சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
முதற் காண்டம் (பன்னிரண்டாம் திருமுறை )
சருக்கம் 1 (திருமலைச் சருக்கம்) &
2 (தில்லை வாழ் அந்தணர் சருக்கம்)
periya purANam of cEkkizAr
Canto 1, Carukkam -1 & 2
In tamil script, TSCII format
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany
for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission
to release the TSCII version as part of Project Madurai etext collections.
TSCII proof reading by tiruciRRampalam aRakaTTaLai, Kovilpatti, Tamilnadu.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
or
ன Project Madurai 1999 - 2004
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
முதற் காண்டம்
உள்ளுறை
1. திருமலைச் சருக்கம்
1.00 | பாயிரம் - (1-10) - மின்பதிப்பு |
-
1.01 திருமலைச் சிறப்பு - (11-50) - மின்பதிப்பு |
-
1.02 திரு நாட்டுச் சிறப்பு - (51-85) - மின்பதிப்பு |
-
1.03 திருநகரச் சிறப்பு - (86-135) - மின்பதிப்பு |
-
1.04 திருக்கூட்டச் சிறப்பு - (136-146) - மின்பதிப்பு |
-
1.05 தடுத்தாட்கொண்ட புராணம் - (147-349) - மின்பதிப்பு |
2. தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
2.01 | தில்லை வாழ் அந்தணர் புராணம் - (350-359) - மின்பதிப்பு |
-
2.02 திருநீலகண்ட நாயனார் புராணம் - (360-403) - மின்பதிப்பு |
-
2.03 இயற்பகை நாயனார் புராணம் - (404-439) - மின்பதிப்பு |
-
2.04 இளையான் குடி மாற நாயனார் புராணம் - (440 -466) - மின்பதிப்பு |
-
2.05 மெய்ப் பொருள் நாயனார் புராணம் - (467-494) - மின்பதிப்பு |
-
2.06 விறன்மிண்ட நாயனார் புராணம் - (495 - 505) - மின்பதிப்பு |
-
2.07 அமர் நீதி நாயனார் புராணம் - (506-550) - மின்பதிப்பு |
1.00 பாயிரம்
001 |
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். - 1.0.1 |
002 - ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
தான் அடைந்த உறுதியைச் சாருமால்;
தேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லையுள்
மா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ. - 1.0.2
003 - எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக் களிற்றைக் கருத்துள் இருத்து வாம். - 1.0.3
004 - மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்
துதி செயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்
பொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை
விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே. - 1.0.4
005 - அளவிலாத பெருமையராகிய
அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பது அரிது ஆயினும்
அளவிலாசை துரைப்ப அறைகுவேன். - 1.0.5
006 - தெரிவரும் பெருமைத் திருத் தொண்டர் தம்
பொருவரும் சீர் புகலலுற்றேன் முற்றப்
பெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை
ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன். - 1.0.6
007 - செப்பலுற்ற பொருளின் சிறப்பினால்
அப் பொருட்கு உரை யாவரும் கொள்வர் ஆல்
இப் பொருட்கு என் உரை சிறிது ஆயினும்
மெய்ப் பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால். - 1.0.7
008 - மேய இவ் உரை கொண்டு விரும்புமாம்
சேயவன் திருப் பேர் அம்பலம் செய்ய
தூய பொன்னணி சோழன் நீடூழிபார்
ஆய சீர் அநபாயன் அரசவை. - 1.0.8
009 - அருளின் நீர்மைத் திருத் தொண்டறிவரும்
தெருளில் நீரிது செப்புதற்காம் எனின்
வெருளில் மெய் மொழி வான் நிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப் புகல்வாம் அன்றே. - 1.0.9
010 - இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற
செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம். - 1.0.10
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1. திருமலைச் சருக்கம்
1. 1 திருமலைச் சிறப்பு
திருச்சிற்றம்பலம்
011 |
பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்
பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது
தன்னை யார்க்கும் அறிவரியான் என்றும்
மன்னிவாழ் கயிலைத் திரு மாமலை. - 1.1.1 |
012 - அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின்
நண்ணும் மூன்று உலகுந் நான்மறைகளும்
எண்ணில் மாதவம் செய்ய வந்தெய்திய
புண்ணியந் திரண்டு உள்ளது போல்வது. - 1.1.2
013 - நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி
இலகு தண்தளிர் ஆக எழுந்ததோர்
உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்
மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை. - 1.1.3
014 - மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்
கான வீணையின் ஓசையும் காரெதிர்
தான மாக்கள் முழக்கமும் தாவில் சீர்
வான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம். - 1.1.4
015 - பனி விசும்பில் அமரர் பணிந்துசூழ்
அனித கோடி அணிமுடி மாலையும்
புனித கற்பகப் பொன்னரி மாலையும்
முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெனலாம். - 1.1.5
016 - நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
நாடும் ஐம் பெரும் பூதமும் நாட்டுவ
கோடி கோடி குறட்சிறு பூதங்கள்
பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம். - 1.1.6
017 - நாயகன் கழல் சேவிக்க நான்முகன்
மேய காலம் அலாமையின் மீண்டவன்
தூயமால்வரைச் சோதியில் மூழ்கியொன்று
ஆய அன்னமும் காணா தயர்க்குமால். - 1.1.7
018 - காதில் வெண்குழையோன் கழல் தொழ
- நெடியோன் காலம் பார்த்திருந்தும் அறியான்
சோதி வெண் கயிலைத் தாழ்வரை முழையில்
- துதிக்கையோன் ஊர்தியைக் கண்டு
மீதெழு பண்டைச் செஞ் சுடர் இன்று
- வெண்சுடர் ஆனது என்றதன் கீழ்
ஆதி ஏனமதாய் இடக்கலுற்றான்
- என்றதனை வந்தணைதரும் கலுழன். - 1.1.8
019 - அரம்பையர் ஆடல் முழவுடன்
- மருங்கில் அருவிகள் எதிர் எதிர் முழங்க
வரம் பெறு காதல் மனத்துடன் தெய்வ
- மது மலர் இருகையும் ஏந்தி
நிரந்தரம் மிடைந்த விமான சோபான
- நீடுயர் வழியினால் ஏறிப்
புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப்
- பொலிவதத் திருமலைப் புறம்பு. - 1.1.9
020 - வேத நான்முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும்
காதலால் மிடைந்த முதல் பெருந்த் தடையாம் கதிர் மணிக் கோபுரத்துள்ளார்
பூத வேதாளப் பெரும் கண நாதர் போற்றிடப் பொதுவில் நின்று ஆடும்
நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெருமான். - 1.1.10
022 - நெற்றியின் கண்ணர் நாற் பெருந்தோளர் நீறணி மேனியர் அநேகர்
பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன் தன் அருள் பெறுவார்
மற்றவர்க் கெல்லாம் தலைமையாம் பணியும் மலக்கையில் சுரிகையும் பிரம்பும்
கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான் காப்பதக் கயிலைமால் வரைதான். - 1.1.11
022 - கையில்மான் மழுவர் கங்கைசூழ் சடையில் கதிரிளம் பிறைநறுங் கண்ணி
ஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பரும் பெருமையினாலும்
மெய்யொளி தழைக்கும் தூய்மையினாலும் வென்றி வெண்குடை அநபாயன்
செய்யகோல் அபயன் திருமனத்தோங்கும் திருக்கயிலாய நீள்சிலம்பு. - 1.1.12
023 - அன்ன தன்திருத் தாழ்வரையின் இடத்து
இன்ன தன்மையன் என்றறியாச் சிவன்
தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான்
உன்னாரும் சீர் உபமன் னிய முனி. - 1.1.13
024 - யாதவன் துவரைக்கிறை யாகிய
மாதவன் முடிமேல் அடி வைத்தவன்
பூதநாதன் பொருவருந் தொண்டினுக்கு
ஆதி அந்தம் இலாமை அடைந்தவன். - 1.1.14
025 - அத்தர் தந்த அருட் பாற்கடல் உண்டு
சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்
பத்தராய முனிவர் பல்லாயிரவர்
சுத்த யோகிகள் சூழ இருந்துழி. - 1.1.15
026 - அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு
பொங்கு பேரொளி போன்று முன் தோன்றிடத்
துங்க மாதவர் சூழ்ந்திருந்தாரெலாம்
இங்கி தென்கொல் அதிசயம் என்றலும். - 1.1.16
027 - அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
சிந்தியா உணர்ந்தம் முனி தென் திசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன்
எந்தையார் அருளால் அணைவான் என. - 1.1.17
028 - கைகள் கூப்பித் தொழுதெழுந்து அத் திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிடச்
செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர். - 1.1.18
029 - "சம்புவின் அடித் தாமரைப் போதலால்
எம்பிரான் இறைஞ்சாயிஃதென்" எனத்
"தம்பிரானைத் தன் உள்ளம் தழீயவன்
நம்பி ஆரூரன் நாம்தொழும் தன்மையான்".- 1.1.19
030 - என்றுகூற இறைஞ்சி இயம்புவார்
வென்ற பேரொளியார் செய் விழுத்தவம்
நன்று கேட்க விரும்பும் நசையினோம்
இன்றெமக்குரை செய்து அருள் என்றலும். - 1.1.20
031 - உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
" வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொருளாகிய
வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன். - 1.1.21
032 - அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்
முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு
இன்ன ஆமெனும் நாண்மலர் கொய்திடத்
துன்னினான் நந்தவனச் சூழலில். - 1.1.22
033 - அங்கு முன்னரே ஆளுடை நாயகி
கொங்கு சேர் குழற்காம் மலர் கொய்திடத்
திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார்
பொங்கு கின்ற கவினுடைப் பூவைமார். - 1.1.23
034 - அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல்
கந்த மாலைக் கமலினி என்பவர்
கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி
வந்து வானவர் ஈசர் அருள் என. - 1.1.24
035 - மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீது இலாத் திருத் தொண்டத் தொகை தரப்
போதுவார் அவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார். - 1.1.25
036 - முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர்
என்னை ஆட்கொண்ட ஈசனுக்கேய்வன
பன் மலர் கொய்து செல்லப் பனிமலர்
அன்னம் அன்னவருங் கொண்டகன்ற பின். - 1.1.26
037 - ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே
' மாதர் மேல் மனம் வைத்தனை தென்புவி
மீது தோன்றி அம் மெல்லியலார் உடன்
காதல் இன்பம் கலந்து அணைவாய்' என. - 1.1.27
038 - கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கினான்
'செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்
மையல் மானுடமாய் மயங்கும் வழி
ஐயனே தடுத்தாண்டருள் செய்' என. - 1.1.28
039 - அங்கணாளன் அதற்கருள் செய்த பின்
நங்கை மாருடன் நம்பிமற்றத் திசை
தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாறுமென்று
அங்கவன் செயல் எல்லாம் அறைந்தனன். - 1.1.29
040 - அந்தணாளரும் ஆங்கது கேட்டவர்
"பந்த மானிடப் பாற்படு தென்திசை
இந்த வான்திசை எட்டினும் மேற்பட
வந்த புண்ணியம் யாதெ"ன மாதவன். - 1.1.30
041 - "பொருவருந் தவத்தான் புலிக் காலனாம்
அரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது
பெருமை சேர்பெரும் பற்றப்புலியூர் என்று
ஒருமையாளர் வைப்பாம் பதி ஓங்குமால். - 1.1.31
042 - அத் திருப்பதியில் நமை ஆளுடை
மெய்த் தவக்கொடி காண விருப்புடன்
அத்தன் நீடிய அம்பலத்தாடும் மற்று
இத் திறம் பெறலாம் திசை எத்திசை.. - 1.1.32
043 - பூதம் யாவையின் உள்ளலர் போதென
வேத மூலம் வெளிப்படு மேதினிக்
காதல் மங்கை இதய கமலமாம்
மாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால். - 1.133
044 - எம்பிராட்டி இவ்வேழுலகு ஈன்றவள்
தம்பிரானைத் தனித் தவத்தால் எய்திக்
கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று
உம்பர் போற்றும் பதியும் உடையது. - 1.1.34
045 - நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து
பொங்கு நீடருள் எய்திய பொற்பது
கங்கை வேணி மலரக் கனல்மலர்
செங்கை யாளர் ஐயாறும் திகழ்வது. - 1.1.35
046 - தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை
ஈசர் தோணி புரத்துடன் எங்கணும்
பூசனைக்குப் பொருந்தும் இடம் பல
பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை". - 1.1.36
047 - என்று மாமுனி வன்தொண்டர் செய்கையை
அன்று சொன்ன படியால் அடியவர்
தொன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
இன்று என் ஆதரவால் இங்கியம்புகேன். - 1.1.37
048 - மற்றிதற்குப் பதிகம் வன்தொண்டர் தாம்
புற்று இடத்து எம்புராணர் அருளினால்
சொற்ற மெய்த் திருத்தொண்டத்தொகை எனப்
பெற்ற நற்பதிகம் தொழப் பெற்றதாம். - 1.1.38
049 - அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை
நம்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி
புந்தி ஆரப் புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல் இயம்புவாம். - 1.1.39
050 - உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்
அலகில் சீர்நம்பி ஆரூரர் பாடிய
நிலவு தொண்டர்தம் கூட்டம் நிறைந்துறை
குலவு தண்புனல் நாட்டணி கூறுவாம். - 1.1.40
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.2 திருநாட்டுச் சிறப்பு
திருச்சிற்றம்பலம்
051 |
பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுள்
கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில்
சூட்டிய வளர் புலிச் சோழர் காவிரி
நாட்டியல்பதனை யான் நவிலல் உற்றனன். - 1.2.1 |
052 - ஆதி மாதவமுனி அகத்தியன் தரு
பூத நீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி
மாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்ததோர்
ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால். - 1.2.2
053 - சையமால் வரை பயில் தலைமை சான்றது
செய்ய பூ மகட்கு நற் செவிலி போன்றது
வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும்
உய்யவே சுரந்தளித் தூட்டும் நீரது.- 1.2.3
054 - மாலின் உந்திச்சுழி மலர் தன் மேல் வரும்
சால்பினால் பல்லுயிர் தரும் தன் மாண்பினால்
கோல நற்குண்டிகை தாங்குங் கொள்கையால்
போலும் நான்முகனையும் பொன்னி மாநதி. - 1.2.41
055 - திங்கள் சூடிய முடிச் சிகரத்து உச்சியில்
பொங்கு வெண் தலை நுரை பொருது போதலால்
எங்கள் நாயகன் முடிமிசை நின்றேயிழி
கங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே. - 1.2.5
056 - வண்ண நீள் வரை தர வந்த மேன்மையால்
எண்ணில் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால்
அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி
உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது. - 1.2.6
057 - வம்புலா மலர் நீரால் வழிபட்டுச்
செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து
எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி
உம்பர் நாயகர்க்கன்பரும் ஒக்குமால். - 1.2.7
058 - வாசநீர் குடை மங்கையர் கொங்கையில்
பூசும் குங்குமமும் புனை சாந்தமும்
வீசு தெண்டிரை மீதிழந்தோடும் நீர்
தேசுடைத் தெனினும் தெளிவில்லதே. - 1.2.8
059 - மாவிரைத் தெழுந்து ஆர்ப்ப வரை தரு
பூ விரித்த புதுமதுப் பொங்கிட
வாவியிற் பொலி நாடு வளம்தரக்
காவிரிப் புனல் கால்பரந்து ஓங்குமால். - 1.2.9
060 - ஒண் துறைத் தலை மாமத கூடு போய்
மண்டு நீர்வயலுட்புக வந்தெதிர்
கொண்ட மள்ளர் குரைத் தகை ஓசைபோய்
அண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால். - 1.2.10
061 - மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்
சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும்
ஒதையார் செய் உழுநர் ஒழுக்கமும்
காதல் செய்வதோர் காட்சி மலிந்ததே. - 1.2.11
062 - உழுத சால்மிக வூறித் தெளிந்த சேறு
இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம்
தொழுது நாறு நடுவார் தொகுதியே
பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம். - 1.2.12
063 - மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்டக் களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார். - 1.2.13
064 - செங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேல் சிறை வண்டை
அங்கை மலர்களைக் கொடுகைத்தயல் வண்டும் வரவழைப்பார்
திங்கள்நுதல் வெயர்வரும்பச் சிறுமுறுவல் தளவரும்பப்
பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவாய் மடுத்தயர்வார். - 1.2.14
065 - கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச்
கரும்பல்லி குடைநீலத் துகளல்ல பகலெல்லாம்
அரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்ன
வரும்பல்லாயிரம் கடைசி மடந்தையர்கள் வயல்எல்லாம். - 1.2.15
066 - கயல்பாய் பைந்தட நந்தூன் கழிந்த கருங்குழிசி
வியல்வாய் வெள்வளைத் தரள மலர்வேரி உலைப்பெய்தங்
கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும்
வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம். - 1.2.16
067 - காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலமெல்லாம். - 1.2.17
068 - ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்
சோலை வாய்வண்டு இரைத்தெழு சும்மையும்
ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்
வேலை ஓசையின் மிக்கு விரவுமால். - 1.2.18
069 - அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில்
துன்னும் மேதிபடியத் துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின் மேற்பாய்வன
மன்னு வான்மிசை வானவில் போலுமால். - 1.2.19
070 - காவினிற் பயிலுங்களி வண்டினம்
வாவியிற் படிந்து உண்ணும் மலர் மது
