Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!


tirunAvukkaracar tEvAram -tirumuRai 4 part 1
(verses (1 - 487 ))
(in tamil script, unicode format)

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
நான்காம் திருமுறை முதற் பகுதி
பாடல்கள் ( 1 - 487 )




Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding.
Proof-reading and addition of brief comments: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. or

© Project Madurai 1999 - 2004
to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are

http://www.projectmadurai.org/


திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
நான்காம் திருமுறை முதற் பகுதி
பாடல்கள் ( 1 - 487 )

உள்ளுறை
4.001 திருவதிகைவீரட்டானம் (1-10)மின்பதிப்பு
4.002 திருக்கெடிலவடவீரட்டானம் (11-20)மின்பதிப்பு
4.003 திருவையாறு (21-31)மின்பதிப்பு
4.004 திருவாரூர் (32-41)மின்பதிப்பு
4.005 திருவாரூர்ப்பழமொழி (42-51)மின்பதிப்பு
4.006 திருக்கழிப்பாலை (52-61)மின்பதிப்பு
4.007 திருஏகம்பம் (61-71)மின்பதிப்பு
4.008 சிவனெனுமோசை (72-81)மின்பதிப்பு
4.009 திருஅங்கமாலை (82-93)மின்பதிப்பு
4.010 திருக்கெடிலவாணர் (94-103)மின்பதிப்பு
4.011 நமச்சிவாயப்பதிகம் (104-113)மின்பதிப்பு
4.012 திருப்பழனம் (114-123)மின்பதிப்பு
4.013 திருவையாறு (124-133)மின்பதிப்பு
4.014 தசபுராணம் (134-144)மின்பதிப்பு
4.015 பாவநாசத்திருப்பதிகம் (145-155)மின்பதிப்பு
4.016 திருப்புகலூர் (156-165)மின்பதிப்பு
4.017 திருவாரூர் - அரநெறி (166-176)மின்பதிப்பு
4.018 விடந்தீர்த்ததிருப்பதிகம் (177-186)மின்பதிப்பு
4.019 திருவாரூர் (187-197)மின்பதிப்பு
4.020 திருவாரூர் (198-207)மின்பதிப்பு
4.021 திருவாரூர்திருவாதிரைப்பதிகம் (208-217)மின்பதிப்பு
4.022 கோயில் (218-228)மின்பதிப்பு
4.023 கோயில் (229-238)மின்பதிப்பு
4.024 திருவதிகைவீரட்டானம் (239-248)மின்பதிப்பு
4.025 திருவதிகைவீரட்டானம் (249-258)மின்பதிப்பு
4.026 திருவதிகைவீரட்டானம் (259-268)மின்பதிப்பு
4.027 திருவதிகைவீரட்டானம் (269-277 )மின்பதிப்பு
4.028 திருவதிகைவீரட்டானம் (278-283)மின்பதிப்பு
4.029 திருச்செம்பொன்பள்ளி (284-293)மின்பதிப்பு
4.030 திருக்கழிப்பாலை (294-303 )மின்பதிப்பு
4.031 திருக்கடவூர் (304-313)மின்பதிப்பு
4.032 திருப்பயற்றூர் (314-323)மின்பதிப்பு
4.033 திருமறைக்காடு (324-333)மின்பதிப்பு
4.034 திருமறைக்காடு (334-343)மின்பதிப்பு
4.035 திருவிடைமருது (344-353)மின்பதிப்பு
4.036 திருப்பழனம் (354-363)மின்பதிப்பு
4.037 திருநெய்த்தானம் (364-373)மின்பதிப்பு
4.038 திருவையாறு (374-383)மின்பதிப்பு
4.039 திருவையாறு (384-393)மின்பதிப்பு
4.040 திருவையாறு (394-403)மின்பதிப்பு
4.041 திருச்சோற்றுத்துறை (4104-413)மின்பதிப்பு
4.042 திருத்துருத்தி (414-423)மின்பதிப்பு
4.043 திருக்காஞ்சிமேற்றளி (424-433)மின்பதிப்பு
4.044 திருஏகம்பம் (434-443)மின்பதிப்பு
4.045 திருவொற்றியூர் (444-453)மின்பதிப்பு
4.046 திருவொற்றியூர் (454-455)மின்பதிப்பு
4.047 திருக்கயிலாயம் (456-465)மின்பதிப்பு
4.048 திருஆப்பாடி (466-475 )மின்பதிப்பு
4.049 திருக்குறுக்கை (476-485)மின்பதிப்பு
4.050 திருக்குறுக்கை (486-487)மின்பதிப்பு

4.01 திருவதிகைவீரட்டானம்

பன் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

1
கூற்றாயின வாறுவி லக்ககிலீர்

கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்

பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில

வீரட்டா னத்துறை அம்மானே.
4.1.1

2
நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன்

நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன்

வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை

நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில

வீரட்டா னத்துறை அம்மானே.
4.1.2

3
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்

படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற்

சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்

பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில

வீரட்டா னத்துறை அம்மனே.
4.1.3

4
முன்னம்மடி யேன்அறி யாமையினான்

முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னையடி யேனுமக் காளும்பட்டேன்

சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ

தலையாயவர் தங்கட னாவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில

வீரட்டா னத்துறை அம்மானே.
4.1.4

5
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்

கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட

நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன்

வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில

வீரட்டா னத்துறை அம்மானே.
4.1.5

6
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்

தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்

உன்னாமம் என்னாவின் மறந்தறியேன்
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்

உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில

வீரட்டா னத்துறை அம்மானே.
4.16

7
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்

ஒருவர்தலை காவலி லாமையினல்
வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால்

வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின கம்படியே

பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில

வீரட்டா னாத்துறை அம்மானே.
4.1.7

8
வலித்தேன்மனை வாழ்கை மகிழ்ந்தடியேன்

வஞ்சம்மன மொன்று மிலாமையினாற்
சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச்

சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான்
கலித்தேயென் வயிற்றி னகம்படியே

கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில

வீரட்டா னத்துறை அம்மானே.
4.1.8

9
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்

புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை

நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
என்போலிக ளும்மை இனித்தெளியார்

அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்மதி கைக்கெடில

வீரட்டா னத்துறை அம்மானே.
4.1.9

10
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்

புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ்

அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால்

என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில

வீரட்டா னத்துறை அம்மானே.
4.1.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - திருவதிகைநாயகி.
இப்பதிகம் சூலைநோய்தீர ஓதியருளியது.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.02 திருக்கெடிலவடவீரட்டானம்*
*திருவதிகைவீரட்டானம் என்பதும் இது

பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

11
சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ்

சுடர்த் திங்கட் சூளாமணியும்
வண்ண உரிவை யுடையும்

வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முர ணேறும்

அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும்

உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை

அஞ்ச வருவது மில்லை.
4.2.1

12
பூண்டதோர் கேழல் எயிறும்

பொன்றிகழ் ஆமை புரள
நீண்டதிண் டோ ள்வலஞ் சூழ்ந்து

நிலாக்கதிர் போலவெண் ணூலுங்
காண்டகு புள்ளின் சிறகுங்

கலந்தகட் டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலும்

உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை

அஞ்ச வருவது மில்லை.
4.2.2

13
ஒத்த வடத்திள நாகம்

உருத்திர பட்ட மிரண்டும்
முத்து வடக்கண் டிகையும்

முளைத்தெழு மூவிலை வேலுஞ்
*சித்த வடமும் அதிகைச்

சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங் கெடிப் புனலும்

உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை

அஞ்ச வருவது மில்லை.
(*) சித்தவடம் என்பது இத்தலத்துக்குச் சமீபத்திலிருப்பது.
4.2.3

14
மடமான் மறிபொற் கலையும்

மழுபாம் பொருகையில் வீணை
குடமால் வரைய திண்டோ ளுங்

குனிசிலைக் கூத்தின் பயில்வும்
இடமால் தழுவிய பாகம்

இருநில னேற்ற சுவடுந்
தடமார் கெடிலப் புனலும்

உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை

அஞ்ச வருவது மில்லை.
4.2.4

15
பலபல காமத்த ராகிப்

பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங்

கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும்

வான்கயி லாய மலையும்
நலமார் கெடிலப் புனலும்

உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதென்று மில்லை

அஞ்ச வருவது மில்லை.
4.2.5

16
கரந்தன கொள்ளி விளக்குங்

கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும்

பயின்றறி யாதன பாட்டும்
அரங்கிடை நூலறி வாளர்

அறியப் படாததோர் கூத்தும்
நிரந்த கெடிலப் புனலும்

உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை

அஞ்ச வருவது மில்லை.
4.2.6

17
கொலைவரி வேங்கை அதளுங்

குலவோ டிலங்குபொற் றோடும்
விலைபெறு சங்கக் குழையும்

விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும்

மணியார்ந் திலங்கு மிடறும்
உலவு கெடிலப் புனலும்

உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை

அஞ்ச வருவது மில்லை.
4.2.7

18
ஆடல் புரிந்த நிலையும்

அரையில் அசைத்த அரவும்
பாடல் பயின்ற பல்பூதம்

பல்லா யிரங்கொள் கருவி
நாடற் கரியதோர் கூத்தும்

நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடிலப் புனலும்

உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை

அஞ்ச வருவது மில்லை.
4.2.8

19
சூழு மரவத் துகிலுந்

துகில்கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவள் அஞ்ச

அஞ்சா தருவரை போன்ற
வேழ முரித்த நிலையும்

விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழுங் கெடிலப் புனலும்

உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை.
4.2.9

20
நரம்பெழு கைகள் பிடித்து

நங்கை நடுங்க மலையை
உரங்களெல் லாங்கொண் டெடுத்தான்

ஒன்பதும் ஒன்றும் அலற
வரங்கள் கொடுத்தருள் செய்வான்

வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
நிரம்பு கெடிலப் புனலும்

உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை

அஞ்ச வருவது மில்லை.
4.2.10

இப்பதிகம் சமணர்களேவிய யானை அஞ்சும்படி ஓதி அருளியது.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4. 03 திருவையாறு

பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

21
மாதர்ப் பிறைக்கண்ணி யானை

மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்

புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்

ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்

களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்

கண்டறி யாதன கண்டேன்.
4.3.1

22
போழிளங் கண்ணியி னானைப்

பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றியென் றேத்தி

வட்டமிட் டாடா வருவேன்
ஆழி வலவனின் றேத்தும்

ஐயா றடைகின்ற போது
கோழி பெடையொடுங் கூடிக்

குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்

கண்டறி யாதன கண்டேன்.
4.3.2

23
எரிப்பிறைக் கண்ணியி னானை

யேந்திழை யாளொடும் பாடி
முரித்த இலயங்க ளிட்டு

முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி

ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி

வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்

கண்டறி யாதன கண்டேன்.
4.3.3

24
பிறையிளங் கண்ணியி னானைப்

பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித்

தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும்

ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடிச்

சேவல் வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்

கண்டறி யாதன கண்டேன்.
4.3.4

25
ஏடு மதிக்கண்ணி யானை

ஏந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங்

கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற

ஐயா றடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப்

பிணைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்

கண்டறி யாதன கண்டேன்.
4.3.5

26
தண்மதிக் கண்ணியி னானைத்

தையல்நல் லாளொடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி

உணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற

ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொ டாடி

வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்

கண்டறி யாதன கண்டேன்.
4.3.6

27
கடிமதிக் கண்ணியி னானைக்

காரிகை யாலொடும் பாடி
வடிவொடு வண்ண மிரண்டும்

வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்குங் கழலான்

ஐயா றடைகின்ற போது
இடிகுர லன்னதோர் ஏனம்

இசைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்

கண்டறி யாதன கண்டேன்.
4.3.7

28
விரும்பு மதிக்கண்ணி யானை

மெல்லிய லாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை யெழுந்து

பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி யுந்தும்

ஐயா றடைகின்ற போது
கருங்கலை பேடையொ டாடிக்
கலந்து வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன்.
4.3.8

29
முற்பிறைக் கண்ணியி னானை

மொய்குழ லாளொடும் பாடிப்
பற்றிக் கயிறறுக் கில்லேன்

பாடியும் ஆடா வருவேன்
அற்றருள் பெற்றுநின் றாரோ

டையா றடைகின்ற போது
நற்றுணைப் பேடையொ டாடி

நாரை வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்

கண்டறி யாதன கண்டேன்.
4.3.9

30
திங்கள் மதிக்கண்ணி யானைத்

தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொ லெந்தை

எனக்கினி யென்னா வருவேன்
அங்கிள மங்கைய ராடும்

ஐயா ரடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப்

பறந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்

கண்டறி யாதன கண்டேன்.
4.3.10

31
வளர்மதிக் கண்ணியி னானை

வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததோர் காலங்

காண்பான் கடைக்கணிக் கின்றேன்
அளவு படாததோ ரன்போ

டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி

ஏறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்

கண்டறி யாதன கண்டேன்.
4.3.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொற்சோதீசுவரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகி.
இது இந்தத்தலத்திலிருக்கும் ஆலயமே,
கயிலாசமாகச் சுவாமி தரிசனங்கட்டளையிட்டபோது ஓதியருளிய பதிகம்.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4. 04 திருவாரூர்

பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

32
பாடிளம் பூதத்தி னானும்

பவளச்செவ் வாய்வண்ணத் தானுங்
கூடிள மென்முலை யாளைக்

கூடிய கோலத்தி னானும்
ஓடிள வெண்பிறை யானும்

ஒளிதிகழ் சூலத்தி னானும்
ஆடிளம் பாம்பசைத் தானும்

ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.1

33
நரியைக் குதிரைசெய் வானும்

நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும்

விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானை முன்னோட

முன்பணிந் தன்பர்கள் ஏத்த
அரவரைச் சாத்திநின் றானும்

ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.2

34
நீறுமெய் பூசவல் லானும்

நினைப்பவர் நெஞ்சத்து ளானும்
ஏறுகந் தேறவல் லானும்

எரிபுரை மேனியி னானும்
நாறு கரந்தையி னானும்

நான்மறைக் கண்டத்தி னானும்
ஆறு சடைக்கரந் தானும்

ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.3

35
கொம்புநல் வேனி லவனைக்

குழைய முறுவல்செய் தானுஞ்
செம்புனல் கொண்டெயில் மூன்றுந்

தீயெழக் கண்சிவந் தானும்
வம்புநற் கொன்றையி னானும்

வாட்கண்ணி வாட்டம தெய்த
அம்பர ஈருரி யானும்

ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.4

36
ஊழி யளக்கவல் லானும்

உகப்பவர் உச்சியுள் ளானுந்
தாழிளஞ் செஞ்சடை யானுந்

தண்ணமர் திண்கொடி யானுந்
தோழியர் தூதிடை யாடத்

தொழுதடி யார்கள் வணங்க
ஆழி வளைக்கையி னானும்

ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.5

37
ஊர்திரை வேலையுள் ளானும்

உலகிறந் தொண்பொரு ளானுஞ்
சீர்தரு பாடலுள் ளானுஞ்

செங்கண் விடைக்கொடி யானும்
வார்தரு பூங்குழ லாளை

மருவி யுடன்வைத் தவனும்
ஆதிரை நாளுகந் தானும்

ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.6

38
தொழற்கங்கை துன்னிநின் றார்க்குத்

தோன்றி யருளவல் லானுங்
கழற்கங்கை பன்மலர் கொண்டு

காதல் கனற்றநின் றானுங்
குழற்கங்கை யாளையுள் வைத்துக்

கோலச் சடைக்கரந் தானும்
அழற்கங்கை ஏந்தவல் லானும்

ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.7

39
ஆயிரந் தாமரை போலும்

ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும்

ஆயிரந் தோளுடை யானும்
ஆயிர ஞாயிறு போலும்

ஆயிர நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானும்

ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.8

40
வீடரங் காநிறுப் பானும்

விசும்பினை வேதி தொடர
ஓடரங் காகவைத் தானும்

ஓங்கியோ ரூழியுள் ளானுங்
காடரங் காமகிழ்ந் தானுங்

காரிகை யார்கள் மனத்துள்
ஆடரங் கத்திடை யானும்

ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.9

41
பையஞ் சுடர்விடு நாகப்

பள்ளிகொள் வானுள்ளத் தானுங்
கையஞ்சு நான்குடை யானைக்

கால்விர லாலடர்த் தானும்
பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப்

புகழ்புரிந் தார்க்கருள் செய்யும்
ஐயஞ்சின் அப்புறத் தானும்

ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4.4.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4. 05 திருவாரூர்ப்பழமொழி

பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

42
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த

மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி

யுழிதந்தென் உள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ

மயிலாலும் ஆரூ ரரைக்
கையினாற் றொழா தொழிந்து

கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே.
4.5.1

43
என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்

டென்னையோர் உருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்

டென்னுள்ளங் கோயி லாக்கி
அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண்

டருள்செய்த ஆரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்

காக்கைப்பின் போன வாறே.
4.5.2

44
பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாங்

குண்டர்கள்தஞ் சொல்லே கேட்டு
உருகுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்த

கள்ளத்தைத் தள்ளிப் போக்கி
அருகுவித்துப் பிணிகாட்டி ஆட்கொண்டு

பிணிதீர்த்த ஆரூ ரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க

மறம்விலைக்குக் கொண்ட வாறே.
4.5.3

45
குண்டானாய்த் தலைபறித்துக் குவிமுலையார்

நகைகாணா துழிதர் வேனைப்
பண்டமாப் படுத்தென்னைப் பால்தலையிற்

றெளித்துத்தன் பாதங் காட்டித்
தொண்டெலா மிசைபாடத் தூமுறுவல்

அருள்செய்யும் ஆரூ ரரைப்
பண்டெலாம் அறியாதே பனிநீராற்

பரவைசெயப் பாவித் தேனே.
4.5.4

46
துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர்

சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு
என்னாகத் திரிதந்தீங் கிருகையேற்

றிடவுண்ட ஏழை யேன்நான்
பொன்னாகத் தடியேனைப் புகப்பெய்து

பொருட்படுத்த ஆரூ ரரை
என்னாகத் திருத்தாதே ஏதன்போர்க்

காதனாய் அகப்பட் டேனே.
4.5.5

47
பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு

தலையோடே திரிதர் வேனை
ஒப்போட வோதுவித்தென் உள்ளத்தின்

உள்ளிருந்தங் குறுதி காட்டி
அப்போதைக் கப்போதும் அடியவர்கட்

காரமுதாம் ஆரூ ரரை
எப்போது நினையாதே இருட்டறையின்

மலடுகறந் தெய்த்த வாறே.
4.5.6

48
கதியொன்றும் அறியாதே கண்ணழலத்

தலைபறித்துக் கையில் உண்டு
பதியொன்று நெடுவீதிப் பலர்காண

நகைநாணா துழிதர் வேற்கு
மதிதந்த ஆருரில் வார்தேனை

வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க

மின்மினித்தீக் காய்ந்த வாறே.
4.5.7

49
பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற

சமண்நீசர் சொல்லே கேட்டுக்
காவிசேர் கண்மடவார்க் கண்டோ டிக்

கதவடைக்குங் கள்வ னேன்றன்
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை

யாட்கொண்ட ஆரூ ரரைப்
பாவியேன் அறியாதே பாழூரிற்

பயிக்கம்புக் கெய்த்த வாறே.
4.5.8

50
ஒட்டாத வாளவுணர் புரம்மூன்றும்

ஓரம்பின் வாயின் வீழக்
கட்டானைக் காமனையுங் காலனையுங்

கண்ணினொடு காலின் வீழ
அட்டானை ஆரூரில் அம்மானை

ஆர்வச்செற் றக்கு ரோதந்
தட்டானைச் சாராதே தவமிருக்க

அவஞ்செய்து தருக்கி னேனே.
4.5.9

51
மறுத்தானோர் வல்லரக்கன் ஈரைந்து

முடியினொடு தோளுந் தாளும்
இறுத்தானை எழில்முளரித் தவிசின்மிசை

இருத்தான்றன் தலையி லொன்றை
அறுத்தானை ஆரூரில் அம்மானை

ஆலாலம் உண்டு கண்டங்
கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க

இரும்புகடித் தெய்த்த வாறே.
4.5.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4. 06 திருக்கழிப்பாலை

பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

52
வனபவள வாய்திறந்து வானவர்க்குந்

தானவனே என்கின் றாளாற்
சினபவளத் திண்டோ ள்மேற் சேர்ந்திலங்கு

வெண்ணீற்றன் என்கின் றாளால்
அனபவள மேகலையோ டப்பாலைக்

கப்பாலான் என்கின் றாளாற்
கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச்

சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.1

53
வண்டுலவு கொன்றை வளர்புன்

சடையானே என்கின் றாளால்
விண்டலர்ந்து நாறுவதோர் வெள்ளெருக்க

நாண்மலருண் டென்கின் றாளால்
உண்டயலே தோன்றுவதோர் உத்தரியப்

பட்டுடையன் என்கின் றாளாற்
கண்டயலே தோன்றுங் கழிப்பாலைச்

சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.2

54
பிறந்திளைய திங்களெம் பெம்மான்

முடிமேல தென்கின் றாளால்
நிறங்கிளருங் குங்குமத்தின் மேனி

யவன்நிறமே யென்கின் றாளால்
மறங்கிளர்வேற் கண்ணாள் மணிசேர்

மிடற்றவனே யென்கின் றாளாற்
கறங்கோத மல்குங் கழிப்பாலைச்

சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.3

55
இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தியோர்

வெண்மழுவன் என்கின் றாளாற்
சுரும்பார்ந்த மலர்க்கொன்றைச் சுண்ணவெண்

ணீற்றவனே என்கின் றாளாற்
பெரும்பால னாகியோர் பிஞ்ஞக

வேடத்தன் என்கின் றாளாற்
கரும்பானல் பூக்குங் கழிப்பாலைச்

சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.4

56
பழியிலான் புகழுடையன் பால்நீற்றான்

ஆனேற்றன் என்கின் றாளால்
விழியுலாம் பெருந்தடங்கண் இரண்டல்ல

மூன்றுளவே என்கின் றாளாற்
சுழியுலாம் வருகங்கை தோய்ந்த

சடையவனே என்கின் றாளாற்
கழியுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச்

சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.5

57
பண்ணார்ந்த வீணை பயின்ற

விரலவனே என்கின் றாளால்
எண்ணார் புரமெரித்த எந்தை

பெருமானே என்கின் றாளாற்
பண்ணார் முழவதிரப் பாடலோ

டாடலனே என்கின் றாளாற்
கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச்

சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.6

58
முதிருஞ் சடைமுடிமேல் முழ்கும்

இளநாகம் என்கின் றாளால்
அதுகண் டதனருகே தோன்றும்

இளமதியம் என்கின் றாளாற்
சதுர்வெண் பளிக்குக் குழைகாதின்

மின்னிடுமே என்கின் றாளாற்
கதிர்முத்தஞ் சிந்துங் கழிப்பாலைச்

சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.7

59
ஓரோத மோதி உலகம்

பலிதிரிவான் என்கின் றாளால்
நீரோத மேற நிமிர்புன்

சடையானே என்கின் றாளாற்
பாரோத மேனிப் பவளம்

அவனிறமே என்கின் றாளாற்
காரோத மல்குங் கழிப்பாலைச்

சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.8

60
வானுலாந் திங்கள் வளர்புன்

சடையானே என்கின் றாளால்
ஊனுலாம் வெண்டலைகொண் டூரூர்

பலிதிரிவான் என்கின் றாளாற்
தேனுலாங் கோதை திளைக்குந்

திருமார்பன் என்கின் றாளாற்
கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச்

சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.9

61
அடர்ப்பரிய இராவணனை அருவரைக்கீழ்

அடர்த்தவனே என்கின் றாளாற்
சுடர்ப்பெரிய திருமேனிச் சுண்ணவெண்

ணீற்றவனே என்கின் றாளால்
மடற்பெரிய ஆலின்கீழ் அறம்நால்வர்க்

கன்றுரைத்தான் என்கின் றாளாற்
கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலைச்

சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
4.6.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர், தேவியார் - வேதநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4. 07 திருஏகம்பம்

பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

62
கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
4.7.1

63
தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந்
தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
4.7.2

64
கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்
முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை
அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே.
4.7.3

65
அண்டமாய் ஆதியாய் அருமறையோ டைம்பூதப்
பிண்டமாய் உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்
தொண்டர்தாம் மலர்தூவிச் சொன்மாலை புனைகின்ற
இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே.
4.7.4

66
ஆறேறு சடையானை ஆயிரம்பே ரம்மானைப்
பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
4.7.5

67
தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலாற்
பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண்
வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம்
ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே.
4.7.6

68
நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம்
வல்லானை வல்லார்கள் மனத்துறையும் மைந்தனைச்
சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகளேதும்
இல்லானை எம்மானை என்மனத்தே வைத்தேனே.
4.7.7

69
விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம் புண்ணியனைத்
தரித்தானைக் கங்கைநீர் தாழ்சடைமேல் மதில்மூன்றும்
எரித்தானை எம்மானை என்மனத்தே வைத்தேனே.
4.7.8

70
ஆகம்பத் தரவணையான் அயன்அறிதற் கரியானைப்
பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை
மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி
ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே.
4.7.9

71
அடுத்தானை உரித்தானை அருச்சுனற்குப் பாசுபதங்
கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு
தொடுத்தானைப் புரமெரியச் சுனைமல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை என்மனத்தே வைத்தேனே.
4.7.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்,
தேவியார் - காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4. 08 சிவனெனுமோசை

பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

72
சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற்

றிருநின்ற செம்மை யுளதே
அவனுமோ ரையமுண்ணி யதளாடை யாவ

ததன்மேலொ ராட லரவங்
கவணள வுள்ளஉண்கு கரிகாடு கோயில்

கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றிகண்டு மவனீர்மை கண்டு

மகநேர்வர் தேவ ரவரே.
4.8.1

73
விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத

விதியல்லர் விண்ணு நிலனுந்
திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர்

தெளிநீரு மல்லர் தெரியில்
அரிதரு கண்ணியாளை ஒருபாக மாக

அருள்கார ணத்தில் வருவார்
எரியர வாரமார்பர் இமையாரு மல்லர்

இமைப்பாரு மல்லர் இவரே.
4.8.2

74
தேய்பொடி வெள்ளைபூசி யதன்மேலோர் திங்கள்

திலகம் பதித்த நுதலர்
காய்கதிர் வேலைநீல ஒளிமா மிடற்றர்

கரிகாடர் காலோர் கழலர்
வேயுட னாடுதோளி அவள்விம்ம வெய்ய

மழுவீசி வேழவுரி போர்த்
தேயிவ ராடுமாறும் இவள்காணு மாறும்

இதுதா னிவர்க்கோ ரியல்பே.
4.8.3

75
வளர்பொறி யாமைபுல்கி வளர்கோதை வைகி

வடிதோலும் நூலும் வளரக்
கிளர்பொறி நாகமொன்று மிளிர்கின்ற மார்பர்

கிளர்காடு நாடு மகிழ்வர்
நளிர்பொறி மஞ்ஞையன்ன தளிர்போன்ற சாய

லவள்தோன்று வாய்மை பெருகிக்
குளிர்பொறி வண்டுபாடு குழலா லொருத்தி

யுளள்போல் குலாவி யுடனே.
4.8.4

76
உறைவது காடுபோலு முரிதோ லுடுப்பர்

விடையூர்வ தோடு கலனா
இறையிவர் வாழும்வண்ண மிதுவேலு மீச

ரொருபா லிசைந்த தொருபால்
பிறைநுதல் பேதைமாதர் உமையென்னு நங்கை

பிறழ்பாட நின்று பிணைவான்
அறைகழல் வண்டுபாடும் அடிநீழ லாணை

கடவா தமர ருலகே.
4.8.5

77
கணிவளர் வேங்கையோடு கடிதிங்கள் கண்ணி

கழல்கால் சிலம்ப அழகார்
அணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ண

மியலா ரொருவ ரிருவர்
மணிகிளர் மஞ்ஞையால மழையாடு சோலை

மலையான் மகட்கு மிறைவர்
அணிகிள ரன்னவண்ணம் அவள் வண்ணவண்ணம்

அவர்வண்ண வண்ணம் அழலே.
4.8.6

78
நகைவலர் கொன்றைதுன்று நகுவெண் டலையர்

நளிர்கங்கை தங்கு முடியர்
மிகைவளர் வேதகீத முறையோடும் வல்ல

கறைகொள் மணிசெய் மிடறர்
முகைவளர் கோதைமாதர் முனிபாடு மாறு

மெரியாடு மாறு மிவர்கைப்
பகைவளர் நாகம்வீசி மதியங்கு மாறு

மிதுபோலும் ஈச ரியல்பே.
4.8.7

79
ஒளிவளர் கங்கைதங்கு மொளிமா லயன்ற

னுடல்வெந்து வீய சுடர்நீ
றணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ணர்

தமியா ரொருவ ரிருவர்
களிகிளர் வேடமுண்டோ ர் கடமா வுரித்த

உடைதோல் தொடுத்த கலனார்
அணிகிள ரன்னதொல்லை யவள்பாக மாக

எழில்வேத மோது மவரே.
4.8.8

80
மலைமட மங்கையோடும் வடகங்கை நங்கை

மணவாள ராகி மகிழ்வர்
தலைகல னாகவுண்டு தனியே திரிந்து

தவவாண ராகி முயல்வர்
விலையிலி சாந்தமென்று வெறிநீறு பூசி

விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ளமுற்று மலறக் கடைந்த

அழல்நஞ்ச முண்ட வவரே.
4.8.9

81
புதுவிரி பொன்செயோலை யொருகாதோர் காது

சுரிசங்க நின்று புரள
விதிவிதி வேதகீத மொருபாடு மோத

மொருபாடு மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றைதுன்று சடைபாக மாதர்

குழல்பாக மாக வருவர்
இதுஇவர் வண்ணவண்ணம் இவள்வண்ண வண்ணம்

எழில்வண்ண வண்ண மியல்பே.
4.8.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4. 9 திருஅங்கமாலை

பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்

82
தலையே நீவணங்காய் - தலை

மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்

தலையே நீவணங்காய்.
4.9.1

83
கண்காள் காண்மின்களோ - கடல்

நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்

கண்காள் காண்மின்களோ.
4.9.2

84
செவிகாள் கேண்மின்களோ - சிவன்

எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்

செவிகள் கேண்மின்களோ.
4.9.3

85
மூக்கே நீமுரலாய் - முது

காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை

மூக்கே நீமுரலாய்.
4.9.4

86
வாயே வாழ்த்துகண்டாய் - மத

யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை

வாயே வாழ்த்துகண்டாய்.
4.9.5

87
நெஞ்சே நீநினையாய் - நிமிர்

புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை

நெஞ்சே நீநினையாய்.
4.9.6

88
கைகாள் கூப்பித்தொழீர் - கடி

மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்

கைகள் கூப்பித்தொழீர்.
4.9.7

89
ஆக்கை யாற்பயனென் - அரன்

கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்

வாக்கை யாற்பயனென்.
4.9.8

90
கால்க ளாற்பயனென் - கறைக்

கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்

கால்க ளாற்பயனென்.
4.9.9

91
உற்றா ராருளரோ - உயிர்

கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்

குற்றார் ஆருளரோ.
4.9.10

92
இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன்

பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்

கிறுமாந் திருப்பன்கொலோ.
4.9.11

93
தேடிக் கண்டுகொண்டேன் - திரு

மாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே

தேடிக் கண்டுகொண்டேன்.
4.9.12

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4. 10 திருக்கெடிலவாணர்

பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

94
முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்
வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்
திளைத்ததோர் மான்மழுக் கையர் செய்யபொன்
கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே.
4.10.1

95
ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு
கூறினர் கூறினர் வேதம் அங்கமும்
ஆறினர் ஆறிடு சடையர் பக்கமுங்
கீறின வுடையினர் கெடில வாணரே.
4.10.2

96
விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ
றுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலாப்
படந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல்
கிடந்தழ கெழுதிய கெடில வாணரே.
4.10.3

97
விழுமணி அயிலெயிற் றம்பு வெய்யதோர்
கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்
செழுமணி மிடற்றினர் செய்யர் வெய்யதோர்
கெழுமணி அரவினர் கெடில வாணரே.
4.10.4

98
குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினை
தழுவின கழுவுவர் பவள மேனியர்
மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக்
கெழுவின யோகினர் கெடில வாணரே.
4.10.5

99
அங்கையில் அனலெரி யேந்தி யாறெனும்
மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரை
நங்கையைப் பாகமு நயப்பர் தென்றிசைக்
கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே.
4.10.6

100
கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந்
திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர்
வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்
கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே.
4.10.7

101
கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே
கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே.
4.10.8

102
வெறியுறு விரிசடை புரள வீசியோர்
பொறியுறு புலியுரி யரைய தாகவும்
நெறியுறு குழலுமை பாக மாகவுங்
கிறிபட உழிதர்வர் கெடில வாணரே.
4.10.9

103
பூண்டதோர் அரக்கனைப் பொருவில் மால்வரைத்
தூண்டுதோ ளவைபட அடர்த்த தாளினார்
ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்
கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே.
4.10.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4. 11 நமச்சிவாயப்பதிகம்

பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

104
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
4.11.1

105
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
4.11.2

106
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
4.11.3

107
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
4.11.4

108
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
4.11.5

109
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
4.11.6

110
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
4.11.7

111
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
4.11.8

112
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.
4.11.9

113
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
4.11.10

இது சமணர்கள் கற்றூணிற்கட்டிக் கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4. 12 திருப்பழனம்

பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்

114
சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ.
4.12.1

115
கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான் பாட்டோ வாப் பழனத்தான்
வண்டுலாந் தடமூழ்கி மற்றவனென் தளிர்வண்ணங்
கொண்டநாள் தானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ.
4.12.2

116
*மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த
பனைக்கைமா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே
சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதாய்ச் சோர்வாளோ.
* மனைக்காஞ்சியென்பது வீட்டுக்குச் சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம்.
4.12.3

117
புதியையாய் இனியையாம் பூந்தென்றால் புறங்காடு
பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை
விதியாளன் என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ.
4.12.4

118
மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென்
கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிடநான் கடவேனோ.
4.12.5

119
பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போய் இரைதேருஞ்
செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேன்நான்
அங்கோல வளைகவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான்
தங்கோல நறுங்கொன்றைத் தாரருளா தொழிவானோ.
4.12.6

120
துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய்
பணையார வாரத்தான் பாட்டோ வாப் பழனத்தான்
கணையார இருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்த
இணையார மார்பன்என் எழில்நலமுண் டிகழ்வானோ.
4.12.7

121
*கூவைவாய் மணிவரன்றிக் கொழித்தோடுங் **காவிரிப்பூம்
பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப்
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே.

*கூவைவாய்மணி என்பது பூமியினிடத்தில்
பொருந்திய முத்துக்கள் - அவையாவன -
யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, நாகம், பசுவின்பல்,
மூங்கிற்கணு, கொக்கின்கழுத்து, கற்புள்ள
மாதர்கண்டம் என்னுமிவ்விடங்களி லுண்டாயிருக்கு
முத்துக்களாம்.
** காவிரிப்பூம்பாவைவாய் முத்து என்பது நீர்முத்து
எனக்கொள்க. அவை - சங்கு, இப்பி, மீன், தாமரைமலர்
என்னு மிவைகளி லுண்டாகு முத்துக்கள். இதனை
"சிறைகொள் நீர்த்தரளத் திரல்கொணித்திலத்த" எனத்
திருமாளிகைத்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பா,
2-வது பதிகம் 5-வது திருப்பாடலானுமுணர்க.
4.12.8

122
புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப்
பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாங்
கள்ளியேன் நான்இவற்கென் கனவளையுங் கடவேனோ.
4.12.9

123
வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்
பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.
4.12.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.13 திருவையாறு

பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்

124
விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும்
இடைகிலேன் அமணர்கள்தம் அறவுறைகேட் டலமலந்தேன்
தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான்
அடைகின்றேன் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.1

125
செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்
கொம்பமருங் கொடிமருங்கிற் கோல்வளையா ளொருபாகர்
வம்பவிழும் மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த
அம்பவள ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.2

126
நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே
மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணிதீர்க்கும்
அணியானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.3

127
ஊழித்தீ யாய்நின்றாய் உள்குவார் உள்ளத்தாய்
வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே
பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம்
ஆழித்தீ ஐயாறார்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.4

128
சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே
உடையானே உடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்
அடையானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.5

129
நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.6

130
கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் *அருத்தானாய்
எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
* அருத்தனாயென்பதற்கு - உண்ணப்படும் பொருள்களாயின
எனப் பொருள்படுகின்றது.
4.13.7

131
மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய்
பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய்
நின்னானார் இருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி
அன்னானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.8

132
முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்தப்
பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்கள் எம்பெருமா னெனஇறைஞ்சும்
அத்திசையாம் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.9

133
கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத்
திருவிரலால் உதகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி என்றேத்தும்
அருவரைசூழ் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4.13.10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.14 தசபுராணம்

பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்

134
பருவரை யொன்றுசுற்றி அரவங்கை விட்ட

இமையோர் இரிந்து பயமாய்த்
திருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு

சுடுவா னெழுந்த விசைபோய்ப்
பெருகிட மற்றிதற்கொர் பிதிகார மொன்றை

அருளாய் பிரானே எனலும்
அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட

அவனண்டர் அண்ட ரரசே.
4.14.1

135
நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்ட மூட

நிலநின்று தம்ப மதுவப்
பரமொரு தெய்வமெய்த இதுவொப்ப தில்லை

யிருபாலு நின்று பணியப்
பிரமனு மாலுமேலை முடியோடு பாதம்

அறியாமை நின்ற பெரியோன்
பரமுத லாயதேவர் சிவனாய மூர்த்தி

யவனா நமக்கோர் சரணே.
4.14.2

136
காலமு நாள்கள்ஊழி படையா முன்ஏக

உருவாகி மூவர் உருவில்
சாலவு மாகிமிக்க சமயங்க ளாறின்

உருவாகி நின்ற தழலோன்
ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழு முண்டு

