Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" (3332-3408)
பகுதி 33-1 : பட்டீச்சுரப்புராணம்
பகுதி 33-2: திருவரன்குளப்புராணம்

Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - 33-1 (3332-3408)
part 33-1: paTTIcap purANam (incomplete work)
part 33-2: tiruvarankuLap purANam (incomplete work
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany
    for providing us with a photocopy of the work.
    Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
    We thank the following persons in the preparation and proof-reading of the etext:
    Senthan Swaminathan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan,
    Venkatesh Jambulingam, D Ganesan and Subbu
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2010.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    http://www.projectmadurai.org/

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 1 (3332- 3369)
பட்டீச்சுரப்புராணம் **



    கணபதி துணை
    திருச்சிற்றம்பலம்

    ** பிள்ளையவர்கள் இயற்றத்தொடங்கிய நூல்களிற்சில அபூர்த்தியாகவே
    நின்றுவிட்டனவென்பது பலர்க்கும் தெரிந்ததே. அவற்றுள், கிடைத்தவை
    பதிப்பிக்கப்படுகின்றன.
    ----------------
    கடவுள் வாழ்த்து



    3332 - விநாயகர்.
    பூமேவு குழைச்செவிதம் புடையினெழு கடாங்கவரும் பொருட்டு மேன்மேற்,
    றாமேவு வண்டரெலாந் துரப்பவகத் தொரு கருவி தகக்கொண் டாங்கு,
    மாமேவு பொன்பொதிந்த காற்கவரி தூங் கியொளி வயங்க மேவுங்,
    காமேவு மைந்தடக்கை யானைமுகப் பெரு மானைக் கருத்துள் வைப்பாம். - 1


    3333 - ஆணைவிநாயகர்.
    சீர்பூத்த பலபுவனத் தெவ்வுயிரு முனிவறத்தஞ் சிரமேற்கோட,
    லார்பூத்த நமதாணை யெனறெரிப்ப வாணைவிநா யகரென் றோர்பேர்,
    நீர்பூத்த குணத்தமைந்து வன்னியடிப் பொடிமூடு நெருப்பு மான,
    வேர்பூத்த செம்மேனி வெண்ணீற்றோ டமர்பவர்தா ளிறைஞ்சி வாழ்வாம். - 2


    3334 - மதவாரணப்பிள்ளையார்.
    நாமதவா ரணங்குறித்த படிகொடுதீ வளர்த்துமென நவிலுந் தக்க,
    நாமதவா ரணங்குசிவ மிகப்பினென வுங்கொள்ளா னண்ணு மாற்றண்,
    ணாமதவா ரணங்குமிறுந் தடப்பட்டீச் சரம்புகுந்து நலியச் செய்தா,
    நாமதவா ரணங்குளிர்பூந் தாளருள வின்பநல நண்ணினேமால். - 3


    3335 - பட்டீசர்.
    மாமேவு பண்ணவரு மெண்ணவரு மகவானு மறைநூ லாய
    பாமேவு நாவலனுங் காவலனு முனிவரரும் பகர்மற் றோருங்
    காமேவு பன்மலரு மென்மலரும் படியிறைப்பக் காட்சி நல்கு
    தாமேவு திருவுருவோ ரெட்டீசர் பட்டீசர் சரணஞ் சார்வாம். - 4


    3336 - வெளியுறலுட் புகலின்றிக் களத்துநடு வமர்தருவெவ் விடமு நாளு,
    மிளிகிளர்பெண் ணுருவமுமா ணுருவமுமா கியவுருவு மருண்மு கத்தே,
    யொளிர்விழிக ளொடுநுதல்சான் முரண்விழியுந் தன்பெருமை யுணர்த்த வோவாத்,
    தெளிகிளர்பட் டீசம்வளர் பட்டிலிங்கப் பெருமான்றாள் சேர்ந்து வாழ்வாம். - 5


    3337 - ஞானாம்பிகை.
    நயனநுதல் பன்னிறத்த வயனரியா தியர்பலரு நயக்குமாறு,
    வியனமைய வேற்றிடவும் வேறுநிற முறாவனையான் மேனியேபோற்,
    பயனமையும் வெண்மகளுஞ் செம்மகளுங் கலக்கவுந்தம் பண்பு மாறாக்,
    கயன்மருள்கட் பல்வளைக்கைக் காமருஞா னாம்பிகைதாள் கருத்துள் வைப்பாம். - 6


    3338 - வண்ணிறங்கொள் பன்மலர்மா மகண்முதலோ ரிறைத் திடலால் வதிப ராக,
    மொண்ணிறங்கொ ளன்பர்மன மாயாவணுக் குழாஞ்செறிவ துணர்த்துங் காலுந்,
    தண்ணிறங்கொள் பல்லறமுமடைந்துகோ லுபுசெறியுந் தகையு ணர்த்தும்,
    வெண்ணிறங்கொள் பல்வளைக்கை யும்பெறுஞா னாம்பிகைதாண் மேவி வாழ்வாம். - 7


