Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!


சூளாமணி (ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று)
ஆசிரியர் - தோலாமொழித் தேவர்



உள்ளடக்கம்
    0. பாயிரம் (1- 6)
    1. நாட்டுச் சருக்கம் (7- 35)
    2. நகரச் சருக்கம் (36- 69)
    3. குமாரகாலச் சருக்கம் (70-118)
    4. இரதநூபுரச் சருக்கம் (119-238)
    5. மந்திரசாலைச் சருக்கம் (239- 430)
    6. தூதுவிடு சருக்கம் (431- 572)
    7. சீயவதைச் சருக்கம் (573- 826)
    8. கல்யாணச் சருக்கம் (827 - 1130)
    9. அரசியற் சருக்கம் (1131- 1554)
    10. சுயம்வரச் சருக்கம் (1555 - 1839)
    11. துறவுச் சருக்கம் (1840- 2068)
    12. முத்திச் சருக்கம் (2069 - 2130)

சூளாமணி (ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று)
ஆசிரியர் - தோலாமொழித் தேவர்

அணிந்துரை
[பெருமழைப் புலவர் திரு.பொ.வே.சோமசுந்தரனார்]

சூளாமணி என்பது செந்தமிழ் மொழியின்கண் சிறந்து விளங்கும் பெருங்காப்பியங்களுள் ஒன்று. இது ஆருகத சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் என்னும் நல்லிசைப் புலவரால் இயற்றப்பட்டது. கடைச்சங்க காலத்திற்குப் பின்னரும் தேவாரக் காலத்திற்கு முன்னரும் நிகழ்ந்த காலத்தில் நம் தமிழகத்தின் கண் ஆருகத சமயம் என்னும் சமண சமயம் யாண்டும் பரவி மிகவும் செழிப்புற்றிருந்தது. அக்காலத்தே அம்மதச் சார்புடைய நல்லிசைப் புலவர் பலர் அம் மதத்திற்கு ஆக்கமாக இயற்றிய பெருங்காப்பியங்கள், நிகண்டுகள் பல.

சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி இவை ஐம்பெருங்காப்பியமாம். சூளாமணி, யசோதர காவியம், உதயண காவியம், நாககுமார காவியம், நீலகேசி இவை ஐஞ்சிறுகாப்பியமாம். இலக்கண வகையாலன்றிக் காப்பியப் பண்பு வகையாலும் தலை சிறந்த காவியம் சிந்தாமணியாகும். இதை அடியொற்றி அதற்குப் பின் தோன்றிய பெருங்காப்பியமே இச் சூளாமணியாகும். எனினும், சிந்தாமணியின் செய்யுளைக் காட்டிலும் சூளாமணியின் செய்யுட்கள் இனிய ஓசையுடையனவாய்ச் சிறந்திருக்கிறது.

சூளாமணி என்னும் இவ் வனப்பியல் நூல் ஆருகத நூலாகிய பிரதமாநுயோக மகாபுராணத்தில் கூறப்பட்ட பழைய கதை ஒன்றினை பொருளாகக் கொண்டு எழுந்த நூலாகும். இந்நூலிற்கு அமைந்த சூளாமணி என்னும் இப் பெயர் ஆசிரியரால் இடப்பட்ட பெயராகத் தோன்றவில்லை, தன்மையால் வந்த பெயரே ஆகும்.

நூலாசிரியர் வரலாறு

சூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவரின் இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. இவர் இந்நூலின்கண் இரண்டிடங்களில் 'ஆர்க்கும் தோலாதாய்' என்றும், 'தோலாநாவிற் சச்சுதன்' இனிய அழகிய சொற்றொடரை வழங்கி யிருத்தலால் அதன் அருமை உணர்ந்த பெரியோர் இவரைத் தோலாமொழித் தேவர் என்று வழங்கலாயினர் என பெரியோர்கள் கருதுகின்றனர்.

இவர் கார்வெட்டியரசன் விசயன் என்பவனுடைய காலத்தவர் ,தருமதீர்த்தங்கரரிடத்தே பெரிதும் ஈடுபாடுடையவர் என்றும் மன்னன் விசயன் வேண்டுகோளின்படி இந்நூலை இயற்றினார் என்பதும் சில செய்யுட்களால் விளக்கப்பட்டு இருக்கிறது. கடைச் சங்க காலத்திற்குப் பின்னர்ச் சமண சமயம் செழிப்புற்றிருந்த காலத்தே அச் சமயக் கணக்கர்கள் அதை பரப்பும் பொருட்டு அங்கங்கே சங்கங்கள் பல நிறுவினர் ,அதில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ச்சங்கம் [திரமிள சங்கம் ] மிகவும் சிறப்புற்றிருந்தது. இச் சங்கங்களுக்கு அரசர்கள் தலைமை தாங்கினர்.இச் சூளாமணி, அரசன் விசயன் சேந்தன் அவையின்கண் அமைந்த சான்றோர்களால் கேட்கப்பட்டு அவர்களால் நல்லநூல் என ஏற்றுக் கொள்ளப்பட்டும் இருக்கிறது.

இனி, தோலாமொழித்தேவர் வாழ்ந்த காலத்தை இதுகாறும் யாரும் வரையறுத்துக் கூறவில்லை. அச் சூளாமணிக்கு முற்பட்ட சிந்தாமணியின் காலம் கி.பி. 897 க்குப் பின்னாதல் வேண்டும். எங்ஙனமாயினும், சிந்தாமணி ஆசிரியருக்குத் தோலாமொழித் தேவர் பிற்காலத்தவர் என்பதை மறுப்பார் யாருமில்லை. எனவே, இவர் கடைச்சங்ககால்த்திற்குப் பின்னிருந்த சிந்தாமணி ஆசிரியராகிய திருத்தக்கதேவர் காலத்திற்கு அணித்தாய்த் தேவாரக் காலத்திற்கு முற்பட்டதொரு காலத்தே வாழ்ந்தவர் என்பது ஒருவாறு பொருந்துவதாம்.

------


சூளாமணி (ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று)
ஆசிரியர் - தோலாமொழித் தேவர்
முதல் பாகம்

சூளாமணி - முதல் பாகம்

பாயிரம்

கடவுள் வாழ்த்து

வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றும்
சென்றான் திகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி
நின்றா னடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்

கடவுள் வாழ்த்து முற்றிற்று

நுதல் முதலிய பொருள்

அங்கண் ணுலகிற் கணிவான்சுட ராகி நின்றான்
வெங்கண் வினைபோழ்ந் திருவச் சரண் சென்ற மேனாள்
பைங்கண் மதர்வைப் பகுவாயரி யேறு போழ்ந்த
செங்கண் ணெடியான் சரிதம்மிது செப்ப லுற்றேன்

அவை அடக்கம்

கொற்றங்கொ ணேமி நெடுமால்குணங் கூற விப்பால்
உற்றிங்கொர் காதல் கிளரத்தமிழ் நூற்க லுற்றேன்
மற்றிங்கொர் குற்றம் வருமாயினு நங்கள் போல்வார்
அற்றங்கள் காப்பா ரறிவிற்பெரி யார்க ளன்றே

நூலரங்கேற்றிய களனும், கேட்டோ ரும்

நாமாண் புரைக்குங் குறையென்னிது நாம வென்வேல்
தேமா ணலங்கற் றிருமால்நெடுஞ் சேந்த னென்னும்
தூமாண் தமிழின் கிழவன்சுட ரார மார்பின்
கோமா னவையுட் டெருண்டார்கொளப் பட்ட தன்றே

செங்கண் ணெடியான் றிறம்பேசிய சிந்தை செய்த
நங்கண் மறுவும் மறுவன்றுநல் லார்கண் முன்னர்
அங்கண் விசும்பி நிருள்போழ்ந்தகல் வானெ ழுந்த
திங்கண் மறுவுஞ் சிலர்கைதொழச் செல்லு மன்றே

நூல் வந்த வழி

விஞ்சைக் கிறைவன் விரைசூழ்முடி வேந்தன் மங்கை
பஞ்சிக் கனுங்குச் சிலம்பாரடிப் பாவை பூவார்
வஞ்சிக் கொடிபோல் பவள்காரண மாக வந்த
செஞ்சொற் புராணத் துரையின்வழிச் சேறு மன்றே


பாயிரம் முற்றிற்று
-----------------------

முதல் பாகம்

முதலாவது - நாட்டுச் சருக்கம்

சுரமை நாட்டின் சிறப்பு

மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர்
இஞ்சிசூ ழணிநக ரிருக்கை நாடது
விஞ்சைந்ண ளுலகுடன் விழாக்கொண் டன்னது
துஞ்சுந்ணணள் ந்஢தியது சுரமை யென்பவே.


கயல்களும் கண்களூம்

பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்
செங்கய லினநிரை திளைக்குஞ் செல்வமும்
மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி
அங்கயர் பிறழ்ச்சியு மறாத நீரவே.


வயல்களும் ஊர்களும்

ஆங்கவ ரணிநடை யன்னத் தோட்டன
தீங்குரன் மழலையாற் சிலம்புந் தண்பணை
வீங்கிள முலையவர் மெல்லென் சீறடி
ஓங்கிருஞ் சிலம்பினாற் சிலம்பு மூர்களே.


பொழில்களிலும் வீடுகளிலும் இன்னிசை

நிழலகந் தவழ்ந்துதே னிரந்து தாதுசேர்
பொழிலகம் பூவையுங் கிளீ஢யும் பாடுமே
குழலகங் குடைந்துவண் டுறங்குங் கோதையர்
மழலையும் யாழுமே மலிந்த மாடமே.


வண்டுகளுங் கொங்கைகளும்

காவியும் குவளையு நெகிழ்ந்து கள்ளுமிழ்
ஆவியுண் டடர்த்ததே னகத்து மங்கையர்
நாவியுங் குழம்பு முண் ணகில நற்றவம்
மேவிநின் றவரையு மெலிய விம்முமே.


சுரமை நாட்டின் நானிலவளம்

வானிலங் கருவிய வரையு முல்லைவாய்த்
தேனிலங் கருவிய திணையுந தேரல்சேர்
பானலங் கழனியுங் கடலும் பாங்கணி
நானிலங் கலந்துபொன்னரலு நாடதே.


குறிஞ்சி நிலம்

முன்றி லெங்கு முருகயர் பாணியும்
சென்று வீழரு வித்திர ளோசையும்
வென்றி வேழ முழக்கொடு கூடிவான்
ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்.


முல்லை நிலம்

ஏறு கொண்டெறி யும்பணைக் கோவலர்
கூறு கொண்டெழு கொன்றையந் தீங்குழல்
காறு கொண்டவர் கம்பலை யென்றிவை
மாரு கொண்டுசி லம்புமொர் மாடெலாம்.


மருத நிலம்

அணங்க னாரண வாடல் முழவமும்
கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும்
மணங்கொள் வார்முர சும்வய லோதையும்
இணங்கி யெங்கு மிருக்குமொர் பாலெலாம்.


நெய்தல் நிலம்

கலவ ரின்னிய முங்கட லச்சிறார்
புலவு நீர்ப்பொரு பூணெறி பூசலும்
நிலவு வெண்மண னீளிருங் கானல்வாய்
உலவு மோதமு மோங்குமொர் பாலெலாம்.


குறிஞ்சி நிலம்

கைவி ரிந்தன காந்தளும் பூஞ்சுனை
மைவி ரிந்தன நீலமும் வான்செய்நாண்
மெய்வி ரிந்தன வேங்கையும் சோர்ந்ததேன்
நெய்வி ரிந்தன நீளிருங் குன்றெலாம்.


முல்லை நிலம்

கொன்றை யுங்குருந் துங்குலைக் கோடலும்
முன்றி லேறிய முல்லையம் பந்தரும்
நின்று தேன்நிரந் தூதவி ரிந்தரோ
மன்றெ லாமண நாரும ருங்கினே.


மருதம்

நாற விண்டன நெய்தலு நாண்மதுச்
சேறு விண்டசெந் தாமரைக் கானமும்
ஏறி வண்டின மூன்றவி ழிந்ததேன்
ஊறி வந்தொழு கும்மொரு பாலெலாம்.


நெய்தல்

கோடு டைந்தன தாழையுங் கோழிருள்
மோடு டைந்தன மூரிக் குவளையும்
தோடு டைந்தன சூகமுங் கற்பகக்
காடு டைந்தன போன்றுள கானலே.


குறிஞ்சி
நீல வால வட்டத்தி னிறங்கொளக்
கோலும் பீலிய கோடுயர் குன்றின்மேல்
ஆலு மாமழை நீள்முகி லார்த்தொறும்
ஆலு மாமயி லாலுமொர் பாலெலாம்.


முல்லை

நக்க முல்லையு நாகிளங் கொன்றையும்
உக்க தாதடர் கொண்டொலி வண்டறா
எக்க ரீர்மணற் கிண்டியி ளம்பெடைப்
பக்க நோக்கும் பறவையொர் பாலெலாம்.


மருதம்
துள்ளி றாக்கவுட் கொண்டு சுரும்பொடு
கள்ள றாதசெந் தாமரைக் கானகத்
துள்ள றாதுதைந் தோகை யிரட்டுறப்
புள்ள றதுபு லம்பின பொய்கையே.


நெய்தல்
வெண்மு ளைப்பசுந் தாமரை மென்சுருள்
முண்மு ளைத்திர ளோடு முனிந்துகொண்
டுண்மு ளைத்திள வன்ன முழக்கலால்
கண்மு ளைத்த தடத்த கழியெலாம்.


குறிஞ்சி

காந்த ளங்குலை யாற்களி வண்டினம்
கூந்தி ளம்பிடி வீசக்கு ழாங்களோ
டேந்து சந்தனச் சர லிருங்கைமா
மாந்தி நின்றுறங் கும்வரை மாடெலாம்,


முல்லை

தார்செய் கொன்றை தளித்ததண் டேறலுண்
டேர்செய் கின்ற விளம்பு லிருங்குழைக்
கார்செய் காலை கறித்தொறு மெல்லவே
போர்செய் மாவினம் பூத்தண்பு றணியே.

மருதம்

அள்ளி லைககுவ ளைத்தடம் மேய்ந்தசைஇக்
கள்ள லைத்தக வுட்கரு மேதிபால்
உள்ள லைத்தொழு கக்குடைந் துண்டலால்
புள்ள லைத்த புனலபு லங்களே.


நெய்தல்

கெண்டை யஞ்சினை மேய்ந் து கிளர்ந்துபோய்
முண்ட கத்துறை சேர்ந்த முதலைமா
வண்டல் வார்கரை மாமக ரக்குழாம்
கண்டு நின்று கனலும் கழியெலாம்.

குறிஞ்சி

கண்ணி லாங்கழை யின்கதிர்க் கற்றையும்
மண்ணி லாங்குரல் வார்தினை வாரியும்
எண்ணி லாங்கவி ளைவன வீட்டமும்
உண்ணி லாங்குல வாமை யுயர்ந்தவே.


முல்லை
பேழ்த்த காயின பேரெட் பிறங்கிணர்
தாழ்த்த காயின தண்ணவ ரைக்கொடி
சூழ்த்த காய்த்துவ ரைவர கென்றிவை
மூழ்த்த போன்றுள முல்லை நிலங்களே.


மருதம்

மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும்
பூடு கொண்ட பொதும்பரொ டுள்விராய்த்
தோடு கொண்டபைங் காய்துவள் செந்நெலின்
காடு கொண்டுள கண்ணக னாடெலாம்.

நெய்தல்

சங்கு நித்தில முத்தவ ழிப்பியும்
தெங்கந் தீங்குலை யூறிய தேறலும்
வங்க வாரியும் வாரலை வாரியும்
தங்கு வாரிய தண்கட னாடெலாம்.


திணை மயக்கம் [ மலர்]

கொடிச்சியர் புனத்தயல் குறிஞ்சி நெய்பகர்
இடைச்சியர் கதுப்பயர் கமழு மேழையம்
கடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த்
தொடுத்தலர் பிணையலார் குழலுட் டோ ன்றுமே.

திணை மயக்கம் [ ஒலி ]
கலவர்தஞ் சிறுபறை யிசையிற் கைவினைப்
புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே
குலவுகோற் கோவலர் கொன்றைத் தீங்குழல்
உலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே.


சுரமை நாட்டின் சிறப்பு

மாக்கொடி மாணையு மெளவற் பந்தரும்
கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகைப்
பூக்கொடிப் பொதும்பரும் பொன்ன ஞாழலும்
தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொக்குமே. 29


முதலாவது நாட்டுச் சருக்கம் முற்றிற்று
--------------------------

இரண்டாவது
நகரச் சருக்கம்


சுரமை நாட்டுப் போதனமா நகரம்

சொன்னநீர் வளமைத் தாய சுரமைநாட் டகணி சார்ந்து
மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட
பொன்னவிர் புரிசை வேலிப் போதன மென்ப துண்டோ ர்
நன்னகர் நாக லோக நகுவதொத் தினிய தொன்றே.


நகரத்தின் அமைதி

சங்கமேய் தரங்க வேலித் தடங்கடற் பொய்கை பூத்த
அண்கண்மா ஞால மென்னுந் தாமரை யலரி னங்கேழ்ச்
செங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகும்
நங்கையர் படிவங் கொண்ட நலத்தது நகர மன்றே.


அகழியும் மதிலரணும்

செஞ்சுடர்க் கடவு டிண்டே ரிவுளிகா றிவள வூன்றும்
மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயின் மாடத்
தஞ்சுட ரிஞ்சி , யாங்கோ ரழகணிந் தலர்ந்த தோற்றம்
வெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதிட் டன்றே.


அம்மதிற் புறத்தே அமைந்த யானைகட்டுமிட மாண்பு

இரும்பிடு தொடரின் மாவி னெழுமுதற் பிணித்த யானைக்
கரும்பிடு கவள மூட்டும் கம்பலை கலந்த காவின்
அரும்பிடை யலர்ந்த போதி னல்லியுண் டரற்று கின்ற
கரும்பொடு துதைந்து தோன்றுஞ் சூழ்மதில் இருக்கை யெல்லாம்


மாடங்களின் மாண்பு

மானளா மதர்வை நோக்கின் மையரி மழைக்க ணார்தம்
தேனளா முருவக் கண்ணிச் செல்வர்தோ டிளைக்கு மாடங்
கானளாங் காம வல்லி கற்பகங் கலந்த கண்ணார்
வானளாய் மலர்ந்து தோன்று மணிவரை யனைய தொன்றே.

இதுவுமது - வேறு

அகிலெழு கொழும்புகை மஞ்சி னாடவும்
முகிலிசை யெனமுழா முரன்று விம்மவும்
துகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும்
இகலின மலையொடு மாட மென்பவே.

மாடங்களின் சிறப்பு

கண்ணெலாங் கவர்வன கனக கூடமும்
வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும்
தண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ
மண்ணினா லியன்றில மதலை மாடமே.


மாடத்திற் பலவகை ஒலிகள்

மாடவாய் மணிமுழா விசையு மங்கையர்
ஆடுவார் சிலம்பிணை யதிரு மோசையும்
பாடுவார் பாணியும் பயின்று பல்கலம்
முடிமா ணகரது முரல்வ தொக்குமே


வண்டுகளின் மயக்கம்

தாழிவாய்க் குவளையுந் தண்ணெ னோதியர்
மாழைவா ணெடுங்கணு மயங்கி வந்துசென்
றியாழவா மின்குர லாலித் தார்த்தரோ
ஏழைவாய்ச் சுரும்பின மிளைக்கு மென்பவே.

கடைத்தெரு

பளிங்குபோழ்ந் தியற்றிய பலகை வேதிகை
விளிம்புதோய் நெடுங்கடை வீதி வாயெலாம்
துளங்குபூ மாலையுஞ் சுரும்புந் தோன்றலால்
வளங்கொள்பூங் கற்பக வனமும் போலுமே.

சிலம்பொலிக்கு மயங்குஞ் சிறுஅன்னங்கள்

காவிவாய்க் கருங்கணார் காமர் பூஞ்சிலம்
பாவிவாய் மாளிகை யதிரக் கேட்டொறும்
தூவிவான் பெடைதுணை துறந்த கொல்லென
வாவிவா யிளவனம் மயங்கு மென்பவே.