குறளாயோ ராலின் இலைமேல்
பாலனு மாயவற்கோர் பரமாய மூர்த்தி

யவனா நமக்கோர் சரணே.
4.14.3

137
நீடுயர் மண்ணுவிண்ணும் நெடுவேலை குன்றொ

டுலகேழு மெங்கு நலியச்
சூடிய கையராகி இமையோர் கணங்கள்

துதியோதி நின்று தொழலும்
ஓடிய தாருகன்றன் உடலம் பிளந்து

ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மாநடத்தெ மனலாடி பாதம்

அவையா நமக்கோர் சரணே.
4.14.4

138
நிலைவலி இன்றியெங்கும் நிலனோடு விண்ணும்

நிதனஞ்செய் தோடு புரமூன்
றலைநலி வஞ்சியோடி அரியோடு தேவர்

அரணம் புகத்தன் அருளாற்
கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும்

அனல்பாய நீறு புரமா
மலைசிலை கையிலொல்க வளைவித்த வள்ள

லவனா நமக்கோர் சரணே.
4.14.5

139
நீலநன் மேனிசெங்கண் வளைவெள் ளெயிற்ற

னெரிகேசன் நேடி வருநாள்
காலைநன் மாலைகொண்டு வழிபாடு செய்யும்

அளவின்கண் வந்து குறுகிப்
பாலனை ஓடவோடப் பயமெய்து வித்த

உயிர்வவ்வு பாசம் விடுமக்
காலனை வீடுசெய்த கழல்போலும் அண்டர்

தொழுதோது சூடு கழலே.
4.14.6

140
உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில்

அவியுண்ண வந்த இமையோர்
பயமுறு மெச்சனங்கி மதியோனு முற்ற

படிகண்டு நின்று பயமாய்
அயனொடு மாலுமெங்க ளறியாமை யாதி

கமியென் றிறைஞ்சி யகலச்
சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன் எந்தை

கழல்கண்டு கொள்கை சரணே.
4.14.7

141
நலமலி மங்கைநங்கை விளையாடி யோடி

நயனத் தலங்கள் கரமா
உலகினை ஏழுமுற்றும் இருள்மூட மூட

இருளோட நெற்றி ஒருகண்
அலர்தர அஞ்சிமற்றை நயனங்கை விட்டு

மடவாள் இறைஞ்ச மதிபோல்
அலர்தரு சோதிபோல அலர்வித்த முக்கண்

அவனா நமக்கோர் சரணே.
4.14.8

142
கழைபடு காடுதென்றல் குயில்கூவ அஞ்சு

கணையோன் அணைந்து புகலும்
மழைவடி வண்ணன்எண்ணி மகவோனை விட்ட

மலரான தொட்ட மதனன்
எழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள்

எரியென் றிறைஞ்சி யகலத்
தழல்படு நெற்றிஒற்றை நயனஞ் சிவந்த

தழல்வண்ணன் எந்தை சரணே.
4.14.9

143
தடமலர் ஆயிரங்கள் குறைவொன்ற தாக

நிறைவென்று தன்க ணதனால்
உடன்வழி பாடுசெய்த திருமாலை யெந்தை

பெருமான் உகந்து மிகவும்
சுடரடி யான்முயன்று சுழல்வித் தரக்கன்

இதயம் பிளந்த கொடுமை
அடல்வலி ஆழியாழி யவனுக் களித்த

அவனா நமக்கோர் சரணே.
4.14.10

144
கடுகிய தேர்செலாது கயிலாய மீது

கருதேலுன் வீரம் ஒழிநீ
முடுகுவ தன்றுதன்ம மெனநின்று பாகன்

மொழிவானை நன்று முனியா
விடுவிடு வென்றுசென்று விரைவுற் றரக்கன்

வரையுற் றெடுக்க முடிதோள்
நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம்

நினைவுற்ற தென்றன் மனனே.
4.14.11
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.15 பாவநாசத்திருப்பதிகம்

பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்

145
பற்றற் றார்சேற் பழம்பதியைப்

பாசூர் நிலாய பவளத்தைச்
சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத்

தீண்டற் கரிய திருவுருவை
*வெற்றி யூரில் விரிசுடரை

விமலர் கோனைத் திரைசூழ்ந்த
ஒற்றி யூரெம் உத்தமனை

உள்ளத் துள்ளே வைத்தேனே.

* வெற்றியூரென்பது வைப்புத்தலங்களிலொன்று.
4.15.1

146
ஆனைக் காவில் அணங்கினை

ஆரூர் நிலாய அம்மானைக்
கானப் பேரூர்க் கட்டியைக்

கானூர் முளைத்த கரும்பினை
வானப் பேரார் வந்தேத்தும்

வாய்மூர் வாழும் வலம்புரியை
மானக் கயிலை மழகளிற்றை

மதியைச் சுடரை மறவேனே.
4.15.2

147
மதியங் கண்ணி ஞாயிற்றை

மயக்கந் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை

ஐயா றமர்ந்த ஐயனை
விதியைப் புகழை வானோர்கள்

வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை

நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே.
4.15.3

148
புறம்ப யத்தெம் முத்தினைப்

புகலூர் இலங்கு பொன்னினை
*உறந்தை யோங்கு சிராப்பள்ளி

உலகம் விளக்கு ஞாயிற்றைக்
கறங்கு மருவிக் கழுக்குன்றிற்

காண்பார் காணுங் கண்ணானை
அறஞ்சூழ் அதிகை வீரட்டத்
தரிமான் ஏற்றை அடைந்தேனே.

* உறந்தையென்பது உறையூர்.
4.15.4

149
கோலக் காவிற் குருமணியைக்

*குடமூக் குறையும் விடமுணியை
ஆலங் காட்டி லந்தேனை

அமரர் சென்னி யாய்மலரைப்
பாலிற் றிகழும் பைங்கனியைப்

பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
சூலத் தானைத் துணையிலியைத்

தோளைக் குளிரத் தொழுதேனே.

*குடமூக்கென்பது கும்பகோணம்.
4.15.5

150
மருக லுறையுமா ணிக்கத்தை

வலஞ் சுழியின் மாலையை
கருகா வூரிற் கற்பகத்தைக்

காண்டற் கரிய கதிரொளியைப்
பெருவே ளூரெம் பிறப்பிலியைப்

பேணு வார்கள் பிரிவரிய
திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச்

சிந்தை யுள்ளே வைத்தேனே.
4.15.6

151
எழிலார் இராச சிங்கத்தை

இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக்
குழலார் கோதை வரைமார்பிற்

குற்றா லத்தெங் கூத்தனை
நிழலார் சோலை நெடுங்களத்து

நிலாய நித்த மணாளனை
அழலார் வண்ணத் தம்மானை

அன்பி லணைத்து வைத்தேனே.
4.15.7

152
மாலைத் தோன்றும் வளர்மதியை

மறைக்காட் டுறையும் மணாளனை
ஆலைக் கரும்பி னின்சாற்றை

அண்ணா மலையெம் அண்ணலைச்
சோலைத் துருத்தி நகர்மேய

சுடரிற் றிகழுந் துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை

விருப்பால் விழுங்கி யிட்டேனே.
4.15.8

153
சோற்றுத் துறையெஞ் சோதியைத்

துருத்தி மேய தூமணியை
ஆற்றிற் பழனத் தம்மானை

ஆல வாயெம் மருமணியை
நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள்

நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்
தோற்றக் கடலை அடலேற்றைத்

தோளைக் குளிரத் தொழுதேனே.
4.15.9

154
புத்தூ ருறையும் புனிதனைப்

பூவ ணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை

வேள்விக் குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன் றெரித்தானைப்

பொதியில் மேய புராணனை
வைத்தேன் என்றன் மனத்துள்ளே

*மாத்தூர் மேய மருந்தையே.

* மாத்தூரென்பது - திருவாமாத்தூர்.
4.15.10

155
முந்தித் தானே முளைத்தானை

மூரி வெள்ளே றூர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை

அரக்க னாற்றல் அழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச்

செஞ்சொன் மாலை யடிசேர்த்தி
எந்தை பெம்மான் என்னெம்மான்

என்பார் பாவ நாசமே.
4.15.11
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4. 16 திருப்புகலூர்

பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்

156
செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங்
கையர் கனைகழல் கட்டிய காலினர்
மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும்
பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.1

157
மேகநல் ஊர்தியர் மின்போல் மிளிர்சடைப்
பாக மதிநுத லாளையோர் பாகத்தர்
நாக வளையினர் நாக வுடையினர்
போகர் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.2

158
பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக்
கருந்தாழ் குழலியுந் தாமுங் கலந்து
திருந்தா மனமுடை யார்திறத் தென்றும்
பொருந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.3

159
அக்கார் அணிவடம் ஆகத்தர் நாகத்தர்
நக்கார் இளமதிக் கண்ணியர் நாடொறும்
உக்கார் தலைபிடித் துன்பலிக் கூர்தொறும்
புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.4

160
ஆர்த்தார் உயிரடும் அந்தகன் றன்னுடல்
பேர்த்தார் பிறைநுதற் பெண்ணின்நல் லாள்உட்கக்
கூர்த்தார் மருப்பிற் கொலைக்களிற் றீருரி
போர்த்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.5

161
தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக்
காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர்
சேம நெறியினர் சீரை யுடையவர்
பூமன் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.6

162
உதைத்தார் மறலி உருளவோர் காலாற்
சிதைத்தார் திகழ்தக்கன் செய்தநல் வேள்வி
பதைத்தார் சிரங்கரங் கொண்டுவெய் யோன்கண்
புதைத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.7

163
கரிந்தார் தலையர் கடிமதில் மூன்றுந்
தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண
விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை
புரிந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.8

164
ஈண்டார் அழலி னிருவருங் கைதொழ
நீண்டார் நெடுந்தடு மாற்ற நிலையஞ்ச
மாண்டார்தம் என்பு மலர்க்கொன்றை மாலையும்
பூண்டார் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.9

165
கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி
இறுத்தார் இலங்கையர் கோன்முடி பத்தும்
அறுத்தார் புலனைந்தும் ஆயிழை பாகம்
பொறுத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
4.16.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்,
தேவியார் - கருந்தார்குழலியம்மை.


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.17 திருவாரூர் - அரநெறி

பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்

166
எத்தீ புகினும் எமக்கொரு தீதிலை
தெத்தே யெனமுரன் றெம்முள் உழிதர்வர்
முத்தீ யனையதோர் மூவிலை வேல்பிடித்
தத்தீ நிறத்தார் அரநெறி யாரே.
4.17.1

167
வீரமும் பூண்பர் விசயனொ டாயதோர்
தாரமும் பூண்பர் தமக்கன்பு பட்டவர்
பாரமும் பூண்பர்நற் பைங்கண் மிளிரர
வாரமும் பூண்பர் அரநெறி யாரே.
4.17.2

168
தஞ்சவண் ணத்தர் சடையினர் தாமுமோர்
வஞ்சவண் ணத்தர்வண் டார்குழ லாளொடுந்
துஞ்சவண் ணத்தர்துஞ் சாதகண் ணார்தொழும்
அஞ்சவண் ணத்தர் அரநெறி யாரே.
4.17.3

169
விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின்
றிழித்தனர் கங்கையை யேத்தினர் பாவங்
கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும்
அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே.
4.17.4

170
துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவணந்
தற்றவர் தம்வினை யானவெல் லாமற
அற்றவர் ஆரூர் அறநெறி கைதொழ
உற்றவர் தாமொளி பெற்றனர் தாமே.
4.17.5

171
கூடர வத்தர் குரற்கிண் கிணியடி
நீடர வத்தர்முன் மாலை யிடையிருள்
பாடர வத்தர் பணமஞ்சு பைவிரித்
தாடர வத்தர் அரநெறி யாரே.
4.17.6

172
கூடவல் லார்குறிப் பில்லுமை யாளொடும்
பாடவல் லார்பயின் றந்தியுஞ் சந்தியும்
ஆடவல் லார்திரு வாரூர் அரநெறி
நாடவல் லார்வினை வீடவல் லாரே.
4.17.7

173
பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை
மாலையுங் கண்ணியு மாவன சேவடி
காலையு மாலையுங் கைதொழு வார்மனம்
ஆலயம் ஆரூர் அரநெறி யார்க்கே.
4.17.8

174
முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பிற்
பொடிவண்ணந் தம்புக ழூர்தியின் வண்ணம்
படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி
றடிவண்ணம் ஆரூர் அரநெறி யார்க்கே.
4.17.9

175
பொன்னவில் புன்சடை யானடி யின்னிழல்
இன்னருள் சூடியெள் காதுமி ராப்பகல்
மன்னவர் கின்னரர் வானவர் தாந்தொழும்
அன்னவர் ஆரூர் அரநெறி யாரே.
4.17.10

176
பொருள்மன் னனைப்பற்றிப் புட்பகங் கொண்ட
மருள்மன் னனையெற்றி வாளுட னீந்து
கருள்மன் னுகண்டங் கறுக்க நஞ்சுண்ட
அருள்மன்னர் ஆரூர் அரநெறி யாரே.
4.17.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.18 விடந்தீர்த்ததிருப்பதிகம்

பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்

177
ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே.
4.18.1

178
இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம்
இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண்
இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு
இரண்டுகொ லாமவர் எய்தின தாமே.
4.18.2

179
மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன
மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண்
மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே.
4.18.3

180
நாலுகொ லாமவர் தம்முக மாவன
நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும்
நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள்
நாலுகொ லாமறை பாடின தாமே.
4.18.4

181
அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம்
அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன
அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை
அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே.
4.18.5

182
ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன
ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம்
ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே.
4.18.6

183
ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன
ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல்
ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள்
ஏழுகொ லாமிசை யாக்கின தாமே.
4.18.7

184
எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம்
எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர்
எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன
எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே.
4.18.8

185
ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
ஒன்பது போலவர் பாரிடந் தானே.
4.18.9

186
பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன
பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.
4.18.10
இது அப்பூதிநாயனார் புத்திரரைத் தீண்டியவிடம்
நீங்கும்படி அருளிச்செய்தது.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.19 திருவாரூர்

பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்

187
சூலப் படையானைச் சூழாக வீழருவிக்
கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானைப்
பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய
ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே.
4.19.1

188
பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையிற்
புக்கவூர்ப் பிச்சையேற் றுண்டு பொலிவுடைத்தாய்க்
கொக்கிறகின் தூவல் கொடியெடுத்த கோவணத்தோ
டக்கணிந்த அம்மானை நான்கண்ட தாரூரே.
4.19.2

189
சேய உலகமுஞ் செல்சார்வு மானானை
மாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பனை
வேயொத்த தோளியர்தம் மென்முலைமேல் தண்சாந்தின்
ஆயத் திடையானை நான்கண்ட தாரூரே.
4.19.3

190
ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படர
மாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தின்
நீறேற்ற மேனியானாய் நீள்சடைமேல் நீர்ததும்ப
ஆறேற்ற அந்தணனை நான்கண்ட தாரூரே.
4.19.4

191
தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் ஏறேறிப்
பாங்கான வூர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார்
தேங்காவி நாறுந் திருவாரூர்த் தொன்னகரில்
பூங்கோயி லுள்மகிழ்ந்து போகா திருந்தாரே.
4.19.5

192
எம்பட்டம் பட்ட முடையானை யேர்மதியின்
நும்பட்டஞ் சேர்ந்த நுதலானை அந்திவாய்ச்
செம்பட் டுடுத்துச் சிறுமா னுரியாடை
அம்பட் டசைத்தானை நான்கண்ட தாரூரே.
4.19.6

193
போழொத்த வெண்மதியஞ் சூடிப் பொலிந்திலங்கு
வேழத் துரிபோர்த்தான் வெள்வளையாள் தான்வெருவ
ஊழித்தீ யன்னானை ஓங்கொலிமாப் பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே.
4.19.7

194
வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனைத்
துஞ்சிருளில் ஆடல் உகந்தானைத் தன்தொண்டர்
நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரித்
தஞ்சுடராய் நின்றானை நான்கண்ட தாரூரே.
4.19.8

195
காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன
நீரமுது கோதையோ டாடிய நீள்மார்பன்
பேரமுத முண்டார்கள் உய்யப் பெருங்கடல்நஞ்
சாரமுதா வுண்டானை நான்கண்ட தாரூரே.
4.19.9

196
தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன்
கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
ஆடரவக் கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனை
ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே.
4.19.10

197
மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலாற்
றுஞ்சாப்போர் வாளரக்கன் றோள்நெரியக் கண்குருதிச்
செஞ்சாந் தணிவித்துத் தன்மார்பில் பால்வெண்ணீற்
றஞ்சாந் தணிந்தானை நான்கண்ட தாரூரே.
4.19.11
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.20 திருவாரூர்

பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்

198
காண்டலேகருத் தாய்நினைந்திருந்

தேன்மனம்புகுந் தாய்கழலடி
பூண்டுகொண் டொழிந்தேன்

புறம்போயி னாலறையோ
ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை

மேலெழுகொடி வானிளம்மதி
தீண்டிவந் துலவுந்

திருவாரூ ரம்மானே.
4.20.1

199
கடம்படந்நட மாடினாய்களை

கண்ணெனக்கொரு காதல்செய்தடி
ஒடுங்கி வந்தடைந்

தேனொழிப்பாய் பிழைப்பவெல்லாம்
முடங்கிறால்முது நீர்மலங்கிள

வாளைசெங்கயல் சேல்வரால்களி
றடைந்த தண்கழனி

அணியாரூ ரம்மானே.
4.20.2

200
அருமணித்தடம் பூண்முலை

அரம்பையரொ டருளிப்பாடியர்
உரிமையிற் றொழுவார்

உத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர்

சைவர்பாசுப தர்கபாலிகள்
தெருவினிற் பொலியுந்

திருவாரூ ரம்மானே.
4.20.3

201
பூங்கழல்தொழு தும்பரவியும்

புண்ணியாபுனி தாவுன்பொற்கழல்
ஈங்கிருக்கப் பெற்றேன்

என்னகுறை யுடையேன்
ஓங்குதெங்கிலை யார்கமுகிப

வாழைமாவொடு மாதுளம்பல
தீங்கனி சிதறுந்

திருவாரூ ரம்மானே.
4.20.4

202
நீறுசேர்செழு மார்பினாய்நிரம்

பாமதியொடு நீள்சடையிடை
ஆறுபாய வைத்தாய்

அடியே அடைந்தொழிந்தேன்
ஏறிவண்டொடு தும்பியஞ்சிற

கூன்றவிண்ட மலரிதழ்வழி
தேறல்பாய்ந் தொழுகுந்

திருவாரூ ரம்மானே.
4.20.5

203
அளித்துவந்தடி கைதொழுமவர்

மேல்வினைகெடு மென்றிவையகங்
களித்துவந் துடனே

கலந்தாடக் காதலராய்க்
குளித்துமூழ்கியுந் தூவியுங்குடைந்

தாடுகோதையர் குஞ்சியுள்புகத்
தெளிக்குந் தீர்த்தமறாத்

திருவாரூ ரம்மானே.
4.20.6

204
திரியுமூவெயில் தீயெழச்சிலை

வாங்கிநின்றவ னேயென்சிந்தையுட்
பிரியுமா றெங்ஙனே

பிழைத்தேயும் போகலொட்டேன்
பெரியசெந்நெற் பிரம்புரிகெந்த

சாலிதிப்பிய மென்றிவையகத்
தரியுந் தண்கழனி

யணியாரூ ரம்மானே.
4.20.7

205
பிறத்தலும்பிறந் தாற்பிணிப்பட

வாய்ந்தசைந்துட லம்புகுந்துநின்
றிறக்குமா றுளதே

இழித்தேன் பிறப்பினைநான்
அறத்தையேபுரிந் தமனத்தனாய்

ஆர்வச்செற்றக்கு ரோதநீக்கியுன்
திறத்தனாய் ஒழிந்தேன்

திருவாரூ ரம்மானே.
4.20.8

206
முளைத்தவெண்பிறை மொய்சடையுடை

யாயெப்போதுமென் னெஞ்சிடங்கொள்ள
வளைத்துக் கொண்டிருந்தேன்

வலிசெய்து போகலொட்டேன்
அளைப்பிரிந்த அலவன்போய்ப்புகு

தந்தகாலமுங் கண்டுதன்பெடை
திளைக்குந் தண்கழனித்

திருவாரூ ரம்மானே.
4.20.9

207
நாடினார்கம லம்மலரய

னோடிரணியன் ஆகங்கீண்டவன்
நாடிக் காணமாட்டாத்

தழலாய நம்பானைப்
பாடுவார்பணி வார்பல்லாண்டிசை

கூறுபத்தர்கள் சித்தத்துள்புக்குத்
தேடிக் கண்டுகொண்டேன்

திருவாரூ ரம்மானே.
4.20.10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.21 திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம்

பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்

208
முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.1

209
நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோ றும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்
கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.2

210
வீதிகள் தோறும் வெண்கொடி யோடுவி தானங்கள்
சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளிதோன்றச்
சாதிக ளாய பவளமு முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.3

211
குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மிற் பித்தரைப் போலப் பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.4

212
நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங்
கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந்
தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.5

213
விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
தம்மாண் பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட்
கம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.6

214
செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
மைந்தர்க ளோடு மங்கையர் கூடிம யங்குவார்
இந்திர னாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.7

215
முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப்
பொடிகள் பூசிப் பாடுந் தொண்டர் புடைசூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.8

216
துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை யேத்து நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.9

217
பாரூர் பௌவத் தானைப் பத்தர் பணிந்தேத்தச்
சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந்
தோரூர் ஒழியா துலகம் எங்கும் எடுத்தேத்தும்
ஆரூ ரன்றன் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.22 கோயில் - திருநேரிசை

பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

218
செஞ்சடைக் கற்றை முற்றத்

திளநிலா எறிக்குஞ் சென்னி
நஞ்சடைக் கண்ட னாரைக்

காணலா நறவ நாறும்
மஞ்சடைச் சோலைத் தில்லை

மல்குசிற் றம்ப லத்தே
துஞ்சடை இருள் கிழியத்

துளங்கெரி யாடு மாறே.
4.22.1

219
ஏறனார் ஏறு தம்பால்

இளநிலா எறிக்குஞ் சென்னி
ஆறனார் ஆறு சூடி

ஆயிழை யாளோர் பாகம்
நாறுபூஞ் சோலைத் தில்லை

நவின்றசிற் றம்ப லத்தே
நீறுமெய் பூசி நின்று

நீண்டெரி யாடு மாறே.
4.22.2

220
சடையனார் சாந்த நீற்றர்

தனிநிலா எறிக்குஞ் சென்னி
உடையனா ருடைத லையில்

உண்பதும் பிச்சை யேற்றுக்
கடிகொள்பூந் தில்லை தன்னுட்

கருதுசிற் றம்ப லத்தே
அடிகழ லார்க்க நின்று

வனலெரி யாடு மாறே.
4.22.3

221
பையர வசைத்த அல்குற்

பனிநிலா எறிக்குஞ் சென்னி
மையரிக் கண்ணி யாளும்

மாலுமோர் பாக மாகிச்
செய்யெரி தில்லை தன்னுட்

டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
கையெரி வீசி நின்று

கனலெரி யாடு மாறே.
4.22.4

222
ஓதினார் வேதம் வாயால்

ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
பூதனார் பூதஞ் சூழப்

புலியுரி யதள னார்தாம்
நாதனார் தில்லை தன்னுள்

நவின்றசிற் றம்ப லத்தே
காதில்வெண் குழைகள் தாழக்

கனலெரி யாடு மாறே.
4.22.5

223
ஓருடம் பிருவ ராகி

ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
பாரிடம் பாணி செய்யப்

பயின்றஎம் பரம மூர்த்தி
காரிடந் தில்லை தன்னுட்

கருதுசிற் றம்ப லத்தே
பேரிடம் பெருக நின்று

பிறங்கெரி யாடு மாறே.
4.22.6

224
முதற்றனிச் சடையை மூழ்க

முகிழ்நிலா எறிக்குஞ் சென்னி
மதக்களிற் றுரிவை போர்த்த

மைந்தரைக் காண லாகும்
மதத்துவண் டறையுஞ் சோலை

மல்குசிற் றம்ப லத்தே
கதத்ததோ ரரவ மாடக்

கனலெரி யாடு மாறே.
4.22.7

225
மறையனார் மழுவொன் றேந்தி

மணிநிலா எறிக்குஞ் சென்னி
இறைவனார் எம்பி ரானார்

ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறைகொள்நீர்த் தில்லை தன்னுட்

டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
அறைகழ லார்க்க நின்று

வனலெரி யாடு மாறே.
4.22.8

226
விருத்தனாய்ப் பால னாகி

விரிநிலா எறிக்குஞ் சென்னி
நிருத்தனார் நிருத்தஞ் செய்ய

நீண்டபுன் சடைகள் தாழக்
கருத்தனார் தில்லை தன்னுட்

கருதுசிற் றம்ப லத்தே
அருத்தமா மேனி தன்னோ

டனலெரி யாடு மாறே.
4.22.9

227
பாலனாய் விருத்த னாகிப்

பனிநிலா எறிக்குஞ் சென்னி
காலனைக் காலாற் காய்ந்த

கடவுளார் விடையொன் றேறி
ஞாலமாந் தில்லை தன்னுள்

நவின்றசிற் றம்ப லத்தே
நீலஞ்சேர் கண்ட னார்தாம்

நீண்டெரி யாடு மாறே.
4.22.10

228
மதியிலா அரக்க னோடி

மாமலை யெடுக்க நோக்கி
நெதியன்றோள் நெரிய வூன்றி

நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
மதியந்தோய் தில்லை தன்னுள்

மல்குசிற் றம்ப லத்தே
அதிசயம் போல நின்று

வனலெரி யாடு மாறே.
4.22.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மூலத்தானநாயகர், சபாநாதர். தேவியார் - சிவகாமியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.23 கோயில் - திருநேரிசை

பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

229
பத்தனாய்ப் பாட மாட்டேன்

பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கேன்

என்னைநீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை

அம்பலத் தாடு கின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான்

அடியனேன் வந்த வாறே.
4.23.1

230
கருத்தனாய்ப் பாட மாட்டேன்

காம்பன தோளி பங்கா
ஒருத்தரா லறிய வொண்ணாத்

திருவுரு வுடைய சோதீ
திருத்தமாந் தில்லை தன்னுட்

டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
நிருத்தம்நான் காண வேண்டி

நேர்பட வந்த வாறே.
4.23.2

231
கேட்டிலேன் கிளைபி ரியேன்

கேட்குமா கேட்டி யாகில்
நாட்டினேன் நின்றன் பாதம்

நடுப்பட நெஞ்சி னுள்ளே
மாட்டினீர் வாளை பாயு

மல்குசிற் றம்ப லத்தே
கூட்டமாங் குவிமு லையாள்

கூடநீ யாடு மாறே.
4.23.3

232
சிந்தையைத் திகைப்பி யாதே

செறிவுடை அடிமை செய்ய
எந்தைநீ அருளிச் செய்யாய்

யாதுநான் செய்வ தென்னே
செந்தியார் வேள்வி ஓவாத்

தில்லைச்சிற் றம்ப லத்தே
அந்தியும் பகலும் ஆட

அடியிணை அலசுங் கொல்லோ.
4.23.4

233
கண்டவா திரிந்து நாளுங்

கருத்தினால் நின்றன் பாதங்
கொண்டிருந் தாடிப் பாடிக்

கூடுவன் குறிப்பி னாலே
வண்டுபண் பாடுஞ் சோலை

மல்குசிற் றம்ப லத்தே
எண்டிசை யோரு மேத்த

இறைவநீ யாடு மாறே.
4.23.5

234
பார்த்திருந் தடிய னேன்நான்

பரவுவன் பாடி யாடி
மூர்த்தியே என்பன் உன்னை

மூவரில் முதல்வன் என்பன்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்

தில்லைச்சிற் றம்ப லத்துக்
கூத்தாவுன் கூத்துக் காண்பான்

கூடநான் வந்த வாறே.
4.23.6

235
பொய்யினைத் தவிர விட்டுப்

புறமலா அடிமை செய்ய
ஐயநீ அருளிச் செய்யாய்

ஆதியே ஆதி மூர்த்தி
வையகந் தன்னில் மிக்க

மல்குசிற் றம்ப லத்தே
பையநின் னாடல் காண்பான்

பரமநான் வந்த வாறே.
4.23.7

236
மனத்தினார் திகைத்து நாளும்

மாண்பலா நெறிகள் மேலே
கனைப்பரால் என்செய் கேனோ

கறையணி கண்டத் தானே
தினைத்தனை வேதங் குன்றாத்

தில்லைச்சிற் றம்ப லத்தே
அனைத்துநின் னிலயங் காண்பான்

அடியனேன் வந்த வாறே.
4.23.8

237
நெஞ்சினைத் தூய்மை செய்து

நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ

வானவர் தலைவ னேநீ
மஞ்சடை சோலைத் தில்லை

மல்குசிற் றம்ப லத்தே
அஞ்சொலாள் காண நின்று

அழகநீ யாடு மாறே.
4.23.9

238
மண்ணுண்ட மால வனும்

மலர்மிசை மன்னி னானும்
விண்ணுண்ட திருவு ருவம்

விரும்பினார் காண மாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க

தில்லைச்சிற் றம்ப லத்தே
பண்ணுண்ட பாட லோடும்

பரமநீ யாடு மாறே.
4.23.10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.24 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

239
இரும்புகொப் பளித்த யானை

ஈருரி போர்த்த ஈசன்
கரும்புகொப் பளித்த இன்சொற்

காரிகை பாக மாகச்
சுரும்புகொப் பளித்த கங்கைத்

துவலைநீர் சடையி லேற்ற
அரும்புகொப் பளித்த சென்னி

அதிகைவீ ரட்ட னாரே.
4.24.1

240
கொம்புகொப் பளித்த திங்கட்

கோணல்வெண் பிறையுஞ் சூடி
வம்புகொப் பளித்த கொன்றை

வளர்சடை மேலும் வைத்துச்
செம்புகொப் பளித்த மூன்று

மதிலுடன் சுருங்க வாங்கி
அம்புகொப் பளிக்க எய்தார்

அதிகைவீ ரட்ட னாரே.
4.24.2

241
விடையுங்கொப் பளித்த பாதம்

விண்ணவர் பரவி யேத்தச்
சடையுங்கொப் பளித்த திங்கட்

சாந்தவெண் ணீறு பூசி
உடையுங்கொப் பளித்த நாகம்

உள்குவார் உள்ளத் தென்றும்
அடையுங்கொப் பளித்த சீரார்

அதிகைவீ ரட்ட னாறே.
4.24.3

242
கறையுங்கொப் பளித்த கண்டர்

காமவேள் உருவம் மங்க
இறையுங்கொப் பளித்த கண்ணார்

ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
மறையுங்கொப் பளித்த நாவர்

வண்டுண்டு பாடுங் கொன்றை
அறையுங்கொப் பளித்த சென்னி

அதிகைவீ ரட்ட னாரே.
4.24.4

243
நீறுகொப் பளித்த மார்பர்

நிழல்திகழ் மழுவொன் றேந்திக்
கூறுகொப் பளித்த கோதை

கோல்வளை மாதோர் பாகம்
ஏறுகொப் பளித்த பாதம்

இமையவர் பரவி யேத்த
ஆறுகொப் பளித்த சென்னி

அதிகைவீ ரட்ட னாரே.
4.24.5

244
வணங்குகொப் பளித்த பாதம்

வானவர் பரவி யேத்தப்
பிணங்குகொப் பளித்த சென்னிச்

சடையுடைப் பெருமை யண்ணல்
சுணங்குகொப் பளித்த கொங்கைச்

சுரிகுழல் பாக மாக
அணங்குகொப் பளித்த மேனி

அதிகைவீ ரட்ட னாரே.
4.24.6

245
சூலங்கொப் பளித்த கையர்

சுடர்விடு மழுவாள் வீசி
நூலுங்கொப் பளித்த மார்பில்

நுண்பொறி யரவஞ் சேர்த்தி
மாலுங்கொப் பளித்த பாகர்

வண்டுபண் பாடுங் கொன்றை
ஆலங்கொப் பளித்த கண்டத்

ததிகைவீ ரட்ட னாறே.
4.24.7

246
நாகங்கொப் பளித்த கையர்

நான்மறை யாய பாடி
மேகங்கொப் பளித்த திங்கள்

விரிசடை மேலும் வைத்துப்
பாகங்கொப் பளித்த மாதர்

பண்ணுடன் பாடி யாட
ஆகங்கொப் பளித்த தோளார்

அதிகைவீ ரட்ட னாரே.
4.24.8

247
பரவுகொப் பளித்த பாடல்

பண்ணுடன் பத்தர் ஏத்த
விரவுகொப் பளித்த கங்கை

விரிசடை மேவ வைத்து
இரவுகொப் பளித்த கண்டர்

ஏத்துவா ரிடர்கள் தீர்ப்பார்
அரவுகொப் பளித்த கையர்

அதிகைவீ ரட்ட னாரே.
4.24.9

248
தொண்டைகொப் பளித்த செவ்வாய்த்

துடியிடைப் பரவை யல்குற்
கொண்டைகொப் பளித்த கோதைக்

கோல்வளை பாக மாக
வண்டுகொப் பளித்த தீந்தேன்

வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க்

கெடிலவீ ரட்ட னாரே.
4.24.10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.25 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

249
வெண்ணிலா மதியந் தன்னை

விரிசடை மேவ வைத்து
உண்ணிலாப் புகுந்து நின்றங்

குணர்வினுக் குணரக் கூறி
விண்ணிலார் மீயச் சூரர்

வேண்டுவார் வேண்டு வார்க்கே
அண்ணியார் பெரிதுஞ் சேயார்

அதிகைவீ ரட்ட னாரே.
4.25.1

250
பாடினார் மறைகள் நான்கும்

பாயிருள் புகுந்தென் உள்ளங்
கூடினார் கூட லால

வாயிலார் நல்ல கொன்றை
சூடினார் சூடல் மேவிச்

சூழ்சுடர்ச் சுடலை வெண்ணீ
றாடினார் ஆடல் மேவி

அதிகைவீ ரட்ட னாரே.
4.25.2

251
ஊனையே கழிக்க வேண்டில்

உணர்மின்கள் உள்ளத் துள்ளே
தேனைய மலர்கள் கொண்டு

சிந்தையுட் சிந்திக் கின்ற
ஏனைய பலவு மாகி

இமையவர் ஏத்த நின்று
ஆனையின் உரிவை போர்த்தார்

அதிகைவீ ரட்ட னாரே.
4.25.3

252
துருத்தியாங் குரம்பை தன்னில்

தொண்ணூற்றங் கறுவர் நின்று
விருத்திதான் தருக வென்று

வேதனை பலவுஞ் செய்ய
வருத்தியால் வல்ல வாறு

வந்துவந் தடைய நின்ற
அருத்தியார்க் கன்பர் போலும்

அதிகைவீ ரட்ட னாரே.
4.25.4

253
பத்தியால் ஏத்தி நின்று

பணிபவர் நெஞ்சத் துள்ளார்
துத்திஐந் தலைய நாகஞ்

சூழ்சடை முடிமேல் வைத்து
உத்தர மலையர் பாவை

உமையவள் நடுங்க அன்று
அத்தியின் உரிவை போர்த்தார்

அதிகைவீ ரட்ட னாரே.
4.25.5

254
வரிமுரி பாடி யென்றும்

வல்லவா றடைந்து நெஞ்சே
கரியுரி மூட வல்ல

கடவுளைக் காலத் தாலே
சுரிபுரி விரிகு ழலாள்

துடியிடைப் பரவை யல்குல்
அரிவையோர் பாகர் போலும்

அதிகைவீ ரட்ட னாரே.
4.25.6

255
நீதியால் நினைசெய் நெஞ்சே

நிமலனை நித்த மாகப்
பாதியாம் உமைதன் னோடும்

பாகமாய் நின்ற எந்தை
சோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச்

சுண்ணவெண் ணீற தாடி
ஆதியும் ஈறு மானார்

அதிகைவீ ரட்ட னாரே.
4.25.7

256
எல்லியும் பகலு மெல்லாந்

துஞ்சுவேற் கொருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில்

புக்கனர் காம னென்னும்
வில்லிஐங் கணையி னானை

வெந்துக நோக்கி யிட்டார்
அல்லியம் பழன வேலி

அதிகைவீ ரட்ட னாரே.
4.25.8

257
ஒன்றவே யுணர்தி ராகில்

ஓங்காரத் தொருவ னாகும்
வென்றஐம் புலன்கள் தம்மை

விலக்குதற் குரியீ ரெல்லாம்
நன்றவன் நார ணனும்

நான்முகன் நாடிக் காண்குற்
றன்றவர்க் கரியர் போலும்

அதிகைவீ ரட்ட னாரே.
4.25.9

258
தடக்கையால் எடுத்து வைத்துத்

தடவரை குலுங்க ஆர்த்துக்
கிடக்கையால் இடர்க ளோங்கக்

கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவி ரலான்

முருகமர் கோதை பாகத்
தடக்கினார் என்னை யாளும்

அதிகைவீ ரட்ட னாரே.
4.25.10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.26 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

திருச்சிற்றம்பலம்

259
நம்பனே எங்கள் கோவே

நாதனே ஆதி மூர்த்தி
பங்கனே பரம யோகி

என்றென்றே பரவி நாளுஞ்
செம்பொனே பவளக் குன்றே

திகழ்மலர்ப் பாதங் காண்பான்
அன்பனே அலந்து போனேன்

அதிகைவீ ரட்ட னாரே.
4.26.1

260
பொய்யினால் மிடைந்த போர்வை

புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழ மாட்டேன்

வேண்டிற்றொன் றைவர் வேண்டார்
செய்யதா மரைகள் அன்ன

சேவடி இரண்டுங் காண்பான்
ஐயநான் அலந்து போனேன்

அதிகைவீ ரட்ட னாரே.
4.26.2

261
நீதியால் வாழ மாட்டேன்

நித்தலுந் தூயே னல்லேன்
ஓதியும் உணர மாட்டேன்

உன்னையுள் வைக்க மாட்டேன்
சோதியே சுடரே உன்றன்

தூமலர்ப் பாதங் காண்பான்
ஆதியே அலந்து போனேன்

அதிகைவீ ரட்ட னாரே.
4.26.3

262
தெருளுமா தெருள மாட்டேன்

தீவினைச் சுற்ற மென்னும்
பொருளுளே அழுந்தி நாளும்

போவதோர் நெறியுங் காணேன்
இருளுமா மணிகண் டாநின்

இணையடி இரண்டுங் காண்பான்
அருளுமா றருள வேண்டும்

அதிகைவீ ரட்ட னாரே.
4.26.4

263
அஞ்சினால் இயற்றப் பட்ட

ஆக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப் பட்டிங்

குழிதரும் ஆத னேனை
அஞ்சினால் உய்க்கும் வண்ணங்

காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி

அதிகைவீ ரட்ட னாரே.
4.26.5

264
உறுகயி றூசல் போல

ஒன்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல

வந்துவந் துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போலப்

பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூச லானேன்

அதிகைவீ ரட்ட னாரே.
4.26.6

265
கழித்திலேன் காம வெந்நோய்

காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி

உணர்வெனும் இமைதி றந்து
விழித்திலேன் வெளிறு தோன்ற

வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்
அழித்திலேன் அயர்த்துப் போனேன்