    3339 - சபாபதி.
    வந்துதரி சித்திடுவார் மலமாசு மண்ணவெழு மாண்புபோலச்,
    சிந்துபல சீகரமந் தாகினிவெவ் வினைக்காடு தீத்த லேபோன்
    முந்துசுடர் விட்டெழுசெந் தழலின்மே னோக்கவொளிர் மூவா மன்றி
    னந்துதிரு வருள்பெருக நடநவிலும் பெருமானை நயந்து வாழ்வாம் - 8


    3340 - சிவகாமசுந்தரியம்மை.
    3340.
    தொண்டுகாட் டிடுதிறத்தா லொவ்வொருவ ரனுபவிக்கத் துணிவார் பூமே,
    லண்டுகாட் டிடுபிரம னாதியர்மற் றென்செய்வாரவர்போ லாது,
    பண்டுகாட் டிடுமன்றுட் பரமர்புரி திருநடமாம் பரமா னந்தங்,
    கண்டுகாட் டிடுக்கருணைச் சிவகாம சுந்தரிதாள் கருத்துள்வைப்பாம். - 9


    3341 - தஷிணாமூர்த்தி.
    இருவரா லியற்றிரண்டு மெய்துருவ மெய்தாம லெந்தஞான்று,
    மொருவரா லளப்பருந்தன் னடிமருவி யின்பநிலை யுவப்பயாங்க,
    ளிருவரா லியற்றிரண்டு மெய்தாத திருவுருவ மெய்தி நாளு,
    மொருவரா லளப்பருமா லடிமருவும் பெருமானை யுளங்கொள்வாமால். - 10


    3342 - வைரவக்கடவுள்.
    அரிவிதிசே வித்திடுகாற் கையுளதென் னெனவிதியையரிவி னாவ,
    விரிதருபுண் டரிகமென வதனகத்தென் னெனவரியை விதிவி னாவப்,
    பிரியமது வெனநகஞ்சூற் றலைச்சிவப்பென்சொற்றிரெனப் பிறர்வி னாவப்,
    பரியசமழ்ப் பவர்கொளச்சூ லமுங்கபாலமுந்தரித்தோன் பாதம் போற்றி. - 11


    3343 - அனுஞ்ஞைவிநாயகர்.
    சடையிலிளம் பிறைபொலிய வதன்சாயை யெனமுகத்தோர் தவளக் கோடு,
    மிடையவொழுக் கமுதெனவெண் ணூலிலங்க வீசியவெண் ணிலவு மான,
    வடையரைவெண் படமிளிர வவ்வொளியை யஞ்சியிரு ளடிவீழ்ந் தென்ன,
    விடைதலிலுந் துருவமைய வளரனுஞை மழகளிற்றை யெண்ணி வாழ்வாம். - 12


    3344 - முருகக்கடவுள்.
    இறவிதபுத் தலையுணர்த்த யமனைவருத் தியதந்தை யெண்ணந் தேர்ந்து,
    பிறவிதபுத் தலையுணர்த்த வயனைவருத் துபுமறைகள் பிதாவுஞ் சேயு,
    மறவிதபுத் துணர்மினந நியரெனறேற் றியகருணை வள்ள லன்ப,
    ருறவிபசு மயிலுகைக்குங் குமாரநா யகன்மலர்த்தாளுள்ளி வாழ்வாம். - 13


    3345 - திருநந்திதேவர். வேறு
    இடையினொற் றொழியச் சூட லெப்பெய ரிறைக்கப் பேரே
    யடைதரு தனக்கு மாக்கி யவன்பணி முடியிற் றாங்கிக்
    கடையரேம் பணியு மங்கோ கனகநே ரடியிற் றாங்கு
    முடையனெங் குரவர் முன்னோ னருளடைந் துய்வார் மேலோர். - 14


    3346 - அகத்தியமுனிவர்.
    வரையரத் தழுந்த வாழி வற்றமால் சிவமாக் காணப்
    புரையுதள் பதும மாகப் பொலியொரு கரத்தா லாற்றிக்
    கரைநகை முதலாற் றெவ்வைக் கடப்பவ னிலுஞ்சீர் வாய்ந்து
    தரைபுகழ் பொதியில் வாழ்செந் தமிழ்முனிக் கடிமை செய்வாம். - 16


