Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!


ciRupANARRupaTai
of iTaikkazi nATTu nallUr nattattanAr
in tamil script, unicode/utf-8 format

சிறுபாணாற்றுப்படை
(ஆசிரியர் :: இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்)




    Etext Preparation : Staff & Students of K.A.P. Viswanatham Higher Secondary School, Tiruchirappalli, Tamilnadu, India
    Dr. C. Kesavaraj, BDS, FICD, Trustee, K.A.P. Viswanatham Higher Secondary School (Project Sponsor)
    Dr. R. Vasudevan, Former Director, School of Energy, Bharathidasan University, Trichi, Tamilnadu (Tech. support)
    Dr. R. Rajendran, Senior Teacher, K.A.P. Viswanatham Higher Secondary School, Trichi, Tamilnadu (coordination)
    Text Input : Ms. J. Jayanthi (Librarian); S. Sinnakannan (Typist), Sivadayal, Christopher (Students), K.A.P. Viswanatham Higher Secondary School, Trichi, Tamilnadu, India
    Proof-reading: Ms. Sarala Sandirasegarane, Kanpur, India
    Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland

    This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
    To view the Tamil text correctly you need to set up the following:
    i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
    Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
    and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

    ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
    (Netscape >4.6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
    . [email protected]

    © Project Madurai 1999-2000



    ciRupANARRuppaTai
    (second work in pattuppATTu anthologies) (in Tamil Script, TSCII format)

    சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஒன்றாவதான
    சிறுபாணாற்றுப்படை

    பாடியவர் :: இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
    பாடப்பட்டவன் :: ஓய்மானாட்டு நல்லியக்கோடன்
    திணை :: பாடாண்திணை
    துறை :: ஆற்றுப்படை
    பாவகை :: ஆசிரியப்பா
    மொத்த அடிகள் :: 269
    -----------------------

    மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
    யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச்
    செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக்
    கொல்கரை நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த
    புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக்
    கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற
    லயிலுருப் பனைய வாகி யைதுநடந்து
    வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
    வேனி னின்ற வெம்பத வழிநாட்
    காலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப் . . . .10

    பாலை நின்ற பாலை நெடுவழிச்
    சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ
    யைதுவீ ழிகுபெய லழகுகொண் டருளி
    நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென
    மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன்
    மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ
    யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ
    வயங்கிழை யுலறிய அடியி னடிதொடர்ந்
    தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற்
    சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென . . .20

    மால்வரை யழுகிய வாழை வாழைப்
    பூவெனப் பொலிந்த ஓதி ஓதி
    நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்
    களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்
    தியாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப்
    பூணகத் தொடுங்கிய வெம்முலை முலையென
    வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கி
    னின்சே றிகுதரு மெயிற்றி னெயிறெனக்
    குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த
    முல்லை சான்ற கற்பின் மெல்லியல் . . . .30

    மடமா னோக்கின் வாணுதல் விறலியர்
    நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி
    கல்லா விளையர் மெல்லத் தைவரப்
    பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பி
    னின்குரற் சீறியா ழிடவயிற் றழீஇ
    நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
    கைவல் பாண்மகன் கடனறிந் தியக்க
    வியங்கா வையத்து வள்ளியோர் நசைஇத்
    துனிகூ ரெவ்வமொடு துயராற்றுப் படுப்ப
    முனிவிகந் திருந்த முதுவா யிரவல . . . .40

    கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்
    கழுநீர் மேய்ந்த கயவா யெருமை
    பைங்கறி நிவந்த பலவி னீழல்
    மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர
    விளையா விளங்க ணாற மெல்குபு பெயராக்
    குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங்
    குடபுலங் காவலர் மருமா னொன்னார்
    வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
    எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண்
    வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று . . .50

    நறவுவா யுறைக்கும் நாகுமுதிர் நுணவத்
    தறைவாய்த் குறுந்துணி யயிலுளி பொருத
    கைபுனை செப்பங் கடைந்த மார்பிற்
    செய்பூங் கண்ணி செவிமுத றிருத்தி
    நோன்பகட் டுமண ரொழுகையடு வந்த
    மகாஅ ரன்ன மந்தி மடவோர்
    நகாஅ ரன்ன நளிநீர் முத்தம்
    வாள்வா யெருந்தின் வயிற்றகத் தடக்கித்
    தோள்புற மறைக்கும் நல்கூர் நுசுப்பி
    னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற . . . .60

    கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடுந்
    தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்
    தென்புலங் காவலர் மருமா னொன்னார்
    மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக்
    கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன்
    தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
    மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று
    நறுநீர்ப் பொய்கை யடைகரை நிவந்த
    துறுநீர்க் கடம்பின் றுணையார் கோதை
    ஓவத் தன்ன வுண்டுறை மருங்கிற் . . . .70

    கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின்
    வருமுலை யன்ன வண்முகை யுடைந்து
    திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை
    யாசி லங்கை யரக்குத்தோய்ந் தன்ன
    சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை
    யேம வின்றுணை தழீஇ யிறகுளர்ந்து
    காமரு தும்பி காமரஞ் செப்புந்
    தண்பணை தழீஇய தளரா இருக்கைக்
    குணபுலங் காவலர் மருமா னொன்னா
    ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந் . . .80

    தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை
    நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய
    னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று
    வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
    கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய
    அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
    பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண
    நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
    சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
    பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரல் . . . .90

    பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி
    வாலுளைப் புரவியடு வையக மருள
    வீர நன்மொழி யிரவலர்க் கீந்த
    வழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்
    கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ்
    நீல நாக நல்கிய கலிங்க
    ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
    சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோ
    ளார்வ நன்மொழி யாயு மால்வரைக்
    கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி . . . .100

    யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீந்த
    வுரவுச்சினங் கனலுமொளிதிகழ் நெடுவே
    லரவக்கடற் றானை யதிகனுங் கரவாது
    நட்டோ ருவப்ப நடைப்பரி கார
    முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
    துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
    நளிமலை நாட னள்ளியு நளிசினை
    நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகக்துக்
    குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த
    காரிக் குதிரைக் காரியடு மலைந்த . . . .110

    வோரிக் குதிரை யோரியு மெனவாங்
    கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ
    ளெழுவர் பூண்ட வீகைச் செந்நுகம்
    விரிகடல் வேலி வியலகம் விளங்க
    வொருதான் றாங்கிய வுரனுடைய நோன்றா
    ணறுவீ நாககு மகிலு மாரமுந்
    துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய
    பொருபுன றரூஉம் போக்கரு மரபிற்
    றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய
    நன்மா விலங்கை மன்ன ருள்ளும் . . . .120

    மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா
    ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்
    களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடிப்
    பிடிக்கணஞ் சிதறும் பெயல்மழைத் தடக்கைப்
    பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை
    நல்லியக் கோடனை நயந்த கொள்கையடு
    தாங்கரு மரபிற் றன்னுந் தந்தை
    வான்பொரு நெடுவரை வளனும் பாடி
    முன்நாள் சென்றன மாக விந்நா
    டிறவாக் கண்ண சாய்செவிக் குருளை . . . .130

    கறவாக் பால்முலை கவர்த னோனாது
    புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்
    காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்த
    பூழி பூத்த புழற்கா ளாம்பி
    யல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல்
    வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
    குப்பை வேளை யுப்பிலி வெந்ததை
    மடவோர் காட்சி நாணிக் கடையடைத்
    திருக்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு
    மழிபசி வருத்தம் வீடப் பொழிகவுட் . . . .140

    டறுகட் பூட்கைத் தயங்குமணி மருங்கிற்
    சிறுகண் யானையடு பெருந்தே ரெய்தி
    யாமவ ணின்றும் வருதும் நீயிரு
    மிவணயந் திருந்த விரும்பே ரொக்கற்
    செம்ம லூள்ளமொடு செல்குவி ராயி
    னலைநீர்த் தாழை யன்னம் பூப்பவுந்
    தலைநாட் செருந்தி தமனியம் மருட்டவுங்
    கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவும்
    நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும்
    கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப் . . . .150

    பாடல் சான்ற நெய்த னெடுவழி
    மணிநீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய
    பனிநீர்ப் படுவின் பட்டினம் படரி
    னோங்குநிலை யட்டகந் துயுன்மடிந் தன்ன
    வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற்
    கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோண்
    மதியேக் கறூஉம் மாசறு திருமுகத்து
    நுதிவே னோக்கி னுளைமக ளரித்த
    பழம்படு தேறல் பரதவர் மடுப்பக்
    கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற் கோமான் . . .160

    தளையவிழ் தெரியற் றகையோற் பாடி
    யறற்குழற் பாணி தூங்கி யவரொடு
    வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர்
    பைந்நனை யவரை பவழங் கோப்பவுங்
    கருநனைக் காயாக் கணமயி லவிழவுங்
    கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவுஞ்
    செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவுங்
    கொல்லை நெடுவழிக் கோப மூரவு
    முல்லை சான்ற முல்லையம் புறவின்
    விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச் . . . .170

    சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்
    திறல்வே னுதியிற் பூத்த கேணி
    விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி
    னுறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை
    யெயிற்றிய ரட்ட இன்புளி வெஞ்சோறு
    தேமா மேனிச் சில்வளை யாயமொ
    டாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர்
    நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
    குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி
    நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து . . . .180

    புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்
    வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை
    முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது
    கொங்குகவர் நீலச் செங்கட் சேவல்
    மதிசே ரரவின் மானத் தோன்று
    மருதஞ் சான்ற மருதத் தண்பணை
    யந்தண ரருகா வருங்கடி வியனக
    ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின்
    வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி
    னுரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை . . . .190

    பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
    தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
    விருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த
    அவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு
    கவைத்தா ளலவன் கலவையடு பெறுகுவி
    ரெரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக்
    கருமறிக் காதிற் கவையடிப் பேய்மக
    ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப்
    பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா
    ளண்ணல் யானை யருவிதுக ளவிப்ப . . . .200

    நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்
    சேய்த்து மன்று சிறிதுநணி யதுவே
    பொருநர்க் காயினும் புலவர்க் காயினு
    மருமறை நாவி னந்தணர்க் காயினுங்
    கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன
    அடையா வாயிலவ னருங்கடை குறுகிச்
    செய்ந்நன்றி யறிதலுஞ் சிற்றின மின்மையு
    மின்முக முடையையு மினிய னாதலுஞ்
    செறிந்துவிளங்கு சிறப்பி னறிந்தோ ரேத்த
    அஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையு . . .210

    மாணணி புகுதலு மழிபடை தாங்கலும்
    வாண்மீக் கூற்றத்த்து வயவ ரேத்தக்
    கருதியது முடித்தலுங் காமுறப் படுதலு
    மொருவழிப் படாமையு மோடிய துணர்தலு
    மரியே ருண்க ணரிவைய ரேத்த
    அறிவுமடம் படுதலு மறிவுநன் குடைமையும்
    வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்
    பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்தப்
    பன்மீ னடுவட் பான்மதி போல
    இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகிப் . . . .220

    பைங்க ணூகம் பாம்புபிடித் தன்ன
    வங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின்
    மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து
    வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்துக்
    கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப்
    புகழ்வினைப் பொலிந்த பச்சையடு தேம்பெய்
    தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்
    பாடுதுறை முற்றிய பயன்றெரி கேள்விக்
    கூடுகொ ளின்னியங் குரல்குர லாக
    நூனெறி மரபிற் பண்ணி யானாது . . . .230

    முதுவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவு
    மிளையோர்க்கு மலர்ந்த மார்பினை யெனவு
    மேரோர்க்கு நிழன்ற கோலினை யெனவுந்
    தேரோர்க் கழன்ற வேலினை யெனவு
    நீசில மொழியா வளவை மாசில்
    காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇப்
    பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக்
    காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
    பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்
    பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட் . . . .240

    பனுவலின் வழாஅப் பல்வே றடிசில்
    வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்த்த
    விளங்கதிர் ஞாயி றெள்ளூந் தோற்றத்து
    விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி
    யானா விருப்பிற் றனின் றூட்டித்
    திறல்சால் வென்றியடு தெவ்வுப்புல மகற்றி
    விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி
    நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின்
    வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு
    பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி . . . .250

    யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக்
    கூருளி பொருத வடுவாழ் நோன்குறட்
    டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியடு
    சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத்
    ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல
    வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக்
    கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
    யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு
    மாசெல வொழிக்கு மதனுடை நோன்றாள்
    வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ . . . .260

    யன்றே விடுக்குமவன் பரிசின் மென்றேட்
    டுகிலணி யல்குற் றுளங்கியன் மகளி
    ரகிலுண விரித்த வம்மென் கூந்தலின்
    மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித்
    துணிமழை தவழுந் துயல்கழை நெடுங்கோட்
    டெறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னிக்
    குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்
    செல்லிசை நிலைஇய பண்பி
    நல்லியக் கோடனை நயந்தனிர் செலினே. . . .269


    -----------------------
    சிறுபாணாற்றுப்படை முற்றிற்று
    -----------------------


This page was first put up on April 14, 2000