அதிகைவீ ரட்ட னாரே.
4.26.7

266
மன்றத்துப் புன்னை போல

மரம்படு துயர மெய்தி
ஒன்றினால் உணர மாட்டேன்

உன்னையுள் வைக்க மாட்டேன்
கன்றிய காலன் வந்து

கருக்குழி விழுப்ப தற்கே
அன்றினான் அலமந் திட்டேன்

அதிகைவீ ரட்ட னாரே.
4.26.8

267
பிணிவிடா ஆக்கை பெற்றேன்

பெற்றமொன் றேறு வானே
பணிவிடா இடும்பை யென்னும்

பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் தூய னல்லேன்

தூமலர்ப் பாதங் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன்

அதிகைவீ ரட்ட னாரே.
4.26.9

268
திருவினாள் கொழுந னாருந்

திசைமுக முடைய கோவும்
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும்

இணையடி காண மாட்டா
ஒருவனே எம்பி ரானே

உன்திருப் பாதங் கண்பான்
அருவனே அருள வேண்டும்

அதிகைவீ ரட்ட னாரே.
4.26.10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.27 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்
269
மடக்கினார் புலியின் தோலை

மாமணி நாகங் கச்சா
முடக்கினார் முகிழ்வெண் டிங்கள்

மொய்சடைக் கற்றை தன்மேல்
தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த்

துடியிடைப் பரவை யல்குல்
அடக்கினார் கெடில வேலி

அதிகைவீ ரட்ட னாரே.
4.27.1

270
சூடினார் கங்கை யாளைச்

சூடிய துழனி கேட்டங்
கூடினாள் நங்கை யாளும்

ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம்

பாடிய பாணி யாலே
ஆடினார் கெடில வேலி

அதிகைவீ ரட்ட னாரே.
4.27.2

271
கொம்பினார் குழைத்த வேனற்

கோமகன் கோல நீர்மை
நம்பினார் காண லாகா

வகையதோர் நடலை செய்தார்
வெம்பினார் மதில்கள் மூன்றும்

வில்லிடை எரித்து வீழ்த்த
அம்பினார் கெடில வேலி

அதிகைவீ ரட்ட னாரே.
4.27.3

272
மறிபடக் கிடந்த கையர்

வளரிள மங்கை பாகஞ்
செறிபடக் கிடந்த செக்கர்ச்

செழுமதிக் கொழுந்து சூடி
பொறிபடக் கிடந்த நாகம்

புகையுமிழ்ந் தழல வீக்கிக்
கிறிபட நடப்பர் போலுங்

கெடிலவீ ரட்ட னாரே.
4.27.4

273
நரிவரால் கவ்வச் சென்று

நற்றசை இழந்த தொத்த
தெரிவரால் மால்கொள் சிந்தை

தீர்ப்பதோர் சிந்தை செய்வார்
வரிவரால் உகளுந் தெண்ணீணர்க்

கழனிசூழ் பழன வேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த

அதிகைவீ ரட்ட னாரே.
4.27.5

274
புள்ளலைத் துண்ட ஓட்டில்

உண்டுபோய் பலாசங் கொம்பின்
சுள்ளலைச் சுடலை வெண்ணீ

றணிந்தவர் மணிவெள் ளேற்றுத்
துள்ளலைப் பாகன் றன்னைத்

தொடர்ந்திங்கே கிடக்கின் றேனை
அள்ளலைக் கடப்பித் தாளும்

அதிகைவீ ரட்ட னாரே.
4.27.6

275
நீறிட்ட நுதலர் வேலை

நீலஞ்சேர் கண்டர் மாதர்
கூறிட்ட மெய்ய ராகிக்

கூறினார் ஆறும் நான்குங்
கீறிட்ட திங்கள் சூடிக்

கிளர்தரு சடையி னுள்ளால்
ஆறிட்டு முடிப்பர் போலும்

அதிகைவீ ரட்ட னாரே.
4.27.7

276
காணிலார் கருத்தில் வாரார்

திருத்தலார் பொருத்த லாகார்
ஏணிலார் இறப்பும் இல்லார்

பிறப்பிலார் துறக்க லாகார்
நாணிலார் ஐவ ரோடும்

இட்டெனை விரவி வைத்தார்
ஆணலார் பெண்ணும் அல்லார்

அதிகைவீ ரட்ட னாரே.
4.27.8


இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
4.27.9

277
தீர்த்தமா மலையை நோக்கிச்

செருவலி அரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை அஞ்சப்

பெருவிர லதனை யூன்றிச்
சீர்த்தமா முடிகள் பத்துஞ்

சிதறுவித் தவனை யன்று
ஆர்த்தவாய் அலற வைத்தார்

அதிகைவீ ரட்ட னாரே.
4.27.10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.28 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்
278
முன்பெலாம் இளைய காலம்

மூர்த்தியை நினையா தோடிக்
கண்கண இருமி நாளுங்

கருத்தழிந் தருத்த மின்றிப்
பின்பக லுணங்கல் அட்டும்

பேதைமார் போன்றேன் உள்ளம்
அன்பனாய் வாழ மாட்டேன்

அதிகைவீ ரட்ட னாரே.
4.28.1

279
கறைப்பெருங் கண்டத் தானே

காய்கதிர் நமனை யஞ்சி
நிறைப்பெருங் கடலைக் கண்டேன்

நீள்வரை யுச்சி கண்டேன்
பிறைப்பெருஞ் சென்னி யானே

பிஞ்ஞகா இவைய னைத்தும்
அறுப்பதோர் உபாயங் காணேன்

அதிகைவீ ரட்ட னாரே.
4.28.2

280
நாதனா ரென்ன நாளும்

நடுங்கின ராகித் தங்கள்
ஏதங்கள் அறிய மாட்டார்

இணையடி தொழுதோம் என்பார்
ஆதனா னவனென் றெள்கி

அதிகைவீ ரட்ட னேநின்
பாதநான் பரவா துய்க்கும்

பழவினைப் பரிசி லேனே.
4.28.3

281
சுடலைசேர் சுண்ண மெய்யர்

சுரும்புண விரிந்த கொன்றைப்
படலைசேர் அலங்கல் மார்பர்

பழனஞ்சேர் கழனித் தெங்கின்
மடலைநீர் கிழிய வோடி

அதனிடை மணிகள் சிந்துங்
கெடிலவீ ரட்ட மேய

கிளர்சடை முடிய னாரே.
4.28.4

282
மந்திர முள்ள தாக

மறிகட லெழுநெய் யாக
இந்திரன் வேள்வித் தீயில்

எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ்
சிந்திர மாக நோக்கித்

தெருட்டுவார் தெருட்ட வந்து
கந்திரம் முரலுஞ் சோலைக்

கானலங் கெடிலத் தாரே.
4.28.5


இப்பதிகத்தில் 6,7,8,9-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின.
4.28.6-9

283
மைஞ்ஞல மனைய கண்ணாள்

பங்கன்மா மலையை யோடி
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க

விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு

காதலால் இனிது சொன்ன
கின்னரங் கேட்டு கந்தார்

கெடிலவீ ரட்ட னாரே.
4.28.10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.29 திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

284
ஊனினுள் ளுயிரை வாட்டி

யுணர்வினார்க் கெளிய ராகி
வானினுள் வான வர்க்கும்

அறியலா காத வஞ்சர்
நானெனிற் றானே யென்னு

ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
தேனும்இன் னமுது மானார்

திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.1

285
நொய்யவர் விழுமி யாரும்

நூலினுள் நெறியைக் காட்டும்
மெய்யவர் பொய்யு மில்லார்

உடலெனும் இடிஞ்சில் தன்னில்
நெய்யமர் திரியு மாகி

நெஞ்சத்துள் விளக்கு மாகிச்
செய்யவர் கரிய கண்டர்

திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.2

286
வெள்ளியர் கரியர் செய்யர்

விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர் ஊழி யூழி

யுலகம தேத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத் துள்ளார்

பஞ்சமம் பாடி யாடுந்
தெள்ளியர் கள்ளந் தீர்ப்பார்

திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.3

287
தந்தையுந் தாயு மாகித்

தானவன் ஞான மூர்த்தி
முந்திய தேவர் கூடி

முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தைநீ சரண மென்றங்

கிமையவர் பரவி யேத்தச்
சிந்தையுட் சிவம தானார்

திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.4

288
ஆறுடைச் சடையர் போலும்

அன்பருக் கன்பர் போலுங்
கூறுடை மெய்யர் போலுங்

கோளர வரையர் போலும்
நீறுடை யழகர் போலும்

நெய்தலே கமழு நீர்மைச்
சேறுடைக் கமல வேலித்

திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.5

289
ஞாலமும் அறிய வேண்டின்

நன்றென வாழ லுற்றீர்
காலமுங் கழிய லான

கள்ளத்தை ஒழிய கில்லீர்
கோலமும் வேண்டா ஆர்வச்

செற்றங்கள் குரோத நீக்கில்
சீலமும் நோன்பு மாவார்

திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.6

290
புரிகாலே நேசஞ் செய்ய

இருந்தபுண் டரீகத் தாரும்
எரிகாலே மூன்று மாகி

இமையவர் தொழநின் றாரும்
தெரிகாலே மூன்று சந்தி

தியானித்து வணங்க நின்று
திரிகாலங் கண்ட எந்தை

திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.7

291
காருடைக் கொன்றை மாலை

கதிர்மதி அரவி னோடும்
நீருடைச் சடையுள் வைத்த

நீதியார் நீதி யுள்ளார்
பாரொடு விண்ணும் மண்ணும்

பதினெட்டுக் கணங்க ளேத்தச்
சீரொடு பாட லானார்

திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.8

292
ஓவாத மறைவல் லானும்

ஓதநீர் வண்ணன் காணா
மூவாத பிறப்பி லாரும்

முனிகளா னார்கள் ஏத்தும்
பூவான மூன்றும் முந்நூற்

றறுபது மாகும் எந்தை
தேவாதி தேவ ரென்றுந்

திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.9

293
அங்கங்க ளாறு நான்கும்

அந்தணர்க் கருளிச் செய்து
சங்கங்கள் பாட ஆடுஞ்

சங்கரன் மலைஎ டுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர

அலறிட அடர்த்து நின்றுஞ்
செங்கண்வெள் ளேற தேறுந்

திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.29.10 இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.30 திருக்கழிப்பாலை - திரு நேரிசை


திருச்சிற்றம்பலம்

294
நங்கையைப் பாகம் வைத்தார்

ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார்

ஆனையின் உரிவை வைத்தார்
தங்கையின் யாழும் வைத்தார்

தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.1

295
விண்ணினை விரும்ப வைத்தார்

வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார்

பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட

மாலினுக் கருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.2

296
வாமனை வணங்க வைத்தார்

வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனைச் சடைமேல் வைத்தார்

சோதியுட் சோதி வைத்தார்
ஆமனை யாட வைத்தார்

அன்பெனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.3

297
அரியன அங்கம் வேதம்

அந்தணர்க் கருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும்

பேரழ லுண்ண வைத்தார்
பரியதீ வண்ண ராகிப்

பவளம்போல் நிறத்தை வைத்தார்
கரியதோர் கண்டம் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.4

298
கூரிருள் கிழிய நின்ற

கொடுமழுக் கையில் வைத்தார்
பேரிருள் கழிய மல்கு

பிறைபுனற் சடையுள் வைத்தார்
ஆரிருள் அண்டம் வைத்தார்

அறுவகைச் சமயம் வைத்தார்
காரிருள் கண்டம் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.5

299
உட்டங்கு சிந்தை வைத்தார்

உள்குவார்க் குள்ளம் வைத்தார்
விட்டங்கு வேள்வி வைத்தார்

வெந்துயர் தீர வைத்தார்
நட்டங்கு நடமும் வைத்தார்

ஞானமு நவில வைத்தார்
கட்டங்கந் தோண்மேல் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.6

300
ஊனப்பே ரொழிய வைத்தார்

ஓதியே உணர வைத்தார்
ஞானப்பேர் நவில வைத்தார்

ஞானமு நடுவும் வைத்தார்
வானப்பே ராறும் வைத்தார்

வைகுந்தற் காழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே
4.30.7

301
கொங்கினும் அரும்பு வைத்தார்

கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார்

சாம்பலும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார்

ஆலமும் உண்டு வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.8

302
சதுர்முகன் தானும் மாலுந்

தம்மிலே இகலக் கண்டு
எதிர்முக மின்றி நின்ற

எரியுரு வதனை வைத்தார்
பிதிர்முகன் காலன் றன்னைக்

கால்தனிற் பிதிர வைத்தார்
கதிர்முகஞ் சடையில் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.9

303
மாலினாள் நங்கை அஞ்ச

மதிலிலங் கைக்கு மன்னன்
வேலினான் வெகுண் டெடுக்கக்

காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு

நொடிப்பதோ ரளவில் வீழக்
காலினால் ஊன்றி யிட்டார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
4.30.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணவீசுவரர், தேவியார் - பொற்பதவேதநாயகி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.31 திருக்கடவூர் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

304
பொள்ளத்த காய மாயப்

பொருளினைப் போக மாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில்

விரும்புமின் விளக்குத் தூபம்
உள்ளத்த திரியொன் றேற்றி

உணருமா றுணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலுங்

கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.1

305
மண்ணிடைக் குரம்பை தன்னை

மதித்துநீர் மைய லெய்தில்
விண்ணிடைத் தரும ராசன்

வேண்டினால் விலக்கு வாரார்
பண்ணிடைச் சுவைகள் பாடி

ஆடிடும் பத்தர்க் கென்றுங்
கண்ணிடை மணியர் போலுங்

கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.2

306
பொருத்திய குரம்பை தன்னுட்

பொய்நடை செலுத்து கின்றீர்
ஒருத்தனை யுணர மாட்டீர்

உள்ளத்திற் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறு தன்னை

வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினில் இருப்பர் போலுங்

கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.3

307
பெரும்புலர் காலை மூழ்கிப்

பித்தற்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்

கார்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம்

விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார்

கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.4

308
தலக்கமே செய்து வாழ்ந்து

தக்கவா றொன்று மின்றி
விலக்குவா ரிலாமை யாலே

விளக்கதிற் கோழி போன்றேன்
மலக்குவார் மனத்தி னுள்ளே

காலனார் தமர்கள் வந்து
கலக்கநான் கலங்கு கின்றேன்

கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.5

309
பழியுடை யாக்கை தன்னிற்

பாழுக்கே நீரி றைத்து
வழியிடை வாழ மாட்டேன்

மாயமுந் தெளிய கில்லேன்
அழிவுடைத் தாய வாழ்க்கை

ஐவரால் அலைக்கப் பட்டுக்
கழியிடைத் தோணி போன்றேன்

கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.6

310
மாயத்தை அறிய மாட்டேன்

மையல்கொள் மனத்த னாகிப்
பேயொத்துக் கூகை யானேன்

பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ
நேயத்தால் நினைய மாட்டேன்

நீதனே நீசனேன் நான்
காயத்தைக் கழிக்க மாட்டேன்

கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.7

311
பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து

பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா

ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
எற்றுளேன் என்செய் கேன்நான்

இடும்பையால் ஞான மேதுங்
கற்றிலேன் களைகண் காணேன்

கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.8

312
சேலின்நேர் அனைய கண்ணார்

திறம்விட்டுச் சிவனுக் கன்பாய்ப்
பாலுநற் றயிர்நெய் யோடு

பலபல ஆட்டி யென்றும்
மாலினைத் தவிர நின்ற

மார்க்கண்டற் காக வன்று
காலனை யுதைப்பர் போலுங்

கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.9

313
முந்துரு இருவ ரோடு

மூவரு மாயி னாரும்
இந்திர னோடு தேவர்

இருடிகள் இன்பஞ் செய்ய
வந்திரு பதுகள் தோளால்

எடுத்தவன் வலியை வாட்டிக்
கந்திரு வங்கள் கேட்டார்

கடவூர்வீ ரட்ட னாரே.
4.31.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர், தேவியார் - அபிராமியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.32 திருப்பயற்றூர் - திரு நேரிசை


திருச்சிற்றம்பலம்

314
உரித்திட்டார் ஆனை யின்றோள்

உதிரவா றொழுகி யோட
விரித்திட்டார் உமையா ளஞ்சி

விரல்விதிர்த் தலக்கண் நோக்கித்
தரித்திட்டார் சிறிது போது

தரிக்கில ராகித் தாமுஞ்
சிரித்திட்டார் எயிறு தோன்றத்

திருப்பயற் றூர னாரே.
4.32.1

315
உவந்திட்டங் குமையோர் பாகம்

வைத்தவர் ஊழி யூழி
பவந்திட்ட பரம னார் தாம்

மலைச்சிலை நாகம் ஏற்றிக்
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றுங்

கனலெரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந்

திருப்பயற் றூர னாரே.
4.32.2

316
நங்களுக் கருள தென்று

நான்மறை யோது வார்கள்
தங்களுக் கருளும் எங்கள்

தத்துவன் றழலன் றன்னை
எங்களுக் கருள்செய் யென்ன

நின்றவன் நாகம் அஞ்சுந்
திங்களுக் கருளிச் செய்தார்

திருப்பயற் றூர னாரே.
4.32.3

317
பார்த்தனுக் கருளும் வைத்தார்

பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்

சாமுண்டி சாம வேதங்
கூத்தொடும் பாட வைத்தார்

கோளரா மதியம் நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார்

திருப்பயற் றூர னாரே.
4.32.4

318
மூவகை மூவர் போலும்

முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலும்

நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை யாவர் போலும்

ஆதிரை நாளர் போலுந்
தேவர்கள் தேவர் போலுந்

திருப்பயற் றூர னாரே.
4.32.5

319
ஞாயிறாய் நமனு மாகி

வருணனாய்ச் சோம னாகித்
தீயறா நிருதி வாயுத்

திப்பிய சாந்த னாகிப்
பேயறாக் காட்டி லாடும்

பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலுந்

திருப்பயற் றூர னாரே.
4.32.6

320
ஆவியாய் அவியு மாகி

அருக்கமாய்ப் பெருக்க மாகிப்
பாவியர் பாவந் தீர்க்கும்

பரமனாய்ப் பிரம னாகிக்
காவியங் கண்ண ளாகிக்

கடல்வண்ண மாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார்

திருப்பயற் றூர னாரே.
4.32.7

321
தந்தையாய்த் தாயு மாகித்

தரணியாய்த் தரணி யுள்ளார்க்
கெந்தையு மென்ன நின்ற

ஏழுல குடனு மாகி
எந்தையெம் பிரானே என்றென்

றுள்குவா ருள்ளத் தென்றுஞ்
சிந்தையுஞ் சிவமு மாவார்

திருப்பயற் றூர னாரே.
4.32.8

322
புலன்களைப் போக நீக்கிப்

புந்தியை யொருங்க வைத்து
இலங்களைப் போக நின்று

இரண்டையும் நீக்கி யொன்றாய்
மலங்களை மாற்ற வள்ளார்

மனத்தினுட் போக மாகிச்
சினங்களைக் களைவர் போலுந்

திருப்பயற் றூர னாரே.
4.32.9

323
மூர்த்திதன் மலையின் மீது

போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற்

பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும்

அடர்த்துநல் லரிவை யஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார்

திருப்பயற் றூர னாரே.
4.32.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருப்பயத்தீசுவரர்,
தேவியார் - காவியங்கண்ணியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.33 திருமறைக்காடு - திரு நேரிசை