    3347 - திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்.
    இறையரு ளதனா லூர்தி யெய்தியு நீழல் செய்யு
    முறையதொன் றெய்தி லேமென் றயனொடு முகுந்த னாணக்
    குறைவிலாச் சிவிகை யோடு பந்தருங் குலவப் பெற்ற
    நிறைவுசால் காழி ஞானப் பிள்ளைதா ணினைந்து வாழ்வாம் - 16


    3348 - திருநாவுக்கரசுநாயனார்.
    விடமெழ வெறுப்பு வைத்தா ரமுதெழ விருப்பஞ் செய்த
    கடவுள ரயன்மா னாணக் கையரப் பூதி யிட்ட
    வடர்விட மமுத மள்ளி யள்ளியுண் டளவா வின்பத்
    தொடர்பமைந் தொளிர்வா கீசர் துணையடி போற்றி செய்வாம். - 17


    3349 - சுந்தரமூர்த்திநாயனார்.
    மறையவ னெனும்பேர் பெற்றேன் மன்னவ னெனும்பேர் பெற்றே,
    னிறையவன் புகழ்யா வர்க்குண் டென்றயன் முகுந்தனாண,
    முறைமறை மறையோ னென்று மொழிவதற் கேற்பத் தூது,
    கறைமிடற் றவனைப் போக்கு நம்பிதாள் கருதி வாழ்வாம். - 18


    3350 - திருவாதவூரடிகள்.
    கரைசெயு மசுத்த மாயா காரிய மணியொன் றேற்று
    வரைகொடன் மார்பில் வைத்த மால்சமழ்ப் புறவெண் ணில்லா
    வுரையெனுஞ் சுத்த மாயா காரிய மணிக ளோவாப்
    பரையிடப் பெருமா னுக்குச் சூட்டினார் பாதம் போற்றி. - 19


    3351 - சண்டேசநாயனார்.
    புரைதபு மன்பி னோர்பாற் புறமகங் கரையும் பெம்மான்
    விரைகம ழாத்தி நீழற் புறங்கரை யாமன் மேவி
    வரையென விருப்ப வான்பால் வரையறு குடங்கொண் டாட்டித்
    தரைபுக ழின்பந் துய்த்த மழவுதாள் சார்ந்து வாழ்வாம். - 20


    3352 - அறுபத்துமூவர்.
    மறைமுதற் கலைக டேறா மாதேவை யேவல் கொண்ட
    தறைபுகழ் நாவ லூரர் தனித்தனி யடியேன் யானென்
    றறைபெருந் தவத்த ராய வறுபத்து மூவர்க் கெண்ணில்
    குறையுடை யானு மவ்வா றுரைப்பது குணமாங் கொல்லோ. - 21


    3353 - பஞ்சாக்காதேசிகர்.
    புகழிக ழுபய மாய பொழிற்றலை வாழ்க்கை வேண்டே
    மகிழ்மல மாதி தன்னே ரெய்தின ரெய்தா ராக
    வகழ்மதில் தனிகு லாய வாவடு துறைக்கண் மேவித்
    திகழ்குரு நமச்சி வாயன் சேவடி வாழ்க்கை யோமே. - 22


    3354 - அம்பலவாணதேசிகர்.
    நம்பல மாக வைகு ஞானக்கோ முத்தி மேய
    வம்பல வாண தேவ னருளிய பிராசா தத்தால்
    வம்பல சாத மெல்லா மாற்றியா னந்த சாத
    மும்பல மாகப்பெற்றே முதற்குமேற் பெறுவ தென்னே. - 23


    3355 - சுப்பிரமணியதேசிகர். வேறு.
    நன்மைதிகழ் தென்றிருவா வடுதுறைச்சுப் பிரமணிய நமச்சி வாயன்,
    மென்மைமல ரடிப்பணிசெய் விதம்வந்த விப்பிறப்பை வியந்தேன் சற்றும்,
    புன்மையிலிப் பவங்கோடா கோடிவரு மேனுமுளம் புழுங்கே னந்தோ,
    வென்மையவன் பிறவான்மற் றெனையுமவ்வா றியற்றுவன்யா னென்செய் கேனே. - 24


    3356 - திருத்தொண்டுபுரிவோர்.
    சத்திவனப் பட்டீசத் தனிப்பிராற் கியற்றுபணி தலைக்கொண் டாருண்,
    முத்திவளர் திருப்பணியே முதலலகுப் பணியியற்ற முயல்வா ரீறாச்,
    சித்திகொள்யா வருந்திருநீ றணிந்துருத்தி ராக்கமணிதிகழப் பூண்ட,
    புத்திகொள்யா வருங்குழுமி யிருக்கவிடங் கொடுத்திடுமென் புந்தி தானே. - 25


