Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!


tirunAvukkaracar tEvAram -tirumuRai 4 part 2
(verses (488-1070 ))
(in tamil script, unicode format)

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி
பாடல்கள் (488 - 1070)




Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding.
Proof-reading and addition of brief comments: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. or

© Project Madurai 1999 - 2004
to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are

http://www.projectmadurai.org/


திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி
பாடல்கள் (488 - 1070)

உள்ளுறை
4.051 திருக்கோடிகா (488-497)மின்பதிப்பு
4.052 திருவாரூர் (498 -507)மின்பதிப்பு
4.053 திருவாரூர் (508 -517)மின்பதிப்பு
4.054 திருப்புகலூர் (518 - 527)மின்பதிப்பு
4.055 திருவலம்புரம் (528 -537)மின்பதிப்பு
4.056 திருஆவடுதுறை (538-547)மின்பதிப்பு
4.057 திருஆவடுதுறை (548- 557)மின்பதிப்பு
4.058 திருப்பருப்பதம் (558-567)மின்பதிப்பு
4.059 திருஅவளிவணல்லூர் (568-577)மின்பதிப்பு
4.060 திருப்பெருவேளூர் (578-587)மின்பதிப்பு
4.061 திருஇராமேச்சுரம் (588-598)மின்பதிப்பு
4.062 திருவாலவாய் (598 -608)மின்பதிப்பு
4.063 திருவண்ணாமலை (609-618 )மின்பதிப்பு
4.064 திருவீழிமிழலை (619-628)மின்பதிப்பு
4.065 திருச்சாய்க்காடு (629-638)மின்பதிப்பு
4.066 திருநாகேச்சரம் (639-648)மின்பதிப்பு
4.067 திருக்கொண்டீச்சரம் (649-658)மின்பதிப்பு
4.068 திருவாலங்காடு (659-668)மின்பதிப்பு
4.069 திருக்கோவலூர்வீரட்டம் (669-678)மின்பதிப்பு
4.070 திருநனிபள்ளி (679-687)மின்பதிப்பு
4.071 திருநாகைக்காரோணம் (688-696)மின்பதிப்பு
4.072 திருவின்னம்பர் (697-706)மின்பதிப்பு
4.073 திருச்சேறை (707-716 )மின்பதிப்பு
4.074 நெஞ்சம்ஈசனைநினைந்த (717-725)மின்பதிப்பு
4.075 தனித் - திருநேரிசை (726-735)மின்பதிப்பு
4.076 தனித் - திருநேரிசை (736-745)மின்பதிப்பு
4.077 தனித் - திருநேரிசை (746-753)மின்பதிப்பு
4.078 குறைந்த - திருநேரிசை (754-763)மின்பதிப்பு
4.079 குறைந்த - திருநேரிசை (764-769)மின்பதிப்பு
4.080 கோயில் - திருவிருத்தம் (770-779)மின்பதிப்பு
4.081 கோயில் - திருவிருத்தம் (780-789)மின்பதிப்பு
4.082 திருக்கழுமலம் (790-799)மின்பதிப்பு
4.083 திருக்கழுமலம் (800 )மின்பதிப்பு
4.084 ஆருயிர்த் - திருவிருத்தம் (801-811)மின்பதிப்பு
4.085 திருச்சோற்றுத்துறை (812-821)மின்பதிப்பு
4.086 திருவொற்றியூர் (822-832)மின்பதிப்பு
4.087 திருப்பழனம் (833-842)மின்பதிப்பு
4.088 திருப்பூந்துருத்தி (843-852)மின்பதிப்பு
4.089 திருநெய்த்தானம் (853-862)மின்பதிப்பு
4.090 திருவேதிகுடி (863-872)மின்பதிப்பு
4.091 திருவையாறு (873-882)மின்பதிப்பு
4.092 திருவையாறு (883-892)மின்பதிப்பு
4.093 திருவையாறு (893-902 )மின்பதிப்பு
4.094 திருக்கண்டியூர் (903-912)மின்பதிப்பு
4.095 திருப்பாதிரிப்புலியூர் (913-922)மின்பதிப்பு
4.096 திருவீழிமிழலை (923-932)மின்பதிப்பு
4.097 திருச்சத்திமுற்றம் (933-942)மின்பதிப்பு
4.098 திருநல்லூர் (943-952)மின்பதிப்பு
4.099 திருவையாறு (954-955)மின்பதிப்பு
4.100 திருவேகம்பம் (956-965)மின்பதிப்பு
4.101 திருவின்னம்பர் (966-975)மின்பதிப்பு
4.102 திருவாரூர் (976-985)மின்பதிப்பு
4.103 திருவாரூர் (986-992 )மின்பதிப்பு
4.104 திருநாகைக்காரோணம் (993-1001)மின்பதிப்பு
4.105 திருவதிகைவீரட்டானம் (1002-1008)மின்பதிப்பு
4.106 திருப்புகலூர் (1009-1012)மின்பதிப்பு
4.107 திருக்கழிப்பாலை (1013-1015)மின்பதிப்பு
4.108 திருக்கடவூர் (1016-1025)மின்பதிப்பு
4.109 திருமாற்பேறு (1026-1027)மின்பதிப்பு
4.110 திருத்தூங்கானைமாடம் (1028-1030)மின்பதிப்பு
4.111 பசுபதி (1031-1038மின்பதிப்பு
4.112 சரக்கறை (1039-1049)மின்பதிப்பு
4.113 தனி - திருவிருத்தம் (1050-1059 )மின்பதிப்பு
4.114 தனி - திருவிருத்தம் (1060-1070)மின்பதிப்பு


4.51 திருக்கோடிகா - திருநேரிசை

திருச்சிற்றம்பலம்

488 நெற்றிமேற் கண்ணி னானே

நீறுமெய் பூசி னானே
கற்றைப்புன் சடையி னானே

கடல்விடம் பருகி னானே
செற்றவர் புரங்கள் மூன்றுஞ்

செவ்வழல் செலுத்தி னானே
குற்றமில் குணத்தி னானே

கோடிகா வுடைய கோவே.
4.51.1

489 கடிகமழ் கொன்றை யானே

கபாலங்கை யேந்தி னானே
வடிவுடை மங்கை தன்னை

மார்பிலோர் பாகத் தானே
அடியிணை பரவ நாளும்

அடியவர்க் கருள்செய் வானே
கொடியணி விழவ தோவாக்

கோடிகா வுடைய கோவே.
4.51.2

490 நீறுமெய் பூசி னானே

நிழல்திகழ் மழுவி னானே
ஏறுகந் தேறி னானே

இருங்கடல் அமுதொப் பானே
ஆறுமோர் நான்கு வேதம்

அறமுரைத் தருளி னானே
கூறுமோர் பெண்ணி னானே

கோடிகா வுடைய கோவே.
4.51.3

491 காலனைக் காலாற் செற்றன்

றருள்புரி கருணை யானே
நீலமார் கண்டத் தானே

நீண்முடி யமரர் கோவே
ஞாலமாம் பெருமை யானே

நளிரிளந் திங்கள் சூடுங்
கோலமார் சடையி னானே

கோடிகா வுடைய கோவே.
4.51.4

492 பூணர வாரத் தானே

புலியுரி அரையி னானே
காணில்வெண் கோவ ணமுங்

கையிலோர் கபால மேந்தி
ஊணுமூர்ப் பிச்சை யானே

உமையொரு பாகத் தானே
கோணல்வெண் பிறையி னானே

கோடிகா வுடைய கோவே.
4.51.5

493 கேழல்வெண் கொம்பு பூண்ட

கிளரொளி மார்பி னானே
ஏழையேன் ஏழை யேன்நான்

என்செய்கேன் எந்தை பெம்மான்
மாழையொண் கண்ணி னார்கள்

வலைதனில் மயங்கு கின்றேன்
கூழைஏ றுடைய செல்வா

கோடிகா வுடைய கோவே.
4.51.6

494 அழலுமிழ் அங்கை யானே

அரிவையோர் பாகத் தானே
தழலுமிழ் அரவம் ஆர்த்துத்

தலைதனிற் பலிகொள் வானே
நிழலுமிழ் சோலை சூழ

நீள்வரி வண்டி னங்கள்
குழலுமிழ் கீதம் பாடுங்

கோடிகா வுடைய கோவே.
4.51.7

495ஏவடு சிலையி னாலே

புரமவை எரிசெய் தானே
மாவடு வகிர்கொள் கண்ணாள்

மலைமகள் பாகத் தானே
ஆவடு துறையு ளானே

ஐவரால் ஆட்டப் பட்டேன்
கோவடு குற்றந் தீராய்

கோடிகா வுடைய கோவே.
4.51.8

496 ஏற்றநீர்க் கங்கை யானே

இருநிலந் தாவி னானும்
நாற்றமா மலர்மேல் ஏறும்

நான்முகன் இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்க லுற்றார்க்

கழலுரு வாயினானே
கூற்றுக்குங் கூற்ற தானாய்

கோடிகா வுடைய கோவே.
4.51.9

497 பழகநான் அடிமை செய்வேன்

பசுபதீ பாவ நாசா
மழகளி யானை யின்றோல்

மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே அரக்கன் திண்டோ ள்

அருவரை நெரிய வூன்றுங்
குழகனே கோல மார்பா

கோடிகா வுடைய கோவே.
4.51.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோடீசுவரர்; தேவியார் - வடிவாம்பிகையம்மை

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.52 திருவாரூர் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

498 படுகுழிப் பவ்வத் தன்ன

பண்டியைப் பெய்த வாற்றாற்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை

காண்டொறுங் கேது கின்றேன்
முடுகுவர் இருந்துள் ஐவர்

மூர்க்கரே இவர்க ளோடும்
அடியனேன் வாழ மாட்டேன்

ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.1

499 புழுப்பெய்த பண்டி தன்னைப்

புறமொரு தோலால் மூடி
ஒழுக்கறா ஒன்ப துவாய்

ஒற்றுமை யொன்று மில்லை
சழக்குடை இதனுள் ஐவர்

சங்கடம் பலவுஞ் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டேன்

ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.2

500 பஞ்சின்மெல் லடியி னார்கள்

பாங்கரா யவர்கள் நின்று
நெஞ்சில்நோய் பலவுஞ் செய்து

நினையினும் நினைய வொட்டார்
நஞ்சணி மிடற்றி னானே

நாதனே நம்ப னேநான்
அஞ்சினேற் கஞ்ச லென்னீர்

ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.3

501 கெண்டையந் தடங்கண் நல்லார்

தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய்த் திரிதந் தைவர்

குலைத்திடர்க் குழியில் நூக்கக்
கண்டுநான் தரிக்க கில்லேன்

காத்துக்கொள் கறைசேர் கண்டா
அண்டவா னவர்கள் போற்றும்

ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.4

502 தாழ்குழல் இன்சொல் நல்லார்

தங்களைத் தஞ்ச மென்று
ஏழையே னாகி நாளும்

என்செய்கேன் எந்தை பெம்மான்
வாழ்வதேல் அரிது போலும்

வைகலும் ஐவர் வந்து
ஆழ்குழிப் படுத்த வாற்றேன்

ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.5

503 மாற்றமொன் றருள கில்லீர்

மதியிலேன் விதியி லாமை
சீற்றமுந் தீர்த்தல் செய்யீர்

சிக்கன வுடைய ராகிக்
கூற்றம்போல் ஐவர் வந்து

குலைத்திட்டுக் கோகு செய்ய
ஆற்றவுங் கில்லேன் நாயேன்

ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.6

504 உயிர்நிலை யுடம்பே காலா

உள்ளமே தாழி யாகத்
துயரமே ஏற்ற மாகத்

துன்பக்கோ லதனைப் பற்றிப்
பயிர்தனைச் சுழிய விட்டுப்

பாழ்க்குநீர் இறைத்து மிக்க
அயர்வினால் ஐவர்க் காற்றேன்

ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.7

505 கற்றதேல் ஒன்று மில்லை

காரிகை யாரோ டாடிப்
பெற்றதேற் பெரிதுந் துன்பம்

பேதையேன் பிழைப்பி னாலே
முற்றினால் ஐவர் வந்து

முறைமுறை துயரஞ் செய்ய
அற்றுநான் அலந்து போனேன்

ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.8

506 பத்தனாய் வாழ மாட்டேன்

பாவியேன் பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய

செய்வினை பலவுஞ் செய்ய
மத்துறு தயிரே போல

மறுகுமென் னுள்ளந் தானும்
அத்தனே அமரர் கோவே

ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.9

507 தடக்கைநா லைந்துங் கொண்டு

தடவரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க ஓடி

இரிந்தன பூத மெல்லாம்
முடித்தலை யனைத்துந் தோளும்

முறிதர இறையே யூன்றி
அடர்த்தருள் செய்த தென்னே

ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.53 திருவாரூர் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

508 குழல்வலங் கொண்ட சொல்லாள்

கோலவேற் கண்ணி தன்னைக்
கழல்வலங் கொண்டு நீங்காக்

கணங்களக் கணங்க ளார
அழல்வலங் கொண்ட கையான்

அருட்கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல்வலங் கொண்டல் செய்வான்

தோன்றினார் தோன்றி னாரே.
4.53.1

509 நாகத்தை நங்கை அஞ்ச

நங்கையை மஞ்ஞை யென்று
வேகத்தைத் தவிர நாகம்

வேழத்தின் உரிவை போர்த்துப்
பாகத்தின் நிமிர்தல் செய்யாத்

திங்களை மின்னென் றஞ்சி
ஆகத்திற் கிடந்த நாகம்

அடங்கும்ஆ ரூர னார்க்கே.
4.53.2

510 தொழுதகங் குழைய மேவித்

தோட்டிமை யுடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின்றார்

அவரவர் போலும் ஆரூர்
எழிலக நடுவெண் முத்த

மன்றியும் ஏர்கொள் வேலிப்
பொழிலகம் விளங்கு திங்கட்

புதுமுகிழ் சூடி னாரே.
4.53.3

511 நஞ்சிருள் மணிகொள் கண்டர்

நகையிருள் ஈமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத் தாடி

விளங்கினார் போலும் மூவா
வெஞ்சுடர் முகடு தீண்டி

வெள்ளிநா ராச மன்ன
அஞ்சுடர் அணிவெண் டிங்கள்

அணியும்ஆ ரூர னாரே.
4.53.4

512 எந்தளிர் நீர்மை கோல

மேனியென் றிமையோ ரேத்தப்
பைந்தளிர்க் கொம்ப ரன்ன

படர்கொடி பயிலப் பட்டுத்
தஞ்சடைத் தொத்தி னாலுந்

தம்மதோர் நீர்மை யாலும்
அந்தளிர் ஆகம் போலும்

வடிவர்ஆ ரூர னாரே.
4.53.5

513 வானகம் விளங்க மல்கும்

வளங்கெழு மதியஞ் சூடித்
தானக மழிய வந்து

தாம்பலி தேர்வர் போலும்
ஊனகங் கழிந்த ஓட்டில்

உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
ஆனகம் அஞ்சும் ஆடும்

அடிகள்ஆ ரூர னாரே.
4.53.6

514 அஞ்சணை கணையி னானை

அழலுற அன்று நோக்கி
அஞ்சணை குழலி னாளை

அமுதமா அணைந்து நக்கு
அஞ்சணை அஞ்சும் ஆடி

ஆடர வாட்டு வார்தாம்
அஞ்சணை வேலி ஆரூர்

ஆதரித் திடங்கொண் டாரே.
4.53.7

515 வணங்கிமுன் அமரர் ஏத்த

வல்வினை யான தீரப்
பிணங்குடைச் சடையில் வைத்த

பிறையுடைப் பெருமை யண்ணல்
மணங்கம ழோதி பாகர்

மதிநிலா வட்டத் தாடி
அணங்கொடி மாட வீதி

ஆரூரெம் அடிக ளாரே.
4.53.8

516 நகலிடம் பிறர்கட் காக

நான்மறை யோர்கள் தங்கள்
புகலிட மாகி வாழும்

புகலிலி இருவர் கூடி
இகலிட மாக நீண்டங்

கீண்டெழில் அழல தாகி
அகலிடம் பரவி யேத்த

அடிகள்ஆ ரூர னாரே.
4.53.9

517 ஆயிரந் திங்கள் மொய்த்த

அலைகடல் அமுதம் வாங்கி
ஆயிரம் அசுரர் வாழும்

அணிமதில் மூன்றும் வேவ
ஆயிரந் தோளும் மட்டித்

தாடிய அசைவு தீர
ஆயிரம் அடியும் வைத்த

அடிகள்ஆ ரூர னாரே.
4.53.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.54 திருப்புகலூர் - திருநேரிசை


பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

518 பகைத்திட்டார் புரங்கள் மூன்றும்

பாறிநீ றாகி வீழப்
புகைத்திட்ட தேவர் கோவே

பொறியிலேன் உடலந் தன்னுள்
அகைத்திட்டங் கதனை நாளும்

ஐவர்கொண் டாட்ட வாடித்
திகைத்திட்டேன் செய்வ தென்னே

திருப்புக லூர னீரே.
4.54.1

519 மையரி மதர்த்த ஒண்கண்

மாதரார் வலையிற் பட்டுக்
கையெரி சூல மேந்துங்

கடவுளை நினைய மாட்டேன்
ஐநெரிந் தகமி டற்றே

அடைக்கும்போ தாவி யார்தாஞ்
செய்வதொன் றறிய மாட்டேன்

திருப்புக லூர னீரே.
4.54.2

520 முப்பதும் முப்பத் தாறும்

முப்பதும் இடுகு ரம்பை
அப்பர்போல் ஐவர் வந்து

அதுதரு கிதுவி டென்று
ஒப்பவே நலிய லுற்றால்

உய்யுமா றறிய மாட்டேன்
செப்பமே திகழு மேனித்

திருப்புக லூர னீரே.
4.54.3

521 பொறியிலா அழுக்கை யோம்பிப்

பொய்யினை மெய்யென் றெண்ணி
நெறியலா நெறிகள் சென்றேன்

நீதனேன் நீதி யேதும்
அறிவிலேன் அமரர் கோவே

அமுதினை மண்ணில் வைக்குஞ்
செறிவிலேன் செய்வ தென்னே

திருப்புக லூர னீரே.
4.54.4

522 அளியினார் குழலி னார்கள்

அவர்களுக் கன்ப தாகிக்
களியினார் பாடல் ஓவாக்

கடவூர்வீ ரட்ட மென்னுந்
தளியினார் பாத நாளும்

நினைவிலாத் தகவில் நெஞ்சந்
தெளிவிலேன் செய்வ தென்னே

திருப்புக லூர னீரே.
4.54.5

523 இலவினார் மாதர் பாலே

இசைந்துநான் இருந்து பின்னும்
நிலவுநாள் பலவென் றெண்ணி

நீதனேன் ஆதி உன்னை
உலவிநான் உள்க மாட்டேன்

உன்னடி பரவு ஞானஞ்
செலவிலேன் செய்வ தென்னே

திருப்புக லூர னீரே.
4.54.6

524 காத்திலேன் இரண்டும் மூன்றுங்

கல்வியேல் இல்லை என்பால்
வாய்த்திலேன் அடிமை தன்னுள்

வாய்மையால் தூயே னல்லேன்
பார்த்தனுக் கருள்கள் செய்த

பரமனே பரவு வார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத்

திருப்புக லூர னீரே.
4.54.7

525 நீருமாய்த் தீயு மாகி

நிலனுமாய் விசும்பு மாகி
ஏருடைக் கதிர்க ளாகி

இமையவர் இறைஞ்ச நின்று
ஆய்வதற் கரிய ராகி

அங்கங்கே யாடு கின்ற
தேவர்க்குந் தேவ ராவார்

திருப்புக லூர னாரே.
4.54.8

526 மெய்யுளே விளக்கை ஏற்றி

வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி

உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்

அவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன்

திருப்புக லூர னீரே.
4.54.9

527 அருவரை தாங்கி னானும்

அருமறை யாதி யானும்
இருவரும் அறிய மாட்டா

ஈசனார் இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று

கண்வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார்

திருப்புக லூர னாரே.
4.54.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்,
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.55 திருவலம்புரம் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

528 தெண்டிரை தேங்கி ஓதஞ்

சென்றடி வீழுங் காலைத்
தொண்டிரைத் தண்டர் கோனைத்

தொழுதடி வணங்கி யெங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும்

வலம்புரத் தடிகள் தம்மைக்
கொண்டுநற் கீதம் பாடக்

குழகர்தாம் இருந்த வாறே.
4.55.1

529 மடுக்களில் வாளை பாய

வண்டினம் இரிந்த பொய்கைப்
பிடிக்களி றென்னத் தம்மிற்

பிணைபயின் றணைவ ரால்கள்
தொடுத்தநன் மாலை ஏந்தித்

தொண்டர்கள் பரவி யேத்த
வடித்தடங் கண்ணி பாகர்

வலம்புரத் திருந்த வாறே.
4.55.2

530 தேனுடை மலர்கள் கொண்டு

திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை அஞ்சுங் கொண்டு

அன்பினால் அமர வாட்டி
வானிடை மதியஞ் சூடும்

வலம்புரத் தடிகள் தம்மை
நானடைந் தேத்தப் பெற்று

நல்வினைப் பயனுற் றேனே.
4.55.3

531 முளைஎயிற் றிளநல் ஏனம்

பூண்டுமொய் சடைகள் தாழ
வளைஎயிற் றிளைய நாகம்

வலித்தரை யிசைய வீக்கிப்
புளைகைய போர்வை போர்த்துப்

புனலொடு மதியஞ் சூடி
வளைபயில் இளைய ரேத்தும்

வலம்புரத் தடிகள் தாமே.
4.55.4

532 சுருளுறு வரையின் மேலாற்

றுளங்கிளம் பளிங்கு சிந்த
இருளுறு கதிர்நு ழைந்த

இளங்கதிர்ப் பசலைத் திங்கள்
அருளுறும் அடிய ரெல்லாம்

அங்கையின் மலர்கள் ஏந்த
மருளுறு கீதங் கேட்டார்

வலம்புரத் தடிக ளாரே.
4.55.5

533 நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால்

நீண்டபுன் சடையி னானே
அனைத்துடன் கொண்டு வந்தங்

கன்பினால் அமைய வாட்டிப்
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை

மெய்ம்மையைப் புணர மாட்டேன்
எனக்குநான் செய்வ தென்னே

இனிவலம் புரவ னீரே.
4.55.6

534 செங்கயல் சேல்கள் பாய்ந்து

தேம்பழ மினிய நாடித்
தங்கயந் துறந்து போந்து

தடம்பொய்கை அடைந்து நின்று
கொங்கையர் குடையுங் காலைக்

கொழுங்கனி யழுங்கி னாராம்
மங்கல மனையின் மிக்கார்

வலம்புரத் தடிக ளாரே.
4.55.7

535அருகெலாங் குவளை செந்நெல்

அகவிலை யாம்பல் நெய்தல்
தெருவெலாந் தெங்கு மாவும்

பழம்விழும் படப்பை யெல்லாங்
குருகினங் கூடி யாங்கே

கும்மலித் திறகு லர்த்தி
மருவலா மிடங்கள் காட்டும்

வலம்புரத் தடிக ளாரே.
4.55.8

536 கருவரை யனைய மேனிக்

கடல்வண்ண னவனுங் காணான்
திருவரை யனைய பூமேல்

திசைமுக னவனுங் காணான்
ஒருவரை உச்சி ஏறி

ஓங்கினார் ஓங்கி வந்து
அருமையில் எளிமை யானார்

அவர்வலம் புரவ னாரே.
4.55.9

537 வாளெயி றிலங்க நக்கு

வளர்கயி லாயந் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற

அரக்கனை வரைக்கீ ழன்று
தோளொடு பத்து வாயுந்

தொலைந்துடன் அழுந்த வூன்றி
ஆண்மையும் வலியுந் தீர்ப்பார்

அவர்வலம் புரவ னாரே.
4.55.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வலம்புரநாதர், தேவியார் - வடுவகிர்க்கண்ணம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.56 திருஆவடுதுறை - திருநேரிசை


பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

538 மாயிரு ஞால மெல்லாம்

மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப்

படர்சடை வைப்பர் போலுங்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த

கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும்

ஆவடு துறைய னாரே.
4.56.1

539 மடந்தை பாகத்தர் போலும்

மான்மறிக் கையர் போலும்
குடந்தையிற் குழகர் போலுங்

கொல்புலித் தோலர் போலுங்
கடைந்தநஞ் சுண்பர் போலுங்

காலனைக் காய்வர் போலும்
அடைந்தவர்க் கன்பர் போலும்

ஆவடு துறைய னாரே.
4.56.2

540 உற்றநோய் தீர்ப்பர் போலும்

உறுதுணை யாவர் போலுஞ்
செற்றவர் புரங்கள் மூன்றுந்

தீயெழச் செறுவர் போலுங்
கற்றவர் பரவி யேத்தக்

கலந்துலந் தலந்து பாடும்
அற்றவர்க் கன்பர் போலும்

ஆவடு துறைய னாரே.
4.56.3

541 மழுவமர் கையர் போலும்

மாதவள் பாகர் போலும்
எழுநுனை வேலர் போலும்

என்புகொண் டணிவர் போலுந்
தொழுதெழுந் தாடிப் பாடித்

தோத்திரம் பலவுஞ் சொல்லி
அழுமவர்க் கன்பர் போலும்

ஆவடு துறைய னாரே.
4.56.4

542 பொடியணி மெய்யர் போலும்

பொங்குவெண் ணூலர் போலுங்
கடியதோர் விடையர் போலுங்

காமனைக் காய்வர் போலும்
வெடிபடு தலையர் போலும்

வேட்கையாற் பரவுந் தொண்டர்
அடிமையை அளப்பர் போலும்

ஆவடு துறைய னாரே.
4.56.5

543வக்கரன் உயிரை வவ்வக்

கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரங் கொடுப்பர் போலுந்

தானவர் தலைவர் போலுந்
துக்கமா மூடர் தம்மைத்

துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை ஆர்ப்பர் போலும்

ஆவடு துறைய னாரே.
4.56.6

544 விடைதரு கொடியர் போலும்

வெண்புரி நூலர் போலும்
படைதரு மழுவர் போலும்

பாய்புலித் தோலர் போலும்
உடைதரு கீளர் போலும்

உலகமு மாவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும்

ஆவடு துறைய னாரே.
4.56.7

545 முந்திவா னோர்கள் வந்து

முறைமையால் வணங்கி யேத்த
நந்திமா காள ரென்பார்

நடுவுடை யார்கள் நிற்பச்
சிந்தியா தேயொ ழிந்தார்

திரிபுரம் எரிப்பர் போலும்
அந்திவான் மதியஞ் சூடும்

ஆவடு துறைய னாரே.
4.56.8

546 பானமர் ஏன மாகிப்

பாரிடந் திட்ட மாலுந்
தேனமர்ந் தேறும் அல்லித்

திசைமுக முடைய கோவுந்
தீனரைத் தியக் கறுத்த

திருவுரு வுடையர் போலும்
ஆனரை ஏற்றர் போலும்

ஆவடு துறைய னாரே.
4.56.9

547 பார்த்தனுக் கருள்வர் போலும்

படர்சடை முடியர் போலும்
ஏத்துவார் இடர்கள் தீர

இன்பங்கள் கொடுப்பர் போலுங்
கூத்தராய்ப் பாடி யாடிக்

கொடுவலி யரக்கன் றன்னை
ஆர்த்தவாய் அலறு விப்பார்

ஆவடு துறைய னாரே.
4.56.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர், தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.57. திருஆவடுதுறை - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