அரசர் தெருவழகு

விலத்தகைப் பூந்துணர் விரிந்த கோதையர்
நலத்தகைச் சிலம்படி நவில வூட்டிய
அலத்தகக் குழம்புதோய்ந் தரச வீதிகள்
புலத்திடைத் தாமரை பூத்த போலுமே.

செல்வச் சிறப்பு

கண்ணிலங் கடிமலர்க் குவளைக் கற்றையும்
வெண்ணிலாத் திரளென விளங்கு மாரமும்
வண்ணவான் மல்லிகை வளாய மாலையும்
அண்ணன்மா நகர்க்கவைக் கரிய அல்லவே.

மாளிகைகளில் உணவுப்பொருள்களின் மிகுதி

தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா
மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும்
மாம்பழக் குவைகளூ மதுத்தண் டீட்டமும்
தாம்பழுத் துளசில தவள மாடமே.

இன்ப உலகம்

மைந்தரு மகளிரு மாலை காலையென்
றந்தரப் படுத்தவ ரறிவ தின்மையால்
சுந்தரப் பொற்றுக டுதைந்த பொன்னக
ரிந்திர வுலகம்வந் திழிந்த தொக்குமே.


பயாபதி மன்னன் மாண்பு

மற்றமா நகருடை மன்னன் றன்னுயா
ஒற்றைவெண் குடைநிழ லுலகிற் கோருயிர்ப்
பொற்றியான் பயாபதி யென்னும் பேருடை
வெற்றிவேல் மணி முடி வேந்தர் வேந்தனே


பயாபதி மன்னன் சிறப்பு

எண்ணின ரெண்ணகப் படாத செய்கையான்
அண்ணிய ரகன்றவர் திறத்து மாணையான்
நண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினும்
தண்ணியன் வெய்யனந் தானை மன்னனே.

மக்கட்குப் பகையின்மை

நாமவே னரபதி யுலகங் காத்தநாட்
காமவேள் கவர்கணை கலந்த தல்லது
தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை
நாமநீர் வரைப்பக நலித தில்லையே.


குடிகளை வருத்தி இறை கொள்ளாமை

ஆறிலொன் றறமென வருளி னல்லதொன்
றூறுசெய் துலகினி னுவப்ப தில்லையே
மாறிநின் றவரையும் வணக்கி னல்லது
சீறிநின் றெவரையுஞ் செகுப்ப தில்லையே.


மன்னனின் முந்நிழல்

அடிநிழ லரசரை யளிக்கு மாய்கதிர்
முடிநிழன் முனிவரர் சரண முழ்குமே
வடிநிழல் வனைகதி ரெஃகின் மன்னவன்
குடைநிழ லுலகெலாங் குளிர நின்றதே.


இருவகைப்பகையும் அற்ற ஏந்தல்

மன்னிய பகைக்குழா மாறும் வையகம்
துன்னிய வரும்பகைத் தொகையும் மின்மையால்
தன்னையுந் தரையையுங் காக்கு மென்பதம்
மன்னவன் றிறத்தினி மருள வேண்டுமோ


அரசியல் சுற்றத்துடன் உலகப் பொதுமை நீக்குதல்

மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறுசால்
நூலினாற் பெரியவர் நுழைந்த சுற்றமா
ஆலுநீ ரன்னமோ டரச வன்னமே
போலநின் றுலகினைப் பொதுமை நீக்கினான்


அரசர் சுற்றத்தின் இயல்பு

கொதிநுனைப் பகழியான் குறிப்பி னல்லதொன்
றிதுநமக் கிசைக்கென வெண்ணு மெண்ணிலா
நொதுமலர் வெருவுறா நுவற்சி யாளர்பின்
அதுவவன் பகுதிக ளமைதி வண்ணமே.

அரசியர்


மற்றவன் றேவியர் மகர வார்குழைக்
கொற்றவர் குலங்களை விளக்கத் தோன்றினார்
இற்றதிம் மருங்குலென் றிரங்க வீங்கிய
முற்றுறா முலையினார் கலையின் முற்றியார்


அரசியர் இயல்பு

பஞ்சனுங் கடியினார் பரந்த வல்குலார்
செஞ்சுணங் கிளமுலை மருங்கு சிந்தினார்
வஞ்சியங் குழைத்தலை மதர்வைக் கொம்புதம்
அஞ்சுட ரிணர்க்கொசிந் தனைய வைம்மையார்


காமம் பூத்த காரிகையர்

காமத்தொத் தலர்ந்தவர் கதிர்த்த கற்பினார்
தாமத்தொத் தலர்ந்துதாழ்ந் திருண்ட கூந்தலார்
தூமத்துச் சுடரொளி துளும்பு தோளினார்
வாமத்தின் மயங்கிமை மதர்த்த வாட்கணார்.


பட்டத்து அரசிகள் இருவர்

ஆயிர ரவரவர்க் கதிகத் தேவியர்
மாயிரு விசும்பினி னிழிந்த மாண்பினார்
சேயிருந் தாமரைத் தெய்வ மன்னர் என்
றேயுரை யிலாதவ ரிருவ ராயினார்


பெருந்தேவியர் இருவரின் பெற்றி

நீங்கரும் பமிழ்த மூட்டித் தேனளாய்ப் பிழிந்த போலும்
ஓங்கிருங் கடலந் தானை வேந்தணங் குறுக்கு மின்சொல்
வீங்கிருங் குவவுக் கொங்கை மிகாபதி மிக்க தேவி
தாங்கருங் கற்பின் றங்கை சசிஎன்பாள் சசியோ டொப்பாள்


மங்கையர்க்கரசியராகும் மாண்பு

பூங்குழை மகளிர்க் கெல்லாம் பொன்மலர் மணிக்கொம் பன்ன
தேங்குழல் மங்கை மார்கள் திலகமாய்த் திகழ நின்றார்
மாங்கொழுந் தசோக மென்றாங் கிரண்டுமே வயந்த காலத்
தாங்கெழுந் தவற்றை யெல்லா மணிபெற வலரு மன்றே.


இவ்விருவரும் பயாபதியுடன் கூடியுறைந்த இன்பநலம்

பெருமக னுருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளும்
மருவினும் புதிய போலும் மழலையங் கிளவி யாலும்
திருமகள் புலமை யாக்குஞ் செல்விஎன் றிவர்கள் போல
இருவரு மிறைவ னுள்ளத் தொருவரா யினிய ரானார்


மன்னனும் மனைவியரும் ஓருயிர் ஆகி நிற்றல்

மன்னவ னாவி யாவார் மகளிரம் மகளிர் தங்கள்
இன்னுயி ராகி நின்றா னிறைமக னிவர்க டங்கட்
கென்னைகொ லொருவர் தம்மே லொருவர்க்கிங் குள்ள மோட
முன்னவன் புணர்த்த வாறம் மொய்ம்மலர்க் கணையி னானே


மங்கையர் மன்னனைப் பிணித்து வைத்தல்

சொற்பகர்ந் துலகங் காக்குந் தொழில்புறத் தொழிய வாங்கி
மற்பக ரகலத் தானை மனத்திடைப் பிணித்து வைத்தார்
பொற்பகங் கமழப் பூத்த தேந்துணர் பொறுக்க லாற்றாக்
கற்பகக் கொழுந்துங் காம வல்லியங் கொடியு மொப்பார்.


மாலாகி நிற்கும் மன்னன்

மங்கைய ரிருவ ராகி மன்னவ னொருவ னாகி
அங்கவ ரமர்ந்த தெல்லா மமர்ந்தருள் பெருகி நின்றான்
செங்கயல் மதர்த்த வாட்கட் டெய்வமா மகளிர் தோறும்
தங்கிய வுருவந் தாங்குஞ் சக்கரன் றகைமை யானான்


முற்றுநீர் வளாக மெல்லா முழுதுட னிழற்று மூரி
ஒற்றைவெண் குடையி னீழ லுலகுகண் படுப்ப வோம்பிக்
கொற்றவ னெடுங்க ணார்தங் குவிமுலைத் தடத்து மூழ்கி
மற்றவற் கரசச் செல்வ மின்னண மமர்ந்த தன்றே.



இரண்டாவது நகரச்சருக்கம் முடிந்தது.
---------------------------------------
மூன்றாவது
குமாரகாலச் சருக்கம்


தேவர்கள் இருவர் மண்ணுலகில் தோன்றுதல்


ஆங்கவர் திருவயிற் றமரர் கற்பமாண்
டீங்குட னிழிந்துவந் திருவர் தோன்றினார்
வாங்குநீர்த் திரைவளர் வளையு மக்கடல்
ஓங்குநீர் நிழலுமொத் தொளிரு மூர்த்தியார்


மிகாபதி விசயனைப் பெறுதல்

பெண்ணிலாந் தகைப்பெருந் தேவி பேரமர்க்
கண்ணிலாங் களிவள ருவகை கைம்மிகத்
தண்ணிலா வுலகெலாந் தவழந்து வான்கொள
வெண்ணிலா சுடரொளி விசயன் றோன்றினான்


சசி திவிட்டனைப் பெறுதல்

ஏரணங் கிளம்பெருந் தேவி நாளுறச்
சீரணங் கவிரொளித் திவிட்டன் றோன்றினான்
நீரணங் கொளிவளை நிரந்து விம்மின
ஆரணங் கலர்மழை யமரர் சிந்தினார்


விசயதிவிட்டர்கள் பிறந்தபொழுது உண்டான நன்மைகள்

திசையெலாத் தெளிந்தன தேவர் பொன்னகர்
இசையெலாம் பெருஞ்சிறப் பியன்ற வேற்பவர்
நசையெலா மவிந்தன நலியுந் தீவினைப்
பசையெலாம் பறந்தன பலர்க்கு மென்பவே


மைந்தர்களிருவரும் மங்கையர் மனத்தைக் கவர்தல்

செய்தமா ணகரியிற் சிறந்து சென்றுசென்று
எய்தினார் குமரராம் பிராய மெய்தலும்
மைதுழாம் நெடுங்கணார் மனத்துட் காமனார்
ஐதுலாங் கவர்கணை யரும்பு வைத்தவே


விசயனுடைய உடல், கண், குஞ்சி,காது

காமரு வலம்புரி கமழு மேனியன்
தாமரை யகவிதழ் தடுத்த கண்ணினன்
தூமரு ளிருடுணர்ந் தனைய குஞ்சியன்
பூமரு பொலங்குழை புரளுங் காதினன்


மாலை,மார்பு , நிறம் ,தோள், நடை ஆகியவை

வாடலில் கண்ணியன் மலர்ந்த மார்பினன்
தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன்
கோடுயர் குன்றெனக் குலவு தோளினன்
பீடுடை நடையினன் பெரிய நம்பியே


திவிட்டனுடய உடல் முதலியன

பூவயம் புதுமலர் புரையு மேனியன்
து஡விரி தாமரை தொலைத்த கண்ணினன்
தீவிரி யாம்பலிற் சிவந்த வாயினன்
மாவிரி திருமறு வணிந்த மார்பினன்


கை முதலியன

சங்கியல் வலம்புரி திகிரி யென்றிவை
தங்கிய வங்கைய னடித்தண் போதினன்
மங்கல மழகளி றனைய செல்கையன்
இங்குமுன் மொழிந்தவற் கிளய நம்பியே


இருவரும் இளமை எய்துதல்

திருவிளைத் துலகுகண் மலரத் தெவ்வர்தம்
யுரிவளை நன்னகர்ச் செல்வம் புல்லென
வரிவளைத் தோளியர் மனத்துட் காமநோய்
எரிவளைத் திடுவதோ ரிளமை யெய்தினார்


மைந்தர்கள் இருவரும் மங்கயர்கட்குத் தோன்றுதல்

உவர் விளை கடற்கொடிப் பவள மோட்டிய
துவரிதழ் வாயவர் துளங்கு மேனியர்
அவர்கட மருள்கொலோ வனங்க னாய்மலர்
கவர்கணை கடைக்கணித் துருவு காட்டினார்.


மங்கையர் மயங்குதல்

கடலொளி மணிவணன் கனவில் வந்தெம
துடலகம் வெருவிதா யுள்ளம் வவ்வினான்
விடலில னெம்முயிர் விடுக்குங் கொல்லென
மடவர லவர்குழா மயக்க முற்றதே


நங்கையர் மனத்தில் விசயன்

வார்வளை வண்ணனென் மனத்து ளான்பிறர்
ஏர்வளர் நெடுங்கணுக் கிலக்க மல்லனாற்
கார்வளர் கொம்பனா ரிவர்கள் காமநோய்
ஆர்வளர்த் தவர்கொலென் பருவ மாயினார்


மங்கையர் மாட்சி

கண்ணிலாங் கவினொளிக் காளை மார்திறத்
துண்ணிலா வெழுதரு காம வூழெரி
எண்ணிலாச் சுடர்சுட விரிந்து நாண்விடாப்
பெண்ணலாற் பிறிதுயிர் பெரிய தில்லையே


காதல் தீ வளர்க்கும் காளைப் பருவம்

திருவளர் செல்வர்மேற் சென்ற சிந்தைநோய்
ஒருவரி னொருவர்மிக் குடைய ராதலால்
உருவளர் கொம்பனா ருள்ளங் காய்வதோர்
எரிவளர்த் திடுவதோ ரிளமை யெய்தினார்


அரசன் மனைவியருடன் அமர்ந்திருத்தல்

மற்றொர்நா ளமரிகைக் கொடிகொண் மாமணிச்
சுற்றுவான் சுடரொளி தழுவிச் சூழ்மலர்
முற்றிவண் டினம்விடா முடிகொள் சென்னியக்
கொற்றவ னிளையவர் குழைய வைகினான்


அரசன் உறங்குதல்

மஞ்சுடை மணிநகு மாலை மண்டபத்
தஞ்சுட ரகிற்புகை யளைந்து தேனளாய்ப்
பஞ்சுடை யமளிமேற் பள்ளி யேற்பவன்
செஞ்சுட ரிரிவதோர் திறத்த னாயினான்


உடற் பாதுகாப்பாளர்கள்

மன்னவன் றுயில்விடுத் தருள மைந்தர்பொன்
றுன்னிய வுடையினர் துதைந்த கச்சையர்
பின்னிய ஞாணினர் பிடித்த வில்லினர்
அன்னவ ரடிமுதற் காவ னண்ணிணார்


திருப்பள்ளி எழுச்சி

தங்கிய தவழழொளி தடாவி வில்லிட
மங்கல வுழக்கல மருங்கு சேர்ந்தன
அங்கவன் கண்கழூஉ வருளிச் செய்தனன்
பங்கய முகத்தர்பல் லாண்டு கூறினார்


அந்தணர் வாழ்த்து கூற அரசன் அவர்களை வணங்குதல்

அந்தண ராசிடை கூறி யாய்மலர்ப்
பைந்துணர் நெடுமுடி பயில வேற்றினார்
செந்துணர் நறுமலர் தெளித்துத் தேவர்மாட்
டிந்திர னனையவ னிறைஞ்சி யேத்தினான்


வாயில் காப்போர் உலகு காப்போன் வரவை எதிர்பார்த்தல்

விரையமர் கோதையர் வேணுக் கோலினர்
உரையமர் காவல்பூண் கடையி னூடுபோய்
முரசமர் முழங்கொலி மூரித் தானையன்
அரசவை மண்டப மடைவ தெண்ணினார்


அரசன் வாயிலை அடைதல்

பொன்னவிர் திருவடி போற்றி போற்றிஎன்
றன்னமென் னடையவர் பரவ வாய்துகிற்
கன்னியர் கவரிகா லெறியக் காவலன்
முன்னிய நெடுங்கடை முற்ற முன்னினான்


மெய்க்காப்பாளர் அரசனைக் காத்தல்

மஞ்சிவர் வளநகர் காக்கும் வார்கழல்
நஞ்சிவர் வேனர பதியை யாயிடை
வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர்
கஞ்சுகி யவர்கண்மெய் காவ லோம்பினார்


அரசன் திருவோலக்க மண்டபத்தை யடைதல்

வாசநீர் தெளித்தலர் பரப்பி வானகம்
எசுநீ ளிருக்கைய விலங்கு சென்னிய
மூசுதே னெடுங்கடை மூன்றும் போய்ப்புறத்
தோசைநீள் மண்டப முவந்த தெய்தினான்


வேறு - மண்டபத்திற்குள் புகுதல்

பளிங்கொளி கதுவப் போழ்ந்த பலகைகண் குலவச் சேர்த்தி
விளங்கொளி விளிம்பிற் செம்பொன் வேதிகை வெள்ளி வேயுட்
டுளொங்கொளி பவளத் திண்காற் சுடர்மணி தவழும் பூமி
வளங்கவின் றனைய தாய மண்டப மலிரப் புக்கான்


அரசன் அணையில் வீற்றிருக்கும் காட்சி

குஞ்சரக் குழவி கவ்விக் குளிர்மதிக் கோடு போலும்
அஞ்சுட ரெயிற்ற வாளி யணிமுக மலர வூன்றிச்
செஞ்சுட ரணிபொற் சிங்கா சனமிசைச் சேர்ந்த செல்வன்
வெஞ்சுட ருதயத் துச்சி விரிந்த வெய் யவனோ டொத்தான்


அரசன் குறிப்பறிந்து அமர்தல்

பூமரு விரிந்த நுண்ணூற் புரோகிதன் பொறிவண் டார்க்கும்
மாமல ரணிந்த கண்ணி மந்திரக் கிழவர் மன்னார்
ஏமரு கடலந் தானை யிறைமகன் குறிப்பு நோக்கித்
தாமரைச் செங்கண் டம்மாற் பணித்ததா னத்த ரானார்


சிற்றரசர்கள் தங்கட்குரிய இடங்களில் அமர்தல்

முன்னவ ரிருந்த பின்னை மூரிநீ ருலகங் காக்கும்
மன்னவன் கழலைத் தங்கண் மணிமுடி நுதியிற் றீட்டிப்
பின்னவன் பணித்த தானம் பெறுமுறை வகையிற் சேர்ந்தார்
மின்னிவர் கடகப் பைம்பூண் வென்றிவேல் வேந்த ரெல்லாம்


படைத் தலைவர்கள் உடனிருத்தல்

வழிமுறை பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான்
விழுமல ரடிக்கண் மிக்க வன்பினார்; வென்றி நீரார்;
எழுவளர்த் தனைய தோளா ரிளையவ ரின்ன நீரார்
உழையவ ராக வைத்தா னோடைமால் களிற்றி னானே


புலவர்கள் வருதல்

காவல னென்னுஞ் செம்பொற் கற்பகங் கவின்ற போழ்தில்
நாவல ரென்னும் வண்டு நகைமுகப் பெயரி னாய
பூவலர் பொலிவு நோக்கிப் புலமயங் களிப்ப வாகிப்
பாவல ரிசையிற் றோன்றப் பாடுபு பயின்ற வன்றே


இசைப் புலவர்கள் வாழ்த்து கூறுதல்

பண்ணமை மகர நல்யாழ்ப் பனுவனூற் புலவர் பாடி
மண்ணமர் வளாக மெல்லாம் மலர்ந்ததின் புகழோ டொன்றி
விண்ணகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகிக்
கண்ணம ருலகம் காக்கும் கழலடி வாழ்க வென்றார்


இதுவும் அது

மஞ்சுடை மலையின் வல்லி தொடரவான் வணங்க நின்ற
அஞ்சுடர்க் கடவுள் காத்த வருங்குல மலரத் தோன்றி
வெஞ்சுட ரெஃக மொன்றின் வேந்துகண் ணகற்றி நின்ற
செஞ்சுடர் முடியி னாய்நின் கோலிது செல்க வென்றார்


வாயிற் காவலனுக்கு ஒரு கட்டளை

இன்னணம் பலரு மேத்த வினிதினங் கிருந்த வேந்தன்
பொன்னணி வாயில் காக்கும் பூங்கழ லவனை நோக்கி
என்னவ ரேனு மாக நாழிகை யேழு காறும்
கன்னவி றோளி னாய்நீ வரவிடு காவ லென்றான்


