18. கோடிகம் - பூந்தட்டு; அணிகலச் செப்புமாம். கண்ணடி - கண்ணாடி.
    தோடு - காதணி. 19. சூது - சொக்கட்டான் காய்.
    20. அமலை - அம்பிகை. விமலம் - தூய்மை. திமில் - திமிலம் : பேரொலி.
    21. சிலவர் - சிலர். நாரிமார் - பெண்கள்.)



    1287 - பாங்கியர் சிலதியர் பலரும் எண்ணிலா
    வீங்கிய பேரொளி விமானத் தேறியே
    ஆங்கவள் புடையதாய் அணுகிச் சென்றனர்
    ஓங்கிய நிலவுசூழ் உடுக்கள் போன்றுளார். - 22



    1288 - தண்ணுறு நானமுஞ் சாந்துஞ் சந்தமுஞ்
    சுண்ணமுங் களபமுஞ் சுடரும் பூணகளும்
    எண்ணருந் துகில்களும் இட்ட மஞ்சிகை
    ஒண்ணுத லார்பரித் துமைபின் போயினார். - 23



    1289 - குயில்களுங் கிள்ளையுங் குறிக்கொள் பூவையும்
    மயில்களும் அஞ்சமும் மற்றும் உள்ளவும்
    பயிலுற ஏந்தியே பரைமுன் சென்றனர்
    அயில்விழி அணங்கினர் அளப்பி லார்களே. - 24



    1290 - விடையுறு துவசமும் வியப்பின் மேதகு
    குடைகளும் ஏந்தியுங் கோடி கோடியாம்
    இடியுறழ் பல்லியம் இசைத்தும் அம்மைதன்
    புதைதனில் வந்தனர் பூதர் எண்ணிலார். - 25



    1291 - அன்னவள் அடிதொழு தருள்பெற் றொல்லையில்
    பன்னிரு கோடிபா ரிடங்கள் பாற்பட
    முன்னுற ஏகினன் மூரி ஏற்றின்மேல்
    தொன்னெறி அமைச்சியற் சோம நந்தியே. - 26



    1292 - இவரிவர் இத்திறம் ஈண்ட எல்லைதீர்
    புவனமும் உயிர்களும் புரிந்து நல்கிய
    கவுரியம் மானமேற் கடிது சென்றரோ
    தவலுறு வோன்மகச் சாலை நண்ணினாள். - 27



    1293 - ஏலுறு மானநின் றிழிந்து வேள்வியஞ்
    சாலையுள் ஏகியே தக்கன் முன்னுறும்
    வேலையில் உமைதனை வெகுண்டு நோக்கியே
    சீலமி லாதவன் இனைய செப்பினான். - 28

    - (22. உடுக்கள் - நட்சத்திரங்கள்.
    23. நானம் - கஸ்தூரி. சாந்து - கலவைச் சந்தனம். சந்தம் - சந்தனம்.
    மஞ்சிகை - பேழை; பெட்டி. 24. பூவை - நாகணவாய்ப்பறவை.
    அஞ்சம் - அன்னம். பரை - உமை.
    26. சோமநந்தி - இவன் ஒரு தலைமைக் கணாதிபன்.
    28. சீலமிலாதவன் - ஒழுக்கமற்ற தக்கன்.)



    1294 -
    வேறு
    தந்தை தன்னொடுந் தாயி லாதவன்
    சிந்தை அன்புறுந் தேவி யானநீ
    இந்த வேள்வியான் இயற்றும் வேலையில்
    வந்த தென்கொலோ மகளிர் போலவே. - 29



    1295 - மல்லல் சேரும்இம் மாம கந்தனக்
    கொல்லை வாவென உரைத்து விட்டதும்
    இல்லை ஈண்டுநீ ஏக லாகுமோ
    செல்லும் ஈண்டுநின் சிலம்பில் என்னவே. - 30



    1296 - மங்கை கூறுவாள் மருகர் யார்க்குமென்
    தங்கை மார்க்கும்நீ தக்க தக்கசீர்
    உங்கு நல்கியே உறவு செய்துளாய்
    எங்கள் தம்மைஓர் இறையும் எண்ணலாய். - 31



    1297 - அன்றி யும்மிவண் ஆற்றும் வேள்வியில்
    சென்ற என்னையுஞ் செயிர்த்து நோக்குவாய்
    நன்ற தோவிதோர் நவைய தாகுமால்
    உன்தன் எண்ணம்யா துரைத்தி என்னவே. - 32



    1298 - ஏய முக்குணத் தியலுஞ் செய்கையுள்
    தீய தொல்குணச் செய்கை ஆற்றியே
    பேயொ டாடல்செய் பித்தன் தேவியாய்
    நீயும் அங்கவன் நிலைமை எய்தினாய். - 33



    1299 - அன்ன வன்தனோ டகந்தை மேவலால்
    உன்னை எள்ளினன் உனது பின்னுளோர்
    மன்னு கின்றவென் மருகர் யாவரும்
    என்னி னும்மெனக் கினியர் சாலவும். - 34



    1300 - ஆத லாலியா னவர் பாங்கரே
    காத லாகியே கருது தொல்வளன்
    யாது நல்கினன் இந்த வேள்வியில்
    ஓது நல்லவி யுளது நல்கினேன். - 35



    1301 - புவனி உண்டமால் புதல்வ னாதியாம்
    எவரும் வந்தெனை ஏத்து கின்றனர்
    சிவனும் நீயுமோர் சிறிதும் எண்ணலீர்
    உவகை யின்றெனக் குங்கள் பாங்கரில். - 36



    1302 - ஏற்றின் மேவுநின் இறைவ னுக்கியான்
    ஆற்றும் வேள்வியுள் அவியும் ஈகலம்
    சாற்று கின்றவே தத்தின் வாய்மையும்
    மாற்று கின்றனன் மற்றென் வன்மையால். - 37



    1303 - அனைய தன்னிஈண் டடுத்த நிற்கும்யான்
    தினையின் காறுமோர் சிறப்புஞ் செய்கலன்
    எனவி யம்பலும் எம்பி ராட்டிபால்
    துனைய வந்ததால் தோமில் சீற்றமே. - 38

    - (30. மல்லல் - வளப்பம். நின்சிலம்பில் - உனது கயிலை மலைக்கு.
    33. தீயதொல் குணம் - தாமதகுணம.
    36. உவகை இன்று - விருப்பம் இல்லை.
    37. சாற்றுகின்ற - சிவபரமாக உரையாநின்ற. வாய்மை - உண்மைப் பொருளை.
    38. தினை - ஒரு தானியம்; இது அளவில் சிறியது. துனைய - விரைவாக.)



    1304 - சீற்ற மாயதீச் செறியு யிர்ப்பொடே
    காற்றி னோடழல் கலந்த தாமெனத்
    தோற்றி அண்டமுந் தொலைவில் ஆவியும்
    மாற்று வானெழீஇ மல்கி ஓங்கவே. - 39



    1305 - பாரும் உட்கின பரவு பௌவமுந்
    சீரும் உட்கின நெருப்பும் உட்கின
    காரும் உட்கின கரிகள் உட்கின
    ஆரும் உட்கினர் அமர ராயுளார். - 40



    1306 - பங்க யாசனப் பகவன் தானுமச்
    செங்கண் மாயனுஞ் சிந்தை துண்ணென
    அங்கண் உட்கினார் என்னின் ஆங்கவள்
    பொங்கு சீற்றம்யார் புகல வல்லரே. - 41



    1307 - வேலை அன்னதில் விமலை என்பவள்
    பாலின் நின்றதோர் பாங்கி தாழ்ந்துமுன்
    ஞாலம் யாவையும் நல்கும் உன்றனக்
    கேலு கின்றதோ இனைய சீற்றமே. - 42



    1308 - மைந்தர் யாரையும் வளங்கள் தம்மொடுந்
    தந்து நல்கிய தாய்சி னங்கொளா
    அந்த மாற்றுவான் அமைந்து ளாயெனின்
    உய்ந்தி டுந்திறம் உண்டு போலுமால். - 43



    1309 - அறத்தை ஈங்கிவன் அகன்று ளானெனச்
    செறுத்தி அன்னதோர் சீற்றம் யாரையும்
    இறைக்கு முன்னரே ஈறு செய்யுமால்
    பொறுத்தி ஈதெனப் போற்றல் மேயினாள். - 44



    1310 - போற்றி நிற்றலும் புனிதை தன்பெருஞ்
    சீற்ற மாய்எழுந் தீயை யுள்ளுற
    மாற்றி வேள்விசெய் வானை நோக்கியே
    சாற்று கின்றனள் இனைய தன்மையே. - 45



    1311 - என்னை நீயிவண் இகழ்ந்த அன்மையை
    உன்ன லேன்எனை யுடைய நாயகன்
    தன்னை எள்ளினாய் தரிக்கி லேன்அதென்
    கன்னம் ஊடுசெல் கடுவு போலுமால். - 46



    1312 - நிர்க்கு ணத்தனே நிமல னன்னவன்
    சிற்கு ணத்தனாய்த் திகழு வானொரு
    சொற்கு ணத்தனோ தொலைக்கு நாள்அடு
    முற்கு ணத்தினை முன்னு மாறலால். - 47

    - (42. வேலை அன்னதில் - அந்தச்சமயத்தில். விமலை - ஒரு சேடி.
    43. வளங்கள் தம்மொடு - தனுகரணபுவன போகங்களாகிய வளப்பங்களுடன்.
    45. புனிதை - உமாதேவியார். 46. கன்னம்ஊடு - காதினுள். கடுவு - விஷம்.
    47. ஒரு சொற்குணத்தனோ - ஒரு குணமுடையவனோ. தொலைக்கு நாள்
    அடு முற்குணத்தினை முன்னு மாறலால் - சங்கார காலத்திற்கு முன் உள்ள
    குணத்தினைக் கருதுவதன்றித் தாமதமாகிய ஒரு குணமுடையனோ இல்லை
    என்றபடி. நிமலன் (சிவபெருமான்) நிற்குணத்தனே; அவனே சிற்குணனாகவும்
    விளங்குவான்; சங்கார காலத்தில் சங்கரிக்கு முன் குணத்தினை எண்ணுவதே
    அல்லாமல் மற்றைய காலத்துத் தாமத குணமுடையவனோ அல்லன் என்பது கருத்து.)



    1313 - துன்று தொல்லுயிர் தொலைவு செய்திடும்
    அன்று தாமதத் தடுவ தன்றியே
    நன்று நன்றது ஞான நாயகற்
    கென்று முள்ளதோர் இயற்கை யாகுமோ.. - 48



    1314 - தீய தன்றடுஞ் செயலும் நல்லருள்
    ஆயில் ஆவிகள் அழிந்துந் தோன்றியும்
    ஓய்வி லாதுழன் றுலைவு றாமலே
    மாய்வு செய்திறை வருத்த மாற்றலால்.. - 49



    1315 - ஆன வச்செயல் அழிவி லாததோர்
    ஞான நாயகற் கன்றி நாமெனும்
    ஏனை யோர்களால் இயற்ற லாகுமோ
    மேன காவலும் விதியும் என்னவே.. - 50



    1316 - முன்னரே எலா முடித்த நாதனே
    பின்னும் அத்திறம் அளிக்கும் பெற்றியான்
    அன்ன வன்கணே அனைத்து மாகுமால்
    இன்ன பான்மைதான் இறைவன் வாய்மையோ.. - 51



    1317 - தோமி லாகமஞ் சுருதி செப்பியே
    ஏம விஞ்சைகட் கிறைவ னாகியே
    நாம றும்பொருள் நல்கும் எந்தையைத்
    தாம தன்னெனச் சாற்ற லாகுமோ.. - 52



    1318 - ஆத லால்அவன் அனைவ ருக்குமோர்
    நாத னாமரோ அவற்கு நல்லவி
    ஈதல் செய்திடா திகழ்தி அஞ்சியே
    வேதம் யாவையும் வியந்து போற்றவே.. - 53



    1319 - சிவனெ னுந்துணைச் சீரெ ழுத்தினை
    நுவலு வோர்கதி நொய்தி லெய்துவார்
    அவனை எள்ளினாய் ஆரி தாற்றுவார்
    எவனை உய்குதி இழுதை நீரைநீ. . - 54

    - (49. உயிர்கள் பிறப்பு இறப்புக்களில் வருந்தாமல் இளைப்பாறும் பொருட்டே
    இறைவன் சங்காரத்தொழில் புரிகின்றார்ன; இச்செயல் அருட்டிறமே ஆகுமென்க.
    50. நாம் எனும் - அகங்காரம் பொருந்திய. மேன - முன் உரைத்த.
    காவலும் விதியும் - காத்தலும் படைத்தலும். 51. இறைவன் வாய்மை - சிவபெருமானின் உண்மைநிலை. 52. ஏம விஞ்சை - உயிர்க்குப் பாதுகாவலான
    வித்தை. நாம் அறும் - நிந்தை இல்லாத. 54. சிவன் எனும் - மங்களாகரம்
    பொருந்திய. துணைச்சீர் எழுத்து - 'சிவ' என்னும் இரண்டெழுத்து. கதி - சிவகதி.)