    3357 - ஆக்குவித்தோர்.
    மாமேவு சோணுட்டு வேளாளர் குலதிலகன் வல்லோர் செந்நாப்
    பாமேவு சத்திமுற்ற வாழ்க்கைநமச் சிவாயமுகில் பயந்த மைந்தன்
    காமேவு கொடைத்தடக்கைச் சைவசிகா மணிகல்லிக் கடலா யுள்ளான்
    றூமேவு நயவதுல வாறுமுக பூபால சுகண வள்ளல். - 1


    3358 - வேறு.
    நறைகமழ் கொன்றை மாலை நாயகப் பெருமான் மேய
    மறைபுகழ் திருப்பட் டீச மான்மிய மொழிபெ யர்த்து
    நிறைசுவைத் தமிழாற் பாடி நேயத்திற் கொடுத்தி யென்று
    குறையிரந் தினிது கேட்பப் பாடுதல் குறிக்கொண் டேனால். - 2


    3359 - அவையடக்கம்.
    மறைபல புகழுஞ் சத்தி வனத்ததி விருப்பம் வைத்த
    விறையவ னனைய சத்தி சொரூபமா மென்வாய்ச் சொல்லுங்
    குறையற விரும்பும் வாயின் குற்றமுட் குறியா னீன
    நிறைபார தாவர்கு லப்பெண் ணேயத்தின் மணந்த தோர்ந்தே. - 1


    3360 - 3360.
    குடம்படு செருத்த லான்செய் பூசையைக் குறியாக் கொண்டோன்,
    மடம்படு சுணங்கன் செய்யும் பூசையு மதித்த வாற்றா,
    லிடம்படு பெரியோர் செய்த வின்சுவைப் பாட்டொ டுஞ்சங்,
    கடம்படு சிறியேன் செய்யும் பாடலுங் கைக்கொள் வானால். - 2


    3361 - தொகையிலக் கணஞ்சி தைந்த தொழின்முதலாமோர் மூன்றுந்,
    தொகையிலக் கணங்கே டெய்தாப் பலவொடுந் தொகுத்துக் கொள்வர்,
    வகையிலக் கணமைந் தேலா வறுங்கவி யெனுமான்றோரை,
    வகையிலக் கணமுஞ் சான்ற கவியொடும் வயங்கக் கொள்வார். - 3


    3362 - வில்லெறி புருவ வாட்கண் விளங்கிழை பகிர்ந்த மேனி,
    யல்லெறி கண்டத் தெண்டோ ளண்ணலார் பலரர்ச் சிக்கு, மெல்
    லெறி மலர்க ளோடு மினியதென் றொருவர் வீசுங், கல்லெறி யெற்ற
    தென்சொற் காமுறல் கருதி யன்றோ. - 4


    33638 - அருளமை யொருபா கத்த னையன்மற் றனைய பாகத்,
    தெருளமை செவிவெய் தாமென் செய்யுளைக் கவர்தற் கன்றோ,
    மருளமை மான்மு ழக்க நாடொறு மருவ வேற்கும்,
    பொருளமை யீது கண்டும் பாடாது போவேன் கொல்லோ. - 5


    3364 - பொதிதுகிற் குற்ற மோர்ந்து மணியினைப் புறத்துப் போக்கார்,
    மதியினிற் சிறந்து ளோரென் வாய்மொழிக் குற்ற மோர்ந்து,
    திதிசெய்மா லயனுந் தேறாச் சிவபிரான் சரித மாய,
    விதியினை யெந்த ஞான்றும் விலக்கல்செய் யாது கொள்வார். - 6


    3365 - மால்கிளர் மனத்தா ரெம்மான் மான்மியக் குணங்கொளாமற்,
    சால்பிலா வேறு வேறு குற்றமுட் டதையக் கொண்டே,
    யோல்படக் குரைப்பாரந்த மூர்க்கருக் குரைப்பா ரியாரே,
    பால்கொலோ விரத்தங் கொல்லோ முலையுண்ணி பருக லோர்வீர். - 7


    3366 - சிறப்புப்பாயிரம்
    திருவுலகர் மகிழ்தரக்கொ ளாறுமுக பூபாலன் சிறப்பிற் கேட்பப்,
    பொருவுதவிர் பட்டீச மான்மியத்தைச் செந்தமிழாற் புனைதல் செய்தான்,
    தருவுமணி யும்பொரவென் போல்வாருக் கருள் சுரக்குந் தகையான் மிக்கான்,
    மருவுபுகழ்ச் சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே. - 8


    3367 - திருநாட்டுப்படலம்
    தம்மைநேர் பட்டி லிங்கர் தண்ணருட் பல்வ ளைக்கை,
    யம்மையோ டினிது மேவ வமைந்தபட் டீச மாதி,
    வெம்மைதீர் தலமெண் ணில்ல தன்னக மிதப்பக் கொண்டுட்,
    செம்மைசேர் சோழநாட்டின் வளஞ்சில செப்ப லுற்றாம். - 1