திருச்சிற்றம்பலம்

324
இந்திர னோடு தேவர்

இருடிகள் ஏத்து கின்ற
சுந்தர மானார் போலுந்

துதிக்கலாஞ் சோதி போலுஞ்
சந்திர னோடுங் கங்கை

அரவையுஞ் சடையுள் வைத்து
மந்திர மானார் போலும்

மாமறைக் காட னாரே.
4.33.1

325
தேயன நாட ராகித்

தேவர்கள் தேவர் போலும்
பாயன நாட றுக்கும்

பத்தர்கள் பணிய வம்மின்
காயன நாடு கண்டங்

கதனுளார் காள கண்டர்
மாயன நாடர் போலும்

மாமறைக் காட னாரே.
4.33.2

326
அறுமையிவ் வுலகு தன்னை

யாமெனக் கருதி நின்று
வெறுமையின் மனைகள் வாழ்ந்து

வினைகளால் நலிவு ணாதே
சிறுமதி அரவு கொன்றை

திகழ்தரு சடையுள் வைத்து
மறுமையும் இம்மை யாவார்

மாமறைக் காட னாரே.
4.33.3

327
கால்கொடுத் திருகை யேற்றிக்

கழிநிரைத் திறைச்சி மேய்ந்து
தோல்படுத் துதிர நீராற்

சுவரெடுத் திரண்டு வாசல்
ஏல்வுடைத் தாவ மைத்தங்

கேழுசா லேகம் பண்ணி
மால்கொடுத் தாவி வைத்தார்

மாமறைக் காட னாரே.
4.33.4

328
விண்ணினார் விண்ணின் மிக்கார்

வேதங்கள் விரும்பி யோதப்
பண்ணினார் கின்ன ரங்கள்

பத்தர்கள் பாடி யாடக்
கண்ணினார் கண்ணி னுள்ளே

சோதியாய் நின்ற எந்தை
மண்ணினார் வலங்கொண் டேத்தும்

மாமறைக் காட னாரே.
4.33.5

329
அங்கையுள் அனலும் வைத்தார்

அறுவகைச் சமயம் வைத்தார்
தங்கையில் வீணை வைத்தார்

தம்மடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கை யோடு

திகழ்தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்

மாமறைக் காட னாரே.
4.33.6

330
கீதராய்க் கீதங் கேட்டுக்

கின்னரந் தன்னை வைத்தார்
வேதராய் வேத மோதி

விளங்கிய சோதி வைத்தார்
ஏதராய் நட்ட மாடி

இட்டமாய்க் கங்கை யோடு
மாதையோர் பாகம் வைத்தார்

மாமறைக் காட னாரே.
4.33.7

331
கனத்தினார் வலி யுடைய

கடிமதில் அரணம் மூன்றுஞ்
சினத்தினுட் சினமாய் நின்று

தீயெழச் செற்றார் போலுந்
தனத்தினைத் தவிர்ந்து நின்று

தம்மடி பரவு வார்க்கு
மனத்தினுள் மாசு தீர்ப்பார்

மாமறைக் காட னாரே.
4.33.8

332
தேசனைத் தேசன் றன்னைத்

தேவர்கள் போற்றி சைப்பார்
வாசனை செய்து நின்று

வைகலும் வணங்கு மின்கள்
காசினைக் கனலை என்றுங்

கருத்தினில் வைத்த வர்க்கு
மாசினைத் தீர்ப்பர் போலும்

மாமறைக் காட னாரே.
4.33.9

333
பிணியுடை யாக்கை தன்னைப்

பிறப்பறுத் துய்ய வேண்டிற்
பணியுடைத் தொழில்கள் பூண்டு

பத்தர்கள் பற்றி னாலே
துணிவுடை அரக்க னோடி

எடுத்தலுந் தோகை அஞ்ச
மணிமுடிப் பத்தி றுத்தார்

மாமறைக் காட னாரே.
4.33.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர்,
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.34 திருமறைக்காடு - திரு நேரிசை


திருச்சிற்றம்பலம்

334
தேரையு மேல்க டாவித்

திண்ணமாத் தெளிந்து நோக்கி
யாரையு மேலு ணரா

ஆண்மையான் மிக்கான் தன்னைப்
பாரையும் விண்ணும் அஞ்சப்

பரந்த தோள் முடியடர்த்துக்
காரிகை அஞ்ச லென்பார்

கலிமறைக் காட னாரே.
4.33.1

335
முக்கிமுன் வெகுண்டெ டுத்த

முடியுடை அரக்கர்கோனை
நக்கிருந் தூன்றிச் சென்னி

நாண்மதி வைத்த எந்தை
அக்கர வாமை பூண்ட

அழகனார் கருத்தி னாலே
தெக்குநீர்த் திரைகள் மோதுந்

திருமறைக் காட னாரே.
4.33.2

336
மிகப்பெருத் துலாவ மிக்கா

னக்கொரு தேர்க டாவி
அகப்படுத் தென்று தானும்

ஆண்மையால் மிக்க ரக்கன்
உகைத்தெடுத் தான்ம லையை

ஊன்றலும் அவனை யாங்கே
நகைப்படுத் தருளி னானூர்

நான்மறைக் காடு தானே.
4.33.3

337
அந்தரந் தேர்க டாவி

யாரிவ னென்று சொல்லி
உந்தினான் மாம லையை

ஊன்றலும் ஒள்ள ரக்கன்
பந்தமாந் தலைகள் பத்தும்

வாய்கள்விட் டலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார்

திருமறைக் காட னாரே.
4.33.4

338
தடுக்கவுந் தாங்க வொண்ணாத்

தன்வலி யுடைய னாகிக்
கடுக்கவோர் தேர்க டாவிக்

கையிரு பதுக ளாலும்
எடுப்பன்நான் என்ன பண்ட

மென்றெடுத் தானை ஏங்க
அடுக்கவே வல்ல னூராம்

அணிமறைக் காடு தானே.
4.33.5

339
நாண்முடிக் கின்ற சீரான்

நடுங்கியே மீது போகான்
கோள்பிடித் தார்த்த கையான்

கொடியன்மா வலிய னென்று
நீண்முடிச் சடையர் சேரும்

நீள்வரை யெடுக்க லுற்றான்
தோண்முடி நெரிய வைத்தார்

தொன்மறைக் காட னாரே.
4.33.6

340
பத்துவாய் இரட்டிக் கைக

ளுடையன்மா வலிய னென்று
பொத்திவாய் தீமை செய்த

பொருவலி அரக்கர் கோனைக்
கத்திவாய் கதற அன்று

கால்விர லூன்றி யிட்டார்
முத்துவாய்த் திரைகள் மோதும்

முதுமறைக் காட னாரே.
4.33.7

341
பக்கமே விட்ட கையான்

பாங்கிலா மதிய னாகிப்
புக்கனன் மாம லைக்கீழ்ப்

போதுமா றறிய மாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு

வீரமும் இழந்த வாறே
நக்கன பூத மெல்லாம்

நான்மறைக் காட னாரே.
4.33.8

342
நாணஞ்சு கைய னாகி

நான்முடி பத்தி னோடு
பாணஞ்சு முன்னி ழந்த

பாங்கிலா மதிய னாகி
நீணஞ்சு தானு ணரா

நின்றெடுத் தானை அன்று
ஏணஞ்சு கைகள் செய்தார்

எழில்மறைக் காட னாரே.
4.33.9

343
கங்கைநீர் சடையுள் வைக்கக்

காண்டலும் மங்கை யூடத்
தென்கையான் தேர்க டாவிச்

சென்றெடுத் தான் மலையை
முன்கைமா நரம்பு வெட்டி

முன்னிருக் கிசைகள் பாட
அங்கைவாள் அருளி னானூர்

அணிமறைக் காடு தானே.
4.33.10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.35 திருவிடைமருது - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

344
காடுடைச் சுடலை நீற்றர்

கையில்வெண் டலையர் தையல்
பாடுடைப் பூதஞ் சூழப்

பரமனார் மருத வைப்பிற்
தோடுடைக் கைதை யோடு

சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த
ஏடுடைக் கமல வேலி

இடைமரு திடங்கொண் டாரே.
4.34.1

345
முந்தையார் முந்தி யுள்ளார்

மூவர்க்கு முதல்வ ரானார்
சந்தியார் சந்தி யுள்ளார்

தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தை யுள்ளார்

சிவநெறி யனைத்து மானார்
எந்தையார் எம்பி ரானார்

இடைமரு திடங் கொண்டாரே.
4.34.2

346
காருடைக் கொன்றை மாலை

கதிர்மணி அரவி னோடு
நீருடைச் சடையுள் வைத்த

நீதியார் நீதி யாய
போருடை விடையொன் றேற

வல்லவர் பொன்னித் தென்பால்
ஏருடைக் கமல மோங்கும்

இடைமரு திடங் கொண்டாரே.
4.34.3

347
விண்ணினார் விண்ணின் மிக்கார்

வேதங்கள் நான்கும் அங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க

பாடலார் பாவந் தீர்க்குங்
கண்ணினார் கண்ணின் மிக்க

நுதலினார் காமர் காய்ந்த
எண்ணினார் எண்ணின் மிக்கார்

இடைமரு திடங் கொண்டாரே.
4.34.4

348
வேதங்கள் நான்குங் கொண்டு

விண்ணவர் பரவி ஏத்தப்
பூதங்கள் பாடி யாட

லுடையவன் புனிதன் எந்தை
பாதங்கள் பரவி நின்ற

பத்தர்கள் தங்கள் மேலை
ஏதங்கள் தீர நின்றார்

இடைமரு திடங் கொண்டாரே.
4.34.5

349
பொறியர வரையி லார்த்துப்

பூதங்கள் பலவுஞ் சூழ
முறிதரு வன்னி கொன்றை

முதிர்சடை மூழ்க வைத்து
மறிதரு கங்கை தங்க

வைத்தவர் எத்தி சையும்
ஏறிதரு புனல்கொள் வேலி

இடைமரு திடங் கொண்டாரே.
4.34.6

350
படரொளி சடையி னுள்ளாற்

பாய்புனல் அரவி னோடு
சுடரொளி மதியம் வைத்துத்

தூவொளி தோன்றும் எந்தை
அடரொளி விடையொன் றேற

வல்லவர் அன்பர் தங்கள்
இடரவை கெடவு நின்றார்

இடைமரு திடங் கொண்டாரே.
4.34.7

351
கமழ்தரு சடையி னுள்ளாற்

கடும்புனல் அரவி னோடு
தவழ்தரு மதியம் வைத்துத்

தன்னடி பலரும் ஏத்த
மழுவது வலங்கை யேந்தி

மாதொரு பாக மாகி
எழில்தரு பொழில்கள் சூழ்ந்த

இடைமரு திடங் கொண்டாரே.
4.34.8

352
பொன்றிகழ் கொன்றை மாலை

புதுப்புனல் வன்னி மத்தம்
மின்றிகழ் சடையில் வைத்து

மேதகத் தோன்று கின்ற
அன்றவர் அளக்க லாகா

அனலெரி யாகி நீண்டார்
இன்றுட னுலக மேத்த

இடைமரு திடங் கொண்டாரே.
4.34.9

353
மலையுடன் விரவி நின்று

மதியிலா அரக்கன் நூக்கத்
தலையுட னடர்த்து மீண்டே

தலைவனாய் அருள்கள் நல்கிச்
சிலையுடை மலையை வாங்கித்

திரிபுர மூன்றும் எய்தார்
இலையுடைக் கமல வேலி

இடைமரு திடங் கொண்டாரே.
4.34.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர், தேவியார் - நலமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.36 திருப்பழனம் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

354
ஆடினா ரொருவர் போலு

மலர்கமழ் குழலி னாலைக்
கூடினா ரொருவர் போலுங்

குளிர்புனல் வளைந்த திங்கள்
சூடினா ரொருவர் போலுந்

தூயநன் மறைகள் நான்கும்
பாடினா ரொருவர் போலும்

பழனத்தெம் பரம னாரே.
4.35.1

355
போவதோர் நெறியு மானார்

புரிசடைப் புனித னார்நான்
வேவதோர் வினையிற் பட்டு

வெம்மைதான் விடவுங் கில்லேன்
கூவல்தான் அவர்கள் கேளார்

குணமிலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்

பழனத்தெம் பரம னாரே.
4.35.2

356
கண்டராய் முண்ட ராகிக்

கையிலோர் கபால மேந்தித்
தொண்டர்கள் பாடி யாடித்

தொழுகழற் பரம னார்தாம்
விண்டவர் புரங்க ளெய்த

வேதியர் வேத நாவர்
பண்டையென் வினைகள் தீர்ப்பார்

பழனத்தெம் பரம னாரே.
4.35.3

357
நீரவன் தீயி னோடு

நிழலவன் எழில தாய
பாரவன் விண்ணின் மிக்க

பரமவன் பரம யோகி
யாரவ னண்ட மிக்க

திசையினோ டொளிக ளாகிப்
பாரகத் தமுத மானார்

பழனத்தெம் பரம னாரே.
4.35.4

358
ஊழியா ரூழி தோறும்

உலகினுக் கொருவ ராகிப்
பாழியார் பாவந் தீர்க்கும்

பராபரர் பரம தாய
ஆழியான் அன்னத் தானும்

அன்றவர்க் களப் பரிய
பாழியார் பரவி யேத்தும்

பழனத்தெம் பரம னாரே.
4.35.5

359
ஆலின்கீழ் அறங்க ளெல்லாம்

அன்றவர்க் கருளிச் செய்து
நூலின்கீ ழவர்கட் கெல்லா

நுண்பொரு ளாகி நின்று
காலின்கீழ்க் காலன் றன்னைக்

கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யு மானார்

பழனத்தெம் பரம னாரே.
4.35.6

360
ஆதித்தன் அங்கி சோமன்

அயனொடு மால்பு தனும்
போதித்து நின்று லகிற்

போற்றிசைத் தாரி வர்கள்
சோதித்தா ரேழு லகுஞ்

சோதியுட் சோதி யாகிப்
பாதிப்பெண் ணுருவ மானார்

பழனத்தெம் பரம னாரே.
4.35.7

361
காற்றனாற் காலற் காய்ந்து

காருரி போர்த்த ஈசர்
தோற்றனார் கடலுள் நஞ்சைத்

தோடுடைக் காதர் சோதி
ஏற்றினார் இளவெண் டிங்கள்

இரும்பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைக ளெல்லாம்

பழனத்தெம் பரம னாரே.
4.35.8

362
கண்ணனும் பிரம னோடு

காண்கில ராகி வந்தே
எண்ணியுந் துதித்து மேத்த

எரியுரு வாகி நின்று
வண்ணநன் மலர்கள் தூவி

வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்
பண்ணுலாம் பாடல் கேட்டார்

பழனத்தெம் பரம னாரே.
4.35.9

363
குடையுடை அரக்கன் சென்று

குளிர்கயி லாய வெற்பின்
இடைமட வரலை அஞ்ச

எடுத்தலும் இறைவன் நோக்கி
விடையுடை விகிர்தன் றானும்

விரலினா லூன்றி மீண்டும்
படைகொடை அடிகள் போலும்

பழனத்தெம் பரம னாரே.
4.35.10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.37 திருநெய்த்தானம் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

364
காலனை வீழச் செற்ற

கழலடி இரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன்

மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங்

குளிர்பொழிற் கோயில் மேய
நீலம்வைத் தனைய கண்ட

நினைக்குமா நினைக்கின் றேனே.
4.37.1

365
காமனை யன்று கண்ணாற்

கனலெரி யாக நோக்கித்
தூபமுந் தீபங் காட்டித்

தொழுமவர்க் கருள்கள் செய்து
சேமநெய்த் தான மென்னுஞ்

செறிபொழிற் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம்

வாழ்வுற நினைந்த வாறே.
4.37.2

366
பிறைதரு சடையின் மேலே

பெய்புனற் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள்

உத்தமன் ஊழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ

நின்றநெய்த் தான மென்று
குறைதரும் அடிய வர்க்குக்

குழகனைக் கூட லாமே.
4.37.3

367
வடிதரு மழுவொன் றேந்தி

வார்சடை மதியம் வைத்துப்
பொடிதரு மேனி மேலே

புரிதரு நூலர் போலும்
நெடிதரு பொழில்கள் சூழ

நின்றநெய்த் தானம் மேவி
அடிதரு கழல்கள் ஆர்ப்ப

ஆடுமெம் அண்ண லாரே.
4.37.4

368
காடிட மாக நின்று

கனலெரி கையி லேந்திப்
பாடிய பூதஞ் சூழப்

பண்ணுடன் பலவுஞ் சொல்லி
ஆடிய கழலார் சீரார்

அந்தண்நெய்த் தானம் என்றுங்
கூடிய குழக னாரைக்

கூடுமா றறிகி லேனே.
4.37.5

369
வானவர் வணங்கி யேத்தி

வைகலும் மலர்கள் தூவத்
தானவர்க் கருள்கள் செய்யும்

சங்கரன் செங்கண் ஏற்றன்
தேனமர் பொழில்கள் சூழத்

திகழுநெய்த் தானம் மேய
கூனிள மதியி னானைக்

கூடுமா றறிகி லேனே.
4.37.6

370
காலதிற் கழல்க ளார்ப்பக்

கனலெரி கையில் வீசி
ஞாலமுங் குழிய நின்று

நட்டம தாடு கின்ற
மேலவர் முகடு தோய

விரிசடை திசைகள் பாய
மாலொரு பாக மாக

மகிழ்ந்தநெய்த் தான னாரே.
4.37.7

371
பந்தித்த சடையின் மேலே

பாய்புன லதனை வைத்து
அந்திப்போ தனலு மாடி

அடிகள்ஐ யாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று

வாழ்த்துவார் வாயி னுள்ளார்
சிந்திப்பார் சிந்தை யுள்ளார்

திருந்துநெய்த் தான னாரே.
4.37.8

372
சோதியாய்ச் சுடரு மானார்

சுண்ணவெண் சாந்து பூசி
ஓதிவா யுலகம் ஏத்த

உகந்துதாம் அருள்கள் செய்வார்
ஆதியாய் அந்த மானார்

யாவரும் இறைஞ்சி யேத்த
நீதியாய் நியம மாகி

நின்றநெய்த் தான னாரே.
4.37.9

373
இலையுடைப் படைகை யேந்தும்

இலங்கையர் மன்னன் றன்னைத்
தலையுடன் அடர்த்து மீண்டே

தானவற் கருள்கள் செய்து
சிலையுடன் கணையைச் சேர்த்துத்

திரிபுரம் எரியச் செற்ற
நிலையுடை யடிகள் போலும்

நின்றநெய்த் தான னாரே.
4.37.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர், தேவியார் - பாலாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.38 திருவையாறு - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