    1320 - வேறு
    முண்டக மிசையினோன் முகுந்தன் நாடியே
    பண்டுணர் வரியதோர் பரனை யாதியாக்
    தொண்டிலர் எள்யி கொடுமை யோர்க்கெலாந்
    தண்டம்வந் திடுமென மறைகள் சாற்றுமால்.. - 55



    1321 - ஈதுகேள் சிறுவிதி இங்ங னோர்மகம்
    வேதநா யகன்தனை விலக்கிச் செய்தனை
    ஆதலால் உனக்கும்வந் தடைக தண்டமென்
    றோதினாள் உலகெலாம் உதவுந் தொன்மையாள். - 56



    1322 - இன்னன கொடுமொழி இயம்பி வேள்விசெய்
    அந்நிலம் ஒருவிஇவ் வகிலம் ஈன்றுளாள்
    முன்னுள பரிசன முறையின் மொய்த்திடப்
    பொன்னெழின் மானமேற் புகுந்து போந்தனள். - 57



    1323 - அகன்றலை உலகருள் அயன்தன் காதலன்
    புகன்றன உன்னியுட் புழுங்கி ஐந்துமா
    முகன்திரு மலையிடை முடுகிச் சென்றனள்
    குகன்தனை மேலருள் கொடிநு சுப்பினாள். - 58



    1324 - ஒருவினள் ஊர்தியை உமைதன் நாயகன்
    திருவடி வணங்கினள் சிறிய தொல்விதி
    பெரிதுனை இகழ்ந்தனன் பெரும அன்னவன்
    அரிதுசெய் வேள்வியை அழித்தி என்னவே. - 59



    1325 - எவ்வமில் பேரருட் கிறைவ னாகியோன்
    நவ்வியங் கரமுடை நாதன் ஆதலின்
    அவ்வுரை கொண்டில னாக அம்பிகை
    கவ்வையொ டினையன கழறல் மேயினாள். - 60



    1326 - மேயின காதலும் வெறுப்பு நிற்கிலை
    ஆயினும் அன்பினேற் காக அன்னவன்
    தீயதோர் மகத்தினைச் சிதைத்தல் வேண்டும்என்
    நாயக னேயென நவின்று போற்றினாள். - 61

    - (55. கொண்டிலர் - கொள்ளாராய். தண்டம் - தண்டனை.
    56. வேதநாயகன் - சிவபெருமான். 57. ஒருவி - நீங்கி.
    58. ஐந்து மாமுகன் மலை - கயிலாயமலை. ஐந்து மாமுகன் - ஈசானம்,
    தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து
    திருமுகங்களையுடைய சிவபெருமான். குகன் - முருகன். நுசுப்பு - இடை.
    59. தொல்விதி - தக்கன். 60. நவ்வி - மான். கவ்வை - துன்பம்.)
    ஆகத் திருவிருத்தம் - 1326
    ----

    19. வீரபத்திரப் படலம் (1327 - 1386)




    1327 - அந்த வெல்லைஎமை யாளுடைய அண்ணல் அகிலந்
    தந்த மங்கைதன தன்பினை வியந்து தளருஞ்
    சிந்தை கொண்டசெயல் முற்றியிடு மாறு சிறிதே
    புந்தி யுள்ளுற நினைநதனன் நினைந்த பொழுதே. - 1



    1328 - பொன்னின் மேருவின் இருந்திடு பொலங்கு வடெலாம்
    மின்னும் வௌ¢ளிமுளை மேற்கொடுவிளங் கியதென
    மன்னு தண்சுடர் மதிக்குறை மிலைச்சு மவுலிச்
    சென்னி ஆயிரமும் வான்முகடு சென்றொ ளிரவே. - 2



    1329 - விண்ட லந்தனில் இலங்குசுட ரின்மி டலினைக்
    கண்ட லந்தர ஒதுங்குவன போற்க திருலா
    மண்ட லந்திகழ் முகந்தொறும் வயங்கு பணியின்
    குண்ட லங்களிணை கொண்டகுழை கொண்டு லவவே. - 3



    1330 - ஆன்ற திண்கடல் வறந்திட இறந்த தனிடைக்
    தோன்று கின்றதொர் மடங்கல்வலி யின்று தொலைய
    மூன்று கண்கள்முக மாயிரமு மேவி முனிவால்
    கான்ற அங்கிகளின் அண்டமுழு துங்க ரியவே. - 4



    1331 - சண்ட மாருதமும் அங்கியும் ஒதுங்கு தகவால்
    துண்ட மீதுறுங் உயிர்ப்புடன் எழுந்த சுடுதீ
    அண்ட கோளமுடன் அப்புறமு மாகி அழியாக்
    கொண்ட லூடுதவழ் மின்னுவென வேகு லவவே. - 5



    1332 - மலரின் வந்துறையும் நான்முகன் முகுந்தன் மகவான்
    புலவர் தம்புகழ் அனைத்தையும் நுகர்ந்த பொழுதில்
    சிலவொ ழுங்கொடித ழின்புடைகள் சிந்தி எனவே
    நிலவு செய்தபிறை வாள்எயிறு நின்றி லகவே. - 6



    1333 - துண்ட மீதின்அழ லோஇதழின் வீழ்ந்த சுசியோ
    மண்டு தீவிழிகள் கான்றகனலோம னமிசைக்
    கொண்டதோர் வெகுளி யாகிய கொடுந்த ழலதோ
    எண்டி சாமுகமு மாகிஅடு கின்ற தெனவே. - 7



    1334 - தண்ட லின்றுறையும் ஆவிகள் வெரீஇத் தளரமேல்
    அண்ட ரண்டநிரை விண்டிட அவற்றி டையுறுந்
    தெண்டி ரைக்கடல் கலங்கஅடல் உற்ற சிவனின்
    கொண்ட ஆர்ப்புமுழு தெண்டிசை குலாய்நி மிரவே. - 8

    - (2. குவடு - சிகரம். மிலைச்சு - சூடிய. மவுலி - கிரீடம்.
    3. பணியின் குண்டலம் - சர்ப்பகுண்டலம். குழை - காது.
    5. சண்ட மாருதம் - பெருங்காற்று. துண்டம் - மூக்கு. 6. நுகர்ந்த - உண்ட.
    7. எண்டிசா முகம் - எட்டுத் திக்கு. 8.வெரீஇ -பயந்து.)



    1335 - தராத லங்கண்முழு துண்டுமிழு கின்ற தகைசேர்
    அராவி னங்கடமை யங்கடக மங்க தமொடே
    விராய மென்றொடிக ளாவிடுபு விண்ணு றநிமிர்க்
    திராயி ரங்கொள்புய மெண்டிசையெ லாஞ்செ றியவே. - 9



    1336 - வரத்தின் மேதகைய வேதன்முத லான வலியோர்
    சிரத்தின் மாலிகை அடுக்கல்அவ ரென்பு செறிபூண்
    பெரத்த கேழலின் மருப்பினுடன் ஆமை பிறவும்
    உரத்தின் மேவுபுரி நூலொடு பெயர்ந்தொ ளிரவே. - 10



    1337 - குந்தம் வெம்பலகை தோமரமெ ழுக்கு லிசம்வாள்
    செந்த ழற்கழுமுள் சூலமொடு பீலி சிலைகோல்
    முந்து தண்டம்அவி ராழிவசி யால முதலாம்
    அந்த மில்படைகள் அங்கைக டொறுங்கு லவவே. - 11



    1338 - ஐய மாழைதனின் மாமணியி னாகி அறிவார்
    செய்ய லாதுவரு பேரணிக ளோடு சிவணிப்
    பையு லாவுசுடர் வெம்பணிக ளான பணியும்
    மெய்யெ லாமணி இடந்தொறும் மிடைந்தி லகவே. - 12



    1339 - நெஞ்ச லஞ்சல மரும்பிறவி நீடு வினையின்
    சஞ்ச லஞ்சல மகன்றதன தன்பர் குழுவை
    அஞ்ச லஞ்சலெனுமஞ் சொலென விஞ்சு சரண்மேற்
    செஞ்சி லம்பொடு பொலுங்கழல் சிலம்ப மிகவே. - 13



    1340 - வேறு
    அந்தி வான்பெரு மேனியன் கறைமிட றணிந்த
    எந்தை தன்வடி வாயவன் நுதல்விழி யிடையே
    வந்து தோன்றியே முன்னுற நின்றனன் மா
    முந்து வீரபத் திரனெனுந் திறலுடை முதல்வன். - 14



    1341 - அங்க வேலையில் உமையவள் வெகுளியால் அடல்செய்
    நங்கை யாகிய பத்திர காளியை நல்கச்
    செங்கை யோரிரண் டாயிரம் பாதிசெம் முகமாய்த்
    துங்க வீரபத் திரன்றனை யடைந்தனள் துணையாய். - 15



    1342 - எல்லை தீர்தரு படைக்கலத் திறையுமவ் விறைவற்
    புல்லு கின்றதோர் திறலுடைத் துணைவியும் போலத்
    தொல்லை வீரனுந் தேவியும் மேவரு தொடர்பை
    ஒல்லை காணுறா மகிழ்ந்தனர் விமலனும் உமையும். - 16

    - 9. தராதலங்கள் - உலகங்கள். 10. கேழல் - பன்றி. 11. குந்தம் - ஈட்டி.
    பீலி - பேரீட்டி. கோல் - அம்பு. வசி - வாள். 12. ஐ - அழகு; அ : சாரியை.
    மாழை - பொன். 14. அந்தி - அந்திப் பொழுது. 15. பாதி - இங்கு ஆயிரம்.
    துங்கம் - உயர்வு.)



    1343 - தன்னை வந்தடை பத்திரை தன்னொடு தடந்தாள்
    மன்னு வார்கழல் கலித்திட வலஞ்செய்து வள்ளல்
    அன்னை தாதையை வணங்கியே யவர்தமை நோக்கி
    முன்ன நின்றுகை தொழுதனன் இவைசில மொழிவான். - 17



    1344 - மால யன்றனைப் பற்றிமுன் தந்திடோ மறவெங்
    காலன் ஆவியை முடித்திடோ அசுரரைக் களைகோ
    மேலை வானவர் தம்மையுந் தடிந்திடோ வேலை
    ஞாலம் யாவையும் விழுங்குகோ உலகெலா நடுக்கோ. - 18



    1345 - மன்னு யிர்த்தொகை துடைத்திடோ வரம்பில வாகித்
    துன்னும் அண்டங்கள் தகர்த்திடோ நுமதுதூ மலர்த்தாள்
    சென்னி யிற்கொடே யாதொன் றென்னினுஞ் செய்வன்
    என்னை இங்குநீர் நல்கியே தெப்பணிக் கொன்றான். - 19



    1346 - என்ற வீரனை நோக்கியே கண்ணுதல் எம்மை
    அன்றி வேள்விசெய் கின்றனன் தக்கன்அவ் விடைநீ
    சென்று மற்றெம தவியினைக் கேட்டிஅத் தீயோன்
    நன்று தந்தன னேயெனின் இவ்விடை நடத்தி. - 20



    1347 - தருத லின்றெனின் அனையவன் தலையினைத் தடிந்து
    பரிவி னால்அவன் பால்உறு வோரையும் படுத்துப்
    புரியும் எச்சமுங் கலக்குதி அங்கது பொழுதின்
    வருதும் ஆயிடை ஏகுதி என்றனன் வள்ளல். - 21



    1348 - அந்த வேலையில் பத்திரை தன்னொடும் அடலின்
    முந்து வீரனவ் விருவர்தம் பதங்களின் முறையால்
    சிந்தை அன்புடன் வணங்கியே விடைகொண்டு சிவனை
    நிந்தை செய்தவன் வேள்வியை அழித்திட நினைந்தான். - 22



    1349 - உன்னி மற்றறண் நீங்கியே ஆற்றவும் உருத்துத்
    தன்னு யிர்ப்பினால் அளவையில் கணங்களைத் தந்து
    துன்னு கின்றமெய் வியர்ப்பினால் சிலவரைத் தொகுத்து
    வன்னி போல்மயிர்க் கால்தொறுஞ் சிலவரை வகுத்தான். - 23



    1350 - மொழியி னிற்பல பூதரை அளித்தனன் முளரி
    விழியி னிற்பல பூதரை அளித்தனன் வேணி
    யுழியி னிற்பல பூதரை அளித்தனன் உந்திச்
    சுழியி னிற்பல பூதரை அளித்தனன் தூயோன். - 24



    1351 - தோளில் எண்ணிலா வீரரை அளித்தனன் சுவையின்
    கோளில் எண்ணிலா வீரரை அளித்தனன் குளிர்பொற்
    றாளில் எண்ணிலா வீரரை அளித்தனன் தடக்கை
    வாளில் எண்ணிலா வீரரை அளித்தனன் வலியோன். - 25

    - (17. பத்திரை - பத்திரகாளி. 18. தந்திடோ - வரவோ. முடித்திடோ - முடிக்கவே. நடுக்கோ நடுங்குமாறு செய்யவோ. 20. கேட்டி - கேள். நடத்தி - திரும்பி வருவாயாக. 21. பரிவு - அன்பு. எச்சம் - வேள்வி. வள்ளல் - சிவன். 22. அவ்விருவர் - அம்மை அப்பர். 23. தன் - இங்கு வீரபத்திரர். உயிர்ப்பு - சுவாசம். 25. சுவையின்கோள் - நாக்கு.)



    1352 - கையி னிற்சில பூதரை அளித்தனன் களத்தில்
    வெய்ய மார்பினிற் கன்னத்திற் சிலவரை விதித்தான்
    ஐய தோர்முழந் தாள்தனிற் சிலவரை அளித்தான்
    குய்ய மீதினில் ஊருவிற் சிலவரைக் கொடுத்தான். - 26



    1353 - இன்ன தன்மையில் வீரபத் திரனெனும் இறைவன்
    தன்னை நேர்வரும் எண்ணிலா வீரரைத் தந்து
    துன்னு கின்றுழிப் பத்திரை என்பதோர் துணைவி
    அன்ன பண்பினிற் காளிகள் தொகையினை அளித்தாள். - 27



    1354 - வீர பத்திர உருத்திரன் வேறுவே றளித்த
    சார தர்க்குளங் கோர்சிலர் நீனிறந் தழைப்போர்
    கோர பத்திரம் மணிக்கலன் மின்னுவிற் குலவக்
    காரெ னப்பொலிந் துருமெனக் கழறுகின் றனரால். - 28



    1355 - அக்கு மாலையும் மணிகளும் உடுக்கள்போல் அவிரப்
    பக்க பாணிலா எயிறுகள் பிறையெனப் பயில
    மிக்கு நீடிய வடிவின ராகியே மேலாஞ்
    செக்கர் வானெனச் சேர்ந்தெழு பூதர்கள் சிலரே. - 29



    1356 - அண்ட ரைத்தொலை வித்திடும் வீரனை அடைந்தோர்
    பிண்ட முற்றும்வான் நிறத்தினர் பூதரில் பெரியோர்
    பண்டி ரைத்தொரு முனிமகன் பின்றொடர் பாலின்
    தெண்டி ரைக்டற் றொகையெனக் கிளர்ந்தனர் சிலரே. - 30



    1357 - வெம்பொன் மேனியர் அணுகுறின் அவர்தமை விரைவில்
    பைம்பொன் மேனியர் ஆக்குமத் திருநிழல் பரப்பி
    அம்பொன் மார்புடை மகுந்தனில் வடிவுடை யவராய்ச்
    செம்பொன் மால்வரை நிரையெனத் தோன்றினர் சிலரே. - 31



    1358 - மேய வான்பசப் பூ£தரு மேனிய ராகிக்
    காய மித்துணை யெனப்படாக் கணக்கின ராகி
    மாயர் கண்டுயில் சேக்கையைத் தங்கணே வகுத்துச்
    சேய தொன்மரத் தொகையெனக் கெழீஇயினர் சிலரே. - 32



    1359 - வேறு
    அங்க வர்க்குள் அடல்விடை ஆனனந்
    தங்கி நின்று தயங்கினர் ஓர்சிலர்
    பொங்கு சீற்றப் பொருதிறல் வாலுளைச்
    சிங்க மாமுக மாய்த்தெழித் தார்சிலர். - 33



    1360 - புழைகொள் கையுடைப் போர்வலி யாளியின்
    முழைகொள் மாமுக மாகிமொய்த் தார்சிலர்
    வழுவை யானனம் மன்னினர் ஓர்சிலர்
    உழுவை யின்முக மாகியுற் றார்சிலர். - 33

    - (26. குய்யம் - அபானவாயில். ஊரு - தொடை. 28. பத்திரம் - பாட்படை.
    29. அக்கு மாலை - என்புமாலை; உருத்திராட்ச மாலையுமாம்.
    30. அண்டர் - தேவர். பிண்டம் - உடல். முனிமகன் - இங்கு உபமன்னியு.
    32. பசப்பு - பசலை நிறம். மாயர் - திருமால். 34. புழை - துவாரம்.
    முழை - குகை. வழுவை - யானை. ஆனனம் - முகம். உழுவை பலி.)
    அலைமு கப்பரி ஆனனம் எய்தியே
    கொலைமு கத்துக் குழீஇயினர் ஓர்சிலர்
    மலைமு கத்து மரைகளி றெண்குடன்
    கலைமு கத்துக் கவினடைந் தார்சிலர்.