நிமித்திகன் வரவு

ஆயிடை யலகின் மெய்ந்நூ லபவுசென் றடங்கி நின்றான்
சேயிடை நிகழ்வ தெல்லாஞ் சிந்தையிற் றெளிந்த நீரான்
மேயிடை பெறுவ னாயின் வேந்துகாண் குறுவன் கொல்லோ
நீயிடை யறிசொல் லென்றோர் நிமித்திக னெறியிற் சொன்னான்


அரசன் நிமித்திகனை வரவேற்றல்

ஆங்கவ னரசர் கோமான் குறிப்பறிந் தருளப் பட்டீர்
ஈங்கினிப் புகுமி னென்றா னிறைவனை யவனுஞ் சேர்ந்தான்
வீங்கிருந் தானை யானும் வெண்மலர் பிடித்த கையால்
ஓங்கிருந் தானங் காட்டி யுவந்தினி திருக்க வென்றான்


நிமித்திகன் தன் ஆற்றலை காட்டத் தொடங்குதல்

உற்றத னொழுக்கிற் கேற்ப வுலகுப சார நீக்கிக்
கொற்றவன் குறிப்பு நோக்கி யிருந்தபின் குணக்குன் றொப்பான்
முற்றிய வுலகின் மூன்று காலமூ முழுது நோக்கிக்
கற்றநூற் புலமை தன்னைக் காட்டுதல் கருதிச் சொன்னான்


அரசன் கனாக்கண்டதை நிமித்திகன் கூறுதல்

கயந்தலைக் களிற்றி னாயோர் கனாக்கண்ட துளது கங்குல்
நயந்தது தெரியி னம்பி நளிகடல் வண்ணன் றன்னை
விசும்பகத் திழிந்து வந்தோர் வேழம்வெண் போது சேர்ந்த
தயங்கொளி மாலை சூட்டித் தன்னிட மடைந்த தன்றே


கனவின் பயனை நிமித்திகன் கூறுதல்

மன்மலர்ந் தகன்ற மார்ப மற்றதன் பயனுங் கேண்மோ
நன்மலர் நகைகொள் கண்ணி நம்பித னாம மேத்தி
மின்மலர்ந் திலங்கு பைம்பூண் விஞ்சைவேந் தொருவன் வந்து
தன்மக ளொருத்தி தன்னைத் தந்தனன் போகு மென்றான்


தூதன் ஒருவன் வருவான் என்றல்

கட்பகர் திவலை சிந்துங் கடிகமழ் குவளைக் கண்ணித்
திட்பமாஞ் சிலையி னாய்! நீ தெளிகநா னேளு சென்றால்
ஒட்பமா யுரைக்க வல்லா னொருவனோ ரோலை கொண்டு
புட்பமா கரண்ட மென்னும் பொழிலகத் திழியு மென்றான்


நிமித்திகன் கூறியதை அவையோர் உடன்பட்டுக் கூறுதல்

என்றவ னியம்பக் கேட்டே யிருந்தவர் வியந்து நோக்கிச்
சென்றுயர் திலகக் கண்ணித் திவிட்டனித் திறத்த னேயாம்
ஒன்றிய வுலக மெல்லா மொருகுடை நீழற் காக்கும்
பொன்றிக ழலங்கன் மார்ப போற்றிபொய் யன்றி தென்றார்


அரசன் ஆராய்ச்சி மன்றத்தை அடைதல்

உரையமைந் திருப்ப விப்பா லோதுநா ழிகையொன் றோட
முரசமொன் றதிர்த்த தோங்கி யதிர்தலு முகத்தி னாலே
அரசவை விடுத்த வேந்த னகத்தநூ லவரை நோக்கி
வரையுயர் மாடக் கோயின் மந்திர சாலை சேர்ந்தான்


வேறு - அரசன் பேசுதல்

கங்குல்வாய்க் கனவவன் கருதிச் சொற்றதும்
மங்கலப் பெரும்பயன் வகுத்த வண்ணமும்
கொங்கலர் தெரியலான் கூறிக் கொய்ம்மலர்த்
தொங்கலார் நெடுமுடி சுடரத் தூக்கினான்


அமைச்சர்கள் பேசுதல்

சூழுநீ ருலகெலாந் தொழுது தன்னடி
நீழலே நிரந்துகண் படுக்கு நீர்மையான்
ஆழியங் கிழவனா யலரு மென்பது
பாழியந் தோளினாய் பண்டுங் கேட்டுமே


திவிட்டன் சிறந்தவனே என்றல்

நற்றவ முடையனே நம்பி யென்றுபூண்
விற்றவழ் சுடரொளி விளங்கு மேனியக்
கொற்றவன் குறிப்பினை யறிந்து கூறிய
மற்றவர் தொடங்கினார் மந்தி ரத்துளார்


வேறு - திவிட்டன் உருளைப்படை ஏந்துவான் என்றல்

சங்க லேகையுஞ் சக்கர லேகையும்
அங்கை யுள்ளன வையற் காதலால்
சங்க பாணியான் சக்க ராயுதம்
அங்கை யேந்துமென் றறையல் வேண்டுமே


வித்தியாதரர் தொடர்புண்டாகுமானால் நலம் என்றல்

விஞ்சைய ருலகுடை வேந்தன் றன்மகன்
வஞ்சியங் கொடியிடை மயிலஞ் சாயலான்
எஞ்சலின் றியங்கிவந் திழியு மாய்விடில்
அஞ்சிநின் றவ்வுல காட்சி செல்லுமே


பளிங்குமேடை யமைத்துக் காவல் வைப்போம் என்றல்

நாமினி மற்றவன் மொழிந்த நாளினால்
தேமரு சிலாதலந் திருத்தித் தெய்வமாம்
தூமரு மாலையாய் துரும காந்தனைக்
காமரு பொழிலிடைக் காவல் வைத்துமே


அரசன் கட்டளை பிறப்பித்துவிட்டு அந்தப்புரஞ் செல்லுதல்

என்றவர் மொழிந்தபி னிலங்கு பூணினான்
நன்றது பெரிதுமென் றருளி நாடொறும்
சென்றவன் காக்கென மொழிந்து தேங்குழல்஢
இன்றுணை யவர்கடங் கோயி லெய்தினான்


துருமகாந்தன் பொழிலையடைதல்

எரிபடு விரிசுட ரிலங்கு பூணினான்
திருவடி தொழுதுசெல் துரும காந்தனும்
வரிபடு மதுகர முரல வார்சினைச்
சொரிபடு மதுமலர்ச் சோலை நண்ணினான் 49



குமாரகாலச் சருக்கம் முற்றிற்று
--------------------
நான்காவது
இரதநூபுரச் சருக்கம்


நுதலிப்புகுதல்

புரிசை நீண்மதிற் போதன மாநகர்
அரசர் வார்த்தையவ் வாறது நிற்கவே
விரைசெய் வார்பொழில் விஞ்சையர் சேடிமேல்
உரையை யாமுரைப் பானுற நின்றதே


வெள்ளிமலை

நிலவு வெண்சுடர் பாய்நில மொப்பநீண்
டுலவு நீள்கட றீண்டியு யர்ந்துபோய்
இலகு வின்மணி வானியன் மாடெலாம்
விலக நின்றது விஞ்சையர் குன்றமே


தேவர் உடளொளிக்குச் செவ்வான் ஒளி சிறிது ஒத்தல்

தொக்க வானவர் சூழ்குழ லாரொடும்
ஒக்க வாங்குள ராய்விளை யாடலால்
உக்க சோதிகள் சோலையி னூடெலாம்
செக்கர் வானக முஞ்சிறி தொக்குமே


பொழிலில் தார் மணம்

அவிழுங் காதல ராயர மங்கையர்
பவழ வாயமு தம்பரு கிக்களி
தவழு மென்முலை புல்லத் ததைந்ததார்
கமழு நின்றன கற்பகச் சோலையே


பொழிலிற் குளிர்ச்சி

கிளருஞ் சூழொளிக் கின்னர தேவர்தம்
வளரும் பூண்முலை யாரொடு வைகலால்
துளருஞ் சந்தனச் சோலைக ளூடெலாம்
நளிருந் தெய்வ நறுங்குளிர் நாற்றமே


வாடையின் வருகை

மங்குல் வாடைமந் தார்வன மீதுழாய்ப்
பொங்கு தாதொடு பூமதுக் கொப்பளித்
தங்க ராகம ளாயர மங்கையர்
கொங்கை வாரிகள் மேற்குதி கொள்ளுமே


தழைப் படுக்கை

தேன கத்துறை யுஞ்செழுஞ் சந்தனக்
கான கத்தழை யின்கமழ் சேக்கை மேல்
ஊன கத்தவர் போகமு வந்தரோ
வான கத்தவர் வைகுவர் வைகலே


பாறையில் மகரந்தப்பொடி

மஞ்சு தோய்வரை மைந்தரொ டடிய
அஞ்சி லோதிய ராரள கப்பொடி
பஞ்ச ராகம்ப தித்தப ளிக்கறைத்
துஞ்சு பாறைகண் மேற்று தை வுற்றதே


பாறையில் அடிக்குறி

மாத ரார்நடை கற்கிய வானிழிந்
தாது வண்டுண வூழடி யூன்றிய
பாத ராகம்ப தித்தப ளிக்கறை
காத லார்தம கண்கவர் கின்றவே


அருவிநீரில் மல்லிகை மணம்

ஆகு பொன்னறை மேலரு வித்திரள்
நாக கன்னிய ராடலின் ஞால்கைம்மா
வேக மும்மத வெள்ளம ளாவிய
போக மல்லிகை நாறும்பு னல்களே


சேடி நாட்டின் சிறப்பு

பூக்க ளாவன பொன்மரை பூம்பொழில்
காக்க ளாவன கற்பகச் சோலைகள்
வீக்கு வார்கழல் விஞ்சையர் சேடிமே
லூக்கி யமுரைக் கின்றதிங் கென்கொலோ


இரதநூபுரச் சக்கரவாள நகரம்

வரையின் மேன்மதி கோடுற வைகிய
திருவ நீளொளித் தென்றிசைச் சேடிமே
லிரத நூபுரச் சக்கர வாளமென்
றுரைசெய் பொன்னக ரொன்றுள தென்பவே


வேறு -- வாழையின் மாண்பு

அம்பொன் மாலையார்க ளித்த லத்தெ ழுந்த ரத்தவாய்க்
கொம்பா னார் கொடுத்த முத்த நீர வாய கோழரைப்
பைம்பொன் வாழை செம்பொ னேப ழுத்து வீழ்ந்த சோதியால்
வம்பு பாய்ந்து வந்தொ சிந்து சாறு சோர்வ மானுமே


பாக்கு மரங்கள்

வேய்தி ழன்னி லாவி லங்கு வெள்ளி விம்மு பாளைவாய்ப்
பாய்நி ழற்ப சுங்க திர்ப்ப ரூஉம ணிக்கு லைகுலாய்ச்
சேய்நி ழற்செ ழும்பொ னாற்றி ரண்ட செம்ப ழத்தவாய்ப்
போய்நி ழற்பொ லிந்து வீழ்வ போன்ற பூக ராசியே


மாடங்களும் மரங்களும்

காந்தி நின்ற கற்ப கந்தி ழற்க லந்து கையறப்
பாய்ந்தெ ரிந்த போல்வி ரிந்து பாரி சாத மோர்செய
வாய்ந்தெ ரிந்த பொன் மாட வாயி லாறு கண்கொளப்
போந்தெ ரிந்த போன்ம ரம்பு றம்பொ லிந்தி லங்குமே.


இன்பத்திடையே தென்றல்

மாசில் கண்ணி மைந்த ரோடு மங்கை மார்தி ளைத்தலில்
பூசு சாந்த ழித்தி ழிந்த புள்ளி வேர்பு லர்த்தலால்
வாச முண்ட மாரு தந்தென் வண்டு பாட மாடவாய்
வீச வெள்ளி லோத்தி ரப்பொ தும்பர் பாய்ந்து விம்முமே


பலவகை மரங்கள்

ஆந்து ணர்த்த மால மும்ம சோக பல்ல வங்களும்
தாந்து ணர்த்த சந்த னத்த ழைத்த லைத்த டாயின
மாந்து ணர்ப்பொ தும்பர் வந்து வைக மற்ற தூன்றலால்
தேந்து ணர்ச்சு மந்தொ சிந்த சைந்த தேவ தாரமே


இன்ப துன்பம்

தெய்வ யாறு காந்த ளஞ்சி லம்பு தேங்கொள் பூம்பொழில்
பெளவ முத்த வார்ம ணற்ப றம்பு மெளவன் மண்டபம்
எவ்வ மாடு மின்ன போலி டங்க ளின்ப மாக்கலால்
கவ்வை யாவ தந்த கர்க்கு மார னார்செய் கவ்வையே


சுவலனசடி

மற்ற மாந கர்க்கு வேந்தன் மான யானை மன்னர் கோன்
அற்ற மின்றி நின்ற சீர ழற்பெ யர்ப்பு ணர்ச்சியான்
முற்று முன்ச டிப் பெ யர்சொன் மூன்று லஃகு மான்றெழப்
பெற்று நின்ற பெற்றியான் பீடி யாவர் பேசுவார்


சுவலனசடியின் பெருமை

இங்கண் ஞால மெல்லை சென்றி லங்கு வெண்கு டைந்நிழல்
வெங்கண் யானை வேந்தி றைஞ்ச வென்றி யின்வி ளங்கினான்
கொங்கு கொண்டு வண்ட றைந்து குங்கு மக்கு ழம்பளாய்
அங்க ராக மங்க ணிந்த லர்ந்த வார மார்பினான்


கல்விநலம் முதலியன

விச்சை யாய முற்றினான் விஞ்சையார்க ளஞ்சநின்
றிச்சை யாய வெய்தினா னேந்து செம்பொ னீண்முடிக்
கச்சை யானை மானவேற் கண்ணி லங்கு தாரினான்
வெச்ச னுஞ்சொ லொன்றுமே விடுத்து மெய்ம்மை மேயினான்


அம் மன்னவன்பால் ஒரு குற்றம் - வேறு

வெற்றி வெண்குடை விஞ்சையர் வேந்தவ
னொற்றை யந்தனிக் கோலுல கோம்புநாள்
குற்ற மாயதொன் றுண்டு குணங்களா
லற்ற கீழுயிர் மேலரு ளாமையே


அவ்வரசன் ஆட்சியில் நடுங்கியன

செம்பொ னீண்முடி யான்சொரு வின்றலை
வெம்பு வேலவன் விஞ்சையர் மண்டிலம்
நம்பி யாள்கின்ற நாளி னடுங்கின
கம்ப மாடக் கதலிகை போதுமே


ஆடவர் மேல் வளைந்த வில்

மின்னு வார்ந்தமந் தாரவி ளங்கிணார்
துன்னு தொன்முடி யானொளி சென்றநாள்
மன்னு மாடவர் மேல்வளைந் திட்டன
பொன்னு னார்புரு வச்சிலை போலுமே


உண்ணாத வாய்கள்

வெண்ணி லார்ச்சுட ருந்தனி வெண்குடை
எண்ணி லாப்புக ழானினி தாண்டநா
ளுண்ணி லாப்பல வாயுள வாயின
கண்ண னாரொடு காமக்க லங்களே


அந்நகரில் எவருங் கட்டுண்டு வருந்தார்

மாக்கண் வைய மகிழ்ந்துதன் றாணிழல்
நோக்கி வைக நுனித்தவ னாண்டநாள்
தாக்க ணங்கனை யார் தம தாயரால்
வீக்கப் பட்டன மென்முலை விம்முமே


கடியவையுங் கொடியவையும்

வடிய வாளவ னாளவும் வாய்களில்
கடிய வாயின கள்ளவிழ் தேமல
ரடிய வாய்ப்பயப் பட்டடங் காவலர்க்
கொடிய வாயின கொங்கவிழ் சோலையே


அரசன் மனைவி வாயுவேகை

மாய மாயநின் றான்வரை மார்பிடை
மேய பூமகள் போல விளங்கினாள்
தூய வாமுறு வற்றுவர் வாயவள்
வாயு வேகையென் பாள்வளர் கொம்பனாள்


வாயுவேகையின் மேன்மை

பைம்பொற் பட்ட மணிந்த கொல் யானையான்
அம்பொற் பட்ட நறுங்குழ லார்க்கெலாம்
செம்பொற் பட்டஞ் செறிந்த திருநுதல்
அம்பொற் பட்டுடை யாளணி யாயினான்


இருவரின் இன்பநிலை

கோவை வாய்குழ லங்குளிர் கொம்பனாள்
காவி வாணெடுங் கண்ணியக் காவலற்
காவி யாயணங் காயமிழ் தாயவன்
மேவு நீர்மைய ளாய்விருந் தாயினாள்


அருக்ககீர்த்தி என்னும் மகன் பிறத்தல்

முருக்கு வாயவண் முள்ளெயிற் றேர்நகை
யுருக்க வேந்த னொருங்குறை கின்றநாள்
பெருக்க மாகப் பிறந்தனன் பெய்கழல்
அருக்க கீர்த்தி யென் பானலர் தாரினான்


சுயம்பிரபை என்னும் மகள் பிறத்தல்

நாம நள்லொளி வேனம்பி நங்கையா
யேம நல்லுல கின்னிழிந் தந்நகைத்
தாம மல்லிகை மாலைச் சயம்பவை
காம வல்லியுங் காமுறத் தோன்றினாள்


சுயம்பிரபையின் அழகுச் சிறப்பு

கங்கை நீரன ஞான்ற கதிரிளந்
திங்க ளாற்றெழப் பட்டது செக்கர்வான்
மங்கை மார்பிறப் பும்மட மாதரிந்
நங்கை யாற்றெழப் பாடு நவின்றதே


முகம் , கண், புருவம், இடை ஆகியவை

வண்டு சூழ்மலர் போன்றள கக்கொடி
கொண்டு சூழ்ந்தது குண்டல வாண்முகங்
கெண்டை கண்கிள ரும்புரு வஞ்சிலை
உண்டு கொல்லென வுண்டும ருங்குலே


புருவங்கள் துவளுதல்

காதின் மீதணி கற்பகத் தொத்திணர்
ஊது தேனிற கூன்றியி ருத்தொறும்
போது தேர்முகத் தும்புரு வக்கொடி
நோத லேகொல்நொ சிந்துள வாங்களே


சுயம்பிரபையின் அழகு

விண்ண ணங்க விழித்துவி ளங்கொளி
மண்ண ணங்குற வேவளர் வெய்திய
பெண்ண ணங்கிது தோன்றிய பின்கொலோ
கன்ன ணங்குறு காரிகை கண்டதே

கொங்கு போதரு வான்குமிழ் கின்றன
அங்க ராகம ணிந்ததை யன்றியும்
நங்கை நாகரி கம்பொறை நாண்மதுத்
தங்கு வார்கொடி யிற்றளர் வித்ததே


வளருதல்

மங்கு றோய்வரை மன்னவன் றொல்குடி
நங்கை போற்றியென் றேத்தி நறுங்குழல்
மங்கை மார்பலர் காப்ப வளர்ந்துதன்
கொங்கை யாற்சிறி தேகுழை வெய்தினாள்


பற்கள் தோன்றுதல்

வாம வாணொடு நோக்கிம டங்கனி
தூம வார்குழ லாடுவர் வாயிடை
நாம நள்லொளி முள்ளெயி றுள்ளெழு
காம னாளரும் பிற்கடி கொண்டவே.