    3368 - சழக்கன்று கழுவாய் வேறே தகச்செய லாநின் செய்கை,
    வழக்கன்று தவிர்தி யென்னு மந்திர ருரைகொள் ளாதான்,
    குழக்கன்று நிமித்தந் தன்சீர்க் குலத்தரு மருந்தா யுள்ள,
    மழக்கன்று தபத்தே ரூர்ந்த மனுவளித் ததுசோ ணாடு. - 2


    3369 - மாயவ னிளவ லாக வானக முழுதுங் காப்போ,
    னாயவனனைய வாழ்வி லதிகமா யிரம்பங் கென்று,
    பாயவன் புகழ்சா றன்பாற் பயில்குலக் கடைஞ ரோடு,
    மேயவ னாகச் செல்வ விளக்கமிக்கதுசோ ணாடு. - 3
    work left incomplete by mInATcuntaram piLLai


"பிரபந்தத்திரட்டு" - பகுதி 2 (3370- 3408)
திருவரன்குளப்புராணம்


கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்

கடவுள்வாழ்த்து.


3370 - சித்திவிநாயகர்.
சீர்பூத்த நறியமண முகமுன்வழி படுமன்பர் தேவ ராவா,
ரேர்பூத்த முகத்துநடுக் காட்டல்போ லாதுமுகத் தியைபு மோர்கை,
வார்பூத்த நுனிக்காட்டி மகிழவுறீஇ யவர்வேண்டும் வரங்க ணல்கும்,
பார்பூத்த சித்திமத குஞ்சரப்பொற் செஞ்சரணம் பணிந்து வாழ்வாம். - 1


3371 - குடவாயில்விநாயகர்.
புனைமவுலி முடிமணியாய் மதாணிநடுப் பதிமணியாய்ப் பொருந ரேத்த,
வனைகழலொண் மணியாய்விண் மணிபொலிய வுயர்ந்துகுட வாரிவேலை,
வினையரக்கற் பந்தாடி வியன்குடநீர்க் கரையுயர்ந்து மேவி யன்பர்,
முனைபடரைப் பந்தாடுங் குடவாயின் மழகளிற்றை முன்னி வாழ்வாம். - 2


3373 - தேரடிவிநாயகர்.
ஆதனத்தைச் சூழவரி பலவமர்ந்த வெனினுமிக லடுமோ ரியானை,
மாதனநட் புறாமெனிலச் சுறாவெனவச் சுற்றதனை வயக்கப் பூதி,
சாதனர்கை தொழுமிரதஞ் சார்ந்தமர்ந்தாற் போலமர்ந்து தாழ்வார் யார்க்குஞ்,
சேதனநன் கருள்புரியுந் தேரடிமால் களிற்றினடி சிந்தித் துய்வாம். - 3


3373 - அரதீர்த்ததலேசர்.
அகரவுயி ரெனச்சதசத் தெங்குநிறைந் திந்திரனே யயனே மாலே,
பகரவரு முனிவரரே யேனையரே போற்றிவழி படுந்தோ றன்னார்,
நகரமக ரங்களைந்து பாறோன்று மான்முலைபோ னயந்து தெய்வச்,
சிகரகருக் கிருகமம ரரதீர்த்த தலேசரடி சிந்தித் துய்வாம். - 4


3374 - பெரியநாயகியம்மை.
கருமுனிவார் கைகுவிக்குங் கண்ணுதற்கு மகளாகிக் கருத மீட்டுந்,
திருமுனிய றாயாகித் திகழுமொரு முறைமாறு செயல்குறித்தாங்,
கொருமுனிவன் றாயேயென் றுரைக்குமுறை யொடுமகளா மூழுங் கொள்ள,
வருமுனிவில் பெருங்கருணைப் பெரியநா யகிமலர்த்தாள் வணங்கி வாழ்வாம். - 5


3375 - சபாபதி.
மலரவன்செய் தொழிலொருகை மாயவன்செய் தொழிலொருகை வானோ ராதிப்,
பலர்புகழு முருத்திரநா யகன்செய்தொழி லொருகைமறை பரவு மீசன்,
புலர்வருஞ்செய் தொழிலொருதாள் சதாசிவன்செய் தொழிலுமொரு பொற்றா ளாகக்,
கலரணுகா மணி மன்று ணடநவிலும் பெருமானைக் கருதி வாழ்வாம். - 6


