இளங்கோவடிகள் இயற்றிய
"சிலப்பதிகாரம்"
மூலமும்
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்
எழுதிய உரையும்
இளங்கோவடிகள் இயற்றிய "சிலப்பதிகாரம்" மூலமும்
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும் - புகார்க்காண்டம் / பாகம் 1
உள்ளடக்கம்
பதிகம்
உரைபெரு கட்டுரை
புகார்க்காண்டம்.
1. மங்கல வாழ்த்துப் பாடல்
2. மனையறம்படுத்த காதை
3. அரங்கேற்று காதை
4. அந்திமாலைச் சிறப்புசெய் காதை
5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை
6. கடலாடு காதை
7. கானல் வரி
8. வேனில் காதை
9. கனாத்திறம் உரைத்த காதை
10. நாடுகாண் காதை
---------------
பதிகம்
- (இணைக்குறள் ஆசிரியப்பா)
குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக்
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒருமுலை இழந்தாள்ஓர் திருமா பத்தினிக்கு (5)
அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டிஅவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடுஎம்
கட்புலம் காண விண்புலம் போயது
இறும்பூது போலும்அ•து அறிந்தருள் நீயென,
அவனுழை இருந்த தண்தமிழ்ச் சாத்தன் (10)
யான்அறி குவன்அது பட்டதுஎன் றுரைப்போன்:
ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப்
பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக்
கோவலன் என்பான்ஓர் வாணிகன் அவ்வூர்
நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு (15)
ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக்
கண்ணகி என்பாள் மனைவி அவள்கால்
பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பிற் பாண்டியன் பெருஞ்சீர்
மாட மதுரை புகுந்தனன், அதுகொண்டு (20)
மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன்
பொன்செய் கொல்லன் தன்கைக் காட்டக்
கோப்பெருந் தேவிக்கு அல்லதை இச்சிலம்பு
யாப்புறவு இல்லைஈங்கு இருக்கயென்று ஏகிப்
பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக் (25)
கண்டனன் பிறன்ஓர் கள்வன் கையென,
வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரா னாகிக்
கன்றிய காவலர்க் கூஉய்அக் கள்வனைக்
கொன்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் (30)
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
நிலைக்களம் காணாள் நெடுங்கண் நீர்உகுத்துப்
பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற
முத்தார மார்பின் முலைமுகந் திருகி
நிலைகெழு கூடல் நீள்எரி ஊட்டிய (35)
பலர்புகழ் பத்தினி யாகும் இவள்என,
வினைவிளை காலம் என்றீர் யாதுஅவர்
வினைவிளைவு என்ன, விறலோய் கேட்டி
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் (40)
வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
ஆர்அஞர் உற்ற வீரபத் தினிமுன்
மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்
கொதியழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்
முதிர்வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின் (45)
முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபம் கட்டியது ஆகலின்
வார்ஒலி கூந்தல்நின் மணமகன் தன்னை (50)
ஈர்ஏழ் நாளகத்து எல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல்எனக்
கோட்டம்இல் கட்டுரை கேட்டனன் யான்என,
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம் (55)
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்என, (60)
முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுகஎன் றார்க்குஅவர்,
மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்
மனையறம் படுத்த காதையும், நடம்நவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும், (65)
அந்தி மாலைச் சிறப்புசெய் காதையும்,
இந்திர விழவூர் எடுத்த காதையும்,
கடலாடு காதையும்,
மடல்அவிழ் கானல்வரியும், வேனில்வந் திறுத்தென
மாதவி இரங்கிய காதையும், தீதுடைக் (70)
கனாத்திறம் உரைத்த காதையும், வினாத்திறத்து
நாடுகாண் காதையும், காடுகாண் காதையும்,
வேட்டுவர் வரியும், தோட்டலர் கோதையொடு
புறஞ்சேரி இறுத்த காதையும், கறங்குஇசை
ஊர்க்காண் காதையும், சீர்சால் நங்கை (75)
அடைக்கலக் காதையும், கொலைக்களக் காதையும்,
ஆய்ச்சியர் குரவையும், தீத்திறம் கேட்ட
துன்ப மாலையும், நண்பகல் நடுங்கிய
ஊர்சூழ் வரியும், சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும், வஞ்சின மாலையும், (80)
அழல்படு காதையும், அருந்தெய்வம் தோன்றிக்
கட்டுரை காதையும், மட்டலர் கோதையர்
குன்றக் குரவையும், என்றுஇவை அனைத்துடன்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
வாழ்த்து, வரந்தரு காதையொடு (85)
இவ்வா றைந்தும்
உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்,
இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென். (90)
சிலப்பதிகாரம் - சிலம்பு காரணமாக வளர்ந்த வரலாற்றினை உரைப்பது. "வன்றொடர் மொழியும்" என்னும் சூத்திரத்தான் சிலம்பு என்னும் மென்றொடர்க் குற்றியலுகர மொழியின் மெல்லொற்று வல்லொற்றாயது; ஆசிரியர் நச்சினார்க்கினியர் அச் சூத்திரவுரையில், இயல்பு கணம் வருமிடத்தும் மெல்லொற்றுத் திரிதற்குச் சிலப்பதிகாரம் என்னுந் தொடரை எடுத்துக் காட்டியிருப்பது அறிந்தின்புறற்பாலது.
பதிகம் - நூலின் பொருளைத் தொகுத்துரைப்பது; என்னை?
[1]“பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத்
தொகுதி யாகச் சொல்லுத றானே"
என்பவாகலின், பதிகம் என்னும் இப்பெயர் இப்பாட்டின் இறுதியடியிற்குறிக்கப்பெற்றுள்ளது.)
உரை
-
1-9 குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக்
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒருமுலை இழந்தாள்ஓர் திருமா பத்தினிக்கு (5)
அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டிஅவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடுஎம்
கட்புலம் காண விண்புலம் போயது
இறும்பூது போலும்அஃது அறிந்தருள் நீயென,
குணவாயில் கோட்டத்து- திருக்குணவாயில் என்னும் ஊரிலுள்ள கோயிற்கண்ணே, அரசு துறந்து இருந்த அரசு போகத்தைத் துறந்து தவவுருவம தாங்கியிருந்த, குடக்கோச் சேரல் இளங்கோவடிகட்கு-குடதிசைக்கோவாகிய செங்குட்டுவன் என்னுஞ் சேரற்கு இளங்கோவாகிய அடிகட்கு, குன்றக் குறவர் ஒருங்கு உடன்கூடி- மலையில் வாழும் குறவரெல்லாரும் திரண்டு சென்று, பொலம்பூ வேங்கைநலம் கிளர் கொழுநிழல்-பொன்போலும் பூவினையுடைய வேங்கை மரத்தின் நன்மை மிக்க கொழுவிய நிழற்கண்ணே, ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு-ஒரு முலையினை இழந்து வந்து நின்றவளாகிய அழகிய பெருமையுடைய ஒரு பத்தினியின் பொருட்டு, அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி - தேவர்க்கரசனாகிய இந்திரன் றமர் நெருங்கி வந்து, அவள் காதல் கொழுநனைக் காட்டி - அவளுடைய காதலையுடைய கணவனை அவட்குக் காட்டி, அவளொடு எம் கண் புலம் காண விண் புலம் போயது - அவளோடும் அவர் எம்கண்ணாகிய புலம் காண விண்ணினிடத்திலே சென்றது, இறும்பூது போலும் - ஓர் அதிசயமாயிருந்தது, அஃது அறிந்தருள் நீ என - அதனை நீ அறிந்தருள்வாயாக என்றவளவிலே,
(அடியார்க்கு நல்லார் : குணவாயில் - திருக்குணவாயி லென்பதோரூர் - அது வஞ்சியின் கீழ்த்திசைக்கணுள்ளது; அஃது ஆகுபெயர். கோட்டம் - அருகன் கோயில். இளமைப் பருவத்தே இராச போகத்தைத் துறத்தல் அருமையால், துறந்து என்றும், அங்ஙனம் போகம் நுகர்ந்தவிடத்தோ மீட்டும் தவவுருத் தாங்கியிருத்த லருமையான், இருந்து என்றும் கூறினார். குன்றக்குறவர்-ஏழனுருபுத்தொகை;குன்றம்-கொடுங்கோளூர்க்கு அயலதாகிய செங்குன்றென்னும் மலை. அது திருச்செங்கோடு என்பவாலெனின், அவரறியார்; என்னை ? அத் திருச்செங்கோடு வஞ்சி நகர்க்கு வடகீழ்த் திசைக் கண்ணதாய் அறுபதின் காத ஆறுண்டாகலானும், அரசனும் உரிமையும் மலைகாண்குவமென்று வந்து கண்ட அன்றே வஞ்சி புகுதலானும் அது கூடாமையின் என்க.)
கோட்டம் என்பது பல கடவுளர் உறையு மிடங்களுக்கும் பெயராகக் கனாத்திறமுரைத்த காதையில் வழங்கி யிருத்தலானும், கோயில் என்பதன் பரியாயமாகக் கொண்டு ஊர்காண் காதையிலும் முருகன் கோயிலைக் கோட்டம் என்று கூறியிருத்தலானும், குமர கோட்டம் முதலிய பெயர் வழக்கினும் இருத்தலானும் ஈண்டுக் கோட்டம் என்பதற்கு அருகன் கோயில் என்று பொருள் துணிதல் சாலாது. அடிகள் என்னும் பெயர் பெரும்பாலும் அருக சமயத் துறவிகட்கு வழங்கியதாகுமென்னும் கருத்தால் அடியார்க்கு நல்லார் அருகன் கோயில் என்று கூறினார் போலும்!
செங்குன்று என்பது கொடுங்கோளூர்க்கு அயலதாகிய மலையென்றும், திருச்செங்கோடு வஞ்சி நகர்க்கு வடகீழ்த் திசையில் அறுபதின்காத வழியில் உள்ளதென்றும் கொங்கு நாட்டினராகிய அப்புலவர் பெருமான் துணிந்து கூறுதலின் கொடுங்கோளூராகிய வஞ்சியையும், செங்குன்றையும் அவர் நன்கறிந்து கூறியுள்ளாரென்பது பெறப்படும்.
அரசாட்சி இன்பம் பயப்பதென்பதனை,
[2]"தனிமு டிகவித் தாளு மரசினும்
இனியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே"
என்னும் திருக்குறுந்தொகை யானும் அறிக.பொலம் - பொன் என்பதன் திரிபு:
[3]"பொன்னென் கிளவி யீறுகெட முறையின்
முன்னர்த் தோன்றும் லகார மகாரம்
செய்யுள் மருங்கிற் றொடரிய லான."
என்பது காண்க. 'திருமா பத்தினி இழந்து வந்து நின்றாள்; அவள் பொருட்டு' என விகுதி பிரித்து விரித்துரைக்க. தமராவார் தேவர். கட்புலம்-கண்ணினது அறிவு என்றுமாம். போயது-போய அது என்பதன் விகாரமுமாம். போலும்: [4]ஒப்பில் போலி. குறவர் கூடிச் சென்று விட்புலம் போயது இறும்பூது என இளங்கோவடிகட்குக் கூறினாராக என்க. இது புதுமைபற்றிய மருட்கை யென்னும் மெய்ப்பாடு.
------------
-
க0-கக. 10-11 அவனுழை இருந்த தண்தமிழ்ச் சாத்தன் (10)
யான்அறி குவன்அது பட்டதுஎன் றுரைப்போன்:
அவன் உழை இருந்த தண்டமிழ்ச் சாத்தன் - அப்பொழுது அவன்பால் வந்திருந்த தண்டமிழ்ப் புலவனாகிய
சாத்தன், யான் அறிகுவன் அது பட்டது என்று உரைப்போன்-அது விளைந்ததனை யான் அறிகுவன் என்று உரைக்கின்றவன்.
செங்குட்டுவனைக் கண்டு இளங்கோவடிகள்பால் வந்திருந்த சாத்தன் என்க. சாத்தன்-மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரென்னும் நல்லிசைப் புலவர் என்பது பின்னர்ப் பெறப்படும். சீத்தலைச் சாத்தனார் என்று கூறப்படுபவரும் இவரே யென்பது, [5]தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் 'சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலை' எனப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரைத்தலால் அறியப்படும். காட்சிக் காதையுள்ளும் "தண்டமிழாசான் சாத்தன்" எனவும், "நன்னூற் புலவன்" எனவும் இவரைப் பாராட்டியுரைத்தலானும், இக்காப்பியத்தை இவர்முன் கூறிக் கேட்பித்தலானும் இளங்கோவடிகள் இவர்பால் வைத்த பெருமதிப்புப் புலனாகும்.
'அறிகுவன்' என அன் விகுதி தன்மைக்கண் வந்தது; மேலும் இங்ஙனம் வருமிடனறிந்து கடைப்பிடிக்க. அது என்றது ஒரு முலை யிழந்ததனை.
இவ்வடிகட்கு அடியார்க்கு நல்லார் கூறிய உரை பதிக இறுதிக்கண் ஆராயப்படும்.
---------
-
௧௨-உ0. 12-20 ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப்
பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக்
கோவலன் என்பான்ஓர் வாணிகன் அவ்வூர்
நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு (15)
ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக்
கண்ணகி என்பாள் மனைவி அவள்கால்
பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பிற் பாண்டியன் பெருஞ்சீர்
மாட மதுரை புகுந்தனன் (20)
ஆரங்கண்ணி-ஆத்திமாலையையுடைய, சோழன்-செம்பியனது, மூதூர்-பழைய நகரங்களுள்ளே, பேராச் சிறப்பின்-நீங்காத சிறப்பினையுடைய, புகார் நகரத்து-புகார் என்னும் நகரத்திடத்து, கோவலன் என்பான் ஓர் வாணிகன்-கோவலன் என்று பெயர் கூறப்படுவானாகிய ஒரு வாணிகன், அவ்வூர்-அப்பதியின் கண், நாடகம் ஏத்தும்-நாடகத்தின் பொருட்டு யாவரும் கொண்டாடும், நாடகக் கணிகையொடு-நாடகப் பொதுமகளாகிய மாதவி யென்பாளோடு, ஆடிய கொள்கையின்-கூடியொழுகிய ஒழுக்கத்தால், அரும்பொருள் கேடுற-பெறுதற்கரிய பொருள் தொலைதலின், கண்ணகி என்பாள் மனைவி-கண்ணகி யென்று பெயர் கூறப்படும் அவன் மனைவியோடும், அவள் கால் பண் அமை சிலம்பு-அவளது காலணியாகிய ஓசை யமைந்த சிலம்பினை, பகர்தல் வேண்டி-விற்றலைக் கருதி, பாடல் சால் சிறப்பின்-பாடுதல் அமைந்த சிறப்பினையுடைய, பாண்டியன் பெருஞ்சீர் மாட மதுரை-பாண்டியனது மிக்க புகழையுடைய மாட மதுரைக் கண்ணே, புகுந்தனன்-சென்று புக்கான்;
'ஆரங்கண்ணி' என்பதில் ஆர் அம்முச்சாரியை பெற்றது; இதனை,
[6]"ஆரும் வெதிரும் சாரும் பீரும்
மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்"
என்னும் சூத்திரத்து 'மெய்பெற' என்னும் இலேசான் அமைத்தார் நச்சினார்க்கினியர்.
[7]"ஆரங்கண்ணி யடுபோர்ச் சோழர்"
என்பதுங் காண்க. மூதூராகிய புகார் என்னலுமாம். புகார்-ஆற்றுமுகம்;
[8]"புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்"
என்பதன் உரை காண்க. காவிரி கடலொடு கலக்கு மிடத்துள்ளதாகலின் காவிரிப்பூம்பட்டினம் புகார் எனப்பட்டது. அரும்பொருள்-அளத்தற்கரிய பொருள் என்றும், அறனும் இன்பமும் பயக்கும் பொருள் என்றும் கூறுதலுமாம். சிறப்பினையுடைய மதுரை யென்க; பாண்டியற்கு அடையாக்கலுமாம். மாடம் என்னும் அடையடுத்து 'மாட மதுரை'எனப் பலவிடத்தும் வழங்குவது காணப்படும். நாடகம், மனைவி என்பவற்றில் முறையே குவ்வுருபும், ஒடுவுருபும் தொக்கன.
நகரத்து வாணிகன் ஆடிய கொள்கையாற் கேடுறுதலின் சிலம்பு பகர்தல் வேண்டி மனைவியொடு மதுரை புகுந்தனன் என்க.
{அடி. நாடகமேது மென்றது நாடகந்தான் இவளாற் சிறப்பெய்துதலின் ஏத்திற்றென்றவாறு. காற்சிலம்பு பகர்தல் வேண்டியெனவே தலைக்கோலம் முதலிய அணிகளனைத்தும் முன்னமே தொலைந்தது விளங்கி நின்றது. சிறப்பிற் பாண்டியன் என்றும், பெருஞ்சீர் மாடமதுரை யென்றும் அடிகள் புகழ்ந்தார்; இவையும் பழவினையால் அழிந்த வென்னும் இரக்கந்தோன்ற. மாடமதுரை புகுந்தனன் என்பது, காட்டினன்றி ஓரூரின்கண் உயிரும் பொருளும் இழந்தானென்பது மேல் விளையத் தோன்றி நின்றது.}
----------
-
உ0 -௨. 20-22 அதுகொண்டு
மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன்
பொன்செய் கொல்லன் தன்கைக் காட்டக்
அதுகொண்டு-அங்ஙனம் புகுந்தனன் பிற்றை ஞான்று சிலம்பினை யெடுத்துக்கொண்டு, மன் பெரும் பீடிகை மறுகில் செல்வோன்-அதனை விற்பதற்காக மிக்க பெருமையினையுடைய வணிகர் தெருவிற் செல்கின்றவன், பொன்செய் கொல்லன் தன் கைக் காட்ட-எதிரே வந்த பொற்கொல்லனைக் கண்டு அதனை அவன் கையிற் காட்ட,
மன்- மிகுதிப் பொருட்டு [9]"மன்னு மாதற் பெருங்கற்பு" என் புழிப்போல, 'மன் கழிவின் கண் வந்தது' என அடியார்க்கு நல்லார் கூறியது ஈண்டைக்குப் பொருந்துவதன்று. பொன்செய்-பொற் பணி செய்யும். தன்:சாரியை, கண்டு என ஒரு சொல் வருவிக்க.
{அடி. அதுகொண்டு என்றார்.அச்சிலம்பால் மேல் விளைவன தோன்ற அது அநியாயபுரத்தே புகுகின்றவன் கூற்றத்தையும் உடன்கொண்டு புக்கான் என்றாற் போன்றிருந்தது.}
- ௨௩-௬. 23-26 கோப்பெருந் தேவிக்கு அல்லதை இச்சிலம்பு
யாப்புறவு இல்லைஈங்கு இருக்கயென்று ஏகிப்
பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக் (25)
கண்டனன் பிறன்ஓர் கள்வன் கையென,
கோப்பெருந்தேவிக்கு அல்லதை-கோப்பெருந் தேவிக்கே யன்றி, இச்சிலம்பு-இப்பெருவிலைச் சிலம்பு, யாப்புறவு இல்லை-ஏனோர் அணிதற்குப் பொருத்தமில்லை யாகலான் யான் இதனை அரசர்க்கு உணர்த்திவருந் துணையும், ஈங்கு இருக்க என்று ஏகி-இக்கோட்டத்தில் இருக்கவெனச் சொல்லிப்போய், பண்டுதான் கொண்ட -தான் முன்பு களவிற்கொண்ட, சில் அரிச் சிலம்பினை-சிலவாகிய அரியினையுடைய சிலம்பினை, கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என-வேற்று நாட்டவனாகிய ஒரு கள்வன் கையிற் கண்டேன் என்று அரசர்க்கு உரைப்ப,
அல்லதை: வினைத் திரிசொல்: ஐ சாரியை எனலுமாம். சுட்டு அதன் பெருமையை உணர்த்திற்று. இருக்கென்று: அகரந்தொக்கது. 'பண்டு தான் கொண்ட' என்றது கவி கூறியது. அரி-பரல்; மேல் வழக்குரை காதையில் 'என் காற் பொற்சிலம்பு மணியுடை யரியே' என்றலின், சிலவாகிய அரியெனல் கூடாமையின் சாதிபற்றக் கூறியதெனக் கொள்க; அன்றி, அரி என்பதற்கு வினைத்திறம் என்றும், ஓசையென்றும் கூறுதலுமாம். அதனைக் காட்டக் கண்ட பொற்கொல்லன் ஏகி உரைப்ப வென்க.
{ அடி. தான் கொண்டவென்றார் தன்னெஞ்சறியத் தான் கொண்டதனை இங்ஙனம் கூறினானென்பது தோன்ற பிறனோர் கள்வன் கையிற் கண்டன வென்றார். தன்னையுங் கள்வனென்றமை தோன்ற.}
-
௨௭-௩0. 27-30 வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரா னாகிக்
கன்றிய காவலர்க் கூஉய்அக் கள்வனைக்
கொன்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் (30)
வினை விளை காலம் ஆதலின் - தான் முற் பிறப்பிற் செய்த தீவினை வந்து பலிக்கின்ற காலம் ஆதலாலே, யாவதும்-யாதொன்றையும், சினை அலர் வேம்பன்-முகை விரிந்த வேப்பம்பூ மாலையையுடைய பாண்டியன், தேரான் ஆகி-ஆராயதவனாகி, கன்றிய காவலர்க்கூஉய்-அடிப்பட்ட காவலாளரை அழைத்து, அக்கள்வனைக் கொன்று-இவன் சொன்ன அக் கள்வனைக் கொன்று, அச்சிலம்பு கொணர்க ஈங்கு என-அச்சிலம்பை இப் பொழுதே கொணர்க என்று கூற;
யாவதும் தேரானாகி என இயையும், கூஉய்: கூவி என்பதன் விகாரம். ஈங்கு-இப்பொழுதே யெனப் பொழுதினை யுணர்த்திற்று. உரைப்பக் கேட்ட வேம்பன் கொணர்க வென்று கூற என்க. அக் கள்வனைக் கொல்ல அச்சிலம்பையும் அவனையும் கொணர்கவெனச் சொல்லக் கருதினவன் வாய் சோர்ந்து, கொன்று அச் சிலம்பைக் கொண்டு வருகவென்று கூறினானெ அடியார்க்கு நல்லார் கருதியது ஏற்புடைத்தன்று; என்னை? வினைவிளை கால மாதலின் யாவதும் தேரானாகி என்றமையானும், அச்சிலம்பு எனத் தேவியின் சிலம்பைக் கருதிக் கூறினமையானும், வழக்குரை காதையுள்ளும் "கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று" என்றிறுத்தமையானும் என்க.
{அடி. இதனை ஆராயு நெறி பலவுளதாகவும், அவற்றில் ஒன்றையும் தேர்ந்திலனென்பார். யாவதும் தேரானாகி என்றார்; முன்னர்க் கை குறைத்தன் முதலிய முறைசெய்தோன் இதனைத் தேர்ந்திலனென்று அடிகள் இரங்கிக் கூறினார். கன்றிய காவலர் என்றார். அவரும் முன்னர்த் தீது செய்யா ரென்பது தோன்ற.}
---------
-
௩௧-௩௬. 31-36 கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
நிலைக்களம் காணாள் நெடுங்கண் நீர்உகுத்துப்
பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற
முத்தார மார்பின் முலைமுகந் திருகி
நிலைகெழு கூடல் நீள்எரி ஊட்டிய (35)
பலர்புகழ் பத்தினி யாகும் இவள்என,
கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி-அங்ஙனம் அரசன் கூறக்கேட்ட காவலாளரும் வினைவிளை காலமாதலின் அவனைக் கொல்லுதல்செய்யக்கொலையிடத்தே பட்ட கோவலன் மனைவி, நிலைக்களம் காணாள்-தனக்கு நிலையிடம் காணாளாய், நெடு கண் நீர் உகுத்து-நெடிய கண்ணின் நீரைச் சொரிந்து, பத்தினி ஆகலின்-ஆக்கவும் அழிக்கவும் வல்லள் ஆதலின், பாண்டியன் கேடு உற-பாண்டியன் உயிர் கெடுமாறு செய்து, முத்து ஆரம் மார்பின் முலை முகம் திருகி-முத்தாரம் அணிந்த மார்பினகத்து முலையின் முகத்தைத் திருகி யெறிந்து, நிலைகெழுகூடல் நீள் எரியூட்டிய-அதினின்றும் உண்டாகிய நெடிய தீயால் நிலைபெற்ற மதுரையாகிய அவனூரையும் உண்ணப் பண்ணிய,பலர் புகழ் பத்தினி ஆகும் இவள் என - பலரும் புகழும் பத்தினியாகும் இக் குறவராற் சொல்லப் பெற்றவளென்று சாத்தன் கூற,
நிலைக்களம் காணாள்-ஓரிடத்து நிற்றலாற்றாளாய் என்க. கேடுறச் செய்து என ஒருசொல் விரித்துரைக்க; கேடுற உகுத்து என்றியைத்தலுமாம். எரியை உண்பித்த என விரித்தலும் பொருந்தும். கண்ணின் நீராற் பாண்டியனை அடுதலும், முலையின் தீயாற் கூடலைச் சுடுதலுஞ் செய்தாளென்க.
"தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணினீர்
கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன்"
என வாழ்த்துக் காதையுள் உரைத்தலும் ஈண்டு அறியற்பாலது.
- ௩௭-௩௮. 37-38 வினைவிளை காலம் என்றீர் யாதுஅவர்
வினைவிளைவு என்ன,
வினை விளை காலம் என்றீர்-நீர் வினை விளை காலம் என்று கூறிப் போந்தீர், யாது அவர் வினை விளைவு என்ன-அவர்க்கு வினையின் விளைவாவது என்னை யென்று அடிகள் வினவ,
------------
-
௩௮-௫௪. 38-54 விறலோய் கேட்டி
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் (40)
வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
ஆர்அஞர் உற்ற வீரபத் தினிமுன்
மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்
கொதியழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்
முதிர்வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின் (45)
முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபம் கட்டியது ஆகலின்
வார்ஒலி கூந்தல்நின் மணமகன் தன்னை (50)
ஈர்ஏழ் நாளகத்து எல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல்எனக்
கோட்டம்இல் கட்டுரை கேட்டனன் யான்என,
விறலோய் கேட்டி-மேலோய் கேட்பாயாக;அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்-நடுக்கமில்லாத சிறப்பினையுடைய மதுரையாகிய மூதூரிடத்துள்ள, கொன்றை அம் சடை முடி மன்றப் பொதியலில் வெள்ளி அம்பலத்து-மன்றமாகிய பொதியில்களில் கொன்றை மாலை யணிந்த சடைமுடியையுடைய இறைவனுறையும் வெள்ளியம்பலத்துள், நள் இருள் கிடந்தேன்-செறிந்த இருளையுடைய அரை யிரவில் துயின்றேனாக, ஆர் அஞர் உற்ற வீரபத்தினி முன்-அப்பொழுது அரிய துன்பத்தை யுற்ற வீர பத்தினியின் முன், மதுரை மாதெய்வம் வந்து தோன்றி -அந்நகர்க்குக் காவற்றெய்வமாகிய மதுரை மாதெய்வம் வந்து வெளிப்பட்டு, கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்-நினது மிக்க சினத்தால் வெவ்விய அழலை நின் கொங்கை யிடத்தே விளைவித்தோய், முதிர்வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின்-நுங்கட்கு முற்பட்ட நல்வினை தீர்ந்தது ஆகலான், முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவனொடு-பசிய தொடியினையுடையாய் முற்பிறப்பில் நின் கணவனொடு நினக்கு, சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரத்து-கெடாத நல்ல புகழையுடைய கலிங்கநாட்டுச் சிங்கபுரம் என்னும் பதியின்கண், சங்கமன் என்னும் வாணிகன் மனைவி-சங்கமனென்னும் வணிகனுடைய மனைவியானவள், இட்ட சாபம் கட்டியது ஆகலின்-இட்ட சாபம் இப்பிறப்பில் வந்து மூண்டதாகலின், வார் ஒலி கூந்தல்-நீண்டு தழைத்த கூந்தலையுடையாய், நின் மணமகன் தன்னை-நின் கணவனை, ஈரேழ்நாள் அகத்து எல்லை நீங்கி-இன்றைக்குப் பதினாலாம் நாளில் பகற்பொழுது நீங்கியபின் காண்பை; வானோர் தங்கள் வடிவின் அல்லதை-காணுங்கால் வானோர் வடிவிற் காண்பதல்லது, ஈனோர் வடிவில் காண்டல் இல் என-மக்கள் வடிவிற் காண்பதில்லை யென்று கூற, கோட்டம் இல் கட்டுரை-வஞ்சகமற்ற அக்கட்டுரையினை, கேட்டனன் யான் என-யான் கேட்டேனென்று சாத்தன் கூற,
விறல்-பெருமை. கேட்டி:முன்னிலை யொருமைவினை எதிர்காலம் பற்றியது. அதிர்வு-நடுக்கம்;
[10]"அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்"
என்றாராகலின். பகைவரால் நடுங்காத வென்க; அது,
[11]" நீர்முற்றி மதில் பொரூஉம் பகையல்லால் நேராதார்
போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புன லூரன்''
என்பதனான் அறியப்படும். சடைமுடி: இறைவனுக்கு ஆகுபெயர். பொதுஇல்:பொதியில் என மரீஇயிற்று: இது [12]"கிளந்தவல்ல" என்னும் அதிகாரப் புறனடையான் அமைக்கப்படும். கொன்றையஞ்சடை முடி, [13]"புன்னையங்கானல்" என்புழிப்போல அம் சாரியை பெற்றது. [14]பொதியில் என்பது பாடமாயின் பொதியிலாகிய வெள்ளியம்பலம் என்க. நள்-நளியென்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது; நளி-செறிவு, நள்ளென்னும் ஓசையுமாம்.
முதிரிவினை-தீவினை யெனக்கொண்டு, அதனால் இங்ஙனம் முடிந்ததாகலின் என்றுரைத்தலுமாம். பைந்தொடியும் கூந்தலும் அண்மைவிளி. எல்லை-பகற்பொழுது. ஈனோர்-இவ்வுலகத்தோர்; ஈன் இவ்விடம் என்னும் பொருட்டு.
{அடி. வீரபத்தினி-மறக்கற்புடையாள். கோப்பெருந்தேவி-அறக்கற்புடையாள்; ஆக ஆறிய கற்பும் சீறியகற்பும் எனக் கற்பு இரு வகை. கட்டுரை-பொருள் பொதிந்த சொல்;உறுதியுடைய சொல்லுமாம்.}
-----------
-
௫௫-௬0. 55-60 அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம் (55)
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்என, (60)
அரைசு இயல் பிழைத்தோர்க்கு-அரசர் முறை செய்தலிற் சிறிது வழுவினும் அவர்க்கு, அறம் கூற்று ஆவதூஉம்-அறக் கடவுளே கூற்றமாகும் என்பதுவும், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்-புகழமைந்த கற்புடை மகளை மக்களே யன்றித் தேவர் முனிவர் முதலாயினாரும் ஏத்துதல் இயல்பு என்பதுவும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்-முன் செய்த தீவினை உருக்கொண்டு வந்து தன் பயனை நுகர்விக்கும் என்பதும், சூழ்வினைச் சிலம்பு காரணம் ஆக-சிற்ப வினை பொருந்திய சிலம்பு காரணமாகத் தோன்றினவாதலின், சிலப்பதிகாரம் என்னும் பெயரால்-சிலப்பதிகாரமென்னும் பெயருடன், நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் என-ஒரு காப்பியமாக நாம் அம் மூன்றுண்மைகளையும் நிறுத்துதும் என்று அடிகள் சொல்ல,
அரைசு: போலி. கூற்றாவது-கொல்வ தென்றபடி. அறம் கொல்லுமாறு,
[15]"என்பிலதனை வெயில்போலக் காயுமே
அன்பிலதனை யறம்"
என்பதனானறியப்படும். பத்தினிக்கு : வேற்றுமை மயக்கம். உருத்து-வெகுண்டு என்றுமாம். இரு வினையும் செய்த முறையே வந்து ஊட்டுமென்பாரு முளர். தோன்றினமையின் எனவும், அவற்றை எனவும் விரித்துரைக்க. பாட்டு உடைச் செய்யுள்-இசைப்பாட்டுக்களை இடையே உடைய தொடர்நிலைச்செய்யுள் என்க உரைப்பாட்டையும் இசைப்பாட்டையுமுடைய என ஈண்டு அடியார்க்கு நல்லார் கூறியது மிகை. மேல் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பராகலின்.
-------
-
௬௧-௨. 61-62 முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுகஎன் றார்க்கு
முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது-இவ்வரலாறு தமிழ் நாட்டு முடியுடைய வேந்தர் மூவர்க்கும் உரியதாகலின், அடிகள் நீரே அருளுக என்றாற்கு-அடிகள் நீரே அருளிச் செய்க என்று கூறிய சாத்தற்கு.
கெழு வென்னுஞ் சாரியை [16]"லனவென வரூஉம் புள்ளி யிறுதி முன்" என்னுஞ் சூத்திரத்து, 'அன்ன மரபின் மொழியிடைத் தோன்றி' என்பதனால் இகர வீற்றின் முன்னும் வந்தது. புகாரினும் மதுரையினும் வஞிசியினும் நிகழ்ந்ததாகலின், மூவர்க்கு முரியது என்றார். அடிகள்: அண்மைவிளி. அருளுக என்பதன் அகரந் தொக்கது. என்றாற்கு அடிகள், அருள என மேல் வந்தியையும்.
{அடி. 'நீரே' என்பதிலுள்ள ஏகாரத்தை வினாப் பொருட்டாகக் கொண்டு, 'இச்செய்கின்ற காப்பியம் மூவேந்தர்க்கு முரியதென்பதனால் ஏனையோரை இவர் புகழ்ந்துரையாராகலின், யாம் காப்பியஞ் செய்யக் கடவே மென்பது கருதி, நீரே அருளுகென ஏகார வினாப் பொருண்மை தோன்ற இது கருதி இது சொன்னாற்கு அவர் கருதிய பொருளிற்கு உடம்படாது சொல்லிற்கு உடன்பட்டாரென்பதாயிற்று' என்றுரைப்பது சிறப்புடைத்தன்று; என்னை? அடிகளின் மனத் தூய்மையைச் சாத்தனாரும், சாத்தனார் கருத்தை அடிகளும் அறிந்திலர் என்னும் குற்றம் பொருந்துமாகலின். 'மூவேந்தர் நாட்டினும் நிகழ்ந்த கதையாகலான் ஏனை இருவேந்தரியல்பும், வேத்தியலும் பொதுவியலும் எல்லா முணர்ந்த நீரே அருளவேண்டும் என்று சாத்தன் சொல்ல' என்னும் அரும்பத வுரைகாரர் கருத்தே திட்ப முடைத்தாகும் என்க.}
இனித்தாம் வகுத்துக் கொண்டதனைக் கூறுவர்.
----------
-
௬௨-௩. 63-64 அவர்,
மங்கல வாழ்த்துப் பாடலும்,
அவர் மங்கல வாழ்த்துப் பாடலும்-அவர் மணத்தில் மகளிர் வாழ்த்துதலையுடைய பாடலும்,
{அடி. இதனை மங்கல வாழ்த்துக் காதையுமென்னாது பாடலுமென்றது என்னையோ வெனின்,-இஃது ஆசிரியப் பாவால் வாராது கொச்சகக் கலியால் வருதலானும், கதையையுடையது காதையா மாதலானும், அவ்வாறு இதிற் கதை நிகழ்ச்சி யின்மையானும், வாழ்த்தும் உரையும் பாடலுமாய் வருதலானும், இங்ஙனம் பெயர் கொடுத்தாரென வுணர்க. அஃது அற்றாக; மேலும் கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி, வஞ்சின மாலை, குன்றக் குரவை. இவையிற்றையும் காதை யென்றிலரா லெனின்,-அவற்றைக் கூறாததும் சில வேறுபாடு கருதிப்போலும்; என்னை வேறுபாடெனின், அவை தத்த முடிவிற் கூறுதும்.}
ஆசிரியப் பாவால் வாராதது கதையன்றென்னில், வாழ்த்துக்காதை என்னும் பெயர் பொருந்துவதன்று; அஃது ஆசிரியப் பாவால் இயலாமையின்; ஆகலின், பெரும்பாலும் கதைò தொடர்புடையது காதை என்பதே அடிகள் கருத்துப் போலும்.
--------
-
௬௩-௪. 65-66 குரவர்
மனையறம் படுத்த காதையும்,
குரவர் மனையறம் படுத்த காதையும்-இருமுது குரவரும் இவரை இல்லறத்தில் அடிப்படுத்த வேண்டி வேறுபட இருத்திய காதையும்,
----------
-
௬௪-௫. நடம்நவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும், (65)
நடம்நவில் மங்கை மாதவி அரங்கேற்று காதையும்-ஐயாண்டில் தண்டியம் பிடித்து ஏழாண்டு நடம்பயின்ற மாதவி மங்கைப் பருவத்தே அரங்கேற்றின காதையும்,
தண்டியம்-தண்டு; கோல்
-----
-
௬௬. 66 அந்தி மாலைச் சிறப்புசெய் காதையும்,
அந்தி மாலைச் சிறப்புச் செய்காதையும்-அந்திப்பொழுதாகிய மாலையைச் சிறப்புச் செய்த காதையும்,
சிறப்புச் செய்தல்-புனைந்துரைத்தல்.
--------
-
௬௭. இந்திர விழவூர் எடுத்த காதையும்,
இந்திர விழவு ஊர் எடுத்த காதையும்-அப் பதியின்கண் இந்திரனுக்கு விழாச் செய்த காதையும்,
--------
-
௬௮. கடலாடு காதையும்,
கடல் ஆடு காதையும்-விழாவின் முடிவிற் கடலாடின காதையும்,
------
-
௬௯. மடல்அவிழ் கானல்வரியும்,
மடல்அவிழ் கானல்வரியும்-கடலாடிய கோவலனும் மாதவியும் பூக்களின் இதழ்விரித்த கழிக்கானலிடத்து யாழ்கொண்டு பாடிய கானல்வரியும்,
மடல் - பூ என்பது அரும்பதவுரை. கானல்-கடற்கரைச் சோலை. இஃது இசைப்பாவாற் பெற்ற பெயர். இதனுட் பெரிதும் கதை நிகழாமை உணர்தற்பாற்று.
-------
-
௬௯-௭௰. 69-70 வேனில்வந் திறுத்தென
மாதவி இரங்கிய காதையும், (70)
வேனில் வந்து இறுத்தென மாதவி இரங்கிய காதையும்-இளவேனில் வந்து பொருந்தியதாகப் பிரிந்த மாதவி வருந்திய காதையும்,
-------
-
௭0-௧. 70-71 தீதுடைக்
கனாத்திறம் உரைத்த காதையும்,
தீது உடைக் கனாத்திறம் உரைத்த காதையும்-கண்ணகி தான் கண்ட தீங்கையுடைய கனாவின் திறத்தைத் தேவந்திக்கு உரைத்த காதையும்,
கனா நிலை யுரைòதற் பொருண் முடிபினைக் கூறுதலின் இது காதையாயிற் றென்பர் அடியார்க்கு நல்லார்.
-----------
-
௭௧-௨. 71-72 வினாத்திறத்து
நாடுகாண் காதையும்,
வினாத்திறத்து நாடுகாண் காதையும்-கவுந்தியடிகள் வினாவின் திறத்தையுடைய சோணாட்டின் வளத்தை அவர்கள் கண்ட காதையும், கண்ணகி மதுரை மூதூர் யாதென வினாவின திறம் எனலும் பொருந்தும்.
நாடு-மருத வளஞ் சான்றது.
---------
-
௭௨. 72 காடுகாண் காதையும்,
காடுகாண் காதையும்-அங்ஙனம் நாட்டினைக் கண்டு இன்புற்றவர் காட்டினைக் கண்டு துன்புற்ற காதையும்,
காடு - பாலை நிலமாயது.
--------
-
௭௩. 73 வேட்டுவ வரியும்,
வேட்டுவ வரியும்-வேட்டுவ மகளாகிய சாலினி கொற்றவை உருக்கொண்டு ஆடிய கோலவரியும்,
இது கூத்தாற் பெற்ற பெயர். வரி - வரிக்கூத்து.
----------
-
௭௩-௭௪. 73-74 தோட்டலர் கோதையொடு
புறஞ்சேரி இறுத்த காதையும்,
தோட்டு அலர் கோதையொடு புறஞ்சேரி இறுத்த காதையும்-இதழ் விரிந்த மாலையையுடைய கண்ணகியோடு மதுரைப் புறஞ்சேரியிற் சென்று தங்கிய காதையும்,
தோடு; தோட்டு என விகாரமாயிற்று. கோதை : ஆகுபெயர்.
----------
-
௭௪-௫. 74-75 கறங்குஇசை
ஊர்க்காண் காதையும்,
கறங்கு இசை ஊர்காண் காதையும்-முழங்கா நின்ற முரசொலியையுடைய மதுரையைக் கோவலன் கண்ட காதையும்,
----------
-
௭௫-௬. 75-76 சீர்சால் நங்கை (75)
அடைக்கலக் காதையும்,
சீர்சால் நங்கை அடைக்கலக் காதையும்-புகழ்மிக்க கண்ணகியாகிய நங்கையை மாதரிபாற் கவுந்தியடிகள் அடைக்கலங் கொடுத்த காதையும்,
---------
-
௭௬. 76 கொலைக்களக் காதையும்,
கொலைக்களக் காதையும்-கோவலன் கொலைக்களப்பட்ட காதையும்,
--------
-
௭௭. 77 ஆய்ச்சியர் குரவையும்,
ஆய்ச்சியர் குரவையும்-தம் சேரிக்கு உற்பாத சாந்தியாக மாதரி முதலான ஆய்ச்சியர் குரவைக் கூத்தாடின முறைமையும்
இதுவும் கூத்தாற் பெற்ற பெயர்.
--------
-
௭௭-௮. 77-78 தீத்திறம் கேட்ட
துன்ப மாலையும்,
தீத்திறம் கேட்ட துன்ப மாலையும்-கோவலன் கொலையுண்ட தீய செய்தியைக் கண்ணகி கேட்டு அவலித்து அரற்றிக் கவன்று கையாறுற்ற துன்ப வியல்பும்,
மாலை-தொடர்ச்சியுமாம்.
--------
-
௭௮-௯. 78-79 நண்பகல் நடுங்கிய
ஊர்சூழ் வரியும்,
நண்பகல் நடுங்கிய ஊர் சூழ்வரியும்-நண்பகற் பொழுதில் எல்லாரும் கண்டு நடுங்குமாறு கண்ணகி ஊரினைச் சூழ்வந்த ஊர்சூழ் வரியும்,
நடுங்கிய : செய்யிய வென்னும் எச்சம் : கண்ணகி நடுங்கிய என்றலுமாம். கண்ணகி நாணிறந்து வெளிப்பட்டு ஊர்சூழ வருவதனைப் பத்தினிப் பெண்டிர் கண்கூடாகக் காண்டலின் இஃது "ஊர்சூழ் வரியாயிற்று".
இதுவும் கூத்தாற் பெற்ற பெயரென்பர்.
---------
-
௭௯-௮0. 79-80 சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும்,
சீர்சால் வேந்தனொடு வழக்கு உரை காதையும்-புகழமைந்த பாண்டியனோடு கண்ணகி வழக்குரைத்த காதையும்,
உரை காதை : வினைத்தொகை; இறந்த காலம்.
---------
-
௮0. 80 வஞ்சின மாலையும், (80)
வஞ்சின மாலையும்-தானுரைத்த வழக்குந் தோற்று உயிருந் தோற்ற நெடுஞ்செழியன் தேவியை நோக்கிக் கண்ணகி வஞ்சினங்கூறிய இயல்பும்,
மாலை-இயல்பு.
-------
-
௮௧. 81 அழல்படு காதையும்,
அழற்படு காதையும் - கண்ணகியின் முலைமுகத்தெழுந்த தீ அவளேவிய இடமெங்குந் தாவி எரித்த காதையும்,
-------
-
௮௧-௨. 81-82 அருந்தெய்வம் தோன்றிக்
கட்டுரை காதையும்,
அருந்தெய்வம் தோன்றிக் கட்டுரை காதையும்-மதுரை மாதெய்வம் வெளிப்பட்டு அவளது பவத்தொடர்பினைக் கட்டுரைத்த காதையும்,
கட்டுரை-விளங்கச் சொல்லுதல் என்பது அரும்பதவுரை.
---------
-
௮௨-௩. 82-83 மட்டலர் கோதையர்
குன்றக் குரவையும்,
மட்டு அலர் கோதையர் குன்றக் குரவையும்-மது ஒழுக மலர்ந்த மாலையினையுடைய குறத்தியர் வேங்கை நிழற்கண் அவளைக் கண்டதற்கு உற்பாத சாந்தியாக முருகவேளை நோக்கி அக் குன்றின்கண் ஆடிய குரவையும்,
இதுவும் கூத்தாற் பெற்ற பெயர். 'கோதை யென்று பாடங் கூறிக் கோதைக்கு அவர்களெடுத்த குரவை யெனினும் அமையும்' என்பர் அடியார்க்கு நல்லார்.
---------
-
௮௩. 83 என்றுஇவை அனைத்துடன்
என்று இவை அனைத்துடன்-என்று சொல்லப்பட்ட இவ் விருபத்து நான்குடனே,
--------
-
௮௪. 84 காட்சி,
காட்சி-காட்சிக் காதையும்,
காட்சி- கல்லினைக் காண்டற்கு மனத்தாற் றுணிதல். குறவர் கையுறையுடன் செங்குட்டுவனைக் கண்டனராயினும் அது பொருளன்றாம்.
-------
-
௮௪. 84 கால்கோள்,
கால்கோள்-கல்லிலே கடவுளின் வடிவெழுதத் தொடங்கிய காதை,
கால்கோள்-தொடங்குகை. அடியார்க்கு நல்லார் கற்கொண்ட காதையும் எனப் பொருள் கூறிக் கற்கோள் கால்கோளென விகாரம் என்றனர். [17]"கற்கால் கொண்டனன்" என்பராகலின் அது பொருந்துவதன்று.
---------
-
௮௪. 84 நீர்ப்படை,
நீர்ப்படை- அங்ஙனம் எழுதின பத்தினிக் கடவுள் வடிவைக் கங்கை யாற்றில் நீர்ப்படுத்தின காதையும்,
---------
-
௮௪. 84 நடுகல்,
நடுகல்-பத்தினிக் கோட்டத்துத் தெய்வப் படிமத்திலே நங்கையைப் பிரதிட்டை செய்வித்த காதையும்,
--------
-
௮௫. 85 வாழ்த்து,
வாழ்த்து-பத்தினிக் கடவுள் செங்குட்டுவனை வாழ்த்தின காதையும்,
-------
-
௮௫. 85 வரந்தரு காதையொடு (85)
வரம் தரு காதையொடு-அங்ஙனம் வாழ்த்திய கடவுள் செங்குட்டுவற்கும் அங்கு வந்திருந்த மன்னரனைவர்க்கும் வரங்கொடுத்த காதையும்,
ஒடு : அசை ; எண்ணொடுவுமாம். தருதல்-கொடை; இடவழுவமைதி
[18]" காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்
றிருமூன்று வகையிற் கல்லொடு"
என்பதும், அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் ஈண்டு அறியற் பாலன.
----------
-
௮௬. 76 இவ்வா றைந்தும்
இவ்வாறைந்தும்-என்னும் இம் முப்பதுமாகிய,
௮௭. உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்
உரை இடையிட்ட பாட்டுடைச் செய்யுள்-இடையிட்ட உரையும் பாட்டுமுடை காப்பியத்தை,
உரை-உரைச்செய்யுள். பாட்டு-இசைப்பாட்டு. செய்யுள் பொருட்டொடர் நிலைச்செய்யுள்; ஆவது பெருங்காப்பியம்.
--------
-
௮௮. 77 உரைசால் அடிகள் அருள
-------
-
௮௮-௯. 77-78 மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்,
மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன்-மதுரையின்கட் கூலவாணிகனான சாத்தன் என்னும் நல்லிசைப் புலவன் கேட்டனன்.
கூலம் எண் வகைத்து: அவை. நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி என்பன. பதினெண்வகைத் தென்பர் கூத்த நூலார். [19]"பதினெண் கூலமும் உழவர்க்கு மிகுக" என்பது காண்க.
---------
-
௯0. 80 இது,
இது-இங்ஙனங் கூறியவிது,
௯0. பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென். (90)
பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்-இச்செய்யுளின் பாகுபாடாகிய வகையினைத் தெரிதற்குக் கருவியாகிய
முறைமையுடைய பதிகம் என்க.
தெரிந்த-தெரிதற்குக் கருவியாகிய என்க. பதிகம் எனினும் பாயிரம் எனினும் ஒக்கும். மரபிற் பதிகம் என மாறுக. என், அசை. இச்சொல் ஆசிரியப்பாவிற்கு முடிபு சிறப்புடைத்தென்பர்.
இனி, குறவர் இளங்கோவடிகளை நோக்கி அறிந்தருளென்ற வளவிலே செங்குட்டுவன் அதிசயித்து முகநோக்கப் பரிசில் காரணமாக வந்து அவனுழையிருந்த சாத்தன் அதனைக் குறிப்பானறிந்து அது விளைந்ததெல்லாம் யானறிவேன் என்றுரைத்தனன் என்றும், அங்ஙனம் அரசனோடு சாத்தன் கூறக்கேட்ட அடிகள் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுளென்றார் என்றும் அடியார்க்கு நல்லார் உரை கூறியுள்ளார். காட்சிக் காதையில் மலைவளí காணச்சென்று பேரியாற்றங்கரையில் தங்கிய செங்குட்டவனோடு இளங்கோவடிகளும் சென்றிருந்தனர் என்பதற்கு யாதொரு குறிப்பும் இன்றாகலானும், குறவர்கள் செங்குட்டுவனிடம் உரைத்தனரெனவே ஆண்டுக் கூறியிருத்தலானும், வஞ்சி நகரத்தில் வெள்ளி மாடத்தில் 'இளஙகோ வேண்மாளுடனிருந்தருளி'னன் என்புழி, இளங்கோ என்பதனை வேறு பிரித்து அடிகள் எனக் கூறினும் அவர் உடன் சென்றார் என்பது பெறப்படாமையானும், உடன் சென்றிருப்பினும் குறவர் அவரிடம் கூற அதனைச் செங்குட்டவன் கேட்டு அதிசயித்தனன் என்பது கூடாமையானும் அவ்வுரை பொருந்தாமையின் அரும்பத உரையாசிரியர் ஆய்ந்து கூறிய 'குணவாயிற் கோட்டத்துக் கடவுளர் முன்னர்த் துறந்திருந்த இளங்கோவடிகளுக்குக் கண்ணகி வானவர் போற்றத் தன் கணவனொடு கூடியது கண்டு செங்குட்டுவனுக்குரைத்த குறவர் வந்து, எல்லாமறிந்தோய்! இதனை அறிந்தருள் என்று கூறிப்போக, பின்பு செங்குட்டுவனைக் கண்டு போந்து அடிகளுழை வந்த சாத்தன் அது பட்டவாறெல்லாங் கூற என்னும் உரையினை மேற்கொண்டு, யாமும் இங்ஙனம் உரை கூறினாம் என்க.
இதில் (௬அ )'கடலாடு காதையும்' எனக் குறளடியும்,(அரு) 'வாழ்த்து வரந்தரு காதையொடு' எனச் சிந்தடியும் "இவ்வாறைந்தும்"(அ௬)எனக் குறளடியும் வந்து, ஏனையன நேரடியாயினமையின் இது குட்டச் செந்தூக்கு ஆகும். இணைக் குறளாசிரியப்பா எனக் கூறலுமாம்.
பதிகம் முற்றிற்று.
உரைபெறு கட்டுரை
௧. அன்று தொட்டுப் பாண்டியனாடு மழை வறங்கூர்ந்து வறுமையெய்தி வெப்பு நோயுங் குருவுந் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கியது.
௨. அதுகேட்டுக் கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்றும் மாறா தாயிற்று.
௩. அதுகேட்டுக் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வென்பான், நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத்தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென ஆடித்திங்க ளகவையி னாங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று.
௪. அதுகேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே.
உரை
௧. அன்று தொட்டுப் பாண்டியன் நாடு-பாண்டியனது நாடானது அன்று தொடங்கி, மழை வறம்கூர்ந்து வறுமை எய்தி, மழை வறத்தல் மிக்கு அதனால் வறுமையுற்று, வெப்பு நோயும் குருவும் தொடர-வெப்பு நோயும் கொப்புளமும் இடைவிடாது நலிதலின், கொற்கையில் இருந்த வெற்றி வேற் செழியன்-கொற்கைப் பதியில் இருந்த வெற்றி பொருந்திய வேலையுடைய வழுதியானவன், நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று-பத்தினி தேவிக்கு ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டு களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய-களவேள்வியாற் சாந்தி செய்து விழவெடுத்தலானே, நாடு மலிய மழை பெய்து-அவன் நாடு மிகவும் மழை பெய்து, நோயும் துன்பமும் நீங்கியது-முற்கூறிய நோயும் வறுமைத் துன்பமும் நீங்கிற்று.
அன்று என்றது கதையை உட்கொண்டு நின்றது. காவலன் செங்கோல் வளையக் கோவலன் வெட்டுண்டு வீழ்ந்த அன்றுதொட்டு என்றபடி, கூர்தல்-மிகுதல். வெப்பு-தொழுநோய் என்பர் அடியார்க்கு நல்லார். குரு-கொப்பளம், வெம்மையான் உண்டாவது. வெற்றி வேற் செழியன் பெயருமாம். மாவினால் ஆயிரம் பொற்கொல்லர் உருச்செய்து பலியிட்டனன் போலும். இவனே நெடுஞ்செழியனுக்குப் பின் அரசுகட்டிலேறி ஆட்சி யெய்தினான் என்பது பின் [20]நீர்ப்படைக் காதையால் அறியப்படும். சாத்தனாராற் புறத்திலே பாடப்பெற்ற நன்மாறன் என்பான் இவனே போலும்.
சாந்தி-ஊர்ச்சாந்தி. சாந்தி செய்து விழவெடுத்தலால் என மாறுக. இடத்து நிகழ்பொருளின் றொழில்கள் இடத்தின்மேல் நின்றன.
௨. அதுகேட்டு-அதனைக் கேட்டு, கொங்கு இளங்கோசர்-கொங்கு மண்டிலத்து இளங்கோக்களாகிய கோசர், தங்கள் நாட்டகத்து-தங்களது நாட்டின்கண், நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய-நங்கைக்குச் சாந்தியும் விழவுஞ் செய்தலான், மழை,-தொழில் என்றும் மாறாதாயிற்று-பெய்தற் றொழில் பெய்யும் பருவ நாளெல்லாம் வழுவாதாயிற்று.
அது என்பது செழியன் நன்மை செய்து தீமை நீங்கியதனை, முடி வேந்தரன்மையின் இளங்கோசர் எனப்பட்டனர். எனவே, கோசரென்பார் சிலர் அந்நாட்டினை ஆட்சிபுரிந்தா ரென்பது போதரும்.
௩. அதுகேட்டு-அதனைக் கேட்டு, கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான்-கடலை அகழாகவுடைய இலங்கையிலுள்ள கயவாகு என்னும் அரசன், நங்கைக்கு நாட் பலி பீடிகை கோட்டம் முந்துறுத்து ஆங்கு-அவ்விடத்தே நங்கைக்கு நாடோறும் பலி கொள்ளும் பலி பீடத்தை முற்படச் செய்து பின்பு கோட்டமும் அமைத்து, அரந்தை கெடுத்து வரம் தரும் இவள் என-துன்பங்களைக் கெடுத்து நமக்கு வேண்டும் வரங்களை இவள் தருமென்று துணிந்து, ஆடித் திங்கள் அகவையின்-ஆடித்திங்களிலே, ஆங்கு ஓர் பாடி விழாக்கோள்-தனது நகரின்கண் விழாச் செய்தலை, பன்முறை எடுப்ப-ஆண்டு தோறும் நிகழ்த்தா நிற்க, மழை வீற்றிருந்து-மழை குறைவின்றி நிலைபெறுதலானே, வளம்பல பெருகி-பல வளங்களும் நிறைந்து, பிழையா விளையுள நாடு ஆயிற்று-பொய்யாத விளைவினையுடைய நாடாயிற்று அவனது நாடு.
ஈண்டு அது கேட்டு என்றது பாண்டியன் செய்து பெற்றதனைக் கேட்டு என்றபடி மேல் வருவதுமது. முந்து உறுத்து-முற்படச் செய்து கோவலன் கொலையுண்டதும் கண்ணகியால் மதுரை எரியுண்டதும் ஆடித் திங்களிலாதலின் அத் திங்களிலே விழாச் செய்தன னென்க. அவை ஆடித் திங்களில் நிகழ்ந்தன வென்பது.
[21]“ஆடித் திங்கட் பேரிருட் பக்கத்
தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண
உரைசால் மதுரையோ டரைசுகே டுருமெனும்
உரையு முண்டே"
என்பதனாற் பெறப்படும். ஆடித் திங்களில் என்றமையின் ஆட்டை விழாவெனக் கொள்க. அகவை : ஏழனுருபு ; அகவையின் என்பதன் போலியுமாம். ஆங்கு, ஓர் : அசைகள். பாடி-நகரி.
௪. அதுகேட்டு-அதனைக் கேட்டு, சோழன் பெருங்கிள்ளி-பெருங்கிள்ளி யென்னுஞ் சோழன், கோழியகத்து-உறையூரிடத்தே, எத்திறத்தானும் வரம் தரும் இவள் ஓர் பத்தினிக் கடவுள் ஆகும் என-இவள் ஒரு பத்தினிக் கடவுளாதலின் எத்திறத்தானும் நமக்கு வரந்தருமெனக் கருதி, நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து-நங்கைக்குக் கோயிலும் எடுப்பித்து, நித்தல் விழா அணி நிகழ்வித்தோன்-நித்தமாகிய அணிவிழாவும் நிகழ்வித்தனன்.
பெருங்கிள்ளி-இவன் பெருநற்கிள்ளி யெனவும் படுவன். கோழி உறையூர் ; இதனை,
[22] “முறஞ்செவி வாரண முன்சம முருக்கிய
புறஞ்சிறை வாரணம்"
என்பதனானறிக. ‘எத்திறத்தானு மென்றார். இவள் பிறந்த உரிமைபற்றி என்பர் அடியார்க்கு நல்லார்.
உரைபெறு கட்டுரை-உரைத்துப் போதுகின்ற கட்டுரை என்பர் அரும்பதவுரையாசிரியர்.
உரை பெறு கட்டுரை முற்றிற்று.
--------------------------
[1] தொல். எழுத். சூ. ௪க ௬
[2] .திருநா. திருக்குறு. திருவிடைமரு.
[3] தொல். எழுத். சூ. ௩௫௪
[4] தொல். சொல். சூ. உஎஅ
[5] தொல். பொருள். சூ. ருருஉ--உரை
[6] தொல். எழுத். ௩௬௩
[7] அகம் ௬௩
[8] புறம். ௩0
[9] சிலப். காணல். ௩
[10] தொல். சொல். ௩க௬
[11] கலி. ௬எ.
[12] தொல். எழுத். ௪அ௩
[13] அகம்.அ0
[14] சிலப். அரும்
[15] குறள். அதி. அ:எ
[16] தொல். எழுத். சூ. ௪அக
[17] சிலப். உ௪. உரு௪
[18] தொல். பொருள். சூ. ௬0
[19] மதிவாணர் நாடகத்தமிழ் நூல்.
[20] சிலப். ௨௭: ௧௨௭-௧௩௮
[21] சிலப். உ௩ : ௧௩௪-எ
[22] சிலப். க0: உ௪எ
முதலாவது : புகார்க் காண்டம்
1. மங்கல வாழ்த்துப் பாடல்
(பொதுவற்ற சிறப்பினையுடைய புகார் நகரிலே வண்மையிற் சிறந்த மாநாய்கன் குலக்கொம்பரும், திருமகள் போலும் அழகும், அருந்ததி போலும் கற்பும் உடையவளுமாகிய கண்ணகிக்கும், ஒப்பற்ற செல்வமும், வண்மையுமுடைய மாசாத்துவான் மகனும், மடவார்களாற் செவ்வேள் என்று பாராட்டப்படுஞ் சிறப்பினையுடையவனுமாகிய கோவலற்கும் மணவணி காண விரும்பிய குரவர்கள் ஒரு பெருநாளில் யானை யெருத்தத்தின் மீது அணியிழையாரை இருத்தி மாநகர்க்கு மணத்தை அறிவித்தனர். பலவகை இயங்களும் ஒலித்தன. திங்களை உரோகிணி கூடிய நன்னாளில் நீல விதானத்து நித்திலப் பந்தர்க்கீழ்க் கோவலன் கண்ணகியை மறைவழி மணந்து தீவலஞ் செய்தனன். பொற் பூங்கொடி போன்ற மாதர்கள் மலரும் சாந்தும் சுண்ணமும் விளக்கும் பாலிகையும் நிறைகுடமும் முதலாய மங்கலப் பொருள்களோடு வந்து, ‘காதலனைப் பிரியாமல், கவவுக்கை நெகிழாமல் வாழ்க’ என வாழ்த்தி, மலர்தூவி, அருந்ததியன்னாளை அமளியின்கண் ஏற்றினார்கள். )
- (சிந்தியல் வெண்பாக்கள்)
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம்திரி தலான்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்.
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் 10
வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
ஓங்கிப் பரந்துஒழுக லான். ஆங்கு,
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய
15
பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே.
அதனால், 20
நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்,
அவளுந்தான், 25
போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்
மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ,
ஆங்கு, 30
பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளொடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான்
இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான்,
அவனுந்தான், 35
மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டுஏத்தும் செவ்வேள்என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டுஏத்தும் கிழமையான் கோவலன்என் பான்மன்னோ.
அவரை, 40
இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்
மணஅணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி
யானை எருத்தத்து அணிஇழையார் மேல்இரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்.
அவ்வழி, 45
முரசுஇயம்பின, முருகுஅதிர்ந்தன, முறைஎழுந்தன
பணிலம்,வெண்குடை
அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன, அகலுள்மங்கல அணிஎழுந்தது.
மாலைதாழ் சென்னி வயிரமணித் àணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்துச் 50
சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை.
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் 55
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார் 60
காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதுஅறுக எனஏத்திச் சின்மலர் கொடு தூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்அமளி ஏற்றினார், தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை 65
உப்பாலைப் பொன்கோட்டு உழையதா எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே.
-------------------------
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
-
௧-௩. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்-யாம் திங்களைப் போற்றுவேம்; திங்களைப் போற்றுவேம்; கொங்கு அலர் தார்ச்சென்னி குளிர் வெண்குடை போன்று-தாது பரந்த மாலையையுடைய சோழனது குளிர்ச்சியையுடைய வெண்குடை போன்று, இ-இந்த, அம்கண் உலகு-அழகிய இடத்தையுடைய உலகிற்கு, அளித்தலால்-பொதுவற அளி செய்தலால்.
அடுக்கு, சிறப்பின்கண் வந்தது; மேல்வரும் மூன்றடுக்குகளும் அன்ன. இது
[1]“விரவியும் வரூஉ மரபின வென்ப”
என்பதனால், பண்பும் பயனும் விரவிவந்த உவமம். உலகை அளித்தலான் என விரித்தலுமாம். இது பாடாண்டிணைக்கண். [2]“நடைமிகுத்தேத்திய குடைநிழன் மரபு” என்னுந் துறையாகும். ‘இத்தொடர் நிலைச் செய்யுட்குச் சிறந்த மங்கல மொழியாகலின் திங்களை முற்கூறினார்’ என்பர் அடியார்க்கு நல்லார். மங்கல வாழ்த்து என்பதற்கு இரட்டுற மொழிதலால் நூன்முகத்துரைக்கப்படும் மங்கலமாகிய வாழ்த்து என்றலும் பொருந்தும். [3]“முந்நீர் தாப்பண்” என்னும் புறப்பாட்டில், ‘உவவு மதி கண்டு விறலியும் யானும் வளவன் வெண்குடையை யொக்குமெனத் தொழுதனம்’ என்பதன் கருத்து இதனுடன் ஒத்திருப்பது காண்க.
------------
-
௪- ௬. ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம்திரி தலான்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்-யாம் ஞாயிற்றைப் போற்றுவேம் ; ஞாயிற்றைப் போற்றுவேம் ; காவிரிநாடன் திகிரிபோல்-பொன்னி நாட்டையுடைய சோழனது ஆழி போல், பொற்கோட்டு மேருவலம் திரிதலான்-பொன்னாலாய கொடுமுடியையுடைய மேருவை வலமாகத் திரிதருலால்.
திகிரி-ஆக்கினாசக்கரம். பொன்-பொலிவுமாம். இது தொழில் பற்றிய உவமம். நச்சினார்க்கினியர் புறத்திணையியலுரையில். ‘குடைநிழல் மரபு’ என்புழி ‘மரபு என்றதனாற் செங்கோலும் திகிரியும் போல்வனவற்றைப் புனைந்துரையாக்கலுங் கொள்க’ என்று உரைகூறி, திகிரியைப் புனைந்துரைத்தற்கு இதனையே எடுத்துக் காட்டியுள்ளார்.
---------------
-
எ-௯. மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்.
மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும்-யாம் பெரிய மழையைப் போற்றுவேம் ; பெரிய மழையைப் போற்றுவேம் ; நாம நீர் வேலி உலகிற்கு – அச்சத்தைத் தருகின்ற கடல்சூழ் உலகிற்கு, அவன் அளிபோல்-அவன் அளி செய்யுமாறு போல, மேல் நின்று தான் சுரத்தலான்-மேலாகி நின்று தன் பெயலால் வளஞ்சுரத்தலால்.
நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. வேலி-சூழ்தல். அளி-ஈகை. தான் : அசை. மேலே பெயர் கூறினமையின் அவன் எனச் சுட்டி யொழித்தார்.
--------------
-
க0-௧௨. பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
ஓங்கிப் பரந்துஒழுக லான்.
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்-யாம் அழகிய புகாரினைப் போற்றுவேம் ; அழகிய புகாரினைப் போற்றுவேம்; வீங்கு நீர் வேலி உலகிற்கு-கடலை வேலியாகவுடைய உலகின்கண், அவன் குலத்தோடு ஓங்கிப் பரந்து ஒழுகலான்-தொன்றுதொட்டு அவன் குலத்தோடு பொருந்தி உயர்ந்து பரந்து நடத்தலால்,
பூ – அழகு, பொலிவு. பூம்புகார் : மெலித்தல் விகாரம். வீங்கு நீர் - மிக்க நீர் ; ஆவது கடல். அவன் குலத்தினைப் புகழ்வார் இதனையும் புகழ்வரென்பது கொள்க.
{அடி. இறப்பப் புனைந்துரைத்தற்குக் குடை நிழன் மரபு என்றதனால் திகிரியும் கொடையும் உயர்ச்சியும் புனைந்து கூறியவாறாயிற்று.}
{ அரும். இவை நான்கு சிந்தியல் வெண்பாவும் செம்பியனையும் புகாரினையும் சிறப்பித்தன.}
----------------
-
௩-௯. ஆங்கு,
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய
பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே.
ஆங்கு-ஆதலால், பொதியில் ஆயினும்-பொதியிலும், இமயம் ஆயினும் – இமயமும், பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும் – பதியினின்றும் பெயர்தலையறியாத பழைய குடிகள் பொருந்தின பொதுமை நீங்கிய சிறப்பினையுடைய புகாரும், நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை-ஆதியிற்றோன்றிச் சலிப்பின்றி நிலைபெற்றன வென்று கூறினல்லது, ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்-அவற்றின்கண் உயர்ந்தோர் இருத்தலான் அவற்றிற்கு முடிபுண்டென்று கூறார், முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே-முற்றிய கேள்வியால் அனைத்தும் உணர்ந்த பெரியோர்.
அவை அத்தன்மைய வாதலானும், உயர்ந்தோருண்மையானும் முழு துணர்ந்தோர் ஒடுக்கம் கூறார் என்க. ஆயினும் என்பது ஓர் எண்ணிடைச்சொல் ;
[4]“கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும்
கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே” )
என்னும் புறனடையாற் கொள்ளப்படும். பதியெழு வறியாமைக்குக் காரணம் செல்வ மிகுதியும் பகையின்மையும் ஆம். பொது வறு சிறப்பு-தனக்கே யுரிய சிறப்பு. நிலீஇயர் என்று பாடங்கொண்டு, நிற்பதாக வென்றுரைப்பர் அரும்பதவுரை யாசிரியர். முடித்த கேள்வி-புலத்துறை முற்றிய கேள்வி ; கரை கண்ட கேள்வி.
{அடி. உயர்ந்தோர்-முனிவனும், இறைவனும், அரசனும் : இனி உயர்ந்தோர்-அகத்தியனும், இருடிகளும் பழங்குடியினுள்ளாரும் என்றுமாம்; என்றது இமயத்தோடும் பொதியிலோடுமுள்ள இருடிகளையும் புகாரிலுள்ள வணிகரையும் உவமித்தவாறாம்.}
------------
-
௨0. அதனால்,
அதனால்-அங்ஙனம் நிலைபேறுடையதாதலால்,
-----------
-
௨௧-உஉ. நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
நாக நீள் நகரொடு நாக நாடு அதனொடு-நெடிய சுவர்க்கத்துடனும் நாகருலகத்துடனும் பொருந்திய, போக நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது தன்னில்-நீண்ட புகழும் போகமும் நிலை பெற்ற புகார் என்னும் அந்நகரின்கண்,
அவற்றொடும் ஒக்க மன்னும் புகார் எனலுமாம் : எதிர்நிரனிறை.
--------------
-
௨௩-௪. மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்,
மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகை வான் கொடி அன்னாள்-விசும்பிடத்து மழையை நிகர்த்த வண்ணம் பொருந்திய கையையுடைய மாநாய்கனது குலத்திற்றோன்றிய பூங்கொம்பும் மேலான பொற்கொடியும் போல்வாள், ஈராறு ஆண்டு அகவையாள்-பன்னீராண்டிற்கு உட்பட்ட பிராயத்தினளாயினள்,
மாநாய்கன்-சிறப்புப்பெயர் போலும். ஈகை-பொன். மேல் ‘பொன்னங் கொடிபோலப் போதந்தாள்’ என்பது காண்க. வான் கொடி-வான வல்லியுமாம். அகவை – உட்பட்டது.
---------
-
௨௫. அவளுந்தான்,
அவளும் தான் – அவள் தான்
உம்மை : இசை நிறை. தான் - கட்டுரைச் சுவைபட நின்றது.
போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்
மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ,
------------
௨௬-௯. போதில் ஆர் திருவினாள் புகழுடை வடிவு என்றும்-தாமரைப் பூவிற் பொருந்திய திருமகளின் புகழுடைய வடிவு இவள் வடிவை யொக்குமென்றும், தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்-குற்றமிலலாத அருந்ததியின் கற்பு இவள் கற்பை யொக்குமென்றும், மாதரார் தொழுது ஏத்த-உலகின் மாதரார் தன்னைத் தொழுது ஏத்தும்படி, வயங்கிய பெருங் குணத்துக் காதலாள்-விளங்கிய பெருங்குணங்களைக் காதலிப்பாள், பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ-அவள் கண்ணகி யென்று பெயர் கூறப்படுவாள்.
திருவினாள் , ஒரு சொல், இவள் வடிவு என்று வருவித்துரைக்க. தீது – பிறர்நெஞ்சு புகுதல் ;
[5]“ மண்டிணி ஞாலத்து மழைவளந் தரூஉம்
பெண்டி ராயிற் பிறர்நெஞ்சு புகாஅர்”
என்பது காண்க.
திறம்-கற்பு. பெருங் குணத்தாற் காதலிக்கப்படுபவள் என்றுமாம். மன்னும் , மன், ஓ என்பன அசைநிலை இடைச்சொற்கள்.
-----------
-
௩0- ௪. ஆங்கு,
பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளொடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான்
இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான்
ஆங்கு-அப்புகாரினிடத்து, பெருநிலம் முழுதும் ஆளும் பெருமகன் தலைவைத்த-நெடுநிலம் முழுவதையும் தனியே ஆளும் சோழ மன்னனை முதற்குடியாக வைத்து எண்ணுதலையுடைய, ஒரு தனிக் குடிகளோடு-ஒப்பற்ற குடிகளாகிய தன் கிளையோடு கூடி, உயர்ந்து ஓங்கு செல்வத்தான் – மிக்கோங்கிய செல்வத்தையுடையான், வருநிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்-அறநெறியால் வந்த பொருளை வறியராய பிறர்க்கு உண்பிக்கும் மாசாத்துவான் என்று பெயர் கூறப்படுவான்; இருநிதிக் கிழவன் மகன் ஈரெட்டு ஆண்டு அகவையான்-அவ்விருநிதிக் கிழவனுடைய மகன் பதினாறாண்டுக்கு உட்பட்ட பிராயத்தானாயினன்,
பெருமகன்-கரிகால னென்பர் அடியார்க்கு நல்லார்; அங்ஙனந் துணிதல் சாலாதென்பது பின்னர் விளக்கப்படும், ஒப்பின்மையின் மிகுதி கூறுவார் ஒரு தனிக்குடிகள் என்றார். உயர்ந்தோங்கு : ஒரு பொருளிரு சொல். வருநிதி- கலத்தினுங் காலினும் வருநிதி யென்றுமாம். பலர்க்கும் என்னும் பாடத்திற்கு இல்லார் பலர்க்கும் என்றுரைக்க. ஆர்த்தும்-நிறைவிக்கும் என்றுமாம். மாசாத்துவான் - இயற்பெயர். இருநிதிக் கிழவன்-சிறப்புப்பெயர். மாசாத்துவான் குடிப்பெயர் என்பர் அரும்பதவுரை யாசிரியர். இருநிதி-பெரிய நிதி : சங்கநிதி, பதுமநிதி யிரண்டும் என்றுமாம். தலைவன் பதினையாண்டும் பத்துத் திங்களும் புக்கவனும், தலைவி பதினோராண்டும் பத்துத் திங்களும் புக்கவளும் ஆதல் வேண்டும் என்பராகலின், அகவையான், அகவையாள் என்றார். இதனை,
[6]“களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்
திங்க ளிரண்டின் அகமென மொழிப”
என்னுங் களவியற் சூத்திர உரையானறிக.
-------------
-
௩௫. அவனுந்தான்,
அவனும்தான்-அவன்றான்,
ஈண்டும் ‘அவளுந்தான்’ என்புழி உரைத்தாங் குரைக்க.
-------------
-
௩-௩௯. மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டுஏத்தும் செவ்வேள்என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டுஏத்தும் கிழமையான் கோவலன்என் பான்மன்னோ.
மண் தேய்த்த புகழினான்-பூமி சிறுகும்படி வளர்ந்த புகழையுடையான்; மதிமுக மடவார்தம் பண்தேய்ந்த மொழியினார் ஆயத்து-பண்ணை வென்ற மொழியாராகிய மதிபோலும் முகத்தையுடைய மடவார் தமது ஆயத்தின்கண், பாராட்டிக் கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசைபோக்கி-உலகிலே கண்டு ஏத்தப்படும் செவ்வேள் என்று பாராட்டி அவன் இசையைப் பரப்பி, காதலால் கொண்டு ஏத்தும் கிழமையான்-காமக்குறிப்பின் உட்கொண்டு ஏத்துதற் குரியான் ; கோவலன் என்பான் மன்னோ-அவன் கோவலனென்று பெயர் கூறப்படுவான்,
மொழியினராகிய மடவார் தம் ஆயத்துச் செவ்வேள் என்று பாராட்டி எனக்கொண்டு கூட்டுக. கண்டேத்தும் என்றது வேற்றுமை. செவ்வேளைக் கூறினமையின் கோவலனும் நிறஞ் செய்யனாதல் வேண்டும். போக்கி என்னும் எச்சத்தைத் திரித்து. மடவார் இசை பரப்ப அதுகண்ட ஏனோரும் காதன்மையாற் கொண்டு ஏத்தப்படும் கிழமையான் எனலுமாம். கிழமையான்-கொடை, வீரம், அழகு என்றிவற்றிற்குரியான். மொழியினால் என்பது பாடமாயின் மடவார் மொழியினாற் பாராட்டி யென்க. பத்தினியை ஏத்துதல் கருத்தாகலானும், கதைக்கு நாயகியாகலானும் கண்ணகியை முற்கூறினார் என்க.
{அடி. இனி மடவார் என்பதற்குப் பூமாதும், கலைமாதும், சயமாதும், புகழ்மாதும், புவிமாதும் என்றுகூறி, இவர், அழகிற்கும் அறிவிற்கும் ஆண்மைக்கும் புகழுக்கும் பொறைக்கும் இவனென் றுட்கொண்டு ஏத்துங் கிழமையான் எனினும் அமையும்.}
------------
-
௪0-உ. அவரை,
இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்
மணஅணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி
அவரை-அத்தன்மையார் இருவரையும், இரு பெருங்குரவரும்-பெருமையுடைய இருவர் குரவர்களும், ஒரு பெரு நாளால்-ஒரு பெருநாளிலே, மண அணிகாண மகிழ்ந்தனர்-மணக்கோலங்காண விரும்பினர்; மகிழ்ந்துழி-விரும்பியவளவிலே,
குரவர்-தந்தையும் தாயும். மணவணி காண என்பது ஒரு சொல்லாய் அவரை யென்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. நாளால்-நாளில் ; வேற்றுமை மயக்கம். மகிழ்தல்-விரும்புதல். உழி-அளவு
யானை எருத்தத்து அணிஇழையார் மேல்இரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்.
----------
-
௪௩- ௪யானை எருத்தத்து அணியிழையார் மேல் இரீஇ மாநகர்க்கு ஈந்தார் மணம்-அவர் யானையின் எருத்தத்தின் மேல் மங்கல மகளிரை இருத்தி அம்மாநகர்க்கு இவர் மணமென்னும் மகிழ்ச்சியை ஈந்தார்,
எருத்தம்-புறக்கழுத்து. ஈந்தார்-அறிவித்தாரென்றபடி; சில மகளிரை அணிந்து யானையேற்றி அறிவித்தல் மரபென்க.
-----------
-
௪௫-எ. அவ்வழி,
முரசுஇயம்பின,முருடுஅதிர்ந்தன, முறைஎழுந்தன பணிலம்,வெண்குடை அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன, அகலுள்மங்கல அணிஎழுந்தது.
அவ்வழி-அவ்விடத்து, முரசு இயம்பின - முரசு முதலியன இயம்பின ; முருடு அதிர்ந்தன-மத்தளம் முதலியன அதிர்ந்தன ; முறை எழுந்தன பணிலம்– சங்கம் முதலியன முறையே முழங்குதலெழுந்தன, வெண்குடை அரசு எழுந்ததொர் படி எழுந்தன-வெண்குடைகள் அரசன் உலா வெழுந்தபடியாக எழுந்தன , அகலுள் மங்கல அணி எழுந்தது-ஊரிலே மங்கல நாண் வலஞ் செய்தது.
முருடு-பத்தலுமாம். ஓர், விகாரம். அகலுள்-தெருவுமாம். எழுந்தது-எழுந்து வலஞ் செய்ததென்றபடி. ‘மங்கலவணி எங்கும் எழுந்தது’ என்ற அடியார்க்கு நல்லார் கருத்து விளங்குமாறின்று.
-------------
-
௪அ-௪௯. மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
மாலை தாழ் சென்னி வயிரமணித் தூணகத்து-மாலைகள் பொருந்திய சென்னியையுடைய வயிரமணித் தூண்களையுடைய மண்டபத்தில், நீலவிதானத்து நித்திலப் பூம்பந்தர்க்கீழ்- நீலப்பட்டினாலாகிய மேற்கட்டியின்கீழ் அமைத்த அழகிய முத்துப் பந்தரிடத்தே,
தாழ்தல்-தங்குதல் தொங்குதலுமாம். தூண்-மண்டபத்திற்கு ஆகுபெயர். அத்து சாரியை. பூ-பொலிவு. முத்து ஒளி பெறுதல் நோக்கி நீல விதானங் கூறினார். அக்காலத்து முத்து நோக்குவார் ஒப்புக்கு நீலப்பட்டினை விரித்து நோக்குவர் என்ப.
-------------
-
ரு0-௩. வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்துச்
சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை.
வான் ஊர் மதியம் சகடு அணைய-வானின்கட் செல்லும் திங்கள் உரோகிணியைச் சேர்ந்த நாளிலே,வானத்துச் சாலி ஒரு மீன் தகையாளை-வானிலுள்ள ஒரு மீனாகிய அருந்ததி போலும் கற்புடையாளை, கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட-பிதாமகன் மறைநெறியிற் சடங்கு காட்டக் கோவலன் கலியாணஞ்செய்ய, தீவலம் செய்வது-அவ்விருவரும் தீயை வலஞ்செய்யு மிதனை, காண்பார் கண்நோன்பு என்னை-காண்கின்றவர் கண்கள் முன்பு செய்த தவம் யாதுகாண் என்பாராய்,
சகடு-உரோகிணி ; பண்டைத் தமிழ்மக்கள் உரோகிணியைத் திருமணத்திற்குச் சிறந்த நாளாகக் கொண்டிருந்தனர் ; உரோகிணியைக் கூடின நாளில் சந்திரன் உச்சனாகலின் எவ்வகைத் தீங்கும் நீங்குமென்னும் கருத்தினர் போலும் :
[7]“அங்க ணிருவிசும்பு விளங்கத் திங்கட்
சகட மண்டிய துகடீர் கூட்டத்துக்
கடிநகர் புனைந்து கடவுட் பேணிப்
படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ
வதுவை மண்ணிய”
என்பதுங் காண்க. கலியாணஞ் செய்ய எனவும், அவர் எனவும் சொற்கள் விரித்துரைக்க. மாமுது பார்ப்பான் – பிரமன்; ஈண்டு இருவரையும் இடைநின்று பொருத்துவிக்கும் பார்ப்பானாவன்;
[8]“பாங்க னிமித்தம் பன்னிரண் டென்ப”
என்னுஞ் சூத்திரவுரையில், ‘எண் வகை மணத்தினும் இடைநின்று புணர்க்கும் பார்ப்பான் இருவகைக் கோத்திர முதலியனவும் தானறிந்து இடைநின்று புணர்த்தல் வன்மை அவர் புணர்தற்கு நிமித்தமாதலின், அவை அவன் கண்ண வெனப்படும். இவனைப் பிரசாபதி யென்ப,’ என நச்சினார்க்கினியர் கூறினமை காண்க. பிரசாபதி-பிரமன். காண்பார்கள் நோன்பு எனப் பிரித்துரைத்தலுமாம். இதனைப் பிரசாபத்தியம் என்பர் அடியார்க்கு நல்லார். அது தமிழில் ஒப்பு என்று கூறப்படும்; ஒப்பாவது மைத்துனக் கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறாது கொடுப்பது என்பர்.
---------------
-
ரு௪- ௯. விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
விரையினர் மலரினர் விளங்கு மேனியர் உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்-விளங்குகின்ற மேனியையுடைய மகளிர் விரையினராயும் மலரினராயும் உரையினராயும் பாட்டினராயும் ஒதுங்கிப் பார்க்கும் பார்வையினராயும், சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்-அண்ணாந்துயர்ந்த இளைய முலையினையுடைய மகளிர் சாந்தினராயும் புகையினராயும் விளங்குகின்ற மாலையினராயும் இடிக்கப் பெற்ற சுண்ணத்தினராயும், விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை முளைக்குடம் நிரையினர் முகிழ்த்த மூரலர்-அரும்பிய புன்முறுவலையுடைய மகளிர் விளக்கினராயும் கலத்தினராயும் விரிந்த முளைப்பாலிகையினராயும் நிறை குடத்தினராயும் வந்து திரண்டனர்;
விரை-கோட்டம் முதலாயின. உரை-பாராட்டுரை. புகை-அகில் முதலியவற்றானாய நறும்புகை. சுண்ணம்-பூசுகின்ற பொற்பொடி கலம்-அணிகலன். குடம்-நிறைகுடம். நிரையினர்-கூடினர். மேனியரும் முலையினரும் மூரலருமாகிய மகளிர் விரை முதலியனவுடையராய் வந்து கூடினரென்க: விரையினர் மலரினராகிய விளங்கு மேனியர் என்றிங்ஙனம் கூட்டி, இக்கொடியன்னார் என முடிப்பர் அரும்பதவுரையாசிரியர்.
--------------
-
௬0. போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார்
விரிகூந்தல் பொலன் நறுங்கொடி அன்னார்-அப்பொழுது மலரணிந்த தழைத்த கூந்தலையுடைய அழகிய பொற்கொடி போலும் மடந்தையர்.
-----------
-
௬௧-உ. காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதுஅறுக எனஏத்திச் சின்மலர் கொடுதூவி
காதலற் பிரியாமல்-இவள் தன் காதலனைக் கண்ணினும் மணத்தினும் பிரியாதிருக்க, கவவுக்கை ஞெகிழாமல்-இவள் காதலனும் இவளை அகத்திட்ட கை நெகிழாருக்க. தீது அறுக என ஏத்தி-இருவரும் தம் கூட்டத்திற்கு இடையூறின்றி நெடிது வாழ்வாராக என வாழ்த்தி, சின்மலர்கொடு தூவி-சிலமலரைத் தூவி.
கவவு-அகத்தீடு, உரிச்சொல். ஏத்தி என்பதற்குத் தம் வழிபடு தெய்வத்தை நினைந்து துதித்து என்னலுமாம். மலர்கொடு-மலரை.
--------------
-
௬௩-அ. அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்அமளி ஏற்றினார், தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை
உப்பாலைப் பொன்கோட்டு உழையதா எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே
அங்கண் உலகில் அருந்ததி அன்னாளை-அழகிய இடத்தையுடைய புவியின் அருந்ததி போல்வாளை, மங்கலநல் அமளி ஏற்றினார் தங்கிய-பொருந்திய நல்ல மங்கல அமளியிடத்தே ஏற்றினார்; இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை-இவ்விடத்து நின்றும் இமயத்தில் இருத்திய புலியானது, உப்பாலைப் பொற்கோட்டு உழையதா-அதனது உப்பாலிடத்தாயே நிற்பதாக; எப்பாலும் செருமிகு சினவேற் செம்பியன் ஒரு தனி ஆழி உருட்டுவோன் எனவே-எப்பக்கத்தும் தன் போர் மேம்பட்ட சினம் பொருந்திய வேலையுடைய வளவன்-மாறில்லாத தன் திகிரியை உருட்டுவோனாக எனச் சொல்லி யென்க.
உலகினருந்ததி: இல்பொருளுவமம். அமளி-பள்ளி, படுக்கை. வேங்கை-புலிக்கொடி. வாள்-கொடுமை; புலிக்கு அடை. பொற்கோடு-பொன்மலை; இமயம்: ஈண்டுச் சுட்டுமாத்திரை. சினவேல்-இலக்கணை வழக்கு. உருட்டுவோனாக என விரிக்க. கொடியன்னார் ஏத்தித் தூவி, வேங்கை உழையதாகச் செம்பியன் உருட்டுவோனாக எனச் சொல்லி அருந்ததியன்னாளை அமளியேற்றினார் என்க.
இச்செய்யுள் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.
மங்கலவாழ்த்துப் பாடல் முற்றிற்று
-----------------------
[1] . தொல். பொருள். சூ: ௨௭௭.
[2] தொல். பொருள். சூ: ௬௧
[3] . புறம். ௬0.
[4] தொல். இடைச்சொல்லியல்.
[5] . மணி. உ௨: ௪௫-௬.
[6] . இறை. அகப்.சூ-௩௨.
[7] . அகம்: ௧௩௬.
[8] . தொல். பொருள்: ௧0௪.
-----------------
2. மனையறம்படுத்த காதை
(அரிய தவத்தினைச் செய்தோர் அதன்பயனாய இன்பத்தை நுகர்தற்கு உத்தரகுருவில் தோன்றுவது போலப் புகார் நகரிலே கொழுங்குடிச் செல்வர்க்குத் தோன்றிய கண்ணகியும் கோவலனும் எழுநிலை மாடத்தின் இடைநிலத்தில் இருந்தபொழுது பலவகைப் பூக்களின் மணத்துடன் கூடித் தென்றல் வந்துற, இருவரும் மகிழ்ச்சிக்கு நிலா முற்றத்தை அடைந்தனர். இருவருடைய தாரும் மாலையும் ஒன்றோடொன்று மயங்கின. கோவலன் தீராக்காதலுடன் கண்ணகியின் முகத்தை நோக்கி, அவளுடைய நுதல், புருவம், கண், இடை, நடை சொல் முதலியவற்றைப் பொருந்திய உவமைகளாற் புனைந்துரைத்து, மற்றும் மாசறு பொன்னே! வலம்புரிமுத்தே! காசறுவிரையே! கரும்பே! தேனே! அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே! "நின்னை", மலையிடைப் பிறவா மணியே யென்கோ! அலையிடைப் பிறவா அமிழ்தே யென்கோ! யாழிடைப் பிறவா இசையே யென்கோ! என்று பலபடப் பாராட்டி, அவளுடன் களிப்புற்று ஒழுகுங்கால், கண்ணகி விருந்து புறந்தருதல் முதலிய இல்லற வாழ்க்கையில் மேம்படுதலைக் காண விரும்பிய கோவலன் தாய் பலவகைச் செல்வங்களோடும், உரிமைச் சுற்றமோடும், அவர்களைத் தனியே இருக்கச் செய்ய வியத்தகு சிறப்புடன் இல்லறம் நடாத்துவதிற் கண்ணகிக்குச் சில யாண்டுகள் கழிந்தன.)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்
முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது ஆகி
அரும்பொருள் தருஉம் விருந்தின் தேஎம் 5
ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய 10
கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழிக்
கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை
அரும்புபொதி அவிழ்ந்த சுரும்புஇமிர் தாமரை 15
வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ
மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக்
கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த்
தாதுதேர்ந்து உண்டு மாதர்வாள் முகத்துப்
புரிகுழல் அளகத்துப் புகல்ஏக் கற்றுத் 20
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்
கண்டு மகிழ்வுஎய்திக் காதலில் சிறந்து, 25
விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும்
நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி,
சுரும்புஉணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி
முதிர்க்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் 30
கதிர்ஒருங் கிருந்த காட்சி போல,
வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த
வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத் 35
தீராக் காதலின் திருமுகம் நோக்கிக்
கோவலன் கூறும்ஓர் குறியாக் கட்டுரை
குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின் 40
பெரியோன் தருக திருநுதல் ஆகஎன,
அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப்
படைவழங் குவதுஓர் பண்புண்டு ஆகலின்
உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்
இருகரும் புருவ மாக ஈக்க, 45
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வக் காவல்
படைநினக்கு அளிக்கஅதன் இடைநினக்கு இடையென,
அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே 50
அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது?
மாஇரும் பீலி மணிநிற மஞ்ஞைநின்
சாயற்கு இடைந்து தண்கான் அடையவும்,
அன்னம் நல்நுதல் மெல்நடைக்கு அழிந்து 55
நல்நீர்ப் பண்ணை நனிமலர்ச் செறியவும்,
அளிய தாமே சிறுபசுங் கிளியே.
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும்
மடநடை மாதுநின் மலர்க்கையின் நீங்காது 60
உடன்உறைவு மரீஇ ஒருவா ஆயின,
நறுமலர்க் கோதை.நின் நலம்பா ராட்டுநர்
மறுஇல் மங்கல அணியே அன்றியும்
பிறிதுஅணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பல்இருங் கூந்தல் சின்மலர் அன்றியும் 65
எல்அவிழ் மாலையொடு என்உற் றனர்கொல்?
நானம் நல்அகில் நறும்புகை அன்றியும்
மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்? 70
திங்கள்முத்து அரும்பவும் சிறுகுஇடை வருந்தவும்
இங்குஇவை அணிந்தனர் என்உற் றனர்க்கொல்?
மாசறு பொன்னே. வலம்புரி முத்தே.
காசறு விரையே. கரும்பே. தேனே.
அரும்பெறல் பாவாய். ஆர்உயிர் மருந்தே. 75
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே.
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ்இருங் கூந்தல் தையால் நின்னைஎன்று 80
உலவாக் கட்டுரை பலபா ராட்டித்
தயங்குஇணர்க் கோதை தன்னொடு தருக்கி
மயங்குஇணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்,
வாரொலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி
மறுப்புஅருங் கேண்மையொடு அறப்பரி சாரமும் 85
விருந்து புறந்தருஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமொடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின்
காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்குஎன்.
(வெண்பா) 90
தூமப் பணிகள்ஒன்றித் தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம்
தொலையாத இன்பம்எலாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்ப்போல் நின்று.
----------------------
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
-
௧-௭. உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்
முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது ஆகி
அரும்பொருள் தருஉம் விருந்தின் தேஎம்
ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட-கலத்தானும் காலானும் தந்து ஈட்டுதலால், அரும்பொருள் தரூஉம் விருந்தின் தேஎம் ஒருங்கு தொக்கன்ன உடைப்பெரும் பண்டம்-பெறுதற்கரிய பொருளைத்தரும் புதுமையுடைய பண்டங்கள், முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்-ஆர்கலிசூழ்ந்த ஞாலமுழுதும் ஒரு சேர வரினும், வழங்கத் தவாஅ வளத்தது ஆகி-வழங்கத் தொலையாத வளத்தினையுடையதாகி, உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின் பரதர் மலிந்த பயம் கெழு மாநகர்-புகழமைந்த சிறப்பினையுடைய அரசரும் விரும்பும் செல்வத்தையுடைய பரதர் மிக்க பயன் பொருந்திய பெரிய புகார் நகரின்கண்,
பரதர் – வணிகர்: கடலோடிகள் என்பது அரும்பதவுரை; பரதரால் மேன்மையுற்ற என்றுமாம். ஞாலம் : ஆகுபெயர். தேஎம்-தேயம். புகாரின்கண் பிறநாட்டு அரும்பொருள்கள் வந்து தொகுதலை,
"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமு மகிலும்
தென்கடன் முத்துங் குணகடற் றுகிரும்
கங்கை வாரியுங் காவிரிப் பயனும்
ஈழத் துணவுங் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெளிய வீண்டி"
என்பதனானறிக. கலம்-மரக்கலம். கால்-வட்டை; சாகாடு. தருவனர், எச்சமுற்று. ஈட்டுதலால் தொக்கன்ன பண்டம் வழங்கத்தவா வளத்ததாகி அரைசு விழை திருவினையுடைய பரதர் மலிந்த நகர் என்க.
-------------
-
௮-௧௧. குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய
கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்-குலவொழுக்கத்திற் குன்றாத நற்குடியினராகிய செல்வர்கட்கு, அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர் உத்தர குருவின் ஒப்பத்தோன்றிய –அங்ஙனம் அறத்தின் ஈட்டிய பொருளாலே தலைப்படு தானத்தைச் செய்தோர் எய்தும் உத்தரகுருவை அந்நகர் ஒக்கும்படி தோன்றிய, கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்-பெரிய மலர்போலும் கண்ணினையுடையாளும் கொழுநனும்-பெரிய மலர்போலும் கண்ணினையுடையாளும் அவளாற் காதலிக்கப்படும் கொழுநனும்,
குலவொழுக்கமாவன : "நெடுநுகத்துப் பகல்போல, நடுவு நின்ற நன்னெஞ்சினோர், வடுவஞ்சி வாய்மொழிந்து, தமவும் பிறவுமொப்ப நாடிக் கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது" வாணிகஞ் செய்தல் முதலியன. செல்வர் என்றது இருவர் தந்தையையும். அருந்தவம்-ஈண்டுத் தலைப்படு தானத்தின் மேற்று. முடித்தோர் எய்தும் என ஒரு சொல் வருவிக்க. உத்தர குரு-போக பூமியாறனுள் ஒன்று. தலைப்படு தானம் இன்னதென்பதனை,"
-
"அறத்தி னாற்றிய வரும்பெரும் பொருளைப்
புறத்துறைக் குற்றமூன் றறுத்தநற் றவர்க்குக்
கொள்கெனப் பணிந்து குறையிரந் தவர்வயின்
உள்ள முவந் தீவ துத்தம தானம்"
என்பதனானும், போக பூமியின் இயல்பினை,
"பதினாறாட்டைக் குமரனுஞ் சிறந்த
பன்னீ ராட்டைக் குமரியு மாகி
ஒத்த மரபினு மொத்த வன்பினும்
கற்பக நன்மரம் நற்பய னுதவ
ஆகிய செய்தவத் தளவு மவ்வழிப்
போகம் நுகர்வது போக பூமி"
என்பதனானும், போக பூமியின் வகையா றனையும்,
"ஆதியரி வஞசம் நல்லரி வஞ்சம்
ஏம வஞ்சம் இரண வஞ்சம்
தேவ குருவம் உத்தர குருவமெனப்
போக பூமி யறுவகைப் படுமே"
என்பதனானும் அறிக. கய-பெருமை;
"தடவும் கயவும் நளியும் பெருமை"
என்பது தொல்காப்பியம். கயமலர்-நீர்ப்பூ என்னலுமாம். இவர்கள் தோன்றிப் போகம் நுகர்தலான் புகார் உத்தரகுருவை யொத்ததென்க. மாநகர்க்கண் அந்நகர் உத்தர குருவை யொக்கும்படி செல்வர்க்குத் தோன்றிய கண்ணியும் கொழுநனும் என்றுரைக்க
-----------
-
௧௨-௩. மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழிக்
மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி-எழுநிலை மாடத்து இடைநிலைக் கண்ணே மயன் நிருமித்து வைத்தாலொத்த அழகிய கால்களையுடைய கட்டிலின்மீது இருந்தவளவில்.
மயன்-தெய்வத் தச்சன். விதித்தல்-மனத்தால் நிருமித்தல். மணி-பவழம் முதலியவுமாம். நெடுநிலை-எழுநிலை. இடைநிலம்-நான்காம் நிலம்.