சுயம்பிரபை வித்தைகளடைதல்

மஞ்சு தோய்வரை யாரஞ்சு மாண்பினால்
அஞ்சி லோதிநி னைப்பின கத்தவாய்
விஞ்சை தாம்பணி செய்தல்வி ரும்பினன்
எஞ்சி லாவகை யாலிணர் கொண்டவே


சுயம்பிரபையின் பிறப்பால் அரசன் சிறப்படைதல்

நங்கை தோன்றிய பின்னகை வேலினாற்
கங்கண் ஞாமல மர்ந்தடி மைத்தொழில்
தங்க நீண்முடி யாற்றலை நின்றனர்
வெங்கண் யானைவி ளங்கொளி வேந்தரே


வேறு - வயந்ததிலகை மன்னனிடங் கூறுதல்

நங்கையாள் வளர்ந்து காம நறுமுகை துணர வைத்து
மங்கையாம் பிராய மெய்தி வளரிய நின்ற நாளும்
பைங்கண்மால் யானை யாற்குப் பருவம்வந் திறுத்த தென்றாள்
வங்கவாய்ப் பவழச் செவ்வாய் வயந்தமா திலகை யென்பாள்


வேனில் வரவைக் கூறுதல்

தேங்குலா மலங்கன் மாலைச் செறிகழன் மன்னர் மன்ன!
பூங்குலாய் விரிந்த சோலைப் பொழிமதுத் திவலை தூவக்
கோங்கெலாங் கமழ மாட்டாக் குணமிலார் செல்வ மேபோல்
பாங்கெலாஞ் செம்பொன் பூப்ப விரிந்தது பருவ மென்றாள்


வண்டுகள் களிப்பு

வேய்ந்திண ரொசிந்த சோலை வேனிலான் வென்றி யோகைத்
தேந்துணர் கொடுப்ப மூழ்கித் தேறல் வாய் நெகிழ மாந்தித்
தாந்துணர் துணையோ டாடிச் சாறுகொண் டூறு மேரார்
மாந்துண ரொசிய வேறி மதர்த்தன மனிவண் டெல்லாம்


இசைக்குப் பரிசில்

கடிமலர்க் கணையி னான்றன் கழலடி பரவிக் காமர்
படிமலர்த் தும்பி யென்னும் பாண்படை தொடர்ந்து பாடக்
கொடிவளர் மகளிர் பூங்கட் குடைந்துநீர் குடிமி னென்று
வடிமலர் வள்ளத் தேந்த வாய்மடுத் திட்ட வன்றே


தீயிடத்துக் கரியைப்போல் மலரிடத்திலே வண்டுகள் காணப்பெறல்

அஞ்சுடர் முருக்கி னங்கே ழணிமல ரணிந்து கொம்பர்த்
துஞ்சிடை பெறாது தும்பி துவன்றிமேற் றுகைக்குந் தோற்றம்
செஞ்சுட ரிலங்குஞ் செந்தீக் கருஞ்சுடர்க் கந்துள் சிந்தி
மஞ்சுடை மயங்கு கானம் மண்டிய வகையிற் றன்றே


வண்டுகள் மயக்கமும் தெளிவும்

அந்தழை யசோகம் பூத்த வழகுகண் டவாவி னோக்கி
வெந்தழற் பிறங்க லென்று வெருவிய மறுவி றும்பி
கொந்தவிழ்ந் துமிழப் பட்ட குளிர்மதுத் திவலை தூவச்
செந்தழற் பிறங்க லன்மை தெளிந்துசென் றடைந்த வன்றே


மாமரமும் மனந்திரிந்த செல்வரும்

மாஞ்சினை கறித்த துண்டந் துவர்த்தலின் மருங்கு நீண்ட
பூஞ்சினை முருக்கஞ் சோலைப் பூக்கள்வா யார மாந்தித்
தீஞ்சுவை மிழற்று கின்ற சிறுகுயில் செல்வ ரேனும்
தாஞ்சுவை திரிந்த பிஇன்றைச் சார்பவ ரில்லை யன்றே


பொழில்கள் புலம்புதல்

கோவைவண் டூது கின்ற குரவெனுங் குரைகொண் மாதர்
பாவைகொண் டாடு கின்ற பருவத்தே பயின்ற காமன்
ஆவிகொண் டிவளிக் கைவிட் டகலுமோ வென்று தத்தம்
பூவையுங் கிளியுங் கொண்டு புலம்பின பொழில்க ளெல்லாம்


அரசன் மனைவிமக்களுடன் மனோவனம் யென்னும் பூம்பொழிலை யடைதல்

வயந்தமாங் குணர்த்தக் கேட்டே மன்னவன் மக்க ளோடு
முயர்ந்ததன் னுரிமை யோடு முரிமைகாப் பவர்க ளோடும்
கயந்தலைக் களிருந் தேரும் வையமுங் கவின வேறி
நயந்தன னகரி னீங்கி னோவன நண்ணி னானே


வேறு - அரசனைப் பொழில் வரவேற்றல்

கோமான்சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவித்
தேமாநின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே
வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொன் மகளிரைப்போற்
றூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே


மணப்பொடி தூவிச் சாமரைகள் வீசிக் குடை பிடித்தல்

கடிவாச மலர்விண்ட கமழ்தாது கழலவற்கு
வடிவாசப் பொடியாக வனவல்லி சொரிந்தனவே
புடைவாசங் கொள மாலம் பூங்கவரி யெடுத்தெறியக்
குடைமாக மெனவேந்திக் கோங்கம்போ தவிழ்ந்தனவே


புகழ் பாடிப் பூவிறைத்தல்

கொடியாடு நெடுநகரக் கோமான்றன் குணம்பரவி
அடிபாடு மவர்களென வணிவண்டு முரன்றனவே
வடிவாய வேலவற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோல்
கொடுவாய கிளிகோதிக் குளிர்நறும்போ துகுத்தனவே


தென்றல் வீசுதல்

குரவகத்து குடைந்தாடிக் குளிர்நறவங் கொப்பளித்தார்த்
தரவவண்டின் னிசைபாட வருவிநீ ரளைந்துராய்
விரைமலர்ந்த துணர்வீசி விரைஞாற வருதென்றல்
புரவலன்றன் றிருமுடிமேற் போதலர வசைத்ததே


அரசன் பெண்களுக்கு பொழில் வளங்காட்டி விளையாடுதல்

இன்னவா றிளவேனி லெதிர்கொள்ள வெழில்யானை
மன்னவாந் தனிச்செங்கோன் மறவேல்வை யகவேந்தன்
தன்னவா மடவாரைத் தானுவந்து பொழில்காட்டி
மின்னவா மிடைநோவ விளையாட வருளினான்


இளவேனிற் பருவம் உங்கள் செல்வம் போன்றது என்றது

எரியணிந்த விளம்பிண்டி யிணரார்ந்த விடமெல்லாம்
பொரியணிந்த புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம்
வரியணி ந்து வண்டூத வளர்கின்ற விளவேனில்
புரியணிந்த குழலீர்நுஞ் செல்வம்போற் பொலிந்ததே


கைகளும் இடைகளும்

காரணிந்த குழலீர்நுங் கைத்தலங்க டகைநோக்கிச்
சீரணிந்த செழும்பிண்டி தளிரீன்று திகழ்ந்தனவே
வாரணிந்த முலையீர்நும் மருங்குறனின் வகைநோக்கி
ஏரணிந்த குருக்கத்தி யிளங்கொடித்தா யீன்றனவே


மாந்தளிர் முதலியவை

மாந்தளிரிங் கிவைநுமது நிறங்கொண்டு வளர்ந்தனவே
ஏந்திளந்தீங் குயிலிவைநுஞ் சொற்கற்பா னிசைந்தனவே
தேந்தளங்கு குழலீர்நுஞ் செவ்வாயி னெழினோக்கித்
தாந்தளிர்மென் முருக்கினிய தாதொடு ததைந்தனவே


கண்மலர்

காவியுஞ் செங் கழுநீருங் கமலமுங் கண் விரிந்துநளி
வாவியு மண் டபமுமெழின் மதனனையு மருட்டுமே
தூதுயருங் கிளியன்ன சொல்லினீர் துணையில்லார்
ஆவியுய்ந் துள்ளாராத லரிதேயிவ் விள வேனில்


வேறு - அரசன் திருக்கோயிலை அடைதல்

இன்னண மிளையவர் மருள வீண்டுசீர்
மன்னவன் வயந்தமாட் டருளி மாமணிக்
கன்னவில் புரிசையுட் கடவுட் காக்கிய
பொன்னவி றிருநகர் பூவொ டெய்தினான்


திருக்கதவம் திறத்தல்

உலமுறை தோளினா னுவகை கூர்ந்தனன்
குலமுறை வழிபடுந் தெய்வக் கோயிலை
வலமுறை வந்தனன் வரலு மாமணிக்
கலமுறை கதிர்நகைக் கபாடம் போழ்ந்ததே


சுடர் விளங்குதல்

பிணிநிலை பெயர்ப்பன பிறவி தீர்ப்பன
மணிநிலை விசும்பொடு வரங்க ளீவன
கணிநிலை யிலாத்திறற் கடவுட் டானகம்
மணிநிலைச் சுடரொளி மலர்ந்து தோன்றவே


அரசன் கடவுளைப் போற்றத் தொடங்குதல்

மெய்ம்மயி ரெறிந்தொளி துளும்பு மேனியன்
கைம்முகிழ் முடித்தடங் கதழச் சேர்த்தினான்
வெம்மைசெய் வினைத்துகள் விளிய வென்றவன்
செம்மலர்த் திருந்தடி சீரி னேத்தினான்


வேறு - வரிப்பாட்டு
எல்லாமாகிய நின்னை உணர்வார் அரியர் என்றல்

அணியாது மொளிதிகழு மாரணங்கு திருமூர்த்தி
கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறையுமே
கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறைந்தாலும்
அணிஞால முடையாயை யறிவாரோ வரியரே


படைக்கலந் தாங்காத நின்னை அறிபவர் அரியர் என்றல்

பகைநாறு மயிற்படைகள் பயிலாத திருமூர்த்திறை
இகன்மாற வென்றுயர்ந்த விறைவனென் றறையுமே
இகன்மாற வென்றுயர்ந்த விறைவவென் றறைந்தாலும்
அகன்ஞால முடையாயை யறிவாரோ வரியரே


ஒருமருவுமற்ற நின்னை எல்லோரும் உணரார் என்றல்

திருமறுவு வலனணிந்து திகழ்கின்ற திருமூர்த்தி
ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துமே
ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துகினும்
அருமறையை விரித்தாயை யறிவாரோ வரியரே


வேறு - அரசன் கோயில் வாயிலையடைதல்

இன்னண மிறைவனை யேத்தி யேந்தறன்
சென்னியுட் சேர்த்திய சேடப் பூவினன்
கன்னவி றிருமனிக் கபாடந் தாழுறீஇ
மின்னிய திருநகர் முற்ற முன்னினான்


சாரணர்கள் கோயிலையடைந்து போற்றுதல்

ஆரணங் கவிரொளி யெரிய வாயிடைச்
சாரணர் விசும்பினின் றிழிந்து தாதைதன்
ஏரணி வளநகர் வலங்கொண் டின்னணம்
சீரணி மணிக்குரல் சிலம்ப வாழ்த்தினார்


வேறு - வரிப்பாட்டு- அச் சாரணர் இறைவனை ஏத்துதல்

விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
உரைமணந்தி யாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
யுண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காத லொழியோமே


இதுவுமது

முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்று
யருகணங்கி யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே


இதுவுமது

மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே


வேறு - முனிவர்கள் போற்றுதலைக்கேட்ட உயிர்கள் தீவினை தீர்த்தல்

தீதறு முனிவர்தஞ் செல்வன் சேவடிக்
காதலி னெழுவிய காம ரின்னிசை
யேதமின் றெவ்வள விசைத்த தவ்வள
வோதிய வுயிர்க்கெலா முறுகண் டீர்ந்தவே


சமணமுனிவர்கள் அரசனுக்கு அறவுரை பகர விரும்பல்

இறைவனை யின்னண மேத்தித் தந்தொழில்
குறைவிலா முடிந்தபின் குணக்குன் றாயினார்
மறமலி மன்னனை நோக்கி மற்றவற்
கறமழை பொழிவதோ ரார்வ மெய்தினார்


சமணமுனிவர்கள் அமர்ந்த இடம்

தென்றலுஞ் செழுமதுத் திவலை மாரியும்
என்றுநின் றறாததோ ரிளந்தண் பிண்டியும்
நின்றொளி திகழ்வதோர் நிலாக்கல் வட்டமும்
சென்றவ ரமர்ந்துழித் திகழ்ந்து தோன்றுமே


அரசன் சென்று பணிதல்

வென்றவன் றிருநகர் விளங்கு வேதிகை
மூன்றில்சேர்ந் திருந்தனர் முனிவ ராதலும்
மின்றவழ் விளங்குவேல் வென்றி வேந்தனும்
சென்றவர் திருந்தடி முடியிற் றீட்டினான்


முனிவர்கள் அரசனுக்கு வாழ்த்துரை கூறி அமரச் செய்தல்

பாசிடைப் பரப்புடைப் பழன நாடனை
ஆசிடை கொடுத்தவ ரிருக்க வென்றலும்
தூசுடை மணிக்கலை மகளிர் சூழ்தர
ஏசிடை யிலாதவ னிருக்கை யெய்தினான்


முனிவர்கள் அரசன் நலத்தை வினாவ அரசன் வணங்குதல்

தாளுயர் தாமரைத் திருவுந் தண்கதிர்
நீளெழி லாரமு நிழன்ற கண்குலாம்
தோளிணை செவ்வியோ வென்னச் சூழொளி
வாளவன் மணிமுடி வணங்கி வாழ்த்தினான்


சடியரசன் வணங்கிச் சகநந்தனனை நோக்கிக் கூறுதல்

முனிவருட் பெரியவன் முகத்து நோக்கியொன்
றினிதுள துணர்த்துவ தடிக ளென்றலும்
பனிமலர்த் தாமரைப் பழன நாடனைக்
கனியமற் றின்னணங் கடவுள் கூறினான்


தன் கருத்தையுணர்ந்து முனிவர் கூற அரசன் அவரைப் பணிதல்

துன்னிய வினைப்பகை துணிக்குந் தொன்மைசா
லின்னுரை யமிழ்தெமக் கீமி னென்பதாம்
மன்னநின் மனத்துள தென்ன மாமணிக்
கன்னவில் கடகக்கை கதழக் கூப்பினான்


வேறு - சாரணர் அறிவுரை - பிறவிகள் அளவிடற் கரியன என்றல்

மெய்யறி விலாமை யென்னும் வித்தினிற் பிறந்து வெய்ய
கையறு வினைகள் கைபோய்க் கடுந்துயர் விளைத்த போழ்தில்
மையுற வுழந்து வாடும் வாழுயிர்ப் பிறவி மாலை
நெய்யுற நிழற்றும் வேலோ யினைத்தென நினைக்க லாமோ


நற்சார்பு கிடைக்கும் வரையிலும் உயிர்கள் பிறந்து வருந்தும் என்றல்

சூழ்வினை துரப்பச் சென்று சூழ்வினைப் பயத்தினாலே
வீழ்வினை பிறிது மாக்கி வெய்துற விளிந்து தோன்றி
ஆழ்துய ருழக்கு மந்தோ வளியற்ற வறிவில் சாதித்
தாழ்வினை விலக்குஞ் சார்வு தலைப்படா வளவு மென்றான்

அருகக்கடவுள் திருவடிகளே பிறவிப்பிணியை ஓழிக்கும் என்றல்

காதியங் கிளைகள் சீறுங் காமரு நெறிக்குங் கண்ணாய்ப்
போதியங் கிழவர் தங்க டியானத்துப் புலங்கொண் டேத்தி
யாதியந் தகன்று நின்ற வடிகளே சரணங் கண்டாய்
மாதுய ரிடும்பை தீர்க்குஞ் சரணெனப் படுவ மன்னா


இரத்தினத் திரயம்

மெய்ப்பொரு டெரிதல் மற்றப் பொருண்மிசை விரிந்த ஞான
மப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்கந் தாங்கி
யிப்பொருள் ளிவைகள் கண்டா யிறைவனால் விரிக்கப் பட்ட
கைப்பொரு ளாகக் கொண்டு கடைப்பிடி கனபொற் றாரோய்


இரத்தினத் திரயத்தின் பயன் வீடுபேறு என்றல்

உற்றடு பிணியு மூப்பு மூழுறு துயறு நீக்கிச்
சுற்றிநின் றுலக மேத்துஞ் சுடரொளி யுருவந் தாங்கிப்
பெற்றதோர் வரம்பி லின்பம் பிறழ்விலா நிலைமை கண்டாய்
மற்ரவை நிறைந்த மாந்தர் பெறப்படு நிலைமை மன்னா


அறிவுரை கேட்டோ ர் மகிழ்ச்சி யடைதல்

அருந்துய ரறுக்கு மாண்பி னாரமிர் தவைகண் மூன்றும்
திருந்தநன் குரைப்பக் கேட்டே தீவினை யிருள்கள் போழும்
விரிந்தநல் லறிவின் சோதி விளங்கலிற் சனங்க ளெல்லாம்
பரிந்தகங் கழுமத் தேறிப் பாவம் பரிந் தவர்க ளொத்தார்


அரசன் மெய்யறிவடைதலும் உறவினர் நோன்பு மேற்கொள்ளலும்

மன்னிய முனிவன் வாயுண் மணிகொழித் தனைய வாகிப்
பன்னிய பவங்க டீர்க்கும் பயங்கெழு மொழிக டம்மால்
கன்னவில் கடகத் தோளான் காட்சியங் கதிர்ப்புச் சென்றான்
பின்னவ னுரிமை தானும் பெருவத மருவிற் றன்றே


வேறு - சுயம்பிரபை நோன்பு மேற்கொள்ள எண்ணுதல்

மன்னவன் மடமகள் வணங்கி மற்றவ
ரின்னுரை யமுதமுண் டெழுந்த சோதியள்
பன்னியொர் நோன்பு மேற் கொண்டு பாங்கினால்
பின்னது முடிப்பதோர் பெருமை யெண்ணினாள்


அரசன் முனிவரை வணங்கிக் கோயிலை வலஞ்செய்து செல்லுதல்

முனிவரர் திருந்தடி வணங்கி மூசுதேன்
பனிமலர் விரவிய படலை மார்பினான்
கனிவளர் பொழிலிடைக் கடவு ணன்னகர்
இனிதினின் வலமுறை யெய்தி யேகினான்


அரசன் பொழிலில் விளையாடி நகரத்தை அடைதல்

வாமமே கலையவர் மனத்தில் வார்பொழில்
காமவே ளிடங்கொள வருளிக் கண்ணொளிர்
தாமவே லிளையவர் காப்பத் தாழ்கதிர்
நாமவே னரபதி நகர நண்ணினான்


சமண முனிவர்கள் கடவுளை வணங்கி விண்வழியாகச் செல்லுதல்

அகநக ரரைசரோ டரைசன் சென்றபின்
சகதபி நந்தன ரென்னுஞ் சாரணர்
மிகநவின் றிறைவனை வணங்கி விண்ணிடைப்
பகனகு கடரொளி படர வேகினார்


சுயம்பிரபை நோன்பினால் மேம்படுதல்

அழற்கொடி யெறித்தொறுஞ் சுடரு மாடக
நிழற்கொடி யதுவென நிறைந்த காரிகைக்
குழற்கொடி யனையவள் கொண்ட நோன்பினால்
எழிற்கொடி சுடர்வதோ ரியற்கை யெய்தினாள்


மனநலத்தின் மாட்சி

முகைத்தவார் முல்லையை முருக்கு மெல்லியல்
நகைத்தவார் குழலவ டன்மை யாயினும்
வகுத்தவா றுயர்ந்தன நோன்பு மாசிலா
வகத்துமாண் புடையவர்க் கரிய தில்லையே


நோன்பினால் சுயம்பிரபை உடலொளி பெறுதல்

இந்திர வுலகமும் வணக்கு மீடுடைத்
தந்திர நோன்பொளி தவழத் தையலாள்
மந்திர நறுநெய்யால் வளர்ந்து மாசிலா
வந்தர வழற்கொடி யனைய ளாயினாள்