    1362 - இனையர் தங்குழு எண்ணில அன்னர்கைப்
    புனைய நின்ற பொருபடை எண்ணில
    வினைகொள் வன்மையும் வீரமும் இற்றென
    நினைவ தற்கரி தெங்ஙன் நிகழ்த்துகேன். - 36



    1363 - கையில் எண்ணில் படையினர் காய்கனல்
    செய்ய பூணினர் தீக்கலுழ் கண்ணினர்
    வெய்ய சொல்லர் வெருவரு மேனியர்
    வையம் யாவும் மடுக்குறும் வாயினார். - 37



    1364 - கட்டு செஞ்சடைக் கற்றையர் காய்ந்தெழு
    நெட்ட ழற்கு நிகர்வரு நாவினர்
    வட்டி மாலைகள் மானும் எயிற்றினர்
    தொட்ட மூவிலைச் சூலந் துளக்குவார். - 38



    1365 - துண்ட மீது சொரிதருந் தீயினர்
    அண்ட கூடம் அலைத்திடுங் கையினர்
    சண்ட மாருதந் தாழ்க்குஞ் செலவினர்
    உண்டு போரென் றுளந்தளிர்ப் பெய்துவார். - 39



    1366 - மடித்த வாயினர் வானவர் என்பினால்
    தொடுத்த கண்ணி துயல்வரு மார்பினர்
    தடித்த தோளர் தனித்தழல் என்னினும்
    பிடித்து நுங்கும் பெரும்பசி மிக்குளார். - 40



    1367 - நச்சில் தீயவர் நானில மங்கையும்
    அச்சுற் றெஞ்ச அடிகள் பெயர்த்துளார்
    கச்சைத் தோல்மிசை கட்டிய தட்டியர்
    உச்சிட் டம்மென் றுலகினை உண்கிலார். - 41



    1368 - சூழி யானை துவன்றிய மால்வரைப்
    பாழி யாகப் படர்செவி வாயினர்
    ஊழி மாருதம் உட்கும் உயிர்ப்பினர்
    ஆழி யாக அகன்ற அகட்டினார். - 42

    - (35. அலை முகப்பரி - கடலிடத்துள்ள வடவை என்னும் குதிரை.
    மறை - மான். எண்கு - கரடி. கலை - குரங்கு. 38. வட்டி - பலகறை.
    40. நுங்கும் - தின்னும். 41. நச்சில் - விடத்தைக்காட்டிலும்.
    தட்டி - அரையில் கட்டும் உடை விசேடம்; அரைச் சல்லடம்.
    உச்சிட்டம் - (திருமால் உண்ட) எச்சில். 42. சூழி - முகபடாம்.)



    1369 - ஆழ்ந்த சூர்ப்பசுங் கண்ணர் அடித்துணை
    தாழ்ந்த கையர் தடக்குறுந் தாளினர்
    வீழ்ந்து மிக்க வியன் அத ரத்தினர்
    சூழ்ந்த பூதத் தொகையினர் யாவரும். - 43



    1370 - வேறு
    அத்தகை நின்றிட அண்ண லுடன்சேர்
    பத்திர காளி பயந்திடு கின்ற
    கத்து கடற்புரை காளிகள் தம்மை
    இத்துணை யேயென எண்ணரி தாமால். - 44



    1371 - அந்தமில் பல்படை அங்கையில் ஏந்தி
    உந்திய தும்பைகள் உச்சி மிலைச்சிச்
    சுந்தர மெய்திய தோற்றம தாகி
    விந்தை யெனச்சிலர் மேவினர் அன்றே. - 45



    1372 - தோளின் மிசைத்திரி சூலம் இலங்கக்
    கோளில் உயிர்ப்பலி கொள்கலன் ஏந்தித்
    தாளிடை நூபுர சாலமி லங்கக்
    காளிகள் போற்சிலர் காட்சி மலிந்தார். - 46



    1373 - வாகினி எங்குள வென்றிட மல்கு
    மோகினி போற்சிலர் மொய்த்தனர் மாயச்
    சாகினி போற்சிலர் சார்ந்தனர் அல்லா
    யோகினி போற்சிலர் உற்றனர் அம்மா. - 47



    1374 - அயிருற அண்டம் அனைத்தையும் ஏற்றா
    உயிரவி நுங்கிய உன்னி யெழுந்தே
    செயிரவி யாது தெழித்திடு தொன்னாள்
    வயிரவி போற்சிலர் மன்னினர் மாதோ. - 489



    1375 - நீடலை மாலை நிலத்திடை தோய
    ஆடுறு பாந்தள் அணிக்கலன் மின்ன
    ஈடுறு வானுரும் ஏறென ஆர்த்தே
    மோடிக ளாமென மொய்த்தனர் சில்லோர். - 49



    1376 - இவ்வகை மாதர்கள் யாவரும் வெவ்வே
    றைவகை மேனிய ராய்வத னங்கள்
    கைவகை எண்ணில ராய்க்கவின் மாட்சிச்
    செவ்விய ராய்ச்செரு மேற்கிளர் கின்றார். - 50



    1377 - வேறு
    கணந்திகழ் அனைய பூதர் காரிகை மார்கள் யாரும்
    அணங்குறு காளி தன்னோ டாண்டகை வீரன் தாளில்
    பணிந்தனர் பரசி அன்னார் பாங்கரில் விரவிச் சூழ்ந்து
    துணங்கைகொ டாடிப் பாடித் துள்ளியே போத லுற்றார். - 51



    1378 - ஈட்டுமிக் கெழுந்து செல்லும் இன்னதோர் பூதர் தம்மில்
    மோட்டிகல் பானு கம்பன் முதலிய கணங்கள் முத்தி
    வீட்டுடைத் தலைவ னான வீரபத் திரன்முன் னாகி
    ஈட்டுடைப் பல்லி யங்கள் யாவையும் இயம்பிச் சென்றார். - 52



    1379 - கொண்டபே ராற்ற லோடுங் குலவிய வீரன் தன்பால்
    அண்டமேல் உரிஞ்சப் பல்வே றணிப்பெருங் கவிகை கொண்டும்
    விண்டுலாங் கவரி யீட்டம் வீசியுஞ் சேற லுற்றார்
    தண்டனே பினாகி சிங்கன் ஆதியாம் தறுகட் பூதர். - 53



    1380 - பாசிழை மகளிர் சில்லோர் பத்திரை பாங்க ராகித்
    தேசுடைக் கவிகை ஈட்டந் திருநிழல் பரப்ப ஏந்தி
    மாசறு கவரி வட்டம் பரம்பில இரட்டிப் பல்வே
    றாசிகள் புகன்று செம்பொன் அணிமலர் சிதறிப் போந்தார். - 54



    1381 - படர்ந்திடு புணரி போலப் பார்முழு தீண்டித் தானை
    அடங்கலும் ஆர்க்கும் ஓதை அகிலமுஞ் செறிய விண்ணும்
    உடைந்ததவ் வண்டங் கொல்லோ உதுகொலோ இதுவோ என்னா
    மிடைந்தபல் லண்டத் தோரும் விதிர்ப்பொடும் விளம்பல் உற்றார். - 55



    1382 - பூமிகள் எழுந்த அம்மா புவியெலாம் பரவித் தொல்பேர்
    ஆழியும் அடைத்து வான்புக் கச்சுதன் பதங்கா றேகி
    ஊழியின் முதல்வ னார்க்கும் ஒலியினால் உடைந்த அண்டப்
    பாழிக டொறுமுற் றெல்லாம் புவனமும் பரந்த அன்றே. - 56



    1383 - அங்கெழு பூழி தன்னால் அவர்விழி கலுழுந் தீயால்
    செங்கையிற் படைக்தேய்ப்பச் திறிய கனலால் வையம்
    எங்கணும் எரிகள் துன்னி இரும்புகைப் படலம் ஈண்டிக்
    கங்குலும் பகலுங் காணாக் கடைக்கப்பல் போன்ற தன்றே. - 57



    1384 - இப்பெருந் தானை சூழ எம்பிரான் எழுந்து சீற்றத்
    துப்புடன் ஏகித் தக்கன் தொல்மகம் புரியுஞ சாலை
    வைப்பினை அணுகித் தன்பால் வருடைத் தலைவர்க் கொன்று
    செப்பினன் என்ப மன்னோ சேணுரு மேறு நாண். - 58



    1385 - பற்றலர் புரமூன் றட்ட பரமனை இகழ்ந்து நீக்கிக்
    சிற்றினம் பொருளென் றுன்னிச் சிறுவிதி என்னுந் தீயோன்
    இற்றிடு நெறியால் வேள்வி இயற்றும்இச் சாலை வாயில்
    சுற்றொடு சேமஞ் செய்து துயக்கறக் காத்தி ரென்றான். - 59



    1386 - என்றலுந் தானை யோர்கள் எயிற்புற முற்றுஞ் சூழ்ந்து
    நின்றனர் வானி னூடு நெருங்கினர் வாய்தல் தோறுஞ்
    சென்றனர் கொடிய தக்கன் சேனையாய் எதிர்ந்தோர் தம்மைக்
    கொன்றனர் அவரூன் துய்த்துக் கூற்றனும் உட்க ஆர்த்தார். - 60

    - (54. பாசிழை - பசிய ஆபரணம். 57. பூழி - புழுதி. கடைப்பகல் - ஊழிநாள்.
    58. எம்பிரான் - வீரபத்திரன். 59. சேமம் - பாது காவல். துயக்கு சோர்வு.
    60. எயில் - மதில். ஊன் - மாமிசம். உட் - அஞ்சுமாறு.)


    ஆகத் திருவிருத்தம் - 1386
    -----------

    20. யாகசங்காரப் படலம் (1387 -1562 )




    1387 - ஆர்த்தலும் இறைவி தன்னோ டாண்டகை வீரன் வாசத்
    தார்த்தொகை தூங்கும் யாக சாலையுள் ஏக லோடுந்
    தீர்த்தனைத் தலைவி தன்னைத் திசைமுகன் முதலோர்யாரும்
    பார்த்தனர் உளந்துண் ணென்று பதைபதைத் தச்சங் கொண்டார். - 1



    1388 - மடங்கலின் வரவு கண்ட மானினம் போன்றும் வானத்
    தடங்கிய உருமே றுற்ற அரவினம் போன்றும யாக்கை
    நடுங்கினர் ஆற்றல் சிந்தி நகையொரீஇ முகனும் வாடி
    ஒடுங்கினர் உயிரி லார்போல் இவைசில உரைக்க லுற்றார். - 2



    1389 - ஈசனும் உஆஆயு மேவந் தெய்தினர் என்பார் அன்னார்
    காய்சினம் உதவ வந்த காட்சியர் காணும் என்பார்
    பேசரி தந்தோ அந்தோ பெரிதிவர் சீற்றம் என்பார்
    நாசம்வந் திட்ட தின்றே நம்முயிர்க் கெலாம் என்பார். - 3



    1390 - தக்கனுக் கீறும் இன்றே சார்ந்தது போலும் என்பார்
    மிக்கதோர் விதியை யாரே விலக்கவல் லார்கள் என்பார்
    முக்கணெம் பெருமான் தன்னை முனிந்திகழ் கின்ற நீரார்
    அக்கண முடிவர் என்றற் கையமும் உண்டோ என்பார். - 4



    1391 - விமலனை இகழு கின்றான் வேள்வியேன் புரிந்தான் என்பார்
    நமையெலாம் பொருளென் றுன்னி நடத்தினன் காணும் என்பார்
    இமையவர் குழுவுக் கெல்லாம் இறுதி யின்றாமோ என்பார்
    உமையவள் பொருட்டால் அன்றோ உற்றதீங் கிதெலாம் என்பார். - 5



    1392 - ஈடுறு பூதர் யாரும் எங்கணும் வளைந்தார் என்பார்
    ஓடவும் அரிதிங் கென்பார் ஔ¤த்திடற் கிடமே தென்பார்
    வீடினங் காணும் என்பார் மேலனிச் செயலென் னென்பார்
    பாடுசூழ் அங்கி நாப்பண் பட்டபல் களிறு போன்றார். - 6



    1393 - அஞ்சினர் இனைய கூறி அமரர்கள் அரந்தை கூரச்
    செஞ்சரண் அதனை நீங்காச் சிலபெரும் பூதர் சூழப்
    பஞ்சுறழ் பதுமச் செந்தாட் பத்திரை யோடு சென்று
    வெஞ்சின வீரன் வெய்யோன் வேள்விசெய் வதனைக் கண்டான். - 7

    - (1. இறைவி - பத்திரகாளி. தீர்த்தனை - பரிசுத்தனான வீரபத்திரனை.
    தலைவி தன்னை - பத்திரகாளியை. 2. மடங்கல் - சிங்கம். உரும் ஏறு - இடியேறு.
    4. ஈறும் - அழிவும். 5. நமை - நம்மை; இங்கு பிரமன் முதலிய தேவர்களை.
    பொருள் என்று - சிறந்த கடவுள் என்று. 6. ஈடு - வன்மை. பாடு - பக்கம்.
    7. அரந்தை - துன்பம். பஞ்சு - செம்பஞ்சு.)