548 மஞ்சனே மணியு மானாய்

மரகதத் திரளு மானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று

நினைதரு நிகழ்வி னானே
துஞ்சும்போ தாக வந்து

துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டும்

ஆவடு துறையு ளானே.
4.57.1

549 நானுகந் துன்னை நாளும்

நணுகுமா கருதி யேயும்
ஊனுகந் தோம்பும் நாயேன்

உள்ளுற ஐவர் நின்றார்
தானுகந் தேயு கந்த

தகவிலாத் தொண்ட னேன்நான்
ஆனுகந் தேறு வானே

ஆவடு துறையு ளானே.
4.57.2

550 கட்டமே வினைக ளான

காத்திவை நோக்கி ஆளாய்
ஒட்டவே ஒட்டி நாளும்

உன்னையுள் வைக்க மாட்டேன்
பட்டவான் தலைகை யேந்திப்

பலிதிரிந் தூர்கள் தோறும்
அட்டமா வுருவி னானே

ஆவடு துறையு ளானே.
4.57.3

551 பெருமைநன் றுடைய தில்லை

யென்றுநான் பேச மாட்டேன்
ஒருமையால் உன்னை உள்கி

உகந்துவா னேற மாட்டேன்
கருமையிட் டாய வூனைக்

கட்டமே கழிக்கின் றேன்நான்
அருமையா நஞ்ச முண்ட

ஆவடு துறையு ளானே.
4.57.4

552 துட்டனாய் வினைய தென்னுஞ்

சுழித்தலை அகப்பட் டேனைக்
கட்டனாய் ஐவர் வந்து

கலக்காமைக் காத்துக் கொள்வாய்
மட்டவிழ் கோதை தன்னை

மகிழ்ந்தொரு பாகம் வைத்து
அட்டமா நாக மாட்டும்

ஆவடு துறையு ளானே.
4.57.5

553 காரழற் கண்ட மேயாய்

கடிமதிற் புரங்கள் மூன்றும்
ஓரழல் அம்பி னாலே

யுகைத்துத்தீ எரிய மூட்டி
நீரழற் சடையு ளானே

நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆரழல் ஏந்தி யாடும்

ஆவடு துறையு ளானே.
4.57.6

554 செறிவிலேன் சிந்தை யுள்ளே

சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன்

கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லேன்

நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன்

ஆவடு துறையு ளானே.
4.57.7

555 கோலமா மங்கை தன்னைக்

கொண்டொரு கோல மாய
சீலமே அறிய மாட்டேன்

செய்வினை மூடி நின்று
ஞாலமாம் இதனுள் என்னை

நைவியா வண்ணம் நல்காய்
ஆலமா நஞ்ச முண்ட

ஆவடு துறையு ளானே.
4.57.8

556 நெடியவன் மலரி னானும்

நேர்ந்திரு பாலும் நேடக்
கடியதோர் உருவ மாகிக்

கனலெரி யாகி நின்ற
வடிவின வண்ண மென்றே

என்றுதாம் பேச லாகார்
அடியனேன் நெஞ்சி னுள்ளார்

ஆவடு துறையு ளானே.
4.57.9

557 மலைக்குநே ராய ரக்கன்

சென்றுற மங்கை அஞ்சத்
தலைக்குமேற் கைக ளாலே

தாங்கினான் வலியை மாள
உலப்பிலா விரலால் ஊன்றி

ஒறுத்தவற் கருள்கள் செய்து
அலைத்தவான் கங்கை சூடும்

ஆவடு துறையு ளானே.
4.57.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.58 திருப்பருப்பதம் - திருநேரிசை


பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

558 கன்றினார் புரங்கள் மூன்றுங்

கனலெரி யாகச் சீறி
நின்றதோ ருருவந் தன்னால்

நீர்மையும் நிறையுங் கொண்டு
ஒன்றியாங் குமையுந் தாமும்

ஊர்பலி தேர்ந்து பின்னும்
பன்றிப்பின் வேட ராகிப்

பருப்பத நோக்கி னாரே.
4.58.1

559 கற்றமா மறைகள் பாடிக்

கடைதொறும் பலியுந் தேர்வார்
வற்றலோர் தலைகை யேந்தி

வானவர் வணங்கி வாழ்த்த
முற்றவோர் சடையில் நீரை

ஏற்றமுக் கண்ணர் தம்மைப்
பற்றினார்க் கருள்கள் செய்து

பருப்பத நோக்கி னாரே.
4.58.2

560 கரவிலா மனத்த ராகிக்

கைதொழு வார்கட் கென்றும்
இரவினின் றெரிய தாடி

இன்னருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்று

மாட்டிய நகைய ராகிப்
பரவுவார்க் கருள்கள் செய்து

பருப்பத நோக்கி னாரே.
4.58.3

561 கட்டிட்ட தலைகை யேந்திக்

கனலெரி யாடிச் சீறிச்
சுட்டிட்ட நீறு பூசிச்

சுடுபிணக் காட ராகி
விட்டிட்ட வேட்கை யார்க்கு

வேறிருந் தருள்கள் செய்து
பட்டிட்ட வுடைய ராகிப்

பருப்பத நோக்கி னாரே.
4.58.4

562 கையராய்க் கபால மேந்திக்

காமனைக் கண்ணாற் காய்ந்து
மெய்யராய் மேனி தன்மேல்

விளங்குவெண் ணீறு பூசி
உய்யரா யுள்கு வார்கட்

குவகைகள் பலவுஞ் செய்து
பையரா அரையி லார்த்துப்

பருப்பத நோக்கி னாரே.
4.58.5

563 வேடராய் வெய்ய ராகி

வேழத்தி னுரிவை போர்த்து
ஓடரா யுலக மெல்லா

முழிதர்வர் உமையுந் தாமுங்
காடராய்க் கனல்கை யேந்திக்

கடியதோர் விடைமேற் கொண்டு
பாடராய்ப் பூதஞ் சூழப்

பருப்பத நோக்கி னாரே.
4.58.6

564 மேகம்போல் மிடற்ற ராகி

வேழத்தி னுரிவை போர்த்து
ஏகம்பம் மேவி னார்தாம்

இமையவர் பரவி யேத்தக்
காகம்பர் கழற ராகிக்

கடியதோர் விடையொன் றேறிப்
பாகம்பெண் ணுருவ மானார்

பருப்பத நோக்கி னாரே.
4.58.7

565 பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும்

பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
காருடைக் கண்ட ராகிக்

கபாலமோர் கையி லேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே

றேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப்

பருப்பத நோக்கி னாரே.
4.58.8

566 அங்கண்மா லுடைய ராய

ஐவரா லாட்டு ணாதே
உங்கள்மால் தீர வேண்டில்

உள்ளத்தா லுள்கி யேத்துஞ்
செங்கண்மால் பரவி யேத்திச்

சிவனென நின்ற செல்வர்
பைங்கண்வெள் ளேற தேறிப்

பருப்பத நோக்கி னாரே.
4.58.9

567 அடல்விடை யூர்தி யாகி

அரக்கன்றோள் அடர வூன்றிக்
கடலிடை நஞ்ச முண்ட

கறையணி கண்ட னார்தாஞ்
சுடர்விடு மேனி தன்மேற்

சுண்ணவெண் ணீறு பூசிப்
படர்சடை மதியஞ் சேர்த்திப்

பருப்பத நோக்கி னாரே.
4.58.10

இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பருப்பதேசுவரர், தேவியார் - மனோன்மணியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.59 திருஅவளிவணல்லூர் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

568 தோற்றினான் எயிறு கவ்வித்

தொழிலுடை யரக்கன் றன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச்

சிக்கெனத் தவிரு மென்று
வீற்றினை யுடைய னாகி

வெடுவெடுத் தெழுந்த வன்றன்
ஆற்றலை அழிக்க வல்லார்

அவளிவ ணல்லூ ராரே.
4.59.1

569 வெம்பினா ரரக்க ரெல்லாம்

மிகச்சழக் காயிற் றென்று
செம்பினா லெடுத்த கோயில்

சிக்கெனச் சிதையு மென்ன
நம்பினா ரென்று சொல்லி

நன்மையான் மிக்கு நோக்கி
அம்பினால் அழிய வெய்தார்

அவளிவ ணல்லூ ராரே.
4.59.2

570 கீழ்ப்படக் கருத லாமோ

கீர்த்திமை யுள்ள தாகிற்
தோட்பெரு வலியி னாலே

தொலைப்பன்யான் மலையை யென்று
வேட்பட வைத்த வாறே

விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்து
ஆட்படக் கருதிப் புக்கார்

அவளிவ ணல்லூ ராரே.
4.59.3

571 நிலைவலம் வல்ல னல்லன்

நேர்மையை நினைய மாட்டான்
சிலைவலங் கொண்ட செல்வன்

சீரிய கயிலை தன்னைத்
தலைவலங் கருதிப் புக்குத்

தாக்கினான் தன்னை யன்று
அலைகுலை யாக்கு வித்தார்

அவளிவ ணல்லூ ராரே.
4.59.4

572 தவ்வலி யொன்ற னாகித்

தனதொரு பெருமை யாலே
மெய்வ்வலி யுடைய னென்று

மிகப்பெருந் தேரை யூர்ந்து
செவ்வலி கூர்வி ழியாற்

சிரமத்தான் எடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லார்

அவளிவ ணல்லூ ராரே.
4.59.5

573 நன்மைதான் அறிய மாட்டான்

நடுவிலா அரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று

வலிதனைச் செலுத்த லுற்றுக்
கன்மையான் மலையை யோடிக்

கருதித்தான் எடுத்து வாயால்
அம்மையோ வென்ன வைத்தார்

அவளிவ ணல்லூ ராரே.
4.59.6

574 கதம்படப் போது வார்கள்

போதுமக் கருத்தி னாலே
சிதம்பட நின்ற நீர்கள்

சிக்கெனத் தவிரு மென்று
மதம்படு மனத்த னாகி

வன்மையான் மிக்கு நோக்க
அதம்பழத் துருவு செய்தார்

அவளிவ ணல்லூ ராரே.
4.59.7

575 நாடுமிக் குழிதர் கின்ற

நடுவிலா அரக்கர் கோனை
ஓடுமிக் கென்று சொல்லி

ஊன்றினான் உகிரி னாலே
பாடுமிக் குய்வ னென்று

பணியநற் றிறங்கள் காட்டி
ஆடுமிக் கரவம் பூண்டார்

அவளிவ ணல்லூ ராரே.
4.59.8

576 ஏனமா யிடந்த மாலும்

எழில்தரு முளரி யானும்
ஞானந்தா னுடைய ராகி

நன்மையை அறிய மாட்டார்
சேனந்தான் இலாவ ரக்கன்

செழுவரை எடுக்க வூன்றி
ஆனந்த அருள்கள் செய்தார்

அவளிவ ணல்லூ ராரே.
4.59.9

577 ஊக்கினான் மலையை யோடி

உணர்விலா அரக்கன் றன்னைத்
தாக்கினான் விரலி னாலே

தலைபத்துந் தகர வூன்றி
நோக்கினான் அஞ்சத் தன்னை

நோன்பிற வூன்று சொல்லி
ஆக்கினார் அமுத மாக

அவளிவ ணல்லூ ராரே.
4.59.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிநாயகேசுவரர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.60 திருப்பெருவேளூர் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

578 மறையணி நாவி னானை

மறப்பிலார் மனத்து ளானைக்
கறையணி கண்டன் றன்னைக்

கனலெரி யாடி னானைப்
பிறையணி சடையி னானைப்

பெருவேளூர் பேணி னானை
நறையணி மலர்கள் தூவி

நாடொறும் வணங்கு வேனே.
4.60.1

579 நாதனாய் உலக மெல்லாம்

நம்பிரான் எனவும் நின்ற
பாதனாம் பரம யோகி

பலபல திறத்தி னாலும்
பேதனாய்த் தோன்றி னானைப்

பெருவேளூர் பேணி னானை
ஓதநா வுடைய னாகி

உரைக்குமா றுரைக்கின் றேனே.
4.60.2

580 குறவிதோள் மணந்த செல்வக்

குமரவேள் தாதை யென்று
நறவிள நறுமென் கூந்தல்

நங்கையோர் பாகத் தானைப்
பிறவியை மாற்று வானைப்

பெருவேளூர் பேணி னானை
உறவினால் வல்ல னாகி

உணருமா றுணர்த்து வேனே.
4.60.3

581 மைஞ்ஞவில் கண்டன் றன்னை

வலங்கையின் மழுவொன் றேந்திக்
கைஞ்ஞவில் மானி னோடுங்

கனலெரி யாடி னானைப்
பிஞ்ஞகன் றன்னை அந்தண்

பெருவேளூர் பேணி னானைப்
பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப்

பொறியிலா அறிவி லேனே.
4.60.4

582 ஓடைசேர் நெற்றி யானை

உரிவையை மூடி னானை
வீடதே காட்டு வானை

வேதநான் காயி னானைப்
பேடைசேர் புறவ நீங்காப்

பெருவேளூர் பேணி னானைக்
கூடநான் வல்ல மாற்றங்

குறுகுமா றறிகி லேனே.
4.60.5

583 கச்சைசேர் நாகத் தானைக்

கடல்விடங் கண்டத் தானைக்
கச்சியே கம்பன் றன்னைக்

கனலெரி யாடு வானைப்
பிச்சைசேர்ந் துழல்வி னானைப்

பெருவேளூர் பேணி னானை
இச்சைசேர்ந் தமர நானும்

இறைஞ்சுமா றிறைஞ்சு வேனே.
4.60.6

584சித்தராய் வந்து தன்னைத்

திருவடி வணங்கு வார்கள்
முத்தனை மூர்த்தி யாய

முதல்வனை முழுது மாய
பித்தனைப் பிறரு மேத்தப்

பெருவேளூர் பேணி னானை
மெத்தனே யவனை நாளும்

விரும்புமா றறிகி லேனே.
4.60.7

585 முண்டமே தாங்கி னானை

முற்றிய ஞானத் தானை
வண்டுலாங் கொன்றை மாலை

வளர்மதிக் கண்ணி யானைப்
பிண்டமே ஆயி னானைப்

பெருவேளூர் பேணி னானை
அண்டமாம் ஆதி யானை

அறியுமா றறிகி லேனே.
4.60.8

586 விரிவிலா அறிவி னார்கள்

வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும்

எம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோ ரேத்தும்

பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி உய்யும்

வகையது நினைக்கின் றேனே.
4.60.9

587 பொருகடல் இலங்கை மன்னன்

உடல்கெடப் பொருத்தி நல்ல
கருகிய கண்டத் தானைக்

கதிரிளங் கொழுந்து சூடும்
பெருகிய சடையி னானைப்

பெருவேளூர் பேணி னானை
உருகிய அடிய ரேத்தும்

உள்ளத்தால் உள்கு வேனே.
4.60.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரியாதநாதர், தேவியார் - மின்னனையாளம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.61 திருஇராமேச்சுரம் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

588 பாசமுங் கழிக்க கில்லா

அரக்கரைப் படுத்துத் தக்க
வாசமிக் கலர்கள் கொண்டு

மதியினால் மால்செய் கோயில்
நேசமிக் கன்பி னாலே

நினைமின்நீர் நின்று நாளுந்
தேசமிக் கான் இருந்த

திருஇரா மேச்சு ரமே.
4.61.1

589 முற்றின நாள்கள் என்று

முடிப்பதே கார ணமாய்
உற்றவன் போர்க ளாலே

உணர்விலா அரக்கர் தம்மைச்
செற்றமால் செய்த கோயில்

திருஇரா மேச்சு ரத்தைப்
பற்றிநீ பரவு நெஞ்சே

படர்சடை ஈசன் பாலே.
4.61.2

590 கடலிடை மலைகள் தம்மால்

அடைத்துமால் கருமம் முற்றித்
திடலிடைச் செய்த கோயில்

திருஇரா மேச்சு ரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற்

சுழல்கின்றேன் தூய்மை யின்றி
உடலிடை நின்றும் பேரா

ஐவர்ஆட் டுண்டு நானே.
4.61.3

591 குன்றுபோல் தோளு டைய

குணமிலா அரக்கர் தம்மைக்
கொன்றுபோ ராழி யம்மால்

வேட்கையாற் செய்த கோயில்
நன்றுபோல் நெஞ்ச மேநீ

நன்மையை அறிதி யாயிற்
சென்றுநீ தொழுதுய் கண்டாய்

திருஇரா மேச்சு ரமே.
4.61.4

592 வீரமிக் கெயிறு காட்டி

விண்ணுற நீண்ட ரக்கன்
கூரமிக் கவனைச் சென்று

கொன்றுடன் கடற் படுத்துத்
தீரமிக் கானி ருந்த

திருஇரா மேச்சு ரத்தைக்
கோரமிக் கார்த வத்தாற்

கூடுவார் குறிப்பு ளாரே.
4.61.5

593 ஆர்வலம் நம்மின் மிக்கார்

என்றஅவ் வரக்கர் கூடிப்
போர்வலஞ் செய்து மிக்குப்

பொருதவர் தம்மை வீட்டித்
தேர்வலஞ் செற்ற மால்செய்

திருஇரா மேச்சு ரத்தைச்
சேர்மட நெஞ்ச மேநீ

செஞ்சடை எந்தை பாலே.
4.61.6

594 வாக்கினால் இன்பு ரைத்து

வாழ்கிலார் தம்மை யெல்லாம்
போக்கினாற் புடைத்த வர்கள்

உயிர்தனை யுண்டு மால்தான்
தேக்குநீர் செய்த கோயில்

திருஇரா மேச்சு ரத்தை
நோக்கினால் வணங்கு வார்க்கு

நோய்வினை நுணுகு மன்றே.
4.61.7

595 பலவுநாள் தீமை செய்து

பார்தன்மேற் குழுமி வந்து
கொலைவிலார் கொடிய ராய

அரக்கரைக் கொன்று வீழ்த்தச்
சிலையினான் செய்த கோயில்

திருஇரா மேச்சு ரத்தைத்
தலையினால் வணங்கு வார்கள்

தாழ்வராந் தவம தாமே.
4.618

596 கோடிமா தவங்கள் செய்து

குன்றினார் தம்மை யெல்லாம்
வீடவே சக்க ரத்தால்

எறிந்துபின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில்

திருஇரா மேச்சு ரத்தை
நாடிவாழ் நெஞ்ச மேநீ

நன்னெறி யாகு மன்றே.
4.61.9

597 வன்கண்ணர் வாள ரக்கர்

வாழ்வினை யொன்ற றியார்
புன்கண்ண ராகி நின்று

போர்கள்செய் தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில்

திருஇரா மேச்சு ரத்தைத்
தங்கணால் எய்த வல்லார்

தாழ்வராந் தலைவன் பாலே.
4.61.10

598 வரைகளொத் தேயு யர்ந்த

மணிமுடி அரக்கர் கோனை
விரையமுற் றறவொ டுக்கி

மீண்டுமால் செய்த கோயில்
திரைகள்முத் தால்வ ணங்குந்

திருஇரா மேச்சு ரத்தை
உரைகள்பத் தாலு ரைப்பார்

உள்குவார் அன்பி னாலே.
4.61.11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இராமலிங்கேசுவரர்; தேவியார் - பருவதவர்த்தனியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.62 திருவாலவாய் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

599 வேதியா வேத கீதா

விண்ணவர் அண்ணா என்றென்
றோதியே மலர்கள் தூவி

ஒடுங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய்

படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே ஆல வாயில்

அப்பனே அருள்செ யாயே.
4.62.1

600 நம்பனே நான்மு கத்தாய்

நாதனே ஞான மூர்த்தி
என்பொனே ஈசா என்றென்

றேத்திநான் ஏசற் றென்றும்
பின்பினே திரிந்து நாயேன்

பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில் அப்பனே

அருள் செயாயே.
4.62.2

601 ஒருமருந் தாகி யுள்ளாய்

உம்பரோ டுலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய்

பேரமு தின்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளாய்

ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
அருமருந் தால வாயில்

அப்பனே அருள்செ யாயே.
4.62.3

602 செய்யநின் கமல பாதஞ்

சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே

மான்மறி மழுவொன் றேந்துஞ்
சைவனே சால ஞானங்

கற்றறி விலாத நாயேன்
ஐயனே ஆல வாயில்

அப்பனே அருள்செ யாயே.
4.62.4

603 வெண்டலை கையி லேந்தி

மிகவுமூர் பலிகொண் டென்றும்
உண்டது மில்லை சொல்லில்

உண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப்

பளகனேன் உளம தார
அண்டனே ஆல வாயில்

அப்பனே அருள்செ யாயே.
4.62.5

604 எஞ்சலில் புகலி தென்றென்

றேத்திநான் ஏசற் றென்றும்
வஞ்சக மொன்று மின்றி

மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த

நற்பொருட் பதமே நாயேற்
கஞ்சலென் றால வாயில்

அப்பனே அருள்செ யாயே.
4.62.6

605 வழுவிலா துன்னை வாழ்த்தி

வழிபடுந் தொண்ட னேன்உன்
செழுமலர்ப் பாதங் காணத்

தெண்டிரை நஞ்ச முண்ட
குழகனே கோல வில்லீ

கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே ஆல வாயில்

அப்பனே அருள்செ யாயே.
4.62.7

606 நறுமலர் நீருங் கொண்டு

நாடொறு மேத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத்

திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா

மாமறை யங்க மாறும்
அறிவனே ஆல வாயில்

அப்பனே அருள்செ யாயே.
4.62.8

607 நலந்திகழ் வாயின் நூலாற்

சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரச தாள

அருளினாய் என்று திண்ணங்
கலந்துடன் வந்து நின்றாள்

கருதிநான் காண்ப தாக
அலந்தனன் ஆல வாயில்

அப்பனே அருள்செ யாயே.
4.62.9

608 பொடிக்கொடு பூசிப் பொல்லாக்

குரம்பையிற் புந்தி யொன்றிப்
பிடித்துநின் றாள்க ளென்றும்

பிதற்றிநா னிருக்க மாட்டேன்
எடுப்பனென் றிலங்கைக் கோன்வந்

தெடுத்தலும் இருப துதோள்
அடர்த்தனே ஆல வாயில்

அப்பனே அருள்செ யாயே.
4.62.10

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொக்கநாதேசுவரர், தேவியார் - மீனாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.63 திருவண்ணாமலை - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

609 ஓதிமா மலர்கள் தூவி

உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்டோ ள்

சுடர்மழுப் படையி னானே
ஆதியே அமரர் கோவே

அணியணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால்

நினையுமா நினைவி லேனே.
4.63.1

610 பண்டனை வென்ற இன்சொற்

பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக்

கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே

அணியணா மலையு ளானே
தொண்டனேன் உன்னை அல்லாற்

சொல்லுமா சொல்லி லேனே.
4.63.2

611 உருவமும் உயிரு மாகி

ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்

நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா

மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான்

மற்றொரு மாடி லேனே.
4.63.3

612 பைம்பொனே பவளக் குன்றே

பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா

சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்

அணியணா மலையு ளானே
என்பொனே உன்னை யல்லால்

யாதும்நான் நினைவி லேனே.
4.63.4

613 பிறையணி முடியி னானே

பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார்

கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமர ரேத்தும்

அணியணா மலையு ளானே
இறைவனே உன்னை யல்லா

லியாதுநான் நினைவி லேனே.
4.63.5

614 புரிசடை முடியின் மேலோர்

பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக்

கருதிய கால காலா
அரிகுலம் மலிந்த அண்ணா

மலையுளாய் அலரின் மிக்க
வரிமிகு வண்டு பண்செய்

பாதநான் மறப்பி லேனே.
4.63.6

615 இரவியும் மதியும் விண்ணும்

இருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவனம் எட்டுந்

திசையொளி உருவ மானாய்
அரவுமிழ் மணிகொள் சோதி

அணியணா மலையு ளானே
பரவுநின் பாத மல்லாற்

பரமநான் பற்றி லேனே.
4.63.7

616 பார்த்தனுக் கன்று நல்கிப்

பாசுப தத்தை ஈந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை

நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவந் தீண்டு கொண்டல்

அணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத்

திறமலாற் றிறமி லேனே.
4.63.8

617 பாலுநெய் முதலா மிக்க

பசுவில்ஐந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக்

காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூகம்

அணியணா மலையு ளானே
வாலுடை விடையாய் உன்றன்

மலரடி மறப்பி லேனே.
4.63.9

618 இரக்கமொன் றியாது மில்லாக்

காலனைக் கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை ஊக்க

ஒருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த அண்ணா

மலையுளாய் அமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித்

திருவடி மறப்பி லேனே.
4.63.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர், தேவியார் - உண்ணாமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.64 திருவீழிமிழலை - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