3376 - சிவகாமசுந்தரியம்மை.
வயாவருத்தத் துடனுயிர்க்கும் வருத்தமுமோ ரணுத் துணையு மருவு றாது,
தயாவின்மல ரவன்முதலெவ் வுயிர்களையு முயிர்த்துநனி தழைய நோக்கி,
வியாபகமாங் கொழுநனுக்கு வியாப்பியமாம் பதத்தின்பம் விளையு மாறு,
நயாவருளிற் பொதுநடனங் கண்டுகாட்டிடுபரைதா ணயந்து வாழ்வாம். - 7


3377 - தக்ஷிணாமூர்த்தி. வேறு.
மறையெனும் புருட னாதி மாண்பினர்க் குபதே சித்தே
யிறைமைகொள் குரவர் தாமீ ரெண்மரு ளொருவ ராகு
நறைமலர் நிம்ப நீழ னயந்தபொற் கோயி னின்ற
முறையருட் குரவர் பாத முண்டக முடிமேற் கொள்வாம். - 8


3378 - வைரவக்கடவுள்.
தேங்கமழ் மலரின் மேலான் செதுப்பழஞ் சென்னிபோக்குஞ்,
சாங்கமுந் திகிரிப் புத்தே டன்றிரு மேனி விம்மி,
வாங்கரு நெய்த்தோர் போக்கு முபாங்கமு மலர்க்கை யொன்றிற்,
பாங்கமை வடுகப் புத்தேள் பதமலர் பழிச்சி வாழ்வாம். - 9


3379 - சித்திவிநாயகர்.
துன்றுசித் திகளுள் வார்க்குத் தொகுத்தலாற் சித்தி யானை,
நன்றுமெய் யறிவன் னார்க்கே நல்கலாற் சித்தி யானை,
யென்றுல கத்தி லாய்ந்தா ரிரட்டுற மொழிய வப்பே,
ரொன்றுபூண் டமருமுக்க ணொருத்தன்மா மலர்த்தாள் போற்றி. - 10


3380 - முருகக்கடவுள். வேறு.
உயிருயிர்க்கா சாரியனா காமையினாற் குரவுபுனை யுயிரைவேதஞ்,
செயிரில்சிவ மென்றேபா வனைபுரிதல் வேண்டுமெனச் செப்பவவ்வா,
றுயர்பியல்பே யமைசிவமு நன்குரவ னெனவணங்குமுயர்புவாய்ந்த,
பெயர்வரிய பெருமையின்மே லான்குமர வேல்சரணம் பேணி வாழ்வாம். - 11


3381 - திருநந்திதேவர். வேறு.
மனமுதன் மூன்ற னால்யாம் வழிபடப் பெறுவா னாமெம்
மனகவா ரியன மக்கு முதற்குரு வாவா னோவாக்
கனமலி நந்திப் புத்தே ளெனக்காட்டக் கண்டோ மேலாத்
தினம்வழி பாடு செப்பான் வேறன்மை தேரான் கொல்லோ. - 12


3382 - அகத்தியமுனிவர்.
அலைபுனல் சூழுங் காஞ்சி யமைந்தமேற் றளியின் வைகு
கலைமுழு தோதா தோர்ந்த கவுணியர் வரவு நோக்கா
துலைவில்குற் றால மேயோ னொருசிவ மாக வன்னான்
றலைமிசை யங்கை வைத்த தமிழ்முனிக் கடிமை செய்வாம். - 13


3383 - திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்.
மறைவிலக் காயபுத்த மார்க்கமே பொருளென் றோதி
நிறைதர முனஞ்சா தித்த நெடியமா னாணுட் கொள்ள
வறைதரு பவுத்தர் மும்மை யாயிரர் சைவ ராகிக்
குறையற வருட்க ணோக்கங் கொடுத்துளார்க் கன்பு செய்வாம். - 14


3384 - திருநாவுக்கரசுநாயனார்.
அடுசினக் களிமால் யானை யதனொடு நனிபோ ராற்றி
விடுதலின் மருப்பி றுத்து வென்றமா னாணுட் கொள்ளப்
படுசம ணுய்த்த யானை பணிந்துசூழ்ந் தேத்தி யேக
விடுகலில் பதிகம் பாடி யிருந்தவர்க் கன்பு செய்வாம். - 15


3385 - சுந்தரமூர்த்திநாயனார்.
தடஞ்சிலை முறித்து மேறு தழுவியுங் குறித்த மாதர்
படம்பரை யல்குற் பௌவம் படிந்தமா னாணுட் கொள்ள
விடம்படு மொருபெண் ணானை யெண்ணுபு குறித்த மாதர்
குடம்புரை கொங்கைப் போகந் துய்த்தவர் குலத்தாள் போற்றி. - 16