374
கங்கையைச் சடையுள் வைத்தார்

கதிர்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்

திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்

மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்

ஐயனை யாற னாரே.
4.38.1

375
பொடிதனைப் பூச வைத்தார்

பொங்குவெண் ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார்

காலனைக் காலில் வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை

மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார்

ஐயனை யாற னாரே.
4.38.2

376
உடைதரு கீளும் வைத்தார்

உலகங்க ளனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார்

பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார்

வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார்

ஐயனை யாற னாரே.
4.38.3

377
தொண்டர்கள் தொழவும் வைத்தார்

தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார்

எமக்கென்று மின்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை

மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்கள் ஏத்தும்

ஐயனை யாற னாரே.
4.38.4

378
வானவர் வணங்க வைத்தார்

வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார்

காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார்

ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்

ஐயனை யாற னாரே.
4.38.5

379
சங்கணி குழையும் வைத்தார்

சாம்பல்மெய்ப் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார்

விரிபொழி லனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்

கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார்

ஐயனை யாற னாரே.
4.38.6

380
பத்தர்கட் கருளும் வைத்தார்

பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார்

சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்

முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார்

ஐயனை யாற னாரே.
4.38.7

381
ஏறுகந் தேற வைத்தார்

இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார்

நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை யாகம் வைத்தார்

கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார்

ஐயனை யாற னாரே.
4.38.8

382
பூதங்கள் பலவும் வைத்தார்

பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்

கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்

பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்

ஐயனை யாற னாரே.
4.38.9

383
இரப்பவர்க் கீய வைத்தார்

ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங்

கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப்

படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்

ஐயனை யாற னாரே.
4.38.10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.39 திருவையாறு - திருநேரிசை

பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

384
குண்டனாய்ச் சமண ரோடே

கூடிநான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ

தூநெறி யாகி நின்ற
அண்டனே அமரர் ஏறே

திருவையா றமர்ந்த தேனே
தொண்டனேன் தொழுதுன் பாதஞ்

சொல்லிநான் திரிகின் றேனே.
4.39.1

385
பீலிகை இடுக்கி நாளும்

பெரியதோர் தவமென் றெண்ணி
வாலிய தறிகள் போல

மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி ஏத்துந்

திருவையா றமர்ந்த தேனோ
டாலியா எழுந்த நெஞ்சம்

அழகிதா எழுந்த வாறே.
4.39.2

386
தட்டிடு சமண ரோடே

தருக்கிநான் தவமென் றெண்ணி
ஒட்டிடு மனத்தி னீரே

உம்மையான் செய்வ தென்னே
மொட்டிடு கமலப் பொய்கைத்

திருவையா றமர்ந்த தேனோ
டொட்டிடும் உள்ளத் தீரே

உம்மைநான் உகந்திட் டேனே.
4.39.3

387
பாசிப்பல் மாசு மெய்யர்

பலமிலாச் சமண ரோடு
நேசத்தா லிருந்த நெஞ்சை

நீக்குமா றறிய மாட்டேன்
தேசத்தார் பரவி யேத்துந்

திருவையா றமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார்

வல்வினை மாயு மன்றே.
4.39.4

388
கடுப்பொடி யட்டி மெய்யிற்

கருதியோர் தவமென் றெண்ணி
வடுக்களோ டிசைந்த நெஞ்சே

மதியிலி பட்ட தென்னே
மடுக்களில் வாளை பாயுந்

திருவையா றமர்ந்த தேனை
அடுத்துநின் றுன்னு நெஞ்சே

அருந்தவஞ் செய்த வாறே.
4.39.5

389
துறவியென் றவம தோரேன்

சொல்லிய செலவு செய்து
உறவினால் அமண ரோடும்

உணர்விலேன் உணர்வொன் றின்றி
நறவமார் பொழில்கள் சூழ்ந்த

திருவையா றமர்ந்த தேனை
மறவிலா நெஞ்ச மேநன்

மதியுனக் கடைந்த வாறே.
4.39.6

390
பல்லுரைச் சமண ரோடே

பலபல கால மெல்லாஞ்
சொல்லிய செலவு செய்தேன்

சோர்வனான் நினைந்த போது
மல்லிகை மலருஞ் சோலைத்

திருவையா றமர்ந்த தேனை
எல்லியும் பகலு மெல்லாம்

நினைந்தபோ தினிய வாறே.
4.39.7

391
மண்ணுளார் விண்ணு ளாரும்

வணங்குவார் பாவம் போக
எண்ணிலாச் சமண ரோடே

இசைந்தனை ஏழை நெஞ்சே
தெண்ணிலா எறிக்குஞ் சென்னித்

திருவையா றமர்ந்த தேனைக்
கண்ணினாற் காணப் பெற்றுக்

கருதிற்றே முடிந்த வாறே.
4.39.8

392
குருந்தம தொசித்த மாலுங்

குலமலர் மேவி னானுந்
திருந்துநற் றிருவ டியுந்

திருமுடி காண மாட்டார்
அருந்தவ முனிவ ரேத்துந்

திருவையா றமர்ந்த தேனைப்
பொருந்திநின் றுன்னு நெஞ்சே

பொய்வினை மாயு மன்றே.
4.39.9

393
அறிவிலா அரக்க னோடி

அருவரை எடுக்க லுற்று
முறுகினான் முறுகக் கண்டு

மூதறி வாளன் நோக்கி
நிறுவினான் சிறுவி ரலால்

நெரிந்துபோய் நிலத்தில் வீழ
அறிவினால் அருள்கள் செய்தான்

திருவையா றமர்ந்த தேனே.
4.39.10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.40 திருவையாறு - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

394
தானலா துலக மில்லை

சகமலா தடிமை யில்லை
கானலா தாட லில்லை

கருதுவார் தங்க ளுக்கு
வானலா தருளு மில்லை

வார்குழல் மங்கை யோடும்
ஆனலா தூர்வ தில்லை

ஐயனை யாற னார்க்கே.
4.40.1

395
ஆலலால் இருக்கை இல்லை

அருந்தவ முனிவர்க் கன்று
நூலலால் நொடிவ தில்லை

நுண்பொரு ளாய்ந்து கொண்டு
மாலுநான் முகனுங் கூடி

மலரடி வணங்க வேலை
ஆலலால் அமுத மில்லை

ஐயனை யாற னார்க்கே.
4.40.2

396
நரிபுரி சுடலை தன்னில்

நடமலால் நவிற்ற லில்லை
சுரிபுரி குழலி யோடுந்

துணையலால் இருக்கை யில்லை
தெரிபுரி சிந்தை யார்க்குத்

தெளிவலால் அருளு மில்லை
அரிபுரி மலர்கொண் டேத்தும்

ஐயனை யாற னார்க்கே.
4.40.3

397
தொண்டலாற் றுணையு மில்லை

தோலலா துடையு மில்லை
கண்டலா தருளு மில்லை

கலந்தபின் பிரிவ தில்லை
பண்டைநான் மறைகள் காணாப்

பரிசின னென்றென் றெண்ணி
அண்டவா னவர்கள் ஏத்தும்

ஐயனை யாற னார்க்கே.
4.40.4

398
எரியலா லுருவ மில்லை

ஏறலால் ஏற லில்லை
கரியலாற் போர்வை யில்லை

காண்டகு சோதி யார்க்குப்
பிரிவிலா அமரர் கூடிப்

பெருந்தகைப் பிரானென் றேத்தும்
அரியலாற் றேவி யில்லை

ஐயனை யாற னார்க்கே.
4.40.5

399
என்பலாற் கலனு மில்லை

எருதலா லூர்வ தில்லை
புன்புலால் நாறு காட்டிற்

பொடியலாற் சாந்து மில்லை
துன்பிலாத் தொண்டர் கூடித்

தொழுதழு தாடிப் பாடும்
அன்பலாற் பொருளு மில்லை

ஐயனை யாற னார்க்கே.
4.406

400
கீளலால் உடையு மில்லை

கிளர்பொறி யரவம் பைம்பூண்
தோளலாற் றுணையு மில்லை

தொத்தலர் கின்ற வேனில்
வேளலாற் காயப் பட்ட

வீரரு மில்லை மீளா
ஆளலாற் கைம்மா றில்லை

ஐயனை யாற னார்க்கே.
4.40.7

401
சகமலா தடிமை யில்லை

தானலாற் றுணையு மில்லை
நகமெலாந் தேயக் கையான்

நாண்மலர் தொழுது தூவி
முகமெலாங் கண்ணீர் மல்க

முன்பணிந் தேத்துந் தொண்டர்
அகமலாற் கோயி லில்லை

ஐயனை யாற னார்க்கே.
4.40.8

402
உமையலா துருவ மில்லை

உலகலா துடைய தில்லை
நமையெலா முடைய ராவர்

நன்மையே தீமை யில்லை
கமையெலா முடைய ராகிக்

கழலடி பரவுந் தொண்டர்க்
கமைவிலா அருள் கொடுப்பார்

ஐயனை யாற னார்க்கே.
4.40.9

403
மலையலா லிருக்கை யில்லை

மதித்திடா அரக்கன் றன்னைத்
தலையலால் நெரித்த தில்லை

தடவரைக் கீழ டர்த்து
நிலையிலார் புரங்கள் வேவ

நெருப்பலால் விரித்த தில்லை
அலையினார் பொன்னி மன்னும்

ஐயனை யாற னார்க்கே.
4.40.10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.41 திருச்சோற்றுத்துறை - திருநேரிசை

பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

404
பொய்விரா மேனி தன்னைப்

பொருளெனக் காலம் போக்கி
மெய்விரா மனத்த னல்லேன்

வேதியா வேத நாவா
ஐவரால் அலைக்கப் பட்ட

ஆக்கைகொண் டயர்த்துப் போனேன்
செய்வரால் உகளுஞ் செம்மைத்

திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.1

405
கட்டராய் நின்று நீங்கள்

காலத்தைக் கழிக்க வேண்டா
எட்டவாங் கைகள் வீசி

எல்லிநின் றாடு வானை
அட்டமா மலர்கள் கொண்டே

ஆனஞ்சும் ஆட்ட ஆடிச்
சிட்டராய் அருள்கள் செய்வார்

திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.2

406
கல்லினாற் புரமூன் றெய்த

கடவுளைக் காத லாலே
எல்லியும் பகலு முள்ளே

ஏகாந்த மாக ஏத்தும்
பல்லில்வெண் டலைகை யேந்திப்

பல்லிலந் திரியுஞ் செல்வர்
சொல்லுநன் பொருளு மாவார்

திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.3

407
கறையராய்க் கண்ட நெற்றிக்

கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்
இறையராய் இனிய ராகித்

தனியராய்ப் பனிவெண் டிங்கட்
பிறையராய்ச் செய்த வெல்லாம்

பீடராய்க் கேடில் சோற்றுத்
துறையராய்ப் புகுந்தெ னுள்ளச்

சோர்வுகண் டருளி னாரே.
4.41.4

408
பொந்தையைப் பொருளா வெண்ணிப்

பொருக்கெனக் காலம் போனேன்
எந்தையே ஏக மூர்த்தி

யென்றுநின் றேத்த மாட்டேன்
பந்தமாய் வீடு மாகிப்

பரம்பர மாகி நின்று
சிந்தையுட் டேறல் போலுந்

திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.5

409
பேர்த்தினிப் பிறவா வண்ணம்

பிதற்றுமின் பேதை பங்கன்
பார்த்தனுக் கருள்கள் செய்த

பாசுப தன்றி றமே
ஆர்த்துவந் திழிவ தொத்த

அலைபுனற் கங்கை யேற்றுத்
தீர்த்தமாய்ப் போத விட்டார்

திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.6

410
கொந்தார்பூங் குழலி னாரைக்

கூறியே காலம் போன
எந்தையெம் பிரானாய் நின்ற

இறைவனை ஏத்தா தந்தோ
முந்தரா அல்கு லாளை

யுடன்வைத்த ஆதி மூர்த்தி
செந்தாது புடைகள் சூழ்ந்த

திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.7

411
அங்கதி ரோன வனை

அண்ணலாக் கருத வேண்டா
வெங்கதி ரோன் வழியே

போவதற் கமைந்து கொண்மின்
அங்கதி ரோன வனை

யுடன்வைத்த ஆதி மூர்த்தி
செங்கதி ரோன்வ ணங்குஞ்

திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.8

412
ஓதியே கழிக்கின் றீர்கள்

உலகத்தீர் ஒருவன் றன்னை
நீதியால் நினைக்க மாட்டீர்

நின்மலன் என்று சொல்லீர்
சாதியா நான்மு கனுஞ்

சக்கரத் தானுங் காணாச்
சோதியாய்ச் சுடர தானார்

திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.9

413
மற்றுநீர் மனம்வை யாதே

மறுமையைக் கழிக்க வேண்டிற்
பெற்றதோர் உபாயந் தன்னாற்

பிரானையே பிதற்று மின்கள்
கற்றுவந் தரக்க னோடிக்

கயிலாய மலைஎ டுக்கச்
செற்றுகந் தருளிச் செய்தார்

திருச்சோற்றுத் துறைய னாரே.
4.41.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர், தேவியார் - ஒப்பிலாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.42 திருத்துருத்தி - திருநேரிசை

பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

414
பொருத்திய குரம்பை தன்னைப்

பொருளெனக் கருத வேண்டா
இருத்தியெப் போதும் நெஞ்சுள்

இறைவனை ஏத்து மின்கள்
ஒருத்தியைப் பாகம் வைத்தங்

கொருத்தியைச் சடையில் வைத்த
துருத்தியஞ் சுடரி னானைத்

தொண்டனேன் கண்ட வாறே.
4.42.1

415
சவைதனைச் செய்து வாழ்வான்

சலத்துளே யழுந்து கின்ற
இவையொரு பொருளு மல்ல

இறைவனை ஏத்து மின்னோ
அவைபுர மூன்றும் எய்தும்

அடியவர்க் கருளிச் செய்த
சுவையினைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.
4.42.2

416
உன்னியெப் போதும் நெஞ்சுள்

ஒருவனை ஏத்து மின்னோ
கன்னியை ஒருபால் வைத்துக்

கங்கையைச் சடையுள் வைத்துப்
பொன்னியின் நடுவு தன்னுள்

பூம்புனல் பொலிந்து தோன்றுந்
துன்னிய துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.
4.42.3

417
ஊன்றலை வலிய னாகி

உலகத்துள் உயிர்கட் கெல்லாந்
தான்றலைப் பட்டு நின்று

சார்கன லகத்து வீழ
வான்றலைத் தேவர் கூடி

வானவர்க் கிறைவா வென்னுந்
தோன்றலைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.
4.42.4

418
உடல்தனைக் கழிக்க லுற்ற

உலகத்துள் உயிர்கட் கெல்லாம்
இடர்தனைக் கழிக்க வேண்டில்

இறைவனை ஏத்து மின்னோ
கடல்தனில் நஞ்ச முண்டு

காண்பரி தாகி நின்ற
சுடர்தனைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.
4.42.5

419
அள்ளலைக் கடக்க வேண்டில்

அரனையே நினைமி னீணர்கள்
பொள்ளலிக் காயந் தன்னுட்

புண்டரீ கத்தி ருந்த
வள்ளலை வான வர்க்குங்

காண்பரி தாகி நின்ற
துள்ளலைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.
4.42.6

420
பாதியில் உமையாள் தன்னைப்

பாகமா வைத்த பண்பன்
வேதியன் என்று சொல்லி

விண்ணவர் விரும்பி ஏத்தச்
சாதியாஞ் சதுர்மு கனுஞ்

சக்கரத் தானுங் காணாச்
சோதியைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.
4.42.7

421
சாமனை வாழ்க்கை யான

சலத்துளே யழுந்த வேண்டா
தூமநல் லகிலுங் காட்டித்

தொழுதடி வணங்கு மின்னோ
சோமனைச் சடையுள் வைத்துத்

தொன்னெறி பலவுங் காட்டுந்
தூமனத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்டா வாறே.
4.42.8

422
குண்டரே சமணர் புத்தர்

குறியறி யாது நின்று
கண்டதே கருது வார்கள்

கருத்தெண்ணா தொழிமி னீணர்கள்
விண்டவர் புரங்கள் எய்து

விண்ணவர்க் கருள்கள் செய்த
தொண்டர்கள் துணையி னானைத்

துருத்திநான் கண்ட வாறே.
4.42.9

423
பிண்டத்தைக் கழிக்க வேண்டிற்

பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட

அடலரக் கன்றன் ஆண்மை
கண்டொத்துக் கால்வி ரலால்

ஊன்றிமீண் டருளிச் செய்த
துண்டத்துத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.
4.42.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதேசுவரர்,
தேவியார் - முகிழாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.43 திருக்காஞ்சிமேற்றளி - திருநேரிசை

பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

424
மறையது பாடிப் பிச்சைக்

கென்றகந் திரிந்து வாழ்வார்
பிறையது சடைமு டிமேற்

பெய்வளை யாள்தன் னோடுங்
கறையது கண்டங் கொண்டார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
இறையவர் பாட லாடல்

இலங்குமேற் றளிய னாரே.
4.43.1

425
மாலன மாயன் றன்னை

மகிழ்ந்தனர் விருத்த ராகும்
பாலனார் பசுப தியார்

பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலாற் செற்றார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏலநற் கடம்பன் தாதை

இலங்குமேற் றளிய னாரே.
4.43.2

426
விண்ணிடை விண்ண வர்கள்

விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப்
பண்ணிடைச் சுவையின் மிக்க

கின்னரம் பாடல் கேட்டார்
கண்ணிடை மணியி னொப்பார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணிடை யெழுத்து மானார்

இலங்குமேற் றளிய னாரே.
4.43.3

427
சோமனை அரவி னோடு

சூழ்தரக் கங்கை சூடும்
வாமனை வான வர்கள்

வலங்கொடு வந்து போற்றக்
காமனைக் காய்ந்த கண்ணார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏமநின் றாடும் எந்தை

இலங்குமேற் றளிய னாரே.
4.43.4

428
ஊனவ ருயிரி னோடு

முலகங்க ளூழி யாகித்
தானவர் தனமு மாகித்

தனஞ்சய னோடெ திர்ந்த
கானவர் காள கண்டர்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏனமக் கோடு பூண்டார்

இலங்குமேற் றளிய னாரே.
4.43.5

429
மாயனாய் மால னாகி

மலரவ னாகி மண்ணாய்த்
தேயமாய்த் திசையெட் டாகித்

தீர்த்தமாய்த் திரிதர் கின்ற
காயமாய்க் காயத் துள்ளார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏயமென் றோளி பாகர்

இலங்குமேற் றளிய னாரே.
4.43.6

430
மண்ணினை யுண்ட மாயன்

தன்னையோர் பாகங் கொண்டார்
பண்ணினைப் பாடி யாடும்

பத்தர்கள் சித்தங் கொண்டார்
கண்ணினை மூன்றுங் கொண்டார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணினை யெண்ண வைத்தார்