---------
-
௧௪-உரு. கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை
அரும்புபொதி அவிழ்ந்த சுரும்புஇமிர் தாமரை
வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ
மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக்
கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த்
தாதுதேர்ந்து உண்டு மாதர்வாள் முகத்துப்
புரிகுழல் அளகத்துப் புகல்ஏக் கற்றுத்
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்
கண்டு மகிழ்வுஎய்திக் காதலில் சிறந்து
கழுநீர் ஆம்பல் முழுநெறிக்குவளை-கழுநீரும் சேதாம்பலும் முழு நெறியாகிய செங்கழுநீரும், அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர்தாமரை-அரும்பு கட்டவிழ்ந்த வண்டு ஒலிக்கும் தாமரையும் ஆகிய, வயற்பூ வாசம் அளைஇ-நீர்ப்பூக்களின் மணத்தினைக் கலந்துண்டு, அயற்பூ-அவற்றின் வேறாய கோட்டுப்பூ முதலியவற்றுள், மேதகு தாழை விரியல் வெண் தோட்டு-மேன்மை பொருந்திய தாழையின் விரிந்தவெள்ளிய தோட்டகத்தும், கோதை மாதவி சண்பகப் பொதும்பர்-சண்பகக்காவிலுள்ள மாலைபோலும் மாதவிப் பூவினிடத்தும்; தாது தேர்ந்து உண்டு-தாதினை ஆராய்ந்து உண்டு போந்து, மாதர் வாள் முகத்துப் புரிகுழல் அளகத்துப் புகல் ஏக்கற்றுத் திரிதரு சுரும்பொடு-ஒள்ளிய முகத்தினையுடைய மாதருடைய புரிந்த குழற்சியையுடைய கூந்தலில் உண்டாகிய கலவை மணம் பெறுதற்கு ஏக்கற்றுப் புகுதற்கு வழிகாணாமற் சுழலுகின்ற சுரும்போடும், செவ்வி பார்த்து-செவ்வியறிந்து, மாலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த கோலச்சாளரக் குறுங்கண் நுழைந்து-மணிக்கோவையாலே ஒழுங்குபட நிரைத்து வகுத்த அழகினையுடைய சாளரத்தின் குறிய புழைகளால் நுழைந்து; வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் கண்டு-வண்டோடும் புகுந்த மணத்தினையுடைய தென்றலைக் கண்டு, மகிழ்வு எய்திக் காதலிற் சிறந்து-மகிழ்ச்சியுற்றுக் கலவியை விரும்பிக் காதல் மிகுதலால்,
முழுநெறி, இதழொடியாத முழுப் பூ. குவளை-ஈண்டுச் செங்கழுநீர்;
"குவளைக் கூம்பவிழ் முழுநெறி" என்பதும். அதனுரையும் நோக்குக. சேதாம்பல் ஏனைய போன்று பகலில் மலரும் பூவன்றாயினும் அவை விரியும் காலத்து இது குவிதலின்மையின் ஒருங்கு கூறினார். பொதும்பர் -மரச்செறிவு. உண்டு என்பதனை முன்னுங் கூட்டி, அளைஇ உண்டு, தேர்ந்துண்டு என்க. மாதவி-குருக்கத்தி. சண்பகத்தோடு மலர்தலின், தேர்ந்துண்டு என்றார். சண்பகம் வண்டுணா மலர் மரமாகலின், வாண் முகத்து மாதர் எனவும், அளகத்து ஏக்கற்று எனவும், புகற்குத் திரிதரு எனவும், மணித்தாமத்து எனவும், மாலை நிரைத்து எனவும் மாறுக. செவ்வி-இவர் மகிழுஞ் செவ்வி. மாலை-ஒழுங்கு-சுரும்போடும்,வண்டோடும் புக்க வென்க. மணவாய்த் தென்றல்-மணத்தைத் தன்னிடத்தேயுடைய தென்றல்; வாய்-இடம்.
அளைஇ உண்டு தேர்ந்துண்டு ஏக்கற்றுத் திரிதரு சுரும்போடும் வண்டோடும் புக்க தென்றல் என்க.
---------------
-
௨௬-உஎ. விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும்
நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி,
விரைமலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும் நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி-அங்ஙனம் காதல் மிகுதலால் அவர்கள் நிரைத்த நிலைகளையுடைய மாடத்தின் இடைநிலத்து நின்றும் மணத்தினையுடைய மலர்க்கணையோடே காமன் வீற்றிருக்கும் மேனிலமாகிய நிலாமுற்றத்தின் மேல் ஏறி,
வேனில்-காமன் : ஆகுபெயர், அரமியம்-நிலாமுற்றம்
--------------
-
௨௮-.௩க. சுரும்புஉணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி
முதிர்க்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
கதிர்ஒருங் கிருந்த காட்சி போல,
சுரும்புணக் கிடந்த நறும்பூஞ் சேக்கை-சுரும்புகள் உண்ணும்படி பரப்பிய நறிய பூக்களையுடைய சேக்கைக் கண்ணே, முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் கதிர் ஒருங்கு இருந்த காட்சிபோல-முற்றிய கடலையுடைய ஞாலம் முழுவதையும் விளக்கும் ஞாயிறும் திங்களும் சேர இருந்த காட்சிபோல இருந்து, கரும்பும் வல்லியும் பெரும்தோள் எழுதி-கரும்பு வல்லி என்பனவற்றைப் பெரிய தோளிலே யெழுதி
சுரும்புகளுண்டற்குப் பரப்பி வைத்தாற் போலக் கிடந்த நறும்பூஞ் சேக்கையெனலுமாம். முதிர்தல்-சூழ்தலுமாம். கதிர்-வெங்கதிராகிய ஞாயிறும் தண் கதிராகிய திங்களும்,ஒருங்கிருத்தல், இல் பொருளுவமம். போல இருந்து என ஒரு சொல் வருவிக்க. கரும்பும் வல்லியும் சந்தனக் குழம்பால் எழுதப்படுவன.
{அடி. சுரும்பையும் வல்லியையும் தோளில் எழுதி யெனவே தொய்யி லொன்றையும் முலைமே லெழுதி என்பதாயிற்று.}
----------------
-
௩௨௩௭-. வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த
வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத்
தீராக் காதலின் திருமுகம் நோக்கிக்
கோவலன் கூறும்ஓர் குறியாக் கட்டுரை
வண்டு வாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு-வண்டுகள் புரியை நெகிழ்க்க நெடிய நிலவைப் போல விரிந்த வெள்ளிய இதழையுடைய மல்லிகையின் மலர்ச்சியையுடைய மாலையோடே, கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழ-இதழொடியாது கட்டின கழுநீர்ப் பிணையலும் குலைந்து அலைய, தாரும் மாலையும் மயங்கிக் கையற்று-மார்பிலிட்ட இவ்விருவகை மாலையும் மயங்கப்பட்டு இருவரும் செயலற்ற புணர்ச்சியிறுதிக்கண், தீராக்காதல் திருமுகம் நோக்கி-நீங்காத காதலையுடைய திருமகளைப் போல்வாளுடைய முகத்தை நோக்கி, கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை-முன்னர்க் கருதாத பொருள் பொதிந்த உரையைக் கோவலன் கூறாநிற்பன் ;
நிலா-ஒளியுமாம். தாரும் மாலையும் மயங்கி என்பதனாற் புணர்ச்சி கூறிற்று; இடக்கரடக்கு. கையறுதல்-கலவியால் அவசமுறுதல். காதலால் என விரித்தலுமாம். திரு-திருப்போல்வாள். ஓர், அசை. குறியா-தன் அறிவு முதலியவற்றைக் கருதாத என்றுமாம். கட்டுரை-நலம்பாராட்டல் என்னும் பொருள் பொதிந்த உரை.
----------------
-
௩அ-௪க. குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின்
பெரியோன் தருக திருநுதல் ஆகஎன.
குழவித் திங்கள் இமையவர் ஏத்த அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்- பிறைமதியானது இமையவர் ஏத்தாநிற்க இறைவன் தன் முடிக்கு அழகு செய்தல் காரணத்தாற் சூடிய அருமையுடையதாயினும், உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின் பெரியோன் தருக திருநுதல் ஆகென-அது நின்னோடு உடன்பிறப்பாகலின் நினக்கு உரித்தாதலால் அப்பெரியோன் அதனை நினக்குத் திருநுதலாகத் தரக் கடவன்;
திங்கட் குழவியென்றது "சொல்லிய வல்ல பிறவவண் வரினும்" என்னும் மரபியற் புறனடையான் முடியுமென்பர் அடியார்க்கு நல்லார்;
"பிள்ளை குழவி கன்றே போத்தெனக்
கொள்ளவு மமையு மோரறி வுயிர்க்கே"
என்னுஞ் சூத்திரத்து ஓரறிவுயிர்க்குக் கொள்ளவும் அமையுமென்னும் உம்மையை எச்சப்படுத்துப், பிறவழியுங் கொள்ளப்படும் என முடிப்பர் பேராசிரியர். இமயவ ரேத்தல் "அப்பிறை பதினெண் கணனு மேத்தவும் படுமே"என்பதனாலு மறிக. உரிது-உரித்து. பெரியோன். மாதேவன்; இறைவன். திருநுதலாக வென்று தருக என்க. பிறை திருவொடு பாற்கடலிடைப் பிறத்தலின், இவளைத் திருமகளாக மதித்து இங்ஙனம் கூறினான்.
{அடி. தருக வென்றது சூடின பிறை இரண்டு கலையாதலின், அதனை எண்ணாட்டிங்களாக்கித் தருகவென்பது கருத்து: என்னை? "மாக்கட னடுவண் எண்ணாட் பக்கத்துப், பசுவெண் டிங்கள் தோன்றி யாங்குக், கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்" என்றாராகலின், இதனான் மேற்கூறுகின்ற கரும்பையும் வச்சிரத்தையும் அவ்வவ் வுறுப்புக்கட் கேற்பத் திருத்தி ஈக்க அளிக்க என்பதாயிற்று; என்றது, கரும்பிற்கு நிறனும், வச்சிரத்திற்கு நேர்மையும் உண்டாக்கி என்றவாறு}.
-------------
-
௪௨-௪௫. அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப்
படைவழங் குவதுஓர் பண்புண்டு ஆகலின்
உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்
இருகரும் புருவ மாக ஈக்க,
அடையார் முனையகத்து அமர் மேம்படுநர்க்குப் படைவழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்-பகைவர் முனையிடத்தே போரினை மேம்படுப்பார் சிலர்க்குப் படைக்கலம் வழங்குவதொரு முறைமை அரசர்க்குண்டாதலின், உருவிலாளன் ஒரு பெருங்கருப்புவில் இரு கரும் புருவமாக ஈக்க-அனங்கன் போர் செய்தற்கு எடுத்த பெரிய கரும்பு வில் ஒன்றையும் நினக்குக் கரிய இரு புருவமாகத் திருத்தித் தரக்கடவன்;
'ஒரு பெருங் கருப்புவில் இரு கரும் புருவம் என்றது சேமவில்லையுங் கூட்டி'என அடியார்க்கு நல்லார் கூறினர்; பின் வேலொன்று கண்ணிரண்டா ஈத்தது என வருதலின், இதனையும் அவ்வாறே கோடல் பொருந்தும். மற்றும் அவர், 'முனிவராகிய முரட்பகையை அழித்தற்கு வல்வில்லே வேண்டுதலின், ஒருபெருங் கருப்புவில் லென்றார்' என்று கூறியதும் ஈண்டைக்குப் பொருந்துவதன்று; காமவேள் தன்னுடன் செய்யும் போரில் அவற்கு வென்றி தருவாளாகக் கொண்டு இங்ஙனம் கூறினானென்க.
---------------
-
௪௬-௪அ. மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வக் காவல்
படைநினக்கு அளிக்கஅதன் இடைநினக்கு இடையென,
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்-மூவாமைக்கு ஏதுவாகிய அமிழ்திற்கு நீ முற்பிறத்தலால், தேவர் கோமான்-தேவர்க் கரசனாகிய இந்திரன், தெய்வக் காவற் படை-அசுரரை யழித்துச் சுரரைக் காத்தற் கெடுத்த வச்சிரப்படையை, நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடையென-அதன் இடை நினக்கு இடையாகவெனத் திருத்தித் தரக் கடவன்;
மூவா என மூப்பினை யொழித்தல் கூறவே இறப்பினை யொழித்தலும் கூறிற்றாம். நீ அமுதாகலின் நினக்கு முன்னர் வச்சிரம் பிறத்தலால் எனினுமமையும். வச்சிரம் இருதலைச் சூலமாய் நடுவு பிடியாயிருத்தலின் அதன் இடையை மகளிர் இடைக்கு உவமங் கூறுவர். ஆகவென ஒரு சொல் வருவிக்க.
-------------------
-
௪௯-௫௨. அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே
அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது?
அறுமுக ஒருவன் ஓர் பெறுமுறை இன்றியும்-ஆறு திருமுகத்தையுடைய ஒப்பிலானாகிய முருகன் இவ்வாறு ஓர் உரிமையின்றியும், இறுமுறை காணும் இயல்பினன் அன்றே-யான் துன்புறு முறைமையைத் தன் கண்ணாற் காண்டல் காரணத்தானன்றே, அம்சுடர் நெடுவேல் ஒன்று-தன் கையிலுள்ள அழகிய சுடரையுடைய நெடியவேலொன்றையும், நின் முகத்துச் செங்கடை கழைக்கண் இரண்டா ஈத்தது-நின் முகத்திலே சிவந்த கடையையுடைய குளிர்ச்சி பொருந்திய கண் இரண்டுமாம்படி ஈத்தது
பெறுமுறையின்றியும்-உரிமையின்றியும்; தனக்குப் பெருங்கூறு ஒன்றில்லையாகவும் எனினு மமையும். இறுமுறை-வருந்து முறைமை; சாக்காடுமாம்; இது,
"கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர்
துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வவ்வலின்"
என்றாற் போல்வது. இரண்டா ஈத்தது-இரண்டாக நிருமித்துத் தந்தது;
"ஓக்கிய முருகன் வைவே லோரிரண்டனைய கண்ணாள் "
என்பது காண்க. ஈத்தது: தொழிற்பெயர். ஒருவன் ஈத்தது காணும் இயல்பினின் என முடிக்க. இவற்றுட் கட்புலனாய் எழுதப்படும் உறுப்புக்களைப் பாராட்டி இனிக் கட்புலனாயும் ஆகாதுமாய் எழுதப்படாதன பாராட்டுவான்.
-------------
-
௫௩-௬௧. மாஇரும் பீலி மணிநிற மஞ்ஞைநின்
சாயற்கு இடைந்து தண்கான் அடையவும்,
அன்னம் நல்நுதல் மெல்நடைக்கு அழிந்து
நல்நீர்ப் பண்ணை நனிமலர்ச் செறியவும்,
அளிய தாமே சிறுபசுங் கிளியே.
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும்
மடநடை மாதுநின் மலர்க்கையின் நீங்காது
உடன்உறைவு மரீஇ ஒருவா ஆயின,
மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞை நின் சாயற்கு இடைந்து தண்காள் அடையவும்-கரிய பெரிய பீலியையுடைய நீலமணி போலும் நிறத்தையுடைய மயில்கள் நின்சாயற்குத் தோற்றுத் தண்ணிய காட்டிடத்தேபோய் ஒடுங்கா நிற்பவும், அன்னம் நன்னுதல் மென்னடைக்கு அழிந்து நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்-நல்ல நெற்றியை யுடையாய்! அன்னங்கள் நின் மேன்மையுடைய நடைக்குத் தோற்று நல்லநீரையுடைய வயல்களிற் செறிந்த மலரிடையே புக்கு மறையவும்; அளியதாமே சிறு பசுங்கிளியே-சிறிய பசிய கிளிகள் தாம் அளிக்கத் தக்கன; குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் மழலைக் கிளவிக்கு வருந்தினவாகியும்-அவை குழலினிசையையும் யாழினிசையையும் அமிழ்தத்தையும் கலந்து குழைத்தாலொத்த நினது முதிராத மழலைச் சொற்குத் தோற்றனவாகியும், மட நடைமாது நின் மலர்க்கையின் நீங்காது உடன் உறைவு மரீஇ ஒருவாவாயின-மடப்பத்தையுடைய நடையினையுடைய மாதே! நின்னை வழிபட்டு அச்சொல்லினைக் கற்கக் கருதி நினது மலர்போலுங் கையினின்றும் நீங்காவாய் நின்னுடனே வெறுப்புத் தோன்றாமல் உறைதலையும் பொருந்திப் பிரியாவாயின ஆகலான்,
மாயிரு என யகர உடம்படுமெய் பெற்றது. "கிளந்தவல்ல" என்னும் புறனடையான் அமையும். மணி-நீல மணி. தண் கான் இழிந்த காடு நளி-செறிவு. செறிதல்-ஒடுங்குதல். குழைத்த-குழைத்தாலொத்த; இல்பொருளுவமம்; குழைவித்த எனினுமமையும்; வருத்திய என்றபடி.
நன்னுதல், மாது, மஞ்ஞை அடையவும், அன்னம் செறியவும், கிளி வருந்தினவாகியும் நீங்காது மரீஇ ஒருவாவாயின; ஆகலின் அவை அளிக்கத்தக்கன என வினை முடிபு கொள்க.
------------------
-
௬௨-௪. நறுமலர்க் கோதை.நின் நலம்பா ராட்டுநர்
மறுஇல் மங்கல அணியே அன்றியும்
பிறிதுஅணி அணியப் பெற்றதை எவன்கொல்?
நறுமலர்க் கோதை-நறிய மலரை யணிந்த கோதையே, நின் நலம் பாராட்டுநர்-நின்னைப் புனைந்து அழகு செய்யும் மகளிர், மறு இல் மங்கல அணியே அன்றியும்-குற்றமற்ற நினது புனையாத அழகிருக்கவும் அஃதன்றி, பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்-வேறு சில அணிகளை அணிந்ததனாற் பெற்றது யாதோ;
நலம் பாராட்டுநர்-ஒப்பனை செய்வார். மங்கலவணி-இயற்கையழகு; மாங்கலிய மென்பாருமுளர். அணிய-அணிதலால்.
"உமிழ்சுடர்க் கலன்கள் நங்கை யுருவினை மறைப்ப தோரார்"
என்பது ஒப்புநோக்கற்பாலது.
---------------
-
௬௫-௬. பல்இருங் கூந்தல் சின்மலர் அன்றியும்
எல்அவிழ் மாலையொடு என்உற் றனர்கொல்?
பல்இருங் கூந்தற் சின்மலர் அன்றியும்-பலவகைத்தாகிய கரிய கூந்தலில் மங்கலமாகச் சில மலரைப் பெய்தலன்றியும் எல்அவிழ் மாலையொடு என் உற்றனர்கொல்-ஒளியுடைய அவிழ்கின்ற மாலையைப் புனைதற்கு அம் மாலையோடு அவர்கள் என்ன உறவுடையார்களோ;
௬௭-௮. நானம் நல்அகில் நறும்புகை அன்றியும்
மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
நானம் நல் அகில் நறும்புகை அன்றியும்-அவர், கூந்தற்கு நாற்றமுடைய நல்ல அகிற்புகையை ஊட்டுதலன்றியும், மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்-மான்மதச் சாந்தை அணிதற்கு அதனோடு தமக்குள தாகிய கண்ணோட்டம் யாதோ;
நானம்-நெய்யுமாம். மான்மதம்-கத்தூரி. வந்ததை-பொருந்திய கண்ணோட்டம் ; வந்த உறவு எனலுமாம்.
-
௬௯-எ0. திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்?
திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்-அவர், முலைத்தடத்தின்மேல் தொய்யி லெழுதுத லன்றியும், ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்-தனிமுத்து வடத்தைப் பூட்டு வதற்கு அதனோடு அவர்க்குண்டான உரிமை யாதோ;
திரு-முலைமேற் றோன்றும் வீற்றுத் தெய்வம் என்பர்; "ஆமணங்கு குடியிருந் தஞ்சுணங்கு பரந்தனவே" என்றார் சிந்தாமணியிலும், தடம்-பரப்பு. காழ்-வடம். முத்தக் காழ் என மாறுக.
எக-உ. திங்கள்முத்து அரும்பவும் சிறுகுஇடை வருந்தவும்
இங்குஇவை அணிந்தனர் என்உற் றனர்க்கொல்?
திங்கள் முத்து அரும்பவும்-மதிபோலும் முகத்தில் முத்துப் போலும் வியர் தோன்றவும்; சிறுகு இடை வருந்தவும்-நுண்ணிய இடை ஒசியவும், இங்கு இவை அணிந்தனர்-இவ்வுழி இவற்றை அணிந்தாராகலின், என் உற்றனர்கொல்-அவர்கள் என்ன பித்தேறினார்களோ.
திங்கள், முத்து என்பன காதலும் நலனும் நிலைக்களனாகத் தோன்றிய பண்புவமத் தொகை; குறிப்பினாற் பொருள் உணர நின்றன; ஆகு பெயரென்பாரு முளர்.
மங்கலவணியும் சின்மலரும் அகிற்புகையும் தொய்யிலுமே பாராமாய் அரும்பவும் வருந்தவும், பிறிதணியும் மாலையும் சாந்தும் முத்தும் அணிந்தார் என முற்கூறியவற்றைக் கருதிக் கூறியவாறு.
---------------
-
௭௩-௪. மாசறு பொன்னே. வலம்புரி முத்தே.
காசறு விரையே. கரும்பே. தேனே.
மாசுஅறு பொன்னே-கட்கு இனிமையாற் குற்றமற்ற பொன்னை யொப்பாய், வலம்புரி முத்தே-ஊற்றின் இன்பத்தால் வலம்புரி யீன்ற முத்தை யொப்பாய், காசு அறு விரையே-உயிர்ப்பின் இனிமையாற் குற்றமற்ற விரையை யொப்பாய், கரும்பே-சுவையினிமையிற் கரும்பை யொப்பாய், தேனே-இனிய மொழியையுடைமையால் தேனை யொப்பாய்.
வலம்புரி முத்தென்றதனால் மரபின் தூய்மையுங் கூறினான்; "வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பு" என்பது காண்க. தேன் - யாழின் நரம்பிற்கு ஆகுபெய ரென்னலுமாம். "நரம்பார்த் தன்ன இன்குரற்றொகுதி" என்றார் நக்கீரனாரும். ஒளியும் ஊறும் நாற்றமும் சுவையும் ஓசையுமாகிய ஐம்புலனுங் கூறி நலம் பாராட்டினான்;
"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள"
என்னும் வள்ளுவர் வாய்மொழியுங் காண்க.
----------------
-
௭௫-௬. அரும்பெறல் பாவாய். ஆர்உயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே.
அரும்பெறல் பாவாய்-பெறுதற்கரிய பாவையே, ஆர் உயிர் மருந்தே - அரிய உயிரை நிலைபெறச் செய்யும் மருந்தே, பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே-பெருங்குடிப் பிறந்த வணிகனுடைய பெருமை பொருந்திய மடப்பத்தையுடைய புதல்வியே,
காட்சியின் உயிர் மயக்குறுதலிற் கொல்லியிற் பாவாய் என்றும், அவ்வாறு அழியுமுயிரை இமைப்பிற் றருதலின், ஆருயிர் மருந்தே என்றுங் கூறினான். உயிர் மருந்து - மிருத சஞ்சீவினி என்பர்.
------------------
-
எஎ-அக. மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ்இருங் கூந்தல் தையால் நின்னைஎன்று
உலவாக் கட்டுரை பலபா ராட்டித்
மலையிடைப் பிறவா மணியே என்கோ-மலையிற் பிறவாத மணியே என்பேனோ, அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ-கடலிற் பிறவாத அமிழ்தே என்பேனோ, யாழிடைப் பிறவா இசையே என்கோ-யாழிற் பிறவாத இசையே என்பேனோ, தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை என்று-நீண்ட கரியகூந்தலையுடைய தையலே நின்னை என்று நீண்ட கரிய கூந்தலையுடைய தையலே நின்னை என்று, உலவாக் கட்டுரை பல பாராட்டி-தொலையாத கட்டுரை பலவற்றால் நலம் பாராட்டி;
அலை : ஆகு பெயர். தையால் நின்னை என்கோ என்கோ என்கோ என்று பாராட்டி யென்க.
{அடி. மலையிடைப் பிறக்கு மணி குழையாமையின் அதிற் பிறவா மணியே யென்பேனோ, அலையிடைப் பிறக்கும் அமிழ்திற்கு இவ்வடிவின்மையின் அதனிற் பிறவாத அமுதே யென்பேனோ, யாழ் கட்கின்னா தாகலின் அதனிடைப் பிறவாத இசையே யென்பேனோவெனத் தெரிதருதேற்ற வுவமை யென்னும் அலங்காரமும், மலைகடல் என விரோதமும் பின்வருநிலை யென்னும் அலங்காரமும் புலப்படுத்தினாரென வுணர்க.}
----------------
-
௮௨-௩. தயங்குஇணர்க் கோதை தன்னொடு தருக்கி
மயங்குஇணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்,
தயங்கு இணர்க் கோதை தன்னொடு தருக்கி-விளங்குகின்ற பூங் கொத்துக்களாலாகிய கோதையை யுடையாளோடும் இன்பத்தில் மிக்கு, வயங்கு இணர்த்தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள்-விளங்கு இணர்த் தாரினை யுடையோன் மகிழ்ந்து செல்லாநின்ற நாட்களில் ஒருநாள்,
தயங்கல், வயங்கல் இரண்டும் விளக்கமென்னும் பொருளன; இங்ஙனம் வருவனவற்றைப் பரியாயவலங்காரமென்பர் அடியார்க்கு நல்லார்.
------------------
-
௮௪-௯0. வாரொலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி
மறுப்புஅருங் கேண்மையொடு அறப்பரி சாரமும்
விருந்து புறந்தருஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமொடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின்
காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்குஎன்.
வார் ஒலி கூந்தற் பேரியற் கிழத்தி-நீண்ட தழைத்த கூந்தலையுடைய இருநிதிக் கிழவன் மனைக்கிழத்தி, மறப்பருங் கேண்மையோடு-மறத்தலரிய சுற்றந்தழாலோடே, அறப் பரிசாரமும்- அறநெறியாளரை ஓம்பலும், விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கை-விருந்தினரைப் பேணுதலுமாகிய இவற்றுடன் கூடிய பெருமையுடைய இல்வாழ்க்கையை, வேறுபடு திருவின் வீறுபெறக் காண-நானாவிதமான செல்வத்தோடே நடத்திக் கைவந்து உயர்ச்சி பெறுதலைக் காணவேண்டி, உரிமைச் சுற்றமொடு ஒரு தனி புணர்க்க -அடிமைத் திரளோடே வேறாக இருக்கச் செய்ய, யாண்டுசில கழிந்தன. இற்பெருங் கிழமையின் காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்கென்-காணத்தக்க சிறப்பினையுடைய கண்ணகிக்குப் பெருமையுடைய இல்லறத்தை நடத்தும் உரிமைப்பாட்டுடன் சில ஆண்டுகள் கழிந்தன.
வாரொலி கூந்தல் கண்ணகியை என்றுமாம். 'கூந்தலையுடைய பேரியற் கிழத்தியெனினு மமையும்' என அடியார்க்கு நல்லார் கூறுதலின், 'கூந்தலைப் பேரியற் கிழத்தி' எனப் பிறர் பாடங் கொண்டமை பொருந்துவதன்று.
'பேரிற் கிழத்தி' என்பதும், 'அறப்பரிகாரம்'என்பதும் அரும்பதவுரை யாசிரியர் கொண்ட பாடம். அறப் பரிகாரம் துறந்தாரைப் பூசித்து அறத்தைப் பரிகரித்தல் என்பர். மறப்பரிய என்ற அடையைப் பிறவற்றோடுங் கூட்டுக. அறப்பரிகாரம் என்பதில் அறவோர்க் களித்தலும் அந்தணரோம்பலும் துறவோர்க்கெதிர்தலும் அடங்கும்; பின், கொலைக்களக் காதையிற் கண்ணகி கூறுமாறு அறிக. புறந்தரூஉம்-புறந்தரலும் என்க: புறந்தரல்-பேணுதல். ஏனை மூன்று நிலையினரையும் வறியவர் முதலானாரையும் வேண்டுவன தந்து புரக்கும் அன்பும் அருளுமுடைமையால் பெருந்தண் வாழ்க்கை யென்று பெயர் கூறினார். என்: அசை.
செல்வர்க்குத் தோன்றிய கண்ணியும் கொழுநனும் தென்றலைக் கண்டு மகிழ்ந்து சிறந்து ஏறிக் காட்சிபோலச் சேக்கையிலிருந்து, எழுதி மயங்கிக் கையற்று முகநோக்கிக் கட்டுரை கூறுகின்றவன், பல பாராட்டி மகிழ்ந்து செல்வுழி ஒருநாள், பேரியற் கிழத்தி ஒரு தனி புணர்க்கக் கண்ணகி தனக்குப் பெருங் கிழமையோடு ஆண்டு சில கழிந்தன எனக் கூட்டுக.
எல்லா வடியும் நேரடியால் வந்து முடிதலின் இது நிலைமண்டில வாசிரியப்பா.
- வெண்பா
தூமப் பணிகள்ஒன்றித் தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம்
தொலையாத இன்பம்எலாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்ப்போல் நின்று
வெண்பாவுரை
மண்மேல் நிலையாமை கண்டவர்போல் நின்று-புவியின்கண் பொருள் முதலியவற்றின் நிலையாமையைக் கண்டு அவை உள்ள பொழுதே அனைத்தின்பம் துய்த்தற்கு விரைதல்போல நின்று, காமர் மனைவியெனக் கைகலந்து-காமனும் இரதியும் போலக் காதலால் ஒருவர் ஒருவரிற் கலந்து, தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தாலென ஒருவார்-சினத்தையுடைய பாம்புகள் ஒன்றுபட்டுத் தழுவினாற்போல விட்டு நீங்காராய், நாமம் தொலையாத இன்பமெலாம் துன்னினார்-அழகு கெடாத இன்பத்தையெல்லாம் துய்த்தனர் (கோவலனும் கண்ணகியும்) என்க.
மனையறம் படுத்த காதை முற்றிற்று.
-----------------------
3. அரங்கேற்று காதை
(காவிரிப்பூம் பட்டினத்திலே கணிகையர் குலத்திற் றோன்றிய மாதவி யென்பாள் ஆடல் பாடல் அழகு என்னும் மூன்றிலும் சிறந்து விளங்குதற்கேற்றவளாய் இருந்தமையின், அவளை ஐந்தாம் ஆண்டில் தண்டியம் பிடிப்பித்து, ஏழாண்டு இயற்றுவித்துப் பன்னீராண் டெய்தியபின் அரசற்கு அவையரங்கேறிக் காட்டலை விரும்பி, ஆடலாசான், இசையாசிரியன், இயற்றமிழ்ப் புலவன், தண்ணுமை முதல்வன், குழலோன், யாழாசிரியன் என்போர் ஒருங்கு கூடி, தக்க நிலத்திலே சிற்ப நூன் முறைப்படி இயற்றப்பட்டதும், விளக்குகள் ஏற்றியும் எழினிகள் வகுத்தும் விதானம் கட்டியும் முத்துமாலை நாற்றியும் புனையப்பட்டதுமாகிய அரங்கின்கண், மாற்றரசரின் குடைக்காம்பு கொண்டு நவமணி பதித்தியற்றியதும், அரசன் கோயிலின் வழிபாடு செய்து இருத்தப் பெற்றதுமாகிய தலைக்கோலினை நல்ல நாளிலே பொற்குடத்தேந்தி வந்த புண்ணிய நன்னீரால் மண்ணிய பின்பு மாலை யணிந்து அரச யானையின் கையிற் கொடுத்தனர். பின்பு அவர்கள் அவ்வியானையுடன் அரசனும் ஐம்பெருங்குழுவும் உடன்வர வலமாக வந்து வீதியிலே தேரின்மிசை நின்ற பாடுவான் கையில் அதனைக் கொடுப்பித்து, நகரியை வலம்வந்து அரங்கிற் புகுந்து எதிர்முகமாக அதனை வைத்தனர். வைக்க, மாதவியானவள் அரங்கிலே வலக்காலை முன்வைத்து ஏறி வலத்தூணைப் பொருந்தி, அரசன் முதலாயினோர் அவையில் அமர்ந்தபின் குயிலுவக் கருவிகளெல்லாம் கூடி நின்றிசைக்க மங்கலமாகிய பாலைப் பண்ணைப்பாடி, தேசியும் வடுகுமாகிய அகக்கூத்து புறக்கூத்துக்களை நூன்முறை வழுவாது பொன்னானியன்ற பூங்கொடி நடிப்பதுபோல் அவினயந்தோன்ற ஆடிக் காட்டினாள். அதனால் அவள் அரசனது பச்சைமாலையும் தலைக்கோற் பட்டமும் பெற்றதுடன், தலை வரிசையாக ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பரியம் பெற்றாள். அம்மாலையை ஒரு கூனி கையிற் கொடுத்து, ‘இம்மாலை ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பெறுவது; இவ்வளவு பொன் கொடுத்து இதனைப் பெறுவோர் மாதவிக்கு மணமகனாவர்’ எனக்கூறி, நகர நம்பியர் உலா வரும் வீதியில் நிற்கச் செய்ய, கோவலன் அம்மாலையை வாங்கிக் கூனியுடன் மாதவி மனையை அடைந்து அவளை அணைந்த அன்றே மயங்கி, தன் மனைவியையும் மனையையும் மறந்து, மாதவியை ஒருபொழுதும் விட்டு நீங்கா விருப்புடையனாயினன். (இக்காதையில் இசை நாடகங்களின் இயல்புகளும், அவற்றிற்கு அங்கமானவைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.))
-
தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய 5
பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னை
ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்
ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில் 10
சூழ்கடல் மன்னற்குக் காட்டல் வேண்டி,
இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு 15
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும் 20
வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும், 25
யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத் 30
தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசுஇன்று உணர்ந்த அறிவினன் ஆகிக்
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை
வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் 35
அசையா மரபின் இசையோன் தானும்,
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்தின்
நாட்டிய நன்னுல் நன்கு கடைப்பிடித்து 40
இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்துஆங்கு
அசையா மரபின் அதுபட வைத்து
மாற்றார் செய்த வசைமொழி அறிந்து
நாத்தொலைவு இல்லா நன்னூல் புலவனும்,
ஆடல் பாடல் இசையே தமிழே 45
பண்ணே பாணி தூக்கே முடமே
தேசிகம் என்றுஇவை ஆசின் உணர்ந்து
கூடை நிலத்தைக் குறைவுஇன்று மிகுத்துஆங்கு
வார நிலத்தை வாங்குபு வாங்கி
வாங்கிய வாரத்து யாழும் குழலும் 50
ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்
கூர்உகிர்க் கரணம் குறிஅறிந்து சேர்த்தி
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்
சித்திரக் கரணம் சிதைவுஇன்றி செலுத்தும்
அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும், 55
சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல்அறப் பெய்துஆங்கு
ஏற்றிய குரல்இளி என்றுஇரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகிப் 60
பண்அமை முழவின் கண்ணெறி அறிந்து
தண்ணுமை முதல்வன் தன்னொடு பொருந்தி
வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்துஆங்கு
இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து வருவது ஒற்றி 65
இன்புற இயக்கி இசைபட வைத்து
வார நிலத்தைக் கேடுஇன்று வளர்த்துஆங்கு
ஈர நிலத்தின் எழுத்துஎழுத்து ஆக
வழுவின்று இசைக்கும் குழலோன் தானும்,
ஈர்ஏழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் 70
ஓர்ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி
வன்மையிற் கிடந்த தார பாகமும்
மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்
மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக்
கைக்கிளை ஒழித்த பாகமும் பொற்புடைத் 75
தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக்
கிளைவழிப் பட்டனள், ஆங்கே கிளையும்
தன்கிளை அழிவுகண்டு அவள்வயிற் சேர
ஏனை மகளிரும் கிளைவழிச் சேர
மேலது உழையிளி கீழது கைக்கிளை 80
வம்புஉறு மரபின் செம்பாலை ஆயது
இறுதி ஆதி ஆக ஆங்குஅவை
பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது
படுமலை செவ்வழி பகர்அரும் பாலைஎனக்
குரல்குரல் ஆகத் தற்கிழமை திரிந்தபின் 85
முன்னதன் வகையே முறைமையின் திரிந்துஆங்கு
இளிமுத லாகிய ஏர்படு கிழமையும்
கோடி விளரி மேற்செம் பாலைஎன
நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்
இணைநரம்பு உடையன அணைவுறக் கொண்டுஆங்கு 90
யாழ்மேற் பாலை இடமுறை மெலியக்
குழல்மேற் கோடி வலமுறை மெலிய
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலியக் கோத்த புலமை யோனுடன்,
எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது 95
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக 100
எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத் 105
தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்துஆங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்துஆங்கு 110
ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்
பேர்இசை மன்னர் பெயர்ப்புறத்து எடுத்த
சீர்இயல் வெண்குடைக் காம்புநனி கொண்டு 115
கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய
நாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் 120
புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர் மாலை அணிந்து
நலம்தரு நாளால் பொலம்பூண் ஓடை
அரசுஉவாத் தடக்கையில் பரசினர் கொண்டு
முரசுஎழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்ப 125
அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்
தேர்வலம் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்துஆங்கு,
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப, 130
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்க 135
வாரம் இரண்டும் வரிசையில் பாடப்
பாடிய வாரத்து ஈற்றில்நின்று இசைக்கும்
கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப் 140
பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடிநின்று இசைத்தது ஆமந் திரிகை
ஆமந் திரிகையொடு அந்தரம் இன்றிக்
கொட்டுஇரண்டு உடையதுஓர் மண்டிலம் ஆகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி 145
வந்த முறையின் வழிமுறை வழாமல்
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப்
பாற்பட நின்ற பாலைப் பண்மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து 150
மூன்றுஅளந்து ஒன்று கொட்டி அதனை
ஐந்துமண் டிலத்தால் கூடை போக்கி
வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை,
ஆறும் நாலும் அம்முறை போக்கிக்
கூறிய ஐந்தின் கொள்கை போலப் 155
பின்னையும் அம்முறை பேரிய பின்றை,
பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
நாட்டிய நன்னூல் கடைப் பிடித்துக்
காட்டினள் ஆதலின், காவல் வேந்தன்
இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமைத் 160
தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே
நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
வீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை, 165
மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த,
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை 170
கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்.
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன். 175
(வெண்பா)
எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கில் வந்து.
------------------
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
(கூத்தியது அமைதி)
-
௧-௭. தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய
பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னை
தெய்வ மால்வரைத் திருமுனி அருள-தெய்வத் தன்மையுடைய பெரிய மலையாகிய பொதியிலின்கண் உள்ள அகத்திய முனிவன் அருள் செய்தலால், எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு-முன்பு அவனால் எய்திய சாபத்தையுடைய இந்திரன் குமாரனாகிய சயந்தனோடும், தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய-நாடக அரங்கின்கண்ணே சாபம் நீங்கப் பெற்ற, மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர் சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய – மாறுபடுதலரிய சிறப்பினையுடைய அரம்பையரில் வரிசையிற் குன்றாத நாடகத் தொழிலொடு பொருந்திய உருப்பசியாகிய அம் மாதவி மரபில் வந்த, பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை-பிறப்பிற் குன்றுதலில்லாத பெரிய தோளையுடைய மடந்தையாகிய, தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை-தாதுவிரியும் பூக்களை யணிந்த கடை குழன்று சுருண்ட கூந்தலையுடைய மாதவியை,
முனிவருட் சிறந்தோனாகலின் அகத்தியனைத் திருமுனி என்றார். அருள-சாபமிட்டருள வென்றுமாம். தலைக்கோற்றானம்-நாடகவரங்கு. இந்திர சிறுவனொடு சாபம் நீங்கிய உருப்பசி யென்க. ‘செய்கையொடு பொருந்திய’ என்பதன்பின், உருப்பசியாகிய அம்மாதவி மரபில் வந்த என விரித்துரைக்க. ‘சாப நீங்கிய’ என்பதன்பின் அங்ஙனம் விரித்துரைத்து வானவர் மகளிர் என்பதற்குத் தளியிலார் என்று பொருள் கூறுவர் அரும்பதவுரை யாசிரியர். சயந்தனும், உருப்பசியும் சாபம் பெற்றதும், அதினீங்கியதுமாகிய வரலாறு பின்னர்க் கடலாடு காதையானும். அடியார்க்கு நல்லார் எடுத்துக் காட்டிய பழைய மேற்கோளானும் விளக்கமுறும்; ஆண்டுக் காண்க. அருளால் என்பதூஉம் பாடம்.
-------------
-
௮-௯. ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்
ஆடலும் பாடலும் அழகும் என்று இக்கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல்-கூத்தும் பாட்டும் அழகுமென்று சொல்லப்பட்ட இம் மூன்றினுள் ஒன்றும் குறைவுபடாமல்
இவை,குறைவுபடாமைக்குக்,காரணமுடையளாகலின் என்க.
-------------
-
௧0-௧௧. ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில்
சூழ்கடல் மன்னற்குக் காட்டல் வேண்டி,
ஏழாண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி-ஐயாண்டில் தண்டியம் பிடிப்பித்து ஏழாண்டு இயற்றுவித்துப் பன்னீராண்டில் வீரக்கழல் சூழ்ந்த காலினையுடைய அரசற்கு அவனது அவையரங்கேறிக் காட்டலை விரும்பி, தண்டியம்-கோல், மன்னன்-சோழன் கரிகார்ப் பெருவளத்தான்,என்பர்அரும்பதவுரையாசிரியரும்,அடியார்க்குநல்லாரும். ஈண்டுக் கரிகாலன் என்று பெயர் கூறப்படாமையானும்,
- "செருவெங் காதலின் திருமரீ வளவன்
புண்ணியத் திசைமுகம் போகிய வந்நாள்"
- "மன்னன் கரிகால் வளவன்நீங் கியநாள்
இந்நகர் போல்வதோர் இயல்பின தாகி"
என மணிமேகலை யுள்ளும் கரிகாலன் வடதிசைக்கட் படையெடுத்துச் சென்றமை கூறப்பட்டிருத்தலன்றி, நிகழ்காலத்தில் வைத்து அவன் யாண்டுங் கூறப்படாமையானும், மதுரைக்காண்டத் திறுதிக் கட்டுரையில் பாண்டியன் நெடுஞ்செழியனையும் வஞ்சிக்காண்டத் திறுதிக் கட்டுரையில் சேரந் செங்குட்டுவனையும் கிளந்தோதும் அடிகள் புகார்க் காண்டத் திறுதிக் கட்டுரையில் சோழனொருவனையும் பெயர் குறித்துக் கூறாமையானும் கரிகாலன் அப்பொழுதிருந்தா னென்று துணிதல் சாலாதென்க.
பரதசேனாபதியார் கூறிய, பின்வரும் வெண்பாக்கள் ஈண்டு அறியற்பாலன.
-
"பண்ணியம்வைத் தானைமுகன் பாதம் பணிந்துநாட்
புண்ணிய வோரை புகன்றனகொண்-டெண்ணியே
வண்டிருக்குங் கூந்தல் மடவரலை ஐயாண்டில்
தண்டியஞ்சேர் விப்பதே சால்பு."
"வட்டணையுந் தூசியு மண்டலமும் பண்ணமைய
எட்டுட னீரிரண்டாண் டெய்தியபின்-கட்டளைய
கீதக் குறிப்பும் அலங்கார முங்கிளரச்
சோதித் தரங்கேறச் சூழ்."
"நன்னர் விருப்புடையோள் நற்குணமு மிக்குயர்ந்தோள்
சொன்னகுலத் தாலமைந்த தொன்மையளாய்ப் – பன்னிரண்டாண்
டேய்ந்ததற்பின் ஆடலுடன் பாடலழ கிம்மூன்றும்
வாய்ந்தவரங் கேற்றல் வழக்கு."
-----------
(ஆடலாசிரியன் அமைதி)
-
௧௨-௨௫. இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்
வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்,
இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து-அகக் கூத்தும்,புறக்கூத்துமாகிய இருவகைக் கூத்தினிலக்கணங்களையும் அறிந்து, பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்ந்து-அவற்றின் பகுதிகளாகிய பல கூத்துக்களையும் விலக்குறுப்புக்களுடன் புணர்க்க வல்லனாய், பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்-அல்லியம் முதற் கொடுகொட்டி யீறாய்க்கிடந்த தெய்வ விருத்தியாகிய,பதினொருகூத்துக்களையும் அக்கூத்துக்களுக்குரிய பாட்டுக்களையும் அக்கூத்துக்களின் விகற்பங்களுக்கெல்லாம் அமைந்த வாக்கியங்களின் கூறுகளையும், விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து ஆங்கு-விதித்தல் மாட்சிமைப் பட்ட நூலின் வழியே விளங்கவறிந்து, ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும் கூடிய நெறியின கொளுத்துங்காலை-ஆடலும் பாடலும் தாளங்களும் தாளங்களின் வழிவரும் தூக்குக்களும் தம்மிற் கூடிய நெறியினவாக நிகழ்த்துமிடத்து, பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும் கொண்டவகையறிந்து – பிண்டி பிணையல் எழிற்கை தொழிற்கை என்று சொல்லப்பட்ட நான்கினையும் கொள்ளுதற்குரிய வகையினை அறிந்து, கூத்து வருகாலை-இருவகைக் கூத்துக்களும் நிகழுமிடத்து, கூடை செய்த கை வாரத்துக் களைதலும், வாரம் செய்த கை கூடையிற் களைதலும்-கூடைக் கதியாகச் செய்த கை வாரக் கதியுட் புகாமலும், வாரக்கதியாகச் செய்த கை கூடைக்கதியுட் புகாமலும் களைதலும், பிண்டி செய்த கைஆடலிற் களைதலும், ஆடல் செய்த கை பிண்டியிற் களைதலும்-ஆடல் நிகழுங்கால் அவிநயம் நிகழாமலும், அவிநயம் நிகழுங்கால் ஆடல் நிகழாமலும் களைதலும் பேணி, குரவையும் வரியும் விரவல செலுத்தி-குரவைக் கூத்தும் வரிக் கூத்தும் தம்மில் விரவாதபடி செலுத்தி, ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்-இவ்வாறு ஆடவும் ஆட்டுவிக்கவும் வல்ல ஆடலாசிரியனோடும்;
அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் இருவகைக் கூத்து என்பதற்கு இருவகைப்பட்ட அகக்கூத்து என்றும், பலவகைக்கூத்து என்பதற்குப் பலவகைப்பட்ட புற நடங்கள் என்றும் பொருள் கூறினர். அவருள் முன்னவர், "இவ்வகைக் கூத்தாவன: தேசி, மார்க்கம் என விவை; "மார்க்கமென்பது வடுகின் பெயரே" என்றும், பின்னவர்: "இருவகைக் கூத்தாவன; வசைக்கூத்து, புகழ்க்கூத்து; வேத்தியல், பொதுவியல்; வரிக்கூத்து, வரிச்சாந்திக் கூத்து; சாந்திக் கூத்து, விநோதக்கூத்து; ஆரியம், தமிழ்; இயல்புக்கூத்து, தேசிக்கூத்து எனப் பலவகைய" என்றும், "ஈண்டு இருவகைக் கூத்தாவன: சாந்தியும், விநோதமும்" என்றும் விளக்கம் கூறினர். அகக்கூத்தெல்லாம் தேசி, மார்க்கம் என அடங்காமையாலும், வசை, வரி, விநோதம் முதலியன அகக்கூத்துள் அடங்காமையானும், இருவகைக் கூத்து என்பதற்கு அகமும் புறமுமாகிய இருவகைக் கூத்து என்றலே பொருத்தமாகும். இரண்டிரண்டாக எடுத்துக் காட்டியவை யெல்லாம் வெவ்வேறியல்பு பற்றி வேறு வேறு பெயரான் வழங்கப்படுவன வன்றி, வெவ்வேறு கூத்துக்களல்ல. இவ்வாற்றால் அவை யெல்லாவற்றையும், அகம், புறம் என்றாதல், வேத்தியல் பொதுவியல் என்றாதல், சாந்தி, விநோதம் என்றாதல் பாகுபடுத்தல் பொருந்தும்.
வேத்தியல் – அரசர்க்காடுவது. பொதுவியல்-ஏனையோர்க்காடுவது. வேத்தியலை அகமென்றும், பொதுவியலைப் புறமென்றும் கூறுவாருமுளர்.
"சாந்திக் கூத்தே தலைவ னின்பம்
ஏந்திநின் றாடிய வீரிரு நடமவை
சொக்க மெய்யே யவிநய நாடகம்
என்றிப் பாற்படுஉ மென்மனார் புலவர்"
என்பதனால், சாந்திக்கூத்து நால்வகைப்படும்; அவற்றுள், சொக்கம் என்பது சுத்த நிருத்தம்; ஆவது தாள லயத்தை ஆதாரமாக வுடையது. மெய்க்கூத்து என்பது மெய்த்தொழிற் கூத்து என்றும், அது தேசி, வடுகு சிங்களம் என மூவகைப்படும் என்றும் கூறுவர். இஃது உள்ளக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டது போலும். அவிநயக் கூத்து என்பது கதை தழுவாது பாட்டின் பொருளுக்குக் கை காட்டி வல்லபஞ் செய்யுங் கூத்து. நாடகம் என்பது கதை தழுவி வருங்கூத்து. இந்நான்கினும் இறுதிக் கண் நின்ற நாடகம் சிறந்ததாதல் ஓர்ந்துணர்க. இவையாவும் நாயகன் சாந்தமாக ஆடிய கூத்தாதலின் சாந்திக் கூத்தெனப்படும் என்பர்.
விநோதக் கூத்து என்பதில் குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு,தோற்பாவை என்பன அடங்குமென்பர். அவற்றுள்,
குரவை என்பது காமமும் வென்றியும் ரொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது.
கலிநடம் என்பது கழாய்க்கூத்து.
குடக்கூத் தென்பது பதினோராடலுள் ஒன்று
கரணமாவது படிந்தவாடல்.
நோக்கென்பது பாரமும் நுண்மையும் மாயமும் முதலாயினவற்றை யுடையது.
தோற்பாவை யென்பது தோலாற்பாவை செய்து ஆட்டுவிப்பது.
இன்னும் நகைத்திறச் சுவையுடைய விதூடகக் கூத்தினோடு ஏழென்பாரும், வெறியாட்டு முதலாகத் தெய்வமேறி யாடுங் கூத்தினைக் கூட்டி ஏழென்பாரு முளர். விதூடகக் கூத்து வசைக்கூத்து; அது வேத்தியல், பொதுவியல் என இரண்டு வகைப்படுமென்பர்.
௧உ. இருவகைக் கூத்தின் இலக்கணங்களாவன: "அறுவகை நிலையும் ஐவகைப் பாதமும் ஈரெண் வகைய அங்கக் கிரியையும், வருத்தனை நான்கும் நிருத்தக்கை முப்பதும், அத்தகு தொழில வாகுமென்ப" என்றோதப்பட்டன.
௧௩. பலவகைக் கூத்தும் என்றது மேலே கூறப்பட்ட அகக்கூத்து முதலியவற்றுடன் வென்றிக் கூத்தும், வசைக்கூத்து மாகும். "பல்வகை யென்பது பகருங்காலை, வென்றி வசையோ விநோத மாகும்."என்பதொரு சூத்திரங் காட்டுவர்; அவற்றுள் "மாற்றா னொடுக்கமும் மன்ன னுயர்ச்சியும், மேற்படக்கூறும் வென்றிக் கூத்தே" எனவும், "பல்வகை யுருவமும் பழித்துக் காட்ட, வல்ல னாதல் வசையெனப் படுமே" எனவும் வென்றி, வசைக்கூத்துகட்கு இலக்கணங் கூறுவர்.
விலக்கினின் – விலக்குறுப்போடு: வேற்றுமை மயக்கம். விலக்குறுப்பு என்ற சொற்குப் பொருள் வேந்து விலக்கு, படைவிலக்கு, ஊர்விலக்கு என்னும் விலக்குகளாகிய பாட்டுக்களுக்கு உறுப்பாயி வருவது என்றும், தலைவன் செலுத்துகின்ற கதையை விலக்கியும் அக்கதையை நடாத்தியும் முன்பு செய்த கதைக்கே உறுப்பாகுவது என்றுங் கூறுவர்;
"விலக்குறுப் பென்பது விரிக்குங் காலைப்
பொருளும் யோனியும் விருத்தியுஞ் சந்தியும்
சுவையுஞ் சாதியுங் குறிப்புஞ் சத்துவமும்
அவிநயஞ் சொல்லே சொல்வகை வண்ணமும்
வரியுஞ் சேதமும் உளப்படத் தொகைஇ
இசைய வெண்ணி னீரே ழுறுப்பே"
என்னுஞ் சூத்திரத்தால், விலக்குறுப்புக்கள் பதினான்கு வகையினவாதல் பெறப்படும்.
இப்பதினான்கனுள் பொருள், சாதி, யோனி, விருத்தி என்னும் நான்கும் ஒருவகையும்; சுவை, குறிப்பு, சத்துவம், அவிநயம் என்னும் நான்கும் ஒருவகையும்; சொல், சொல்வகை, வண்ணம், வரி என்னும் நான்கும் ஒருவகையும்; சந்தி, சேதம் என்னும் இரண்டும் ஒருவகையுமாகப் பாகுபடும்.
அவற்றுள், பொருள் நான்கு வகைப்படும்; அவை: அறம், பொருள், இன்பம், வீடு என்பன. இவை நாடகத்திற் கூடியும் குறைந்தும் வருமிடத்து நாடகம், பிரகரணப் பிரகரணம், பிரகரணம், அங்கம் எனப் பெயர் வேறுபடும். அறமுதல் நான்கும் அமைந்தது முதலதும், அறம் பொருள் இன்பம் அமைந்தது இரம்டாவதும், அறம் பொருள் அமைந்தது மூன்றாவதும், அறமொன்றும் அமைந்தது நான்காவதும் ஆம்; இவை நான்கும் நாடகமே.
இவைதாம் முறையே அந்தணர் முதலிய சாதிகளாகவும் கூறப்படும்.
யோனியாவது பொருள் தோன்றுமிடம் உள்ளோன் தலைவனாக உள்ளதொரு பொருண் மேற்செய்தலும், இல்லோன் தலைவனாக உள்ளதொரு பொருண்மேற் செய்தலும், உள்ளோன் தலைவனாக இல்லதொரு பொருண்மேற் செய்தலும், இல்லோன் தலைவனாக இல்லதொரு பொருண்மேற் செய்தலும் என அது நான்கு வகைப்படும். என்னை?
"உள்ளோற் குள்ளதும் இல்லோற் குள்ளதும்
உள்ளோற் கில்லதும் இல்லோற் கில்லதும்
எள்ளா துரைத்தல் யோனி யாகும்."
என்றாராகலின்.
விருத்தியாவது நாடகத்தின் இயல்பு அல்லது தன்மை. சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என விருத்தி நால்வகைப்படும். அவற்றுள், சாத்துவதி யென்பது அறம் பொருளாகத் தெய்வமானிடர் தலைவராக வருவது. ஆரபடி யென்பது பொருள் பொருளாக வீரராகிய மானிடர் தலைவராக வருவது. கைசிகி யென்பது காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வருவது. பாரதியாவது கூத்தன் தலைவனாக நடன் நடி பொருளாகக் காட்டியும் உரைத்தும் வருவது. சுவை ஒன்பது வகைப்படும்: அவை: வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், வெகுளி, நகை, சமநிலை என்பன. வேம்பென்னும் பொருளும் நாவென்னும் பொறியும் கூடியவழி நாவால் உணரப்படும் கைப்புச்சுவை போலச் சுவைக்கப்படும் பொருளும் அதனைச் சுவைக்கும் பொறியும் கூடியவழிப்பிறக்கும் பொறியுணர்வு சுவையெனப்படும்.
குறிப்பாவது: அச்சுவை யுணர்வு மனத்துட் பட்டவழி உள்ளத்தே நிகழுங் குறிப்பாகும்.
சத்துவமாவது: உள்ளத்து நிகழும் குறிப்பினுக்கேற்ப உடம்பின்கண் நிகழும் வேறுபாடு. இது விறல் எனவும் படும். மெய்ம்மயிர் சிலிர்த்தல், கண்ணீர் வார்தல், நடுக்கமடுத்தல், வியர்த்தல், தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரற்சிதைவு எனச் சத்துவம் பத்து வகைப்படும் என்பர். வடநூலார் சத்துவத்தை எண்வகைப்படுத்துச் சிறிது வேறுபட வுரைப்பர். சுவைப்பொருள், பொறியுணர்வு,குறிப்பு, விறல் என்னும் நான்குங் கூடியபொழுது
சுவையென்னும் மெய்ப்பாடு தோன்றும்.
ஒன்பான் சுவைகட்குரிய விறல்கள் அவ்வச் சுவை யவிநயங்கள் எனவும் படும். அவற்றைப் பின்வருஞ் சூத்திரங்களால் அறிக:
" வீரச்சுவை யவிநயம் விளம்புங் காலை, முரிந்த புருவமுஞ் சிவந்த கண்ணும், பிடித்த வாளுங் கடித்த வெயிறும், மடித்த வுதடுஞ் சுருட்டிய நுதலும், திண்ணென வுற்ற சொல்லும் பகைவரை, எண்ணல் செல்லா விகழ்ச்சியும், பிறவும், நண்ணு மென்ப நன்குணர்ந்தோரே."
"அச்ச வவிநயம் ஆயுங் காலை, ஒடுங்கிய வுடம்பும் நடுங்கிய நிலையும், மலங்கிய கண்ணுங் கலங்கிய வுளனும், கரந்துவர லுடைமையுங் கையெதிர் மறுத்தலும், பரந்த நோக்கமு மிசைபண் பினவே."
"இழிப்பி னவிநயம் இயம்பும் காலை, இடுங்கிய கண்ணு மெயிறு புறம்போதலும், ஒடுங்கிய முகமு முஞற்றாக் காலும் சோர்ந்த யாக்கையுஞ் சொன்னிரம் பாமையும், நேர்ந்தன வென்ப நெறியறிந்தோரே."
"அற்புத அவிநயம் அறிவரக் கிளப்பின், சொற்சோர் வுடையது சோர்ந்த கையது, மெய்ம்மயிர் குளிர்ப்பது வியத்தக வுடையது, எய்திய திமைத்தலும் விழித்தலு மிகவாதென், றையமில் புலவ ரறைந்தனரென்ப"
"காம வவிநயங் கருதுங் காலைத் தூவுள் ளுறுத்த வடிவுந் தொழிலும், காரிகை கலந்த கடைக்கணுங், கவின்பெறு மூரல் முறுவல் சிறு நிலா வரும்பலும், மலர்ந்த முகனு மிரந்தமென் கிளவியும், கலந்தன பிறவுங் கடைப்பிடித் தனரே."
"அவலத் தவிநயம் அறிவரக் கிளப்பின் கவலையொடு புணர்ந்த கண்ணீர் மாரியும், வாடிய நீர்மையும் வருந்திய செலவும், பீடழி யிடும்பையும் பிதற்றிய சொல்லும் நிறைகை யழிதலும் நீர்மையில் கிளவியும், பொறையின் முகலும் புணர்த்தினர் புலவர்."
"வெகுளிச்சுவை யவிநயத்தை உணர்த்துஞ் சூத்திரம் சிதைந்து விட்டது. " கைபிசையா வாய்மடியாக் கண்சிவவா வெய்துயிரா, மெய்குலையா வேரா வெகுண்டெழுந்தான்"என்னும் தண்டியலங்கார மேற்கோளால் அதனையறிக.
"நகையி னவிநயம் நாட்டுங் காலை, மிகைபடு நகையது பிறர்நகையுடையது, கோட்டிய முகத்தது..... விட்டுமுரி புருவமொடு விலாவுறுப்புடையது, செய்வது பிறிதாய் வேறுசே திப்பதென், றையமில் புலவரறைந்தன ரென்ப."
"நாட்டுங் காலை, நடுவுநிலை யவிநயம், கோட்பா டறியாக் கொள் கையு மாட்சியும், அறந்தரு நெஞ்சமும் ஆறிய விழியும், பிறழ்ந்த காட்சி நீங்கிய நிலையும், குறிப்பின் றாகலுந் துணுக்க மில்லாத் தகைமிக வுடைமையுந் தண்ணென வுடைமையும், அளத்தற் கருமையு மன்பொடு புணர்தலும், கலக்கமொடு புணர்ந்த நோக்குங் கதிர்ப்பும், விலக்காரென்ப வேண்டு மொழிப்புலவர்."
அவிநயம் என்பது பாவகம். முற்குறித்த சுவைநிலை யவிநயங்களன்றி, வேறு இருபத்து நான்கு அவிநயங்கள் உள. அவை: வெகுண்டோன் அவிநயம். ஐயமுற்றோன் அவிநயம், சோம்பினோன் அவிநயம், களித்தோன் அவிநயம், உவந்தோன் அவிநயம், அழுக்காறுடையோன் அவிநயம், இன்பமுற்றோன் அவிநயம், தெய்வமுற்றோன் அவிநயம், ஞஞ்ஞையுற்றோன் அவிநயம், உடன்பட்டோன் அவிநயம், உறங்கினோன் அவிநயம், துயிலுணர்ந்தோன் அவிநயம், செத்தோன் அவிநயம், மழை பெய்யப்பட்டோன் அவிநயம், பனித்தலைப்பட்டோன் அவிநயம், வெயிற்றலைப்பட்டோன் அவிநயம், நாணமுற்றோன் அவிநயம், வருத்தமுற்றோன் அவிநயம் கண்ணோவுற்றோன் அவிநயம், தலைநோவுற்றோன் அவிநயம், அழற்றிறம்பட்டோன் அவிநயம், சீதமுற்றோன் அவிநயம், வெப்பமுற்றோன் அவிநயம், நஞ்சுண்டோன் அவிநயம் என்பன. இவையனைத்திற்கும் அடியார்க்கு நல்லார் காட்டிய நூற்பாக்கள் வருமாறு:
"வெகுண்டோன் அவிநயம் விளம்புங் காலை, மடித்த வாயு மலர்ந்த மார்புந், துடித்த புருவமுஞ் சுட்டிய விரலும், கன்றின உள்ளமொடு கையுடைத் திடுதலும், அன்ன நோக்கமோ டாய்ந்தனர் கொளலே."
"பொய்யில் காட்சிப் புலவோர் ஆய்ந்த, ஐய முற்றோன் அவிநயம் உரைப்பின், வாடிய உறுப்பும் மயங்கிய நோக்கமும், பீடழி புலனும் பேசா திருத்தலும், பிறழ்ந்த செய்கையும் வான்றிசை நோக்கலும், அறைந்தனர் பிறவும் அறிந்திசினோரே."
"மடியின் அவிநயம் வகுக்குங் காலை, நொடியொடு பலகொட்டாவி மிக வுடைமையும், மூரி நிமிர்த்தலும் முனிவொடு புணர்த்தலுங், காரணமின்றி யாழ்ந்து மடிந் திருத்தலும், பிணியு மின்றிச் சோர்ந்த செலவோ, டணிதரு புலவர் ஆய்ந்தன ரென்ப."
"களித்தோன் அவிநயம் கழறுங் காலை, ஒளித்தலை ஒளியான் உரைத்த லின்மையும், கவிழ்ந்துஞ் சோர்ந்துந் தாழ்ந்துத் தலர்ந்தும், வீழ்ந்த சொல்லொடு மிழற்றிச் சாய்தலும், களிகைக் கவர்ந்த கடைக்கணோக் குடைமையும், பேரிசை யாளர் பேணினர் கொளலே."
"உவந்தோன் அவிநயம் உரைக்குங் காலை, நிவந்தினி தாகிய கண்மல ருடைமையும், இனிதி னியன்ற உள்ள முடைமையும், முனிவினகன்ற முறுவனகை யுடைமையும், இருக்கையுஞ் சேறலுங் கானமும் பிறவும், ஒருங்குட னமைந்த குறிப்பிற் றன்றே."
"அழுக்கா றுடையோன் அவிநயம் உரைப்பின், இழுக்கொடு புணர்ந்த இசைப்பொருளுடைமையுங், கூம்பிய வாயுங் கோடிய உரையும், ஓம்பாது விதிர்க்கும் கைவகை யுடைமையும், ஆரணங் காகிய வெகுளி உடைமையுங், காரண மின்றி மெலிந்தமுக முடைமையு, மெலிவொடு புணர்ந்த இடும்பையு மேவரப் பொலியு மென்ப பொருந்து மொழிப்புலவர்";
"இன்பமொடு புணர்ந்தோன் அவிநயம் இயம்பின், துன்பம் நீங்கித் துவர்த்த யாக்கையுந், தயங்கித் தாழ்ந்த பெருமகிழ் வுடைமையும், மயங்கி வந்த செலவுநனி யுடைமையும், அழகுள் ளுறுத்த சொற்பொலி வுடைமையும் எழிலொடு புணர்ந்த நருமலருடைமையும் கலங்கள் சேர்ந்தகன்ற தோண்மார் புடைமையும், நலங்கெழு புலவர் நாடின ரென்ப";
"தெய்வமுற்றோன் அவிநயம் செப்பிற், கைவிட்டெறிந்த கலக்க முடைமையும், மடித்தெயிறு கௌவிய வாய்த்தொழி லுடைமையும், துடித்த புருவமுந் துளங்கிய நிலையுஞ், செய்ய முகமுஞ் சேர்ந்த செருக்கும், எய்து மென்ப இயல்புணர்ந்தோரே";
"ஞஞ்ஞை யுற்றோ னவிநயம் நாடில், பன்மென் றிறுகிய நாவழி வுடைமையும், நுரைசேர்ந்து கூம்பும் வாயும் நோக்கினர்க், குரைப்போன் போல உணர்வி லாமையும், விழிப்போன் போல விழியா திருத்தலும், விழுத்தக வுடைமையும் ஒழுக்கி லாமையும், வயங்கிய திருமுகம் அழுங்கலும் பிறவும், மேவியதென்ப விளங்குமொழிப் புலவர்";
"சிந்தையுடம் பட்டோன் அவிநயம் தெரியின், முந்தை யாயினும் உணரா நிலைமையும், பிடித்த கைமேல் அடைந்த கவினும், முடித்தலுறாத கரும நிலைமையுஞ், சொல்வது யாதும் உணரா நிலைமையும், புல்லு மென்ப பொருந்துமொழிப்புலவர்";
"துஞ்சா நின்றோன் அவிநயம் துணியின், எஞ்சாத லின்றி இருபுடை மருங்கு, மலர்ந்துங் கவிழ்ந்தும் வருபடை யியற்றியு மலர்ந்துயிர்ப் புடைய ஆற்றலுமாகும்.";
"இன்னுயி லுணர்ந்தோன் அவிநயம் இயம்பின், ஒன்றிய குறுங் கொட்டாவியும் உயிர்ப்புந் தூங்கிய முகமுந் துளங்கிய உடம்பும், ஓங்கிய திரிபும் ஒழிந்தவுங் கொளலே.";
"செத்தோன் அவிநயம் செப்புங் காலை, அத்தக அச்சமும் அழிப்பும் ஆக்கலும், கடித்த நிரைப்பலின் வெடித்துப் பொடித்துப், போந்த துணி வுடைமையும்
வலித்த உறுப்பும், மெலிந்த வகடு மென்மைமிக வுடைமையும், வெண்மணி தோன்றக் கருமணி கரத்தலும், உண்மையிற் புலவர் உணர்ந்த வாறே";
" மழைபெய்யப் பட்டோன் அவிநயம் வகுக்கின், இழிதக வுடைய தியல்புநனி யுடைமையும்,மெய்கூர் நடுக்கமும் பிணித்தலும் படாத்தை, மெய்பூண் டொடுக்கிய முகத்தொடு புணர்த்தலும், ஒளிப்படு மனனிலுலறிய கண்ணும், விளியினுந் துளியினு மடிந்தசெவி யுடைமையுங் கொடுகி விட்டெறிந்த குளிர்மிக வுடைமையும், நடுங்கு பல்லொலி யுடைமையு முடியக், கனவுகண் டாற்றா னெழுதலு முண்டே";
"பனித்தலைப் பட்டோன் அவிநயம் பகரின், நடுக்க முடைமையும் நகைபடு நிலைமையுஞ், சொற்றளர்ந் திசைத்தலு மற்றமி லவதியும், போர்வை விழைதலும் புந்திநோ வுடைமையும், நீறாம் விழியுஞ் சேறு முனிதலும், இன்னவை பிறவும் இசைத்தனர் கொளலே";
"உச்சிப் பொழுதின் வந்தோன் அவிநயம், எச்ச மின்றி இயம்புங் காலைச் சொரியா நின்ற பெருந்துய ருழந்து, தெரியா நின்ற உடம்பெரி யென்னச் சிவந்த கண்ணும் அயர்ந்த நோக்கமும், பயந்த தென்ப பண்புணர்ந்தோரே";
"நாண முற்றோன் அவிநயம் நாடின், இறைஞ்சிய தலையும் மறைந்த செய்கையும், வாடிய முகமும் கோடிய உடம்பும், கெட்ட வொளியும் கீழ்க்கண் ணோக்கமும், ஒட்டின ரென்ப உணர்ந்திசி னோரே"; "வருத்த முற்றோன் அவிநயம் வகுப்பிற், பொருத்த மில்லாப் புன்க ணுடைமையுஞ், சோர்ந்த யாக்கையுஞ்
சோர்ந்த முடியுங், கூர்ந்த வியர்வுங் குறும்பல் லுயாவும், வற்றிய வாயும் வணங்கிய உறுப்பும் உற்றதென்ப உணர்ந்திசி னோரே";
"கண்ணோ வுற்றோன் அவிநயம் காட்டி, னண்ணிய கண்ணீர்த் துளிவிரல் தெறித்தலும், வளைந்தபுரு வத்தொடு வாடிய முகமும், வெள்ளிடை நோக்கின் விழிதரு மச்சமுந், தெள்ளிதிற் புலவர் தெளிந்தனர் கொளலே";
"தலைநோ வுற்றோன் அவிநயம் சாற்றின், நிலைமை யின்றித்தலையாட்டுடைமையுங், கோடிய விருக்கையுந் தளர்ந்த வேரொடு, பெருவிரலிடுக்கிய நுதலும் வருந்தி, ஒடுங்கிய கண்ணொடு பிறவுந், திருந்துமென்ப செந்நெறிப் புலவர்";
"அழற்றிறம் பட்டோன் அவிநயம் உரைப்பின், நிழற்றிறம் வேண்டும் நெறிமையின் விருப்பும், அழலும் வெயிலுஞ்,சுடரும் அஞ்சலும், நிழலும் நீருஞ் சேறு முவத்தலும், பனிநீ ருவப்பும் பாதிரித் தொடையலும், நுனிவிர லீர மருநெறி யாக்கலும், புக்க துன்போடு புலர்ந்த யாக்கையும், தொக்க தென்ப துணிவறிந் தோரே";
"சீத முற்றோன் அவிநயம் செப்பின், ஒதிய பருவர லுள்ளமோ டுழத்தலு, மீர மாகிய போர்வை யுறுத்தலு, மார வெயிலுழந் தழலும் வேண்டலு முரசியு முரன்று முயிர்த்து முரைத்தலுந், தக்கன பிறவுஞ் சாற்றினர் புலவர்";
"வெப்பின் அவிநயம் விரிக்குங் காலைத் தப்பில் கடைப்பிடித் தன்மையுந் தாகமும், எரியி னன்ன வெம்மையோ டியைவும், வெருவரு மியக்கமும் வெம்பிய விழியும் நீருண் வேட்கையு நிரம்பா வலியும், ஓருங் காலை உணர்ந்தனர் கொளலே";
"கொஞ்சிய மொழியிற் கூரெயிறு மடித்தலும், பஞ்சியின் வாயிற் பனிநுரை கூம்பலுந், தஞ்ச மாந்தர் தம்முக நோக்கியோர், இன்சொலியம்புவான் போலியம் பாமையும், நஞ்சுண் டோன்றன் அவிநயம் என்ப";
" சொல்லிய வன்றியும் வருவன வுளவெனிற், புல்லுவழிச் சேர்த்திப் பொருந்துவழிப் புணர்ப்ப;"
இனி, சொல் என்னும் உறுப்பு மூன்று வகைப்படும். அவை , உட்சொல், புறச்சொல், ஆகாயச் சொல் என்பன. நெஞ்சொடு கூறல் உட்சொல்லும், கேட்போர்க்குரைத்தல் புறச்சொல்லும், தானே கூறல் ஆகாயச்சொல்லும் ஆம்.
சொல்வகை நான்கு வகைப்படும். அவை : சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் என்பன. அவற்றுள், சுண்ணம் நான்கடியான் வருவது; சுரிதகம் எட்டடியான் வருவது; வண்ணம் பதினாறடியான் வருவது; வரிதகம் முப்பத்திரண்டடியான் வருவது.
வண்ணமானது ஒரு வகையான் பெருவண்ணம், இடைவண்ணம், வனப்புவண்ணமென மூன்று வகைப்படுமென்றும், அவற்றுள், பெருவண்ணம் ஆறாயும், இடைவண்ணம் இருபத்தொன்றாயும், வனப்புவண்ணம் நாற்பத்தொன்றாயும் வருமென்றுங் கூறுவர். ஆசிரியர் தொல்காப்பியனார் இருபது வண்ணங் கூறினர். நூறுவண்ணங் கூறினாருமுளர்.
வரியாவது : வரிக்கூத்துக்குரிய பாடல்.
"வரிப்பாடலாவது : பண்ணும், திறமும், செயலும், பாணியும் ஒரு நெறியன்றி மயங்கச் சொல்லப்பட்ட எட்டனியல்பும், ஆறனியல்பும் பெற்றுத், தன் முதலும் இறுதியுங் கெட்டு, இயல்பும் முடமுமாக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெறாதும் வரும்" என்றும் கூறுவர் அரும்பதவுரை யாசிரியர். வரிப்பாட்டுக்கள் திணை நிலைவரி, கிணைநிலை வரி எனவும் முகமுடை வரி, முகமில் வரி, படைப்பு வரி எனவும் அவை பலவாகவும் பாகுபாடெய்தும். அவற்றினியல்பெல்லாம் பின்னர், கானல்வரியுள்ளும் வேனிற்காதையுள்ளும் விளங்கலுறும்.
இனி, சந்தியென்பது நாட்டியக் கட்டுரையின் பிரிவுகள் ஒன்றோடொன்று தொடர்ந்து நிற்கும் நிலை. அது, முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என ஐவகைப்படும். அவற்றுள் முகமாவது எழுவகைப்பட்ட உழவினாற் சமைக்கப்பட்ட பூழியுள் இட்ட வித்துப் பருவஞ் செய்து முளைத்து முடிவது போல்வது: பிரதிமுகமாவது அங்ஙனம் முளைத்தல் முதலாய் இலைதோன்றி நாற்றாய் முடிவது போல்வது;
கருப்பமாவது அந் நாற்று முதலாய்க் கருவிருந்து பெருகித் தன்னுட் பொருள் பொதிந்து கருப்பமுற்றி நிற்பது போல்வது; விளைவாவது கருப்ப முதலாய் விரிந்து கதிர் திரண்டிட்டுக் காய் தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது; துய்த்தலாவது விளையப்பட்ட பொருளை அறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலிசெய்து கொண்டு போய் உண்டு மகிழ்வது போல்வது. வித்து, நாற்று, கரு, விளைவு, துய்த்தல் என்பன ஒன்றினொன்று தொடர்ந்து முடிதல்போல நாடகத்திற்குரிய கதை ஐந்து பகுதியாய் ஒன்றினொன்று தொடர்ந்து முடியவேண்டும் என்றபடி. இவ்வுறுப்பு,நாடகத்திற் கின்றியமையாத தொன்றென்க.
சேதம் என்பது ஆதிக் கதையை ஆரியம், தமிழ் என்னும் இருவகைக் கூத்திற்கேற்பச் சேதித்திடுவது என்பர்.
"ஆரியந் தமிழெனுஞ் சீர்நட மிரண்டினும்
ஆதிக் கதையை யவற்றிற் கொப்பச்
சேதித் திடுவது சேதமென் றாகும்"
என்பது காண்க. "விலக்கினிற் புணர்த்து" என்பதனாற் குறிக்கப்பட்ட விலக்குறுப்புக்கள் இதுகாறும் உணர்த்தப்பட்டன.
௧௪. பதினோராடலாவன : அசுரரைக் கொல்ல அமரராடிய பதினொரு கூத்துக்கள். அவற்றை,
"கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்
குடைதுடிமா வல்லியமற் கும்பம்-சுடர்விழியாற்
பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம்
கொட்டியிவை காண்பதினோர் கூத்து"
என்பதனாலறிக. இவை நின்றாடல், படிந்தாடல் என இருவகையின.
"அல்லியங் கொட்டி குடைகுடம் பாண்டரங்கம்
மல்லுட னின்றாட லாறு"
" துடிகடையம் பேடு மரக்காலே பாவை
வடிவுடன் வீழ்ந்தாட லைந்து."
இக்கூத்து ஒவ்வொன்றும் எவ்வெக்காரணம் பற்றி எவ்வெவ்விடத்து நிகழ்த்தப்பட்டன வென்பது பின்னர்க் கடலாடு காதையால் விளக்கமாம்.
௧௪. பாட்டு என்றது அக நாடகங்களுக்கும், புறநாடகங்களுக்கு முரிய உருக்களை. அக நாடகங்களுக்குரிய உருவாவன: கந்த முதல் பிரவந்தவுரு வீறாக இருபத்தெட்டும். இவற்றுள், கந்தமென்பது அடி வரையறை யுடைத்தாய் ஒரு தாளத்தாற் புணர்ப்பது; பிரபந்தமென்பது அடிவரையறையின்றிப் பல தாளத்தாற் புணர்ப்பது. புறநாடகங்களுக்குரிய உருவாவன: தேவபாணி முதலாக அரங்கொழி செய்யுளீறாகச் செந்துறை விகற்பங்க ளெல்லாமென்க.
௧௪. கொட்டு – கொட்டப்படும் வாச்சியங்கள். அவை கீதாங்கம், நிருத்தாங்கம், உபயாங்கம் என்பன. அவற்றுள் கீதாங்கம் கீதத்திற்கு வாசிப்பது; நிருத்தாங்கம் நிருத்தத்திற்கு வாசிப்பது; உபயாங்கம் இரண்டிற்கும் வாசிப்பது.
௧௫. கொள்கை-நூல், ஆங்கு : அசை.
௧௬. ஆடல் – முற்கூறிய அகக்கூத்திலும் புறக்கூத்தினுமுள்ள ஆடல். கீற்று, கடிசரி முதலாகிய,தேசிக்குரிய கால்கள் இருபத்து நான்கும், சுற்றுதல், எறிதல் முதலாகிய வடுகிற்குரிய கால்கள் பதினான்கும், உடற்றூக்கு முதலாகிய உடலவர்த்தனை ஒன்பதும் அக்கூத்துக் குரியன "சிங்களம் இருவகை நிலையினும் எய்தும்" என்பாரும், உடலவர்த்தனையைச் சிங்கள மென்பாருமுளர். எனவே, தமிழ், வடுகு, சிங்களம் என ஆடல் மூவகைப்படும் என்க.
௧௬. பாடல் – இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன்சொல், இறுதி, மந்தம், உச்சம் என்னும் எண்வகைப் பயனுமுடைய பாடல்.
௧௬. பாணி-தாளம் : அது கொட்டு, அசை, தூக்கு, அளவு என நான்கு நிலையினையுடையது; கொட்டாவது அமுக்குதல்; அசையாவது தாக்கியெழுதல்; தூக்காவது தாக்கித் தூக்குதல்; அளவாவது தாக்கின வோசை நேரே மூன்று மாத்திரை பெறுமளவும் வருதல், கொட்டு அரை மாத்திரை: அதற்கு வடிவு, க; அசை ஒரு மாத்திரை; அதற்கு வடிவு, உ. அளவு மூன்று மாத்திரை; அதற்கு வடிவு ஃ எனக் கொள்க. கொட்டு முதலியவற்றின் வடிவைக் குறிக்க, ‘க’ முதலிய இடுகுறியாக நிறுத்தப்பெற்றன வென்க.
"கொட்டும் அசையுந் தூக்கும் அளவும்
ஒட்டப் புணர்ப்பது பாணி யாகும்"
"ககரங் கொட்டே எகரம் அசையே
உகரந் தூக்கே அளவே யாய்தம்"
என்பன காண்க.
அரை மாத்திரையுடைய ஏகதாளம் முதலாகப் பதினாறு மாத்திரையுடைய பார்வதி லோசனம் ஈறாகச் சொன்ன நாற்பத்தொரு தாளம் புறக்கூத்துக்குரிய வெனவும், ஆறன் மட்டம் என்பனவும், எட்டன் மட்டம் என்பனவும், தாளவொரியல் என்பனவும், தனிநிலை யொரியல் என்பனவும், ஒன்றன் பாணி எண்கூத்துப் பாணியீறாகக் கிடந்த பதினொருபாணி விகற்பங்களும், முதல்நடை, வாரம் முதலாயினவும் அகக்கூத்திற்குரிய வெனவும் கூறுவர்.
௧௬. தூக்கு-இத்தாளங்களின் வழிவரும் எழுவகைப்பட்ட தூக்குக்கள்; அவை செந்தூக்கு, மதலைத்தூக்கு, துணிபுத்தூக்கு, கோயிற்றூக்கு, நிவப்புத் தூக்கு, கழாற்றூக்கு, நெடுந்தூக்கு என்பன; என்னை? ஒருசீர் செந்தூக்கி ருசீர் மதலை, முச்சீர் துணிபு, நாற்சீர் கோயில், ஐஞ்சீர் நிவப்பே யறுசீர் கழாலே, எழுசீர் நெடுந்தூக் கென்மனார் புலவர்" என்றாராகலின்.
௧௭. கொளுத்துதல் – ஆட்டுவித்தல்.
௧௮. பிண்டி-ஒன்று; ஈண்டு ஒற்றைக்கைக்கு ஆகுபெயர். பிணையல்-இணைதல்; ஈண்டு இரட்டைக்கை. பிண்டி, ஒற்றைக்கை, இணையாவினைக்கை என்பன ஒரு பொருளன; பிணையல், இணைக்கை, இரட்டைக்கை என்பன ஒரு பொருளன. அவிநயக்கை இங்ஙனம் இருவகைப்படும். பிண்டி-பொருட்கையாம்; பிணையல்-தொழிற்கையாம் என்க. அவற்றுள் ஒற்றைக்கை முப்பத்து மூன்று வகைப்படும். அவை: பதாகை-௧, திரிபதாகை-௨, கத்தரிகை-௩, தூபம்-௪, அராளம்-௫, இளம்பிறை-௬, சுகதுண்டம்-௭, முட்டி-௮, கடகம்-௯, சூசி-௧0, கமல கோசிகம்-௧௧, காங்கூலம்-௧௨, கபித்தம்-௧௩, விற்படி-௧௪, குடங்கை-௧௫, அலாபத்திரம்-௧௬, பிரமரம்-௧௭, தாம்பிரசூடம்-௧௮, பசாகம்-௧௯, முகுளம்-௨0, பிண்டி-௨௧, தெரிநிலை-௨௨, மெய்ந்நிலை-௨௩, உன்னம்-௨௪, மண்டலம்-௨௫, சதுரம்-௨௬, மான்றலை-௨௭, சங்கு-௨௮, வண்டு-௨௯, இலதை-௩0, கபோதம்-௩௧, மகர முகம்-௩௨, வலம்புரி-௩௩ என்பன. இவற்றுள்,
பதாகையாவது நான்கு விரலும் தம்முள் ஒட்டி நிமிரப் பெருவிரல் குஞ்சித்து நிற்பது.
திரிபதாகை யாவது பதாகைக்கையின் அணிவிரல் முடக்குவது.
கத்தரிகையாவது திரிபதாகையின் முடங்கிய அணிவிரற் புறத்ததாகிய நடுவிரலைச் சுட்டுவிரலோடு பொருந்த நிமிர்ப்பது.
தூபமாவது நிமிர்ந்த நடுவிரலும் சுட்டு விரலும் பாதிப்பட வளைய நிற்பது.
அராளமாவது பெருவிரல் குஞ்சித்துச் சுட்டுவிரல் முடக்கி ஒழிந்த விரன் மூன்றும் நிமிர்ந்து வளைவது.
இளம்பிறையாவது சுட்டுவிரலும் நடுவிரலும் அணிவிரலையும் சிறு விரலையும் ஒட்டி அகம் வளைய வளைத்த பெருவிரல் அவற்றை விட்டு நீங்குவது. "சுட்டும் பேடும் அநாமிகை சிறுவிரல், ஒட்டி யகம் வளைய வொசித்த பெருவிரல், விட்டு நீங்கும் விதியிற் றென்ப."
சுகதுண்டம் "சுகதுண்ட மென்பது தொழில்பெறக் கிளப்பின், சுட்டுவிரலும் பெருவிரல் தானும் ஒட்டி யுகிர்நுனை கவ்வி முன்வளைந் தநாமிகை முடங்கப் பேட்டொடு சிறுவிரல், தான்மிக நிமிர்ந்த தகுதித் தென்ப."
அநாமிகை-அணிவிரல்; பவுத்திரவிரல். பேடு-நடுவிரல்.
முட்டி : "முட்டி யென்பது மொழியுங் காலைச், சுட்டு நடுவிரல் அநாமிகை சிறுவிரல், இறுக முடக்கி யிவற்றின்மிசைப் பெருவிரல், முறுகப் பிடித்த முறைமைத் தென்ப."
கடகம் : கடக முகமே கருதுங் காலைப், பெருவிர னுனியுஞ் சுட்டுவிர னுனியு, மருவ வளைந்தவவ் வுகிர்நுனி கௌவி, யொழிந்த மூன்றும் வழிவழி நிமிர, மொழிந்தன ரென்ப முடிபறிந் தோரே."
சூசி : "சூசி யென்பது துணியுங் காலை நடுவிரல் பெருவிர லென்றிவை தம்மி, னடைவுட னொற்றிச் சுட்டுவிர னிமிர, வொழிந்தன வழிவழி முடங்கி நிற்ப, மொழிந்தனர் மாதோ முடிபறிந் தோரே."
பதும கோசிகம் : "பதும கோசிகம் பகருங்காலை, யொப்பக் கைவளைத் தைந்து விரலு, மெயய்ப்பட வகன்ற விதியிற் றாகும்.
காங்கூலமாவது : "காங்கூலம்மே கருதுங் காலைச், சுட்டும் பேடும் பெருவிரல் மூன்று மொட்டிமுன் குவிய வநாமிகை முடங்கிச், சிறு விர னிமிர்ந்த செய்கைத் தாகும்" "முகிழ்காங் கூல முந்துறமொழிந்த, குவிகாங் கூலங் குவிவிழந் ததுவே." "மலர்காங் கூல மதுமலர்ந்ததுவே."
கபித்தமாவது: "சுட்டுவிர னுனியும் பெருவிரனுனியும் உகிர்நுனை கௌவிப் பிடித்த ஒழிந்த மூன்று விரலும் மெல்லெனப் பிடிப்பது.
விற்பிடி : "விற்பிடி யென்பது விரிக்குங் காலைச், சுட்டொடு பேடியதாமிகை சிறுவிர, லொட்டி யகப்பால் வளையப் பெருவிரல், விட்டு நிமிரும் விதியிற்றாகும்".
குடங்கையாவது எல்லா விரலுங் கூட்டி உட்குழிப்பது.
அலாபத்திரமாவது சிறுவிரல் முதலாகிய வைந்தும் வளைந்து மறிவது.
பிரமரமாவது அநாமிகை விரலும் நடுவிரலும் தம்மிற் பொருந்தி வலஞ்சாயப் பெருவிரல் நடுவிரலினுள்ளே சேரச் சுட்டு விரலும் சிறுவிரலும் பின்பே வளைந்து நிற்பது.
தாம்பிரசூடமாவது நடுவிரலும் சுட்டுவிரலும் பெருவிரலும். தம்மில் நுனியொத்துக் கூடி வளைந்து சிறுவிரலும் அணிவிரலும் முடங்கி நிமிர்வது.
பசாசமாவது பெருவிரலும் சுட்டுவிரலுமன்றி ஒழிந்த மூன்று விரலும் தம்மிற் பொலிந்து நிற்பதெனக் கொள்க.
அப் பசாசந்தான் மூன்று வகைப்படும்:
அகநிலைப் பசாசம்-சுட்டுவிர னுனியில் பெருவிர லகப்படுவது.
முகநிலைப் பசாசம்- அவ்விரன் முகங்கூடி உகிர்விட்டு நிற்பது.
உகிர்நிலைப் பசாசம்-சுட்டுவிரலும் பெருவிரலும் உகிர் நுனை கௌவி நிற்பது.
முகுளமாவது ஐந்துவிரலுந் தம்மில் தலைகுவிந்து உயர்ந்து நிற்பது.
பிண்டியென்றது சுட்டுவிரல் பேடிவிரல் அநாமிகை சிறுவிரல் ஒட்டி நெகிழ முடங்க அவற்றின்மேலே குறுக்கிடப் பெருவிரல் கட்டி விலங்கி விரல்வழி முறையொற்றல்.
தெரிநிலையாவது எல்லாவிரலும் விரிந்து குஞ்சித்து நிற்பது.
மெய்ந் நிலையாவது சிறுவிரலும் அணிவிரலும் நடுவிரலும் சுட்டு விரலும் விட்டுநிமிரச் சுட்டுவிரன்மேற் பெருவிரல் சேரவைப்பது.
உன்னமாவது சிறுவிரலும் பெருவிரலும் தம்முட்கூட ஒழிந்த மூன்று விரலும் விட்டு நிமிர்வது.
மண்டலம் : "மண்டலமென்பது மாசறக் கிளப்பிற், பேடு நுனியும் பெருவிர னுனியுங், கூடி வளைந்துதம் முகிர் நுனை கௌவி, யொழிந்த மூன்று மொக்க விளைவதென, மொழிந்தன ரென்ப முழுதுணர்ந்தோரே."
சதுரமாவது சுட்டு விரலும் நடுவிரலும் அணிவிரலும் தம்முட் சேர்ந்து இறைஞ்சப் பெருவிரல் அகம் தர வைத்துட் சிறுவிரல் பின்பே நிமிர்ந்து நிற்பது.
மான்றலையாவது பெருவிரலுஞ் சிறுவிரலு மொழிந்த மூன்றுந் தம்மில் ஒத்து ஒன்றி முன்னே இறைஞ்சி நிற்பது.
சங்கமாவது பெருவிரல் நிமிர ஒழிந்த நான்குவிரலும் வளைந்து நிற்பது.
வண்டாவது பெருவிரலும் அணிவிரலும் வளைந்து நுனியொன்றிச் சிறுவிரல் நிமிர்ந்து சுட்டுவிரலும் நடுவிரலும் நெகிழ வளைந்து நிற்பது.
இலதையாவது நடுவிரலும் சுட்டுவிரலும் கூடிநிமிரப் பெருவிரல் அவற்றின் கீழ்வரை சேர ஒழிந்த இரண்டு விரலும் வழிமுறை பின்னே நிமிர்ந்து நிற்பது.
கபோத மென்றது பதாகைக் கையிற் பெருவிரல் விட்டு நிமிர்வது.
மகரமுகமாவது பெருவிரலும் சுட்டுவிரலும் நிமிர்ந்துகூட ஒழிந்த மூன்றுவிரலுந் தம்முளொன்றி அதற்கு வேறாய் நிற்பது.
வலம்புரியாவது, சிறுவிரலும் பெருவிரலும் நிமிர்ந்து சுட்டுவிரலின் அகம் வளைந்து ஒழிந்த விரண்டும் நிமிர்ந்து இறைஞ்சி நிற்பது.
இனி, இரட்டைக்கை பதினைந்து வகைப்படும். அவை: அஞ்சலி.௧, புட்பாஞ்சலி-௨, பதுமாஞ்சலி-௩, கபோதம்-௪, கற்கடகம்-௫, சுவத்திகம்-௬, கடகாவருத்தம்-௭, நிடதம்-௮, தோரம்-௯, உற்சங்கம்-௰, புட்பபுடம்-௧௧, மகரம்-௧௨, சயந்தம்-௧௩, அபயவத்தம்-௧௪, வருத்தமானம்-௧௫, இவற்றுள்,
அஞ்சலியாவது : இரண்டு கையும் பதாகையாய் அகமொன்றுவது.
புட்பாஞ்சலியாவது இரண்டு கையும் குடங்கையாய் வந்து ஒன்றுவது.
கபோதமென்றது இரண்டு கையும் கபோதமாகக் கூட்டுவது.
கற்கடக மென்றது தெரிநிலைக் கையிரண்டும் அங்குலி பிணைந்து வருவது.
சுவத்திக மென்றது மணிக்கட்டிற் பொருந்திய பதாகையிரண்டையும் மணிக்கட்டி லேற்றி வைப்பது.
கடகா வருத்தமாவது இரண்டு கையும் கடகமாய் மணிக்கட்டுக்கு ஏற இயைந்து நிற்பது.
நிடதமாவது முட்டியாக இரண்டு கையும் சமஞ்செய்வது.
தோரமாவது இரண்டு கையும் பதாகையாக்கி அகம்புர மொன்றி முன்தாழ்ந்து நிற்பது.
உற்சங்கமாவது ஒருகை பிறைக்கையாகக் கொண்டு ஒருகை அராளமாக்கி இரண்டு கையும் மணிக்கட்டி லேற்றி வைப்பது.
புட்பபுடமாவது குடங்கையிரண்டும் தம்மிற் பக்கங் காட்டி நிற்பது.
மகரமென்றது கபோத மிரண்டு கையும் அகம்புற மொன்ற வைப்பது.
சயந்தம் (விடுபட்டது)
அபயமத்தமாவது. இருகையும் கைதுண்டமாக நெஞ்சுற நோக்கி நெகிழ்ந்து நிற்பது.
வருத்தமானமாவது முகுளக் கையிற் கபோதக் கையை எதிரிட்டுச் சேர்ப்பது.
௧௮- எழிற்கை-அழகுபெறக் காட்டுங் கை. தொழிற்கை-தொழில் பெறக் காட்டுங்கை. பொருட்கை யென்பதும் வருவிக்கப் படும்; ஆவது, பொருளுறக் காட்டுங் கை.
௧௯. கொண்டவகை யறிதலாவது-பிண்டியும் பிணையலும் புறக்குத்துக் குரியகை யென்றும்; எழிற்கையும் தொழிற்கையும் அகக்கூத்துக்குரிய கை யென்றும் அறிதல்.
௨0-௧. கூடை, வாரம் என்பன சில தாளவிகற்பங்களுக்கும், இசைப்பாட்டுக்களின் இயக்கங்களுக்கும், அவிநயக்கைகட்கும், பிற சிலவற்றிற்கும் பெயர், ஈண்டு அவிநயக் கைகளை யுணர்த்தி நின்றன.
கூடை-ஒற்றைக்கை; இரட்டை யொற்றைக் கையாகிய குவித்த கையையும் இது குறிக்கும். வாரம்-இரட்டைக்கை. அகக்கூத்து நிகழுமிடத்து ஒற்றையிற் செய்த கைத்தொழில் இரட்டையிற் புகாமலும் இரட்டையிற்செய்த கைத்தொழில் ஒற்றையிற் புகாமலும் களைதல். இன்னும் தேசியிற் கைத்தொழில் மார்க்கத்துப் புகாமலும், மார்க்கத்துக் கைத்தொழில் தேசியிற் புகாமலும் களைதலென்றுமாம்; ஒற்றையும் இரட்டையும் தேசிக் கூறாகலானும் இரட்டையும் இரட்டைக் கிரட்டையும் வடுகிற் கூறாகலானு மென்க.
௨௨-௩. பிண்டி-பொருட்கை, ஆடல்-பிணையல்; தொழிற்கை புறக்கூத்தில் ஆடல் நிகழுமிடத்து அவிநயம் நிகழாமலும், அவிநயம் நிகழுமிடத்து ஆடல் நிகழாமலும் களைதல்.
௨௪- குரவை-குரவைக்கூத்து; அது காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைத்தாடுவது; அதன் இயல்பினை, "குரவை யென்பது கூறுங் காலைச், செய்தோர் செய்த காமமும் விறலும், எய்த வுரைக்கு மியல்பிற் றென்ப" என்பதனா னறிக.
வரி-வரிக்கூத்து: அஃது அவரவர் பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழிற் றன்மையும் தோன்ற நடித்தல். இதற்கு வரிச்செய்யுள் பாட்டாகும். டுவது வகுக்குங் காலைப், பிறந்த நிலனுஞ் சிறந்த தொழிலும், அறியக் கூறி யாற்றுழி வழங்கல்" என்பதனானறிக. வரிக்கூத்து ஒருவர் பெரும்பாலும் வேற்றுருத் தாங்கி நடிப்பது.
இத் தொடர்நிலைச் செய்யுளின்கண், முல்லை சார்ந்து ஆய்ச்சியர் குரவையும், குறிஞ்சி சார்ந்து குன்றக்குரவையும், நெய்தல் சார்ந்து கானல்வரியும், பாலை சார்ந்து வேட்டுவ வரியும் , மருதஞ் சார்ந்து ஊர் சூழ்வரியும் நிகழ்ந்தனவாக அமைந்திருத்தல் அறியற்பாற்று.