3386 - மாணிக்கவாசகசுவாமிகள்.
சகலரா யிருந்து மேலாஞ் சிவானந்த போகஞ் சாரா
தகலரா வணையான் பூவா னாதியர் நாணுட் கொள்ளச்
சகலரா யிருந்து மேலாஞ் சிவானந்த போக மேசார்ந்
தகலரா தரியா வாத வூரர்தாள் சார்ந்து வாழ்வாம். - 17


3387 - சண்டேசுரநாயனார்.
பிறப்பிறப் பொழியு மின்பம் பெறல்குறித் தவன்ஞா லத்துப்
பிறப்பிறப் புளானைத் தந்தை யெனக்கொளிற் பெறானென் றோவிப்
பிறப்பிறப் பிலானைத் தந்தை யேயெனப் பேணிக் கொண்டு
பிறப்பிறப் பொழிசண் டீசப் பிரானடி யிறைஞ்சி வாழ்வாம். - 18


3388 - அறுபத்துமூவர்.
மனமணுத் துணையே யென்று நியாயநூல் வகுக்கு மேனு
மனகமெய்த் தவத்தா ராய வறுபத்து மூவ ராவார்
கனசரித் திரம னைத்துங் கவர்ந்துதற் குள்ள டக்கும்
வினவுறீ ரெவ்வா றென்று விடைவித்தி னாலே போலும். - 19


3389 - பஞ்சாக்கரதேசிகர்.
விழியறி வுடையார்க் காய மெய்ஞ்ஞானப் பெருங்கோ முத்திச்
செழியரு ணமச்சி வாயன் றிருப்பெரும் பெயர்ந வின்று
மொழிவிலப் பெயர்பி றர்க்கு முரைத்துமந் தோவன் னானை
வழிபட நாணுஞ் சில்லோர் மடமைக்கோ ரொழிபு முண்டோ. - 20


3390 - அம்பலவாணதேசிகர்.
வரியளி முரலுஞ் சோலை யாவடு துறைக்கண் வைகு
மரியமெய்ஞ் ஞான மூர்த்தி யம்பல வாண தேவன்
பிரியமிக் கெனையாண் டென்பாற் பெறுவது விடாது பெற்றெற்
குரியதை யுலோபஞ் செய்யா துதவினா னுய்ந்து ளேனே. - 21


3391 - மற்றசிவநேசர்கள்.
பெரியநா யகித்தா யோடும் பெருந்திரு வரன்கு ளத்து
மரியநா யகர்பொற் கோயில் வழிபடு வார்கள் யாரும்
புரியுமத் தளியி னீங்கார் நீங்குதல் புணரு மேனும்
விரியுமென் னெஞ்சி னீங்கார் மேவிவீற் றிருப்பர் மாதோ. - 22


3392 - ஆக்குவித்தோர்.
மறைமுடி யமருந் தெய்வ மான்மிய நீறு பூசி
மறைபல விடத்து மோத வயங்குகண் மணிகள் பூண்டு
மறைநடுப் பொலியு மைந்து வன்னமா மனுக்க ணித்து
மறைமுறை யிட்டுந் தேறா மாதேவன் கழல்பூ சிப்பார். - 1


3393 - திருவரன் குளப்பொற் கோயிற் றிருப்பணி யான வெல்லாம்
பொருவரு மன்பி னாலே பொதுத்திறங் கடிந்து செய்வார்
வெருவரு குபேர வாழ்க்கை மேலெனா வாழ்க்கை யுற்றார்
பெருவள வல்ல நாட்டிற் பெருங்குடி வணிக ராவார். - 2


3394 - அரியயன் முதலோர் போற்று மரன்குளத் தலபு ரானம்
பிரியமிக் கமையு மாறு வடமொழி பெயர்த்தெ டுத்துத்
தெரியுநற் றமிழி னாலே செப்பிட வேண்டு மென்று
விரியுமெய்ப் பரிவிற் கேட்க விழைந்தியான் பாட லுற்றேன். - 3


3395 - அவையடக்கம்.
சுவைபடு கருப்பங் காட்டிற் றோன்றவீற் றிருந்து ளோனச்
சுவைபடா வேப்பங் காட்டுந் தோன்றவீற் றிருத்த லாலே
நவைபடாப் பெரியோர் சொற்ற நயக்குமின் பாட லோடு
நவைபடு மடியேன் சொற்ற பாடலு நயந்து கொள்வான். - 1


3396 - விட்புனன் முடிமேற் கொண்டு மேவினோர் குடங்கர் கொண்டு
மட்புனன் முகந்தே யாட்டி வழுத்திட வுவப்பர் மேன்மேற்
கட்புனல் பொழிந்து நால்வர் கரைந்தபா வேற்றார் கண்ணி
லெட்புன லுந்தோற் றாவென் பாட்டுங்கேட் டினிது வப்பார். - 2