இலங்குமேற் றளிய னாரே.
4.43.7

431
செல்வியைப் பாகங் கொண்டார்

சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு

மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார்

இலங்குமேற் றளிய னாரே.
4.43.8

432
வேறிணை யின்றி யென்றும்

விளங்கொளி மருங்கி னாளைக்
கூறிய லாக வைத்தார்

கோளரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார்

அணிபொழிற் கச்சி தன்னுள்
ஏறினை யேறு மெந்தை

இலங்குமேற் றளிய னாரே.
4.43.9

433
தென்னவன் மலையெ டுக்கச்

சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற

மணிமுடி நெரிய வாயாற்
கன்னலின் கீதம் பாடக்

கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளிச் செய்தார்

இலங்குமேற் றளிய னாரே.
4.43.10
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமேற்றளிநாதர், தேவியார் - திருமேற்றளிநாயகி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.44 திருஏகம்பம் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

434
நம்பனை நகர மூன்றும்

எரியுண வெருவ நோக்கும்
அம்பனை அமுதை யாற்றை

அணிபொழிற் கச்சி யுள்ளே
கம்பனைக் கதிர்வெண் திங்கட்

செஞ்சடைக் கடவுள் தன்னைச்
செம்பொனைப் பவளத் தூணைச்

சிந்தியா எழுகின் றேனே.
4.44.1

435
ஒருமுழம் உள்ள குட்டம்

ஒன்பது துளையு டைத்தாய்
அரைமுழம் அதன் அகலம்

அதனில்வாழ் முதலை ஐந்து
பெருமுழை வாய்தல் பற்றிக்

கிடந்துநான் பிதற்று கின்றேன்
கருமுகில் தவழும் மாடக்

கச்சியே கம்ப னீரே.
4.44.2

436
மலையினார் மகளோர் பாக

மைந்தனார் மழுவொன் றேந்திச்
சிலையினால் மதில்கள் மூன்றுந்

தீயெழச் செற்ற செல்வர்
இலையினார் சூலம் ஏந்தி

ஏகம்பம் மேவி னாரைத்
தலையினால் வணங்க வல்லார்

தலைவர்க்குந் தலைவர் தாமே.
4.44.3

437
பூத்தபொற் கொன்றை மாலை

புரிசடைக் கணிந்த செல்வர்
தீர்த்தமாங் கங்கை யாளைத்

திருமுடி திகழ வைத்து
ஏத்துவார் ஏத்த நின்ற

ஏகம்பம் மேவி னாரை
வாழ்த்துமா றறிய மாட்டேன்

மால்கொடு மயங்கி னேனே.
4.44.4

438
மையினார் மலர்நெ டுங்கண்

மங்கையோர் பங்க ராகிக்
கையிலோர் கபாலம் ஏந்திக்

கடைதொறும் பலிகொள் வார்தாம்
எய்வதோர் ஏனம் ஓட்டி

ஏகம்பம் மேவி னாரைக்
கையினாற் றொழவல் லார்க்குக்

கடுவினை களைய லாமே.
4.44.5

439
தருவினை மருவுங் கங்கை

தங்கிய சடையன் எங்கள்
அருவினை அகல நல்கும்

அண்ணலை அமரர் போற்றுந்
திருவினைத் திருவே கம்பஞ்

செப்பிட உறைய வல்ல
உருவினை உருகி ஆங்கே

உள்ளத்தால் உகக்கின் றேனே.
4.44.6

440
கொண்டதோர் கோல மாகிக்

கோலக்கா வுடைய கூத்தன்
உண்டதோர் நஞ்ச மாகில்

உலகெலாம் உய்ய உண்டான்
எண்டிசை யோரும் ஏத்த

நின்றஏ கம்பன் றன்னைக்
கண்டுநான் அடிமை செய்வான்

கருதியே திரிகின் றேனே.
4.44.7

441
படமுடை அரவி னோடு

பனிமதி யதனைச் சூடிக்
கடமுடை யுரிவை மூடிக்

கண்டவர் அஞ்ச அம்ம
இடமுடைக் கச்சி தன்னுள்

ஏகம்பம் மேவி னான்றன்
நடமுடை யாடல் காண

ஞாலந்தான் உய்ந்த வாறே.
4.44.8

442
பொன்றிகழ் கொன்றை மாலை

பொருந்திய நெடுந்தண் மார்பர்
நன்றியிற் புகுந்தெ னுள்ளம்

மெள்ளவே நவில நின்று
குன்றியில் அடுத்த மேனிக்

குவளையங் கண்டர் எம்மை
இன்றுயில் போது கண்டார்

இனியர்ஏ கம்ப னாரே.
4.44.9

443
துருத்தியார் பழனத் துள்ளார்

தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார்

அவரவர்க் கருள்கள் செய்தே
எருத்தினை இசைய ஏறி

ஏகம்பம் மேவி னார்க்கு
வருத்திநின் றடிமை செய்வார்

வல்வினை மாயு மன்றே.
4.44.10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.45 திருவொற்றியூர் - திருநேரிசை

பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

444
வெள்ளத்தைச் சடையில் வைத்த

வேதகீ தன்றன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின்

மெய்தரு ஞானத் தீயாற்
கள்ளத்தைக் கழிய நின்றார்

காயத்துக் கலந்து நின்று
உள்ளத்துள் ஒளியு மாகும்

ஒற்றியூ ருடைய கோவே.
4.45.1

445
வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா

வானவர் இறைவன் நின்று
புசிப்பதோர் பொள்ள லாக்கை

யதனொடும் புணர்வு வேண்டில்
அசிர்ப்பெனும் அருந்த வத்தால்

ஆன்மாவி னிடம தாகி
உசிர்ப்பெனும் உணர்வு முள்ளார்

ஒற்றியூ ருடைய கோவே.
4.45.2

446
தானத்தைச் செய்து வாழ்வான்

சலத்துளே அழுந்து கின்றீர்
வானத்தை வணங்க வேண்டில்

வம்மின்கள் வல்லீ ராகில்
ஞானத்தை விளக்கை ஏற்றி

நாடியுள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும்

ஒற்றியூ ருடைய கோவே.
4.45.3

447
காமத்துள் அழுந்தி நின்று

கண்டரால் ஒறுப்புண் ணாதே
சாமத்து வேத மாகி

நின்றதோர் சயம்பு தன்னை
ஏமத்தும் இடையி ராவும்

ஏகாந்தம் இயம்பு வார்க்கு
ஓமத்துள் ஒளிய தாகும்

ஒற்றியூ ருடைய கோவே.
4.45.4

448
சமையமே லாறு மாகித்

தானொரு சயம்பு வாகி
இமையவர் பரவி யேத்த

இனிதினங் கிருந்த ஈசன்
கமையினை யுடைய ராகிக்

கழலடி பரவு வார்க்கு
உமையொரு பாகர் போலும்

ஒற்றியூ ருடைய கோவே.
4.45.5

449
ஒருத்திதன் றலைச்சென் றாளைக்

கரந்திட்டான் உலக மேத்த
ஒருத்திக்கு நல்ல னாகி

மறுப்படுத் தொளித்து மீண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான்

உணர்வினால் ஐயம் உண்ணி
ஒருத்திக்கு நல்ல னல்லன்

ஒற்றியூ ருடைய கோவே.
4.45.6

450
பிணமுடை உடலுக் காகப்

பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வெனும் போகம் வேண்டா

போக்கலாம் பொய்யை நீங்க
நிணமுடை நெஞ்சி னுள்ளால்

நினைக்குமா நினைக்கின் றார்க்கு
உணர்வினோ டிருப்பர் போலும்

ஒற்றியூ ருடைய கோவே.
4.45.7

451
பின்னுவார் சடையான் தன்னைப்

பிதற்றிலாப் பேதை மார்கள்
துன்னுவார் நரகந் தன்னுள்

தொல்வினை தீர வேண்டின்
மன்னுவான் மறைக ளோதி

மனத்தினுள் விளக்கொன் றேற்றி
உன்னுவார் உள்ளத் துள்ளார்

ஒற்றியூ ருடைய கோவே.
4.45.8

452
முள்குவார் போகம் வேண்டின்

முயற்றியா லிடர்கள் வந்தால்
எள்குவார் எள்கி நின்றங்

கிதுவொரு மாய மென்பார்
பள்குவார் பத்த ராகிப்

பாடியு மாடி நின்று
உள்குவார் உள்ளத் துள்ளார்

ஒற்றியூ ருடைய கோவே.
4.45.9

453
வெறுத்துகப் புலன்க ளைந்தும்

வேண்டிற்று வேண்டு நெஞ்சே
மறுத்துக ஆர்வச் செற்றக்

குரோதங்க ளான மாயப்
பொறுத்துகப் புட்ப கத்தேர்

உடையானை அடர வூன்றி
ஒறுத்துகந் தருள்கள் செய்தார்

ஒற்றியூ ருடைய கோவே.
4.45.10
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர், தேவியார் - வடிவுடையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.46 திருவொற்றியூர் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

454
ஓம்பினேன் கூட்டை வாளா

உள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக்

கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப்

பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ உய்யக் கொள்ளாய்

ஒற்றியூ ருடைய கோவே.
4.46.1

455
மனமெனுந் தோணி பற்றி

மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச்

செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி

மறியும்போ தறிய வொண்ணா
துனையுனும் உணர்வை நல்காய்

ஒற்றியூ ருடய கோவே.
4.46.2


இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.
4.46.3-10 திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.47 திருக்கயிலாயம் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

456
கனகமா வயிர முந்து

மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி

யெடுத்தலு முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற ஈச

னூன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா யூன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.1

457
கதித்தவன் கண்சி வந்து

கயிலைநன் மலையை யோடி
அதிர்த்தவன் எடுத்தி டலும்

அரிவைதான் அஞ்ச ஈசன்
நெதித்தவ னூன்றி யிட்ட

நிலையழிந் தலறி வீழ்ந்தான்
மதித்திறை யூன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.2

458
கறுத்தவன் கண்சி வந்து

கயிலைநன் மலையைக் கையால்
மறித்தலும் மங்கை அஞ்ச

வானவர் இறைவன் நக்கு
நெறித்தொரு விரலா லூன்ற

நெடுவரை போல வீழ்ந்தான்
மறித்திறை யூன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.3

459
கடுத்தவன் கண்சி வந்து

கயிலைநன் மலையை யோடி
எடுத்தலும் மங்கை அஞ்ச

இறையவ னிறையே நக்கு
நொடிப்பள விரலா லூன்ற

நோவது மலறி யிட்டான்
மடித்திறை யூன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.4

460
கன்றித்தன் கண்சி வந்து

கயிலைநன் மலையை யோடி
வென்றித்தன் கைத்த லத்தா

லெடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாத

னூன்றலு நகழ வீழ்ந்தான்
மன்றித்தான் ஊன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.5

461
களித்தவன் கண்சி வந்து

கயிலைநன் மலையை யோடி
நெளித்தவ னெடுத்தி டலும்

நேரிழை அஞ்ச நோக்கி
வெளித்தவ னூன்றி யிட்ட

வெற்பினா லலறி வீழ்ந்தான்
மளித்திறை யூன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.6

462
கருத்தனாய்க் கண்சி வந்து

கயிலைநன் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்த வாறே

ஏந்திழை அஞ்ச ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன்

திருவிர லூன்ற வீழ்ந்தான்
வருத்துவான் ஊன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.7

463
கடியவன் கண்சி வந்து

கயிலைநன் மலையை யோடி
வடிவுடை மங்கை அஞ்ச

எடுத்தலும் மருவ நோக்கிச்
செடிபடத் திருவி ரலா

லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்
வடிவுற வூன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.8

464
கரியத்தான் கண்சி வந்து

கயிலைநன் மலையைப் பற்றி
இரியத்தான் எடுத்தி டலும்

ஏந்திழை அஞ்ச ஈசன்
நெரியத்தான் ஊன்றா முன்னம்

நிற்கிலா தலறி வீழ்ந்தான்
மரியத்தான் ஊன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.9

465
கற்றனன் கயிலை தன்னைக்

காண்டலும் அரக்கன் ஓடிச்
செற்றவன் எடுத்த வாறே

சேயிழை அஞ்ச ஈசன்
உற்றிறை ஊன்றா முன்னம்

உணர்வழி வகையால் வீழ்ந்தான்
மற்றிறை ஊன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.
4.47.10
இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கைலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.48 திருஆப்பாடி - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

466
கடலகம் ஏழி னோடும்

புவனமுங் கலந்த விண்ணும்
உடலகத் துயிரும் பாரும்

ஒள்ளழ லாகி நின்று
தடமலர்க் கந்த மாலை

தண்மதி பகலு மாகி
மடலவிழ் கொன்றை சூடி

மன்னும்ஆப் பாடி யாரே.
4.48.1

467
ஆதியும் அறிவு மாகி

அறிவினுட் செறிவு மாகிச்
சோதியுட் சுடரு மாகித்

தூநெறிக் கொருவ னாகிப்
பாதியிற் பெண்ணு மாகிப்

பரவுவார் பாங்க னாகி
வேதியர் வாழுஞ் சேய்ஞல்

விரும்பும்ஆப் பாடி யாரே.
4.48.2

468
எண்ணுடை இருக்கு மாகி

யிருக்கினுட் பொருளு மாகிப்
பண்ணொடு பாடல் தன்னைப்

பரவுவார் பாங்க னாகிக்
கண்ணொரு நெற்றி யாகிக்

கருதுவார் கருத லாகாப்
பெண்ணொரு பாக மாகிப்

பேணும்ஆப் பாடி யாரே.
4.48.3

469
அண்டமார் அமரர் கோமான்

ஆதியெம் அண்ணல் பாதங்
கொண்டவன் குறிப்பி னாலே

கூப்பினான் தாப ரத்தைக்
கண்டவன் தாதை பாய்வான்

காலற எறியக் கண்டு
தண்டியார்க் கருள்கள் செய்த

தலைவர்ஆப் பாடி யாரே.
4.48.4

470
சிந்தையுந் தெளிவு மாகித்

தெளிவினுட் சிவமு மாகி
வந்தநற் பயனு மாகி

வாணுதல் பாக மாகி
மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த

மண்ணித்தென் கரைமேல் மன்னி
அந்தமோ டளவி லாத

அடிகள்ஆப் பாடி யாரே.
4.48.5

471
வன்னிவா ளரவு மத்தம்

மதியமும் ஆறுஞ் சூடி
மின்னிய உருவாஞ் சோதி

மெய்ப்பொருட் பயனு மாகிக்
கன்னியோர் பாக மாகிக்

கருதுவார் கருத்து மாகி
இன்னிசை தொண்டர் பாட

இருந்தஆப் பாடி யாரே.
4.48.6

472
உள்ளுமாய்ப் புறமு மாகி

உருவுமாய் அருவு மாகி
வெள்ளமாய்க் கரையு மாகி

விரிகதிர் ஞாயி றாகிக்
கள்ளமாய்க் கள்ளத் துள்ளார்

கருத்துமாய் அருத்த மாகி
அள்ளுவார்க் கள்ளல் செய்திட்

டிருந்தஆப் பாடி யாரே.
4.48.7

473
மயக்கமாய்த் தெளிவு மாகி

மால்வரை வளியு மாகித்
தியக்கமாய் ஒருக்க மாகிச்

சிந்தையுள் ஒன்றி நின்று
இயக்கமாய் இறுதி யாகி

எண்டிசைக் கிறைவ ராகி
அயக்கமாய் அடக்க மாய

ஐவர்ஆப் பாடி யாரே.
4.48.8

474
ஆரழல் உருவ மாகி

அண்டமேழ் கடந்த எந்தை
பேரொளி உருவி னானைப்

பிரமனும் மாலுங் காணாச்
சீரவை பரவி யேத்திச்

சென்றடி வணங்கு வார்க்குப்
பேரருள் அருளிச் செய்வார்

பேணும்ஆப் பாடி யாரே.
4.48.9

475
திண்டிறல் அரக்க னோடிச்

சீகயி லாயந் தன்னை
எண்டிறல் இலனு மாகி

எடுத்தலும் ஏழை அஞ்ச
விண்டிறல் நெறிய வூன்றி

மிகக்கடுத் தலறி வீழப்
பண்டிறல் கேட்டு கந்த

பரமர்ஆப் பாடி யாரே.
4.48.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாலுவந்தநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.49 திருக்குறுக்கை - திருநேரிசை

476
ஆதியிற் பிரம னார்தாம்

அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவர்

உணருமா றுணர லுற்றார்
சோதியுட் சுடராய்த் தோன்றிச்

சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ் சோலைக்

குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.1

477
நீற்றினை நிறையப் பூசி

நித்தலும் நியமஞ் செய்து
ஆற்றுநீர் பூரித் தாட்டும்

அந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்ற தென்று

தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலுங்

குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.2

478
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்

தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்

கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்

பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்

குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.3

479
சிலந்தியும் ஆனைக் காவிற்

திருநிழற் பந்தர் செய்து
உலந்தவண் இறந்த போதே

கோச்செங்க ணானு மாகக்
கலந்தநீர்க் காவி ரிசூழ்

சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார்

குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.4

480
ஏறுடன் ஏழ டர்த்தான்

எண்ணியா யிரம்பூக் கொண்டு
ஆறுடைச் சடையி னானை

அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்
வேறுமோர் பூக்கு றைய

மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்
கூறுமோர் ஆழி ஈந்தார்

குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.5

481
கல்லினால் எறிந்து கஞ்சி

தாமுணுஞ் சாக்கி யனார்
நெல்லினார் சோறு ணாமே

நீள்விசும் பாள வைத்தார்
எல்லியாங் கெரிகை ஏந்தி

எழில்திகழ் நட்ட மாடிக்
கொல்லியாம் பண்ணு கந்தார்

குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.6

482
காப்பதோர் வில்லும் அம்புங்

கையதோர் இறைச்சிப் பாரந்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத்

தூயவாய்க் கலசம் ஆட்டித்
தீப்பெருங் கண்கள் செய்யக்

குருதிநீர் ஒழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார்

குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.7

483
நிறைமறைக் காடு தன்னில்

நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத் தெலிதன் மூக்குச்

சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும்

நீண்டவா னுலக மெல்லாங்
குறைவறக் கொடுப்பர் போலுங்

குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.8

484
அணங்குமை பாக மாக

அடக்கிய ஆதி மூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும்

மருந்துநல் அருந்த வத்த
கணம்புல்லர்க் கருள்கள் செய்து

காதலாம் அடியார்க் கென்றுங்
குணங்களைக் கொடுப்பர் போலுங்

குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.9

485
எடுத்தனன் எழிற் கயிலை

இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்தொரு விரலால் ஊன்ற

அலறிப்போய் அவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந ரம்பால்

வேதகீ தங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற வாணாள்

குறுக்கைவீ ரட்ட னாரே.
4.49.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - ஞானாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.50 திருக்குறுக்கை - திருநேரிசை

486
நெடியமால் பிரம னோடு

நீரெனும் பிலயங் கொள்ள
அடியொடு முடியுங் காணார்

அருச்சுனற் கம்பும் வில்லுந்
துடியுடை வேட ராகித்

தூயமந் திரங்கள் சொல்லிக்
கொடிநெடுந் தேர்கொ டுத்தார்

குறுக்கைவீ ரட்ட னாரே.
4.50.1

487
ஆத்தமாம் அயனு மாலும்

அன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமான் என்று

தொழுதுதோத் திரங்கள் சொல்லத்
தீர்த்தமாம் அட்ட மிமுன்

சீருடை ஏழு நாளுங்
கூத்தராய் வீதி போந்தார்

குறுக்கைவீ ரட்ட னாரே.
4.50.2



இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.
4.50.3-10 திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
நான்காம் திருமுறை முதற் பகுதி முற்றும்.

திருச்சிற்றம்பலம்


This webpage was last updated on 25 July 2003