வரிக்கூத்தானது கண்கூடுவரி, கானல்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள்வரி என எண்வகைப்படும். இவற்றினியல்பெல்லாம் வேனிற் காதையால் விளக்கமாம். இனி, " இவ்வரியென்பதனைப் பல்வரிக் கூத்தென்பாருமுளர்" என்று கூறி, அடியார்க்கு நல்லார் அதற்கெடுத்துக் காட்டிய கலிவெண்பாட்டொன்றால் தமிழகத்தே பண்டை நாளில் வழங்கிய எத்தனையோ வகையான கூத்துக்களும் பாட்டுக்களும் புலனாகின்றன: அச்செய்யுள் பின்வருமாறு;
" சித்துப் பிழுக்கை யுடன்சந்தி யோர்முலை
கொந்தி கவுசி குடப்பிழுக்கை-கத்தன்பாட்
டாலங்காட் டாண்டி பருமண னெல்லிச்சி
சூலந் தருநட்டந் தூண்டிலுடன்-சீலமிகும்
ஆண்டி யமண்புனவே டாளத்தி கோப்பாளி
பாண்டிப் பிழுக்கையுடன் பாம்பாட்டி-மீண்ட
கடவுட் சடைவீர மாகேசங் காமன்
மகிழ்சிந்து வாமன ரூபம்-விகடநெடும்
பத்திரங் கொற்றி பலகைவாள் பப்பரப்பெண்
தத்தசம் பாரம் தகுணிச்சங்-- கத்து
முறையீண் டிருஞ்சித்து முண்டித மன்னப்
பறைபண் டிதன்புட்ப பாணம்-இறைபரவு
பத்தன் குரவையே பப்பறை காவதன்
பித்தனொடு மாணி பெரும்பிழுக்கை-எத்துறையும்
ஏத்திவருங் கட்களி யாண்டு விளையாட்டுக்
கோத்த பறைக்குடும்பு கோற்கூத்து-மூத்த
கிழவன் கிழவியே கிள்ளுப் பிறாண்டி
அழகுடைய பண்ணிவிக டாங்கந் திகழ்செம்பொன்
அம்மனை பந்து கழங்காட லாலிக்கும்
விண்ணகக் காளி விறற்கொந்தி-அல்லாத
வாய்ந்த தனிவண்டு வாரிச்சி பிச்சியுடன்
சாந்த முடைய சடாதாரி – ஏய்ந்தவிடை
தக்கபிடார் நிர்த்தந் தளிப்பாட்டுச் சாதுரங்கந்
தொக்க தொழில்புனைந்த சோணாண்டு மிக்க
மலையாளி வேதாளி வாணி குதிரை
சிலையாடு வேடு சிவப்புத் தலையில்
திருவிளக்குப் பிச்சி திருக்குன் றயிற்பெண்
டிருண்முகத்துப் பேதை யிருளன்-பொருமுகத்துப்
பல்லாங் குழியே பகடி பகவதியான்
நல்லார்தந் தோள்வீச்சு நற்சாழல்-அல்லாத
உந்தி யவலிடி யூராளி யோகினிச்சி
குந்திவரும் பாரன் குணலைக்கூத்-தந்தியம்போ
தாடுங் களிகொய்யு முள்ளிப்பூ வையனுக்குப்
பாடும்பாட் டாடும் படுபள்ளி-நாடறியுங்
கும்பீடு நாட்டங் குணாட்டங் குணாலையே
துஞ்சாத சும்மைப்பூச் சோனக-மஞ்சரி
ஏற்ற வுழைமை பறைமைமுத லென்றெண்ணிக்
கோத்தவரிக் கூத்தின் குலம்"
--------------------
(இசையாசிரியன் அமைதி)
-
௨௬-௩௬. யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத்
தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசுஇன்று உணர்ந்த அறிவினன் ஆகிக்
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை
வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின் இசையோன் தானும்
யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு-யாழ்ப்பாடலும் வங்கியப் பாடலும் தாளக் கூறுபாடுகளும் மிடற்றுப் பாடலும் மந்தமாகிய சுரத்தினையுடைய தண்ணுமையும் கூத்துக்களும் வல்லனாய், இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து-இவற்றுடனே சேரச்செய்த உருக்களை இசை கொள்ளும்படியும் சுவை பொருந்தும்படியும் புணர்க்கவும் வல்லனாய், வரிக்கும் ஆடற்க்கும் உரிப்பொருள் இயக்கி-செந்துறை வெண்டுறை என்னும் இருவகைப்பட்ட பாடல்களுக்கும் பொருளான இயக்கம் நான்கினையும் அமைத்து, தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து-அழகுடைய தேசாந்தரங்களின் பாடைகளையும் அறிந்து, தேசிகத் திருவின் ஓசையெல்லாம் ஆசின்று உணர்ந்த அறிவினன் ஆகி-அந்தப் பாடைகள் இசை பூணும்படியையும் அறிந்து, கவியது குறிப்பும் ஆடற்றொகுதியும் பகுதிப்பாடலும் கொளுத்துங்காலை-இயற்புலவன் கருத்தும் நாடகப் புலவன் ஈடுவரவுகளும் அவற்றுக் கடைத்த பாடல்களும் தம்மிற் சந்திப்பிக்கு மிடத்து, வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்-குற்றம் தீர்ந்த நூல் வழக்காலே வகுக்கவும் விரிக்கவும் வல்லனாயுள்ள, அசையா மரபின் இசையோன் தானும்-தளராத இயல்பினையுடைய இசைப்புலவனும்;
௨௬. யாழ்-பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டி யாழ் என யாழ் நால்வகைப்படும். அவற்றுக்கு நரம்பு முறையே இருபத்தொன்றும், பத்தொன்பதும், பதினான்கும், ஏழும்ஆகும். என்னை?
"ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே
நின்ற பதினான்கும் பின்னேழும்-குன்றாத
நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே
மேல்வகை நூலோர் விதி"
என்பவாகலின், ஓரேழ்மேற்பத்துடனே என்பது பாடமாயின் மகரயாழிற்கு நரம்பு பதினேழாகும். இந்நால்வகையன்றிச் சிறுபான்மையான் வரும் யாழ் பிறவு முள என்பர். யாழின் பிறவிலக்கணங்கள் பின் கானல்வரி யுரையிற் கூறப்படும். யாழ்-யாழ்ப்பாடல் என்க.
௨௬. குழல்-குழலின் பாடல் என்க. குழல்-வங்கியம்; அது மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி யென்னும் ஐந்தானும் இயற்றப்படும். இவற்றுள் மூங்கிலே முதன்மையானது; அது பற்றியே புல்லாங்குழல், வேய்ங்குழல், வங்கியம், வேணு என்னும் பெயர்கள் குழலுக்கு வழங்குவ வாயின. மூங்கில் உத்தமம், வெண்கலம் மத்திமம், ஏனைய அதமம் என்பர். இக் காலத்துக் கருங்காலி செங்காலி சந்தனம் இவற்றாற் கொள்ளப்படும் எனவும், இவை கொள்ளுமிடத்து, உயர்ந்த ஒத்தநிலத்திற் பெருக வளர்ந்து நாலு காற்றும் மயங்கின் நாதமில்லை யாதலால், மயங்கா நிலத்திலே இளமையும் நெடும் பிராயமுமின்றி ஒரு புருடாயுப் புக்க பெரிய மரத்தை வெட்டி, ஒரு புருடாகாரமாகச் செய்து, அதனை நிழலிலேயிட்டு ஆறவைத்து, திருகுதல் பிளத்தல் போழ்ந்து படுதல் இன்மையறிந்து ஒரு யாண்டு சென்றபின் வங்கியம் செய்யப்படும் எனவும், இதன் நீளம் இருபது விரலளவும், சுற்று நாலரை விரலளவுமாம் எனவும்; இது துளையிடுமிடத்து நெல்லரிசியில் ஒரு பாதி மரனிறுத்திக் கடைந்து வெண்கலத்தால் அணைசு பண்ணி இடமுகத்தையடைத்து வலமுகம் வெளியாக விடப்படும் எனவும், இதிலே தூபமுகத்தின் இரண்டு விரல் நீக்கி முதல்வாய் விட்டு, இம்முதல் வாய்க்கு ஏழங்குலம்விட்டு வளைவாயினும் இரண்டு நீக்கி நடுவினின்ற ஒன்பது விரலினும் எட்டுத் துளையிடப்படும் எனவும், துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும் எனவும் கூறுவர். இதனை வாசிக்குமிடத்து, வளைவாய் சேர்ந்த துளையை முத்திரையென்று நீக்கி, முன்னின்ற ஏழு துளையினும் இடக்கையின் இடைமூன்று விரலும், வலக்கையின் பெருவிரலொழிந்த நான்கு விரலும் பற்றி வாசிக்கப்படும். இவ் வங்கியத்தின் ஏழு துளைகளிலும் சரிகமபதநி என்னும் ஏழெழுத்தினையும் மாத்திரைப்படுத்தித் தொழில் செய்ய இவற்றுள்ளே ஏழிசையும் பிறக்கும்; இவை பிறந்து இவற்றுள்ளே பண்கள் பிறக்கும்;
"சரிக மபதநியென் றேழெழுத்தாற் றானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் –தெரிவரிய
ஏழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாஞ் சுத்தத் துளை"
என்பது காண்க.
௨௬. சீர்-அகக்கூத்திற்கும்,புறக்கூத்திற்கு முரிய இருவகைத் தாளக் கூறுபாடுகள்.
௨௬. மிடறு-மிடற்றுப்பாடல். இதனைச் சாரீரவீணையென்பர். புற்கலம் எனப்படும் உடம்பு ஐம்பூதங்களின் பரிணாமத்தால் ஆகுமுறைமை அடியார்க்கு நல்லாரால் விரித்துரைக்கப் பட்டுள்ளது; அஃது சண்டைக்கு வேண்டப்படுவதின்று.
உடம்பினளவு தன் கையால் தொண்ணூற்றாறு அங்குலம் எனவும் அவற்றுள் மேலே நாற்பத்தேழரை யங்குலமும் கீழே நாற்பத்தேழரை யங்குலமும் விட்டு நடுநின்ற ஓரங்குலம் மூலாதாரம் எனவும், மூலாதாரந் தொடங்கி எழுத்தின் நாதம் ஆளத்தியாய்ப் பின் இசை யென்றும் பண்ணென்றும் பெயராம் எனவும், நெஞ்சும் மிடறும் நாக்கும் மூக்கும் அண்ணாக்கும் உதடும் பல்லும் தலையும் என்னும் பெருந்தானம் எட்டினும் எடுத்தல் படுத்தல் நலிதல் கம்பிதம் குடிலம் ஒலி உருட்டு தாக்கு என்னுங் கிரியைக ளெட்டானும் பண்ணிப் படுத்தலாற் பண்ணென்று பெயராயிற்று எனவும் கூறுவர்.
ஆளத்தி யென்பது இக்காலத்து ஆலாபனம் என வழங்கப்பெறும். அது மகர ஒற்றுடன் கூடிய குற்றெழுத்தாலும், நெட்டெழுத்தாலும் ‘தென்னா, தெனா, தென்னா, தெனா’ என்னும் அசைகள் கூட்டியும் செய்யப்படும் எனவும், மற்றும்: ம,ந,த, என்னும் மூன்று ஒற்றுக்களுடன் கூடிய அ இ உ எ ஒ என்னுங் குற்றெழுத் தைந்தானும் ஆ ஈ ஊ ஏ ஓ என்னும் நெட்டெழுத் தைந்தானும் செய்யப்படும் எனவும், இவ்வாளத்திதான் அச்சு, பாரணை யென்றும், காட்டாளத்தி, நிறவாளத்தி, பண்ணாளத்தி யென்றும் எழுத்து வேற்றுமையாற் பெயரெய்தும் எனவும், பிறவாறும் கூறுப.
௨௭. தண்ணுமை – பிறகருவிகட்கும், உபலக்கணம்.
௨௭. ஆடல்-அகக்கூத்து, புறக்கூத்து. பதினோராடல் என்பன.
௨௯. உரிப்பொருள்-இயக்கம்; பாட்டின் நடை. அது முதனடை, வாரம், கூடை, திரள் என நால்வகைப்படும். அவற்றுள், முதனடை மிகத்தாழ்ந்த செலவினையுடையது; வாரம் சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உடையது; கூடை சொற்செறிவும் இசைச்செறிவும் உடையது; திரள் மிக முடுகிய நடையினை யுடையது.
இசையுடன் படுத்து இயக்கிக் கடைப்பிடித்து உணர்ந்த அறிவினனாகி விரிக்கும் இசையோன் என்க.
------------------
(கவிஞன் அமைதி)
-
௩௭ - ௪௪. இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்தின்
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து
இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்துஆங்கு
அசையா மரபின் அதுபட வைத்து
மாற்றார் செய்த வசைமொழி அறிந்து
நாத்தொலைவு இல்லா நன்னூல் புலவனும்,
இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய- ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த புவியின் கண்ணே தமிழ் நாட்டினர் அறிய, தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி- முத்தமிழும் துறை போகக் கற்றுணர்ந்த தன்மையையுடையனாகி, வேத்தியல் பொதுவியல் என்று இருதிறத்தின்-வேத்திய லென்றும் பொதுவியலென்றும் கூறப்படும் இரண்டு கூறுபாட்டினையுட, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து-நாடக நூலை நன்றாகப் பற்றிக் கொண்டு, இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்து-இசைப்புலவன் ஆளத்தி வைத்த பண்ணீர்மையை அறிந்து, ஆங்கு-அறிந்தவண்ணம்; அசையா மரபின்-தளராத முறைமையாலே, அது பட வைத்து-அவன் தாளநிலையில் எய்த வைத்த நிறம் தன் கவியிலே தோன்ற வைக்க வல்லனாய், மாற்றோர் செய்த வசைமொழி அறிந்து நாத்தொலைவு இல்லா-முன் பகைவர் செய்த வசைமொழிகளையறிந்து அவை தோற்றாதபடி வசையில்லாத மொழிகளால் நாடகக்கவி செய்யவல்ல கெடாத நாவினையுடைய, நனனூற் புலவனும்-நல்ல நூலை வல்ல புலவனும்;
௩௭. தமிழகம்-வேங்கடம் குமரி தீம்புனற் பௌவம் என்பன; வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் எல்லையாகவுடைய வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு.
௪௧. வக்கிரித்தல்-ஆளத்தி செய்தல், உணர்ந்து என்பதற்கு, முதலும் முறையும் முடிவும் நிறையும் குறையும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையறையும் நீர்மையும் என்னும் பதினொரு பாகுபாட்டினானும் அறிந்து என்பர்.
தன்மையனாகிக் கடைப்பிடித்து உணர்ந்து வைத்து அறிந்து தொலைவில்லாத புலவனும் என்க.
--------------------
(தண்ணுமையாசிரியன் அமைதி)
-
௪௫-௫௫. ஆடல் பாடல் இசையே தமிழே
பண்ணே பாணி தூக்கே முடமே
தேசிகம் என்றுஇவை ஆசின் உணர்ந்து
கூடை நிலத்தைக் குறைவுஇன்று மிகுத்துஆங்கு
வார நிலத்தை வாங்குபு வாங்கி
வாங்கிய வாரத்து யாழும் குழலும்
ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்
கூர்உகிர்க் கரணம் குறிஅறிந்து சேர்த்தி
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்
சித்திரக் கரணம் சிதைவுஇன்றி செலுத்தும்
அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும்
ஆடல்பாடல் இசையே தமிழே-எல்லாக் கூத்துக்களும் எல்லாப் பாட்டுக்களும் எல்லா இசைகளும் இயல் இசை நாடகமென்னும் மூவகைத் தமிழ்களும், பண்ணே பாணி தூக்கே முடமே-எல்லாப் பண்களும் இருவகைத் தாளங்களும் எழுவகைத் தூக்குகளும், இவற்றின் குற்றங்களும், தேசிகம்-இயற்சொல், திரிசொல் திசைச்சொல், வடசொல் என்னும் நால்வகைச் சொல்வழக்குகளும், என்றிவை ஆசின் உணர்ந்து-என்று சொல்லப்பட்ட இவற்றை நுண்ணிதின் உணர்ந்து, கூடை நிலத்தைக் குறைவின்றி மிகுத்து-ஓருருவை இரட்டிக்கிரட்டி சேர்த்தவிடத்து நெகிழாதபடி நிரம்ப நிறுத்தவும், ஆங்கு வார நிலத்தை வாங்குபு வாங்கி-அவ்விடத்துப் பெறும் இரட்டியைப் பாகவுருவானவழி நிற்குமானம் நிறுத்திக் கழியுமானங் கழிக்கவும் வல்லனாய், வாங்கிய வாரத்து யாழும் குழலும் ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப-இப்படி நிகழ்ந்த உருக்களில் யாழ்ப்பாடலும் குழலின்பாடலும் கண்டப்பாடலும் இசைந்து நடக்கின்றபடி கேட்போர் செவிக்கொள்ளுமாறு, கூர்உகிர்க் கரணம்குறி அறிந்து சேர்த்தி-தண்ணுமையை விரலின் செய்கையாலே குறியறிந்து சேர வாசிக்கவல்லனாய், ஆக்கலும் அடக்கலும்-மற்றைக் கருவிகளின் குறையை நிரப்புதலும் மிகுதியை அடக்குதலும், மீத்திறம் படாமை-ஆக்குமிடத்தும் அடக்குமிடத்தும் இசையில் இரந்திரந் தோன்றாமற் செய்தலும், சித்திரக் கரணம் சிதைவின்று செலுத்தும்-இவ்வனைத்தும் செய்யுமிடத்துக் கைத்தொழில் அழகுபெறச் செய்து காட்டலும் வல்லனாய், அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும்-அத்தன்மையுடைய தண்ணுமைக் கருவியின் அரிய தொழிலையுடைய ஆசிரியனும்;
௪௫. இசை-நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோ ராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசைகள் என்பர். இதற்குப் பிரமாணமாக எடுத்துக் காட்டப் பெற்றதொரு சூத்திரம் அடியில் வருமாறு சிதைந்து காணப்படுகின்றது.
"உயிருயிர் மெய்யள வுரைத்தவைம் பாலினும்
உடறமி ழியலிசை யேழுடன் பகுத்து
மூவேழ் பெய்தந்..................
தொண்டு மீண்ட பன்னீ ராயிரங்
கொண்டன ரியற்றல் கொளைவல்லோர் கடனே"
௪௫. தமிழ் என்பதற்கு, வடவெழுத் தொரீஇ வந்த எழுத்தானே உறழ்ந்து காட்டப்பட்ட வாக்கியக் கூறுகள் என்றும் உரைப்பர்.
௪௬. பண்-நரப்படைவால் நிறந்தோன்றப் பண்ணப் படா நின்ற பண்ணும், பண்ணியற் றிறமும், திறமும், திறத்திறமுமாம்.
௪௬. முடம்-குற்றம்
௪௭. ஆசு-நுண்மை. ஆசின் நுணர்ந்து என்னும் பாடத்திற்குக் குற்றமின்றி யுணர்ந்தென்பது பொருளாகும்.
௫௧. ஏங்கிய-ஒலித்தலையுடைய
௫௨. கூர்உகிர்-கூரிய நகம்: விரலுக்கு ஆகுபெயர். கரணம்-செய்கை.
௫௫. தண்ணுமை என்றது ஏனைத் தோற்கருவிகளையும் அடக்கி நின்றது. அவற்றை,
- "பேரிகை படகம் இடக்கை உடுக்கை
சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை
திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை
தமருகம் தண்ணுமை தாவில் தடாரி
அந்தரி முழவொடு சந்திர வளையம்
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிசாளம் துடுமை சிறுபறை அடக்கம்
மாசில் தகுணிச்சம் விரலேறு பாகம்
தொக்க உபாங்கம் துடிபெரும் பறையென
மிக்க நூலோர் விரித்துரைத் தனரே"
என்னுஞ் சூத்திரத்தாலறிக. இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலை முழவு என எழுவகைப்படும் என்றும், முன்சொன்ன உத்தமமான மத்தளம் சல்லிகை இடக்கை கரடிகை பேரிகை படகம் குடமுழா என்பன அகமுழவும், மத்திமமான தண்ணுமை தக்கை தகுணிச்சம் முதலியன அகப்புற முழவும், அதமக் கருவியான கணப்பறை முதலியன புறமுழவும், முன் கூறப்படாத நெய்தற்பறை முதலியன புறப்புற முழவும், முரசு நிசாளம் துடுமை திமிலை யென்னும் வீரமுழவு நான்கும் பண்ணமை முழவும், நாழிகைப் பறையானது நாண்முழவும், துடி என்பது காலை முழவும் ஆகுமென்றும் கூறுவர். அடிகள் தண்ணுமை யொன்றனையே விதந்தோதுதலின், அதுவே ஏனைக் கருவிகட்கெல்லாம் முதலாமென்பது பெற்றாம்.
---------------
(குழலாசிரியன் அமைதி)
-
௫௬-௬௯. சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல்அறப் பெய்துஆங்கு
ஏற்றிய குரல்இளி என்றுஇரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகிப்
பண்அமை முழவின் கண்ணெறி அறிந்து
தண்ணுமை முதல்வன் தன்னொடு பொருந்தி
வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்துஆங்கு
இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து வருவது ஒற்றி
இன்புற இயக்கி இசைபட வைத்து
வார நிலத்தைக் கேடுஇன்று வளர்த்துஆங்கு
ஈர நிலத்தின் எழுத்துஎழுத்து ஆக
வழுவின்று இசைக்கும் குழலோன் தானும்,
சொல்லிய இயல்பின்-நூல்களிற் சொன்னமுறைமையாலே, சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து-சித்திரப் புணர்ப்பும் வஞ்சனைப் புணர்ப்பும் என்னும் இரு கூற்றினையும் அறிந்து, புணர்ப்போன் பண்பின்-புணர்க்கவல்ல பாடலாசிரியனையொத்த அறிவினையுடையனாகி, வர்த்தனை நான்கும் மயல் அறப்பெய்து-ஆரோகண அவரோகணங்களில் விரல்களை விட்டுப் பிடிக்கும் வர்த்தனை நான்கினாலும் நூற்று மூன்று பண்ணீர்மைகளையும் தந்நிலை குலையாமற் காட்டவல்லனாய், ஆங்கு-அவ்விடத்து, ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின்-பதினாற் கோவையினிடத்துக் குரல் நரம்பு இரட்டிக்கவரும் அரும்பாலையையும், இளி நரம்பு இரட்டிக்கவரும் மேற்செம்பாலையையயும், இவைபோல அல்லாத பாலைகளையும், ஒப்பக்கேட்கும் உணர்வினன் ஆகி-இசைநூல் வழக்காலே இணை நரம்பு தொடுத்துப் பாடும் அறிவினையு முடையனாய், பண் அமை முழவின் கண்ணெறி அறிந்து-பண்ணுதலமைந்த முழவின் கண்ணெறியினை அறிந்து, தண்ணுமை முதல்வன் தன்னொடும் பொருந்தி-தண்ணுமை முதல்வனோடும் பொருந்தி, வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்து ஆங்கு-நிறத்தினையுடைய இளி யென்னும் நரம்பினை யாழ்மேல் வைத்து, இசையோன் பாடிய இசையின் இயற்கை-அதன்வழியே இசைக்காரன் பாடிய பாட்டினியல்பை, வந்தது வளர்த்து-பாடுகின்ற பண் வரவுகளுக்குச் சுரம் குறைவு படாமை நிறுத்தி, வருவது ஒற்றி-அந்தப் பண்ணுக்கு அயல் விரவாமல் நோக்கி, இன்புற இயக்கி-வண்ண முதலாகக் காட்டப்பட்ட பாடலியல் வழக்கெல்லாம் சுவை பொருந்த நிரப்பக் காட்டி, இசைபட வைத்து-முற்கூறிய முதலும் முறையும் முதலான பண்ணிலக்கணம் பதினொன்றினையும் நிரம்பவைத்து, வார நிலத்தைக் கேடின்று பார்த்து-வாரப்பாடலை அளவு நிரம்ப நிறுத்தவல்லனாய், ஆங்கு-பாடலிடத்து, ஈரநிலத்தின்எழுத்து எழுத்தாக-சொன்னீர்மைகளின் எழுத்துக்கள் சிதையாமலே எழுத்தெழுத்தாக இசைக்கும், வழுவினின்று இசைக்கும் குழலோன் தானும்-இச்சொல்லப்பட்ட இயல்புகளை இலக்கணப்படி வழுவாமல் வாசித்துக் காட்டவல்ல குழலாசிரியனும்;
௫௬. சித்திரப் புணர்ப்பாவது இசைகொள்ளும் எழுத்துக்களின் மேலை வல்லொற்று வந்தவழி மெல்லொற்றுப் போலப் பண்ணீர்மை நிறுத்தல். வஞ்சனைப்புணர்ப்பாவது இசைகொள்ளா வெழுத்துக்களின் மேலே வல்லொற்று வந்தவழி மெல்லொற்றுப் போல நெகிழ்த்துப் புணர்த்தல்.
௫௮. வர்த்தனை-குழலில் விரலுளர்ந்தூதுந் துளைகள் சுட்டுவிரல் முதலாக விட்டுப் பிடிப்பது ஆரோகணம்; சிறுவிரல் முதலாக விட்டுப்பிடிப்பது அவரோகணம்; இங்ஙனம் ஏற்றியிறக்கலும், இறக்கியேற்றலும் வர்த்தனை யெனப்படும்.
௫௯. ‘ஏற்றிய குரலினி....உணர்வினனாகி’ என்பதன் பொருள் பின்னர் யாழாசிரியன் அமைதி கூறுமிடத்து உரைக்கு முறையால் விளக்கமாம்.
௬௩. பட்டடை-அடிமணை; எல்லாப் பண்ணிற்கும் அடிமணை யாதலின் இளியென்னும் நரம்பு, பட்டடை யெனப்பட்டது. யாழின் மேற்பண்களை இளி முறையாலே வைத்து என்க. இளி முறையாவது சட்சக் கிரமம். ஆங்கு; அசை.
௬௫. ஒற்றி-நினைந்து.
௬௭. வார நிலத்தைக் கேடின்று பார்த்து என்பது-முதனடை, வாரம், கூடை, திரள் என்று சொல்லப்பட்ட இயக்கம் நான்கினும் முதல் நடை மிகவும் தாழ்ந்த செலவினை யுடைத்தாகலானும், திரள் மிக முடுகிய நடையினை யுடைத்தாகலானும் இவை தவிர்ந்து, இடைப்பட்ட வாரப் பாடல் சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உடைத்தாகலானும், கூடைப்பாடல் சொற்செறிவும், இசைச் செறிவும் உடைத்தாகலானும் சிறப்புநோக்கி, அவ்விரண்டினுள்ளும் வாரப்பாடலை அளவு நிரம்ப நிறுத்தவல்லனாய் என்க. எனவே, கூடைப்பாடலும் அமைவதாயிற்று.
௬௯. இசைக்கும் என்பதை எழுத்தெழுத்தாக இசைக்கும் என்றும் சொல்லப்பட்ட யாவற்றையும் வழுவின்றிசைக்கும் என்றும் பிரித்துக் கூட்டுக.
அறிந்து மயலறப்பெய்து உணர்வினனாகி அறிந்து பொருந்தி வைத்து வளர்த்து ஒற்றி இயக்கி வைத்துப் பார்த்து இசைக்குங் குழலோன் என்க.
(யாழாசிரியன் அமைதி)
இப்பகுதியின் உரை நன்கு விளங்குதற்பொருட்டு இசையைப் பற்றிய சில கொள்கைகளை முதற்கண் விளக்குதும்:-
தமிழில் இசை என்பது சுரம் இராகம் என்னும் இரு பொருளிலும் வழங்கும். இராகத்திற்கு இசையென்னும் பெயரன்றிப் பண் என்ற பெயரும் உண்டு. வடமொழியில் சுருதியென்று சொல்லப்படுவது தமிழில் அலகு என்றும், மாத்திரை யென்றும் வழங்கும். மற்றும், சுரம் என்பதற்கு நரம்பு என்ற பெயரும், பண் என்பதற்கு யாழ் என்ற பெயரும் தமிழில் வழங்கும். ஏழிசைகட்கும் தமிழிலே குரல் துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன பெயர்களாம். ஏழுசுரங்கட்கும் வடமொழியிலே சட்சம், ரிடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் என்பன பெயர்களாம்.
தமிழில் ஏழிசைகட்கும் இருபத்திரண்டு அலகுகள் கூறப்பட்டுள்ளன; அவை குரல் முதலியவற்றிற்கு முறையே ௪,௪,௨,௪,௩,௨ ஆகும். இதனை,
"குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாம்
குரையா உழையிளி நான்கு- விரையா
விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார்
களரிசேர் கண்ணுற் றவர்."
என்பதனா னறிக.
வடமொழியிலும் ஏழு சுரங்கட்கும் இருபத்திரண்டு சுருதிகளே கூறப்பட்டுள்ளன. அவை சட்சம் முதலியவற்றிற்கு முறையே ௪,௩,௨,௪,௪,௩,௨ ஆகும்.
இந்த இசை அல்லது சுரங்களின் வரிசைக்குத் தமிழில் கோவையென்றும் பெயருண்டு. இவ்வரிசை யமைப்புக்கள்,ஆயப்பாலை,சதுரப்பாலை,வட்டப்பாலை, திரிகோணப்பாலை,என,நால்வகைப்படுகின்றன;இவற்றினின்றும் உண்டாவது இராகம் அல்லது பண் ஆகும்.
ஏழிசை யெனப்படும் சுரங்கள் ஏழினையும் மாறுந் திறத்தினாலேயே பலவகைப் பண்கள் அல்லது இராகங்கள் உண்டாகின்றன; ஆகலின் சுரங்களைப்பற்றிய செய்திகளை முதலில் நன்கு தெரிந்து கொள்ளுதல் வேண்டும். குரல் முதலாய ஏழனுள், தாரத்தில் உழையும், உழையிற் குரலும், குரலில் இளியும், இளியில் துத்தமும், துத்தத்தில் விளரியும், விளரியிற் கைக்கிளையும் பிறக்கும்; இவற்றுள் முதலிற் றோன்றியது தாரம்.
"தாரத்துட் டோன்றும் உழையுழை யுட்டோன்றும்
ஒருங் குரல் குரலி னுட்டோன்றிச் – சேருமிளி
யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும் விளரியுட்
கைக்கிளை தோன்றும் பிறப்பு".
என்பது காண்க. தாரத்துள் அதற் கைந்தாவதாகிய உழையும், உழையுள் அதற் கைந்தாவதாகிய குரலும், இம்முறையே ஏனையவும் தோன்றின வென்பது அறியற்பாலது. இவ்வேழிசைகளும் வட்டப்பாலை முறையில் ஓர் இராசி மண்டலத்தின் பன்னிரண்டு இருக்கைகளையும் இடமாகக் கொள்ளும் என்பது பின்னர் ஆய்ச்சியர் குரவையுள் விளக்கப்படும்.
ஓர் இராகம் அல்லது பண்ணினை உண்டாக்குதற் பொருட்டு முதலிலே தொடங்கப்பெறும் சுரம் குரல் என்பதாகும். ஏழு சுரங்களில் எதனையும் குரலாக நிறுத்துதல் உண்டு; அஃதாவது குரலே குரலாகவும், துத்தம் குரலாகவும், கைக்கிளை குரலாகவும் இங்ஙனம் தொடக்கப்பெறும் என்பதாம்.
சுரங்களைக்கொண்டு இசையை எழுப்புதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்ட எழுத்துக்கள் சரிகமபதநி என்னும் ஏழுமாம். இவ்வெழுத்துக்கள் சட்சம் முதலிய பெயர்களின் முதலெழுத்துக்கள் என்று கொள்வன பொருந்தாமையால், இவை குறியீடாக அமைத்துக்கொள்ளப் பெற்றனவாதல் வேண்டும். வடநூற்றுறைபோய சிலரும் இங்ஙனம் கருதுவர்.
" ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ வெனும்
இவ்வே ழெழுத்தும் ஏழிசைக் குரிய"
எனத் திவாகரம் கூறுதலின், ஆ முதலிய நெட்டுயிர் ஏழனையும் கருவியாகக் கொண்டு பண்டைத் தமிழ்மக்கள் இசைபாடினராதலும் வேண்டும்.
தமிழிலே இராகங்கள் பண் எனவும், திறம் எனவும் இருவகைப் படும். "நிரைநரம் பிற்றே பண்ணென லாகும்", "குறைநரம் பிற்றே திறமெனப் படுமே" என்னும் திவாகர நூற்பாக்களால் ஏழு நரம்பானும் இயன்றது பண்ணாம் என்பது்ம், ஆறு ஐந்து நான்கு எனக் குறைந்த நரம்புகளான் இயன்றன திறமாம் என்பதும் பெறப்படும். திறத்தை மூன்று வகைப்படுத்துப் பண்ணியற்றிறம், திறம், திறத்திறம் என வழங்குதலுமுண்டு. பண்ணும், திறமூன்றும் ஆகிய இந்நால்வகை இராகங்களையும் குறிக்கும் வடமொழிப்பெயர்கள் சம்பூர்ணம், சாடவம், ஔடவம், சதுர்த்தம் என்பன. இந்நான்கும் தமிழில் பண், திறம் என இரண்டாகக் கூறப்படுதலோடு யாவும் பண்ணென்றே கூறப்படுதலும் உண்டு.
தமிழில் ஐந்திணைக்குமுரிய பண்கள் குறிஞ்சியாழ், பாலையாழ், முல்லையாழ், நெய்தல்யாழ், மருதயாழ் என்பன. இவற்றுள் நெய்தல் யாழுக்கு விளரி என்பதும் பெயர். இது திறனில் யாழ் எனப்படுதலின், திறங்களுடைய ஏனை நான்குமே பெரும்பண்கள் எனப்படும்; "யாம யாழ்ப்பெயர் குறிஞ்சி யாழும், செவ்வழி யாழ்ப்பெயர் முல்லை யாழும், பாலை யாழும், மருத யாழுமென, நால்வகை யாழும் நாற்பெரும் பண்ணே" என்பது திவாகரம். இதிலிருந்து குறிஞ்சி யாழுக்கு யாம யாழ் என்ற பெயரும், முல்லை யாழுக்குச் செவ்வழி யாழ் என்ற பெயரும் உண்டென்பது புலனாம். இந்நூற் பெரும் பண்ணும் பிறக்குமாறு "தாரத் துழைதோன்றப் பாலையாழ் தண்குரல், ஒருமுழை தோன்றக் குறிஞ்சியாழ்-நேரே, இளிகுரலிற் றோன்ற மருதயாழ் துத்தம், இளியிற் பிறக்கநெய்த லியாழ்" எனக் கூறப்பட்டுளது. இதில் நெய்தல் யாழ் என்றது செவ்வழி யாதல் வேண்டும். எனவே தாரம் குரலாக உழை அதற்குக் கிளையாகத் தோன்றவது குறிஞ்சியாழ் எனவும், குரல் குரலாக இளி அதற்குக் கிளையாகத் தோன்றுவது செவ்வழி யாழ் எனவும் கூறப்படும் என்க. கிளையாவது நின்ற நரம்பினின்றும் தோன்றும் நரம்பு; நின்ற நரம்பிற்கு ஐந்தாவது நரம்பு. இவ்வாறே நின்ற நரம்பிற்கு நான்காவது நட்புநரம்பென்றும், மூன்றாவதும் ஆறாவதும் பகை நரம்பென்றும், இரண்டாவதும் ஏழாவதும் இணை நரம்பென்றும் அறிக.
இனி, முற்குறித்த நான்கு பண்களுள் பாலையாழிலிருந்து செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என்னும் ஏழுபாலை யிசைகள் பிறக்கும்; இவை பிறக்குமாறு மேல் இக்காதையுள்ளும், ஆய்ச்சியர் குரவையுள்ளும் விளக்கமாம்.
இனி, பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி யென்னும் நாற்பெரும் பண்களில் ஒவ்வொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் இன வேறுபாட்டால் நந்நான்கு ஆகப் பெரும்பண்கள் பதினாறாகும். நாற்பெரும் பண்களுள்ளே பாலை யாழுக்கு ஐந்தும், குறிஞ்சி யாழுக்கு எட்டும், மருத யாழுக்கு நான்கும், செவ்வழி யாவுக்கு நான்கும் ஆக இருபத்தொரு திறங்கள் உள்ளன. "ஈரிரு பண்ணும் எழுமூன்று திறனும்" என்பது பிங்கலம். திறம் இருபத்தொன்று அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் வேறுபாட்டால் எண்பத்து நான்கு ஆகும். எனவே, பண் பதினாறும், திறம் எண்பத்து நான்கும் சேர்ந்து நூறு என்னும் தொகையினவாகின்றன. பிங்கல நிகண்டிலே திறங்களின் வகை யாவற்றிற்கும் பெயர் கூறி முடிந்தபின், "தாரப் பண்டிறம் பையுள் காஞ்சி படுமலை யிவை நூற்று மூன்று திறத்தன" என்று கூறப்பட்டிருத்தலின், தாரப் பண்டிறம், பையுள் காஞ்சி, படுமலை என்னும் மூன்று திறங்களும் முற்கூறிய நூற்றுடன் சேரப்பண்கள் நூற்று மூன்று என்னும் தொகைபெறும். பண் நூற்றுமூன்றென்றல் பெரு வழக்கு. பெரும் பண்களின் வகை பதினாறனுட் பன்னிரண்டுக்கும், திறங்களும், அவற்றின் வகையுமாகிய எண்பத்து நான்கிற்கும் பெயர் பிங்கல நிகண்டிற் காண்க.
இனி, தமிழிலே குரல் முதலாகவும், வடமொழியிலே சட்சம் முதலாகவும் ஏழு சுரங்களும் பெயர் கூறப்படுதலின், குரலும் சட்சமும் ஒன்றெனவும், துத்தமும் ரிடபமும் ஒன்றெனவும், இவ்வாறே ஏனையவும் முறையே ஒவ்வொன்றா மெனவும் கருதுதல் கூடும். ஆயின் இவற்றிற்குக் கூறப்படும் அலகும் ஒளியும் பிறப்பிடமும் வேறுபடுதலின் அம்முறையே இவ்விரண்டும் ஒன்றெனல் அமையாமை பெற்றாம். ஈண்டு அலகினை நோக்குதும்:-
குரல்-௪, துத்தம்-௪, கைக்கிளை-௩, உழை-௨, இளி-௪, விளரி-௩, தாரம்-௨.
சட்சம்-௪, ரிடபம்-௩, காந்தாரம்-௨, மத்திமம்-௪, பஞ்சமம்-௪, தைவதம்-௩, நிடாதம்-௨.
இவற்றுள் இரண்டாவதும் மூன்றாவதும் நான்காவதும் மாத்திரையில் ஒவ்வாமை காண்க. சட்சம் முதலியவற்றிற்கு இங்கே காட்டிய சுருதிகளின் அளவே சாரங்கதேவர் இயற்றிய சங்கீதரத்னாகரம் முதலிய நூற்கள் பலவற்றிலும் காணப்படுதலின், அம்முறையே தமிழுக்கும் பொருத்தமாதல் வேண்டும். குரல் என்பதனைச் சட்சம் என்று கொள்ளாது மத்திமம் எனக் கொள்ளின் இரண்டிலும் சுருதியளவுகள் ஒத்து விடுகின்றன.
குரல்-௪, துத்தம்-௪, கைக்கிளை-௩, உழை-௨, இளி-௪, விளரி-௩, தாரம்-௨.
ம-௪, ப-௪, த-௩, நி-௨, ச-௪, ரி-௩, க-௨
சுருக்கங்கருதி மத்திமம் முதலிய பெயர்கள் ம முதலிய எழுத்துக்களாற் குறிக்கப்பட்டன. மேலே காட்டியவற்றில் இரு திறத்தும் அலகு ஒத்திருத்தல் காண்க. இவ்வாற்றால் பண்டைத் தமிழ் இசை நூலோர் வடநூன் முறையிலமைந்த மத்திமத்தை ஆரம்ப சுரமாகக் கொண்டன ரென்பது போதரும். எனவே, தாரத்து உழை தோன்றும் என்ற முறைப்படி காந்தாரத்தில் நிடாதமும், நிடாதத்தில் மத்திமமும், மத்திமத்தில் சட்சமும், சட்சத்தில் பஞ்சமும், பஞ்சமத்தில் ரிடபமும், ரிடபத்தில் தைவதமும் பிறக்கும் எனக் கொள்ள வேண்டும். இவற்றை நன்கு நினைவில் வைத்துக்கொள்ளின், பின் கூறப்படும் இசையியல்புகள் பெரும்பாலும் மயக்கமற விளங்கும். மிக நுட்பமான இசை யியல்புகளை அறிய விழைவோர் இசைநூற்களைக் கற்றும் இசைப் பயிற்சி செய்தும் அறிதல் வேண்டும்.
-----------------
-
௭0. ஈர்ஏழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின்
---------
-
௭௧. ஓர்ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி
----------------
-
௭௨. வன்மையிற் கிடந்த தார பாகமும்
--------------------
-
௭௩. மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்
-----------------
-
௭௪-௫. மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக்
கைக்கிளை
மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக் கைக்கிளை-தாரநரம்பில் அந்தரக் கோலிலே கைக்கிளையாக நிறுத்தத் தாரந்தான் கைக்கிளையாயிற்று;
---------------
-
௭௫-௭. ஒழிந்த பாகமும் பொற்புடைத்
தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக்
கிளைவழிப் பட்டனள்
ஒழிந்தபாகமும் பொற்புடைத் தளராத்தாரம் விளரிக்கு ஈத்துக் கிளைவழிப் பட்டனள்-தளராத அழகுடைய தார நரம்பில் ஒழிந்த ஓரலகையும் விளரிக்குத்தர அவ்விளரி துத்த நரம்பாயிற்று;
----------------
-
௭௭-௮. ஆங்கே கிளையும்
தன்கிளை அழிவுகண்டு அவள்வயிற் சேர
ஆங்கே கிளையும் தன் கிளை அழிவு கண்டு அவள் வயிற் சேர-அம்முறையே இளியும் தன் கிளையாகிய குரலின் அழிவினைக்கண்டு அதன் பாற் சேரவும்,
----------------
-
௭௯. ஏனை மகளிரும் கிளைவழிச் சேர
ஏனை மகளிரும் கிளைவழிச் சேர-ஏனைய உழை முதலாயினவும் தத்தமக்குக் கிளையாயினவற்றிற் சேரவும் இவ்வாறாய பதினாற் கோவையிலே,
----------------
-
௮0-௧. மேலது உழையிளி கீழது கைக்கிளை
வம்புஉறு மரபின் செம்பாலை ஆயது
மேலது உழையிளி கீழது கைக்கிளை வம்புறு மரபிற் செம்பாலை ஆயது-உழைமுதலாகக் கைக்கிளையிறுதியாக மெலிவு நான்கும் சமம் ஏழும் வலிவு மூன்றுமாய்ப் புதுமையுற்ற முறையாலே உழை குரலாகச் செம்பாலையாயது;
---------------
-
௮௨-௩. இறுதி ஆதி ஆக ஆங்குஅவை
பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது
இறுதி ஆதியாக ஆங்கவை பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது-இறுதியாய் நின்ற கைக்கிளை முதலாகவுள்ள கைக்கிளை துத்தம் குரல் என்னுமவை தாம் தோன்றிய இடமுறையான இயல்பின் நீங்காது,
----------------
-
௮௪-௫. படுமலை செவ்வழி பகர்அரும் பாலைஎனக்
குரல்குரல் ஆகத் தற்கிழமை திரிந்தபின்
படுமலை செவ்வழி அரும்பாலை எனக் குரல் குரலாகத்தற்கிழமை திரிந்தபின்-கைக்கிளை குரலாகப் படுமலைப் பாலையும் துத்தம் குரலாகச் செவ்வழிப் பாலையும் குரல் குரலாக அரும்பாலையும் என முறையே திரிந்தபின்,
----------
-
௮௬. முன்னதன் வகையே முறைமையின் திரிந்துஆங்கு
முன்னதன் வகையே முறைமையில் திரிந்து ஆங்கு-முன்பிற்படியே முறைமையின் வேறுபட்டு,
------------
-
௮௭. இளிமுத லாகிய ஏர்படு கிழமையும்
இளி முதலாகிய எதிர்படு கிழமையும்- தாரம் குரலாகக் கோடிப்பாலையும் விளரிகுரலாக விளரிப்பாலையும் இளிகுரலாக மேற் செம்பாலை எனத் திரிய,
--------------
-
௮௮. கோடி விளரி மேற்செம் பாலைஎன
கோடி விளரி மேற்செம்பாலை என-தாரம் குரலாகக் கோடிப் பாலையும் விளரிகுரலாக விளரிப்பாலையும் இளிகுரலாக மேற்செம்பாலை எனத் திரிய,
---------------
-
௮௯. நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்
நீடிக்கிடந்த கேள்விக் கிடக்கையின்-நெடிதாய்க் கிடந்த சுரங்களின் இடத்தே,
-----------
-
௯0. இணைநரம்பு உடையன அணைவுறக் கொண்டுஆங்கு
இணை நரம்புடையன அணைவுறக்கொண்டு ஆங்கு-முதலும் இறுதியுமாகவுள்ள நரம்புகளைப் பொருந்தக் கொண்டு,
-----------
-
௯௧. யாழ்மேற் பாலை இடமுறை மெலியக்
யாழ் மேற்பாலை இடமுறை மெலிய-யாழினிடத்து அரும்பாலை முதலாயின இடமுறை மெலியவும்,
--------------
-
௯௨. குழல்மேற் கோடி வலமுறை மெலிய
குழல்மேற்கோடி வலமுறை மெலிய-குழலினிடத்துக் கோடிப்பாலை முதலாயின வலமுறை மெலியவும்,
--------------
-
௯௩ – ௪. வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலியக் கோத்த புலமை யோனுடன்,
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம் பொலியக் கோத்த புலமையோனுடன்-வலிவும் மெலிவும் சமனும் விளங்கவும் நரப்படைவு கெடாமலும் பண்ணீரமை முதலாயின குன்றாமலும் எழுத்துக்களால் இசை செய்ய வல்ல யாழிசிரியனும்;
-----------
௭0. கேள்வி-நரம்பு; சுரம் குரல் முதலாய ஏழு நரம்பினையும் இரட்டித்த பதினாற்கோவை யென்க.
------------
௭௪. தாரத்திற்குக் கைக்கிளை இடமுறையால் ஐந்தாவதாகலின் கிளை நரம்பென்றார். கிளை-ஐந்தாவது நரம்பு.
--------------
௭௭. விளரிக்குத் துத்தம் அம்முறையே ஐந்தாவதாகலின் கிளை வழிப்பட்டனள் என்றார். கிளையும்-இளியும்; குரலுக்கு இளி ஐந்தாவதாகலின் அதனைக் கிளை என்னும் பெயராற் கூறினார்; அன்றி, இளியென்பதே எழுதுவோராற் கிளையெனத் திரிபுற்ற தெனலுமாம். அரும்பதவுரையாசிரியர் சொற்களை எஞ்சாதெடுத்துப் பொருள் கூறிமுடிக்குங் கடப்பாடுடையரல்லர்; மற்று அடியார்க்கு நல்லாரே அங்ஙனம் உரைக்குங் கடப்பாட்டினர். ஆயின் அவர் எக்காரணத்தானோ இசைப்பகுதியில் முன்னவருரைத்தவற்றையே தாமும் உரைத்து, மூலத்திலுள்ள சொற்கள் பலவற்றிற்குப் பொருளும் முடிபும் தெரிக்காது போயினர். அதனால் இஞ்ஞான்று அவற்றின் பொருள் அறிதல் அரிதாயினமையின் எழுதுவோராலும், பதிப்பிப்போராலும் வழுக்கள் நிகழ்தல் இயல்பேயாகும்.
‘அரும்பதவுரையிலும்,அடியார்க்குநல்லாருரையிலும் முறையே ‘இக்கிரமத்தினாலே,’ ‘இளிக்கிரமத்தாலே’ (சிலப் அரங். அடி.௬௩-௪) எனவும் பதினாற்கோவை பொலிந்து,’ ‘பதினாற்கோவை கோலினிது’ (அடி.௭0) எனவும், ‘வரப்பட்ட பாலை,’ ‘வட்டப்பாலை’ (அடி. ௭௨-௩) எனவும், இங்ஙனம் எண்ணிறந்தன திரிந்து, திருத்தம் பெறாமலே முந்திய பதிப்புக்கள் பலவற்றிலும் காணப்படுதலை நோக்கின் மூலபாடம் உருச்சிதைந்து வழுப்பட்டிருத்தல் அரிதன் றென்பது புலனாம்.
------------------
௭௭-௯. நரம்புகளை மகளிராக உருவகப்படுத்தி, ‘வழிப்பட்டனள்’ எனவும், ‘அவள் வயின்’ எனவும், ‘ஏனை மகளிரும்’ எனவும் கூறினார். இதனை அறியமாட்டாது, உரையிலே ‘பெண்டிர்க்குரிய தானமுடைய’ என வந்திருப்பது கொண்டு, இது பெண்டிர்கள் இனிது பாடுதற்கேற்றது என்று கூறினாருமுளர். கிளைவழிச்சேர நீடிக்கிடந்த கேள்விக்கிடக்கையின் இணை நரம்புடையன அணைவுறக் கொண்டு என இயைக்க.
செம்முறைக் கேள்வியாகும் பதினாற்கோவை வருமாறு :
(௧) குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்;
(௨) குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் .
இதினின்றும் உண்டாய கேள்விக் கிடக்கையாகும் பதினாற் கோவை வருமாறு :
(௧) உழை, இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை;
(௨) உழை, இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை.
இவை முறையே,
ம ப த நி ச ரி க – ம ப த நி ச ரி க எனவும்,
நி ச ரி க ம ப த – நி ச ரி க ம ப த எனவும் கூறிக் கொள்க.
---------------
௮0. செம்முறை மாறிவந்த பதினாற் கோவையில் உழை முதலும் கைக்கிளை இறுதியுமாய் நிற்றல் காண்க. ‘உழையிளி’ என்னும் பாடம் வழுப்பட்டதாகல் வேண்டும்; ஈண்டு இளி என்பதற்குப் பொருளொன்று மின்மையும், பழைய உரைகளில் இச்சொல் வறிதே விடப்பட்டிருத்தலுங் காண்க.
-----------
௮௨. இறுதி ஆதியாக-இறுதியாகவுள்ள கைக்கிளை முதலாக. கைக்கிளை இறுதியில் நிற்றல் காண்க.
-------------
௮௫. குரல் குரலாக என்பது ஒன்றொன்றாக என்பதுபோல் நின்ற அடுக்கு. தற்கிழமை-முறை நிரனிறை.
--------------
௮௭. எதிர்படுகிழமை-எதிர் நிரனிறை.
-------------
௯0. இணைநரம்பு-முதலும் இறுதியுமாகவுள்ள நரம்பு; உழை முதற் கைக்கிளை யிறுதியும், கைக்கிளை முதல் துத்தம் இறுதியும், இவ்வாறே ஏனையவும் முதலும் இறுதியுமாகி யென்க; இரட்டித்த நரம்பு என்றலுமாம். உழை, கைக்கிளை, துத்தம், குரல், தாரம், விளரி, இளியென இட முறையால் ஒவ்வொன்றும் குரலாகச் செம்பாலை முதலாயின தோன்றினமை அறியற்பாற்று. இவ்வேழு பண்களும் பிற முறையால் உண்டாவன வேனிற் காதையிலும் ஆய்ச்சியர் குரவையிலும் அறியப்படும்.
-------------
௯க-உ. குழல்மேல் கோடி என்றதனால் யாழ்மேல் அரும்பாலையென வருவிக்கப்பட்டது. மெலிதல்-இறங்குதல்; அவரோகணம்.
--------------
௯௩. வலிவு-மேல்; உச்சம்; தாரம். மெலிவு-கீழ்; மந்தம். சமம்-மத்திமம். இவை ஓசையின் மூவகை இயக்கம்.
ஆங்கவை, திரிந்தாங்கு. கொண்டாங்கு என்பவற்றில் ஆங்கு அசை.
நிறுத்தல் வேண்டிப் பொலியக் கோத்த புலமையோன் என முடிக்க.
------------
(அரங்கின் அமைதி)
-
௯௫-௧௧௩. எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக
எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்துஆங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்துஆங்கு
ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்
௯௫ - எண்ணிய நூலோர் இயல்பினின் வழாது மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு-எண்ணப்பட்ட சிற்ப நூலாசிரியர் வகுத்த இயல்புகளின் வழுவாத வகை அரங்கியற்றுதற்குக் குற்றம் நீங்கின ஓரிடத்தில் நிலம் வகுத்துக் கொண்டு, புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழை கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு-பொதியின் முதலாய திப்பிய மலைப்பக்கங்களிலே நீண்டு வளர்ந்த மூங்கிலிற் கண்ணோடு கண்ணிடை ஒரு சாணாக வளர்ந்தது கொண்டு, நூல்நெறி மரபின்-நூல்களிற் கூறப்படும் முறையாலே, அரங்கம் அளக்கும் கோல் அளவு இருபத்து நால்விரல் ஆக-அரங்கம் இயற்றுதற்கு அளக்குங்கோல் உத்தமன் கைப் பெருவிரல் இருபத்துநான்கு கொண்ட அளவினதாக நறுக்கி, எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினதாகி-அக்கோலால் எழுகோல் அகலமும் எண்கோல் நீளமும் ஒருகோற் குறட்டுயரமும் உடையதாய், உத்தரப்பலகையோடு அரங்கின்பலகை வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக-தூணின்மீதுவைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கின் தளத்திற்கிட்ட பலகைக்கும் இடைநின்ற நிலம் நான்கு கோலளவினதாகவும், ஏற்ற வாயில் இரண்டு உடன் பொலிய-அவ்வளவுகட்குப் பொருந்த வகுக்கப்பட்ட வாயில் இரண்டு விளங்கவும், தோற்றிய அரங்கில்-செய்யப்பட்ட அரங்கிலே, தொழுதனர் ஏத்தப் பூதரை எழுதி மேல் நிலைவைத்து-நால்வகை வருணப் பூதரையும் எழுதி யாவரும் புகழ்ந்து வணங்க மேனிலத்தே வைத்து, தூண்நிழற் புறப்பட மாண்விளக்கு எடுத்து ஆங்கு – தூண்களின் நிழல்நாயகப் பத்தியின் கண்ணும் அவையின் கண்ணும் படாதபடி மாட்சிமைப்பட்ட நிலைவிளக்கு நிறுத்தி, ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் கரந்து வரல் எழினியும் புரிந்து உடன்வகுத்து ஆங்கு-இடத்தூண் நிலையிடத்தே உருவு திரையாக ஒருமுக வெழினியும் இரண்டு வலத்தூணிடத்தும் உருவு திரையாகப் பொருமுக வெழினியும் மேற்கட்டுத் திரையாகக் கரந்துவர லெழினியும் தொழிற்பாட்டுடனே வகுத்து, ஓவிய விதானத்து-சித்திர விதானத்தையும் அமைத்து, உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம் வளைவுடன் நாற்றி-புகழமைந்த முத்துமாலைகளாற் சரியும் தூக்கும் தாமமுமாகத் தொங்கவிட்டு, விருந்துபடக்கிடந்த அருந்தொழில் அரங்கத்து-புதுமையுடைத்தாகப் பொருந்திய அரிய தொழிலையுடைய அரங்கின்கண்;
௯௫-௬, நூலோர்-நாடக நூலோர் என்பர் அரும்பதவுரை யாசிரியர். இவ்வுலகில் நூல்வழி அரங்கு செய்யுமிடத்துத் தெய்வத்தானமும் பள்ளியும் அந்தணரிருக்கையும் கிணறும் குளனும் கா×ம் முதலாயின அழியாத இயல்பினையுடைத்தாய், நிறுக்கப்பட்ட குழிப்புழுதி குழிக்கொத்து, கல்லப்பட்ட மண் இனிய நாற்றமும் இனிய சுவையும் உடையதாய், தானும் திண்ணிதாய், என்பும் உமியும் பரலுஞ் சேர்ந்த நிலம், களித்தரை, உவர்த்தரை, ஈளைத்தரை, பொல்லாச் சாம்பற்றரை, பொடித்தரை என்று சொல்லப்பட்டன ஒழிந்து, ஊரின் நடுவணதாகியுள்ள நிலத்திலே தேரோடும் வீதிகள் எதிர்முகமாகக் கொள்ளப்படும் என்பர்.
நிலம் வன்பால், மென்பால், இடைப்பாலென்று மூவகைப்படும்; அவற்றுள் வன்பாலாவது தோண்டப்பட்ட குழியில் அம்மண்ணினைப் பெய்யின் குழியின்மண் மிகுவது; மென்பாலாவது குறைவது; இடைப்பாலாவது ஒத்திருப்பது. இடைப்பாலே வேண்டப்படுவதாம். மண்ணின் சுவைகளுள் துவர்ப்பு அச்சமும், புளிப்பு நோயும், காழ்ப்புப் பசி நீடுதலும், கைப்புக்கேடும், உவர்ப்புக் கலக்கமும், தித்திப்பு அன்பும் விளைக்குமாகலின் தித்திப்பே கொள்ளத்தகுவதாம்.
௯௭. போகிய-நீண்ட.
௧00. உத்தமராவார்; மிக்க நெடுமையும் மிக்க குறுமையுமில்லோர். அணு எட்டுக்கொண்டது இம்மி; இம்மி எட்டுக்கொண்டது எள்ளு; எள்ளு எட்டுக்கொண்டது நெல்லு; நெல்லு எட்டுக்கொண்டது பெருவிரலாம்.
௧0௫. வாயில் இரண்டாவன: உட்புகவும் புறஞ்செல்லவும் சமைத்தவை. மற்றும், கரந்து போக்கிடனும், கூத்தர் குடிஞைப்பள்ளியும், அரங்கமும், அதனெதிர் மன்னர் மாந்தரோடிருக்கும் அவையரங்கமும், புவிநிறை மாந்தர் பொருந்திய கோட்டியும் முதலாயின கொள்ளப்படும்.
௧0௭. பூதர்-வருணப் பூதர்;இவர் வச்சிரதேகன், வச்சிரதந்தன், வருணன், இரத்தகேசுவரன் என்னும் நால்வருமாம். நால்வகை வருணத்தாரின் உருவம் தொழில் முதலியன விளங்க இங்ஙனம் வருணப்பூதம் நான்கும் வகுக்கப்பட்டனவாகும். இவற்றினியல்பு பின்னர் அழற்படு காதையுள் விரித்துரைக்கப்படும்.
௧௧௧. உரை-புகழ். மேல் ஊர்காண் காதையில் "சந்திர குருவே யங்கா ரகனென, வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்" எனப் பாகுபடுத்துரைக்கப்படும் புகழ் என்க.
வகுத்தனர் கொண்டுவைத்து எடுத்து வகுத்து நாற்றிக்கிடந்த அரங்கத்தென்க.
-------------
(தலைக்கோல் அமைதி)
-
௧௧௪-௨௮. பேர்இசை மன்னர் பெயர்ப்புறத்து எடுத்த
சீர்இயல் வெண்குடைக் காம்புநனி கொண்டு
கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய
நாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்
புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர் மாலை அணிந்து
நலம்தரு நாளால் பொலம்பூண் ஓடை
அரசுஉவாத் தடக்கையில் பரசினர் கொண்டு
முரசுஎழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்ப
அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்
தேர்வலம் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்துஆங்கு,
௧௧௪-௨௮. பேர் இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த-பெரிய புகழையுடைய பகையரசர் போர்செய்து புறங்கொடுத்தவழிப் பறிக்கப்பட்ட, சீரியல் வெண்குடைக் காம்பு நனிகொண்டு-அழகு பொருந்திய வெண்கொற்றக் குடையின் காம்பை நன்கு எடுத்து, கண் இடை நவமணி ஒழுக்கி மண்ணிய-கணுக்கள் தோறும் கழுவிய நவமணிகளாற் கட்டி, நாவல் அம்பொலம் தகட்டு இடை நிலம் போக்கி-சாம்பூநதம் என்னும் பொன்னின் தகட்டாலே
கணுக்கட்கு நடுவாகிய இடங்களைக் கட்டி, காவல் வெண்குடை மன்னவன் கோயில்-உலகினைப் புரக்கும்,வெண்குடையையுடைய அரசன் கோயிலில், இந்திர சிறுவன் சயந்தன் ஆகென-தேவேந்திரன் மகன் சயந்தனாக நினைத்து, வந்தனைசெய்து வழிபடு தலைக்கோல்-மந்திர விதியாலே பூசித்து வழிபட்டுக் காப்பமைத்து இருத்திய தலைக்கோலை, புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி மண்ணிய பின்னர் மாலை அணிந்து- முன்கூறிப் போந்த ஆடலாசிரியன் முதலாயினோர் புண்ணிய நதிகளின் நல்ல நீரைப் பொற் குடத்திலே முகந்துவந்து நீராட்டிய பின்பு மாலைகளுஞ் சூட்டி, நலம் தரு நாளால்-இதற்குப் பொருந்திய நல்ல நாளிலே, பொலம்பூண் ஓடை அரசு உவாத் தடக்கையில் பரசினர் கொண்டு-பொன்னாலாகிய பூணினையும் பட்டத்தினையுமுடைய பட்ட வருத்தனத்தின் பெரிய கையில் வாழ்த்துடன் கொடுத்து அதனை உடன் கொண்டு, முரசு எழுந்து இயம்ப-மும்முரசும் எழுந்து முழங்கவும், பல்லியம் ஆர்ப்ப-அவையன்றிப் பல வாச்சியங்களும் ஒலிக்கவும், அரசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்- அரசனும் அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தூதுவர் சாரணர் என்னும் ஐம்பெருங் குழுவினரும் உடன்வர, தேர் வலம் செய்து கவிகைக் கொடுப்ப-வீதியின்கண் நின்ற தேருடன் வலஞ்செய்து தேர்மிசை நின்ற பாடுவோன் கையிலே இத்தலைக்கோலைக் கொடுத்து, ஊர் வலஞ்செய்து புகுந்து முன் வைத்தாங்கு-நகரியை வலமாகவந்து அரங்கின்கட் புகுந்து தலைக்கோலை எதிர்முகமாக வைத்தபின்;
௧௧௪-௫. தலைக்கோல் கொள்ளுமிடத்து மாற்றரசர் குடைக்காம்பும், பகை வேந்தரது எயிற்புரத்து வெட்டின மூங்கிலும், புண்ணிய வரையின் மூங்கிலும் ஆம் என்பர்; இவற்றுள் முன்னைய இரண்டும் வேத்தியற்கும், பின்னையது பொதுவியற்குமாம்.
௧௧௬. மண்ணிய-கழுவிய, மண்ணிய மணி யென்க.
௧௧௭. நாவலம் பொலம்-சாம்புநதம் என்னும் பொன். நாவல்-சம்பு; அம்: சாரியை. "நாவலொடு பெயரிய பொலம்புனைய விரிழை" என்றார் ஆசிரியர் நக்கீரனாரும்.
௧௧௮-௨0. மன்னவன் கோயிலில் காப்பமைத்து இருத்தியவென விரித்துரைக்க. ஆகென-ஆக. சயந்தன் அகத்தியர் சாபத்தால் மூங்கிலாய்ப் பிறந்து தலைக்கோற் றானத்துச் சாபம் நீங்கினா னாகலின் தலைக்கோலைச் சயந்தனாக நினைத்து என்றார்.
௧௨௩. நாளால் வேற்றுமை மயக்கம். பூண்-கிம்புரி; அணிகலமுமாம்.
சீரா திரையவிட்டஞ் சித்திரையோ-டாருமுறம்
மாசி யிடபம் அரிதுலை வான்கடகம்
பேசிய தேள் மிதுனம் பேசு"
என்னும் மதிவாணனார் கூற்றால் நன்மையாகிய நாள் பத்தும். இராசி ஆறும் அறிக.
௧௨௪. அரசுவா-பட்டவருத்தனம்; பட்டத்தியானை; ஆடலாசிரியன் முதலானோர் தலைக்கோலை யானை கையிற்கொடுத்துத் தேருடன்வலஞ்செய்து, பின் கவியின் கையிற்கொடுத்து ஊர்வலஞ்செய்து புகுந்து வைத்தபின் என்க.
--------------------
(மாதவி அரங்கிற் புகுந்து ஆடுகின்ற இயல்பு.)
-
௧௨௯-௫௯. இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப,
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்க
வாரம் இரண்டும் வரிசையில் பாடப்
பாடிய வாரத்து ஈற்றில்நின்று இசைக்கும்
கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடிநின்று இசைத்தது ஆமந் திரிகை
ஆமந் திரிகையொடு அந்தரம் இன்றிக்
கொட்டுஇரண்டு உடையதுஓர் மண்டிலம் ஆகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி
வந்த முறையின் வழிமுறை வழாமல்
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப்
பாற்பட நின்ற பாலைப் பண்மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து
மூன்றுஅளந்து ஒன்று கொட்டி அதனை
ஐந்துமண் டிலத்தால் கூடை போக்கி
வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை,
ஆறும் நாலும் அம்முறை போக்கிக்
கூறிய ஐந்தின் கொள்கை போலப்
பின்னையும் அம்முறை பேரிய பின்றை,
பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக்
காட்டினள் ஆதலின்,
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்-அரசன் முதலிய யாவரும் தகுதிக்கேற்ற இருக்கைகளில் முறையே இருந்தபின், குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப-இடக்கை முதலிய குயிலுவக் கருவியாளர் தாம்நிற்க வேண்டிய முறைப்படி நிற்க, வலக்கால் முன் மிதித்து ஏறி அரங்கத்து-அரங்கேறும் நாடகக் கணிகையாகிய மாதவி அரங்கிலே வலக்காலை முன்வைத்து ஏறி, வலத்தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்து-பொருமுக வெழினிக்கு நிலையிடனான வலப்பக்கத் தூணைச் சேர்தல் முறையென்று அவ்விடத்தைச் சேர்ந்து, இந்நெறிவகையால் இடத்தூண் சேர்ந்த தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்-மாதவி வந்தேறி நின்றவாறே ஒருமுக வெழினிக்கு நிலையிடனான இடப்பக்கத் தூணினைச் சேர்ந்து நின்ற பழைய நெறியியற்கையையுடைய தோரிய மடந்தையரும் தானும், சீர்இயல் பொலிய நீர் அல நீங்க-நன்மை மிகவும் தீமை நீங்கவும் வேண்டி, வாரம் இரண்டும் வரிசையிற் பாட-ஓரொற்று வாரம் ஈரொற்று வாரம் என்னும் தெய்வப்பாடல் இரண்டினையும் முறையாலே பாட, பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்-பாடிய தெய்வப் பாடலின் இறுதியிலே நின்று கூடிய இசையா நிற்கும் கருவிகளெல்லாம், குழல்வழி நின்றது யாழே-வங்கியத்தின் வழி யாழ்ப்பாடல் நின்றதாக, யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே-யாழ்ப்பாடலின் வழியே மத்தளம் தகவுற நின்றதாக, தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே-மத்தளத்தின் வழியே குடமுழா நின்றதாக, முழவொடு கூடிநின்று இசைத்தது ஆமந்திரிகை-முழவுடன் கூடி நின்று வாச்சியக் கூறுகளை அமைத்தது இடக்கையின் ஓசையாக, ஆமந்திரிகையோடுஅந்தரம் இன்றி-இடக்கையோடு முன் சொன்ன குயிலுவக் கருவிகள் அனைத்தும் பருந்தும் நிழலும் போல ஒன்றாய் நிற்ப,கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆக-ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாக, கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி-பஞ்சதாளப் பிரபந்தமாகக் கட்டப்பட்ட தேசியொத்தை ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாகப் பத்தும் தீர்வு ஒன்றுமாகப் பதினொரு பற்றாலே தேசிக் கூத்தை ஆடி முடித்து, வந்த முறையின் வழிமுறை வழாமல்-இப்படிச் செய்கை நாடக நூல்களில் அமைந்த முறையாகலான் அம்முறை வழுவாமல், அந்தரக்கொட்டு உடன் அடங்கிய பின்னர்-அந்தரக்கொட்டு என்றும், முகம் என்றும் கூறப்படும் இவ்வொத்து ஆடி முடி்ந்த பின்னர், மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப் பாற்பட நின்ற பாலைப் பண்மேல்-மங்கலப் பண்ணாய் நரப்படையவும் உடைத்தாயிருக்கின்ற பாலைப்பண்ணை அளவு கோடாதபடி ஆளத்தியிலே வைத்து அதன்மேலே, நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து-மங்கலச் சொல்லினையுடைத்தாய் நாலுறுப்பும் குறைபாடில்லாத உருவுக்குச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் அறிந்து, பாட்டும் கொட்டும் கூத்தும் நிகழ்த்தி, மூன்று அளந்து ஒன்று கொட்டி அதனை-மூன்றொத்துடைய மட்டத்திலே எடுத்து ஓரொத்துடைய ஏக தாளத்திலே முடித்து, ஐது மண்டிலத்தால்-அழகிய மண்டிலநிலையாலே, கூடை போக்கி-தேசிக்கு ஒற்றித் தொத்தலும் இரட்டித் தொத்தலுமேயாகலின் தேசிக் கூறெல்லாம் ஆடி முடித்து,
இனி மார்க்கங் கூறுகின்றது
ஆறும் நாலும் அம்முறை போக்கி-பஞ்சதாளப் பிரபந்தமாகக் கட்டப்பட்ட வடுகிலொத்தையும் தேசியவொத்தைக் காட்டினாற்போல இரட்டிக்கிரட்டியாக ஆடி, கூறிய ஐந்தின் கொள்கைபோலப் பின்னையும் அம்முறை பேரிய பின்றை-முன் சொல்லிப் போந்த தேசியைப்போல வடுகும் கட்டத்தாளம் முதலாக ஏகதாளம் அந்தமாக வைசாக நிலையிலே ஆடி முடித்த பின்னர், பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்தென-பொன்னால் இயன்றதொரு பூங்கொடியானது கூத்து நடித்தாற்போல, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் ஆகலின்-தாண்டவம் நிருத்தம் நாட்டியம் என்னும் மூன்று கூறுபாட்டினும் நாட்டியமென்னும் புறநடத்தை நூல்களிற் சொன்ன முறைமை தவறாமல் அவிநயித்துப் பாவகந் தோன்ற விலக்குறுப்புப் பதினான்கின் நெறி வழுவாமல் ஆடிக் காட்டினள் ஆதலால்:
௧௨௯. அரசன் முதலியோர் இருந்த பின்னர் என விரித்துரைக்க.
௧௩௪. தோரிய மகளிராவர் ஆடி முதிர்ந்தவர்.
"இந்நெறி வகையா விடத்தூண் சேர்வோள்
தொன்னெறி மரபிற் றோரிய மகளே"
எனவும்,
"தலைக்கோ லரிவை குணத்தொடு பொருந்தி
நலத்தகு பாடலு மாடலு மிக்கோள்
இயற்படு கோதைத் தோரிய மகளே"
எனவும் கூறுவர். தோரிய மகளிரும் என்னும் உம்மையால் தானும் என்பது விரித்துரைக்க.
௧௩௫. சீரியல் பொலிய என்பதற்குத் தாளவியல்பு பொலிவுபெற என்றும் நீரல நீங்க என்பதற்கு அவதாளம் நீங்க என்றும் உரைத்தலுமாம்.
௧௩௭-௪௩. நின்றது நின்றது நின்றது நின்றிசைத்தது என்பவற்றுடன் ஆக என்னும் சொற் கூட்டி எச்சப்படுத்து, ஆமந்திரிகை இசைத்ததாக, இங்ஙனம் வாரத்து ஈற்றிலே நின்று கூடி யிசையா நிற்கும் குயிலுவக் கருவிகளெல்லாம் அந்தரமின்றி ஒன்றாய் நிற்ப எனச் சொன் முடிபுகொள்க. ஆமந்திரிகை-இடக்கையென்னும் வாச்சியம். வாரப்பாடல் பாடியபின் என்றமையால் மிடற்றுப் பாடலும் கூறியவாறாயிற்று. யாழ் குழல்வழி நின்றாற்போல மிடற்றுப்பாடலின் வழியும் நின்றதென்க.
௧௪௭. இதனை அந்தரக் கொட்டு என்றும், முகம் என்றும், ஒத்து என்றும் பெயர் கூறுப. இந்த ஒத்து ஆடிய பின்னல்லது நாடக மகள் உருக்காட்டுதல் வழக்கல்ல என்பர்.
௧௪௮-௯. பாலைப் பண்ணை மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து அதன்மேல் என்றியைக்க. வக்காணம்-ஆளத்தி.
௧௫0. ‘நாலுறுப்புங் குறைபாடில்லாத’ என்னும் இருவருரைக்கும் ‘நான்கின் ஒரீஇய’ என்னும் மூலம் பொருத்தமாதல் இன்று; ஒருவா, ஒருவில என்றிங்ஙனம் பாடமிருந்திருக்கும் போலும். ‘நாலுறுப்பாவன : உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை என்பன. ஈண்டு நாலுறுப்புக்களும் குறைபாடில்லாத உருவென வேண்டியது, மூன்றுறுப்பாலே வருவனவும் உளவாதலின், அவை இரண்டாமடியே ஈற்றடியாகப் பாடி முடிவன. அவை மங்கலத்துக்குப் பொருந்தாவெனக் கொள்க’ என்பர்.
௧௫௨.-௪. இக்காதையின் ௨0-௨௧ அடிகளின் பொருள் நோக்குக. மார்க்கம் எனினும் வடுகு எனினும் ஒக்கும்.
௧௫௫. ஐந்து என்பது பஞ்சதாளம் என்னும் பொருட்டாக. கூறிய என்னும் அடையால் அது தேசியைக் குறிப்பதாயிற்று.
௧௫௮-௯. ‘இக்காதையிற் கூறிய முத்தமிழ் வகையும் காட்டினளாதலின் என்றுமாம்’ என்பர் தொல்லை யுரையாசிரியர் இருவரும்.
--------------
மாதவி சிறப்புப் பெற்றதும் கோவலன் அவளை யுற்றதும்
-
௧௫௯-௭௫. காவல் வேந்தன்
இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமைத்
தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே
நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
வீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை,
மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த,
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்.
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன்.
காவல் வேந்தன் இலைப்பூங்கோதை இயல்பினின் வழாமை(காட்டினளாதலின்)-மாதவி தன் கூத்துக்கும், பாட்டுக்கும், அழகுக்கும் ஏற்ற முறையில் வழுவாமல் காவலையுடைய அரசனது பச்சைமாலையுடன், தலைக்கோல் எய்தி-தலைக்கோற் பெயர் பெற்று, தலை அரங்கு ஏறி-எல்லா முதன்மையும் பெறுதற்குக் காரணமாகிய முன்னரங்கேறப் பெற்று, விதி முறை கொள்கையின்-இந்நாடகக் கணிகையர்க்குத் தலைவரிசையென நூல்கள் விதித்த முறைப்படி, ஆயிரத்து எண்கழஞ்சு ஒரு முறையாகப் பெற்றனள்-ஆயிரத்தெண்கழஞ்சு பொன் ஒரு முறையாகப் பரிசம் பெற்றாள்; அதுவே-அன்று தொடங்கி அதுவே நாடோறும் பரிசமாக, நூற்றுப்பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த-நூற்றைப் பதின்மடங்காக அடுக்கி அதன் கடைக்கண்ணே எட்டை நிறுத்தின (ஆயிரத்தெட்டு என்றபடி), வீறு உயர் பசும்பொன் பெறுவது இம்மாலை-வீறு பெற்றுயர்ந்த பசும்பொன்னை விலையாகப் பெறுவது இம்மாலை, இம்மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு என - ‘இவ்வளவு பொன் தந்து இம்மாலையை வாங்கிச் சூடுவார் மாதவிக்கு மணமகனாதல் அமையும்’ என்று சொல்லி, மானமர் நோக்கியோர் கூனி கைக்கொடுத்து-மான்போன்ற நோக்கினையுடையவளாகிய ஒரு கூனி கையிற் கொடுத்து, நகர நம்பியர் திரிதரு மறுகில்-நகரத்து ஆண்டகைச் செல்வர்கள் உலாவரும் பெருந் தெருவில்,பகர்வனர் போல்வதோர் பாண்மையின் நிறுத்த – விலைக்கு விற்பாரைப் போல்வதொரு பண்பினால் நிறுத்த, மாமலர் நெடுங்கண் மாதவி மாலை கோவலன் வாங்கி-சிறந்த தாமரைமலர் போன்ற கண்ணையயுடைய மாதவியின் பரிச மாலையைக் கோவலன் வாங்கி, கூனி தன்னொடும் மணமனைபுக்கு – கூனியுடனே மாதவியின் மணமனையிலே புகுந்து, மாதவி தன்னோடு அணைவுறு வைகலின்-அவளுடன் அணைந்த அன்றே, அயர்ந்தனன் மயங்கி-அயர்ந்து மயங்கி, விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்-நீங்க முடியாத விருப்பத்தை உடையனாயினான்; வடு நீங்கு சிறப்பின்-குற்றமற்ற சிறப்பினையுடைய, தன் மனை அகம் மறந்து என்-தன் மனைவியையும் மனையையும் மறந்து என்க.
௧௫0. இலைப் பூங்கோதை-மாதவி யென்றுரைப் பாருமுளர்.
௧௫க. தலைக்கோற் பெயர் பெறுதலாவது தலைக்கோலி என்னும் பட்டம் பெறுதல், தென்னாட்டுப் பழைய கல்வெட்டுக்களில் "திருநெல்வேலி உடையார் கோயில்
பதியிலாரில் நக்கன் உரிமை அழகிய பெருமாளான உரிமை அழகிய பெருமாள் தலைக்கோலி" எனவும், "பதியிலான் நக்கன் அரங்கமான ஜயங்கொண்ட சோழத் தலைக்கோலியும், நக்கன்
பூமியான பரமாக்க விடங்கத் தலைக்கோலியும், நக்கன் சோழ விச்சாதரியான ஒலோக மாதேவி தலைக்கோலியும், நக்கன் பவழக் குன்றான மதுராந்தகத் தலைக்கோலியும்" எனவும் தலைக்கோலி என்னும் பட்டமும், அதனைப் பெற்ற பதியிலார் பலர் பெயரும் வருதல் ஈண்டு அறியத்தக்கன.
௧௫௨ . நாடகக் கணிகையர் தலைவரிசையாக ஆயிரத்தெண் கழஞ்சு பெறுதல் நூல் வழக்காகும்.
"முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும்
எட்டொடு புணர்ந்த ஆயிரம் பொன்பெறுப"
என்பர்.
௧௫௫. பசும்பொன்-குளிச்சிறை யென்னும் பொன். பெறுவது – விலைமதிக்கப் பெறுவது. ஆயிரத்தெண் கழஞ்சு பொன்னுக்கு மாலை படிக்கட்டளை யாயிற்று.
௧௫௯ . கொடி என்பது மாதவியென்னும் பெயருக்குப் பொருந்தியதொரு நயமுடைத்து.
௧௭0. மா மலர்-திருமகள் வாழும் மலர் என்றுமாம்.
௧௭௩. அணைவுறு வைகல் – அணைந்த அப்பொழுதே என்றபடி. அயர்த்தல்-அதுவேயாதல். மயங்குதல்-அறிவு திரிதல்.
௧௭௫. வடுநீங்கு சிறப்பு-மனையாட்குக் கற்பின் சிறப்பும் மனைக்குச் செல்வச் சிறப்புமாம். வடுநீங்கு சிறப்பின் மனையகம் மறந்து என்றது நாடகக் கணிகையைப்பற்றி அவள் மனையையே வாழுமிடமாகக் கொண்டது அவனுக்கு நீங்காத வடுவாமெனக் குறிப்பினுணர்த்தியாவாறாம். மறந்து ஆயினன் என்றியையும். என் -அசை.
மாதவியின் ஆடன் முதலியவற்றை மன்னற்குக் காட்டல் வேண்டி ஆடலாசிரியன் முதலாயினார் ஒருங்கு கூடி, அரங்கத்து, வந்தனை செய்து வழிபடு தலைக்கோலை மண்ணியபின்னர் ஊர்வலஞ்செய்து புகுந்துமுன் வைக்க, மாதவி வலக்கால் முன் மிதித்தேறி ஆடிக்காட்டினளாதலின் வேந்தனது இலைப்பூங்கோதையும்,தலைக்கோற்பெயரும்,பெற்றனள்; பெற்றபின் மாலையைக் கூனி கைக்கொடுத்து நிறுத்த, அதனைக் கோவலன், வாங்கி, மனைபுக்கு, அயர்ந்து, மயங்கி, மறந்து விருப்பினனாயினன் என்க.
இஃது எல்லாவடியும் அளவடியாகி முடிந்தமையின் நிலைமண்டில வாசிரியப்பா.
-------------
இறுதி வெண்பா
எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கில் வந்து.
பூம்புகார்ப் பொற்றொடி மாதவி-அழகியபுகார் நகரிற் பிறந்த பொன்வளை யணிந்த மாதவி யென்னும் கணிகை, ஆடு அரங்கின் வந்து-நடிக்கும் அரங்கத்திலே வந்து, எண்ணும் எழுத்தும்-எல்லாக் கலைகட்கும் கருவியாகிய கணிதம் இலக்கணம் என்பவற்றையும், இயல் ஐந்தும்-இயற்றமிழின் ஐந்து பாகுபாட்டினையும், பண் நான்கும்-இசைத்தமிழின் நாற்பெரும் பண்ணையும், பண்நின்ற கூத்துப் பதினொன்றும்-நாடகத்தமிழின் இனிமையுடைய பதினொரு கூத்தினையும், தன் வாக்கினால்-தன் வாக்கினாலும், கூத்தினாலும், மண்ணின்மேல் போக்கினாள்-புவி முழுவதும் அறிந்து புகழும்படி செய்தாள்.
கூத்தினாலும் என விரித்துரைத்துக்கொள்க.
அரங்கேற்று காதை முற்றிற்று.
----------------------
இளங்கோவடிகள் இயற்றிய "சிலப்பதிகரம்"
மூலமும்
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி
நாட்டாரவர்கள் எழுதிய உரையும்
புகார்க்காண்டம் - பாகம் 2
இளங்கோவடிகள் இயற்றிய "சிலப்பதிகரம்" மூலமும்
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும் -2
உள்ளடக்கம்
பதிகம்
உரைபெரு கட்டுரை
புகார்க்காண்டம்.
1. மங்கல வாழ்த்துப் பாடல்
2. மனையறம்படுத்த காதை
3. அரங்கேற்று காதை
4. அந்திமாலைச் சிறப்புசெய் காதை
5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை
6. கடலாடு காதை
7. கானல் வரி
8. வேனில் காதை
9. கனாத்திறம் உரைத்த காதை
10. நாடுகாண் காதை
---------------
4. அந்திமாலைச் சிறப்புச் செய் காதை
(கடலாடை நிலமடந்தையானவள் ‘உலக முழுதாண்ட ஒரு தனித்திகிரியை உடைய உரவோனைக் காண்கின்றிலேன்’ என்று திசைமுகம் பரந்து, தன் கணவனாகிய பரிதியைக் கெடுத்து வருந்துங்காலை, முடியுடைப் பேரரசர் நீங்கிய அற்றம் பார்த்துக் குடிகள் வருந்துமாறு வந்து புகுந்த குறுநில மன்னர்போல மாலைப்பொழுது வந்தது. பின்னர், இளையராயினும் பகையரசு கடியும் பாண்டியர் குல முதலாகிய வெண்பிறை தோன்றி, மாலையாகிய குரும்பினை யோட்டி மீனரசினை ஆளா நின்றது. அப்பொழுது மாதவியானவள் நிலாமுற்றத்திலே மலரமளியில் ஊடலும் கூடலும் கோவலற் களித்து இன்புறுகின்றாள்; அவளைப் போன்றே கணவரோடு கூடிய மகளிர் பலரும் பூஞ்சேக்கையின் ஆவி போலும் கொழுநர் மார்பில் ஒடுங்கிக் காவிமலர் போலும் கண்ணாற் களித்துயில் எய்துகின்றனர். கண்ணகியோ காதலனைப் பிரிந்தமையால் மங்கலவணியன்றிப் பிறிதணி அணியாமலும், வேறு ஒப்பனை யொன்று மின்றியும், நுதல் திலகம் இழக்கவும், கண் அஞ்சனம் மறக்கவும், கூந்தல் நெய்யணி துறக்கவும் கையற்ற நெஞ்சுடன் கலங்குகின்றனள். அவள்போன்றே காதலர்ப் பிரிந்த மாதர் பலரும் ஊதுளைக் குருகுபோல் வெய்துயிர்த்துக் கண்கள் முத்தினை உதிர்க்க வருந்துகின்றனர். இவர்கள் இவ்வாறாக, இரவு நீங்கும் வைகறைகாறும் மகரக் கொடியையுடைய மன்மதன் நடு யாமத்தும் துயிலாது திரிதலால் நகர்க்காவல் நனி சிறப்பதாயிற்று.)
-
(நிலைமண்டில ஆசிரியப்பா)
விரிகதிர் பரப்பி உலகம்முழுது ஆண்ட
ஒருதனித் திகிரி உரவோன் காணேன்
அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்
திங்கள்அம் செல்வன் யாண்டுஉளன் கொல்எனத்
திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள் 5
முழுநீர் வார முழுமெயும் பனித்துத்
திரைநீர் ஆடை இருநில மடந்தை
அரைசுகெடுத்து அலம்வரும் அல்லற் காலை,
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளொடு ஒருதிறம் பற்றி 10
வலம்படு தானை மன்னர் இல்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்தக்
காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ்வு எய்தக்
குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு 15
மழலைத் தும்பி வாய்வைத்து ஊத
அறுகால் குறும்புஎறிந்து அரும்புபொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற
எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப
மல்லல் மூதூர் மாலைவந்து இருத்தென 20
இளையர் ஆயினும் பகைஅரசு கடியும்
செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்திவா னத்து வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்புஎறிந்து ஓட்டிப்
பான்மையில் திரியாது பால்கதிர் பரப்பி 25
மீன்அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து,
இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளியுள் பொலிந்து
செந்துகிர்க் கோவை சென்றுஏந்து அல்குல்
அம்துகில் மேகலை அசைந்தன வருந்த 30
நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலம் கொண்ட மாதவி அன்றியும்,
குடதிசை மருங்கின் வெள்அயிர் தன்னொடு 35
குணதிசை மருங்கின் கார்அகில் துறந்து
வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத்
தென்மலைப் பிறந்த சந்தனம் மறுகத்
தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க்
காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப் 40
பைந்தளிர்ப் படலை பருஉக்காழ் ஆரம்
சுந்தரச் சுண்ணத் துகளொடு அளைஇச்
சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை
மந்தமா ருதத்து மயங்கினர் மலிந்துஆங்கு
ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கிக் 45
காவியங் கண்ணார் களிதுயி லெய்த
அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள் 50
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்நகை கோவலன் இழப்ப 55
மைஇருங் கூந்தல் நெய்அணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும்
காதலர்ப் பிரிந்த மாதர் நோதக
ஊதுஉலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி
வேனில் பள்ளி மேவாது கழிந்து 60
கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து
மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும்
அலர்முலை ஆகத்து அடையாது வருந்தத்
தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர்
வீழ்பூஞ் சேக்கை மேவாது கழியத் 65
துணைபுணர் அன்னத் துவியிற் செறித்த
இணைஅணை மேம்படத் திருந்துதுயில் பெறாஅது
உடைப்பெருங் கொழுநரோடு ஊடல் காலத்து
இடைக்குமிழ் எறிந்து கடைக்குழை ஓட்டிக்
கலங்கா உள்ளம் கலங்கக் கடைசிவந்து 70
விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத்து உறைப்ப
அன்னம் மெல்நடை நன்னீர்ப் பொய்கை
ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரைத்
தாமரைச் செவ்வாய்த் தண்அறல் கூந்தல்
பாண்வாய் வண்டு நோதிறம் பாடக் 75
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்பப்
புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வாய்ச் சங்கம் முறைமுறை ஆர்ப்ப
உரவுநீர்ப் பரப்பின் ஊர்த்துயில் எடுப்பி
இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும் 80
அரைஇருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி
மகர வெல்கொடி மைந்தன் திரிதர
நகரம் காவல் நனிசிறந் ததுஎன்.
------------------
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
-
௧-௮. விரிகதிர் பரப்பி உலகம்முழுது ஆண்ட
ஒருதனித் திகிரி உரவோன் காணேன்
அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்
திங்கள்அம் செல்வன் யாண்டுஉளன் கொல்எனத்
திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள்
முழுநீர் வார முழுமெயும் பனித்துத்
திரைநீர் ஆடை இருநில மடந்தை
அரைசுகெடுத்து அலம்வரும் அல்லற் காலை
விரிகதிர் பரப்பி – விரிந்த கதிர்களைப் பரப்பி, உலகம் முழுது ஆண்ட உலகமனைத்தையும் ஆண்ட, ஒரு தனித்திகிரி-ஒப்பற்ற தனியாழியையுடைய, உரவோற் காணேன்-திண்மையுடையோனைக் காண்கின்றிலேன்; அங்கண் வானத்து-அழகிய இடத்தையுடைய வானின்கண், அணிநிலா விரிக்கும்-அழகிய நிலாவை விரிக்கும், திங்களஞ் செல்வன் யாண்டுளன் கொல்-திங்களாகிய செல்வன் எவ்விடத்துள்ளானோ, என – என்று, திசைமுகம் பசந்து-திசையாகிய தன்முகம் பசப்பூரப்பட்டு, செம்மலர்க் கண்கள் முழுநீர் வார- செவ்விய மலராகிய கண்கள் முழுதும் நீர்வார, ÓØமெÔõ பனித்து-மெய்ம்முழுதும் பனித்து, திரைநீர் ஆடை இருநில மடந்தை-கடலை ஆடையாக வுடைய பெரிய நிலமடந்தை, அரசு கெடுத்து அலம்வரும் அல்லற்காலை-தன் கணவனைக் காணாது நெஞ்சு கலங்குகின்ற இடுக்கட் பொழுதிலே,
ஞாயிற்றைப் பேரரசராகவும், புவியைக் கோத்தேவியாகவும் சிலேடை வகையால் உருவகஞ் செய்கின்றார். கதிர்-கிரணம். ஒளி. ஒரு தனித்திகிரி-ஒப்பற்ற ஒற்றைத் தேராழி, ஆக்கினா சக்கரம். செல்வன்- மைந்தன். திசை முகம் – திசையினிடம்; திசையாகிய முகம். திசை என்றமையால் முகம் நான்கு கொள்க. பசந்து-பசுவெயிலாற் பசுமையுற்று; பசப்புற்று. மலர்க்கண்கள் முழுநீர் வார-மலரினிடமெல்லாம் கள்ளாகிய நீர் ஒழுக, மலராகிய கண்கள் முழுதும் நீர்வார, பனித்து-பனிகொண்டு, நடுக்குற்று. அரசு-கணவன். "காலமுலகம்" என்னுஞ் சூத்திரத்தால் ஞாயிறு திங்கள் என்பன உயர்திணையாய் இசையா எனக்கூறிய ஆசிரியர் "நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே" "இசைத்தலுமுரிய வேறிடத் தான" என்று கூறினமையின், ஈறுதிரிந்து வாய்பாடு வேறுபட்டுத் திங்களஞ் செல்வன் என்றாயிற்று. மேல் இவ்வாறு வருவனவற்றிற்கும் இதுவே விதியாமென்க. கொல், ஐயப்பொருட்டு. கெடுத்து-மறைய விடுத்து; காணப்பெறாது. "எற்கெடுத்திரங்கி" என்புழிப்போல.
-
௯-௧௨. கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளொடு ஒருதிறம் பற்றி
வலம்படு தானை மன்னர் இல்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
கறை கெழு குடிகள் கைதலை வைப்ப-இறை செலுத்துதற்குப் பொருந்தியுள்ள குடிகள் துயரமுற, அறைபோகு குடிகளோடு ஒரு திறம்பற்றி-அங்ஙனம் இறை செலுத்தாது கீழறுத்தல் செய்யும் குடிகளை ஒரு தலையாகப் பற்றி, வலம்படுதானை மன்னர் இல்வழி-வெற்றி பொருந்திய சேனையையுடைய வேந்தர் இல்லாத இடமறிந்து, புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்-அவர் நிலமெல்லாம் கெடும்படி புதிதாக வந்து தங்கிய குறுநில மன்னர் போல,
கறை-கடமை; வரி. துயருற என்பதனைக் கைதலை வைப்ப என்பதனாற் குறிப்பிட்டார். விருந்தின் மன்னர் குடிகொன்றிறை கொள்வாராகலின் வரி செலுத்துங் குடிகள் துயருறுவாரென்க. அறைபோதல் கீழறுத்தல்: உட்பகையாய்ப் பகைவர்க்கு உதவிசெய்தல். ஓடு-ஐ. இல் வழி-இல்லாதவிடம்: ஈண்டுக் காலத்தை உணர்த்தி நின்றது. குறுநில மன்னரை விருந்தின் மன்னர் என்றமையால் தானை மன்னர் தொன்றுதொட்டு வருவோர் என்பதாயிற்று.
-
௧௩-௨0. தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்தக்
காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ்வு எய்தக்
குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு
மழலைத் தும்பி வாய்வைத்து ஊத
அறுகால் குறும்புஎறிந்து அரும்புபொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற
எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப
மல்லல் மூதூர் மாலைவந்து இருத்தென
தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்த-தம் மனத்திலே தங்கிய கொழுநரைப் பிரிந்திருக்கின்ற மகளிர் ஒப்பற்ற துயரினை யெய்தவும், காதலர்ப் புணர்ந்தோர் கலிமகிழ்வு எய்த-தம் காதலரைக் கூடியிருக்கும் மகளிர் மிக்க மகிழ்ச்சியை அடையவும் ; குழல் வளர்முல்லையில்-வேங்குழலிலும் வளர்கின்ற முல்லையின் மலரிலும், கோவலர் தம்மொடு மழலைத்தும்பி வாய் வைத்து ஊத-கோவலரும் இளமையுடைய வண்டுகளும் முறையே வாயை வைத்து ஊதவும், அறுகாற்குறும்பு எறிந்து-வண்டுகளாகிய குறும்பினை யோட்டி, அரும்பு பொதிவாசம்-அரும்புகள் உள்ளடக்கிய மணத்தினை, சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற-இளந்தென்றலாகிய செல்வன் தெருவெல்லாம் தூற்றவும், எல்வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப-ஒளி பொருந்திய வளையையுடைய மகளிர் அழகிய விளக்கினையேற்றவும், மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்தென-வளம் பொருந்திய மூதுரின்கண்ணே மாலைப் பொழுது வந்துவிட்டதாக;
தாழ்தல்-தங்குதல். இவர் இடைவிடாது நினைத்தலை அவர் மனத்திற் றங்குதலாகக் கூறினார். தனித்துயர்-தனிமையாலாகிய துயருமாம். குழலிலும் முல்லையிலும் கோவலரும் தும்பியும் ஊத என்றது நிரனிறை. இனி, ‘குழல்வளர் முல்லையில்’ என்பதனைச் சிலேடையாக்கி, வேய்ங்குழலில் வளர்கின்ற முல்லை யென்னும் பண்ணைக் கோவலரும், கூந்தலில் வளர்கின்ற முல்லை மலரில் வண்டுகளும் ஊத என்றுமாம். குழல்-ஊதுங்குழலும், கூந்தலும். முல்லை-முல்லைப் பண்ணும், முல்லை மலரும். வளர்தல்-பொருந்துதல். தென்றல் தளிர்ப்பித்தலும் பூப்பித்தலு்ம் செய்யத் தான் இடைப்புகுந்துண்டலின் வண்டினைக் குறும்பென்றார். மணிவிளக்கு-மாணிக்க விளக்குமாம். கறைகெழு குடிகள்போல் தணந்தோர் துயரெய்தவும். அறைபோகு குடிகள்போல் புணர்ந்தோர் மகிழ்வெய்தவும் விருந்தின் மன்னர்போல மாலை வந்ததென உவமங் கொள்க. இப்பதியின் கண் மாலைப்பொழுது வந்ததனைச் சாத்தனார் கூறுமிடத்தும், "பைந்தொடி மகளிர் பலர் விளக்கெடுப்ப" எனவும் "கோவலர் முல்லைக் குழன் மேற்கொள்ள" எனவும் வந்துள்ளமை காண்க.
-
௨௧-௬. இளையர் ஆயினும் பகைஅரசு கடியும்
செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்திவா னத்து வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்புஎறிந்து ஓட்டிப்
பான்மையில் திரியாது பால்கதிர் பரப்பி
மீன்அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து,
இளையர் ஆயினும் பகை அரசு கடியும்-தாம் நனி இளம்பிராயத்தினராயினும் பகையரசரை யோட்டவல்ல, செருமாண் தென்னர் குல முதல் ஆகலின்-போரில் மாட்சியுற்ற பாண்டியர் குலத்திற்கு முதல்வனாகலின், அந்திவானத்து வெண்பிறை தோன்றி-அந்திப்பொழுதிலே செவ்வானத்தின் கண் வெள்ளிய பிறை தோன்றி, புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஓட்டி-வருத்தத்தைத் தரும் மாலையாகிய குறும்பினை எறிந்து ஓட்டி, பான்மையில் திரியாது-முறைமையில் வழுவாது, பாற்கதிர் பரப்பி-தனது பால்போலும் வெள்ளிய ஒளியை விரித்து, மீன் அரசு ஆண்ட-மீனிராச்சியத்தை ஆண்ட, வெள்ளி விளக்கத்து-வெண்மையுடைய விளக்கத்திலே.
பாண்டியர் இளையராயினும் பகைவர்க்கடிதலை "இளையதாயினுங் கிளையரா வெறியும்" "கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டு" என்னும் புறப்பாட்டுக்களாலறிக. வெண்பிறை எனப் பண்படுத்தமையால் எடுத்த மொழி இனஞ்செப்பிச் செவ்வானத்து வெண்பிறை தோன்றி யென்பதாயிற்று. புன்கண்-துன்பம். இடைநின்ற காலத்துப் புகுந்து வருத்துதலின் மாலையைக் குறும்பு என்றார். பான்மை-முறைமை. அரசியல். சந்திரன் உடுபதியாகலின் அவன் ஆள்வதனை மீனரசு என்றார்; மீனரசு என்பதற்குச் சந்திரன் என்று பொருள் கொள்ளின், மீனரசாகிய பிறை எனக் கூட்டுதல் வேண்டும். விளக்கம்-புகழென்னும் பொருளும் தோன்றும்.
-
௨௭-௩௪. இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளியுள் பொலிந்து
செந்துகிர்க் கோவை சென்றுஏந்து அல்குல்
அம்துகில் மேகலை அசைந்தன வருந்த_
நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலம் கொண்ட மாதவி அன்றியும்,
இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த பல்பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து-மனையிடத்தே வளரும் முல்லையும் மல்லிகையும் மற்றும் பலவுமாகிய பூக்கள் அவிழ்ந்து பரந்த படுக்கையாகிய சேக்கையின்கண் பொலிவு பெற்று, செந்துகிர்க்கோவை சென்று ஏந்து அல்குல் அம்துகில் மேகலை அசைந்தன வருந்த-பரந்து உயர்ந்த அல்குலினிடத்தே அழகிய புடவையின்மேற் சூழ்ந்த பவள வடமாகிய மேகலை அசைந்தனவாய் இரங்க, நிலவுப் பயன்கொள்ளும் நெடுநிலா முற்றத்து-நிலவின் பயனைக் கொள்ளுதற்குக் காரணமாகிய உயர்ந்த நிலாமுற்றத்திலே, கலவியும் புலவியும் காதலற்கு அளித்து-தன் காதலனுக்கு ஒருகாற் கூடுதலையும் ஒருகால் ஊடுதலையும் மாறியளித்து, ஆங்கு ஆர்வ நெஞ்மொடு கோவலற்கு எதிரி-அவ்விடத்து விருப்பமிக்க நெஞ்சத்துடன் கோவலனை எதிரேற்று முயங்கி, கோலம் கொண்ட மாதவி அன்றியும்-அம் முயக்கத்தால் முன் குலைந்த ஒப்பனையைப் பின்னும் வேட்கை விளைக்குங் கோலமாகத் திருந்தச் செய்த மாதவியும் அவளன்றியும்,
ஓடு : எண்ணின்கண் வந்தது. சேக்கைப்பள்ளி - ஒரு பொருளிருசொல். சென்று-பரந்து. துகில் செல்லப்பட்டுக் கோவையாகிய மேகலை அசைந்து வருந்த எனச்சொல்நிலை மாற்றியுரைத்தலுமாம். மேகலை-பவளக்கோவை எட்டினாற் செய்தது. ‘அசைந்தன வருந்த நிலவுப் பயன்கொள்ளும்’ என்றது இடக்கரடக்கு. எதிரி-எதிரேற்று; முயங்கியென்றபடி. கோவலற்கு, உருபுமயக்கம்.