3397 - இருவருங் காண வெண்ணா ரீரிரு மறைக்கு மெட்டார்
திருவரன் குளத்து வாழ்மா தேவனா ரெனறெ ரிந்தும்
பொருவரு மவரைப் பாடல் புரிகுவ னன்பர் தம்பா
லருவருப் பிலரா யெண்மை யாதல்கை கொடுக்கு மென்றே - 3


3398 - சிறப்புப்பாயிரம்.
சீர்வருஞ் சிறப்பான் மிக்க திருவரன் குளப்பு ராண
மேர்வருந் தமிழாற் பாடி யினிதரங் கேற்றி னானா
றேர்வருங் கலையுந் தேர்ந்தோன் றிரிசிரா மலையில் வாழ்வோன்
சோர்வருங் குணமீ னாட்சி சுந்தர நாவ லோனே.



3399 - திருநாட்டுப்படலம்
இறைவ னார்திரு வரன்குளப் பெருந்தல மெழுவாய்
நிறைத லம்பல கொடுநிலா வல்லநா டாதி
யறைத ரும்பல நாடுந்தன் னகங்கொடு பொலிந்து
முறைபி றழ்ந்திடா வளவர்நாட் டணிசில மொழிவாம். - 1


3400 - சைய மால்வரைத் தாய்மனை நின்றெழூஉச் சலதி
யைய நாயகன் மனைபுக வணைதரு பொன்னி
வைய மாமகண் முகமெனும் வளவர்கோ னாடு
பைய நாடொறுந் தங்கிச்செஃ றானமாம் படித்தே. - 2


3401 - தாயி லாகிய சையமால் வரைமிசைத் தங்கு
மாயி லெண்ணிலா வயிரஞ்செம் மணிமுத லனைத்துந்
தோயில் சேர்தரக் கொண்டுபோய்த் தொகுத்தலா னன்றோ
பாயி லாழியை யரதனா கரமெனப் பகர்வார். - 3


3402 - தங்கு நீடுநல் லூழுடை யார்புடைச் சார்வா
யெங்கு முள்ளவ ரீண்டிநட் பாகுத லேய்ப்பக்
கொங்கு நாட்டொரு குலவரை யாம்பிரத் தடியிற்
பொங்கு நீத்தமோ டெண்ணிலா றளாவுவ பொன்னி. - 4


3403 - கலியொ டும்பெரும் போர்செயக் கலித்தெழு பொன்னி
மலிது ரோணம்வேய்ந் தடைந்தென நுரையொடும் வருமால்
பொலியு மாம்பிரத் தடியெழு குடிஞையும் பொற்ப
வொலிகு லாமதற் குடன்பட்டாற் போற்சிவந் துறுமால் - 5


3404 - பொன்னி மாநதிக் கரையிரு மருங்கினும் பொலிய
மின்னி யாகசா லைகள்பல மிடைகுவ வாங்கண்
வன்னி மேலெழு தூபம்வா னளாய்ச்சுரர் வைய
முன்னி மேவுற மனுச்செவி புகாமுன முய்க்கும். - 6


3405 - மாட மேனலார் குழற்கிடு விரைப்புகை வாசங்
கூட வானயாற் றாடர மங்கையர் கூந்த
லூட ளாய்முரு கேற்றலி னறுவிரை யுற்று
நீட லோர்ந்தவ ரியன்மண மென்பது நிசமே. - 7


3406 - முதிரு மாக்கனி பலபடு விடபமேன் முழங்கி
யதிரும் வானரம் பாய்தர வாங்குதிர் கனியா
லுதிரு நெற்பல வேனைநாட் டறுத்தடித் துறச்செய்
பிதிரு றாதநெற் பொலியெனப் பிறங்குவ நாளும். - 8


3407 - முனிவர் பற்பல ரடைந்துகா விரிப்புனன் முழுகிக்
கனிவ ரும்பவெண் ணீறொருங் கணிந்திருள் கடிந்து
பனித புங்கதி ரெதிர்பரப் பியசடைத் திவலை
யினிய செந்துகிர் நித்தில முகுத்தென வியையும். - 9


3408 - தழைசெ றிந்தபைம் புன்னைக ணடுவெழூஉத் தழைதீர்ந்
துழைசெ றிந்திடப் பலமர்ந் தோங்கிய முருக்கு
மழைபொ ருங்குழற் றிருமகண் மணாளனா மழைமேல்
விழைய வெம்பிரா னிவர்ந்தவோர் காட்சியே விழையும். - 10
work left incomplete by mInATcuntaram piLLai

This file was last updated on 25 Feb. 2010.
Feel free to Webmaster.