    1394 - இடித்தென நக்குப் பொங்கி எரிவிழித் திகலி ஆர்த்துப்
    பிடித்தனன் வயக்கொம் போதை பிளந்தது செம்பொன் மேரு
    வெடித்தது மல்லல் ஞாலம் விண்டன அண்டம் யாவும்
    துடித்தன உயிர்கள் முற்றும் துளங்கினர் சுரர்க ளெல்லாம். - 8



    1395 - எழுகின்ற ஓசை கேளா இடியுண்ட அரவிற் கோரா
    விழுகின்றார் பதைக்கின்றார் றார்வாய் வெருவுகின் றார்கள் ஏங்கி
    அழுகின்றார் ஓடு கின்றார் அழிந்ததோ வேள்வி என்று
    மொழிகின்றார் மீளு கின்றார் முனிவரும் இமையோர் தாமும். - 9



    1396 - வானவர் பிறரிவ் வாறு வருந்தினர் என்னின் அங்கண்
    ஏனையர் பட்ட தன்மை இயம்பரி தெவர்க்கும் என்றால்
    நானது புகல வற்றோ நளிர்புனல் வறந்த காலத்
    தானதோ ருருமே றுற்ற அசுணமாத் தன்மை பெற்றார். - 10



    1397 - வேலையங் கதனின் மேலாம் வீரருள் வீரன் ஏகி
    மாலயன் தானும் உட்க மகத்தின்முன் அடைத லோடுஞ்
    சீலம தகன்ற கொள்கைச் சிறுவிதி அவற்கண் டேங்கிச்
    சாலவு நடுக்குற் றுள்ளந் தளர்ந்தனன் தலைமை நீங்கி. - 11



    1398 - சாரதர் வளைந்த வாறும் சாலைய துடையு மாறும்
    ஆருமங் குற்ற வானோர் அயர்வுறு மாறு நோக்கிப்
    பேரஞர் உழந்து தேறிப் பெருந்திற லாளன் போல
    வீரபத் திரனை நோக்கி விளம்பினன் இனைய தொன்றே. - 12



    1399 - இங்குகுந் தடைந்த தென்கொல் யாரைநீ என்ன லோடுஞ்
    சங்கரன் தனது சேயான் தக்கநின் வேள்வி தன்னின்
    அங்கவற் குதவும் பாகம் அருளுதி அதற்கா அந்தப்
    புங்கவன் அருளி னாலே போந்தனன் ஈண்டை யென்றான். - 13



    1400 - இத்திறம் வீரன் கூற இருந்தவத் தக்கன் உங்கள்
    அத்தனுக் குலகம் வேள்வி அதனிடை அவியின் பாகம்
    உய்த்திடா தென்ன அங்கண் உறைதரு மறைகள் நான்குஞ்
    சுத்தமார் குடிலை தானுந் துண்ணென எழுந்து சொல்லும். - 14



    1401 - ஈறிலா உயிர்கட் கெல்லாம் இறையவன் ஒருதா னாகும்
    மாறிலா அரனே அல்லால் மகத்தினுக் கிறையா யுள்ளோன்
    வேறொர்வா னவனும் உண்டோ வேள்வியில் அவற்கு நல்குங்
    கூறுநீ பாணி யாது கொடுத்தியால் என்ற அன்றே. - 15

    - (8. வயக் கொம்பு - வெற்றிக்கு ஊதும் கொம்பு.
    9. அசுணமா - இ·து இனிய இசையைக் கேட்டுக்களிக்கும் ஒரு மிருகம்;
    பறவை என்பாரும் உளர். 14. உங்கள் அத்தன் - இங்குச் சிவபெருமான்.
    உலகம் - உலக மக்கள். குடிலை - பிரணவம்.)



    1402 - தேற்றமில் சிதட னாகுஞ் சிறுவிதி கேட்ப இன்ன
    கூற்றினால் மறைகள் நாங்குங் குடிலையும் ஒருங்கு கூடிச்
    சாற்றலும் அன்னான் நல்காத் தலைமைகண் டிறவன் தொல்சீர்
    போற்றியங் ககன்று தத்தம் புகலிடம் போய அன்றே. - 16



    1403 - போதலுந் தக்கன் தன்னைப் பொலங்கழல் வீரன் பாரா
    வேதமும் பிறவுங் கூறும் விழுப்பொருள் கேட்டி அன்றே
    ஈதியெம் பெருமாற் குள்ள இன்னவி எனலுங் கானில்
    பேதையொ டாடல் செய்யும் பித்தனுக் கீயேன் என்றான். - 17



    1404 - ஆங்கது கேளா அண்ணல் அம்புய னாதி யாகிப்
    பாங்குற விரவும் வானோர் பல்குழு அதனை நோக்கி
    நீங்களும் இவன்பா லானீர் நிமலனுக் கவிநல் காமல்
    ஈங்கிவன் இகழுந் தன்மை இசைவுகொல் உமக்கும் என்றான். - 18



    1405 - என்றலும் அனையர் தொல்லூர் இசைவினால் அதுகே ளார்போல்
    ஒன்றுமங் குரையா ராகி ஊமரின் இருத்த லோடும்
    நின்றதோர் வீரன் வல்லே நெருப்பெழ விழித்துச் சீறி
    நன்றிவர் வன்மை என்னா நகையெயி றிலங்க நக்கான். - 193



    1406 - கடித்தனன் எயிறு செந்தீக் கானற்னன் கனன்று கையில்
    பிடித்திடு மேரு வன்ன பெருந்திறல் கதைய தொன்றால்
    தடித்திடும் அகல மார்பத் தடவரை அகடு சாய
    அடித்தனன் தக்கன் உள்ளம் வெருவர அரிமுன் வீழ்ந்தான். - 20



    1407 - விட்டுமுன் வீழத லோடும் வீரருள் வீரத் தண்ணல்
    மட்டுறு கமலப் போதில் வான்பெருந் தவிசில் வைகுஞ்
    சிட்டனை நோக்கி அன்னான் சிரத்திடை உருமுற் றென்னக்
    குட்டினன் ஒருதன் கையால் மேல்வருங் குமர னேபோல். - 21



    1408 - தாக்குத லோடும் ஐயன் சரணிடைப் பணிவான் போல
    மேக்குறு சென்னி சோர விரிஞ்சனும் வீழ அன்னான்
    வாக்குறு தேவி தன்னை மற்றவர் தம்மை வாளால்
    மூக்கொடு குயமுங் கொய்தான் இறுதிநாள் முதல்வன் போல்வான். - 22



    1409 - ஏடுலாந் தொடையல் வீரன் இத்திறம் இவரை முன்னஞ்
    சாடினான் அதுகண் டங்கட் சார்தரும் இமையோர் யாரும்
    ஓடினார் உலந்தார் வீழ்ந்தார் ஔ¤த்திடற் கிடமே தென்று
    தேடினார் ஒருவர் இன்றிச் சிதறினார் கதறு கின்றார். - 23

    - (16. புகலிடம் - இருப்பிடம். போய - போயின.
    17. பேதை - காளி. பித்தன் - சிவன். ஈயேன் - கொடேன்.
    19. தொல் ஊழ் - பழைய ஊழ்வினை. இசைவினால் - தொடர்பால்.
    அது - வீரபத்திரன் கூறியதை. ஊமரின் - ஊமைகள் போல.
    20. அரி முன் - திருமால் முன்பு. 21. விட்டு - விட்டுணு. கமலப்போதில்...
    ...சிட்டன் - பிரமதேவன். மேல்வரும் - பின்வரும்.
    குமரன் போல் - குமரக் கடவுள் போல்.
    22. அன்னான் வாக்குறு தேவி - சரசுவதி.
    மற்றவர் - இலக்குமி முதலியோர். குயம் - முலை.)



    1410 -
    வேறு
    இன்னதோர் காலையில் இரிந்து போவதோர்
    மெய்ந்நிறை மதியினை வீரன் காணுறாத்
    தன்னொரு பதங்கொடே தள்ளி மெல்லெனச்
    சின்னம துறவுடல் தேய்த்திட் டானரோ. - 24



    1411 - அடித்ததங் கொடுமதி அதனைத் தேய்த்தபின்
    விடுத்தனன் கதிரவன் வெருவி ஓடலும்
    இடித்தெனக் கவுளிடை எற்றி னானவன்
    உடுத்திரள் உதிர்ந்தென உகுப்பத் தந்தமே. - 25



    1412 - எறித்தரு கதிரவன் எயிறு பார்மிசைத்
    தெறித்திட உயிரொரீஇச் சிதைந்து வீழ்தலும்
    வெறித்தரு பகனெனும் வெய்ய வன்விழி
    பறித்தனன் தகுவதோர் பரிசு நல்குவான். - 26



    1413 - தொட்டலும் பகன்விழித் துணையை இத்திறம்
    பட்டது தெரிந்துயிர் பலவும் பைப்பைய
    அட்டிடு கூற்றுவன் அலமந் தோடலும்
    வெட்டினன் அவன்தலை வீர வீரனே. - 27



    1414 - மடிந்தனன் கூற்றுவ னாக வாசவன்
    உடைந்தனன் குயிலென உருக்கொண் டும்பரில்
    அடைந்தனன் அதுபொழு தண்ணல் கண்ணுறீஇத்
    தடிந்தனன் வீட்டினன் தடக்கை வாளினால். - 28



    1415 - அண்டர்கோன் வீழ்தலும் அலமந் தோடிய
    திண்டிறல் அங்கியைத் திறல்காள் சேவகன்
    கண்டனன் அங்கவன் கரத்தை ஒல்லையில்
    துண்டம தாகவே துணித்து வீட்டினான். - 29



    1416 - கறுத்திடு மிடறுடைக் கடவுட் டேவனை
    மறுத்தவன் நல்கிய வரம்பில் உண்டியும்
    வெறுத்திலை உண்டியால் என்று வீரனும்
    அறுத்தனன் எழுதிறத் தழலின் நாக்களே. - 30



    1417 - துள்ளிய நாவொடுந் துணிந்த கையொடுந்
    தள்ளுற வீழந்திடுந் தழலின் தேவியை
    வள்ளுகி ரைக்கொடு வலங்கொள் நாசியைக்
    கிள்ளினன் வாகையால் கிளர்பொற் றோளினான். - 31



    1418 - அரிதுணைக் கின்னதோர் ஆணை செய்திடும்
    ஒருதனித் திறலினான் உம்பர் மேலெழு
    நிருதியைக் கண்டனன் நிற்றி யாலெனாப்
    பொருதிறல் தண்டினால் புடைத்திட் டானரோ. - 32

    - (24. சின்னம் - சிதைவு. 25. கதிரவன் - சூரியன். கவுள் - கன்னம்.
    26. பகன் எனும் வெய்யவன் - பகன் என்னும் மற்றொரு சூரியன்.
    28. நாகம் - சுவர்க்கம். உடைந்தனன் - மனம் உடைந்து.
    29. அங்கியை - அக்கினி தேவனை. சேவகன் - வீரபத்திரன்.
    30. ஏழு திறந்து - ஏழு பகுதியினை யுடைய.)



    1419 - வீட்டினன் நிருதியை வீரன் தன்பெருந்
    தாட்டுணை வீழ்தலுந் தடிதல் ஓம்பினான்
    ஓட்டினன் போதிரென் றுரைத்துச் செல்நெறி
    காட்டினன் உருத்திர கணத்தர்க் கென்பவே. - 33



    1420 - ஒழுக்குடன் உருத்திரர் ஒருங்கு போதலும்
    எழு¢கொடு வருணனை எற்றிச் செங்கையின்
    மழுக்கொடு காலினை மாய்த்து முத்தலைக்
    கழுக்கொடு தனதனைக் கடவுள் காதினான். - 34



    1421 - எட்டெனுந் திசையினோன் ஏங்கி வௌ¢கியே
    அட்டிடுங் கொல்லென அஞ்சிப் போற்றலுங்
    கிட்டி வைதனன் கேடு செய்திலன்
    விட்டனன் உருத்திரர் மேவும் தொல்நெறி. - 35



    1422 - தாணுவின் உருக்கொடு தருக்கு பேரினான்
    நாணொடு போதலும் நடுந டுங்கியே
    சோணித புரத்திறை துண்ணென் றோடுழி
    வேணுவின் அவன்தலை வீரன் வீட்டினான். - 36



    1423 - மணனயர் சாலையின் மகத்தின் தெய்வதம்
    பிணையென வெருக்கொடு பெயர்ந்து போதலுங்
    குணமிகு வரிசிலை குனித்து வீரனோர்
    கணைதொடுத் தவன்தலை களத்தில் வீட்டினான். - 37



    1424 - இரிந்திடு கின்றதோர் எச்சன் என்பவன்
    சிரந்துணி படுதலும் செய்கை இவ்வெலாம்
    அரந்தையொ டேதெரிந் தயன்தன் காதலன்
    விரைந்தவண் எழுந்தனன் வெருக்கொள் சிந்தையான். - 38



    1425 - விட்டனன் திண்மையை வெய்ய தோர்வலைப்
    பட்டதொர் பிணையெனப் பதைக்குஞ் சிந்தையான்
    மட்டிட அரியஇம் மகமும் என்முனங்
    கெட்டிடு மோவெனா இவைகி ளத்தினான். - 39



    1426 - ஊறகல் நான்முகத் தொருவன் வாய்மையால்
    கூறிய உணர்வினைக் குறித்து நோற்றியான்
    ஆரணி செஞ்சடை அமலன் தந்திட
    வீறகல் வளம்பல வெய்தி னேனரோ. - 40



    1427 - பெருவள நல்கிய பிரானைச் சிந்தையிற்
    கருதுதல் செய்திலன் கசிந்து போற்றிலன்
    திருவிடை மயங்கினன் சிவையை நல்கியே
    மருகனென் றவனையான் மன்ற எள்ளினேன். - 41

    - (33. செல்நெறி - போம் வழி. 34. எழு - எழுவாயுதம்.
    காலினை - வாயு தேவனை. தனதனை - குபேரனை.
    35. எட்டெனும் திசையினோன் - ஈசானன்.
    36. வேணுவின் - பாட்படையினால். 37. பிணைஎன - மான் வடிவங் கொண்டு.
    38. எச்சன் - யாகத்தின் அதி தேவதை. 39. மட்டிட - அளவிடுதற்கு.
    40. ஊறு அகல் - குற்றம் அற்ற. ஈறு அகல் - எல்லையற்ற.
    41. மன்ற - மிகவும். எண்ணினேன் - இகழ்ந்தேன்.)