நோன்பு முடித்த சுயம்பிரபை அருகக்கடவுளுக்குத் திருவிழாச் செய்தல்

தாங்கருஞ் சுடொரொளி சக்கர வாளமென்
றோங்கிரும் பெயர்கொணோன் புயர நோற்றபின்
றீங்கரும் பனையசொற் சிறுமி தெய்வதக்
காங்கொரு பெருஞ்சிறப் பயர்தல் மேயினாள்


சுயம்பிரபை கடவுளைப் போற்றத் தொடங்கல்

தண்ணவிர் நிலாச்சுடர் தவழு மவ்வரைக்
கண்ணவிர் சென்னிமேற் கடவுட் டானமஃ
தண்ணலங் கோமக ளருச்சித் தாயிடை
விண்ணவ ருலகமூம் வியப்ப வேத்தினாள்


வேறு - வரிப்பாட்டு - சுயம்பிரபை கடவுளைப் போற்றுதல்

ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை யொதுங்கினை
போதியங் கிழவனை யொதுங்கிய
சேதியஞ் செல்வநின் றிருவடி வணங்கினம்


இதுவுமது -

காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
மாமலர் வண்ணநின் மலரடி வணங்கினம்

ஆரருள் பயந்தனை யாழ்துய ரவித்தனை
யோரரு ளாழியை யுலகுடை யொருவனை
யோரரு ளாழியை யுலகுடை யொருவனை
சீரருண் மொழியநின் றிருவடி தொழுதனம்


வேறு - சுயம்பிரபை வழிபாட்டு மலர்களைச் சூடிக்கொள்ளுதல்

கருவடி நெடுநல்வேற் கண்ணி யின்னணம்
வெருவுடை வினைப்பகை விலக்கும் வீறுசால்
மருவுடை மொழிகளாற் பரவி வாமன
திருவடிச் சேடமுந் திகழச் சூடினாள்


சுயம்பிரபை தன் தந்தையின் அரண்மனையை அடைதல்

வானுயர் கடவுளை வயங்கு சேவடித்
தேனுயர் திருமலர்ச் சேடங் கொண்டபின்
மானுயர் நோக்கியர் பரவ மங்கைதன்
கோனுயர் வளநகர்க் கோயின் முன்னினாள்


சுயம்பிரபை தன் தந்தைக்கு வழி பாட்டுப் பொருள் கொடுத்தல்

வெஞ்சுடர் வேலவர்க் குணர்த்தி மெல்லவே
பஞ்சுடைச் சேவடி பரவச் சென்றுகன்
னஞ்சுடர் மெல்விரல் சிவப்ப வாழியின்
செஞ்சுட ரங்கையிற் சேட நீட்டினான்


அரசன் தன் மகளை உச்சிமோந்து சில மொழிகள் சொல்லத் தொடங்குதல்

அல்லியி னரவண் டிரிய வாய்மலர்
வல்லியின் வணங்கிய மகளை மன்னவன்
முல்லையஞ் சிகழிகை முச்சி மோந்திவை
சொல்லிய தொடங்கினான் சுடரும் வேலினான்


ஐந்து பாடல்கள் அரசன் தன் மகளைப் புகழ்ந்துரைத்தல்

தேந்துணர் பலவுள வேனுஞ் செங்குழை
மாந்துணர் வயந்தனை மலரத் தோன்றுமே
பூந்துண ரோதிநீ பிறந்து பொன்செய்தார்
வேந்துவந் திறைஞ்சயான் விளங்கு கின்றதே


கங்கைநீர் பாய்ந்துழிக் கடலுந் தீர்த்தமா
மங்கணீ ருலகெலா மறியப் பட்டது
நங்கைநீ பிறந்ததற் பின்னை நங்குடி
வங்கநீர் வரைப்பெலாம் வணக்கப் பட்டதே


போதுலாந் தாமரை பூத்த பொய்கையைத்
தீதுலாங் கீழுயிர் தீண்டச் செல்லல
மாதுலா மடந்தைநீ பிறந்திம் மண்டில
மேதிலா ரிடைதிற மிகந்து நின்றதே

வானகத் திளம்பிறை வளர வையகம்
ஈனகத் திருள்கெட வின்ப மெய்துமே
நானகக் குழலிநீ வளர நங்குடி
தானகத் திருள்கெடத் தயங்கு கின்றதே


கண்பகர் மல்லிகை கமழக் காதலால்
சண்பகத் தனிவனந் தும்பி சாருநீ
பெண்பகர் திருவனாய் பிறந்து நங்குடி
மண்பக ருலகெலா மகிழச் செல்லுமே


அரசன் தன் மகளை உண்டற்கு அனுப்புதல்

கொவ்வையந் துவரிதழ்க் கோல வாயவட்
கிவ்வகை யணியன கூறி யீண்டுநும்
மவ்வைதன் கோயில்புக் கடிசி லுண்கென
மவ்வலங் குழலியை மன்ன னேயினான்


கட்டளையும் மகிழ்ச்சியும்

பல்கலம் பெரியன வணியிற் பாவைத
னல்குனோ மெனச்சிலம் பணிந்து மெல்லவே
செல்கவென் றிருமக ளென்று செம்பொனான்
மல்கிய முடியினான் மகிழ்ந்து நோக்கினான்


அரசன் தன் மகளைப் பற்றி மனத்தில் எண்ணுதல்

மண்ணருங் கலமெலாம் வலிதின் வவ்வினும்
விண்ணருங் கலமெலாம் விதியி னெய்தினும்
பெண்ணருங் கலமிது பெறுதன் மானுடர்க்
கெண்ணருந் தகைத்தென விறைவ னெண்ணினான்


தன் மகளுக்குரிய கணவன் யாவன் என்று எண்ணுதல்

மையணி வரையின்வாழ் மன்னர் தொல்குடிக்
கையணி நெடுநல்வேற் காளை மார்களுள்
நெய்யணி குழலிவட் குரிய நீர்மையான்
மெய்யணி பொறியவ னெவன்கொல் வீரனே


மங்கையர் இயற்கை

பொலங்கலக் குரியவாம் பொருவின் மாமணி
யிலங்கல மென்மை வீயஞ் சேர்த்தினும்
குலங்கலந் தில்வழிக் குரவர் கூட்டினும்
மலங்கலங் குழலிய ரன்றென் கிற்பவோ


தாய் தந்தையர் நோக்கப்படி நடப்பர் என்றல்

அந்தைதா முறுவது கருதி யாருயிர்த்
தந்தைதா யென்றிவர் கொடுப்பிற் றையலார்
சிந்தைதா யிலாதவர் திறத்துஞ் செவ்வனே
நொந்துதாம் பிறிதுரை நொடிய வல்லரோ


காமமுங் காதலும்

காதலா லறிவது காமங் காதலே
யேதிலா ருணர்வினா லெண்ண லாவதன்
றாதலான் மாதரா டிறத்தி னாணைநூ
லோதினா ருரைவழி யொட்டற் பாலதே


அரசர் வாழ்க்கையும் அமைச்சர்களும்

தன்னுணர் பொறிபிறர் தங்கண் கூட்டென
வின்னண மிருவகைத் திறைவர் வாழ்க்கையே
தன்னுணர் பொறிப்புலந் தன்னி னாம்பிறி
தின்னணா மியற்றுகென் றமைச்ச ரேவுவார்


அரசர்கள் அமைச்சராற் சிறப்படைவார்கள் என்றல்

தண்ணிய தடத்தவே யெனினுந் தாமரை
விண்ணியல் கதிரினால் விரியும் வேந்தரும்
புண்ணியப் பொதும்பரே புரிந்து வைகினும்
கண்ணிய புலவரா லலர்தல் காண்டுமே


அமைச்சர் அறிவுரையால் அரசியல் இனிது நடைபெறும் என்றல்

மாமலர் நெடுங்கடன் மதலை மாசிலாக்
காலமைந் தொழுகுமேற் கரையுங் காணுமே
நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல்
மேலவ ரொழுக்கமும் வேலை காணுமே


உலகம் பலவிதம்

ஒன்றுநன் றென உணர்ந் தொருவன் கொள்ளுமே
லன்றதென் றொருவனுக் கறிவு தோன்றுமே
நின்றதொன் றுண்டினி நீதி நூலினோ
டொன்றிநின் றவருரை யுலக மொட்டுமே


ஆயிரங்கண்ணனுக்கும் ஆயிரம் அமைச்சர்கள் உண்டென எண்ணல்

அந்தண ரொழுக்கமு மரைசர் வாழ்க்கையும்
மந்திர மில்லையேன் மலரு மாண்பில
இந்திர னிறைமையு மீரைஞ் ஞாற்றுவர்
தந்திரக் கிழவர்க டாங்கச் செல்லுமே


அமைச்சர்களை அழைக்குமாறு கட்டளையிடுதல்

என்றுதன் மனத்தினா னெண்ணி யீண்டுசீர்
நின்றநூற் கிழமையி னீதி மாக்களை
யொன்றிநீர் தருகென வுழைக்குற் றேவலார்
சென்றவர்க் கருளிது வென்று செப்பினார் 120


இரதநூபுரச் சருக்கம் முற்றிற்று

---------------

ஐந்தாவது

மந்திரசாலைச் சருக்கம்


அமைச்சர்கள் அரசனிடத்திற்கு வருதல்

செஞ்சினைத் தெரியலா னருளிச் செய்தது
தஞ்செவிக் கிசைத்தலுந் தணப்பில் கேள்வியா
ரஞ்சினர் நடுங்கின ராகி யாயிடை
நஞ்சிவர் வேலினான் பாத நண்ணினார்


மந்திரசாலையின் அமைப்பு

உள்ளுணின் றொலிபுறப் படாத தொண் சிறைப்
புள்ளுமல் லாதவும் புகாத நீரது
வெள்ளிவெண் விளிம்பினால் விளங்கு வேதிகை
வள்ளறன் மந்திர சாலை வண்ணமே


அரசன் பேசத் தொடங்குதல்

ஆங்கமர்ந் தமைச்சரோ டரைசர் கோமகன்
பூங்கமழ் மண்டபம் பொலியப் புக்கபின்
வீங்கொளி மணிக்குழை மிளிர்ந்து வில்லிட
வீங்கிவை மொழிந்தன னிறைவ னென்பவே


வேறு - மன்னன் அமைச்சர் மாண்பு கூறுதல்

மண்ணியல் வளாகங் காக்கு மன்னவர் வணக்க லாகப்
புண்ணிய நீர ரேனும் புலவராற் புகலப் பட்ட
நுண்ணிய நூலி னன்றி நுழை பொரு ளுணர்த்த றேற்றா
ரெண்ணிய துணிந்து செய்யுஞ் சூழ்ச்சியு மில்லை யன்றே


அமைச்சர் மாண்பு

வால்வளை பரவி மேயும் வளர்திரை வளாக மெல்லாம்
கோல்வளை வுறாமற் காக்குங் கொற்றவ னெடிய னேனும்
மேல்விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார்
நூல்விளை புலவ ரன்றே நுணங்குபோ தணங்கு தாரீர்


அரசனுக்கு அனைத்தும் ஆகுபவர் அமைச்சர்களே

சுற்றுநின் றெரியுஞ் செம்பொன் மணிமுடி சுடரச் சூட்டி
வெற்றிவெண் குடையி னீழல் வேந்தன்வேற் றிருக்கு மேனு
மற்றவன் மனமுங் கண்ணும் வாழ்க்கையும் வலியுஞ் சால்பு
மற்றமி லரசுங் கோலு மாபவ ரமைச்ச ரன்றே


அமைச்சர்கள் துணை கொண்டு அரசன் அரசியற் சுமையைத் தாங்குவான்

வீங்குநீர் ருலகங் காக்கும் விழுநுக மொருவ னாலே
தாங்கலாந் தன்மைத் தன்று தளையவிழ் தயங்கு தாரீர்
பாங்கலார் பணியச் சூழு நூலவர் பாக மாகப்
பூங்குலா மலங்கன் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே


அரசன் முகமன் பொழிதல்

அற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து நின்றான்
கற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகு
மற்றவற் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச்
செற்றவர்ச் செருக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் கடவ வன்றே


அரசனும் அமைச்சர்களும்

செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால்
அறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி
அறிந்தவை யியற்று கிற்கு மமைதியா ரமைச்ச ராவார்


தோள்வலியும் சூழ்ச்சியும்

வாள்வலித் தடக்கை மன்னர் வையகம் வணக்கும் வாயில்
தோள்வலி சூழ்ச்சி யென்றாங் கிருவகைத் தொகையிற் றாகும்
ஆள்வலித் தானை யார்கட் காதிய தழகி தேனும்
கோள்வலிச் சீய மொப்பீர் சூழ்ச்சியே குணம தென்றான்


சூழ்ச்சியுட் சிறந்தோர் மாட்சிபெறுவர்

ஊழ்வர வன்ன தேனு மொருவகைக் கரும மெல்லாம்
சூழ்பவர் சூழ்ந்து சூழுஞ் சூழ்ச்சியுட் டோ ன்று மன்றே
யாழ்பகர்ந் தினிய தீஞ்சொ லமிர்தனா ரேனுஞ் சூழ்ச்சி
வாழ்பவர் வல்ல ராயின் மன்னராய் மலர்ப வன்றே


சூழ்சியே அரசன் ஆற்றல்

ஆற்றன்மூன் றோதப்பட்ட வரசர்கட் கவற்றின் மிக்க
ஆற்றறான் சூழ்ச்சி யென்ப தாதலா லதனை யாயும்
ஆற்றலா ரமைச்ச ராக வமைச்சரோ டமர்ந்து செல்லும்
ஆற்றலா னரச னாகி னரியதொன் றில்லை யன்றே


இன்ப வாழ்க்கையிற் படிந்த அரசர் துன்படைவர்

வடந்திகழ் முலையி னார்தங் காமத்தின் மதர்த்த மன்னர்க்
கடைந்தவர் மாண்பு மாங்கொன் றில்லையே லரசர் வாழ்க்கை
கடந்தவழ் கடாத்த வேழங் களித்தபின் கல்வி மாணா
மடந்தவ ழொருவன் மேல்கொண் டன்னதோர் வகையிற் றாமே


சூழ்ச்சி தவறினால் வீழ்ச்சிக் கிடமுண்டாம்

சுந்தரச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழ லரசர் வாழ்க்கை
தந்திர மறிந்து சூழ்வான் சூழ்ச்சிசார்ந் தமையல் வேண்டும்
மந்திரம் வழுவு மாயின் வாளெயிற் றரவு காய்ந்து
தந்திரந் தப்பி னாற்போற் றன்னையே தபுக்கு மன்றே


அமைச்சர் அறவுரை வழியாவர் அரசர்

எடுத்தன னிலங்கு சாதி யெழிலொடு திகழு மேனு
மடுத்தன நிறத்த தாகு மணிகிளர் பளிங்கு போல
வடுத்தவ மலர்ந்து நுண்ணூன் மதியவர் வினையின் மாட்சி
கொடுத்தவா நிலைமை மன்னன் குணங்களாக் கொள்ப வன்றே


உங்களால்தான் நான் சிறந்து விளங்குகிறேன் என்றல்

மன்னுநீர் வளாக மெல்லாம் வணக்குதல் வல்லீ ராய
பன்னுநூற் புலவீர் முன்னர்ப் பலபகர்ந் துரைப்ப தென்னை
யென்னைநீ ரிறைவ னாக்கி யிராப்பக லியற்ற வன்றே
யின்னநீ ரின்ப வெள்ள மியைந்தியா னுயர்ந்த தென்றான்


அரசன் சுயம்பிரபைக்கு மணமகன் யாவன் என்று கேட்டல்

கொங்குடை வயிரக் குன்றின் கொழுஞ்சுடர் விளக்கிட் டாங்கு
நங்குடி விளங்க வந்த நங்கைதன் னலத்திற் கொத்தான்
தங்குடி விளங்க நின்ற தன்மையா னெவன்கொ லென்றான்
சங்குடைந் தனைய தாழைத் தடமலர்த் தொடைய லானே


அமச்சர்கள் பதிலுரைத்தல்

இறையிவை மொழியக் கேட்டே யிருந்தவ ரிறைஞ்சி யேத்தி
யறைகழ லரவத் தானை யணிமுடி யரச ரேறே
நிறைபுக ழுலகங் காத்து நிலாகநின் னிறைமை யென்று
முறைமுறை மொழிய லுற்று முன்னிய முகத்த ரானார்


சச்சுதன் என்னும் அமைச்சன் பேசத் தொடங்குதல்

பணிந்துமற் றேனை யார்பாங் கிருப்பநூல் பலவு நோக்கித்
துணிந்துதன் புலைமை தோன்றச் சச்சுதன் சொல்ல லுற்றான்
இணந்துநின் றுலவுந் தும்பி யிடையிடை யிருண்டு தோன்ற
அணிந்துநின் றலரும் பைந்தா ரணிமணி முடியி னாற்கே


சூரியன் தோன்றச் சூரியகாந்தக்கல் தீயை வெளிப்படுத்தும்

பொற்கதிர் பரப்பி வந்து பொங்கிருள் புதைய நூறுந்
தொழிற்கதிர்க் கடவு டோ ன்றச் சூரிய காந்தமென்னும்
எழிற்கதிர்ப் பிறங்கல் வட்ட மெரியுமிழ்ந் திடுவ தன்றே
அழற்சதி ரிலங்குஞ் செவ்வே லதிர்கழ லரசர் கோவே


அரசர் பெருமையால் அமைச்சர் சிறப்புறுவர்

கோணைநூற் றடங்க மாட்டக் குணமிலார் குடர்க ணைய
ஆணைநூற் றடங்கக் காக்கு மரசர்த மருளி னாலே
பேணுநூற் புலவர் மாண்பும் பெருகுவ துருவத் தார்மேல்
பூணுநூற் பொலிந்து தோன்றும் பொன்வரை மார்ப வென்றான்


திங்கள் தோன்றினால் சந்திரகாந்தக்கல் நீரினை வெளிப்படுத்தும்

சூழ்கதிர் தொழுதி மாலைச் சுடர்பிறைக் கடவு டோ ன்றித்
நாழ்கதிர் சொரிந்த போழ்திற் சந்திர காந்த மென்னும்
வீழ்கதிர் விளங்கு வட்டம் வெள்ளநீர் விரியு மன்றே
போழ்கதிர் பொழிந்து பொங்கிப் புலானிணம் பொழியும் வேலோய்


நூலோர் சூழ்ச்சி அரசர் பெருமையால் சிறக்கும்

கண்ணளித் துலக மெல்லாங் கவின்பெறக் காவல் பூண்டு
தண்ணளித் தயங்கு செங்கோற் றாரவர் தவத்தி னாலே
மண்ணளித் தினிய நூலோர் மந்திர மலரு மென்றான்
விண்ணளித் திலங்கும் வெள்ளி விரிந்தவெண் குடையி னாற்கே


பொறுமையின் பெருமை

கண்ணிய கடாத்த வேழங் கவுளினா னுரிஞப் பட்டுந்
தண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப்
புண்ணிய கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின்
மண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கு மன்றே


அரசன் கொடியவனாயின் உலகம் துன்பத்தை யடையும்

நிறந்தலை மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின்
இறந்தலை மயங்கு நீர்வா ழுயிர்க்கிட ரெல்லை யுண்டோ ?
மறந்தலை மயங்கு செவ்வேன் மன்னவன் வெய்ய னாயின்
அறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்கு மன்றே


இதுவுமது

மண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள்
விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற்
கண்குளிர் கொள்ளப் பூக்குங் கடிகயத் தடமுங் காவும்
தண்குளிர் கொள்ளு மேனுத் தாமிக வெதும்பு மன்றே


அரசன் தீயவனாயின் மக்கட்குப் புகலிடமில்லை

தீயினர் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயிற்
போயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மை யாலே
வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய்
மாயினம் படர்ந்த தெல்லாம் வையகம் படரு மன்றே


அறவழி நிற்கும் அரசன் அடிநிழலே அருந்துணை

மறந்தலை மயங்கி வையத் தொருவரை யொருவர் வாட்ட
விரந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும்
அறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும்
சிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய்