" உப்பமைந் தற்றால் புலவி யதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்".
என்பவாகலின் கலவியும் புலவியும் அளித்தென்றார். மாதவியும் அன்றியும் என விரிக்க.
-
௩௫-௩௬. குடதிசை மருங்கின் வெள்அயிர் தன்னொடு
குணதிசை மருங்கின் கார்அகில் துறந்து
குடதிசை மருங்கின் வெள் அயிர் தன்னொடு குணதிசை மருங்கிற் கார் அகில் துறந்து- மேற்றிசையிடத் துண்டான வெள்ளிய கண்டு சருக்கரையோடு கீழ்த்திசையிடத் துண்டான கரிய அகில் முதலியவற்றாற் புகைக்கும் புகையைத் துறந்து,
குடதிசை அயிர் – யவன தேசத்து அயிர் என்பர். அயிர் – கண்டு சருக்கரை ; நறு்ம்புகைக்குரிய பொருள். இவற்றைப் புகைத்தல் மரபாதலை ." இருங்காழகிலோடு வெள்ளயிர் புகைப்ப" என்பதனாலு மறிக. அகில் பிறவற்றிற்கும் உபலக்கணம். தட்பத்தை விரும்புங் காலமாதலின் புகையைத் துறத்தல் கூறினார். குடதிசை, குணதிசை : வெள்ளயிர், காரகில் என்பன முரண் என்னும்,அணியாகும்.
-
௩௭-௮. வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத்
தென்மலைப் பிறந்த சந்தனம் மறுகத்
வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத் தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக-வடக்கின் கண்ணதாகிய இமய மலையில் உண்டான மிக்க ஒளியையுடைய வட்டக்கல்லில் தென்றிசைக் கண்ணதாகிய பொதியின் மலையிற் பிறந்த சந்தனம் சுழல,
கேழ்-நிறம் ஒளிவட்டம்-சந்தனம் உரைக்கும் வட்டக்கல். சந்தனம்-சந்தனக் குறடு. மறுக-சுழல ;
அரைக்கவென்றபடி. மறுக என்றது பூசுதலாகிய காரியந்தோன்ற நின்றது.
" வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்ப"
என்பதுங் காண்க. கூதிர்க்காலத்துச் சந்தனத்தைத் துறந்து புகையை விரும்புதலும். வேனிற் காலத்துப் புகையைத் துறந்து சந்தனத்தை விரும்புதலும், ஈரிடத்தும் கூறப்பட்டன. மக்கள் வாழ்க்கைக்கு மேற்றிசைப் பொருளும் கீழ்த்திசைப் பொருளும் ஒன்று சேர்தலும், வடதிசைப்பொருளும் தென் திசைப்பொருளும் ஒன்று சேர்தலும், வேண்டுமென்பது இவற்றாற் பெறப்படுதலின், பல தேயத்தாரும் ஒற்றுமையுடன் வாணிகம் நடாத்துதலின் இன்றியமையாமை புலனாம்.
-
௩௮-௪௬. தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க்
காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப்
பைந்தளிர்ப் படலை பருஉக்காழ் ஆரம்
சுந்தரச் சுண்ணத் துகளொடு அளைஇச்
சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை
மந்தமா ருதத்து மயங்கினர் மலிந்துஆங்கு
ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கிக்
காவிஅம் கண்ணார் களித்துயில் எய்த
தாமரைக் கொழு முறி-தாமரையின் இளந்தளிரினையும், தாதுபடு செழுமலர்-மகரந்தம் பொருந்திய அதன் செழுமையுடைய மலரினையும், காமரு குவளை-கண்டார்க்கு விருப்பமுண்டாக்கும் குவளை மலரினையும், கழுநீர்மாமலர்-கழுநீரின் சிறந்த மலரினையும், பைந்தளிர்-பச்சிலையுடன் கலந்து தொடுத்த, படலை-படலை மாலையும், பரூஉக்காழ் ஆரம்-பரிய முத்தின் கோவையும், சுந்தரச் சுண்ணத்துகளொடும்-அழகிய சுண்ணமாகிய பொடியுடன், அளைஇச் சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை-சிந்திக் கலந்து கிடந்த வளவிய பூஞ்சேக்கையிடத்து, மந்த மாருதத்து மயங்கினர் மலிந்து-இளந்தென்றலால் மயங்கிக் காதல் மிக்கு, ஆங்கு ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கி-அவ்விட்த்து உயிர் போலும் கொழுநர் மார்பிடத்தே பொருந்தி, காவிஅம் கண்ணார் களித்துயில் எய்த-நீலோற்பல மலர்போன்ற அழகிய கண்களையுடைய மகளிரும் இன்பக் களியான துயில்கூட, (நீலோற் பலம்-கருங்குவளை.)
காமம் மரு என்பது காமரு எனத் திரிந்தது. காமம் வரு என்பது திரிந்த தென்பாருமுளர். படலை-இலைத் தொடை: மலர்களும் இலையும் விரவித் தொடுத்த மாலை. காழ்-சரம்; கோவை. ஆரம்-முத்து.ஆரக்காழ் எனவும், சிந்துபு அளைஇ எனவும் மாறுக. மயங்கினர், எச்சமுற்று. மலிந்து – மிக்கு, காதன்மிக்கு என்க. ஆங்கு - அசையுமாம். அம் என்பதூஉம் அசை. மாதவியும் அவளன்றிக் கண்ணாரும் களித் துயிலெய்தவென்க. கண்ணால் என்று பாடமோதி, மார்பிடத்தே கண்களைப் பொருந்தவைத்து என்றுரைப்பர் அடியார்க்கு நல்லார். களித்துயில் கலவியாலுண்டான அவசமாகிய துயில்.
-
௪௭-௫௭. அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்நகை கோவலன் இழப்ப
மைஇருங் கூந்தல் நெய்அணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும்
அம்செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய-அழகிய சிவந்த சிறிய அடிகள் அணியுஞ் சிலம்பினை ஒழியவும், மென்றுகில் அல்குல் மேகலை நீங்க-மெல்லிய துகிலை யுடுத்த அல்குலிடத்து மேகலை நீங்கவும், திங்கள் வாள் முகம் சிறுவியர்ப்பு இரிய-மதிபோலும் ஒள்ளிய முகத்திலே சிறு வியர்வு நீங்கவும், செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப-சிவந்த கயல்போலும் நெடிய கண் தீட்டும் மையினை மறக்கவும், பவள வாள்நுதல் திலகம் இழப்ப-பவளம் போற் சிவந்த ஒள்ளிய நெற்றி திலகத்தை இழக்கவும், தவள வாள்நகை கோவலன் இழப்ப-வெள்ளிய ஒளிபொருந்திய முறுவலைக் கோவலன் இழக்கவும், மை இருங் கூந்தல் நெய் அணி மறப்ப-கருமையுடைய நீண்ட கூந்தல் புழுகுநெய் அணிதலை மறக்கவும், கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்-கொங்கை முற்றத்தில் குங்குமம் பூசாளாய், மங்கல அணியிற் பிறிது அணி அணியாள்-மங்கலவணியின் வேறான அணியை விரும்பாளாய், கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்- வளைவாகிய குண்டலத்தைத் துறந்து வடிந்து தாழ்ந்த காதினை யுடையளாய், கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும்-செயலற்ற நெஞ்சத்தையுடைய கண்ணகியும், அவளன்றியும்
கோவலன் தன்னைப் பிரிந்தமையின் யாதும் ஒப்பனை செய்திலள் என்பார். சிலம்பொழிய மேகலை நீங்க என்றிங்ஙனங் கூறினார். மங்கலவணி இயற்கையழகுமாம். வடிந்து-அழகு வடிந்து. ."அணிபறித்தழகு செய்யும்" என்றாற்போலக் ‘குழைதுறந்து வடிந்துவீழ் காதினள்’ என்றார். வியர் பிரிய எனப் பிரித்து, விகாரத்தால் ஒற்றுமிக்க தென்பாருமுளர். சிறு வியர் கூட்டத்தாற்றோன்றுவது. முன் கலவியாற் சிவந்த கண் என்க. பவளம் போற் சிவந்த திலகம் என்றுமாம். கண்ணகியின் முறுவல் கண்டு இன்புறாமை கோவலற்குப் பெரியதோ ரிழப்பென்பார். ‘தவளவாணகை கோவல னிழப்ப’ என்றார். எழுதாள் மகிழாள் காதினள் என்பன எதிர் மறையும் உடன்பாடுமாகிய குறிப்பெச்சமுற்றுக்கள். இனி, அடி, அல்குல், முகம், கண், நுதல், கூந்தல் என்பன தம்மையணியுஞ் சிறப்பை முறையே சிலம்பு,மேகலை, வியர், அஞ்சனம், திலகம், நெய் என்பன இழக்க வென்றலுமாம். செயவெனெச்சங்களை எழுதாள் முதலிய எச்சங்களால் முடித்து, அவற்றைக் கையற்ற என்னும் பெயரெச்ச வினையான் முடிக்க. கண்ணகியும் அன்றியும் என விரித்துரைக்க.
-
௫௮-௭க. காதலர்ப் பிரிந்த மாதர் நோதக
ஊதுஉலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி
வேனில் பள்ளி மேவாது கழிந்து
கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து
மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும்
அலர்முலை ஆகத்து அடையாது வருந்தத்
தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர்
வீழ்பூஞ் சேக்கை மேவாது கழியத்
துணைபுணர் அன்னத் àவியிற் செறித்த
இணைஅணை மேம்படத் திருந்துதுயில் பெறாஅது
உடைப்பெருங் கொழுநரோடு ஊடல் காலத்து
இடைக்குமிழ் எறிந்து கடைக்குழை ஓட்டிக்
கலங்கா உள்ளம் கலங்கக் கடைசிவந்து
விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத்து உறைப்ப
காதலர்ப் பிரிந்த மாதர்-தம் காதலரைப் பிரிந்த மாதர்கள், நோதக-கண்டார்க்கு வருத்தமுண்டாகும்படி,ஊது உலைக்குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி-உலையின்கண் ஊதுகின்ற துருத்தியின் மூக்குப்§À¡Ä அழலெழ உயிர்த்தனராய் ஒடுங்கி, வேனிற் பள்ளி மேவாது கழிந்து-இவ்விளவேனிற் காலத்திற் கமைந்த நிலா முற்றத்தில் மேவாது கழிந்து, கூதிர்ப் பள்ளி -கூதிர்க்காலத்திற் கமைந்த இடைநிலத்திலே, குறுங்கண் அடைத்து-தென்றலும் நிலவும் புகாமற் குறிய சாளரக்கண்களை யடைத்து, மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும் அலர் முலை ஆகத்து அடையாது வருந்த-பொதியிலில் உண்டாகிய சந்தனமும் அழகிய முத்தின் கோவையும் பரந்த முலையினையுடைய மாபில் அடையப் பெறாது வருந்தவும், தாழிக்குவளையொடு தண்செங்கழுநீர் வீழ், பூஞ்சேக்கை மேவாது கழிய - தாழியில் மலர்ந்த குவளையும் செங்கழுநீரும் முதலிய குளிர்ந்த மலர்கள் தாம் விரும்பிய பூஞ்சேக்கையில் மேவப்பெறாது வருந்தவும்,துணை புணர் அன்னத் ,தூயிற் செறித்த இணை அணைதூ மேம்படத் திருந்து துயில்பெறா அது-தன் சேவலொடு புணர்ந்த அன்னப்பேடை அப்புணர்ச்சியான் உருகி யுதிர்த்த வயிற்றின் மயிரைத் திணித்த இணைத்தல் பொருந்திய அணையின் மீதே திருந்திய துயிலைப் பெறாமல், உடைப்பெருங்கொழுநரோடு ஊடற் காலத்து-தம்மையுடைய கணவரோடு முன்பு ஊடிய காலத்து, இடைக்குமிழ் எறிந்து-இடைநின்ற குமிழினை யெறிந்து, கடைக்குழை ஓட்டி-கடை நின்ற குழையைத் துறந்து, கலங்கா உள்ளங் கலங்கக் கடை சிவந்து-அவரது கலங்காத நெஞ்சமும் கலங்கும்படி கடை சிவந்து, விலங்கி நிமிர் நெடுங்கண்-குறுக்கிட்டுப் பிறழும் நெடிய கண்கள், புலம்பு முத்து உறைப்ப-தனிமையாலே கண்ணீர்த் துளியைச் சிந்த,
கண்ணகியும் ஏனைக் காதலர்ப் பிரிந்த மாதரு மென்க. குருகு-துருத்தி; ஊதுலைக் குருகு என்றது வெளிப்படை. முத்தாகிய ஆரமும் எனலுமாம். ஆகத்து முலையென மாறினும் அமையும். தாழியுள்ளே குவளையை வைத்து வளர்ப்பர்; "தாழியுண் மலர்ந்த தண்செங்குவளை" என்பது காண்க. வீழ்தல்-விரும்புதல் மேவாது-பள்ளித் தாமமாய் மேவப் பெறாமல் என்றுமாம். கழிய-வருந்த வென்னும் பொருட்டு. தூவி-அடிவயிற்றின்,மயிர். இணையணை-இணைதலையுடைய பலவாகிய அணை;
" இணைபட நிவந்த நீலமென் சேக்கையுட்
டுணைபுண ரன்னத்தின் றூவிமெல் வணையசைஇ"
என்றார் பிறரும் திருந்து துயில் – கணவர் மார்பிலே துயிலும் களித்துயில். கலங்காவுள்ளம் என்றார், "பெருமையும் உரனும் ஆடூஉ மேன" என்பவாகலின். புலம்பு முத்துறைப்ப – உவகைக் கண்ணீர் சிந்தாது துன்பக் கண்ணீர் சிந்த என்றுமாம். குமிழும் பூவும் முத்தும் மூக்கிற்கும் நீர்த்துளிக்கும் உவமை. உறைப்ப-உகுப்ப.
-
௭௨-௭௬. அன்னம் மெல்நடை நன்னீர்ப் பொய்கை
ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரைத்
தாமரைச் செவ்வாய்த் தண்அறல் கூந்தல்
பாண்வாய் வண்டு நோதிறம் பாடக்
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்பப்
அன்னம் மெல்நடை-அன்னமாகிய மென்மையுடைய நடையினையும், ஆம்பல் நாறும்-ஆம்பலின் மணம் நாறும். தேம் பொதி நறுவிரைத் தாமரைச் செவ்வாய்-தேன்மிக்க நறுமணத்தையுடைய தாமரையாகிய சிவந்த வாயினையும், தண் அறற்கூந்தல்-தண்ணிய அறலாகிய கூந்தலினையும் உடைய, நன்னீர்ப் பெய்கை-நல்ல நீரையுடைய பொய்கையாகிய மடவாள், பாண் வாய் வண்டு நோதிறம்பாட-பாண்டன்மையைத் தம்மிடத்தேயுடைய வண்டுகளாகிய பள்ளியுணர்த்துவார் புறநீர்மை யென்னும் பண்ணாற் பள்ளி யெழுச்சி பாட, காண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப-அழகு பொருந்திய குவளையாகிய கண்மலர் விழிப்ப,
ஆம்பல் நாறும் செவ்வாய் என இயையும். நடையினையும் வாயினையும் கூந்தலினையுமுடைய பொய்கையாகிய பெண் கண் விழிப்ப வென்க. பாண்-பாண் சாதி. நோதிறம்-புறநீர்மை எனவும் பெயர்பெறும். அது பாலைப்பண்ணின் திறம் ஐந்தனுள் ஒன்றழித; என்னை?
"தக்கராக நோதிறங் காந்தார பஞசமமே
துக்கங் கழிசோம ராகமே-மிக்கதிறற்
காந்தார மென்றைந்தும் பாலைத் திறமென்றார்
பூந்தா ரகத்தியனார் போந்து"
என்பவாகலின் நோதிறம் என்னின் அது முல்லைப்பண்ணின் திறங்களிலொன்றாம் பாட, காரணப்பொருட்டு; உடனிகழ்ச்சியுமாம். இனி, ஆம்பல் என்னும் பண் தோற்றும் வாய் என்றும். பாட்டினையுடைய வாயையுடைய வண்டு என்றும் Üறுதலுமாம். தேம்-இனிமை. தேன்-குவளைக் கண்மலர்-குவளையாகிய கள்ளையுடைய மலர், குவளையாகிய கண்மலர். விழிப்ப-மலர, கண்விழிக்க. இஃது உருவக வணி.
-
௭௭-௮௪. புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வாய்ச் சங்கம் முறைமுறை ஆர்ப்ப
உரவுநீர்ப் பரப்பின் ஊர்த்துயில் எடுப்பி
இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும்
அரைஇருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி
மகர வெல்கொடி மைந்தன் திரிதர
நகரம் காவல் நனிசிறந் ததுஎன்.
புள்வாய் முரசமொடு-பறவைகளின் ஒலியாகிய முரசுடனே, பொறி மயிர் வாரணத்து-புள்ளிகள் பொருந்திய சிறகினையுடைய கோழிச்சேவலும், முள்வாய்ச் சங்கம்-கூர்ந்த வாயையுடைய சங்கமும், முறைமுறை ஆர்ப்ப-தத்தம் முறைமைக்கேற்ப ஒலிக்கவும், உரவுநீர்ப் பரப்பின் ஊர் துயில் எடுப்பி-கடல்போலும் பரப்பையும் ஒலியையுமுடைய ஊரைத் துயிலெழுப்பி, இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும்-இருள் நீங்குதலுறும் வைகறையளவும், அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான்-இருள் மிக்க நள்ளிரவிலும் ஒரு மாத்திரைப் பொழுதும் துயிலானாய், விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி-மணம் பொருந்திய மலராகிய அம்பையும் கரும்பாகிய வில்லையும் ஏந்தி, மகர வெல் கொடி மைந்தன் திரிதர-மகரமாகிய வெற்றிக்கொடியையுடைய காமதேவன் திரிந்து கொண்டிருத்தலால், நகரம் காவல் நனி சிறந்தது என்-நகரம் மிகவும் காவல் சிறந்ததென்க.
புள்வாய்-வாய் என்பது ஒலிக்காயிற்று. வாரணத்து என்பதில் அத்து சாரியை தவிர்வழி வந்தது. உரவு நீர்ப்பரப்பு-கடல்; இன், உவமப்பொருட்டு. ஊர், ஆகுபெயர். எடுப்பி-எழுப்பி; "சூதரேத்திய துயிலெடை நிலையும்" என்பது கான்க. இரவுத்தலைப் பெயரும் எனத் தகர ஒற்று மிக்கது விகாரம். தலைப்பெயர்தல், ஒரு சொல்; அவ்விடத்தினின்றும் நீங்கும் என்றுமாம். இருளையுடைய அரையாமம் என இயைக்க. அடியார்க்கு நல்லார் அரையிருளும் யாமமும் என விரித்து, ‘அரையிருள் – இரண்டாம் யாமம்; யாமம்- ஓர் யாமம்; பகல்-அரை யாமம்’ என்பர். பொருந்துமேற்கொள்க. பகல்-ஒரு மாத்திரைப் பொழுதென்க. "கைச்சிலை கணையொடேந்திக் காமனிக் கடையைக் காப்பான்." என்றார் திருத் தக்கதேவரும். துஞ்சார் என்றுப் பாடமோதித் துஞ்சாராம்படி என்றுரைப்பர் அடியார்க்கு நல்லார். என் – அசை.
மாதவியும் கண்ணாரும் களிதுயிலெய்தவும், கண்ணகியும் பிரிந்த மாதரும் துயில் பெறாது கண் முத்துறைப்பவும், பாட, விழிப்ப, ஆர்ப்ப, வைகறைகாறும் யாமத்தும் பகலும் துஞ்சானாகி மைந்தன் ஏந்தித் திரிதலால், நகரங்காவல் சிறந்ததென்க. இஃது எல்லாவடியும் அளவடியாகி முடிந்தமையின், நிலைமண்டில ஆசிரியப்பா.
இறுதி வெண்பா
-
கூடினார் பால்நிழலாய்க் கூடார்ப்பால் வெய்தாய்க்
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான்ஊர் மதிவிரிந்து
போதுஅவிழ்க்கும் கங்குல் பொழுது.
கூடினார்பால் நிழலாய்-நட்பாய்ச் சேர்ந்தவர்பால் நிழலாகியும், கூடார்பால் வெய்யதாய்-பகையாச் சேராதவர்பால் வெய்யதாகியுமுள்ள, காவலன் வெண்குடைபோல்-சோழ மன்னனுடைய வெண்கொற்றக் குடையைப் போல், போது அவிழ்கும் கங்குற்பொழுது-பூக்கள் இதழ்களை விரிக்கும் இராப்பொழுதில், வான் ஊர்மதி விரிந்து-வானிலே ஒளி விரிந்து செல்லும் திங்கள், கூடிய மாதவிக்கும் கண்ணகிக்கும்-கோவலனைக் கூடிய மாதவிக்கும் அவனைப் பிரிந்த கண்ணகிக்கும், காட்டிற்று-முறையோ தண்ணிதாயும் வெவ்விதாயும் தன்னைக் காட்டிற்று.
உவமைக்கண், கூடினார், கூடார் என்பன முறையே நண்பர், பகைவர் என்னும் பொருளன. கூடிய மாதவி யென்றமையால், பிரிந்த கண்ணகி யென்பது பெற்றாம். ஏ: அசை.
அந்திமாலைச் சிறப்புச்செய் காதை முற்றிற்று.
---------------------------
5. இந்திர விழவூரெடுத்த காதை.
(உலகை மூடிய இருள் அகன்றிட ஞாயிறு தோன்றிக் கதிர்களைப் பரப்பியது; அன்று சித்திரைத் திங்களில் சித்திரையும் நிறைமதியும் கூடிய நாளாக விருந்தது. புகார் நகரிலுள்ளார் இந்திவிழாச் செய்யத் தொடங்கினர். மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இரு பகுதியையுடையது புகார் நகரம். மருவூர்பாக்கத்திற் கடற்கரையை யொட்டிக் கண்ணைக் கவரும் அழகுடைய யவனர் இருப்பிடங்களும், மற்றும் வாணிகத்தின் பொருட்டுப் பல நாடுகளிலிருந்தும் வந்தோர் கலந்துறையும் இருப்பிடங்களும் விளங்குவன. வண்ணம், சுண்ணம், சாந்தம், பூ, முதலியன விற்போர் திரியும் நகரவீதியும், பட்டுச் சாலியர் இருககு மிடங்களும், நவமணிகளும் பொன்னும் பொற்பணிகளும் விற்கும் மறுகுகளும், கூலக்கடைத் தெருவும், வெண்கலக் கன்னார், செம்பு கொட்டிகள், தச்சர், கொல்லர், தட்டார் முதலியவர்களும், குழலினும் யாழினும் ஏழிசைகளையும் வழுவின்றிசைக்கும் பாணர்களும், ஏனோரும் உறையுமிடங்களும் ஆண்டுள்ளன. பட்டினப்பாக்கத்தில் அரசவீதியும், கொடித்தேர் வீதியும், பீடிகைத் தெருவும், வாணிகர் மறுகும், மறையோர் இருக்கையும், வேளாளர் வீதியும், மற்றும் மருத்துவர் சோதிடர் சூதர், மாகதர், கூத்தர், நாழிகைக்கணக்கர், கணிகையர் முதலாயினார் இருக்கைகளும், யானைதேர் குதிரைகளைச் செலுத்துவோரும், கடுங்கண் மறவரும் புறஞ்சூழ்ந்திருக்கும் இருக்கைகளும் திகழ்வன. அவ்விரு பாக்கங்கட்கும் இடையே சோலைகளின் மரங்களே கால்களாகக் கட்டப்பட்ட நாளங்காடி யென்னும் கடைத்தெரு உளது.
அதன்கண் உள்ள நாளங்காடிப் பூதத்திற்கு மறக்குடிப் பெண்டிர் பூவும் பொங்கலும் முதலியன சொரிந்து குரவையாடி அரசனை வாழ்த்திச் செல்கின்றனர். பின்னர், மருவூர் மருங்கின் மறங்கெழு வீரரும், பட்டி மருங்கிற் படைகெழு மாக்கலும் முந்தச் சென்று ‘வேநதன் கொற்றங் கொள்க’ எனக்கூறி, முரசு முழங்க உயிர்ப்பலி யூட்டுகின்றனர். அதன்பின் திருமாவளவன் முன்பு வடதிசைச் சென்று இமயத்தின் சிமையத்தில் பொறித்து மீண்ட காலே, வடநாட்டரசர்கள்பாற் பெற்றுக் கொணர்ந்த முத்துப்பநதர், பட்டிமண்டபம், தோரணவாயில் என்பன. ஒருங்குடன் கூடிய அரும்பெறல் மண்டபத்திலும், பலதிறப்பட்ட வியத்தகு செய்கைகளை யுடையனவாகிய வெள்ளிடைமன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல்மன்றம், பூதசதுக்கம், பாவை மன்றம் என்னும் ஐவகை மன்றங்களிலும் பலிகள் கொடுக்கப்படுகின்றன. பின்பு, வச்சிரக்கோட்டத்திருந்த முரசை வெள்யானைக் கோட்டத்திற் கொணர்ந்து யானையின் பிடரில் ஏற்றி விழாவின் முதலும் முடிவும் திரிவித்து, தருநிலைக் கோட்த்திலுள்ள கொடியைய நிமிர்த்துகின்றனர். நகரவீதிகளெல்லாம் பூரண கும்பம், பொற்பாலிகை, பாவை விளக்கு முதலியவற்றால் அணி செய்யப்படுகின்றன. ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் அரச குமரரும் பரத குமரரும் களிறு தேர் புரவிகளை ஊர்ந்துவந்து திரண்டு அரசனை வாழ்த்தி, காவிரியின் புண்ணிய நன்னீரைப் பொற்குடங்களிற் கொணர்ந்து இந்திரனை நீராட்டுகின்றனர். பின்னர்ப் ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ ஆகிய சிவ பிரான் முதலாகவுள்ள எல்லாத் தேவர்களின் கோயில்களிலும் ஓமம் முதலியன செய்யப்படுகின்றன. அறவோர் பள்ளிமுதலிய இடங்களிற் பெரியோர்கள் அறநெறிச் சொற்பொழிவுகள் செய்கின்றனர். யாழ்ப்புலவர், பாடற்பாணர் முதலாயினாரது இசை ஒரு பக்கம் சிறந்து திகழ்கின்றது. இவ்வாறாக இந்திர விழாவின் களிப்புமிக்க நகரவீதியில் விழாவினிடையே, மாதவியுடன் கூடிக் களிப்புறும் கோவலன் போலப் பரத்தையரைப் பலபடப் பாராட்டிக் கூடி, அவர் பூசிய சாந்து முதலியனதம் மெய் முழுதும் பொருந்தவந்த கொழுநரை நோக்கி அவர்தம் கற்புடை மனைவியர் கடைக்கண் சிவப்புறலால், கணவர்கள் விருந்தொடு புகுந்து அச்சிவப்பினை மாற்றிக் கூடுகின்றனர். அக்காலத்தே கண்ணகியின் கருங்கண்ணும் மாதவியின் செங்கண்ணும் நீரினை உகுத்து முறையே இடத்தினும் வலத்தினும் துடித்தன.
-
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதைஇருள் படாஅம் போக நீக்கி
உடைய மால்வரை உச்சித் தோன்றி 5
உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி,
வேயா மாடமும், வியன்கல இருக்கையும்,
மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும், 10
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும், 15
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா 20
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்,
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர் 25
பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்,
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும் 30
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் 35
வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்,
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்,
கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும், 40
பீடிகைத் தெருவும், பெருங்குடி வாணிகர்
மாட மறுகும், மறையோர் இருக்கையும்,
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும், 45
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்,
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர் 50
பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர் 55
இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்,
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்,
இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய 60
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்
சித்திரைச் சித்திரத் திங்கள் சேர்ந்தென
வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க எனத் 65
தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடிப் 70
பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும்
மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர, 75
மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவெனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக் 80
கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல்
பல்வேல் பரப்பினர் மெய்உறத் தீண்டி
ஆர்த்துக் களம்கொண்டோர் ஆர்அமர் அழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுனோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென 85
நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி,
இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன் 90
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம்
மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்எனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்
அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப் 95
பகைவிலக் கியதுஇப் பயம்கெழு மலைஎன
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு,
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும் 100
மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்,
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் 105
நுண்வினைக் கம்மியர் காணா மரபின,
துயர்நீங்கு சிறப்பின்அவர் தொல்லோர் உதவிக்கு
மயன்விதித்துக் கொடுத்த மரபின, இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்துஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்
அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும், 110
வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக் 115
கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்,
கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்
பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று 120
வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்,
வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்
அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்
கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர் 125
சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்,
தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர் 130
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்,
அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து 135
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்
பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்,
மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ, 140
வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,
வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்துக்
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து 145
மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து,
மரகத மணியொடு வயிரம் குயிற்றிப்
பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை
நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்
கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து 150
மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
தோரணம் நிலைஇய தோம்அறு பசும்பொன்
பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை
பாவை விளக்குப் பசும்பொன் படாகை
தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து 155
மேவிய கொள்கை வீதியில் செறிந்துஆங்கு,
ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர்ப்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர்
இவர்ப்பரித் தேரினர் இயைந்துஒருங்கு ஈண்டி 160
அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்
உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென
மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட
தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப் 165
புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி,
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் 170
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால், 175
நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்
பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால்,
அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும் 180
திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால்,
கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்,
கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்
பண்யாழ்ப் புலவர் பாடல் பாணரொடு 185
எண்அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால்,
முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண்
காதல் கொழுநனைப் பிரிந்துஅலர் எய்தா
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு 190
இல்வளர் முல்லை மல்லிகை மயிலை
தாழிக் குவளை சூழ்செங் கழுநீர்
பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து
காமக் களிமகிழ்வு எய்திக் காமர்
பூம்பொதி நறுவிரைப் பொழில்ஆட்டு அமர்ந்து 195
நாள்மகிழ் இருக்கை நாள்அங் காடியில்
பூமலி கானத்துப் புதுமணம் புக்குப்
புகையும் சாந்தும் புலராது சிறந்து
நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துக்
குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு 200
திரிதரு மரபின் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகில்,
கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்துஆங்கு
இருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதி 205
அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித்
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்.
நீர்வாய் திங்கள் நீள்நிலத்து அமுதின்
சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி
மீன்ஏற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த 210
வான வல்லி வருதலும் உண்டுகொல்.
இருநில மன்னற்குப் பெருவளம் காட்டத்
திருமகள் புகுந்ததுஇச் செழும்பதி ஆம்என
எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்
கருநெடுங் குவளையும் குமிழும் பூத்துஆங்கு 215
உள்வரி கோலத்து உறுதுணை தேடிக்
கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்.
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப்
பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது 220
நாண்உடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப்
பண்மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றிப்
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுஎன,
உருவி லாளன் ஒருபெருஞ் சேனை
இகல்அமர் ஆட்டி எதிர்நின்று விலக்கிஅவர் 225
எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ
விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு
உடன்உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப் 230
போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும்
மருந்தும் தரும்கொல்இம் மாநில வரைப்புஎனக்
கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்
உள்அகம் நறுந்தாது உறைப்பமீது அழிந்து 235
கள்உக நடுங்கும் கழுநீர் போலக்
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன். 240
---------------
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
-
௧-௬. அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதைஇருள் படாஅம் போக நீக்கி
உடைய மால்வரை உச்சித் தோன்றி
உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி
அலைநீர் ஆடை-கடலாகிய ஆடையினையும், மலை முலை-மலையாகிய முலையினையும், ஆகத்து ஆரப்பேர் யாற்று-அம்முலையையுடைய மார்பினிடத்துப் பெரிய யாறாகிய முத்து வடத்தினையும், மாரிக் கூந்தல்-மேகமாகிய கூந்தலினையும் உடைய, கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை-இடமகன்ற பரப்பினையுடைய நிலமகளின், புதைஇருட் படாஅம் போக நீக்கி-உடம்பை மறைத்த இருளாகிய போர்வையைப் போகுமாறு நீக்கி, உதயமால்வரை உச்சித் தோன்றி-பெரிதாகிய உதயகிரியின் உச்சியிலே உதித்து, உலகு விளங்கு அவிர் ஒளி-உலகம் விளங்குதற்குக் காரணமாகிய ஆதித்தன், மலர்கதிர் பரப்பி-விரிந்த கிரணங்களைப் பரப்ப;
பேரியாற்று ஆரம் என மாறுக. விளங்கு என்பது ஏதுப்பெயர் கொண்டது. அவிர் ஒளி-விளங்கும் ஒளி, ஆதித்தன். பரப்பி என்பதனைப் பரப்பவெனத் திரிக்க. அரசு கெடுத் தலம்வரும் மண்மடந்தை போர்த்த இருளாகிய படாத்தைத் தன் கதிர்க்கைகளால் நீக்கி என மேல் இற்காதையுடன் தொடர்பு படுத்துரைக்க.
"மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை, அணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச், செல்புனலுழந்த சேய்வரற் கான்யாற்று"என்றார் பிறரும்.
(அடி: மலை-பொதியிலும், இமயமும்; இவற்றைச் சாதியொருமையாற் கூறினார். ‘பொதியிலு மிமயமும் புணர்முலையாக’) என்றார் கதையினும். புதைத்தல்-போர்த்தல் ; மலைநாட்டு வழக்கு. வாளாது மண்ணக
மடந்தையென்னாது கண்ணகன் பரப்பின் மண்ணகமடந்தையென்று மிகுத்துக் கூறினார். அத்தன்மையாளைப் போர்த்த நீலப் படாத்தைத் தன்றேசினால் நீக்கிய ஒளியெனற்கு; எனவே செம்பியன் மரபுயர்ச்சி கூறியவாறாயிற்று.)
-
௭- ௩௯. வேயா மாடமும், வியன்கல இருக்கையும்,
மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும்,
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்,
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்,
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்,
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்,
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்,
வேயா மாடமும்-நிலா முற்றமும், வியன்கல இருக்கையும்-பெரிய அணிகலம் பெய்த அறைகளும், மான்கண்-மானின் கண்போலக் கோணஞ் செய்த, கால் அதர்-காற்றியங்கும் நெறியாகிய சாளரங்களையுடைய, மாளிகை இடங்களும்-மாளிகைகளும், கயவாய் மருங்கில்-புகார்முகப் பக்கங்களில் காண்போர்த் தடுக்கும்- தம்மைக் காண்போர் கண்களை மேற்போகவிடாமற் றடுக்கும், பயன் அறவு அறியா-பயன் தொலைத லறயாத, யவனர் இருக்கையும்- சோனகர் இருப்பிடங்களும்; கலம் தரு திருவின்-மரக்கலந்தரும் செல்வப் பொருட்டால், புலம் பெயர் மாக்கள்-தாம் பிறநத நிலத்தைக் கைவிட்டுப் போந்த பரதேசத்தார் பலரும், கலந்து இருந்து உறையும்-ஒரு தேசத்தாரைப் போலக் கலந்து உறைந்திருக்கும், இலங்கு நீர் வரைப்பும்-விளங்குகின்ற அலைவாய்க்கரை யிருப்பும், வண்ணமும்-தொய்யிற் குழம்பும், சுண்ணமும்-பூசு சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்-குளிர்ந்த நறிய கலவைச் சந்தனமும், பூவும்-விடுபூத்தொடுத்த பூ முதலிய பூக்களும், புகையும்-புகைக்கு உறுப்பாகிய அகில் முதலியனவும், மேவிய விரையும்-பொருந்திய நறுமணப் பொருளாகிய சந்தனம் முதலியனவும், பகர்வனர் திரிதரும் நகரவீதியும்-விற்பவராய்த் திரியும் நகரத் தெருக்களும், பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்-பட்டு நூலானும் உரோமத்தானும் பருத்தி நூலானும், கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்-நுண்ணிய தொழில்களை ஊசியாற் பிணிக்கும் பட்டுச்சாலியர் இருக்குமிடங்களும், தூசும் துகிரும் ஆரமும் அகிலும்-பட்டும் பவளமும் சந்தனமும் அகிலும், மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்-குற்றமற்ற முத்தும் ஒழிந்த மணிகளும் பொன்னும் ஆகிய இவைகள், அளந்து கடை அறியா-இவ்வளவினவென அளந்து முடிவறியப்படாத, வளம் தலைமயங்கிய நனந்தலை மறுகும்-பல வளங்களும் தலை மயங்கிய அகன்ற இடத்தையுடைய மறுகும், பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு-பகுதி வேறுபாடு தெரிந்த முதிரை முதலிய பண்டத்தோடு, கூலம் குவித்த கூல வீதியும்-எண்வகைக் கூலமும் குவித்து விற்கும் கூலக் கடைத்தெருவும், காழியர்-பிட்டு வாணிகரும், கூவியர்-அப்பம் சுடுவாரும், கள் நொடையாட்டியர்-கள்விற்கும் வலைச்சியரும், மீன் விலைப் பரதவர்-மீன் விற்கும் பரதவரும், வெள் உப்புப் பகருநர்-வெள்ளிய உப்பு விற்கும் உமணரும், பாசவர்-வெற்றிலை விற்பாரும், வாசவர்-பஞ்சவாசம் விற்பாரும், பல்நிண விலைஞரோடு-பல்வகை ஆட்டின் தசைகளை விற்பாருடன், ஓசுநர்-எண்ணெய் வாணிகரும், செறிந்த-நெருங்கியிருக்கும், ஊன்மலி இருக்கையும்-ஊன் நிறைந்த இருப்பிடங்களும், கஞ்சகாரரும்-வெண்கலக் கன்னாரும், செம்பு செய்குநரும்-செப்புப் பாத்திரம் செய்வாரும், மரம் கொல் தச்சரும்- மரத்தை அறுத்துத் தொழில் செய்யும் தச்சரும், கருங்கைக் கொல்லரும்- வலிய கையையுடைய கொல்லரும், கண்ணுள் வினைஞரும்-சித்திரகாரிகளும், மண் ஈட்டு ஆளரும்-சுதையாற் பாவையுள்ளிட்டன செய்வாரும், பொன்செய் கொல்லரும்-பொற்பணி செய்யும் உருக்குத் தட்டாரும், நன்கலம் தருநரும்-இரத்தினப்பணித் தட்டாரும், துன்னகாரரும்-தையற்காரரும், தோலின் துன்னரும்-தோலின் தையல் வேலை செய்யும் செம்மாரும், கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி-துணியாலும் நெட்டியாலும் பலவகை உருக்கள் செய்யும் தொழில்களை மிகுத்துக்காட்டி, பழுது இல் செய்வினைப் பால்கெழுமாக்களும்-குற்றமற்ற கைத்தொழிலால் வேறுபட்ட இயல்புடையாரும், குழலினும் யாழினும்-வங்கியத்தாலும் யாழாலும், குரல் முதல் ஏழும் வழுவின்றி இசைத்து-குரல் முதலாய ஏழிசையினையும் குற்றமின்றாக அமைத்து, வழித்திறம் காட்டும்-பண்களையும் அவற்றின் வழிப்பிறக்கும் திறங்களையும் பாடவல்ல, அரும்பெறல் மரபின்-பெறற்கரிய இசைமரபினை யறிந்த, பெரும்பாண்-பெரும்பாணர்கள், இருக்கையும்-இருக்குமிடங்களும், சிறுகுறுங் கைவினைப் பிறர் வினையாளரொடு-மற்றும் சிறிய கைத்தொழில் செய்வாரும் பிறர் குற்றேவல் செய்வாரும் உறையும் இடங்களும், மறுஇன்றி விளங்கும் மருவூர்ப்பாக்கமும்-குற்றமின்றி விளங்கும் மருவூர்ப்பாக்கமும்;
௭-௰. வேயாமாடம் முதலியன காண்போர்த் தடுக்கும் யவனரிருக்கை என்க. எகிப்து, கிரீசு முதலிய பிறநாடுகளிலிருநது வந்த வாணிகர், தொழிலாளர் முதலாயினோர் யவனர் எனப்படுவர் ; இன்னோரைச் சோனகர் என்றும் மிலேச்சர் என்றும் கூறுவர் தொல்லுரையாளர்கள்.
௧௪. புகைக் குறுப்பாவன இவை யென்பதனை,"அஞ்சனக் கட்டியரியாசம் பச்சிலை, ஆர மகிலுருப்போ ரைந்து " என்பதனாலும், விரை இவையென்பதனை, "கொட்டந் துருக்கந் தகர மகிலாரம், ஒட்டிய வைந்தும் விரை" என்பதனாலும் அறிக.
௧௬. மயிர் எலி மயிர் என்பர் அடியாக்கு நல்லார். திருத்தக்க தேவரும் பலவிடத்து ‘எலிமயிர்ப் போர்வை’ குறித்திருப்பதுடன் ; "செந்நெருப்புணுஞ் செவ்வெலிம்மயிர், அந்நெருப்பள வாய்கொற் கம்பலம்" என அவ்வெலியினியல்பினையும், கம்பலத்தி னியல்பினையும் கூறியுள்ளார். இஃது ஆராய்தற்குரித்து.
௧௭. காருகர் – நெய்வோர் என்றுமாம்.
௨௩. எண்வகைக் கூலமாவன : "நெல்லுப் புல்லு வரகு தினை சாமை, இறுங்கு தோரையொடு கழைவிளை நெல்லே"என இவை. கூலம் பதினெண்வகைத் தென்பர் கூத்த நூலாசிரியர். கூலம், கருஞ்சரக்கு என்பது அரும்பதவுரை.
உ௪. காழியர்-பிட்டு வாணிகர். கூவியர்-அப்ப வாணிகர்: கடலாடு காதையுள், "காழியர் மோதகத் தூழுறு விளக்கமும், கூவியர் காரகற் குடக்கால் விளக்கமும்" எனக் கூறுதல் காண்க.காழியர்-வண்ணார் என்பாருமுளர். நொடை-விலை.
உரு. உப்புப்பகருநர் – உமனரும் உமட்டியரும்; அளவருமாம்
௨௬. பாசவர்-கயிறு திரித்து விற்பாருமாம். பஞ்சவாசமாவன : "தக்கோலந் தீம்புத் தகைசா லிலவங்கம், கப்பூரஞ் சாதியோ டைந்து "எனவிவை.
௨௯. கருங்கை-வலிய கை ; வன்பணித் தொழிலாற் கன்றிய கை.
௩0. மண்ணீட்டாளர்-சிற்பிகள் என்றும், குயவர் என்றும் கூறலுமாம்.
௩௩. கிழியாற் படிமை, படம் முதலியனவும், கிடையால் விலங்கு, பறவை, பூ, பூங்கொத்து முதலியனும் அமைப்போர் என்க.
௩எ-அ. பெரும்பாண்-பாணரில் ஒரு பிரிவிணர்; பெரிய இசைக்காருமென்பாருமுளர். பிறர் வினையாளரொடு பெரும் பாணருமென்க.
யவனரிருக்கையும், இலங்குநீர், வரைப்பும், நகரவீதியும், காருகரிருக்கையும், நனந்தலை மறுகும், கூலவீதியும், காழியர் முதல் ஓசுநர் ஈறாகச் செறிந்த இருக்கையும், கஞ்சகாரர் முதலாகப் பெரும்பாணர் ஈறாக இருக்குமிடங்களும் விளங்கும் மருவூர்ப்பாக்கம் என்க.
-
௪0-௫௮. கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும்,
பீடிகைத் தெருவும், பெருங்குடி வாணிகர்
மாட மறுகும், மறையோர் இருக்கையும்,
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்,
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்
இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்,
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்,
கோவியன் வீதியும்-பெரிய இராச வீதியும், கொடித்தேர் வீதியும்-கொடியணிந்த தேரோடும் வீதியும், பீடிகைத் தெருவும்-கடைத்தெருவும், பெருங்குடி வாணிகர்-பெரிய குடிப்பிறப்பையுடைய வாணிகரது, மாட மறுகும்-மாடங்களையுடைய தெருவும், மறையோர் இருக்கையும்-வேதியர் இருக்குமிடங்களும், வீழ்குடி உழவரொடு-யாவரும் விரும்புங் குடியினராகிய உழவரோடும், விளங்கிய கொள்கை ஆயுள்வேதரும்-சிறந்த கொள்கையுடைய மருத்துவ நூலோரும், காலக் கணிதரும்-சோதிடரும், பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்-வேற்றுமை தெரிந்த பல முறைமையோடிருக்கும் இருப்பிடங்களும், திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு அணிவளை போழுநர் அகன் பெரு வீதியும்-வேகடி வேலை செய்வாரு்ம் சிறந்த கொள்கையோடு அணியப்படும் வளையை அறுத்தியற் றுவாரும் வாழும் அகன்ற பெரிய வீதியும், சூதர் மாகதர் வேதாளிகளொடு-நின்றேத்துஞ் சூதர் விருந்தேத்தும் மாகதர் வைதாளியாடுவார் என்று சொல்லப்பட்ட இவரோடே, நாழிகைக் கணக்கர்-கடிகையாரும், நலம்பெறு கண்ணுளர்-கோலத்தானும் கூத்தானும் அழகுபெறும் சாந்திக் கூத்தரும், காவற் கணிகையர்-காமக்கிழத்தியராகும் பரத்தையரும், ஆடற் கூத்தியர்-அகக் கூத்தாடும் பதியிலாரும், பூவிலை மடந்தையர்-அற்றைப் பரிசம் கொள்வாரும், ஏவற் சிலதியர்-ஏவற்றொழில் செய்து உள்வீடு காப்பவரும், பயில் தொழிற் குயிலுவர்-தமக்குரிய தொழிலிற் பயின்ற குயிலுவக் கருவியாளரும், பன்முறைக் கருவியர்-படைக்கும் விழவுக்கும் கொட்டும் பல முறையான வாச்சியக்காரரும், நகை வேழம்பரொடு-விதூடகருடன் இருக்கும், வகைதெரி இருக்கையும்-இனத்தின் வகைதெரிந்த இருப்பிடங்களும், கடும்பரி கடவுநர்-விரைந்த செலவினையுடைய புரவிகளைச் செலுத்துவாரும், களிற்றின் பாகர்-யானைப் பாகரும், நெடுந்தேர் ஊருநர்-நெடிய தேரினைச் செலுத்தும் தேர்ப்பாகரும், கடுங்கண் மறவர்-தறுகண்மையையுடைய காலாட்படைத்தலைவரும், இருந்து புறம்சுற்றிய பெரும்பாய் இருக்கையும்-அரசன் கோயிலைப் புறத்தே சூழ்ந்திருக்கும் பெரிய பரந்த இருப்புக்களும் என்னும் இவற்றையுடைய, பீடுகெழு சிறப்பிற் பெரியோர் மல்கிய-பெருமை பொருந்திய சிறப்பினையுடைய பெரியோர் நிறைந்த, பாடல் சால் சிறப்பிற் பட்டினப்பாக்கமும்-பாடலமைந்த சிறப்பினையுடைய பட்டினப்பாக்கமும்;
௪௨. மறையோர்-பஞ்சக்கிராமிகள் என்பது பழையவுரை.
௪௩. வீழ்குடியோடும் உழவரோடும் எனக்கொண்டு, வீழ் குடியைக் காணியாளர் என்னலுமாம். வீழ்குடி-உழவை விரும்புங் குடியென்றுமாம்.
௪௬. திருமணி குயிற்றுநர்-முத்துக் கோப்பாருமாம்.
௪௬-௭. கொள்கையோடு அழகிய சங்கினை யறுப்பார் என்னினும் இழுக்கின்று.
௪௯. நாழிகைக் கணக்கர்-அரசனுக்குச் சென்ற நாழிகையை அறிந்து சொல்லுவார்; இதனை,
"பூமென் கணையும் பொருசிலையுங் கைக்கொண்டு
காமன் திரியுங் கருவூரா – யாமங்கள்
ஒன்றுபோ யொன்றுபோ யொன்றுபோய் நாழிகையும்
ஒன்றுபோ யொன்றுபோ யொன்று"
என்பதனாலறிக.
௫௧. பூவிலை-பூவிற்கு விலை ; பரிசம் என்க.
௫௨. குயிலுவர்- தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி உருக்குக் கருவியாளர்கள்.
வீதியும், வீதியும், தெருவும், மறுகும், இருக்கையும், இருக்கையும், வீதியும், இருக்கையும், இருக்கையும் என்னும் இவற்றையுடைய, மல்கிய சிறப்பினையுடைய பட்டினப்பாக்கம் என்க.
ஈண்டு ஐம்பத்திரண்டு அடிகளால் இளங்கோவடிகள் கூறியிருக்கும் புகார்நகரின் இயல்புகளோடு மணிமேகலையுள் நாற்பத்துமூன்று அடிகளால் சாத்தனார் கூறியிருக்கும் வஞ்சிநகரின் இயல்புகள் பெரும்பாலும் ஒத்திருத்தல் அறியற்பாலது.
-
௫௯-௬௩. இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்
இருபெரு வேந்தர் முனையிடம்போல-பெருவேந்தர் இருவர் போர் குறித்து வந்து தங்கிய பாசறையிருப்புக்கு இடைநிலமாகிய போர்க்களம்போல, இருபாற் பகுதியின் இடைநிலம் ஆகிய-இரண்டு பக்கத்தினவாகிய மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம் என்னும் இருபகுதிகட்கும் இடைநிலமாகிய கடைகால் யாத்த மிடைமரச்சோலை-நிரைபட
நெருங்கிய சோலைமரங்களின் அடிகளே தூணாகக் கட்டப்பட்ட கடைகளையுடைய, கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் நடுக்கின்றி நிலைஇய நாள் அங்காடியில்-பண்டங்களை விற்போர் ஓசையும் வாங்குவோர் ஓசையும் இடையறாது நிலைபெற்ற நாளங்காடியில் ;
௬0. இரண்டிடத்தார்க்கும் பொதுவாதலும் ஆரவாரமும் கருதி முனையிடத்தை உவமை கூறினார்.
௬௧. மிடை சோலை மரக்கால் யாத்த கடை எனச் சொற்களை மாறுக. சோலையுள்ளே கடைகளை ஒழுங்காகக் கட்டிய என்றுமாம். ௬௩. நாளங்காடி-காலைக் கடைத்தெரு, மாலைக் கடைத்தெரு, அல்லங்காடி யெனப்படும்.
-
௬௪. சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென அந்நாள்-சித்திரை மாதத்துச் சித்திரை நாளிலே நிறைமதி சேர்ந்ததாக அந்நாளிலே;சித்திரைத் திங்கள்-சித்திரை மாதம் என்றுமாம். சிறந்தெனப் பாடங்கொண்டு. ‘சித்திரை மாதத்துச் சித்திரைநாள் சிறந்ததென்கையால், சித்திராபூரணை யென்க’ என்பர் அரும்பபதவுரையாசிரியர். அந்நாளிலே அவிரொளி கதிர் பரப்பு என்றியைக்க.
-
௬௫-௭. வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க எனத்
தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்கென-வெற்றி பொருந்திய வேலையுடைய முசுகுந்தன் என்னும் வேந்தனுக்கு வரும் இடையூற்றை ஒழிப்பாயென, தேவர் கோமான் ஏவலின்-தேவர்க்கரசனாகிய இந்திரன் ஏவுதலானே, போந்த-அத்தேவருலகினின்றும் போந்து தங்கி அந்நாள் முதலாகப் பலி கொள்ளுதலையுடைய; காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை-காவலாகிய பூதத்தின் வாசலிற் பொருந்திய பலி பீடிகையில்; உற்றதை-உறுவதை. ஒழிக்கென, விகாரம். தேவர் கோமான் ஏவிய வரலாறு. மேல், ‘கடலாடு காதையில் விரித்துரைக்கப்படும். நாளங்காடியிற் போந்து தங்கிப் பலிகொள்ளும் பூதம் என்க. காவற் பூதம்-புகாருக்கும் அரசற்கும் காவலாகிய பூதம்.
-
௬௮ - எரு. புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடிப்
பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும்
மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர,
புழுக்கலும்-அவரை துவரை முதலிய முதிரைப் பண்டங்களை வேகவைத்த புழுக்கலையு்ம், நோலையும்- எள்ளுண்டையினையும், விழுக்கு உடை மடை-நிணத்துடன் கூடின சோற்றையும், பூவும்-பூவினையும், புகையும்-புகையினையும், பொங்கலும்-பொங்கற்சோற்றினையும், சொரிந்து-பெய்து, துணங்கையர் குரவையர்-துணங்கைக் கூத்தினராயும்குரவைக் கூத்தினராயும், அணங்கு எழுந்து ஆடி-தெய்வமேறிஆடி, பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்-எம் வேந்தனுடைய பெரிய நிலம் முழுவதும், பசியும் பிணியும் பகையும் நீங்கி-பசி பிணி பகையென்பன நீங்கி, வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி-மழையும் வளமும் சுரக்கவென வாழ்த்தி, மாதர்க்கோலத்து வலவையின் உரைக்கும் மூதிற் பெண்டிர்-வல்லமையால் உரைக்கும் அழகிய கோலத்தையுடைய மறக்குடிப்பெண்டிர், ஓதையிற் பெயர-ஆரவாரத்துடனே பலியிட்டுப்போன வளவிலே; பொஙகல்-கள்ளென்பாரு முளர். பூவைச் சிதறிப் புகையை யெடுத்துப் புழுக்கல் முதலியவற்றைப் படைத்து என ஏற்ற வினைகள் விரித்துக்கொள்க. துணங்கை-சிங்கிக் கூத்து ; "பழுப்புடை யிருகை முடக்கி யடிக்கத் தொடங்கிய நடையது நுணங்கை யாகும்" என்பதனால் துணங்கையின் இயல்பறிக. குரவை-கைகோத்தாடுதல். பெரு நில மன்னன் அவனிபன் என்றபடி. வசி-மழை; "வசித்தொழி லுதவ மாநிலங் கொழுப்ப"என்றார் பிறரும் வசீகரம் என்பது அரும்பதவுரை. சுரக்கென , அகரந்தொகுத்தல். வலவை என்பதற்கு நாணிலியெனப் பொருள் கொண்டு. நாணிலிகள் போல வாய் சோர்ந்துரைக்கு மியல்புடைய மூதிற் பெண்டிர் என்றலுமாம். மாதர்க்கோலம்-கண்டார்
காதலிக்கும் ஒப்பனை. உரைக்கும் கோலத்து மூதிற் பெண்டிர் சொறிந்து ஆடி வாழ்த்தி ஓதையிற் பெயர என்க.
-
௭௬-௮௮. மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவெனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக்
கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல்
பல்வேல் பரப்பினர் மெய்உறத் தீண்டி
ஆர்த்துக் களம்கொண்டோ ர் ஆர்அமர் அழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுனோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென
நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி,
மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும்-மருவூர்ப்பாக்கத்திலுள்ள மறத்தினைக் கொண்ட வீரரும், பட்டின மருங்கிற் படை கெழு மாக்களும்-பட்டினப் பாக்க்த்திலுள்ள படைக்கலமுடைய வீரரும், முந்தச் சென்று-முற்படச் சென்று, முழுப்பலி பீடிகை-பெரிய பலி பீடத்தில், வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கெனப் பலிக்கொடை புரிந்தோர்-வெவ்விய திறலையுடைய எம் அரசற்கு உறும் இடையூற்றை யொழித்து வெற்றி தருகவெனத் தம்மைப் பலியாகக் கொடுத்தவர், வலிக்கு வரம்பு ஆகென-வலிமைக்கு எல்லையாகக் கடவரென வஞ்சினங் கூறி, கல் உமிழ் கவணினர்-கல்லினை வீசுங் கவணினையுடையராய், கழிப்பிணிக் கறைத்தோல்-ஊன் பொருந்திய கரிய தோலால் இயற்றப்பட்ட பரிசையுடன், பல் வேல் பரப்பினர்-பல வேலின் மிகுதியையுடையராய், மெய் உறத் தீண்டி ஆர்த்து-தோள் தட்டி ஆரவாரஞ்செய்து, களம் கொண்டோர்-போர்க்களத்தைத் தமதாக்கிக் கொண்டோர், ஆர் அமர் அழுவத்து-அரிய அமர்க்களப் பரப்பிலே, சூர்த்து-அச்சத்தைச்செய்து, கடை சிவந்த சுடுநோக்கு-சுடுங் கொள்ளிபோலுங் கடை சிவந்த பார்வையையுடைய, கருந்தலை-தமது பசுந்தலையை, வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென்-வேந்தன் வெற்றி கொள்க வென்று, நற்பலி பீடிகை நலம்கொள வைத்து-நன்றாகிய பலிபீடத்திலே நன்மை பொருந்த வைத்து, ஆங்கு-அப்பொழுதே, உயிர்ப்பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசொடு-உயிர்ப்பலி யுண்ணும் இடியின் குரல் போலும் முழக்கத்தையுடைய மயிர் சீவாத தோலாற் போர்த்த வீரமுரசத்தால், வான் பலி ஊட்டி-உயிராகிய சிறந்த பலியை உண்பிக்க;
வீரரும் மாக்களுமாகிய களங்கொண்டோர் என்க. "வலிக்கு வரம்பாகென" என்பதற்கு வலிக்கு வரம்பாகக் கடவரென முசுகுந்த மன்னனுடைய குழுவும் ஆயத்தாரும் அக்காலத்தே நியமித்தலாலே என்பர் அடியார்க்கு நல்லார். மற்றும் அவர், ‘கருந்தலை.......கொற்றங்கொள்கென’ என்பதற்குப், பசுந்தலை வேந்தன் கொற்றங் கொள்கெனப் பேசும்படி என்றும், ‘நலங் கொள வைத்து’என்பதற்கு அரிந்த தலையிற் குலைந்த மயிரையுங் கோதி முடித்துக் கருதித் திலதத்தையும் நுதலிலே அணிந்து வைத்து என்றும், ‘முரசொடு வான்பலி யூட்டி’என்பதற்கு அக்குறையுடல்கள் தமக்கு வாயின்மையின் தத்தம் தோளிற் பூண்ட மயிர்க்கண் முரசின் வாயால் உயிர்க்கடன் தந்தோம் கொண்மினென்று நின்று பலியூட்டி என்றும் உரைப்பர். இவற்றிற்கு அவர் ஆதாரமாகக் கொண்டவை:
-
"அடிக்கழுத்தி னுடன்சிரத்தை யரிவ ராலோ
அரிந்தசிர மணங்கின்கதைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிங் கொற்றவையைத் துதிக்கு மாலோ
குறையுடலங் கும்பிட்டு நிற்குமாலோ
"மோடி முன்றலையை வைப்ப ரேமுடி குலைந்த குஞ்சியை முடிப்பரே;ஆடி நின்றுகுரு திப்பு துத்திலத மம்முகத்தினில மைப்பரே" என்பன.
கழி-ஊன். பிணி-பிணித்தல். கறை-கறுப்பு. உயிர்ப்பலி யுண்ணும் என்றது முரசிற்கு அடை
"மறியருந்தும் திண்பிணி முரசம்" என்றார் பிறரும். மயிர்க்கண் முரசு-புலியைப் பொருது கொன்று நின்று சிலைத்துக் கோட்டு மண்கொண்ட ஏறு இறந்துழி அதன் உரிவையை மயிர் சீவாமற் போர்த்த முரசு; என்னை?
"கொல்கேற்றுப் பசுந்தோல் சீவாது போர்த்த
மயிர்க்கண் முரச மோவில கறங்க"எனவும்,
"புனைமருப் பழுந்தக் குத்திபி புலியொடு பொருதுவென்ற
கனைகுர லுருமுச் சீற்றக் கதழ்விடை யுரிவை போர்த்த
துனைகுரன்முரசத் தானைத் தோன்றலைத் தம்மினென்றான்
தனைமயி ரலங்கற் கண்ணி நந்தனுந் தொழுது சேர்ந்தான்."
எனவும் கூறினாராகலின்.
ஊட்டி-ஊட்டவெனத் திரிக்க. இஃது அவிப்பலியின் பாற்படும்.
-
௮௯-௯௪. இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம்
மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்எனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்
இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅ-தமிழகத்திலே தன்னோடு எதிர்த்துப் பொரும் அரசரை மேற்கும் தெற்குமாகிய இரு திசையிலும் பெறாத, செருவெங் காதலிற் றிருமா வளவன்-கரிகாற் பெருவளத்தான் போரில் மிக்க விருப்பமுடைய னாதலின்(வடதிசையிலாயினும் பகை பெறலாமெனக் கருதி), வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து-வாள் குடை முரசு என்பவற்றை நல்ல நாளிலே புறப்படச் செய்து, நண்ணார்ப் பெறுக இம்மண்ணக மருங்கின் என் வலி கெழு தோள் என-என் வலி பொருந்திய தோள்கள் இத்திசையிலாயினும் பகைவரைப் பெறவேண்டு மென்றுதான் வழிபடு தெய்வத்தை மனத்தால் வணங்கி, புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்-அவ் வடதிசையிடத்தே சென்ற அந்நாளில்; இருநிலம்-இரு திசை; சேர பாண்டியர் தன் ஆணைக்கு அடங்கினர் என்றவாறாயிற்று. வெங் காதல்-மிக்க விருப்பம். நாளொடு பெயர்த்தல்-நாட்கோள்; வாணாட்கோள். குடைநாட்கோள், முரசுநாட்கோள் என்க. "நாட்கொள்ளலாவது நாளும் ஓரையும் தனக்கேற்பக் கொண்டு செல்வுழி அக்காலத்திற்கு ஓர் இடையூறு தோன்றியவழித் தனக்கு இன்றியமையாதனவற்றை அத் திசை நோக்கி அக்காலத்தே முன்னே செல்லவிடுதல்"என்பர் நச்சினார்க்கினியர். ஆசிரியர் தொல்காப்பியனார் "குடையும் வாளும் நாள்கோள்"என உழிஞைத்திணையுட் கூறியுள்ளார். வெண்பாமாலை யுடையார் வஞ்சித்திணைக்கும் உழிஞைத்திணைக்கும் இவ்விரு நாட்கோளும் கூறியுள்ளார். கரிகாலன் மேற்சென்றது வஞ்சியாகலின் இளங்கோவடிகள் பன்னிருபடலத்தையும் தழுவி இச்செய்யுளை இயற்றியுள்ளாரென்று கொள்ளுதல் வேண்டும். பன்னிரு படலக் கருத்தைத் தழுவியன பின்னரும் ஆண்டாண்டுக், காட்டப் பெறும். முரசு நாட்கோள் என்பது இனம்பற்றி அடிகள் தாமாக அமைத்துக்கொண்டது போலும். புண்ணியத்திசை-வடதிசைக் கொரு பெயர். முகம்-இடம்.
-
௯௫-௮. அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப்
பகைவிலக் கியதுஇப் பயம்கெழு மலைஎன
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு,
அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய-(இமயமலை குறுக்கிட்டு விலக்கிற்று ஆதலால்) மடிதல் இல்லாத மனவெழுச்சியாலே மேலுஞ் செல்ல விரும்பும் என் விருப்பம் பின்னிட்டு ஒழியும்படி, பகைவிலக்கியது இப்பயம் கெழு மலை என-இம்மலை பகையாகக் குறுக்கிட்டுத் தடுத்தது என முனிந்து, இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை-தேவர் உறையும் அதன் சிமையத்தி்ன் பிடரில்; கொடுவரி ஒற்றி-தனது புலியைப் பொறித்து, கொள்கையிற் பெயர்வோற்கு-அப்பாற் செல்லும் கொள்கையைக் கைவிட்டு மீள்கின்றவனுக்கு ; பயங்கெழு மலை-பயன் பொருந்திய மலையென மலையின் இயற்கை கூறியபடி. இமயமலையிற் றேவர் உறைவரென்பது புராணக்கொள்கை.கரிகாலன் இமயத்தைச் செண்டு என்னும் படைக்கலத்தால் அடித்துத் திரித்து மீள அதனைப் பண்டுபோல் நிறுத்திப் புலியைப் பொறித்தனன் என்றும், அச்செண்டு கச்சியிலுள்ள சாத்தன் என்னும் தெய்வத்தால் கரிகாலற்கு அளிக்கப்பட்டதாகும் என்றும் கூறப்படுதலுமுண்டு. இவற்றை முறையே. "செண்டு கொண்டுகரி காலனொரு காலி லிமையச் சிமைய மால்வரை திரித்தருளி மீள வதனைப், பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற் பாய்பு லிப்பொறி குறித்தது மறித்த பொழுதே" எனவும், "கச்சி வளைக்கைச்சி காமக்கோட்டங்காவல், மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன்-கைச்செண்டு, கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான், செம்பொற் கிரிதிரித்த செண்டு"எனறும் வருவனவற்றால் முறையே அறிக.
-
௯௯-௧00. மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மாநீர் வேலி வச்சிர நல்நாட்டுக் கோள்-கடலை அரணாகவுடைய நல்ல வச்சிரநாட்டரசன், இறை கொடுத்த கொற்றப்பந்தரும்-திறையாகக் கொடுத்த முத்தின் பந்தரும் வச்சிரநாடு சோணையாற்றங் கரையிலுள்ள தென்ப. கொற்றப் பந்தர்-அவன் றனக்குக் கொற்றத்தான் வந்த பந்தர். இவன், பகையும் நட்பு மில்லா அயலான்.
-
௧0௧-௨. மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்,
மகத நல்நாட்டு வாள்வாய் வேந்தன்-வாட்போரில் வாய்ப்புடையனாகிய நல்ல மகத நாட்டரசன், பகைபுறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்-பகையிடத்துத் தந்த
வித்தியா மண்டபமும், பகைப்புறம் என்பது விகாரமாயிற்று. புறம்-இடம். முன் பகையாய்ப் பொருது தோற்றுப் பின் திறை யிட்டானென்க. பட்டி மண்டபம்-வித்தியா மண்டபமாதலை "ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள். பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்" "பன்னருங் கலைதெரிபட்டி மண்டபம்" என்றவற்றாலறிக. இதனை ஓலக்க மண்டபம் என்பாருமுளர். இவன், பகைவன்
-
௧0௩-௪. அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்
அவந்தி வேந்தன்-அவந்தி நாட்டரசன். உவந்தனன் கொடுத்த-மகிழ்ந்து கொடுத்த, நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும்-மிகவுயர்ந்த தொழின் முறைமையுடைய வாயிற்றோரணமும்.
அவந்தி-உஞ்சை. நிவந்தோங்கு-ஒருபொரு ளிருசொல். இவன், நண்பன்.
-
௧0௫-௧0. பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும்
நுண்வினைக் கம்மியர் காணா மரபின,
துயர்நீங்கு சிறப்பின்அவர் தொல்லோர் உதவிக்கு
மயன்விதித்துக் கொடுத்த மரபின, இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்துஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்
அரும்பெறல் மரபின் மண்டபம்
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும்-பொன்னாலும் மணியாலும் புனையப்பட்டனவாயினும், நுண்வினைக் கம்மியர் காணா மரபின – நுண்ணிய தொழிலை வல்ல கம்மியராற் செய்யப்படாதன ; துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர்
உதவிக்கு-பிறர் துயர்நீங்குதற்கு ஏதுவாகிய சிறப்பினையுடைய அம்மூவருடைய தொல்லோர் ரொரு காலத்துச் செய்த உதவிக்குக் கைம்மாறாக, மயன் விதித்துக் கொடுத்த மரபின-மயனால் நிருமித்துக் கொடுக்கப்பட்ட இயல்பையுடையன; இவை தாம் ஒருங்கு உடன் புணர்ந்து ஆங்கு-ஒன்றற்கொன்று சேய் நாட்டனவாகிய இவைதாம் ஒரு நாட்டோரூரின்கண் ஒருங்கு சேரப்பட்டு, உயர்ந்தோர் ஏத்தும் அரும்பெறல் மரபின் மண்டபம்-பெரியோரால் ஏத்தப்படும் பெறுதற்கரிய தன்மையையுடைய மண்டபத்தும் ; காண்டல்-செய்தல். தொல்லோர் வானோர்க்குச் செய்த உதவிக்கு என்றுமாம். மயன்-தெய்வத் தச்சன். விதித்தல்-மனத்தால் நிருமித்தல். தாம், ஆங்கு என்பன அசை. காணா மரபினும் கொடுத்த மரபினவுமாகிய பந்தர் மண்டபம் தோரண வாயில் என்னுமிவை புணர்ந்து ஏத்தும் மண்டபம் என்க. இம்மூன்றும் ஒருங்குகூடி ஒரு மண்டபமாதலை. மேல் நடுகற்காதையில், "வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய, சித்திர மண்டபத்திருக்க வேந்தன்"என்றுரைத்தலானு மறிக.
௧௧0. அன்றியும்,
அன்றியும்-அது வொழிந்தும்.
-
௧௧௧-௭. வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக்
கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்,
வம்பமாக்கள்-புதியோர்; தம்பெயர் பொறித்த-தம் பெயரெழுதிய, கண்ணெழுத்துப் படுத்த-அடையாளவெழுத்தினை இலச்சினையாக அமைத்த, எண்முப் பல் பொதி-பலவாகிய எண்களையுடைய பொதிகள், கடைமுக வாயிலும்-பண்டசாலை வாயிலையும், கருந்தாழ்க்காவலும்-வலிய தாழையுடைய அரணாகிய காவலையும், உடையோர் காவலும்-உடையோர் காத்திருக்குங் காவலையும், ஒரீஇயவாகி-நீங்கினவாகலான், கட்போர் உளர் எனின்-அவற்றைக் களவு செய்வோர் உளராயின், கடுப்பத் தலையேற்றி-அவர் கழுத்துக் கடுக்கப் பொதியைத் தலையில் வைத்து, கொட்பின் அல்லது-ஊரைச் சூழ்விப்பனல்லது, கொடுத்தலீயாது-அவற்கே அவற்றைக் கொடுத்து விடாதாதலால், உள்ளுநர்ப் பனிக்கும்-களவென்பதனை மனத்தால் நினைப்பினும் நினைப்போரை நடுங்குவிக்கும், வெள் இடை மன்றமும்-வெளியான இடத்தையுடைய மன்றமும்;
வம்ப மாக்களாகிய உடையோர் என்க. வம்ப மாக்களாகிய கட்போர் என்றுமாம். கண்ணெழுத்து-குறியீட்டெழுத்து. கடைமுகவாயில்-ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்கள் வந்து குவிந்திருக்கும் பண்டசாலை வாயில். பண்டசாலையின் புறத்தே கொண்டு போகப்பட்டு, வேறு அரணும் காவலும் இல்லாதிருக்கவும் என்க. உளரெனின் என்றது பெரும்பாலும் இலரென்பதனை விளக்கிற்று. கொட்பின், பனிக்கும் என்பன பிறவினையாக நின்றன. கட்போர் தமது தலையிற் சுமந்து சுழன்று திரியினல்லது என்றுரைத்தலுமாம்.
-
௧௧௮-௧௨௧. கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்
பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று
வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்,
கூனும் குறளும் ஊமும் செவிடும்-கூனரும் குறளரும் ஊமரும் செவிடரும், அழுகு மெய்யாளரும்-தொழு நோயால் அழுகிய உடம்பினை யுடையோரும், முழுகினர் ஆடி-முழுகி நீராடிய வளவில், பழுது இல் காட்சி நல்நிறம் பெற்று-பழுதில்லாத தோற்றத்தையுடைய நல்ல உருவத்தைப் பெற்று, வலம்செயாக்கழியும்-வலஞ்செய்து தொழுது நீங்கும், இலஞ்சி மன்றமும்-பொய்கையுடைய மன்றமும்.
-
௧௨௨-௭. வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்
அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்
கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர்
சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்,
வஞ்சம் உண்டு மயற்பகை உற்றோர்-வஞ்சனையாற் சிலர் மருந்தூட்ட உண்டு பித்தேறினாரும், நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர்-நஞ்சை உண்டு நடுங்கும்படியான துன்பமுற்றோரும், அழல்வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர்-அழலும் விடத்தையுடைய பாம்பின் கூரிய எயிறு அழுந்தக் கடியுண்டாரும், கழல்கண் கூளிக் கடுநவைப்பட்டோர்-பிதுங்கின கண்ணையுடைய பேயினாற் கடுந்துன்ப முண்டாகப் பற்றப் பட்டோரும், சுழலவந்து தொழ-ஒருகாற் சூழவந்து தொழுதவளவிலே, துயர் நீங்கும்-அத்துயர்கள் நீங்குதற்குக் காரணமாகிய, நிழல் கால் நெடுங்கல் நின்ற மன்றமும்-ஒளியைச் சொரியும் நெடிய கல்நாட்டி நிற்கும் மன்றமும்; வஞ்சமுண்டு-வஞ்சனைப்பட்டு என்றுமாம். மயல்-மருள்; பித்து-மயலாகிய பகையென்க. அழல்-அழல்போலும் நஞ்சு. ஆர்-கூர்மை. கழற்கண் என்பதன் விகாரமாகக்கொண்டு பச்சைக்கழல் போலும் கண் என்றலுமாம். நவை-துன்பம். சுழல-சூழ.
-
௧௨௮-௩௪. தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்,
தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்-தவவேடத்தில் மறைந்துநின்று கூடாவொழுக்கத்தில் ஒழுகும் தவத்தன்மையில்லாதவரும், அவம் மறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர்-மறைந்து தீநெறியில் ஒழுகும் அலவற் பெண்டிரும், அறைபோகு அமைச்சர்-கீழறுக்கும் அமைச்சரும், பிறர்மனை நயப்போர்- பிறர்மனைவியை விரும்புவோரும், பொய்க்கரியாளர்-பொய்ச்சான்று பகர்வோரும், புறங்கூற்றாளர்-புறங்கூறுவாரும் ஆகிய இவர்கள், என் கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் என-என் கையிற் கொண்ட பாசத்திடத்து அகப்படுவோராவர் என்று, காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பி-அவ்வூர் நாற்காத வட்டகையும் கேட்கும்படி தனது கடிய குரலையெழுப்பி, பூதம் புடைத்து உணும் பூத சதுக்கமும்-பின் அங்ஙனஞ் செய்வோரைப் பாசத்தாற்கட்டி நிலத்திற புடைத்து உண்ணும் பூதநிற்கும் பூத சதுக்கமும்; தவவேடம் மறைதற்கே இடமாயிற்றென்பார் தவ மறைந்து என்றார். தன்மை-தவத்திற்குரிய இயல்பு; நற்பண்புமாம். ஒழுகு்ம் என்னும் பெயரெச்சம் இலாளர் என்பதன் விகுதியோடு முடியும். அவம் ஒழுகுமென்க. அலவல்-அலவலை யென்பதன் விகாரம். அலவை யெனப் பாடங் கொள்வாருமுளர். ஆராயாது செய்யும் பெண்டிரென்க. பாசத்துக் கை-பாசத்திடத்து, பூதம் நிற்றலாற் பூதசதுக்க மெனப் பெயரெய்திற்று. சதுக்கம்-நாற்சந்தி.
-
௧௩௫-௮. அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்
பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்,
அரைசு கோல் கோடினும்-அரசனது செங்கோல் சிறிது வளைந்ததாயினும், அறம்கூறு அவையத்து உரை-தருமாசனத்தார் வழக்குரைக்கும் அவையத்தில் அவர் உரைக்குமுரை, நூல்கோடி ஒரு திறம் பற்றினும்-நேர்மை திரிந்து ஒரு பக்கம் பற்றினும், நாவொடு நவிலாது-நாவாற் கூறாமல், நவைநீர் உகுத்துப் பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும்-துன்பக் கண்ணீர் சொரிந்து அழுதலையுடைய பாவை நிற்கும் பாவை மன்றமும்: (ஆகிய) நூல் – ஒழுங்கு. ஒரு திறம் பற்றல் – வாரம் பற்றல். நாவொடு-நாவால். நவைநீர்-குற்றத்துக்காகச் சொரியும் நீருமாம். பாவை நிற்றலால் பாவை மன்றமெனப் பெயரெய்திற்று.
-
௧௩௯-௪0. மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ,
மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்-உண்மைத் திறத்தை யுணர்ந்த சீரியோரால் ஏத்தப்படும், ஐவகை மன்றத்தும் அரும்பலிஉறீஇ-ஐவகைப்பட்ட மன்றத்திடத்தும் அரிய பலியையிட்டு;
அரும்பெறல் மண்டபத்தும். அன்றியும், வெள்ளிடை மன்றம் முதலிய ஐவகை மன்றத்தும் பலியிட்டு என்க. பீடிகையிற் பலி யூட்ட மண்டபத்தும் மன்றத்தும் பலியிட்டு என்றியையும்.
-
௧௪௧-௪. வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,
வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்துக்
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்-வச்சிரக் கோட்டத்திலிரு்கும் மங்கல முரசை, கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி-கச்சையை அணிந்த யானையின் பிடரிடத்தே ஏற்றி, வால் வெண் களிற்று அரசு வயங்கிய கோட்டத்து-மிக்க வெண்மையுடைய அயிராவதம் நிற்கும் கோயிலிற் சென்று, கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி-விழாவின் தொடக்கமும் முடிவும் சாற்றி;
பண்டு தேவர்களின் படைக்கலம், ஊர்தி முதலியவற்றுக்கும் தனித்தனியே கோயில்கள் இருந்தனவென்க. மணங்கெழு முரசு-விழா முரசு. கச்சை-கீழ் வயிற்றிற் கச்சை. தலை-இடம். வால்-இளமையுமாம். களிற்றரசு-அயிராவதம். கால்கோள்-தொடக்கம். விழவின் கால்கோளும் கடை நிலையும்-என்க. களிற்றரசிற்குச் சாற்றினர் அஃது இந்திரனைக் கொணர்தற்கு.
"வச்சிரக் கோட்டத்து மணமுழா வாங்கிக்
கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி"
என்றார் மணிமேகலையுள்ளும்.
-
௧௪௫-௬. தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து
மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து,
தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து-பூமியிற்றங்கிய முறைமையையுடைய கற்பகம் நிற்கும் கோயின் முன்னர், மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து-அட்டமங்கலத்தோடு நெடிய கொடியை வானிலே செல்ல எடுத்து ; இந்திரன் தனது நிழலிற் றங்கிய செருக்கையுடைய தருவென்றுமாம். தரு-கற்பகத் தரு. கொடி-அயிராவதம் எழுதிய கொடி.
-
௧௪௭-௫௬. மரகத மணியொடு வயிரம் குயிற்றிப்
பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை
நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்
கிம்புரிப்பகுவாய்க்கிளர்முத்து ஒழுக்கத்து
மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
தோரணம் நிலைஇய தோம்அறு பசும்பொன்
பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை
பாவை விளக்குப் பசும்பொன் படாகை
தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து
மேவிய கொள்கை வீதியில் செறிந்துஆங்கு,
மரகத மணியொடு வயிரம் குயிற்றி-மரகதம் வயிரம் என்னுமிவற்றை விளிம்பிலே ஆயப் பலகையாகப் படுத்து, பவளத் திரள்கால்-அதன்மீதே செம்பவளத் தூண்களை நிறைத்த, பைம்பொன் வேதிகை-பசும்பொன்னாலாகிய திண்ணைகளையுடைய, நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்-நெடிய நிலைகளையுடைய மாளிகைகளின் வாயிலிடந்தோறும், கிம்புரி-கிம்புரி செறித்த கொம்பினையும், பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து-அங்காந்த வாயாற் கான்ற பருமுத்தொழுங்கினையுமுடைய, மங்கலம் பொறித்த-அட்டமங்கலங்களையும் பொறித்த, மகரவாசிகைத் தோரணம்-வாசிகை வடிவாக வளையச் செய்த மகர தோரணங்கள், நிலைஇய-நிலைபெற்ற, தோம் அறு பசும் பொற் பூரண கும்பத்து-குற்றமற்ற பசிய பொன்னாற் செய்த நிறைகுடமும், பொலிந்த பாலிகை-பொலிவு பெற்ற முளைப்பாலிகையும், பாவை விளக்கு-பாவை விளக்கும், பசும்பொற் படாகை-பசும் பொன்னாலாய கொடியும், தூமயிர்க்கவரி-வெள்ளிய மயிரையுடைய சாமரையும், சுந்தரச்சுண்ணத்து-அழகிய பொற்சுண்ணத்துடனே, மேவிய கொள்கை வீதியில்-பொருந்திய இயல்பினையுடைய வீதியிலே, செறிந்து-நெருங்கி; குயிற்றிய என்னும் பாடத்திற்கு வயிரங் குயிற்றிய காலையுடைய வேதிகை என்க. கிம்புரி-கொம்பிலணியும் பூண். வாசிகை-வளைத்த மாலை; திருவாசியுமாம்.கிம்புரியையும்,முத்தொழுக்கத்தையுமுடைய மகர தோரணம் நிலைபெற்ற வீதியெனவும், பூரண கும்பம் முதலியன மேவிய வீதி யெனவும் தனித்தனி கூட்டுக. கிம்புரிப் பகுவாய்-மகரவாய் என்பது அரும்பதவுரை. பாவை விளக்கு-பாவை நின்று ஏந்திய விளக்கு. பாலிகை, பாவை விளக்கு என்பவற்றோடும் பசும்பொன் என்பதனைக் கூட்டுக. படாகை-கொடி. ஆங்கு- அசை.
-
௧௫௭-௬0. ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர்ப்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர்
இவர்ப்பரித் தேரினர் இயைந்துஒருங்கு ஈண்டி
ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும்-,அரச குமரரும் பரத குமரரும் – அரச குமரரும் வணிக குமரரும், கவர் பரிப் புரவியர்-பகுத்து விரையும் குதிரையினராய், களிற்றின் தொகுதியர்-யானையின் திரட்சியினராய், இவர் பரித் தேரினர்-மேலே பாயும் குதிரை பூட்டிய தேரினராய், இயைந்து ஒருங்கு ஈண்டி-தம்மிற் பொருந்தி ஒன்றுபடத் திரண்டு ; ஐம்பெருங் குழுவாவன: "அமைச்சர் புரோகிதர் சேனாபதியர். தவாத்தொழிற் றூதுவர் சாரண றென்றிவர். பார்த்திபர்க் கைம்பெருங் குழுவெனப் படுமே" எனுமிவர். இவ்வைந்து கூட்டமே பஞ்சாயம் எனப்படும். எண்பேராயமாவன: "கரமத் தியலவர் கரும காரர், கனகச் சுற்றங் கடைகாப்பாளர், நகர மாந்தர் நளிபடைத் தலைவர். யானை வீர ரிவுளி மறவர். இனைய ரெண்பே ராய மென்ப" எனுமிவர். இனி, "சாந்துபூக் கச்சாடை பாக்கிலை கஞ்சுகநெய், ஆய்ந்த விவரெண்ம ராயத்தோர்-வேந்தர்க்கு, மாசனம்பார்ப் பார்மருத்தர் வாழ்நிமித்த ரோடமைச்சர், ஆசி லவைக்களத்தா ரைந்து" எனக் காட்டுவர் அரும்பதவுரை யாசிரியர். இவர்தல்-தேரைக் கொண்டெழுதல். குழுவும் ஆயமும் வீதியிற் செறிந்து, குமரரும் குமரரும் ஈண்டி என்றியைக்க. பரதர்-வணிகர். புரவியர் களிற்றினர் தேரினரான அரசகுமரரும் என்றியைத்தலுமாம்.
-
௧௬௧-௮. அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்
உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென
மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட
தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்
புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி,
அரைசு மேம்படீஇய-தம் அரசனை மேம்படுத்தற்கு, அகனிலை மருங்கில்-அப்பதியின்கண்ணே, உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென-புகழமைந்த வேந்தன் கொற்றம் கொள்வானாக என வாழ்த்தி. மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்-மிகப் பெரிய புவியின் கண்ணே மிக்க உயிர்களைப் புரக்கும், ஆயிரத்து ஓர் எட்டு அரசுதலைக் கொண்ட-ஆயிரத்தெட்டு அரசு தலையிற்கொண்ட, தண் நறுங்காவிரி-குளிர்ந்த நறிய காவிரியின், தாதுமலி பெருந்துறைப் புண்ணிய நல்நீர்-பூந்தாது நிறைந்த பெரிய சங்கமத் துறையில் நன்றாகிய தீர்த்த நீரை, பொற்குடத்து ஏந்தி-பொற்குடத்தால் ஏந்தி, மண்ணகம் மருள-மண்ணிலுள்ளோர் மருட்சியுறவும், வானகம் வியப்ப-விண்ணிலுள்ளோர் வியக்கவும், விண்ணவர் தலைவனை-வானோர்க் கரசனாய இந்திரனை, விழுநீர் ஆட்டி-மஞ்சனமாட்ட;
அகனிலை-ஊர். ஆயிரத்தெட்டுக் கலசநீர் கொண்டு மஞ்சன மாட்டுதல் மரபு. பொற்குடத்து நீரை ஏந்தி யென்றுமாம். ஆட்டி-ஆட்டவெனத் திரிக்க. அரச குமரரும் பரத குமரரும் மஞ்சன மாட்டவென்க.
(அடி : மண்ணக மருள-மண்ணகம் வின்ணகமாய் மாறாட அன்றி மண்ணிலுள்ளோர் இப்படியே அவ் விண்ணகமிருப்பதென ஒப்புக் காணவென்க. வானகம் வியப்ப-வானக்த்துள்ளோர் தம் துறக்கத்தினும் ஈது சிறைப்புடைத் தென்று வியக்க. விண்ணவர் தலைவன்-ஈண்டு அவன் வச்சிரம்.)
-
௧௬௯-௭௫. பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்,
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்-தாய் வயிற்றுப் பிறவாத திருமேநியையுடைய மாதேவனாகிய இறைவன் கோயிலும், அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்-ஆறுமுகத்தையும் செய்ய நிறத்தையுமுடைய முருகவேளின் அழகு விளங்குகின்ற கோயிலும், வால்வளை மேனி வாலியோன் கோயிலும்-வெள்ளிய சங்கு போலும் நிறத்தையுடைய பலதேவன் கோயிலும், நீலமேனி நெடியோன் கோயிலும்-நீலமணி போலும் நிறத்தையுடைய நெடிய மால் கோயிலும், மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்-முத்துமாலை யணிந்த வெண்கொற்றக் குடையுடைய இந்திரன் கோயிலும் ஆகிய இவற்றில் மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ – மிக்க முதுமையையுடைய இறைவனது வாய்மையிற் றப்பாத, நான்மறை மரபின் தீமுறை ஒருபால்-நாலாகிய வேதங்கள் சொல்லிய நெறியே ஒரு பக்கம் ஓமங்கள் நடக்க; பிறவா யாக்கை என விசேடித்தமையால் உயிரில்பாகிய பிறப்பிறப்பில்லாதவன் இறைவன் ஒருனே யென்பது பெற்றாம். அவன் யாவர்க்கும் தாயும் தந்தையு மாதலன்றி அவனுக்கொரு தாய் தந்தை யின்மையைத் "தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடி"என்பதனானு மறிக. யாக்கை-அருளாற் கொள்ளுந் திருமேனி ; யாக்கையிற் பிறவாத பெரியோன் எனினும்அமையும். வாலியோன்-வெண்ணிறமுடையோன்: ஈண்டுப் பெயர் மாத்திரையாய் நின்றது. மாமுது முதல்வன்-சிவபிரான் ; "முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருள்" ஆதலின் மாமுது முதல்வன் என்றார். வாய்மையின் வழா என்பதற்கு வாயினின்றும் நீங்காத என்றுரைத்தலுமாம். "நன்றாய்ந்த நீணிமிர் சடை, முதுமுதல்வன் வாய் போகா, தொன்று புரிந்த வீரிரண்டின், ஆறுணர்ந்த வொருமுது நூல்"என்பதுங் காண்க. முதுமுதல்வன் பிரமன் என்பாருமுளர்.
-
௧௭௬-௮. நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்
பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால்,
நால்வகைத் தேவரும்-நால்வகைப்பட்ட தேவரும், மூவறு கணங்களும்-பதினெண் வகைப்பட்ட கணங்களும் என, பால் வகை தெரிந்த பகுதித் தோற்றத்து-வேற்றுமை தெரிந்து வகுக்கப்பட்ட இனமாகிய தோற்றத்தையுடைய, வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து
ஒருபால்-வெவ்வேறு கடவுளரது விழா ஒரு பக்கம் சிறக்க;
நால்வகைத் தேவராவார் : வசுக்கள் எண்மரும், ஆதித்தர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும், மருத்துவர் இருவரும் என நால்வகைப்பட்ட முப்பத்து மூவர். மூவறு கணங்களாவார் : தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாராகணம், ஆகாசவாசிகள், போகபூமியோர் என்னுமிவர் ; பிறவாறு முரைப்பர்.
-
௧௭௯-௮௧. அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்
திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால்,
அறவோர் பள்ளியும்-அருகர் புத்தர் பள்ளிகளிலும், அறன் ஓம்படையும்-அறத்தினைப் புரக்கும் சாலைகளிலும், புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்-மதிற்புறத்தேயுள்ள புண்ணியத் தானங்களிலும், திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒரு பால்-அறத்தின் கூறுபாடுகளை யுணர்ந்தோர் தருமம் போதிக்கும் செயல் ஒரு பக்கம் சிறக்க ; ஓம்படை-பாதுகாவல். ஈண்டு அவ்விடத்தை யுணர்த்திற்று. கோட்டம், ஈண்டு மதில். புண்ணியத்தானம்-பொதியின்முதலாயின. மணி மேகலையுள், "நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப், பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீறாக,வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை, ஆறறி மரபி னறிந்தோர் செய்யுமின், தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரை யறிவீர் பொருந்துமின் " என வருதல் ஈண்டு அறியற்பாலது.
-
௧௮௨-௩. கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்,
கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்-கொடியணிந்த தேரையுடைய அரசனொடு பகையாய்ச் சிறைப்படுத்தப்பட்ட மன்னர்களின், அடித்தளை நீக்க அருள் சிறந்து ஒருபால்-அடியிற் பிணித்த தளையை நீக்கிச் சிறைவீடு செய்தற்கு ஒரு பக்கம் அருள் சிறக்க; வேந்தனொடு என்பதில் ஒடு அசையுமாம்.
-
௧௮௪-௬. கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்
பண்யாழ்ப் புலவர் பாடல் பாணரொடு
எண்அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால்,
கண்ணுளாளர்-கூத்தரும், கருவிக் குயிலுவர்-குயிலுவக் கருவியாளரும், பண்யாழ்ப் புலவர்-பண்ணப்பட்ட யாழ் வாசிக்கவல்ல புலவரும், பாடற் பாணரொடு - கண்டத்தாற் பாடும் பாணரும் என்னும் இவர்களுடைய, எண் அருஞ் சிறப்பின் இசை சிறந்து ஒருபால்-அளந்தறிதற்கரிய சிறப்பினையுடைய இசைகள் ஒரு பக்கம் சிறக்க: கருவிக்குயிலுவர்-குழலரும், தோற்கருவியாளரும் ஆம்.
-
௧௮௭-௮. முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண்
முழவுக்கண் துயிலாது-கங்குலும் பகலும் இங்ஙனம் நடத்தலால் முழவின் கண்கள் அடங்குதலன்றி, முடுக்கரும் வீதியும்-குறுந்தெருக்களும் பெருவீதிகளும், விழவுக்களி சிறந்த-விழவாற் களிப்புமிக்க, வியலுள் ஆங்கண்-அகன்ற ஊரிடத்து ; ஓமமும், சாறும், செயலும், அருளும், இசையும் ஒவ்வொருபாற் சிறக்க, நீராட்டக் களிசிறந்த ஊர் என்க.
-
௧௮௯-௨0௩. காதல் கொழுநனைப் பிரிந்துஅலர் எய்தா
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு
இல்வளர் முல்லை மல்லிகை மயிலை
தாழிக் குவளை சூழ்செங் கழுநீர்
பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து
காமக் களிமகிழ்வு எய்திக் காமர்
பூம்பொதி நறுவிரைப் பொழில்ஆட்டு அமர்ந்து
நாள்மகிழ் இருக்கை நாள்அங் காடியில்
பூமலி கானத்துப் புதுமணம் புக்குப்
புகையும் சாந்தும் புலராது சிறந்து
நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துக்
குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகில்,
காதற் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா-தன்னாற் காதலிக்கப்பட்ட கொழுநனைப் பிரிந்து மெய்வேறு பாட்டால் அலரெய்தாத, மாதர் கொடுங்குழை மாதவி தன்னோடு-அழகிய வளைந்த மகரக் குழையயையுடைய மாதவியோடு, இல்வளர் முல்லை மல்லிகை மயிலை-இல்லிலே வளராநின்ற முல்லையும் மல்லிகையும், இருவாட்சியும், தாழிக் குவளை சூழ் செங்கழுநீர்-தாழியுள் மலர்ந்த குவளையும் வண்டுசூழும் செங்கழுநீரும் ஆகிய பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து-பூக்கள் நெருங்கிய கோதையாகி பிணையலால் விளக்கமுற்று, காமக் களி மகிழ்வு எய்தி-காமமாகிய கள்ளுண்டு களித்து, காமர் பூம்பொதி நறு விரைப் பொழில் ஆட்டு அமர்ந்த-அழகிய நறிய மணம் பொதிந்த பூம்பொழிலில் விளையாட்டை விரும்பி, நால் மகிழ் இருக்கை நாளங்காடியில்-நாடோறும் மகிழ்ந்திருக்கும் இருப்பையுடைய நாளங்காடியில், பூமலி கானத்துப் புதுமணம் புக்கு-பூ விற்குமிடங்களின் பல பூக்களின் மணமாகிய புதிய மணத்தின் உள்புக்கு, புகையும் சாந்தும் புலராது சிறந்து-அகிற்புகை சாந்தென்னும் இவற்றின் செவ்வி வாய்ப்பு மிக்கு, நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்து-நகைத்து விளையாடும் கூட்டத்தோடே காமக்குறிப்பாகிய மகிழ்சசி மொழியிலே இடைவிடாது பயின்று, குரல்வாய்ப் பாணரொடு குரலென்னும் இசையைப்பாடும் வாயையுடைய பாணரோடும், நகரப் பரத்தரொடு-நகரத்திலுள்ள தூர்த்தரோடும், திரிதரு மரபிற் கோவலன் போல-உலாத்துந் தன்மையையுடைய கோவலனைப் போல, இளிவாய் வண்டினொடு-இளியென்னும் இசையைப் பாடும் வண்டினோடும், இன் இள வேனிலொடு-இனிய இளவேனிலோடும், மலையமாருதம்-பொதியிற் காற்றாகிய இளந்தென்றல், திரிதரு மறுகில்- உலாவுதலைச் செய்யும் வீதியிடத்தே;
ஊரிலே கோவலன்போல மாருதம் திரிதரு மறுகில் என்க. காதற் கொழுநனை என்பது முதல் நன்மொழி திளைத்து என்பது காறும் கோவலற்கும் மாருதத்திற்கும் ஒத்த பண்பு. கண்ணகி பிரிந்து அலரெய்தலால் அலரெய்தாத மாதவி என்றார். மாருதத்திற்கேற்ப உரைக்குமிடத்து மாதவி குருக்கத்தியாம். இப்பொருட்கு: கொழுநனைப்பிரிந்து கொழுவிய -அரும்பாந்தன்மையை விட்டு, அலர் எய்தா-முதிர்ந்து அலராகாத, கொடுங்குழை-வளைந்த தளிரையுடைய என்றுரைத்துக் கொள்க. இல்வளர் என்னும் அடையை முல்லை முதலிய மூன்றற்கும், சூழ் என்னும் அடையை எல்லாப் பூக்கட்கும் கூட்டுக. சூழ்தல் வினைக்கு வண்டு என்னும் எழுவாய் வருவிக்க. கோதை- ஒழுங்காகிய என்றுமாம். ஆட்டு- விளையாட்டு ; புணர்ச்சி. பூ விற்குமிடத்தைக் கானம் என்றது பூக்களின் மிகுதிபற்றி. குரலுக்கு இளி கிளையாதலின் குரல்வாய். இளிவாய் என்றார். பரத்தர், பழிகாமுகர்; தூர்த்தர். மாருதத்திற்குக் கோவலனும், வண்டிற்குப் பாணரும், வேனிற்குப் பரத்தரும் உவமம். அடிகள் இவ்வுவம வாயிலாகக் காமத்தாற் கோவலனெய்திய சிறுமையை அங்கை நெல்லியென விளக்கியுள்ளார். பாணர் முதலிய மூவரோடும் வண்டு முதலிய மூன்றற்கும் உள்ள ஒத்த பண்புகளை யறிந்து உவமங் கூறிய திறப்பாடு பெரிதும் பாராட்டற்குரியதாகும். பாடுதலும் கள்ளுண்டலும் பாணர்க்கும் வண்டுக்கும் ஒத்த பண்பு ; கோவலன் பரத்தர் பற்றுக்கோடாகப் பாணரொடுந் திரிதல்போல மாருதம் இளவேனில் பற்றுக்கோடாக வண்டோடும் திரியா நின்றது; என்றின்னோரன்ன நயங்களை ஓர்ந்துணர்க.
இனி, அவ்வீதி வருணனை கூறப்படுகின்றது.
-
௨0௪-௨0௭. கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்துஆங்கு
இருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதி
அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித்
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்
கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்து ஆங்கு-கரிய மேகத்தைச் சுமந்து சிறிய முயற்கறையை யொழித்து, இரு கருங்கயலோடு இடைக்குமிழ் எழுதி-இருமருங்கினும் இரண்டு கரிய கயலினையும் இடையே ஒரு குமிழ மலரையும் எழுதி, அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சி-அழகிய வானத்திடத்தே அரவாகிய பகை செறுமென்று அஞ்சி, திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்-திங்களும் இந்நிலத்தே இங்ஙனம் உள்வரிக் கோலங்கொண்டு திரிகின்றது கொல்லோ எனவும்; திங்கள் அரவுப் பகை யஞ்சிச் சுமந்து ஒழித்து எழுதி ஈண்டுத் திரிதலுண்டோ என்க. ஆங்கு , அசை. திங்களும் என்னும் உம்மை சிறப்பு. திரிதலும் என்பதில் எச்சம்; அசையுமாம். குறுமுயலொழித்த திங்கள் முகமும், கருமுகில் கூந்தலும், இருகருங்கயல் கண்களும் குமிழ் மூக்குமாம். இதன்கண் அற்புத வுவமை, தற்குறிப்பேற்றவுவமை, ஐயவுவமை என்னும் அணிகள் அமைந்து இன்பம் விளைக்கின்றன. பின் வருவனவற்றிலும் இன்ன அணிகள் பொருந்தியுள்ளமை காண்க.
-
௨0௮-௧௧. நீர்வாய் திங்கள் நீள்நிலத்து அமுதின்
சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி
மீன்ஏற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த
வான வல்லி வருதலும் உண்டுகொல்.