    1428 - வேதநூல் விதிமுறை விமலற் கீந்திடும்
    ஆதியாம் அவிதனை அளிக்கொ ணாதெனத்
    தாதையோன் வேள்வியில் தடுத்தி யானுமிவ்
    வேதமாம் மகந்தனை இயற்றி னேனரோ. - 42



    1429 - தந்தைசொல் லாமெனுந் ததீசி வாய்மையை
    நிந்தனை செய்தனன் நீடு வேள்வியில்
    வந்தவெண் மகள்தனை மறுத்துக் கண்ணுதல்
    முந்தையை இகழ்ந்தனன் முடிவ தோர்கிலேன். - 43



    1430 - அன்றியும் வீரன்நின் றவியை ஈதியால்
    என்றலும் அவன்தன தெண்ணம் நோக்கியும்
    நன்றென ஈந்திலன் மறையும் நாடிலேன்
    பொன்றிட வந்தகொல் இனைய புந்தியே. - 44



    1431 - அல்லியங் கமலமேல் அண்ணல் ஆதியாச்
    சொல்லிய வானவர் தொகைக்கு நோற்றிட
    வல்லபண் ணவர்க்கும்வே தியர்க்கும் மற்றவர்
    எல்லவர் தமக்குமோர் இறுதி தேடினேன். - 45



    1432 - துதிதரு மறைப்பொருள் துணிபு நாடியும்
    நதிமுடி அமலனை நன்று நிந்தியா
    இதுபொழு திறப்பதற் கேது வாயினேன்
    விதிவழி புந்தியும் மேவு மேகொலாம். - 46



    1433 - எனத்தகு பரிசெலாம் இனைந்து தன்னுடை
    மனத்தொடு கூறியே மாளும் எல்லையில்
    நினைத்தறி வின்மையை நிகழ்த்தின் ஆவதென்
    இனிச்செய லென்னென எண்ணி நாடினான். - 47



    1434 - பாடுறு சாரதர் பரப்பும் வேள்வியின்
    ஊடுறு வீரன துரமுஞ் சீற்றமுஞ்
    சாடுறு பத்திரை தகவுங் கண்ணுறீஇ
    ஓடுவ தரிதென உன்னி யுன்னிமேல். - 48



    1435 - சென்றதோர் உயிரொடு சிதைந்த தேவர்போல்
    பின்றுவன் என்னினும் பிழைப்ப தில்லையால்
    வன்றிறல் வீரன்முன் வன்மை யாளர்போல்
    நின்றிடல் துணிபெனத் தக்கன் நிற்பவே. - 43

    - (42. இவ்வேதமாம் - இந்தத் துன்பத்திற்குரிய.
    45. ஓர் இறுதி - ஒரு அழிவுக் காலத்தினை.
    46. நிந்தியா - நிந்தித்து. 48. சாடுஉறு - கொலைபுரிகின்ற.) - 43



    1436 -
    வேறு
    கண்டு மற்றது வீரபத் திரனெனுங் கடவுள்
    கொண்ட சீற்றமொ டேகியே தக்கனைக் குறுகி
    அண்ட ரோடுநீ ஈசனை இகழ்ந்தனை அதனால்
    தண்ட மீதென வாள்கொடே அவன்தலை தடிந்தான். - 50



    1437 - அற்ற தோர்சென்னி வீழுமுன் இறைவன்அங் கையினால்
    பற்றி ஆயிடை அலமரும் பாவகற் பாராத்
    திற்றி ஈதெனக் கொடுத்தனன் கொடுத்தலுஞ் செந்தீ
    மற்றொர் மாத்திரைல் போதினில் மிசைந்தது மன்னோ. - 51



    1438 - மெல்ல வேயெரி யத்தலை நுகர்தலும் வேத
    வல்லி யாதியாந் துணைவியர் தக்கன்மா மகளிர்
    சில்லி ருங்குழல் தாழ்வரச் செங்கரங் குலைத்தே
    ஒல்லை யத்திறங் கண்டனர் புலம்பிவந் துற்றார். - 52



    1439 - அந்த வேலையின் மறைக்கொடி தன்னைமுன் னணுகி
    முந்தி வார்குழை இறுத்தனன் ஏனையர் முடியுந்
    தந்த நங்கையர் சென்னியும் வாள்கொடு தடிந்து
    கந்து கங்கள்போல் அடித்தனள் பத்திர காளி. - 53



    1440 - காளி யாம்பெயர்த் தலைவியுங் கருதலர் தொகைக்கோர்
    ஆளி யாகிய வீரனும் ஏனைஅண் டர்களைக்
    கேளி ராகிய முனிவரைத் தனித்தனி கிடைத்துத்
    தாளில் ஆர்ப்பினில் தடக்கையில் படைகளில் தடிந்தார். - 54



    1441 - மருத்தும் ஊழியில் அங்கியும் உற்றென மாதும்
    உருத்தி ரப்பெரு மூர்த்தியும் வந்தென உயர்சீர்
    தரித்த வீரனும் பத்திர காளியுந் தக்கன்
    திருத்தும் வேளவியைத் தொலைத்தனர் தனித்தனி தெரிந்தே. - 55



    1442 - அண்ணல் தன்மையுந் தேவிதன் நிலைமையும் அயரும்
    விண்ணு ளோர்சிலர் நோக்கியே யாங்கணும் விரவி
    அண்ணு கின்றனர் யாரையுந் தொலைக்குநர் அம்மா
    எண்ணி லார்கொலாம் வீரனும் இறைவியும் என்றார். - 56



    1443 - இற்றெ லாம்நிகழ் வேலையில் வீரன திசையால்
    சுற்று தானையர் இத்திறம் நோக்கியே சூழ்ந்த
    பொற்றை போலுயர் காப்பினை வீட்டியுள் புகுந்து
    செற்ற மோடுசென் றார்த்தனர் வானுளோர் தியங்க. - 57



    1444 - சூர்த்த நோக்குடைப் பூதருங் காளிகள் தொகையும்
    ஆர்த்த காலையின் முனிவருந் தேவரும் அயர்ந்து
    பார்த்த பார்த்ததோர் திசைதொறும் இரிதலும் படியைப்
    போர்த்த வார்கட லாமென வளைந்தடல் புரிய. -

    - (50. தண்டம் - தண்டனை. 51. அலமரும் - சுழலுகின்ற.
    பாவகன் - அக்கினி. ஈது திற்றி - இதனைத் தின்னுவாய்.
    52. சில் - தலையில் அணியும் ஓர் ஆபரணம்.
    53. வார்குழை - நீண்ட காதினை. கந்துகம் - பந்து.
    54. ஆளி - சிங்கம். கேளிர் - சுற்றத்தினர்.
    57. காப்பினை வீட்டி - மதிலினை இடித்து. 58. சூர்த்த - அச்சம் தரும்.) - 58



    1445 -
    வேறு
    தியக்குற்றனர் வெருளுற்றனர் திடுக்கிட்டனர் தெருள்போய்த்
    துயக்குற்றனர் பிறக்குற்றனர் தொலைவுற்றனர் மெலியா
    மயக்குற்றனர் கலக்குற்றனர் மறுக்குற்றனர் மனமேல்
    உயக்குற்றனர் இமையோர்களும் உயர்மாமுனி வரரும். - 59



    1446 - அளிக்கின்றனர் தமைத்தம்முனை அருண்மக்களை மனையைக்
    களிக்கின்றதொ ரிளையோர்தமைச் சுற்றந்தனைக் கருதி
    விளிக்கின்றனர் பதைக்கின்றனர் வெருக்கொண்டனர் பிணத்தூ
    டொளிக்கின்றனர் அவன்வேள்வியில் உறைகுற்றதொர் மறையோர். - 60



    1447 - அலக்கட்படும் இமையோர்களும் அருமாமுனி வரரும்
    நிலக்கட்படு மறையோர்களும் நெடுநீர்க்கட லாகக்
    கலக்குற்றனர் வரையாமெனக் கரத்தாற்புடைத் துதிர்த்தார்
    உலக்கிற்றிர ளாகச்சினத் துயர்மால்கரி ஒத்தே. - 61



    1448 - முடிக்குந்திறல் பெருங்கோளரி முழங்கிற்றென முரணால்
    இடிக்கின்றனர் கலைமானென இமையோர்தமை விரைவில்
    பிடிக்கின்றனர் அடிக்கின்றனர் பிறழ்பற்கொடு சிரத்தைக்
    கடிக்கின்றனர் ஒடிக்கின்றனர் களத்தைப்பொரு களத்தில். - 62



    1449 - முறிக்கின்றனர் தடந்தோள்களை முழுவென்புடன் உடலங்
    கறிக்கின்றனர் அடிநாவினைக் களைகின்றனர் விழியைப்
    பறிக்கின்றனர் மிதிக்கின்றனர் படுக்கின்றனர் சங்கங்
    குறிக்கின்றனர் குடிக்கின்றனர் குருதிப்புனல் தனையே. - 63



    1450 - எடுக்கின்றனர் பிளக்கின்றனர் எறிகின்றர் எதிர்போய்த்
    தடுக்கின்றனர் உதைக்கின்றறர் தடந்தாள்கொடு துகைத்துப்
    படுக்கின்றனர் தலைசிந்திடப் படையாவையுந் தொடையா
    விடுக்கின்றனர் மடுக்கின்றனர் மிகுமூனினைப் பகுவாய். - 64



    1451 - நெரிக்கின்றனர் சிலர்சென்னியை நெடுந்தாள்கொடு மிதியா
    உரிக்கின்றனர் சிலர்யாக்கையை ஒருசிற்சிலர் மெய்யை
    எரிக்கின்றனர் மகத்தீயிடை இழுதார்கடத் திட்டே
    பொரிக்கின்றனர் கரிக்கின்றனர் புகைக்கின்றனர் அம்மா. - 65



    1452 - அகழ்கின்றனர் சிலமார்பினை அவர்தங்குடர் சூடி
    மகிழ்கின்றனர் நகைக்கின்றனர் மதர்க்கின்றனர் சிவனைப்
    புகழ்கின்றனர் படுகின்றதொர் புலவோர்தமைக் காணா
    இகழ்கின்றனர் எறிந்தேபடை ஏற்கின்றனர் அன்றே. - 66



    1453 - கரக்கின்றதொர் முனிவேர்களைக் கண்டேதொடர்ந் தோடித்
    துரக்கின்றனர் பிடிக்கின்றனர் துடிக்கும்படி படிமேல்
    திரக்குன்றுகொ டரைக்கின்றனர் தெழிக்கின்றனர் சிலவூன்
    இரக்கின்றதொர் கழுகின்றொகைக் கீகின்றனர் மாதோ. -

    - (61. அலக்கண் - துன்பம். 62. பெருங் கோளரி - பெருஞ் சிங்கம்.
    களத்தை - கழுத்தை. 63. கறிக்கின்றனர் - மெல்லுகின்றனர்.
    சங்கங் குறிக்கின்றனர் - வெற்றிச் சங்கு ஊதுகின்றனர்.
    67. தெழிக்கின்றனர் - பேரொலி செய்கின்றனர்.) - 67



    1454 - நெய்யுண்டனர் ததியுண்டனர் பாலுண்டனர் நீடுந்
    துய்யுண்டனர் இமையோர்கடந் தொகைக்காமென உய்க்கும்
    ஐயுண்டதொர் அவியுண்டனர் மகவேள்வியில் வந்தே
    நையுண்டவர் உயிர்கொண்டிடு நாளுண்டவ ரெல்லாம். - 68



    1455 - உலகத்துக்கடை அனலைக்கடல் உவர்நீர்தணித் தெனவே
    மகத்தில்திரி விதவேதியில் வைகுங்கனல் அதனை
    மிகத்துப்புர வுளதென்றுகொல் வியப்பார்தம துயிரின்
    அகத்துப்புனல் விடுத்தேவிரைந் தவித்தார்மகம் அழித்தார். - 69



    1456 - தடைக்கொண்டதொர் சிறைதோறுள சாலைக்கத வெல்லாம்
    அடைக்கின்றனர் தழலிட்டனர் அவணுற்றவர் தம்மைத்
    துடைக்கின்றனர் கலசத்தொடு தொடர்கும்பமும் விரைவால்
    உடைக்கின்றனர் தகர்க்கின்றனர் உதிர்க்கின்றனர் உடுவை. - 70



    1457 - தவக்ககண்டகத் தொகையார்த்திடத் தனிமாமகத் தறியில்
    துவக்குண்டய ரணிமேதகு துகடீர்பசு நிரையை
    அவிழ்க்கின்றனர் சிலர்கங்கையின் அலையிற்செல விடுவார்
    திவக்கும்படி வானோச்சினர் சிலவெற்றினர் படையின். - 71



    1458 - பங்கங்கள் படச்செய்திடு பதகன்மகந் தனிற்போய்க்
    கங்கங்களை முறிக்கின்றனர் கவின்சேரா மகளிர்
    அங்கங்களைக் கறிக்கின்றனர் அறுக்கின்றனர் அதனை
    எங்கெங்கணும் உமிழ்கின்றனர் எறிகின்றனர் எவரும். - 72



    1459 - படுகின்றவர் வருமூர்தியும் படர்மானமுந் தேருஞ்
    சுடுகின்றனர் அவர்கொண்டிடு தொலைவில்படைக் கலமும்
    இடுகுண்டல முடிகண்டிகை எவையுந்தழல் இட்டே
    கடுகின்றுக ளாகப்பொடி கண்டார்திறல் கொண்டார். - 73



    1460 - அடிக்கொண்டதொர் மகச்சாலையுள் அமர்வேதியை அடியால்
    இடிக்கின்றனர் பொடிக்கின்றனர் இருந்தோரணத் தொகையை
    ஒடிக்கின்றனர் பெருந்தீயினை உமிழ்கின்றனர் களிப்பால்
    நடிக்கின்றனர் இசைக்கின்றனர் நமனச்சுறுந் திறத்தோர். - 74