ஒருமையாற் றுன்ப மெய்து மொருவனை யும்மை யாலே
திருமையான் முயங்குஞ் செல்வச் செருக்கொடு திளைப்ப நோக்கி
இருமையு மொருமை யாலே யியற்றலி னிறைவன் போலப்
பெருமையை யுடைய தெய்வம் பிறிதினி யில்லை யன்றே


உலகத்திற்குக் கண்கள் மூன்று

கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர்
விண்ணினைச் சுழல வோடும் வெய்யவ னென்னும் பேரார்
எண்ணினுட் டலைக்கண் வைத்த கண்ணஃ தில்லை யாயின்
மண்ணினுக் கிருளை நீக்கும் வகைபிறி தில்லை மன்னா


இவ்வுலகில் துன்பமின்றேல் எவரும் விண்ணுலக வாழ்வை நாடார்

குடிமிசை வெய்ய கோலுங் கூற்றமும் பிணியு நீர்சூழ்
படிமிசை யில்லை யாயின் வானுளயார் பயிறு மென்பார்
முடிமிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி
அடைமிசை நரலுஞ் செம்பொ னதிர்கழ லரச ரேறே


அரசர்களைப்போல மக்கள் இலர்

தண்சுடர் கடவுள் போலத் தாரகைக் குழாங்க டாமே
விண்சுடர் விளக்க மாக விளங்கல வேந்தர் போல
மண்சுடர் வரைப்பின் மிக்க மக்களு மில்லை கண்டாய்
கண்சுடர் கனலச் சீறுங் கமழ்கடாக் களிற்று வேந்தே


அருந்தவமும் அரசாட்சியும் ஒன்று என்றல்

அருந்தவ மரைச பார மிரண்டுமே யரிய தம்மை
வருந்தியு முயிரை யோம்பி மனத்தினை வணக்கல் வேண்டும்
திருந்திய விரண்டுந் தத்தஞ் செய்கையிர் றிரியு மாயிற்
பெருந்துயர் விளைக்கு மன்றே பிறங்குதார் நிறங்கொள் வேலோய்


விண்ணுலக ஆட்சிபெற இருவழிகள்

அந்தரந் திரியுஞ் செய்கை யமரர்தம் மரசு வேண்டி
இந்திர வுலகங் காணு நெறியவை யாவை யென்னின்
மந்திரம் வழாத வாய்மை மாதவம் முயற லன்றேல்
தந்திரந் தழுவிச் செங்கோ றளர்விலன் றரித்த லென்றான்


அருந்தவமும் அரசாட்சியும் ஆற்றல் அரிது

மரந்தலை யிணங்கி வான்றோய் மணிவளர் வயிரக் குன்றம்
உரந்தனக் குயர வேந்தி யுய்த்திடு மொருவற் கேனும்
அருந்தவ மரசை பார மவைபொறை யரிது கண்டாய்
இரந்தவர்க் கீட்டப் பட்ட விருநிதிக் கிழவ வென்றான்


சூழ்ச்சியின் மாண்பு

உரிதினி னொருவன் செய்த வூழ்வினை யுதயஞ் செய்து
விரிதலி னதன துண்மை விளங்கினாற் போல வேந்தர்
கருதிய கருமச் சூழ்ச்சிப் பயத்தினாற் கருதும் வண்ணம்
எரிதவழ்ந் திலங்கும் வேலோய் என்ணுவ தென்ண மென்றான்


இதுவுமது

பஞ்சிநன் றூட்டப் பட்ட மாதுளம் பருவ வித்து
மஞ்சிநின் றகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும்
அஞ்சிநின் றனலும் வேலோய் சூழ்ச்சியு மன்ன தேயால்
வெஞ்சொலொன் றுரைக்க மாட்டா விடுசுடர் விளங்கு பூணோய்


செய்திகூறத் தொடங்கும் சச்சுதன் முன்னுரைக்கு அடங்கக் கூறல்

கொற்றவேன் மன்னர்க் கோதுங் குணமெலாங் குழுமி வந்து
முற்றுநின் றுருவு கொண்ட மூர்த்திநின் முன்னர் யாங்கள்
இற்றென வுரைக்கு நீதி யோதுநூ லெல்லை காணக்
கற்றவர் முன்னை யேனோர் கதையொத்துக் காட்டு மன்றே


செவ்வி கேட்டல்

தேன்மகிழ் தெரிய லாய்நின் றிருக்குலந் தெளிப்ப வந்த
பான்மகிழ்ந் தனைய தீஞ்சொற் பவழவாய்ப் பரவை யல்கும்
வான்மகிழ் மணங்கொண் மேனி யணங்கினுக் குரிய கோனை
யான்மகிழ் துணர்த்தக் கேட்பி னிடைசிறி தருளு கென்றான்


வேறு - விஞ்சையர் சேடி வண்ணனை

மஞ்சிவர் மால்வரைச் சென்னி வடமலை
விஞ்சையர் வாழும் விழாவணி நல்லுல
கஞ்சியல் வில்லோ யதுமற் றமரர்கள்
துஞ்சிய வில்லாத் துறக்க மனைத்தே


அது விண்ணுலகத்தைப் போன்றது

மண்ணியல் வாழ்நர்க்கும் வானுல கொப்பது
புண்ணிய மில்லார் புகுதற் கரியது
கண்ணிய கற்பகக் கானங் கலந்தது
வின்ணிய லின்பம் விரவிற் றினிதே


எல்லா இன்பப் பொருள்களும் ஒருங்கமையப்பெற்றது

எல்லா விருதுவு மீனும் பொழிலின்
தெல்லா நிதியு மியன்ற விடத்தின
தெல்லா வமரர் கணமு மிராப்பகல்
எல்லாப் புலமு நுகர்தற் கினிதே

பொன்னிதழ்த் தாமரை பொய்கையுட் பூப்பன
பொன்னிதழ்த் தாமம் பொழில்வா யவிழ்ப்பன
பொன்னிதழ்த் தாது மணிநிலம் போர்ப்பன
பொன்னிதழ்த் தாது துகளாய்ப் பொலிவன


அந்நாட்டுப் பொழில் முதலியன

கானங்க ளாவன கற்பகங் காமுகர்
தானங்க ளாவன சந்தனத் தாழ்பொழில்
நானங்க ளாவன நாவி நருவிரை
வானங்க ளாம்வகை மற்றுமொன் றுண்டோ ?

மணிக்கற் படாதன மண்டபம் செம்பொன்
குணிக்கப் படாதன குளிர்புனல் நீத்தம்
கணிக்கப் படாத கதிர்மணிக் குன்றம்
பிணிக்கப் படாதவர் யாரவை பெற்றால்


வடசேடியில் அறுபது பெரிய நகரங்கள்

ஆங்கதன் மேல வறுபது மாநகர்
தீங்கதிர் மண்டிலஞ் சேர்ந்து திளைப்பன
நீங்கரு மாநகர் தம்மு ணிலாவிரிந்
தோங்கிய சூளா மணியி னொளிர்வது


இரத்தின பல்லவம்

மரத்தினு மண்ணினு மாடங்கள் யாவும்
திருத்தின வில்லது செம்பொ னுலகில்
புரத்தினை வெல்வது பொன்னகர் பூந்தண்
ணிரத்தின பல்லவ மென்பதொன் றுண்டே


அந்நகர் விண்ணுலகம் மண்ணுலகில் வந்தாற் போன்றது

வளைத்தகை மங்கையர் மைந்தரொ டாடி
முளைத்தெழு காம முடிவில ராகித்
திளைத்தலி னின்னகர் தெய்வ வுலகம்
களித்திழிந் தன்னதோர் கவ்வை யுடைத்தே


அந்நகரத்தில் வாழ்வோர் வருந்திச் செய்யும் தொழில்

ஆடவர் கொம்பனை யாரிளை யாரவர்
பாடக மெல்லோர் பரவிய சீறடி
தோடலர் தொங்கலங் குஞ்சியுட் டோ யவைத்
தூட லுணர்த்துந் தொழிலதொன் றுண்டே


வருத்தமுள்ள நகர்

சிலைத்தடந் தோளவர் செஞ்சாந் தணிந்த
மலைத்தட மார்பிடை மைமதர்க் கண்ணார்
முலைத்தடம் பாய முரிந்து முடவண்
டிலைத்தடத் தேங்கு மிரக்க முளதே


முரிவன பல

வனைத்தன போலும் வளர்ந்த முலையார்
இனைந்துதங் காதல ரின்பக் கனிகள்
கனிந்து களித்தகங் காமங் கலந்துண
முனிந்து புருவ முரிவ பலவே


அந்நகரில் இளைப்போரும் கலங்குவோரும்

செவ்வாய்ப் பவழக் கடிகைத் திரளெனும்
அவ்வா யமிர்தமுண் டார்பல ராடவர்
ஒவ்வா திளைப்ப ரொசிந்தன ரோடரி
மைவா ணெடுங்கண் மலக்கம் பெரிதே


அந்நகரத்தில் வாழ்பவரை வருந்தச் செய்வது

வளர்வன போலு மருங்குல்க ணோவத்
தளர்வன போல்பவர் தாமக் குழன்மேற்
கிளர்வன போதிள வாசங் கிளைத்துண்
டுளர்வன போதரு மூதை யுளதே


அந்நகரத்தே அஞ்சி மறைவன

பஞ்சா ரகலல்குற் பாவையர் பூண்முலைச்
செங்சாந் தணிந்து திகழ்ந்த மணிவண்டு
மஞ்சார் பொழிலுள் வளர்பெடை கண்டதற்
கஞ்சா வொளிக்கு மயல ததுவே


இன்றமிழியற்கை யின்பம்

பாசிலை மென்றழைப் பள்ளியுட் பாவையர்
தூசினு ணின்று சொரிமணிக் கோவையும்
பூசின சாந்தும் பிணையலும் போர்த்திடை
மூசின வண்டின மொய்ப்பொழி லெல்லாம்


காதல் தூது

காம விலேகையுங் கற்பக மாலையும்
சேம மணிநகைச் செப்பினு ளேந்துபு
தூமக் குழலவர் தூது திரிபவர்
தாமத் தெருவிடை தாம்பலர் கண்டாய்


காமக்கடலைக் கலக்கும் தீமைத்தொழில்

தாமத் தொடையல் பரிந்து தமனிய
வாமக் கலங்கள் புலம்ப மகளிர்கள்
காமக் கடலைக் கலக்குங் கழலவர்
தீமைத் தொழிலவை தேர்ந்துள வன்றே


வேறு - மயூரகண்டனுக்கும் நீலாங்கனைக்கும் பிறந்தவன் அச்சுவக்கிரீவன்

பொன்னகர் தன்னை யாள்வான் புரந்தர னணைய மாண்பின்
மன்னவன் மயூர கண்டன் மற்றவன் தேவி மாருள்
மின்னவிர் மருங்கு னீலாங் கனையென விளங்கி நின்றா
ளன்னவள் புதல்வன் கண்டா யச்சுவக் கிரீவ னென்பான்


அச்சுவக்கிரீவன் அரசு எய்தியபின் உலகம் முற்றும் அவனடிப்பட்டது

அதிர்கழ லலங்கல் வேலோ யச்சுவக் கிரீவ னென்னும்
பொதியவிழ் பொலங்கொள் பைந்தார்ப் புரவலன் றிகிரி யெய்தி
மதிதவழ் குன்ற மெல்லாம் வணக்கிய பின்றை மண்ணும்
கொதிதவழ் வேலி னான்றன் குறிப்பொடு கூடிற் றன்றே


அச்சுவக்கிரீவன் தன்னிகறற்ற தனி மன்னன்

சுற்றமாண் புடைமை யாலுஞ் சூழ்கதிர்த் திகிரி யாளுங்
கொற்றமாங் குடைமை யாலுங் குலத்தது பெருமை யாலுங்
சுற்றமாண் விஞ்சை யாலுங் கருதிய முடித்த லாலும்
வெற்றிவே லவனோ டொப்பார் வேந்தர்மற் றில்லை வேந்தே


அச்சுவக்கிரீவனுடைய தம்பியர்

தம்பியர் நீலத் தேரோன் றயங்குதார் நீல கண்டன்
வம்புயர் மகரப் பேழ்வாய் வயிரமா கண்டன் வண்டும்
தும்பியுந் துவைக்குந் தொங்கற் சுகண்டனென் றிவர்கள் கண்டாய்


வெம்பிய வுருமுத் தீயுங் கூற்றமும் வெதுப்பு நீரார்

அவனுக்கு நிகரானவர் பிறர் இலர்

படையின தமைதி கூழின் பகுதியென் றிவற்றின் பன்மாண்
புடையவ ரவனொ டொப்பா ரொருவர்மற் றில்லை வேந்தே
விடயமொன் றின்றி வென்ற விடுசுடை ராழி யாளும்
நடையவ னுவப்பின் ஞாலம் பிறருழை நடப்ப தென்றான்


அமைச்சனும் நிமித்திகனும்

ஆணைநூ லமைச்ச னாவா னரிமஞ்சு வவன தற்றல்
கோணை நூற் பவரைத் தன்சொற் குறிப்பின்மே னிறுத்த வல்லான்
பேணுநூ னிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான்
காணுநூற் புலமை யாருங் காண்பவரில்லை கண்டாய்


அச்சுவக்கிரீவன் தன்மை

தன்னலாற் றெய்வம் பேணார் சார்ந்தவர் தானுஞ் சார்ந்தார்க்
கென்னலா லிவருக் குற்றா ரில்லையென் றிரங்கு நீரான்
பொன்னெலா நெதிய மாரப் பொழிந்திடு கின்ற பூமி
மன்னெலா மவனை யன்றி வணங்குவ தில்லை மன்னா


அச்சுவக்கண்டனது தோள்வன்மை

குளிருவா ளுழுவை யன்னான் குமாரகா லத்து முன்னே
களிருநூ றெடுக்க லாகக் கற்றிரள் கடகக் கையால்
ஒளிறுவா ளுழவ னேந்தி யுருட்டிவட் டாட வன்றே
வெளிறிலாக் கேள்வி யானை விஞ்சைய ரஞ்சி யிட்டார்


அச்சுவக்கிரீவனைப்பற்றி மேலுஞ் சில கூறுதல்

முற்றவ முடைமை யாலே மூரிநீ ருலக மெல்லாம்
மற்றவ னேவல் கேளா மன்னவ ரில்லை மன்னா
செற்றவ னலித லஞ்சித் திறைகொடுத் தறிவித் தன்றே
நற்றவ நங்கை தோன்றா முன்னநா மாண்ட தெல்லம்


சுயம்பிரபை பிறந்த பிறகு அவன் திறைகொள்ளவில்லை யென்றல்

ஈங்குநங் குலக்கொம் பொப்பாள் பிறந்தபி னினிய னாகித்
தேங்கம ழலங்கல் வேலோன் றிறைகொள லொழிந்து செல்லு
மாங்கவன் றிறங்க ளெல்லா மறிதியா லாணை வேந்தே
தீங்கியா னுணர்த்திற் றுண்டோ திருவடி தெளிக வென்றான்


சுயம்பிரபையை அவனுக்கு மணஞ்செய்விக்கலாம் என்றல்

மற்றவற் குரிய ணங்கை யென்பதன் மனத்தி னோடு
முற்றுவந் துளது சால வுறுதியு முடைய தொக்கும்
வெற்றிவேல் விஞ்சை யாரு மஞ்சுவர் மின்செய் பைம்பூண்
கொற்றவ குறிப்புண் டாயிற் கொடுப்பது குணங்கொ லென்றான்


பவச்சுதன் என்பவன் கூறத் தொடங்குதல்

சுடர்மணி மருங்குற் பைங்கட் சுளிமுகக் களிதல் யானை
யடர்மணிக் கதிரும் பைம்பொன் மாலையு மணிந்த சென்னித்
தொடர்மணிப் பூணி னாற்குச் சச்சுதன் சொல்லக் கேட்டே
படர்மணிப் படலை மாலைப் பவச்சுதன் பகர லுற்றான்


வேறு - சச்சுதன் சொல்லியவை உண்மை என்றல்

நூலா ராய்ந்து நுண்பொறி கண்ணு நொடிவல்லான்
மேலா ராயு மேதமை யாலு மிகநல்லான்
தோலா நாவிற் சச்சுதன் சொல்லும் பொருளெல்லாம்
வேலார் கையாய் மெய்ம்மைய வன்றே மிகையாலோ 70


அச்சுவக்கிரீவனுக்கு ஒரு குறை கூறுதல்

தேனும் வண்டுந் தீதில பாடுஞ் செறிதாரோய்!
யானுங் கண்டே னச்சுவ கண்டேன் றிறமஃதே
மானங் கொண்ட மாரதர் போரே றனையாயோ
ரூனங் கண்டே னொட்டினு மொட்டே னுரைசெய்கேன்


பிறந்த நாட் குறிப்புக் கூறல்

மானக் கோதை மாசறு வேலோய் வரவெண்ணி
நானக் கோதை நங்கை பிறந்த நாளானே
வானக் கோளின் மாண்புணர் வார்கண் மறுவில்லாத்
தானக் கோளிற் சாதக வோலை தலைவைத்தார்

காவிப் பட்டங் கள்விரி கானற் கடனாடன்
மேவிப் பட்டம் பெற்றவன் காதன் மேயனால்
ஏவிப் பட்ட மீந்தவ ரெல்லா மினிதேத்தும்
தேவிப் பட்டஞ் சேர்பவ ளன்றே திருவன்னாள்


இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்

நங்கோ னங்கை நன்மக னாகி நனிவந்தான்
தங்கோ னேவத் தானிள வேந்தாய்த் தலைநின்றான்
எங்கோ னென்றே யிவ்வுல கேத்து மியறன்னால்
செங்கோ லின்பஞ் சேர்பவ னன்றே செருவேலோன்

என்றா லன்றச் சாதக வோலை யெழுதிற்றால்
குன்றா வென்றிக் குன்றுறழ் யானைக் கொலைவேலோய்
நன்றா நங்கைக் கொன்றிய காமப் பருவத்தால்
நின்றா னன்றே யின்றுணை யாகுந் நிலைமேயான்


சாதகக் குறிப்பு அச்சுவக்கிரீவனுக் கமையாமை கூறல்

ஆழிக் கோமா னச்சுவ கண்ட னவனுக்கே
ஊழிக் கால மோடின வென்னு முரையாலும்
தாழிக் கோலப் போதன கண்ணா டகுவாளோ
சூழிக் கோலச் சூழ்களி யானைச் சுடர்வேலோய்


அச்சுவக்கிரீவனுக்குப் பட்டத்தரசி யுண்மை கூறல்

கண்ணார் கோதைக் காமரு வேய்த்தோட் கனகப்பேர்
மண்ணார் சீர்த்திச் சித்திரை யென்னு மடமாதின்
றெண்ணா ரின்பக் காதலி யாகி யியல்கின்றாள்
பெண்ணார் சாயல் பெற்றன டேவிப் பெறுபட்டம்


இரத்தின கண்டன் இளவரசன்

வானோ ருட்கு மக்களோ ரைஞ்ஞூற் றுவர்தம்முள்
ஈனோ ருட்கு மிரத்தின கண்ட னெனநின்றான்
ஏனோ ருட்கு மின்னிள வேந்தா யியல்கின்றான்
ஊனோ ருட்கு மொண்சுடர் நஞ்சூ றொளிவேலோய்


மன்னன் வினாதல்

அன்னா னாயி னாதலி னன்றே யவனன்னால்
என்னா னாவா னென்றனன் வேந்த னெனலோடும்
இன்னா னின்னா னிந்நக ராள்வா னிவனென்றே
அன்னா னன்னாற் கந்நக ரெல்லா மறிவித்தான்


சிறந்தவனைத் தெரிந்துகொடு வென்றல்

மையார் சென்னி மால்வரை யாளும் வயமொய்ம்பிற்
கையா ரெஃகிற் காளைக டம்முட் கமழ்கோதை
மெய்யா மேவு மேதகு வானை மிகவெண்ணிக்
கொய்யா விம்முங் கொங்கலர் தாரோய் கொடுவென்றான் 80