நீர்வாய் திங்கள் நீள்நிலத்து-ஈரம் வாய்ப்புப் பெற்ற திங்களாகிய பெரிய நிலத்தே, அமுதின் சீர்வாய் துவலைத்திருநீர் மாந்தி-அமுத கலையின் சீர்மை பொருந்திய துவலையையுடைய அழகிய நீரைப் பருகி, மீன் ஏற்றுக்கொடியோன் மெய்பெற வளர்த்த-வடிவுபெற மகரக் கொடியையுடைய காமனானவன் வளர்த்த, வானவல்லி வருதலும் உண்டு கொல்-மின்னுக் கொடியாவது இந்நிலத்தே வருதலும் உண்டாயிற்றோ எனவும்; அமுதின் நீர் எனவும், மாந்தி மெய்பெற எனவும், கொடியோன் வளர்த்த எனவும் கூட்டுக. இனி, மெய்பெற என்பதற்குக் காமன்றான் முன்பு இறைவனது நுதல்விழியானிழந்த தன் மெய்பெறுதற்காக என்று கூறி, வளர் என ஒரு சொல் வருவித்து, மாந்தி வளர் வளர்த்த என்றுரைப்பர் அடியார்க்கு நல்லார்.
-
௨௧௨-௭. இருநில மன்னற்குப் பெருவளம் காட்டத்
திருமகள் புகுந்ததுஇச் செழும்பதி ஆம்என
எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்
கருநெடுங் குவளையும் குமிழும் பூத்துஆங்கு
உள்வரி கோலத்து உறுதுணை தேடிக்
கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்.
இருநில மன்னர்க்குப் பெருவளம் காட்ட-பெரிய நிலத்தினையுடைய அரசர்க்குத் தனது பெரிய வளத்தினைக் காட்ட வேண்டி, திருமகள் புகுந்தது இச் செழும்பதி ஆம் என-இலக்குமிவந்து புகுந்திருப்பது இந்தச் செழுமையுடைய நகராகுமெனக் கருதி, எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்-எரிபோலும் நிறத்தையுடையதோர் இலவ மலரும் பல முல்லையரும்புகளும் அன்றியும், கருநெடுங் குவளையும் குமிழும் பூத்து-இரண்டு பெரிய நீலோற்பல மலரும் ஒரு குமிழ மலரும் ஆகிய இவற்றைப் பூத்து, ஆங்கு-பூத்த அப்பொழுதே, உள்வரிக் கோலத்து உறுதுணை தேடி-உள்வரிக் கோலத்தோடு தனக்குப் பொருந்திய துணையாகிய திருமகளைத் தேடி, கள்ளக் கமலம் திரிதலும் உண்டு கொல்-கள்ளத்தையுடைய தாமரை திரிதலும் உண்டாயிற்றோ எனவும், திருமகள் புகுந்தது இச்செழும்பதி என்றிருப்பினும், பதிக்கண் புகுந்துளாள் என்பது கருத்தாகக் கொள்க தனது வளம்-தன்னாலாகும் வளம்; செல்வமும் அழகும். இலவம் வாயும், முல்லை பல்லும். குவளை கண்ணும் குமிழ் மூக்கும், கமலம் முகமும் ஆம். நீர்ப் பூவாகிய கமலம் கோட்டுப் பூ, கொடிப் பூ, நீர்ப்பூ, ஆகியவற்றைத் தன்னகத்தே பூத்ததென்றார். உள்வரிக் கோலம்-கிருத்திரிமவேடம்;பொய்யுரு. என்றும் தன்னகத் திருப்பாளாகலின திருமகளைத் தாமரைக்குத் துணையென்றார். கள்ளக் கமலம்-கள்ளையுடைய அக்கமலம் என்பது இயல்பாய பொருள். தாமரை மலரே இலவம் முதலியவற்றைப் பூத்துக் கொண்டு உருத்திரிந்து முகம் என்ற பெயருடன் திரியாநிற்கின்றது என அற்புதம் தோன்றக் கூறினார். ஆங்கு: அசையுமாம்.
-
௨௧௮-௨௩. மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப்
பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது
நாண்உடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப்
பண்மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றிப்
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுஎன,
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி-அரசனது செங்கோலை மறுத்ததாகுமென்றஞ்சி, பல் உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்-பல வுயிரையும் பருகும் திறந்த வாயையுடைய கூற்றம், ஆண்மையில் திரிந்து-ஆணியல்பு திரிந்து, அருந்தொழில் திரியாது-தனது கொலைத் தொழிலின் வேறுபடாது, நாண் உடைகோலத்து நகைமுகம் காட்டி-நாணினையுடைய கோலத்தையும் நகை பொருந்திய முகத்தையும் உண்டாக்கிக் கொண்டு, பண்மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றி-திவவினையுடைய யாழின் நரம்புபோலப் பண்ணாகிய மொழியைப் பேசி, பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுஎன-பெண்ணுருவோடு இங்கே திரியுந் தன்மையும் உண்டாயிற்றோ எனவும்,
கூற்றம் ஆணுருவோடு திரிந்து உயிர் பருகில் செங்கோலை மறுத்ததாகு மென்றஞ்சி ஆணுருவொழித்துப் பெண்ணுருவோடு தொழில் வேறுபடாது திரியும் பெற்றி யென்க. ஆண்மை-கடுத்த முகமும் இடித்த குரலும் முதலியவற்றோடு கூடிய ஆண்வடிவு. கோட்டி-வளைத்து என்றுமாம். திவவு, யாழின் கோட்டிலுள்ள நரம்புக் கட்டு, யாழ் நரம்பின் மொழி மிழற்றி என மாறுக. பெண்மை நாணுடைக் கோலமும் நகை முகமும் பண்மொழி மிழற்றலுமுடைய பெண் வடிவு. உண்டுகொல் என இடைச்சொல் விரித்துரைக்க. கூற்றமே பெண்ணுருக்கொண்டு திரிந்த தென்றார்.
"பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன் பெண்டகையாற் பேரமர்க் கட்டு"என்பது காண்க.
-
௨௨௪-௩௪. உருவி லாளன் ஒருபெருஞ் சேனை
இகல்அமர் ஆட்டி எதிர்நின்று விலக்கிஅவர்
எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ
விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு
உடன்உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப்
போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும்
மருந்தும் தரும்கொல்இம் மாநில வரைப்புஎனக்
கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்:
உருவிலாளன் ஒரு பெருஞ்சேனை-அநங்கனுடைய ஒப்பற்ற பெரிய சேனையாகிய பரத்தையரது, இகல் அமர் ஆட்டி-ஊடலாகிய மாறுபட்ட போரை இங்ஙனம் புகழ்ந்து சொல்லி வென்று, எதிர் நின்று விலக்கி-அவர் போகாமல் எதிர் நின்று தடுத்துப் புணர்தலின், அவர் எழுதுவரி கோலம் முழு மெயும் உறீஇ-அவருடைய மார்பிலும் தோளிலு மெழுதிய தொய்யில் முதலிய பத்திக் கீற்றுத் தமது மார்பமுழுதும் உறுதலானே, விருந்தொடு புக்க பெருந்தோட் கணவரொடு, உடன் உறைவு மரீஇ-உடன் உறைதலைப் பொருந்தி, ஒழுக்கொடு புணர்ந்த-வழி பாட்டுடன் கூடிப் புணர்ந்த, வடமீன்கற்பின் மனையுறை மகளிர் - அருந்ததிபோலும் கற்பையுடைய இல்லற மகளிரை, (அக்கணவரே). மாதர்வாள் முகத்து-இம் மாதருடைய ஒளிபொருந்திய முகத்து, மணித்தோட்டுக் குவளைப்போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை-நீலமணிபோலும் இதழையுடைய குவளைப் பூக்கள் புறங்கொடுத்துப் போதற்குக் காரணமாகிய கரிய கண்களின் கடைச் சிவப்பு, விருந்தின் தீர்ந்திலது ஆயின்-அவ்விருந்தால் நீங்கியதில்லையாயின், யாவதும் மருந்தும் தருங்கொல் இம் மாநில வரைப்பு என- இப்பெரிய நிலவெல்லை இதற்கு ஒரு மருந்தையும் தரவல்லதோ எனத் தமது நெஞ்சொடு கூறி, கையற்று நடுங்கும்-செயலற்று நடுங்காநிற்கும், நல்வினை நடுநாள் - விழா நடு நாளில்; ஆட்டி-வென்று. புலவியாற் கூடாத மகளிரை உண்டுகொல் உண்டுகொல் உண்டுகொல் உண்டுகொல் என்று புகழ்ந்து புலவி தீர்த்து என்றபடி, வரிகோலம், வினைத்தொகை. இனி, வீதியிற் கண்டோர்கள் அங்ஙனம் புகழ்ந்து கூறக் காமன் சேனையாகிய மகளிர் தம் உறுப்புகளால் அமர்செய்வித்துப் போவாரைப் போகாமற் றடுத்தலின் அவருடைய தொய்யில் முதலியன உறுதலால் விருந்தொடு புக்க கணவர் என்றுமாம். பரத்தையரது எழுதுவரி கோலத்தைத் தம் உடம்பிலே கொண்டு வருதலாற் பரத்தையர் கூட்டமுண்மை யுணர்ந்து உள்ளங் கொதிக்கும் மனைவியரின் சிவப்பினை மாற்றுதற்கு விருந்தொடு புக்காரென்க. எனவே, விருந்தினரைக் கண்டுழி ஊடலைக் கைவிடுத்துக் கணவரையும் விருந்தினரையும் எதிரேற்று மகிழ்தல் கற்புடை மகளிரின் கடப்பாடாதல் பெற்றாம். ஒழுக்கொடு புணர்ந்து உடனுறைவு மரீஇய என்று மாறுதலுமாம். மகளிரைக் கணவர் நெஞ்சொடு புகழ்ந்துகூறி நடுங்கும் என்க. மனைவியர் ஊடல் தீர்ந்திலதாயிற் செய்வதொன்றின்மையை நினைந்து நடுங்குவர். நில வரைப்புநிலவெல்லையிலுள்ளோர்; அன்றி மிருத சஞ்சீவினி யிறுதியாகவுள்ள மருந்துகளைத் தரும் நிலம் இதற்கொரு மருந்து தரமாட்டா தென்றுமாம். நல்வினை-நன்றாகிய வினை; விழா.
-
௨௩௫-௪0. உள்அகம் நறுந்தாது உறைப்பமீது அழிந்து
கள்உக நடுங்கும் கழுநீர் போலக்
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன்
உள் அகம் நறுந் தாது உறைப்ப-உள்ளேயுள்ள நறிய தாதுகள் ஊறிப் பிலிற்றுதலால், மீது அழிந்து கள்உக நடுங்கும் கழுநீர் போல-தேன்அகம் நிறைந்துமீது அழியுமாறு பொழிய நின்று நடுங்கும் கழுநீர் மலரைப்போல, கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்-கண்ணகியின் கரிய கண்ணும் மாதவியின் சிவந்த கண்ணும், உள்நிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன-உள்ளத்துள்ள பிரிவுத் துன்பத்தைக் கற்பால் மறைத்து அகத்தே ஒளிக்கவும் நீரைச் சொரிந்தனவாய், எண்ணு முறை இடத்தினும் வலத்தினும் துடித்தன-முன் எண்ணிய முறையே இடப்பக்கத்தும் வலப்பக்கத்தும் துடித்தன, விண்ணவர் கோமான் விழவு நாள் அகத்து என்-இந்திரனுடைய விழாநாளகத்து என்க.
உறைத்தல்-துளித்தல். தேன் மல்கி நின்று அலைத்தலின் நடுங்கும் கழுநீர் போல நீர் நிறைந்து நின்று அலைக்குங் கண் என்க. புணர்ச்சியின்மையும் உண்மையும் உணர்தற்குக் கருங்கணும் செங்கணும் என்றார். உண்ணிறை கரந்தகத் தொளித்தலைக் கண்ணகிக்கும், நீருகுத்தலை இருவர் கண்ணுக்கும் கொள்க. ஒளித்தல் மாதவிக்கும் பொருத்துமாயின் உரைத்துக் கொள்க. கண்கள் அழுகையும் உவகையும் பற்றி முறையே நீருகுத்தன வென்க. மகளிர்க்குக்கண் முதலியன இடந்துடித்தல் நன்றும் வலந்துடித்தல் தீதுமாம். பின்னர்க் கண்ணகிக்குக் கூட்டமுண்மையின் இடமும், மாதவிக்குப் பிரிவுண்மையின் வலமும் துடித்தன. நல்வினை நடுநாள் நீருகுத்தனவாகிய கருங்கணும் செங்கணும் விழவு நாளகத்து இடத்தினும் வலத்தினும் துடித்தன. விழவுநா ளகத்து-விழவு முடிந்து நீராடுதற்கு முன்னாளில் என்றபடி. என், அசை.
இருட் படாம்போக நீக்கி ஒளிகதிர் பரப்பச் சொரிந்து ஆடிப்பெயரவான்பலி யூட்ட மண்டபமன்றியும் மன்றத்தும் பலியுறீஇ ஏற்றிச் சாற்றி எடுத்து ஈண்டிக் கொள்கென ஆட்டக் களிசிறந்த வியலுளாங்கண் திரிதருமறுகில் உண்டுகொல் என்று ஆட்டி விலக்கி உறீஇப் புக்க கணவர் நடுங்கு நாள் உகுத்தனவாகிய கருங்கண்ணும் செங்கண்ணும் விழாநாளகத்து இடத்தினும் வலத்தினும் துடித்தன வென வினைமுடிக்க.
இது நிலைமண்டில ஆசிரியப்பா.
இந்திரவிழவூரெடுத்த காதை முற்றிற்று
6. கடலாடு காதை
{வெள்ளிமலையின் வடசேடியில் காமதேவனுக்கு விழாக் கொண்டாடும் ஒரு விஞ்சை வீரன், புகார் நகரில் இந்திரவிழாக் கொண்டாடப் படுவதைத் தன் காதலிக் குரைத்து அதனைக் காண்டற் பொருட்டாக அவளுடன் புறப்பட்டு இமயமலை, கங்கையாறு, உஞ்சைப்பதி, விந்த மலைக்காடு, வேங்கடமலை, காவிரிநாடு என்பவற்றை முறையே காட்டி வந்து புகாரினையடைந்து, நாளங்காடிப்பூதம் பலியுண்ணும் இடம், ஐவகை மன்றங்கள் முதலியவற்றைக் கண்டு காட்டி, பின்பு மாதவியானவள் சிவபிரான் ஆடிய கொடுகொட்டி முதலாகவுள்ள பதினோராடல்களையும் அவரவர் அணியுடனும் கொள்கையுடனும் ஆடிய கூத்தினையும் பாட்டினையும் காணாய் எனவுரைத்துக் கண்டு மகிழ்வானாயினன். அவன்போலவே வானோர் பலரும் மக்கள் காணா முறைமையால் வந்து காண்பாராயினர். இவ்வாறு இந்திர விழா நடந்து முடியுங்கால் மாதவியின் ஆடலும் கோலமும் முடிவுற்றன. அப்பொழுது வெறுப்புற்ற உள்ளத்தோடிருந்த கோவலன் உவக்குமாறு மாதவி பலவகை நறுவிரைகளாலும் அணிகளாலும் ஒப்பனை செய்துகொண்டு பள்ளியிடத்தே அவனோடிருப்புழி, உவா வந்துற்றமையால் நகரிலுள்ளோர் பலரும் கடலாடச் செல்லா நின்றனர். மாதவி கடல் விளையாட்டைக் காண விரும்பினமையின் கோவலனும் அவளும் ஊர்திகளிலேறி வைகறைப் பொழுதிலே வீதிகளைக் கடந்து சென்று கடற்கரை மணற்பரப்பிலே வண்ணம் சாந்து முதலியனவும், அப்பம் மோதகம் முதலியனவும், கள் மீன் முதலியனவும் விற்போர்கள் தனித்தனி யெடுத்த விளக்கங்களும், கலங்கரைவிளக்கம், மீன்றிமில் விளக்கம் முதலியனவும் வரம்பின்றி நெருங்கினமையால் நுண்மணற் பரப்பில் விழுந்த வெண்சிறு கடுகையும் புலப்படக் காணும் ஒளியையுடையதாகி, தாமரை மிக்க மருதவேலிபோலத் தோன்றும் நெய்தலங்கானலில் தாழைகள் வேலியாகச் சூழ்ந்த புன்னைமரத்தின் நீழலில் புது மணற்பரப்பிலே சித்திரத்திரையைச் சுற்றிலும் வளைத்து விதானித்து அமைத்த வெண்காற்கட்டிலில் ஏறியபின், வசந்த மாலையின் கையிலிருந்த யாழை வாங்கி மாதவி கோவலனோ டிருந்தனள். (மாதவி தன்னை ஒப்பனை செய்தல் கூறுமிடத்தில் அற்றைநாளில் அணியப்படுவனவாயிருந்த அணிகலவகைகள் பலவும் அறியப்படுகின்றன.)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
-
வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்
தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள் 5
இந்திர விழவுகொண்டு எடுக்கும்நாள் இதுஎனக்
கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டிக்
கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி
நெஞ்சுஇருள் கூர நிகர்த்துமேல் விட்ட 10
வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்
திருந்துவேல் அண்ணற்குத் தேவர்கோன் ஏவ
இருந்துபலி உண்ணும் இடனும் காண்குதும்,
அமரா பதிகாத்து அமரனிற் பெற்றுத்
தமரில் தந்து தகைசால் சிறப்பின் 15
பொய்வகை இன்றிப் பூமியில் புணர்த்த
ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும்,
நாரதன் வீணை நயம்தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய 20
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்
தங்குக இவள்எனச் சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
அங்குஅரவு அல்குல் ஆடலும் காண்குதும், 25
துவர்இதழ்ச் செவ்வாய்த் துடிஇடை யோயே.
அமரர் தலைவனை வணங்குதும் யாம்எனச்
சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்
உஞ்சையம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும் தாங்கா விளையுள் 30
காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப்
பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்திச்
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்
மாயோன் பாணியும் வருணப் பூதர் 35
நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்ச்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்கப்
பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட 40
எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்,
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும், 45
கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும், அவுணன் கடந்த
மல்லின் ஆடலும், மாக்கடல் நடுவண்
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற 50
சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்,
படைவீழ்த்து அவுணர் பையுள் எய்தக்
குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்,
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும், 55
ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்,
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்,
செருவெம் கோலம் அவுணர் நீங்கத் 60
திருவின் செய்யோள் ஆடிய பாவையும்,
வயல்உழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்,
அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின்
நிலையும் படிதமும் நீங்கா மரபின் 65
பதினோர் ஆடலும் பாட்டின் பகுதியும்
விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய்.
தாதுஅவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவள்எனக்
காதலிக்கு உரைத்துக் கண்டுமகிழ்வு எய்திய 70
மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும்,
அந்தரத்து உள்ளோர் அறியா மரபின்
வந்துகாண் குறூஉம் வானவன் விழவும்
ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள
ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்பப் 75
பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத்து இருவகை ஓமா லிகையினும்
ஊறின நல்நீர் உரைத்தநெய் வாசம்
நாறுஇருங் கூந்தல் நலம்பெற ஆட்டி,
புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை 80
வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி,
அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி
நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப்,
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து, 85
குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,
பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ,
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து, 90
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,
வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம் 95
கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,
சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை
அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து, 100
கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு
இந்திர நீலத்து இடைஇடை திரண்ட
சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
அங்காது அகவயின் அழகுற அணிந்து, 105
தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி
மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து,
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள், 110
உருகெழு மூதூர் உவவுத்தலை வந்தெனப்
பெருநீர் போகும் இரியல் மாக்களொடு
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி,
பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப 115
வைகறை யாமம் வாரணம் காட்ட
வெள்ளி விளக்கம் நள்இருள் கடியத்
தார்அணி மார்பனொடு பேர்அணி அணிந்து
வான வண்கையன் அத்திரி ஏற
மான்அமர் நோக்கியும் வையம் ஏறிக் 120
கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை
மாடமலி மறுகின் பீடிகைத் தெருவின்
மலர்அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்துஆங்கு
அலர்க்கொடி அறுகும் நெல்லும் வீசி
மங்கலத் தாசியர் தம்கலன் ஒலிப்ப 125
இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து
மகர வாரி வளம்தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகிக்
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள் 130
வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில்
கூல மறுகில் கொடிஎடுத்து நுவலும்
மாலைச் சேரி மருங்குசென்று எய்தி,
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும், 135
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்,
காழியர் மோதகத்து ஊழ்உறு விளக்கமும்,
கூவியர் கார்அகல் குடக்கால் விளக்கமும்,
நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும்,
இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும், 140
இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும்,
விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும்,
பொழிபெயர் தேஎத்தர் ஒழியா விளக்கமும்,
கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்
எண்ணுவரம்பு அறியா இயைந்துஒருங்கு ஈண்டி 145
இடிக்கலப்பு அன்ன ஈர்அயில் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சியது ஆகிய
விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின்
மருத வேலியின் மாண்புறத் தோன்றும்
கைதை வேலி நெய்தல்அம் கானல் 150
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி
நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய
மலைப்பல் தாரமும் கடல்பல் தாரமும்
வளம்தலை மயங்கிய துளங்குகல இருக்கை
அரசுஇளங் குமரரும் உரிமைச் சுற்றமும் 155
பரத குமரரும் பல்வேறு ஆயமும்
ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும்
தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும்
விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன்
தண்பதம் கொள்ளும் தலைநாள் போல 160
வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை
சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றிக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்குஇயைந்து ஒலிப்ப, 165
கடல்புலவு கடிந்த மடல்பூந் தாழைச்
சிறைசெய் வேலி அகவயின் ஆங்குஓர்
புன்னை நீழல் புதுமணல் பரப்பில்
ஓவிய எழினி சூழஉடன் போக்கி
விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை 170
வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்
திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்
கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என.
(வெண்பா)
வேலை மடல்தாழை உட்பொதிந்த வெண்தோட்டு
மாலைத் துயின்ற மணிவண்டு - காலைக்
களிநறவம் தாதுஊதத் தோன்றிற்றே காமர்
தெளிநிற வெங்கதிரோன் தேர்.
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
-
௧-௪. வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்
வெள்ளி மால் வரை-பெரிய வெள்ளி மலையிலே, வியன்பெருஞ் சேடி-அகன்ற பெரிய வட சேடிக்கண்ணே, கள் அவிழ் பூம்பொழில்-தேன் ஒழுக மலரும் பூக்களையுடையதொரு சோலையிடத்தே, காமக் கடவுட்கு-காம தேவனுக்கு, கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு-கரிய கயல்போலும் நீண்ட கண்களையுடைய காதலியுடனே யிருந்து, விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன்-விழாக் கொண்டாடும் ஒரு விச்சாதர வீரன் ;
சேடி-வித்தியாதரர் நகரம். பொழிலிலே காதலியோடு கடவுட்கு விருந்தாட்டயரும் என்க. விருந்தாட்டு – ஆண்டுதோறுஞ் செய்யும் விழா.
-
௫-௬. தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள்
இந்திர விழவுகொண்டு எடுக்கும்நாள் இதுஎனக்
தென்றிசை மருங்கின் ஒரு செழும்பதி தன்னுள்-தென்றிசைப் பக்கத்து ஒரு வளவிய நகரிடத்து, இந்திரவிழவு கொண்டு எடுக்கும் நாள் இது என – இந்திர விழாவிற்குக் கால் கொண்டு செய்யும் நாள் இதுவெனக் கூறி; செழும்பதி-காவிரிப்பூம்பட்டினம். இதற்கு அடியார்க்கு நல்லார் வலிந்துரைக்கும் பொருள் மெய்யெனத் தெளியற்பாலதன்றாயினும் அவர் கருத்தினை அறிந்து கோடல் கருதி, ஈண்டுக் காட்டப்படும்
.
{அடி-வீரன் பங்குனித்திங்கள் இருபத்தொன்பதிற் சித்திரை நாளிலே அவ்விழா முடிதலின்,.............கொடியெடுக்குநாள் மேலை மாதத்து இந்தச் சித்திரை காணெனச் சொல்லி யென்க. இதுவெனச் சுட்டினான்; அன்றும் சித்திரையாகலின். ஈண்டுத் திங்களும் திதியுங் கூறியது என்னையெனின், கோவலனும் மனைவியும் ஊரினின்றும் போந்த திங்களும் திதியும் வாரமும் நாளும் வழிச்செலவும் ஒழிவும், மதுரையிற் சென்று புக்கு இவன் இறந்துபட்ட திங்கள் முதலாயுள்ளவற்றோடு மாறுகொள்ளாது முடிதற்கெனக் கொள்க. அது யாண்டுமோவெனின், வேனிற் காதையினும் நாடுகாண் காதையினும் காடுகாண் காதை கட்டுரை காதையென்னும் இவற்றுள்ளுமெனக் கொள்க.}
-
௭-௧௩. கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டிக்
கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி
நெஞ்சுஇருள் கூர நிகர்த்துமேல் விட்ட
வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்
திருந்துவேல் அண்ணற்குத் தேவர்கோன் ஏவ
இருந்துபலி உண்ணும் இடனும் காண்குதும்,
கடுவிசை அவுணர் கணங்கொண்டு ஈண்டி-மிக்க வேகத்தினையுடைய அவுணர்கள் கூட்டமாக நெருங்கிவந்தெதிர்த்து, கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த தொழுகழல் மன்னர்க்குத் தொலைந்தனர் ஆகி-இந்திரனது நகரைக் காத்த புலிபோலும் வலிமையுடைய வீரக்கழலணிந்த முசுகுந்தனுக்குத் தோற்று, நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல்விட்ட – பின்பு தம்மில் ஒத்துக் கூடி அம் முசுகுந்தனது நெஞ்சம் இருள் மிகும்படி விடுத்த; வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம் – இருளம்பினைப் போக்கிய மிக்க பெரிய பூதமானது, திருந்து வேல் அண்ணற்குத் தேவன் ஏவ-திருந்திய வேலையுடைய அம் முசுகுந்தன் பொருட்டு இந்திரன் ஏவுதலினாற் போந்து, இருந்து பலி உண்ணும் இடனும் காண்கும்-புகாரிலிருந்து பலி யுண்ணும் இடமாகிய நாளங்காடியையும் காண்போம்;
ஊக்கம் – வலி. ஊக்கத்து மன்னன் என்க. நெஞ்சம் என உம்மை விரித்தும் புறக்கண்ணன்றி அகக்கண்ணாகிய நெஞ்சமும் இருள்கூரவென்க. நிகர்த்து-ஒத்துக்கூடி. வஞ்சம் என்றது வஞ்சத்தால் விட்ட இருட் கணையை. ஒரு காலத்தில் விண்ணுலகிலே சேமத்தில் வைக்கப்பட்டிருந்த அமிழ்தத்தைக் கலுழன் கவர்ந்து சென்றனன் என்பதும், அதனை மீட்கக் கருதிய இந்திரன், யான் சென்று வருங்காறும் இந்நகரினைக் காப்போர் யார் எனச் சிந்தித்த பொழுது முசுகுந்தன் ‘யான் பாதுகாப்பேன்’ என மொழிந்தான் என்பதும்; அது கேட்டு இந்திரன் மகிழ்ந்து ‘இது நின்வழி நிற்பதாக’ என ஒரு பூதத்தை நிறுத்திச் சென்றனன் என்பதும் அக்காலை அவுணர்கள் பெருந்திரளாக வந்து பொருது தோற்றோடியவர்கள் பின்பு ஒருங்குகூடிச் சூழ்ச்சி செய்து பேரிருட்கணை யொன்றை விடுத்தனர் என்பதும், அதனால் எங்கணும் இருள் சூழலும் முசுகுந்தன் செய்வதறியாது நெஞ்சம் திகைத்து நிற்புழி அப்பூதம் அவ்விருளைப் போக்க, அவன் மீட்டும் அவுணர்படையை வென்றான் என்பதும், மீண்டுவந்த இந்திரன் நிகழ்ந்தவற்றை அறிந்து அப்பூதத்தை அம் மன்னனுக்கே மெய்க்காவலாகுமாறு பணிக்க, அஃது ஆங்கு நின்றும் போந்து புகார் நகரில் நாளங்காடியில் இருந்து பலியேற்று வருவதாயிற்று என்பதும் ஈண்டுக் கூறியவற்றானும் இதனுரையில் அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டிய மேற்கோட் செய்யுளொன்றானும் அறியப்படுகின்றன. அச்செய்யுள்: “முன்னாளிந்திரன்..........., காவலழித்துச் சேவல்கொண்டெழுந்த, வேட்கை யமுதமீட்க வெழுவோன், இந்நகர் காப்போர் யாரென நினைதலும், நேரியனெழுந்து நீவரு காறும், தார்கெழு மார்ப தாங்கலென் கடனென, உவந்தனன் கேட்டுப் புகழ்ந்தவிப் பூதம், நின்வழி யாதென நிறீஇப் பெயர்வுழிக் கடுவிசை யவுணர் கணங்கொண்டிப், பொருதுபோர் தொலைந்த ராகிப் பெரிதழிந், தாழ்ந்த நெஞ்சிற் சூழ்ந்தனர் நினைத்து, வஞ்ச மற்றிது வஞ்சத் தல்லது, வேற லரிதெனத் தேறினர் தேறி, வளைத்துத் தொடுத்த வல்லவாயம்பின், அயின்முகங் கான்ற வாரிருள் வெயிலோன், இருகணும் புதையப் பாய்தலி னொருகணும், நெஞ்சங் காணா நிற்ப நின்ற, நஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்”என்பது. முசுகுந்தன் பரிதி மரபினனாய சோழர்குல முன்னோ னாதலின் அவன் பதியாகிய புகாரின்கண் பூதம் வந்து தங்குவதாயிற்று.
-
௧௪-௭. அமரா பதிகாத்து அமரனிற் பெற்றுத்
தமரில் தந்து தகைசால் சிறப்பின்
பொய்வகை இன்றிப் பூமியில் புணர்த்த
ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும்,
அமராபதி காத்து-முன்பு அவுணரால் வந்த இடர்கெடப் பொன்னகராய அமராபதியைக் காத்தமையால், அமரனிற் பெற்று-அதற்குக் கைம்மாறாக இந்திரனால் அளிக்கப் பெற்று, தமரிற்றந்து-சோழன் மரபினுள்ளாரால் கொண்டுவரப்பட்டு, தகைசால் சிறப்பின்-அழகுமிக்க சிறப்பினையுடைய, பொய்வகை இன்றிப் பூமியிற் புணர்த்த-பொய்த்தலின்றிப் புவியிலே புகார்நகரில் வைக்கப்பட்ட, ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும்-ஐவகைப்பட்ட மன்றங்களின் பெருமையையும் காண்பேம்;
தமர்-சோழன் முன்னோர். சிறப்பினையுடைய மன்றம் எனல் கூட்டுக. ஐவகை மன்றம் வெள்ளிடை மன்றம் முதலாக முன் இந்திர விழவூரெடுத்த காதையிற் கூறப்பட்டவை.
நாரதன் வீணை நயம்தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்
௧௮-௨௫. தங்குக இவள்எனச் சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
அங்குஅரவு அல்குல் ஆடலும் காண்குதும்,
நாரதன் வீணை நயம்தெரி பாடலும்-யாழாசிரியனாகிய நாரத முனிவன் இசையின்பம் விளங்கப் பாடும் பாடலும், தோரிய மடந்தை வாரம் பாடலும், தோரிய மடந்தை பாடும் வாரப் பாடலும், ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய-இந்திரனுடைய செவியிடம் நிறையும்படி, நாடகம் உருப்பசி நல்காள் ஆகி-உருப்பசி நாடகம் நடத்திலள் ஆதலால், மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத் தங்குக இவள் எனச் சாபம் பெற்ற-வீணை மங்கலமிழக்க மண்மிசைத் தங்குக ; இவள் மண்ணிடைப் பிறக்க; எனச் சபித்தலின் அதனைப் பெற்று வந்து பிறந்த, மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய-மங்கையாகிய மாதவியின் வழியிலே பிறந்த, அங்கு அரவு அல்குல் ஆடலும் காண்குதும்-அரவு போலும் அல்குலையுடைய மாதவியின் ஆடலையும் அவ்விடத்துக் காண்போம்;
இவளது ஆடல் நெகிழ்ந்தமையால் அப்பாடல்களும் சிதைந்தன வென்றார். ஆகி-ஆயினமையால், மண்மிசைத் தங்குக என்றதனை வீணைக்கும் உருப்பசிக்கும் ஏற்றுக. அங்குக் காண்குதும் எனக் கூட்டுக. இவ்வரலாற்றை விளக்குதற்கு அடியார்க்கு நல்லார் காட்டிய மேற்கோட் செய்யுள்.
“வயந்த மாமலை நயந்த முனிவரன், எய்திய வவையி னிமையோர் வணங்க, இருந்த விந்திரன் றிருந்திழை யுருப்பசி, ஆடனிகழ்க பாடலோ டீங்கென, ஓவியச் சேனன் மேவின னெழுந்து, கோலமுங் கோப்பு நூலொடு புணர்ந்த, இசையு நடமு மிசையத் திருத்திக் கரந்துவர லெழினியொடு புகுந்தவன் பாடலிற், பொருமுக வெழினியிற் புறந்திகழ் தோற்றம் யாவரும் விழையும் பாவனை யாகலின், நயந்த காதற் சயந்தன் முகத்தின், நோக்கெதிர் நோக்கிய பூக்கமழ் கோதை, நாடிய வேட்கையி னாட னெகிழப், பாடன் முதலிய பல்வகைக் கருவிகள், எல்லாம் நெகிழ்தலி னொல்லா முனிவரன், ஒருதலை யின்றி யிருவர் நெஞ்சினும், காமக் குறிப்புக் கண்டனன் வெகுண்டு, சுந்தர மணிமுடியிந்திரன் மகனை, மாணா விறலோய் வேணு வாகென, இட்ட சாபம் பட்ட சயந்தன், சாப விடையருள் தவத்தோய் நீயென, மேவினன் பணிந்து மேதக வுரைப்ப, ஓடிய சாபத் துருப்பசி தலைக்கட்டுங், காலைக் கழையும் நீயே யாகி, மலையமால் வரையின் வந்து கண்ணுற்றுத், தலையரங் கேறிச் சார்தி யென்றவன், கலக நாரதன் கைக்கொள் வீணை, அலகி லம்பணமாகெனச் சபித்துத், தந்திரி யுவப்பத் தந்திரி நாரிற், பண்ணிய வீணை மண்மிசைப் பாடி, ஈண்டு வருகெனப் பூண்ட சாபம், இட்டவக் குறுமுனியாங்கே, விட்டன னென்ப வேந்தவை யகத்தென்”என்பது.
இவற்றானும், முன் அரங்கேற்று காதையில் “தெய்வ மால்வரைத் திருமுனி யருள, யெய்திய சாபத் திந்திர சிறுவனொடு, தலைக்கோற் றானத்துச் சாப நீங்கிய மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர்” என்றுரைத்தது முதலியவற்றானும் அறியப்படும் வரலாறாவது; ஒரு காலத்துப் பொதியின் முனிவனாகிய அகத்தியன் இந்திரனது அவைக்கு வர, அப்பொழுது இந்திரன் பாடலொடு உருப்பசியின் ஆடல் நிகழ்கவெனப் பணித்தனன். ஆண்டு இந்திரன் மகனாகிய சித்திரசேனன் கரந்துவர லெழினியுடன் புகுந்துபாட, உருப்பசியும் அவனும் ஒருவரை யொருவர் கண்டு காமுற்றமையின் அவளது ஆடல் நெகிழ்ந்தது; அதனால் ஏனைக் கருவிகளெல்லாம் நெகிழ்ந்தன; நாரதன் இதனை அறிவித்தல் கருதித் தனது யாழிற் பகைநரம்பு படப் பாடினன்; இவற்றையெல்லா முணர்ந்த குறுமுனிவன் நாரதனது வீணை மங்கலமிழப்ப மண்ணிலே மணையாய்க் கிடக்குமாறும், உருப்பசி புவியிலே பிறக்குமாறும், சயந்தன் பூமியில் மூங்கிலாய்த் தோன்றுமாறும் சபித்து, அவர்கள் வேண்டுதலாற் பின் சாபவிடை தந்தனன் என்பது.
-
௨௬-௭. துவர்இதழ்ச் செவ்வாய்த் துடிஇடை யோயே.
அமரர் தலைவனை வணங்குதும் யாம்எனச்
துவர் இதழ்ச் செவ்வாய்த் துடி இடையோயே-செந்நிறமுடைய உதட்டினையும் சிவந்த வாயையுமுடைய உடுக்கையின் நடுப்போலும் இடையை உடையோய், அமரர் தலைவனை வணங்குதும் யாம் என-அங்குப் பூசைகொள்ளும் இந்திரனை யாமும் வணங்குவோம் என்று சொல்லி அவளுடன் போந்து,
ஏகாரம் இசைநிறை யாமும் என்னும் உம்மை தொக்கது; என்று சொல்லிப் போந்து என விரித்துரைக்க.
-
௨௮-௩௪. சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்
உஞ்சையம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும் தாங்கா விளையுள்
காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப்
பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்திச்
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்
சிமையத்து இமையமும்-கொடு முடியையுடைய இமயமலையும், செழுநீர்க் கங்கையும்-வளவிய நீரையுடைய கங்கை யாற்றினையும், உஞ்சையம் பதியும்-அழகிய உஞ்சைப் பதியையும், விந்தத்து அடவியும்-விந்தமலை சூழ்ந்த காட்டினையும், வேங்கட மலையும்-வேங்கட மென்னும் மலையினையும், தாங்கா விளையுட் காவிரி நாடும்-நிலம்பொறாத விளையுளையுடைய காவிரி பாயும் சோணாட்டினையும், காட்டி-தன் காதலிக்குக் காட்டி, பின்னர்-அதன் பின்பு, பூவிரி படப்பைப் புகார் மருங்கு எய்தி-பூக்கள் விரிந்த தோட்டங்களையுடைய புகாரின் இடத்தை அடைந்து, சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி-இந்திரனைத் தொழுது முன் சொன்ன முறையைக் காட்டி, மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்-வளம் பொருந்திய அம்மூதூரில் நடக்கின்ற தேவரும் மகிழும் விழாவைத் தானும் காண்கின்றவன்;
உஞ்சை-உச்சயினி: அவந்தி நாட்டின் தலைமைப் பதி. இமயம் முதலியன முறையே ஒன்றினொன்று தெற்கின்கண் உள்ளனவாதலால் இடைப்பட்ட அவற்றை அம்முறையே காட்டிப் புகாரினை எய்தினன். விளைவின் மிகுதி கூறுவார் ‘தாங்கா விளையுள்’ என்றார். “வேலி யாயிரம் விளையுட் டாக”எனப் பிறரும் சோணாட்டின் விளைவுமிகுதி கூறினமை காண்க. விளையுள், உள் தொழிற்பெயர் விகுதி மணிவிழா என்பது பாடமாயின் அழகிய விழாவென்க.
-
௩௫-௭. மாயோன் பாணியும் வருணப் பூதர்
நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்ச்
மாயோன் பாணியும்-திருமாலைப் பரவும் தேவ பாணியும், வருணப் பூதர் நால்வகைப் பாணியும்-வருணப்பூதர் நால்வரையும் பரவும் நால்வகைத் தேவபாணியும், நலம்பெறு கொள்கை வான்ஊர் மதியமும்-பல்லுயிர்களும் தன் கலையால் நன்மைபெறுந் தன்மையுடைய வானில் ஊர்ந்து செல்லும் திங்களைப் பாடுந் தேவபாணியும், பாடி-பாடுதல் செய்து, பின்னர்-பின்பு.
மாதவி யாடிய பதினோராடல் கூறத் தொடங்கி, முதற்கண் அவற்றிற்கு முன் பாடப்படும் தேவபாணி கூறுகின்றார். பாணி-இசையையுடையது; பாட்டு. பாண்-இசை தெய்வத்தைப் பரவும் பாட்டுத் தேவபாணி எனப்படும். “ஏனையொன்றே. தேவர்ப் பராவுதன் முன்னிலைக் கண்ணே” என்பது காண்க. அஃது இயற்றமிழில் வருங்காற் கொச்சக வொருபோகாயும், பெருந்தேவபாணி, சிறு தேவபாணி என இருவகைத்தாயும் வரும் என்பதும், அங்ஙனம் வரும் தரவினை நிலையென அடக்கி, முகத்திற் படுந்தரவினை முகநிலை யெனவும், இடை நிற்பனவற்றை இடை நிலையெனவும், இறுதியில் நிற்பனவற்றை முரிநிலை யெனவும் பெயர் கூறுவர் என்பதும், அவை இசைத்தமிழின் கண்ணும் முகநிலை, கொச்சகம், முரி எனப்படும் என்பதும், மற்று, இசைப்பாவானது செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, முத்தகம், பெருவண்ணம், ஆற்றுவரி, கானல்வரி, விரிமுரண், தலைபோகு மண்டிலம் எனப்பத்து வகைப்படுமென்பதும், இன்னும், சிந்து, திரிபதை, சவலை, சமபாத விருத்தம், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, வண்ணம் என ஒன்பது வகைப்படும் என்பதும், நாடகத் தமிழில் தேவபாணி வருங்காற் பல தேவரும், வருணப் பூதரும், அவரணியும் தாரும் ஆடையும் நிறனும் கொடியும் அவராற் பெறவேண்டுவனவும் கூறி மூவடி முக்கால் வெண்பாவால் துதிக்கப்படுவர் என்பதும் முறையே செய்யுளியலுடையார். இசை நுணுக்கமுடைய சிகண்டியார். பஞ்சமரபுடைய அறிவனார், மதிவாணனார், முதலிய தொல்லாசிரியர்களின் கொள்கைகளாம்.
இனி, பதினோராடற்கும் முகநிலையாகிய தேவபாணியாவது காத்தற் கடவுளாகிய மாயோன் பாணியென்ப. அது “மலர்மிசைத் திருவினை வலத்தினி லமைத்தவன், மறிதிரைக் கடலினை மதித்திட வடைத்தவன், இலகொளித்த தடவரை கரத்தினி லெடுத்தவன், இனநிரைத் தொகைகளை யிசைத்தலி லழைத்தவன், முலையுணத் தருமவள் நலத்தினை முடித்தவன் முடிகள்பத் துடையவ னுரத்தினை யறுத்தவன், உலகனைத் தையுமொரு பதத்தினி லொடுக்கினன். ஒளிமலர் கழல்தரு வதற்கினி யழைத்துமே” என்பது. இஃது எண்சீரான் வந்த கொச்சக வொருபோகு. பண்-கௌசிகம். தாளம்-இரண்டொத் துடைத் தடாரம்.
நால்வகை வருணப்பூதர் பாணி வந்துழிக் காண்க. சந்திரனைப்பாடும் தேவபாணி: “குரைகடன் மதிக்கு மதலையை குறுமுயலொளிக்கு மரணினை, இரவிரு ளகற்று நிலவினை யிறையவன் முடித்தவணியினை, கரியவன் மனத்தினுதித்தனை கயிரவ மலர்த்து மகிழ்நனை, பரவுநர் தமக்கு நினதிரு பதமலர் தபுக்க வினையையே” என்பது.
-
௩௮. சீர்இயல் பொலிய நீர்அல நீங்கப்
சீர்இயல் பொலிய நீர் அல நீங்க-அவதாளம் நீங்கத் தாளவியல்பு பொலிவு பெற;
நீங்கப் பொலிய என மாறுக. நீங்குதலாற் பொலிவுற எனினுமமையும். இவற்றை மேல் மாதவிக்கு அடையாக்குக.
-
௩௯-௪௩. பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்
பாரதி ஆடிய பாரதி அரங்கத்து-பாரதியாடினமையாற் பாரதியரங்கமெனப் பெயர்பெற்ற சுடுகாட்டிலே, திரிபுரம் எரியத் தேவர் வேண்ட-தேவர் திரிபுரத்தை எரியச் செய்ய வேண்டுதலால், எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப-வடவைத் தீயைத் தலையிலேயுடைய பெரிய அம்பு ஏவல் கேட்ட வளவிலே, உடையவள் ஒருதிறன் ஆக-உமையவள் ஒரு பக்கமாக, ஓங்கிய இமையவன்-தேவர் யாவரினும் உயர்ந்த இறைவன், ஆடிய கொடு கொட்டி ஆடலும்-வெற்றிக் களிப்பாற் கைகொட்டி நின்று ஆடிய கொடுகொட்டி யென்னும் ஆடலும்;
பாரதி-பைரவி. அவளாடுதலாற் சுடுகாடு பாரதி யரங்கம் எனப்படுவதாயிற்று. எரிய-எரிவிக்க; அம்பு ஏவல்கேட்பப் புரம் எரிய என மாறுதலுமாம். பேரம்பு-திருமாலாகிய அம்பு. அதற்கு முனை அங்கியங் கடவுள் என்க. ஏவல் கேட்டலாவது புரஞ்சுடுதல். அப்புரத்தில் அவுணர் வெந்துவிழுந்த வெண்பலிக் குவையாகிய பாரதி யரங்கம் என்றவாறு உமையவள் ஒருபால்நின்று பாணி தூக்குச் சீர் என்னும் தாளங்களைச் செலுத்த என விரித்தலுமாம். திரிபுரம் தீமடுத் தெரியக் கண்டு இரங்காது கைகொட்டி யெனப் பெயர் கூறப்பட்டது. கொடுங்கொட்டி யெனற்பாலது விகாரமாயிற்று.
-
௪௪-௫. தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும்
தேர்முன் நின்ற திசைமுகன் காண-தேரின் முன்னிடத்து நின்ற நான்முகன் காணும்படி, பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும் – பாரதி வடிவாய் இறைவன் வெண்ணீற்றை யணிந்து ஆடிய பெரிய பாண்டரங்கக் கூத்தும்:
வானோராகிய தேரில் நான்மறைப் புரவி பூட்டிக் கூர்முட் பிடித்துப் பாகனாய் நின்ற திசைமுகன் என்க. இறைவன் என்பது அதிகாரத்தாற் பாண்டரங்கம் நிறம் பற்றிய பெயர். நின்று என்பது பாடமாயின், காண நின்று ஆடிய வென்க.
-
௪Ü-௮. கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும்,
கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக- கஞ்சனுடைய வஞ்சத்தை வெல்லுதற் பொருட்டாக, அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்-கரிய நிறத்தையுடைய மாயோன் ஆடிய கூத்துக்களுள், அல்லியத் தொகுதியும்-கஞ்சன் வஞ்சத்தின் வந்த யானையின் கொம்பை ஒடித்தற்கு நின்றாடிய அல்லியத் தொகுதி என்னுங் கூத்தும்;
அஞ்சன வண்ணன் ஆடலுள் கடத்தற்காக ஆடிய அல்லியத் தொகுதி யென்றுமாம். மாயோனாடல் பத்து என்பர். தொகுதி யென்றார். முகம், மார்பு, கை, கால்களின் வட்டணை அவிநயம் முதலியன விருந்து தொழில் செய்யாது நிற்றலின் ; என்னை? “ஆடலின்றி நிற்பவை யெல்லாம், மாயோ னாடும் வைணவ நிலையே” என்றாராகலின், அல்லியம் என்பதனை அளிப்பேடு என்பாரு முளர்.
-
௪௮-௯. அவுணன் கடந்த மல்லின் ஆடலும்
அவுணற் கடந்த-மாயோன் மல்லனாய் அவுணனைக் கொன்ற, மல்லின ஆடலும்-மற் கூத்தும் ;
அவுணன்-வாணாகரன் அவுணற்கடந்த என்பதற்கு அவுணன் எண்ணத்தைக் கடந்த வென்றுரைப்பாரு முளர். மாயோன் என்பது அதிகாரத்தாற் பெற்றாம்.
-
௪௯-௫௧. மாக்கடல் நடுவண்
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற
சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்,
மாக்கடல் நடுவண்-கரிய கடலின் நடுவே, நீர்த்திரை அரங்கத்து-நீரின் அலையே அரங்கமாக நின்று, நிகர்த்து முன் நின்ற சூர்த்திறம் கடந்தோன்-எதிர்த்து முன்னின்ற சூரனது வஞ்சத்தையறிந்து அவன் போரைக் கடந்த முருகன், ஆடிய துடியும்-துடி கொட்டி யாடிய துடிக் கூத்தும்;
கடல் நடுவண் சூர்த்திறங் கடந்தோன் அரங்கத்து ஆடிய துடியென்க. திறம்-வேற்றுருவாகிய வஞ்சம்.
-
௫௨-௩. படைவீழ்த்து அவுணர் பையுள் எய்தக்
குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்,
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும்
படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த-அவுணர்கள் – தாம் போர்செய்தற் கெடுத்த படைக்கலங்களைப் போரிற்காற்றாது போகட்டு வருத்த முற்றவளவிலே, குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்-அவர்முன்னை முருகன் தன் குடையை முன்னே சாய்த்து அதுவே ஒருமுக வெழினியாக நின்று ஆடிய குடைக்கூத்தும்;
வீழ்த்தல் இரண்டனுள் முன்னது போகடுதல்; பின்னது சாய்த்தல். முருகன் என்பது அதிகாரத்தாற் பெற்றாம்.
வாணன் பேரூர் மறுகிடை நடந்து – வாணாகரனது சோ என்னும் நகர வீதியிற் சென்று, நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடமும்-நெடிய பூமியைத் தாவியளந்த மாயோன் குடங்கொண்டு ஆடிய குடக்கூத்தும்;
வாணன் தன் மகள் உழை காரணமாகக் காமன் மகன் அநிருத்தனைச் சிறை வைத்தலின், அவனை மீட்டற்பொருட்டு உலோகங்களாலும் மண்ணாலும் இயற்றிய குடங்களைக் கொண்டு மாயோன் ஆடினனென்க. இது விநோதக் கூத்து ஆறனுள் ஒன்று.
-
௫௬-௭. ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்,
ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்து-ஆண்மைத் தன்மையிற் றிரிந்த பெண்மைக் கோலத்தோடு, காமன் ஆடிய பேடி ஆடலும்-காமன் ஆடிய பேடென்னும் கூத்தும்;
ஆண்மைத் தன்மையிற் றிரிதலாவது விகாரமும் வீரியமும் நுகரும் பெற்றியும் பத்தியும் பிறவுமின்றாதல் எனவும், ஆண்மை திரிந்த வென்பதனால் தாடியும், பெண்மைக் கோலத்தென்பதனால் முலை முதலிய பெண்ணுறுப்புப் பலவும் உடைய பேடி எனவும் கொள்க. இவ்வியல்பு, “சுரியற் றாடி மருள்படு பூங்குழற், பவளச் செவ்வாய்த் தவள வொண்ணகை, ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக், கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதற், காந்தளஞ் செங்கை யேந்திள வன்முலை, அகன்ற வல்கு லந்நுண் மருங்குல், இகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து,வாணன் பேரூர் மறுகிடை நடந்து, நீணில
மளந்தோன்மகன்முன் னாடிய, பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்” என மணிமேகலையும் விரித்துரைத்தவாற்றால் அறியப்படும். அடியார்க்கு நல்லா ருரையில் ‘இது ஆண்பேடென்று பெயர் பெறும்’எனக் காணப்படுவது ஆராய்தற் குரித்து. இது, தன் மகன் அநிருத்தனைச் சிறை மீட்டுக் காமன் ‘சோ’ நகரத்தாடியது.
-
௫௮-௯. காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்,
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்-காயுஞ்சினத்தையுடைய அவுணர் வஞ்சத்தாற் செய்யும் கொடுந்தொழிலைப் பொறாதவளாய், மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்-துர்க்கை மரக்கால் கொண்டு ஆடிய மரக்காற் கூத்தும்;
மாயவள்-துர்க்கை. மரக்கால்-மரத்தாலாகிய கால். அவுணர் உண்மைப் போரால் வெல்லுத லாற்றாது வஞ்சப்போரால் வெல்லுதல் கருதி, பாம்பு தேள் முதலியனவாய்ப் புகுதலை யுணர்ந்து, அவள் அவற்றை உழச்சிக் களைதற்கு மரக்கால் கொண்டு ஆடினள் என்க.
-
௬0-௧. செருவெம் கோலம் அவுணர் நீங்கத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையும்,
செருவெங்கோலம் அவுணர் நீங்க-அவுணர் வெவ்விய போர்க்கோலம் ஒழிய, திருவின் செய்யோள் ஆடிய பாவையும்-செந்நிறமுடைய திருமகள் கொல்லிப்பாவை வடிவாய் ஆடிய பாவைக் கூத்தும்;
அவுணர் போர்க்கோலத்தோடிருந்தும் போர் செய்யாது மோகித்து வீழ்தலின் கோலம் நீங்க என்றார். திருவின் செய்யோள்-திருவாகிய செய்யோள் இன் சாரியை அல்வழிக்கண் வந்தது.
-
௬௨-௩. வயல்உழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்,
வயல் உழை நின்று வடக்கு வாயினுள்-வாணபுரமாகிய சோநகரின் வடக்கு வாயிற்கண் உளதாகிய வயலிடத்தே நின்று, அயிராணி மடந்தை ஆடிய கடையமும்-இந்திராணி யென்னும் மடந்தை கடைசியர் வடிவுகொண்டு ஆடிய கடையக் கூத்தும் என்னும் இவற்றை;
வடக்கு வாயில் என்றமையால் வாணபுரம் வருவிக்கப்பட்டது. வயலுழை நின்று என்றமையால் கடையம் கடைசியர் வடிவுகொண்டு ஆடியது என்க. கடைசியர்-உழத்தியர்”; “வயன் மாதர்”என்றார் சேக்கிழாரும். இக் கூத்துக்கள் முறையே இன்னின்னாரால் நிகழ்த்தப் பெற்றன வென்பதும். இவற்றிற்குரிய உறுப்புக்கள் இத்துணைய வென்பதும் பின்வருஞ் சூத்திரங்களால் அறியப்படும்.
“கொட்டி கொடுவிடையோ னாடிற் றதற்குறுப்
பொட்டிய நான்கா மெனல்” [௧]
“பாண்டரங்க முக்கணா னாடிற் றதற்குறுப்
பாய்ந்தன வாறா மெனல்” [௨]
“அல்லிய மாயவ னாடிற் றதற்குறுப்புச்
சொல்லுப வாறா மெனல்” [௩]
“நெடிய னாடிரற்று மல்லாடன் மல்லிற்
கொடியா வுறுப்போரைத் தாம்” [௪]
“துடியாடல் வேன்முருக னாட லதனுக்
கொடியா வுறுப்போரைந் தாம்” [௫]
“அறுமுகத்தோ னாடல் குடைமற் றதற்குப்
பெறுமுறுப்பு நான்கா மென்க” [௬]
“குடத்தாடல் குன்றெடுத்தோ னாட லதனுக்
கடைக்குப வைந்துறுப் பாய்ந்து” [௭]
“காமன தாடல்பே டாட லதற்குறுப்பு
வாய்மையி னாராயி னான்கு” [௮]
“மாயவ ளாடன் மரக்கா லதற்குறுப்பு
நாமவகையிற் சொல்லுங்கா னான்கு [௯]
“பாவை திருமக ளாடிற் றதற்குறுப்
போவாம லொன்றுடனே யொன்று” [௰]
“கடைய மயிராணி யாடிற் றதனுக்
கடைய வுறுப்புக்க ளாறு.” [௧௧]
பதினோராடலுள் இறைவனாடிய இரண்டினை முன்வைத்தும், மாயோனாடிய இரண்டினையும், முருகன் ஆடிய இரண்டினையும் முறையே அவற்றின் பின் வைத்தும், வென்றிபற்றி நிகழ்ந்த இக் கூத்துக்களின் பின், காமத்தாற் சிறைப்பட்ட அநிருத்தனை மீட்டல் காரணமாக மாயோனாடிய விநோதக்கூத்தினையும், அதன்பின் அவன் மகனாகிய காமன் ஆண்மை திரிந்து பேடியுருக்கொண்டாடிய கூத்தினையும் பின்னர்ப் பெண் தெய்வங்களுள்ளே முறையே மாயவளும் திருமகளும் அயிராணியும் ஆடியவற்றையும் வைத்தும் அவரவர் தகுதிக்கும், ஆண்மை பெண்மைகட்கும், கூத்துக்களின் இயல்புகட்கும் பொருந்த முறைப்படுத்தியுள்ள இளங்கோ வடிகளின் திப்பியப் புலமை மாண்பு செப்புதற்கரிய தொன்றாம்.
-
௬௪-௭. அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின்
நிலையும் படிதமும் நீங்கா மரபின்
பதினோர் ஆடலும் பாட்டின் பகுதியும்
விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய்.
அவரவர் அணியுடன்-அங்ஙனம் கூறப்பட்ட அவரவருடைய அணிகளுடனும், அவரவர் கொள்கையின்-அவரவர் கொள்கையுடனும் ஆடிய, நிலையும் படிதமும்-நின்றாடலும் வீழ்ந்தாடலுமாகிய, நீங்கா மரபின்-அவரவரை நீங்காத மரபினையுடைய, பதினோராடலும்-பதினொரு வகைப்பட்ட ஆடல்களையும், பாட்டின் பகுதியும்-அவ்வாடல்களுக்கேற்ற பாடல்களின் வேறு பாட்டையும், விதி மாண் கொள்கையின் – அவற்றிற்கு விதித்த சிறந்த கொள்கையோடு, விளங்கக் காணாய்-புலப்படக் காண்பாயாக.
நிலை-நின்றாடல். படிதம்-படிந்தாடல்; வீழ்ந்தாடல். பதினோராடலுள் நின்றாடல் ஆறு; வீழ்ந்தாடல் ஐந்து. அவற்றை. “அல்லியங் கொட்டி குடைகுடம் பாண்டரங்கம், மல்லுட னின்றாட லாறு” “துடிகடையம் பேடு மரக்காலே பாவை, வடிவுடன் வீழ்ந்தாட லைந்து” என்பவற்றான் அறிக. கொடுகொட்டி முதல் கடையம் ஈறாகவுள்ள இவற்றைச் சீரியல் பொலிய அணியுடனும் கொள்கையுடனும் ஆடிய பதினோராடல் என்க.
-
௬௮-௭௧. தாதுஅவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவள்எனக்
காதலிக்கு உரைத்துக் கண்டுமகிழ்வு எய்திய
மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும்,
தாது அவிழ் பூம்பொழில் இருந்து-அன்று மது வொழுகும் பூம்பொழிற்கண்ணே யிருந்து, யான் கூறிய-என்னாற் கூறப்பட்ட, மாதவி மரபின் மாதவி இவள் எனக் காதலிக்கு உரைத்து-உருப்பசியாகிய மாதவி மரபின் வந்த மாதவி இவள் காணென்று தன் காதலிக்குக் கூறி, கண்டு மகிழ்வு எய்திய-தானும் கண்டு மகிழ்ச்சியுற்ற, மேதகு சிறப்பின் விஞ்சையள் அன்றியும்-மேன்மை பொருந்திய சிறப்பினையுடைய விஞ்சையனும், அவனன்றியும்;
பதினோராடலும் ஆடிக் காட்டிய மாதவியைச் சுட்டி, மாதவியிவளெனக் கூறினனென்க.
-
௭௨-௫. அந்தரத்து உள்ளோர் அறியா மரபின்
வந்துகாண் குறூஉம் வானவன் விழவும்
ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள
ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்பப்
அந்தரத்து உள்ளோர்-விண்ணுலகிலுள்ள தேவர்களும், அறியா மரபின் வந்து காண்குறூஉம்-பிறர் அறியாதபடி உள்வரி கொண்டுவந்து காணும், வானவன் விழவும்-இந்திரவிழவும், ஆடலும் கோலமும் அணியும் கடைக் கொள-மாதவி யாடலும் அவ்வாடற்குச் சமைந்த கோலமும் ஆடுதலாற் பிறந்த அழகும் முடிந்தமையால், ஊடற் கோலமோடு இருந்தோன் உவப்ப-வெறுப்போ டிருந்த கோவலன் மகிழும்படி;
ஆடற்கோலம் என்று பாடங்கொண்டு மாதவி பதினோராடலுக்கும் கொண்ட கோலம் என்பர் அரும்பதவுரையாசிரியர். அணி-பாவ ரசம்; மெய்ப்பாடு. ஊடல்-வெறுப்பு; அகத்து நிகழ்ந்த வெறுப்பை முகம் தோற்றுவித்தலின் “ஊடற் கோலமோடு”என்றார். வெறுப்பிற்குக் காரணம் திருநாள் முடிந்தமை. அன்றி, மாதவியின் ஆடல் முதலியன தனது அறிவு நிறை யோர்ப்புக் கடைப்பிடிகளைக் கவர்ந்தமையின் பிறர்க்கும் இவ்வாறாம் என்னும் வெறுப்பு என்றும், பலரும் இவளைப்பற்றிப் பார்த்தலிற் பொறாமையான் வந்த வெறுப்பு என்றும் கொள்ளலுமாம்.
-
௭௬-௯. பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத்து இருவகை ஓமா லிகையினும்
ஊறின நல்நீர் உரைத்தநெய் வாசம்
நாறுஇருங் கூந்தல் நலம்பெற ஆட்டி,
பத்துத் துவரினும்-ப்த்து வகைப்பட்ட துவரினானும், ஐந்து விரையினும்-ஐந்து வகைப்பட்ட விரையினானும், முப்பத்திருவகை ஓமாலிகையினும்-முப்பத்திரண்டு வகைப்பட்ட ஓமாலிகையானும், ஊறின நல்நீர் ஊறிக் காயப்பட்ட நல்ல நீராலே, உரைத்த நெய் வாசம் வாச நெய் தேய்த்த, நாறு இருங்கூந்தல்-மணங்கமழும் கரிய கூந்தலை, நலம்பெற ஆட்டி-நன்மைபெற ஆட்டி;
துவர் முதலியன அவற்றையுடைய பொருளுக்காயின. வாச நெய் உரைத்த என மாறுக. இருமை-கருமை. துவர் முதலியவற்றைப் பின்வரும் மேற்கோள்களான் அறிக.
“பூவந்தி திரிபலை புணர்கருங் காலி, நாவ லோடு நாற்பான் மரமே.” “கொட்டந் துருக்கந் தகர மகிலாரம், ஒட்டிய வைந்தும் விரை.”
“இலவங்கம் பச்சிலை கச்சோல மேலம், குலவிய நாகணங் கொட்டம் நிலவிய, நாக மதாவரிசி தக்கோல நன்னாரி, வேகமில் வெண்கோட்ட மேவுசீர்-போகாத, கத்தூரி வேரி யிலாமிச்சங் கண்டிவ் வெண்ணெய். ஒத்தகடு நெல்லி யுயர்தான்றி-துத்தமொடு, வண்ணக்கச் சோலமரேணுக மாஞ்சியுடன், என்னுஞ் சயிலேக மின்புழுகு-கண்ணுநறும், புன்னைநறுந் தாது புலியுகிர் பூஞ்சரளம், பின்னு தமாலம் பெருவகுளம்-பன்னும். பதுமுக நுண்ணேலம் பைங்கொடு வேரி, கதிர்நகையாயோமாலி கை” பிறவா றுரைப்பாரு முளர்.
-
௮0-௧. புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை
வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி
புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை-அங்ஙனம் நீராட்டிப் பொலிவினையுடைய புகையால் ஈரம் புலர்த்திய கூந்தலை, வகைதொறும் மான்மதங் கொழுஞ்சேறு ஊட்டி-ஐந்து வகையாக வகுத்த வகைதோறும் கொளுவிய கத்தூரிக் குழம்பு ஊட்டி;
பூ-பொலிவு ; அதனையுடைய அகிற்புகை யென்க.
-
௮௨-௩. அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி
நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப்,
அலத்தகம் ஊட்டிய அம் செம் சீறடி-செம்பஞ்சிக் குழம் பூட்டிய அழகிய சிவந்த சிறிய அடியின், நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇ-நன்மை தக்க மெல்லிய விரலிடத்தே நன்றாகிய அணிகளைச் செறித்து;
அணி-மகரவாய் மோதிரம். பீலி, காலாழி முதலியன.
-
௮௪-௫. பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை அரியகம்-பாதசாலமும் சிலம்பும் பாடகமும் சதங்கையும் காற்சரியும் என்னுமிவற்றை, காலுக்கு அமைவு உற அணிந்து-காலுக்குப் பொருத்த முறும்படி அணிந்து ;
பரியகமாவது “பொன்னிதழ் பொதிந்த மன்னிற மணிவடம் பின்னிய தொடரிற் பெருவிரன் மோதிரம், தன்னொடு தொடக்கித் தமனியச் சிலம்பின், புறவாய் சூழ்ந்து புணரவைப் பதுவே” என்பர். பரியகம்-காற்சவடியென்றும், அரியகம்-பாதசாலம் என்றும் கூறுவர் அரும்பத வுரையாசிரியர்.
-
௮௬. குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,
குறங்குசெறி திரள் குறங்கினில் செறித்து-குறங்கு செறியென்னும் அணியைத் திரண்ட குறங்கிடத்தே செறித்து;
குறங்கு-கவான் ; துடை. குறங்கு செறியணி என்பதும் பாடம்.
-
௮௭-௮. பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ,
பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ்-பருமுத்தின் கோவை முப்பத்திரண்டாற் செய்த விரிசிகை என்னும் அணியை, நிறம் கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ-நீல நிறம் விளங்கும் பூந்தொழிலையுடைய நீலச்சாத ருடையின்மீதே உடுத்து;
பிறங்கிய முத்து-பருமுத்து. காழ்-கோவை. முத்தரை-அரையின் முத்துவடம் என்பர் அரும்பதவுரையாசிரியர். முத்தரை யென்பதனை ஒரு சொல்லாகக் கொண்டு முத்து எனப் பொருள் கோடல் பொருந்தும். என்னை? ஈண்டு அடியார்க்கு நல்லார் காட்டிய மேற்கோள் ஒன்றிலும் “பிறங்கிய முத்தரை முப்பத்திருகாழ்”என்றே காணப்படுதலின், பெரு முத்தரையர் என்பதும் பெரு முத்துடையார் என்னும் பொருளினதாகும். பெருமுத்தரை-பெருமுத்து, நிறம் கிளர்-முத்தின் நிறம் விளங்குதற்கு ஏதுவாகிய என்றுமாம். விரிசிகை விரிந்து கலை போன்றிருத்தலின் உடீஇ என்றார். விரிசிகையுடன் துகிலை யுடுத்து என்றுமாம்.
-
௮௯-௯0. காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய-அழகிய கண்டிகை யென்னும் அணியுடன் சேர்த்துக் கட்டிய: தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து-முத்த வளையைத் தோளுக்கு அணிந்து;
தூமணி-முத்து. கண்டிகை-கண்டசரம் ; கழுத்தி லணியும் ஓர் அணி. “மாணிக்க வளையுடன் நீங்காமற் பொற்றொடராற் பிணித்த முத்துவளை”என்பது அடியார்க்கு நல்லாருரை.
-
௯௧-௪. மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,
மத்தக மணியொடு வயிரம் கட்டிய சித்தரச் சூடகம்-முகப்பிற் கட்டிய மாணிக்கத்தோடே பத்திகளில் வயிரங்களழுத்தப்பட்ட சித்திரத் தொழிலையுடைய சூடகமும், செம்பொற் கைவளை-செம்பொன்னாற் செய்த வளையும், பரியகம்-நவமணி வளையும், வால்வளை-சங்க வளையும், பவழப் பல்வளை-பலவாகிய பவழவளைகளும் என்னும் இவற்றை, அரி மயிர் முன் கைக்கு அமைவுற அணிந்து-மெல்லிய மயிரையுடைய முன் கைக்குப் பொருத்தமுற அணிந்து;
சூடகம்-கடகமும், பரியகம்-கைச்சரியும், வால்வளை-வெள்ளி வளையும் என்னலுமாம்.
-
௯௫-௮. வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம்
கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,
வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம்-வாளை மீனின் அங்காந்த வாயையொக்கும் முடக்கு மோதிரமும், கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்-ஒளிமிக்க செந்நிறம் விளங்குகின்ற மாணிக்கம் பதித்த மோதிரமும், வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி-பக்கத்தே வளைந்து திரையும் ஒளியையுடைய வயிரம் சூழ்ந்த மரகதமணித் தாள்செறியும் என்னும் இவற்றை, காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து-காந்தள் மலர்போலும் மெல்லிய விரல்கள் மறையும்படி அணிந்து ;
வாளையின் அங்காந்த வாயை வணங்குதலுறுவிக்கும் நெளியென்றுமாம். கேழ்-முன்னது ஒளியும், பின்னது நிறமுமாம். கிளர்மணி மோதிரம்-இரத்தினங் கட்டின அடுக்காழியென்பது அரும்பதவுரை. வாங்குவில்-வளைந்த விற்போல் வளைந்து செல்லும் ஒளி. வாள் போன்ற ஒளி வாள் எனவும் விற்போன்ற ஒளி வில் எனவும் பெயர் கூறப்படும் என்க. தாள்செறி-விரலடியிற் செறிப்பது.
-
௯௯-௧00. சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை
அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து
சங்கிலி-வீரசங்கிலியும், நுண் தொடர்-நுண்ணிய சங்கிலியும், பூண் ஞாண்-பூணப்படும் சாடும், புனைவினை-புனையப்பட்ட தொழில்களையுடைய சவடி சரப்பளி முதலாயினவும் என்னும் இவற்றை, அம் கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து-அழகிய கழுத்திடத்தே முத்தாரத்தோடு அணிந்து;
நுழைவினை நுண்ஞாண் என்று பாடங்கொண்டு நுண்ணிய தொழிலையுடைய ஞாண் என்றுரைப்பர் அரும்பதவுரையாசிரியர்.கழுத்தின் முன்னிடத்தே தாழ அணிந்தென்க.
-
௧0௧-௨. கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு
கயிற்கடை ஒழுகிய-முற்கூறிய சங்கிலி முதலியவற்றை ஒன்றாய் இணைத்திருக்கும் கொக்குவாயினின்றும் பின்புறம் தாழ்ந்த, காமர் தூமணி செயத்தகு கோவையின் -விருப்பஞ் செய்யும் தூய முத்தினாற் செய்யப்பட்ட கோவையாகிய பின்றாலியால், சிறுபுறம் மறைத்து-பிடரினை மறைத்து ;
கயிற்கடை-கொக்குவாய் ; கொக்கியென வழங்குவது. சிறுபுறம்-பிடர்; முதுகுமாம். ஆங்கு ; அசை.
-
௧0௩-௫. இந்திர நீலத்து இடைஇடை திரண்ட
சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
அங்காது அகவயின் அழகுற அணிந்து,
இந்திர நீலத்து இடையிடை திரண்ட சந்திர பாணித்தகைபெறு கடிப்பிணை-இந்திர நீலத்துடன் இடையிடையே திரண்ட வயிரத்தாற் கட்டப்பட்டு அழகு பெற்ற குதம்பையென்னும் அணியை, அம் காது அகவயின் அழகுற அணிந்து-வடிந்த காதனிடத்தே அழகு மிகும்படி அணிந்து;
முகப்பிற் கட்டின இந்திரநீலத்தின் இடையிடை வயிரங்கட்டின நீலக்குதம்பையை அணிந்தென்று அடியார்க்கு நல்லாரும், நீலக்குதம்பை வயிரக்குதம்பையாகிய இரண்டையும் இருகாதிலும் அணிந்தென்று அரும்பதவுரையாசிரியரும் கருதுவர். சந்திரபாணி-சந்திரபாணியென்னும் பெயருடைய வயிரம்.
-
௧0௬-௮. தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி
மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து,
தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி-சீதேவியென்னும் பணியுடனே வலம்புரிச் சங்கும் தொய்யகம் புல்லகம் என்பனவும் தம்மில் தொடர்ந்து ஒன்றான தலைக்கோலத்தை, மை ஈர் ஓதிக்கு மாண்பு உற அணிந்து-கரிய பெரிய கூந்தலுக்கு அழகுறும்படி அணிந்து;
செழுநீர்-வலம்புரிக்கு அடை. வலம்புரிச் சங்குபோலும் அணிவலம்புரி யெனப்பட்டது. தொய்யகம்-பூரப்பாளை என்றும், புல்லகம்-தென்பல்லி வடபல்லி என்றும் கூறுவர். இருமை ஓதி ஈரோதி யென்றாயிற்று: ஈர் – கரிய என்றுமாம்.
-
௧0௯-௧0. கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்
கூடலும், ஊடலும் கோவலற்கு அளித்து-கூடுதலையும் பின்னர் ஊடுதலையும் கோவலற்கு அளித்து, பாடு அமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்-படுத்தமைந்த சேக்கையாகிய பள்ளியிடத்தே இருந்தவள்;
ஊடல் –பெண்மையும் நாணும் அழிந்து வந்து வலிதிற் குறையுற்றுக் கூடுந் துணையும் பிரிவாற்றியிருந்தீராகலின் நீர் அன்பிலீர் என ஊடுவது. ஊடலையளித்தல்-அதனால் வரும்துன்பத்தையளித்தல். பாடு ஒன்றின்மே லொன்றாகப் படுத்தல். சேக்கை-சேருமிடம். ஊடற்கோலமோடிருந்தோன் உவப்பக் கூந்தலை நீராட்டி மான்மதச் சேறூட்டிக் கால்விரல் முதல் ஓதி ஈறாக அணியத்தகுவன அணிந்து அளித்து இருந்தோள் என்க.
-
௧௧௧-௪. உருகெழு மூதார் உவவுத்தலை வந்தெனப்
பெருநீர் போகும் இரியல் மாக்களொடு
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி,
உருகெழு மூதூர் உவவுத் தலை வந்தெனப் பெரு நீர் போகும் இரியல்மாக்களொடு-உவாநாள் தலைவந்ததாக உட்குப்பொருந்திய மூதூரினின்றும் கடலாடுதற்கு விரைந்து செல்லும் மாக்களோடு, மடல் அவிழ்கானற் கடல் விளையாட்டு-தாழை புன்னை முதலியவற்றின் இதழ்கள் விரியும் சோலையையுடைய கடல்விளையாட்டை, காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி-தானும் காண்டலை விருப்பத்தோடே வேண்டினளாகி;
தலைவருதல், ஒருசொல். தலைவந்தென மூதூரினின்றும் போகும் மாக்கள் என மாறுக. உரு-உட்கு; அச்சம். பகைவர்க்கு அச்சத்தை விளைக்கு மென்க. உவா-நிறைமதிநாள். இருபத்தெட்டு நாளும் விழா நடந்து கொடி யிறங்கி விழாவாற்றுப்படுத்த பின்னாளில் உவா வந்ததாகலின் கடலின்கண் நீராடச் செல்வாராயினர். கடற்கரைக்கண் இடம் பிடிக்க விரைந்து செல்கின்றாராகலின், ‘இரியன் மாக்கள்’என்றார்; இரியல்-விரைவு, காண்டல்-நீர்ப்போரில் வெற்றி தோல்வி காண்டல். வேண்டினள் காண்டற்குத் தானும் போகக் கோவலனை வேண்டிக் கொண்டாள்; எனவே அவனும் உடன்பட்டமை பெற்றாம்.
-
௧௧௫-௨0. பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப
வைகறை யாமம் வாரணம் காட்ட
வெள்ளி விளக்கம் நள்இருள் கடியத்
தார்அணி மார்பனொடு பேர்அணி அணிந்து
வான வண்கையன் அத்திரி ஏற
மான்அமர் நோக்கியும் வையம் ஏறிக்
பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப-பொய்கைகளில் தாமரைப் பூஞ்சேக்கையில் துயின்ற புட்கள் வாய் விட்டுப் புலம்ப, வைகறை யாமம் வாரணம் காட்ட-வைகறைப் பொழுதென்பதனை வாரணங்கள் அறிவிக்க, வெள்ளி விளக்கம் நள் இருள் கடிய-வெள்ளியெழுந்த விளக்கம் செறிந்த இருளை நீக்க, தார் அணி மார்பனொடு-மாலையணிந்த மார்பினையுடைய கோவலனோடு, பேர் அணி அணிந்து-மதாணி முதலிய பேரணி கலங்களை அணிந்து, வான வண் கையன் அத்திரி ஏற-மேகம் போலும் வண்மையுடைய கையினனாகிய அவன் அரச வாகனமாகிய அத்திரியில் ஏற, மான் அமர் நோக்கியும் வையம் ஏறி-மானின் பார்வை பொருந்திய நோக்கினையுடைய மாதவியும் கொல்லாப் பண்டியில் ஏறி;
வைகறையாகிய யாமம் என்க. வாரணம்-கோழி, சங்கு; கோழியின் குரலும் சங்கின் முழக்கமும் வைகறையில் எழுவன. அத்திரி-கோவேறு கழுதை; இதனைக் குதிரையில் ஒரு சாதியென்பாருமுளர். வையம்-கொல்லாப் பண்டி; இது கோவால வண்டி என்ற உருவுடனும் காணப் படுகின்றது.வையம்-தேர் என்றும், கூடாரப்பண்டி யென்றும் கூறலுமாம். அவனும் உடன் செல்ல உடம்பட்ட வளவிலே பேரணியணிந்து, வண்கையன் அத்திரி யேற, நோக்கியும் மார்பனொடு செல்ல வையமேறியென்க.
-
௧௨௧-௭. கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை
மாடமலி மறுகின் பீடிகைத் தெருவின்
மலர்அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்துஆங்கு
அலர்க்கொடி அறுகும் நெல்லும் வீசி
மங்கலத் தாசியர் தம்கலன் ஒலிப்ப
இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து
கோடி பல அடுக்கிய கொழுநிதிக் குப்பை-கோடியென்னும் எண்ணைப் பலவாக அடுக்கப்பட்ட வளவிய பொருட் குவியலையுடைய, மாடம் மலி மறுகிற் பீடிகைத் தெருவின்-மாடங்கள் நிறைந்த குறுந்தெருக்களையுடைய ஆவண வீதியின் கண், மலர் அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்து ஆங்கு-மலர் அணியும் விளக்கோடே மாணிக்க விளக்குகளையும் எடுத்து அவ்விடத்தே, அலர்கொடி அறுகும் நெல்லும் வீசி-மலரையும் அறுகையும் நெல்லையும் தூவி, மங்கலத் தாசியர்-சுமங்கலிகளான ஏவற்பெண்டிர், தம் கலன் ஒலிப்ப-தம் அணிகலன் ஒலிக்க, இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்-இருமருங்கினிடத்தும் திரிந்து பெயர்தலைச் செய்யும், திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து-திருமகளுக்கு இருப்பிடமாகிய அவ்விடத்தை வேறாகக் கழிந்து;
மாடம்-சரக்கறைகள்.மறுகு-குறுந்தெரு; “குறுந்தெரு மறுகே” என்பது திவாகரம். பீடிகைத்
தெரு-பெரிய கடைத்தெரு. அலரும் என எண்ணும்மை விரிக்க. மங்கலத் தொழில் செய்யும் தாசியர் என்றுமாம்.தாசியர்-சிலதியர்; ஏவன் மகளிர்.மங்கலமாக வீசியென்றும் உரைத்துக் கொள்க. அங்காடியின் செல்வமிகுதி கூறுவார் திருமகளிருக்கை யென்று பெயர் கூறினார்; இது பட்டினப் பாக்கத்தது. செவ்வனம்-முற்ற. எடுத்து-எடுப்ப என்றுமாம்.
-
௧௨௮-௯. மகர வாரி வளம்தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகிக்
மகர வாரி வளம் தந்து ஓங்கிய-கடலின் வளத்தைக் கொணர்தலால் உயர்ச்சிபெற்ற, நகரவீதி நடுவண் போகி-நகர வீதியினூடே சென்று. தந்து-தருதலால். நகரவீதி-மருவூர்ப்பாக்க வீதி.
-
௧௩0-௩. கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில்
கூல மறுகில் கொடிஎடுத்து நுவலும்
மாலைச் சேரி மருங்குசென்று எய்தி,
கலம் தரு திருவின்-மரக்கலங்கள் தந்த செல்வத்தையுடைய, புலம் பெயர் மாக்கள்-தம் தேயங்களை விட்டுப் போந்த பரதேயத்தினர், வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில் கூலமறுகில்-கடலின் அலைவா யிருப்பில் வெண்மணலையுடைய கூலவீதியில், கொடி எடுத்து நுவலும் மாலைச்சேர் மருங்கு சென்று எய்தி-இன்ன சரக்கு ஈண்டுளதென்று கொடிகளெடுத்து அறிவிக்கும் ஒழுங்குபட்ட சேரிகளைக்கடந்து நெய்தலங்கானலை எய்தி;
வாலுகம்-வெண்மணல். வேலை விரிதிரைப் பரப்பில் வாலுகத்து மறுகு என்றியைக்க. எடுத்து-எடுத்தலால் என்க. நுவலுதல்-ஈண்டு அறிவித்தல். சரக்குகளின் நன்மைகளை அறிவித்தலுமாம்.
-
௧௩௪-௪௫. வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்,
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்,
காழியர் மோதகத்து ஊழ்உறு விளக்கமும்,
கூவியர் கார்அகல் குடக்கால் விளக்கமும்
நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும்,
இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்,
இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும்,
விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும்,
மொழிபெயர் தேஎத்தர் ஒழியா விளக்கமும்,
கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்
எண்ணுவரம்பு அறியா இயைந்துஒருங்கு ஈண்டி
வண்ணமும் சாந்தும் மலரும் வண்ணமும் பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்-எழுது வண்ணமும் சாந்தும் மலரும் பூசு சுண்ணமும் பண்ணிகார வகைகளும் விற்போர்கள் வைத்த விளக்குக்களும், செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்-செய்யுந்தொழில்களை வல்ல பணித்தட்டார் அணிகலஞ் செய்யுமிடங்களில் வைத்த விளக்குக்களும், காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும்-பிட்டு வாணிகர் பிட்டு விற்றற்கு முறைமுறையாக வைத்த விளக்குக்களும், கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும்-கரிய அகலையுடைய அப்பவாணிகர் குடத்தண்டில் வைத்த விளக்குக்களும், நொடை நவில் மகடூஉக் கடை கெழு விளக்கமும்-பல பண்டமும் விற்கும் மகளிர்தம் கடைகளில் வைத்த விளக்குக்களும் இடையிடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்-இடையிடையே மீன் விற்போர் விளக்குக்களும், இலங்குநீர் வரைப்பிற் கலம் கரை விளக்கமும்-கடலிடத்தே துறையறியாது ஓடும் மரக்கலங்களைக் குறிகாட்டி அழைத்தற்கிட்ட விளக்குக்களும், விலங்கு வலைப்பரதவர் மீன்திமில் விளக்கமும்-மீன்களைக் குறுக்கிட்டுத் தடுத்து அகப்படுக்கும் வலையையுடைய பரதவர் திமிலில் வைத்த விளக்குக்களும், மொழிபெயர்தேத்தோர் ஒழியா விளக்கமும்-மொழி வேறுபட்ட தேயத்தினர் வைத்துள்ள விடிவிளக்குக்களும், கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்-மிக்க பெரிய பண்டங்களையுடைய பண்டசாலை காப்போர் இட்ட விளக்குக்களும், எண்ணு வரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி-அளவறியப்படாதனவாய் எங்கணும் பொருந்தி மிகுதலாலே;
மோதகம்-ஈண்டுப் பிட்டு. காரகல்-அப்பஞ் சுடும் அகல். குடைகால் விளக்கு எனப் பாடங்கொண்டு, காரகல் ஒன்றத் தண்டைக் கடைந்திட்ட விளக்கு என்பர் அரும்பதவுரையாசிரியர். தொடை நவில்-விலையைக் கூறும்; விற்கும் என்றபடி. கலம்-கப்பல்; கரைதல்-அழைத்தல்.
“வான மூன்றிய மதலை போல ஏணி சாத்திய வேற்றருஞ் சென்னிவிண்பொர நிவந்த வேயா மாடத்திரவின் விலங்குசுடர் ஞெகிழி உரவுநீ ரழுவத் தோடுகலங் கரையும், துறை”என்றார் பிறரும்.
மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கம் என்பதற்குப்,
பாடை வேறுபட்ட தேயத்து மிலேச்சர் பிற துறைகளிற் போகாமற் பனைகளைக்,காலாக நாட்டி அதன்மீதே மண்ணிட்டெரிக்கும் தீநாவென்னும் விளக்குக்கள் என்பர் அடியார்க்குநல்லார். ஈண்டுதல்-மிகுதல்; ஈண்டி-மிகுதலால் என்க.
-
௧௪௬-௫0. இடிக்கலப்பு அன்ன ஈர்அயில் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சியது ஆகிய
விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின்
மருத வேலியின் மாண்புறத் தோன்றும்
கைதை வேலி நெய்தல்அம் கானல்
இடிக்கலப்பு அன்ன ஈர் அயிர் மருங்கில்-மாவின் கலப்பினை யொத்த மிக நுண்ணிய மணலின்மீது இட்ட, கடிப்பகை காணும் காட்சியது ஆகிய-வெண்சிறு கடுகும் புலப்படக் காணும் காட்சியை யுடையதாகிய, விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின் மருத வேலியின்-மிக்க நீர்ப் பரப்பிலே மணம் பொருந்திய மலரையுடைய தாமரையை வேலியாகவுடைய மருத நிலம்போல, மாண்பு உறத் தோன்றும்- அழகுறத் தோன்றும், கைதை வேலி நெய்தல் அம்கானல்-தாழையை வேலியாகவுடைய நெய்தல் நிலத்திற் கழிக்கானற் கண்ணே:
இடி-இடிக்கப்பட்டது; மா. இடிக் கலப்பு-தெள்ளாத மா. ஈர் அயிர்-மிக நுண்ணிய மணல். வேலியின் என்னும் இன்னுருபை மருதத்தோடு கூட்டி, நீர்ப் பரப்பில் தாமரை வேலியையுடைய மருதத்தின் தோன்றும் என்க. மருதத்தினும் என உறழ்ச்சியாக்கினும் அமையும். ஆகிய தோன்றும் என்னும் பெயரெச்சங்கள் நெய்தலென்னும் பெயர் கொண்டு முடியும். அம் : சாரியை.
-
௧௫௧. பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி-தனது விளையாட்டின் மகளிருடனே பூங்கொடி போல்வாள் விளையாடச் சென்று பொருந்தி;
பொய்தல்-மகளிர் விளையாட்டு.
-
௧௫௨-௪. நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய
மலைப்பஃ றாரமும் கடல்பல் தாரமும்
வளம்தலை மயங்கிய துளங்குகல இருக்கை
நிரை நிரை எடுத்த புரைதீர் காட்சி-நிரை நிரையாகக் குவித்த குற்றமற்ற காட்சியையுடைய, மலைப்பஃறாரமும் கடற்பஃறாரமும் வளம் தலை மயங்கிய- மலைதரும் பல பண்டமும் கடல்தரும் பல பண்டமும் ஆகிய வளம் கலந்து கிடக்கும், துளங்கு கல இருக்கை-மரக்கலங்கள் அசைகின்ற துறைமுகங்களிற் சோலை சூழ்ந்த இருப்பிடத்தே;
பல்தாரம் பஃறாரம் என்றாயிற்று. தாரம்-பலபண்டம் ; பல் என்னும் அடையடுத்தமையால் ஈண்டு வாளா பண்டம் என்னும் பொருட்டு. தலை மயங்கிய-கலந்த; ஒரு சொல். இடந்தோறும் மயங்கிய என்றுரைப்பாருமுளர்.
-
௧௫௫-௮. அரசுஇளங் குமரரும் உரிமைச் சுற்றமும்
பரத குமரரும் பல்வேறு ஆயமும்
ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும்
தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும்
அரசிளங்குமரரும் உரிமைச் சுற்றமும்-அரச குமாரரும் அவருடைய உரிமைச் சுற்றமும், பரத குமரரும் பல்வேறு ஆயமும்-வணிக குமாரரும் அவருடைய பல்வேறு வகைப்பட்ட ஆய மகளிரும்; ஆடுகள மகளிரும், பாடுகள மகளிரும்-ஆடல் மகளிரும் பாடல் மகளிரும், தோடுகொள மருங்கில் சூழ்தரல் எழினியும்-தொகுதிகொண்ட இடந்தோறும் அத்தொகுதியும் சூழ்ந்துள்ள திரைச்சீலையும் என்னுமிவற்றின்;
உரிமைச் சுற்றமும் என்பதனைப் பரத குமரர்க்கும், பல்வேறாயமும் என்பதனை அரச குமரர்க்கும் கூட்டிக்கொள்க. வணிகருடைய உரிமை மகளிர் புனலாடல் மரபன்மையிற் கூறாராயினார் என்றுமாம். பல்வேறு ஆயம்-பரிசன மகளிரும் சிலதியர் முதலாயினாரும். ஆடுகளம்-அரங்கு. பாடுகளம்-கண்டம். களம் இரண்டும் அடை. தோடு-தொகுதி. அத்தொகுதியும் என விரித்துக்கொள்க.
-
௧௫௯-௬௨. விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன்
தண்பதம் கொள்ளும் தலைநாள் போல
வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை
சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றிக்
விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன்-விண்ணிலே சென்று பொருந்தும் பெரிய புகழையுடைய கரிகாற் சோழன், தண்பதம் கொள்ளும் தலைநாட்போல-புதுப்புனல் விழவு கொண்டாடும் தலைநாளிற்போல, வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை-வேறுவேறு கோலமும் வேறுவேறு ஆரவாரமும், சாறு அயர் களத்தின் வீறு பெறத் தோன்றி-விழாச் செய்யும் களத்திற்போல வீறு பெறத் தோன்றா நிற்க.
பொரு-பொருந்து. தண்பதங் கொள்ளும்-புதுப்புனலாடும் தொகுதியின் கம்பலையும் எழினியின் கோலமும் தோன்றவென எதிர் நிரனிறை. தலைநாட்போல களத்தின் என்னும் உவமமிரண்டும் முறையே காலம் பற்றியும் இடம் பற்றியும் வந்தன. தோன்றி-தோன்ற வெனத் திரிக்க.
-
௧௬௩-௫. கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்குஇயைந்து ஒலிப்ப,
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேர் யாற்று-கடலினது கரையைக் குத்தியிடிக்கும் காவிரியின் புகார்முகம் எங்கும், இடம் கெட ஈண்டிய-வறிதிடம் இன்றாகத் திரண்ட, நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை-நால்வகை வருணத்தாரின் அடக்கப் படாத ஆரவாரமெல்லாம், உடங்கு இயைந்து ஒலிப்ப-ஒருங்குகூடி ஓரோசையாய் நின்றொலிப்ப ;
மெலிக்கும்-மெலிவிக்கும். காவிரியாகிய பேர் யாறு.
-
௧௬௬-௭௪. கடல்புலவு கடிந்த மடல்பூந் தாழைச்
சிறைசெய் வேலி அகவயின் ஆங்குஓர்
புன்னை நீழல் புதுமணல் பரப்பில்
ஓவிய எழினி சூழஉடன் போக்கி
விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை
வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்
திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்
கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என
கடற்புலவு கடிந்த மடற்பூந் தாழை-கடலினது புலால் நாற்றத்தைக் கெடுத்த மடலவிழும் பூவையுடைய தாழையால், சிறை செய் வேலி அகவயின்-காவல் செய்யும் வேலியாகச் சூழப்பட்ட உள்ளிடத்தே, ஆங்கு ஓர் புன்னை நீழல்-ஒப்பற்ற புன்னைமரத்தின் நீழலில், புதுமணற் பரப்பின்-அழுக்கற்ற மணல் பரந்த நிலத்தே, ஓவிய எழினி சூழ உடன்போக்கி-சித்திரத் திரையைச் சுற்றிலும் சேரவளைத்து, விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை-மேற்சுட்டும் கட்டியிடப்பட்ட யானைக் கொம்பாற் செய்த கால்களையுடைய கட்டிலின்மேலே, வருந்துபு நின்ற வசந்தமாலை கைத்திருந்துகோல் நல்யாழ் செவ்வனம் வாங்கி-வருந்திநின்ற வயந்த மாலையின் கையதாகிய திருந்திய நரம்பினையுடைய நல்ல யாழைச் செவ்வனே வாங்கி, கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள் மாமலர் நெடுங்கண் மாதவி தான் என்-பெரிய மலர் போலும் நெடிய கண்களையுடைய மாதவி கோவலனோடும் சேர விருந்தாள்.
யானைத் தந்தத்தாற் செய்யப்பட்டதாகலின் வெண்கால் என்றார். வசந்தமாலை-மாதவியின் சேடி. அவள் வழிவந்ததனால் வருந்திநின்றாள் என்க. கொல்-நரம்பு. கொள்கை என்றும் இருக்கு முறைமை. ஆங்கு, தன், தான், என் என்பன அசைகள். நெய்தலங் கானலில் ஆயமொடு பொருந்தி விளையாடி அதன்பின் அமளிமிசைக் கோவலனோடும் இருந்தனன் என்க. தோன்ற, ஒலிப்ப என்பன நிகழ்கால முணர்த்தின. மானமர் நோக்கி, பூங்கொடி,மாதவி என்னும் மூன்றையும் சேரவைத்து ஓர் எழுவாயாக்குக.
பள்ளியுள் இருந்தோள் உவவுத்தலை வந்ததாகக் கடல் விளையாட்டுக் காண்டல் வேண்டி அணிந்து வையமேறித் தெருவினைக் கழிந்து நடுவட்போகி எய்திக் கானலில் ஆயமொடு பொருந்திப் பின் மணற் பரப்பிலே அமெளிமீதே யாழ்வாங்கிக் கோவலன்றன்னோடிருந்தாள் என முடிக்க.
இது நிலைமண்டில வாசிரியப்பா.
வெண்பாவுரை
-
வேலை மடல்தாழை உட்பொதிந்த வெண்தோட்டு
மாலைத் துயின்ற மணிவண்டு - காலைக்
களிநறவம் தாதுஊதத் தோன்றிற்றே காமர்
தெளிநிற வெங்கதிரோன் தேர்.
வேலை-கடற்கரையிலுள்ள, மடற்றாழை-மடல் விரிந்த தாழையின், உட்பொதிந்த வெண்தோட்டு-உள்ளே செறிந்த வெள்ளிய இதழின்கண், மாலைத்துயின்ற மணிவண்டு-மாலைப்பொழுதிலே துயின்ற நீல நிறமுடைய வண்டு, காலை-காலைப் பொழுதில், களி நறவம் தாது ஊத-களிப்பைச் செய்யும் தேனினையும் தாதினையும் ஊதும்படி, காமர் தெளி நிற வெங்கதிரோன் தேர்-அழகிய தெளிந்த நிறத்தினையுடைய வெய்ய சுடரினனாகிய பரிதியின் தேர், தோன்றிற்று-கீழ்த்திசையில் உதித்தது.
கடலாடு காதை முற்றிற்று.
-------------------
This file was last updated n 20 June 2012
Feel free to send the corrections to the webmaster.
இளங்கோவடிகள் இயற்றிய "சிலப்பதிகரம்"
மூலமும்
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி
நாட்டாரவர்கள் எழுதிய உரையும்
புகார்க்காண்டம் - பாகம் 3
ஆசிரியர் இளங்கோவடிகள் இயற்றிய "சிலப்பதிகரம்" மூலமும்
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும் - பாகம் 3
உள்ளடக்கம்
பதிகம்
உரைபெரு கட்டுரை
புகார்க்காண்டம்.
1. மங்கல வாழ்த்துப் பாடல்
2. மனையறம்படுத்த காதை
3. அரங்கேற்று காதை
4. அந்திமாலைச் சிறப்புசெய் காதை
5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை
6. கடலாடு காதை
7. கானல் வரி
8. வேனில் காதை
9. கனாத்திறம் உரைத்த காதை
10. நாடுகாண் காதை
---------------
புகார்க் காண்டம்
7. கானல் வரி
[யாழினைத் தொழுது வாங்கிய மாதவி பண்ணல் முதலிய எண்வகையாலும் இசையை எழுப்பி, வார்தல் முதலிய எட்டுவகை இசைக் கரணத்தாலும் ஆராய்ந்து செவியால் ஓர்த்து, பாணியாதெனக் கூறிக்கோவலன் கையில் யாழினை நீட்ட, அவன் வாங்கி, ஆற்றுவரியும் கானல்வரியுமாகிய இசைப்பாட்டுக்கள் பலவற்றை யாழிலிட்டுப் பாடினான். அவன் பாடிய பாட்டுக்கள் அகப்பொருட்டுறை யமைந்தனவாகலின், அவற்றைக் கேட்ட மாதவி, ‘இவற்றுள் ஒரு குறிப்பு உண்டு; இவன் தன்னிலை மயங்கினான்’எனக் கருதி, யாழினை வாங்கித் தானும் ஒரு குறிப்புடையாள் போல வரிப்பாட்டுக்கள் பலவற்றைப் பாடினாள். யாழிசைமேல் வைத்து ஊழ்வினை வந்து உருத்ததாகலின், கோவலன் அவள் பாடியவற்றைக் கேட்டு, ‘யான் கானல்வரி பாட, இவள் மிக்க மாயமுடையளாகலின் வேறொன்றின்மேல் மனம் வைத்துப் பாடினாள்’ என உட்கொண்டு, அவளை அணைத்த கை நெகிழ்ந்தவனாய் எழுந்து ஏவலாளர் சூழ்தரப் போயினான்; போக,மாதவியும் கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள்ளே புக்குக் காதலனுடன்றியே தன் மனையை அடைந்தாள்.(இதிலுள்ள பாட்டுக்கள் பலவும் கற்போரை இன்பத்திலேயே திளைக்க வைக்கும் சொற்பொருள் நயங்கள் வாய்ந்தவை.)
(கட்டுரை )
-
சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து க
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப்
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று
இத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி
பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
எண்வகையால் இசைஎழீஇப்
பண்வகையால் பரிவுதீர்ந்து
மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏர்உடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
பட்டவகைதன் செவியின்ஓர்த்(து)
ஏவலன், பின் பாணி யாதுஎனக்
கோவலன் கையாழ் நீட்ட, அவனும்
காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்.
வேறு (ஆற்று வரி)
திங்கள் மாலை வெண்குடையான் உ.
சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.
மன்னும் மாலை வெண்குடையான் ௩.
வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.
உழவர் ஓதை மதகுஓதை ௪
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி.
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன்
வளனே வாழி காவேரி.
வேறு (சார்த்து வரி - முகச்சார்த்து)
கரியமலர் நெடுங்கண் காரிகைமுன் ரு
கடல்தெய்வம் காட்டிக் காட்டி
அரியசூள் பொய்த்தார் அறன்இலர்என்று
ஏழையம்யாங்கு அறிகோம் ஐய
விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும்
ஆம்என்றே விளங்கும் வெள்ளைப்
புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல்
பொதிஅவிழ்க்கும் புகாரே எம்மூர்.