619 பூதத்தின் படையர் பாம்பின்

பூணினர் பூண நூலர்
சீதத்திற் பொலிந்த திங்கட்

கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர்
கீதத்திற் பொலிந்த ஓசைக்

கேள்வியர் வேள்வி யாளர்
வேதத்தின் பொருளர் வீழி

மிழலையுள் விகிர்த னாரே.
4.64.1

620 காலையிற் கதிர்செய் மேனி

கங்குலிற் கறுத்த கண்டர்
மாலையின் மதியஞ் சேர்ந்த

மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையிற் பாகும் போல

அண்ணித்திட் டடியார்க் கென்றும்
வேலையின் அமுதர் வீழி

மிழலையுள் விகிர்த னாரே.
4.64.2

621 வருந்தின நெருநல் இன்றாய்

வழங்கின நாளர் ஆற்கீழ்
இருந்துநன் பொருள்கள் நால்வர்க்

கியம்பினர் இருவ ரோடும்
பொருந்தினர் பிரிந்து தம்பால்

பொய்யரா மவர்கட் கென்றும்
விருந்தினர் திருந்து வீழி

மிழலையுள் விகிர்த னாரே.
4.64.3

622 நிலையிலா வூர்மூன் றொன்ற

நெருப்பரி காற்றம் பாகச்
சிலையுநா ணதுவு நாகங்

கொண்டவர் தேவர் தங்கள்
தலையினாற் றரித்த என்பும்

தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர் வீழி

மிழலையுள் விகிர்த னாரே.
4.64.4

623 மறையிடைப் பொருளர் மொட்டின்

மலர்வழி வாசத் தேனர்
கறவிடைப் பாலின் நெய்யர்

கரும்பினிற் கட்டி யாளர்
பிறையிடைப் பாம்பு கொன்றைப்

பிணையல்சேர் சடையுள் நீரர்
விறகிடைத் தீயர் வீழி

மிழலையுள் விகிர்த னாரே.
4.64.5

624 எண்ணகத் தில்லை அல்லர்

உளரல்லர் இமவான் பெற்ற
பெண்ணகத் தரையர் காற்றிற்

பெருவலி யிருவ ராகி
மண்ணகத் தைவர் நீரில்

நால்வர்தீ யதனில் மூவர்
விண்ணகத் தொருவர் வீழி

மிழலையுள் விகிர்த னாரே.
4.64.6

625 சந்தணி கொங்கை யாளோர்

பங்கினர் சாம வேதர்
எந்தையும் எந்தை தந்தை

தந்தையு மாய ஈசர்
அந்தியோ டுதயம் அந்த

ணாளர்ஆன் நெய்யால் வேட்கும்
வெந்தழ லுருவர் வீழி

மிழலையுள் விகிர்த னாரே.
4.64.7

626 நீற்றினை நிறையப் பூசி

நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி ஒருநா ளொன்று

குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி

யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி

மிழலையுள் விகிர்த னாரே.
4.64.8

627 சித்திசெய் பவர்கட் கெல்லாஞ்

சேர்விடஞ் சென்று கூடப்
பத்திசெய் பவர்கள் பாவம்

பறைப்பவர் இறப்பி லாளர்
முத்திசை பவள மேனி

முதிரொளி நீல கண்டர்
வித்தினில் முளையர் வீழி

மிழலையுள் விகிர்த னாரே.
4.64.9

628 தருக்கின அரக்கன் தேரூர்

சாரதி தடைநி லாது
பொருப்பினை யெடுத்த தோளும்

பொன்முடி பத்தும் புண்ணாய்
நெரிப்புண்டங் கலறி மீண்டு

நினைந்தடி பரவத் தம்வாள்
விருப்பொடுங் கொடுப்பர் வீழி

மிழலையுள் விகிர்த னாரே.
4.64.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகீசுவரர், தேவியார் - சுந்தராம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.65 திருச்சாய்க்காடு - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

629 தோடுலா மலர்கள் தூவித்

தொழுதெழு மார்க்கண் டேயன்
வீடுநாள் அணுகிற் றென்று

மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செல்லு மஞ்சிப்

பாதமே சரண மென்னச்
சாடினார் காலன் மாளச்

சாய்க்காடு மேவி னாரே.
4.65.1

630 வடங்கெழு மலைமத் தாக

வானவர் அசுர ரோடு
கடைந்திட எழுந்த நஞ்சங்

கண்டுபல் தேவ ரஞ்சி
அடைந்துநும் சரண மென்ன

அருள்பெரி துடைய ராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார்

சாய்க்காடு மேவி னாரே.
4.65.2

631 அரணிலா வெளிய நாவல்

அருள்நிழ லாக ஈசன்
வரணிய லாகித் தன்வாய்

நூலினாற் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை

முடியுடை மன்ன னாக்கித்
தரணிதான் ஆள வைத்தார்

சாய்க்காடு மேவி னாரே.
4.65.3

632 அரும்பெருஞ் சிலைக்கை வேட

னாய்விறற் பார்த்தற் கன்று
உரம்பெரி துடைமை காட்டி

ஒள்ளமர் செய்து மீண்டே
வரம்பெரி துடைய னாக்கி

வாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலி தூணி ஈந்தார்

சாய்க்காடு மேவி னாரே.
4.65.4

633 இந்திரன் பிரமன் அங்கி

எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி

வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திர மறியாத் தக்கன்

வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ்

சாய்க்காடு மேவி னாரே.
4.65.5

634 ஆமலி பாலும் நெய்யும்

ஆட்டிஅர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப்

பொறாததன் தாதை தாளைக்
கூர்மழு வொன்றால் ஓச்சக்

குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார்

சாய்க்காடு மேவி னாரே.
4.65.6

635 மையறு மனத்த னாய

பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் லமர ரேத்த

ஆயிர முகம தாகி
வையகம் நெளியப் பாய்வான்

வந்திழி கங்கை யென்னுந்
தையலைச் சடையில் ஏற்றார்

சாய்க்காடு மேவி னாரே.
4.65.7

636 குவப்பெருந் தடக்கை வேடன்

கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந்
துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித்

தூயவாய்க் கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதி சோர

ஒருகணை யிடந்தங் கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார்

சாய்க்காடு மேவி னாரே.
4.65.8

637 நக்குலா மலர்பன் னூறு

கொண்டுநன் ஞானத் தோடு
மிக்கபூ சனைகள் செய்வான்

மென்மல ரொன்று காணா
தொக்குமென் மலர்க்கண் ணென்றங்

கொருகணை யிடந்து மப்பச்
சக்கரங் கொடுப்பர் போலுஞ்

சாய்க்காடு மேவி னாரே.
4.65.9

638 புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து

மாயகொண் டரக்க னோடிச்
சிவன்திரு மலையைப் பேர்க்கத்

திருமலர்க் குழலி யஞ்ச
வியன்பெற எய்தி வீழ

விரல்சிறி தூன்றி மீண்டே
சயம்பெற நாம மீந்தார்

சாய்க்காடு மேவி னாரே.
4.65.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாயவனேசுவரர்,
தேவியார் - குயிலின்நன்மொழியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.66 திருநாகேச்சரம் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

639 கச்சைசேர் அரவர் போலுங்

கறையணி மிடற்றர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும்

பேரரு ளாலர் போலும்
இச்சையால் மலர்கள் தூவி

இரவொடு பகலுந் தம்மை
நச்சுவார்க் கினியர் போலும்

நாகஈச் சரவ னாரே.
4.66.1

640 வேடுறு வேட ராகி

விசயனோ டெய்தார் போலுங்
காடுறு பதியர் போலுங்

கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலுந்

தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும்

நாகஈச் சரவ னாரே.
4.66.2

641 கற்றுணை வில்ல தாகக்

கடியரண் செற்றார் போலும்
பொற்றுணைப் பாதர் போலும்

புலியத ளுடையார் போலுஞ்
சொற்றுணை மாலை கொண்டு

தொழுதெழு வார்கட் கெல்லாம்
நற்றுணை யாவர் போலும்

நாகஈச் சரவ னாரே.
4.66.3

642 கொம்பனாள் பாகர் போலுங்

கொடியுடை விடையர் போலுஞ்
செம்பொனா ருருவர் போலுந்

திகழ்திரு நீற்றர் போலும்
எம்பிரான் எம்மை யாளும்

இறைவனே என்று தம்மை
நம்புவார்க் கன்பர் போலும்

நாகஈச் சரவ னாரே.
4.66.4

643 கடகரி யுரியர் போலுங்

கனல்மழு வாளர் போலும்
படவர வரையர் போலும்

பாரிடம் பலவுங் கூடிக்
குடமுடை முழவம் ஆர்ப்பக்

கூளிகள் பாட நாளும்
நடநவில் அடிகள் போலும்

நாகஈச் சரவ னாரே.
4.66.5

644 பிறையுறு சடையர் போலும்

பெண்ணொரு பாகர் போலும்
மறையுறு மொழியர் போலும்

மால்மறை யவன்ற னோடு
முறைமுறை அமரர் கூடி

முடிகளால் வணங்க நின்ற
நறவமர் கழலர் போலும்

நாகஈச் சரவ னாரே.
4.66.6

645 வஞ்சகர்க் கரியர் போலும்

மருவினோர்க் கெளியர் போலுங்
குஞ்சரத் துரியர் போலுங்

கூற்றினைக் குமைப்பர் போலும்
விஞ்சையர் இரிய அன்று

வேலைவாய் வந்தெ ழுந்த
நஞ்சணி மிடற்றர் போலும்

நாகஈச் சரவ னாரே.
4.66.7

646 போகமார் மோடி கொங்கை

புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும்

வெண்பொடி யாடு மேனிப்
பாகமா லுடையர் போலும்

பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும்

நாகஈச் சரவ னாரே.
4.66.8

647 கொக்கரை தாளம் வீணை

பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும்

ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும்

மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும்

நாகஈச் சரவ னாரே.
4.66.9

648 வின்மையாற் புரங்கள் மூன்றும்

வெந்தழல் விரித்தார் போலும்
தன்மையால் அமரர் தங்கள்

தலைவர்க்குந் தலைவர் போலும்
வன்மையான் மலையெ டுத்தான்

வலியினைத் தொலைவித் தாங்கே
நன்மையால் அளிப்பர் போலும்

நாகஈச் சரவ னாரே.
4.66.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சண்பகாரண்ணியேசுவரர்,
தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.67 திருக்கொண்டீச்சரம் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

649 வரைகிலேன் புலன்க ளைந்தும்

வரைகிலாப் பிறவி மாயப்
புரையிலே அடங்கி நின்று

புறப்படும் வழியுங் காணேன்
அரையிலே மிளிரு நாகத்

தண்ணலே அஞ்ச லென்னாய்
திரையுலாம் பழன வேலித்

திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.1

650 தொண்டனேன் பிறந்து வாளா

தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து

பேர்வதோர் வழியுங் காணேன்
அண்டனே அண்ட வாணா

அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த

திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.2

651 கால்கொடுத் தெலும்பு மூட்டிக்

கதிர்நரம் பாக்கை யார்த்துத்
தோலுடுத் துதிர மட்டித்

தொகுமயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத் துழைஞர் கூடி

ஒளிப்பதற் கஞ்சு கின்றேன்
சேலுடைப் பழனஞ் சூழ்ந்த

திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.3

652 கூட்டமாய் ஐவர் வந்து

கொடுந்தொழிற் குணத்த ராகி
ஆட்டுவார்க் காற்ற கில்லேன்

ஆடர வசைத்த கோவே
காட்டிடை யரங்க மாக

ஆடிய கடவு ளேயோ
சேட்டிரும் பழன வேலித்

திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.4

653 பொக்கமாய் நின்ற பொல்லாப்

புழுமிடை முடைகொள் ஆக்கை
தொக்குநின் றைவர் தொண்ணூற்

றறுவருந் துயக்க மெய்த
மிக்குநின் றிவர்கள் செய்யும்

வேதனைக் கலந்து போனேன்
செக்கரே திகழும் மேனித்

திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.5

654ஊனுலா முடைகொள் ஆக்கை

உடைகல மாவ தென்றும்
மானுலா மழைக்க ணார்தம்

வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
நானெலா மினைய கால

நண்ணிலேன் எண்ண மில்லேன்
தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த

திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.6

655 சாணிரு மடங்கு நீண்ட

சழக்குடைப் பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்

றறுவரும் மயக்கஞ் செய்து
பேணிய பதியின் நின்று

பெயரும்போ தறிய மாட்டேன்
சேணுயர் மாட நீடு

திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.7

656 பொய்மறித் தியற்றி வைத்துப்

புலால்கமழ் பண்டம் பெய்து
பைமறித் தியற்றி யன்ன

பாங்கிலாக் குரம்பை நின்று
கைமறித் தனைய வாவி

கழியும்போ தறிய மாட்டேன்
சென்னெறிச் செலவு காணேன்

திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.8

657 பாலனாய்க் கழிந்த நாளும்

பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும்

மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளுங்

குறிக்கோளி லாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித்

திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.9

658 விரைதரு கருமென் கூந்தல்

விளங்கிழை வேலொண் கண்ணாள்
வெருவர இலங்கைக் கோமான்

விலங்கலை எடுத்த ஞான்று
பருவரை யனைய தோளும்

முடிகளும் பாரி வீழத்
திருவிர லூன்றி னானே

திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - சாந்தநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.68 திருவாலங்காடு - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

659 வெள்ளநீர்ச் சடையர் போலும்

விரும்புவார்க் கெளியர் போலும்
உள்ளுளே யுருகி நின்றங்

குகப்பவர்க் கன்பர் போலுங்
கள்ளமே வினைக ளெல்லாங்

கரிசறுத் திடுவர் போலும்
அள்ளலம் பழனை மேய

ஆலங்காட் டடிக ளாரே.
4.68.1

660 செந்தழ லுருவர் போலுஞ்

சினவிடை யுடையர் போலும்
வெந்தவெண் ணீறு கொண்டு

மெய்க்கணிந் திடுவர் போலும்
மந்தமாம் பொழிற் பழனை

மல்கிய வள்ளல் போலும்
அந்தமில் அடிகள் போலும்

ஆலங்காட் டடிக ளாரே.
4.68.2

661 கண்ணினாற் காம வேளைக்

கனலெழ விழிப்பர் போலும்
எண்ணிலார் புரங்கள் மூன்று

மெரியுணச் சிரிப்பர் போலும்
பண்ணினார் முழவ மோவாப்

பைம்பொழிற் பழனை மேய
அண்ணலார் எம்மை யாளும்

ஆலங்காட் டடிக ளாரே.
4.68.3

662 காறிடு விடத்தை யுண்ட

கண்டரெண் தோளர் போலுந்
தூறிடு சுடலை தன்னிற்

சுண்ணவெண் ணீற்றர் போலுங்
கூறிடு முருவர் போலுங்

குளிர்பொழிற் பழனை மேய
ஆறிடு சடையர் போலும்

ஆலங்காட் டடிக ளாரே.
4.68.4

663 பார்த்தனோ டமர் பொருது

பத்திமை காண்பர் போலுங்
கூர்த்தவா யம்பு கோத்துக்

குணங்களை அறிவர் போலும்
பேர்த்துமோ ராவ நாழி

அம்போடுங் கொடுப்பர் போலுந்
தீர்த்தமாம் பழனை மேய

திருவாலங் காட னாரே.
4.68.5

664 வீட்டினார் சுடுவெண் ணீறு

மெய்க்கணிந் திடுவர் போலுங்
காட்டில்நின் றாடல் பேணுங்

கருத்தினை யுடையர் போலும்
பாட்டினார் முழவ மோவாப்

பைம்பொழிற் பழனை மேயார்
ஆட்டினார் அரவந் தன்னை

ஆலங்காட் டடிக ளாரே.
4.68.6

665 தாளுடைச் செங்க மலத்

தடங்கொள்சே வடியர் போலும்
நாளுடைக் காலன் வீழ

உதைசெய்த நம்பர் போலுங்
கோளுடைப் பிறவி தீர்ப்பார்

குளிர்பொழிற் பழனை மேய
ஆளுடை யண்ணல் போலும்

ஆலங்காட் டடிக ளாரே.
4.68.7

666 கூடினார் உமைதன் னோடே

குறிப்புடை வேடங் கொண்டு
சூடினார் கங்கை யாளைச்

சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம்

பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண

ஆலங்காட் டடிக ளாரே.
4.68.8

667 வெற்றரைச் சமண ரோடு

விலையுடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார்

குணங்களை உகப்பர் போலும்
பெற்றமே உகந்தங் கேறும்

பெருமையை யுடையர் போலும்
அற்றங்கள் அறிவர் போலும்

ஆலங்காட் டடிக ளாரே.
4.68.9

668 மத்தனாய் மலையெ டுத்த

அரக்கனைக் கரத்தோ டொல்க
ஒத்தினார் திருவி ரலால்

ஊன்றியிட் டருள்வர் போலும்
பத்தர்தம் பாவந் தீர்க்கும்

பைம்பொழிற் பழனை மேய
அத்தனார் நம்மை யாள்வார்

ஆலங்காட் டடிக ளாரே.
4.68.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர்,
தேவியார் - வண்டார்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.69 திருக்கோவலூர்வீரட்டம் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

669 செத்தையேன் சிதம்ப நாயேன்

செடியனேன் அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும்

புகலிடம் அறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கேன்

இருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வ தென்னே

கோவல்வீ ரட்ட னீரே.
4.69.1

670 தலைசுமந் திருகை நாற்றித்

தரணிக்கே பொறைய தாகி
நிலையிலா நெஞ்சந் தன்னுள்

நித்தலும் ஐவர் வேண்டும்
விலைகொடுத் தறுக்க மாட்டேன்

வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
குலைகொள்மாங் கனிகள் சிந்தும்

கோவல்வீ ரட்ட னீரே.
4.69.2

671 வழித்தலைப் படவு மாட்டேன்

வைகலுந் தூய்மை செய்து
பழித்திலேன் பாச மற்றுப்

பரமநான் பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை

என்னினைந் திருக்க மாட்டேன்
கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க்

கோவல்வீ ரட்ட னீரே.
4.69.3

672 சாற்றுவர் ஐவர் வந்து

சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக்

கண்செவி மூக்கு வாயுள்
ஆற்றுவர் அலந்து போனேன்

ஆதியை அறிவொன் றின்றிக்
கூற்றுவர் வாயிற் பட்டேன்

கோவல்வீ ரட்ட னீரே.
4.69.4

673 தடுத்திலேன் ஐவர் தம்மைத்

தத்துவத் துயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப்

பன்மலர்ப் பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யார

ஆர்வலித் தன்பு திண்ணங்
கொடுத்திலேன் கொடிய வாநான்

கோவல்வீ ரட்ட னீரே.
4.69.5

674 மாச்செய்த குரம்பை தன்னை

மண்ணிடை மயக்க மெய்து
நாச்செய்து நாலு மைந்தும்

நல்லன வாய்தல் வைத்துக்
காச்செய்த காயந் தன்னுள்

நித்தலும் ஐவர் வந்து
கோச்செய்து குமைக்க வாற்றேன்

கோவல்வீ ரட்ட னீரே.
4.69.6

675 படைகள்போல் வினைகள் வந்து

பற்றியென் பக்கல் நின்றும்
விடகிலா வாத லாலே

விகிர்தனை விரும்பி யேத்தும்
இடையிலேன் என்செய் கேன்நான்

இரப்பவர் தங்கட் கென்றுங்
கொடையிலேன் கொள்வ தேநான்

கோவல்வீ ரட்ட னீரே.
4.69.7

676 பிச்சிலேன் பிறவி தன்னைப்

பேதையேன் பிணக்க மென்னுந்
துச்சுளே அழுந்தி வீழ்ந்து

துயரமே இடும்பை தன்னுள்
அச்சனாய் ஆதி மூர்த்திக்

கன்பனாய் வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வ தென்னே

கோவல்வீ ரட்ட னீரே.
4.69.8

677 நிணத்திடை யாக்கை பேணி

நியமஞ்செய் திருக்க மாட்டேன்
மணத்திடை ஆட்டம் பேசி

மக்களே சுற்ற மென்னுங்
கணத்திடை ஆட்டப் பட்டுக்

காதலால் உன்னைப் பேணுங்
குணத்திடை வாழ மாட்டேன்

கோவல்வீ ரட்ட னீரே.
4.69.9

678 விரிகடல் இலங்கைக் கோனை

வியன்கயி லாயத் தின்கீழ்
இருபது தோளும் பத்துச்

சிரங்களும் நெறிய வூன்றிப்
பரவிய பாடல் கேட்டுப்

படைகொடுத் தருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த

கோவல்வீ ரட்ட னாரே.
4.69.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசநாதர், தேவியார் - சிவாநந்தவல்லி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.70 திருநனிபள்ளி - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

679 முற்றுணை யாயி னானை

மூவர்க்கு முதல்வன் றன்னைச்
சொற்றுணை ஆயி னானைச்

சோதியை ஆத ரித்து
உற்றுணர்ந் துருகி யூறி

உள்கசி வுடைய வர்க்கு
நற்றுணை யாவர் போலும்

நனிபள்ளி அடிக ளாரே.
4.70.1

680 புலர்ந்தகால் பூவும் நீருங்

கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயின் நூலால்

வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை அரைய னாக்கிச்

சீர்மைகள் அருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த

நனிபள்ளி அடிக ளாரே.
4.70.2

681 எண்பதும் பத்தும் ஆறு

மென்னுளே இருந்து மன்னிக்
கண்பழக் கொன்று மின்றிக்

கலக்கநான் அலக்க ழிந்தேன்
செண்பகந் திகழும் புன்னை

செழுந்திரட் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த

நனிபள்ளி அடிக ளாரே.
4.70.3

682 பண்ணினார் பாட லாகிப்

பழத்தினில் இரத மாகிக்
கண்ணினார் பார்வை யாகிக்

கருத்தொடு கற்ப மாகி
எண்ணினார் எண்ண மாகி

ஏழுல கனைத்து மாகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார்

நனிபள்ளி அடிக ளாரே.
4.70.4

683 துஞ்சிருள் காலை மாலை

தொடர்ச்சியை மறந் திராதே
அஞ்செழுத் தோதின் நாளும்

அரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பால்சோ றாக்கி

வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார்

நனிபள்ளி அடிக ளாரே.
4.70.5

684 செம்மலர்க் கமலத் தோனுந்

திருமுடி காண மாட்டான்
அம்மலர்ப் பாதங் காண்பான்

ஆழியான் அகழ்ந்துங் காணான்
நின்மலன் என்றங் கேத்தும்

நினைப்பினை அருளி நாளும்
நம்மலம் அறுப்பர் போலும்

நனிபள்ளி அடிக ளாரே.
4.70.6

685 அரவத்தால் வரையைச் சுற்றி

அமரரோ டசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும்

ஆலநஞ் சமுதா வுண்டார்
விரவித்தம் அடிய ராகி

வீடிலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ வொட்டார்

நனிபள்ளி அடிக ளாரே.
4.70.7

686 மண்ணுளே திரியும் போது

வருவன பலவுங் குற்றம்
புண்ணுளே புரைபு ரையன்

புழுப்பொதி பொள்ள லாக்கை
----- ----- ----- -----
இப்பதிகத்தில் 8-ம் செய்யுளின்
பின்னிரண்டடிகளும் 9-ம்செய்யுளும்
மறைந்து போயின.
4.70.8-9

687 பத்துமோர் இரட்டி தோளான்

பாரித்து மலையெ டுக்கப்
பத்துமோர் இரட்டி தோள்கள்

படருடம் படர வூன்றிப்
பத்துவாய் கீதம் பாடப்

பரிந்தவற் கருள்கொ டுத்தார்
பத்தர்தாம் பரவி யேத்தும்

நனிபள்ளிப் பரம னாரே.
4.70.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நற்றுணையப்பர், தேவியார் - பர்வதராசபுத்திரி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.71 திருநாகைக்காரோணம் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

688 மனைவிதாய் தந்தை மக்கள்

மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி

வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை

மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகில்

உய்யலாம் நெஞ்சி னீரே.
4.71..1

689 வையனை வைய முண்ட

மாலங்கந் தோண்மேற் கொண்ட
செய்யனைச் செய்ய போதிற்

திசைமுகன் சிரமொன் றேந்துங்
கையனைக் கடல்சூழ் நாகைக்

காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே

அம்மநாம் உய்ந்த வாறே.
4.71..2

690 நிருத்தனை நிமலன் றன்னை

நீணிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேத வித்தை

விளைபொருள் மூல மான
கருத்தனைக் கடல்சூழ் நாகைக்

காரோணங் கோயில் கொண்ட
ஒருத்தனை உணர்த லால்நாம்

உய்ந்தவா நெஞ்சி னீரே.
4.71.3

691 மண்டனை இரந்து கொண்ட

மாயனோ டசுரர் வானோர்
தெண்டிரை கடைய வந்த

தீவிடந் தன்னை யுண்ட
கண்டனைக் கடல்சூழ் நாகைக்

காரோணங் கோயில் கொண்ட
அண்டனை நினைந்த நெஞ்சே

அம்மநாம் உய்ந்த வாறே.
4.71.4

692 நிறைபுனல் அணிந்த சென்னி

நீணிலா அரவஞ் சூடி
மறையொலி பாடி யாடல்

மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக்

காரோணங் கோயில் கொண்ட
இறைவனை நாளு மேத்த

இடும்பைபோய் இன்ப மாமே.
4.71.5

693 வெம்பனைக் கருங்கை யானை

வெருவவன் றுரிவை போர்த்த
கம்பனைக் காலற் காய்ந்த

காலனை ஞால மேத்தும்
உம்பனை உம்பர் கோனை

நாகைக்கா ரோண மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே

திண்ணம்நாம் உய்ந்த வாறே.
4.71.6

694 வெங்கடுங் கானத் தேழை

தன்னொடும் வேட னாய்ச்சென்
றங்கமர் மலைந்து பார்த்தற்

கடுசரம் அருளி னானை
மங்கைமார் ஆட லோவா

மன்னுகா ரோணத் தானைக்
கங்குலும் பகலுங் காணப்

பெற்றுநாங் களித்த வாறே.
4.71.7

695 தெற்றினர் புரங்கள் மூன்றுந்

தீயினில் விழவோ ரம்பால்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர்

சிந்தையுட் சேர்வி லாதார்
கற்றவர் பயிலும் நாகைக்

காரோணங் கருதி யேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப்

பிறந்தவர் பிறந்தி லாரே.
4.71.8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
4.71.9