வேறு - இதுமுதல் கூ உக ஆம் செய்யுள் முடிய ஒரு தொடர்: பவச்சுதன் கூற்று


பவனஞ்சன் மாண்பு

கேடிலிம் மலையின் மேலாற் கின்னர கீத மாளும்
தோடிலங் குருவத் தொங்கற் சுடர்முடி யரசன் செம்மல்
பாடல்வண் டிமிரும் பைந்தார்ப் பவனஞ்ச னென்ப பாரித்
தாடலம் புரவி வல்ல அரசிளங் குமர னென்றான்


அமிழ்தபதி நாட்டு வேகரதன்

அளந்தறி வரிய செய்கை யமிழ்தமா பதியை யாளும்
வளந்தரு வயிரப் பைம்பூண் மன்னவன் சிறுவன் வண்டார்
விளங்கொளி யுருவத் திண்டோ ள் வேகமா ரதனை யன்றே
இளங்களி யுழுவை யாக விருநிலம் புகழ்வ தென்றான்


மேகபுரத்துப் பதுமரதன்

வேழத்தாற் பொலிந்த சோலை மேகமா புரம தாளும்
ஆழித்தே ரரவத் தானை யரசர்கோன் புதல்வ னந்தார்ப்
பாழித்தோ ளுருவச் செங்கட் பதுமத்தேர்ப் பெயரி னானை
ஊழித்தீ யென்று வேந்த ருட்குவ துருவத் தாரோய்


இரத்தினபுரத் தரசன் மகன் சுவர்ணரதன்

இலங்கொளி மாடவீதி யிரத்தின புரம தாளும்
உலங்கெழு வயிரத் திண்டோ ளொளிமுடி யரசன் செம்மல்
அலங்கலம் புரவித் தானை யருங்கலத் தேரின் பேரன்
குலங்கெழு குரிசில் கண்டாய் கொண்டல்வா னுருமோ டொப்பான்


கீதமாபுரத்தரசன் மகன் அரிகண்டன்

நங்கண்மால் வரையின் மேலோன் நன்னகர் கீத மென்னும்
திங்கண்மால் புரிசை வேலிச் செழுநக ரரசன் செம்மல்
அங்கண்மா ஞால மாளு மரிகண்ட னவனை விண்மேல்
செங்கண்மான் முனியு மேனுஞ் செய்வதொன் றில்லை கண்டாய்


திரிபுர அரசன் மகன் நளிதாங்கன்

சேந்தெரி செம்பொன் வீதித் திரிபுர மதனை யாளும்
வாய்ந்தெரி வயிரப் பைம்பூண் மன்னவன் புதல்வன் மல்லா
டேந்துதோ ளரசர் போரே றிவனளி தாங்க னென்பன்
காய்ந்தெரி கனலின் வெய்யோன் கல்வியாற் கடலோ டொப்பான்


சித்திரகூடத்து அரசன் ஏமாங்கதன்

செந்தளிர் புதைந்த சோலைச் சித்திர கூட மாளும்
அந்தளி ரலங்கன் மாலை யரசர்கோன் சிறுவ னந்தார்
இந்திரன் புதல்வ னன்னா னேந்தலே மாங்க தற்கிம்
மந்திர வுலகின் வாழு மன்னர்மா றில்லை மன்னா


அச்சுவபுரத்துக் கனக சித்திரன்

அருமணி யடுத்த வீதி யச்சுவ புரம தாளும்
திருமணி திகழும் பூணான் பெருமகன் சிறைவண் டென்னும்
கருமணி துதைந்த பைந்தார்க் கனகசித் திரனை யன்றே
ஒருமணி திலத மாக வுடையது நிலம தென்றான்


சிரீ நிலையத்தரசன் மகன் சித்திராதன்

சீரணி முழவ மோவாச் சிரீநிலை யதனை யாளும்
காரணி தடக்கை வேந்தன் கான்முளை கனபொ னார்ந்த
தேரணி யரவத் தானைச் சித்திரத் தேரின் பேரான்
தாரணி மார்ப னன்றே தரணிக்கோர் திலத மாவான்


கனக பல்லவத்தரசன் மகன் சிங்ககேது

கற்றவர் புகழுங் சீர்த்திக் கனகபல் லவத்தை யாளும்
கொற்றவன் சிறுவன் கோலக் குங்குமக் குவவுத் தோளான்
செற்றவர்ச் செருக்குஞ் செய்கை செருவல்லான் சிங்க கேது
மற்றவன் பிறந்த பின்னா மண்மகள் மகிழ்ந்த தென்றான் 90


இந்திர சஞ்சயத்தரசன் மகன் அருஞ்சயன்

இஞ்சிசூழ் ழெரிபொன் மாடத் திந்திரன் மிசைந்த நாமச்
சஞ்சய முடைய கோமான் றாண்முளை தரணி யெல்லாம்
அஞ்சுநீ ரலங்கல் வேலா னருஞ்சய னவனை நங்கண்
மஞ்சுசூழ் மலைக்கோர் சூளா மணியெனக் கருது மன்னா!

எங்கிவர் தம்முள் யாவ ரிலங்கிரும் பவழச் செவ்வாய்க்
கோங்கிவர் குவிமென் கொங்கைக் கொம்பினுக் குரிய காளை
ஆங்கவன் றன்னை யாராய்ந் தறிந்தருள் செய்க வென்றான்
வாங்கிரும் பரவை முந்நீர் மணிகொழித் தனைய சொல்லான்


வேறு - பவச்சுதன் கூறியவற்றிற்கு எல்லாரும் உடன்படுதல்

மன்னர் நீண்முடி மென்மணித் தொத்தொளி
துன்னு சேவடி யாற்குச் சுருங்கவே
பன்னு கேள்விப் பவச்சுதன் சொல்லலும்
அன்னதே யென்றெல் லார்களு மொட்டினார்


சுதசாகரன் என்பவன் சொல்லுதல்

அல்லி நாண்மலர்த் தாருமுத் தாரமும்
வல்லி யாங்கனி சாந்தும் வனைந்துராய்
மல்லி னான்மலி மார்பற்கு மற்றிவை
சொல்லி னான்சுத சாகர னென்பவே


பவச்சுதன் கூறியது உண்மை என்றல்

ஆழி யாள்கின்ற வச்சுவ கண்டன்மேல்
பாழி யாகின்ற திண்டோ ட் பவச்சுதன்
சூழி யானையி னாய் சொலப் பட்டன
ஊழி யாருரை யும்மொத் துள கண்டாய்


பிறருக்குக் கொடுப்பினும் பகையாகுமென்றல்

ஆயி னுஞ்சிறி துண்டறி வண்டினம்
பாயி னும்பனிக் கும்படர்க் கோதைதன்
வேயி னும்பணைக் கின்றமென் றோள்பிறர்
தோயி னும்பகை யாஞ்சுடர் வேலினாய்


அச்சுவகண்டன் ஆற்றலிற் சிறந்தவனென்றல்

வண்ட வாமுடி மன்னருண் மற்றவன்
தண்ட மாற்றுநர் தாமிலை யாற்சிறி
துண்டி யானுரைப் பானுறு கின்றது
விண்டு வாழுநர் மேனகு வேலினாய்


சுரேந்திரகாந்தத்து மேகவாகனன்

போக மாண்டவிச் சேடியோர் பொன்னகர்க்
கேக நாயக னாயினி தாள்பவன்
மேக வாகன னென்றுளன் வீழ்மத
வேக மால்களி றும்மிகு வேலினான்


மேகவாகனன் மனைவி மேகமாலினி

நாக மாலைகண் மேனகு வண்டினம்
ஏக மாலைய வாயிசை கைவிடாத்
தோகை மாமயில் போற்சுரி கூந்தலாள்
மேக மாலினி யென்றுரை மிக்குளாள்


அவர்களுடைய மகன் விச்சுவன்

தேவி மற்றவ டெய்வம் வழிபட
மேவி வந்தனன் விச்சுவ னென்பவன்
ஓவி றொல்புக ழானுளன் கூற்றமும்
ஏவி நின்றினி தாண்டிடு மீட்டினான் 100


விச்சுவன் பெருமை

மையில் வானுல காண்டுமண் ணோர்களுக்
குய்யும் வாயி லாணுர்த்திய தோன்றிய
ஐய னற்பிற வாரஞர் நீங்கியிவ்
வைய மாயதெல் லாம்வளர் கின்றதே


இவ்வுலகிற்கருள் செய்தபின் மீண்டும் தேவருலகை யடைவான்

மங்குல் வானுல காண்டு வரத்தினால்
இங்கு வந்தென னீணண்டளி யீந்தபின்
திங்கள் வானொளி யிற்றிகழ் சோதியாய்த்
தங்கு வானுல கிற்றகை சான்றதே

தன்னி னாய்விளை வித்திரு ளைத்தவிர்த்
தின்ன னாகவென் றெண்ணிய வெண்ணமோ
டன்ன னாதலி னாலவன் மேற்பிறர்
என்ன ரேனுமின் னாதன வெண்ணிலார்


சுயம்பிரபைக்கு விச்சுவன் தகுந்தவன் ஆவன் எனல்

காம்பின் வாய்ந்தமென் றோளியக் காதலன்
தீம்பன் மாலைநன் மார்பகஞ் சேருமேல்
ஆம்பன் மாலையு மாய்கதிர்த் திங்களும்
தாம்பன் மாலையுஞ் சார்ந்த தனைத்தரோ


விச்சுவன் தங்கை

நம்பி தங்கை நகைமலர்க் கற்பகக்
கொம்பி னன்னவன் கொங்கணி கூந்தலாள்
அம்பி னீண்டரி சிந்திய மாக்கயல்
வம்பி னீண்டமை வாணெடுங் கன்ணினாள்


அவளுடைய பெயர் சோதிமாலை

கோதின் மாலைகள் மேற்குதி கொண்டெழு
கீத மாலைய கின்னர வண்டினம்
ஊதி மாலைய வாயுறை யுங்குழல்
சோதி மாலையென் பாள்சுடர்ப் பூணினாள்


சோதிமாலை அருக்ககீர்த்திக்குரியவள் எனல்

வெம்பு மால்களி யானை விலக்குநீர்
நம்பி ஞாயிறு சேர்பெய ராற்கணி
அம்பி னீளரி வாணெடுங் கண்ணவள்
வம்பு சேர்முலை வாரி வளாகமே


சுதசாகரன் முடிவுரை

இன்ன வாறிசை யப்பெறின் யாவரும்
என்ன வாறு மிகப்பவ ரின்மையால்
அன்ன வாறரு ளுண்டெனி லாய்ந்தியான்
சொன்ன வாறுகொண் டீசுடர் வேலினோய்


சுமந்திரி என்பவன் கூறத்தொடங்குதல்

கொங்குவண் டலைந்த தாரான் குறிப்பறிந் திவைக ளெல்லாம்
அங்கவன் மொழிந்த பின்னை யவனையு மமைதி கூறி
நங்கைதன் றாதை தோழர் நால்வரு ணால்வ னாவான்
தொங்கலந் துணர்கொள் மார்பிற் சுமந்திரி சொல்ல லுற்றான்


எல்லோரையும் விலக்கிக் கூறுதல்

அண்ணலங் களிகொள் யானை யச்சுவ கண்டன் மூத்தாற்
கெண்ணலுந் தகுவ தன்றா லிவன்பணி யகற்ற லாற்றாக்
கண்ணலங் கவரும் வேலோர்க் கீயினுங் கரும மன்றால்
பெண்ணலங் கனிந்த பேதை யிருப்பதும் பெருமை யன்றே 110


விச்சுவனை விலக்கிக் கூறுதல்

சூழ்கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திர மாளும்
தாழ்கதி ரார மார்பிற் றமனியக் குழையி னான்றன்
போழ்கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக் குரிமை செய்ய
தாழ்கதிர் விலங்க லாளு மரசவஃ தரிது கண்டாய்


விலக்கியதற்குக் காரணம் காட்டுதல்

மங்கையர் முகத்தி னீண்டு மைகடை மதர்ப்ப மாந்தி
அங்கயல் பிறழ்வ போலு மையரி யடர்த்த வாட்கண்
பங்கயச் செங்க ணான்மேற் படைத்தொழில் பயின்ற போழ்தும்
தங்கிய மனத்த னாகித் தளர்விலன் றவத்தின் மிக்கான்


விச்சுவன் இயல்பு

மண்கனி முழவச் சீரு மடந்தையர் தூக்கு மற்றும்
பண்கனி பாட லாடற் பாணியும் பயின்று மேவான்
விண்கனிந் தனைய வின்ப வெள்ளமும் வெறுத்து நின்றான்
கண்கனி யுருவக் காளை கடவுளர் தகையன் கண்டாய்


மேகவாகனன் விச்சுவன் வரலாறு கேட்டல்

செறிகழ லவற்குத் தாதை சித்திர கூட மென்னும்
அறிவரன் கோயி லெய்தி யணிவிழ வயர்த்த காலை
இறுதியி லவதி ஞானி யசோதர னென்னும் பேர
உறுவனை வணங்கிக் கேட்டான் மகன்றிற முலங்கொ டோ ளான்


அவதிஞானி விச்சுவனது பழம்பிறப்பு வரலாறு கூறுதல்

பங்கயப் பழன வேலிப் பவகிரி யரசன் பைந்தார்
தங்கிய தடங்கொண் மார்பன் சயசேன னவற்குத் தேவி
செங்கய னெடுங்கட் செவ்வாய்ப் பிரீதிமதி பயந்த காளை
வெங்களி யானை வல்ல விசயபத் திரனென் பானே


இதுவுமது -

மந்திரத் தரசர் கோவே மற்றவன் வையங் காக்கும்
தந்திரந் துறந்து நோற்று மறைந்தசா சார மென்னும்
இந்திர வுலக மெய்தி யேழொடீ ரைந்து முன்னீர்
அந்தர காலந் தேவர்க் கரசனா யாண்டு வந்தான்

ஆதலா லமர போக நுகர்ந்தவ னரைசர் செல்வம்
போதுலா மலங்கன் மார்ப பொருளென மருளல் செல்லான்
தீதெலா மகல நோற்றுச் சிவகதி சேரு மென்றக்
கோதிலா முனிவன் சொன்ன வுரையிவை கூறக் கேட்டாம்


இறைநிலையை எய்துவார்க்கு உறவினர் வேண்டியவரல்லர்

அம்மையாற் றவங்க டாங்கி யலர்ந்தநல் லறிவி னாலும்
இம்மையா னுடம்பு நீங்கி யிகந்துபோ மியற்கை யாலும்
செம்மையாற் கடவுட் டானஞ் சேர்வதே சிந்தை யாற்கு
மெய்ம்மையாற் கருமச் சுற்றம் வேண்டுவ தில்லை வேந்தே


சுயம்பிரபைக்கு சுயம்வரமும் கூடாது என்றல்

வாரணி முரச மார்ப்ப வயிரொடு வளைக ளேங்கத்
தாரவர் குழாங்க ளீண்டச் சயமர மறைது மேனும்
ஆரவி ராழி யனை யஞ்சுது மறிய லாகா
காரவி தடக்கை வேந்தே கழலவர் கரும மென்றான்


ஊழ்வினையின் ஆற்றல் உரைத்தல்

ஒன்றுநாங் கருதிச் சூழி னூழது விளைவு தானே
கன்றிநாங் கருதிற் றின்றி மற்றோர்வா றாக நண்ணும்
என்றுநாந் துணிந்த செய்கை யிதன்றிறத் தென்ன மாட்டாய்
இன்றுநாந் துணிது மாயி னினிச்சிறி துரைப்ப னென்றான் 120


சதவிந்து என்னும் நிமித்திகனைக் கலந்தெண்ணி ஆவனபுரிவோம் என்றல்

வீழ்புரி விளங்கு நூலோய் மேலுநங் குலத்து ளார்கட்
கூழ்புரிந் துறுதி கூறு முயர்குல மலர நின்றான்
தாழ்புரி தயங்கு நுண்ணூற் சதவிந்து மொழிந்த வாற்றால்
யாழ்புரி மழலை யாள் கண் ணாவதை யறிது மென்றான்


சுமந்தரி உரையை மற்றையோர் உடன்பட்டுக் கூறல்

என்றவன் மொழிந்த போழ்தி னேனையா ரினிதி னோக்கி
மின்றவழ் விளங்கு வேலோய் மெய்யினு மேவல் வேண்டும்
சென்றவன் மனையு ணீயே வினவெனச் சேனை வேந்தன்
நன்றவர் மொழிந்த வெல்லா நல்லவா நயந்து கேட்டான்


அமைச்சர்கள் அரசனை அவையைக் கலைக்குமாறு கூறுதல்

இந்திர னனைய நீரோ யினிப்பிறி தெண்ணல் வேண்டா
மந்திர நீளு மாயின் வருவன வறிய லாகா
சந்திரன் றவழ நீண்ட தமனியச் சூல நெற்றி
அந்தரந் திவளு ஞாயிற் கோயில்புக் கருளு கென்றார்


அரசன் அரண்மனையை அடைதல்

மந்திரக் கிழவர் தம்மை மனைபுக விடுத்து மன்னன்
சுந்தரச் சுரும்புந் தேனுஞ் சூழ்கழ னிரையு மார்ப்ப
வந்தர மகளிர் போல்வார் வரன்முறை கவரி வீச
அந்தரக் கடைக ணீங்கி யகனக ரருளிப் புக்கான்


வேறு - நண்பகலாதல்

மிகுகதிர் விலங்கலார் வேந்தன் றேனுடைந்
துகுகதிர் மண்டப மொளிர வேறலும்
தொகுகதிர் சுடுவன பரப்பிச் சூழொளி
நகுகதிர் மாண்டில நடுவ ணின்றதே

கண்டிரள் கழைவளர் கரும்பு கைமிகுத்
தொண்டிரள் வெள்ளிலை யுரிஞ்சு மோடைமா
வெண்டிரண் மணிபுடை சிலம்ப விட்டன
வண்டிரள் கிளையொடு வளைக ளார்த்தவே

ஒலிவிழா வண்டின மூத வூறுதேன்
மலிவிழாப் பிணையலு மணங்கொள் சாந்தமும்
பலிவிழாப் பதாகையும் பரந்து பாடுவார்
கலிவிழாக் கழுமின கடவுட் டானமே

குண்டுநீர்க் குழுமலர்க் குவளைப் பட்டமும்
மண்டுநீர் மரகத மணிக்கல் வாவியும்
கொண்டுநீ ரிளையவர் குடையக் கொங்கொடு
வண்டுநீர்த் திவலையின் மயங்கி வீழ்ந்தவே

பங்கயத் துகள்படு பழன நீர்த்திரை
மங்கையர் முலையொடு பொருத வாவிகள்
அங்கவ ரரிசன மழித்த சேற்றினும்
குங்குமக் குழம்பினுங் குழம்பு கொண்டவே

அங்கவள்வாய்க் கயம்வல ராம்ப றூம்புடைப்
பொங்குகா டேர்பட ஞெறித்துப் பூவொடு
கொங்கைவாய்க் குழலவர் குளிப்ப விட்டன
திங்கள் வாண் முகவொளி திளைப்ப விண்டவே 130

மாயிரும் பனித்தடம் படிந்து மையழி
சேயரி நெடுமலர்க் கண்கள் சேந்தெனத்
தாயரை மறைக்கிய குவளைத் தாதுதேன்
பாயமோந் திறைஞ்சினார் பாவை மார்களே


ஈரணிப்பள்ளி வண்ணனை

சந்தனத் துளித்தலை ததும்பச் சாந்தளைந்
தந்தரத் தசைப்பன வால வட்டமு
மெந்திரத் திவலையு மியற்றி யீர்மணல்
பந்தருட் பாலிகைக் குவளை பாய்த்தினார்

குருமணித் தாமரைக் கொட்டை சூடிய
திருமணிப் பீடமுஞ் செதுக்க மாயவும்
பருமணிப் பளிங்கென விளங்கு வான்பலி
அருமணிக் கொம்பனா ரலர வூட்டினார்