காதலர் ஆகிக் கழிக்கானல் Ü
கையுறைகொண்டு எம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாம்இரப்ப
நிற்பதையாங்கு அறிகோம் ஐய
மாதரார் கண்ணும் மதிநிழல்நீர்
இணைகொண்டு மலர்ந்த நீலப்
போதும் அறியாது வண்டுஊச
லாடும் புகாரே எம்மூர்.
மோது முதுதிரையால் மொத்துண்டு எ
போந்துஅசைந்த முரல்வாய்ச் சங்கம்
மாதர் வரிமணல்மேல் வண்டல்
உழுதுஅழிப்ப மாழ்கி ஐய
கோதை பரிந்துஅசைய மெல்விரலால்
கொண்டுஓச்சும் குவளை மாலைப்
போது சிறங்கணிப்பப் போவார்கண்
போகாப் புகாரே எம்மூர்.
வேறு (முகம் இல் வரி)
துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத அ
தோற்றம் மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர்ந்து நுண்தாது
போர்க்கும் கானல்
நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
தீர்க்கும் போலும்.
(கானல் வரி)
நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் ஓப்புதல் ௯
தலைக்கீடு ஆகக்
கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி நறுஞாழல்
கையில் ஏந்தி
மணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று ஆண்டுஓர்
அணங்குஉறையும் என்பது அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.
வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில் க0
மலர்கை ஏந்தி
விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுஉருவம்
கொண்டு வேறுஓர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது
அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.
வேறு (நிலைவரி)
கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன் கக
செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்.
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே. 11
எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும் கஉ
கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்.
கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே
மடம்கெழுமென் சாயல் மகளா யதுவே. 12
புலவுமீன் வெள்உணங்கல் புள்ஓப்பிக் கண்டார்க்கு க௩
அலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணீர்.
அணங்குஇதுவோ காணீர் அடும்புஅமர்த்தண் கானல்
பிணங்குநேர் ஐம்பால்ஓர் பெண்கொண் டதுவே. 13
வேறு (முரிவரி)
பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே க௪
பழுதுஅறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதுஅரு மின்இடையே எனைஇடர் செய்தவையே. 14
திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமே கரு
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே. 15
வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே கÜ
தளைஅவிழ் நறுமலரே தனிஅவள் திரிஇடமே
முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே. 16
வேறு (திணை நிலைவரி)
கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர் கஎ
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய். 17
கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை கஅ
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய். 18
ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும் க௯
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய். 19
வேறு
பவள உலக்கை கையால் பற்றித் உ0
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தங் குறுவாள் செங்கண்
குவளை அல்ல கொடிய கொடிய 20
புன்னை நீழல் புலவுத் திரைவாய் உக
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய. கூற்றம் கூற்றம். 21
கள்வாய் நீலம் கையின் ஏந்திப் உஉ
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல. வெய்ய வெய்ய. 22
வேறு
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய் உ௩
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய். 23
(கட்டுரை)
ஆங்கு, கானல்வரிப் பாடல்கேட்ட உ௪
மான்நெடுங்கண் மாதவியும்
மன்னும்ஓர் குறிப்புஉண்டுஇவன்
தன்நிலை மயங்கினான்எனக்
கலவியால் மகிழ்ந்தாள்போல்
புலவியால் யாழ்வாங்கித்
தானும்ஓர் குறிப்பினள்போல்
கானல்வரிப் பாடல்பாணி
நிலத்தெய்வம் வியப்புஎய்த
நீள்நிலத்தோர் மனம்மகிழக்
கலத்தொடு புணர்ந்துஅமைந்த
கண்டத்தால் பாடத்தொடங்கும்மன். 24
வேறு (ஆற்று வரி)
மருங்கு வண்டு சிறந்துஆர்ப்ப உரு
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்தாய் வாழி காவேரி.
கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி. 25
பூவர் சோலை மயில்ஆலப் உÜ
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகுஅசைய
நடந்தாய் வாழி காவேரி.
காமர் மாலை அருகுஅசைய
நடந்த எல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டே
அறிந்தேன் வாழி காவேரி. 26
வாழி அவன்தன் வளநாடு உஎ
மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி
ஒழியாய் வாழி காவேரி.
ஊழி உய்க்கும் பேர்உதவி
ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன்
அருளே வாழி காவேரி. 27
வேறு (சார்த்து வரி)
தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும் உஅ
வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய
வீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர். 28
மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை உ௯
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம் ஐய
நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்த
பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரே எம்மூர். 29
உண்டாரை வெல்நறா ஊண்ஓழியாப் பாக்கத்துள் உறைஒன்று இன்றித் ௩ 0
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம் ஐய
வண்டல் திரைஅழிப்பக் கையால் மணல்முகந்து மதிமேல் நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க பரதர் கடல்துர்க்கும் புகாரே எம்மூர். 30
வேறு (திணை நிலைவரி)
புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி ௩க
இணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வுஒழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால். 31
தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும் ௩உ
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால். 32
புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல் ௩௩
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ? 33
புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம் ௩௪
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எஞ்செய்கோ?
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று எஞ்செய்கோ? 34
நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர் ௩ரு
ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமே
பூந்தண் பொழிலே புணர்ந்துஆடும் அன்னமே
ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே. 35
நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர் ௩Ü
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்(று) எம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம். 36
வேறு (மயங்கு திணை நிலைவரி)
நன்நித் திலத்தின் பூண்அணிந்து
நலம்சார் பவளக் கலைஉடுத்துச் ௩எ
செந்நெல் பழனக் கழனிதொறும்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
புன்னைப் பொதும்பர் மகரத்திண்
கொடியோன் எய்த புதுப்புண்கள்
என்னைக் காணா வகைமறத்தால்
அன்னை காணின் என்செய்கோ? 37
வாரித் தரள நகைசெய்து
வண்செம் பவள வாய்மலர்ந்து ௩அ
சேரிப் பரதர் வலைமுன்றில்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
மாரிப் பீரத்து அலர்வண்ணம்
மடவாள் கொள்ளக் கடவுள்வரைந்து
ஆர்இக் கொடுமை செய்தார்என்று
அன்னை அறியின் என்செய்கோ? 38
புலவுற்று இரங்கி அதுநீங்கப்
பொழில்தண் டலையில் புகுந்துஉதிர்ந்த ௩௯
கலவைச் செம்மல் மணம்கமழத்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
பலஉற்று ஒருநோய் திணியாத
படர்நோய் மடவாள் தனிஉழப்ப
அலவுற்று இரங்கி அறியாநோய்
அன்னை அறியின் என்செய்கோ? 39
வேறு
இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே ௪0
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை? 40
கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவே ௪க
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை? 41
பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே ௪உ
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை? 42
வேறு (சாயல் வரி)
கைதை வேலிக் கழிவாய் வந்துஎம் ௪௩
பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர். 43
கானல் வேலிக் கழிவாய் வந்து ௪௪
நீநல்கு என்றே நின்றார் ஒருவர்
நீநல்கு என்றே நின்றார் அவர்நம்
மான்நேர் நோக்கம் மறப்பார் அல்லர். 44
அன்னம் துணையோடு ஆடக் கண்டு ௪ரு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
பொன்நேர் சுணங்கிற் போவார் அல்லர். 45
வேறு (முகம் இல் வரி)
அடையல் குருகே அடையல்எம் கானல் ௪ Ü
அடையல் குருகே அடையல்எம் கானல்
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல்எம் கானல். 46
வேறு (காடுரை)
ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும் ௪எ
காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப்
பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள். 47
வேறு (முகம் இல் வரி)
நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை ௪அ
இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை. 48
பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல் ௪௯
இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை. 49
பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ ரு0
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை. 50
வேறு (கட்டுரை)
தீத்துழைஇ வந்தஇச் செல்வன் மருள்மாலை ருக
தூக்காது துணிந்தஇத் துயரெஞ்ச் கிளவியால்
பூககமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று
மாக்கடற் றெய்வநின் மலரடி வணங்குதும்
எனக்கேட்டு, ருஉ
கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என
யாழ்இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததுஆகலின்
உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாது
ஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான் போனபின்னர்,
தாதுஅவிழ் மலர்ச்சோலை ஓதைஆயத்து ஒலிஅவித்துக்
கையற்ற நெஞ்சினளாய் வையத்தி னுள்புக்குக்
காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்
ஆங்கு,
மாயிரு ஞாலத்து அரசு தலைவணக்கும்
சூழி யானைச் சுடர்வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப
ஆழி மால்வரை அகவையா எனவே. 51
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
கட்டுரை
௧. சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப்
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று இத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய எண்வகையால் இசைஎழீஇப் பண்வகையால் பரிவுதீர்ந்து மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள் பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படர வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் ஏர்உடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக்கர ணத்துப் பட்டவகைதன் செவியின்ஓர்த்து ஏவலன், பின் பாணி யாதுஎனக் கோவலன் கையாழ் நீட்ட, அவனும் காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும் மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்.
சித்திரப் படத்துள் புக்கு – சித்திரத் தொழிலமைந்த ஆடையுட் புகுந்து, செழுங்கோட்டில் மலர் புனைந்து-அழகிய கோட்டிலே மலர் சூடி, மைத்தடங்கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி-மை தீற்றிய பெரிய கண்களையுடைய மணமகளின் ஒப்பனைக் கோலம்போல் அழகினைப் பொருந்தி, பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று இத்திறத்துக் குற்றம் நீங்கிய-பத்தர் கோடு ஆணி நரம்பு என்ற இவ்வகை உறுப்புக்களின் குற்றம் ஒழிந்த, யாழ்-யாழினை, கையில் தொழுது வாங்கி-கும்பிட்டுக் கையில் வாங்கி,பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் (கண்ணிய) செலவு விளையாட்டுக் கையூழ் (நண்ணிய) குறும் போக்கு என்று நாட்டிய எண் வகையால் இசை எழீஇ-பண்ணல் முதலாக நிறுத்தப்பட்ட எட்டுவகைக் கலைத் தொழிலானும் இசையை எழுப்பி, பண் வகையாற் பரிவு தீர்ந்து-பண்வகையிற் குற்றம் நீங்கி, மரகத மணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மெல் விரல்கள்-மரகதமணி மோதிரங்கள் செறிந்த அழகிய காந்தளிதழ் போலும் மெல்லிய விரல்கள், பயிர் வண்டின் கிளைபோலப் பல் நரம்பின் மிசைப்படா-பாடுகின்ற வண்டின் இனம்போலப் பலவாகிய நரம்பின் மீதே செல்ல, வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் (சீருடன்) உருட்டல் தெருட்டல் அள்ளல் (ஏருடைப்) பட்டடை என இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக் காணத்து – வார்தல் முதலாக இசைநூலோரால் வகுக்கப் பட்ட எட்டுவகை இசைக் கரணத்தாலும், பட்டவகை தன் செவியின் ஓர்த்து-உண்டாகிய இசையின் கூறுபாட்டைத் தன் செவியாலே சீர் தூக்கி யறிந்து, ஏவலன் பின் பாணியாது எனக் கோவலன் கையாழ் நீட்ட-ஏவினபடி செய்தற்குரியேன் மேல் நுமது பணி யாதென்று கூறிக் கோவலன் கையிலே அவ்வியாழை நீட்ட, அவனும் காவிரியை நோக்கினவும் கடற் கானல் வரிப் பாணியும் மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்கும் மன்-அவன் காவிரியைக் கருதியனவும் கடற் கானலைக் கருதியனவுமாகிய வரிப்பாட்டுக்களை மாதவியின் மனம் மகிழும்படி வாசிக்கத் தொடங்கினான்.
படம்-ஆடை. அதனாலாய உறை. சித்திரப் படத்துட் புக்கமையாலும் மலர் புனைந்தமையாலும் மணமகள் போன்றது. "மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன"என்றார் பிறரும். கோடு-யாழின் தண்டு. பத்தர் முதலிய நான்கும் யாழின் உறுப்புக்கள். இவையன்றி மாடகம் எனப்படும் முறுக்காணியும். திவவு எனப்படும் வார்க்கட்டும் யாழுறுப்புக்களாம். குற்றமற்ற மரத்தாற் செய்த பத்தர் முதலாயினவும் கொடும்புரி, மயிரி, தும்பு முறுக்கு என்பன இல்லாத நரம்பும் உடைய யாழென்பார். "இத்திறத்துக் குற்ற நீங்கிய யாழ் "என்றார். மரத்தின் குற்றமாவன வெயிலும் காற்றும் நீரும் நிழலும் மிகுதல். திருத்தக்கதேவர் "நோய் நன்கு நீங்கி" என்றருளியதும், அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் நோக்குக. மற்றும் அவர், பொருநராற்றுப்படை யுரையில் "கொன்றை கருங்காலி குமிழ் முருக்குத் தணக்கே"என்பதனால் கோட்டிற்கு மரம் கொன்றையும் கருங்காலியுமாம்; பத்தர்க்குக் குமிழும் முருக்கும் தணக்குமாம்" என்றெழுதியதும் ஈண்டு அறியற்பாலது. "கொடும்புரி மயிர் தும்பு முருக்கிவை நான்கும் நடுங்கா மரபிற் பகையென மொழிப"என்றதனால் நரம்பின் குற்றம் அறிக. யாழினிடத்தே தெய்வம் உறைதலின் அதனைத் தொழுது வாங்கினாள். "அணங்கு மெய்ந்நின்ற அமைவரு காட்சி"என்பது காண்க. "பண்ணல்- பாடநினைத்த பண்ணுக்கு இணை கிளை பகை நட்பான நரம்புகள் பெயருந்தன்மை மாத்திரை அறிந்து வீக்குதல்; பரிவட்டணை-அவ்வீக்கின நரம்பை அகவிரலாலும் புறவிரலாலும் கரணஞ் செய்து தடவிப் பார்த்தல். ஆராய்தல்-ஆரோகண அவரோகண வகையால் இசையைத் தெரிவது; அநுசுருதி யேற்றுதல், தைவரல்; ஆளத்தியிலே நிரம்பப் பாடுதல், செலவு; பாட நினைத்த வண்ணத்திற் சந்தத்தை விடுதல் விளையாட்டு. வண்ணத்திற் செய்த பாடலெல்லாம் இன்பமாகப் பாடுதல் கையூழ். சூடகச் செலவும் துள்ளற் செலவும் பாடுதல் குறும்போக்கு"என்பது சிந்தாமணி நச்சினார்க்கினியம்.இவற்றிற்கு அரும்பதவுரையாசிரியர் காட்டிய சூத்திரங்கள் பின் வருவன:
௧. "வலக்கைப் பெருவிரல் குரல்கொளச் சிறுவிரல்
விலக்கின் றிளிவழி கேட்டும்
இணைவழி யாராய்ந் திணைகொள முடிப்பது
விளைப்பரு மரபிற் பண்ண லாகும்".
௨. "பரிவட்ட ணையி னிலக்கணந் தானே
மூவகை நடையின் முடிவிற் றாகி
வலக்கை யிருவிரல் வனப்புறத் தழீஇ
இடக்கை விரலி னியைவ தாகத்
தொடையொடு தோன்றியுந் தோன்றா தாகியும்
நடையொடு தோன்றும் நயத்த தாகும்."
௩. "ஆராய்த லென்ப தமைவரக் கிளப்பிற்
குரன்முத லாக விணைவழி கேட்டும்
இணையி லாவழிப் பயனொடு கேட்டும்
தாரமு முழையுந் தம்மிற் கேட்டும்
குரலு மிளியுந் தம்மிற் கேட்டும்
துத்தமும் விளரியுந் துன்னுறக் கேட்டும்
விளரி-கைக்கிளை விதியுளிக் கேட்டும்
தளரா தாகிய தன்மைத் தாகும்."
௪. "தைவர லென்பது சாற்றுங் காலை
மையறு சிறப்பின் மனமகிழ் வெய்தித்
தொடையொடு பட்டும் படாஅ தாகியும்
நடையொடு தோன்றி யாப்புநடை யின்றி
ஓவச் செய்தியின் வட்டணை யொழுகிச்
சீரேற் றியன்று மியலா தாகியும்
நீர வாகு நிறைய தென்ப."
௫. "செலவெனப் படுவதன் செய்கை தானே
பாலை பண்ணே திறமே கூடமென
நால்வகை யிடத்து நயத்த தாகி
இயக்கமு நடையு மெய்திய வகைத்தாய்ப்
பதினோ ராடலும் பாணியு மியல்பும்
விதிநான்கு தொடர்ந்து விளங்கிச் செல்வதுவே."
௬. "விளையாட் டென்பது விரிக்குங் காலைக்
கிளவிய வகையி னெழுவகை யெழாலும்
அளவிய தகைய தாகு மென்ப."
௭. "கையூ ழென்பது கருதுங் காலை
எவ்விடத் தானு மின்பமுஞ் சுவையும்
செவ்விதிற் றோன்றிச் சிலைத்துவர லின்றி
நடைநிலை திரியாது நண்ணித் தோன்றி
நாற்பத் தொன்பது வனப்பும் வண்ணமும்
பாற்படத் தோன்றும் பகுதித் தாகும்."
௮. "துள்ளற் கண்ணுங் குடக்குத் துள்ளும்
தள்ளா தாகிய உடனிலைப் புணர்ச்சி
கொள்வன வெல்லாங் குறும்போக் காகும்."
இனி, வார்தல் முதலியவற்றிற்கும் அவரெழுதிய விளக்கங்கள் பின் வருவன: "வார்தல் சுட்டுவிரற் செய்தொழில்; வடித்தல்-சுட்டுவிரலும் பெருவிரலுங் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல்; உந்தல்- நரம்புகளை உந்தி வலிவிற்பட்டதும் மெலிவிற்பட்டதும் நிரல்பட்டதும் நிரவிழிபட்டதுமென் றறிதல்; உறழ்தல்- ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல்; உருட்டல்-இடக்கைச் சுட்டுவிரல்தானே யுருட்டலும் வலக்கைச் சுட்டுவிரல் தானே யுருட்டலும் சுட்டொடு பெருவிரற் கூட்டி யுருட்டலும் இரு பெரு விரலும் இயைந்துடனுருட்டலும் என வரும்."
"தெருட்ட லென்பது செப்புங் காலை
உருட்டி வருவ தொன்றே மற்றவ்
ஒன்றன் பாட்டுமடை யொன்ற நோக்கின்
வல்லோ ராய்ந்த நூலே யாயினும்
வல்லோர் பயிற்றுங் கட்டுரை யாயினும்
பாட்டொழிந் துலகினி லொழிந்த செய்கையும்
வேட்டது கொண்டு விதியுற நாடி"
எனவரும்..............இவை இசைத் தமிழ்ப் பதினாறு படலத்துட் கரணவோத்துட் காண்க."
"வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்தும்"
என்பது ஈண்டு அறியற்பாற்று. அள்ளல், பட்டடை என்பவற்றின் இயல்பு வந்துழிக் காண்க. கண்ணி, நண்ணிய, சீருடன், ஏருடை என்பன அடைகள். பண்வகையால், உருபு மயக்கம். பயிர்-ஒலி. இசைக்கரணம் – யாழின் பாடற்குரிய செய்கைகள் ஏவலன், தன்மையொருமை. அரும்பதவுரை யாசிரியர், ‘பாணியாதென’என்று பாடங் கொண்டு, ‘இப்பொழுது இதனை வாசியென்று விதிக்கின்றே னல்லேன்; வாசிக்குந் தாளம் யாதென்று யான் அறியலுறுகின்றேன் என்பாள் போலக் கொடுத்தாளென்க’ என்று பொருள் கூறினர். கானலை நோக்கினவும் என விரித்து, ஆற்று வரியும் கானல் வரியும் என்க. மன்- மிகுதி. அசையுமாம். (படாத்துள், கோட்டுமலர், இத்திறத்த, பாணியாதென, பாணி யாமென என்பன பாடவேற்றுமை.)’
-
வேறு (ஆற்று வரி)
௨. திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.
திங்கள் மாலை வெண்குடையான் சென்னி-மாலையணிந்த நிறைமதி போலும் வெண்குடையை உடையவனாகிய சோழன், செங்கோல் அது ஓச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும்-செங்கோலைச் செலுத்திக் கங்கையைக் கூடினாலும், புலவாய் வாழி காவேரி-காவேரி நீ வெறுத்தல் செய்யாய் ஆதலின் வாழ்வாயாக; கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் அங்ஙனம் வெறா தொழிந்தது, கயல் கண்ணாய்-கயலாய கண்ணையுடையாய், மங்கை மாதர் பெருங் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – காதலுடைய மங்கையின் பெரிய கற்பாகும் என்று யான் அறிந்தேன்; வாழ்வாயாக;
அது : பகுதிப்பொருள் விகுதி. தன் : அசை. வாழி- அசையுமாம் கங்கையைப் புணர்தலாவது வடக்கே கங்கையும் அகப்பட ஆணை செல்ல நிற்றல். புலத்தல் – ஊடுதல் ; வெறுத்தல். கயற்கண்-மகளிர்க்குக் கயல்போலுங் கண்; ஈண்டுக் கயலாகிய கண். மாதர்-காதல்; மங்கையாகிய மாதர் என்றுமாம். ஈண்டு முன்னிலைக்கண் வந்தது; நினது கற்பு என்றபடி. பெருங் கற்பு என்றமையால் , காவேரி பிறர் நெஞ்சு புகாதவளென்பதும் பெற்றாம் : புகுதல்-ஆளக் கருதுதல். காவேரி-கவேரன் புதல்வி என்ப;
- "தவாநீர்க் காவிரிப் பாவைதன் றாதை
கவேரனாங் கிருந்த கவேர வனமும்"
௩. மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.
மன்னும் மாலை வெண்குடையான்-பெருமை பொருந்திய மாலை யணிந்த வெண்குடையை உடையவனாகிய சோழன், வளையாச் செங்கோல் அது ஓச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும்-என்றும் வளைதல் இல்லாத செங்கோலைச் செலுத்திக் குமரியைக் கூடினாலும், புலவாய் வாழி காவேரி-காவேரி நீ வெறுத்தல் செய்யாய் ஆதலின் வாழ்வாயாக. கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல்-அங்ஙனம் வெறா தொழிந்தது, கயற்கண்ணாய்-கயலாகிய கண்ணையுடையாய், மன்னும் மாதர் பெருங் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி-மாதரது நிலை பெற்ற பெரிய கற்பாகும் என்று யான் அறிந்தேன்; வாழ்வாயாக;
அதிகாரத்தானும், காவேரி கூறினமையானும் வெண்குடையான் சோழனாயிற்று. வளையா என அடையடுத்தமையால் செங்கோல் கோவென்னு மாத்திரையாயிற்று எனலுமாம்; "கோடாத செங்கோல்"என்பதன் உரை நோக்குக. கன்னி-குமரியாறு. கன்னியைப் புணர்தலாவது குமரியும் உட்படத் தெற்கே தன் ஆணை செல்ல நிற்றல். மேலிற்ச் செய்யுளுரையில் உரைத்தன பிறவும் ஈண்டுத் தந்துரைக்க.
௪. உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி.
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன்
வளனே வாழி காவேரி.
உழவர் ஓதை – புதுப்புனல் வந்தமை கண்டு உழவர் மகிழ்ச்சியால் ஆர்க்கும் ஓசையும், மதகு ஓதை-நீர் மதகிலே தேங்கிச் செல்லுதலால் உண்டாகும் ஓசையும், உடைநீர் ஓதை-கரைகளையும் வரம்புகளையும் உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும், தண்பதம் கொள் விழவர் ஓதை-புதுப்புனல் விழாக் கொண்டாடும் மைந்தர் மகளிரின் பலவகை யோசையும், சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி-மிக்கொலிக்கச் சென்றாய். ஆதலால், காவேரி நீ வாழ்வாயாக; விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம்-நீ அங்ஙனம் நடந்த செயலெல்லாம், வாய்காவா மழவர் ஓதை வளவன்றன் வளனே வாழி காவேரி-அரணினிடத்தைக் காவாமைக்கு ஏதுவாகிய வீரரின் ஓசையையுடைய சோழனது வளனேயாகும்; வாழ்வாயாக.
வாய் – இடம். மழவரோதையாற் பகைவர் அஞ்சுந் திறத்ததாகலின் இடம் காக்க வேண்டாதாயிற்று.
"வாய்காவாது பரந்துபட்ட
வியல்பாசறைக் காப்பாள"
"புட்பகைக் கேவா னாகலிற் சாவேம் யாமென
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப"
என்றாராகலின், நடந்தவெல்லாம் வளனே என்றியையும். இவை மூன்றும் ஆற்றுவரி; கந்தருவ மார்க்கத்தால் இடைமடக்கி வந்தன. பின் இடைமடக்கி வருவனவும் இன்ன. வரிப் பாட்டுக்கள் தெய்வஞ் சுட்டுவனவும், மக்களைச் சுட்டுவனவும் என இருவகைய; அவற்றுள், இவை மக்களைச் சுட்டுவன. மற்றும் முகமுடை வரி, முகமில் வரி, படைப்பு வரி யென்னும் மூன்றனுள்ளே ‘திங்கண் மாலை’ முதலிய மூன்றும் முகமுடை வரி யென்றுங் கூறப்படும்.
-
வேறு (சார்த்து வரி - முகச்சார்த்து)
௫. கரியமலர் நெடுங்கண் காரிகைமுன்
கடல்தெய்வம் காட்டிக் காட்டி
அரியசூள் பொய்த்தார் அறன்இலர்என்று
ஏழையம்யாங்கு அறிகோம் ஐய
விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும்
ஆம்என்றே விளங்கும் வெள்ளைப்
புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல்
பொதிஅவிழ்க்கும் புகாரே எம்மூர்
கரிய மலர் நெடுங்கட் காரிகை முன்-கருங்குவளை மலர் போலும் நீண்ட கண்களையுடைய தலைவியின்முன், கடற்றெய்வம் காட்டிக் காட்டி-கடலின் தெய்வமாகிய வருணனைப் பலகாலும் சுட்டிக் கூறிய, அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று – கைவிடுதற்கரிய சூளை அறனிலராய்த் தப்பினாரென்று, ஏழையம் யாங்கு அறிகோம் ஐய-ஐயனே ஏழையேமாகிய யாம் என் வண்ணம் அறிவோம். விரிகதிர் வெண்மதியும் மீன் கணமும் ஆம் என்றே – விரிந்த கண்களையுடைய வெள்ளிய திங்களும் விண்மீன் கூட்டமும் ஆமென்று மயங்கி, விளங்கும் வெள்ளைப் புரிவளையும் முத்தும் கண்டு-விளங்குகின்ற வெண்ணிறமுடைய கரிந்த சங்கினையும் முத்தினையும் கண்டு, ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர்-ஆம்பற்போது மலராநிற்கும் காவிரிப்பூம் பட்டினமே எம்முடைய ஊராகும்;
அடுக்கு – பன்மை குறித்தது. கூறியென ஒருசொல் வருவிக்க. நின்னை வரைந்துகொண்டு இல்லறம் புரிவேம் எனக் கூறித் தெய்வஞ் சான்றாகச் சூளுரைத்தவர் என்க. சூள்-சபதம். அறனில்லாத தலைவர் பொய்த்தார் எனக் கூறினமையின் முன்னிலைக்கண் படர்க்கை வந்தது. ஏழையமாதலின் எங்ஙனம் அறிவோமென்றாள். ஏழையம்-மாதரேம்; அறிவில்லேம். தோழி தலைவியையும் உளப்படுத்தி ஏழையம் என்றால் அறிவிலேமாகிய யாம் பெரியீராகிய நும்மை அங்ஙனம் கூறுதல் தகாதென்பாள்போலத் தலைவனிழுக்கினை யெடுத்துக் காட்டிய திறம் நயப்பாடுடையது. ஐய: அண்மை விளி. இங்ஙனம் பன்மையும் ஒருமையும் விரவி வருதல் புலனெறி வழக்கிற் பலவிடத்தும் காணப்படும். பொதி யவிழ்த்தல்- மலர்தல். ஆம்பல் வளையும் முத்தும் கண்டு மதியும் மீன்கணமு மாமென்று மலரும் என்றியைக்க; நிரனிறை. புரி-இடமாகவும் வலமாகவும் வளைந்திருப்பது. நெய்தலின் வளமிகுதி கூறியபடி.
-
௬. காதலர் ஆகிக் கழிக்கானல்
கையுறைகொண்டு எம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாம்இரப்ப
நிற்பதையாங்கு அறிகோம் ஐய
மாதரார் கண்ணும் மதிநிழல்நீர்
இணைகொண்டு மலர்ந்த நீலப்
போதும் அறியாது வண்டுஊச
லாடும் புகாரே எம்மூர்.
காதலர் ஆகிக் கழிக்கானற் கையுறை கொண்டு எம்பின் வந்தார் – காதலை யுடையராகிக் கடற்கரைச் சோலையிடத்தே அன்று கையுறை கொண்டு எமது பின்னே வந்தவர், ஏதிலார் தாம் ஆகியாம் இரப்ப நிற்பதை – இன்று தாம் நொதுமலராகி யாம் இரக்கும் வண்ணம் நிற்கின்றார்; அங்ஙனம் நிற்றலை, யாங்கு அறிகோம் ஐய-ஐயனே ஏழையேமாகிய யாம் எங்ஙனம் அறிவோம்; மாதரார் கண்ணும் – மகளிருடைய முகத்திலுள்ள கண்ணையும், மதிநிழல் நீர் இணைகொண்டு மலர்ந்த நீலப்போதும் – நீரிலே தோன்றும் மதியினது சாயலில் இணையாக மலர்ந்த நீல மலரையும், அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர் – அறிய மாட்டாது வண்டுகள் ஊசலாடும் காவிரிப்பூம்பட்டினமே எம்முடைய ஊராகும்;
கையுறை – காணிக்கை. பின்பு யாம் இரப்ப என்பதனால் முன்பு தாம் இரந்தவர் என்று கொள்க. நிற்கின்றார்; அங்ஙனம் நிற்றலை என அறுத்துரைக்க. அன்று காதலராகிக் கையுறை கொண்டு எமது பின்னே தொடர்ந்து வந்து இரந்தவர் இன்று யாம் இரக்கும் வண்ணம் ஏதிலராகி நிற்கின்றார். இஃதென்னே! என்றபடி. ஈண்டும் முன்னிலைப் படர்க்கை. ஏழையம் என்பதனை ஈண்டும் கூட்டுக. மதிநிழல் என்றதற் கேற்ப முகம் என்பது வருவிக்கப்பட்டது. தேன் உண்ண வந்த வண்டு இது நீலமலர், இது கண் என அறியமாட்டாதுமயங்கித் திரியும் என்றார். ஊசலாடுதல்-அங்குமிங்கும் அலைதல்; இலக்கணைப் பொருள்.
-
௭. மோது முதுதிரையால் மொத்துண்டு
போந்துஅசைந்த முரல்வாய்ச் சங்கம்
மாதர் வரிமணல்மேல் வண்டல்
உழுதுஅழிப்ப மாழ்கி ஐய
கோதை பரிந்து அசைய மெல்விரலால்
கொண்டுஓச்சும் குவளை மாலைப்
போது சிறங்கணிப்பப் போவார்கண்
போகாப் புகாரே எம்மூர்.
மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய்ச் சங்கம்-மோதுகின்ற பெரிய அலையாலே தாக்குண்டு அசைந்து போந்த ஒலிக்கின்ற வாயையுடைய சங்கம், மாதர் வரி மணல்மேல் வண்டல் உழுது அழிப்ப-சிறுமியர் மணலின்மீது இயற்றிய சிற்றில் முதலியவற்றை உழுது அழித்தலால், மாழ்கி ஐய-ஐயனே அவர்கள் மயங்கி; கோதை பரிந்து-தாம் அணிந்திருந்த மாலையை அறுத்து, அசைய மெல்விரலாற் கொண்டு ஓச்சும் குவளை-அசைந்து செல்லும்படி மெல்லிய விரல்களால் வீசி யெறிந்ததிற் சிதறிய நீலமலர்கள், மாலைப்போது சிறங்கணிப்ப-மாலைப்பொழுதிலே கடைக் கணித்தாற்போற் கிடப்ப, போவார்கண் போகாப்புகாரே எம் ஊர்-ஆண்டுச் செல்வோர் கண்கள் அவற்றைக் கண்களென ஐயுற்று அப்பாற் செல்லாத காவிரிப் பூம்பட்டினமே எம்முடைய ஊராகும்;
அசைந்து போந்தவென மாறுக. முரல் வாய்-ஒலிக்கும் வாய். மாதர் ஈண்டுச் சிறுமியர் வரி- கீற்று. வண்டல் -மகளிர் விளையாட்டு; ஈண்டு ஆகு பெயரால் சிற்றில் முதலியவற்றைக் குறித்தது. உழுதல்-கீழ்ந்து செல்லுதல். சிந்திய குவளை மலர்கள் மாலைப்பொழுதில் சிறிதே குவிந்து மகளிர் கடைக்கணித்தாற்போன் றிருந்தமையின், சிறங்கணிப்ப என்றார். சிறங்கணித்தல்-கடைக்கணித்தல். இதை இங்கு வாழ்வாரைக் கடைக்கணித்த கண்களென்று தம் பேதைமையாற் பார்த்துநிற்கும் எனக்கொண்டு, ஆகலின் யாங்களும் பேதையம் எனக்குறிப்பெச்சமாக்கி உரைத்தலுமாம். இனி, கோதையைக் கூந்தலெனக் கொண்டு-கூந்தல் அவிழ்ந்தசைய விரலால் ஓச்சும் குவளை மாலையினின்றும் சிதறிய பூக்கள் என்றுரைத்தலுமாம்.
"கரியமலர்"முதலிய மூன்றும் தோழி தலைமகன் முன்னின்று வரைவுகடாயவை. கையுறைமறை எனினும் அமையுமென்றார் அரும்பதவுரையாசிரியர். இதற்கு நீர் கொண்டு வந்த பூக்கள் எம்மூரின் கண்ணும் உளவாகலின் அவை வேண்டா என மறுத்தவாறாம் என்பது கருத்தாகும். ஆயின், "கையுறை கொண்டெம்பின் வந்தார்"என்பது இன்று அவ்வாறு வந்திலரெனப் பொருள் தருதலின் அதனோடு மாறு படுவதாகும். இவை பாட்டுடைத் தலைவன் பதியொடு சார்த்திப் பாடிய வரிப்பாடாகலின் சார்த்துவரியாகும். பாட்டுடைத் தலைவன் - சோழன்; பதி-புகார். "பாட்டுடைத் தலைவர் பதியொடும் பெயரொடும் சார்த்திப் பாடலிற் சார்த்தெனப் படுமே"என்றார். அது முகச்சார்த்து, முரிச்சார்த்து, கொச்சகச் சார்த்து என மூவகைப்படும்; அவற்றுள் இம் மூன்றும் முகச்சார்த்து (இம்மூன்றும் ‘’மோதுமுதுதிரை" "காதலராகி" ‘கரியமலர்’என்ற முறையிலும் காணப்படுகின்றன.)
-
வேறு (முகம் இல் வரி)
௮. துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத
தோற்றம் மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர்ந்து நுண்தாது
போர்க்கும் கானல்
நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
தீர்க்கும் போலும்.
துறைமேய் வலம்புரி-கடலின் துறையிலே மேய்கின்ற வலம்புரிச் சங்குகள், தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய்வான்-மணலிலே தோய்ந்து உழுத வடுக்கள் மறையும்படி, பொறை மலி பூம்புன்னைப் பூ உதிர்ந்து-அழகிய புன்னை மரத்தின் நிறைந்த பாரமாகிய பூக்கள் உதிர்ந்து, நுண் தாது போர்க்குங் கானல்-அவற்றின் நுண்ணிய பூந்துகள் மறைக்கும் கானலிடத்தே, நிறைமதி வாண்முகத்து நேர் கயற்கண் செய்த – இவளது நிறைமதி போலும் ஒள்ளிய முகத்திலுள்ள கயலையொத்த கண்கள் செய்த, உறை மலி உய்யா நோய்-மருந்தாற் போக்க முடியாத நிறைந்த நோயினை, ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும்-சுணங்கு பரந்த மெல்லிய முலைகளே போக்கும் போலும்;
மாய்வான் – மறைய ; வினையெச்சம். மாய்வான் தாது போர்ககுங் கானல் என்றியையும். கயல் நேர் கண், சுணங்கு ஊர் முலை, உறை உய்யாமலி நோய் என மாறுக. உறை-மருந்து. உய்யா – போக்க முடியாத மலி உறை என்னலுமாம். போலும் - ஒப்பில் போலி.
இது, குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைமகளது காதன் மிகுதி குறிப்பினானறிந்து கூறியது.
-
(கானல் வரி)
௯. நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் ஓப்புதல்
தலைக்கீடு ஆகக்
கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி நறுஞாழல்
கையில் ஏந்தி
மணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று ஆண்டுஓர்
அணங்குஉறையும் என்பது அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.
நிணம் கொல் புலால் உணங்கல் நின்று புள் ஒப்புதல் தலைக்கீடு ஆக - நிணம் பொருந்திய புலால் வற்றல் புலர்வதன் பாங்கர் நின்று புள்ளினை ஓட்டுதல் காரணமாக, கணம் கொள்வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி-கூட்டமாகிய வண்டுகள் முரன்று திரியும் கன்னியாகிய நறிய ஞாழலின் பூங்கொத்தைக் கையில் ஏந்தி, மணம் கமழ் பூங்கானல் மன்னி-மணம் நாறுகின்ற பூக்களையுடைய கானலிடத்துப் பொருந்தி, ஆண்டு ஓர் அணங்கு உறையும் என்பது அறியேன்-ஓர் தெய்வம் உறையுமென்பதை அறியேன், அறிவேனேல் அடையேன் மன்னோ – அறிவேனாயின் ஆண்டுச் செல்லேன்;
புள் – உணங்கலைக் கவர வரும் பறவை. தலைக்கீடு-போலிக் காரணம் ; இதனை வியாசம் என்ப. கன்னி-இளமை ; உயர்திணைக்குரிய கன்னி யென்னுஞ்சொல் அஃறிணை யடுத்துவருவதனை ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும். ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும், வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல" என்னுஞ் சூத்திரத்து ஒன்றென முடித்தல் என்பதனால் அமைப்பர். ஞாழல் – புலி நகக் கொன்றை. அணங்கு - வருத்துந் தெய்வம். கானலில் உறையுமென்பதறியேன் என்றும் அறிவேனேல் ஆண்டு அடையேன் என்றும் கொண்டு கூட்டுக. மற்று, மன், ஓ - அசைகள். மன் - கழிவுமாம்.
இது கழற்றெதிர்மறை ; இயலிடங் கூறலுமாம்.
-
௧0. வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில்
மலர்கை ஏந்தி
விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுஉருவம்
கொண்டு வேறுஓர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது
அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.
வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் – வலை வளத்தால் வாழ்பவருடைய சேரியில் வலை உலரும் முற்றத்திலே, மலர் கை ஏந்தி-பூங்கொம்பைக் கையில் ஏந்தி, விலை மீன் உணங்கற் பொருட்டாக – விற்றற்குரிய மீன்வற்றல் புலர்வதனைக் காத்தற் பொருட்டாக, வேண்டுருவம் கொண்டு-தான் வேண்டிய வடிவங்கொண்டு, வேறு ஓர் கொலை வேல் நெடுங்கட் கொடுங்கூற்றம் வாழ்வது-கொலைத் தொழில் பொருந்திய வேல் போலும் நீண்ட கண்களையுடைய வேறொரு கொடிய கூற்றம் வாழ்வதனை, அலைநீர்த் தண் கானல் அறியேன் – அலைகின்ற நீரையுடைய குளிர்ந்த கானலிடத்தே அறியேன், அறிவேனேல் அடையேன் மன்னோ – அறிவேனாயின் ஆண்டுச் செல்லேன்;
உணங்கலைக் காத்தற் பொருட்டாக வென்க. உலகத் துயிர்களைக் கொள்ளும் கூற்றமன்றி என்னுயிரைக் கவர்தற்கு நிற்கும் வேறோர் கூற்றமென்றானென்க. வேறோர் கூற்றம் நெடுங்கண்ணையுடைய வேண்டுருவங்கொண்டு வாழ்வது என்றியைத்தலுமாம்.கூற்றம் வேண்டுருவங்கொண்டு கானலிடத்து வாழ்வதனை அறியேன். அறிவேனேல் ஆண்டு அடையேன் என்க. இதன் துறையும் மேற்கூறியதே. இம்மூன்றும் கானல்வரி.
-
வேறு (நிலைவரி)
௧௧. கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன்
செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்.
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே
கயல் எழுதி வில் எழுதிக் கார் எழுதிக் காமன் செயல் எழுதித் தீர்ந்த முகம் திங்களோ காணீர் – கண்ணெனக் கயலையும் புருவமென வில்லையும் கூந்தலெனக் கரிய மேகத்தையும் எழுதி அவற்றுடன் பிறரை வருத்துந் தொழிலையும் எழுதிப் பணிக் குறையற்ற முகம் திங்களோ காணீர், திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே அங்கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே – அழகிய இடத்தையுடைய வானத்திருப்பின் அரவு கவருமென்று அஞ்சித் திமிலால் வாழ்பவருடைய சீறூரின்கண் வந்து உறையும் அழகிய திங்களோ காணீர்;
காமன் செயல்-பிறரை வருத்துந் தொழில். தீர்ந்த-குறையற்ற; முற்றுப் பெற்ற. திங்களோ ,ஓ - வியப்பு. திமில் –மீன் படகு. சீறூர்க்கு , வேற்றுமை மயக்கம். அரவு-இராகு கேது. திங்களோ என வியந்தவன் அது நிலத்தின்கண் வருவதற்குக் காரணங் கற்பித்து வானத்தரவஞ்சிச் சீறூரில் வாழ்வதாகிய திங்களோ என்றானென்க.
௧௨. எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்
கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்.
கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே
மடம்கெழுமென் சாயல் மகளா யதுவே.
எறி வளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும் – கரையிலே அலைகள் எறியும் வளைகள் முழங்க அதற்கஞ்சி இரண்டு பக்கத்தும் ஓடும், கறைகெழுவேற் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்-குருதிக்கறை பொருந்திய வேல்போன்ற கண்ணையுடையாள் கடிய கூற்றமோ பாரீர், கடுங் கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே மடம் கெழு மென் சாயல் மகளாயது – கடல் வளத்தால் வாழ்பவருடைய சிறிய ஊரிலே மடப்பம் பொருந்திய மிக்க மென்மையையுடைய மகளாகிய தான் கடிய கூற்றமோ பாரீர்;
வேற் கண் – வேற்கண்ணையுடையாள்; ஆகு பெயரென்பர் அரும்பதவுரையாசிரியர். கூற்றமோ என ஓகாரத்தைப் பிரித்துக் கூட்டுக. சாயல்-மென்மை.
௧௩. புலவுமீன் வெள்உணங்கல் புள்ஓப்பிக் கண்டார்க்கு
அலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணீர்.
அணங்குஇதுவோ காணீர் அடும்புஅமர்த்தண் கானல்
பிணங்குநேர் ஐம்பால்ஓர் பெண்கொண் டதுவே.
புலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி – புலால் நாறும் மீனின் வெளிய வற்றலைக் கவரும் பறவையை ஓட்டி, கண்டார்க்கு அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ காணீர்-நோக்கினார்க்கு அலந்தலைப்பட வருத்தத்தைச் செய்யும் அணங்கோ இது காணீர், அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண்கானல் பிணங்கு நேர் ஐம்பால் ஓர்பெண் கொண்டதுவே-அடும்பின் மலர்கள் பொருந்திய குளிர்ந்த கானலிலே செறிந்த மெல்லிய கூந்தலையுடைய ஓர் பெண் வடிவு கொண்டதாகிய அணங்கோ இது காணீர்;
அலவ - அலந்தைலைப்பட; மனந்தடுமாற கண்டார்க்கு நோய் செய்யும் அணங்கோ இதுவென்க. அடும்பு-நெய்தற் கருப்பொருளாய பூ: இஃது அடம்பு எனவும் வழங்கும். பிணங்குதல்-செறிதல். நேர்-மென்மை. பெண் கொண்டது-பெண் வடிவு கொண்டது.
இவை மூன்றும் தமியளாக இடத்தெதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன் கூறியவை.
இவை நிலைவரி; அதன் இலக்கணத்தை "முகமு முரியுந் தன்னொடு முடியும். நிலையை யுடையது நிலையெனப்படுமே"என்னுஞ் சூத்திரத்தானறிக,
வேறு (முரிவரி)
௧௪. பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதுஅறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதுஅரு மின்இடையே எனைஇடர் செய்தவையே
பொழில் தரு நறுமலரே – பொழிலால் தரப்படும் நறியமலரும், புதுமணம் விரி மணலே-அம் மலர்களின் புதிய மணம் பரந்த மணலும், பழுதறு திரு மொழியே-அதில் நின்றவளுடைய குற்றமற்ற இனியமொழியும் : பணை இள வன முலையே-பருத்த இளமையாகிய அழகிய முலையும், முழுமதி புரை முகமே-நிறைமதி போலும் முகமும், முரி புரு வில் இணையே-வளைந்த புருவமாகிய இரண்டு வில்லும், எழுதரும் மின் இடையே-எழுதற்குரிய மின்போன்ற இடையும், எனை இடர்செய்தவையே-என்னைத் துன்புறுத்தியவையாகும்.
முரி-வளைவு. புரு-புருவம். மலர், மணல் என்பன தலைவியைக் கண்ட இடத்தையும், மொழி முதலியன தலைவியின் இயலையும் அறிவிப்பன. ஏகாரங்கள் எண்ணுப்பொருளன. பின்வருவனவும் இன்ன.
௧௫. திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே
திரை விரிதரு துறையே – அலைகள் பரந்த நீர்த்துறையும், திரு மணல் விரி இடமே – அழகிய மணல் பரந்த இடமும், விரை விரி நறுமலரே-மணம் விரிந்த நறிய மலரும், மிடைதரு பொழில் இடமே-தருக்கள் நெருங்கிய சோலையினிடமும், மரு விரி புரிகுழலே-மணம் பரந்த சுருண்ட கூந்தலும், மதி புரை திருமுகமே-மதியை யொக்கும் அழகிய முகமும், இருகயல் இணை விழியே-இரண்டு கயல்போலும் இருவிழியும், எனை இடர் செய்தவையே-என்னைத் துன்புறுத்தியவையாகும்;
விரிதரு, மிடைதரு என்பவற்றில் தரு துணைவினை.
௧௬. வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
தளைஅவிழ் நறுமலரே தனிஅவள் திரிஇடமே
முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே
வளைவளர் தரு துறையே – சங்குகள் வளரும் துறையும், மணம் விரிதரு பொழிலே – மணம் பரந்த சோலையும், தளை அவிழ் நறுமலரே-முறுக்கு விரிந்த நறிய மலரும், தனி அவள் திரி இடமே-அவள் தனியே உலாவிய இடமும், முளை வளர் இளநகையே-முளைபோல் வளரும் இளைய பல்லும், முழுமதி புரைமுகமே-நிறைமதி ஒக்கும் முகமும், இளையவள் இணை முலையே-இளமைப் பருவமுடையவளது இணைந்த முலையும்: எனை இடர் செய்தவையே, என்னைத் துன்புறுத்தியவையாகும்;
தரு என்பதற்கு மேல் உரைத்தமை கொள்க. தனியவள்-ஒப்பற்றவளுமாம். முளை-முளைத்த என்றலுமாம். இணை-ஒன்றோடொன்று நெருங்கிய; இரண்டுமாம்.
இவை மூன்றும் தலைமகன் பாங்கன் கேட்ப உற்றதுரைத்தவை.
இவை முரிவரி; அதன் இலக்கணத்தை "எடுத்த வியலு மிசையுந் தம்மின், முரித்துப் பாடுதல் முரியெனப் படுமே" என்னுஞ் சூத்திரத்தானறிக.
வேறு (திணை நிலைவரி)
௧௭. கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்.
கடல் புக்கு உயிர்கொன்று வாழ்வர் நின் ஐயர்-நின் மூத்தோர் கடலிற் புகுந்து உயிர்களைக் கொன்று வாழாநிற்பர் ; உடல் புக்கு உயிர் கொன்று வாழ்வை மன் நீயும் -நீயும் உடலிற் புகுந்து உயிரைக் கொன்று வாழ்கின்றனை ; மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் – வலியிலே புகுந்து நின்று அடங்காத வெவ்விய முலைகளோ பாரமாகவுள்ளன; இடர்புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய் – இடரிலே கிடந்து மெலியும் இடையை இழந்துவிடாதே.
ஐயர் – மூத்தோர்; தந்தை, தமையன்மார். என்னுயிரைக் கொன்றென்க. நின்னையர் உயிர்கொன்று வாழ்வரென்றது. உயிர் கொல்வது நின் குல தருமமாக வுள்ளது என்று காட்டுதற்கு. நீ புரியும் இக்கொடு வினையால் நின் இடை முறியவுங் கூடும். அன்றியும் நின் முலைகளோ பாரமாகவுள்ளன; ஆதலின் உயிர் கொல்லுந் தீமையைக் கைவிட்டு, அப்பாரத்தை என் தோளி லேற்றி, நின் இடையைப் பாதுகாப்பாயாக என்று தலைவன் கூறினானென்க. எனது ஆற்றாமயைத் தீர் என்பது கருத்து. மன் : அசை : மிகவும் என்றுமாம். கண்டாய் , முன்னிலையசை பின்னிரண்டு கவிகட்கும் இங்ஙனமே பொருள் கொள்க. இடர்புரிக்கு மின்னிடை எனவும் பாடம்.
௧௮. கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்
கொடுங்கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை-வளைந்த கண்களையுடைய வலையால் உயிர்களைக் கொல்வான் நின் தந்தை ; நெடுங் கண் வலையால் உயிர் கொல்வை மன் நீயும்-நீயும் நெடிய கண்ணாகிய வலையால் உயிரைக் கொல்லா நிற்பை; வடம் கொள் முலையால் – முத்து வடத்தைத் தாங்கியுள்ள முலைகளால், மழை மின்னுப் போல் நுடங்கி உகும் மெல் நுசுப்பு இழவல் கண்டாய் - மேகத்தின் மின்னினைப்போல் அசைந்து தளரும் மெல்லிய இடையை இழந்துவிடாதே.
கொடுங்கண்-கண்போன்றிருக்கும் வலையின் இடை வெளிகள்நெடுங்கண் வலை , உருவகம்; வடமும் ஒரு பாரமென்றபடி.முலையால் இழவல் என்றியைக்க.
நுடங்குமின் மென்னுசுப்பு எனவும் பாடம்.
௧௯. ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்
ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர்-உன்னுடைய மூத்தோர் கடலில் ஓடும் படகினைக் கொண்டு உயிர்களைக் கொல்வர்; கோடும் புருவத்து உயிர் கொல்வை மன் நீயும்-நீயும் நினது வளைந்த புருவத்தால் உயிரைக் கொல்லா நிற்பை; பீடும் பிறர் எவ்வம் பாராய் – நினது பெருமையினையும் பிறர் படுந் துன்பத்தையும் நீ பார்த்தல் செய்யாய் ; முலை சுமந்து-முலைகளைச் சுமத்தலால், வாடும் சிறு மென்மருங்கு இழவல் கண்டாய் – வாடுகின்ற சிறிய மெல்லிய இடையை இழந்து விடாதே;
எவ்வமும் என்னும் உம்மை தொக்கது. பீடும் எவ்வமும் என்னும் உம்மைகள் எண்ணும்மையும் சிறப்பும்மையுமாகும். ‘பாரா’என்னும் பாடத்திற்குத் தம் பெருமையும் பிறர் எவ்வமும் பாராத முலை என்று பொருள் கொள்க. சுமத்தலால் இழவல் என்க. இழவல்,அல் எதிர் மறை. "மகனெனல்"என்புழிப்போல.
இவை மூன்றும் புணர்ச்சி நீட இடந்தலைப்பாட்டிற் புணர்தலுறுவான் ஆற்றாமை கூறியவை. தொல்காப்பிய வுரையில் "கடல் புக்குயிர் கொன்று" என்பதனைப் பொய் பாராட்டல் என்னுந் துறைக்கு உதாரணங் காட்டினார் நச்சினார்க்கினியர்.
- வேறு
௨0. பவள உலக்கை கையால் பற்றித்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை அல்ல கொடிய கொடிய
பவள உலக்கை கையாற் பற்றி – பவளத்தாலாகிய உலக்கையைக் கையாற் பற்றி, தவள முத்தம் குறுவாள் செங்கண் – வெண்மையாகிய முத்துக்களைக் குற்றுபவளுடைய சிவந்த கண்கள், தவள முத்தம் குறுவாள் செங்கண்-, குவளை அல்ல கொடிய கொடிய – குவளை மலர்களல்ல, அவை கொடியன கொடியன.
குறுதல் – இக் காலத்தே குற்றுதல் என வழங்குகிறது. முத்தை அரிசியாகப் பெய்து பவள உலக்கையாற் குறுவரெனச் செல்வச் சிறப்புக் கூறியவாறு. நிறம்பற்றிக் குவளையென்ன வேண்டா, அவை கொடியனவென்க.
௨௧. புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய. கூற்றம் கூற்றம்.
புன்னை நீழல்-புன்னை மரத்தின் நீழலில், புலவுத் திரை வாய் அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் – புலால் நாறும் அலையின் மீதே அன்னப் பறவை நடக்கும்படி நடப்பவளுடைய சிவந்த கண்கள், அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்-,கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம்-மிகவும் கொடியன; ஆதலால் அவை கூற்றமேயாகும்.
அன்னம் இந் நடையைப் பார்த்து நடக்கும்படி நடப்பாளென்க; அன்றி, நடைக்கு அஞ்சி யோட என்றுமாம். நிழலில் நடப்பாள் என வியையும். கொன்-மிகுதி.
௨௨. கள்வாய் நீலம் கையின் ஏந்திப்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல. வெய்ய வெய்ய.
கள் வாய் நீலம் கையின் ஏந்தி-தேனை வாயினிடத்துடைய நீலப் பூவைக் கையிலே ஏந்திக் கொண்டு, புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் – உணங்கலிடத்துப் பறவையை ஓட்டுபவளுடைய சிவந்த கண்கள், புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்-, வெள் வேல் அல்ல வெய்ய வெய்ய – வெள்ளிய வேல்கள் அல்ல; மிகவும் கொடியன வேயாகும் ;
உணங்கல்வாய்ப் புள் என மாறுக. உணங்கல்-மீன் வற்றல். வெள் வேல்-மாற்றாரை யெறிந்து குருதிக் கறை பற்றாத வேல். வடிவு பற்றி வெள்வேல் என்ன வேண்டா; இவை மிகக் கொடியன என்க. இப்பாட்டுகளில் நெய்தற் கருப்பொருளே வந்திருத்தல் காண்க. இவை கந்தருவ மார்க்கத்தால் இடை மடக்கி வந்தன.
இவை மூன்றும் குறியிடத்துக் கண்ட பாங்கன் சொல்லியவை; புணர்ந்து நீங்குவான் விடுத்தலருமையால் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியவையுமாம்.
வேறு
௨௩. சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்.
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – மடப்பத்தையுடைய அன்னமே (விளையாட்டு விருப்பினால் ஓடுவாளைக் கண்டு இவள் நடை உனது நடைபோலும் என்று புலவர் சொல்வாராயினும், இவள் விளையாட்டொழிந்து இயல்பாக நடக்குமிடத்து)இவள் நடையை உனது நடை ஒவ்வாது, ஆதலால் இவள் பின்னே செல்லாதிருக்கக் கடவை; செல்லாதிருக்கக் கடவை; ஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள்பின்-பரக்கின்ற அலைகலையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்திலுள்ளாரை வென்று திரிபவள் பின்னே, சேரல் ...........ஒவ்வாய்-நடை யொவ்வாயாதலால் அன்னமே செல்லாதிருக்கக் கடவை ;
நீர்வேலி – செய்தனிலமுமாம். ஊர்திரை நீரோத முழக்கி என்பது பாடமாயின், கழியின் நீரைக் கலக்கி யென்க. இதுவும் கந்தருவ மார்க்கத்தால் அடிமடக்கி வந்தது.
இது, காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமஞ் சாலா இடும்பை யெய்தியோன் சொல்லியது.
"கடல்புக்குயிர் கொன்று"என்பது முதலிய ஏழும் திணை நிலைவரி.
(கட்டுரை)
௨௪. ஆங்கு, கானல்வரிப் பாடல்கேட்ட
மான்நெடுங்கண் மாதவியும்
மன்னும்ஓர் குறிப்புஉண்டுஇவன்
தன்நிலை மயங்கினான்எனக்
கலவியால் மகிழ்ந்தாள்போல்
புலவியால் யாழ்வாங்கித்
தானும்ஓர் குறிப்பினள்போல்
கானல்வரிப் பாடல்பாணி
நிலத்தெய்வம் வியப்புஎய்த
நீள்நிலத்தோர் மனம்மகிழக்
கலத்தொடு புணர்ந்துஅமைந்த
கண்டத்தால் பாடத்தொடங்கும்மன்
ஆங்கு-அவ்விடத்து, கானல் வரிப் பாடல் கேட்ட மான் நெடுங்கண் மாதவியும்-கோவலன் யாழில் வாசித்த கானல் வரிப்பாட்டுக்களைக் கேட்ட மான்போன்ற நெடிய கண்களையுடைய மாதவியும், மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என – (அப்பாட்டுக்கள் களவுப் புணர்ச்சியில் தலைமகன் கூறிய கூற்றாயிருத்தலின்)இவன் உள்ளத்து நிலைபெற்ற வேறொரு குறிப்புளது. இவன் தன்றன்மை வேறுபட்டான் எனப் புலந்து, கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ்வாங்கி-அப்புலவியால் அவன் கையினின்றும் யாழை வாங்குபவள் அதனைப் புலப்படுத்தாமல் கலவியால் மனமகிழ்ந்தவள் போல வாங்கி, தானும் ஓர் குறிப்பினள் போல் – தான் வேறு குறிப்பு இலளாயினும் அவன் வேறு குறிப்பினனாகப் பாடினமையின் தானும் வேறு குறிப்புடையாள் போல அவனுக்குத் தோன்ற, கானல் வரிப் பாடற்பாணி-கானல்வரிப் பாடலாகிய உருக்களை, நிலத்தெய்வம் வியப்பு எய்த நீள்நிலத்தோர் மனம் மகிழ-அந்நிலத்திற்குரிய தெய்வமாகிய வருணன் வியப்புறவும் நெடிய புவியிலுள்ளோர் மனமகிழவும், கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத் தொடங்கும்-யாழின் இசையோடு கலந்து ஒன்றுபட்ட கண்டத்தினாலே பாடத் தொடங்கினாள்;
மன்னும் ஓர் குறிப்பு-வேறு மகளிர்பாற் சென்ற வேட்கை. தானும் ஓர் குறிப்பினள் போல்-தானும் வேறு ஆடவன்பால் விருப்பம் வைத்தாள்போல. மயங்கினாளெனப் புலந்து அப்புலவியால் யாழ் வாங்கியென்க. கலம்-யாழ் ; அதன் எழாலுக்காயிற்று பருந்தும் அதன் நிழலும்போல யாழ்ப்பாடலும் மிடற்றுப் பாடலும் ஒன்றுபட் டியங்க என்க. மன் , அசை.
வேறு (ஆற்று வரி)
௨௫. மருங்கு வண்டு சிறந்துஆர்ப்ப
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்தாய் வாழி காவேரி.
கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி.
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப – இருபக்கத்தும் வண்டுகள் மிக்கொலிக்க, மணிப் பூ ஆடை அது போர்த்து –அழகிய பூ வாடையைப் போர்த்து, கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்தாய் – கரிய கயற்கண் விழித்து அசைந்து நடந்தாயாகலால், வாழி காவேரி – காவேரி நீ வாழ்வாயாக; கருங்கயற்கண் விழித்து ஒல்கி, நடந்தவெல்லாம் – அங்ஙனம் நடந்த செயலெல்லாம், நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன்-நின் கணவனது திருந்திய செங்கோல் வளையாமையே; அதனை அறிந்தேன்; வாழ்வாயாக;
மருங்கு – ஆற்றின் இருபக்கம். இருபக்கத்தும் தொங்குகின்ற கை. வண்டு-வண்டு, வளையல். பூ ஆடை-பூவாகிய ஆடை; பூத்தொழிலமைந்த ஆடை. கயற்கண்-கயலாகிய கண்; கயல் போலுங் கண்.காவேரியை ஒரு பெண்ணாகக் கொண்டு, அதற்கேற்பச் சிலேடை வகையாற் கூறினார். கணவன் என்றது சோழனை. வளையாமையே என்னும் தேற்றேகாரம் தொக்கது. யான் அதனை அறிந்தேன் என முடிக்க.
௨௬. பூவர் சோலை மயில்ஆலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகுஅசைய
நடந்தாய் வாழி காவேரி.
காமர் மாலை அருகுஅசைய
நடந்த எல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டே
அறிந்தேன் வாழி காவேரி.
பூ அர் சோலை மயில் ஆல – பூக்கள் நிறைந்த சோலையில் மயில்கள் ஆடவும், புரிந்து குயில்கள் இசை பாட-குயில்கள் விரும்பி இசை பாடவும், காமர் மாலை அருகு அசைய-விருப்பம் பொருந்திய மாலைகள் அருகில் அசையவும், நடந்தாய் வாழி காவேரி-நடந்தாயாகலாற் காவேரி நீ வாழ்வாயாக; காமர் மாலை அருகு அசைய -, நடந்த எல்லாம்-நீ அங்ஙனம் நடந்த செயலெல்லாம், நின் கணவன் நாமவேலின் திறம் கண்டே – நின் கணவனது அச்சத்தைச் செய்யும் வேலின் றன்மையைக் கண்டே; அறிந்தேன் வாழி காவேரி – யான் அதனை அறிந்தேன்; வாழ்வாயாக;
பூவர் , ஆர் நெடில் குறுகியது. மாலை-புதுப்புனலாடுவார் அணிந்தவை. நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது; நாமம்-புகழ் என்றுமுரைப்பர். வேலின் றிறங் கண்டே என்றது பிறரால் வருத்தமில்லை யென்றபடி.
௨௭. வாழி அவன்தன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி
ஒழியாய் வாழி காவேரி.
ஊழி உய்க்கும் பேர்உதவி
ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன்
அருளே வாழி காவேரி.
வாழி அவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி – நின் கணவனது வளநாடு மகவாக நீ அதனை வளர்க்கும் தாயாகி, ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி-ஊழி தோறும் நடத்தும் பேருதவி நீங்கா யாகலால் காவேரி நீ வாழ்வாயாக; ஊழியுய்க்கும் பேருதவி-, ஒழியாது ஒழுகல் – நீ அங்ஙனம் நீங்காது ஒழுகுதல், உயிர் ஓம்பும் ஆழி ஆள்வான் பகல் வெய்யோன் அருளே வாழி காவேரி-உயிர்களைப் பாதுகாக்கும் சக்கரவர்த்தியாகிய நடுவுநிலைமை யுடையவனது அருளே; வாழ்வாயாக.
முதற்கண் வாழி- அசை. வளநாடு-சோழநாடு. மகவாக வெனத் திரிக்க. ஊழி உய்க்கும் - முறையில் நடத்தும் என்றுமாம். ஆழி ஆள்வான். ஆழியை ஆள்பவன்; ஆழியால் ஆள்பவன் என்றுமாம். ஆழி-ஆக்கினைச் சக்கரம். பகல், நடுவுநிலை. வெய்யோன்-விரும்புபவன்.
மூன்று பாட்டிலும் நடந்தாய் முதலியவற்றை ஏதுவாக்காமல் முற்றாக்கி, வாழி- அசை யென்றலுமாம். வளையாமை, அருளே என்பன காரணம் காரியமான உபசார வழக்கு. இவை மூன்றும் ஆற்றுவரி.
வேறு (சார்த்து வரி)
௨௮. தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும்
வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய
வீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர்
தீங்கதிர் வாள் முகத்தாள் செவ்வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும்-இனிய கதிர்களையுடைய திங்கள் போலும் ஒள்ளிய முகத்தினையுடையாளது சிவந்த வாயின் அழகிய பற்களை இவை ஒவ்வாவாயினும், வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்மகன் போல் வருதிர் ஐய-நீவிர் இந்த முத்துக்களை வாங்குமின் என்று கூறி, ஐயனே, நாடொறும் மயங்கிய மகன் போல வாராநிற்பீர் ; வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம்-ஒலி மிக்க கடலானது விளங்கும் ஒளியினையுடைய வெள்ளிய முத்துக்களைத் தந்து, விரை சூழ் கானற் பூங்கோதை கொண்டு-மணம் பொருந்திய கானலிடத்துப் பூமாலைகளைப் பெற்று, விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர்-விற்பார் போல் மீளாநிற்கும் புகாரே எம்முடைய ஊராகும்;
தீங்கதிர்-திங்கள்; ஆகுபெயர். வாங்கும் எனச் செய்யுமென்னுஞ் சொல் முன்னிலைப்பன்மை யேவலில் வந்தது. மால் மகன்-உன்மத்தன்;திருமாலின் மகனாகிய காமன் என்றுமாம். வருதிர் ஐய - பன்மை யொருமை மயக்கம். ஓதம் முத்தம் தந்து கோதை கொண்டு பண்டமாற்றுச் செய்யும் விலைஞர்போல் மீளும் புகார் என்க. கோதை-வண்டல் மகளிர் களைந்திட்டன. தலைமகன் கையுறையாக முத்துக்களை நல்கினானாக, எம் மூரின்கண் கடல்தரும் முத்துக்கள் மிகுதியாக வுள்ளன வாதலின் இவை வேண்டாவெனத் தலைவி மறுத்தாளென்க.
இது, கையுறை மறை.
௨௯. மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம் ஐய
நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்த
பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரே எம்மூர்
மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து-வன்மையுடைய பரதர்களின் பாக்கத்தில் களவிற் கூடிய மகளிரை, மடவார் செங்கை இறை வளைகள் தூற்றவதை-அம் மகளிரது சிவந்த கையின் இறையிலுள்ள வளைகள் கழன்று தூற்றுவதை, ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய-ஐயனே ஏழையோமாகிய யாங்கள் எங்ஙனம் அறியாநிற்பேம்; நிறை மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பிப் பூத்த பொறை மலி பூங்கொம்பு ஏற-அன்னமானது நீண்ட புன்னையினது அரும்பிப் பூத்த பூக்களின் பாரம் மிக்க கொம்பினிடத்தில் ஏறியிருப்ப அவ்வன்னத்தையும் பூக்களையும், நிறைமதியும் மீன் கணமுமெனக் கருதி, வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம்மூர்-வண்டு ஆம்பல் மலரை ஊதா நிற்கும் புகாரே எம்முடைய ஊராகும்;
அம் மடவார் எனச் சுட்டு வருவிக்க. களவிற் புணர்ச்சி நிகழ்த்திப் பிரிந்து சென்ற தலைவர் வரவு நீட்டித்தலின் தலைமகள் கைவளைகள் கழன்று களவினை வெளிப்படுத்தலாயின வென்க. மணந்த தலைவரைத் தூற்றுவதை யென்றுமாம். தூற்றுதல்-பலருமறியப் பரப்புதல். யாங்கு-ஆங்கு என்பது போல அசை. அன்னம் கொம்பு ஏற அதனையும் பூக்களையும் மதியும் மீனுமாகக் கருதி என இயைக்க; நிரனிறை. வண்டூதும் என்றமையால் ஆம்பல் மலர்தல் பெற்றாம். மதியும் மீனுமென ஆம்பல் மலர அதன்கண் வண்டூதும் என்க.
௩0. உண்டாரை வெல்நறா ஊண்ஓழியாப் பாக்கத்துள் உறைஒன்று இன்றித்
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம் ஐய
வண்டல் திரைஅழிப்பக் கையால் மணல்முகந்து மதிமேல் நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க பரதர் கடல்துர்க்கும் புகாரே எம்மூர்.
உண்டாரை வெல் நறா ஊண் ஒளியாப் பாக்கத்துள்-உண்டவர்களைத் தன் கடுமையால் வெல்லுங் கள்ளாகிய ஊண் மறையாது வெளிப்படும் பாக்கத்திலே, உறை ஒன்று இன்றி-மருந்தொன்றின்றியே, தண்டா வோய்-அமையாத காமநோயை, மாதர்தலைத் தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய-மாதரிடத்துத் தருகின்றாய் என்பதனை ஐயனே யாங்கள் எங்ஙனம் அறியா நிற்பேம்; வண்டால் திரை அழிப்ப-தம்முடைய வண்டலாகிய சிற்றில் முதலியவற்றைக் கடலின் அலைகள் ஊர்ந்துவந்து அழிக்க, கையால் மணல் முகந்து-கையினால் மணலை வாரி யிறைத்து, மதிமேல் நீண்ட புண் தோய் வேல் நீர் மல்க-மதி போலும் முகத்தின்மேல் நீண்ட பகைவர் புண்ணிற்றோய்ந்த வேல் போலும் கண்களில் நீர் பெருக, மாதர் கடல் தூர்க்கும் புகாரே எம்மூர்-சிறுமியர் கடலைத் தூர்க்கும் புகாரே எம்முடைய ஊராகும்;
வெல்லுதல்-தம் வயமிழப்பித்தல். கள்ளுண்டவர் அதனை மறைப்பினும் மறையாது வெளிப்படுமென்பது "களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத், தொளித்ததூஉ மாங்கே மிகும்" என்பதனானறிக. இவ்வியல்பினதாய பாக்கத்துள் என்றமையால், தமது காமநோயும் மறையாது வெளிப்படுமென்பது குறிப்பித்தவாறாயிற்று.காம நோய் வெளிப்படுதல் 2."மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க் கூற்று நீர் போல மிகும்" என்பதனானறியப்படும். பிறிதொரு மருந்தில்லாதிருக்கச் செய்தே நோயைத் தந்தொழிகின்றாய் என்க. வண்டால் : நீட்டல் விகாரம். முகத்தையும் கண்களையும் உவமப் பொருளாற் கூறினார். கண்கள் வெகுளியாற் சிவந்தமையின் புண்டோய் வேல் என்றார்-மணல் முகந்து தூர்க்கும் என்க. ஈண்டு மாதர் என்றது சிறுமியரை. "முன்னைத்தஞ் சிற்றின் முழங்கு கடலோத மூழ்கிப் போக, அன்னைக் குரைப்ப னறிவாய் கடலேயென் றலறிப் பேரும் தன்மை மடவார்" என்னுஞ் செய்யுளில் ‘அன்னைக் குரைப்பன்’
என்பது போல இச்செய்யுள் சிறுமியரது பேதைத் தன்மையைப் புலப்படுத்தி இன்பஞ் செய்கின்றது.
இவை யிரண்டும் தோழியிற் கூட்டங் கூடிப் பின்பு வாரா வரைவலென்றாற்குத் தோழி கூறியவை.
இவை மூன்றும் சார்த்துவரி.
வேறு (திணை நிலைவரி)
௩௧. புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி
இணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வுஒழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்.
புணர் துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி-துணையோடு பொருந்தி விளையாடும் புள்ளிகளையுடைய ஞெண்டினை நோக்கி, இணர் ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி-பூங்கொத்துக்கள் செறிந்த சோலையிடத்து என்னையும் நோக்கி, உணர்வுஒழியப்போன ஒலி திரை நீர் சேர்ப்பன்-உணர்வு தன்னை நீங்கச் சென்ற ஒலிக்கும் அலையையுடைய கடற் சேர்ப்பனது, (வணர் சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்) வண்ணம்-இயல்பினை, வணர் சுரி ஐம்பாலோய்-வளைந்த கடைகுழன்ற கூந்தலையுடையாய், உணரேன்-அறிகின்றிலேன்.
இது தோழி கூற்று. அலவன் துணையோடு ஆடுதல் போல யானும் தலைவியோடாடி இன்புறுமாறு நீயே கூட்டுவித்தல் வேண்டும் என்னுங் குறிப்பினன் என்பாள். ‘அலவனோக்கி என்னையும் நோக்கிப் போன’ என்றாளென்க. இது குறிப்புநுட்பம் என்னும் அணியாகும். உணர்வொழியப்போன என்றமையால் அத்தகையாற்கு அருள் செய்யாதிருத்தல் தகவன்றென்பது புலப்படுத்தாளாயிற்று. சேர்ப்பன் வண்ணம் என இயையும். வண்ணம்-கருதிய தன்மை. உணரேன் என்றமையால் வலிதாகச் சொல்லினாளாம். ஆல் , அசை.
இது, தோழி வலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தது.
௩௨. தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்
தம்முடைய தண்ணளியும் தாமும் தம் மான் றேரும்-தம்முடைய அருளும் தாமும் தமது குதிரை பூட்டிய தேரும், எம்மை நினையாது விட்டாரோ-எம்மை நினையாமற் கைவிட்டாரோ, விட்டுஅகல்க-அவர் அங்ஙனம் விட்டொழிக; அம்மென் இணர் அடும்புகாள்-அழகிய மென்மையாகிய கொத்துக்களையுடைய அடும்புகளே, அன்னங்காள்-அன்னங்களே, நம்மை மறந்தாரை நாம் மறக்கமாட்டேம்-நம்மை அவர் மறந்தனராயினும் நாம் அவரை மறப்பேமல்லேம்;
உயர்திணையும் அஃறிணையும் விரவி உயர்திணையான் முடிந்த; "தானுந் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்" என்பதிற்போல. இதனைத், "தலைமைப் பொருளையும் தலைமையில் பொருளையும் விராயெண்ணித் தலைமைப் பொருட்கு வினை கொடுப்பவே தலைமையில் பொருளும் முடிந்தனவாவதொரு முறை பற்றி வந்தன",என்பர் சேனாவரையர். முன்பு தண்ணளியுடன் எம்மை நினைந்து தேரிற் போந்து அருள் செய்தவரென்பாள், அளியும் தாமும் தேரும் எம்மை நினையாது விட்டாரோ என்றாளென்க. ‘தண்ணளியும் தாமும் தேருமெனப் பின்பு சில சொல்லப் புக்கு அதனைக் காதன் மிகுதியாற் கலங்கி விட்டாரென்றாள்’ என நுட்பவுரை கூறுவர் அரும்பதவுரையாசிரியர். தன்னையே யன்றித் தன்னுடன் இன்பந் துய்த்த இடத்தையும், அவ் வின்பத்தை மிகுவிப்பனவாய் அங்குள்ள அடும்பு அன்னம் முதலியவற்றையும் அவர் மறந்தமை என்னோவென்பாள். அடும்பையும் அன்னத்தையும் விளித்து உளப்படுத்தி, ‘நம்மை மறந்தாரை’ என்றாள். காம மிகுதியாலாய மிக்க வருத்தத்தால் இங்ஙனம் கேளாதவற்றையும் கேட்பன போலக் கருதிக் கூறினாளென்க; "ஞாயிறு திங்க ளறிவே நாணே, கடலே கானல் விலங்கே மரனே, புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே, அவையல பிறவும் நுதலிய நெறியாற் சொல்லுந போலவுங் கேட்குந போலவும் சொல்லியாங் கமையு மென்மனார் புலவர்" என்பது தொல்காப்பியம். பின் இவ்வாறு வருவனவற்றிற்கும் இது விதியாகும். மறக்கமாட்டேம் என்றது ஒரு சொல். விட்டாரோ, ஓ - ஒழியிசை. ஆல் -அசை.
௩௩. புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல்
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ
புன்கண் கூர் மாலை – வருத்தத்தை மிகுவிக்கும் மாலைப்பொழுதில், புலம்பும் என் கண்ணேபோல்-தனிமையால் வருந்தும் என் கண்ணினைப்போல, துன்பம் உழவாய்-துன்பத்தால் வருந்தாமல், துயிலப் பெறுதியால்-இனிது துயிலா நிற்கின்றாய், இன் கள்வாய் நெய்தால்-இனிய கள் திளைக்கும் வாயையுடைய நெய்தலே, நீ எய்தும் கனவினுள்-நீ எய்தாநிற்கும் கனவு நிலையில், வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ-கொடியராய தலைவர் கானலிடத்தே வராநிற்க நீ கண்டறிவாயோ;
நிறத்தால் என் கண்ணை யொத்திருந்தும் செய்கையால் அதனோடு மாறுபடுகின்றாய் என்றாள். துயிலல்-மொட்டித்தல். மாலைப்பொழுதில் நெய்தல் இதழ் குவியுமாதலின், அதனைத் துயிறலாகக் கருதி, என் கண் துயிலின்றி வருந்தவும் நீ துயில்கின்றாய் என்றாள்; கள்ளுண்பார்க்கு இஃது இயல்பே யென்பாள் ‘இன் கள் வாய் நெய்தால்’ என்றாளென்க. உறங்குவார்க்குக் கனவு முண்டென்று கருதி, ‘எய்துங் கனவினுள்’என்றாள். என் கண் துயிலாமையால் யான் கனவினுங் காணப் பெற்றிலேன்; நீ கனவிலே காண்டலுண்டாயிற் கூறுக என்றபடி இதனைக் காப்புச் சிறைமிக்க கையறு கிளவி என இறையனார் களவிய லுரையாசிரியரும், குறிபிழைத்துழித் தன்னுட் கையாறெய்திடு கிளவி என நச்சினார்க்கினியரும் கூறுவர்.
௩௪. புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எஞ்செய்கோ?
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று எஞ்செய்கோ?
புள் இயல் மான் தேர் ஆழி போன வழி எல்லாம்-பறவையின் இயல்பையுடைய குதிரை பூட்டிய தேரின் உருளை சென்ற வழி முழுதையும், தெள்ளுநீர் ஓதம்-தெளிந்த நீரையுடைய கடலே, சிதைத்தாய் மற்று என் செய்கோ-அழித்தாய்; யான் என் செய்வேன், தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய் மற்று-அங்ஙனம் சிதைத்த நீ, எம்மொடு ஈங்கு உள்ளாரோடு உள்ளாய்-எம்மொடு இங்கிருந்து அலர் தூற்றும் அயலாரோடு உள்ளாயாதலால், உணராய்-எனது நோயினை அறியாய், மற்று என் செய்கோ-யான் என் செய்வேன்;
புள்ளினைப் போற் பறக்கு மியல்பினதென அதன் கடுமை கூறுவார். புள்ளியல்மான் என்றார்; "புள்ளியற் கலிமா வுடைமை யான" என்றார் தொல்காப்பியனாரும். தெள்ளு நீர்-கொழிக்கின்ற நீருமாம். ஓதம்-வெள்ளமும் அலையுமாம்; அண்மைவிளி. எம்மொடீங்குள்ளார்-எம் மனம் விட்டு நீங்காத தலைவரென்றுமாம். என் செய்கு-என் செய்வேன் ; தனித்தன்மை. மற்றும், ஓவும் அசைகள்.
௩௫. நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமே
பூந்தண் பொழிலே புணர்ந்துஆடும் அன்னமே
ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே.
நேர்ந்த நம் காதலர்-நம்மொடு பொருந்திய காதலரது, நேமி நெடுந் திண்டேர்-உருளையுடைய நெடிய திண்ணிய தேர், ஊர்ந்த வழி சிதைய ஊர்கின்ற ஓதமே-சென்ற வழி சிதையும்படி பரக்கின்ற வெள்ளமே, பூந் தண் பொழிலே-குளிர்ச்சி பொருந்திய பூக்களையுடைய சோலையே, புணர்ந்து ஆடும் அன்னமே-துணையுடன் கூடி விளையாடும் அன்னமே, ஈர்ந் தண் துறையே-ஈரமாகிய குளிர்ந்த நீர்த் துறையே, இது தகாது என்னீரே-இங்ஙனம் பிரிவது தகாது என்று தலைவர்க்குக் கூறுகின்றீ ரில்லை;
நேர்ந்த – பிரியேனென்று சூளுரைத்த எனலுமாம். பிரிவென்று சொல்லவும் அஞ்சி இதுவெனச் சுட்டியொழிந்தார். இனி, ஊர்கின்ற என்பதை முற்றாக்கி, ஓதம் ஊர்கின்றன இது தகா தென்னீர் எனப் பொழில் முதலியவற்றிற் குரைத்தூஉமாம்.
௩௬. நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்(று) எம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம்
நேர்ந்த நங் காதலர் நேமி நெடு திண் தேர்-நம்மோடு பொருந்தின காதலரது உருளையுடைய நெடிய திண்ணிய தேர், ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்-சென்ற வழி மறையும்படி பரந்தாய், வாழி கடல் ஓதம்-கடலின் வெள்ளமே நீ வாழ்வாயாக, ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் மற்று-அங்ஙனம் பரந்தாயாகலால் நீ, எம்மொடு தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் – எம்முடன் உறவுபோலிருந்து உறவாயிற்றிலை, வாழி கடல் ஓதம்-கடலோதமே வாழ்வாயாக;
வாழி யென்றது குறிப்புமொழி ; அசையுமாம். தீர்ந்தவர்-தெளியப்பட்ட உறவினர்.
இவ் வைந்தும் காம மிக்க கழிபடர் கிளவி. இவை திணைநிலைவரி.
வேறு (மயங்கு திணை நிலைவரி)
௩௭. நன்நித் திலத்தின் பூண்அணிந்து
நலம்சார் பவளக் கலைஉடுத்துச்
செந்நெல் பழனக் கழனிதொறும்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
புன்னைப் பொதும்பர் மகரத்திண்
கொடியோன் எய்த புதுப்புண்கள்
என்னைக் காணா வகைமறத்தால்
அன்னை காணின் என்செய்கோ?
நல்நித்திலத்தின் பூண் அணிந்து-நல்ல முத்தாகிய பூணினை யணிந்து, நலம் சார் பவளக் கலை உடுத்து-நன்மை பொருந்திய பவளமாகிய மேகலையை உடுத்து, செந்நெற் பழனக் கழனிதொறும்-செந்நெற் பயிர்களையுடைய மருதநிலத்துக் கழனிதொறும், திரை உலாவு கடற் சேர்ப்ப-அலைகள் உலாவுகின்ற கடலின் கரையையுடைய தலைவனே, புன்னைப் பொதும்பர்-புன்னைமரம் அடர்ந்த சோலையிலே, மகரத் திண் கொடியோன் எய்த புதுப் புண்கள்-வலிய மகரக் கொடியையுடைய மன்மதன் அம்பெய்தமையாலான புதிய புண்கள், என்னைக் காணா வகை மறைத்தால்-என் னுருவினைக் காணாதபடி மறைப்பின், அன்னை காணின் என் செய்கோ-அதனைத் தாய் அறியின் என் செய்வேன்;
நித்திலத்தின் பூண், பவளக்கலை என்பன வேற்றுமைத் தொகையும் பண்புத் தொகையுமாம். பழனம்-மருதம்; நீர்நிலை. பொதும்பர்-மரச் செறிவு. புதுப்புண் என்றது தலைவி மேன்மேல் வருந்துகின்ற வருத்தத்தை. பொதும்பர் தாதினை யுதிர்த்துப் புண்களை மறைத்தால் என்றுரைப்பாருமுளர்.
௩௮. வாரித் தரள நகைசெய்து
வண்செம் பவள வாய்மலர்ந்து
சேரிப் பரதர் வலைமுன்றில்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
மாரிப் பீரத்து அலர்வண்ணம்
மடவாள் கொள்ளக் கடவுள்வரைந்து
ஆர்இக் கொடுமை செய்தார்என்று
அன்னை அறியின் என்செய்கோ ?
வாரித் தரள நகை செய்து-கடல் முத்தாகிய நகையினைத் தோற்றி, வண் செம்பவள வாய் மலர்ந்து-அழகிய சிவந்த பவளமாகிய வாய் திறந்து, சேரிப் பரதர் வலை முன்றில் திரை உலாவு கடற்சேர்ப்ப-பரதர் சேரியில் வலை உணங்கும் மனை முற்றத்தே அலைகள் உலாவும் கடலின் கரையையுடைய தலைவனே, மாரிப் பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள-தலைவியானவள் மாரிக்காலத்து மலரும் பீர்க்கின் மலர்போலும் நிறத்தைக் கொள்வாளாயின், கடவுள் வரைந்து-தெய்வத்தை வழிபட்டு, ஆர் இக் கொடுமை செய்தார் என்று அன்னை அறியின்-இக்கொடுமை செய்தவர் யாரென்று அன்னை ஆராய்ந்தறியின், என் செய்கே –என்ன செய்வேன் ;
பீரத்து-பீர் அத்துச் சாரியை பெற்றது; இதனை "ஆரும் வெதிரும்"என்னுஞ் சூத்திரத்து, மெய்பெற என்றதனான் முடிப்பர். வண்ணம்-பொன்னிறம் ; பசலை. வரைந்து-வழிபட்டு. அறியின்-ஆராய்ந்தறியினென்க.
௩௯. புலவுற்று இரங்கி அதுநீங்கப்
பொழில்தண் டலையில் புகுந்துஉதிர்ந்த
கலவைச் செம்மல் மணம்கமழத்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
பலஉற்று ஒருநோய் திணியாத
படர்நோய் மடவாள் தனிஉழப்ப
அலவுற்று இரங்கி அறியாநோய்
அன்னை அறியின் என்செய்கோ?
புலவற்று இரங்கி-புலால் நாற்றம் பொருந்தி முழங்கி, அது நீங்க-அப்புலால் நீங்க, பொழிற் றண்டலையில் புகுந்து-பொழிலாகிய சோலையிலே புகுந்து, உதிர்ந்த கலவைச் செம்மல் மணம் கமழ-ஆண்டு உதிர்ந்த பலவுங் கலந்த பழம் பூக்களின் மணம் கமழ, திரை உலாவு கடற் சேர்ப்ப – அலையுலாவுகின்ற கடற்கரையை யுடையவனே, பலஉற்று ஒரு நோய் துணியாத படர் நோய்-பல துன்பங்களும் உறுதலால் இன்னதொரு நோயெனத் துணியலாகாத படர் நோயை, மடவாள் தனி உழப்ப-தலைவி தானே யறிந்து அனுபவிக்க, அலவுற்று இரங்கி அறியா நோய்-மெலிதலும் இரங்கலும் புலப்படாமையின் ஒருவராலும் அறியப்படாத அந்நோயை, அன்னை அறியின் என் செய்கோ-தாய் அறிந்தால் யாது செய்வேன்;
புலவுற்றிரங்கி-புலத்தலுற்று வருந்தி என்ற பொருளும் தோன்ற நின்றது. நீங்க மணங் கமழப் புகுந்து உலாவு கடல் என்க. கலவை-பலவகையும் கலந்தது. செம்மல்-பழம்பூ.
இவை மூன்றும் அவர் அறிவுறீஇ வரைவுகடாவியவை.
வேறு
௪0. இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை?
இளை இருள் பரந்ததுவே-இளைய விரிந்தது, எல் செய்வான் மறைந்தனனே-பகலினைச் செய்யும் ஆதித்தன் மறைந்தனன், களைவு அரும் புலம்பு நீர் கண்பொழீஇ உகுத்தன-களைதற்கரிய தனிமை வருத்தத்தாலாய நீரினைக் கண்கள் மிகுதியாகச் சொரிந்தன, தளை அவிழ் மலர்க் குழலாய்-முறுக்கு விரிந்த மலரணிந்த கூந்தலையுடையாய், தணந்தார் நாட்டு உளதாங் கொல்-நம்மைப் பிரிந்த தலைவர் நாட்டிலும் இருக்குமோ, வளை நெகிழ எரி சிந்திவந்த இம் மருள் மாலை-நம்முடைய வளை கழல நெருப்பினைச் சிந்தி வந்த இந்த மயக்கத்தையுடைய மாலைப் பொழுது ;
இளை-இளைய; விகாரம். ஏகாரங்கள் ஈண்டு இரங்கல் குறித்தன. புலம்பு-தனிமை; வருத்தம். மருள் மாலை-மயங்கிய மாலை ; மயக்கத்தைச் செய்யும் மாலையுமாம். மாலை உளதாங்கொல் என வியையும். கொல் : ஐயம். தலைவர் நாட்டிருக்குமாயின் அவர் இங்ஙனம் பிரிந்திரார் என்பது குறிப்பு.
௪௧. கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவே
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை?
கதிரவன் மறைந்தனன்-சூரியன் மறைந்தான், கார் இருள் பரந்ததுவே-கரிய இருள் பரந்தது, எதிர் மலர் புரை உண்கண் எவ்வ நீர் உகுத்தனவே-செவ்வி மலரையொக்கும் மையுண்ட கண்கள் துன்பத்தாலாய நீரைச் சொரிந்தன, புதுமதி புரை முகத்தாய்-புதிய மதியை யொக்கும் முகத்தினை யுடையாய், போனார் நாட்டு உளதாங்கொல்-நம்மை விட்டுப் போன தலைவரது நாட்டிலும் உண்டாகுமோ, மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இம் மருள மாலை-திங்களை உமிழ்ந்து ஞாயிற்றை விழுங்கி வந்த இந்த மயங்கிய மாலைப்பொழுது;
எதிர்மலர்-தோற்றுகின்ற மலரென்றும், எதிர்த்துப் பிணைத்த மலரென்றுமாம். புதுமதி-மாலையிற் றோற்றிய நிறைமதி. கதிர் விழுங்கி மதி யுமிழ்ந்து என மாறுதலுமாம். மாலையிலே கதிர் மறைந்ததனையும், மதி தோன்றியதனையும் இங்ஙனங் கூறினார். ஒன்றை விழுங்கி, ஒன்றை உமிழ்ந்ததென்பது ஒரு நயம்.
௪௨. பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை?
பறவை பாட்டு அடங்கனவே-பறவைகள் ஒலித்தலடங்கின, பகல் செய்வான் மறைந்தனனே-சூரியன் மறைந்தான், நிறை நிலா நோய் கூர நெடுங்கண்நீர் உகுத்தன-நிறுத்த நில்லாவாய் நோய்கெள் மிகா நிற்க நெடிய கண்கள் நீரைச் சொரிந்தன, துறுமலர் அவிழ் குழலாய்-அவிழ்ந்த மலர்கள் நெருங்கிய கூந்தலையுடையாய், துறந்தார் நாட்டு உளதாங்கொல்-நம்மைப் பிரிந்த தலைவரது நாட்டிலும் உண்டாகாநிற்குமோ, மறவையாய் என் உயிர்மேல் வந்த இம் மருள் மாலை –மறத்தினையுடையதாய் என் உயிரின் மேல் வந்த மயங்கிய மாலைப் பொழுது;
பாட்டு – பாடுதல் ; ஒலித்தல். நிறை – நிறுத்தல். நிலா – நில்லாவாய்; எச்சமுற்று. துறு-நெருங்கிய. மறவை – மறத்தையுடையது. உயிர்மேற் பாய்ந்து வந்த மாலையாகிய புலியென்க.
இவை மூன்றும் பொழுது கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குரைத்தன.
இவை ஆறும் மயங்குதிணை நிலைவரி. இவற்றுள் திணைமயங்கியுள்ளமை காண்க.
வேறு (சாயல் வரி)
௪௩. கைதை வேலிக் கழிவாய் வந்துஎம்
பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்.
கைதை வேலிக் கழிவாய் வந்து – தாழையை வேலியாகவுடைய இக் கழியின்பால் வந்து, எம் பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்-நம்முடைய விளையாட்டை மறப்பித்துச் சென்றார் ஒருவர், பொய்தல் அழித்துப் போனார் அவர்-அங்ஙனம் விளையாட்டை மறப்பித்துச் சென்ற அவர், நம் மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்-நமது மயக்கத்தையுடைய மனத்தை விட்டு நீங்குவாரல்லர்;
கழி- கடல் சார்ந்த நிலமும் நீரோடையும். பொய்தல்-மகளிர் விளையாட்டு. அழித்தல்-ஈண்டு மறப்பித்தல்: "சேர்ப்பே ரீரளையலவற் பார்க்குஞ் சிறுவிளை யாடலு மழுங்க, நினைக்குறு பெருந்துய மாகிய நோயே"என்பதிற்போல.
௪௪. கானல் வேலிக் கழிவாய் வந்து
நீநல்கு என்றே நின்றார் ஒருவர்
நீநல்கு என்றே நின்றார் அவர்நம்
மான்நேர் நோக்கம் மறப்பார் அல்லர்.
கானல் வேலிக் கழிவாய் வந்து-சோலை சூழ்ந்த கழியினிடத்து வந்து, நீ நல்கு என்றே நின்றார் ஒருவர்-நீ அருள் செய்வாய் என்று சொல்லியே நின்றார் ஒருவர், நீ நல்கென்றே, நின்றார் அவர்-அங்ஙனம் நின்ற அவர், நம் மான் நேர் நோக்கம் மறப்பார் அல்லர்-நமது மானையொத்த பார்வையை மறப்பாரல்லர்;
மான் ஏர் நோக்கம் எனப் பிரித்தலுமாம்.
௪௫. அன்னம் துணையோடு ஆடக் கண்டு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
பொன்நேர் சுணங்கிற் போவார் அல்லர்.
அன்னம் துணையோடு ஆடக் கண்டு-அன்னப் பறவை தன் துணையுடன் விளையாடக் கண்டு, நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்-நேற்று அதனையே நோக்கி நின்றார் ஒருவர், நென்னல் நோக்கி நின்றார் அவர் – அங்ஙனம் நோக்கி நின்ற அவர்,நம் பொன் நேர் சுணங்கிற் போவார் அல்லர் – நமது பொன்னையொத்த சுணங்கு போல நம்மை விட்டு நீஙுகுவாரல்லர்;
நென்னல்-நெருநல் என்பதன் மரூஉ. நோக்கி-என்னை நோக்கி யென்றுமாம். சுணங்கு-தேமல்; அழகிய சுணங்குமாம்.
இவை மூன்றும் மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல்; ஆற்றுவித்தற் பொருட்டுத் தோழி இயற்பழிக்கத் தலைமகள் இயற்பட மொழிந்ததூஉமாம். இவை சாயல் வரி என்பர்.
வேறு (முகம் இல் வரி)
௪௬. அடையல் குருகே அடையல்எம் கானல்
அடையல் குருகே அடையல்எம் கானல்
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல்எம் கானல்
அடையல் குருகே அடையல் எம் கானல் – குருகே எம் கானலிடத்து அடையாதே, அடையல் குருகே அடையல் எம் கானல்-, உடை திரைநீர்ச் சேர்ப்பதற்கு உறுநோய் உரையாய்-உடைகின்ற அலையையுடைய கடற்சேர்ப்பனுக்கு எமது மிக்க நோயை உரையாய்; ஆதலால் அடையல் குருகே அடையல் எம் கானல்-,
குருகு-நாரை; வேறு பறவையுமாம். உரையாய் ஆதலால் அடையாதே என்றாள். இது காம மிக்க கழிபடர் கிளவி.
வேறு (காடுரை)
௪௭. ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும்
காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப்
பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள்
ஆங்ஙனம் பாடிய ஆயிழை-அங்ஙனம் கோவலன் பாடினாற் போலப் பாடிய மாதவி, பின்னரும்-பின்பும், காந்தள் மெல்விரல்-காந்தள் மலர்போலும் மெல்லிய விரலால், கைக்கிளை சேர்குரல் தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசை எழீஇ-கைக்கிளை குரலாகிய இன்னிசையுடைய செவ்வழிப்பாலை என்னும் இசையை யெழுப்பி, பாங்கினிற்பாடி-அதனை முறைமையிற் பாடி, ஓர் பண்ணும் பெயர்த்தாள்-பின் வேறொரு பண்ணினைப் பாடத் தொடங்கினாள்;
அங்ஙனம் என்னுஞ் சுட்டு நீண்டு ஆங்ஙனம் என்றாகி எதுகை நோக்கி ஆங்கனம் என்றாயிற்று. ஆங்ஙனமென்றே கூறினும் இழுக்கின்று. விரலால் கைக்கிளை குரலாகிய செவ்வழிப் பாலை யிசையை எழுப்பியென்க. தீந்தொடை-ஈண்டு இன்னிசை;பண்ணு – பண்ணை.
வேறு (முகம் இல் வரி)
௪௮. நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை
நுளையர் விளரி நொடிதரும் தீம்பாலை-நுளையாது விளரிப் பாலையாகிய பண்ணினைப் பாடுங்கால், இளி கிளையிற் கொள்ள இறுத்தாயால் மாலை-மாலைப்பொழுதே, இளி யென்னும் நரம்பு கைக்கிளை யென்னும் நரம்பிற் சென்று மயங்க வந்து தங்கினாய்; இளி கிளையிற் கொள்ள இறுத்தாய் மன், நீயேல்-அங்ஙனம் தங்கினாய் நீயாயின், கொளைவல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை-கொள்ளுதலில் வல்லாயாகிய மாலையே நீ என் உயிரைக் கொள்வாயாக;
விளரிப்பாலை-இரங்கற்பண் நெய்தற்குரியதாகலின் நுளையர் விளரியென்றார். நொடிதருதல்-சொல்லுதல் நின்ற நரம்பிற்கு ஆறாம் நரம்பு பகை; அது கூடம் என்னுங் குற்றம்; இளி முதலாகக் கைக்கிளை ஆறாவதாகலின் இளிக்குக் கைக்கிளை பகை. மயக்கத்தாலே பகைநரம்பிலே கை சென்று தடவவென்க. கொளை வல்லாய்-உயிரைக் கொள்ளுதலை வல்லாய். வாழியென்றது குறிப்பு.
௪௯. பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல்
இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை
பிரிந்தார் பரிந்து உரைத்த பேரருளின் நீழல்-பிரிந்து சென்ற தலைவர் அன்புற்று உரைத்த பெரிய தண்ணளியாகிய நிழலிலே, இருந்து ஏங்கி வாழ்வார் உயிர்ப் புறத்தாய் மாலை-தனித்திருந்து இரங்கி வாழ்பவருடைய உயிரைச் சூழ்ந்துள்ளாய். நீயாயின், உள் ஆற்றா வேந்தன் எயிற்புறத்து வேந்தனோடு-உள்ளிருக்கும் வலியில்லாத வேந்தனது மதிலின் புறத்துள்ள வேந்தற்கு, என் ஆதி மாலை-மாலையே நீ என்ன உறவுடையை ஆவாய்;
உரைத்த உரையாகிய அருளென்க. உரை-பிரியேம் என்று கூறியது. உயிர்ப் புறத்தாய்-உயிரைக் கவர்தற்கு அதனை முற்றியுள்ளாய். உள்ளாற்றா வேந்தன்-நொச்சியான்; ஆற்றா என்றமையால் அமர் புரியும் வலியில்லாத என்றாயிற்று. எயிற் புறத்து வேந்தன்-உழிஞையான். அவனும் நீயும் புறத்தே முற்றி உயிர்கொள்வதில் ஒரு தன்மையீர் என்றபடி. வேந்தனோடு-வேந்தற்கு.