696 கருமலி கடல்சூழ் நாகைக்

காரோணர் கமல பாதத்
தொருவிரல் நுதிக்கு நில்லா

தொண்டிறல் அரக்க னுக்கான்
இருதிற மங்கை மாரோ

டெம்பிரான் செம்பொ னாகந்
திருவடி தரித்து நிற்கத்

திண்ணம்நாம் உய்ந்த வாறே.
4.71.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்,
தேவியார் - நீலாயதாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.72 திருவின்னம்பர் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

697 விண்ணவர் மகுட கோடி

மிடைந்தசே வடியர் போலும்
பெண்ணொரு பாகர் போலும்

பேடலி யாணர் போலும்
வண்ணமால் அயனுங் காணா

மால்வரை எரியர் போலும்
எண்ணுரு வநேகர் போலும்

இன்னம்பர் ஈச னாரே.
4.72.1

698 பன்னிய மறையர் போலும்

பாம்பரை யுடையர் போலுந்
துன்னிய சடையர் போலுந்

தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும்

மாதிடம் மகிழ்வர் போலும்
என்னையும் உடையர் போலும்

இன்னம்பர் ஈச னாரே.
4.72.2

699 மறியொரு கையர் போலும்

மாதுமை யுடையர் போலும்
பறிதலைப் பிறவி நீக்கிப்

பணிகொள வல்லர் போலுஞ்
செறிவுடை அங்க மாலை

சேர்திரு வுருவர் போலும்
எறிபுனற் சடையர் போலும்

இன்னம்பர் ஈச னாரே.
4.72.3

700விடமலி கண்டர் போலும்

வேள்வியை அழிப்பர் போலுங்
கடவுநல் விடையர் போலுங்

காலனைக் காய்வர் போலும்
படமலி அரவர் போலும்

பாய்புலித் தோலர் போலும்
இடர்களைந் தருள்வர் போலும்

இன்னம்பர் ஈச னாரே.
4.72.4

701அளிமலர்க் கொன்றை துன்றும்

அவிர்சடை யுடையர் போலுங்
களிமயிற் சாய லோடுங்

காமனை விழிப்பர் போலும்
வெளிவளர் உருவர் போலும்

வெண்பொடி யணிவர் போலும்
எளியவர் அடியர்க் கென்றும்

இன்னம்பர் ஈச னாரே.
4.72.5

702கணையமர் சிலையர் போலுங்

கரியுரி உடையர் போலுந்
துணையமர் பெண்ணர் போலுந்

தூமணிக் குன்றர் போலும்
அணையுடை அடியர் கூடி

அன்பொடு மலர்கள் தூவும்
இணையடி உடையர் போலும்

இன்னம்பர் ஈச னாரே.
4.72.6

703பொருப்பமர் புயத்தர் போலும்

புனலணி சடையர் போலும்
மருப்பிள வாமை தாங்கு

மார்பில்வெண் ணூலர் போலும்
உருத்திர மூர்த்தி போலும்

உணர்விலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும்

இன்னம்பர் ஈச னாரே.
4.72.7

704காடிடம் உடையர் போலுங்

கடிகுரல் விளியர் போலும்
வேடுரு வுடையர் போலும்

வெண்மதிக் கொழுந்தர் போலுங்
கோடலர் வன்னி தும்பை

கொக்கிற கலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும்

இன்னம்பர் ஈச னாரே.
4.72.8

705காறிடு விடத்தை யுண்ட

கண்டரெண் டோ ளர் போலும்
நீறுடை யுருவர் போலும்

நினைப்பினை அரியர் போலும்
பாறுடைத் தலைகை ஏந்திப்

பலிதிரிந் துண்பர் போலும்
ஏறுடைக் கொடியர் போலும்

இன்னம்பர் ஈச னாரே.
4.72.9

706ஆர்த்தெழு மிலங்கைக் கோனை

அருவரை அடர்ப்பர் போலும்
பார்த்தனோ டமர் பொருது

படைகொடுத் தருள்வர் போலுந்
தீர்த்தமாங் கங்கை தன்னைத்

திருச்சடை வைப்பர் போலும்
ஏத்தஏ ழுலகும் வைத்தார்

இன்னம்பர் ஈச னாரே.
4.72.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்,
தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.73 திருச்சேறை - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

707 பெருந்திரு இமவான் பெற்ற

பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் தவங்கள் செய்ய

மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன்பால்

அங்கொரு பாக மாகத்
திருந்திட வைத்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.
4.73.1

708ஓர்த்துள வாறு நோக்கி

உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய்யென் றெண்ணி

மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப்
பேர்த்தெனை ஆளாக் கொண்டு

பிறவிவான் பிணிக ளெல்லாந்
தீர்த்தருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.
4.73.2

709ஒன்றிய தவத்து மன்னி

உடையனாய் உலப்பில் காலம்
நின்றுதங் கழல்க ளேத்தும்

நீள்சிலை விசய னுக்கு
வென்றிகொள் வேட னாகி

விரும்பிவெங் கான கத்துச்
சென்றருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.
4.73.3

710அஞ்சையும் அடக்கி ஆற்ற

லுடையனாய் அநேக காலம்
வஞ்சமில் தவத்துள் நின்று

மன்னிய பகீர தற்கு
வெஞ்சின முகங்க ளாகி

விசையொடு பாயுங் கங்கைச்
செஞ்சடை யேற்றார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.
4.73.4

711நிறைந்தமா மணலைக் கூப்பி

நேசமோ டாவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு

கறுத்ததன் தாதை தாளை
எறிந்தமா ணிக்கப் போதே

எழில்கொள்சண் டீசன் என்னச்
சிறந்தபே றளித்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.
4.73.5

712விரித்தபல் கதிர்கொள் சூலம்

வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல காலப்

பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு

ஒண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.
4.73.6

713சுற்றுமுன் இமையோர் நின்று

தொழுதுதூ மலர்கள் தூவி
மற்றெமை உயக்கொள் என்ன
மன்னுவான் புரங்கள் மூன்றும்
உற்றொரு நொடியின் முன்னம்

ஒள்ளழல் வாயின் வீழச்
செற்றருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.
4.73.7

714முந்தியிவ் வுலக மெல்லாம்

படைத்தவன் மாலி னோடும்
எந்தனி நாத னேயென்

றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை

அடிமுடி யறியா வண்ணஞ்
செந்தழ லானார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.
4.73.8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
4.73.9

715ஒருவரும் நிக ரிலாத

ஒண்டிறல் அரக்கன் ஓடிப்
பெருவரை யெடுத்த திண்டோ ள்

பிறங்கிய முடிகள் இற்று
மருவியெம் பெருமா னென்ன

மலரடி மெள்ள வாங்கித்
திருவருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.
4.73.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சென்னெறியப்பர், தேவியார் - ஞானவல்லியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.74 நெஞ்சம்ஈசனைநினைந்த - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

716 முத்தினை மணியைப் பொன்னை

முழுமுதற் பவள மேய்க்குங்
கொத்தினை வயிர மாலைக்

கொழுந்தினை அமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக்

கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்சம்

அழகிதா நினைந்த வாறே.
4.74.1

717முன்பனை யுலகுக் கெல்லாம்

மூர்த்தியை முனிக ளேத்தும்
இன்பனை இலங்கு சோதி

இறைவனை அரிவை யஞ்ச
வன்பனைத் தடக்கை வேள்விக்

களிற்றினை யுரித்த எங்கள்
அன்பனை நினைந்த நெஞ்சம்

அழகிதா நினைந்த வாறே.
4.74.2

718கரும்பினு மினியான் றன்னைக்

காய்கதிர்ச் சோதி யானை
இருங்கட லமுதந் தன்னை

இறப்பொடு பிறப் பிலானைப்
பெரும்பொருட் கிளவி யானைப்

பெருந்தவ முனிவ ரேத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்

அழகிதா நினைந்த வாறே.
4.74.3

719செருத்தனை யருத்தி செய்து

செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்
கருத்தனைக் கனக மேனிக்

கடவுளைக் கருதும் வானோர்க்
கொருத்தனை யொருத்தி பாகம்

பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்சம்

நேர்பட நினைந்த வாறே.
4.74.4

720கூற்றினை யுதைத்த பாதக்

குழகனை மழலை வெள்ளே
றேற்றனை இமையோ ரேத்த

இருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை அடிய ரேத்தும்

அமுதனை அமுத யோக
நீற்றனை நினைந்த நெஞ்சம்

நேர்பட நினைந்த வாறே.
4.74.5

721கருப்பனைத் தடக்கை வேழக்

களிற்றினை யுரித்த கண்டன்
விருப்பனை விளங்கு சோதி

வியன்கயி லாய மென்னும்
பொருப்பனைப் பொருப்பன் மங்கை

பங்கனை அங்கை யேற்ற
நெருப்பனை நினைந்த நெஞ்சம்

நேர்பட நினைந்த வாறே.
4.74.6

722நீதியால் நினைப்பு ளானை

நினைப்பவர் மனத்து ளானைச்
சாதியைச் சங்க வெண்ணீற்

றண்ணலை விண்ணில் வானோர்
சோதியைத் துளக்க மில்லா

விளக்கினை அளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்சம்

அழகிதா நினைந்த வாறே.
4.74.7

723பழகனை யுலகுக் கெல்லாம்

பருப்பனைப் பொருப்போ டொக்கும்
மழகளி யானை யின்றோல்

மலைமகள் நடுங்கப் போர்த்த
குழகனைக் குழவித் திங்கள்

குளிர்சடை மருவ வைத்த
அழகனை நினைந்த நெஞ்சம்

அழகிதா நினைந்த வாறே.
4.74.8

724விண்ணிடை மின்னொப் பானை

மெய்ப்பெரும் பொருளொப் பானைக்
கண்ணிடை மணியொப் பானைக்

கடுவிருட் சுடரொப் பானை
எண்ணிடை யெண்ண லாகா

இருவரை வெருவ நீண்ட
அண்ணலை நினைந்த நெஞ்சம்

அழகிதா நினைந்த வாறே.
4.74.9

725உரவனைத் திரண்ட திண்டோ ள்

அரக்கனை யூன்றி மூன்றூர்
நிரவனை நிமிர்ந்த சோதி

நீண்முடி யமரர் தங்கள்
குரவனைக் குளிர்வெண் டிங்கள்

சடையிடைப் பொதியும் ஐவாய்
அரவனை நினைந்த நெஞ்சம்

அழகிதா நினைந்த வாறே.
4.74.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.75 தனித் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

726 தொண்டனேன் பட்ட தென்னே

தூயகா விரியின் நன்னீர்
கொண்டிருக் கோதி யாட்டிக்

குங்குமக் குழம்பு சாத்தி
இண்டைகொண் டேற நோக்கி

ஈசனை எம்பி ரானைக்
கண்டனைக் கண்டி ராதே

காலத்தைக் கழித்த வாறே.
4.75.1

727பின்னிலேன் முன்னி லேன்நான்

பிறப்பறுத் தருள்செய் வானே
என்னிலேன் நாயி னேன்நான்

இளங்கதிர்ப் பயலைத் திங்கட்
சின்னிலா எறிக்குஞ் சென்னிச்

சிவபுரத் தமர ரேறே
நின்னலால் களைகண் ஆரே

நீறுசே ரகலத் தானே.
4.75.2

728கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க்

காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று

தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற் றெல்லாம்

உடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும்

விலாவிறச் சிரித்திட் டேனே.
4.75.3

729உடம்பெனு மனைய கத்துள்

உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி

உயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயால்

எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை

கழலடி காண லாமே.
4.75.4

730வஞ்சப்பெண் ணரங்கு கோயில்

வாளெயிற் றரவந் துஞ்சா
வஞ்சப்பெண் இருந்த சூழல்

வான்றவழ் மதியந் தோயும்
வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன்

வாழ்வினை வாழ லுற்று
வஞ்சப்பெண் ணுறக்க மானேன்

வஞ்சனேன் என்செய் கேனே.
4.75.5

731உள்குவார் உள்ளத் தானை

உணர்வெனும் பெருமை யானை
உள்கினேன் நானுங் காண்பான்

உருகினேன் ஊறி யூறி
எள்கினேன் எந்தை பெம்மான்

இருதலை மின்னு கின்ற
கொள்ளிமேல் எறும்பென் னுள்ளம்

எங்ஙனங் கூடு மாறே.
4.75.6

732மோத்தையைக் கண்ட காக்கை

போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா

மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச்

செடிகொள்நோய் வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ணம்

உணர்வுதா உலக மூர்த்தீ.
4.75.7

733அங்கத்தை மண்ணுக் காக்கி

ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப்

பாவித்தேன் பரமா நின்னைs
சங்கொத்த மேனிச் செல்வா

சாதல்நாள் நாயேன் உன்னை
எங்குற்றாய் என்ற போதா

இங்குற்றேன் என்கண் டாயே.
4.75.8

734வெள்ளநீர்ச் சடைய னார்தாம்

வினவுவார் போல வந்தென்
உள்ளமே புகுந்து நின்றார்க்

குறங்குநான் புடைகள் போந்து
கள்ளரோ புகுந்தீ ரென்னக்

கலந்துதான் நோக்கி நக்கு
வெள்ளரோ மென்று நின்றார்

விளங்கிளம் பிறைய னாரே.
4.75.9

735பெருவிரல் இறைதா னூன்ற

பிறையெயி றிலங்க அங்காந்
தருவரை அனைய தோளான்

அரக்கனன் றலறி வீழ்ந்தான்
இருவரும் ஒருவ னாய

உருவமங் குடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு

காண்கநான் திரியு மாறே.
4.75.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.76 தனித் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

736 மருளவா மனத்த னாகி

மயங்கினேன் மதியி லாதேன்
இருளவா அறுக்கும் எந்தை

இணையடி நீழ லென்னும்
அருளவாப் பெறுத லின்றி

அஞ்சிநான் அலமந் தேற்குப்
பொருளவாத் தந்த வாறே

போதுபோய்ப் புலர்ந்த தன்றே.
4.76.1

737மெய்ம்மையாம் உழவைச் செய்து

விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப்

பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு

தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்ப ராகிற்

சிவகதி விளையு மன்றே.
4.76.2

738எம்பிரான் என்ற தேகொண்

டென்னுளே புகுந்து நின்றிங்
கெம்பிரான் ஆட்ட ஆடி

என்னுளே உழிதர் வேனை
எம்பிரான் என்னைப் பின்னைத்

தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரான் என்னி னல்லால்

என்செய்கேன் ஏழை யேனே.
4.76.3

739காயமே கோயி லாகக்

கடிமனம் அடிமை யாக
வாய்மையே தூய்மை யாக

மனமணி இலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா

நிறையநீர் அமைய வாட்டிப்
பூசனை ஈச னார்க்குப்

போற்றவிக் காட்டி னோமே.
4.76.4

740வஞ்சகப் புலைய னேனை

வழியறத் தொண்டிற் பூட்டி
அஞ்சலென் றாண்டு கொண்டாய்

அதுவுநின் பெருமை யன்றே
நெஞ்சகங் கனிய மாட்டேன்

நின்னையுள் வைக்க மாட்டேன்
நஞ்சிடங் கொண்ட கண்டா

என்னென நன்மை தானே.
4.76.5

741நாயினுங் கடைப்பட் டேனை

நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவ மார்த்த

அமுதனே அமுத மொத்து
நீயுமென் னெஞ்சி னுள்ளே

நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகில்

நோக்கிநீ அருள்செய் வாயே.
4.76.6

742விள்ளத்தா னொன்று மாட்டேன்

விருப்பெனும் வேட்கை யாலே
வள்ளத்தேன் போல நுன்னை

வாய்மடுத் துண்டி டாமே
உள்ளத்தே நிற்றி யேனும்

உயிர்ப்புளே வருதி யேனுங்
கள்ளத்தே நிற்றி அம்மா

எங்ஙனங் காணு மாறே.
4.76.7

743ஆசைவன் பாச மெய்தி

அங்குற்றே னிங்குற் றேனாய்
ஊசலாட் டுண்டு வாளா

உழந்துநான் உழித ராமே
தேசனே தேச மூர்த்தி

திருமறைக் காடு மேய
ஈசனே உன்றன் பாதம்

ஏத்துமா றருளெம் மானே.
4.76.8

744நிறைவிலேன் நேச மில்லேன்

நினைவிலேன் வினையின் பாச
மறைவிலே புறப்பட் டேறும்

வகையெனக் கருளெ னெம்மான்
சிறையிலேன் செய்வ தென்னே

திருவடி பரவி யேத்தக்
குறைவிலேன் குற்றந் தீராய்

கொன்றைசேர் சடையி னானே.
4.76.9

745நடுவிலாக் காலன் வந்து

நணுகும்போ தறிய வொண்ணா
அடுவன அஞ்சு பூதம்

அவைதமக் காற்ற லாகேன்
படுவன பலவுங் குற்றம்

பாங்கிலா மனிதர் வாழ்க்கை
கெடுவதிப் பிறவி சீசீ

கிளரொளிச் சடையி னீரே.
4.76.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.77 தனித் - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

746 கடும்பகல் நட்ட மாடிக்

கையிலோர் கபால மேந்தி
இடும்பலிக் கில்லந் தோறு

முழிதரும் இறைவ னீரே
நெடும்பொறை மலையர் பாவை

நேரிழை நெறிமென் கூந்தற்
கொடுங்குழை புகுந்த வன்றுங்

கோவண மரைய தேயோ.
4.77.1

747கோவண முடுத்த வாறுங்

கோளர வசைத்த வாறுந்
தீவணச் சாம்பர் பூசித்

திருவுரு இருந்த வாறும்
பூவணக் கிழவ னாரைப்

புலியுரி அரைய னாரை
ஏவணச் சிலையி னாரை

யாவரே எழுது வாரே.
4.77.2

748விளக்கினாற் பெற்ற இன்பம்

மெழுக்கினாற் பதிற்றி யாகுந்
துளக்கில்நன் மலர்தொ டுத்தால்

தூயவிண் ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின்

மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில கீதஞ் சொன்னார்க்

கடிகள்தாம் அருளு மாறே.
4.77.3

749சந்திரற் சடையில் வைத்த

சங்கரன் சாம வேதி
அந்தரத் தமரர் பெம்மான்

ஆன்நல்வெள் ளூர்தி யான்றன்
மந்திரம் நமச்சி வாய

ஆகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும்

வெவ்வழல் விறகிட் டன்றே.
4.77.4

750புள்ளுவர் ஐவர் கள்வர்

புனத்திடைப் புகுந்து நின்று
துள்ளுவர் சூறை கொள்வர்

தூநெறி விளைய வொட்டார்
முள்ளுடை யவர்கள் தம்மை

முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்து நின்றங்

குணர்வினா லெய்ய லாமே.
4.77.5

751தொண்டனேன் பிறந்து வாளா

தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நாளும்

பெரியதோர் அவாவிற் பட்டேன்
அண்டனே அமரர் கோவே

அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரைக் கங்கை சூடுந்

திகழ்தரு சடையி னானே.
4.77.6

752பாறினாய் பாவி நெஞ்சே

பன்றிபோல் அளற்றிற் பட்டுத்
தேறிநீ நினைதி யாயின்

சிவகதி திண்ண மாகும்
ஊறலே உவர்ப்பு நாறி

உதிரமே யொழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு

கோலமாக் கருதி னாயே.
4.77.7

இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின.
4.77.8-9

753உய்த்தகால் உதயத் தும்பர்

உமையவள் நடுக்கந் தீர
வைத்தகா லரக்க னோதன்

வான்முடி தனக்கு நேர்ந்தான்
மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கள்

மூர்த்தியெ னுச்சி தன்மேல்
வைத்தகால் வருந்து மென்று

வாடிநான் ஒடுங்கி னேனே.
4.77.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.78 குறைந்த - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

754 வென்றிலேன் புலன்க ளைந்தும்

வென்றவர் வளாகந் தன்னுள்
சென்றிலே னாத லாலே

செந்நெறி யதற்குஞ் சேயேன்
நின்றுளே துளும்பு கின்றேன்

நீசனேன் ஈச னேயோ
இன்றுளேன் நாளை யில்லேன்

என்செய்வான் தோன்றி னேனே.
4.78.1

755கற்றிலேன் கலைகள் ஞானங்

கற்றவர் தங்க ளோடும்
உற்றிலே னாத லாலே

உணர்வுக்குஞ் சேய னானேன்
பெற்றிலேன் பெருந்த டங்கண்

பேதைமார் தமக்கும் பொல்லேன்
எற்றுளேன் இறைவ னேநான்

என்செய்வான் தோன்றி னேனே.
4.78.2

756மாட்டினேன் மனத்தை முன்னே

மறுமையை உணர மாட்டேன்
மூட்டிநான் முன்னை நாளே

முதல்வனை வணங்க மாட்டேன்
பாட்டினாய் போல நின்று

பற்றதாம் பாவந் தன்னை
ஈட்டினேன் களைய மாட்டேன்

என்செய்வான் தோன்றி னேனே.
4.78.3

757கரைக்கடந் தோத மேறுங்

கடல்விட முண்ட கண்டன்
உரைக்கடந் தோது நீர்மை

யுணர்ந்திலே னாத லாலே
அரைக்கிடந் தசையு நாகம்

அசைப்பனே இன்ப வாழ்க்கைக்
கிரைக்கிடைந் துருகு கின்றேன்

என்செய்வான் தோன்றி னேனே.
4.78.4

758செம்மைவெண் ணீறு பூசுஞ்
ச்஢வனவன் தேவ தேவன்
வெம்மைநோய் வினைகள் தீர்க்கும்

விகிர்தனுக் கார்வ மெய்தி
அம்மைநின் றடிமை செய்யா

வடிவிலா முடிவில் வாழ்க்கைக்
கிம்மைநின் றுருகு கின்றேன்

என்செய்வான் தோன்றி னேனே.
4.78.5

759பேச்சொடு பேச்சுக் கெல்லாம்

பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலே னாத லாலே

கொடுமையை விடுமா றோரேன்
நாச்சொலி நாளும் மூர்த்தி

நன்மையை யுணர மாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே

என்செய்வான் தோன்றி னேனே.
4.78.6

760தேசனைத் தேச மாகுந்

திருமாலோர் பங்கன் றன்னைப்
பூசனைப் புனிதன் றன்னைப்

புணரும்புண் டரிகத் தானை
நேசனை நெருப்பன் றன்னை

நிவஞ்சகத் தகன்ற செம்மை
ஈசனை அறிய மாட்டேன்

என்செய்வான் தோன்றி னேனே.
4.78.7

761விளைக்கின்ற வினையை நோக்கி

வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையைப் போக

முயல்கிலேன் இயல வெள்ளந்
திளைக்கின்ற முடியி னான்றன்

திருவடி பரவ மாட்டா
திளைக்கின்றே னிருமி யூன்றி

என்செய்வான் தோன்றி னேனே.
4.78.8

762விளைவறி விலாமை யாலே

வேதனைக் குழியி லாழ்ந்து
களைகணு மில்லேன் எந்தாய்

காமரங் கற்று மில்லேன்
தளையவிழ் கோதை நல்லார்

தங்களோ டின்ப மெய்த
இளையனு மல்லேன் எந்தாய்

என்செய்வான் தோன்றி னேனே.
4.78.9

763வெட்டன வுடைய னாகி

வீரத்தால் மலை யெடுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச்

சுவைப்படக் கீதங் கேட்ட
அட்டமா மூர்த்தி யாய

ஆதியை ஓதி நாளும்
எட்டனை எட்ட மாட்டேன்

என்செய்வான் தோன்றி னேனே.
4.78.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.79 குறைந்த - திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

764 தம்மானங் காப்ப தாகித்

தையலார் வலையு ளாழ்ந்து
அம்மானை அமுதன் றன்னை

ஆதியை அந்த மாய
செம்மான ஒளிகொள் மேனிச்

சிந்தையு ளொன்றி நின்ற
எம்மானை நினைய மாட்டேன்

என்செய்வான் தோன்றி னேனே.
4.79.1

765மக்களே மணந்த தார

மவ்வயிற் றவரை யோம்புஞ்
சிக்குளே யழுந்தி ஈசன்

திறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி

யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப

என்செய்வான் தோன்றி னேனே.
4.79.2

766கூழையே னாக மாட்டேன்

கொடுவினைக் குழியில் வீழ்ந்து
ஏழினின் னிசையி னாலும்

இறைவனை யேத்த மாட்டேன்
மாழையொண் கண்ணின் நல்ல

மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
ஏழையே னாகி நாளு

மென்செய்வான் தோன்றி னேனே.
4.79.3

767முன்னையென் வினையி னாலே

மூர்த்தியை நினைய மாட்டேன்
பின்னைநான் பித்த னாகிப்

பிதற்றுவன் பேதை யேன்நான்
என்னுளே மன்னி நின்ற

சீர்மைய தாயி னானை
என்னுளே நினைய மாட்டேன்

என்செய்வான் தோன்றி னேனே.
4.79.4

768கறையணி கண்டன் றன்னைக்

காமரங் கற்று மில்லேன்
பிறைநுதற் பேதை மாதர்

பெய்வளை யார்க்கு மல்லேன்
மறைநவில் நாவி னானை

மன்னிநின் றிறைஞ்சி நாளும்
இறையேயு மேத்த மாட்டேன்

என்செய்வான் தோன்றி னேனே.
4.79.5

இப்பதிகத்தில் 6,7,8,9-ம்செய்யுட்கள்
மறைந்து போயின.
4.79.6-91

769வளைத்துநின் றைவர் கள்வர்

வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித்

தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற

ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றேன்

என்செய்வான் தோன்றி னேனே.
4.79.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.80 கோயில் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