மேவி அத்தடம் மீதெழப் பாய்கயல்
தாவி அப்பொழிலிற் கனி சாடுமால் - 1.2.20
071 - சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு
வாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்தவாகிச்
சூல்முதிர் பசலை கொண்டு சுருல் விரித்தானுக் கன்பர்
ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்களெல்லாம். - 1.2.21
072 - பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்
தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலியெல்லாம். - 1.2.22
073 - அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்
சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப் பெரும் பொருப்பு யாப்பர்
விரிமலர் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார். - 1.2.23
074 - சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்
மேல் வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்கதன்றே. - 1.2.24
075 - வைதெரிந் தகற்றி ஆற்றி மழைப் பெயல் மானத் தூற்றிச்
செய்ய பொற் குன்றும் வேறு நவமனிச் சிலம்பும் என்னக்
கைவினை மள்ளர் வானம் கரக்கவாக்கிய நெல் குன்றால்
மொய்வரை உலகம் போலும் முளரிநீர் மருத வைப்பு. - 1.2.25
076 - அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதிகொண்டறங்கள் பேணிப்
பரவருங் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி
வரைபுரை மாடம்நீடி மல்ர்ந்துள பதிகள் எங்கும். - 1.2.26
077 - கரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர்
சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்விப்
பெரும் பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின்
வருங்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும். - 1.2.27
078 - நாளிகேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
கோளி சாலந்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்
தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும். - 1.2.28
079 - சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும்
சாதி மாலதிகள் எங்கும் தண்தளிர் நறவம் எங்கும்
மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும்
போதவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும். - 1.2.29
080 - மங்கல வினைகள் எங்கும் மணஞ் செய் கம்பலைகள் எங்கும்
பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும்
பொங்கொளிக் கலன்கள் எங்கும் புது மலர்ப் பந்தர் எங்கும்
செங்கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும். - 1.2.30
081 - மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும்
யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும்
யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும்
போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும். - 1.2.31
082 - பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும்
வண்டறை குழல்கள் எங்கும் வளர் இசைக் குழல்கள் எங்கும்
தொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை எங்கும்
தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும். - 1.2.32
083 - மாடு போதகங்கள் எங்கும் வண்டு போதகங்கள் எங்கும்
பாடும் அம்மனைகள் எங்கும் பயிலும் அம்மனைகள் எங்கும்
நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும்
தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும். - 1.2.33
084 - வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்
சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா
நீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளு மாவும்
ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத் தாம் அஞ்சும் - 1.2.34
085 - நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநாடு என்றும்
பொற் தடந் தோளால் வையம் பொதுக் கடிந்து இனிது காக்கும்
கொற்றவன் அநபாயன் பொற் குடை நிழல் குளிர்வதென்றால்
மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்பலாமோ. - 1.2.35
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.3 திருநகரச் சிறப்பு
திருச்சிற்றம்பலம்
086 |
சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது
மன்னு மாமலராள் வழி பட்டது
வன்னியாறு மதி பொதி செஞ் சடைச்
சென்னியார் திருவாரூர்த் திருநகர். - 1.3.1 |
087 - வேத ஓசையும் வீணையின் ஓசையும்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாதர் ஆடல் பாடல் மணி முழவோசையும்
கீத ஓசையும் மாய்க் கிளர்உற்றவே. - 1.3.2
088 - பல்லியங்கள் பரந்த ஒலியுடன்
செல்வ வீதிச் செழுமணித் தேரொலி
மல்லல் யானை ஒலியுடன் மாவொலி
எல்லை இன்றி எழுந்துள எங்கணும். - 1.3.3
089 - மாட மாளிகை சூளிகை மண்டபம்
கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள்
நீடு சாளர நீடரங்கு எங்கெணும்
ஆடல் மாதர் அணி சிலம் பார்ப்பன . - 1.3.4
090 - அங்குரைக்கென்ன அளவப் பதியிலார்
தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின்
பங்கினாள் திருச் சேடி பரவையாம்
மங்கையார் அவதாரஞ் செய் மாளிகை. - 1.3.5
091 - படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிதான்
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்
தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூது போய்
நடந்த செந்தாமரை அடி நாறுமால். - 1.3.6
092 - செங்கண் மாதர் தெருவில் தெளித்த செங்
குங்குமத்தின் குழம்பை அவர் குழல்
பொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன்
அங்கண் மேவி அளறு புலர்த்துமால். - 1.3.7
093 - உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை
வள்ளலார் திருவாரூர் மருங்கெலாம்
தெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள். - 1.3.8
094 - விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
துளக்கில் பேரொலியால் துன்னு பண்டங்கள்
வளத் தொடும் பலவாறு மடுத்தலால்
அளக்கர் போன்றன ஆவண வீதிகள். - 1.3.9
095 - ஆரணங்களே அல்ல மறுகிடை
வாரணங்களும் மாறி முழங்குமால்
சீரணங்கிய தேவர்களே அலால்
தோரணங்களில் தாமமும் சூழுமால். - 1.3.10
096 - தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல்வேறு இடத்தத் தொல் நகர். - 1.3.11
097 - நில மகட்கு அழகார் திரு நீள் நுதல்
திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி
மலர் மகட்கு வண்தாமரை போல்மலர்ந்(து)
அலகில் சீர்த்திருவாரூர் விளங்குமால். - 1.3.12
098 - அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான்
துன்னு செங் கதிரோன் வழித் தோன்றினான்
மன்னு சீர் அநபாயன் வழி முதல்
மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே. - 1.3.13
099 - மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எல்லாம்
கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான்
விண்ணுளார் மகிழ்வு எய்திட வேள்விகள்
எண்ணிலாதன் மாண இயற்றினான் . - 1.3.14
100 - கொற்ற ஆழிகுவலயஞ் சூழ்ந்திடச்
சுற்று மன்னர் திறை கடை சூழ்ந்திடச்
செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம் மனுப்
பெற்ற நீதியும் தன்பெயர் ஆக்கினான். - 1.3.15
101 - பொங்கு மா மறைப் புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான்
துங்க ஆகமம் சொன்ன முறைமையால். - 1.3.16
102 - அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமற் புல்லி
மறங் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில்
சிறந்த நல் தவத்தால் தேவி திருமணி வயிற்றின் மைந்தன்
பிறந்தனன் உலகம் போற்றப் பேர் அரிக் குருளை அன்னான். - 1.3.17
103 - தவமுயன்று அரிதில் பெற்ற தனி இளங் குமரன் நாளும்
சிவ முயன்றடையுந் தெய்வக் கலை பல திருந்த ஓதிக்
கவனவாம் புரவி யானை தேர்ப் படைத் தொழில்கள் கற்றுப்
பவமுயன்றதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான். - 1.3.18
104 - அளவில் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க
உளமகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி
இளவரசு என்னும் தன்மை எய்துதற்கணியன் ஆகி
வளரிளம் பரிதி போன்று வாழுநாள் ஒருநாள் மைந்தன். - 1.3.19
105 - திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில் நின்று
மங்குல் தோய் மாட வீதி மன்னிளங் குமரர் சூழக்
கொங்கலர் மாலை தாழ்ந்த குங்குமம் குலவு தோளான்
பொங்கிய தானை சூழ்த் தேர்மிசைப் பொலிந்து போந்தான். - 1.3.20
106 - பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர்
விரை நறுங் குழலார் சிந்தும் வெள் வளை ஒருபால் மிக்க
முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றி
அரசிளங் குமரன் போதும் அணி மணி மாட வீதி. - 1.3.21
107 - தனிப்பெருந் தருமம் தானோர் தயாஇன்றித் தானை மன்னன்
பனிப்பில் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன
மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன்
புனிற்றிளங் கன்று துள்ளிப் போந்ததம் மறுகினூடே. - 1.3.22
108 - அம்புனிற்றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடு போகிச்
செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப் பட்டே
உம்பரின் அடையக் கண்டங்கு உருகுதாய் அலமந்தோடி
வெம்பிடும் அலறும் சோரும் மெய்ந் நடுக்குற்று வீழும். - 1.3.23
109 - மற்றுது கண்டு மைந்தன் "வந்ததிங்கு அபாயம்" என்று
சொற்றடுமாறி நெஞ்சில் துயருழந்து அறிவு அழிந்து
"பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாளச்
செற்ற, என் செய்கேன்" என்று தேரினின் இன்று இழிந்து வீழ்ந்தான். - 1.3.4
110 - அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்துச் சோரும்
நிலமிசைக் கன்றை நோக்கி நெடிதுயிர்த்து இரங்கி நிற்கும்
"மலர் தலை உலகங் காக்கும் மனுவெனும் என் கோமானுக்(கு)
உலகில் இப் பழி வந்து எய்தப் பிறந்தவா ஒருவன்" என்பான். - 1.3.5
111 - "வந்த இப் பழியை மாற்றும் வகையினை மறை நூல் வாய்மை
அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில்
எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன்" என்று மைந்தன்
சிந்தை வெந் துயரம் தீர்ப்பான்திரு மறையவர் முன் சென்றான். - 1.3.26
112 - தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாதாகி
முன் நெருப்புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோல் மனுவின் பொற் கோயில் வாயில்
பொன்னணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே. - 1.3.27
113 - பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன்
வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக்
கழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத்தன் சடைமுன் கோளாத்
தெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது. - 1.3.28
114 - ஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து
பூங்கொடி வாயில் நண்ணக் காவலர் எதிரே போற்றி
"ஈங்கிதோர் பசுவந்தெய்தி இறைவ! நின் கொற்ற வாயில்
தூங்கிய மணியைக் கோட்டால் துளக்கியது" என்று சொன்னார். - 1.3.29
115 - மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி
"என் இதற்குற்றது" என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்க
முன்னுற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வித்
தொல் நெறி அமைச்சன் மன்னன் தாளிணை தொழுது சொல்வான்.- 1.3.30
116 - "வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல் ஏறி
அளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாக
தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை" என்றான். - 1.3.31
117 - அவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு துயரம் எய்தி
வெவ்விடந் தலைக் கொண்டாற் போல் வேதனை அகத்து மிக்"கிங்கு
இவ் வினை விளைந்தவாறு" என்று இடருறும் இரங்கும் ஏங்கும்
"செவ்விது என் செங்கோல்!" என்னும் தெருமரும் தெளியும் தேறான். - 1.3.32
118 - "மன்னுயிர் புரந்து வையம் பொதுக் கடிந்து அறத்தில் நீடும்
என்னெறி நன்றால்" என்னும் "என்செய்தால் தீரும்" என்னும்
தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு சோரும்
அந் நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்றால். - 1.3.33
119 - மந்திரிகள் அதுகண்டு மன்னவனை அடி வணங்கிச்
"சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்றால்
கொந்தலர்த்தார் மைந்தனை முன் கோவதை செய்தார்க்கு மறை
அந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்தல் அறம்" என்றார். - 1.3.34
120 - "வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்றது தான் வலிப்பட்டு
குழக்கன்றை இழந்தலறும் கோவுறு நோய் மருந்தாமோ?
இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீருஞ் சொல்லிய இச்
சழக்கு இன்று நான் இசைந்தால் தருமந் தான் சலியாதோ?" - 1.3.35
121 - மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலைத்
தான தனக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்
ஊன மிகு பகைத் திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்
ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ? - 1.3.36
122 - "என் மகன் செய் பாதகத்துக்கு இருந்தவங்கள் செய இசைந்தே
அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனைக் கொல்வேன் ஆனால்
தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை
மன்னுலகில் பெற மொழிந்தீர்! மந்திரிகள்! வழக்கு" என்றான். - 1.3.37
123 - என்று அரசன் இகழ்து உரைப்ப எதிர் நின்ற மதி அமைச்சர்
"நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்ததால்
பொன்று வித்தல் மரபு அன்று மறை மொழிந்த அறம் புரிதல்
தொன்று தொடு நெறி யன்றோ? தொல் நிலங் காவல!" என்றார். - 1.3.38
124 - அவ் வண்ணம் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி
மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு வென்னும் விறல் வேந்தன்
இவ் வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியின் இடைத் தோய்ந்த
செவ் வண்ணக் கமலம் போல் முகம் புலந்து செயிர்த்துரைப்பான். - 1.3.39
125 - "அவ்வுரையில் வருநெறிகள் அவை நிற்க அறநெறியின்
செவ்விய உண்மைத் திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர்
எவ் உலகில் எப் பெற்றம் இப்பெற்றித் தாம் இடரால்
வெவ்வுயிர்த்துக் கதறி மணி எறிந்து விழுந்தது?" விளம்பீர். - 1.3.40
126 - "போற்றிசைத்துப் புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச
வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர்த்
தோற்றமுடை உயிர் கொன்றான் ஆதலினால் துணிபொருள் தான்
ஆற்றவுமற்று அவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின்". - 1.3.41
127 - என மொழிந்து "மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இவ் ஆன்
மனம் அழியுந் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது
தனதுறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம்" என
அனகன் அரும் பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார். - 1.3.42
128 - மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்தொரு மந்திரி தன்னை
"முன்னிவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க" என
அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்பத்
தன்னுடைய குலமகனைத் தான் கொண்டு மறுங்கணைந்தான். - 1.3.43
129 - ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்
தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன்
மருமம் தன் தேராழி உறஊர்ந்தான் மனு வேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோ? மற்று எளிதோ தான். - 1.3.44
130 - தண்ணளி வெண் குடை வேந்தன் செயல் கண்டு தரியாது
மண்ணவர் கண்மழை பொழிந்தார் வானவர் பூ மழை சொரிந்தார்
அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல்
விண்ணவர்கள் தொழ நின்றான் வீதி விடங்கப் பெருமான். - 1.3.45
131 - சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்குந் திருநுதலும்
இடம் மருங்கில் உமையாளும் எம் மருங்கும் பூதகணம்
புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப
விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான். - 1.3.46
132 - அந் நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அவ் அரசன்
மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன் எழலும்
இன்ன பரிசானான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும்
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ? - 1.3.47
133 - அடி பணிந்த திருமகனை ஆகமுற எடுத்து அணைத்து
நெடிது மகிழ்ந்து அருந் துயரம் நீங்கினான் நிலவேந்தன்
மடி சுரந்து பொழிதீம் பால் வருங் கன்று மகிழ்ந்துண்டு
படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே. - 1.3.48
134 - பொன் தயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான்
வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்து
சென்று அருளும் பெரும் கருணைத் திறம் கண்டு தன் அடியார்க்கு
என்றும் எளிவரும் பெருமை ஏழ் உலகும் எடுத்தேத்தும். - 1.3.49
135 - இனைய வகை அற நெறியில் எண்ணிறந்தோர்க்கு அருள் புரிந்து
முனைவர் அவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர் மேல்
புனையும் உரை நம்மளவில் புகலலாந் தகைமையதோ?