    1461 - தருமத்தினை அடுகின்றதொர் தக்கன்றனக் குறவா
    மருமக்களைப் பிடிக்கின்றனர் வாயாற்புகல் ஒண்ணாக்
    கருமத்தினைப் புரிகின்றனர் கரத்தாலவர் உரத்தே
    உருமுற்றெனப் புடைக்கின்றனர் உமிழ்வித்தனர் அவியே. -

    - (68. ததி - தயிர். துய் - சோறு.
    69. உகத்துக் கடை அனல் - ஊழிக் காலத்துப் பிரளயாக்கினி.
    திரிவித வேதி - மூவகை வேதிகை. உயிர் - இங்கு ஆண் குறி.
    அகத்துப்புனல் - இங்குச் சிறுநீர். 70. உடுவை - ஆடுகளை.
    71. தவக்கண்டகத்தொகை ஆர்த்திட - மிகவும் கழுத்தில் கண்ணுள்ள
    மணிகள் ஒலிக்கவும்; (யாகத்திற்குரிய ஆடுகளின் கழுத்தில் உணவுக்காக,
    காரை முதலிய முட்செடிகளைக் கட்டுதல் மரபு ஆதலின், ஆடுகளுக்குத்)
    தவத்திற்குரிய காரை முட்செடிகளை உண்பிக்க. தவக்கண்டகத் தொகை
    ஆர்த்திட்ட - மந்திர செபம் செய்தலாகிய தவத்துடன் தோயலிடப்பட்ட
    வாளாயுதத்தல் அறுத்தற்கு. கண்டகம் - வாள். மகத்தறி - யூபஸ்தம்பம்.
    பசு என்றது யாகத்திற்குரிய ஆடுகளை. 72. பங்கம் - இழிவு.
    பதகன் - கீழ்மகன்; தக்கன். கங்கம் - பருந்து.) - 75



    1462 - தறிக்கின்றனர் சிலதேவரைத் தலைமாமயிர் முழுதும்
    பறிக்கின்றனர் சிலதேவரைப் பாசங்கொடு தறியில்
    செறிக்கின்றனர் சிலதேவரைச் செந்தீயிடை வதக்கிக்
    கொறிக்கின்றனர் சிலதேவரைக் கொலைசெய்திடுங் கொடியோர். - 76



    1463 - நாற்றிக்கினும் எறிகின்றனர் சிலர்தங்களை நல்லூன்
    சேற்றுத்தலைப் புதைக்கின்றனர் சிலர்தங்களைச் செந்நீர்
    ஆற்றுக்கிடை விடுக்கின்றனர் சிலர்தங்களை அண்டப்
    பாற்றுக்கிரை இடுகின்றனர் சிலர்தங்களைப் பலரும். - 77



    1464 - இடைந்தாரையும் விழுந்தாரையும் எழுந்தாரையும் எதிரே
    நடந்தாரையும் இரிந்தாரையும் நகையுற்றிட இறந்தே
    கிடந்தாரையும் இருந்தாரையுங கிளர்ந்தாரையும் விண்மேல்
    படர்ந்தாரையும் அவர்க்கேற்றதொர் பலதண்டமும் புரிந்தார். - 78



    1465 - உலக்குற்றிடு மகங்கண்டழு துளம்நொந்தனர் தளரா
    மலக்குற்றிடும் அணங்கோர்தமை வலிதேபிடித் தீர்த்துத்
    தலக்கட்படு மலர்ப்பொய்கையைத் தனிமால்கரி முனிவால்
    கலக்கிற்றெனப் புணர்கின்றனர் கணநாதரில் சிலரே. - 79



    1466 - குட்டென்பதும் பிளவென்பதும் கொல்லென்பதும் கடிதே
    வெட்டென்பதும் குத்தென்பதும் உரியென்பதும் விரைவில்
    கட்டென்பதும் அடியென்பதும் உரையென்பதும் களத்தே
    எட்டென்பதொர் திசையெங்கணும் எவரும்புகல் வனவே. - 80



    1467 - கையற்றனர் செவியற்றனர் காலற்றனர் காமர்
    மெய்யற்றனர் நாவற்றனர் விழியற்றனர் மிகவும்
    மையுற்றிடு களமற்றனர் அல்லாமலர் அயன்சேய்
    செய்யுற்றிடு மகத்தோர்களில் சிரைவற்றவர் இலையே. - 81



    1468 - வேறு
    இத்திறம் யாரையும் ஏந்தல் தானையும்
    பத்திரை சேனையும் பரவித் தண்டியா
    மெத்துறும் அளைகெழு வேலை யில்பல
    மத்துறு கின்றென மகத்தை வீட்டவே. - 82



    1469 - செழுந்திரு வுரத்திடை தெருமந் துற்றிடத்
    தொழுந்திறல் பரிசனந் தொலைய மாயவன்
    அழுந்திடு கவலொடும் அயர்வு யிர்த்தவண்
    எழுந்தனன் மகம்படும் இறப்பு நோக்கினான். - 83



    1470 - திருத்தகும் வேள்வியைச் சிதைவின் றாகயான்
    அருத்தியிற் காத்ததும் அழகி தாலெனாக்
    கருத்திடை உன்னினன் கண்ணன் வௌ¢கியே
    உருத்தனன் மானநின் றுளத்தை ஈரவே. -

    - (76. தறித்தல் - வெட்டுதல். பாசம் - கயிறு. தறி - தூண்.
    77. பாற்று - பாறு - பருந்து. 78. மலக்கு - கலக்கம்.
    அணங்கு - தேவமாதர். 82. ஏந்தல் - வீரபத்திரன்.
    83. செழுந்திரு - இலக்குமி. உரம் - மார்பு.
    84. திருத்தகும் - செல்வமிகுந்த. கண்ணன் - திருமால்.) - 84



    1471 - பரமனை இகழ்ந்திடு பான்மை யோர்க்கிது
    வருவது முறையென மனத்துட் கொண்டிலன்
    தெருமரு முணர்வினன் திறல்கொள் வீரன்மேல்
    பொருவது கருதினன் பொருவில் ஆழியான். - 85



    1472 - உன்னினன் கருடனை உடைந்த தாதலுந்
    தன்னுறு சீற்றமாந் தழலை ஆங்கொரு
    பொன்னிருஞ் சிறையபுள் ளரசன் ஆக்கலும்
    அன்னது வணங்கியே அரிமுன் நின்றதே. - 86



    1473 - நிற்றலும் அதன்கையின் நீல மேனியான்
    பொற்றடந் தாள்வையாப் பொருக்கென் றேறியே
    பற்றினன் ஐம்பெரும் படையும் வேள்வியுள்
    முற்றுறு பூதர்மேல் முனிவுற் றேகினான். - 87



    1474 - எடுத்தனன் சங்கினை இலங்கு செந்துவர்
    அடுத்திடு பவளவாய் ஆரச் சேர்த்தியே
    படுத்தனன் பேரொலி பரவைத் தெண்டிரைத்
    தடக்கட லுடைந்திடு தன்மை போலவே. - 88



    1475 - மீச்செலும் அமரர்கள் புரிந்த வேள்வியந்
    தீச்சிகை உதவிய சிலையை வாங்கியே
    தாச்செலும் வசிகெழு சரங்கள் எண்ணில
    ஓச்சினன் வீரன துரவுத் தானைமேல். - 89



    1476 - காளிகள் தொகைகளுங் கழுதின் ஈட்டமுங்
    கூளிகள் தொகைகளுங் குழுமி யேற்றெழீஇ
    வாளிகள் தொகைசொரீஇ மாயற் சூழ்வுறா
    நீளிகல் புரிந்தனர் நிகரில் வன்மையார். - 90



    1477 - தண்டுள வலங்கலந் தடம்பொற் றோளுடை
    அண்டனுந் தன்படை அனைத்து நேர்கொடு
    மண்டமர் புரிதலை மற்ற எல்லையில்
    கண்டனன் நகைத்தனன் கடவுள் வீரனே. - 91



    1473 - வெருவரும் பெருந்திறல் வீரன் தண்டுழாய்
    அரியொடு போர்செய ஆதி நாயகன்
    திரைகடல் உலகமுற் சிறிது தானென
    ஒருபெருந் தேரினை உய்த்திட் டானரோ. -

    - (85. ஆழியான் - திருமால். ஆழியான் மனத்துட் கொண்டிலன் என்க.
    86. உடைந்தது - வீரபத்திரனுக்குப் பயந்து ஓடியது. புள்ளரசன் - கருடன்.
    அரி - திருமால். 89. தீச்சிகை - யாகாக்கினி. சிலை - வில்.
    தாச் செலும் - தாவிச் செல்லுகின்ற. வசி - வன்மை.
    90. கழுது - பேய். சொரீஇ - விடுத்து.
    92. ஆதிநாயகன் - சிவபெருமான்.) - 92



    1479 - பாயிரந் தானெனப் பகரும் வேதமா
    மாயிரம் புரவிகள் அளப்பில் கேதனங்
    காயிரும் படைகள்மீக் கலந்த தாகிய
    மாயிருந் தேரவண் வல்லை வந்ததே. - 93



    1480 - தேரவண் வருதலுந் திறல்கொள் வீரனால்
    பாரிடை வீழ்ந்தயர் பங்க யாசனன்
    ஆருயிர் பெற்றென அறிவு பெற்றெழீஇ
    நேரறு மகம்படு நிகழ்ச்சி நோக்கினான். - 94



    1481 - அரிபொரு நிலைமையும் ஆடல் வீரன
    துருகெழு செற்றமும் உம்பர் தன்னிடை
    இர தம்வந் திட்டதும் யாவும் நோக்கியே
    கருதினன் யானுயுங் கால மீதெனா. - 95



    1482 - விண்ணிழி தேரிடை விரைவில் நான்முகன்
    நண்ணினன் வலவனின் நகைமுட் கோல்கொடு
    துண்ணென நடத்தியே தொழுது வீரனாம்
    புண்ணியன் தனக்கிது புகறல் மேயினான். - 96



    1483 - நீறணி பவளமெய் நிமலன் நிற்கிதோர்
    வீறணி தேர்தனை விரைவில் உய்த்தனன்
    தேறலர் தமையடுந் திறல்கொள் வீரநீ
    ஏறுதி துணைவியோ டென்று போற்றினான். - 97



    1484 - போற்றினன் இரத்தலும் பொருவில் வேதன்மேல்
    சீற்றமுள் ளதிலொரு சிறிது நீங்கியே
    ஆற்றல்கொள் வீரன்எம் மன்னை தன்னுடன்
    ஏற்றமொ டதன்மிசை இமைப்பின் மேவினான். - 98



    1485 - மேவிய காலையில் வெலற்க ருந்திறல்
    சேவக அடியனேன் திறத்தைக் காண்கெனத்
    தாவகல் தேரினைத் தண்டு ழாய்முடிக்
    காவலன் முன்னுறக் கடாவி உய்ப்பவே. - 99



    1486 - வரனுறு நான்முக வலவன் உய்த்திடு
    திருமணித் தேர்மிசைத் திகழ்ந்த வீரன்முன்
    ஒருதனி வையமேல் உம்பர்க் காகவே
    புரமட வருவதோர் புராரி போன்றனன். - 100



    1487 - எல்லையில் பெருந்திறல் இறைவன் ஏறுதேர்
    அல்லியங் கமலமேல் அண்ணல் உய்த்திடச்
    சொல்லருந் தானையின் தொகையை நீக்கியே
    வல்லைசென் றிறுத்ததம் மாயன் முன்னரே. -

    - (93. கேதனம் - கொடி. 95. உம்பர் தன்னிடை - ஆகாயத்தில்.
    97. போற்றினான் - (பிரமன்) வணங்கினான்.
    98. ஏற்றமொடு - கவுரவத்துடன்.
    99. தாஅகல் - குதிரைகளை மிகுதியாகப் பூட்டிய.
    தா - பாய்தல்; குதிரை : ஆகுபெயர். 100. வலவன் - சாரதி.
    புராரி - சிவபெருமான். 101. அல்லி - அகவிதழ்.) - 101



    1488 - பாருல களவினும் பரந்த பைம்பொனந்
    தேரவண் எதிர்தலுந் திருவு லாவிய
    காருறழ் மேனியங் கண்ணன் கண்ணுதல்
    வீரனை நோக்கியோர் மொழிவி ளம்பினான். - 102



    1489 - வேறு
    தெழித்த வார்புனற் கங்கையஞ் சடைமுடிச் சிவனைப்
    பழித்த தக்கனை அடுவதல் லாலவன் பாலில்
    இழுக்கில் தேவரை அடுவதென் வேள்வியை எல்லாம்
    அழித்த தென்னைநீ புகலுதி யாலென அறைந்தான். - 103



    1490 - பாடல் சான்றிடு மாலிது புகறலும் பலரும்
    நாடு தொல்புகழ வீரன்நன் றிதுவென நகையா
    ஈடு சேர்இமில் ஏற்றுடன் வயப்புலி யேறொன்
    றாடல் செய்தல்போல் ஒருமொழி உரைத்தனன் அன்றே. - 104



    1491 - எல்லை இல்லதோர் பரமனை இகழ்ந்தவன் இயற்றும்
    மல்லல் வேள்வியில் அவிநுகர்ந் தோர்க்கெலாம் மறைமுன்
    சொல்லுந் தண்டமே புரிந்தனன் நின்னையுந் தொலைப்பாம்
    வல்லை யேல்அது காத்தியென் றனன்உமை மைந்தன். - 105



    1492 - வீரன் இங்கிது புகறலுஞ் செங்கண்மால் வெகுண்டு
    பார வெஞ்சிலை குனித்தனன் நாணொலி படுத்தி
    யாரும் விண்முகில் ஒன்றுதன் வில்லொடும் அப்பு
    மாரி பெய்தெனப் பகழியால் பூதரை மறைத்தான். - 106



    1493 - கணங்கள் தம்மிசை மால்சரம் பொழிதலுங் காணூஉ
    அணங்கு தன்னொடு நகைசெய்து வீரனாம் அமலன்
    பணங்கொள் ப·றலைப் பன்னகக் கிறைவனாற் படைத்த
    குணங்கொள் மேருவே அன்னதோர் பெருஞ்சிலை குனித்தான். - 107