770 பாளையு டைக்கமு கோங்கிப்பன்

மாடம்நெ ருங்கியெங்கும்
வாளையு டைப்புனல் வந்தெறி

வாழ்வயல் தில்லைதன்னுள்
ஆளவு டைக்கழற் சிற்றம்ப

லத்தரன் ஆடல்கண்டாற்
பீளையு டைக்கண்க ளாற்பின்னைப்

பேய்த்தொண்டர் காண்பதென்னே.
4.80.1

771பொருவிடை யொன்றுடைப் புண்ணிய

மூர்த்தி புலியதளன்
உருவுடை யம்மலை மங்கைம

ணாளன் உலகுக்கெல்லாந்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற

தில்லைச்சிற் றம்பலவன்
திருவடி யைக்கண்ட கண்கொண்டு

மற்றினிக் காண்பதென்னே.
4.80.2

772தொடுத்த மலரொடு தூபமுஞ்

சாந்துங்கொண் டெப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு

மாலுக்குங் காண்பரியான்
பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய

தில்லைச்சிற் றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு

மற்றினிக் காண்பதென்னே.
4.80.3

773வைச்ச பொருள்நமக் காகுமென்

றெண்ணி நமச்சிவாய
அச்ச மொழிந்தேன் அணிதில்லை

யம்பலத் தாடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி

உந்தியின் மேலசைத்த
கச்சின் அழகுகண் டாற்பின்னைக்

கண்கொண்டு காண்பதென்னே.
4.80.4

774செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற

தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள்

கண்டு மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த

நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக்

கண்கொண்டு காண்பதென்னே.
4.80.5

775ஊனத்தை நீக்கி உலகறிய

என்னை யாட்கொண்டவன்
தேனொத் தெனக்கினி யான்தில்லைச்

சிற்றம் பலவனெங்கோன்
வானத் தவருய்ய வன்னஞ்சை

யுண்டகண் டத்திலங்கும்
ஏனத் தெயிறு கண்டாற்பின்னைக்

கண்கொண்டு காண்பதென்னே.
4.80.6

776தெரித்த கணையாற் திரிபுர

மூன்றுஞ்செந் தீயின்மூழ்க
எரித்த இறைவன் இமையவர்

கோமான் இணையடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற

தில்லைச்சிற் றம்பலவன்
சிரித்த முகங்கண்ட கண்கொண்டு

மற்றினிக் காண்பதென்னே.
4.80.7

777சுற்று மமரர் சுரபதி

நின்திருப் பாதமல்லால்
பற்றொன் றிலோமென் றழைப்பப்

பரவையுள் நஞ்சையுண்டான்
செற்றங் கனங்கனைத் தீவிழித்

தான்றில்லை யம்பலவன்
நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு

மற்றினிக் காண்பதென்னே.
4.80.8

778சித்தத் தெழுந்த செழுங்கம

லத்தன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற

தில்லைச்சிற் றம்பலவன்
முத்தும் வயிரமும் மாணிக்கந்

தன்னுள் விளங்கியதூ
மத்த மலர்கண்ட கண்கொண்டு

மற்றினிக் காண்பதென்னே.
4.80.9

779தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி

யுன்னித் தடவரையை
வரைக்கை களாலெடுத் தார்ப்ப

மலைமகள் கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்தும்

அணிதில்லை யம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட

கண்கொண்டு காண்பதென்னே.
4.80.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர், சபாநாதர்,
தேவியார் - சிவகாமியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.81 கோயில் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

780 கருநட்ட கண்டனை அண்டத்

தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதி லெய்யவல்

லானைச்செந் தீமுழங்கத்
திருநட்ட மாடியைத் தில்லைக்

கிறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்ட மாடியை வானவர்

கோனென்று வாழ்த்துவனே.
4.81.1

781ஒன்றி யிருந்து நினைமின்கள்

உந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற்

கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட்

சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயெனும் எம்பெரு

மான்றன் திருக்குறிப்பே.
4.81.2

782கன்மன வீர்கழி யுங்கருத்

தேசொல்லிக் காண்பதென்னே
நன்மன வர்நவில் தில்லையுட்

சிற்றம் பலத்துநட்டம்
பொன்மலை யில்வெள்ளிக் குன்றது

போலப் பொலிந்திலங்கி
என்மன மேயொன்றிப் புக்கனன்

போந்த சுவடில்லையே.
4.81.3

783குனித்த புருவமுங் கொவ்வைச்செவ்

வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல்

மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற்

பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே

இந்த மாநிலத்தே.
4.81.4

784வாய்த்தது நந்தமக் கீதோர்

பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசு பதமருள்

செய்தவன் பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புரந் தீவளைத்

தான்றில்லை யம்பலத்துக்
கூத்தனுக் காட்பட் டிருப்பதன்

றோநந்தங் கூழைமையே.
4.81.5

785பூத்தன பொற்சடை பொன்போல்

மிளிரப் புரிகணங்கள்
ஆர்த்தன கொட்டி யரித்தன

பல்குறட் பூதகணந்
தேத்தென வென்றிசை வண்டுகள்

பாடுசிற் றம்பலத்துக்
கூத்தனிற் கூத்துவல் லாருள

ரோவென்றன் கோல்வளைக்கே.
4.81.6

786முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்

நோக்கும் முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்தவெண்

ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித்

தோலுமென் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பலக்

கூத்தன் குரைகழலே.
4.81.7

787படைக்கல மாகவுன் னாமத்

தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லேன் எழுபிறப்

பும்முனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது

வணங்கித்தூ நீறணிந்துன்
அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச்

சிற்றம் பலத்தரனே.
4.81.8

788பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ

றணிந்து புரிசடைகள்
மின்னொத் திலங்கப் பலிதேர்ந்

துழலும் விடங்கவேடச்
சின்னத்தி னான்மலி தில்லையுட்

சிற்றம் பலத்துநட்டம்
என்னத்தன் ஆடல்கண் டின்புற்ற

தாலிவ் விருநிலமே.
4.81.9

789சாட எடுத்தது தக்கன்றன்

வேள்வியிற் சந்திரனை
வீட எடுத்தது காலனை

நாரணன் நான்முகனுந்
தேட எடுத்தது தில்லையுட்

சிற்றம் பலத்துநட்டம்
ஆட எடுத்திட்ட பாதமன்

றோநம்மை யாட்கொண்டதே.
4.81.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.82 திருக்கழுமலம் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

790 பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட

ஞான்றுநின் பாதமெல்லாம்
நாலஞ்சு புள்ளினம் ஏந்தின

என்பர் நளிர்மதியங்
கால்கொண்ட வண்கைச் சடைவிரித்

தாடுங் கழுமலவர்க்
காளன்றி மற்றுமுண் டோ அந்த

ணாழி அகலிடமே.
4.82.1

791கடையார் கொடிநெடு மாடங்க

ளெங்குங் கலந்திலங்க
உடையா னுடைதலை மாலையுஞ்

சூடி உகந்தருளி
விடைதா னுடையவவ் வேதியன்

வாழுங் கழுமலத்துள்
அடைவார் வினைக ளவையெள்க

நாடொறும் ஆடுவரே.
4.82.2

792திரைவாய்ப் பெருங்கடல் முத்தங்

குவிப்ப முகந்துகொண்டு
நுரைவாய் நுளைச்சிய ரோடிக்

கழுமலத் துள்ளழுந்தும்
விரைவாய் நறுமலர் சூடிய

விண்ணவன் றன்னடிக்கே
வரையாப் பரிசிவை நாடொறும்

நந்தமை யாள்வனவே.
4.82.3

793விரிக்கும் அரும்பதம் வேதங்க

ளோதும் விழுமியநூல்
உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர்

கேட்கில் உலகமுற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள்

பாடக் கழுமலவன்
நிருத்தம் பழம்படி யாடுங்

கழல்நம்மை ஆள்வனவே.
4.82.4

794சிந்தித் தெழுமன மேநினை

யாமுன் கழுமலத்தைப்
பந்தித்த வல்வினை தீர்க்க

வல்லானைப் பசுபதியைச்
சந்தித்த கால மறுத்துமென்

றெண்ணி யிருந்தவர்க்கு
முந்தித் தொழுகழல் நாடொறும்

நந்தம்மை ஆள்வனவே.
4.82.5

795நிலையும் பெருமையும் நீதியுஞ்

சால அழகுடைத்தாய்
அலையும் பெருவெள்ளத் தன்று

மிதந்தவித் தோணிபுரஞ்
சிலையில் திரிபுரம் மூன்றெரித்

தார்தங் கழுமலவர்
அலருங் கழலடி நாடொறும்

நந்தமை ஆள்வனவே.
4.82.6

796முற்றிக் கிடந்துமுந் நீரின்

மிதந்துடன் மொய்த்தமரர்
சுற்றிக் கிடந்து தொழப்படு

கின்றது சூழரவந்
தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந்

துன்றிவெண் திங்கள்சூடுங்
கற்றைச் சடைமுடி யார்க்கிட

மாய கழுமலமே.
4.82.7

797உடலும் உயிரும் ஒருவழிச்

செல்லும் உலகத்துள்ளே
அடையும் உனைவந் தடைந்தார்

அமரர் அடியிணைக்கீழ்
நடையும் விழவொடு நாடொறும்

மல்கும் கழுமலத்துள்
விடையன் தனிப்பதம் நாடொறும்

நந்தமை ஆள்வனவே.
4.82.8

798பரவைக் கடல்நஞ்ச முண்டது

மில்லையிப் பார்முழுதும்
நிரவிக் கிடந்து தொழப்படு

கின்றது நீண்டிருவர்
சிரமப் படவந்து சார்ந்தார்

கழலடி காண்பதற்கே
அரவக் கழலடி நாடொறும்

நந்தமை ஆள்வனவே.
4.82.9

799கரையார் கடல்சூழ் இலங்கையர்

கோன்றன் முடிசிதறத்
தொலையா மலரடி ஊன்றலும்

உள்ளம் விதிர்விதிர்த்துத்
தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன்

கழுமலங் காண்பதற்கே
அலையாப் பரிசிவை நாடொறும்

நந்தமை ஆள்வனவே.
4.82.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர், தேவியார் - திருநிலைநாயகி.
திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.83 திருக்கழுமலம் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

800 படையார் மழுவொன்று பற்றிய

கையன் பதிவினவிற்
கடையார் கொடிநெடு மாடங்க

ளோங்குங் கழுமலமாம்
மடைவாய்க் குருகினம் பாளை

விரிதொறும் வண்டினங்கள்
பெடைவாய் மதுவுண்டு பேரா

திருக்கும் பெரும்பதியே.
4.83.1

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.84 ஆருயிர்த் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

801 எட்டாந் திசைக்கும் இருதிசைக்

கும்மிறை வாமுறையென்
றிட்டார் அமரர்வெம் பூசல்

எனக்கேட் டெரிவிழியா
ஒட்டாக் கயவர் திரிபுரம்

மூன்றையும் ஓரம்பினால்
அட்டான் அடிநிழற் கீழதன்

றோவென்றன் ஆருயிரே.
4.84.1

802பேழ்வாய் அரவின் அரைக்கமர்ந்

தேறிப் பிறங்கிலங்கு
தேய்வாய் இளம்பிறை செஞ்சடை

மேல்வைத்த தேவர்பிரான்
மூவான் இளகான் முழுவுல

கோடுமண் விண்ணுமற்றும்
ஆவான் அடிநிழற் கீழதன்

றோவென்றன் ஆருயிரே.
4.84.2

803தரியா வெகுளிய னாய்த்தக்கன்

வேள்வி தகர்த்துகந்த
எரியார் இலங்கிய சூலத்தி

னான்இமை யாதமுக்கட்
பெரியான் பெரியார் பிறப்பறுப்

பானென்றுந் தன்பிறப்பை
அரியான் அடிநிழற் கீழதன்

றோவென்றன் ஆருயிரே.
4.84.3

804வடிவுடை வாணெடுங் கண்ணுமை

யாளையோர் பால்மகிழ்ந்து
வெடிகொள் அரவொடு வேங்கை

அதள்கொண்டு மேல்மருவிப்
பொடிகொ ளகலத்துப் பொன்பிதிர்ந்

தன்னபைங் கொன்றையந்தார்
அடிகள் அடிநிழற் கீழதன்

றோவென்றன் ஆருயிரே.
4.84.4

805பொறுத்தான் அமரர்க் கமுதரு

ளிநஞ்ச முண்டுகண்டங்
கறுத்தான் கறுப்பழ காவுடை

யான்கங்கை செஞ்சடைமேற்
செறுத்தான் தனஞ்சயன் சேணா

ரகலங் கணையொன்றினால்
அறுத்தான் அடிநிழற் கீழதன்

றோவென்றன் ஆருயிரே.
4.84.5

806காய்ந்தான் செறற்கரி யானென்று

காலனைக் காலொன்றினாற்
பாய்ந்தான் பணைமதில் மூன்றுங்

கணையென்னும் ஒள்ளழலால்
மேய்ந்தான் வியனுல கேழும்

விளங்க விழுமியநூல்
ஆய்ந்தான் அடிநிழற் கீழதன்

றோவென்றன் ஆருயிரே.
4.84.6

807உளைந்தான் செறுத்தற் கரியான்

றலையை உகிரொன்றினாற்
களைந்தான் அதனை நிறைய

நெடுமால் கணார் குருதி
வளைந்தான் ஒருவிர லின்னொடு

வீழ்வித்துச் சாம்பர்வெண்ணீ
றளைந்தான் அடிநிழற் கீழதன்

றோவென்றன் ஆருயிரே.
4.84.7

808முந்திவட் டத்திடைப் பட்டதெல்

லாம்முடி வேந்தர்தங்கள்
பந்திவட் டத்திடைப் பட்டலைப்

புண்பதற் கஞ்சிக்கொல்லோ
நந்திவட் டந்நறு மாமலர்க்

கொன்றையு நக்கசென்னி
அந்திவட் டத்தொளி யானடிச்

சேர்ந்ததென் ஆருயிரே.
4.84.8

809மிகத்தான் பெரியதோர் வேங்கை

யதள்கொண்டு மெய்ம்மருவி
அகத்தான் வெருவநல் லாளை

நடுக்குறுப் பான்வரும்பொன்
முகத்தாற் குளிர்ந்திருந் துள்ளத்தி

னாலுகப் பானிசைந்த
அகத்தான் அடிநிழற் கீழதன்

றோவென்றன் ஆருயிரே.
4.84.9

810பைம்மா ணரவல்குற் பங்கயச்

சீறடி யாள்வெருவக்
கைம்மா வரிசிலைக் காமனை

யட்ட கடவுள்முக்கண்
எம்மான் இவனென் றிருவரு

மேத்த எரிநிமிர்ந்த
அம்மான் அடிநிழற் கீழதன்

றோவென்றன் ஆருயிரே.
4.84.10

811பழகவோ ரூர்தி யரன்பைங்கட்

பாரிடம் பாணிசெய்யக்
குழலும் முழவொடு மாநட

மாடி உயரிலங்கைக்
கிழவன் இருபது தோளும்

ஒருவிர லாலிறுத்த
அழகன் அடிநிழற் கீழதன்

றோவென்றன் ஆருயிரே.
4.84.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.85 திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

812 காலை யெழுந்து கடிமலர்

தூயன தாங்கொணர்ந்து
மேலை யமரர் விரும்பு

மிடம்விரை யான்மலிந்த
சோலை மணங்கமழ் சோற்றுத்

துறையுறை வார்சடைமேல்
மாலை மதியமன் றோவெம்

பிரானுக் கழகியதே.
4.85.1

813வண்டணை கொன்றையும் வன்னியும்

மத்தமும் வாளரவுங்
கொண்டணைந் தேறு முடியுடை

யான்குரை சேர்கழற்கே
தொண்டணைந் தாடிய சோற்றுத்

துறையுறை வார்சடைமேல்
வெண்டலை மாலையன் றோவெம்

பிரானுக் கழகியதே.
4.85.2

814அளக்கு நெறியினன் அன்பர்கள்

தம்மனத் தாய்ந்துகொள்வான்
விளக்கு மடியவர் மேல்வினை

தீர்த்திடும் விண்ணவர்கோன்
துளக்குங் குழையணி சோற்றுத்

துறையுறை வார்சடைமேற்
றிளைக்கும் மதியமன் றோவெம்

பிரானுக் கழகியதே.
4.85.3

815ஆய்ந்தகை வாளர வத்தொடு

மால்விடை யேறியெங்கும்
பேர்ந்தகை மானட மாடுவர்

பின்னு சடையிடையே
சேர்ந்தகைம் மாமலர் துன்னிய

சோற்றுத் துறையுறைவார்
ஏந்துகைச் சூல மழுவெம்

பிரானுக் கழகியதே.
4.85.4

816கூற்றைக் கடந்ததுங் கோளர

வார்த்ததுங் கோளுழுவை
நீற்றில் துதைந்து திரியும்

பரிசது நாமறியோம்
ஆற்றிற் கிடந்தங் கலைப்ப

அலைப்புண் டசைந்ததொக்குஞ்
சோற்றுத் துறையுறை வார்சடை

மேலதோர் தூமதியே.
4.85.5

817வல்லாடி நின்று வலிபேசு

வார்கோளர் வல்லசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும்

வானவர் வந்திறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற

சோற்றுத் துறையுறைவார்
வில்லாடி நின்ற நிலையெம்

பிரானுக் கழகியதே.
4.85.6

818ஆய முடையது நாமறி

யோம்அர ணத்தவரைக்
காயக் கணைசிலை வாங்கியு

மெய்துந் துயக்கறுத்தான்
தூயவெண் ணீற்றினன் சோற்றுத்

துறையுறை வார்சடைமேற்
பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கையெம்

மானுக் கழகியதே.
4.85.7

819அண்டர் அமரர் கடைந்

தெழுந் தோடிய நஞ்சதனை
உண்டும் அதனை ஒடுக்க

வல்லான் மிக்க உம்பர்கள்கோன்
தொண்டு பயில்கின்ற சோற்றுத்

துறையுறை வார்சடைமேல்
இண்டை மதியமன் றோவெம்

பிரானுக் கழகியதே.
4.85.8

820கடல்மணி வண்ணன் கருதிய

நான்முகன் றானறியான்
விடமணி கண்ட முடையவன்

றானெனை ஆளுடையான்
சுடரணிந் தாடிய சோற்றுத்

துறையுறை வார்சடைமேற்
படமணி நாகமன் றோவெம்

பிரானுக் கழகியதே.
4.85.9

821இலங்கைக் கிறைவன் இருபது

தோளு முடிநெரியக்
கலங்க விரலினா லூன்றி

அவனைக் கருத்தழித்த
துலங்கல் மழுவினன் சோற்றுத்

துறையுறை வார்சடைமேல்
இலங்கு மதியமன் றோவெம்

பிரானுக் கழகியதே.
4.85.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.86 திருவொற்றியூர் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

822 செற்றுக் களிற்றுரி கொள்கின்ற

ஞான்று செருவெண்கொம்பொன்
றிற்றுக் கிடந்தது போலும்

இளம்பிறை பாம்பதனைச்
சுற்றிக் கிடந்தது கிம்புரி

போலச் சுடரிமைக்கும்
நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமா

லொற்றி யூரனுக்கே.
4.86.1

823சொல்லக் கருதிய தொன்றுண்டு

கேட்கிற் றொண்டாயடைந்தார்
அல்லற் படக்கண்டு பின்னென்

கொடுத்தி அலைகொள்முந்நீர்
மல்லற் றிரைச்சங்க நித்திலங்

கொண்டுவம் பக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி

யூருறை யுத்தமனே.
4.86.2

824பரவை வருதிரை நீர்க்கங்கை

பாய்ந்துக்க பல்சடைமேல்
அரவ மணிதரு கொன்றை

இளந்திங்கட் சூடியதோர்
குரவ நறுமலர் கோங்க

மணிந்து குலாய சென்னி
உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி

யூருறை யுத்தமனே.
4.86.3

825தானகங் காடரங் காக

வுடையது தன்னடைந்தார்
ஊனக நாறு முடைதலை

யிற்பலி கொள்வதுந்தான்
தேனக நாறுந் திருவொற்றி

யூருறை வாரவர்தாந்
தானக மேவந்து போனகம்

வேண்டி உழிதர்வரே.
4.86.4

826வேலைக் கடல்நஞ்ச முண்டுவெள்

ளேற்றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க் குறைவிட

மாவது வாரிகுன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெற்

கழனி அருகணைந்த
சோலைத் திருவொற்றி யூரையெப்

போதுந் தொழுமின்களே.
4.86.5

827புற்றினில் வாழும் அரவுக்குந்

திங்கட்குங் கங்கையென்னுஞ்
சிற்றிடை யாட்குஞ் செறிதரு

கண்ணிக்குஞ் சேர்விடமாம்
பெற்றுடை யான்பெரும் பேச்சுடை

யான்பிரி யாதெனையாள்
விற்றுடை யானொற்றி யூருடை

யான்றன் விரிசடையே.
4.86.6

828இன்றரைக் கண்ணுடை யாரெங்கு

மில்லை இமய மென்னுங்
குன்றரைக் கண்ணன் குலமகட்

பாவைக்குக் கூறிட்டநாள்
அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை

யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி

யூருறை உத்தமனே.
4.86.7

829சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங்

காவுந் துதைந்திலங்கு
பெற்றிகண் டால்மற்று யாவருங்

கொள்வர் பிறரிடைநீ
ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங்

கைவிட் டுறுமென்றெண்ணி
விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப

தில்லிடம் வேதியனே.
4.86.8

830சுற்றிக் கிடந்தொற்றி யூரனென்

சிந்தை பிரிவறியான்
ஒற்றித் திரிதந்து நீயென்ன

செய்தி உலகமெல்லாம்
பற்றித் திரிதந்து பல்லொடு

நாமென்று கண்குழித்துத்
தெற்றித் திருப்பதல் லாலென்ன

செய்யுமித் தீவினையே.
4.86.9

831அங்கட் கடுக்கைக்கு முல்லைப்

புறவம் முறுவல்செய்யும்
பைங்கட் டலைக்குச் சுடலைக்

களரி பருமணிசேர்
கங்கைக்கு வேலை அரவுக்குப்

புற்று கலைநிரம்பாத்
திங்கட்கு வானந் திருவொற்றி

யூரர் திருமுடியே.
4.86.10

832தருக்கின வாளரக் கன்முடி

பத்திறப் பாதந்தன்னால்
ஒருக்கின வாறடி யேனைப்

பிறப்பறுத் தாளவல்லான்
நெருக்கின வானவர் தானவர்

கூடிக் கடைந்தநஞ்சைப்
பருக்கின வாறென்செய் கேனொற்றி

யூருறை பண்டங்கனே.
4.86.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.87 திருப்பழனம் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

833 மேவித்து நின்று விளைந்தன

வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன

அல்லல் அவையறுப்பான்
பாவித்த பாவனை நீயறி

வாய்பழ னத்தரசே
கூவித்துக் கொள்ளுந் தனையடி

யேனைக் குறிக்கொள்வதே.
4.87.1

834சுற்றிநின் றார்புறங் காவ

லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு

நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர

சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக்

குறிக்கொண் டருளுவதே.
4.87.2

835ஆடிநின் றாயண்டம் ஏழுங்

கடந்துபோய் மேலவையுங்
கூடிநின் றாய்குவி மென்முலை

யாளையுங் கொண்டுடனே
பாடிநின் றாய்பழ னத்தர

சேயங்கோர் பால்மதியஞ்
சூடிநின் றாயடி யேனையஞ்

சாமைக் குறிக்கொள்வதே.
4.87.3

836எரித்துவிட் டாய்அம்பி னாற்புர

மூன்றுமுன் னேபடவும்
உரித்துவிட் டாய்உமை யாள்நடுக்

கெய்தவோர் குஞ்சரத்தைப்
பரித்துவிட் டாய்பழ னத்தர

சேகங்கை வார்சடைமேற்
தரித்துவிட் டாயடி யேனைக்

குறிக்கொண் டருளுவதே.
4.87.4

837முன்னியும் முன்னி முளைத்தன

மூவெயி லும்முடனே
மன்னியு மங்கும் இருந்தனை

மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசறி

வாய்பழ னத்தரசே
உன்னியும் உன்னடி யேனைக்

குறிக்கொண் டருளுவதே.
4.87.5

838ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந்

தேபடைத் தான்றலையைக்
காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று

காமனைக் காலனையும்
பாய்ந்தறுத் தாய்பழ னத்தர

சேயென் பழவினைநோய்
ஆய்ந்தறுத் தாயடி யேனைக்

குறிக்கொண் டருளுவதே.
4.87.6

839மற்றுவைத் தாயங்கோர் மாலொரு

பாகம் மகிழ்ந்துடனே
உற்றுவைத் தாய்உமை யாளொடுங்

கூடும் பரிசெனவே
பற்றிவைத் தாய்பழ னத்தர

சேயங்கோர் பாம்பொருகை
சுற்றிவைத் தாய்அடி யேனைக்

குறிக்கொண் டருளுவதே.
4.87.7

840ஊரினின் றாய்ஒன்றி நின்றுவிண்

டாரையும் ஒள்ளழலாற்
போரினின் றாய்பொறை யாயுயி

ராவி சுமந்துகொண்டு
பாரிநின் றாய்பழ னத்தர

சேபணி செய்பவர்கட்
காரநின் றாய்அடி யேனைக்

குறிக்கொண் டருளுவதே.
4.87.8

841போகம்வைத் தாய்புரி புன்சடை

மேலோர் புனலதனை
ஆகம்வைத் தாய்மலை யான்மட

மங்கை மகிழ்ந்துடனே
பாகம்வைத் தாய்பழ னத்தர

சேயுன் பணியருளால்
ஆகம்வைத் தாய்அடி யேனைக்

குறிக்கொண் டருளுவதே.
4.87.9

842அடுத்திருந் தாய்அரக் கன்முடி

வாயொடு தோள்நெரியக்
கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி

யைக்கிளை யோடுடனே
படுத்திருந் தாய்பழ னத்தர

சேபுலி யின்னுரிதோல்
உடுத்திருந் தாய்அடி யேனைக்

குறிக்கொண் டருளுவதே.
4.87.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.88 திருப்பூந்துருத்தி - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