அனைய தனுக் ககமலராம் அறவனார் பூங்கோயில். - 1.3.50
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.4 திருக்கூட்டச் சிறப்பு
திருச்சிற்றம்பலம்
136 |
பூத நாயகர் புற்று இடம் கொண்டவர்
ஆதி தேவர் அமர்ந்த பூங் கோயிலிற்
சோதி மாமணி நீள் சுடர் முன்றில் சூழ்
மூதெயில் திரு வாயில் முன்னாயது. - 1.4.1 |
137 - பூவார் திசை முகன் இந்திரன் பூ மிசை
மா வாழ் அகலத்து மால் முதல் வானவர்
ஓவாது எவரும் நிறைந்து உள்ளது
தேவா சிரியன் எனுந் திருக் காவணம். - 1.4.2
138 - அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்
நிரந்த நீற்று ஒளியால் நிறை தூய்மையால்
புரந்த அஞ்சு எழுத்து ஓசை பொலிதலால்
பரந்த ஆயிரம் பாற் கடல் போல்வது. - 1.4.3
139 - அகில காரணர் தாள பணிவார்கள் தாம்
அகில லோகமும் ஆளற்கு உரியர் என்று
அகில லோகத்து உளார்கள் அடைதலின்
அகில லோகமும் போல்வத தனிடை. - 1.4.4
140 - அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால்
மெய்த் தழைந்து விதிர்ப்புறு சிந்தையார்
கைத் திருத் தொண்டு செய்கடப் பாட்டினார்
இத்திறத்தவர் அன்றியும் எண்ணிலார். - 1.4.5
141 - மாசிலாத மணி திகழ் மேனி மேல்
பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்
தேசினால் எத் திசையும் விளங்கினார்
பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார். - 1.4.6
142 - பூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும்
மாதோர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார்
கோதிலாத குணப் பெருங் குன்றனார். - 1.4.7
143 - கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார். - 1.4.8
144 - ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணி அலாது ஒன்று இலார்
ஈர அன்பினர் யாதுங் குறைவு இலார்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ? - 1.4.9
145 - வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்
தாண்டவப் பெருமான் தனித் தொண்டர்கள்
நீண்ட தொல் புகழார் தம் நிலைமையை
ஈண்டு வாழ்த்துகேன் என்னறிந்து ஏத்துகேன். - 1.4.10
146 - இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்
அந்தம் இல் புகழ் ஆலால சுந்தரன்
சுந்தரத் திருத் தொண்டத் தொகைத் தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம். - 1.4.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.5. தடுத்தாட்கொண்ட புராணம்
திருச்சிற்றம்பலம்
147 |
கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத மதி இருமருங்கும் ஓடிச்
செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு . - 1.5.1 |
148 - பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில்
அரு மறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்த
மருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றாத்
திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூராம் அன்றே. - 1.5.2
149 - மாதொ ஒரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும்
வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்(கு)
ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்பால்
தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார். - 1.5.3
150 - தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும்,
நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றிமிக்க
ஐம் படை சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டிச் சாத்தி
செம் பொன் நாண் அரையில் மின்னத் தெருவில் தேர் உருட்டு நாளில். - 1.5.4
151 - நர சிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு
பரவருங் காதல்கூரப் பயந்தவர் தம்பால் சென்று
விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்றுத் தங்கள்
அரசிளங் குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார். - 1.5.5
152 - பெருமைசால் அரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள்
வரு முறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து
அரு மறை முந் நூல் சாத்தி அளவில் தொல் கலைகள் ஆய்ந்து
திரு மலி சிறப்பின் ஓங்கிச் சீர் மணப் பருவஞ் சேர்ந்தார். - 1.5.6
153 - தந்தையார் சடையனார் தம் தனித் திரு மகற்குச் சைவ
அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப
வந்த தொல் சிறப்பிற் புத்தூர்ச் சடங்கவி மறையோன் தன்பால்
செந் திரு அனைய கன்னி மணத் திறஞ் செப்பி விட்டார். - 1.5.7
154 - குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார்
நல மிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை ஏற்று
மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை
பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான் - 1.5.8
155 - மற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப்
பெற்றவர் தம்பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை
உற்றதோர் மகிழ்ச்சி எய்தி மண வினை உவந்து சாற்றிக்
கொற்றவர் திருவுக்கு ஏற்பக் குறித்து நாள் ஓலை விட்டார். - 1.5.9
156 - மங்கலம் பொலியச் செய்த மண வினை ஓலை ஏந்தி
அங்கயற் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டிக்
கொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து
பங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார். - 1.5.10
157 - மகிழ்ச்சி யால் மணம் மீக் கூறி மங்கல வினைகள் எல்லாம்
புகழ்ச்சியால் பொலிந்து தோன்றப் போற்றிய தொழிலராகி
இகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூ மாலைப் பந்தர்
நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள் முளை சாத்தினார்கள். - 1.5.11
158 - மண வினைக்கு அமைந்த செய்கை மாதினைப் பயந்தார் செய்யத்
துணர் மலர்க் கோதைத் தாமச் சுரும்பணை தோளினானைப்
புணர் மணத் திருநாள் முன்னாட் பொருந்திய விதியினாலே
பணை முரசு இயம்ப வாழ்த்தி பைம் பொன் நாண் காப்புச் சேர்த்தார். - 1.5.12
159 - மா மறை விதி வழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றித்
தூ மறை மூதூர்க் கங்குல் மங்கலந் துன்றி ஆர்ப்பத்
தேமரு தொடையல் மார்பன் திரு மணக் கோலம் காணக்
காமுறு மனத்தான் போலக் கதிரவன் உதயம் செய்தான். - 1.5.13
160 - காலை செய் வினைகள் முற்றிக் கணித நூல் புலவர் சொன்ன
வேலை வந்து அணையும் முன்னர் விதி மணக்கோலம் கொள்வான்
நூல் அசைந்து இலங்கு மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன்
மாலையுந் தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான். - 1.5.14
161 - வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர்ப்
பாசனத்து அமைந்த பாங்கர்ப் பருமணி பைம்பொன் திண்கால்
ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால்
ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள் - 1.5.15
162 - அகில் விரைத் தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டாடை சாத்தி
முகில் நுழை மதியம் போலக் கைவலான் முன் கை சூழ்ந்த
துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித் தன் தூய செங்கை
உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறுஞ்சிகழி ஆர்த்தான். - 1.5.16
163 - தூநறும் பசும் கர்ப்பூரச் சுண்ணத்தால் வண்ணப் போதில்
ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தனச் சேறாட்டி
மான்மதச் சாந்து தோய்ந்த மங்கலக் கலவை சாத்திப்
பான் மறை முந்நூல் மின்னப் பவித்திரஞ் சிறந்த கையான். - 1.5.17
164 - தூமலர்ப் பிணையல் மாலை துணர் இணர்க் கண்ணிக் கோதை
தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமையச் சாத்தி
மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள்கால் சீக்கும்
நாம நீள் கலன்கள் சாத்தி நன்மணக் கோலம் கொண்டான். - 1.5.18
165 - மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க
நன்நகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன்
தன் அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்திப்
பொன் அணி மணியார் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார். - 1.5.19
166 - இயம் பல துவைப்ப எங்கும் ஏத்தொலி எடுப்ப மாதர்
நயந்து பல்லாண்டு போற்ற நான்மறை ஒலியின் ஓங்க
வியந்துபார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பஞ் செய்தே
உயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையரானார். - 1.5.20
167 - மங்கல கீத நாத மறையவர் குழாங்களோடு
தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துன்றிச் சூதும்
பங்கய முகையும் சாயத்துப் பணைத்து எழுந் தணியில் மிக்க
குங்கும முலையினாரும் பரந்தெழு கொள்கைத் தாகி. - 1.5.21
168 - அருங்கடி எழுந்த போழ்தின் ஆர்த்த வெள்வளை களாலும்
இருங்குழை மகரத் தாலும் இலங்கொளி மணிகளாலும்
நெருங்கிய பீலிச் சோலை நீல நீர்த் தரங்கத் தாலும்
கருங்கடல் கிளர்ந்தது என்னக் காட்சியில் பொலிந்தது அன்றே. - 1.5.22
169 - நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்கப்
பெருங்குடை மிடைந்து செல்லப் பிணங்கு பூங் கொடிகள் ஆட
அருங் கடி மணம் வந்து எய்த அன்று தொட்டு என்றும் அன்பில்
வருங்குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூராமால். - 1.5.23
170 - நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி
நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி
உறைமலி கலவை சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி
மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர் கொள்ள வந்தார். - 1.5.24
171 - கண்கள் எண்ணிலாத வேண்டுன்ங் காளையைக் காண என்பார்
பெண்களில் உயர நோன் தாள் சடங்கவி பேதை என்பார்
மண் களி கூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார்
பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள். - 1.5.25
172 - "ஆண்டகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம்" என்பார்
"தாண்டிய பரியும் நம்பால் தகுதியின் நடந்தது" என்பார்
"பூண்டயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி" என்பார்
ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்பச் சென்றார். - 1.5.26
173 - வருமணக் கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாசத்
திருமணப் பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும்
பெருமழைக் குலத்தின் ஆர்ப்பப் பரிமிசை இழிந்து பேணும்
ஒரு மணத் திறத்தின் அங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன். - 1.5.27
174 - ஆலுமறை சூழ்கயிலையின் கண் அருள் செய்த
சாலுமொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான்
மேலுற எழுந்து மிகு கீழுற அகழ்ந்து
மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார். - 1.5.28
175 - கண்ணிடை கரந்த கதிர் வெண்படம் எனச் சூழ்
புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்தத்
தண்மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே
வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க. - 1.5.29
176 - காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழச்
சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின்
மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க
ஆதபம் மறைக் குடை அணிக்கரம் விளங்க. - 1.5.30
177 - பண்டிசரி கோவண உடைப் பழமை கூரக்
கொண்டதோர் சழங்கலுடை ஆர்ந்து அழகு கொள்ள
வெண் துகிலுடன் குசை முடிந்து விடு வேணுத்
தண்டொருகை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள. - 1.5.31
178 - மொய்த்து வளர் பேரழகு மூத்தவடி வேயோ
அத்தகைய மூப்பெனும் அதன் படிவ மேயோ
மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதல்யோ
இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி . - 1.5.32
179 - வந்துதிரு மாமறை மணத் தொழில் தொடங்கும்
பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று
"இந்த மொழி கேண்மின் எதிர் யாவர்களும்" என்றான்
முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான். - 1.5.33
180 - என்றுரை செய் அந்தணனை எண்ணில் மறை யோரும்
மன்றல் வினை மங்கல மடங்கல் அனை யானும்
"நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்று ஏ
நின்றது இவண் நீர் மொழிமின் நீர்மொழிவது" என்றார். - 1.5.34
181 - பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி
என்னிடையும் நின்னிடையும் நின்ற இசை வால்யான்
முன்னுடையது ஓர்பெரு வழக்கினை முடித்தே
நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி என்றான். - 1.5.35
182 - நெற்றி விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான்
" உற்றதோர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல்
மற்றது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன்
முற்ற இது சொல்லுக" என எல்லை முடிவு இல்லான். - 1.5.36
183 - " ஆவதிது கேண்மின் மறையோர்! என் அடியான் இந்
நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது" என்றான்
தேவரையும் மாலயன் முதன் திருவின் மிக்கோர்
யாவரையும் வேறு அடிமை யாவுடைய எம்மான். - 1.5.37
184 - என்றான் இறையோன் அது கேட்டவர் எம் மருங்கும்
நின்றார் இருந்தார் "இவன் என் நினைந்தான் கொல்" என்று
சென்றார் வெகுண்டார் சிரித்தார் திரு நாவல் ஊரான்
"நன்றால் மறையோன் மொழி" என்று எதிர் நோக்கி நக்கான். - 1.5.38
185 - . நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்
மிக்கான் மிசையுத்தரியத் துகில் தாங்கி மேல் சென்று
"அக் காலம் உன் தந்தை தன் தந்தை ஆள்ஓலை ஈதால்
இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட" என்ன. - 1.5.39
186 - மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி
"ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோ ம் பித்தனோ மறையோன்" என்றார் - 1.5.40
187 - "பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று
எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன்
அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும்" என்றார் - 1.5.41
188 - "கண்டதோர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும்
கொண்டதோர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்
உண்டொராள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன்" என்று
தொண்டனார் "ஓலை காட்டுக" என்றனர் துணைவனாரை. - 1.5.42
189 - "ஓலை காட்டு" என்று நம்பி உரைக்க "நீ ஓலை காணல்
பாலையோ அவை முன் காட்டப் பணிசெயற் பாலை" என்ற
வேலையில் நாவலூரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று
மாலயன் தொடரா தானை வலிந்து பின்தொடரல் உற்றார். - 1.5.43
190 - ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்தணாளன்
காவணத்து இடையே ஓடக் கடிது பின்தொடர்ந்து நம்பி
பூவனத்து அவரை உற்றார் அவரலால் புரங்கள் செற்ற
ஏவணச் சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார்? - 1.5.44
191 - மறைகள் ஆயின முன் போற்றி மலர்ப்பதம் பற்றி நின்ற
இறைவனைத் தொடர்ந்து பற்றி எழுதும்ஆள் ஓலை வாங்கி
அறை கழல் அண்ணல் "ஆளாய் அந்தணர் செய்தல் என்ன
முறை"S எனக் கீறியிட்டார் முறையிட்டான் முடிவிலாதான். - 1.5.45
192 - அருமறை முறையிட்டின்னும் அறிவதற்கு அறியான் பற்றி
ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி "இந்தப்
பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்கு கின்ற
திரு மறை முனிவரே எங்குளீர் செப்பும்" என்றார். - 1.5.46
193 - என்றலும் நின்ற ஐயர் "இங்குளேன் இருப்புஞ் சேயது
அன்றிந்த வெண்ணெய் நல்லூர் அதுநிற்க அறத்தாறு இன்றி
வன்றிறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி
நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை" என்றான். - 1.5.47
194 - குழை மறை காதினானை கோல் ஆரூரர் நோக்கிப்
பழைய மன்றாடி போலும் இவன் என்று பண்பின் மிக்க
விழைவுறு மனமும் பொங்க "வெண்ணெய் நல்லூராயேல் உன்
பிழை நெறி வாழ்க்கை ஆங்கே பேச நீ போதாய்" என்றார். - 1.5.48
195 - வேதியன் அதனைக் கேட்டு "வெண்ணெய் நல்லூரிலே நீ
போதினும் நன்று மற்றப் புனித நான்மறையோர் முன்னர்
ஆதியில் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல்
சாதிப்பன்" என்று முன்னே தண்டுமுன் தாங்கிச் சென்றான். - 1.5.49
196 - செல்லு நான் மறையோன் தன்பின் திரிமுகக் காந்தஞ் சேர்ந்த
வல்லிரும்பணையு மா போல் வள்ளலும் கடிது சென்றான்
எல்லையில் சுற்றத்தாரும் "இது என்னாம்" என்று செல்ல
நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல்லூரை நண்ணி. - 1.5.50
197 - வேத பாரகரின் மிக்கார் விளங்கு பேர் அவை முன் சென்று
நாதனாம் மறையோன் சொல்லும் "நாவலூர் ஆரூரன் தன்
காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி
மூதறிவீர் முன் போந்தானிது மற்றென் முறைபாடு" என்றான். - 1.5.51
198 - அந்தணர் அவையில் மிக்கார் "மறையவர் அடிமை ஆதல்
இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயர்" என்றார்
வந்தவாறிசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலை
தந்தை தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான். - 1.5.52
199 - "இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று
விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி ஆமோ?
தசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சாரச் சொன்னான்
அசைவில் ஆரூரர் எண்ணம் என்" என்றார் அவையில்மிக்கார். - 1.5.53
200 - "அனைத்து நூல் உணர்ந்தீர்! ஆதி சைவன் என்று அறிவீர்! என்னைத்
தனக்கு வேறு அடிமை என்று இவ் அந்தணன் சாதித்தானேல்
மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான்
எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன்" எண்ணம் மிக்கான். - 1.5.54
201 - அவ்வுரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்லச்
செவ்விய மறையோர் நின்ற திரு மறை முனியை நோக்கி
"இவ்வுலகின் கண் நீ இன்று இவரை உன் அடிமை என்ற
வெவ்வுரை எம்முன்பு ஏற்ற வேண்டும்" என்று உரைத்து மீண்டும். - 1.5.55
202 - ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன "முன்னே
மூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல ஓலை
மாட்சியில் காட்ட வைத்தேன்" என்றனன் மாயை வல்லான். - 1.5.56
203 - வல்லையேல் காட்டிங்கு என்ன மறையவன் வலி செய்யாமல்
சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்லச்
செல்வ நான் மறையோய்! நாங்கள் தீங்குற ஒட்டோ ம் என்றார்
அல்லல் தீர்த்து ஆள நின்றார் ஆவணம் கொண்டு சென்றார். - 1.5.57
204 - இருள் மறை மிடறு ஒன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ
அருள் பெறு காரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கிச்
சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கித்
தெருள் பெறு சபையோர் கேட்ப வாசகம் செப்பு கின்றான். - 1.5.58
205 - அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை
பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானும் என்பால்
வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து. - 1.5.59
206 - வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள்
ஆசிலா எழுத்தை நோக்கி அவையொக்கும் என்ற பின்னர்
மாசிலா மறையோர் "ஐயா! மற்றுங்கள் பேரனார் தம்
தேசுடை எழுத்தே ஆகில் தெளியப் பார்த்து அறிமின்" என்றார். - 1.5.60
207 - அந்தணர் கூற "இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான்
தந்தை தன் தந்தை தான் வேறு எழுதுகைச் சாத்துண்டாகில்
இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி
வந்தது மொழிமின்" என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல். - 1.5.61
208 - திரண்ட மா மறையோர் தாமும் திரு நாவலூரர் கோ முன்
மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை
அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி
"இரண்டும் ஒத்திருந்தது என்னே! இனிச் செயல் இல்லை" என்றார் - 1.5.62
209 - "நான் மறை முனிவ னார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர்
பான்மையின் ஏவல் செய்தல் கடன்" என்று பண்பில் மிக்க
மேன்மையோர் விளம்ப நம்பி "விதி முறை இதுவே ஆகில்
யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ" என்று நின்றார். - 1.5.63
210 - திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி
"அருமுனி! நீமுன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள்
பெருமைசேர் பதியேயாகப் பேசியதுமக்கு இவ்வூரில்
வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக" என்றார். - 1.5.64
211 - பெருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை
ஒருவரும் அறியீராகில் 'போதும்' என்றுரைத்துச் சூழ்ந்த
பெருமறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத்
திருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார். - 1.5.65
212 - எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் "எங்கள்
நம்பர் தங்கோயில் புக்கது என்கொலோ" என்று நம்பி
தம்பெரு விருப்பினோடு தனித் தொடர்ந்து அழைப்ப மாதோ(டு)
உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார். - 1.5.66
213 - "முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப்
பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது
துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து
நன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோ ம்" என்றார். - 1.5.67
214 - என்று எழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட
கன்று போல் கதறி நம்பி கரசரண் ஆதி அங்கம்
துன்றிய புளகம் ஆகத் தொழுத கை தலை மேல் ஆக
"மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது" என்றார். - 1.5.68
215 - எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும்
விண்ணவர் பொழி பூ மாரி மேதினி நிறைந்து விம்ம
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப
அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளிச் செய்வார். - 1.5.69
216 - "மற்று நீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மைச்
சொற் தமிழ் பாடுக என்றார்" தூமறை பாடும் வாயார். - 1.5.70
217 - . தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து எழுத்தும்
பாடிய பொருளாய் உள்ளான் "பாடுவாய் நம்மை" என்ன
நாடிய மனத்தராகி நம்பி ஆரூரர் மன்றுள்
ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று. - 1.5.71
218 - வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த
ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட
கோதிலா அமுதே! இன்று உன் குணப் பெருங் கடலை நாயேன்
யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன்" என மொழிந்தார் - 1.5.72
219 - அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்
"முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலால்லே
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய்" என்றார் நின்ற
வன்பெருந் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல் உற்றார். - 1.5.73
220 - கொத்தார் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்
மெய்த் தாயினும் இனியானை அவ்வியன் நாவலர் பெருமான்
"பித்தா பிறை சூடி எனப் பெரிதாம் திருப் பதிகம்
இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார். - 1.5.74
221 - முறையால் வரு மதுரத் துடன் மொழி இந்தள முதலில்
குறையா நிலை மும்மைப்பாடிக் கூடுங் கிழமை யினால்
நிறை பாணியின் இசை கோள்புணர் நீடும் புகழ் வகையால்
இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான். - 1.5.75
222 - சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன் தனை இன்னும்
பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு" என்றுறு பரிவில்
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள்துறை மேவிய நம்பன்
எல்லா உலகும் உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான். - 1.5.76
223 - அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும்
உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில்
பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள். - 1.5.77
224 - நாவலர் கோன் ஆரூரன் தனை வெண்ணெய் நல் ஊரில்
மேவும் அருள்துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதற்பின்
பூ அலரும் தடம் பொய்கைத் திருநாவலூர் புகுந்து
தேவர் பிரான் தனைப் பணிந்து திருப் பதிகம் பாடினார். - 1.5.78
225 - சிவன் உறையுந் திருத்துறையூர் சென்றணைந்து தீவினையால்
அவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்குத்
தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று
பவ நெறிக்கு விலக்கு ஆகுந் திருப்பதிகம் பாடினார். - 1.5.79
226 - புலன் ஒன்றும் படி தவத்திற் புரிந்த நெறி கொடுத்து அருள
அலர் கொண்ட நறுஞ் சோலைத் திருத் துறையூர் அமர்ந்து அருளும்
நிலவும் தண் புனலும் ஒளிர் நீள்சடையோன் திருப்பாதம்
மலர் கொண்டு போற்றிசைத்து வந்தித்தார் வன தொண்டர். - 1.5.80
227 - திருத் துறையூர் தனைப் பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும்
பொருத்தமாம் இடம் பலவும் புக்கிறைஞ்சி பொற்புலியூர்
நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு நினைவுற்று
வருத்தம் மிகு காதலினால் வழிக் கொள்வான் மனங் கொண்டார் - 1.5.81
228 - மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும்
அலை தருதண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின்
நிலவு பசும் புரவிநெடும் தேர் இரவி மேல் கடலில்
செலவணையும் பொழுது அணையத் திருவதிகை புறத்து அணைந்தார் - 1.5.82
229 - "உடைய அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி
விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து
அடையும் அதற்கு அஞ்சுவான்" என்று அந் நகரில் புகுதாதே
மடை வளர் தண் புறம் பணையிற் சித்தவட மடம் புகுந்தார் - 1.5.83
230 - வரி வளர் பூஞ்சோலை சூழ் மடத்தின் கண் வன்தொண்டர்
விரிதிரை நீர்க் கெடில வட வீரட்டானத்து இறை தாள்
புரிவுடைய மனத்தினராய்ப் புடை எங்கும் மிடைகின்ற
பரிசனமும் துயில் கொள்ளப் பள்ளி அமர்ந்து அருளினார். - 1.5.84
231 - அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும்
முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே
பொது மடத்தின் உள்புகுந்து பூந் தாரான் திரு முடி மேல்
பதும மலர்த் தாள் வைத்துப் பள்ளி கொள்வார் போல் பயின்றார். - 1.5.85
232 - அந்நிலை ஆரூரன் உணர்ந்து அருமறையோய் உன்னடி என்
சென்னியில் வைத்தனை என்னத் திசை அறியா வகை செய்த(து)
என்னுடைய மூப்புக் காண் என்று அருள அதற்கு இசைந்து
தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன். - 1.5.86
233 - அங்குமவன் திரு முடிமேல் மீட்டும் அவர் தாள் நீட்டச்
செங்கயல் பாய் தடம் புடை சூழ் திரு நாவலூராளி
இங்கு என்னைப் பலகாலும் மிதித்தனை நீ யார் என்னக்
கங்கை சடைக் கரந்த பிரான் அறிந்திலையோ எனக் கரந்தான். - 1.5.87
234 - செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் எனத் தெளிந்து
தம்மானை அறியாத சதியார் உளரே என்(று)
அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்து அமர்ந்த
கைம்மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார். - 1.5.88
235 - பொன் திரளும் மணித் திரளும் பொரு கரிவெண் கோடுகளும்
மின்றிரண்ட வெண்முத்தும் விரைமலரும் நறுங் குறடும்
வன்றிரைகளாற் கொணர்ந்து திருவதிகை வழிபடலால்
தென் திசையில் கங்கை எனும் திருக் கெடிலம் திளைத்தாடி. - 1.5.89
236 - அங்கணரை அடிபோற்றி அங்கு அகன்று மற்று அந்தப்
பொங்கு நதித் தென்கரை போய்ப் போர் வலித்தோள் மாவலி தன்
மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த
செங்கணவன் வழி பட்ட திரு மாணிக்குழி அணைந்தார். - 1.5.90
237 - பரம் பொருளைப் பணிந்து தாள் பரவிப்போய்ப் பணிந்தவர்க்கு
வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி
நரம்புடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி
அரம்பையர் தம் கீத ஒலி அறாத் தில்லை மருங்கு அணைந்தார். - 1.5.91
238 - தேம் அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அங்கயல்கள் செங்கமலத் தண்
பூ மலங்க எதிர் பாய்வன மாடே புள்ளலம்பு திரை வெள் வளை வாவி
தா மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள் தம்மும்மை
மா மலங்களற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி . - 1.5.92
239 - நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம்
பூக ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி
மேக சாலமலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்றப்
போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம்புறம்பணை கடந்து புகுந்தார். - 1.5.93
240 - வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம்
கன்னி காரங் குரவங் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித்
துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த
பன் மலர்ப் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான். - 1.5.94
241 - இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து
நடநவின்று அருள் சிலம்பொலி போற்றும் நான் மறைப் பதியை நாளும் வணங்க
கடல் வலங் கொள்வது போல் புடை சூழுங் காட்சி மேவி மிகு
சேட் செல ஓங்கும் தடமருங்கு வளர் மஞ்சிவர்
- இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார். - 1.5.95
242 - மன்றுளாடு மதுவின் நசையாலே மறைச் சுரும்பறை புறத்தின் மருங்கே
குன்று போலுமணி மாமதில் சூழுங் குண்ட கழக்கமல வண்டலர் கைதைத்
துன்று நீறுபுனை மேனிய வாகித் தூய நீறு புனை தொண்டர்கள் என்னச்
சென்று சென்று முரல்கின்றன கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார். - 1.5.96
243 - பார் விளங்க வளர் நான் மறை நாதம் பயின்ற பண்புமிக வெண்கொடி ஆடும்
சீர் விளங்கு மணி நாவொலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும்
தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர்முகங்கள் என ஆயின தில்லை
ஊர்விளங்கு திருவாயில்கள் நான்கின் உத்தரத் திசை வாயில் முன் எய்தி. - 1.5.97
244 - அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ
முன் பிறைஞ்சினரி யாவர் என்று அறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து
பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும்
பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவிறந்த திருவீதி புகுந்தார் - 1.5.98
245 - அங்கண் மாமறை முழங்கும் மருங்கே ஆடரம்பையர் அரங்கு முழங்கும்
மங்குல் வானின்மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு முழங்கும்
பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர் போற்றிசைக்கும் ஒலி எங்கும் முழங்கும்
திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும் திருவீதி. - 1.5.99
246 - போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி
மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகைக் குலம் மிடைந்த பதாகை
யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓமதூமம் உயர்வானில் அடுப்ப
மேக பந்திகளின் மீதிடைஎங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும். - 1.5.100
247 - ஆடு தோகை புடை நாசிகள் தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி தோறும்
மாடுதாமமணி வாயில்கள் தோறும் மங்கலக் கலசம் வேதிகை தோறும்
சேடு கொண்ட ஒளி தேர் நிரை தோறும் செந்நெல் அன்னமலை சாலைகள் தோறும்
நீடு தண்புனல்கள் பந்தர்கள் தோறும் நிறைந்த தேவர் கணம் நீளிடை தோறும். - 1.5.101
248 - எண்ணில் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம்
மண்ணில் இப்பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகிப்
புண்ணியப் புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும்
அண்ணல் ஆடு திருஅம்பலம் சூழ்ந்த அம்பொன் வீதியினை நம்பி வணங்கி . - 1.5.102
249 - மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி
சீல மாமுனிவர் சென்று முன் துன்னித் திருப் பிரம்பின் அடி கொண்டு திளைத்துக்
காலம் நேர் படுதல் பார்த்தயல் நிற்பக் காதல் அன்பர் கணநாதர் புகும்பொற்
கோல நீடு திருவாயில் இறைஞ்சிக் குவித்த செங்கை தலை மேற்கொடு புக்கார். - 1.5.103
250 - பெரு மதில் சிறந்த செம் பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு
வருமுறை வலம் கொண்டிறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்
அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர் தம் சிந்தையில் அலர்ந்த
திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில். - 1.5.104
251 - வையகம் பொலிய மறைச் சிலம்பு ஆர்ப்ப மன்றுளே மால் அயன் தேட
ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த
கைகளோ திளைத்த கண்களோ அந்தக் கரணமோ கலந்த அன்புந்தச்
செய் தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திருக் களிற்றுப்படி மருங்கு. - 1.5.105
252 - ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்து விகமே ஆக
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார். - 1.5.106
253 - "தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடம் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம் ஆம்" என்று
கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக் கைம்மலர் உச்சி மேற் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார். - 1.5.107
254 - தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனிப் பெருந் தாண்டவம் புரிய
எடுத்த சேவடியார் அருளினால் "தரளம் எறிபுனல் மறி திரைப் பொன்னி
மடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில் வருக நம்பால்" என வானில்
அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார். - 1.5.108
255 - ஆடு கின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அப் பணி சென்னி மேற் கொண்டு
சூடு தங்கரங்கள் அஞ்சலி கொண்டு தொழுந் தொறும் புறவிடை கொண்டு
மாடு பேரொளியின் வளரும் அம்பலத்தை வலங் கொண்டு வணங்கினர் போந்து
நீடுவான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரங் கடந்து. - 1.5.109
256 - நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திருவீதியை வணங்கி
மன்றலார் செல்வ மறுகினூடேகி மன்னிய திருப்பதி அதனில்
தென்திசை வாயில் கடந்து முன் போந்து சேட்படுந் திரு எல்லை இறைஞ்சிக்
கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிடத் திருநதி கடந்தார். - 1.5.110
257 - புறந் தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணிமார்பர்
அறம் பயந்தாள் திருமுலைப் பால் அமுதுண்டு வளர்ந்தவர் தாம்
பிறந்து அருளும் பெரும்பேறு பெற்றது என முற்றுலகில்
சிறந்த புகழ்க் கழுமலமாம் திருப்பதியைச் சென்று அணைந்தார். - 1.5.111
258 - பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி
உள்ளு நான் மிதியேன் என்றூர் எல்லைப் புறம் வணங்கி
வள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கை இடங்
கொள்ளுமால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள. - 1.5.112
259 - மண்டிய பேரன்பினால் வன்தொண்டர் நின்று இறைஞ்சித்
தெண் திரை வேலையில் மிதந்த திருத் தேணி புரத் தாரைக்
கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்று இருந்த படி என்று
பண்டரும் இன்னிசை பயின்ற திருப் பதிகம் பாடினார். - 1.5.113
260 - இருக்கோலம் இடும்பெருமான் எதிர் நின்றும் எழுந்து அருள
வெருக் கோளுற்றது நீங்க ஆரூர் மேற் செல விரும்பிப்
பெருக்கோதம் சூழ்புறவப் பெரும் பதியை வணங்கிப் போய்த்
திருக்கோலக்கா வணங்கி செந்தமிழ் மாலைகள் பாடி. - 1.5.114
261 - தேன் ஆர்க்கும் மலர்ச் சோலைத் திருப் புன்கூர் நம்பர் பால்
ஆனாப் பேரன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடி
மானார்க்கும் கரதலத்தார் மகிழ்த இடம் பல வணங்கிக்
கானார்க்கும் மலர்த் தடஞ் சூழ் காவிரியின் கரை அணைந்தார். - 1.5.115
262 - வம்புலா மலர் அலை மணிகொழித்து வந்திழியும்
பைம் பொன் வார் கரைப் பொன்னிப் பயில் தீர்த்தம் படிந்தாடி
தம்பிரான் மயிலாடுதுறை வணங்கித் தாவில் சீர்
அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார். - 1.5.116
263 - மின்னார் செஞ்சடை அண்ணல் விரும்பு திருப்புகலூரை
முன்னாகப் பணிந்தேத்தி முதல்வன் தன் அருள் நினைந்து
பொன்னாரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர்
தென் நாவலூராளி திருவாரூர் சென்று அணைந்தார். - 1.5.117
264 - தேர் ஆரும் நெடு வீதித் திருவாரூர் வாழ்வார்க்கு
"ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க
வாரா நின்றான் அவனை மகிழ்ந்து எதிர் கொள்வீர்" என்று
நீராரும் சடை முடிமேல் நிலவணிந்தார் அருள் செய்தார். - 1.5.118
265 - தம்பிரான் அருள் செய்த திருத் தொண்டர் அது சாற்றி
"எம் பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுவானால்
நம் பிரானார் ஆவார் அவரன்றே" எனும் நலத்தால்
உம்பர் நாடு இழிந்தது என எதிர் கொள்ள உடன் எழுந்தார். - 1.5.119
266 - மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெருங் கொடி நெருங்கத்
தாளின் நெடுந் தோரணமும் தழைக் கமுகும் குழைத் தொடையும்
நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும் பொற்றசும்பும்
ஒளி நெடு மணிவிளக்கும் உயர் வாயில் தொறும் நிரைத்தார். - 1.5.120
267 - சோதி மணி வேதிகைகள் தூ நறுஞ் சாந்து அணி நீவிக்
கோதில் பொரி பொற் சுண்ணங் குளிர் தரள மணி பரப்பி
தாதிவர் பூந் தொடை மாலைத் தண் பந்தர்களுஞ் சமைத்து
வீதிகள் நுண் துகள் அடங்க விரைப் பனிநீர் மிகத்தெளித்தார். - 1.5.121
268 - மங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்கச்
செங் கயற் கண் முற்றிழையார் தெற்றி தொறும் நடம் பயில
நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன்
பொங்கெயில் நீள் திருவாயில் புறம் உறவந்து எதிர்கொண்டார். - 1.5.122
269 - வந்து எதிர் கொண்டு வணங்குவார் முன் வன்தொண்டர் அஞ்சலி கூப்பி வந்து
சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத் தொண்டர் தம்மை நோக்கி
"எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்" என்னும்
சந்த இசைப் பதிகங்கள் பாடித் தம் பெருமான் திருவாயில் சார்ந்தார். - 1.5.123
270 - வானுற நீள் திரு வாயில் நோக்கி மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கித்
தேனுறை கற்பக வாசமாலைத் தேவாசிரியன் தொழுது இறைஞ்சி
ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செங்கைகள்டும்
தூநறுங் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார். - 1.5.124
271 - புற்றிடங் கொண்ட புராதனனைப் பூங்கோயில் மேய பிரானையார்க்கும்
பற்று இடம் ஆய பரம் பொருளைப் பார்ப்பதி பாகனை பங்கயத்தாள்
அர்ச்சனை செய்ய அருள் புரிந்த அண்ணலை மண்மிசை வீழ்ந்து இறைஞ்சி
நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார். - 1.5.125
272 - அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக
முன்பு முறைமை யினால் வணங்கி முடிவு இலாக் காதல் முதிர ஓங்கி
நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப் பெற்ற
இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை வண்டமிழ் மாலை பாட . - 1.5.126
273 - வாழிய மா மறைப் புற்றிடங்கொள் மன்னவனார் அருளாலோர் வாக்கு
"தோழமை ஆக உனக்கு நம்மைத் தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட
வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீர
வாழி மண் மேல் விளையாடுவாய்" என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே. - 1.5.127
274 - கேட்க விரும்பி வன்றொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே
ஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அருமணியே
வாட்கயல் கொண்ட கண்மங்கை பங்கா! மற்று உன் பெரிய கருணை அன்றே
நாட்கமலப் பதம் தந்தது இன்று நாயினேனை பொருளாக என்றார். - 1.5.128
275 - என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ளக் களிப்பினொடும்
வென்றி அடல் விடைபோல் நடந்து வீதி விடங்கப் பெருமான் முன்பு
சென்று தொழுது துதித்து வாழ்ந்து திருமாளிகை வலம் செய்து போந்தார்
அன்று முதல் அடியார்கள் எல்லாம் தம்பிரான் தோழர் என்றே அழைத்தார். - 1.5.129
276 - மைவளர் கண்டர் அருளினாலே வண்டமிழ் நாவலர் தம் பெருமான்
சைவ விடங்கின் அணிபுனைந்து சாந்தமும் மாலையும் தாரும் ஆகி
மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழுத்தவ வேந்தர் என்னத்
தெய்வ மணிப் புற்றுளாரைப் பாடித்திளைத்து மகிழ்வொடுஞ் செல்லா நின்றார். - 1.5.130
277 - இதற்கு முன் எல்லை இல்லாத் திரு நகர் இதனுள் வந்து
முதல் பெருங் கயிலை ஆதி முதல்வர் தம் பங்கினாட்குப்
பொதுக் கடிந்து உரிமை செய்யும் பூங்குழற் சேடிமாரில்
கதிர்த்த பூண் ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள். - 1.5.131
278 - கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகை மாராம்
பதியிலார் குலத்துள் தோன்றிப் பரவையார் என்னும் நாமம்
விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற
மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி. - 1.5.132
279 - பரவினர் காப்புப் போற்றிப் பயில் பெருஞ் சுற்றம் திங்கள்
விரவிய பருவம் தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர்
"வர மலர் மங்கை இங்கு வந்தனள்" என்று சிந்தை
தர வரு மகிழ்ச்சி பொங்கத் தளர் நடைப் பருவஞ் சேர்ந்தார். - 1.5.133
280 - மானிளம் பிணையோ? தெய்வ வளரிள முகையோ? வாசத்
தேனிளம் பதமோ? வேலைத் திரை இளம் பவள வல்லிக்
கானிளம் கொடியோ? திங்கள் கதிரிளங் கொழுந்தோ? காமன்
தானிளம் பருவம் கற்கும் தனி இளந் தனுவோ என்ன. - 1.5.134
281 - நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்க
ஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மானை ஊசல் இன்ன
பாடும் இன்னிசையும் தங்கள் பனிமலை வல்லி பாதம்
கூடும் அன்பு உருகப் பாடும் கொள்கையோர் குறிப்புத் தோன்ற.. - 1.5.135
282 - பிள்ளைமைப் பருவம் மீதாம் பேதைமைப் பருவம் நீங்கி
அள்ளுதற்கு அமைந்த பொற் பால் அநங்கன் மெய்த் தனங்கள் ஈட்டம்
கெள்ள மிக்குயர்வ போன்ற கொங்கைகோங் கரும்பை வீழ்ப்ப
உள்ள மெய்த் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார் . - 1.5.136
283 - பாங்கியர் மருங்கு சூழப் படரொளி மறுகு சூழத்
தேங்கமழ் குழலின் வாசம் திசையெலாம் சென்று சூழ
ஓங்கு பூங் கோயில் உள்ளார் ஒருவரை அன்பி னோடும்
பூங்கழல் வணங்க என்றும் போதுவார் ஒருநாட் போந்தார். - 1.5.137
284 - அணி சிலம்பு அடிகள் பார் வென்றடிப் படுத்தனம் என்று ஆர்ப்ப
மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அர உலகை வென்ற
துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற் கழிய விண்ணும்
பணியும் என்றின வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில். - 1.5.138
285 - புற்றிடம் விரும்பினாரைப் போற்றினர் தொழுது செல்வார்
சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடை நம்பி
நற் பெரும் பான்மை கூட்ட நகைபொதிந்து இலங்கு செவ்வாய்
விற் புரை நுதலின் வேற்கண் விளங்கு இழையவரைக் கண்டார். - 1.5.139
286 - கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் தன் பெரு வாழ்வோ?