    1494 - செற்ற மீக்கொள ஐயன்வில் வாங்கினன் சிறிதே
    பற்றி நாணொலி எடுத்தலும் ஒடுங்கின பரவை
    பொற்றை யாவையுங் கீண்டன துளங்கின புவனம்
    இற்றை வைகலோ இறுதியென் றயர்ந்தனர் எவரும். - 108



    1495 - கோளி லாகிய புற்றிடை ஓரராக் குறுகி
    மீளில் வெஞ்சினக் குழவிகொண் டேகலின் வீரன்
    தோளில் வாங்கிய சிலையினில் தூணியில் துதைந்த
    வாளி வாங்கியுய்த் தொருதனி மாயனை மறைத்தான். - 109



    1496 - செங்க ணான்தனை மறைத்தபின் மற்றவன் செலுத்துந்
    துங்க வெங்கணை யாவையும் பொடிபடத் தொலைப்ப
    அங்கொ ராயிரம் பகழியை ஐதெனப் பூட்டி
    எங்கள் நாயகன் திருமணிப் புயத்தின்நேர் எய்தான். - 110



    1497 - எய்யும் வெங்கணை யாவையும் வீரருள் இறையாம்
    ஐயன் ஆசுகம் ஆயிரம் ஓச்சினன் அகற்றி
    ஒய்யெ னக்கரி யோன்நுதல் மீமிசை ஒருதன்
    வெய்ய பொத்திரம் ஏவினன் அவனுளம் வெருவ. - 111



    1497 - ஏவு தொல்கணை மாயவன் நுதலிடை இமைப்பின்
    மேவு கின்றுழி அனையவன் தளர்தலும் வீரன்
    வாவு தேர்மிசை ஊன்றினன் சிலையைவார் கணையுந்
    தூவு கின்றிலன் மாலிடர் நீங்குறுந் துணையும். - 112



    1497 - இன்னல் அத்துணை யகன்றுமால் எதிர்தலும் எமது
    மன்னும் நேர்ந்தனன் இருவரும் வரிசிலை வளையாப்
    பொன்னின் வாளிகள் பொழிந்தனர் முறைமுறை பொருதார்
    அன்ன பான்மையர் செய்தபோர் யாவரே அறைவார். - 113



    1497 - மாறு கொண்டபோர் இவ்வகை புரிதலும் வயத்தால்
    வீறு கொண்டுயர் முக்கணான் வெய்யதீ வடவைக்
    கூறு கொண்டதோர் படையினை ஓச்சலுங் குவட்டில்
    ஏறு கொண்டலை அனையவன் உரத்தில்எய் தியதே. - 114



    1501 - எய்து காலையில் உளம்பதை பதைத்திட இரங்கி
    வெய்து யிர்ப்புடன் உணர்வொரீஇ உளம்நனி மெலிந்து
    நொய்தின் மையலை நீங்கலும் முகுந்தனை நோக்கிச்
    செய்தி போரென உரைத்தனன் சரபமாந் திறலோன். - 115



    1502 - மெய்வ தத்தினை யாவர்க்கும் விரைவினில் இழைக்குந்
    தெய்வ தப்படை முழுவதுஞ் செங்கண்மால் செலுத்த
    அவ்வ னைத்தையும் அனையஅப் படைகளால் அகற்றிக்
    கவ்வை முற்றினன் நுதல்விழி அளித்திடுங் கடவுள். - 116



    1503 - வேறு
    தேன்றிகழ் பங்கயத் திருவின் நாயகத்
    தோன்றல்தன் படைக்கலந் தூண்ட எங்கணுஞ்
    சான்றென நின்றவன் தனயன் வீரமாம்
    வான்திகழ் படைதொடா வல்லை மாற்றவே. - 117



    1504 பொருகணை அளப்பில பொழிய மாற்றியோர்
    சரமது செலுத்திமால் சார்ங்கம் ஒன்றையும்
    இருதுணி படுத்தினன் இறைவன் மைந்தனே. -

    114. கொண்டலை அனையவன் - திருமால்.
    115. சரபமாம் திறலோன் - வீரபத்திரன்.
    சரபம் - எண் கால்களையுடைய ஒரு பறவை.
    116. மெய்வதம் - உடல் அழிவு. கவ்வை - அட்டகாசம்;
    பேரொலியுமாம். 118. சார்ங்கம் - சாரங்கம் - வில்;
    இது திருமால் வில்.) - 118



    1505 - பின்னுமத் துணைதனில் பெருந்தி றற்பெயர்
    முன்னவன் இருகணை முறையின் ஓச்சியே
    பன்னக மிசைத்துயில் பகவன் ஊர்திதன்
    பொன்னிருஞ் சிறையினைப் புவியில் வீட்டினான். - 119



    1506 - ஆயதோர் அமைதியில் ஆழி யங்கையான்
    மாயவன் ஆதலின் வரம்பில் கண்ணரை
    மேயின காதலின் விதிப்ப வீரன்முன்
    பாயிருள் முகிலெனப் பரம்பி னாரரோ. - 120



    1507 - அங்கவர் யாரையும் அமலன் வெய்யகட்
    பொங்கழல் கொளுவிநுண் பொடிய தாக்கலும்
    பங்கய விழியினான் பரமன் அன்றருள்
    செங்கையில் ஆழியைச் செல்கென் றேவினான். - 121



    1508 - விடுத்ததோர் திகிரியை வீரன் அங்கையால்
    பிடித்தவண் விழுங்கினன் பெயர்த்து மாயவன்
    எடுத்திடு கதையினை எறிய அன்னது
    தடுத்தனன் தனதுகைத் தடம்பொற் றண்டினால். - 122



    1509 - வேறு
    சங்கார் செங்கைப் புங்கவன் ஏவுந் தண்டம்போய்
    மங்கா அங்கண் வீழ்வது காணா வாள்வாங்கிப்
    பொங்கா நின்றே உய்த்திட எய்தும் பொழுதின்கண்
    உங்கா ரஞ்செய் திட்டனன் அம்மா உமைமைந்தன். - 123



    1510 - ஒய்யென் றையன் சீற்றமொ டங்கண் உங்காரஞ்
    செய்யுங் காலத் தோவியம் என்னச் செயனீங்கிக்
    கையும் வாளு மாய்அவண் நின்றான் கடலூடே
    வையம் முண்டு கண்டுயில் கின்ற மாமாயன். - 124



    1511 - சான்றகல் மாயன் அச்சுற வெய்தித் தளர்காலை
    மூன்றுகண் வீரன் யாது நினைந்தோ முனிவெய்த
    ஆன்றதொர் செற்றம் நீங்குதி என்னா அண்டத்தே
    தோன்றிய தம்மா கண்ணுதல் ஈசன் சொல்லொன்றே. - 125



    1512 - அந்தர மீதே வந்திடு சொல்லங் கதுகேளா
    எந்தை மனங்கொள் வெஞ்சினம் நீங்கி யிடுபோழ்தில்
    அந்தின் மணித்தேர் உய்த்திடு பாகன் அதுநோக்கி
    வந்தனை செய்தே போற்றியொர் மாற்றம் வகுப்பானால். - 125

    - (120. வரம்பில் கண்ணரை - அளவற்ற திருமால்களை.
    121. பங்கயவிழியினான் - திருமால்.
    126. அந்தரமீதே வந்திடு சொல் - அசரீரி. - 126



    1513 -
    வேறு
    அறத்தினை யொருவிச் செல்லும் அழிதகன் உலக மெல்லாம்
    இறத்தலை யெய்த இங்ஙன் இயற்றிய மகத்தின் மேவிப்
    பெறத்தகும் அவியை நுங்கும் பேதையேன் பிழையை யெல்லாம்
    பொறுத்தனை கொண்மோ என்னாப் பொன்னடிக் கமலம் பூண்டான். - 127



    1514 - பூண்டிடும் உலகந் தந்த புங்கவன் தன்னை நோக்கி
    ஆண்டகை வீரன் அ·தே ஆகவென் றருள லோடும்
    நீண்டதோர் மாயன் அன்னான் நீடருள் நிலைமை காணூஉ
    ஈண்டிது காலம் என்னா ஏத்தினன் இயம்ப லுற்றான். - 128



    1515 - பாரவெஞ சிலையும் வீட்டிப் பல்படைக் கலமுஞ் சிந்திச்
    சேரலர் உயிர்கள் உண்ட திகிரியுஞ் செல்ல நுங்கிப்
    போரிடை எனையும் வென்று புகழ்புனைந் திடுதி யென்றால்
    வீரநின் றகைமை யாரே முடிவுற விளம்ப வல்லார். - 129



    1516 - ஆசறு நெறியின் நீங்கும் அயன்மகன் இயற்று கின்ற
    பூசனை விரும்பி வேள்வி புகுந்தனன் புந்த யில்லேன்
    மாசறு புகழாய் நின்னால் மற்றிது பெற்றேன் அந்தோ
    ஈசனை இகழ்ந்தோர் தம்பால் இருப்பரோ எணணம் மிக்கோர். - 130



    1517 - ஆதிநா யகனை ஒல்லார் அனையவர்ச் சேர்ந்தார்க் கெல்லாம்
    வேதமே இசையா நிற்கும் வியன்பெருந் தண்டம் அன்றோ
    ஈதெலாம் எம்ம னோர்பால் இயற்றிய இனைய தன்மை
    நீதியால் எம்பால் அன்றி நின்கணோர் குறையும் உண்டோ. - 131



    1518 - விழிதனில் முறுவல் தன்னில் செய்துயிர்ப் பதனில் ஆர்ப்பின்
    மொழிதனில் புவன மெல்லா முதலொடு முடிக்க வல்லோய்
    பழிபடு வேள்வி தன்னில் பலரையும் படையி னோடும்
    அழிவுசெய் திட்ட தம்மா அடிகளுக் காடல் அன்றோ. - 132



    1519 - உறுநர்தந் தொகைக்கு வேண்டிற் றுதவிய முதல்வன் ஏவும்
    முறையதை உன்னி வேள்வி முடிப்பதோர் ஆடல் ஆகச்
    சிறிதெனும் அளவை தன்னில் சிதைத்தனை அன்றி எந்தாய்
    இறுதிசெய் திடநீ யுன்னின் யார்கொலோ எதிர்க்கும் நீரார். - 133



    1520 - இறுதிசெய் திடலே சீற்றம் இன்பமே யாண்மை என்னா
    அறைதரு சத்தி நான்காம் அரன்தனக் கையை காளி
    முறைதரு கவுரி இன்னோர் மும்மையும் பெற்றோர் ஏனைப்
    பெறலருஞ் சத்தி யான்இப் பெற்றியும் மறைகள் பேசும். - 1343



    1521 - அன்னதோர் பரிசால் ஈசன் அரும்பெருஞ் சத்தி என்னில்
    பின்னமன் றவற்கி யானும் ரெ¤துமன் புடையேன் முக்கண்
    முன்னவன் தன்பால் ஈண்டென் மொய்ம்புடன் இழந்த நேமி
    இன்னுமங் கவன்தாள் அர்ச்சித் திமைப்பினில் எய்து கின்றேன். - 133

    - (129. நுங்கி - விழுங்கி. 121. ஒல்லார் - பகைத்தவர்.
    132. ஆர்ப்பு - அட்டகாசம். முதலொடு அடியொடு.
    133. உறுநர் - அடியடைந்த அன்பர்.
    134. இறுதிசெய்திடல், சீற்றம், இன்பம், ஆண்மை இவை
    நான்கும் இறைவனுக்கு துர்க்கை, காளி, கௌரி, திருமால்
    என்னும் சக்திகளாகும். யான் - இங்குத் திருமால்.) - 135



    1522 - முனிவுடன் அடிகள் ஈண்டு முறைபுரிந் ததனுக் கின்னல்
    மனனிடை கொள்ளேன் இன்னான் மற்றிது பெறுத லாலே
    புனிதமாக் கொள்வன் தண்டம் புரிந்தனை பொறுத்தி குற்றம்
    இனியருள் புரிதி என்னா இணையடி இறைஞ்ச லோடும். - 136



    1523 - வீரருள் வீரன் மாலோன் விளம்பிய மாற்றங் கேளா
    நாரணற் கன்பு செய்து நணியதோர் காலை தன்னில்
    பாரிடஞ் சூழ நந்தி பரவிட உமையா ளோடு
    மூரிமால் விடை மேற் கொண்டு தோன்றினன் முடிவிலாதான். - 137



    1524 - தேங்கிய கங்கை சூடுஞ் செஞ்சடைக் கடவுள் தோன்ற
    ஆங்கது தெரிந்த வீரன் அச்சமோ டங்கை கூப்பிப்
    பாங்குற நிற்ப மாலும் பங்கயத் தயனுந் தாழா
    நீங்கிய தாயை நேருங் குழவியின் நிலைய ரானார். - 138



    1525 - கண்டனன் கவுரி வேள்விக் களத்திடைக் கழலுங் கையும்
    துண்டமும் தலையும் மார்பும் தோள்களும் துணிந்து வீழ
    அண்டருந் தக்கன் தானும் ஆவிபோய்க் கிடந்த தன்மை
    கொண்டதோர் சீற்றம் நீங்கி அருள்வரக் கூறு கின்றாள். - 139



    1526 - வேறு
    பொன்னார் சடையெம் புனிதன்தனை நோக்கி
    முன்னா கியபொருட்டு முன்னோனே வேள்விக்கு
    மன்னா னவற்கும் இமையோர்க்கும் மற்றெவர்க்கும்
    என்னால் முடிவெய்திற் றென்றுரைக்கும் இவ்வுலகே. - 140



    1527 - மற்ற வர்கள்புந்தி மயக்குற் றுனதுதொல்சீர்
    சற்று முணராது தவறுசெய்த தன்மையினால்
    செற்ற மிகுவீரத் திருமகனால் இஞ்ஞான்று
    பெற்றன ரேயன்றோ பெறத்தக்க தோர்பரிசே. - 141



    1528 - முந்தும் இவரை முடித்தியென வெ·தியதும்
    தந்து முடித்தாய் தனிவீர னாலனையர்
    உய்ந்து குறைபோய் உயிர்பெற் றெழும்வண்ணம்
    இந்த வரமும் எனக்கருளாய் எங்கோவே. - 142