843 மாலினை மாலுற நின்றான்

மலைமகள் தன்னுடைய
பாலனைப் பான்மதி சூடியைப்

பண்புண ரார்மதின்மேற்
போலனைப் போர்விடை யேறியைப்

பூந்துருத் திமகிழும்
ஆலனை ஆதிபு ராணனை

நானடி போற்றுவதே.
4.88.1

844மறியுடை யான்மழு வாளினன்

மாமலை மங்கையோர்பால்
குறியுடை யான்குண மொன்றறிந்

தாரில்லை கூறிலவன்
பொறியுடை வாளர வத்தவன்

பூந்துருத் தியுறையும்
அறிவுடை ஆதி புராணனை

நானடி போற்றுவதே.
4.88.2

845மறுத்தவர் மும்மதில் மாயவோர்

வெஞ்சிலை கோத்தோரம்பால்
அறுத்தனை ஆலதன் கீழனை

ஆல்விட முண்டதனைப்
பொறுத்தனைப் பூதப் படையனைப்

பூந்துருத் தியுறையும்
நிறத்தனை நீல மிடற்றனை

யானடி போற்றுவதே.
4.88.3

846உருவினை ஊழி முதல்வனை

ஓதி நிறைந்துநின்ற
திருவினைத் தேசம் படைத்தனைச்

சென்றடைந் தேனுடைய
பொருவினை யெல்லாந் துரந்தனைப்

பூந்துருத் தியுறையுங்
கருவினைக் கண்மூன் றுடையனை

யானடி போற்றுவதே.
4.88.4

847தக்கன்றன் வேள்வி தகர்த்தவன்

சார மதுவன்றுகோள்
மிக்கன மும்மதில் வீயவோர்

வெஞ்சிலை கோத்தோரம்பால்
புக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர்

பூந்துருத் தியுறையும்
நக்கனை நங்கள் பிரான்றனை

நானடி போற்றுவதே.
4.88.5

848அருகடை மாலையுந் தானுடை

யான்அழ காலமைந்த
உருவுடை மங்கையுந் தன்னொரு

பாலுல காயுநின்றான்
பொருபடை வேலினன் வில்லினன்

பூந்துருத் தியுறையுந்
திருவுடைத் தேச மதியனை

யானடி போற்றுவதே.
4.88.6

849மன்றியுந் நின்ற மதிலரை

மாய வகைகெடுக்கக்
கன்றியுந் நின்று கடுஞ்சிலை

வாங்கிக் கனலம்பினாற்
பொன்றியும் போகப் புரட்டினன்

பூந்துருத் தியுறையும்
அன்றியுஞ் செய்த பிரான்றனை

யானடி போற்றுவதே.
4.88.7

850மின்னிறம் மிக்க இடையுமை

நங்கையோர் பான்மகிழ்ந்தான்
என்னிற மென்றம ரர்பெரி

யாரின்னந் தாமறியார்
பொன்னிற மிக்க சடையவன்

பூந்துருத் தியுறையும்
என்னிற வெந்தை பிரான்றனை

யானடி போற்றுவதே.
4.88.8

851அந்தியை நல்ல மதியினை

யார்க்கும் அறிவரிய
செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினை

சென்றடைந் தேனுடைய
புந்தியைப் புக்க அறிவினை

பூந்துருத் தியுறையும்
நந்தியை நங்கள் பிரான்றனை

நானடி போற்றுவதே.
4.88.9

852பைக்கையும் பாந்தி விழிக்கையும்

பாம்பு சடையிடையே
வைக்கையும் வானிழி கங்கையும்

மங்கை நடுக்குறவே
மொய்க்கை அரக்கனை யூன்றினன்

பூந்துருத் தியுறையும்
மிக்கநல் வேத விகிர்தனை

நானடி போற்றுவதே.
4.88.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.89 திருநெய்த்தானம் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

853 பாரிடஞ் சாடிய பல்லுயிர்

வானம ரர்க்கருளிக்
காரடைந் தகடல் வாயுமிழ்

நஞ்சமு தாகவுண்டான்
ஊரடைந் திவ்வுல கிற்பலி

கொள்வது நாமறியோம்
நீரடைந் தகரை நின்றநெய்த்

தானத் திருந்தவனே.
4.89.1

854தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி

யாய்நின் திருச்சடைமேற்
பாய்ந்தகங் கைப்புனற் பன்முக

மாகிப் பரந்தொலிப்ப
ஆய்ந்திலங் கும்மழு வேலுடை

யாயடி யேற்குரைநீ
ஏந்திள மங்கையும் நீயும்நெய்த்

தானத் திருந்ததுவே.
4.89.2

855கொன்றடைந் தாடிக் குமைத்திடுங்

கூற்றமொன் னார்மதின்மேற்
சென்றடைந் தாடிப் பொருததுந்

தேசமெல் லாமறியுங்
குன்றடைந் தாடுங் குளிர்பொழிற்

காவிரி யின்கரைமேற்
சென்றடைந் தார்வினை தீர்க்குநெய்த்

தானத் திருந்தவனே.
4.89.3

856கொட்டு முழவர வத்தொடு

கோலம் பலஅணிந்து
நட்டம் பலபயின் றாடுவர்

நாகம் அரைக் கசைத்துச்
சிட்டர் திரிபுரந் தீயெழச்

செற்ற சிலையுடையான்
இட்ட முமையொடு நின்றநெய்த்

தானத் திருந்தவனே.
4.89.4

857கொய்மலர்க் கொன்றை துழாய்வன்னி

மத்தமுங் கூவிளமும்
மெய்மலர் வேய்ந்த விரிசடைக்

கற்றைவிண் ணோர்பெருமான்
மைமலர் நீல நிறங்கருங்

கண்ணியோர் பால்மகிழ்ந்தான்
நின்மல னாடல் நிலயநெய்த்

தானத் திருந்தவனே.
4.89.5

858பூந்தார் நறுங்கொன்றை மாலையை

வாங்கிச் சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை யேறிப்பல்

பூதப் படைநடுவே
போந்தார் புறவிசை பாடவும்

ஆடவுங் கேட்டருளிச்
சேர்ந்தார் உமையவ ளோடுநெய்த்

தானத் திருந்தவனே.
4.89.6

859பற்றின பாம்பன் படுத்த

புலியுரித் தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை

மூட்டி யெரித்தறுத்தான்
சுற்றிய பூதப் படையினன்

சூல மழுவொருமான்
செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த்

தானத் திருந்தவனே.
4.89.7

860விரித்த சடையினன் விண்ணவர்

கோன்விட முண்டகண்டன்
உரித்த கரியுரி மூடியொன்

னார்மதில் மூன்றுடனே
எரித்த சிலையினன் ஈடழியா

தென்னை ஆண்டுகொண்ட
தரித்த உமையவ ளோடுநெய்த்

தானத் திருந்தவனே.
4.89.8

861தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை

துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளர

வுங்கங்கை தான்புனைந்தான்
தேங்கார் திரிபுரந் தீயெழ

வெய்து தியக்கறுத்து
நீங்கான் உமையவ ளோடுநெய்த்

தானத் திருந்தவனே.
4.89.9

862ஊட்டிநின் றான்பொரு வானில

மும்மதில் தீயம்பினால்
மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து

வீழவும் வானவர்க்குக்
காட்டிநின் றான்கத மாக்கங்கை

பாயவோர் வார்சடையை
நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த்

தானத் திருந்தவனே.
4.89.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.90 திருவேதிகுடி - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

863 கையது காலெரி நாகங்

கனல்விடு சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட

விரிசடை விண்ணவர்கோன்
செய்யினில் நீல மணங்கம

ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை

நாமடைந் தாடுதுமே.
4.90.1

864கைத்தலை மான்மறி யேந்திய

கையன் கனல்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி

யணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக

ளுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை

நாமடைந் தாடுதுமே.
4.90.2

865முன்பின் முதல்வன் முனிவனெம்

மேலை வினைகழித்தான்
அன்பின் நிலையில் அவுணர்

புரம்பொடி யானசெய்யுஞ்
செம்பொனை நன்மலர் மேலவன்

சேர்திரு வேதிகுடி
அன்பனை நம்மை யுடையனை

நாமடைந் தாடுதுமே.
4.90.3

866பத்தர்கள் நாளும் மறவார்

பிறவியை யொன்றறுப்பான்
முத்தர்கள் முன்னம் பணிசெய்து

பாரிடம் முன்னுயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கம

ழுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை

நாமடைந் தாடுதுமே.
4.90.4

867ஆனணைந் தேறுங் குறிகுண

மாரறி வாரவர்கை
மானணைந் தாடு மதியும்

புனலுஞ் சடைமுடியன்
தேனணைந் தாடிய வண்டு

பயில்திரு வேதிகுடி
ஆனணைந் தாடு மழுவனை

நாமடைந் தாடுதுமே.
4.90.5

868எண்ணும் எழுத்துங் குறியும்

அறிபவர் தாமொழியப்
பண்ணின் இசைமொழி பாடிய

வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும்

பிரான்றிரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை

நாமடைந் தாடுதுமே.
4.90.6

869ஊர்ந்த விடையுகந் தேறிய

செல்வனை நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையோர்

பாகம் மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடைச் செல்வப்

பிரான்றிரு வேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்ணமு

தையடைந் தாடுதுமே.
4.90.7

870எரியும் மழுவினன் எண்ணியும்

மற்றொரு வன்றலையுள்
திரியும் பலியினன் தேயமும்

நாடுமெல் லாமுடையான்
விரியும் பொழிலணி சேறு

திகழ்திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்க

ளோடடைந் தாடுதுமே.
4.90.8

871மையணி கண்டன் மறைவிரி

நாவன் மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய

வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங்கம

ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை

நாமடைந் தாடுதுமே.
4.90.9

872வருத்தனை வாளரக் கன்முடி

தோளொடு பத்திறுத்த
பொருத்தனைப் பொய்யா அருளனைப்

பூதப் படையுடைய
திருத்தனைத் தேவர் பிரான்றிரு

வேதி குடியுடைய
அருத்தனை ஆரா அமுதினை

நாமடைந் தாடுதுமே.
4.90.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர்,
தேவியார் - மங்கையர்க்கரசியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.91 திருவையாறு - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

873 குறுவித்த வாகுற்ற நோய்வினை

காட்டிக் குறுவித்தநோய்
உறுவித்த வாவுற்ற நோய்வினை

தீர்ப்பான் உகந்தருளி
அறிவித்த வாறடி யேனைஐ

யாறன் அடிமைக்களே
செறிவித்த வாதொண்ட னேனைத்தன்

பொன்னடிக் கீழெனையே.
4.91.1

874கூர்வித்த வாகுற்ற நோய்வினை

காட்டியுங் கூர்வித்தநோய்
ஊர்வித்த வாவுற்ற நோய்வினை

தீர்ப்பான் உகந்தருளி
ஆர்வித்த வாறடி யேனைஐ

யாறன் அடிமைக்களே
சேர்வித்த வாதொண்ட னேனைத்தன்

பொன்னடிக் கீழெனையே.
4.91.2

875தாக்கின வாசல மேவினை

காட்டியுந் தண்டித்தநோய்
நீக்கின வாநெடு நீரினின்

றேற நினைந்தருளி
ஆக்கின வாறடி யேனைஐ

யாறன் அடிமைக்களே
நோக்கின வாதொண்ட னேனைத்தன்

பொன்னடிக் கீழெனையே.
4.91.3

876தருக்கின நான்றக வின்றியு

மோடச் சலமதனால்
நெருக்கின வாநெடு நீரினின்

றேற நினைந்தருளி
உருக்கின வாறடி யேனைஐ

யாறன் அடிமைக்களே
பெருக்கின வாதொண்ட னேனைத்தன்

பொன்னடிக் கீழெனையே.
4.91.4

877இழிவித்த வாறிட்ட நோய்வினை

காட்டி இடர்ப்படுத்துக்
கழிவித்த வாகட்ட நோய்வினை

தீர்ப்பான் கலந்தருளி
அழிவித்த வாறடி யேனைஐ

யாறன் அடிமைக்களே
தொழுவித்த வாதொண்ட னேனைத்தன்

பொன்னடிக் கீழெனையே.
4.91.5

878இடைவித்த வாறிட்ட நோய்வினை

காட்டி இடர்ப்படுத்து
உடைவித்த வாறுற்ற நோய்வினை

தீர்ப்பான் உகந்தருளி
அடைவித்த வாறடி யேனைஐ

யாறன் அடிமைக்களே
தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன்

பொன்னடிக் கீழெனையே.
4.91.6

879படக்கின வாபட நின்றுபன்

னாளும் படக்கினநோய்
அடக்கின வாறது வன்றியுந்

தீவினை பாவமெல்லாம்
அடக்கின வாறடி யேனைஐ

யாறன் அடிமைக்களே
தொடக்கின வாதொண்ட னேனைத்தன்

பொன்னடிக் கீழெனையே.
4.91.7

880மறப்பித்த வாவல்லை நோய்வினை

காட்டி மறப்பித்தநோய்
துறப்பித்த வாதுக்க நோய்வினை

தீர்ப்பான் உகந்தருளி
இறப்பித்த வாறடி யேனைஐ

யாறன் அடிமைக்களே
சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன்

பொன்னடிக் கீழெனையே.
4.91.8

881துயக்கின வாதுக்க நோய்வினை

காட்டித் துயக்கினநோய்
இயக்கின வாறிட்ட நோய்வினை

தீர்ப்பான் இசைந்தருளி
அயக்கின வாறடி யேனைஐ

யாறன் அடிமைக்களே
மயக்கின வாதொண்ட னேனைத்தன்

பொன்னடிக் கீழெனையே.
4.91.9

882கறுத்துமிட் டார்கண்டங் கங்கை

சடைமேற் கரந்தருளி
இறுத்துமிட் டார்இலங் கைக்கிறை

தன்னை இருபதுதோள்
அறுத்துமிட் டாரடி யேனைஐ

யாறன் அடிமைக்களே
பொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன்

பொன்னடிக் கீழெனையே.
4.91.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.92 திருவையாறு - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

883 சிந்திப் பரியன சிந்திப்

பவர்க்குச் சிறந்துசெந்தேன்
முந்திப் பொழிவன முத்தி

கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை

தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடும்ஐ

யாறன் அடித்தலமே.
4.92.1

884இழித்தன ஏழேழ் பிறப்பும்

அறுத்தன என்மனத்தே
பொழித்தன போரெழிற் கூற்றை

யுதைத்தன போற்றவர்க்காய்க்
கிழித்தன தக்கன் கிளரொளி

வேள்வியைக் கீழமுன்சென்
றழித்தன ஆறங்க மானஐ

யாறன் அடித்தலமே.
4.92.2

885மணிநிற மொப்பன பொன்னிற

மன்னின மின்னியல்வாய்
கணிநிற மன்ன கயிலைப்

பொருப்பன காதல்செய்யத்
துணிவன சீலத்த ராகித்

தொடர்ந்து விடாததொண்டர்க்
கணியன சேயன தேவர்க்கை

யாறன் அடித்தலமே.
4.92.3

886இருள்தரு துன்பப் படல

மறைப்பமெய்ஞ் ஞானமென்னும்
பொருள்தரு கண்ணிழந் துண்பொருள்

நாடிப் புகலிழந்த
குருடருந் தம்மைப் பரவக்

கொடுநர கக்குழிநின்
றருள்தரு கைகொடுத் தேற்றும்ஐ

யாறன் அடித்தலமே.
4.92.4

887எழுவாய் இறுவாய் இலாதன

வெங்கட் பிணிதவிர்த்து
வழுவா மருத்துவ மாவன

மாநர கக்குழிவாய்
விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன

மீட்பன மிக்கவன்போ
டழுவார்க் கமுதங்கள் காண்கஐ

யாறன் அடித்தலமே.
4.92.5

888துன்பக் கடலிடைத் தோணித்

தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக் கரைமுகந் தேற்றுந்

திறத்தன மாற்றயலே
பொன்பட் டொழுகப் பொருந்தொளி

செய்யுமப் பொய்பொருந்தா
அன்பர்க் கணியன காண்கஐ

யாறன் அடித்தலமே.
4.92.6

889களித்துக் கலந்ததோர் காதற்

கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுதுமுன் நின்றவிப்

பத்தரைக் கோதில்செந்தேன்
தெளித்துச் சுவையமு தூட்டி

யமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும்ஐ

யாறன் அடித்தலமே.
4.92.7

890திருத்திக் கருத்தினைச் செவ்வே

நிறுத்திச் செறுத்துடலை
வருத்திக் கடிமலர் வாளெடுத்

தோச்சி மருங்குசென்று
விருத்திக் குழக்கவல் லோர்கட்கு

விண்பட் டிகையிடுமால்
அருத்தித் தருந்தவ ரேத்தும்ஐ

யாறன் அடித்தலமே.
4.92.8

891 பாடும் பறண்டையு மாந்தையு

மார்ப்பப் பரந்துபல்பேய்க்
கூடி முழவக் குவிகவிழ்

கொட்டக் குறுநரிகள்
நீடுங் குழல்செய்ய வையம்

நெளிய நிணப்பிணக்காட்
டாடுந் திருவடி காண்கஐ

யாறன் அடித்தலமே.
4.92.9

892 நின்போல் அமரர்கள் நீண்முடி

சாய்த்து நிமிர்த்துகுத்த
பைம்போ துழக்கிப் பவளந்

தழைப்பன பாங்கறியா
என்போ லிகள்பறித் திட்ட

இலையும் முகையுமெல்லாம்
அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ

யாறன் அடித்தலமே.
4.92.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.93 திருவையாறு - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

893 மலையார் மடந்தை மனத்தன

வானோர் மகுடமன்னி
நிலையா யிருப்பன நின்றோர்

மதிப்பன நீணிலத்துப்
புலையாடு புன்மை தவிர்ப்பன

பொன்னுல கம்மளிக்கும்
அலையார் புனற்பொன்னி சூழ்ந்தஐ

யாறன் அடித்தலமே.
4.93.1

894 பொலம்புண் டரீகப் புதுமலர்

போல்வன போற்றியென்பார்
புலம்பும் பொழுதும் புணர்துணை

யாவன பொன்னனைய
சிலம்புஞ் செறிபா டகமுஞ்

செழுங்கிண் கிணித்திரளும்
அலம்பும் திருவடி காண்கஐ

யாறன் அடித்தலமே.
4.93.2

895 உற்றா ரிலாதார்க் குறுதுணை

யாவன ஓதிநன்னூல்
கற்றார் பரவப் பெருமை

யுடையன காதல்செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி

வானகந் தான்கொடுக்கும்
அற்றார்க் கரும்பொருள் காண்கஐ

யாறன் அடித்தலமே.
4.93.3

896வானைக் கடந்தண்டத் தப்பால்

மதிப்பன மந்திரிப்பார்
ஊனைக் கழித்துய்யக் கொண்டருள்

செய்வன உத்தமர்க்கு
ஞானச் சுடராய் நடுவே

யுதிப்பன நங்கையஞ்ச
ஆனை யுரித்தன காண்கஐ

யாறன் அடித்தலமே.
4.93.4

897மாதர மானில மாவன

வானவர் மாமுகட்டின்
மீதன மென்கழல் வெங்கச்சு

வீக்கின வெந்நமனார்
தூதரை யோடத் துரப்பன

துன்பறத் தொண்டுபட்டார்க்
காதர மாவன காண்கஐ

யாறன் அடித்தலமே.
4.93.5

898பேணித் தொழுமவர் பொன்னுல

காளப் பிறங்கருளால்
ஏணிப் படிநெறி யிட்டுக்

கொடுத்திமை யோர்முடிமேல்
மாணிக்க மொத்து மரகதம்

போன்று வயிரமன்னி
ஆணிக் கனகமு மொக்கும்ஐ

யாறன் அடித்தலமே.
4.93.6

899ஓதிய ஞானமும் ஞானப்

பொருளும் ஒலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியு

மாவன விண்ணுமண்ணுஞ்
சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு

மொப்பன தூமதியோ
டாதியும் அந்தமு மானஐ

யாறன் அடித்தலமே.
4.93.7

900சுணங்கு முகத்துத் துணைமுலைப்

பாவை சுரும்பொடுவண்
டணங்குங் குழலி யணியார்

வளைக்கரங் கூப்பிநின்று
வணங்கும் பொழுதும் வருடும்

பொழுதும்வண் காந்தளொண்போ
தணங்கும் அரவிந்த மொக்கும்ஐ

யாறன் அடித்தலமே.
4.93.8

901சுழலார் துயர்வெயிற் சுட்டிடும்

போதடித் தொண்டர்துன்னும்
நிழலா வனவென்று நீங்காப்

பிறவி நிலைகெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ

கால வனங்கடந்த
அழலார் ஒளியன காண்கஐ

யாறன் அடித்தலமே.
4.93.9

902வலியான் றலைபத்தும் வாய்விட்

டலற வரையடர்த்து
மெலியா வலியுடைக் கூற்றை

யுதைத்துவிண் ணோர்கள்முன்னே
பலிசேர் படுகடைப் பார்த்துப்பன்

னாளும் பலர்இகழ
அலியா நிலைநிற்கும் ஐயன்ஐ

யாறன் அடித்தலமே.
4.93.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.94 திருக்கண்டியூர் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

903 வானவர் தானவர் வைகல்

மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்
தானவர் மால்பிர மன்னறி

யாத தகைமையினான்
ஆனவ னாதிபு ராணனன்

றோடிய பன்றியெய்த
கானவ னைக்கண்டி யூரண்ட

வாணர் தொழுகின்றதே.
4.94.1

904வான மதியமும் வாளர

வும்புன லோடுசடைத்
தான மதுவென வைத்துழல்

வான்றழல் போலுருவன்
கான மறியொன்று கையுடை

யான்கண்டி யூரிருந்த
ஊனமில் வேத முடையானை

நாமடி யுள்குவதே.
4.94.2

905பண்டங் கறுத்ததோர் கையுடை

யான்படைத் தான்றலையை
உண்டங் கறுத்ததும் ஊரொடு

நாடவை தானறியுங்
கண்டங் கறுத்த மிடறுடை

யான்கண்டி யூரிருந்த
தொண்டர் பிரானைக்கண் டீரண்ட

வாணர் தொழுகின்றதே.
4.94.3

906முடியின்முற் றாததொன் றில்லையெல்

லாமுடன் தானுடையான்
கொடியுமுற் றவ்விடை யேறியோர்

கூற்றொரு பாலுடையான்
கடியமுற் றவ்வினை நோய்களை

வான்கண்டி யூரிருந்தான்
அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண்

டீரண்ட வானவரே.
4.94.4

907பற்றியோ ரானை யுரித்த

பிரான்பவ ளத்திரள்போல்
முற்றும் அணிந்ததோர் நீறுடை

யான்முன்ன மேகொடுத்த
கற்றங் குடையவன் றானறி

யான்கண்டி யூரிருந்த
குற்றமில் வேத முடையானை

யாமண்டர் கூறுவதே.
4.94.5

908போர்ப்பனை யானை யுரித்த

பிரான்பொறி வாயரவஞ்
சேர்ப்பது வானத் திரைகடல்

சூழுல கம்மிதனைக்
காப்பது காரண மாகக்கொண்

டான்கண்டி யூரிருந்த
கூர்ப்புடை ஒள்வாள் மழுவனை

யாமண்டர் கூறுவதே.
4.94.6

909அட்டது காலனை ஆய்ந்தது

வேதமா றங்கமன்று
சுட்டது காமனைக் கண்ணத

னாலே தொடர்ந்தெரியக்
கட்டவை மூன்று மெரித்த

பிரான்கண்டி யூரிருந்த
குட்டமுன் வேதப் படையனை

யாமண்டர் கூறுவதே.
4.94.7

910அட்டும் ஒலிநீர் அணிமதி

யும்மல ரானவெல்லாம்
இட்டுப் பொதியுஞ் சடைமுடி

யான்இண்டை மாலையங்கைக்
கட்டும் அரவது தானுடை

யான்கண்டி யூரிருந்த
கொட்டும் பறையுடைக் கூத்தனை

யாமண்டர் கூறுவதே.
4.94.8

911மாய்ந்தன தீவினை மங்கின

நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில்

லாநம்மைச் செற்றநங்கைக்
காய்ந்த பிரான்கண்டி யூரெம்

பிரான்அங்க மாறினையும்
ஆய்ந்த பிரானல்ல னோவடி

யேனையாட் கொண்டவனே.
4.94.9

912மண்டி மலையை யெடுத்துமத்

தாக்கியவ் வாசுகியைத்
தண்டி அமரர் கடைந்த

கடல்விடங் கண்டருளி
உண்ட பிரான்நஞ் சொளித்தபி

ரான்அஞ்சி யோடிநண்ணக்
கண்ட பிரானல்ல னோகண்டி

யூரண்ட வானவனே.
4.94.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.95 திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

913 ஈன்றாளு மாயெனக் கெந்தையு

மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந்

தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன்

திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன்

றன்னடி யோங்களுக்கே.
4.95.1

914பற்றாய் நினைந்திடப் போதுநெஞ்

சேயிந்தப் பாரைமுற்றுஞ்
சுற்றாய் அலைகடல் மூடினுங்

கண்டேன் புகல்நமக்கு
உற்றான் உமையவட் கன்பன்

திருப்பா திரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியி

னான்றன மொய்கழலே.
4.95.2

915விடையான் விரும்பியென் னுள்ளத்

திருந்தான் இனிநமக்கிங்
கடையா அவலம் அருவினை

சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல்

பவர்பா திரிப்புலியூர்
உடையான் அடியார் அடியடி

யோங்கட் கரியதுண்டே.
4.95.3

916மாயமெல் லாமுற்ற விட்டிருள்

நீங்க மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தா

னவன்றன் திருவடிக்கே
தேயமெல் லாநின் றிறைஞ்சுந்

திருப்பா திரிப்புலியூர்
மேயநல் லான்மலர்ப் பாதமென்

சிந்தையுள் நின்றனவே.
4.95.4

917வைத்த பொருள்நமக் காமென்று

சொல்லி மனத்தடைத்துச்
சித்த மொருக்கிச் சிவாய

நமவென் றிருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வா

ரவர்பா திரிப்புலியூர்
அத்தன் அருள்பெற லாமோ

அறிவிலாப் பேதைநெஞ்சே.
4.95.5

918கருவாய்க் கிடந்துன் கழலே

நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம்

பயின்றேன் உனதருளாற்
திருவாய் பொலியச் சிவாய

நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா

திரிப்புலி யூரரனே.
4.95.6

919எண்ணா தமரர் இரக்கப்

பரவையுள் நஞ்சமுண்டாய்
திண்ணார் அசுரர் திரிபுரந்

தீயெழச் செற்றவனே
பண்ணார்ந் தமைந்த பொருள்கள்

பயில்பா திரிப்புலியூர்க்
கண்ணார் நுதலாய் கழல்நங்

கருத்தில் உடையனவே.
4.957

920புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா

வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர

வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள்

செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை

மேல்வைத்த தீவண்ணனே.
4.95.8

921மண்பா தலம்புக்கு மால்கடல்

மூடிமற் றேழுலகும்
விண்பால் திசைகெட் டிருசுடர்

வீழினும் அஞ்சல்நெஞ்சே
திண்பால் நமக்கொன்று கண்டோ ந்

திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட்

சுடரான் கழலிணையே.
4.95.9

922திருந்தா அமணர்தந் தீநெறிப்

பட்டுத் திகைத்துமுத்தி
தருந்தா ளிணைக்கே சரணம்

புகுந்தேன் வரையெடுத்த
பொருந்தா அரக்கன் உடல்நெரித்

தாய்பா திரிப்புலியூர்
இருந்தாய் அடியேன் இனிப்பிற

வாமல்வந் தேன்றுகொள்ளே.
4.95.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர்,
தேவியார் - தோகையம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.96 திருவீழிமிழலை - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