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து
விற் குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ?
அற்புதமோ? சிவனருளோ? அறியேன் என்று அதிசயித்தார் - 1.5.140
287 - ஓவிய நான்முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால்
மேவிய தன் வருத்தமுற விதித்ததொரு மணி விளக்கோ
மூவுலகின் பயனாகி முன் நின்றது என நினைந்து
நாவலர் காவலர் நின்றார் நடு நின்றார் படை மதனார். - 1.5.141
288 - தண்டரள மணித் தோடும் தகைத்தோடும் கடை பிறழும்
கெண்டை நெடுங் கண் வியப்பப் கிளர் ஒளிப் பூண் உரவோனை
அண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்பப்
பண்டை விதி கடை கூட்டப் பரவையாருங் கண்டார். - 1.5.142
289 - கண் கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப
விண் கொள்ளாப் பேரொளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு
எண் கொள்ளா காதலின் முன்பு எய்தாத ஒரு வேட்கை
மண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும் . - 1.5.143
290 - முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகு ஒளியால்
தன்னேரில் மாரனோ? தார் மார்பின் விஞ்சையனோ?
மின் நேர் செஞ் சடை அண்ணல் மெய்யருள் பெற்று உடையவனோ?
என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார். - 1.5.144
291 - அண்ணல் அவன் தன் மருங்கே அளவு இறந்த காதலினால்
உண்ணிறையும் குணம் நான்கும் ஒரு புடைச் சாய்ந்தன எனினும்
வண்ண மலர்க் கரும் கூந்தல் மடக் கொடியை வலிதாக்கிக்
கண் நுதலைத் தொழும் அன்பே கைக் கொண்டு செலவுய்ப்ப. - 1.5.145
292 - பாங்கு ஓடிச் சிலை வளைத்துப் படை அநங்கன் விடு பாணம்
தாங்கோலி எம் மருங்கும் தடை செய்ய மடவரலும்
தேங்கோதை மலர்க் குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்பப்
பூங்கோயில் அமர்ந்த பிரான் பொற் கோயில் போய்ப் புகுந்தான். - 1.5.146
293 - வன்தொண்டர் அது கண்டு "என் மனம் கொண்ட மயில் இயலின்
இன் தொண்டைச் செங்கனி வாய் இளங் கொடி தான் யார்" என்ன
அன்றங்கு முன் நின்றார் அவர் நங்கை பரவையார்
சென்றும்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் எனச் செப்ப. - 1.5.147
294 - "பேர் பரவை பெண்மையினில் பெரும் பரவை விரும்பல்குல்
ஆர்பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை
சீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல்
ஏர் பரவை இடைப் பட்ட என் ஆசை எழு பரவை". - 1.5.148
295 - என்றினைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையான்
முன் தொடர்ந்து வருங் காதல் முறைமை யினால் தொடக்குண்டு
"நன்று எனை ஆட் கொண்டவர் பால் நண்ணுவன்" என்றுள் மகிழ்ந்து
சென்றுடைய நம்பியும் போய்த் தேவர் பிரான் கோயில் புக. - 1.5.149
296 - பரவையார் வலங் கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே
புரவலனார் கோயிலின் நின்று ஒரு மருங்கு புறப்பட்டார்
விரவு பெருங் காதலினால் மெல்லியலார் தமை வேண்டி
அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர். - 1.5.150
297 - அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணிப் புற்றின்
மை வாழும் திரு மிடற்று வானவர் பால் நின்றும் போந்து
எவ்வாறு சென்றாள் என் இன்னுயிராம் அன்னம் எனச்
செவ்வாய் வெண் நகைக் கொடியைத் தேடுவார் ஆயினார். - 1.5.151
298 - "பாசமாம் வினைப் பற்று அறுப்பான் மிகும்
ஆசை மேலும் ஓர் ஆசை அளிப்பதோர்
தேசின் மன்னி என் சிந்தை மயக்கிய
ஈசனார் அருள் என் நெறிச் சென்றதே". - 1.5.152
299 - "உம்பர் நாயகர் தங்கழல் அல்லது
நம்புமாறு அறியேனை நடுக்குற
வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கியின்று
எம் பிரான் அருள் எந்நெறிச் சென்றதே". - 1.5.153
300 - "பந்தம் வீடு தரும் பரமன் கழல்
சிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையை
வந்து மால் செய்து மான் எனவே விழித்து
எந்தையார் அருள் எந் நெறிச் சென்றதே - 1.5.154
301 - என்று சாலவும் ஆற்றலர்" என்னுயிர்
நின்றது எங்கு என நித்திலப் பூண் முலை
மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான்
சென்று தேவ ஆசிரியனைச் சேர்ந்த பின். - 1.5.155
302 - காவி நேர் வரும் கண்ணியை நண்ணுவான்
யாவரோடும் உரையியம்பாது இருந்து
"ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர்
பூவின் மங்கையைத் தந்து" எனும் போழ்தினில் . - 1.5.156
303 - நாட்டு நல்லிசை நாவலூரன் சிந்தை
வேட்ட மின்னிடை இன் அமுதத்தினைக்
காட்டுவன் கடலை கடைந்தது என்ப போல்
பூட்டும் ஏழ் பரித் தேரோன் கடல் புக. - 1.5.157
304 - எய்து மென் பெடையோடும் இரை தேர்ந்து உண்டு
பொய்கையிற் பகல் போக்கிய புள்ளினம்
வைகு சேக்கை கண் மேற்செல வந்தது
பையுள் மாலை தமியோர் புனிப்புற. - 1.5.158
305 - பஞ்சின் மெல் அடிப் பாவையர் உள்ளமும்
வஞ்ச மாக்கள் தம் வல் வினையும் அரன்
அஞ்சு எழுத்தும் உணரா அறிவிலோர்
நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான். - 1.5.159
306 - "மறுவில் சிந்தை வன்தொண்டர் வருந்தினால்
இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார்" என்று
நறு மலர்க் கங்குல் நங்கை முன் கொண்ட புன்
முறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா . - 1.5.160
307 - அரந்தை செய்வார்க்கு அழுங்கித் தம் ஆருயிர்
வரன் கை தீண்ட மலர் குலமாதர் போல்
பரந்த வெம் பகற்கொல்கிப் பனி மதிக்
கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம். - 1.5.161
308 - தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மையே
சாற்றும் இன்பமும் தண்மையும் தந்து போய்
ஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண்
நீற்றின் பேரொளி போன்றது நீள் நிலா. - 1.5.162
309 - வாவி புள்ளொலி மாறிய மாலையில்
நாவலூரரும் நங்கை பரவையாம்
பாவை தந்த படர் பெருங் காதலும்
ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார். - 1.5.163
310 - "தந்திருக் கண் எரிதழலிற் பட்டு
வெந்த காமன் வெளியே உருச் செய்து
வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே
எந்தையார் அருள் இவ் வண்ணமோ?" என்பார். - 1.5.164
311 - ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர்
தூர்ப்பதே! எனைத் தொண்டு கொண்டு ஆண்டவர்
நீர்த் தரங்க நெடுங் கங்கை நீள் முடிச்
சாத்தும் வெண் மதி போன்றிலை தண் மதி!. - 1.5.165
312 - "அடுத்து மேன் மேல் அலைத்து எழும் ஆழியே
தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உணக்
கடுத்த நஞ்சுன் தரங்கக் கரங்களால்
எடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய் ?" - 1.5.166
313 - "பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடைச்
சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில்
புறம் பணைத் தடம் பொங்கழல் வீசிட
மறம் பயின்றது எங்கோ? தமிழ் மாருதம்!" - 1.5.167
314 - இன்ன தன்மைய பின்னும் இயம்புவான்
மன்னு காதலன் ஆகிய வள்ளல் பால்
தன் அரும் பெறல் நெஞ்சு தயங்கப் போம்
அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம். - 1.5.168
315 - கனங்கொண்ட மணி கண்டர் கழல்
- வணங்கிக் கணவனை முன் பெறுவாள் போல
இனங் கொண்ட சேடியர்கள் புடை சூழ எய்து பெருங் காதலோடும்
தனங் கொண்டு தளர் மருங்குற் பரவையும் வன்தொண்டர் பால்
தனித்துச் சென்ற மனங்கொண்டு வரும் பெரிய மயல்
- கொண்டு தன்மணிமாளிகையைச் சார்ந்தாள். - 1.5.169
316 - சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிதளவே ஒலிப்ப முன்னர்
வேறொருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால்
ஏறி மரகதத் தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலங் கொள் பொற் கால்
மாறில் மலர்ச் சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கிருந்தாள் வந்து. - 1.5.170
317 - அவ்வளவில் அருகிருந்த சேடிதனை முகநோக்கி "ஆரூர் ஆண்ட
மைவிரவு கண்டாரை நாம் வணங்கப் போம் மறுகெதிர் வந்தவரார்?" என்ன
"இவ்வுலகில் அந்தணராய் இருவர் தேடொருவர் தாம் எதிர் நின்று ஆண்ட
சைவ முதல் திருத் தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி" என்றாள். - 1.5.171
318 - என்றவுரை கேட்டலுமே "எம் பிரான் தமரேயோ" என்னா முன்னம்
வன் தொண்டர் பால் வைத்த மனக் காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க
நின்ற நிறை நாண்முதலாங் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கி
மின் தயங்கு நுண் இடையாள் வெவ்வுயிர்த்து மெல் அணை மேல் வீழ்ந்த போது. - 1.5.172
319 - ஆர நறுஞ் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறுந்திவலை அருகு வீசி
ஈர இளந் தளிர்க்குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம்
பேரழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன
மாரனும் தன் பெருஞ் சிலையின் வலிகாட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து. - 1.5.173
320 - மலரமளித் துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில்
நிலவுமிழும் தழல் ஆற்றாள் நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மை யோடும்
கலவ மயில் என எழுந்து கருங் குழலின் பரமாற்றாக் கையள் ஆகி
இலவ இதழ்ச் செந்துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள். - 1.5.174
321 - கந்தம் கமழ் மென் குழலீர்! இது என்? கலை வாண் மதியம் கனல்வான் எனை இச்
சந்தின் தழலைப் பனி நீர் அளவித் தடவுங் கொடியீர்! தவிரீர்! தவிரீர்!
வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையானிலமும் எரியாய் வருமால்
அந்தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்றுடையார் அருளார்". - 1.5.175
322 - "புலரும் படி யன்றி இரவென்னளவும்; பொறையும் நிறையும் இறையும் தரியா,
உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ? பெரு வாழ்வுரையீர்
பலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன் மதனார் புடை நின்று அகலார்!
அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார் - 1.5.176
323 - "தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவா ரூரிர்! நீரே அல்லால்
ஆரென் துயரம் அறிவார்? அடிகேள் அடியேன் அயரும் படியோ இதுதான்?