௫0. பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.
பையுள் நோய்கூர-துன்பமாகிய நோய்மிக, பகல் செய்வான் போய் வீழ-ஆதித்தன் மேல்கடலிற்சென்று வீழ, வையமோ கண் புதைப்ப-வையத்துள்ளார் கண்ணினை மூட, வந்தாய் மருள் மாலை-மயக்கத்தையுடைய மாலையே வந்தாய், மாலை நீ ஆயின்-மாலைப் பொழுதே நீயேயாயின், மணந்தார் அவர் ஆயின்-முன் மணந்தவர் தணந்து சென்ற அவரே யாயின், ஞாலமோ நல்கூர்ந்தது வாழி மாலை-மாலையே இவ்வுலகந்தான் மிடியுற்றது, வாழ்வாயாக;
வையம் – வையத்துள்ளார்; ஆகுபெயர், நீயாயின் என்றலும் அவராயின் என்றதும் கொடுமை குறித்தென்க. ஓகாரங்கள் சிறப்பு. நல்கூர்தல் ஈண்டுத் துன்புறுதல். ஞாலம் நல்கூர்ந்ததென்றாள் தன்னோய் எல்லார்க்கு முளதெனத் தனக்குத் தோற்றுதலால்; "தான் சாவ உலகு கவிழும்"என்னும் பழமொழியுங் காண்க. வாழி- குறிப்பு.
வேறு (கட்டுரை)
௫௧. தீத்துழைஇ வந்தஇச் செல்வன் மருள்மாலை
தூக்காது துணிந்தஇத் துயரெஞ்ச் கிளவியால்
பூககமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று
மாக்கடற் றெய்வநின் மலரடி வணங்குதும்.
தீத் துழைஇ வந்தஇச் செல்லல் மருள் மாலை-தீயைப் பரப்பிவந்த வருத்தத்தைச் செய்யும் இம் மயங்கிய மாலைப் பொழுது, தூக்காது துணிந்த இத் துயர் எஞ்சு கிளவியால் - நம்மை வருத்துமென்று கருதாது நாம் துணியும்படி யுரைத்த இந் நன்மொழியோடே, பூக் கமழ் கானலிற் பொய்ச் சூள் பொறுக்கென்று-பூ நாறுஞ் சோலையிடத்தே கூறிய பொய்யாகிய சூளுரையைப் பொறுப்பாயாக வென்று, மாக் கடற் றெய்வம்-பெரிய கடற் றெய்வமே, நின் மலர் அடி வணங்குதும்-நினது மலர் போலும் அடியை வணங்குவேம்:
துயரெஞ்சு கிளவி-துயரில்லாத மொழி; நன்மொழி. ஆவது நின்னிற் பிரியேனென்றல் கிளவியோடே கானலிற் கூறிய பொய்ச் சூளென்க. பொய்ச் சூளால் அவரைத் தெய்வம் ஒறுக்குமென அஞ்சிப் பொறுக்கென்று வணங்குதும் என்றாள். பொறுக்கென்று – அகரந் தொக்கது.
இது, வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகன் சிறைப்புறத்தானாகக் கூறியது.
இவை முகமில் வரி என்பர்.
௫௨. எனக்கேட்டு,
கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என
யாழ்இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததுஆகலின்
உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாது
ஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான் போனபின்னர்,
தாதுஅவிழ் மலர்ச்சோலை ஓதைஆயத்து ஒலிஅவித்துக்
கையற்ற நெஞ்சினளாய் வையத்தி னுள்புக்குக்
காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்
ஆங்கு,
மாயிரு ஞாலத்து அரசு தலைவணக்கும்
சூழி யானைச் சுடர்வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப
ஆழி மால்வரை அகவையா எனவே
எனக் கேட்டு-என்று மாதவி பாடக் கேட்டு, கானல் வரி யான் பாட – நான் கானல் வரியினைப் பாட, தான் ஒன்றின் மேல் மனம் வைத்து-அவள் அப்படிப் பாடாமல் என்னை யொழிய வேறொன்றின்மேல் மனம் வைத்து, மாயம் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என-வஞ்சனையுடன் கூடிய பொய்கள் பலவற்றைக் கூட்டும் மாயத்தாளாகப் பாடினாளென்று கோவலன் எண்ணி, யாழ்இசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆதலின்-யாழ் இசைமேல்வைத்துத் தன் ஊழ்வினை வந்து கோபித்ததாகலின், உவவு உற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக் கை ஞெகிழ்ந்தனனாய்-உவா நாளிற் பொருந்திய திங்கள் போலும் முகத்தினை யுடைய மாதவியை அகத்திட்ட கை நெகிழ்ந்தவனாய், பொழுது ஈங்குக் கழிந்தது ஆகலின் எழுதும் என்று-பொழுது கழிந்ததாகலின் இங்கிருந்து எழுவேமென்று, உடன் எழாது ஏவலாளர் உடன் சூழ்தரக் கோவலன் தான் போன பின்னர்-அவள் உடன் எழாதிருக்க ஏவலாளர் தன்னைச் சூழ்ந்து உடன்வரக் கோவலன் போயினான்; அவ்வாறு போன பின்பு, தாது அவிழ் மலர்ச்சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து-தாது விரிந்த பூக்களையுடைய சோலையில் ஆரவாரத்தையுடைய ஆயத்தின் ஒலி அடங்க, கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள் புக்கு-செயலற்ற மனத்தினளாய் வண்டியினுள்ளே அமர்ந்து, காதலனுடன் அன்றியே மாதவி தன் மனைபுக்காள்-காதலனுடன் செல்லாது மாதவி தனியே தன் மனையை அடைந்தாள்; ஆங்கு மாயிரு ஞாலத்து அரசு தலை வணக்கும் – அகற்சியுடைய பெரிய உலகிலுள்ள அரசர்களைத் தலைவணங்கச் செய்யும், சூழி யானைச் சுடர் வாட் செம்பியன்-முகபடாம் அணிந்த யானையையும் ஒளி பொருந்திய வாளையுமுடைய சோழனது, மாலை வெண்குடை-மாலை யணிந்த வெண்கொற்றக் குடையானது, கவிப்ப ஆழி மால்வரை அகவையா எனவே-பெரிய சக்கரவாளகிரி உள்ளகப் படும்படி கவிக்க என்று;
மாயத்தாளாகலின் மனம் வைத்துப் பாடினாள் என்றுமாம். யாழிசை மேல் வைத்து-யாழிசையால் நிகழ்ந்ததென்று கருதும்படி செய்து. ஓரை யாயத்து என்று பாடமிருப்பினும் பொருந்தும். காதலனுடனன்றியே என மேற்போந்த பொருளை மீட்டும் கூறியது அவள் யாண்டும் அவ்வாறு சென்றதிலள் என்பதை உணர்த்தற்கு. கவிப்பவெனக் கூறி மனை புக்காளென்க; அரசனை வாழ்த்தி முடித்தல் மரபு. ஆங்கு, அசை.
மாதவி குற்ற நீங்கிய யாழினைத் தொழுது வணங்கி இசையெழுப்பிச் செவியாலோர்த்துப் ‘பணியாது’ எனக் கோவலன் கையில் நீட்ட, அவன் அதனை வாங்கி அகப் பொருட் கருத்துக்க ளமைந்த ஆற்றுவரி முதலாய பாடல்களைப் பாடினான்; அவ்வாறு பாடக் கேட்ட மாதவி அவன் தன்னிலை மயங்கினா னெனக் கருதிப் புலவியால் யாழ் வாங்கித் தானும் வேறு குறிப்பினள் போற் பாடத் தொடங்கி, அகப்பொருட் கருத்துடைய வரிப்பாடல்களைப் பாடினாள்; அதனைக் கேட்டுக் கோவலன் இவள் என்போலன்றி வேறொன்றின் மேல் மனம் வைத்துப் பாடினாளெனத் துணிந்து. யாழிசை மேல் வைத்து ஊழ்வினை வந்துருத்ததாகலின் அவளை யணைத்த கையை நெகிழ்த்து ஏவலாளர் சூழப் புறப்ப்ட்டுச் சென்றான்; மாதவியும் கையற்ற நெஞ்சினளாய் வண்டியேறித் தனியே மனை புக்காள் என முடிக்க.
இதில் ஆற்றுவரி முதலிய பலவகைப் பாடல்கள் இருப்பினும் யாவும் கானலிடத்தனவாகலின், கானல்வரி யெனப்பட்டன. இதிலுள்ளன இசைத்தமிழ்ப் பாட்டுக்களும், கட்டுரைகளும் ஆம்.
கானல்வரி முற்றிற்று.
8. வேனிற்காதை
[இளவேனிற் பருவம் வந்ததனை இளந்தென்றலும், குயிலின் கூவுதலும் அறிவித்தன. கோவலன் ஊடிச் சென்றமையால் தனித்தேகிய மாதவியானவள் மேன் மாடத்து நிலா முற்றத்தில் ஏறியிருந்து, யாழினைக் கையிலெடுத்து, மேற்செம்பாலை யென்னும் பண்ணை முந்துறக் கண்டத்தாற் பாடி அது மயங்கினமையின், அதனையே கருவியாலும் பாடத் தொடங்கிப் பதினாற் கோவையாகிய சகோட யாழை உழை குரலாகக் கைக்கிளை தாரமாகக் கட்டி, இசை பொருந்து நிலையை நோக்கி, அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் என்னும் சாதிப் பெரும்பண்களை நலம்பெற நோக்கிப் பாடுமிடத்துப் புறமாகியதொரு பண்ணிலே மயங்கினள். மயங்கினவள், காமதேவனாணையால் உலகு தொழு திறைஞ்சும் திருமுகம் விடுப்பேமென்னும் எண்ணத்தாற் பிறந்த செவ்வியளாய்ச், சண்பக முதலியவற்றால் தொடுக்கப்பட்ட மாலையின் இடையேயுள்ளதொரு தாழை வெண்டோட்டில் அதற்கு அயலதாகிய பித்திகை யரும்பை எழுத்தாணியாகக் கொண்டு செம்பஞ்சியிலே தோய்த்து எழுதுகின்றவள், ‘இளவேனிலென்பான் முறைசெய்ய வறியாத இளவரசன்; திங்கட் செல்வனும் செவ்வியனல்லன்; ஆதலால் புணர்ந்தோர் பொழுதிடைப் படுப்பினும் தணந்தோர் துணையை மறப்பினும் பூவாளியால் உயிர்கொள்ளுதல் அவற்குப் புதிதன்று; இதனை அறிந்தருள்வீராக’ எனத் தன் முற்றாத மழலைமொழியாற் சொல்லிச் சொல்லி எழுதி, வசந்த மாலையை அழைத்து, ‘இதன் பொருளையெல்லாம் கோவலற்கு ஏற்பச்சொல்லி, அவனைக்கொண்டு வருக’ என விடுத்தனள். மாலைபெற்ற வசந்தமாலை கூல மறுகில் கோவலனைக் கண்டு அதனைக் கொடுப்ப, அவன் ‘நாடக மகளாதலின் பலவகையாலும் நடித்தல் அவட்கு இயல்பு’ என்று கூறி, ஓலையை மறுத்திட, அவள் சென்று அதனை மாதவிக்குரைப்ப, ‘மாலை வாராராயினும் காலை காண்குவம்’ என்று, கையற்ற நெஞ்சமுடன் மலரமளியில் கண் பொருந்தாது கிடந்தனள். (இதன்கண் சில இசை யிலக்கணங்களும் கண்கூடு வரி முதலிய எண்வகை வரிகளும் கூறப்பட்டுள்ளன.)]
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின் 5
மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய
இன்இள வேனில் வந்தனன் இவண்என
வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
இளங்கால் துதன் இசைத்தனன் ஆதலின்
மகர வெல்கொடி மைந்தன் சேனை 10
புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல்
கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணிமொழி கூற,
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டினுள்
கோவலன் ஊடக் கூடாது ஏகிய 15
மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி
வான்உற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனில் பள்ளி ஏறி மாண்இழை
தென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும்
தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் 20
கொங்கை முன்றில் குங்கும வளாகத்து
மைஅறு சிறப்பின் கையுறை ஏந்தி
அதிரா மரபின் யாழ்கை வாங்கி
மதுர கீதம் பாடினள் மயங்கி,
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி 25
நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி,
வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி
இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச்
செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே
வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து, 30
பிழையா மரபின் ஈர்ஏழ் கோவையை
உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி,
இணைகிளை பகைநட்பு என்றுஇந் நான்கின்
இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக்
குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் அன்றியும் 35
வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
உழைமுதல் ஆகவும் உழைஈறு ஆகவும்
குரல்முதல் ஆகவும் குரல்ஈறு ஆகவும்
அகநிலை மருதமும் புறநிலை மருதமும்
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் 40
நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி,
மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித்
திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்துப்
புறத்துஒரு பாணியில் பூங்கொடி மயங்கி,
சண்பகம் மாதவி தமாலம் கருமுகை 45
வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த
அம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை
எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு
விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட 50
ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்
ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி,
அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது
பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு, 55
மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்இள வேனில் இளவர சாளன்
அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும் 60
தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல்
இறும்பூது அன்றுஅஃது அறிந்தீ மின்என
எண்எண் கலையும் இசைந்துஉடன் போக
பண்ணும் திறனும் புறங்கூறு நாவின் 65
தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்துஉரை எழுதி,
பசந்த மேனியள் படர்உறு மாலையின்
வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்
தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம் 70
கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்குஎன
மாலை வாங்கிய வேல்அரி நெடுங்கண்
கூல மறுகிற் கோவலற்கு அளிப்ப,
திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும்
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட 75
மாதர் வாள்முகத்து மதைஇய நோக்கமொடு
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்,
புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக்
கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்
பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவிய 80
நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி
வருகென வந்து போகெனப் போகிய
கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்,
அந்தி மாலை வந்ததற்கு இரங்கிச்
சிந்தை நோய் கூரும்என் சிறுமை நோக்கிக் 85
கிளிபுரை கிளவியும் மடஅன நடையும்
களிமயில் சாயலும் கரந்தனள் ஆகிச்
செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து
ஒருதனி வந்த உள்வரி ஆடலும்,
சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் 90
கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்துவேறு ஆயஎன் சிறுமை நோக்கியும்
புறத்துநின்று ஆடிய புன்புற வரியும்,
கோதையும் குழலும் தாதுசேர் அளகமும்
ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும் 95
மின்இடை வருத்த நன்னுதல் தோன்றிச்
சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப்
புணர்ச்சிஉட் பொதிந்த கலாம்தரு கிளவியின்
இருபுற மொழிப்பொருள் கேட்டனள் ஆகித்
தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல் 100
கிளர்ந்துவேறு ஆகிய கிளர்வரிக் கோலமும்,
பிரிந்துஉறை காலத்துப் பரிந்தனள் ஆகி
என்உறு கிளைகட்குத் தன்உறு துயரம்
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சிவரி அன்றியும்,
வண்டுஅலர் கோதை மாலையுள் மயங்கிக் 105
கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்,
அடுத்துஅடுத்து அவர்முன் மயங்கிய மயக்கமும்
எடுத்துஅவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்,
ஆடல் மகளே ஆதலின் ஆயிழை.
பாடுபெற் றனஅப் பைந்தொடி தனக்குஎன, 110
அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய,
மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி
வாடிய உள்ளத்து வசந்த மாலை
தோடுஅலர் கோதைக்குத் துனைந்துசென்று உரைப்ப
மாலை வாரார் ஆயினும் மாண்இழை. 115
காலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்.
(வெண்பா)
செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்துஒழுக
மைந்தார் அசோகம் மடல்அவிழக் - கொந்தார்
இளவேனில் வந்ததால் என்ஆம்கொல் இன்று
வளவேல்நற் கண்ணி மனம். க
ஊடினீர் எல்லாம் உருஇலான் தன்ஆணை
கூடுமின் என்று குயில்சாற்ற - நீடிய
வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக்
கானற்பா ணிக்குஅலந்தாய் காண். உ
--------------------
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
௧-௨. நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு – வடக்கின்கண் வேங்கட மலையும் தெற்கின்கண் குமரிக்கடலும் எல்லையாக வரையறுக்கப்பட்ட குளிர்ச்சி பொருந்திய நீரையுடைய மூவேந்தருடைய உயர்ந்த தமிழ் நாட்டிடத்தே;
நெடியோன்-திருமால். தொடியோள்-குமரி. குமரியாறென்னாது குமரிப் பௌவம் என்றது குமரியாறு முன்னிகழ்ந்ததொரு கடல் கோளால் வௌவப்பெற்று அதனுட் கரந்தமையின் என்க. கிழக்கின் கண்ணும் மேற்கின்கண்ணும் ஒழிந்த கடல்களும் எல்லையாகவென விரித்துரைக்க. ஈண்டு அடியார்க்கு நல்லார் விரித்துரைத்த வரலாறு அறியற்பாலது.
{அடி. நெடியோன் குன்றமும் தொடியோள் நதியுமென்னாது பௌவமென்றது என்னையெனில், முதலூழியிறுதிக்கண் தென்மதுரையகத்துத் தலைச்சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையும் உள்ளிட்ட வற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டு இரீஇயினார் காய்சினவழுதி முதற் கடுங்கோனீறா யுள்ளார் எண்பத்தொன்பதின்மர். அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமா கீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற்பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீஇயினான். அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னுமாற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்குமிடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்கநாடும் ஏழ்மதுரை நாடும் ஏழ் முன் பாலை நாடும் ஏழ் பின்பாலை நாடும் ஏழ் குன்ற நாடும் ஏழ் குணகாரை நாடும் ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றா ரென்றுணர்க. இஃது என்னை பெறுமாறெனின் ’வடிவே லெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக், குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள’என்பதனானும், கணக்காயனார் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரையானும், பிறவாற்றானும் பெறுதும். }
௩-௭. மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்
மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய
இன்இள வேனில் வந்தனன் இவண்என
மாட மதுரையும்-சிறந்த மாடங்களையுடைய மதுரையும், பீடு ஆர் உறந்தையும்-பெருமை பொருந்திய உறையூரும், கலிகெழு வஞ்சியும்-ஆரவாரம் பொருந்திய வஞ்சி நகரும், ஒலிபுனற் புகாரும்-ஒலிக்கின்ற நீரையுடைய காவிரிப்பூம்பட்டினமும் என்னும் நான்கிடத்தும், அரசு வீற்றிருந்த புகழமைந்த சிறப்பினையுடைய மாரனாகிய மன்னனுக்கு, மகிழ் துணையாகிய-மகிழும் துணைவனாகிய , இன் இளவேனில் வந்தது இவண் என-இன்பத்தைத் தரும் இளவேனில் என்பான் இங்கே வந்து விட்டான் என்று;
இளவேனிலாகிய இளவரசன் என்க. வேனில் என்றதற்கேற்ப வந்தது என்றார். வந்தது வரும் என்னும் எதிர்காலம் இறந்த காலத்தாற் கூறப்பட்டது, விரைவு பற்றி. இவண்-இங்கே;புகாரிலே.
௮-௧௩. வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
இளங்கால் தூதன் இசைத்தனன் ஆதலின்
மகர வெல்கொடி மைந்தன் சேனை
புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல்
கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணிமொழி கூற,
வளம்கெழு பொதியில் மாமுனிபயந்த-வளம் பொருந்திய பொதியின் மலையிடத்துச் சிறந்த முனிவன் பெற்ற, இளங்கால் தூதன் இசைத்தனன் ஆதலின்-தென்றலாகிய தூதன் குயிலோனுக்குரைத்தனன் ஆதலானே, மகரவெல் கொடி மைந்தன் சேனை-வெற்றி பொருந்திய மகரக் கொடியையுடைய காமன் சேனையாயுள்ளா ரெல்லாரும், புகர் அறு கோலம் கொள்ளும் என்பது போல்-குற்றமற்ற கோலத்தைக் கொண்மின் என்னும் பொருள் பயப்ப, கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும் படையுள் படுவோன்-கொடிகள் நெருங்கிய சோலையென்னும் பாசறையிலிருக்கும் அக்குயிலோன் என்னும் சின்னம் ஊதி, பணிமொழி கூற-காற்றூதன் தனக்குப் பணித்த மொழியைச் சேனைக்குக் கூற ; அந்தணன் தூதிற்குரியனாகலின் மாமுனி பயந்த என்றார். இளங் காற்றூதன்-இளங்காலாகிய தூதன், இளைய காற்றூதன் ; ஒட்டன். சேனை-மகளிர். புகரறு கோலம்-அக் காலத்துக்கேற்ப உடுத்து முடித்துப் பூசிப் பூணுதல்; போர்க்கோலமென்றுமாயிற்று. கொள்ளும்-கொண்மின். என்பதுபோல்-என்ன. படையுள் படுவோன்-படைச்சிறுக்கன்; காளமூதி.
௧௪-௮. மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டினுள்
கோவலன் ஊடக் கூடாது ஏகிய
மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி
வான்உற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனில் பள்ளி ஏறி
மடல் அவிழ் கானற் கடல் விளையாட்டினுள்-கடல் விளையாட்டின்கண்ணே பூக்கள் இதழ் விரியுங் கானலிடத்து, கோவலன் ஊடக் கூடாது ஏகிய-கோவலன் ஊடிச் சென்றமையால் அவனுடன் கூடாது தமியளாய்த் தன் மனையிற் புக்க, மா மலர் நெடுங்கண் மாதவி-கரிய மலர் போலும் நெடிய கண்களையுடைய மாதவி, விரும்பி-அதற்கு விரும்பி, வான் உற நிவந்த மேல்நிலை மருங்கின்-வானிலே பொருந்த வுயர்ந்த மேனிலையின் ஒரு பக்கத்தே, வேனிற் பள்ளி ஏறி-இளவேனிற் குரிய நிலாமுற்றமாகிய இடத்திலே ஏறி;
ஊடல் ஈண்டு வெறுத்தல். மா-கருமை. கோலங்கொண்மினென்று படையுள் படுவோன் கூறிய அதற்கு விரும்பியென்க. பள்ளி-இடம்.
௧௮-௨௨. மாண்இழை
தென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும்
தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின்
கொங்கை முன்றில் குங்கும வளாகத்து
மைஅறு சிறப்பின் கையுறை ஏந்தி
மாண் இழை-அந்த மாட்சிமைப்பட்ட இழையினை யுடையாள்; தென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும்-தென் கடலின் முத்தும் பொதியின் மலைச் சந்தனமும், தன் கடன் இறுக்கும் தன்மைய ஆதலின்-அக்காலத்திற்கு எப்பொழுதும் தான் கடனாக இடக்கடவ திறையாகலான், கொங்கை முன்றிற் குங்கும வளாகத்து-பின்பனிக் காலத்திற் குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்ட முலைமுற்றமாகிய பரப்பிலே, மைஅறு சிறப்பிற் கையுறை ஏந்தி-குற்றமற்ற சிறப்பினையுடைய அம் முத்தையும் சந்தனத்தையும் கையுறையாக ஏந்தி:
தன் என்றது மாதவியை. வளாகம்-பரப்பு. கையுறை காணிக்கை; பாகுடம். ஏந்தி யெனவே பூண்டும் பூசியுமென்பதாயிற்று. காணிக்கை காட்டுவார் காண்பார் முன்றிலிற் கொணர்ந்து காட்டுவாராகலிற் கொங்கை முன்றலில் ஏந்தி என்றார். ஈண்டு முற்றமாவது மார்பு.
௨௩-௯. அதிரா மரபின் யாழ்கை வாங்கி
மதுர கீதம் பாடினள் மயங்கி,
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி
நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி,
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி-ஒன்பது வகைப்பட்ட இருப்பினுள் முதற்கண்ணதாகிய நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி-பதுமாசனம் என்னும் நன்மை யமைந்த இருப்பினையுடையளாய், அதிரா மரபின் யாழ்கை வாங்கி-கோவை கலங்காத மரபினையுடைய யாழைக் கையில் வாங்கி, மதுர கீதம் பாடினள் மயங்கி-மிடற்றாலே முற்பட மதுர கீதமாகப் பாடி அது மயங்கிக் கலத்தாற் பாடத் தொடங்கினவள்; இருக்கையளாகி வாங்கிப் பாடினள் மயங்கி என மாறுக. விருத்தி-இருப்பு. நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதல் என்பவற்றுள் இருத்தலின் பிரிவாகிய திரிதர வில்லா விருக்கை ஒன்பது வகைப்படும். அவை : பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படி, இருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் என்பன. இவற்றுள் முதற்கண்ணதாகிய பதுமுகம் என்பதே தலைக்கண் விருத்தியெனப்பட்டது. பதுமுகம்-பதுமாசனம். மேல் யாழாற் பாடுதல் கூறப்படுதலின் ஈண்டுப் பாடியது கண்டத்தாலென்பது பெற்றாம்.
௨௭-௮. வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி
இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச்
வலக்கை பதாகை கோட்டொடு சேர்த்தி-வலக்கையைப் பதாகையாகக் கோட்டின் மிசையே வைத்து, இடக்கை நால்விரல் மாடகம் தழீஇ-இடக்கை நால்விரலால் மாடகத்தைத் தழுவி ;
பதாகைக் கையாவது பெருவிரல் குஞ்சித்து ஒழிந்த விரலெல்லாம் நிமிர்த்தல், மாடகம்-நரம்பினை வீக்குங் கருவி.
௨௯-௩0. செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே
வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து,
செம்பகை ஆர்ப்பே அதிர்வே கூடம் வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து-செம்பகை ஆர்ப்பு அதிர்வு கூடம் என்னும் இப்பகை நரம்பு நான்கும் புகாமல் நீக்கும் விரகைக் கடைப்பிடித்தறிந்து ;
செம்பகை முதலிய குற்றங்களினியல்பை, “செம்பகை யென்பது பண்ணோ டுளரா, இன்பமி லோசை யென்மனார் புலவர்” “ஆர்ப்பெனப் படுவ தளவிறந் திசைக்கும்” “அதிர்வெனப் படுவ திழுமென லின்றிச் சிதறி யுரைக்குந ருச்சரிப் பிசையே” “கூட மென்பது குறியுற விளம்பின், வாய்வதின் வராது மழுங்கி யிசைப் பதுவே” என்பவற்றானறிக. இவை மரக்குற்றத்தாற் பிறக்கும் என்னை ? “நீரிலே நிற்ற லழுகுதல் வேத னிலமயக்குப் பாரிலே நிற்ற லிடிவீழ்த னோய்மரப் பாற்படல் கோள், நேரிலே செம்பகை யாப்பொடு கூட மதிர்வுநிற்றல், சேரினேர் பண்க ணிறமயக் குப்படுஞ் சிற்றிடையே” என்றாராகலின்.
௩௧-௨. பிழையா மரபின் ஈர்ஏழ் கோவையை
உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி,
பிழையா மரபின் ஈரேழ் கோவையை-மயங்கா மரபினை யுடைய பதினாற்கோவையாகிய சகோட யாழை, உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி-உழை குரலாகக் கைக்கிளை தாரமாகக் கட்டி ;
௩௩-௪. இணைகிளை பகைநட்பு என்றுஇந் நான்கின்
இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக்
இணை கிளை பகை நட்பு என்று இந்நான்கின்-இணையும் கிளையும் பகையும் நட்புமாகிய இந்நான்கினுள், இசை புணர் குறிநிலை எய்த நோக்கி-இசை புணருங் குறிநிலையைப் பொருந்த நோக்கி;
இணை-இரண்டு நரம்பு, கிளை-ஐந்து நரம்பு, என்பர். பகை ஆறும் மூன்றும். நட்பு-நாலாம் நரம்பு. ‘இணையெனப் படுவ கீழு மேலும், அணையத் தோன்று மளவின வென்ப’ ”கிளையெனப் படுவ கிளக்குங் காலைக் குரலே யிளியே துத்தம் விளரி, கைக்கிளை யெனவைந் தாகுமென்ப” “நின்ற நரம்பிற் காறு மூன்றுஞ் சென்றுபெற நிற்பது கூடமாகும்” என்பன காண்க. கிளை-ஐந்தாம் நரம்பென்றலும் இணை இரண்டாம் நரம்பும் ஏழாம் நரம்பும் என்றலும் பொருத்தமாம்.
௩௫. குரல்வாய் இளிவாய்க் கேட்டனள்
௩௫-௬. அன்றியும்
வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
அன்றியும்-அங்ஙனம் வாசித்துச் செவியால் அளந்தறிந்த தன்றியும், வான்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்-வான் முறையாலே இளி முறையாற் பாடப்படும் ஏழு நரம்புகளினுள்ளே;
௩௭-௪௧. உழைமுதல் ஆகவும் உழைஈறு ஆகவும்
குரல்முதல் ஆகவும் குரல்ஈறு ஆகவும்
அகநிலை மருதமும் புறநிலை மருதமும்
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்
நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி,
உழை முதலாகவும் உழை ஈறாகவும் குரல் முதலாகவும் குரல் ஈறாகவும்-உழைமுதல் உழையீறு குரல்முதல் குரலீறு ஆகவும், அகநிலை மருதமும் புறநிலை மருதமும் அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்-அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் எனப்படும் மருதத்தின், நால்வகைச்சாதி நலம் பெற நோக்கி-நால்வகைச் சாதிப் பண்களையும் நலம்பெற நோக்கி;
ஐந்து-இளி; ஆவது சட்சம் : ச ப முறையாலென்க. உழை முதலாக அகநிலை மருதம். உழை யீறாகப் புறநிலை மருதம். குரல் முதலாக அருகியல் மருதம், குரலீறாகப் பெருகியல் மருதம் என நிரனிறையாகக் கொள்க. தமிழிலே பாலையாழ், குறிஞ்சியாழ், மருதயாழ், செவ்வழியாழ் எனப் பெரும்பண் நான்கு வகைப்படும். இவை ஒவ்வொன்றும் நந்நான்கு வகையினையுடையன. இவற்றுள் பாலை யாழுக்குத் திறன் ஐந்தும் குறிஞ்சி யாழுக்குத் திறன் எட்டும், மருதயாழுக்குத் திறன் நான்கும், செவ்வழி யாழுக்குத் திறன் நான்கும் ஆகும். மற்றும் திறத்தின் வகையாகப் பாலையாழுக்குப் பதினைந்தும், குறிஞ்சி யாழுக்கு இருபத்து நான்கும். மருதயாழக்குப் பன்னிரண்டும். செவ்வழியானுக்குப் பன்னிரண்டும் உள்ளன. இவை யாவும் அகநிலை புறநிலை, அருகியல் பெருகியல் என நான்கு சாதிகளாகப் பாகுபாடெய்தும். பெரும் பண்களில் ஒன்றாகிய மருதயாழுக்கு அகநிலை - மருதயாழ், புறநிலை - ஆகரி. அருகியல்-சாயவேளர் கொல்லி, பெருகியல்-கின்னரம் என்னும் பண்களாம். இங்கே இளங்கோவடிகள் அருளிச்செய்த அகநிலை மருதம். புறநிலை மருதம். அருகியல் மருதம். பெருகியல் மருதம் என்பன இவையே போலும் ; பெரும்பண் பதினாறும் திறன் எண்பத்து நான்கும், இவற்றுளடங்காத தாரப்பண்டிறம், பையுள் காஞ்சி, படுமலை யென்னும் மூன்றும் ஆகப் பண்கள் நூற்று மூன்றாயினவாறு காண்க.
இளி உழை குரலாய கோடிப்பாலை அகநிலை மருதமும், கைக்கிளை குரலாய மேற்செம்பாலை புறநிலை மருதமும். குரல் குரலாய செம்பாலை அருகியல் மருதமும், தாரம் குரலாய விளரிப்பாலை பெருகியன் மருதமும் ஆமென்பர் அடியார்க்குநல்லார்.
இனி, அரும்பதவுரையாசிரியர் இந்நான்கினையும் குறித்துக் கூறுவன வருமாறு;-
௧. அகநிலை மருதமாவது “ஒத்த கிழமை யுழைகுரன் மருதம், துத்தமும் விளரியும் குறைபிற நிறையே,” இதன் பாட்டு:- ‘ஊர்க திண்டேர் ஊர்தற் கின்னே, நேர்க பாக நீயா வண்ணம்,’ நரம்பு பதினாறு.
௨. “புறநிலை மருதங் குரலுழை கிழமை, துத்தங் கைக்கிளை குறையா மேனைத், தாரம் விளரி யிளிநிறை யாகும்.” இதன் பாட்டு :-“அங்கட் பொய்கை யூரன் கேண்மை, திங்க ளோர்நாளாகுந் தோழி”நரம்பு பதினாறு.
௩. “அருகியன் மருதங் குரல்கிளை கிழமை, விளரி யிளிகுறையாகு மேனைத், துத்தந் தார முழையிவை நிறையே.” இதன் பாட்டு :- “வந்தானூரன் மென்றோள் வளைய, கன்றாய் போது காணாய் தோழி.” நரம்பு பதினாறு. (கிளை-கைக்கிளை)
௪. “பெருகியன் மருதம் பேணுங் காலை, அகநிலைக் குரிய நரம்பின திரட்டி, நிறைகுறை கிழமை பெறுமென மொழிப.”இதன் பாட்டு :- “மல்லூர்...........நோவ வெம்முன், சொல்லற் பாண சொல்லுங்காலை. எல்லிவந்த நங்கைக் கெல்லாம், சொல்லுங்காலைச் சொல்லு நீயே.”நரம்பு முப்பத்திரண்டு. பரிபாடல் ௧௭-ஆம் செய்யுளில், “ஒருதிறம், பாடினி முரலும்பாலையங் குரலின், நீடுகிளர் கிழமை நிறை குறை தோன்ற” என்பதற்கு. ‘பாலையையுடைய அழகிய மிடற்றுப் பாடற்கண் நாலு தாக்குடைய கிழமையும் இரண்டு தாக்குடைய..குறையும் தோன்ற’எனப் பரிமேலழகர் உரை கூறியிருத்தலின், கிழமை நான்கு தாக்கும், நிறை இரண்டு தாக்கும், குறை ஒரு தாக்கும் பெறுமெனக் கோடல் வேண்டும். மேலே காட்டிய பாட்டுக்களில் அகநிலை முதலிய மூன்றும் ஒற்று நீக்கிப் பதினாறெழுத்துக்களும் பெருகியல் ஒன்றும் முப்பத்திரண்டெழுத்துக்களும் பெற்று வருதலின், ஓரெழுத்து ஒரு நரம்பாகவும், ஒரு மாத்திரையாகவும் கொள்ளப்பட்டதென்பது புலனாகின்றது. ஆனால், “அகநிலை மருதத்துக்கு நரம்பணியும்படி :- உழை இளி விளரி உழை கைக்கிளை குரல் உழைகுரல் தாரம் இளிதாரம் துத்தம் இளி உழை. இவை உரைப்பிற் பெருகும்.”என்றுள்ள அரும்பதவுரையிற் பதினான்கு நரம்புகளே காணப்படுதல் முரணாகின்றது. இரண்டு விடுபட்டிருக்கும் போலும்.
௪௨. மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித்
மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பி-வலிவு மெலிவு சமம் என்னும் மூவகை யியக்கத்தாலும் முறையாலே பாடிக் கழித்து;
நால்வகைச் சாதிப் பண்களையும் மூவகை யியக்கத்தாலும் பாடிக் கழித்தென்க.
௪௩-௪. திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்துப்
புறத்துஒரு பாணியில் பூங்கொடி மயங்கி,
திறத்து வழிபடூஉம் தெள்ளிசைக் காணத்து-அவற்றின் வழிப்படும் திறப்பண்களைப் பாடுதல் செய்யுமிடத்து, புறத்து ஒரு பாணியிற் பூங்கொடி மயங்கி-நெஞ்சு கலங்கினாளாதலின் எடுத்த பண்ணுக்குப் புறமாகியதோ ரிசையிலே அவள் மயங்கி;
வழிபடூஉந் திறத்தென மாறுக. தெள்ளிசைக் கரணம்-யாழினும் மிடற்றினும் பாடுஞ் செய்கை. புறத்தொரு பாணியில் என்பதற்குப் புறநிலை மருதப் பண்ணில் என்றும், புறநீர்மை யென்னுந் திறத்தில் என்றும் உரைப்பாருமுளர்.
௪௫-௫௫. சண்பகம் மாதவி தமாலம் கருமுகை
வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த
அம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை
எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு
விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட
ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்
ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி,
அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது
பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு
விரை மலர் வாளியின் வியல் நீலம் ஆண்ட-மணம் பொருந்திய மலராகிய சிறிய வாளியாலே பெரிய நிலமுழுதையும் ஆண்ட, ஒரு தனிச்செங்கோல் ஒரு மகன் ஆணையின்-ஒப்பற்ற தனிச் செங்கோலையுடைய ஒருவனாகிய காமராசன் ஆணையாலே, ஒருமுகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும் திருமுகம்-ஒரு திசை யன்றி உலகமெல்லாம் தொழுது வணங்கப்படும் அவன் றிருமுகத்தை, போக்கும் செவ்வியள் ஆகி-கோவலற்கு விடுப்பே மென்னும் நினைவாற் பிறந்த செவ்வியை யுடையளாகி, சண்பகம் மாதவி தமாலம் கருமுகை வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த அம் செங்கழுநீர் ஆயிதழ்-சம்பகம் பச்சிலை பித்திகை வெள்ளிய பூவாகிய மல்லிகை எனனும் மலர்களாலும் வெட்டிவேராலும் அழகிய செங்கழுநீரின் நெருங்கிய மெல்லிய இதழ்களாலும் தொடுக்கப் பெற்ற, கத்திகை எதிர் பூஞ்செவ்வி-பூக்களின் மணம் மாறுபடும் செவ்வியையுடைய மாலையின், இடைநிலத்து யாத்த-நடுவிடத்தே தொடுத்த, முதிர் பூந்தாழை முடங்கல் வெண்தோட்டு-முதிர்ந்த தாழம் பூவினது முடக்கத்தையுடைய வெள்ளிய தோட்டிலே, அயலது பித்திகைக் கொழுநகை ஆணி கைக்கொண்டு-அதற்கு அயலிடத்தமைந்ததாகிய பித்திகையின் கொழுவிய முகையாகிய எழுத்தாணியைக் கையிற் கொண்டு, அலத்தகர் கொழுஞ்சேறு அளைஇ-அதனைச் செம்பஞ்சின் குழம்பிற் றோய்த்து உதறி எழுதுகின்றவள் ;
செவ்வியளாகி வெண்டோட்டில் ஆணி கைக் கொண்டு அளைஇ எழுதுகின்றவள் என மாறிக் கூட்டுக. தமாலம்-பச்சிலை. கருமுகை-பீத்திகை. வேர்-குறுவேர்; வெட்டிவேர். கத்திகை-மாலை. எதிர்தல்-மாறுபடுதல். நிலம்-இடம். ஒருமுகம்-ஒரு திசை; ஓரிடம். திருமுகம்-அரசர்கள் விடுக்குஞ் செய்தி வரைந்த ஏடு; மங்கல வழக்கு. அத்திருமுகங் கண்டுழி அதற்கஞ்சித் தணந்தார் கூடுதல் ஒருதலை யென்னுங் கருத்தான் அதனைக் காமராசனது திருமுக மென்றாளென்க.
௫௬-௬௭. மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்இள வேனில் இளவர சாளன்
அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும்
தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல்
இறும்பூது அன்றுஅஃது அறிந்தீ மின்என
எண்எண் கலையும் இசைந்துஉடன் போக
பண்ணும் திறனும் புறங்கூறு நாவின்
தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்துஉரை எழுதி,
மன்னுயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்-உலகில் நிலைபெற்ற உயிர்கள் யாவற்றையும் தாம் மகிழும் துணையோடு புணர்விக்கும், இன் இளவேனில் இளவரசாளன்-இனிய இளவேனிலென்பான் இளவரசன் ஆதலின் நெறிபடச் செய்யான், அந்திப்போதகத்து அரும்பிடர்த் தோன்றிய-அந்திப் பொழுதாகிய யானையின் அரிய பிடரிலே தோன்றிய, திங்கட் செல்வனும் செவ்வியன் அல்லன்-திங்களாகிய செல்வனும் கோட்டமுடையன், ஆதலால், புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும்-புணர்ந்தோர் சிறிது பொழுதை இடையே பயமின்றாகக் கழிப்பினும், தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும்-பிரிந்து சென்றோர் தம் துணையை மறந்து வாராதொழியினும், நறும்பூ வாளி நல்லுயிர் கோடல் இறும்பூது அன்று-நறிய பூவாகிய அம்பு இன்புநுகரும் உயிரைக் கொண்டு விடுதல் புதுமையன்று, இஃது அறிந்தீமின் என-இதனை அறிமின் என்று, எண்ணெண் கலையும் இசைந்து உடன்போக-அறுபத்து நால்வகைக் கலைகளும் வழிபட்டுப் புகழ்ந்தொழுக, பண்ணும் திறனும் புறங்கூறு நாவில்-அவற்றுட் பண்களும் திறங்களும் புறங்கூறும் நாவில், தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து-தளை கட்டவிழ்ந்து குலைந்த தனிப்பட்ட காமத்தையுடைய, விளையா மழலையின் விரித்து உரை எழுதி-முற்றாத மழலையோடே பேசிப் பேசி யெழுதி; அந்திப் போதகத்து அரும்பு இடர்த் தோன்றிய எனப் பிரித்து அந்திப்பொழுதின் கண்ணே அரும்புகின்ற விரகவிதனத்தின் மேலே வந்து தோன்றிய திங்களாகிய செல்வன் என்று பொருளுரைப்பர் அடியார்க்கு நல்லார். இவர் அந்தியாகிய யானையின் புறக்கழுத்திற் றோன்றிய திங்களெனிற் பிறையாமாதலின். அது நாடுகாண் காதையுள் “வைகறையாமத்து, மீன்றிகழ் விசும்பின் வெண்மதி நீங்கக், காரிருள் நின்ற கடைநாட் கங்குல்” என்பதனோடும், கட்டுரை காதையுள் “ஆடித் திங்கட் பேரிருட் பக்கத் தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று, வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண” என்பதனோடும், பிறவற்றோடும் மாறுகொள்ளுமாதலின் அவ்வுரை பொருந்தாதென மறுப்பர். ஆயின் இவர் கருத்துப்படியும் அந்தியோடு திங்களுக்குத் தொடர்பில்லா தொழியவில்லை என்பது கருதற்பாற்று. பொழுதிடைப் படுத்தல்-ஊடல் முதலியவற்றால் விட்டிருத்தல். தணத்தல்-ஓதல் முதலிய ஏதுவாகக் காடிடையிட்டும் நாடிடையிட்டும் பிரிந்திருத்தல். துணை மறத்தல்-குறித்த பருவத்து வாராது பொய்த்தல். வாளியின் எனப் பாடங்கொண்டு, வாளியால் உயிர்கோடல் அவற்குப் புதிதன்றென வுரைப்பர் அடியார்க்கு நல்லார். புறங்கூறும் நா-புறங் கூறுதற்குக் காரணமான நா. புறங்கூற்று - நிகரல்லார் தம் பொறாமையால் அவரில்வழி இகழ்ந்துரைப்பது. பண்ணையும் திறத்தையும் பழிக்கும் நாவென் றுரைப்பாரு முளர். தனிப்படு காமம்-சிறந்தார்க்கும் உரைக்கலாவதன்றாய் அரிதாய் அகத்தே சுட்டுருக்கும் காமம்.
௬௮-௭௧. பசந்த மேனியள் படர்உறு மாலையின்
வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்
தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம்
கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்குஎன
பசந்த மேனியள்-பசப்புற்ற மேனியை யுடையளாய், படர் உறு மாலையின்-நினைவுமிகும் மாலைக்காலத்தே, வசந்த மாலையை வருகெனக் கூஉய்-வசந்த மாலையை வருகவென அழைத்து, தூமலர் மாலையில் துணி பொருள் எல்லாம்-இத்தூய மலர்மாலையில் எழுதி தீர்ந்த பொருளை எல்லாம், கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்கு என-கோவலற்கு ஏற்பச் சொல்லி இப்பொழுதே இங்கே கொணர்வாயாக என்றுரைக்க;
வசந்தமாலை -மாதவியின் சேடி.மாலையினிடையதொரு,தோட்டில் எழுதப்பெற்றதாகலின்,அதனை, மாலையிற்றுணிபொருள் என்றாள்; அன்றி அம்மாலை முழுதுமே காமன் றிருமுகமென்பது கருதியுமாம். அளிக்க வென்னாது அளித்துக் கொணர்க வென்றது இது காமன் திருமுகமாதலானும், முன் இவன் பிரிந்தது அறியாமையானாதலானும் என்க. இளவேனில் வந்தது கோலங்கொண்மினென்று குயிலிசைக்க மாதவி விரும்பி ஏறிக் கையுறை யேந்தி மயங்கி இருக்கையளாகிக் கேட்டனள் ; அன்றியும் நலம்பெற நோக்கிக் கழிப்பிப் பாணியில் மயங்கிச் செவ்வியளாகிக் கைக்கொண்டு அளைஇ எழுதிக் கூய் அளித்துக் கொணர்க ஈங்கென்றாள் என வினை முடிக்க.
௭௨-௩. மாலை வாங்கிய வேல்அரி நெடுங்கண்
கூல மறுகிற் கோவலற்கு அளிப்ப,
மாலை வாங்கிய வேல் அரிநெடுங்கண்-அங்ஙனம் மாதவி ஈந்த மாலையை வாங்கிய வேல் போலும் அரி பரந்த நெடிய கண்களையுடைய வசந்தமாலை போய், கூலமறுகிற் கோவலற்கு அளிப்ப-கூலங்கள் செறிந்த மறுகினையுடைய கோவலனைக் கண்டு அவனுக்கு அம்மாலையை நல்க; போய் எனவும், கண்டு எனவும் வருவிக்க. நெடுங்கண் , ஆகுபெயர்.
இனி, அம்மாலையைப் பெற்றே கோவலன் மாதவி பண்டு ஊடியும் கூடியும் சென்ற காலத்து அவள்பால் நிகழ்ந்த செய்திகளையெல்லாம் நாடகவுறுப்புக்களாகிய எண்வகை வரிக்கூத்தாகக் கொண்டு வெறுத்துரைத்தல் கூறுகின்றார். குரவை, வரி என்னும் இரண்டனுள் வரியாவது அவரவர் பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழிற்றன்மையும் தோன்ற நடித்தல். அவ் வரி எட்டு வகைப்படும். அவை கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக் கோள்வரி என்பன. இவற்றினிலக்கணங்களை, “கண்கூ டென்பது கருதுங் காலை, இசைப்ப வாராது தானே வந்து தலைப்பெய்து நிற்குந் தன்மைத் தென்ப” “காண்வரி யென்பது காணுங் காலை, வந்த பின்னர் மனமகிழ் வுறுவன, தந்து நீங்குந் தன்மைய தாகும்” “உள்வரி யென்ப துணர்த்துங் காலை, மண்டல மாக்கள் பிறிதோ ருருவங், கொண்டுங் கொள்ளாது மாடுதற் குரித்தே” “புறவரி யென்பது புணர்க்குங் காலை இசைப்ப வந்து தலைவன் முற் படாது புறத்துநின் றாடிவிடைபெறு வதுவே” “கிளர் வரி யென்பது கிளக்குங் காலை, ஒருவருய்ப்பத் தோன்றி யவர்வாய், இருபுற மொழிப்பபொருள் கேட்டுநிற் பதுவே” ”தேர்ச்சி யென்பது தெரியுங் காலைக், கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முன், பட்டது முற்றது நிலைஇ யிருந்து தேர்ச்சியே டுரைப்பது தேர்ச்சிவரி யாகும்” “காட்சிவரி யென்பது கருதுங் காலைக் கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முனர்ப் பட்டது கூறிப் பரிந்துநிற் பதுவே” “எடுத்துக் கோளை யிசைக்குங் காலை, அடுத்தடுத்தழிந்த மாழ்கி யயலவர். எடுத்துகோள் புரிந்த தெடுத்துக்கோளே” என்பவற்றான் முறையே அறிக. இனி மாதவியின் செய்கையை இவற்றொடு பொருத்திக் கூறுமாறு காண்க.
௭௪-௭. திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும்
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட
மாதர் வாள்முகத்து மதைஇய நோக்கமொடு
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்,
திலகமும் அளகமும்-திலகத்தையும் கூந்தலையுமுடைய, சிறுகருஞ் சிலையும் குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட-சிறிய கரிய வில்லையும் நீலமலரையும் குமிழும் பூவையும் கொவ்வைக் கணியையும் உறுப்பாகக் கொண்ட,மாதர்வாண்முகத்தின்-காதலையுடைய ஒள்ளியமுகத்தின்,மதைஇயநோக்ககமொடு-மதர்த்த நோக்கத்தோடே, காதலிற்றோன்றிய கண்கூடு வரியும்-என்மேற் காதலுடையாள் போற்றோன்றி முதற்கண் எதிர்முகமாக நின்று நடித்த நடிப்பும் ;
புருவம் முதலியன சிலை முதலிய உவமங்களாற் குறிக்கப்பட்டன. கண்கூடு-எதிர்முகமாதல்.
௭௮-௮௩. புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக்
கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்
பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவிய
நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி
வருகென வந்து போகெனப் போகிய
கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்,
புயல் சுமந்து வருந்திப் பொழி கதிர் மதியத்து-முகிலைச் சுமந்து வருந்திக் கதிரைப் பொழியும் மதியிடத்தே, கயல் உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்-கயல்கள் உலாவித் திரிகின்ற விருப்பம் பொருந்திய செவ்வியோடே, பாகு பொதி பவளம் திறந்து-பாகைப் பொதிந்த பவளத்தைத் திறந்து, நிலா உதவிய நாகு இளமுகத்தின் நகை நலம் காட்டி-ஒளியைத் தருகின்ற மிக்க இளமையுடைய முத்திநன் நகை நலத்தைக் காட்டி, வருகென வந்து போகெனப் போகிய-,கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்-கரிய நெடிய கண்ணாளுடைய காண்வரி யென்னுங் கோலமும்;
ஈண்டும் குழல் முகம் விழி வாய் பல் என்பன முறையே புயன் மதி கயல் பவளம் முத்து என்னும் உவமங்களால் கற்போர் நெஞ்சம் காமுறுமாறு எழில்பெறக் கூறப்பட்டுள்ளன. அமிழ்தும் இன்சொல்லு முடைமையால் வாயினைப் பாகு பொதி பவளம் என்றார். நாகிள : ஒரு பொருளிரு சொல். நகை நலம்-ஒளிநலமும் பல்நலமுமாம்.
௮௪-௯. அந்தி மாலை வந்ததற்கு இரங்கிச்
சிந்தை நோய் கூரும்என் சிறுமை நோக்கிக்
கிளிபுரை கிளவியும் மடஅன நடையும்
களிமயில் சாயலும் கரந்தனள் ஆகிச்
செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து
ஒருதனி வந்த உள்வரி ஆடலும்,
அந்தி மாலை வந்ததற்கு இரங்கி-யான் ஊடிப் பிரிந்த காலத்து அந்திமாலை வந்ததாகப் பிரிவாற்றாமையால் இரங்கி, சிந்தை நோய் கூரும் என்சிறுமை நோக்கி-சிந்தையில் நோய்மிகும் என் வருத்தத்தை நோக்கி, கிளிபுரை கிளவியும்-கிள்ளையை யொத்த சொல்லையும், மடஅன நடையும்-மடப்பத்தையுடைய அன்ன மன்ன நடையினையும், களிமயிற் சாயலும்-களிப்பையுடைய மயில்போலுஞ் சாயலினையும், கரந்தனள் ஆகி-மறைத்தவளாகி, செருவேல் நெடுங்கட் சிலதியர் கோலத்து-போர் புரியும் வேல்போன்ற நெடிய கண்ணையுடைய சிலதியர் கோலத்தைக் கொண்டு, ஒரு தனி வந்த உள்வரி ஆடலும்-தான் தனியே வந்து நின்று நடித்த உள்வரி யென்னும் நடிப்பும் ;
சிலதியர்-ஏவற் பெண்டிர்; சிறு குறுந்தொழிலியர். உள்வரி - வேற்றுருக்கொள்ளுதல்.
௯0-௩. சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும்
கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்துவேறு ஆயஎன் சிறுமை நோக்கியும்
புறத்துநின்று ஆடிய புன்புற வரியும்,
சிலம்பு வாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும்-சிலம்பு வாய்விட்டு புலம்பவும் மேகலை வாய்விட்டு ஆர்ப்பவும், கலம்பெறா நுசுப்பினள்-கலங்களைப் புனையவும் பெறாத இடையினை யுடையாள்,காதல் நோக்கமொடு-காதலையுடையாள்போல் நோக்கிய நோக்கோடே, திறத்து வேறாய் என் சிறுமை நோக்கியும்-தன்னைப் பிரிதலால் இயல்பு திரிந்த என் வருத்தத்தை யறிந்தும், புறத்து நின்று ஆடிய புன் புறவரியும்-என்னுடன் அணையாது புறம்பே நின்று நடித்த புல்லிய புறநடிப்பும்;
நுசுப்பினள் புலம்பவும் ஆர்ப்பவும் நோக்கமொடு நோக்கியும் ஆடிய வரியுமென்க. கலம் பொறா என்பது பாடமாயின் கலத்தினைச் சுமக்கலாற்றாத என்க.
௯௩-௧0௧. கோதையும் குழலும் தாதுசேர் அளகமும்
ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும்
மின்இடை வருத்த நன்னுதல் தோன்றிச்
சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப்
புணர்ச்சிஉட் பொதிந்த கலாம்தரு கிளவியின்
இருபுற மொழிப்பொருள் கேட்டனள் ஆகித்
தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல்
கிளர்ந்துவேறு ஆகிய கிளர்வரிக் கோலமும்,
கோதையும் குழலும் தாது சேர் அளகமும்-பூந்துகள் பொருந்திய மாலையும் குழலும் அளகமும், ஒரு காழ் முத்தமும் திருமுலைத் தடமும்-ஒரு வடமாகிய முத்தமும் அழகிய முலையிடமும், மின் இடை வருத்த-மின்போலும் இடையினை வருத்தும்படி, நன்னுதல் தோன்றி-நல்ல நெற்றியை யுடையாள் அணுக வாராதே புறவாயிலில் வந்து நின்று, சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்ப-சிலதியர் எனது மறு மாற்றத்தைச் சொல்ல, புணர்ச்சி உட்பொதிந்த கலாம் தரு கிளவியின்-புணர்ச்சியை உட்பொதிந்திருக்கிற எனது புலவிச் சொல்லைக் கேட்டு, இருபுற மொழிப் பொருள் கேட்டனள் ஆகி-அதனை இருபுற மொழிப்பொருளாகக் கொண்டு, தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல்-தளர்ந்த மேனியினையும் அழகிய மெல்லிய கூந்தலினையுமுடையாள், கிளர்ந்து வேறாகிய கிளர்வரிக் கோலமும்-புலவியால் வேறுபட்டுப் போகின்றாள்போல நடித்துப் போன நடிப்பும்
தாது சேர்கோதை யெனக் கூட்டுக. குழல், அளகம் என்பன கூந்தலின் இருவகை முடிகள். ஐம்பாலில் இரண்டு. இருபுற மொழிப்பொருள்-இரண்டு வகையாகப் பொருள் பயக்குஞ் சொல். யான் புணர்ச்சி நிமித்தமாகப் புலந்துசொல்லிவிட்ட மொழியைக் கேட்டு அவ்வாறன்றிப் புலந்து சொன்னேனாகக் கொண்டு நடந்தாள் என்றான். நன்னுதல் கூந்தல் வருத்தந் தோன்றி உய்ப்பக்கேட்டு வேறாகிய என்க.
௧0௨-௪. பிரிந்துஉறை காலத்துப் பரிந்தனள் ஆகி
என்உறு கிளைகட்குத் தன்உறு துயரம்
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சிவரி அன்றியும்,
பிரிந்து உறை காலத்துப் பரிந்தனள் ஆகி-நான் பிரிந்துறையும் பொழுதில் தான் பிரிவாற்றாது வருந்தினளாகப் பாவித்து, என் உறு கிளைகட்கு-என் மிக்க கிளைகளாயினார்க்கு, தன் உறு துயரம்-தனது மிக்க துயரத்தை, தேர்ந்து தேர்ந்து உரைத்த தேர்ச்சி வரி அன்றியும்-தேர்ந்து தேர்ந்து உரைக்கின்றாளாக நடித்த நடிப்பும், அதுவன்றியும்;
௧0௫-௬. வண்டுஅலர் கோதை மாலையுள் மயங்கிக்
கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்,
வண்டு அலர் கோதை-வண்டுகளால் அலர்த்தப்படும் பூங்கோதையினை யுடையாள், மாலையுள் மயங்கி-மாலைப் பொழுதிலே மயங்கி, கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்-காணப்பட்ட கிளைகள் யாவர்க்கும் தன் பிரிவுத் துன்பத்தைச் சொல்லி நடித்த நடிப்பும்;
௧0௭-௮. அடுத்துஅடுத்து அவர்முன் மயங்கிய மயக்கமும்
எடுத்துஅவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்,
அடுத்தடுத்து அவர் முன் மயங்கிய மயக்கம்-பல்காலும் அவர் முன்பு தான் மயங்கிய மயக்கத்தை, எடுத்து அவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்-அவர் எடுத்துத் தீர்த்த எடுத்துக்கோள்வரி யென்னும் நடிப்பும்;
௧0௯-௧0. ஆடல் மகளே ஆதலின் ஆயிழை.
பாடுபெற் றனஅப் பைந்தொடி தனக்குஎன,
ஆடல் மகளே ஆதலின் ஆயிழை-ஆயிழாய், நாடக மகளே யாதலால், பாடு பெற்றன அப் பைந்தொடி தனக்கு என – இங்ஙனம் நடித்த நடிப்புக்கள் அப்பைந்தொடிக்குப் பெருமை யாவனவே என்று கூற;
ஆயிழை - வசந்தமாலை ; விளி. பைந்தொடி ஆடன் மகளாதலின் நடிப்புக்கள் அவட்கு இல்பாவனவை என்று கூறி ஓலையை மறுத்தானென்க. மாதவியின் செய்கையில் வைத்து எண்வகை வரியையும் விளக்கிய திறப்பாடு வியத்தற்குரியது.
௧௧௧-௪. அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய,
மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி
வாடிய உள்ளத்து வசந்த மாலை
தோடுஅலர் கோதைக்குத் துனைந்துசென்று உரைப்ப
அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய-அழகிய பொற்றோடு அணிந்த திருமுகத்தையுடைய மாதவி யெழுதிய, மணித்தோட்டுத் திருமுகம் மறுத்தற்கு இரங்கி-அழகிய தாழந்தோட்டுத் திருமுகத்தைக் கோவலன் மறுப்பத் தான் அதற்கு வருந்தி, வாடிய உள்ளத்து வசந்தமாலை-வாட்டமுற்ற உள்ளத்தையுடைய வசந்தமாலை, தோடு அலர் கோதைக்கு துனைந்து சென்று உரைப்ப-இதழ் விரிந்த மாலையையுடைய மாதவிக்கு விரைந்து சென்று உரைக்க;
அணியும் மணியும் அழகு. தோடு-பொற்றோடும் தாழந்தோடும்.
௧௧௫-௮. மாலை வாரார் ஆயினும் மாண்இழை
காலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்.
மாலை வாரார் ஆயினும்-இன்னும் மாலைப் பொழுதினுள் வருவார்; அங்ஙனம் வாராராயினும், மாண் இழை-மாட்சிமைப்பட்ட அணியினையுடையாய், காலை காண்குவம் என-காலைப் பொழுதில் ஈண்டு நாம் காண்போமெனச் சொல்லி, கையறு நெஞ்சமொடு-செயலற்ற மனத்தோடு, பூமலர் அமளி மிசைப் பொருந்தாது வதிந்தனள்-தானிருந்த அழகிய மலரமளியின் மீதே வீழ்ந்து இமை பொருந்தாமற் கிடந்தனள், மா மலர் நெடுங்கண் மாதவி தான் என்-கரிய மலர்போலும் நெடிய கண்ணையுடைய மாதவிதான் என்க.
வாராராயினும் என்றது வருவாரென்னும் பொருளை அடக்கிநின்றது. காலையில் ஒருதலையாக வருவாரென்பாள் காண்குவம் என்றாள். தான், என் -அசைகள்.
இது நிலைமண்டில வாசிரியப்பா.
வெண்பாவுரை
௧. செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்துஒழுக
மைந்தார் அசோகம் மடல்அவிழக் - கொந்தார்
இளவேனில் வந்ததால் என்ஆம்கொல் இன்று
வளவேல்நற் கண்ணி மனம்.
செந்தாமரை விரிய-செந்தாமரை மலர் விரியவும், தேமாங் கொழுந்து ஒழுக-தேமாவின் கொழுந்து ஒழுகுவது போலும் வனப்புடன் தளிர்க்கவும், மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ-அழகு பொருந்திய அசோகம் இதழ் விரியவும், கொந்து ஆர்-பூங்கொத்துக்கள் நிறைதற்கேதுவாய், இளவேனல் வந்தது-இளவேனிற் பொழுது வந்தது; என்னாங்கொல் இன்று வளவேல் நற்கண்ணி மனம் – கூரிய வேல் போலும் நல்ல கண்ணினை யுடையாள் மனம் இன்று என்ன துன்பமுறுமோ !
மைந்து-அழகு. கொந்து-கொத்து; மெலித்தல். வேனல்-வேனில். வேலுக்கு வளமாவது கூர்மை. ஆல், அசை. இது வசந்தமாலையென்னும் கூனி ஓலை கொண்டு செல்கின்ற காலத்துத் தன்னுள்ளே சொல்லியது.
௨. ஊடினீர் எல்லாம் உருஇலான் தன்ஆணை
கூடுமின் என்று குயில்சாற்ற - நீடிய
வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக்
கானற்பா ணிக்குஅலந்தாய் காண்
ஊடினீர் எல்லாம் – உலகில் ஒருவனும் ஒருத்தியுமாயுள்ளோரின் ஊடினவர்களே நீயிரெல்லாம், உருவிலான்றன் ஆணை-அநங்கன் ஆணை, கூடுமின் என்று குயில் சாற்ற-கூடுவீராக வென்று குயிற்குலங்கள் சாற்ற, நீடிய வேனற் பாணிக் கலந்தாள்-இளவேனிற் பொழுதில் நின்னோடு என்றும் கலந்தவளுடைய, மென்பூந் திருமுகத்தை-மெல்லிய பூவிலெழுதிய திருமுகத்தை, கானற் பாணிக்கு அலந்தாய் காண்-கானலிடத்து அவள் பாடிய பாட்டிற்கு வருந்தினவனே காண்பாயாக.
நீடிய கானற்பாணி என்றுமாம். பாணி இரண்டனுள் முன்னது பொழுது, பின்னது பாட்டு. இதனைக் காணென்று ஓலையை நீட்டினாள் என்க.
வேனிற்காதை முற்றிற்று.
-------------------------
9. கனாத்திறமுரைத்த காதை
{ஞாயிறு மறைந்த மாலைப்பொழுதிலே புகார்நகரில் உள்ள பூங்கொடியனைய மகளிர்கள் முல்லைமலரும் நெல்லும் தூவி விளக்கேற்றி இல்லுறை தெய்வத்தை வழிபட்டு இரவிற்கேற்ற வேறு கோலத்தினைக் கொள்ளாநிற்க. சாத்தன் கோயிலில் நாடோறும் வழிபாடு செய்யும் நியமம் பூண்டிருந்த, கண்ணகியின் பார்ப்பனத் தோழியாகிய தேவந்தியென்பாள் கண்ணகிக்கு உற்றதொரு குறையுண்டென எண்ணிய மனத்தினளாய்க் கோயிலை யடைந்து, இவள் கணவனைப் பெறல் வேண்டுமென அறுகு முதலியவற்றைத் தூவி வழிபட்டுக்கண்ணகிபாற் போய், ‘கணவனைப் பெறுக’ என வாழ்த்தினாள். அதுகேட்ட கண்ணகி ‘நீ இங்ஙனம் கூறுதலாற் பெறுவேனாயினும் யான்கண்ட கனவினால் எனது நெஞ்சு ஐயுறா நின்றது’என்று கூறித் தான் கண்ட கனவினை எடுத்தியம்பி, அதற்கு விடையாக, “நீ நின் கணவனால் வெறுக்கப்பட்டாயல்லை; முற்பிறப்பிலே கணவன் பொருட்டுக் காக்க வேண்டியதொரு நோன்பு தப்பினாய்; அத் தீங்கு கெடுவதாக; காவிரியின் சங்கமுகத் துறையை அடுத்த கானலில் உள்ள சோமகுண்டம் சூரியகுண்டம் என்னும் பொய்கையில் நீராடிக் காமவேள் கோட்டத்தைத் தொழுத மகளிர் இம்மையிற் கணவருடன் கூடி இன்புற்று மறுமையிலும் போக பூமியிற் போய்ப் பிறந்து கணவரைப் பிரியாதிருப்பர்; ஆதலின் நாமும் ஒரு நாள் நீராடுவோமாக” என்றுரைத்த தேவந்திக்கு, ‘அங்ஙனம் துறைமூழ்கித் தெய்வந்தொழுதல் எங்கட்கு இயல்பன்று’ என்று கூறி இருந்தாள். இருந்த அப்பொழுது கோவலன் அங்கு வந்து கண்ணகியோடு பள்ளியறையில் புகுந்து, அவளது வாடிய மேனி கண்டு வருந்தி, ‘கரவொழுக்கமுடைய பரத்தையொடு மருவி என் முன்னோர் தேடித்தந்த பொருட்குவியலையெல்லாம் இழந்து வறுமையுற்றேன்; இஃது எனக்கு மிக்க நாணினைத் தருகின்றது’என்று கூறினான். கூறலும், மாதவிக்குக் கொடுக்கப் பொருளில்லாமையால் இங்ஙனம் கூறுகின்றான் எனக் கண்ணகி நினைந்து நகை முகங் காட்டி, ‘என்னிடம் இரண்டு சிலம்புகள் உள்ளன; கொண்மின்’ என எடுத்தளிப்ப, அவற்றை வாங்கிய கோவலன் ‘இச்சிலம்பினை முதலாகக் கொண்டு யான் மதுரையை அடைந்து வாணிகஞ் செய்து இழந்த பொருளை ஈட்டத் துணிந்துள்ளேன்; நீயும் என்னுடன் எழுக’ என்றுரைத்து, பழவினையானது நெஞ்சை ஒருப்படுத்தலால், ஞாயிறு தோன்றுதற்குமுன் அவ்வினையின் ஏவலைக் கொண்டான். (இக்காதையின் முதற்பகுதியில் தேவந்தியின் வரலாறு கூறுமிடத்தே புகாரில் இருந்த கோட்டங்கள் பலவற்றின் பெயரும் கூறப்பட்டுள்ளன.)}
(கலி வெண்பா )
அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்குஓர்
கோலம் கொடிஇடையார் தாம்கொள்ள, மேல்ஓர்நாள்:
மாலதி மாற்றாள் மகவுக்குப் பால்அளிக்கப் 5
பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும்
பார்ப்பா னொடுமனையாள் என்மேல் படாதனவிட்டு
ஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டு
அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில் 10
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும்
தேவிர்காள் எம்உறுநோய் தீர்ம்அன்று மேவிஓர்
பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு, 15
ஏசும் படிஓர் இளங்கொடியாய் ஆசுஇலாய்
செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம்கொடார்
பொய்உரையே அன்று பொருள்உரையே கையிற்
படுபிணம்தா என்று பறித்துஅவள்கைக் கொண்டு
சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்குஇருளில் சென்றுஆங்கு 20
இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி
மடியகத்து இட்டாள் மகவை, இடியுண்ட
மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அச்சாத்தன்
அஞ்ஞைநீ ஏங்கி அழல்என்று முன்னை
உயிர்க்குழவி காணாய்என்று அக்குழவி யாய்ஓர் 25
குயில்பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்புஇன்றி
மாயக் குழவி எடுத்து மடித்திரைத்துத்
தாய்கைக் கொடுத்தாள்அத் தையலாள், தூய
மறையோன்பின் மாணியாய் வான்பொருள் கேள்வித்
துறைபோய் அவர்முடிந்த பின்னர் இறையோனும் 30
தாயத்தா ரோடும் வழக்குஉரைத்துத் தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள்
தேவந்தி என்பாள் மனைவி அவளுக்குப்
பூவந்த உண்கண் பொறுக்கென்று மேவித்தன்
மூவா இளநலம் காட்டிஎம் கோட்டத்து 35
நீவா எனஉரைத்து நீங்குதலும், தூமொழி
ஆர்த்த கணவன் அகன்றனன் போய்எங்கும்
தீர்த்தத் துறைபடிவேன் என்றுஅவனைப் பேர்த்துஇங்ஙன்
மீட்டுத் தருவாய் எனஒன்றன் மேல்இட்டுக்
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டருஞ்சீர்க் 40
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறைஉண்டுஎன்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று
பெறுக கணவனோடு என்றாள், பெறுகேன்
கடுக்கும்என் நெஞ்சம் கனவினால் என்கை 45
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தன்மேல்
கோவலற்கு உற்றதுஓர் தீங்குஎன்று அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு 50
ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனோடு உற்ற உறுவனொடு யான்உற்ற
நல்திறம் கேட்கின் நகைஆகும், பொற்றொடிஇ
கைத்தாயும் அல்லை கணவற்கு ஒருநோன்பு 55
பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக்
கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்
மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு 60
தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்
பீடுஅன்று எனஇருந்த பின்னரே, நீடிய
காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம் 65
கோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள், கோவலனும்
பாடுஅமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம்கண்டு, யாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த 70
இலம்பாடு நாணுந் தருமெனக் கென்ன
நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச்
சிலம்புள கொண்மெனச் சேழியை கேளிச்
சிலம்பு முதலாகச் சென்ற நலனோ
டுவந்தபொரு ளீட்டுத லுற்றேன் மலர்ந்தசீர் 75
மாட மதுரை யகத்துச்சென்று என்னோடுஇங்கு
ஏடுஅலர் கோதாய். எழுகென்று நீடி
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.
(வெண்பா)
காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க - மூதை
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.
-----------------
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
௧-௪. அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்குஓர்
கோலம் கொடிஇடையார் தாம்கொள்ள,
அகல் நகர் எல்லாம்-அகன்ற மனையிடமெங்கும், அரும்பு அவிழ்-அரும்பு முறுக்கு நெகிழ்ந்த, முல்லை நிகர் மலர்-முல்லையின் ஒளி பொருந்திய மலரை, நெல்லொடு தூஉய்-நெல்லுடன் தூவி, பகல் மாய்ந்த மாலை-பகலவன் மறைந்த மாலைப் பொழுதிலே, மணி விளக்கம் காட்டி-அழகிய விளக்கை யேற்றி, இரவிற்கு ஓர் கோலம்-இராப்பொழுதிற்கேற்றதொரு கோலத்தை, கொடி இடையார் தாம் கொள்ள-கொடி போலும் இடையையுடைய மகளிர் கொள்ளாநிற்க;
நிகர்-ஒலி. மாய்தல்-மறைதல். தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கி யென விரித்துரைத்துக் கொள்க. ”நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது மல்ல லாவண மாலை யயர” என்றார் நக்கீரனாரும். மணி விளக்கம் என்பதனை உம்மைத் தொகையாகக் கொண்டு மாணிக்க விளக்கை மைவிளக்கோடே யெடுத்து என்றுரைப்பாருமுளர். இரவிற் கோர் கோலம்-கொழுநர் மார்பை அணைதற்கேற்ற நொய்தானவை உடுத்தும் புனைந்தும் ஒப்பனை செய்த கோலம். கொடியிடையார் மாலையின்கண் தூவிக் காட்டிக் கோலங்கொள்ள என்றியைக்க. தாம் , அசை.
௪-௬. மேல்ஓர்நாள்,மாலதி மாற்றாள் மகவுக்குப் பால்அளிக்கப்
பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும்
மேல் ஓர் நாள்-முன்னொரு நாளிலே, மாலதி-மாலதியென்னும் பெயருடைய ஒரு பார்ப்பனி, மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்க-தனது மாற்றாளின் குழவிக்குத் தன் முலை சுரந்த பாலைச் சங்கால் ஊட்ட, பால் விக்கிப் பாலகன் தான் சோர-அப்பால் விக்குதலாலே அக்குழவி மரிக்க ;
மேலோர் நாள் என்பது தொடங்கிக் கண்ணகியின் பார்ப்பனத் தோழியாகிய தேவந்தியின் வரலாறு கூறுகின்றார். மாற்றாள்-கணவனுடைய மற்றொரு மனைவி; சக்களத்தி. மாற்றாள் இல்லாத பொழுது குழவி யழுதமையாற் பாலளித்தாளென்க. பால்-ஆன்பாலுமாம். பாலகன் என்பது காலவழக்கு. சோர்தல்-ஈண்டு மரித்தல். மேலைநாள் என்றும் பாடம்.
௬-௮. பார்ப்பா னொடுமனையாள் என்மேல் படாதனவிட்டு
ஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டு
மாலதியும்-, பார்ப்பானொடு மனையாள்-பார்ப்பானும் அவன் மனைவியும், என்மேல் படாதன விட்டு-என்மேல் அடாப்பழி கூறுதலொழிந்து, ஏற்பன கூறார் என்று ஏங்கி-ஏற்பன கூறாராதலால் இதற்கென் செய்கேனென்று ஏங்கி, மகக் கொண்டு-அம் மகவை யெடுத்துக் கொண்டு; பார்ப்பான் - கணவன். ஒடு - எண்ணொடு. படாதன-இல்லாதன; அடாதன. கூறுதலென ஒரு சொல் விரிக்க. படாதன இட்டு எனப் பிரித்து, அடாதவற்றைச் சுமத்தி யென்றுரைத்தலுமாம்.
௯-௧௩. அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும்
அமரர் தருக் கோட்டம்-தேவர் தருவாகிய கற்பகம் நிற்குங் கோயில், வெள் யானைக் கோட்டம்-ஐராவதம் நிற்குங்கோயில், புகர் வெள்ளை நாகர் தம் கோட்டம்-அழகினையுடைய பலதேவர் கோயில், பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம்-கீழ்த்திசையிற்றோற்றுகின்ற சூரியன் கோயில், ஊர்க்கோட்டம்-இறைவன் ஊராகிய கைலாயம் நிற்குங் கோயில், வேற்கோட்டம்-முருகவேள் கோயில், வச்சிரக் கோட்டம்-வச்சிரப்படை நிற்குங் கோயில், புறம்பணையான் வாழ் கோட்டம்-சாதவாகனன் மேவிய கோயில், நிக்கந்தன் கோட்டம்-அருகன் கோயில், நிலாக்கோட்டம்-சந்திரன் கோயில், புக்கு எங்கும்-இக்கூறிய கோயில்கள் எங்கும் புக்கு;
புகர்-அழகு. நாகர்-தேவர். பகல் வாயில்-பகற்றோற்றுகிற வாயில்; கீழ்த்திசை. உச்சிக்கிழான்-பகற்பொழுதிற் குரியோன். இனி, பகற்பொழுதிற்கு வழியான சூரியன் என்றுமாம். வேல் - ஆகுபெயர். வேற்படை நிற்குங் கோயில் என்றுமாம். புறம்பு அணைந்த விடம் புறம்பணையாயிற்று என்பர். சாதவாகனன்-ஐயனார். கோட்டம் யாவும் செவ்வெண்.
௧௪-௫. தேவிர்காள் எம்உறுநோய் தீர்ம்அன்று மேவிஓர்
பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு,
தேவிர்காள்-தெய்வங்களே, எம் உறுநோய்-எம்மையுற்ற இத்துன்பத்தை; தீர்ம் என்று-தீர்ப்பீராக வென்று கூறிக்கொண்டு சென்று, மேவிஓர் பாசண்டச் சாத்தற்கு-ஒரு பாசண்டச்சாத்தன் கோயிலை அடைந்து அவன்பால், பாடு கிடந்தாளுக்கு-வரங்கிடந்தாளுக்கு;
தேவு-தெய்வம்; இர் ; முனனிலைப்பன்மை விகுதி. உறு-மிக்க என்றுமாம். தீர்ம்-தீரும் என்பதன் ஈற்று மிசை யுகரம் கெட்டது. தீர்மினென்று இரப்பவும் ஒருவரும் தீராமையின் அவ்விடங்களினீங்கிச் சாத்தன் கோயில் மேவியென்று விரித்துரைத்தலுமாம். பாசண்டம்-தொண்ணூற்றறுவகைச் சமயசாத்திரத் தருக்கக்கோவை என்பர். “பாசண்டத்துறையு மிவற்றுட் பலவாம், பேசிற்றொண்ணூற்றறுவகைப் படுமே”என்பது திவாகரம். இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றவனாகலின் மகாசாத்திரன் என்பது இவற்குப் பெயராயிற்று என்பர். கிடந்தாளுக்கு-கிடந்தாளை: உருபு மயக்கம்.
௧௬-௨௨. ஏசும் படிஓர் இளங்கொடியாய் ஆசுஇலாய்
செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம்கொடார்
பொய்உரையே அன்று பொருள்உரையே கையிற்
படுபிணம்தா என்று பறித்துஅவள்கைக் கொண்டு
சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்குஇருளில் சென்றுஆங்கு இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி
மடியகத்து இட்டாள் மகவை,
ஏசும்படி ஓர் இளங் கொடியாய்-பிறரைப் பழிக்கும் வடிவையுடையதொரு பெண்வடிவாய் தோன்றிப் பாடு கிடந்தாளை நோக்கி, ஆசு இலாய்-குற்றமற்றவளே, செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார்-செய்யப்பட்ட தவமுடையரல்லார்க்கு, பொய் உரை அன்று பொருள் உரையே-இது பொய்யுரை அன்று மெய்யுரையே எனச்சொல்லி, கையிற்படு பிணம் தர என்று-கையினுள்ள குழவி இறந்த பிணத்தைப் பார்ப்பதற்குத் தாராயென்று, பறித்து அவள் கைக்கொண்டு-அவள் கையினின்றும் பறித்து, சுடுகாட்டுக் கோட்டத்து-சக்கரவாளக் கோட்டத்தில், தூங்கு இருளிற் சென்று-செறிந்த இருளிற் போய், ஆங்கு இடு பிணம் தின்னும்-அங்கே குழியிலிடும் பிணங்களைத் தின்னும், இடாகினிப் பேய்-இடாகினிப் பேயானவள், வாங்கி மடியகத்து இட்டாள் மகவை-அக்குழவியை வாங்கி வயிற்றிலே இட்டாள்;
படி-வடிவு. இளங்கொடி-பெண். ஏசும்படி-இகழும்படி என்றுமாம். பொருள்-மெய்ம்மை. சுடுகாட்டுக் கோட்டம்-சக்கரவாளக் கோட்டம்; இதன் வரலாறு மணிமேகலையிற் சக்கரவாளக் கோட்டமுரைத்த காதையாலறியப்படும். தூங்கு இருள்-யாவரும் துயிலுமிருளுமாம். மடி-வயிறு என்னும் பொருட்டாதலை, “படியை மடியகத் திட்டான்”என்பதனாலும் அறிக. மடியகத்திட்டாள்-விழுங்கினாள் என்றபடி. கோட்டத்து இருளிற்சென்று தின்னும்பேய் இளங்கொடியாய்த் தோன்றி, வரங்கொடார் பொருளுரையே எனச் சொல்லி, தாவென்று பறித்து வாங்கி அம் மகவை மடியகத்திட்டாள் என்க. பேய் இளங் கொடியாய் இருளிற் சென்று என்றுரைத்தலுமாம். பறித்தாள் கைக்கொண்டு என்பதும் பாடம்.
௨௨-௮. இடியுண்ட
மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அச்சாத்தன்
அஞ்ஞைநீ ஏங்கி அழல்என்று முன்னை
உயிர்க்குழவி காணாய்என்று அக்குழவி யாய்ஓர்
குயில்பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்புஇன்றி
மாயக் குழவி எடுத்து மடித்திரைத்துத்
தாய்கைக் கொடுத்தாள்அத் தையலாள், தூய
இடியுண்ட மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு-அப்பொழுது இடிக்குரல் கேட்ட மயில் அகவுமாறுபோல ஏங்கியழுகின்றவளை நோக்கி, அச்சாத்தன்-அந்தச் சாத்தன் என்னும் தெய்வம், அஞ்ஞை-அன்னாய், நீ ஏங்கி அழல்என்று-நீஏங்கி அழாதொழி என்று கூறி, முன்னை உயிர்க்குழவி காணாய் என்று அக்குழவியாய் ஓர் குயிற்பொதும்பர் நீழல் குறுக-நீ செல்லும்வழி முன்னர்க் குயில்களையுடைய ஒரு மரச் செறிவின் நீழலில் உயிருடன் கிடக்கும் குழவியைக் காண்பாயென்று தான் அக்குழவியாய் அவ்விடத்துச் சென்று கிடப்ப, அயிர்ப்பு இன்றி மாயக் குழவி எடுத்து மடித்திரைத்து-ஐயமின்றி அவ்வஞ்சகக் குழவியைத் தன் குழவியென்றெடுத்து வயிற்றிலணைத்துக் கொடுபோய், தாய் கைகொடுத்தாள் அத்தையலாள்-அவள் தாயின் கையிற் கொடுத்தாள்;
அஞ்ஞை-அன்னை; அண்மை விளி. அழல்-அழாதே. முன்னை-வழி முன்னர்; பழைய குழியென்றுமாம். அச்சாத்தன் அக்குழவியாய்க் குறுக அத் தையலாள் எடுத்துக் கொடுத்தாள் என்க.
௨௮-௩௨. மறையோன்பின் மாணியாய் வான்பொருள் கேள்வித்
துறைபோய் அவர்முடிந்த பின்னர் இறையோனும்
தாயத்தா ரோடும் வழக்குஉரைத்துத் தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள்
தூய மறையோன் பின் மாணியாய்-இருமரபுந் தூய மறையோனுக்குப் பின் செல்லும் பிரமசாரியாய், வான் பொருட் கேள்வித்துறை போய்-சிறந்த கல்வியிலும் கேள்வியிலும் துறை போகி, அவர் முடிந்த பின்னர்-தந்தை தாயர் இறந்த பின்பு, இறையோனும்-குழவியாய் வந்த சாத்தனும், தாயத்தாரோடும் வழக்குரைத்து-தன் ஞாதிகளோடும் வெல்வழக்குரைத்து, தந்தைக்கும் தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து-தந்தை தாயர்க்குச் செய்ய வேண்டிய நீர்க்கடன் முதலியவற்றைச் செய்து முடித்து, மேய நாள்-தன் மனைவியோடே கூடி வாழ்ந்த பின் ஒரு நாளில் ;
வான்பொருள் – கல்வி. அவர் - தந்தையும் தாயரும். தாயர் என்றார் மாலதியையுங் கூட்டி. வழக்குரைத்து எனவே, தன் மனைவிக்குப் பொருட்குறைபாடில்லாமற் செய்து என்பதாயிற்று. இறையோனும் மாணியாய்த் துறைபோய் அவர் முடிந்த பின்னர்க் கடன் கழித்து வழக்குரைத்து மேவியபின் ஓர் நாள் என்க. மேவினாள் என்று பாடங் கொண்டு தன்னை மேவினவள் என்றுரைப்பர் அரும்பதவுரையாசிரியர்.
௩௩-௬. தேவந்தி என்பாள் மனைவி அவளுக்குப்
பூவந்த உண்கண் பொறுக்கென்று மேவித்தன்
மூவா இளநலம் காட்டிஎம் கோட்டத்து
நீவா எனஉரைத்து நீங்குதலும்,
தேவந்தி என்பாள் மனைவி அவளுக்கு-தன் மனைவியாகிய தேவந்தி யென்று பெயர் கூறப்படும் அவளுக்கு, பூ வந்த உண் கண் பொறுக்கென்று-பூவின்றன்மையுடைய மையுண்ட கண் இதனைப் பொறுப்பதாக என்று நிருமித்து, மேவி-பின்பு அவளைப் பொருந்தி, தன் மூவா இள நலம் காட்டி-தனது என்றும் மூத்தலில்லாத இளைய அழகினை வெளிப்படுத்தி, எம் கோட்டத்து நீ வா என உரைத்து நீங்குதலும்-நீ எமது கோட்டத்திற்கு வாவெனச் சொல்லி நீங்கினானாக;
மக்கள்கண் தெய்வ யாக்கையைக் காணப் பொறாதாகலின் இவள் கண் பொறுக்க வென்று விதித்தனன். தன் மூவா இளநலம்-தனது தெய்வ யாக்கையின் நலம்; “மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி” என்றார் திருமுருகாற்றுப் படையினும். சாத்தன் தேவந்தியுடன் எட்டி யாண்டு வாழ்ந்து, பின்பு இங்ஙனம் நீங்கினன் என மேல் வரந்தரு காதையுட் கூறப்பட்டுள்ளது.
௩௬-௪0. தூமொழி
ஆர்த்த கணவன் அகன்றனன் போய்எங்கும்
தீர்த்தத் துறைபடிவேன் என்றுஅவனைப் பேர்த்துஇங்ஙன்
மீட்டுத் தருவாய் எனஒன்றன் மேல்இட்டுக்
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள்
தூமொழி-தூய மொழியினையுடையளாய தேவந்தி, ஆர்த்த கணவன்-எனது நெஞ்சினைப் பிணித்த கணவன், அகன்றனன் போய் எங்கும் தீர்த்தத் துறை படிவேன் என்று- தீர்த்தத் துறைகளெங்கும் போய்த் தீர்த்தமாடுவேன் என்று என்னைவிட்டு நீங்கினன்; அவனைப் பேர்த்து இங்ஙன் மீட்டுத் தருவாய் என-அவனை மறித்தும் இவ்விடத்தே அழைத்துத் தருவாயென, ஒன்றன்மேல் இட்டு-ஒரு பெயரிட்டுக் கொண்டு, கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள்-அவன் கோயிலை நாடோறும் வழிபடுதலைக் கடனாகக் கொண்டிருப்பவள்;
௪0-௪. வாட்டருஞ்சீர்க்
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறைஉண்டுஎன்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று
பெறுக கணவனோடு என்றாள்,
வாட்டருஞ்சீர்-குறைதலில்லாத புகழையுடைய, கண்ணகி நல்லாளுக்கு-கண்ணகியாகிய நங்கைக்கு, உற்ற குறையுண்டு என்று – கணவன் பிரிதலால் உற்றதொரு துன்பமுண்டென்று, எண்ணிய நெஞ்சத்து இளையளாய்-நினைந்த நெஞ்சின் வருத்தத்தையுடையளாய், நண்ணி-கோயிலை யடைந்து, அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்-அறுகு முதலியவற்றை இவள் கணவனைப் பெறல்வேண்டுமெனத் தூவி வழிபட்டு, சென்று-கண்ணகிபாற் போய், பெறுக கணவனோடு என்றாள் - கணவனைப் பெறுவாயாகவென வாழ்த்தினாள்;
வாடு வாட்டென விகாரமாயிற்று. வாடுதல் குறைதல்; பிறராற் கெடுத்தற்கரிய என்றுமாம். இனைதல் – வருந்துதல்; இனைதல் இனையென்றாயிற்று; விகாரம். கணவனோடு: வேற்றுமை மயக்கம். கண்ணகிபாற் சென்று நண்ணித் தூவிப் பெறுக வென்றாள் எனினுமமையும்.
௪௪-௫௪. பெறுகேன்
கடுக்கும்என் நெஞ்சம் கனவினால் என்கை
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தன்மேல்
கோவலற்கு உற்றதுஓர் தீங்குஎன்று அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனோடு உற்ற உறுவனொடு யான்உற்ற
நல்திறம் கேட்கின் நகைஆகும்,
பெறுகேன்-நீ இங்ஙனம் கூறுதலால் பெறுவேனாயினும், கடுக்கும் என் நெஞ்சம் கனவினால்-யான் உற்றதொரு கனவினால் என் நெஞ்சம் ஐயுறுகின்றது; அக்கனவு என்னையெனின், என் கைபிடித்தனன் போய்-என் கொழுநன் என்னைக் கையைப் பற்றி அழைத்துப் போக, ஓர் பெரும் பதியுட்பட்டேம்-யாங்கள் ஒரு பெரிய பதியின்கட்புக்கேம், பட்ட பதியில்-அங்ஙனம் புக்க பதியிலே, படாதது ஒரு வார்த்தை இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்றன்மேல்-எங்கட்கு ஏலாததொரு பழிச்சொல்லை அவ்வூரார் இடுதேளிடுமாறுபோல் என்மேல் போட்டனர்; கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு-அப் பழிமொழியால் கோவலற்கு ஒரு துன்பமுண்டாயிற்றென்று பிறர் சொல்ல அதனைக் கேட்டு, காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்-அவ்வூரரசன் முன்னர் யான் சென்று வழக்குரைத்தேன் ; காவலனொடு ஊர்க்கு உற்ற தீங்கு ஒன்றும் உண்டால்-அதனால் அவ் வரசனோடு அவ்வூர்க்கு உற்றதொரு தீங்குண்டு; உரையாடேன் – அது தீக்கனாவாதலால் நினக்கு அதனை உரையேன்; தீக்குற்றம் போலும் செறிதொடீஇ-செறிந்த தொடியினை யுடையாய், அப்பொழுது கடியதொரு குற்றம் உளதாயிற்று; தீக்குற்றம் உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற-அத் தீய குற்றத்தை யுற்ற என்னோடு பொருந்திய மேலோனுடன் யான் பெற்ற, நற்றிறம் கேட்கின் நகையாகும்-நற்பேற்றினை நீ கேட்பாயாயின் அது நினக்கு நகையைத் தரும் (என-என்று சொல்ல), கடுக்கும்-ஐயுறும்; கடியென்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்தது. கனவில் என் கைப் பிடித்தனன் போக எனலுமாம். இடு தேளிடுதல்-தேளல்லாத தொன்றை மறைய மேலே போகட்டு அஞ்சப் பண்ணுதல். என்றன், தன் - அசை. கோவலன் சிலம்பு கவர்ந்தான் என்ற பழிச்சொல்லைத் தானே சுமப்பதாகக் கொண்டு என்றன்மேல் இட்டனர் என்றாள். என்று-என்று சொல்ல; சொல்ல என ஒரு சொல் வருவிக்க. அரசன் முன் செல்லாதேன் சென்று வழக்குரையாதேன் வழக்குரைத்தேன் என்றாளென்க. காவலனொடு, ஒடு -எண்ணொடு: வேறுவினை ஒடுவுமாம். தீங்கு-அரசன் இறத்தலும், ஊர் எரியுண்ணலும். “உரையார், இழித்தக்க காணிற் கனா” என்பாராகலின், உரையாடேன் என்றாள். தீக்குற்றம்-முலை திருகி யெறிதல். உறுவன்-மிக்கோன், கோவலன். நற்றிறம்-இருவரும் துறக்கம் புகுதல். இது கிட்டாதென்று நகையாகும் என்றாள். என வென ஒரு சொல் வருவித்து நகையாகுமென என்றுரைக்க.
௫௪-௬௪. பொற்றொடீஇ
கைத்தாயும் அல்லை கணவற்கு ஒருநோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக்
கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்
மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்
பீடுஅன்று எனஇருந்த பின்னரே,
பொற்றொடீஇ-பொன்னாலாய தொடியினை யுடையாய், கைத்தாயும் அல்லை – நீ அவனால் வெறுக்கப்பட்டாயுமில்லை, கணவற்கு ஒரு நோன்பு பொய்த்தாய் பழம் பிறப்பில்-முற்பிறப்பில் நின் கணவன் பொருட்டுக் காக்க வேண்டியதொரு நோன்பு தப்பினாய், போய்க் கெடுக-அதனால் உண்டாய தீங்கு கெடுவதாக, உய்த்துக் கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில்-காவிரிதன் நீரைக் கொண்டு சென்று கடலோடு எதிர்த்து அலைக்கும் சங்கமுகத்தயலதாகிய, மடல் அவிழ் நெய்தல் அம் கானல்-பூவின் இதழ் விரியும் நெய்தனிலத்துக் கானலிடத்தே, தடம்உள சோமகுண்டம் சூரிய குண்டம்-சோம குண்டம் சூரிய குண்டம் என்னும் பெயரையுடைய இரண்டு பொய்கைகள் உள்ளன; துறை மூழ்கி-அவற்றின் துறைகளில் மூழ்கி, காமவேள் கோட்டம் தொழுதார்-மன்மதன் கோயிலையடைந்து அவனை வணங்கினாராயின், கணவரொடு தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்-மகளிர் இவ்வுலகத்திலே தம் கணவரோடும பிரியாதிருந்து இன்பமுறுவர், போகம்செய் பூமியினும் போய்ப் பிறப்பர்-மறுமையிலும் போகபூமியிற் போய்ப் பிறந்து கணவரோடும் பிரிவின்றி இன்பம் நுகர்வர், யாம் ஒரு நாள் ஆடுதும் என்ற் அணீயிழை- அவற்றுள் யாமும் ஒருநாள் ஆடக்கடவேம் என்று கூறிய தேவந்திக்கு, அவ் ஆயிழையாள் பீடு அன்று என இருந்த பின்னரே-கண்ணகி அங்ஙனம் துறை மூழ்கித் தெய்வந் தொழுதல் எங்கட்கு இயல்பன்று என்று சொல்லி இருந்தவளவிலே;
பொய்த்தாயாகலின் தீங்குமிக்கது அதுவுங் கெடுக என்றும், போய்ப் பிறந்து கணவரொடும் இன்புறுவர் ஆதலால் என்றும் விரித்துரைக்க. இவ்வுலகத்து இன்புறலையும் போகபூமியிற் போய்ப் பிறத்தலையும் குண்டமிரண்டிற்கும் நிரனிறை யாக்கலுமாம். பட்டினப்பாலையிலும் இவை “இருகாமத் திணையேரி”எனக் கூறப்பட்டன. கற்புடை மகளிர் கணவனையன்றிப் பிற தெய்வத்தை வணங்குதல் இயல்பன்றென்பது,
“தெய்வந் தொழாஅள் கொழுநற்றொழு தெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.”
“சாமெனிற் சாத னோத றன்னவன் றணந்த காலைப்
பூமனும் புனைத லின்றிப் பொற்புடன் புலம்ப வைகிக்
காமனை யென்றுஞ் சொல்லார் கணவற்கை தொழுது வாழ்வார்
தேமலர்த் திருவொடொப்பார் சேர்ந்தவன் செல்ல றீர்ப்பார்.”
என்பவற்றா னறியப்படும்.
௬௪-௬. நீடிய
காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம்
கோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள்,
நீடிய காவலன் போலும்-பெருமையுடைய நம் அரசன் போலும், கடைத்தலையான் வந்து-வந்து நம் வாயிலிடத் தானாயினான், நம் கோவலன் என்றாள் ஓர் குற்றிளையால்-அவன் நம் கோவலனே என்றாள் ஒரு குறுந்தொழில் செய்யும் இளையவள்;
தூரத்தே பார்த்துக் காவலன் போலுமென ஐயுற்று அவன் அணுகினவிடத்து ஐயம் தீர்ந்து கோவலன் என்றாள். காவலன் போலும் கோவலன் வந்து நீடிய கடைத்தலையான் என்றுரைத்தலுமாம். குற்றினையாள் என்றாளென்க.
௬௬-௭௧. கோவலனும்
பாடுஅமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம்கண்டு, யாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுந் தருமெனக் கென்ன
கோவலனும்-அங்ஙனம் வாயிலிடத்தானான கோவலனும், பாடு அமை சேக்கையுட் புக்கு-பெருமையமைந்த படுக்கையிடத்தே புக்கு, தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தம் கண்டு-தன் காதலியின் வாட்டமுற்ற மேனியும் வருத்தமும் கண்டு, யாவும்-எல்லாம், சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி-வஞ்சம் பொருந்திய கொள்கையையுடைய பொய்த்தியோடுங் கூடியொழுகினமையால், குலம் தருவான் பொருட் குன்றம் தொலைந்த-நம் குலத்திலுள்ளோர் தேடித் தந்த மலை போலும் பெரிய பொருட்குவையெல்லாம் கெட்டதனாலாய, இலம்பாடு – வறுமை, நாணுத்தரும் எனக்கு என்ன-எனக்கு நாணைத் தருகின்றது என்று கூற;
“மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர், கோலங் கொடியிடையார் தாங்கொள்ள” அக்காலத்தே வந்து சேக்கையுட் புக்கு என்றியைத் துரைக்க. சலம்-வஞ்சம், பொய். இலம்பாடு-இல்லாமை யுண்டாதல்; வறுமை. ‘கெட்டால் மதிதோன்றும்’ என்றதற்கேற்ப இன்று நாணுத்தருமென்றான்.
௭௨-௩. நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச்
சிலம்புள கொண்மெனச்
நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி (அவன் இங்ஙனம் கூறியதனை மாதவிக்குக் கொடுக்கும் பொருட் குறை பாட்டால் தளர்ந்து கூறினானாகக் கருதி) ஒளி பொருந்திய முகத்தே நன்மை பொருந்திய சிறிய முறுவலைத் தோற்றுவித்து, சிலம்பு உள கொண்மென-இன்னும் சிலம்பு ஓரிணை உள்ளன, அவற்றைக் கொண்மினென்றுரைக்க;
சிலம்புள என்றாள். இவை யொழிந்த கலனெல்லாம் தொலைதலால். கொண்ம்-கொள்ளும் என்பதன் ஈற்று மிசை யுகரம் மெய்யொடுங் கெட ளகரம் திரிந்தது.
௭௩-௯. சேயிழை கேளிச்
சிலம்பு முதலாகச் சென்ற கலனோ
டுலந்தபொரு ளீட்டுத லுற்றேன் மலர்ந்தசீர்
மாட மதுரை யகத்துச்சென்று என்னோடுஇங்கு
ஏடுஅலர் கோதாய். எழுகென்று நீடி
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.