923 வான்சொட்டச் சொட்டநின் றட்டும்

வளர்மதி யோடயலே
தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந்

திருக்கொன்றை சென்னிவைத்தீர்
மான்பெட்டை நோக்கி மணாளீர்

மணிநீர் மிழலையுள்ளீர்
நான்சட்ட வும்மை மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.
4.96.1

924அந்தமும் ஆதியு மாகிநின்

றீரண்டம் எண்டிசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்

றீர்பசு வேற்றுகந்தீர்
வெந்தழல் ஓம்பு மிழலையுள்

ளீரென்னைத் தென்றிசைக்கே
உந்திடும் போது மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.
4.96.2

925அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல்

அம்பர மாகிநின்றீர்
கலைக்கன்று சேருங் கரத்தீர்

கலைப்பொரு ளாகிநின்றீர்
விலக்கின்றி நல்கும் மிழலையுள்

ளீர்மெய்யிற் கையொடுகால்
குலைக்கின்று நும்மை மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.
4.96.3

926தீத்தொழி லான்றலை தீயிலிட்

டுச்செய்த வேள்விசெற்றீர்
பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை

யீர்பிடித் துத்திரியும்
வேய்த்தொழி லாளர் மிழலையுள்

ளீர்விக்கி அஞ்செழுத்தும்
ஓத்தொழிந் தும்மை மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.
4.96.4

927தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ்

சுத்தியும் பத்திமையான்
மேற்பட்ட அந்தணர் வீழியும்

என்னையும் வேறுடையீர்
நாட்பட்டு வந்து பிறந்தேன்

இறக்க நமன்தமர்தம்
கோட்பட்டு நும்மை மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.
4.96.5

928கண்டியிற் பட்ட கழுத்துடை

யீர்கரி காட்டிலிட்ட
பண்டியிற் பட்ட பரிகலத்

தீர்பதி வீழிகொண்டீர்
உண்டியிற் பட்டினி நோயில்

உறக்கத்தில் உம்மையைவர்
கொண்டியிற் பட்டு மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.
4.96.6

929தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண்

டீர்தூய வெள்ளெருதொன்
றேற்றங்கொண் டீரெழில் வீழி

மிழலை இருக்கைகொண்டீர்
சீற்றங்கொண் டென்மேல் சிவந்ததோர்

பாசத்தால் வீசியவெங்
கூற்றங்கண் டும்மை மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.
4.96.7

930சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ்

சூடிச்சொக் கம்பயின்றீர்
பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை

யீர்படர் தீப்பருக
விழிப்பட்ட காமனை வீட்டீர்

மிழலையுள் ளீர்பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.
4.96.8

931பிள்ளையிற் பட்ட பிறைமுடி

யீர்மறை யோதவல்லீர்
வெள்ளையிற் பட்டதோர் நீற்றீர்

விரிநீர் மிழலையுள்ளீர்
நள்ளையிற் பட்டைவர் நக்கரைப்

பிக்க நமன்தமர்தங்
கொள்ளையிற் பட்டு மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.
4.96.9

932கறுக்கொண் டரக்கன் கயிலையைப்

பற்றிய கையுமெய்யும்
நெறுக்கென் றிறச்செற்ற சேவடி

யாற்கூற்றை நீறுசெய்தீர்
வெறிக்கொன்றை மாலை முடியீர்

விரிநீர் மிழலையுள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.
4.96.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுஜாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.97 திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

933 கோவாய் முடுகி யடுதிறற்

கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற்

பொறித்துவை போகவிடின்
மூவா முழுப்பழி மூடுங்கண்

டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.1

934காய்ந்தாய் அனங்கன் உடலம்

பொடிபடக் காலனைமுன்
பாய்ந்தாய் உயிர்செகப் பாதம்

பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற்

கருளாயுன் அன்பர்சிந்தை
சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.2

935பொத்தார் குரம்பை புகுந்தைவர்

நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போல் மறுகுமென்

சிந்தை மறுக்கொழிவி
அத்தா அடியேன் அடைக்கலங்

கண்டாய் அமரர்கள்தஞ்
சித்தா திருச்சத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.3

936நில்லாக் குரம்பை நிலையாக்

கருதியிந் நீணிலத்தொன்
றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு

வேனைவந் தாண்டுகொண்டாய்
வில்லேர் புருவத் துமையாள்

கணவா விடிற்கெடுவேன்
செல்வா திருச்சத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.4

937கருவுற் றிருந்துன் கழலே

நினைந்தேன் கருப்புவியிற்
தெருவிற் புகுந்தேன் திகைத்தடி

யேனைத் திகைப்பொழிவி
உருவிற் றிகழும் உமையாள்

கணவா விடிற்கெடுவேன்
திருவிற் பொலிசத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.5

938வெம்மை நமன்தமர் மிக்கு

விரவி விழுப்பதன்முன்
இம்மையுன் தாளென்றன் நெஞ்சத்

தெழுதிவை ஈங்கிகழில்
அம்மை அடியேற் கருளுதி

யென்பதிங் காரறிவார்
செம்மை தருசத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.6

939விட்டார் புரங்கள் ஒருநொடி

வேவவோர் வெங்கணையாற்
சுட்டாயென் பாசத் தொடர்பறுத்

தாண்டுகொள் தும்பிபம்பும்
மட்டார் குழலி மலைமகள்

பூசை மகிழ்ந்தருளுஞ்
சிட்டா திருச்சத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.7

940இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்

டிமையோர் பொறையிரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமுங்

கொண்டது நீலகண்டா
புகழ்ந்த அடியேன்றன் புன்மைகள்

தீரப் புரிந்துநல்காய்
திகழ்ந்த திருச்சத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.8

941தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந்

துன்றன் சரண்புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன்றிற

மல்லால் எனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா

மிகவட மேருவென்னுந்
திக்கா திருச்சத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.9

942பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப்

புற்றவன் பொன்முடிதோள்
இறத்தாள் ஒருவிரல் ஊன்றிட்

டலற இரங்கிஒள்வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய்

குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய் திருச்சத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவக்கொழுந்தீசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.98 திருநல்லூர் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

943 அட்டுமின் இல்பலி யென்றென்

றகங்கடை தோறும்வந்து
மட்டவி ழுங்குழ லார்வளை

கொள்ளும் வகையென்கொலோ
கொட்டிய பாணி யெடுத்திட்ட

பாதமுங் கோளரவும்
நட்டநின் றாடிய நாதர்நல்

லூரிடங் கொண்டவரே.
4.98.1

944பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை

பெய்பலிக் கென்றுழல்வார்
நண்ணிட்டு வந்து மனைபுகுந்

தாரும்நல் லூரகத்தே
பண்ணிட்ட பாடலர் ஆடல

ராய்ப்பற்றி நோக்கிநின்று
கண்ணிட்டுப் போயிற்றுக் காரண

முண்டு கறைக்கண்டரே.
4.98.2

945படவேர் அரவல்ன்ற் பாவைநல்

லீர்பக லேயொருவர்
இடுவார் இடைப்பலி கொள்பவர்

போலவந் தில்புகுந்து
நடவார் அடிகள் நடம்பயின்

றாடிய கூத்தர்கொலோ
வடபாற் கயிலையுந் தென்பால்நல்

லூருந்தம் வாழ்பதியே.
4.98.3

946செஞ்சுடர்ச் சோதிப் பவளத்

திரள்திகழ் முத்தனைய
நஞ்சணி கண்டன்நல் லூருறை

நம்பனை நானொருகாற்
துஞ்சிடைக் கண்டு கனவின்

றலைத்தொழு தேற்கவன்றான்
நெஞ்சிடை நின்றக லான்பல

காலமும் நின்றனனே.
4.98.4

947வெண்மதி சூடி விளங்கநின்

றானைவிண் ணோர்கள்தொழ
நண்ணில யத்தொடு பாட

லறாதநல் லூரகத்தே
திண்ணிலை யங்கொடு நின்றான்

திரிபுர மூன்றெரித்தான்
கண்ணுளும் நெஞ்சத் தகத்தும்

உளகழற் சேவடியே.
4.98.5

948தேற்றப் படத்திரு நல்லூ

ரகத்தே சிவனிருந்தாற்
தோற்றப் படச்சென்று கண்டுகொள்

ளார்தொண்டர் துன்மதியால்
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற்

றேடிய ஆதரைப்போற்
காற்றிற் கெடுத்துல கெல்லாந்

திரிதர்வர் காண்பதற்கே.
4.98.6

949நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ்

சூழ்ந்த நல்லூரகத்தே
கீட்கொண்ட கோவணங் காவென்று

சொல்லிக் கிறிபடத்தான்
வாட்கொண்ட நோக்கி மனைவியொ

டுமங்கோர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன்

றோவிவ் வகலிடமே.
4.98.7

950அறைமல்கு பைங்கழ லார்ப்பநின்

றானணி யார்சடைமேல்
நறைமல்கு கொன்றையந் தாருடை

யானும்நல் லூரகத்தே
பறைமல்கு பாடலன் ஆடல

னாகிப் பரிசழித்தான்
பிறைமல்கு செஞ்சடை தாழநின்

றாடிய பிஞ்ஞகனே.
4.98.8

951மன்னிய மாமறை யோர்மகிழ்ந்

தேத்த மருவியெங்குந்
துன்னிய தொண்டர்கள் இன்னிசை

பாடித் தொழுதுநல்லூர்க்
கன்னியர் தாமுங் கனவிடை

யுன்னிய காதலரை
அன்னியர் அற்றவர் அங்கண

னேயருள் நல்கென்பரே.
4.98.9

952திருவமர் தாமரை சீர்வளர்

செங்கழு நீர்கொள்நெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ்

சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட

மலிமறை யோர்கள்நல்லூர்
உருவமர் பாகத் துமையவள்

பாகனை உள்குதுமே.
4.98.10

953செல்லேர் கொடியன் சிவன்பெருங்

கோயில் சிவபுரமும்
வல்லேன் புகவும் மதில்சூழ்

இலங்கையர் காவலனைக்
கல்லார் முடியொடு தோளிறச்

செற்ற கழலடியான்
நல்லூ ரிருந்த பிரான்அல்ல

னோநம்மை ஆள்பவனே.
4.98.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.99 திருவையாறு - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

954 அந்திவட் டத்திங்கட் கண்ணியன்

ஐயா றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின்

றானையும் பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை

யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை

வளாவிய நம்பனையே.
4.99.1

955பாடகக் கால்கழற் கால்பரி

திக்கதி ருக்கவந்தி
நாடகக் கால்நங்கை முன்செங்கண்

ஏனத்தின் பின்னடந்த
காடகக் கால்கணங் கைதொழுங்

காலெங்க ணாய்நின்றகால்
ஆடகக் காலரி மான்றேர்

வலவன்ஐ யாற்றனவே.
4.99.2

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.100 திருவேகம்பம் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

956 ஓதுவித் தாய்முன் அறவுரை

காட்டி அமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி

தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக்

கிற்புளி யம்வளாரால்
மோதுவிப் பாய்உகப் பாய்முனி

வாய்கச்சி யேகம்பனே.
4.100.1

957எத்தைக்கொண் டெத்தகை ஏழை

அமணொ டிசைவித்தெனைக்
கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு

வித்தென்னைக் கோகுசெய்தாய்
முத்தின் திரளும் பளிங்கினிற்

சோதியும் மொய்பவளத்
தொத்தினை யேய்க்கும் படியாய்

பொழிற்கச்சி யேகம்பனே.
4.100.2

958மெய்யம்பு கோத்த விசயனோ

டன்றொரு வேடுவனாய்ப்
பொய்யம்பெய் தாவ மருளிச்செய்

தாய்புர மூன்றெரியக்
கையம்பெய் தாய்நுன் கழலடி

போற்றாக் கயவர்நெஞ்சிற்
குய்யம்பெய் தாய்கொடி மாமதில்

சூழ்கச்சி யேகம்பனே.
4.100.3

959குறிக்கொண் டிருந்துசெந் தாமரை

ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற

மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை

வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங்

காஞ்சியெம் பிஞ்ஞகனே.
4.100.4

960உரைக்குங் கழிந்திங் குணர்வரி

யான்உள்கு வார்வினையைக்
கரைக்கு மெனக்கை தொழுவதல்

லாற்கதி ரோர்களெல்லாம்
விரைக்கொண் மலரவன் மால்எண்

வசுக்கள்ஏ காதசர்கள்
இரைக்கும் அமிர்தர்க் கறியவொண்

ணானெங்கள் ஏகம்பனே.
4.100.5

961கருவுற்ற நாள்முத லாகவுன்

பாதமே காண்பதற்கு
உருகிற்றென் னுள்ளமும் நானுங்

கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால

வாயா திருவாரூரா
ஒருபற் றிலாமையுங் கண்டிரங்

காய்கச்சி யேகம்பனே.
4.100.6

962அரிஅயன் இந்திரன் சந்திரா

தித்தர் அமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை

யார்உணங் காக்கிடந்தார்
புரிதரு புன்சடைப் போக

முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை ஏகம்ப

என்னோ திருக்குறிப்பே.
4.100.7

963பாம்பரைச் சேர்த்திப் படருஞ்

சடைமுடிப் பால்வண்ணனே
கூம்பலைச் செய்த கரதலத்

தன்பர்கள் கூடிப்பன்னாள்
சாம்பலைப் பூசித் தரையிற்

புரண்டுநின் றாள்சரணென்
றேம்பலிப் பார்கட் கிரங்குகண்

டாய்கச்சி யேகம்பனே.
4.100.8

964ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு

மானினி யல்லமென்னிற்
சான்றுகண் டாய்இவ் வுலகமெல்

லாந்தனி யேனென்றென்னை
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத்

தாய்பின்னை ஒற்றியெல்லாஞ்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப

மேய சுடர்வண்ணனே.
4.100.9

965உந்திநின் றாருன்றன் ஓலக்கச்

சூளைகள் வாய்தல்பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவ

ரீட்டம் பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு

மாலும் மதிற்கச்சியாய்
இந்தநின் றோமினி எங்ஙன

மோவந் திறைஞ்சுவதே.
4.100.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.101 திருவின்னம்பர் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

966 மன்னு மலைமகள் கையால்

வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறுந் தூப்பொரு

ளாயின தூக்கமலத்
தன்ன வடிவின அன்புடைத்

தொண்டர்க் கமுதருத்தி
இன்னல் களைவன இன்னம்ப

ரான்றன் இணையடியே.
4.101.1

967பைதற் பிணக்குழைக் காளிவெங்

கோபம்பங் கப்படுப்பான்
செய்தற் கரிய திருநடஞ்

செய்தன சீர்மறையோன்
உய்தற் பொருட்டுவெங் கூற்றை

யுதைத்தன உம்பர்க்கெல்லாம்
எய்தற் கரியன இன்னம்ப

ரான்றன் இணையடியே.
4.101.2

968சுணங்குநின் றார்கொங்கை யாள்உமை

சூடின தூமலரால்
வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின

மன்னு மறைகள்தம்மிற்
பிணங்கிநின் றின்னன வென்றறி

யாதன பேய்க்கணத்தோ
டிணங்கிநின் றாடின இன்னம்ப

ரான்றன் இணையடியே.
4.101.3

969ஆறொன் றியசம யங்களின்

அவ்வவர்க் கப்பொருள்கள்
வேறொன் றிலாதன விண்ணோர்

மதிப்பன மிக்குவமன்
மாறொன் றிலாதன மண்ணொடு

விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறொன் றிலாதன இன்னம்ப

ரான்றன் இணையடியே.
4.101.4

970அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றி

னாலட லங்கியின்வாய்க்
கரக்கமுன் வைதிகத் தேர்மிசை

நின்றன கட்டுருவம்
பரக்கவெங் கானிடை வேடுரு

வாயின பல்பதிதோ
றிரக்க நடந்தன இன்னம்ப

ரான்றன் இணையடியே.
4.101.5

971கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழல்முன்

தேடின கேடுபடா
ஆண்டும் பலபல வூழியு

மாயின ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்கநின்

றாடின மேவுசிலம்
பீண்டும் கழலின இன்னம்ப

ரான்றன் இணையடியே.
4.101.6

972போற்றுந் தகையன பொல்லா

முயலகன் கோபப்புன்மை
ஆற்றுந் தகையன ஆறு

சமயத் தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய

தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன இன்னம்ப

ரான்றன் இணையடியே.
4.101.7

973பயம்புன்மை சேர்தரு பாவந்

தவிர்ப்பன பார்ப்பதிதன்
குயம்பொன்மை மாமல ராகக்

குலாவின கூடவொண்ணாச்
சயம்புவென் றேதகு தாணுவென்

றேசதுர் வேதங்கள்நின்
றியம்புங் கழலின இன்னம்ப

ரான்றன் இணையடியே.
4.101.8

974அயன்நெடு மால்இந் திரன்சந்தி

ராதித்தர் அமரரெல்லாஞ்
சயசய என்றுமுப் போதும்

பணிவன தண்கடல்சூழ்
வியனில முற்றுக்கும் விண்ணுக்கும்

நாகர் வியன்நகர்க்கும்
இயபர மாவன இன்னம்ப

ரான்றன் இணையடியே.
4.101.9

975தருக்கிய தக்கன்றன் வேள்வி

தகர்த்தன தாமரைப்போ
துருக்கிய செம்பொன் உவமன்

இலாதன வொண்கயிலை
நெருக்கிய வாளரக் கன்றலை

பத்தும் நெரித்தவன்றன்
இருக்கியல் பாயின இன்னம்ப

ரான்றன் இணையடியே.
4.101.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.102 திருவாரூர் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

976 குலம்பலம் பாவரு குண்டர்முன்

னேநமக் குண்டுகொலோ
அலம்பலம் பாவரு தண்புனல்

ஆரூர் அவிர்சடையான்
சிலம்பலம் பாவரு சேவடி

யான்றிரு மூலத்தானம்
புலம்பலம் பாவரு தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.
4.102.1

977மற்றிட மின்றி மனைதுறந்

தல்லுணா வல்லமணர்
சொற்றிட மென்று துரிசுபட்

டேனுக்கு முண்டுகொலோ
விற்றிடம் வாங்கி விசயனோ

டன்றொரு வேடுவனாய்ப்
புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.
4.102.2

978ஒருவடி வின்றிநின் றுண்குண்டர்

முன்னமக் குண்டுகொலோ
செருவடி வெஞ்சிலை யாற்புரம்

அட்டவன் சென்றடையாத்
திருவுடை யான்றிரு வாரூர்த்

திருமூலத் தானன்செங்கட்
பொருவிடை யானடித் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.
4.102.3

979மாசினை யேறிய மேனியர்

வன்கண்ணர் மொண்ணரைவிட்
டீசனை யேநினைந் தேசறு

வேனுக்கும் உண்டுகொலோ
தேசனை ஆரூர்த் திருமூலத்

தானனைச் சிந்தைசெய்து
பூசனைப் பூசரர் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.
4.102.4

980அருந்தும் பொழுதுரை யாடா

அமணர் திறமகன்று
வருந்தி நினைந்தர னேயென்று

வாழ்த்துவேற் குண்டுகொலோ
திருந்திய மாமதில் ஆரூர்த்

திருமூலத் தானனுக்குப்
பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.
4.102.5

981வீங்கிய தோள்களுந் தாள்களு

மாய்நின்று வெற்றரையே
மூங்கைகள் போலுண்ணு மூடர்முன்

னேநமக் குண்டுகொலோ
தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த்

திருமூலத் தானன்செய்ய
பூங்கழ லானடித் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.
4.102.6

982பண்ணிய சாத்திரப் பேய்கள்

பறிதலைக் குண்டரைவிட்
டெண்ணிற் புகழீசன் றன்னருள்

பெற்றேற்கு முண்டுகொலோ
திண்ணிய மாமதில் ஆரூர்த்

திருமூலத் தானனெங்கள்
புண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.
4.102.7

983கரப்பர்கள் மெய்யைத் தலைபறிக்

கச்சுகம் என்னுங்குண்டர்
உரைப்பன கேளாதிங் குய்யப்போந்

தேனுக்கும் உண்டுகொலோ
திருப்பொலி ஆரூர்த் திருமூலத்

தானன் திருக்கயிலைப்
பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.
4.102.8

984கையி லிடுசோறு நின்றுண்ணுங்

காதல் அமணரைவிட்
டுய்யும் நெறிகண் டிங்குய்யப்

போந்தேனுக்கு முண்டுகொலோ
ஐயன் அணிவயல் ஆரூர்த்

திருமூலத் தானனுக்குப்
பொய்யன் பிலாவடித் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.
4.102.9

985குற்ற முடைய அமணர்

திறமது கையகன்றிட்
டுற்ற கருமஞ்செய் துய்யப்போந்

தேனுக்கும் உண்டுகொலோ
மற்பொலி தோளான் இராவணன்

றன்வலி வாட்டுவித்த
பொற்கழ லானடித் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.
4.102.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.103 திருவாரூர் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

986 வேம்பினைப் பேசி விடக்கினை

யோம்பி வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந்

துணையென் றிருத்திர்தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர்

அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித்

தொண்டுபட் டுய்ம்மின்களே.
4.103.1

987ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன்

ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி

உத்திரம் பாற்படுத்தா
னாரூர் நறுமலர் நாதன்

அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால் திருவிளக் கிட்டமை

நீணா டறியுமன்றே.
4.103.2

988பூம்படி மக்கலம் பொற்படி

மக்கலம் என்றிவற்றால்
ஆம்படி மக்கல மாகிலும்

ஆரூர் இனிதமர்ந்தார்
தாம்படி மக்கலம் வேண்டுவ

ரேல்தமிழ் மாலைகளால்
நாம்படி மக்கலஞ் செய்து

தொழுதுய் மடநெஞ்சமே.
4.103.3

989துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத்

துளங்கா மதியணிந்து
முடித்தொண்ட ராகி முனிவர்

பணிசெய்வ தேயுமன்றிப்
பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர்

பாதம் பொறுத்தபொற்பால்
அடித்தொண்டன் நந்தியென் பானுளன்

ஆரூர் அமுதினுக்கே.
4.103.4

990கரும்பு பிடித்தவர் காயப்பட்

டாரங்கோர் கோடலியால்
இரும்பு பிடித்தவர் இன்புறப்

பட்டார் இவர்கள்நிற்க
அரும்பவிழ் தண்பொழில் சூழணி

ஆரூர் அமர்ந்தபெம்மான்
விரும்பு மனத்தினை யாதொன்று

நானுன்னை வேண்டுவனே.
4.103.5

991கொடிகொள் விதானங் கவரி

பறைசங்கங் கைவிளக்கோ
டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர்

எய்தியும் ஊனமில்லா
அடிகளும் ஆரூர் அகத்தின

ராயினும் அந்தவளப்
பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு

நந்தி புறப்படிலே.
4.103.6

இப்பதிகத்தில் 7,8,9-ம்செய்யுட்கள் சிதைந்து போயின.
4.103.7-8

992சங்கொலிப் பித்திடு மின்சிறு

காலைத் தடவழலில்
குங்கிலி யப்புகைக் கூட்டென்றுங்

காட்டி இருபதுதோள்
அங்குலம் வைத்தவன் செங்குரு

திப்புன லோடஅஞ்ஞான்
றங்குலி வைத்தான் அடித்தா

மரையென்னை ஆண்டனவே.
4.103.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.104 திருநாகைக்காரோணம் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

993 வடிவுடை மாமலை மங்கைபங்

காகங்கை வார்சடையாய்
கடிகமழ் சோலை சுலவு

கடல்நாகைக் காரோணனே
பிடிமத வாரணம் பேணுந்

துரகநிற் கப்பெரிய
இடிகுரல் வெள்ளெரு தேறுமி

தென்னைகொல் எம்மிறையே.
4.104.1

994கற்றார் பயில்கடல் நாகைக்கா

ரோணத்தெங் கண்ணுதலே
விற்றாங் கியகரம் வேல்நெடுங்

கண்ணி வியன்கரமே
நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித்

தகர நின்கரமே
செற்றார் புரஞ்செற்ற சேவக

மென்னைகொல் செப்புமினே.
4.104.2

995தூமென் மலர்க்கணை கோத்துத்தீ

வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த

கடல்நாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவா

யவென்னும் அஞ்செழுத்துஞ்
சாமன் றுரைக்கத் தருதிகண்

டாயெங்கள் சங்கரனே.
4.104.3

996பழிவழி யோடிய பாவிப்

பறிதலைக் குண்டர்தங்கள்
மொழிவழி யோடி முடிவேன்

முடியாமைக் காத்துக்கொண்டாய்
கழிவழி யோதம் உலவு

கடல்நாகைக் காரோணவென்
வழிவழி யாளாகும் வண்ணம்

அருளெங்கள் வானவனே.
4.104.4

997செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை

வெண்ணகைத் தேமொழியார்
வந்து வலஞ்செய்து மாநட

மாட மலிந்தசெல்வக்
கந்த மலிபொழில் சூழ்கடல்

நாகைக்கா ரோணமென்றுஞ்
சிந்தைசெய் வாரைப் பிரியா

திருக்குந் திருமங்கையே.
4.104.5

998பனைபுரை கைம்மத யானை

யுரித்த பரஞ்சுடரே
கனைகடல் சூழ்தரு நாகைக்கா

ரோணத்தெங் கண்ணுதலே
மனைதுறந் தல்லுணா வல்லமண்

குண்டர் மயக்கைநீக்கி
எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி

யான்செயும் இச்சைகளே.
4.104.6

999சீர்மலி செல்வம் பெரிதுடை

யசெம்பொன் மாமலையே
கார்மலி சோலை சுலவு

கடல்நாகைக் காரோணனே
வார்மலி மென்முலை யார்பலி

வந்திடச் சென்றிரந்து
ஊர்மலி பிச்சைகொண் டுண்பது

மாதிமை யோவுரையே.
4.104.7

1000 வங்கம் மலிகடல் நாகைக்கா

ரோணத்தெம் வானவனே
எங்கள் பெருமானோர் விண்ணப்பம்

உண்டது கேட்டருளீர்
கங்கை சடையுட் கரந்தாயக்

கள்ளத்தை மெள்ளவுமை
நங்கை அறியிற்பொல் லாதுகண்டா

யெங்கள் நாயகனே.
4.104.8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று.
4.104.9