நீரும் பிறையும் பொறிவாள் அரவின் நிரையும் நிரை வெண்டலையின் புடையே
ஊரும் சடையீர்! விடைமேல் வருவீர்! உமது அன்பிலர் போல் யானோ உறுவேன்? - 1.5.177
324 - என்றின்னவெ பலவும் புகலும் இருளார் அளகச் சுருள் ஓதியையும்
வன் தொண்டரையும் படிமேல் வர முன்பு அருளுவான் அருளும் வகையார் நினைவார்
சென்று உம்பர்களும் பணியும் செல்வத் திருவாரூர் வாழ் பெருமான் அடிகள்
அன்று அங்கு அவர் மன்றலை நீர் செயும் என்று அடியார் அறியும் படியால் அருளி. - 1.5.178
325 - மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ "மங்கை பரவை தன்னைத் தந்தோம்
இன்னவ்வகை நம் அடியார் அறியும் படியே உரை செய்தனம்" என்று அருளிப்
பொன்னின் புரி புன் சடையன் விடையன் பொருமா கரியின் உரிவை புனைவான்
அன்னந் நடையாள் பரவைக்கு "அணியது ஆரூரன் பால் மணம்" என்று அருள. - 1.5.179
326 - காமத் துயரில் கவல்வார் நெஞ்சிற் கரையில் இருளும் கங்குல் கழி போம்
யாமத்து இருளும் புலரக் கதிரோன் எழுகாலையில் வந்து அடியார் கூடிச்
சேமத் துணையாம் அவர் பேர் அருளைத் தொழுதே திரு நாவலர் கோன் மகிழத்
தாமக் குழலாள் பரவை வதுவை தகு நீர்மை யினால் நிகழச் செய்தார். - 1.5.180
327 - தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால்
மின்னாருங் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல் தன்
பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வாகப்
பன்னாளும் பயில் யோக பரம்பரையின் விரும்பினார். - 1.5.181
328 - தன்னையாளுடைய பிரான் சரணர விந்த மலர்
சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துத் திருப் பதிகம்
பன்னு தமிழ்த் தொடை மாலை பல சாத்திப் பரவை எனும்
மின்னிடையாள் உடன் கூடி விளையாடிச் செல்கின்றார். - 1.5.182
329 - மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை
போதலர் வாவி மாடு செய் குன்றின் புடையோர் தெற்றிச்
சீதளத் தரளப் பந்தர்ச் செழுந் தவிசி இழிந்து தங்கள்
நாதர் பூங் கோயில் நண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி. - 1.5.183
330 - அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்திச்
சந்தனத்து அளறு தோய்ந்த குங்குமக் கலவை சாத்திச்
சுந்தரச் சுழியஞ் சாத்திச் சுடர் மணிக் கலன்கள் சாத்தி
இந்திரத் திருவின் மேலாம் எழில் மிக விளங்கித் தோன்ற - 1.5.184
331 - கையினிற் புனை பொற்கோலும் காதினில் இலங்கு தோடும்
மெய்யினில் துவளு நூலும் நெற்றியில் விளங்கும் நீறும்
ஐயனுக்கு அழகு இதாம் என்று ஆயிழை மகளிர் போற்றச்
சைவ மெய்த் திருவின் கோலம் தழைப்ப வீதியினைச் சார்ந்தார் - 1.5.185
332 - "நாவலூர் வந்த சைவ நற் தவக் களிறே" என்றும்
"மேலவர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்பர்" என்றும்
"தாவில் சீர்ப் பெருமை ஆரூர் மறையவர் தலைவ" என்றும்
மேவினர் இரண்டு பாலும் வேறு வேறாயம் போற்ற. - 1.5.186
333 - கைக் கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றிப்
பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றிச் செல்ல
மிக்க பூம் பிடகை கொள்வோர் விரையடைப்பையோர் சூழ
மைக்கருங் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார். - 1.5.187
334 - பொலங் கலப் புரவி பண்ணிப் போதுவார் பின்பு போத
இலங்கொளி வலயப் பொற்தோள் இடை இடைமிடைந்து தொங்கல்
நலங் கிளர் நீழல் சூழ நான்மறை முனிவரோடும்
அலங்கலந் தோளினான் வந்து அணைந்தான் அண்ணல் கோயில். - 1.5.188
335 - கண் நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து
விண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி
எண் இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆகப்
பண்ணு நாள் எந்நாள் என்று பரமர் தாள் பரவிச் சென்றார். - 1.5.189
336 - "அடியவர்க்கு அடியன் ஆவேன்" என்னும் ஆதரவு கூரக்
கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்துப் புக்கார்
கடி கொள்பூங் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காணக் காட்டும்
படி எதிர் தோன்றி நிற்கப் பாதங்கள் பணிந்து பூண்டு. - 1.5.190
337 - மன் பெருந் திருமா மறை வண்டு சூழ்ந்(து)
அன்பர் சிந்தை அலர்ந்த செந் தாமரை
நன் பெரும் பரம ஆனந்த நன் மது
என் தரத்தும் அளித்து எதிர் நின்றன. - 1.5.191
338 - ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின;
காலன் ஆருயிர் மாளக் கருத்தன;
மாலை தாழ் குழல் மாமலையாள் செங் கை
சீலம் ஆக வருடச் சிவந்தன. - 1.5.192
339 - நீதி மாதவர் நெஞ்சில் பொலிந்தன;
வேதி யாதவர் தம்மை வேதிப்பன;
சோதியாய் எழுஞ் சோதியுட் சோதிய ;
ஆதி மால் அயன் காணா அளவின . - 1.5.193
340 - வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன;
பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன;
ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன;
பூத நாத! நின் புண்டரீகப் பதம் . - 1.5.194
341 - இன்னவாறு ஏத்து நம்பிக் கேறு சேவகனார் தாமும்
அந் நிலை அவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி
மன்னு சீர் அடியார் தங்கள் வழித் தொண்டை உணர நல்கிப்
பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளிச் செய்வார். - 1.5.195
342 - "பெருமையால் தம்மை ஒப்பார்; பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார்; ஊனம் மேல் ஒன்றும் இல்லார்;
அருமையாம் நிலையில் நின்றார்; அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார்; இவரை நீ அடைவாய்" என்று - 1.5.196
343 - நாதனார் அருளிச் செய்ய நம்பி ஆரூரர்" நான் இங்கு
ஏதந் தீர் நெறியைப் பெற்றேன்" என்றெதிர் வணங்கிப் போற்ற
" நீதியால் அவர்கள் தம்மைப் பணிந்து நீ நிறை சொன் மாலை
கோதிலா வாய்மையாலே பா"டென அண்ணல் கூற. - 1.5.197
344 - தன்னை ஆளுடைய நாதன் தான் அருள் செய்யக் கேட்டுச்
சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர்
"இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார்
பன்னுபா மாலை பாடும் பரிசு எனக்கு அருள் செய்" என்ன. - 1.5.198
345 - தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள் தன் திருப் பாகன்
அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால்
" தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று
"எல்லையில் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி" என்றார். - 1.5.199
346 - மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர்
சென்னியுற அடி வணங்கித் திருவருள் மேல் கொள் பொழுதில்
முன்னம் மால் அயன் அறியா முதல்வர் தாம் எழுந்து அருள
அந் நிலை கண்டு அடியவர் பால் சார்வதனுக்கு அணைகின்றார். - 1.5.200
347 - தூரத்தே திருக் கூட்டம் பல முறையால் தொழுது அன்பு
சேரத் தாழ்ந்து எழுந்து அருகு சென்று எய்தி நின்று அழியா
வீரத்தார் எல்லார்க்கும் தனித் தனி வேறு அடியேன் என்று
ஆர்வத்தால் திருத் தொண்டத் தொகைப் பதிகம் அருள் செய்வார். - 1.5.201
348 - தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆகத் தமிழ் மாலைச்
செம் பொருளால் திருத் தொண்டத் தொகை ஆன திருப் பதிகம்
உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகேத்த
எம் பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார். - 1.5.202
349 - உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த
நம்பி ஆரூரர் திருக் கூட்டத்தின் நடுவணைந்தார்
தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே
எம்பிரான் தமர்கள் திருத் தொண்டு ஏத்தல் உறுகின்றேன். - 1.5.203
திருமலைச் சருக்கம் முற்றிற்று.
சருக்கம் ஒன்றுக்குத் திருவிருத்தம் - 349
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2. தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
2. 1 தில்லை வாழ் அந்தணர் புராணம்
திருச்சிற்றம்பலம்
350 |
ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகிச்
சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி - 2.1.1 |
351 - கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிறத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி போற்றி - 2.1.2
352 - போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம்
போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும்
ஆற்றினார் பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார் - 2.1.3
353 - பொங்கிய திருவில் நீடும் பொற்புடைப் பணிகள் ஏந்தி
மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும்
தங்களுக்கு ஏற்ற பண்பில் தரும் பணித் தலை நின்று உய்த்தே
அங்கணர் கோயில் உள்ளா அகம் படித் தொண்டு செய்வார் - 2.1.4
354 - வரு முறை எரி மூன்று ஓம்பி மன்னுயிர் அருளால் மல்க
தருமமே பொருளாக் கொண்டு தத்துவ நெறியில் செல்லும்
அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார்
திரு நடம் புரிவார்க்கு ஆளாம் திருவினால் சிறந்த சீரார் - 2.1.5
355 - மறுவிலா மரபின் வந்து மாறிலா ஒழுக்கம் பூண்டார்
அறு தொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கி உள்ளார்
உறுவது நீற்றின் செல்வம் எனக் கொளும் உள்ளம் மிக்கார்
பெறுவது சிவன் பால் அன்பாம் பேறு எனப் பெருகி வாழ்வார் - 2.1.6
356 - ஞானமே முதலாம் நான்கும் நவை அறத் தெரிந்து மிக்கார்
தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார் - 2.1.7
357 - செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனார்
மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை
இம்மையே பெற்று வாழ்வார் இனிப் பெறும் பேறு ஒன்று இல்லார்
தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார் - 2.1.8
358 - இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலாம் எல்லைத்தாமோ
தென் தமிழ்ப் பயனாய் உள்ள திருத் தொண்டத் தொகை முன் பாட
அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல்
முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றால் - 2.1.9
359 - அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம்
புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ
நிகழ் திரு நீல கண்டக் குயவனார் நீடு வாய்மை
திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம் - 2.1.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.2. திருநீலகண்ட நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
360 |
வேதியர் தில்லை மூதூர் வேட் கோவர் குலத்து வந்தார்
மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே
ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்து ஆடும்
நாதனார் கழல்கள் வாழ்தி வழிபடும் நலத்தின் மிக்கார் - 2.2.1 |
361 - பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனற் சடை முடியார்க்கு அன்பர்
மெய் அடியார் கட்கு ஆன செயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றும் செய்கை மனை அறம் புரிந்து வாழ்வார்
சைவ மெய்த் திருவின் சார்வே பொருள் எனச் சாரு நீரார் - 2.2.2
362 - அளவிலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி
வளரிளம் திங்கள் கண்ணி மன்றுளார் அடியார்க்கு என்றும்
உள மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார் - 2.2.3
363 - அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததி கற்பின் மிக்கார்
புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய்
தவ நின்று அடுத்தது என்னத் தகைந்து தான் தரித்தது என்று
சிவன் எந்தை கண்டம் தன்னைத் திரு நீல கண்டம் என்பார் - 2.2.4
364 - ஆன தம் கேள்வர் அங்கோர் பரத்தை பால் அணைந்து நண்ண
மானமுன் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய எல்லாஞ் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்
தேனலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார் - 2.2.5
365 - மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
பூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில்
தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம் என்றார் - 2.2.6
366 - ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார் - 2.2.7
367 - கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்
பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய
இல் புறம்பு ஒழியாது அங் கண் இருவரும் வேறு வைகி
அன்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார் - 2.2.8
368 - இளமையின் மிக்குளார்கள் இருவரும் அறிய நின்ற
அளவில் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல
வள மலி இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயார் - 2.2.9
369 - இந் நெறி ஒழுகும் நாளில் எரி தளர்ந்தது என்ன நீண்ட
மின்னொளிர் சடையோன் தானுந் தொண்டரை விளக்கங் காண
நன்னெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும்
அந் நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி - 2.2.10
370 - கீள் ஒடு கோவணம் சாத்திக் கேடு இலா
வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மெல்
தோளொடு மார்பிடைத் துவளும் நூலுடன்
நீளொளி வளர் திரு முண்ட நெற்றியும் - 2.2.11
371 - நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடுங் கதிர் முறுவல் வெண்ணிலவும் மேம்பட
இடும் பலிப் பாத்திரம் ஏந்து கையராய்
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார் - 2.2.12
372 - நண்ணிய தவச் சிவ யோக நாதரைக்
கண்ணுற நோக்கிய காதல் அன்பர் தாம்
புண்ணியத் தொண்டராம் என்று போற்றி செய்து
எண்ணிய வகையினால் எதிர் கொண்டு ஏத்தினார் - 2.2.13
373 - பிறை வளர் சடை முடிப் பிரானைத் தொண்டர் என்று
உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட
முறைமையின் வழி பட மொழிந்த பூசைகள்
நிறை பெரு விருப்பொடு செய்து நின்ற பின் - 2.2.14
374 - எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர்
வம்புலா மலர்ச் சடை வள்ளல் தொண்டனார்
உம்பர் நாயகனும் இவ்வோடு நின்பால் வைத்து
நம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று - 2.2.15
375 - தன்னை ஒப்பு அரியது தலத்துத் தன் உழைத்
துன்னிய யாவையும் தூய்மை செய்வது
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
இன்ன தன்மையது இது வாங்கு நீ என - 2.2.16
376 - தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய
மல்கு சீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக் கொண்டு
ஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும்
எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார் - 2.2.17
377 - வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள்
நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்
உய்த்து உடன் போய் விடை கொண்டு மீண்டனர்
அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார் - 2.2.18
378 - சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த
கோலமார் ஓடு தன்னைக் குறி இடத்து அகலப் போக்கிச்
சீலமார் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர் தம்பால்
வாலி தாம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார் - 2.2.19
379 - வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து
சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப
முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு
தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான் - 2.2.20
380 - என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு
சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி
நின்றவர் தம்மைக் கேட்டார் தேடியும் காணார் மாயை
ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார் - 2.2.21
381 - மறையவன் ஆகி நின்ற மலைமகள் கேள்வன் தானும்
உறை உளில் புக்கு நின்ற ஒரு பெருந் தொண்டர் கேட்ட
இறையில் இங்கு எய்தப் புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து
கறை மறை மிடற்றினானைக் கை தொழுது உரைக்கல் உற்றார் - 2.2.22
380 - இழையணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன
விழை தகும் ஓடு வைத்த வேறு இடம் தேடிக் காணேன்
பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இப்
பிழையினைப் பொறுக்க வேண்டும் பெரும என்று இறைஞ்சி நின்றார் - 2.2.23
383 - சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி
என்னிது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றிப்
பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினுங் கொள்ளேன் போற்ற
முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன் - 2.2.24
384 - கேடு இலாப் பெரியோய் என்பால் வைத்தது கெடுதலாலே
நாடியும் காணேன் வேறு நல்லது ஓர் ஓடு சால
நீடு செல்வது தான் ஒன்று தருகிறேன் எனவும் கொள்ளாது
ஊடி நின்று உரைத்தது என் தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன - 2.2.25
385 - ஆவதென் உன்பால் வைத்த அடைக்கலப் பொருளை வௌவிப்
பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய்
யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றிப்
போவதும் செய்யேன் என்றான் புண்ணியப் பொருளாய் நின்றான் - 2.2.26
386 - வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை
உளத்தினும் களவிலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன
களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனைப் பற்றிக்
குளத்தினில் மூழ்கிப் போ என்று அருளினான் கொடுமை இல்லான் - 2.2.27
387 - ஐயர் நீர் அருளிச் செய்த வண்ணம் யான் செய்வதற்குப்
பொய்யில் சீர்ப் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன
மையறு சிறப்பின் மிக்க மனையவள் தன்னைப் பற்றி
மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார் - 2.2.28
388 - கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர் நின்ற
வெங் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார்
எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை
பொங்கு புனல் யான்மூழ்கித் தருகின்றேன் போதும் என - 2.2.29
389 - தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி
அந் தளிர்ச் செங் கைப்பற்றி அலை புனலில் மூழ்காதே
சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள்
வந்து இருந்த பேர் அவையில் மன்னுவன் யான் எனச் சென்றார் - 2.2.30
390 - நல் ஒழுக்கம் தலை நின்றார் நான் மறையின் துறை போனார்
தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்தவையில்
எல்லை இலான் முன் செல்ல இருந்தொண்டர் அவர் தாமும்
மல்கு பெரும் காதலினால் வழக்கு மேலிட்டு அணைந்தார் - 2.2.31
391 - அந்தணன் ஆம் எந்தை பிரான் அரு மறையோர் முன் பகர்வான்
இந்த வேட்கோவன்பால் யான் வைத்த பாத்திரத்தைத்
தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி
வந்து மூழ்கியும் தாரான் வலி செய்கின்றான் என்றார் - 2.2.32
392 - நறை கமழும் சடை முடியும் நாற்றோளும் முக் கண்ணும்
கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும்
மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரை செய்வார்
நிறையுடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என - 2.2.33
393 - நீணிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு
பேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன்
பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று
சேணிடையும் தீங்கு அடையாத் திருத்தொண்டர் உரைசெய்தார் - 2.2.34
394 - திருவுடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின்
உருவுடை இவர் தாம் வைத்த ஓட்டினைக் கொடுத்தீர் ஆனால்
தருமிவர் குளத்தில் மூழ்கித் தருக என்று உரைத்தார் ஆகில்
மருவிய மனைவியொடு மூழ்குதல் வழக்கே என்றார் - 2.2.35
395 - அருந் தவத் தொண்டர் தாமும் அந்தணர் மொழியக் கேட்டுத்
திருந்திய மனைவியாரைத் தீண்டாமை செப்ப மாட்டார்
பொருந்திய வகையால் மூழ்கித் தருகின்றேன் போதும் என்று
பெருந் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையைச் சார்ந்தார் - 2.2.36
396 - மனைவியார் தம்மைக் கொண்டு மறைச் சிவ யோகியார் முன்
சினவிடைப் பாகர் மேவும் திருப்புலீச் சுரத்து முன்னர்
நனை மலர்ச் சோலை வாவி நண்ணித் தம் உண்மை காப்பார்
புனை மணி வேணுத் தண்டின் இரு தலை பிடித்துப் புக்கார் - 2.2.37
397 - தண்டிரு தலையும் பற்றிப் புகும் அவர் தம்மை நோக்கி
வெண் திரு நீற்று முண்ட வேதியர் மாதைத் தீண்டிக்
கொண்டு உடன் மூழ்கீர் என்னக் கூடாமை பாரோர் கேட்கப்
பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார் - 2.2.38
398 - வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி யாரும்
மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்றுத்
தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியுந் தெய்வப்
பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற - 2.2.39
399 - அந்நிலை அவரைக் காணும் அதிசயம் கண்டார் எல்லாம்
முன்நிலை நின்ற வேத முதல் வரைக் கண்டார் இல்லை
இந்நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார்
துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கொண்டார் - 2.2.40
400 - கண்டனர் கைகளாரத் தொழுதனர் கலந்த காதல்
அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்தம் பெருமை நோக்கி
விண்டரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார் தம்மைத்
தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார் - 2.2.41
401 - மன்றுளே திருக் கூத்து ஆடி அடியவர் மனைகள் தோறும்
சென்றவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும்
வென்ற ஐம் புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்பால்
என்றும் இவ் இளமை நீங்காது என்று எழுந்து அருளினாரே - 2.2.42