சேயிழை கேள்-சேயிழையே இதனைக் கேள், இச் சிலம்பு முதலாக-நீ கூறிய இச் சிலம்பை நான் வாணிக முதலாகக் கொண்டு, சென்ற கலனோடு உலந்த பொருள் ஈட்டுதலுற்றேன்-முன்பு நான் வாங்கி யழித்தமையால் ஒழிந்த கலன்களையும் கெட்ட பொருளையும் தேடத் துணிந்தேன், மலர்ந்த சீர் மாட மதுரையகத்துச் சென்று-பரந்த புகழையுடைய மாடங்களையுடைய மதுரை யென்னும் பதியிடத்தே சென்று, என்னோடு இங்கு ஏடு அலர் கோதாய் எழுகென்று-இதழ்கள் விரி்ந்த கோதையையுடையாய் அதற்கு நீ இப்பொழுதே இங்கு நின்றும் என்னோடு புறப்படுவாயாக என்று கூறி, நீடி வினைகடைக் கூட்ட-முற்பிறப்பிற்றான் செய்த தீவினை நெடுங்காலம் நின்று நெஞ்சை ஒருப்படுத்த, வியம் கொண்டான் – அவ் வினையினது ஏவலைக் கொண்டான்; கங்குல்-இருளை, கனை சுடர்-ஞாயிற்றின் மிக்க ஒளி, கால் சீயாமுன்-அவ்விடத்தினின்றும் போக்குதற்கு முன் என்க.
நீடி-நெடுங்காலம் நின்று. வியம்-ஏவல். கால் இடம். சீத்தல்-போக்குதல்.மதுரையகத்துச் சென்று ஈட்டுதலுற்றேனென்றானென்க.
இது கலிவெண்பா
வெண்பாவுரை
காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க - மூதை
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.
காதலி கண்ட கனவு-கண்ணகி கண்ட கனவு. கரு நெடுங்கண் மாதவிதன் சொல்லை வறிதாக்க-கரிய நெடிய கண்களையுடைய மாதவியின் சொல்லைப் பயனின்றாக்க. மூதை வினைகடைக் கூட்ட-பழவினை நெஞ்சை ஒருப்படுத்த. வியம் கொண்டான் கங்குற் கனை சுடர் கால் சீயாமுன்-கங்குலைச் சுடர் போக்குதற்கு முன் அவ் வினையின் ஏவலைக் கொண்டான்.
இவட்கு மேற்கூட்ட மின்மையால் கருநெடுங்கண் என்றார். சொல்லை வறிதாக்குதல்-வேனிற் காதையில், காலை காண்குவம் என்ற சொல்லைப் பயனின்றாக்குதல்.
கனாத்திறமுரைத்த காதை முற்றிற்று.
----------------------
10. நாடு காண் காதை
{கோவலனும் கண்ணகியும் வைகறை யாமத்தே பிறரறியாதபடி புறப்பட்டு நகர் வாயிலைக் கடந்து, காவிரியின் சங்கமுகத் துறையையும் கழிந்து, வடகரை வழியாகச் சோலைகளினூடே மேற்றிசை நோக்கிச் சென்று ஒருகாத தூரங் கடந்து கவுந்தியடிகளின் தவப்பள்ளியிருக்கும் சோலையை அடைந்தனர். அப்பொழுது மெல்லியலாகிய கண்ணகி இடையும் அடியும் வருந்திக் குறுக வுயிர்த்து, ‘மதுரை மூதூர் யாதோ’ என வினவ, ‘நம் நாட்டிற்கு அப்பால் ஆறைங்காதமே அணியதுதான்’என்று கூறிக் கோவலன் நகுதல் செய்து சிறையாகத்திருந்த ஆருகத சமயத் தவ முதியாளாகிய கவுந்தியைக் கண்டு அடி தொழுது, தாங்கள் மதுரைக்குச் செல்வதனைக் கூற, அவளும் ‘மதுரையிலுள்ள பெரியோர்பால் அறவுரை கேட்டற்கும் அறிவனை ஏத்தற்கும் ஒன்றிய உள்ளமுடையேன்; ஆதலின் யானும் போதுவல்’என்று கூறி உடன்வர, மூவரும் குடதிசையில் வழிக்கொண்டு பலவகை வளங்களையும் ஒலிகளையும் கண்டும் கேட்டும் அவலந் தோன்றாது ஆர்வநெஞ்சமுடன் நாடோறும் காவதமல்லது கடவாராகி இடையிடையே பலநாள் தங்கிச் செல்வுழி ஒருநாள் ஆற்றிடைக் குறையாகிய சீரங்கத்தை அடைந்தனர். அடைந்தவர், அங்குள்ளதொரு சோலைக்கண் வந்தெய்திய சாரணரைத் தொழுது, அவர் கூறிய உறுதி மொழிகளைக் கேட்டுக் கவுந்தியடிகள் அருகதேவனை ஏத்திய பின்னர், மூவரும் ஓடத்திலேறிக் காவிரியின் தென்கரையை அடைந்து ஒரு பூம்பொழிலில் இருந்துழி, அவ்வழிப் போந்த ஒரு பரத்தையும் தூர்த்தனும் கண்ணகியையும் கோவலனையும் நோக்கி அடாத சொற்கூறி இகழ்ந்தனராகலின், கவுந்தியடிகள் அவர்களை நரிகளாகுமாறு சபித்துக் கோவலனும் கண்ணகியும் அவர்கட்கிரங்கி வேண்ட, அவர்களெய்திய சாபம் ஓராண்டில் நீங்குமாறு அருள் செய்தனர். பின்பு மூவரும் உறையூரை அடைந்தனர். (இக்காதையில் கோவலன் கண்ணகியை நோக்கிக் கவுந்தியடிகள் வழி கூறும் வாயிலாகச் சோணாட்டின் மருத வள மாண்பனைத்தும் அழகுபெறக் கூறப்பட்டுள்ளன. சாரணரும் கவுந்தியடிகளும் அருகதேவனை யேத்தும் உரைகளும் அறிந்து இன்புறற்பாலன.)}
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
கார்இருள் நின்ற கடைநாள் கங்குல்
ஊழ்வினைக் கடைஇ உள்ளம் துரப்ப
ஏழகத் தகரும் எகினக் கவரியும் 5
தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும்
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு,
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து, 10
பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி,
புலவுஊண் துறந்து பொய்யா விரதத்து 15
அவலம் நீத்துஅறிந்து அடங்கிய கொள்கை
மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்துப் 20
பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
நீர்அணி விழவினும் நெடுந்தேர் விழவினும்
சாரணர் வருஉம் தகுதிஉண் டாம்என
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகுஒளிச் சிலாதலம் தொழுதுவலம் கொண்டு, 25
மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி,
கலையி லாளன் காமர் வேனிலொடு
மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும்
பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் 30
இலவந் திகையின் எயில்புறம் போகி,
தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து, 35
காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி ஆங்கண்
இறும்கொடி நுசுப்போடு இனைந்துஅடி வருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல் உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க 40
மதுரை மூதூர் யாதுஎன வினவ,
ஆறுஐங் காதம்நம் அகல்நாட்டு உம்பர்
நாறுஐங் கூந்தல் நணித்துஎன நக்குத்,
தேமொழி தன்னொடும் சிறையகத்து இருந்த
காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும், 45
உருவும் குலனும் உயர்ப்பேர் ஒழுக்கமும்
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீர் என்னோ உறுக ணாளரின்
கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறுஎன,
உரையாட்டு இல்லை உறுதவத் தீர்யான் 50
மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன்.
பாடகச் சீறடி பரல்பகை உழவா
காடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
அரிதுஇவள் செவ்வி அறிகுநர் யாரோ
உரியது அன்றுஈங்கு ஒழிகஎன ஒழியீர் 55
மறஉரை நீத்த மாசுஅறு கேள்வியர்
அறஉரை கேட்டுஆங்கு அறிவனை ஏத்தத்
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவல் யானும் போதுமின் என்ற 60
காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி
அடிகள் நீரே அருளிதிர் ஆயின்இத்
தொடிவளைத் தோளி துயர்த்தீர்த் தேன்என,
கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும்பல கேண்மோ: 65
வெயில்நிறம் பொறாஅ மெல்இயல் கொண்டு
பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே,
மண்பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் 70
கையறு துன்பம் காட்டினும் காட்டும்,
உதிர்ப்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர்த்தேம் பழம்பகை முட்டினும் முட்டும்,
மஞ்சளும் இஞ்சியும் மயங்குஅரில் வலயத்துச்
செஞ்சுளைப் பலவின் பரல்பகை உறுக்கும். 75
கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ.
வயல்உழைப் படர்க்குவம் எனினே ஆங்குப்
பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஓட்டி
நீர்நாய் கெளவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின் 80
கலங்கலும் உண்டுஇக் காரிகை, ஆங்கண்
கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து
சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்திக்
குடங்கையின் கொண்டு கொள்ளவும் கூடும், 85
குறுநர் இட்ட குவளைஅம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி
அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்,
எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில் 90
பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழ்அடி ஒதுக்கத்து உறுநோய் காணின்
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,
வயலும் சோலையும் அல்லது யாங்கணும்
அயல்படக் கிடந்த நெறிஆங்கு இல்லை 95
நெறிஇருங் குஞ்சி நீவெய் யோளொடு
குறிஅறிந்து அவைஅவை குறுகாது ஓம்புஎன,
தோம்அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும்
காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு
மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகெனப் 100
பழிப்புஅருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்,
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக் 105
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓஇறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது
ஆம்பியும் கிழாரும் வீங்குஇசை ஏத்தமும் 110
ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லாக்
கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும் 115
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும்,
உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்திய 120
கழாஅமயிர் யாக்கைச் செங்கண் காரான்
சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ்பு உற்ற
குமரிக் கூட்டில் கொழும்பல் உணவு
கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரியக்
கருங்கை வினைஞரும் களமருங் கூடி 125
ஒருங்குநின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்,
கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்
தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து
சேறுஆடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச்
செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர் 130
வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்,
கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும், 135
அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்,
தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண்கனை முழவின் மகிழ்இசை ஓதையும்,
பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டுஆங்கு 140
ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்,
உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு
மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில்
மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை
இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து 145
மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை அன்றியும்,
பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும், 150
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையின் தோன்றும்
ஊர்இடை யிட்ட நாடுஉடன் கண்டு
காவதம் அல்லது கடவார் ஆகிப்
பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள்: 155
ஆற்றுவீ அரங்கத்து வீற்றுவீற்று ஆகிக்
குரங்குஅமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூநாறு ஒருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்
பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட 160
இலங்குஒளிச் சிலாதலம் மேல்இருந் தருளிப்
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்றப்,
பண்டைத் தொல்வினை பாறுக என்றே
கண்டுஅறி கவுந்தியொடு கால்உற வீழ்ந்தோர் 165
வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கில் தெரிந்தோன் ஆயினும்
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்,
கழிப்பெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்: 170
ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா
கடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் 175
அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் தேவன் சிவகதி நாயகன் 180
பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளி
இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்
குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான் 185
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன் விளங்குஓளி
ஓதிய வேதத்து ஒளிஉறின் அல்லது 190
போதார் பிறவிப் பொதிஅறை யோர்எனச்
சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல்
காவுந்தி யும்தன் கைதலை மேற்கொண்டு
ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக்கு அல்லதுஎன் செவியகம் திறவா, 195
காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது என்நா,
ஐவரை வென்றோன் அடியிணை அல்லது
கைவரைக் காணினும் காணா என்கண்,
அருள்அறம் பூண்டோ ன் திருமெய்க்கு அல்லதுஎன் 200
பொருள்இல் யாக்கை பூமியில் பொருந்தாது,
அருகர் அறவன் அறிவோற்கு அல்லதுஎன்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா,
மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதுஎன்
தலைமிசை உச்சி தான்அணிப் பொறாஅது 205
இறுதிஇல் இன்பத்து இறைமொழிக்கு அல்லது
மறுதிர ஓதிஎன் மனம்புடை பெயராது
என்றவன் இசைமொழி ஏத்தக் கேட்டுஅதற்கு
ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி
நிவந்துஆங்கு ஒருமுழம் நீள்நிலம் நீங்கிப் 210
பவம்தரு பாசம் கவுந்தி கெடுகென்று
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது
பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து,
கார்அணி பூம்பொழில் காவிரிப் பேர்யாற்று
நீர்அணி மாடத்து நெடுந்துறை போகி 215
மாதரும் கணவனும் மாதவத் தாட்டியும்
தீதுதீர் நியமத் தென்கரை எய்திப்
போதுசூழ் கிடக்கைஓர் பூம்பொழில் இருந்துழி
வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு
கொங்குஅலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர் 220
காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர்
ஆர்எனக் கேட்டுஈங்கு அறிகுவம் என்றே,
நோற்றுஉணல் யாக்கை நொசிதவத் தீர்உடன்
ஆற்றுவழிப் பட்டோ ர் ஆர்என வினவ,என்
மக்கள் காணீர் மானிட யாக்கையர் 225
பக்கம் நீங்குமின் பரிபுலம் பினர்என,
உடன்வயிற் றோர்க்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ ? கற்றறிந் தீர்எனத்,
தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க, 230
எள்ளுநர் போலும்இவர் என்பூங் கோதையை
முள்உடைக் காட்டின் முதுநரி ஆகெனக்
கவுந்தி இட்ட தவம்தரு சாபம்
கட்டியது ஆதலின், பட்டதை அறியார்
குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு 235
நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்
அறியா மைஎன்று அறியல் வேண்டும்
செய்தவத் தீர்நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீ ரோஎன, 240
அறியா மையின்இன்று இழிபிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்
முன்னை உருவம் பெறுகஈங்கு இவர்எனச்
சாபவிடை செய்து, தவப்பெருஞ் சிறப்பின் 245
காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும்
முறம்செவி வாரணம் முஞ்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்துஎன்.
(கட்டுரை)
முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும்
தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்து உதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதுர்ப் பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் 5
ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் 10
பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்
ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும்
தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும் 15
ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்
என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று. 20
(வெண்பா)
காலை அரும்பி மலரும் கதிரவனும்
மாலை மதியமும்போல் வாழியரோ - வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.
------------------------------
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
௧-௩. வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
கார்இருள் நின்ற கடைநாள் கங்குல்
வான்கண் விழியா வைகறை யாமத்து-உலகிற்குச் சிறந்த கண்ணாகிய ஞாயிறு தோன்றாத வைகறையாகிய யாமத்தின் கண், மீன் திகழ் விசும்பின் வெண்மதி நீங்க-மீன் விளங்கும் வானத்தினின்றும் வெள்ளிய திங்கள் நீங்கிற்றாக. கார்இருள் நின்ற கடை நாட் கங்குல்-கரிய இருள் இறுதிக்கண் நின்ற இராப்பொழுதில்;
வான்கண்-சிறந்த கண் ; காண்டற்குக் கருவியாகிய கண்ணொளியினும் காணப்படும் பொருளினும் ஞாயிற்றினொளி கலப்பி னன்றி ஒன்றையும் காணலாகாமையின் அதனைச் சிறந்த கண் என்றார். இனி, வான்கண்-விசும்பின் கண்ணாகிய ஞாயிறு என்றுமாம்; “மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக, இயங்கிய விருசுடர் கண்ணென”என்றார் பிறரும். இறைவன் கண்ணென்பாருமுளர். தோன்றா என்பதனைக் கண் என்றதற்கேற்ப விழியா என்றார். இருள் கடைநின்ற என மாறுக. இதனால் பூருவபக்க மென்பதாயிற்று.
ஈண்டு அடியார்க்கு நல்லார் அந்தச் சித்திரைத் திங்கட் புகுதி நாள் ஞாயிற்றுக்கிழமையும், மூன்றாம் பக்கமும் சோதியுமாம் என்றும், அத்திங்கள் இருபத்தெட்டிற் சித்திரையும் பூரணையும் கூடிய சனிவாரத்திற் கொடியேற்றி இருபத்தெட்டு நாளும் விழா நடந்ததென்றும், வைகாசி இருபத்தெட்டிலே முற்பக்கத்தின் பதின்மூன்றாம் திதியும் திங்கட்கிழமையும் கூடிய அனுடத்தில் கடலாடின ரென்றும், வைகாசி இருபத்தொன்பதில் முற்பக்கத்தின் பதினாலாந் திதியில் செவ்வாய்க்கிழமையும் கேட்டையும் பெற்ற நாசயோகத்தில் வைகறைப் பொழுதினிடத்து நிலவுபட்ட அந்தரத் திருளிலே கோவலன் மதுரைக்குப் புறப்படலாயினன் என்றும் கூறுகின்றார். அவர் “சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென”என முன்னரும் “ஆடித் திங்கட் பேரிருட் பக்கத் தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத் தொள்ளெரியுண்ண, உரைசால் மதுரையோ டரசுகே டுறுமெனும் உரையுமுண்டே”எனப் பின்னரும் போந்த குறிப்புக்களையும், மணிமேகலையில் “மேலோர் விழைய விழாக் கோளெடுத்த, நாலேழ் நாளினும்” “தேவரு மக்களு மொத்துடன் றிரிதரும் நாலேழ் நாளினும்”எனக் கூறப்பட்டிருப்பவற்றையும் பற்றுக் கோடாகக் கொண்டும் கோவலன் புறப்பட்ட நாள் தீயதாதல் வேண்டுமென்னும் கருத்துடனும் இவ்வாறு ஊகித்தெழுதினாராவர். ஆயின் இவையெல்லாம் கணிதமுறையுடன் கூடிய உண்மைகளெனத் துணிதல் சாலாது. வைகாசித் திங்களில் முற்பக்கத்தின் பதின்மூன்றாந் திதியும் அனுடமும் கூடுதலென்பதே இயற்கையன்றாகும். இவையெல்லாம் ஆராய்ந்து துணிதற்குரியன.
௪. ஊழ்வினைக் கடைஇ உள்ளம் துரப்ப
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப-முன்னைத் தீவினையானது கடாவுதலால் உள்ளம் தன்னைச் செலுத்துதலான்;
௫-௮. ஏழகத் தகரும் எகினக் கவரியும்
தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும்
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு,
ஏழகத் தகரும்-ஆட்டுக் கிடாயும், எகினக் கவரியும்-கவரியாகிய மானும், தூமயிர் அன்னமும்-தூய சிறகினையுடைய அன்னமும் ஆகிய இவை, துணை எனத் திரியும்-தம்முள் இனமல்லவாயினும் இனம்போல ஒருங்கு கூடித் திரியும், தாழொடு குயின்ற தகைசால் சிறப்பின்-தாழொடு பண்ணப் பெற்ற பெருமை பொருந்திய சிறப்பினையுடைய, நீள் நெடுவாயில் நெடுங்கடை கழிந்து-மிகப் பெரிய கதவினையுடைய நெடிய இடை கழியைக் கடந்து, ஆங்கு-அப்பொழுதே;
ஏழகத் தகர், எகினக் கவரி யென்பன இருபெயரொட்டுப் பண்புத் தொகை. எகினம்-ஈண்டு மான். ”நெடு மயிரெகினத் தூநிற வேற்றை, குறுங்கா லன்னமொ டுகளு முன்கடை” என்றார் ஆசிரியர் நக்கீரனாரும், குயின்ற வாயில் என்க. ஈண்டு வாயில் என்றது கதவினை; ஆகுபெயர். தாழொடு குயின்ற என்றது போர்க்கதவாகலின் பின்பு நெகிழாவண்ணம், பண்ணுகின்றபோதே உடன் பண்ணிய என்றபடி.
௬-க0. அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து,
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த-அழகு விளங்கும் அரவணையின் மீது அறிதுயிலைப் பொருந்திய, மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து-நீலமணிபோலும் நிறமுடையோனாகிய திருமாலின் கோயிலை வலம் செய்து நீங்கி;
மணிவண்ணன் என்பது பெயருமாம். அறிதுயில் – யாவற்றையும் அறிந்துகொண்டே துயிலுதல்; துயிலுதல்-பதைப்பின்றி யிருத்தல் ; இதனை யோக நித்திரை யென்பர்.
௧௧-௪. பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி,
பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி-உயர்ந்த ஐந்து பரிய கிளையினையும் பசிய இலையினையு முடையமாபோதியின், அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி-எழில் விளங்கும் நிழலிலெழுந்தருளிய புத்த தேவன் அருளிச் செய்த ஆகமத்தை, அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்-விசும்பியங்குவோராகிய சாரணர் மறைய இருந்து ஓதி யாவர்க்கும் பொருள் விளங்கக் கூறப்படும், இந்திர விகாரம் ஏழ் உடன் போகி-இந்திரன் ஆக்கிய விகாரங்களேழினையும் முறையே கண்டு அவற்றைக் கழிந்து போய்;
போதி-போதத்தையுடையது; அரசு. போதம்-ஞானம் அரசு என்னும் பெயரும் அதன் தலைமையை யுணர்த்தும். புத்தன் அரசமரத்தடியில் ஞானம் பெற்றதும், “யான் தருக்களில் அரசாகின்றேன்” எனக் கண்ணன் பகவற்கீதையிற் கூறியதும், பிறவும் இதன் பெருமைக்குச் சான்றாகும். திருமொழி – ஆகமம்; ஆகுபெயர். அறைந்தனர் சாற்றுதல் - மூலங்கூறிப் பொருளுரைத்தல். அறைந்தனர்- முற்றெச்சம். விகாரம் நினைவினா னாக்குதல்.
௧௫-௨௫. புலவுஊண் துறந்து பொய்யா விரதத்து
அவலம் நீத்துஅறிந்து அடங்கிய கொள்கை
மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்துப்
பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
நீர்அணி விழவினும் நெடுந்தேர் விழவினும்
சாரணர் வருஉம் தகுதிஉண் டாம்என
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகுஒளிச் சிலாதலம் தொழுதுவலம் கொண்டு,
புலவூண் துறந்து-புலாலாகிய ஊண் உண்ணுதலை விலக்கி, பொய்யாவிரதத்து-பொய் கூறாமையாகிய விரதத்தொடு பொருந்தி, அவலம்நீத்து-அழுக்காறு அவா முதலியவற்றைக் கைவிட்டு ; அறிந்து-பொருணூல்களை உணர்ந்து, அடங்கிய கொள்கை-ஐம்புலன்களும் அடங்கிய கொள்கையினை உடையராய், மெய்வகை உணர்ந்த வி்ழுமியோர் குழீஇய-உண்மைத் திறனை அறிந்த சீரியோர் கூடிய, அருகத்தானத்து-ஸ்ரீகோயிலில், ஐவகை நின்ற சந்தி ஐந்தும் தம்முடன் கூடிவந்து தலைமயங்கிய, வான்பெரு மன்றத்து-பஞ்ச பரமேட்டிகள் நிலைபெற்ற ஐந்து சந்தியும் தம்முட் கூடி வந்து கலந்த சிறந்த பெரிய மன்றத்தின் கண், பொலம்பூம் பிண்டி உலங்கிளர் கொழுநிழல்-பொற்பூவினையுடைய அசோகின் எழில் விளங்கும் கொழுவிய நிழலின்கண், நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினும் சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என-திரு அபிடேக விழா நாளினும் தேர்த் திருநாளிலும் சாரணர் வரத் தகுமென்று, உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகு ஒளிச் சிலாதலம் தொழுது வலம்கொண்டு-சாவகர் யாவரும் கூடியிடப் பெற்ற விளங்காநின்ற ஒளியினையுடைய சிலா வட்டத்தை வணங்கி வலம் செய்து;
புலவு ஊண்-புலாலோடே உண்ணும் உணவுமாம். அவலம்-அழுக்காறு அவா முதலியன. ஐவகை என்றது பஞ்ச பரமேட்டிகளை; அவர்களாவார்: அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள் என இவர். பொலம்-பொன். உலக நோன்பிகள்-உலகவழக்கொடு பொருந்தின விரதிகள். அவர் இல்லறத்தினையுடைய சாவகர். விழுமியோர் குழீஇய அருகத் தானத்து மன்று எனவும், ஐவகை நின்ற சந்தி எனவும் மாறுக. ‘நீரணி விழவு’ என்பதற்கு ‘விழு அயனாதிகள்’ என்பர் அடியார்க்கு நல்லார். மன்றிற் பிண்டி நீழலில் இட்ட சிலாதலமெனச் சேர்க்க.
௨௬-எ. மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி,
மலை தலைக் கொண்ட பேர் யாறு போலும் உலக இடை கழி ஒருங்குடன் நீங்கி- மலையிடத்துத் தலைப்பினையுடையவொரு பெரிய யாறு போன்ற உலகின் கண்ணுள்ளோர் போக்குவரவு செய்தற்கமைந்த ஊர்வாயிலை அக்காலத்துச் செல்வாரொடு கலந்து சென்று அதனை விட்டு நீங்கி;
உலகின்கண்ணுள்ளோர் பலரும் புகார்க்கண் வாணிகத்தின் பொருட்டு வந்து சேர்வாராகலானும், எத்துணையும் பெரியதொரு நகரமாகலானும் புகார் நகரினை உலகமே போலக்கொண்டு அதன் வாயிலை உலக இடைகழி யென்பர்; இவ்வாறே அதிலுள்ள அம்பலத்தை உலக அறவியென்று கூறுவர். இனி, “மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும்”என்பதனால் உலகின் ஒரு பகுதியை உலகமென்னலும் பொருந்தும். தெருவொழுங்கிற்கு இடையே கழிதலின் இடைகழி யெனப்பட்டது. மலையும் யாறும் முறையே கோபுர வாயிலுக்கும் தெருவிற்கும் உவமங்களாம்.
௨௮-௩௧. கலையி லாளன் காமர் வேனிலொடு
மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும்
பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்
கலையிலாளன் காமர் வேனிலொடு மலயமாருதம் மன்னவற்கு இறுக்கும்-சோழ அரசனுக்குக் காமன் அழகிய வேனிலொடு பொதியிற் றென்றலையும் திறையிடுகின்ற, பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் இலவந்திகையின் எயிற்புறம் போகி-பல மலர்களை நிரைத்த நல்ல மரநிழலையுடைய இலவந்திகையினது மதிலின் புரத்தே சென்று; கலையிலாளன்-அநங்கன்; மன்மதன். பந்தர்-நிழல். இலவந்திகை-நீராவியைச் சூழ்ந்த வயந்தச் சோலை; அஃது அரசனும் உரிமையுமாடுங் காவற்சோலை. இதனை நீராவி என்பாருமுளர். மன்னவற்கு வேனிலொடு மாருதத்தினை இறுக்கும் இலவந்திகை எனக் கூட்டுக. இனிப் பந்தர் என்பதற்குச் சோலை எனப் பொருள் கொண்டு, சோலையினையும் நீராவியினை யுமுடைய எயில் எனலுமாம்.
௩௨-௩. தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக் காவிரி வாயிற் கடைமுகம் கழிந்து-தாழ்ந்த சோலை இருமருங்கிலும் சூழ்ந்த புனலாட்டிற்குச் செல்லும் பெரிய நெறியினையுடைய காவிரிக் கரையிடத்துச் சங்க முகத்துறை வாயிலையும் நீங்கி;
காலையில் நாணீராடுவோர் பிறர்முகம் நோக்காது போதற்கு மறைந்து செல்வர்; இவரிருவரும் அங்ஙனமே சென்றனர் என்பதற்குக் கடைமுகங் கழிந்தென்றார்.
௩௪. குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி
குடதிசைக் கொண்டு-மேற்கு நோக்கி;
௩௪-௫. வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து,
கொழும் புனற் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து-வளவிய நீரினையுடைய காவிரியின் பெரிய வடகரைக்கணுள்ள சோலையினைக் கடந்து;
நுழைதல்-கழிதல். அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின் நுழைந்து போய் எனலுமாம்.
௩௬-௪௧. காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி ஆங்கண்
இறும்கொடி நுசுப்போடு இனைந்துஅடி வருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல் உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க
மதுரை மூதூர் யாதுஎன வினவ,
காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப் பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி ஆங்கண்-காதமெனப்படும் எல்லையினைக் கடந்து சென்று கவுந்தியடிகள் எழுந்தருளிய பள்ளியின் அயலதொரு பொலிவினையுடைய மரம் செறிந்த சோலைக்கண் பொருந்த அப்பொழுது, இறுங்கொடி நுசுப்போடு இனைந்து அடிவருந்தி நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து-நறிய பலவான கூந்தலையுடைய கண்ணகி இற்று விடும் எனத்தக்க கொடி போன்ற இடையும் அடியும் மிகவருந்தி இளைப்பானே பலவாகக் குறுக மூசசெறிந்து, முதிராக்கிளவியின் முள் எயிறு இலங்க மதுரை மூதூர் யாதென வினவ-முற்றாத மழலைச் சொற்களானே கூரிய பற்கள் விளங்க மதுரை என்னும் பழையவூர் எதுவோதான் என்று கோவலனைக் கேட்ப;
பொருந்தி என்பதனைப் பொருந்த எனத் திரிக்க. நின்றாங்கே பொருள் கூறலுமாம். காவதம்-காதம்; பகுதிப்பொருள் விகுதி. கண்ணகி வெயினிறம் பொறா மெல்லியலாகலின் தான் சிறிது நெறியே சென்றிருப்பினும் பெரிது சென்றனளாக எண்ணுதலின் மதுரை மூதூர் யாதென வினவினளென்க. இராமனுடன் வனத்திற்கேகலுற்ற சீதை அயோத்தியின் மதில் வாயிலைக் கடக்குமுன் காடு எவ்விடத்தது என்று வினாவினாளாகக் கம்பர் கூறிய,
“நீண்டமுடி வேந்தனரு ளெய்திநிறை செல்வம்
பூண்டதனை நீங்கிநெறி போதலுறு நாளின்
ஆண்டநக ராரையொடு வாயிலக லாமுன்
யாண்டையது கானென விசைத்தது மிசைப்பாய்”
என்னுஞ் செய்யுள் இதனோடு ஒத்து நோக்கி இன்புறற்பாலது.
௪௨-௩. ஆறுஐங் காதம்நம் அகல்நாட்டு உம்பர்
நாறுஐங் கூந்தல் நணித்துஎன நக்குத்,
ஆறைங் காதம் நம் அகல்நாட்டும்பர் நாறு ஐங்கூந்தல் நணித்து என நக்கு – கோவலன் நீ வினவிய மதுரை நமது அகன்ற நாட்டிற்கு அப்பால் ஆறைந்து காதத்துள்ளது. இனி அண்ணிது என்று கூறி நகைத்து;
முப்பது காதமென்னும் பொருள் மறைந்து, ஆறு அல்லது ஐந்து காதம் என்னும் பொருள் தோன்ற ‘ஆறைங்காத’மென்றான். நகை-துன்ப நகை; பிறர்கட் டோன்றிய பேதைமை காரணமாகத் தோன்றிய நகையுமாம். கூந்தல்,விளி.
௪௪-௫. தேமொழி தன்னொடும் சிறையகத்து இருந்த
காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும்,
தே மொழி தன்னொடும் சிறையகத்து இருந்த காவுந்தி ஐயையைக் கண்டு அடி தொழலும்-தேனையொத்த மொழியினையுடைய கண்ணகியொடும் சென்று பள்ளியகத்திருந்த கவுந்தியடிகளைக் கண்டு அடிவணங்குதலும்;
சிறை-தவவேலி என்பர் அடியார்க்குநல்லார். ஐயை-ஐயன் என்பதன் பெண்பால். கழிந்து கழிந்து போகிக் கொண்டு நீங்கிப் போகிக் கழிந்து நுழைந்து நடந்து பொருந்த நறும்பல் கூந்தல் இனைந்து வருந்தி உயிர்த்து வினவ நணித்தென நக்குக் கண்டு அடி தொழலு மென்க.
௪௬-௯. உருவும் குலனும் உயர்ப்பேர் ஒழுக்கமும்
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீர் என்னோ உறுக ணாளரின்
கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறுஎன,
உருவும் குலனும் உயர்பேர் ஒழுக்கமும்-அழகும் உயர்குடிப் பிறப்பும் உயர்விற்குக் காரணமாய பெருமை பொருந்திய ஒழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர்-அருக தேவனின் ஆகமக் கூற்றினின்றும் தப்பாத விரதமும் ஆகிய இவற்றை உடைய நீங்கள், என்னோ உறுகணாளரிற் கடை கழிந்து இங்ஙனம் கருதியவாறு என-தீவினையாளரைப்போல நும்மிடத்தை விட்டு நீங்கி இவ்வாறு வருவதற்குக் கருதிய தென்னோ எனக் கேட்ப;
உறுகணாளர்-மிடியாளர் எனலுமாம். கடைகழிதல் இவர்க்கு முறையன்றாகலான் கடைகழிந்தென்றார். உம்மைகள் சிறப்பும்மை. உடையீர் இங்ஙனங் கருதியவாறு என்னோ என்க.
௫0-௧. உரையாட்டு இல்லை உறுதவத் தீர்யான்
மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன்.
உரையாட்டு இல்லை உறுதவத்தீர்யான் மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன்-மிக்க தவத்தினையுடையீர் இவ்வினாவிற்கு யான் சொல்லத்தக்க தொன்றில்லை ஆயினும் மதுரை மூதூரிற் சென்று பொருளீட்டும் வேட்கையை உடையேனாயினேன் என்று கூற;
“சென்ற கலனோடு உலந்த பொரு ளீட்டுத லுற்றேன்,” என இவன் முன்னர் காதையில் கூறியவதனால் ‘வரைபொருள்’ என்பதற்குத் தான் தேடுவதாக அறுதி செய்துகொண்ட பொருள் என்க என வென ஒரு சொல் வருவிக்க. இனிக் கவுந்தியடிகள் கூறுவார்.
௫௨-௪. பாடகச் சீறடி பரல்பகை உழவா
காடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
அரிதுஇவள் செவ்வி அறிகுநர் யாரோ
பாடகச் சீரடி பாற்பகை உழவர்-மதுரை செல்வது நும் கருத்தாயின் இவளது பாடக மணிந்த சிறிய அடிகள் பருக்கையாகிய பகையை வெல்ல மாட்டா, நாடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு அரிது இவள் செவ்வி அறிகுநர் யாரோ-ஆதலால் நீர் காடும் நாடுமாகிய இவ்வழியைக் கடத்தற்கு இவள் தன்மை ஏற்றதன்று; இனி ஊழ் என்செய்யுமோ அதனை அறிவார் யார் ?
காடு இடையிட்ட நாடு – காடும் நாடும் அறிகுநர் யாரோ என்றது இரக்கம் தோற்றிநின்றது.
௫௫. உரியது அன்றுஈங்கு ஒழிகஎன ஒழியீர்
உரியதன்று ஈங்கு ஒழிகென ஒழியீர்-இவை அன்றியும் இவளை உடன்கொண்டு சேறல் ஏற்புடைத்தன்று ஆகலின் இனிச் செலவை ஒழிமின் என யான் ஒழிப்பவும் ஒழிகின்றிலீர்;
இவர்க்கு மேல் நிகழ்வதறிந்து ஒழிகெனக் கூறினாரெனின், அடைக்கலக் காதையுள் ஒரு பொழுதிற்கு ஓம்படை பல கூற வேண்டாமையின் இவர்க்குத் தவத்தினாலே சபித்தலன்றிக் காலவுணர்ச்சியின்மை உணர்கவென்பர் அடியார்க்கு நல்லார்.
௫௬-௬௩. மறஉரை நீத்த மாசுஅறு கேள்வியர்
அறஉரை கேட்டுஆங்கு அறிவனை ஏத்தத்
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவல் யானும் போதுமின் என்ற காவுந்தி
ஐயையைக் கைதொழுது ஏத்தி
அடிகள் நீரே அருளிதிர் ஆயின்இத்
தொடிவளைத் தோளி துயர்த்தீர்த் தேன்என,
மற உரை நீத்த மாசறு கேள்வியர் – மறவுரைகளை நீக்கிய குற்றமற்ற கேள்விப் பயனை உடையவர் தம், அற உரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த-அறவுரைகளைக் கேட்டு அக் கேட்டவாறே அருக தேவனை யேத்துதற்கு, தென்றமிழ் நன்னாட்டுத் தீது தீர் மதுரைக்கு-தெற்கின்கண்ணுள்ள தமிழ்நாட்டின் கண்ணதாகிய குற்றந் தீர்ந்த மதுரைக்குச் செல்வதற்கு, ஒன்றிய உள்ளமுடையேன் ஆகலின்-ஒருப்பட்ட உள்ளமுடையேனாகலின், போதுவல் யானும் போதுமின் என்ற கவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி-யான் செல்வேன் நீவிரும் வம்மின் என்று கூறிய கவுந்தியடிகளைக் கையான் வணங்கி நாவாற் போற்றி, அடிகள் நீரே அருளுதிராயின் இத் தொடிவளைத் தோளி துயர் தீர்த்தேன் என – அடிகளே நீரே இன்னணம் அருள் செய்வீராயின் இவ் வளைந்த வளைவை அணிந்த தோளினை யுடையாளது துன்பமெல்லாம் போக்கினே னாவேனென்று சொல்ல ;
மதுரைக்குச் செல்லவென ஒருசொல் விரித்துரைக்க. தொடி-வளைவு. ”தொடிக்கட் பூவை” என்பது காண்க. தீர்த்தேனென இறந்தகாலத்தாற் கூறினான். கவுந்தியடிகளின் அருள் உண்டென்னும் தெளிவுபற்றி.
௬௪-௫. கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும்பல கேண்மோ;
கோவலன் காணாய்-கோவலனே நீ இதனை யறியாய், கொண்ட இந் நெறிக்கு ஏதம் தருவன யாங்கும் பல-நாம் செல்ல நினைத்த இவ்வழியின்கண் எவ்விடத்தும் துன்பம் தருவன பலவாகும், கேண்மோ-அவற்றைக் கேட்பாயாக;
காணாய் என்றது இவ்வாற்றின் ஏதந் தருவனவற்றை அறியாய் என்றவாறு. இந்நெறிக்கு என்பது உருபு மயக்கம். மோ - முன்னிலையசை.
௬௬-௭௧. வெயில்நிறம் பொறாஅ மெல்இயல் கொண்டு
பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே,
மண்பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக்
கையறு துன்பம் காட்டினும் காட்டும்,
வெயில் நிறம் பொறாஅ மெல்லியற் கொண்டு-வெயிலின் தன்மையைப் பொறாத மெல்லிய இயல்பினையுடைய இவளைக் கொண்டு, பயில்பூந் தண்டலை படர்குவம் எனினே-மிக்க மலர்களையுடைய சோலையின்கண் செல்வோமாயின், மண்பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியை – நிலம் பிளக்க இறங்கிய வள்ளிக் கிழங்கைத் தோண்டி எடுத்ததனாலாய குழிகளை, சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர்-சண்பக மரங்கள் நிரப்பிய பூந்துகள் சோர்ந்த பழம் பூக்கள், பொய்யறைப் படுத்து-பொய்க் குழிப் படுத்தி, போற்றா மாக்கட்கு-பாதுகாத்து் செல்லாத மக்களுக்கு, கையறு துன்பம் காட்டினும் காட்டும்-செயலறவாகிய துன்பத்தைக் காட்டுதலையும் செய்யும்;
நிறம்-தன்மை; நிறமெனவே கொண்டு அதனைக் கண்ணாற் பார்க்கவும் பொறாத எனலுமாம். பொங்கர் – பழம்பூ. கையறு துன்பம் – மீளாத் துன்பமெனலுமாம். சண்பகம் நிறைந்த பொங்கர் பொய்யறைப் படுத்துக் காட்டும் என்க.
௭௨-௩. உதிர்ப்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர்த்தேம் பழம்பகை முட்டினும் முட்டும்,
உதிர்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்-உதிர்ந்த பொலிவினையுடைய பழம் பூக்களினின்றும் ஒதுங்கிச் செல்வோரை, முதிர்தேம் பழம் பகை முட்டினும் முட்டும்-முற்றிய தேனொழுகும் பலாப் பழங்கள் பகை போலாகி மோதுதலையும் செய்யும்;
தேம்பழம்-இனிய தெங்கம்பழம் எனலுமாம். முட்டினு முட்டுவர் என்பது பாடமாயின் கழிவோர் பழமாகிய பகையினால் தடைப்படினும் படுவர் என்க. இப்பொருட்குப் பழப்பகை என்பது பாடமாதல் தகும். அரும்பதவுரைகாரர் இப் பாடமே கொண்டுளார். உம்மை ஐய வும்மை. மேலே மெல்லியற் கொண்டு படர்குவம் எனினே எனக் கூறிவைத்துப் பின் போற்றா மாக்கட்கு எனவும், ஒதுங்கினர் கழிவோர் எனவும் உலகியலாற் கூறினார்.
௭௪-௫. மஞ்சளும் இஞ்சியும் மயங்குஅரில் வலயத்துச்
செஞ்சுளைப் பலவின் பரல்பகை உறுக்கும்.
மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து-மஞ்சளும், இஞ்சியு முதலியன தம்முள் கலந்த பிணக்கத்தினையுடைய தோட்டங்களில், செஞ்சுளைப் பலவின் பாற்பகை யுறுக்கும்-பலாவின் செவ்விய சுளைகளிலுள்ள விதையாகிய பருக்கைகள் பகையால் உறுத்தலைச் செய்யும்;
வலயம்-பாத்தியுமாம். பலாவின் அடிக்கீழ் மஞ்சள் முதலியன பயிரிடல், ”பைங்கறி நிவந்த பலவி னீழல், மஞ்சண் மெல்லிலை” என வருதல் கொண்டுணர்க. உறுக்கும்-உறுத்தும்.
௭௬-௭. கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ.
வயல்உழைப் படர்க்குவம் எனினே
கயல் நெடுங் கண்ணி காதற் கேள்வ-சேலையொத்த நீண்ட கண்களையுடைய கண்ணகிக்கு அன்பு நிறைந்த கணவனே, வயலுழைப் படர்குவம் எனினே-வயல் நெறியே செல்வோமாயின்;
முன்னர்க் கோவலன் என விளித்து மீட்டும் ஈண்டு “கயனெடுங் கண்ணி காதற் கேள்வ”என விளித்தது முன்னர்க் கூறியன நினக்கும் ஏதம் தருவன. பின்னர்க் கூறுவன நினக்கு எத்தகைய அச்சத்தையும் செய்யாவிடினும், கடைகழிந்தறியா இக் காரிகைக்கு அச்சம் விளைக்கும்; அது நினக்குப் பொறுத்தற்கரிதாகும் என்ப தறிவித்தற்கென்க.
௭௭-௮௧. ஆங்குப்
பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஓட்டி
நீர்நாய் கெளவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின் கலங்கலும் உண்டுஇக் காரிகை,
ஆங்கு-அவ்விடங்களில், பூ நாறு இலஞ்சி-மலர்கள் மணங்கமழும் குளங்களில், பொருகயல் ஓட்டி-தம்முட் பொருகின்ற கயல்மீன்களைத் துரந்து, நீர்நாய் கௌவிய நெடும்புற வாளை-நீர்நாய் பற்றிய நீண்ட முதுகினையுடைய வாளை, மலங்கு மிளிர் செறுவின் விலங்கப் பாயின்-மலங்குகள் பிறழ்கின்ற வயற்கண் குறுக்காகப் பாயுமாயின், கலங்கலும் உண்டு இக் காரிகை –இந் நங்கை அஞ்சுதலு முண்டாம்;
கயலோட்டுதலை வாளையின் தொழிலாகக் கொள்ளுதலு மமையும். மிளிர்தல்-பிறழ்தல்; நெளிதல்.
௮௧-௫. ஆங்கண்
கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து
சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்திக்
குடங்கையின் கொண்டு கொள்ளவும் கூடும்,
ஆங்கண் கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து-கரும்பின்கண் வைத்த மிகுந்த தேன்கூ டழியப் பெற்றொழுகி, சுரும்பு சூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்-வண்டுகள் சூழ்ந்த வாவிகளின் தூய நீரொடு கலந்துவிடும்; அடங்கா வேட்கையின்-தணியாத நீர் வேட்கையானே, அறிவு அஞர் எய்தி-அறிவு சோர்ந்து, குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும் – அத்தகைய நீரை இவள் தன் அங்கையான் முகந்து உட்கொள்ளவுந் தகும்; குடங்கையாவது ஐந்து விரலுங் கூட்டி உட்குழிப்பது-இதனால் நமது அற நூலிற் கடியப்பெற்ற தேனுண்டலை ஒழிக லென்றவாறாயிற்று. நொண்டு-முகந்து என்னுஞ் சொல் மொண்டெனத் திரிந்து பின் நொண்டு என்றாயிற்று; இக்காலத்தில் இஃது இழிசினர் வழக்கிலுள்ளது.
௮௬-௯. குறுநர் இட்ட குவளைஅம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி
அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்,
குறுநர் இட்ட குவளையம் போதொடு-களை பறிப்பார் பறித்து வரப்புகளில் போகட்ட குவளைப் பூவுடனை, பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை-புள்ளிகளையுங் கீற்றுக்களையுமுடைய வண்டின் கூட்டங்கள் உள்ளொடுங்கிக் கிடக்கும் இடங்களை, நெறிசெல் வருத்தத்து-வழி நடந்து துன்பத்தினால், நீர் அஞர் எய்து-நீவிர் சோர்வுற்று, அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும்-உணராது அவ்விடத்து அடியிட்டு நடத்தலுங் கூடும்;
குறுதல்-பறித்தல். இதனால் உயிர்க்கொலை போற்றுக எனக் கூறியவாறாயிற்று.
௯0-௩. எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில்
பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழ்அடி ஒதுக்கத்து உறுநோய் காணின்
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,
எறிநீர் அடை கரை இயக்கந்தன்னில்-எறியும் நீரையுடைய வாய்க்காலின் கரையாகிய வழிக்கண், பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது-புள்ளிகளின் அழகினையுடைய நண்டினையும் நந்தினையும் பாதுகாவாது, ஊழ் அடி ஒதுக்கத்து-முறையான் அடியிட்டுச் செல்லும் செலவினால், உறுநோய் காணின்-அவற்றுக்கு மி்க்க நோயுண்டாயின், தாழ தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா-நமக்கு வரும் துன்பம் நம்மால் பொறுக்கவும் முடியாது; இயக்கம்-இயங்குதலையுடையது: வழி. நந்து-நத்தை. கொலையென்று வாக்காற் கூறவுமாகாமையின் நோய் என்றார். துன்பம்-கொலைப் பாவம். இம்மைக்கண் அன்றி மறுமையில் நரகத்திலுறுந் துன்பமும் தாங்கவொண்ணா எனப் பொருள் தருதலின் தாங்கவும் என்னுமும்மை எச்சவும்மை. அருக சமயத்தாரின் கள்ளுண்ணாமை, கொல்லாமையென்னும் அறங்கள் மறந்தும் வழுவலாகாவென்பதனை இங்ஙனம் அழகுறக் கூறிப்போந்தனர்.
௯௪-எ. வயலும் சோலையும் அல்லது யாங்கணும்
அயல்படக் கிடந்த நெறிஆங்கு இல்லை
நெறிஇருங் குஞ்சி நீவெய் யோளொடு
குறிஅறிந்து அவைஅவை குறுகாது ஓம்புஎன,
வயலும் சோலையும் அல்லது யாங்கணும்-எவ்விடத்தும் வயல்களுஞ் சோலைகளுமல்லது, அயல்படக் கிடந்த நெறி ஆங்கில்லை-வேறுபடக் கிடந்த வழி அவ்விடத்திலில்லை ஆகலான், நெறி இருங்குஞ்சி நீ வெய்யோளொடு-நெளிந்த கரிய குஞ்சியினையுடையாய் நீ நின்னை விரும்பிய இவளுடன், குறி அறிந்து அவையவை குறுகாது ஓம்பு என-அவ்வவ் விடங்களைக் குறிப்பானே யுணர்ந்து அவற்றைச் சாராது பாதுகாப்பாயாக வென்று சொல்லி; முன்னர். முதற்கண் சோலையையும் பின்னர் வயலையும் கூறி வைத்து, ஈண்டு வயலுஞ் சோலையுமல்லது என்றது எதிர்நிரனிறை. இத்துணையும் கவுந்தியடிகள் கூற்றில் வைத்துக் கண்ணகியின் மென்மைத் தன்மை கூறுவாராய்ச் சோணாட்டின் வளமிகுதியை எழில்பெற உடன் கூறினார்,என்க.
௯௮-௧0௧. தோம்அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும்
காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு
மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகெனப்
பழிப்புஅருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்,
தோம் அறு கடிகையும் சுவல்மேல் அறுவையும் காவுந்தி யையை கைப் பீலியும் கொண்டு-கவுந்தியடிகள் குற்றமற்ற பிச்சைப் பாத்திரத்தையும் தோளிலிடும் உறியையும் மயிற்றோகையையும் கொண்டு, மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகென-பொருண் மொழியாகிய தெய்வம் யாம் செல்லும் நெறிக்கண் துணையாகவென்று, பழிப்பரும் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்-பழிப்பில்லாத பெருமையினையுடைய ஒழுக்கத்தொடு வழிச்செலவைப் புரிந்தோராகிய அவர்கள்;
தோம்-குற்றம். பொருண்மொழியென மாறுக. தெய்வமாவது பஞ்சமந்திரம்; அ சி ஆ உ சா என்பன. கொண்டு என்பதனைக் கொள்ளவெனத் திரித்துத் துணையாக வென்றதனைக் கோவலன் கண்ணகி கூற்றாக்கலுமாம். படர்-செல்கை; முதனிலைத் தொழிற்பெயர். புரிந்தோர்-வினைப்பெயர்.
௧0௨-௧௧. கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓஇறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது
ஆம்பியும் கிழாரும் வீங்குஇசை ஏத்தமும்
ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லாக்
கரியவன் புகையினும்-சனி புகைந்தாலும், புகைக்கொடி தோன்றினும்-தூமகேது தோன்றினாலும், விரிகதிர் வெள்ளி தென் புலம் படரினும்-விரிந்த கதிரினையுடைய சுக்கிரன் தென்றிசைக் கண் செல்லினும், கால்பொரு நிவப்பின்-காற்று மோதும் குடகின் உச்சியின்கண்,கடுங்குரல் ஏற்றொடு சூல் முதிர்கொண்மூப் பெயல்வளம் சுரப்ப-கடிய குரலையுடைய சிறந்த இடியுடன் கரு முற்றிய கார் பெயலாகிய வளத்தைச் சுரத்தலான், குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது-அக்குடவரைக்கண் தோன்றிய கொழுவிய பல பண்டங்களோடு கடல் தன் வளங்களொடு எதிரும் வண்ணம் புகாரைக் குத்தியிடிக்கும் கடுகி வருதலையுடைய காவிரியின் புது நீர் வாய்த்தலைக்கண் கதவின்மீதெழுந்து விழும் ஒலியல்லாது, ஆம்பியும் கிழாரும் வீங்கிசை ஏத்தமும் ஓங்கு நீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லா-பன்றிப்பத்தரும் பூட்டைப் பொறியும் ஒலி மிகுந்த ஏற்றமும் நீர்மிகும் இறை கூடையுமென இவை ஒலித்தல் இல்லாத;
தாரமொடு வளனெதிர நெரிக்குங் கடுவரற் காவிரிப் புதுநீர் என்க. புகைதல்-புகைவீடுகளிற் சென்று மாறுபடுதல். புகைக்கொடி-தூமகேது; வட்டம், சிலை, நுட்பம் தூமம் என்னும் கரந்துறை கோட்கள் நான்கினுள் தூமம் எனப்படுவது. ”மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும், தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்” என்றார் பிறரும். இன்னோரன்ன குறிப்புக்களினின்று பண்டைத் தமிழ் மக்கள் கோட்களின் நிலையிலிருந்து மழை முதலியவற்றை அறியும் குறிநூற் புலமை யுடையராயிருந்தன ரென்பது பெறப்படும். கோட்களின் முரணிய நிலையில் உலகின் பிற பகுதிகளில் மழையில்லையாயினும் குடக மலையில் மழைபெய்வதும் காவிரியில் நீர் பெருக்கெடுத்து வருவதும் தப்பாவெனக் காவிரியின் சிறப்புக் கூறியவாறாயிற்று. ஒலித்தல் செல்லாவென்றது பிற நாடுகளிலாயின் இவ்வொலியே மிகும் என அவற்றின் சிறுமை தோன்றநின்றது. ஓ-வாய்த்தலைக்கிட்ட கதவு; இனி ஓவிறந்து ஒழிவின்றி யென்றுமாம். உம்மைகள், சிறப்பும்மை.
௧௧௨-௩. கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கழனிச் செந்நெல் கரும்பு சூழ் மருங்கின்-வயற்கண் செந்நெலும் கரும்புஞ் சூழ்ந்த இடத்தினையுடைய, பழனத் தாமரைப் பைம்பூங் கானத்து-நீர்நிலைச் செறுவின் கணுண்டான பசிய பொலிவினையுடைய தாமரைக் காட்டின்கண்;
௧௧௪-௯. கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும்
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும்,
கம்புட் கோழியும்-சம்பங் கோழியும், கனைகுரல் நாரையும்-ஒலிக்கும் குரலினையுடைய நாரையும், செங்கால் அன்னமும்-சிவந்த காலினையுடைய அன்னப்புள்ளும், பைங்காற் கொக்கும்-பசிய காலினையுடைய கொக்கும், கானக் கோழியும்-கானாங்கோழியும், நீர்நிறக் காக்கையும்-நீரில் நீந்துமியல்புள்ள நீர்க்காக்கையும், உள்ளும்-உள்ளானும், ஊரலும்-குளுவையும், புள்ளும்-கணந்துட் பறவையும், புதாவும்-பெருநாரையும், வெல்போர் வேந்தர் முனையிடும்போல-வென்றி காணும் போரை வல்ல அரசரிருவர் பொருமிடம்போல, பல்வேறு கழூஉக்குரல் பரந்த ஓதையும்-பலவாக வேறுபட்ட திறத்தான ஒலிக்கும் மிக்க ஓசையும்;
கானக்கோழி-காட்டுக்கோழி என்பாருமுளர். நிறம்-தன்மை. ஊரல் நீர்மேலூர்வது ஆகலின் ஆகுபெயர் என்பர் அடியார்க்குநல்லார். புதா- போதா என்பதன் விகாரம். வெல்போர், முனையிடம், வினைத்தொகை. குழூஉக்குரல் பரந்த ஓசை - பல்வேறு கூட்டங்களின் குரல் பரந்து ஒன்றான ஓசையென்னலுமாம்.
௧௨0-௪. உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்திய
கழாஅமயிர் யாக்கைச் செங்கண் காரான்
சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ்பு உற்ற
குமரிக் கூட்டில் கொழும்பல் உணவு
கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரியக்
உழாஅ நுண் தொளிஉள் புக்கு அழுந்திய-உழப்படாத நுண்ணிய சேற்றுட் புக்கு ஆழ்ந்த, கழாஅ மயிர் யாக்கைச் செங்கட் காரான-கழுவப் பெறாத மயிரினையுடைய உடலையும் சிவந்த கண்ணினையுமுடைய எருமை, சொரிபுறம் உரிஞ்ச-தினவையுடைய முதுகினை உராய்தலானே, புரிஞெகிழ்பு உற்ற குமரிக் கூட்டின்-புரிகள் அறுந்து நெகிழ்தலையுற்ற அழியாத நெற்கூட்டின்கணுள்ள, கொழும்பல் உணவு-கொழுவிய பலவாகிய பண்டங்கள், கவரிச் செந்நெற் காய்தலைச் சொரிய-கவரிபோன்ற செந்நெல்லின் கதிரினிடத்துச் சிந்த;
தொளி-சேறு. உழாஅ நுண்டொளி-தானே பட்ட சேறு; என்றது வயல் வளங் கருதிற்று. காரான்-எருமை. குமரி-அழியாமை. சோணாட்டின் விளைவு மிகுதி கூறியபடி.
௧௨௫-௬. கருங்கை வினைஞரும் களமருங் கூடி
ஒருங்குநின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்,
கருங்கை வினைஞரும் களமரும்- வலிய கையினையுடைய வினையாளருங் களமர்களும், கூடி ஒருங்கு நின்றார்க்கும் ஒலியே அன்றியும்-கூடிநின்று ஒன்றுபட்டொலிக்கும் ஓதை யன்றியும்;
கருங்கை-வலிய கை. வினைஞர்-பள்ளர், பறையர், முதலாயினோர். களமர்-உழுகுடி வேளாளர். கருங்கை வினைஞர்-கருங்கைக் களமர் என்க.
௧௨௭-௩௨. கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்
தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து
சேறுஆடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச்
செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர்
வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்,
கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து
கடிமமலர் களைந்து-மணமுள்ள மலர்களை யுடைய ஆம்பல் முதலியவற்றைப் பறித்தெறிந்து, முடிநாறு அழுத்தி-அங்ஙனம் பறித்தவிடத்தே முடியின் நாற்றைப் பகிர்ந்து நட்டு, தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து-வளைந்த வளையலணிந்த தோளின்கண்ணும் மார்பின்கண்ணும் படிந்து, சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றி-சேறாடுகின்ற கோலத்தோடு அழகு பெறத் தோன்றி, செங்கயல் நெடுங்கட் சின்மொழிக் கடைசியர்-சிவந்த கெண்டையை ஒத்த நெடிய கண்களையும் சிலவாகிய மொழியினையுமுடைய கடைசியரது, வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்-மிகுந்த மயக்கந் தருங் கள்ளை உண்டு தொலைத்ததனாலுண்டான இசையொடும் பழகிப் போதாத பாடலும்;
கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தி என்பதற்குக் காலையின் முடித்த பூக் களைந்து முடித்த முடியிலே முடியினாற்றை நறுக்கிச் சூடிக்கொண்டு எனவும், தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடல் என்பதற்கு ஒருவர் மேலொருவர் சேற்றை இறைத்துக் கோடல் எனவும் கூறுவார் அடியார்க்கு நல்லார். சின்மொழி-இழிந்த மொழி எனவுமாம்.
௧௩௨-௫. கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்,
கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து-கொழுவிய கொடியாக நீண்ட அறுகையும் குவளையையும் சேர்த்து, விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டி-விளங்கும் நெற்கதிரோடே தொடுத்த மாலையை ஏரிலே அணிந்து, பார் உடைப்பனர் போல்-நிலத்தைப் பிளப்பவரைப்போல, பழிச்சினர் கை தொழ – போற்றுவார் வணங்க, ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும்-ஏரைப் பூட்டி நின்றோர் பாடுகின்ற ஏர் மங்கலப் பாட்டும்;
அறுகையும் குவளையும் கதிரோடு தொடுத்த விரியல் என்க. இது பொன்னேர் எனவும், சிலவிடங்களில் நல்லேர் எனவுங் கூறப்படும்.
௧௩௬-௭. அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்,
அரிந்து கால் குவித்தோர்-நெல்லினை அரிந்து ஓரிடத்துக் குவித்தோராய நெல்லரிநர், அரி கடாவுறுத்த பெருஞ் செந்நெல்லின் முகவைப் பாட்டும்-சூட்டினைக் கடாவிடுதலா லுண்டான மிக்க செந்நெல்லினை முகந்து தரும் முகவைப் பாட்டும்;
கடாவுறுத்த செந்நெல் என்க. அரி-அரித்துப் போகட்ட நெற்சூடு. முகவை பாடுதல்-பொலி பாடுதல். நெல் முகந்து கொடுக்கப் படுதலான் முகவையாயிற்று.
௧௩௮-௯. தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண்கனை முழவின் மகிழ்இசை ஓதையும்,
தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த-தெளிந்த ஓசையினையுடைய தடாரியினையுடைய கிணைப்பொருநர் செருக்குதலோ டெடுத்த, மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும்-மார்ச்சனையையுடைய திரண்ட முழவினது மகிழ்ச்சியைத் தரும் இசையின் ஒலியும்;
இது களவழி வாழ்த்து; என்னை? ”தண்பணை வயலுழவனைத் தெண்கிணைவன் திருந்துபுகழ் கிளந்தன்று” என்றாராகலின்.
௧௪0-௧. பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டுஆங்கு
ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்,
பேர் யாற்று அடைகரை நீரிற் கேட்டாங்கு-ஆகிய இவ்வோசைகளைப் பெரிய யாற்றங்கரையில் முறைமையிற் கேட்டு, ஆர்வ நெஞ்சமொடு அவலம் கொள்ளார்-விருப்பங் கொண்ட உள்ளத்தொடு வருத்தத்தினைக் கொள்ளாராய்;
பரந்த வோதையும் (௧௧௯). ஆர்க்கு மொலியும் (௧௨௬), விருந்திற் பாணியும் (௧௩௧); ஏர் மங்கலமும் (௧௩௫) முகவைப் பாட்டும் (௧௩௭) மகிழிசை ஓதையம் (௧௩௯) என்னு மிவற்றை அடைகரைக்கண் கேட்டு என்க. இவ்வியற்கை வளங்களின் காட்சி யின்பத்தால் அவலங் கொள்ளாராயின ரென்க.
௧௪௨-௭. உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு
மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில்
மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை
இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து
மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை அன்றியும்,
உழைப்புலிக் கொடித் தேர் உரவோன் கொற்றமொடு-புலியைத் தன்னிடத்துடைய கொடியை யுயர்த்தின தேரையுடைய வலியோனாகிய வளவனது வெற்றியோடு, மழைக்கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில்-மழைக்குக் கருப்பத்தினைத் தோற்றுவிக்கின்ற அழலை விளக்குகின்ற வேள்விச் சாலையின் கண், மறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை –வேதியர் ஆக்கிய ஓமத்தின்கண் நல்ல புகை, இறை உயர்மாடம் எங்கணும் போர்த்து-இறப்பினை யுடைய ஓங்கிய மாடங்களின் எவ்விடங்களிலும் போர்த்தலான், மஞ்சு சூழ் மலையின் மாணத்தோன்றும்-மேகஞ் சூழ்ந்த மலைபோல மாட்சிமைப்படக் காணப்படும், மங்கலம் மறையோர் இருக்கை அன்றியும்-மங்கலம் பொருந்திய அந்தணர்களது இருப்பிடங்களும் அவையே யன்றியும்;
அட்டில்-ஈண்டு வேள்விச்சாலை. இறை-இறப்பு. மழைக் கருப்பம் ஆவது புகை.
௧௪௮-௫௫. பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும்
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையின் தோன்றும்
ஊர்இடை யிட்ட நாடுஉடன் கண்டு
காவதம் அல்லது கடவார் ஆகிப்
பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள்:
பரப்பு நீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்-நீர் பரந்த காவிரிப்பாவையின் புதல்வரும், இரப்போர் சுற்றமும்-இரப்போரது சுற்றத்தையும், பரப்போர் கொற்றமும்-அரசரது வெற்றியையும், உழவிடை விளைப்போர்-தம் உழுதொழிலின் கண்ணே தோற்றுவிப்போருமாகிய வேளாளருடைய, பொங்கழி ஆலைப் புகையொடு பரந்து-தூற்றாப்பொலி கரும்பாலைப் புகையினால் பரக்கப்பெற்று, மங்குல் வானத்து மலையின் தோன்றும்-இருண்ட மேகம் சூழ்ந்த உயர்ந்த மலைபோலக் காணப்பெறும், பழவிறல் ஊர்களும்-பழைய சிறப்பினையுடைய ஊர்களும் ஆகிய, ஊர் இடை இட்ட நாடு உடன் கண்டு-இவ்விருவகையூர்களும் இடையிடையேயுள்ள நாடெல்லா வற்றையும் கண்டு, காவதம் அல்லது கடவார் ஆகி-ஒரு நாளில் ஒரு காத தூரமல்லது நடக்க முடியாதவராய், பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள்-பலநாட்கள் தங்கிச் செல்லுகின்ற நாளில் ஒருநாள்; விளைப்போருடைய மலையிற்றோன்றும் பழவிறலூர்களும் என்றியைக்க. பொங்கழி-தூற்றாத நெற்பொலி. பரந்து-பரக்க எனத்திரித்தலும் அமையும். கொற்றத்தையும் கருவையும் அட்டிலின் விளைப்போர் இருக்கையும், சுற்றமும் கொற்றமும் ஊர்களுமாகிய ஊர் என்க. காவிரிப்பாவை புதல்வர் என்றதனை. “வாழி யவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி, ஊழி யுய்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி” என வருதல் கொண்டுணர்க. உடன்கழிந்தென்றார் இந்நாட்டின் சிறப்புக்களைக் கண்டு கழிதல் அருமையால். புரப்போர் கொற்றத்தை உழவிடை விளைப்போர் என்பதனை, ”பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர், அலகுடை நீழ லவர்” “பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை, ஊன்றுசால் மருங்கி னீன்றதன் பயனே” என்பவற்றானு மறிக.
௧௫௬-௬௩. ஆற்றுவீ அரங்கத்து வீற்றுவீற்று ஆகிக்
குரங்குஅமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூநாறு ஒருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்
பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட இலங்குஒளிச் சிலாதலம் மேல்இருந் தருளிப்
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்றப்,
ஆற்றுவீ அரங்கத்து வீற்று வீற்றாகி-ஆற்றை மறைக்கும் அரங்கத்தின்கண் வேறிடத்தில்லாத தன்மைத்தாய், குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து-வளைந்த மூங்கின் முள்ளால் வளைக்கப்பெற்ற வேலியையுடைய மரங்கள் நெருங்கிய சோலைக்கண், வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-விண்ணவர் உறைதற்கொத்த மலர்கள் மிக்குத் தோன்றும் ஒரு பக்கத்தே, பட்டினப்பாக்கம் விட்டனர் நீங்கா-பட்டினப்பாக்கத்தை விட்டு நீங்கி, பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட – பெரும் புகழினையுடைய உலக நோன்பிகள் ஒருங்கு கூடி அப்பட்டினப்பாக்கத்திலிட்ட, இலக்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி-விளங்கும் ஒளியினையுடைய சிலாவட்டத்தின்கண் எழுந்தருளி, பெருமகன் அதிசயம் பிறழா வாய்மை தருமம் சாற்றும் சாரணர் தோன்ற-அருகதேவனாற் செய்யப்பட்ட அதிசயங்கள் மூன்றுந்தப்பாத உண்மையினையுடைய அற வொழுக்கங்களை அருளிச் செய்யும் சாரணர் வந்து தோன்ற;
வீ-மறைவு. அரங்கம்-ஆற்றிடைக்குறை. ஈண்டுச் சீரங்கம். குரங்கு-வளைவு பட்டினப்பாக்கத்திலிட்ட சிலாதலமேலிருந்து தருமஞ் சாற்றுஞ் சாரணர் அப்பட்டினப்பாக்கம் விட்டு நீங்கிப் பூ நாறொரு சிறைத் தோன்ற வென்க. பூநாறு என்பதற்கு மலர்கள் மணங் கமழும் எனலுமாம். அதிசயங்கள் மூன்றாவன; சகசாதிசயம்; கர்மக்ஷயாதிசயம். தெய்வீகாதிசயம் என்பன.
௧௬௪-௬௯. பண்டைத் தொல்வினை பாறுக என்றே
கண்டுஅறி கவுந்தியொடு கால்உற வீழ்ந்தோர்
வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கில் தெரிந்தோன் ஆயினும்
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்,
பண்டைத் தொல்வினை பாறுக என்றே-முன்செய்த பழவினைகள் யாவும் கெட்டொழிக என்றுட்கொண்டு, கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர்-அச் சாரணர் வந்தமையைக் கண்டுணர்ந்த கவுந்தியடிகளுடன் அவர்கள் திருவடியிற் பொருந்த வீழாது வணங்கியோர், வந்த காரமம்-ஈண்டு வந்ததன் காரணத்தை, வயங்கிய கொள்கைச் சிந்தை விளக்கில் தெரிந்தோனாயினும்-விளங்கிய கோட்பாட்டி னையுடைய தன் உள்ளமெனும் விளக்கினான் அறிந்தோனாயினும், ஆர்வமும் செற்றமும் அகல நீங்கிய-விருப்பினையும் வெறுப்பினையும் தன்னை விட்டு அகலும்படி போக்கிய, வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்-வீரனாகலாலே இவர்க்கு வருந் துன்பத்திற்கு வருத்தங் கொள்ளானாகி; தொல்வினை யென்றார்; முன்னர்த் தோற்றத்துப் பல்வகைப்பிறவியினும் தொடர்ந்து வருதல் கருதி கண்டறி கவுந்தி யென்றமையாலும் அவருக்குக் காலவுணர்ச்சியின்மை அறிக. ஒடு-ஒருவினையொடு. வீழ்ந்தோர்: வினைப்பெயர். சிந்தை விளக்கு-அவதி ஞானம்; என்றது முக்காலமு முணரும் உணர்வினை. செற்றம்-வெகுளி; ஈண்டு வெறுப்பின் மேற்று. வந்த சாரணருள் உபதேசிப்போர் மூத்தோரே யாகலின், வீரனென ஒருமையாற் கூறினார்.
௧௭0-௭௧. கழிப்பெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்:
ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
கழி பெருஞ் சிறப்பிற் கவுந்தி காணாய் ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை-மிக்க பெருஞ் சிறப்பினையுடைய கவுந்தி! யாவரானும் ஒழிக்க வொழியாததாய்த் துன்பம் நுகர்விக்கும் தீவினையைக் காண்பாயாக.
‘ஒழிகென வொழியாது ஊட்டும் வல்வினை’ என்பதற்கு நீ “உரியதன் றீங்கொழிக” என்று கூறவும் ஒழியாவாறு நுகர்விக்கும் தீவினையை என்றலும் பொருந்தும்.
௧௭௨-௧௭௩. இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா
இட்டவித்தின் எதிர்ந்து வந்தெய்தி ஒட்டுங் காலை ஒழிகக்வும் ஒண்ணா-விளை நிலத்திட்ட வித்துப்போல பயன் எதிர நல்வினை வந்தடைந்து நற்பயனை நுகர்விக்கும் காலத்து அதனை ஒழிக்கவும் கூடாது;
அதுபோல இதுவும் ஒழிக்க வொழியாதென்றார். ”உறற் பால நீக்கலுறுவர்க்கு மாகா, பெறற்பா லனையவும் அன்னவாம்” என்றாராகலான் இங்ஙனங் கூறினார். வல்வினையை ஒழித்தல் தன்றொழிலாகவும் நல்வினையை ஒழித்தல் பிறர்வினையாகவும் கொள்க.
௧௭௪-௭௫. கடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்
கடுங்கால் நெடுவெளி இடும் சுடர் என்ன-கடிய காற்றையுடைய நெடிய வெளியிட்த்திடப்பெற்ற விளக்கென்னும்படி அழியினல்லது, ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்-உடலிடை நின்ற வுயிர்கள் அவ் வுடம்பொடு கூடி உடனில்லா;
தீவினைப் பயனாய துன்பமும், யாக்கை நிலையாமையும் இவர் பால் உறுவது கண்டு சாரணர் கவுந்தியடிகட்கு இங்ஙனங் கூறினார் என்க. விளக்கினை உவமித்தார்; சுடரொழிதற்குரிய வளிநேர்ந்த வழி அச்சுடர் ஒழிதல்போல உலத்தற்குரிய வினை நேர்ந்தவழி உயிரொழிதலும், சுடரொழிந்தவழி அச்சுடர் யாண்டுச் சென்றுற்றதென அறிதற்கியலாவாறு போல உயிரொழிந்த வழி அவ்வுயிர் யாண்டுச் சென்றுற்றதென அறிய முடியாமையுமாய இவ் வொப்புமை கருதி என்க. அழிதல் ஒருதலையென்பது புலப்படக் கடுங்கால் எனவும் நெடுவெளி யெனவும் அடை கொடுத்தார்.
௧௭௬. அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்
அறிவான்-எல்லாவற்றையும் அறியும் அறிவுடையோன், அறவோன்-அறஞ்செய்தலையே தன் தொழிலாகவுடையோன், அறிவு வரம்பு இகந்தோன்-மக்கள் அறிவின் எல்லையைக் கடந்து நின்றோன்
மக்கள் தம் அறிவினால் அறியவொண்ணாதவன் என்றபடி.
௧௭௭. செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
செறிவன்-எல்லா வுயிர்கட்கும் இதனாயுள்ளவன்; சலியாதவன் என்றுமாம். சினேந்திரன் – எண்வகை வினைகளையும் வென்றோன்.
எண்வகை வினைகளாவன: ஞானாவரணீயம். தரிசனாவரணீயம், வேதநீயம், மோகநீயம், ஆயுஷ்யம், நாமம், கோத்திரம், அந்தராயமென இவை.
சித்தன்-செயத் தருவனவற்றைச் செய்து முடித்தோன்; கன்மங்களைக் கழுவினோன் என உரைப்பாருமுளர்.
பகவன் – முக்கால வுணர்ச்சியுடையோன்.
௧௭௮. தரும முதல்வன் தலைவன்
தருமன் தருமமுதல்வன்-அறங்களுக்கு,மூலமாயுள்ளோன்; தலைவன்-எவ்வகைத் தேவர்க்கும் தலைவனாயுள்ளான்; தருமன்-தானே அறமாயவன்:
௧௭௯. பொருளன் புனிதன் புராணன் புலவன்
பொருளன்-உண்மைப் பொருளாயுள்ளவன்; புனிதன்-தூய்மையுடையோன்; புராணன்-பழைமையானவன்; புலவன்-யாவர்க்கும் அறிவாயுள்ளோன்;
௧௮0. சினவரன் தேவன் சிவகதி நாயகன்
சினவரன்-சினத்தைகி கீழ்ப்படுத்தினவன்;
என்றது சினத்தை வென்றோன் என்றபடி.
தேவன்-தேவர்க்கெல்லாம் முதல்வனாய தேவன்; சிவகதி நாயகன். வீட்டுலகிற்குத் தலைவனானோன்;
வீடு சிவகதி யென்னும் பெயரால் சமணர்களாலும் வழங்கப்பட்டிருப்பது சிந்திக்கற்பாலது.
௧௮௧. பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்
பரமன்-மேலானவன்; குணவதன்-குணத்தை யுடையோன்;
குணவதன் என்பதற்குக் குணவிரதன் எனப்பொருள் கோடலுமாம்.குணவிரதம் - திக்குவிரதம், சேதவிரதம், அநர்த்த தண்டவிரதம் என மூன்று வகைப்படும்.
பரத்தில் ஒளியோன்-மேலாய உலகிற்கு விளக்க மாயுள்ளோன்;
௧௮௨. தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
தத்துவன்-தத்துவங்களையுடையோன்; சாதுவன்-அடங்கியோன்; சாரணன்-விசும்பியங்குவோன்; காரணன்-எல்லாவற்றிற்கு முதலாயுள்ளோன்;
௧௮௩. சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளி
சித்தன் – எண்வகைச் சித்திகளையு முண்டாக்கினவன்; பெரியவன்-எல்லாவற்றினும் பெரியோன்; செம்மல்-தலைமையிற் சிறந்தோன்; திகழ் ஒளி-விளங்கும் ஒளியாயுள்ளோன்;
- ௧௮௪. இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்
௧௮௫. குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான் குறைவில் புகழோன்-நிறைந்த கீர்த்தியையுடையோன்;
குணப்பெருங்கோமான்-நற்குணங்கள் யாவும் நிறைந்த சிறந்த தலைவன்;
௧௮௬. சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
சங்கரன்-நன்மை புரிவோன்; ஈசன்-எவ்வகைச் செல்வங்களையு முடையோன்; சுயம்பு-தானே தோன்றினவன்; சதுமுகன்-நான்முகன்;
௧௮௭. அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
அங்கம் பயந்தோன்-அங்காகமத்தை அருளினவன்; அருகன்-போற்றத்தக்கான்; அருள்முனி-எல்லாவுயிரிடத்தும் அருள் கொண்டொழுகும் முனிவன்;
அங்காகமம் பன்னிரண்டு வகையினை யுடைத்து எனவும். அவை ஆசாராங்கம். சூத்திரகிருதாங்கம். ஸ்தானாங்கம், சமவாயாங்கம், வியாக்கியாப் பிரஜ்ஞப்த்யங்கம், ஞாத்ருகதாங்கம் உபாஸகாத்தியயனாங்கம், அந்தக் கிருத தசாங்கம், அநுத்தரோபபாதிக தசாங்கம், பிரச்சிநவியாகரணாங்கம், விபாக சூத்திராங்கம், திருஷ்டிவாதாங்கம் என்பன வெனவும் கூறுவர்.
௧௮௮. பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள்
ஒட்டற்ற பொன்னை யொப்பான் என்றுமாம்.
௧௮௯. விண்ணவன் வேத முதல்வன் விளங்குஓளி
௧௯0-௧. ஓதிய வேதத்து ஒளிஉறின் அல்லது
போதார் பிறவிப் பொதிஅறை யோர்எனச்
ஓதிய வேதத்து ஒளியுறின் அல்லது போதார் பிறவிப் பொதி அறையோர் என-மேற்கூறிய பெயர்களையுடைய ஆகமத்தின்கண் விளங்கும் ஒளியாகிய அருகதேவனைச் சார்ந்தாலல்லது பிறவியாகிய மூடப்பெற்ற அறையிலுள்ளார் வெளிவாரார் என்று சாரணர் தலைவன் கூற;
பொதியறையோர் ஒளியுறி னல்லது போதார் என்க. பிறவியை இருளறையாகவும் அருகதேவனை அவ் விருளறையினின்று வெளி வருதற்குத் துணையாய விளக்காகவுங் கூறினார். ஓதிய ஆகமமாகிய ஒளியைப் பெற்றாலல்லது போதாரென்றலுமாம். பொதியறை-சிறு துவாரமுமின்றி மூடப் பெற்ற கீழ் அறை ”புழுக்கரைப் பட்டோர் போன்றுளம் வருந்தாது” என்றார் பிறரும்.
ஒருநாள் ஒரு சிறைச் சாரணர் தோன்ற வீழ்ந்தோர் வந்தகாரணம் தெரிந்தோனாயினும் விழுமங் கொள்ளான் காணாய் ஊட்டும் ஒண்ணாது நில்லா ஒளியுறி னல்லது போதார் என என்று முடிக்க.
௧௯௨-௩. சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல்
காவுந்தி யும்தன் கைதலை மேற்கொண்டு
சாரணர் வாய்மொழி கேட்டுத் தவ முதற் காவுந்தியும் தன்கை தலைமேற் கொண்டு-தவத்திற்கு முதல்வியாகிய கவுந்தியடிகளும் சாரணர் அருளிச்செய்த பொருண் மொழியைக் கேட்டுத் தம் கைகளைத் தலையின்மீது வைத்துக் கொண்டு;
௧௮௪-௫. ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக்கு அல்லதுஎன் செவியகம் திறவா,
ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞானத்திரு மொழிக்கு அல்லது என் செவியகம் திறவா-என்னுடைய செவிகள் காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்றனையுங் கெடுத்தோனாகிய அருகதேவன் அருளிச் செய்த பேரறிவு தரும் அறவுரைக்குத் திறப்பினல்லது பிறிதொன்றற்குத் திறவா;
அவித்தல்-அடக்கலுமாம்.
௧௯௬-௭. காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது என்நா,
காமனை வென்றோன் ஆயிரத்தெட்டு நாமம் அல்லது நவிலாது என் நா – எனது நாவானது காமன் செயலை வென்றோனுடைய ஆயிரத்தெட்டு நாமங்களைப் பயில்வதல்லது வேறொரு நாமத்தினைக் கூறாது;
௧௯௮-௯. ஐவரை வென்றோன் அடியிணை அல்லது
கைவரைக் காணினும் காணா என்கண்,
ஐவரை வென்றோன் அடி இணை அல்லது கைவரைக் காணினும் காணா என்கண்-என்கண்கள் ஐம்புலன்களையும் வென்றோனுடைய இரண்டு திருவடிகளைக் காண்பதல்லது மற்றைக் கடவுளர் அடிகளைக் கையகத்தே காணினும் காணா;
ஐவர் செறலின் வந்த திணைமயக்கம்.
௨00-௧. அருள்அறம் பூண்டோ ன் திருமெய்க்கு அல்லதுஎன்
பொருள்இல் யாக்கை பூமியில் பொருந்தாது,
அருள் அறம்பூண்டோன் திரு மெய்க்கு அல்லது என் பொருள் இல் யாக்கை பூமியிற் பொருந்தாது-எனது பயனில்லா இவ்வுடல் அருளையும் அறத்தினையும் மேற்கொண்டோனுடைய திருவுடலத்திற்கல்லது பிறிதொன்றற்குப் பூமியிற் பொருந்தாது;
அருளறம் பூண்டோன் என்பதற்கு அருளினால் அறம் பூண்டோன் எனலு மமையும். பூமியிற் பொருந்தலாவது நிலத்து வீழ்ந்திறைஞ்சுதல்.
௨0௨-௩. அருகர் அறவன் அறிவோற்கு அல்லதுஎன்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா,
அருகர் அறவன் அறிவோற்கு அல்லது என் இருகையும் கூடி ஒருவழிக் குவியா – என் இரு கைகளும் அருகர்க்கு அறங்கூறுவோனாகிய அறிவன் பொருட்டுச் சேர்ந்து குவிதலல்லது ஏனைத்தேவர் பொருட்டுக் குவியா;
அருகர் – சமண இருடிகள். குவிதல்-வணங்குதல்.
௨0௪-௫. மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதுஎன்
தலைமிசை உச்சி தான்அணிப் பொறாஅது
மலர்மிசை நடந்த மலர் அடி அல்லது என் தலைமிசை உச்சி தான் அணிப்பொறாஅது-எனது தலையினுச்சியும் பூவின்மீது நடந்த தாமரைபோன்ற அடிகளை அணியப் பொறுக்குமல்லது பிறிதொன்றனையும் அணியப்பொறாது;
௨0௬-௭. இறுதிஇல் இன்பத்து இறைமொழிக்கு அல்லது
மறுதிர ஓதிஎன் மனம்புடை பெயராது
இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது மறுதர ஓதி என் மனம் புடைபெயராது – எனதுள்ளமும் முடிவிலா இன்பத்தினையுடைய இறைவன் அருளிச்செய்த ஆகமத்தை உருவேற் ஓதிப்புடைபெயர் தலல்லது பிறிதொரு மொழியை ஓதிப் புடைபெயராது;
மொழி-ஆகமம்; ஆகுபெயர். மறுதர ஓதுதல்-மீட்டும் மீட்டும் ஓதுதல்.
௨0௮-௧௩. என்றவன் இசைமொழி ஏத்தக் கேட்டுஅதற்கு
ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி
நிவந்துஆங்கு ஒருமுழம் நீள்நிலம் நீங்கிப்
பவம்தரு பாசம் கவுந்தி கெடுகென்று
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது
பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து,
என்று அவன் இசைமொழி ஏத்தக் கேட்டு-என்று கூறி அவ் வருகதேவனது புகழ் மொழிகளைப் போற்றல் கேட்டு, அதற்கு ஒன்றிய மாதவர்-அக்கூற்றுக்கு உளம் ஒருப்பட்ட சாரணர், உயர்மிசை ஓங்கி நிவந்து ஆங்கு ஒரு முழம் நீணிலம் நீங்கி-சிலாவட்டத்தினின்றும் எழுந்து நிலத்தை விட்டு நீங்கி அந்நிலத்தினும் ஒரு முழம் உயர்ந்து நின்று, பவந்தரு பாசம் கவுந்தி கெடுகென்று-பிறப்பினைத் தரும் பாசம் கவுந்திக்கும் கெடுவதாகவென்று கூறி, அந்தரம் ஆறுஆப் படர்வோர்த் தொழுது-விசும்பின் வழியே செல்லும் அச் சாரணரைத் தொழுது, பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து-பாசம் ஒழிகவென்று வணங்கி வந்து;
கவுந்தி கெடுக என்றது கவுந்திக்குக் கெடுக என்றவாறு. படர்வோர், வினைப்பெயர். பணிந்தனர்,முற்றெச்சம்.
௨௧௪-௮. கார்அணி பூம்பொழில் காவிரிப் பேர்யாற்று
நீர்அணி மாடத்து நெடுந்துறை போகி
மாதரும் கணவனும் மாதவத் தாட்டியும்
தீதுதீர் நியமத் தென்கரை எய்திப்
போதுசூழ் கிடக்கைஓர் பூம்பொழில் இருந்துழி
கார் அணி பூம்பொழிற் காவிரிப் பேர் யாற்று-முகிலையணிந்த மலர் நிறைந்த சோலைகளையுடைய காவிரியாகிய பெரிய யாற்றின், நீர் அணி மாடத்து நெடுந்துறை போகி-நெடுந்துறையைப் பள்ளியோடத்தானே போந்து, மாதரும் கணவனும் மாதவத்தாட்டியும் தீது தீர் நியமத் தென்கரை எய்தி-கண்ணகியும் அவள் கணவன் கோவலனும் கவுந்தியடிகளும் குற்றம் தீர்ந்த கோயிலையுடைய தென்கரையை அடைந்து, போதுசூழ் கிடக்கை ஓர் பூம்பொழில் இருந்துழி-மலர் சூழ்ந்து கிடக்கினற ஒரு பொலிவு பெற்ற சோலைக்கண் சென்றிருந்த பொழுது;
நீரணிமாடம்-பள்ளியோடம். மாதருங் கணவனும் மாதவத்தாட்டியும் போகி என்க.
௨௧௯-௨உ0. வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு
கொங்குஅலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர்
வம்பப் பரத்தை வறுமொழியாளனொடு-புதிய பரத்தைத் தன்மை யுடையாளொருத்தியும் பயனில சொல்லும் விடனொருவனும், கொங்கலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர்-மணம் பரந்த பொலிவினையுடைய சோலைக்கண் அணுகினராய்ச் சென்றனர்;
வம்பு-புதுமை. வம்பப் பரத்தை என்பதற்குத் தன் மனவெழுச்சியால் தோன்றினபடி சொல்லித் திரியும் பரத்தை என்னலுமாம். வறுமொழியாளன்-விடன். சென்றோர்- வினைப்பெயர்.
௨௨௧-௨. காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர்
ஆர்எனக் கேட்டுஈங்கு அறிகுவம் என்றே,
காமனும் தேவியும் போலும் ஈங்கிவர்-இவ்விடத்துக் காமனும் அவன் தேவியுமாகக் காணப்படுகின்ற இவர், ஆரெனக்கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே-யாரென்று கேட்டு இப்பொழுது அறிவோம் என்று சொல்லி;
போலும். ஒப்பில்போலி. இனி, இப்போலும் என்பதனை உவம வுருபாக்கிப் பொருள் கூறலு மமையும்.
௨௨௩-௪. நோற்றுஉணல் யாக்கை நொசிதவத் தீர்உடன்
ஆற்றுவழிப் பட்டோர் ஆர்என வினவ,
நோற்றுணல் யாக்கை நொசி தவத்தீர்-விரதத்தினை மேற்கொண்டு பட்டினி கிடந்துண்ணுதலான் இளைத்த யாக்கையினையும் நுண்ணிய தவத்தினையுமுடையீர், உடன் ஆற்று வழிப்பட்டோர் ஆரென வினவ-நும்மொடு வழிவந்த இவர் யாரென்று வினவ;
நொசி-நுண்மை: நொசி யாக்கை யெனலுமாம். ஆற்றுவழிப்பட்டோர்-வழியிற் கூடி வந்தோர். நோற்றுணல் - பட்டினி கிடந்துண்ணல்.
௨௨௪-௬ என்
மக்கள் காணீர் மானிட யாக்கையர்
பக்கம் நீங்குமின் பரிபுலம் பினர்என,
என் மக்கள் காணீர் மானிட யாக்கையர்-இவர் என்னுடைய மக்களாவார். நீர் கூறிய காமனும் தேவியுமல்லர், மானிடயாக்கையுடையார் காணும்; பக்கம் நீங்குமின் பரிபுலம்பினர் என – வழிச்செலவின் வருத்தத்தினால் மிகவும் வருந்தினர் அவரிடைச் செல்லாதே விலகிச் செல்லுமின் என்றுரைக்க;
பரி-மிகுதி. பரி புலம்பினர் என்பதற்குச் செலவினால் வருந்தினர் எனக் கூறலுமாம். பரி-செலவு.
௨௨௭-௮. உடன்வயிற் றோர்க்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ ? கற்றறிந் தீர்எனத்,
உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவது முண்டோ கற்றறிந்தீர் என – நூல்களைக் கற்று அவற்றின் பயனையுணர்ந்த பெரியீர்; ஒரு வயிற்றிற் பிறந்தோர் கணவனும் மனைவியுமாய்க் கூடி வாழ்க்கை நடாத்தல் என்பது நீர் கற்ற நூல்களிற் கூறப்படுதலு முண்டோ எனக் கேட்ப; கற்றறிந்தீர் என்றது இகழ்ச்சி தோற்றி நின்றது.
௨௨௯-௪0. தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க,
எள்ளுநர் போலும்இவர் என்பூங் கோதையை
முள்உடைக் காட்டின் முதுநரி ஆகெனக்
கவுந்தி இட்ட தவம்தரு சாபம்
கட்டியது ஆதலின், பட்டதை அறியார்
குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு
நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்
அறியா மைஎன்று அறியல் வேண்டும்
செய்தவத் தீர்நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீ ரோஎன,
தீ மொழி கேட்டுச் செவியகம் புதைத்துக் காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க-இன்னணம் இவரிகழ்ந்த கொடுமொழியினைக் கேட்டு இரு செவிகளையும் பொத்தித் தன் கணவன் முன்னர்க் கண்ணகி நடுங்கி நிற்ப, எள்ளுநர் போலும் இவர் என் பூங்கோதையை – எனது பூங்கோதை போல்வாளை இவர் இகழ்ந்தனர் ஆயினார், முள்ளுடைக் காட்டின் முதுநரி ஆகென-ஆகலான், முட்கள் நிறைந்த காட்டின்கண் இவர் நரியாகவென்று உள்ளத்து எண்ணி, கவுந்தி இட்ட தவந்தரு சாபம்-கவுந்தியடிகளிட்ட தவத்தினான் விளைந்த சாபம், கட்டியது ஆதலின்-இவரைப் பூண்டதாகலான், பட்டதை அறியார் குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி-நறுவிய மலரணிந்த கண்ணகியும் கோவலனும் விளைந்ததனை அறியாராய்க் குறிய நரியினது நெடிய குரலாகக் கூவும் விளியைக் கேட்டு நடுங்கி, நெறியின் நீங்கியோர் நீரல கூறினும் அறியாமை என்று அறிதல் வேண்டும்-நல்லொழுக்க நெறியினின்றும் விலகிய அறிவிலார் நீர்மை அல்லாதனவற்றைச் சொல்லினும் அஃதறியாமையாற் கூறியதாகும் எனப் பெரியோர் உணர்தல் வேண்டும்; செய்தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு உய்திக்காலம் உரையீரோ என-செய்த தவத்தினையுடையீர். உம்முடைய திருமுன்பு தவறு செய்த இவர்க்கு உய்தலுடைத்தாங் காலத்தை மொழிந்தருளுவீர் என்று கூற;
போலும்; ஒப்பில் போலி. நடுங்குதல் தம் பொருட்டால் விளைந்தமையான் என்க. பரத்தையும் விடனும் கண்ணகி கோவலன் இவ்விருவரையுமே இகழ்ந்தனராகவும். “எள்ளுநர் போலுமிவ ரென்பூங்கோதையை” எனக் கண்ணகியையே இகழ்ந்ததாகக் கவுந்தியடிகள் கூறியது ஆண்மக்களை இழித்துக் கூறினும் பெண்மக்களை இகழ்தல் தகாது என்னும் உலக வழக்குப்பற்றிப் போலும். பட்டதை அறியார் ஆயினார் ‘முதுநரி யாகென’ உள்ளத்தே நினைந்து சபித்தலின், பின்னர் அறிந்த தெவ்வாறெனின்? அவர் கண்முன் நரியாயினவா ற்றானும் பொல்லாங்கு கூறினமையானும், அவ்விடத்தே இவரல்லது வேறு சாபமிட வல்லாரில்லை யாகலானும் இச் சாபம் இவரானே விளைந்ததெனக் கண்டனர் என்க. அறியல் வேண்டும் என்றது அவருட்கோள்; உடையீரோ வென்றது கவுந்தியை நோக்கிக் கூறியது. இதனானே கண்ணகியும் கோவலனும் பிழைத்தோர்ப் பொறுக்கும் பெருமையினையுடையார் என்பதும், பிறர் இன்னல் கண்டு பொறார் என்பதும் அறியக் கிடக்கின்றன.
௨௪௧-௫. அறியா மையின்இன்று இழிபிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்
முன்னை உருவம் பெறுகஈங்கு இவர்எனச்
சாபவிடை செய்து,
அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர்-தமது அறியாமை காரணமாக இன்று இழி பிறவி உற்ற இவர்கள், உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி-உறையூர் மதிற்புறமாகிய காவற் காட்டிற் றிரிந்து, பன்னிரு மதியம் படர் நோய் உழந்தபின்-பன்னிரண்டு திங்கள் நினைந்து வருந்தத் தக்க துன்பத்தினான் வருந்திய பின்னர், முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் எனச் சாபவிடை செய்து – முன்னை வடிவத்தினை இவர் பெறுவாராக என்று சாபவிடை செய்து;
நெடுங்காலம் தவஞ்செய்து பெற்ற மக்கட் பிறப்பை ஒரு மொழியான் இழந்தனர் என்பது தோன்ற இழிபிறப்பு உற்றோர் என்றார். இதனானே யா காவா ராயினும் நா காத்தல் இன்றியமையாதது என்பது பெறப்படும்.
௨௪௫-௮. தவப்பெருஞ் சிறப்பின்
காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும்
முறம்செவி வாரணம் முஞ்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்துஎன்.
தவப் பெருஞ் சிறப்பிற் காவுந்தியையையும் தேவியும் கணவனும்-தவத்தானே மிக்க சிறப்பினையுடைய கவுந்தி யடிகளும் கண்ணகியும் கோவலனும், முறம் செவி வாரமம் முன் சமம் முருக்கிய-முறம்போலுஞ் செவியினையுடைய யானையை முன்னர்ச் சமரிடத்துக் கெடுத்த, புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்-புறத்தே சிறகினையுடைய கோழி என்னும் நகரின் கண் விரும்பிப் புக்கார் என்க.
முற்காலத்து ஒரு கோழி யானையைப் போர் தொலைத்தலான் அவ்விடத்துச் செய்த நகர்க்குக் கோழி என்பது பெயராயிற்று. அந்நகர் காணும்பொழுது சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால் புறஞ்சிறை வாரணம் எனப்பட்டது என்பர் அரும்பதவுரை யாசிரியர். புறஞ்சிறை வாரணம்-புறத்தே இறகினையுடைய கோழி. புறத்தே சேரிகளையுடைய கோழியூர் எனப் பொருளுரைப்பார் அடியார்க்குநல்லார்.
சென்றோர் அறிகுவமென்று வினவ புலம்பினரென கடவது முண்டோ எனக் கேட்டுப் புதைத்து நடுங்க முதுநரியாகென அறியார் கேட்டு நடுங்கி உரையீரோவென ஒதுங்கி உழந்தபின் பெறுக எனச் செய்து புரிந்து புக்கனர் என்க.
இது நிலைமண்டில வாசிரியப்பா
நாடுகாண் காதை முற்றிற்று.
-----------------------
கட்டுரை
முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும்
தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்துஉதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதுர்ப் பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்
பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்
ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும்
தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும்
ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்
என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று.
முடியுடை வேந்தர் மூவருள்ளும்-முடியுடை யரசராகிய சோழர் பாண்டியர் சேரர் என்னும் மூவருள்ளும், தொடி விளங்கு தடக்கைச் சோழர் குலத்து உதித்தோர்-வீரவளை விளங்கும் பெரிய கையையுடைய சோழர் குலத்துப் பிறந்தோருடைய, அறனும்............என்றிவை அனைத்தும், பிற பொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்-ஈண்டுச் சொல்லாத பிற பொருள்களின் கிடக்கையோடு பொருந்தித் தோன்றும் ஒப்பற்ற முறைமையின் நிலைபேறும், ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றிற்று – ஒரு படியாக நோக்கிக் கிடந்த காண்டம் முற்றியது.
அடிகள் இக் காண்டத்துக் கூறிய பொருள்கள் இன்னின்ன வென இதன்கட் குறிப்பிடுகின்றார். அவற்றுள்.
அறன் – அறனோம்படை (௫:௧௭௬)
மறன் – இமயத்துப் புலி பொறித்தது (௫:௬௭-௮)
ஆற்றல் – அமராபதி காத்தது. (௬.௧௪)
மூதூர்ப் பண்பு மேம்படுதல்-ஒடுக்கங்
கூறாமை (௧: ௧௮)
விழவு மலி சிறப்பு-இந்திர விழவு (௫.)
விண்ணவர் வரவு. (௬: ௭௨-௩)
குடி-உழவிடை விளைப்போர். (௧0: ௧௫0)
கூழின் பெருக்கம்-செந்நெற் காய்த்தலையில் கூட்டின் நெற் சொரிதல் (௧0 : ௧௨௩-௪)
காவிரிச்சிறப்பு“கரியவன்புகையினும்............ஒலிக்கும்” (௧0:௧0௨-௬.)
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதல் –மழைக்கரு வுயிர்த்தல். (௧0:௧௪௩)
அரங்கும் ஆடலும் தூக்கும் (௩)
வரி – கண்கூடுவரி முதலிய எட்டுவரியும். (அ:௭௪-௧0௮.)
பாரதி விருத்தி – பதினோராடல். (௬: ௩௯-௬௩.)
திணைநிலைவரி. (எ: ௧௭-௨௩)
இணைநிலைவரி (௭)
யாழின் றொகுதி- “சித்திரப்படம்” முதல் “பட்டடை” ஈறாகவுள்ளன (௭:௧.)
‘உழைமுதற் கைக்கிளை’ முதலாயினவுமாம். (அ: ௩௨)
ஈரேழ் சோகடம் – “ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி”(௩:௭0)
இடநிலைப் பாலை – “கோடி விளரிமேற் செம்பாலை”முதலாயின (௩: ௮௮)
தாரத் தாக்கம். (௮: ௩௮)
தான்றெரி பண் – அகநிலை மருதம் முதலாயின. (௮: ௩௯-௪0)
ஊரகத்து ஏர்-ஊரின் வண்ணம். (௫)
ஒளியுடைப் பாணி – “வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணி” முதலாயின. (க0:௧௩௧.)
வெண்பாவுரை
காலை அரும்பி மலரும் கதிரவனும்
மாலை மதியமும்போல் வாழியரோ - வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.
காலை அரும்பி மலரும் கதிரவனும்-காலையில் உதித்து ஒளி விரியும் பரிதியும், மாலை மதியமும் போல்-மாலையில் உதிக்கும் வளருமியல்புடைய திங்களும் போல, வாழியரோ-வாழ்வதாக; வேலை அகழால் அமைந்த அவனிக்கு-கடலாகிய அகழோடு அமைந்த புவனிக்கு, மாலைப் புகழால் அமைந்த புகார்-மாலை யெனப்படும் புகழோடு பொருந்திய காவிரிப்பூம்பட்டினம்.
ஆல்-ஒடு. புகார் வாழியரோ என்க.