1001 கருந்தடங் கண்ணியுந் தானுங்

கடல்நாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை யென்றிறைஞ்

சாதன் றெடுக்கலுற்றான்
பெருந்தலை பத்தும் இருபது

தோளும் பிதிர்ந்தலற
இருந்தரு ளிச்செய்த தேமற்றுச்

செய்திலன் எம்மிறையே.
4.104.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.105 திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

1002 மாசிலொள் வாள்போல் மறியும்

மணிநீர்த் திரைத்தொகுதி
ஊசலை யாடியங் கொண்சிறை

அன்னம் உறங்கலுற்றால்
பாசறை நீலம் பருகிய

வண்டுபண் பாடல்கண்டு
வீசுங் கெடில வடகரைத்

தேயெந்தை வீரட்டமே.
4.105.1

1003 பைங்காற் றவளை பறைகொட்டப்

பாசிலை நீர்ப்படுகர்
அங்காற் குவளைமேல் ஆவி

உயிர்ப்ப அருகுலவுஞ்
செங்காற் குருகிவை சேருஞ்

செறிகெடி லக்கரைத்தே
வெங்காற் குருசிலை வீரன்

அருள்வைத்த வீரட்டமே.
4.105.2

1004 அம்மலர்க் கண்ணியர் அஞ்சனஞ்

செந்துவர் வாயிளையார்
வெம்முலைச் சாந்தம் விலைபெறு

மாலை யெடுத்தவர்கள்
தம்மருங் கிற்கிரங் கார்தடந்

தோள்மெலி யக்குடைவார்
விம்மு புனற்கெடி லக்கரைத்

தேயெந்தை வீரட்டமே.
4.105.3

1005 மீனுடைத் தண்புனல் வீரட்ட

ரேநும்மை வேண்டுகின்ற
தியானுடைச் சில்குறை ஒன்றுள

தால்நறுந் தண்ணெருக்கின்
தேனுடைக் கொன்றைச் சடையுடைக்

கங்கைத் திரைதவழுங்
கூனுடைத் திங்கட் குழவியெப்

போதுங் குறிக்கொண்மினே.
4.105.4

1006 ஆரட்ட தேனும் இரந்துண்

டகமக வன்றிரிந்து
வேரட்ட நிற்பித் திடுகின்ற

தால்விரி நீர்ப்பரவைச்
சூரட்ட வேலவன் தாதையைச்

சூழ்வய லாரதிகை
வீரட்டத் தானை விரும்பா

வரும்பாவ வேதனையே.
4.105.5

1007 படர்பொற் சடையும் பகுவாய்

அரவும் பனிமதியுஞ்
சுடலைப் பொடியு மெல்லா

முளவேயவர் தூயதெண்ணீர்க்
கெடிலக் கரைத்திரு வீரட்ட

ராவர்கெட் டேனடைந்தார்
நடலைக்கு நற்றுணை யாகுங்கண்

டீரவர் நாமங்களே.
4.105.6

1008 காளங் கடந்ததோர் கண்டத்த

ராகிக் கண்ணார்கெடில
நாளங் கடிக்கோர் நகரமு

மாதிற்கு நன்கிசைந்த
தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு

மியாழ்கொண்டுந் தாமங்ஙனே
வேடங்கள் கொண்டும் விசும்புசெல்

வாரவர் வீரட்டரே.
4.105.7

இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் மறைந்து போயின.
4.105.8-10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.106 திருப்புகலூர் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

1009 தன்னைச் சரணென்று தாளடைந்

தேன்றன் அடியடையப்
புன்னைப் பொழிற்புக லூரண்ணல்

செய்வன கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினை

கட்டறுத் தேழ்நரகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ

லோகத் திருத்திடுமே.
4.106.1

1010 பொன்னை வகுத்தன்ன மேனிய

னேபுணர் மென்முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்தனே

தமியேற் கிரங்காய்
புன்னை மலர்த்தலை வண்டுறங்

கும்புக லூரரசே
என்னை வகுத்திலை யேலிடும்

பைக்கிடம் யாதுசொல்லே.
4.106.2

இப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
4.106.3

1011 பொன்னள வார்சடைக் கொன்றையி

னாய்புக லூர்க்கரசே
மன்னுள தேவர்கள் தேடு

மருந்தே வலஞ்சுழியாய்
என்னள வேயுனக் காட்பட்

டிடைக்கலத் தேகிடப்பார்
உன்னள வேயெனக் கொன்றுமி

ரங்காத உத்தமனே.
4.106.4

இப்பதிகத்தில் 5,6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
4.106.5-9

1012 ஓணப் பிரானும் ஒளிர்மா

மலர்மிசை உத்தமனுங்
காணப் பராவியுங் காண்கின்

றிலர்கர நாலைந்துடைத்
தோணற் பிரானை வலிதொலைத்

தோன்தொல்லை நீர்ப்புகலூர்க்
கோணப் பிரானைக் குறுகக்

குறுகா கொடுவினையே.
4.106.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.107 திருக்கழிப்பாலை - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

1013 நெய்தற் குருகுதன் பிள்ளையென்

றெண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடற்புல்கு தென்கழிப்

பாலை யதனுறைவாய்
பைதற் பிறையொடு பாம்புடன்

வைத்த பரிசறியோம்
எய்தப் பெறின்இரங் காதுகண்

டாய்நம் மிறையவனே.
4.107.1

1014 பருமா மணியும் பவளமுத்

தும்பரந் துந்திவரை
பொருமால் கரைமேற் றிரைகொணர்ந்

தெற்றப் பொலிந்திலங்குங்
கருமா மிடறுடைக் கண்டனெம்

மான்கழிப் பாலையெந்தை
பெருமா னவனென்னை யாளுடை

யானிப் பெருநிலத்தே.
4.107.2

1015 நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற்

றிங்கு நமன்தமராற்
கோட்பட் டொழிவதன் முந்துற

வேகுளி ரார்தடத்துத்
தாட்பட்ட தாமரைப் பொய்கையந்

தண்கழிப் பாலையண்ணற்
காட்பட் டொழிந்தவன் றேவல்ல

மாயிவ் வகலிடத்தே.
4.107.3

இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.
4.107.4-10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.108 திருக்கடவூர் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

1016 மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த

மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவாள்

எயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம்

பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட

வூருறை உத்தமனே.
4.108.1

1017 பதத்தெழு மந்திரம் அஞ்செழுத்

தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணிதன் இன்னுயிர்

உண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு

திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட

வூருறை உத்தமனே.
4.108.2

1018 கரப்புறு சிந்தையர் காண்டற்

கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற்

கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன்

காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட

வூருறை உத்தமனே.
4.108.3

1019 மறித்திகழ் கையினன் வானவர்

கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணிதன் ஆருயிர்

கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக்

காலனைத் தானலற
உறுக்கிய சேவடி யான்கட

வூருறை உத்தமனே.
4.108.4

1020 குழைத்திகழ் காதினன் வானவர்

கோனைக் குளிர்ந்தெழுந்து
பழக்கமோ டர்ச்சித்த மாணிதன்

ஆருயிர் கொள்ளவந்த
தழற்பொதி மூவிலை வேலுடைக்

காலனைத் தானலற
உழக்கிய சேவடி யான்கட

வூருறை உத்தமனே.
4.108.5

1021 பாலனுக் காயன்று பாற்கடல்

ஈந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரண

மோதி அருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு

தொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்த பிரான்கட

வூருறை உத்தமனே.
4.108.6

1022 படர்சடைக் கொன்றையும் பன்னக

மாலை பணிகயிறா
உடைதலைக் கோத்துழல் மேனியன்

உண்பலிக் கென்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக்

காலனைத் துண்டமதா
உடறிய சேவடி யான்கட

வூருறை உத்தமனே.
4.108.7

1023 வெண்டலை மாலையுங் கங்கைக்

கரோடி விரிசடைமேற்
பெண்டனி நாயகன் பேயுகந்

தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனைக்

காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்தபி ரான்கட

வூருறை உத்தமனே.
4.108.8

1024 கேழல தாகிக் கிளறிய

கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந்

திட்டவம் மாலவற்கன்
றாழியும் ஈந்து அடுதிறற்

காலனை அன்றடர்த்து
ஊழியு மாய பிரான்கட

வூருறை உத்தமனே.
4.108.9

1025 தேன்றிகழ் கொன்றையுங் கூவிள

மாலை திருமுடிமேல்
ஆன்றிகழ் ஐந்துகந் தாடும்

பிரான்மலை ஆர்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி

பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட

வூருறை உத்தமனே.
4.108.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.109 திருமாற்பேறு - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

முதலிரு செய்யுட்கள் சிதைந்து போயின
4.109.1-2

1026 மாணிக் குயிர்பெறக் கூற்றை

யுதைத்தன மாவலிபால்
காணிக் கிரந்தவன் காண்டற்

கரியன கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப்

படுவன பேர்த்துமஃதே
மாணிக்க மாவன மாற்பே

றுடையான் மலரடியே.
4.109.3

1027 கருடத் தனிப்பாகன் காண்டற்

கரியன காதல்செய்யிற்
குருடர்க்கு முன்னே குடிகொண்

டிருப்பன கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன்

செங்கம லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பே

றுடையான் மலரடியே.
4.109.4

இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.
4.109.5-10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.110 திருத்தூங்கானைமாடம் - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

1028 பொன்னார் திருவடிக் கொன்றுண்டு

விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண்

டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென்

மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை

மாடச் சுடர்க்கொழுந்தே.
4.110.1

1029 ஆவா சிறுதொண்ட னென்நினைந்

தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன்

மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப்

பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுள் தூங்கானை

மாடத்தெம் புண்ணியனே.
4.110.2

இப்பதிகத்தில் 3,4,5,6,7,8,9-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின.
4.110.3-9

1030 கடவுந் திகிரி கடவா

தொழியக் கயிலையுற்றான்
படவுந் திருவிர லொன்றுவைத்

தாய்பனி மால்வரைபோல்
இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள்

ளாயிருஞ் சோலைதிங்கள்
தடவுங் கடந்தையுள் தூங்கானை

மாடத்தெந் தத்துவனே.
4.110.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.111 பசுபதி - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

1031 சாம்பலைப் பூசித் தரையிற்

புரண்டுநின் றாள்பரவி
ஏம்பலிப் பார்கட் கிரங்குகண்

டாயிருங் கங்கையென்னுங்
காம்பலைக் கும்பணைத் தோளி

கதிர்ப்பூண் வனமுலைமேற்
பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை

யாளும் பசுபதியே.
4.111.1

1032 உடம்பைத் தொலைவித்துன் பாதந்

தலைவைத்த உத்தமர்கள்
இடும்பைப் படாமல் இரங்குகண்

டாயிரு ளோடச்செந்தீ
அடும்பொத் தனைய அழன்மழு

வாவழ லேயுமிழும்
படம்பொத் தரவரை யாயெம்மை

யாளும் பசுபதியே.
4.111.2

1033 தாரித் திரந்தவி ராவடி

யார்தடு மாற்றமென்னும்
மூரித் திரைப்பௌவ நீக்குகண்

டாய்முன்னை நாளொருகால்
வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை

வேள்வெந்து வீழச்செந்தீப்
பாரித்த கண்ணுடை யாயெம்மை

யாளும் பசுபதியே.
4.111.3

1034 ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன்

பாத மிறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்விகண்

டாயண்ட மேயணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப்

பிளந்துவேய்த் தோளியஞ்சப்
பருவரைத் தோலுரித் தாயெம்மை

யாளும் பசுபதியே.
4.111.4

1035 இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன்

பாத மிறைஞ்சுகின்றார்க்
கடர்க்கின்ற நோயை விலக்குகண்

டாயண்டம் எண்டிசையுஞ்
சுடர்த்திங்கள் சூடிச் சுழற்கங்கை

யோடுஞ் சுரும்புதுன்றிப்
படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை

யாளும் பசுபதியே.
4.1115

1036 அடலைக் கடல்கழி வான்நின்

னடியிணை யேயடைந்தார்
நடலைப் படாமை விலக்குகண்

டாய்நறுங் கொன்றை திங்கள்
சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ்

சூளா மணிகிடந்து
படரச் சுடர்மகு டாயெம்மை

யாளும் பசுபதியே.
4.111.6

1037துறவித் தொழிலே புரிந்துன்

சுரும்படி யேதொழுவார்
மறவித் தொழிலது மாற்றுகண்

டாய்மதின் மூன்றுடைய
அறவைத் தொழில்புரிந் தந்தரத்

தேசெல்லு மந்திரத்தேர்ப்
பறவைப் புரமெரித் தாயெம்மை

யாளும் பசுபதியே.
4.111.7

இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
4.111.8-9

1038 சித்தத் துருகிச் சிவனெம்

பிரானென்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின்

றார்பிணி தீர்த்தருளாய்
மத்தத் தரக்கன் இருபது

தோளு முடியுமெல்லாம்
பத்துற் றுறநெரித் தாயெம்மை

யாளும் பசுபதியே.
4.111.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.112 சரக்கறை - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

1039 விடையும் விடைப்பெரும் பாகாவென்

விண்ணப்பம் வெம்மழுவாட்
படையும் படையாய் நிரைத்தபல்

பூதமும் பாய்புலித்தோல்
உடையு முடைதலை மாலையும்

மாலைப் பிறையொதுங்குஞ்
சடையு மிருக்குஞ் சரக்கறை

யோவென் றனிநெஞ்சமே.
4.112.1

1040 விஞ்சத் தடவரை வெற்பாவென்

விண்ணப்பம் மேலிலங்கு
சங்கக் கலனுஞ் சரிகோ

வணமுந் தமருகமும்
அந்திப் பிறையும் அனல்வா

யரவும் விரவியெல்லாஞ்
சந்தித் திருக்குஞ் சரக்கறை

யோவென் றனிநெஞ்சமே.
4.112.2

1041 வீந்தார் தலைகல னேந்தீயென்

விண்ணப்பம் மேலிலங்கு
சாந்தாய வெந்த தவளவெண்

ணீறுந் தகுணிச்சமும்
பூந்தா மரைமேனிப் புள்ளி

யுழைமா னதள்புலித்தோல்
தாந்தா மிருக்குஞ் சரக்கறை

யோவென் றனிநெஞ்சமே.
4.112.3

1042 வெஞ்சமர் வேழத் துரியாயென்

விண்ணப்பம் மேலிலங்கு
வஞ்சமா வந்த வருபுனற்

கங்கையும் வான்மதியும்
நஞ்சமா நாகம் நகுசிர

மாலை நகுவெண்டலை
தஞ்சமா வாழுஞ் சரக்கறை

யோவென் றனிநெஞ்சமே.
4.112.4

1043 வேலைக் கடல்நஞ்ச முண்டாயென்

விண்ணப்பம் மேலிலங்கு
காலற் கடந்தா னிடங்கயி

லாயமுங் காமர்கொன்றை
மாலைப் பிறையும் மணிவா

யரவும் விரவியெல்லாஞ்
சாலக் கிடக்குஞ் சரக்கறை

யோவென் றனிநெஞ்சமே.
4.112.5

1044 வீழிட்ட கொன்றையந் தாராயென்

விண்ணப்பம் மேலிலங்கு
சூழிட் டிருக்குநற் சூளா

மணியுஞ் சுடலைநீறும்
ஏழிட் டிருக்குநல் லக்கு

மரவுமென் பாமையோடுந்
தாழிட் டிருக்குஞ் சரக்கறை

யோவென் றனிநெஞ்சமே.
4.112.6

1045 விண்டார் புரமூன்று மெய்தாயென்

விண்ணப்பம் மேலிலங்கு
தொண்டா டியதொண் டடிப்பொடி

நீறுந் தொழுதுபாதங்
கண்டார்கள் கண்டிருக் குங்கயி

லாயமுங் காமர்கொன்றைத்
தண்டார் இருக்குஞ் சரக்கறை

யோவென் றனிநெஞ்சமே.
4.112.7

1046 விடுபட்டி ஏறுகந் தேறீயென்

விண்ணப்பம் மேலிலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை

குழல்தாளம் வீணைமொந்தை
வடுவிட்ட கொன்றையும் வன்னியும்

மத்தமும் வாளரவுந்
தடுகுட்ட மாடுஞ் சரக்கறை

யோவென் றனிநெஞ்சமே.
4.112.8

1047 வெண்டிரைக் கங்கை விகிர்தாவென்

விண்ணப்பம் மேலிலங்கு
கண்டிகை பூண்டு கடிசூத்

திரமேற் கபாலவடங்
குண்டிகை கொக்கரை கோணற்

பிறைகுறட் பூதப்படை
தண்டிவைத் திட்ட சரக்கறை

யோவென் றனிநெஞ்சமே.
4.112.9

1048 வேதித்த வெம்மழு வாளீயென்

விண்ணப்பம் மேலிலங்கு
சோதித் திருக்குநற் சூளா

மணியுஞ் சுடலைநீறும்
பாதிப் பிறையும் படுதலைத்

துண்டமும் பாய்புலித்தோல்
சாதித் திருக்குஞ் சரக்கறை

யோவென் றனிநெஞ்சமே.
4.112.10

1049 விவந்தா டியகழல் எந்தாயென்

விண்ணப்பம் மேலிலங்கு
தவந்தா னெடுக்கத் தலைபத்

திறுத்தனை தாழ்புலித்தோல்
சிவந்தா டியபொடி நீறுஞ்

சிரமாலை சூடிநின்று
தவந்தா னிருக்குஞ் சரக்கறை

யோவென் றனிநெஞ்சமே.
4.112.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.113 தனி - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

1050 வெள்ளிக் குழைத்துணி போலுங்

கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரி

நூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை

சூடிவெள் ளென்பணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம்

பூசிய வேதியனே.
4.113.1

1051 உடலைத் துறந்துல கேழுங்

கடந்துல வாததுன்பக்
கடலைக் கடந்துய்யப் போயிட

லாகுங் கனகவண்ணப்
படலைச் சடைப்பர வைத்திரைக்

கங்கை பனிப்பிறைவெண்
சுடலைப் பொடிக்கட வுட்கடி

மைக்கண் துணிநெஞ்சமே.
4.113.2

1052 முன்னே யுரைத்தால் முகமனே

யொக்குமிம் மூவுலகுக்
கன்னையும் அத்தனு மாவா

யழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியுமென்

னாவி கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாயெம்

பிரானுன்னை வேண்டியதே.
4.113.3

1053 நின்னையெப் போது நினையலொட்

டாய்நீ நினையப்புகிற்
பின்னையப் போதே மறப்பித்துப்

பேர்த்தொன்று நாடுவித்தி
உன்னையெப் போதும் மறந்திட்

டுனக்கினி தாயிருக்கும்
என்னையொப் பாருள ரோசொல்லு

வாழி இறையவனே.
4.113.4

1054 முழுத்தழல் மேனித் தவளப்

பொடியன் கனகக்குன்றத்
தெழிற்பெருஞ் சோதியை எங்கள்

பிரானை யிகழ்ந்திர்கண்டீர்
தொழப்படுந் தேவர் தொழப்படு

வானைத் தொழுதபின்னை
தொழப்படுந் தேவர்தம் மால்தொழு

விக்குந்தன் தொண்டரையே.
4.113.5

1055 விண்ணகத் தான்மிக்க வேதத்

துளான்விரி நீருடுத்த
மண்ணகத் தான்திரு மாலகத்

தான்மரு வற்கினிய
பண்ணகத் தான்பத்தர் சித்தத்

துளான்பழ நாயடியேன்
கண்ணகத் தான்மனத் தான்சென்னி

யானெங் கறைக்கண்டனே.
4.113.6

1056 பெருங்கடல் மூடிப் பிரளயங்

கொண்டு பிரமனும்போய்
இருங்கடல் மூடி இறக்கும்

இறந்தான் களேபரமுங்
கருங்கடல் வண்ணன் களேபர

முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை

நல்வீணை வாசிக்குமே.
4.113.7

1057 வானந் துளங்கிலென் மண்கம்ப

மாகிலென் மால்வரையுந்
தானந் துளங்கித் தலைதடு

மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர்

வீழிலென் வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக்

காட்பட்ட உத்தமர்க்கே.
4.113.8

1058 சிவனெனும் நாமந் தனக்கே

யுடையசெம் மேனியெம்மான்
அவனெனை ஆட்கொண் டளித்திடு

மாகில் அவன்றனையான்
பவனெனு நாமம் பிடித்துத்

திரிந்துபன் னாளழைத்தால்
இவனெனைப் பன்னாள் அழைப்பொழி

யானென் றெதிர்ப்படுமே.
4.113.9

1059 என்னையொப் பாருன்னை எங்ஙனம்

காண்பர் இகலியுன்னை
நின்னையொப் பார்நின்னைக் காணும்

படித்தன்று நின்பெருமை
பொன்னையொப் பாரித் தழலை

வளாவிச்செம் மானஞ்செற்று
மின்னையொப் பார மிளிருஞ்

சடைக்கற்றை வேதியனே.
4.113.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4.114 தனி - திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

1060 பவளத் தடவரை போலுந்திண்

டோ ள்களத் தோள்மிசையே
பவளக் குழைதழைத் தாலொக்கும்

பல்சடை அச்சடைமேற்
பவளக் கொழுந்தன்ன பைம்முக

நாகமந் நாகத்தொடும்
பவளக்கண் வால மதியெந்தை

சூடும் பனிமலரே.
4.114.1

1061 முருகார் நறுமலர் இண்டை

தழுவிவண் டேமுரலும்
பெருகா றடைசடைக் கற்றையி

னாய்பிணி மேய்ந்திருந்த
இருகாற் குரம்பை யிதுநா

னுடைய திதுபிரிந்தாற்
தருவாய் எனக்குன் திருவடிக்

கீழோர் தலைமறைவே.
4.114.2

1062 மூவா உருவத்து முக்கண்

முதல்வமீக் கூரிடும்பை
காவா யெனக்கடை தூங்கு

மணியைக்கை யாலமரர்
நாவா யசைத்த வொலியொலி

மாறிய தில்லையப்பாற்
தீயாய் எரிந்து பொடியாய்க்

கழிந்த திரிபுரமே.
4.114.3

1063 பந்தித்த பாவங்கள் அம்மையிற்

செய்தன இம்மைவந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பதென்

னேவந் தமரர்முன்னாள்
முந்திச் செழுமல ரிட்டு

முடிதாழ்த் தடிவணங்கும்
நந்திக்கு முந்துற ஆட்செய்கி

லாவிட்ட நன்னெஞ்சமே.
4.114.4

1064 அந்திவட் டத்திளங் கண்ணிய

னாறமர் செஞ்சடையான்
புந்திவட் டத்திடைப் புக்குநின்

றானையும் பொய்யென்பனோ
சந்திவட் டச்சடைக் கற்றை

யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை

வளாவிய நம்பனையே.
4.114.5

1065 உன்மத் தகமலர் சூடி

உலகந் தொழச்சுடலைப்
பன்மத் தகங்கொண்டு பல்கடை

தோறும் பலிதிரிவான்
என்மத் தகத்தே இரவும்

பகலும் பிரிவரியான்
தன்மத் தகத்தோர் இளம்பிறை

சூடிய சங்கரனே.
4.114.6

1066 அரைப்பா லுடுப்பன கோவணச்

சின்னங்கள் ஐயமுணல்
வரைப்பாவை யைக்கொண்ட தெக்குடி

வாழ்க்கைக்கு வானிரைக்கும்
இரைப்பா படுதலை யேந்துகை

யாமறை தேடுமெந்தாய்
உரைப்பார் உரைப்பன வேசெய்தி

யாலெங்கள் உத்தமனே.
4.114.7

1067 துறக்கப் படாத உடலைத்

துறந்துவெந் தூதுவரோ
டிறப்பன் இறந்தால் இருவிசும்

பேறுவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி

வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங்

கிடந்து மறுகிடுமே.
4.114.8

1068 வேரி வளாய விரைமலர்க்

கொன்றை புனைந்தனகன்
சேரி வளாயவென் சிந்தை

புகுந்தான் திருமுடிமேல்
வாரி வளாய வருபுனற்

கங்கை சடைமறிவாய்
ஏரி வளாவிக் கிடந்தது

போலும் இளம்பிறையே.
4.114.9

1069 கன்னெடுங் காலம் வெதும்பிக்

கருங்கடல் நீர்சுருங்கிப்
பன்னெடுங் காலம் மழைதான்

மறுக்கினும் பஞ்சமுண்டென்
றென்னொடுஞ் சூளறும் அஞ்சல்நெஞ்

சேயிமை யாதமுக்கண்
பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண்

டீரிப் புகலிடத்தே.
4.114.10

1070 மேலு மறிந்திலன் நான்முகன்

மேற்சென்று கீழிடந்து
மாலு மறிந்திலன் மாலுற்ற

தேவழி பாடுசெய்யும்
பாலன் மிசைச்சென்று பாசம்

விசிறி மறிந்தசிந்தைக்
கால னறிந்தான் அறிதற்

கரியான் கழலடியே.
4.114.11


திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
நான்காம் திருமுறை முற்றும்.


This webpage was last updated on 25 July 2003