402 - விறலுடைத் தொண்டனாரும் வெண்ணகைச் செவ்வாய் மென் தோள்
அறல் இயல் கூந்தல் ஆளாம் மனைவியும் அருளின் ஆர்ந்த
திறலுடைச் செய்கை செய்து சிவலோகம் அதனை எய்திப்
பெறல் அரும் இளமை பெற்றுப் பேர் இன்பம் உற்றார் அன்றே - 2.2.43
403 - அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த
மயலில் சீர்த் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்திப்
புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய்யில்
செயல் இயற் பகையார் செய்த திருத் தொண்டு செப்பல் உற்றேன். - 2.2.44
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.3 இயற்பகை நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
404 |
சென்னி வெண்குடை நீடு அநபாயன் திருக் குலம் புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்துப்
பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி தன்னையும் புனித மாக்குவதோர்
நன்னெடும் பெரும் தீர்த்த முன்னுடைய நலம் சிறந்தது வளம் புகார் நகரம் - 2.3.1 |
405 - அக் குலப் பதிக் குடி முதல் வணிகர் அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்
செக்கர் வெண் பிறைச் சடையவர் அடிமைத் திறத்தின் மிக்கவர் மறைச் சிலம்படியார்
மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே
இக் கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற் பகையார் - 2.3.2
406 - ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவிலாத ஓர் உளம் நிறை அருளால்
நீறு சேர் திரு மேனியார் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறு இலாத நன்னெறியினில் விளங்கும் மனை அறம் புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே எனப் பேணி வாழ் நாளில் - 2.3.3
407 - ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்துள் நின்று ஆடுவார் உம்பர்
நாயகிக்கும் அஃது அறியவோ பிரியா நங்கைதான் அறியாமையோ அறியோம்
தூய நீறு பொன் மேனியில் விளங்கத் தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்
மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மாறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்- 2.3.4
408 - வந்து தண்புகார் வணிகர் தம் மறுகின் மருங்கு இயற் பகையார் மனை புகுந்த
எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால்
சிந்தை அன்பொடு சென்று எதிர் வணங்கிச் சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து
முந்தை எம் பெரும் தவத்தினாலென்கோ முனிவர் இங்கு எழுந்து அருளியது என்றார் - 2.3.5
409 - என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அக் கைதவ மறையோர்
கொன்ற வார்சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் எனக் கொண்டே
ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும் பாலொன்று வேண்டி
இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார் - 2.3.6
410 - என்ன அவ்வுரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில்
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள் செயும் என்ன
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அங்கணர் எதிரே
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரை செய்வார் - 2.3.7
411 - இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம் பிரான் செய்த பேறு எனக்கு என்னாக்
கதுமெனச் சென்று தம் மனைவாழ் வாழ்க்கை கற்பின் மேம்படு காதலி யாரை
விதி மணக் குல மடந்தை இன்றுனை இம் மெய்த் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன
மது மலர்க் குழலாள் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார் - 2.3.8
412 - இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது
ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று
தன் தனிப்பெருங் கணவரை வணங்கத் தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர் வணங்க
சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள் - 2.3.9
413 - மாது தன்னை முன் கொடுத்த மாதவர் தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே
யாது நான் இனிச் செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர் தம் எதிர் நோக்கி
சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல் தன்னை யான் தனிக் கொடு போகக்
காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார் - 2.3.10
414 - என்று அவர் அருளிச் செய்ய யானே முன் செய் குற்றேவல்
ஒன்றியது தன்னை என்னை உடையவர் அருளிச் செய்ய
நின்றது பிழையாம் என்று நினைந்து வேறு இடத்துப் புக்குப்
பொன் திகழ் அறுவை சாத்தி பூங்கச்சுப் பொலிய வீக்கி - 2.3.11
415 - வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர் வணங்கி மிக்க
ஆளரி ஏறு போல்வார் அவரை முன் போக்கிப் பின்னே
தோளிணை துணையே ஆகப் போயினார் துன்னினாரை
நீளிடைப் பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார் - 2.3.12
416 - மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும்
இனையது ஒன்றி யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால்
புனை இழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன் என்று
துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார் - 2.3.13
417 - வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க
காலென விசையில் சென்று கடிநகர் புறத்துப் போகிப்
பாலிரு மருங்கும் ஈண்டிப் பரந்த ஆர்வம் பொங்க
மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர் வளைத்துக் கொண்டார் - 2.3.14
418 - வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார்
கழி பெரும் காதல் காட்டிக் காரிகை உடன் போம் போதில்
அழிதகன் போகேல் ஈண்டவ் வருங் குலக் கொடியை விட்டுப்
பழிவிட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார் - 2.3.15
419 - . மறை முனி அஞ்சினான் போல் மாதினைப் பார்க்க மாதும்
இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ன
அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லாம்
தறை இடைப் படுத்துகின்றேன் தளர்ந்து அருள் செய்யேல் என்று - 2.3.16
420 - பெரு விறல் ஆளி என்னப் பிறங்கு எரி சிதற நோக்கிப்
பரிபவப் பட்டு வந்த படர் பெருஞ் சுற்றத் தாரை
ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப் போய்ப் பிழையும் அன்றேல்
எரி சுடர் வாளில் கூறாய்த் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார் - 2.3.17
421 - ஏட! நீ என் செய்தாயால்? இத்திறம் இயம்பு கின்றாய்
நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்று
பாடவம் உரைப்பது உன்றன் மனைவியைப் பனவற்கு ஈந்தோ
கூடவே மடிவது அன்றிக் கொடுக்க யாம் ஓட்டோ ம் என்றார் - 2.3.18
422 - மற்றவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த
செற்ற முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி
முற்று நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக் கொண்டு
நற்றவர் தம்மைப் போக விடுவேன் என்று எழுந்தார் நல்லோர் - 2.3.19
423 - நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அச் சுற்றத்தாரும்
சார்ந்தவர் தம் முன் செல்லார் தையலைக் கொண்டு பெற்றம்
ஊர்ந்தவர் படிமேற் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி
ஆர்ந்த வெஞ் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர் தடுத்தார் (அன்றே. - 2.3.20
424 - சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி
வன்றுணை வாளே யாகச் சாரிகை மாறி வந்து
துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து
வென்றடு புலியேறு அன்ன அமர் விளையாட்டில் மிக்கார் - 2.3.21
425 - மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள்
வேண்டிய திசைகள் தோறும் வேறு வேறு அமர் செய் போழ்தில்
ஆண்டகை வீரர் தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகிக்
காண்டகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார் - 2.3.22
426 - சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும்
விரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும் எங்கும்
எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றித்
திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர் - 2.3.23
427 - மாடலை குருதி பொங்க மடிந்த செங் களத்தின் நின்றும்
ஆடுறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார் தம்மில்
ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார்
நீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார் - 2.3.24
428 - திருவுடை மனைவியாரைக் கொடுத்து இடைச் செறுத்து முன்பு
வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி
அருமறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம்
பொருவருங் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார் - 2.3.25
429 - இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை
பொரு திறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில்
அருமறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவித்
திரு மலி தோளினானை மீள் எனச் செப்பினானே - 2.3.26
430 - தவ முனி தன்னை மீளச் சொன்ன பின் தலையால் ஆர
அவன் மலர்ப் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று
புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன் தன்னை ஏத்தி
இவன் அருள் பெறப் பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார் - 2.3.27
431 - செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக
மை திகழ் கண்டன் எண்தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கிப்
பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று
மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல் உற்றான் - 2.3.28
432 - இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம்
அயர்ப்பு இலாதானே ஓலம் அன்பனே ஓலம் ஓலம்
செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்
மயக்கறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான் - 2.3.29
433 - அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன்
பிழைத்தவர் உளரேல் இன்னும் பெருவலி தடக்கை வாளின்
இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்தக்
குழைப் பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான் - 2.3.30
434 - சென்றவர் முனியைக் காணார் சேயிழை தன்னைக் கண்டார்
பொன்திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின் மேல் பொலிந்தது என்ன
தன்துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார்
நின்றிலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தினின்று எழுந்தார் நேர்ந்தார் - 2.3.31
435 - சொல்லுவது அறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி
வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி
எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கு அருள் செய்தாய் போற்றி
தில்லை அம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி என்ன - 2.3.32
436 - விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை
எண்ணிய உலகு தன்னில் இப்படி நம்பால் அன்பு
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய்
நண்ணிய மனைவி யோடு நம்முடன் போதுக என்று - 2.3.33
437 - திருவளர் சிறப்பின் மிக்க திருத் தொண்டர் தமக்குந் தேற்றம்
மருவிய தெய்வக் கற்பின் மனைவியார் தமக்குந் தக்க
பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்தப்
பொரு விடைப் பாகர் மன்னும் பொற் பொது அதனுள் புக்கார் - 2.3.34
438 - வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்ப
ஞான மா முனிவர் போற்ற நல மிகு சிவலோகத்தில்
ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார்
ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார் - 2.3.35
439 - இன்புறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே
துன்புறாது உதவும் தொண்டர் பெருமையைத் தொழுது வாழ்த்தி
அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடு
மன்புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல் உற்றேன் - 2.3.36
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.4 இளையான் குடி மாற நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
440 |
அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்
தம்பிரான் அடிமைத் திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற் குலம் செய் தவத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப் பதி மாறனார் - 2.4.1 |
441 - ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லதொர் செல்வமும்
நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்ததோர்
சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும்
பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார் - 2.4.2
442 - ஆரம் என்பு புனைந்த ஐயர் தம் அன்பர் என்பதோர் தன்மையால்
நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன்
கூர வந்து எதிர் கொண்டு கைகள் குவித்து நின்று செவிப் புலத்து
ஈரம் மென் மதுரப் பதம் பரிவு எய்த முன்னுரை செய்தபின் - 2.4.3
443 - கொண்டு வந்து மனைப் புகுந்து குலாவு பாதம் விளக்கியே
மண்டு காதலின் ஆதனத்து இடைவைத்து அருச்சனை செய்த பின்
உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பு இலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துளார் - 2.4.4
444 - ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு இலார் உளம் மகிழவே
நாளும் நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின் நன்மையால்
நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண்
தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள் - 2.4.5
445 - செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வது அன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள் தொறும் மாறி வந்து
ஒல்லையில் வறுமைப் பதம் புக உன்னினார் தில்லை மன்னினார் - 2.4.6
446 - இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான் குடி
மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும்
தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின்
முன்னை மாறில் திருப்பணிக் கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார் - 2.4.7
447 - மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயனான அக்
கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினர்
பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாளுடன் இன்றி ஓர்
நற்றவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார் - 2.4.8
448 - மாரிக் காலத்து இரவினில் வைகியோர்
தாரிப்பு இன்றிப் பசி தலைக் கொள்வது
பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற
வேரித்து ஆரான் விருந்து எதிர் கொண்டனன் - 2.4.9
449 - ஈர மேனியை நீக்கி இடங் கொடுத்து
ஆர இன்னமுது ஊட்டுதற்கு ஆசையால்
தார மாதரை நோக்கித் தபோதனர்
தீரவே பசித்தார் செய்வது என் என்று - 2.4.10
450 - . நமக்கு முன்பு இங்கு உணவிலை ஆயினும்
இமக் குலக்கொடி பாகர்க்கு இனியவர்
தமக்கு நாம் இன் அடிசில் தகவுற
அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என - 2.4.11
451 - . மாது கூறுவாள் மற்று ஒன்றுங் காண்கிலேன்
ஏதிலாரும் இனித் தருவார் இல்லை
போதும் வைகிற்றுப் போம் இடம் வேறில்லை
தீது செய்வினை யேற்கு என் செயல் - 2.4.12
452 - .செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்நெல்
மல்லல் நீர் முளை வாரிக் கொடு வந்தால்
வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று
அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வுற - 2.4.13
453 - . மற்ற மாற்றம் மனைவியார் கூற முன்
பெற்ற செல்வம் எனப் பெரிது உள் மகிழ்ந்து
உற்ற காதலினால் ஒருப் பட்டனர்
சுற்று நீர் வயல் செல்லத் தொடங்குவார் - 2.4.14
454 - .பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து
அருகு நாப்பண் அறிவருங் கங்குல் தான்
கருகு மை இருளின் கணம் கட்டு விட்டு
உருகு கின்றது போன்றது உலகு எலாம் - 2.4.15
455 - .எண்ணும் இவ் உலகத்தவர் யாவரும்
துண்ணெனும்படி தோன்ற முன் தோன்றிடில்
வண்ண நீடிய மைக்குழம்பாம் என்று
நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து - 2.4.16
456 - .உள்ளம் அன்பு கொண்டு ஊக்கவோர் பேரிடாக்
கொள்ள முன் கவித்துக் குறியின் வழிப்
புள்ளும் உறங்கும் வயல் புகப் போயினார்
வள்ளலார் இளையான் குடி மாறனார் - 2.4.17
457 - .காலினால் தடவிச் சென்று கைகளால்
சாலி வெண் முளை நீர் வழிச் சார்ந்தன
கோலி வாரி இடா நிறையக் கொண்டு
மேல் எடுத்துச் சுமந்து ஒல்லை மீண்டார் - 2.4.18
458 - .வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கிச்
சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி
வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர்
அந்தமில் மனையில் நீடும் அலகினை அறுத்து வீழ்த்தார் - 2.4.19
459 - . முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்துப் பதம் முன் கொள்ள
வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து
வெறுப்பில் இன் அடிசில் ஆக்கிமேம் படு கற்பின் மிக்கார்
கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினார் கணவனாரை - 2.4.20
460 - .வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே
அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று
குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப்
பழி முதல் பறிப்பார் போலப் பறித்து அவை கறிக்கு நல்க - 2.4.21
461 - மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து
புனல் இடைக் கழுவித் தக்க புனித பாத்திரத்துக் கைம்மை
வினையினால் வேறு வேறு கறி அமுது ஆக்கிப் பண்டை
நினைவினால் குறையை நேர்ந்து திருவமுது அமைத்து நின்று - 2.4.22
462 - கணவனார் தம்மை நோக்கிக் கறி அமுது ஆன காட்டி
இணை இலாதாரை ஈண்ட அமுது செய்விப்போம் என்ன
உணவினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி
அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார் - 2.4.23
463 - அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்பால்
எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று
தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்துத் தோன்றச்
செழுந் திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார் - 2.4.24
464 - மாலயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆகச்
சாலவே மயங்குவார்க்குச் சங்கரன் தான் மகிழ்ந்தே
ஏலவார் குழலாள் தன்னோடு இடப வாகனனாய் தோன்றிச்
சீலமார் பூசை செய்த திருத் தொண்டர் தம்மை நோக்கி - 2.4.25
465 - அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும்
என் பெரும் உலகம் எய்தி இருநிதிக் கிழவன் தானே
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப
இன்பம் ஆர்ந்து இருக்க என்றே செய்தான் எவர்க்கும் மிக்கான் - 2.4.26
466 - இப்பரிசு இவர்க்குத் தக்க வகையினால் இன்பம் நல்கி
முப்புரம் செற்றார் அன்பர் முன்பு எழுந்து அருளிப் போனார்
அப் பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு
மெய்ப் பொருள் சோதி வேந்தன் செயலினை விளம்பல் உற்றேன் - 2.4.27
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.5. மெய்ப் பொருள் நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
467 |
சேதி நன்னாட்டு நீடு திருக் கோவலூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான்
வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார் - 2.5.1 |
468 - அரசியல் நெறியின் வந்த அறநெறி வழாமல் காத்து
வரை நெடும்ந்தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி
உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மையினின் மிக்கார்
திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார் - 2.5.2
469 - மங்கையைப் பாகமாக உடையவர் மன்னும் கோயில்
எங்கணும் பூசை நீடி ஏழிசைப் பாடல் ஆடல்
பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள் நாயகருக்கு அன்பர் தாளலால் சார்பு ஒன்று இல்லார் - 2.5.3
470 - தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று
நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவு அறக் கொடுத்து வந்தார் - 2.5.4
471 - இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேற்கொண்டு
பொன் அணி ஓடை யானைப் பொரு பரி காலாள் மற்றும்
பன் முறை இழந்து தோற்றுப் பரிபவப் பட்டுப் போனான் - 2.5.5
472 - இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப் பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும்
அப்பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆகச்
செப்பரு நிலைமை எண்ணித் திருக் கோவலூரில் சேர்வான் - 2.5.6
473 - மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப்
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன் - 2.5.7
474 - மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம் தோறும்
கோதை சூழ் அளக பாரக் குழைக் கொடி ஆட மீது
சோதி வெண் கொடிகள் ஆடுஞ் சுடர் நெடு மறுகில் போகிச்
சேயதிர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான் - 2.5.8
475 - கடை உடைக் காவலாளர் கை தொழுது ஏற நின்றே
உடையவர் தாமே வந்தார் உள் எழுந்து அருளும் என்னத்
தடை பல புக்க பின்பு தனித் தடை நின்ற தத்தன்
இடை தெரிந்து அருள வேண்டும் துயில் கொள்ளும் இறைவன் என்றான் - 2.5.9