    1529 - என்று தொழுதாங் கெமையுடையாள் கூறுதலும்
    நன்றுன் னருளென்று நகைசெய்து தன்பாங்கர்
    நின்ற திறலோனை நேர்நோக்கி இம்மாற்றம்
    ஒன்று பகர்ந்தான் உயிர்க்குயிராய் உற்றபிரான். - 143



    1530 - ஈண்டை மகத்தில் எமையிகழந்து நின்சினத்தான்
    மாண்டு சிதைவுற்ற வலியிலோர் தம்முயிரை
    மீண்டு அளித்துருவு மேனா ளெனப்புரிதி
    ஆண்டகை நீயென்றே அரனருளிச் செய்தலுமே. -

    - (137. முடிவிலாதான் - அழிவில்லாத சிவபெருமான்.
    139. கழலும் - காலும். துண்டம் - மூக்கு. துணிந்து - துண்டுபட்டு.
    142. முந்தும் - முன்னரும். முடித்தி - அழித்தி.) - 144



    1531 - வீர னதற்கிசைந்து மேனா ளெனஇறந்தீர்
    யாரும் எழுதி ரெனஉரைப்ப வானவர்கள்
    சோரு முனிவர் மறையோர் துயிலுணர்ந்த
    நீர ரெனஉயிர்வந் தெய்த நிலத்தெழுந்தார். - 145



    1532 - தண்டம் இயற்றுந் தனிவீர னாற்சிதைந்த
    பிண்ட முழுதுருவும் பெற்றார் மகம்புக்கு
    விண்ட செயலுமுயிர் மீண்டதுவுங் கங்குலிடைக்
    கண்ட புதிய கனவுநிலை போலுணர்ந்தார். - 146



    1533 - அந்தண் முனிவோர் அனைவோரும் வானவரும்
    இந்திர னேயாதி இமையோர் களும்வெருவிச்
    சிந்தை மருண்டு சிவனை இகழ்ந்ததனால்
    வந்த பழியுன்னி வருந்திமிக வௌ¢கினரால். - 147



    1534 - பாணார் அளிமுரலும் பைந்தார் புனைவீரன்
    மாணா கத்தன்னோர் மருங்காகத் தேவியுடன்
    பூணார் அரவப் புரிசடையெம் புண்ணியனைச்
    சேணார் ககனந் திகழுஞ் செயல்கண்டார். - 148



    1535 - துஞ்சல் அகன்ற சுரரும் முனிவரரும்
    நஞ்ச மணிமிடற்று நாயகனைக் கண்ணுற்றே
    அஞ்சி நடுங்க அதுகண் டெவர்இவர்க்குத்
    தஞ்சம் எமையல்லால் என்றுதள ரேலென்றான். - 149



    1536 - என்றாங் கிசைத்த இறைவன் அருள்நாடி
    நன்றா லிதென்று நனிமகிழ்ந்து முன்னணித்தாய்ச்
    சென்றார் தொழுதார் திசைமுகன்மா லாதியராய்
    நின்றார் எவரும் நெறியால் இவைஉரைப்பார். - 150



    1537 - சிந்தை அயர்வுற்றுச் சிறுவிதிதன் வேள்விதனில்
    எந்தை நினையன்றி இருந்தேங்கள் கண்முன்னும்
    வந்து கருணை புரிந்தனையால் மைந்தர்க்குத்
    தந்தை யலது பிறிதொருவர் சார்புண்டோ. - 151



    1538 - அற்றமில் அன்பில்லா அடியேங்கள் பாலடிகள்
    செற்ற மதுபுரியிற் செய்கைமுத லானசெயல்
    பற்றி முறைசெய் பதமுளதோ அஞ்சலென
    மற்றொர் புகலுளதோ மன்னுயிருந் தானுளதோ. - 152



    1539 - வேதத் திறங்கடந்த வேள்விப் பலியருந்தும்
    பேதைச் சிறியேம் பெரும்பகலுந் தீவினையில்
    ஏதப் படாமே இமைப்பி லதுதொலைத்த
    ஆதிக் கெவன்கொல் அளிக்கின்ற கைம்மாறே. -

    - (147. அம் - அழகிய. தண் - தண்ணளியினையுடைய.
    உன்னி - நினைத்து. வௌ¢கினர் - வெட்கமுற்றார்கள்.
    149. துஞ்சல் - இறத்தல். 152. அற்றம் - அழிவு.
    இல் - இல்லாத. செய்கை முதலான செயல் - படைப்பு முதலிய
    தொழில்கள். 153. வேள்விப்பலி - அவி.) - 153



    1540 - இங்குன் னடிபிழைத்தோம் எல்லோரும் வீரனெனுஞ்
    சிங்கந்தன் கையாற் சிதைபட்ட வாறெல்லாம்
    பங்கங்கள் அன்றே பவித்திரமாய் மற்றெங்கள்
    அங்கங் கட்கெல்லாம் அணிந்த அணியன்றோ. - 154



    1541 - கங்கை முடித்ததுவுங் காய்கனலை ஏந்தியதும்
    வெங்கண் மிகுவிடத்தை மேனாள் அருந்தியதும்
    நங்கை யுமைகாண நடித்ததுவும் முற்பகலும்
    எங்கண் மிசைவைத்த அருளன்றோ எம்பெருமான். - 155



    1542 - ஐய பலவுண் டறிவிலேம் நின்றனக்குச்
    செய்ய வருபிழைகள் சிந்தைமிசைக் கொள்ளாமல்
    உய்யும் வகைபொறுத்தி உன்னடியேம் என்றலுமே
    தைய லொருபங்கன் தணிந்தனமால் அ·தென்றான். - 156



    1543 - ஏற்றுத் தலைவன் இயம்புந் திருவருளைப்
    போற்றித் தொழுதுதம் புந்தி தளிர்ப்பெய்திக்
    கூற்றைத் தடிந்த குரைகழற்றாள் முன்னிறைஞ்சித்
    தேற்றத் துடன்பாடி யாடிச் சிறந்தனரே. - 157



    1544 - அன்ன பொழுதத் தயன்முதலாந் தேவர்கள்மேல்
    உன்ன அரிய ஒருவனருட் கண்வைத்து
    நுந்நும் மரசும் நுமக்கே அளித்தனமால்
    முன்ன ரெனவே முறைபுரிதி ரென்றுரைத்தான். - 158



    1545 - மாலயனே யாதியராம் வானவர்கள் எல்லோரும்
    ஆல மிடற்றண்ணல் அருளின் திறம்போற்றி
    ஏல மகிழ்வெய்த இறந்தெழுந்தோர் தங்குழுவில்
    சீலமிலாத் தன்மகனை காணான் திசைமுகனே. - 159



    1546 - மாண்டதொரு தக்கன் வயவீரன் தன்னருளால்
    ஈண்டுசனந் தன்னோ டெழாவச் செயல்நோக்கிக்
    காண்டகைய நாதன் கழலிணைமுன் வீழ்ந்திறைஞ்சி
    ஆண்டு கமலத் தயன்நின் றுரைக்கின்றான். - 160



    1547 - வேறு
    ஐயநின் வாய்மை எள்ளி அழல்கெழும் மகத்தை யாற்றுங்
    கையன தகந்தை நீங்கக் கடிதினில் தண்டஞ் செய்து
    மையுறு நிரயப் பேறு மாற்றினை அவனும் எம்போல்
    உய்யவே அருளு கென்ன உமாபதி கருணை செய்தான். -

    - (154. பங்கங்கள் அன்றே - குற்றங்கள் அன்றாம்.
    பவித்திரம் - பரிசுத்தம். 157. ஏற்றுத்தலைவன் - சிவபெருமான்.
    159. திசைமுகன் தன் மகனைக் காணான் - பிரமன் தன் மகனான
    தக்கனைக் கண்டிலன். 160. மாண்ட - இறந்த. ஆண்டு - அங்கே.
    161. கையன் - கீழ்மகனான தக்கன்.) - 161



    1548 - இறையருள் கண்டு வீரன் எல்லையங் கதனில் எந்தை
    அறைகழல் கண்டு போற்றி அவற்றியல் வினவித் தாழாப
    பொறியுள தென்று தக்கன் புன்றலை புகுத்த வுன்னாக்
    குறையுடல் அதனைப் பானு கம்பனைக் கொணர்தி என்றான். - 162



    1549 - வித்தக வலிகொள் பூதன் வீரபத் திரன்தன் முன்னர்
    உய்த்தலும் அதன்மேல் வேள்விக் குண்டியாம் பசுவுள் வீந்த
    மைத்தலை கண்ட சேர்த்தியெழு கென்றான் மறைகள் போற்றும்
    அத்தனை இகழும் நீரர் ஆவரிப் பரிசே என்னா. - 163



    1550 - என்றலும் உயிர்பெற் றங்கண் எழுந்தவத் தக்கன் முன்னம்
    நின்றதோர் வீரற் கண்டு நெஞ்சுதுண் ணென்ன அஞ்சித்
    தன்றக விழந்து பெற்ற தலைகொடு வணங்கி நாணி
    அன்றுசெய் நிலைமை நாடி அரந்தையங் கடலுட் பட்டான். - 164



    1551 - அல்லல்கூ£ந் திரங்கு கின்ற அசமுகன் அடல்வௌ¢ ளேற்றின்
    மெல்லிய லோடு முற்ற விமலன் துருவங் காணூஉ
    ஒல்லென வெருக்கொண் டாற்ற உற்றனன் அச்ச மற்றவ்
    வெல்லையில் இறைவன் தக்கா அஞ்சலை இனிநீ என்றான். - 165



    1552 - அஞ்சலென் றருள லோடும் அசமுகத் தக்கன் எங்கோன்
    செஞ்சரன் முன்னர்த் தாழ்ந்து தீயனேன் புரிந்த தீமை
    நெஞ்சினும் அளக்கொ ணாதால் நினைதொறுஞ் சுடுவ தையா
    உஞ்சனன் அவற்றை நீக்கி உனதருள் புரிந்த பண்பால். - 166



    1553 - அடியனேன் பிழைத்த தேபோல் ஆர்செய்தார் எனினும் என்போல்
    படுவதே சரத மன்றோ பங்கயத் தயனை நல்கும்
    நெடியவன் துணையென் றுன்னி நின்பெரு மாயை யாலே
    அடிகளை இகழ்ந்தேன் யாதும் அறிகிலேன் சிறியேன் என்றான். - 167



    1554 - காலையங் கதனில் அம்மை காளிதன் னோடு போற்றிப்
    பாலுற நின்ற வீர பத்திரன் தனைவம் மென்றே
    வேலவன் றேவி யென்ன வெரிந்புறம் நீவி அன்னார்க்
    கேலநல் வரங்கள் ஈந்தாள் ஈசனுக் கன்பு மிக்காள். - 168



    1555 - மீத்தகு விண்ணு ளோரும் வேள்வியந் தேவும் மாலும்
    பூத்திகழ் கமலத் தோனும் புதல்வனு முனிவர் தாமும்
    ஏத்தினர் வணங்கி நிற்ப எம்மையா ளுடைய முக்கண்
    ஆத்தனங் கவரை நோக்கி இவைசில அருளிச் செய்வான். - 169



    1556 - வம்மினோ பிரம னாதி வானவர் மகஞ்செய் போழ்தில்
    நம்மைநீர் இகழ்ந்தி யாரு நவைபெறக் கிடந்த தெல்லாம்
    உம்மையில் விதியாந் தண்டம் உமக்கிது புரிந்த வாறும்
    இம்மையின் முறையே நாணுற் றிரங்கலீர் இதனுக் கென்றான். - 170

    - (162. தாழாப் பொறியுளது - குறையாத அடையாளம் உளது;
    கெடாத குறிப்பு ஒன்றுளது எனினுமாம்.
    பானு கம்பன் - சிவகணங்களில் ஒருவன்.
    163. வீந்த - இறந்த. மைத்தலை - ஆட்டின் தலை.
    165. அசமுகன் - ஆட்டு முகத்தனான தக்கன்.
    167. சரதம் - உண்மை. நெடியவன் - திருமால்.
    168. வேலவன் தேவி என்ன - குமரக் கடவுளையும் அவன்
    தேவியையும் போல. வெரிந் - முதுகு. நீவி - தடவி.
    169. வேள்வியந் தேவும் - யாகத் தெய்வமும்.)



    1557 -
    வேறு
    இனைத்தருள் புரிதலும் எண்ண லாரையும்
    நினைத்தருள் புரிதரு நிமலன் தாள்தொழாச்
    சினத்தொடு மகத்தைமுன் சிதைத்து ளோனையும்
    மனத்தகும் அன்பினால் வணங்கிப் போற்றவே. - 171



    1558 - வீரரில் வீரனும் விசய மேதகு
    நாரியும் அயல்வர நந்தி முன்செலப்
    பாரிடம் எங்கணும் பரவ மாதொடே
    போரடல் விடையினான் பொருக்கென் றேகினான். - 172



    1559 - கயிலையி லேகியே கவுரி யோடரன்
    வியனகர் மன்றிடை வீற்றி ருந்துழி
    வயமிகு வீரற்கு வான மேக்குற
    இயலுமோர் பதமளித் திருத்தி யாங்கென. - 173



    1560 - இருவர்தந் தாளையும் இறைஞ்சி அன்னவர்
    தருவிடை பெற்றன னாகித் தக்கன
    துரியதோர் மகம்அடும் உலப்பில் பூதர்கள்
    திரைகட லாமெனத் திசைதொ றீண்டவே. - 174



    1561 - தந்தைமுன் விடுத்ததோர் தடம்பொற் றேரயல்
    வந்ததங் கதன்மிசை வயங்கொள் ஆடலான்
    பைந்தொடி யொடும்புகாப் பானு கம்பன
    துந்திட அரனருள் உலகிற் போயினான். - 175



    1562 - போயினன் அதனிடைப் பொருவில் தொல்பெருங்
    கோயிலின் எய்தியே குழுக்கொள் சாரதர்
    மேயினர் சூழ்தர வீர பத்திரன்
    ஏயதோர் துணைவியோ டினிது மேவினான். - 176

    - (172. விசயமே தகு நாரி - பத்திரகாளி. 173. பதம் - பதவி.
    174. இருவர் - உமாதேவியும் சிவபெருமானும் ஆகிய இருவர்.
    175. பானு கம்பன் அது உந்திட - பானு கம்பன் சாரதித் தொழில் செய்ய.)
    ஆகத் திருவிருத்தம் - 1562
    --

This file was last revised on 15 October 2008.
Feel free to Webmaster.