476 - என்று அவன் கூறக் கேட்டே யான் அவற்கு உறுதி கூற
நின்றிடு நீயும் என்றே அவனையும் நீக்கிப் புக்குப்
பொன் திகழ் பள்ளிக் கட்டில் புரவலன் துயில மாடே
மன்றலங் குழல் மென் சாயல் மா தேவி இருப்பக் கண்டான் - 2.5.10
477 - கண்டு சென்று அணையும் போது கதும் என இழிந்து தேவி
வண்டலர் மாலையானை எழுப்பிட உணர்ந்து மன்னன்
அண்டர் நாயகனார் தொண்டராம் எனக் குவித்த செங்கை
கொண்டு எழுந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று - 2.5.11
478 - மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன
இங்கு எழுந்து அருளப் பெற்றது என் கொலோ என்று கூற
உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்கும் இலாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான் - 2.5.12
479 - பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள் செய்த இந்த
மாறிலா ஆகமத்தை வாசித்து அருள வேண்டும் என்ன
நாறு பூங் கோதை மாது தவிரவே நானும் நீயும்
வேறு இடத்து இருக்க வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன் - 2.5.13
480 - திருமகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கிப்
பரிவுடன் விரைய அந்தப்புரத்திடைப் போக ஏவித்
தரு தவ வேடத்தானைத் தவிசின் மேல் இருத்தித் தாமும்
இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள் செய்யும் என்றான் - 2.5.14
481 - கைத் தலத்து இருந்த வஞ்சக் கவளிகை மடி மேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்த அவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான் முன் நினைத்த அப் பரிசே செய்ய
மெய்த் தவ வேடமே மெய்ப்பொருள் எனத் தொழுது வென்றார் - 2.5.15
482 - மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்
இறைப் பொழுதின் கண் கூடி வாளினால் எறியல் உற்றான்
நிறைத்த செங் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப் படும் அளவில் தத்தா நமர் எனத் தடுத்து வீழ்ந்தார் - 2.5.16
483 - வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப் பட்ட
தாதனாந் தத்தன் தானும் தலையினால் வணங்கித் தாங்கி
யாது நான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக
மீதிடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார் - 2.5.17
484 - அத் திறம் அறிந்தார் எல்லாம் அரசனைத் தீங்கு செய்த
பொய்த் தவன் தன்னைக் கொல்வோம் எனப் புடை சூழ்ந்த போது
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான்
இத் தவன் போகப் பெற்றது இறைவனது ஆணை என்றான் - 2.5.18
485 - அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகன்று நீங்கச்
செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து
கை வடி நெடுவாள் ஏந்தி ஆளுறாக் கானஞ் சேர
வெவ் வினைக் கொடியோன் தன்னை விட்ட பின் மீண்டு போந்தான் - 2.5.19
486 - மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீது இலா நெறியில் விட்ட
சொல் திறம் கேட்க வேண்டிச் சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான் கோமகன் குறிப்பில் நின்றான் - 2.5.20
487 - சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு
வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற
இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய வல்லார் என்று
நின்றவன் தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார் - 2.5.21
488 - அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும்
விரவிய செய்கை தன்னை விளம்புவார் விதியினாலே
பரவிய திரு நீற்று அன்பு பாது காத்து உய்ப்பீர் என்று
புரவலர் மன்றுள் ஆடும் பூங் கழல் சிந்தை செய்தார் - 2.5.22
489 - தொண்டனார்க்கு இமயப் பாவை துணைவனார் அவர் முன் தம்மைக்
கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்தருளி மிக்க
அண்ட வானவர் கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேரக்
கொண்டவாறு இடை அறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார் - 2.5.23
490 - இன்னுயிர் செகுக்கக் கண்டும் எம்பிரான் அன்பர் என்றே
நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை தன்னில்
என் உரை செய்தேன் ஆக இகல் விறன் மிண்டர் பொற் தாள்
சென்னி வைத்து அவர் முன் செய்த திருத் தொண்டு செப்பல் உற்றேன் - 2.5.24
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.6. விறன்மிண்ட நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
491 |
விரை செய் நறும் பூந் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவிப்
பரசுபெறு மா தவ முனிவன் பரசு ராமன் பெறு நாடு
திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும்
வரையின் வளனும் உடன் பெருகி மல்கு நாடு மலை நாடு - 2.6.1 |
492 - வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென் கரும்பில் படு முத்தும்
வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும்
மூரல் எனச் சொல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும்
சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர் - 2.6.2
493 - என்னும் பெயரின் விளங்கி உலகேறும் பெருமை உடையது தான்
அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை
சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமைத் தலை நின்றார்
மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபிற் பெரியோர் வாழ் பதியாம் - 2.6.3
494 - அப் பொன் பதியின் இடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார்
செப்பற்கு அரிய பெரும் சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி
எப் பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார்
மெய்ப் பத்தர்கள் பால் பரிவுடையார் எம்பிரானார் விறன் மிண்டர் - 2.6.4
495 - நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த
பதிகள் எங்கும் கும்பிட்டுப் படரும் காதல் வழிச் செல்வார்
முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திருக் கூட்டத்து
எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப் பெற்றார் - 2.6.5
496 - பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும்
சென்று ஆள் உடையார் அடியவர் தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி
வன் தாள் மேருச் சிலை வளைத்துப் புரங்கள் செற்ற வைதிகத் தேர்
நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார் - 2.6.6
497 - திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியன் இடைப் பொலிந்து
மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து அணையாது
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகென்று உரைப்பச் சிவன் அருளால்
பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார் - 2.6.7
498 - சேண் ஆர் மேருச் சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம்
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மைப் பிறை சூடிப்
பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர் பால்
கோணா அருளைப் பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார் - 2.6.8
499 - ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நன் னெறியின்
சீலம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பாடச் செழு மறைகள்
ஓலம் இடவும் உணர்வு அரியார் உடனாம் உளது என்றால்
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தாரார் - 2.6.9
500 - ஒக்க நெடு நாள் இவ் உலகில் உயர்ந்த சைவப் பெருந் தன்மை
தொக்க நிலைமை நெறி போற்றித் தொண்டு பெற்ற விறன் மிண்டர்
தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல்ற்கீழ்
மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார் - 2.6.10
501 - வேறு பிரிதென் திருத் தொண்டத் தொகையால் உலகு விளங்க வரும்
பேறு தனக்குக் காரணராம் பிரானார் விறன் மிண்டரின் பெருமை
கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேற் கொண்டே
ஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திருத் தொண்டு அறைகுவாம் - 2.6.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.7. அமர் நீதி நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
502 |
சீரில் நீடிய செம்பியர் பொன்னி நன்னாட்டுக்
காரின் மேவிய களி அளி மலர்ப் பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழு மணிவீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை - 2.7.1 |
503 - மன்னும் அப் பதி வணிகர் தம் குலத்தினில் வந்தார்
பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூந்துகில் முதலா
எந் நிலத்தினும் உள்ளன வரு வளத்து இயல்பால்
அந் நிலைக்கண் மிக்கவர் அமர் நீதியார் என்பார் - 2.7.2
504 - சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார்
அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்துக்
கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார் - 2.7.3
505 - முக்கண் நக்கராம் முதல்வனார் அவர் திரு நலூர்
மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கித்
தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார்
தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர் - 2.7.4
506 - மருவும் அன்பொடு வணங்கினர் மணி கண்டர் நல்லூர்த்
திரு விழா அணி சேவித்துத் திரு மடத்து அடியார்
பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி
உருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாள் இடை ஒருநாள் - 2.7.5
507 - பிறைத் தளிர் சடைப் பெருந்தகைப் பெரும் திரு நல்லூர்க்
கறைக் களத்து இறை கோவணப் பெருமை முன் காட்டி
நிறைத்த அன்புடைத் தொண்டர்க்கு நீடருள் கொடுப்பான்
மறைக் குலத்தொரு பிரமசாரியின் வடிவு ஆகி - 2.7.6
508 - செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடிச் சிகையும்
சைவ வெண் திரு நீற்று முண்டகத்து ஒளித் தழைப்பும்
மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும்
கையில் மன்னிய பவித்திர மரகதக் கதிரும் - 2.7.7
509 - முஞ்சி நாணுற முடிந்தது சாத்திய அரையில்
தஞ்ச மா மறைக் கோவண ஆடையின் அசைவும்
வஞ்ச வல் வினைக் கறுப்பறும் மனத்து அடியார்கள்
நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீணிலம் பொலிய - 2.7.8
510 - கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருகத்
தொண்டர் அன்பு எனும் தூ நெறி வெளிப் படுப்பார் ஆய்த்
தண்டின் மீது திரு கோவணம் நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்து அமர் நீதியார் திரு மடம் குறுக - 2.7.9
511 - வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து
கடிது வந்து எதிர் வணங்கி இம் மடத்தினில் காணும்
படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ
அடியனேன் செய்தது என்றனர் அமர்நீதி அன்பர் - 2.7.10
512 - பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்கு
ஊணும் மேன்மையில் ஊட்டி நற் கந்தை கீள் உடைகள்
யாணர் வெண் கிழிக் கோவணம் ஈதல் கேட்டு உம்மைக்
காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன் - 2.7.11
513 - என்று தம்பிரான் அருள் செய இத் திரு மடத்தே
நன்று நான் மறை நற்றவர் அமுது செய்து அருளத்
துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால்
இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச - 2.7.12
514 - வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே
அணங்கு நீர்ப் பொன்னி ஆடி நான் வர மழை வரினும்
உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒரு வெண்
குணங் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்துக் கொடுப்பார் - 2.7.13
515 - ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறு உமக்கே
ஈங்கு நான் சொல்ல வேண்டுவது இல்லை நீர் இதனை
வாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதே
ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார் - 2.7.14
516 - கொடுத்த கோவணம் கைக் கொண்டு கோது இலா அன்பர்
கடுப்பில் இங்கு எழுந்து அருளும் நீர் குளித்து எனக் கங்கை
மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அம் மறையோர்
அடுத்த தெண்டிரைப் பொன்னி நீர் ஆட என்று அகன்றார் - 2.7.15
517 - தந்த கோவணம் வாங்கிய தனிப் பெருந் தொண்டர்
முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும்
கந்தை கீள் உடை கோவணம் அன்றி ஓர் காப்புச்
சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்தின் வைத்தார் - 2.7.16
518 - போன வேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கிப்
பானலந்துறைப் பொன்னி நீர் படிந்து வந்தாரோ
தூநறுஞ் சடைக் கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ
வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார் - 2.7.17
519 - கதிர் இளம் பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதில்
முதிரும் அன்பு உடைத் தொண்டர் தாம் முறைமையின் முன்னே
அதிக நன்மையின் அறு சுவைத் திருவமுது ஆக்கி
எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட நிறைந்த நூல் மார்பர் - 2.7.18
520 - தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி
மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம் நான் தந்த கோவணத்தைக்
கொண்டு வாரும் என்று உரைத்தனர் கோவணக் கள்வர் - 2.7.19
521 - ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி
எய்தி நோக்குறக் கோவணம் இருந்த வேறு இடத்தில்
மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன்
செய்தது என் என்று திகைத்தனர் தேடுவார் ஆனார் - 2.7.20
522 - பொங்கு வெண் கிழிக் கோவணம் போயின நெறி மேல்
சங்கை இன்றியே தப்பினது என்று தம் சரக்கில்
எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார் நின்றார்
அங்கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப் பட்டார் - 2.7.21
523 - மனைவி யாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்
இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து
நினைவது ஒன்று இலர் வருந்தினர் நிற்கவும் மாட்டார்
புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார் - 2.7.22
524 - அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தை
வைத்த இடத்து நான் கண்டிலேன் மற்றும் ஓர் இடத்தில்
உய்த்து ஒளித்தனர் இல்லை அஃது ஒழிந்தவாறு அறியேன்
இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன் என்று - 2.7.23
525 - வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன்
கீறு கோவணம் அன்று நெய்தமைத்தது கிளர் கொள்
நீறு சாத்திய நெற்றியீர் மற்றுது களைந்து
மாறு சாத்தி என் பிழை பொறுப்பீர் என வணங்க - 2.7.24
526 - நின்ற வேதியர் வெகுண்டு அமர் நீதியார் நிலைமை
நன்று சாலவும் நாள் இடை கழிந்ததும் அன்றால்
இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு
ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா - 2.7.25
527 - நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும்
சொல்லும் விதத்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ
ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று
எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான் - 2.7.26
528 - மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுளப்
பொறி கலங்கிய உணர்வினர் ஆய் முகம் புலர்ந்து
சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள் செய்வீர் அடியேன்
அறிய வந்தது ஒன்று என அடி பணிந்து அயர்வார் - 2.7.27
529 - செயத்தகும் பணி செய்வன் இக் கோவணம் அன்றி
நயத் தகுந்தன நல்ல பட்டு ஆடைகள் மணிகள்
உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்காப்
பயத்தொடுங்குலைந்து அடி மிசைப் பல முறை பணிந்தார் - 2.7.28
530 - பணியும் அன்பரை நோக்கி அப் பரம் பொருளானார்
தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று நீர் தந்த
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய
அணியும் கோவணம் நேர் தர அமையும் என்றான் - 2.7.29
531 - மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார்
அலர்ந்த வெண்ணிறக் கோவணம் அதற்கு நேராக
இலங்கு பூந் துகில் கொள்வதற்கு இசைந்து அருள் செய்யீர்
நலங் கொள் கோவணம் தரும் பரிசு யாதென நம்பர் - 2.7.30
532 - உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர்
கொடுத்ததாக முன் சொல்லும் அக் கிழிந்த கோவணநேர்
அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழாது
எடுத்து மற்று இதன் எடையிடும் கோவணம் என்றார் - 2.7.31
533 - நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்டக்
குன்ற வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார்
நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணத் தட்டு
ஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார் - 2.7.32
534 - நாடும் அன்பொடு நாயன்மார்க் களிக்க முன் வைத்த
நீடு கோவணம் அடைய நேராக ஒன்று ஒன்றாக்
கோடு தட்டின் மீது இடக் கொண்டு எழுந்தது கண்டு
ஆடு சேவடிக்கு அயரும் அற்புதம் எய்தி - 2.7.33
535 - உலகில் இல்லதோர் மாயை இக் கோவணம் ஒன்றுக்கு
அலகில் கோவணம் ஒத்தில என்று அதிசயத்துப்
பலவும் மென் துகில் பட்டுடன் இட இட உயர
இலகு பூந்துகிற் பொதிகளை எடுத்து மேல் இட்டார் - 2.7.34
536 - முட்டில் அன்பர் தம் அன்பிடுந் தட்டுக்கு முதல்வர்
மட்டு நின்ற தட்டு அருளொடு தாழ்வு உறும் வழக்கால்
பட்டொடும் துகில் அநேக கோடிகளிடும் பத்தர்
தட்டு மேற் படத் தாழ்ந்தது கோவணத் தட்டு - 2.7.35
537 - ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன்
தூ நறுந் துகில் வர்க்க நூல் வர்க்கமே முதலா
மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால்
ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச - 2.7.36
538 - மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே
இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என் கொல்
அங்கு மற்று உங்கள் தனங்களினாகிலும் இடுவீர்
எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது என்றார் - 2.7.37
539 - நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணித் திரளும்
பல் வகைத் திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும்
எல்லை இல் பொருள் சுமந்து அவர் இட இடக் கொண்டே
மல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர் - 2.7.38
540 - தவம் நிறைந்த நான் மறைப் பொருள் நூல்களால் சமைந்த
சிவன் விரும்பிய கோவணம் இடும் செழுந்தட்டுக்கு
அவனி மேலமர் நீதியார் தனமெலாம் அன்றிப்
புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ - 2.7.39
541 - நிலைமை மற்றது நோக்கிய நிகர் இலார் நேர் நின்று
உலைவில் பஃறனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன்
தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையில் ஏறிடப் பெறுவது உன் அருள் எனத் தொழுதார் - 2.7.40
542 - பொச்சமில்ல அடிமைத் திறம் புரிந்தவர் எதிர்நின்று
அச்ச முன்புற உரைத்தலும் அங்கணர் அருளால்
நிச்சயித்தவர் நிலையினைத் துலை எனுஞ் சலத்தால்
இச் சழக்கினின்று ஏற்றுவார் ஏறுதற்கு இசைந்தார் - 2.7.41
543 - மனம் மகிழ்ந்து அவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப்
புனை மலர்க் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன்
தனை உடன் கொடு தனித் துலை வலம் கொண்டு தகவால்
இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து - 2.7.42
544 - இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை
பிழைத்திலோம் எனில் பெருந்துலை நேர் நிற்க என்று
மழைத் தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத்து ஓதினார் ஏறினார் தட்டில் - 2.7.43
545 - மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்து உடன் ஏற
அண்டர் தம்பிரான் திரு அரைக் கோவணம் அதுவும்
கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமைத்
தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அத் துலைதான் - 2.7.44
546 - மதி விளங்கிய தொண்டர் தம் பெருமையை மண்ணோர்
துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர் தொழுதார்
கதிர் விசும்பு இடை கரந்திட நிரந்த கற்பகத்தின்
புதிய பூ மழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார் - 2.7.45
547 - அண்டர் பூ மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த
முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர்ப்
பண்டு தாம் பயில் கோலமே விசும்பினிற் பாகங்
கொண்ட பேதையும் தாமுமாய்க் காட்சி முன் கொடுத்தார் - 2.7.46
548 - தொழுது போற்றி அத் துலை மிசை நின்று நேர் துதிக்கும்
வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்
முழுதும் இன்னருள் பெற்றுத் தம் முன் தொழுது இருக்கும்
அழிவில் வான் பதங் கொடுத்து எழுந்து அருளினார் ஐயர் - 2.7.47
549 - நாதர் தம் திரு அருளினால் நல் பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம் அதுவாகி மேல் செல்லக்
கோதில் அன்பரும் குடும்பமும் குறைவு அறக் கொடுத்த
ஆதி மூர்த்தியார் உடன் சிவ புரியினை அணைந்தார் - 2.7.48
550 - மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல்
பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் அவணப் பழமை காட்டி
உலகு உய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித்
தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும் - 2.7.49
திருச்சிற்றம்பலம்
தில்லைவாழ் அந்தணர் சருக்கம் முற்றிற்று.
சருக்கம் இரண்டுக்குத் திருவிருத்தம் - 550
This webpage was last updated on 28 July 2004