பொழுதுணர்மாக்கள் நாழிகை கூறுதல்

அன்னரும் பொழுதுகண் ணகற்ற வாயிடைப்
பன்னருங் காலநூல் பயின்ற பண்புடைக்
கன்னலங் கருவியோர் கழிந்த நாழிகை
மன்னவ னடிமுத லுணர்த்தி வாழ்த்தினார்


மன்னன் உண்ணுதல்

வாரணி முலையவர் பரவ மன்னவன்
ஈரணிப் பள்ளிபுக் கருளி னானிரந்
தோரணி யின்னிய மிசைத்த வின்பமோ
டாரணி தெரியலா னமிர்த மேயினான்


அரசன் தெருவில் நடந்து செல்லுதல்

வெள்ளிழை பொலிந்தொளி துளும்பு மேனியன்
வள்ளிதழ் மல்லிகை மலர்ந்த மாலையான்
அள்ளிதழ்ப் புதுமல ரடுத்த வீதிமேல்
கள்ளிதழ்க் கண்ணியான் காலி னேகினான்


அரசன் நடந்து செல்லுதல்

பொன்னலர் மணிக்கழல் புலம்பத் தேனினம்
துள்ளலர் தொடையலிற் சுரும்போ டார்த்தெழ
மன்னவன் னடத்தொறு மகர குண்டலம்
மின்மலர்த் திலங்குவில் விலங்க விட்டவே


மெய்காவலர் வேந்தனைச் சூழ்தல்

நெய்யிலங் கெஃகினர் நிறைந்த விஞ்சையர்
கையிலங் கீட்டியர் கழித்த வாளினர்
மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்
வையகங் காவலன் மருங்கு சுற்றினார்


அரசன் நிமித்திகன் வாயிலை அடைதல்

சுரும்புசூழ் பிணையலுஞ் சுண்ண மாரியும்
கரும்புசூழ் கிளவியர் சொரிந்து கைதொழ
நிரம்புநூ னிமித்திகன் மாட நீள்கடை
அரும்புசூழ் தெரியலா னருளி னெய்தினான்


நிமித்திகன் அரசனை வரவேற்றல்

எங்குலம் விளங்கவிக் கருளி வந்தவெங்
கொங்கலர் தெரியலாய் கொற்றங் கொள்கென
மங்கல வுழைக்கலம் பரப்ப மன்னனுக்
கங்கலர் கேள்வியா னாசி கூறினான்


அரசன் மண்டபத்தை அடைதல்

கொண்டமர்ந் தகிற்புகை கழுமிக் கோதைவாய்
விண்டமர்ந் தொழுகுவ மதுக்கள் வீழ்ந்துராய்
வண்டமர்ந் தொலிசெய மருங்குல் கொண்டதோர்
மண்டப மணித்தல மன்ன னெய்தினான்


அரசன் தான்வந்த காரியத்தை எண்ணுதல்

தழையவிழ் சந்தனப் பொதும்பு போன்மது
மழைதவழ் மண்டப மலிர வீற்றிருந்
துழையவர் குறிப்பறிந் தகல வொண்சுடர்க்
குழையவன் குமரிதன் கரும மென்னினான்


நிமித்திகன் பேசத் தொடங்குதல்

கனைத்தெதிர் கதிர்மணிக் கடகஞ் சூடிய
பனைத்திர ளனையதோட் படலை மாலையான்
மனத்தினை மறுவினூல் வாயி னாற்சொல
நினைத்திவை விளம்பினா னிமித்த நீதியான்


அரசன் அடைந்த காரியத்தை சதவிந்து கூறுதல்

மணங்கமழ் மதுமல ரலங்கன் மாலைபோல்
வணங்கெழி னுடங்கிடை மாழை நோக்கிநங்
கணங்குழை கருமமாங் கருதிற் றென்றனன்
அணங்கெழில் விரிந்தநூ லலர்ந்த நாவினான்


தெருவில் வலங்கொண்டு சென்றவள் திருமகள் என்றல்

வெண்ணிலா விரிந்தென விளங்கு மாலையள்
கண்ணிலாங் கவர்தகைக் கண்ணி மன்னனை
மண்ணிலா மறுகிடை வலங்கொண் டெய்தினாள்
எண்ணிலாங் கதுதிரு வெதிர்ந்த வன்ணமே

பொன்சுலாஞ் சுடரிழை பொறுத்த பூண்முலை
மின்சுலா நுடங்கிடை மெல்லி யாடிறம்
என்சொலா லின்றியா னியம்பு நீரதோ
மன்சுலா வகலநின் றலரும் வாளினாய்


சுயம்பிரபைக்குரிய மணமகனை மாபுராணம் கூறுகிறது என்றல்

ஆதிநா ளறக்கதி ராழி தாங்கிய
சோதியான் றிருமொழி விளக்கித் தோன்றுமால்
போதுவார் புரிகுழற் பொலங்கொம் பன்னவிம்
மாதராள் வனமுலைக் குரிய மைந்தனே


சதவிந்து மொழியைக்கேட்ட அரசன் மகிழ்ச்சி அடைதல்

அம்மயி லனையவ டிறத்தி னாரியன்
செம்மையில் விளம்பிய செல்வங் கேட்டலும்
மெய்ம்மையிற் றெரிந்தொளி துளும்பு மேனியன்
பொய்ம்மையில் புகழவன் பொலிந்து தோன்றினான்


மாபுராணத்தில் கூறப்பட்டிருத்தலைப்பற்றி அரசன் கேட்டல்

முன்னிய வுலகுகண் விடுத்த மூர்த்தியான்
மன்னிய திருமொழி யகத்து மாதராள்
என்னைகொல் விரிந்தவா றெனலு மன்னனுக்
கன்னவ னாதிமா புராண மோதினான்


உலகங்கள் எண்ணிறந்தன என்றல்

மூவகை யுலகினு ணடுவண் மூரிநீர்த்
தீவின தகலமுஞ் சிந்து வட்டமும்
ஓவல வொன்றுக்கொன் றிரட்டி கண்ணறை
ஏவலாய் விரிந்தவை யெண்ணி றந்தவே


உலக அமைப்பு உரைத்தல்

மந்தர நெடுமலை நடுவின் வாய்ந்தது
சுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது
நந்திய நளிசினை நாவன் மாமரம்
அந்தரத் துடையதிவ் வவனி வட்டமே


உலகில் உள்ளன

குலகிரி யாறுகூர் கண்ட மேழ்குலாய்
மலைதிரை வளர்புன லேழி ரண்டதாய்க்
கொலைதரு வேலினாய் கூறப் பட்டதிவ்
வலைதிரை நெடுங்கட லவனி வட்டமே

மாற்றறு மண்டில மதனு ளூழியால்
ஏற்றிழி புடையன விரண்டு கண்டமாம்
தேற்றிய விரண்டினுந் தென்மு கத்தது
பாற்றரும் புகழினாய் பரத கண்டமே


பரதகண்டம் மூன்று ஊழிக்காலம் இன்ப நிலமாக இலங்கி நின்றது

மற்றது மணிமய மாகிக் கற்பகம்
பொற்றிர ளணிபொழிற் போக பூமியாய்
முற்றிய வூழிமூன் றேறி மீள்வழிப்
பிற்றகை யூழிவட் பிரமர் தோன்றினார்


போக காலம் கழிதல்

வெங்கதிர்ப் பரிதியும் விரைவு தண்பனி
அங்கதிர் வளையமு மாதி யாயின
இங்கிவர் படைத்தன ரிழிந்த திவ்வகை
பொங்கிய புரவியாய் போக காலமே


அருகக் கடவுள் தோற்றம்

ஊழிமூன் றாவதோய்ந் திறுதி மன்னுயிர்
சூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய்
ஏழுய ருலகுடன் பரவ வீண்டருள்
ஆழியங் கிழமையெம் மடிக டோ ன்றினாய்


உலகம் அருகக்கடவுளின் வழிப்பட்டது

ஆரரு டழழுவிய வாழிக் காதியாம்
பேரருண் மருவிய பிரான்றன் சேவடி
காரிருள் கழிதரக் கண்க வின்றரோ
சீரருள் சரணென வுலகஞ் சேர்ந்ததே


அருகக்கடவுள் அறம் முதலியவற்றை ஆக்குதல்

அலந்தவ ரழிபசி யகற்றும் வாயிலும்
குலங்களுங் குணங்களுங் கொணார்ந்து நாட்டினான்
புலங்கிளர் பொறிநுகர் விலாத புண்ணியன்
நலங்கிளர் திருமொழி நாத னென்பவே


பரதன் என்னும் அரசன்

ஆங்கவன் றிருவரு ளலரச் சூடிய
வீங்கிய விரிதிரை வேலி காவலன்
ஓங்கிய நெடுங்குடை யொருவ னாயினான்
பாங்குயர் பரிதிவேற் பரத னென்பவே


பரதன் அருகக் கடவுளைப் போற்றிப் பணிதல்

ஆழியா லகலிடம் வணக்கி யாண்டவன்
பாழியா நவின்றதோட் பரத னாங்கொர்நாள்
ஊ ழியா னொளிமல ருருவச் சேவடி
சூழிமால் யானையான் றொழுது வாழ்த்தினான்


பரதன் அருகக் கடவுளைப் போற்றி எதிர்கால நிகழ்ச்சி கேட்டல்

கதிரணி மணிமுடி வணங்கிக் காவலன்
எதிரது வினவினா னிறைவன் செப்பினான்
அதிர்தரு விசும்பிடை யமிர்த மாரிசோர்
முதிர்தரு முகிலிடை முழங்கிற் றென்னவே


அருகக் கடவுள் கூறுதல்

என்முத லிருபத்தீ ரிருவர் நாதர்கள்
நின்முத லீரறு வகையர் நேமியர்
மன்முதல் பலவர்கே சவர்கண் மாற்றவர்
தொன்முத லவர்தொகை யொன்ப தொன்பதே


முதல் வாசுதேவனை மொழிதல்

மன்னவ நின்மகன் மரிசி மாற்றிடைப்
பொன்னவிர் போதன முடைய பூங்கழல்
கொன்னவில் வேலவன் குலத்துட் டோ ன்றினான்
அன்னவன் கேசவர்க் காதி யாகுமே


அவன் அச்சுவனைக் கொன்று அரசாட்சியைக் கைப்பற்றுவான் என்றல்

கேசவ னார்திறங் கிளப்பின் வெண்மலை
காசறு வனப்பினோர் கன்னி யேதுவால்
ஆசர வச்சுவக் கிரீவ னாவியும்
தேசறு திகரியுஞ் செவ்வன வெளவுமே


பிறகு அவன் கடவுள் ஆவான் என்றல்

தேரணி கடற்படைத் திவிட்டன் சென்றுபின்
ஆரணி யறக்கதி ராழி நாதனாம்
பாரணி பெரும்புகழ்ப் பரத வென்றனன்
சீரணி திருமொழித் தெய்வத் தேவனே


அருகக் கடவுள் கூறியதைப் பரதன் கேட்டு மகிழ்ந்தான் என்று நிமித்திகன் முடித்தல்

ஆதியு மந்தமு நடுவு நம்மதே
ஓதநீ ருலகுடை யுரிமை யென்றரோ
காதுவே லரசர்கோக் களிப்புற் றானிது
போதுசே ரலங்கலாய் புராண நீர்மையே


மாபுரணத்துட் கூறிய வாசுதேவனே திவிட்டன் என்றல்

அன்னணம் புராணநூ லகத்துத் தோன்றிய
கன்னவி விலங்குதோட் காளை யானவன்
மின்னவில் விசும்பின் றிழிந்து வீங்குநீர்
மன்னிய வரைப்பக மலிரத் தோன்றினான்


இதுவுமது

திருவமர் சுரமைநா டணிந்து செம்பொனால்
பொருவரு போதன முடைய பூங்கழல்
செருவமர் தோளினான் சிறுவ ராகிய
இருவரு ளிளையவ னீண்டந் நம்பியே


அவனுக்குச் சுயம்பிரபை உரியவள் என்றல்

கானுடை விரிதிரை வையங் காக்கிய
மானுட வுடம்பினான் மறைந்து வந்தவத்
தேனுடை யலங்கலான் றெய்வ மார்பகம்
தானடைந் தமர்வதற் குரிய டையலே


திவிட்டனால் அடையவிருக்குஞ் சிறப்பைக் கூறுதல்

ஆங்கவற் கீந்தபி னாழி தாங்கிய
ஈங்கவற் கொன்றுனக் கிரண்டு சேடியும்
தாங்கிய திருவினாற் றருமற் றென்றலும்
வீங்கிய வுவகையன் வேந்த னாயினான்


சதவிந்து தான் கூறும் நிமித்தத்திற்கு அடையாளமாகத் திவிட்டன் ஒரு சிங்கத்தின் வாயைப் பிளப்பான் என்றல்

கொங்கலர் தெரியலான் றிறத்திற் கொள்குறி
இங்கியா னிசைத்ததே யமையு மல்லதோர்
திங்கணா ளகவையிற் றிவிட்ட னாங்கொரு
சிங்கம்வாய் பிளந்திடுந் தெளியீ தென்னவே

நிமித்திக னுரைத்தது நிறைந்த சோதியான்
உமைத்தகை யிலாததோ ருவகை யாழ்ந்துகண்
இமைத்ததில னெத்துணைப் பொழுது மீர்மலர்ச்
சுமைத்தகை நெடுமுடி சுடரத் தூக்கினான்


சடியரசன் சதவிந்துவிற்குப் பரிசில் வழங்குதல்

இருதிலத் தலைமக னியன்ற நூற்கடல்
திருநிதிச் செல்வனச் செம்பொன் மாரியாச்
சொரினிதிப் புனலுடைச் சோதி மாலையென்
றருநிதி வளங்கொணா டாள நல்கினான்


அரசன் தன் மனைவி வாயுவேகைக்குச் செய்தி கூறுவித்தல்

மன்னவன் பெயர்ந்துபோய் வாயு வேகைதன்
பொன்னகர் புக்கனன் பொழுதுஞ் சென்றது
கன்னிதன் பெருமையுங் கருமச் சூழ்ச்சியும்
அன்னமென் னடையவட் கறியக் கூறினான்


மக்கட்பேற்றின் மாண்பு கூறல்

தொக்கின மலர்த்துதை விலாத சோலையும்
புக்கிளந் தாமரை நகாத பொய்கையும்
மிக்கிளம் பிறைவிசும் பிலாத வந்தியும்
மக்களை யிலாததோர் மனையு மொக்குமே


குலத்தைக் கற்பக மரமாகக் கூறுதல்

தலைமகள் றாடனக் காகச் சாகைய
நிலைமைகொண் மனைவியர் நிமிர்ந்த பூந்துணர்
நலமிகு மக்களா முதியர் தேன்களாக்
குலமிகு கற்பகங் குளிர்ந்து தோன்றுமே


நன்மக்களைப் பெறுதல் நங்கையர்க்கு அருமை என்றல்

சூழிநீண் முகத்தன துளைக்கைம் மாவொடு
மாழைநீண் மணியிவை யெளிய மாண்பினால்
வாழுநீர் மக்களைப் பெறுதன் மாதரார்க்
காழிநீர் வையகத் தரிய தாவதே


நின்மகள் விளக்குப் போன்றவள் என்றல்

தகளிவாய்க் கொழுங்சுடர் தனித்துங் கோழிருள்
நிகளவாய்ப் பிளந்தகஞ் சுடர நிற்குமே
துகளிலாச் சுடர்மணி துளும்பு பூணினாய்
மகளெலாத் திசைகளு மலிர மன்னினாள்


மகளாற் குலஞ் சிறப்படைந்தது என்றல்

வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி
நலம்புரி பவித்திர மாகு நாமநீர்
பொலம்புரி மயிலனாய் பயந்த பூங்கொடி
குலம்புரிந் தவர்க்கெலாங் கோல மாகுமே


நீ சிறப்படைந்தாய் எனல்

மக்களை யிலாதவர் மரத்தொ டொப்பவென்
றொக்கநின் றுரைப்பதோ ருரையு மூய்த்துநீர்
நக்கவா னிளம்பிறை வளர்ந்த நாட்கதிர்ச்
செக்கர்வா னனையதோர் திருவு மெய்தினாய்


சுயம்பிரபையின் பெருமை

மாவினை மருட்டிய நோக்கி நின்மகள்
பூவினுண் மடந்தைபொற் பூவை நாளொளித்
தேவனுக் கமிர்தமாந் தெய்வ மாமென
ஓவினூற் புரோகித னுணர வோதினான்


வாயுவேகை பதிலுரைக்கத் தொடங்குதல்

மத்தவார் மதகளிற் றுழவன் மற்றிவை
ஒத்தவா றுரைத்தலு மூவகை கைம்மிக
முத்தவாண் முகிழ்நகை யடக்கி மொய்குழல்
தொத்துவார் பிணையலா டொழுது சொல்லினாள்


சுயம்பிரபை நின்னருளினாற் சிறந்தவளாயினாள் என்றல்

மின்னவிர் மணிமுடி வேந்தர் வேந்தவிக்
கன்னிநின் னருளினே கருதப் பட்டனள்
மன்னவ ரருளில ராயின் மக்களும்
பின்னவர் பெறுவதோர் பெருமை யில்லையே


இதுவும் அது

பிடிகளை மகிழ்களிற் றரசர் பெய்ம்மலர்
முடிகளின் மணிபொர முரலு மொய்கழல்
அடிகள தருளினா லம்பொன் சாயலிக்
கடிகமழ் குழலினாள் கவினு மெய்தினாள்


அரசன் இன்புற்றிருத்தல்

திருமனைக் கிழத்திதன் றேங்கொள் சின்மொழி
மருமணி முடியினான் மகிழ்ந்து மற்றவள்
பருமணிப் பூண்முலை பாய மார்பிடை
அருமணித் தெரியறே னழிய வைகினான்


மறுநாள் மன்னன் மன்றங்கூடிப் பேசுதல்

மற்றைநாண் மகனையு மமைச்சர் தம்மையும்
கொற்றவாட் டடக்கையான் கூவிக் கொண்டிருந்
திற்றியான் கருதிய தென்று தொல்லைநூல்
கற்றநா வலனது கதையுஞ் சொல்லினான்


சுயம்பிரபை மணச்செய்தியை அரசன் சொல்ல அமைச்சர் பதில் கூறத்தொடங்குதல்

வீங்கிய முலையவ டிருவும் வெம்முலைக்
கோங்கிய முகிலவ னுரிய பெற்றியுந்
தாங்கிய புகழவன் மொழியத் தாரவர்
தேங்கிய வுவகையர் தெரிந்து சொல்லினார்


பயாபதி யரசனிடம் தூது அனுப்புவோம் என்றல்

தெய்வமே திரிகுழற் சிறுமி யாவதற்
கையமே யொழிந்தன மனலும் வேலினாய்
செய்யதோர் தூதினித் திவிட்டன் றாதையாம்
வெய்யவே லவனுழை விடுத்தும் வேந்தனே


மரீசியே தூது செல்வதற்கு ஏற்றவன் என்றல்

கற்றவன் கற்றவன் கருதுங் கட்டுரைக்
குற்றன வுற்றவுய்த் துரைக்கு மாற்றலான்
மற்றவன் மருசியே யவனை நாம்விடச்
சுற்றமுங் கருமமுஞ் சொல்ல வல்லனே


மரீசியைத் தூது அனுப்புதல்

காரியந் துணிந்தவர் மொழியக் காவலன்
மாரியந் தடக்கையான் வருக வென்றொரு
சீரிய திருமுகஞ் சிறப்பொ டீந்தனன்
ஆரியன் கழலடி யவனும் வாழ்த்தினான்


மரீசி சுரமைநாட்டுப் புட்பமாகரண்டப் பொழிலை வந்து சேர்தல்

மன்னவன் பணியொடு மருசி வானிடை
மின்னவிர் முகிற்குழா முழங்கும் வீதிபோய்த்
துன்னினன் சுரமைநாட் டகணி சூடிய
பொன்னகர் புறத்ததோர் பொழிலி னெல்லையே


வண்டினம் களியாட்டயர்தல்

புதுமலர்ப் புட்பமா கரண்ட மென்னுமப்
பொதுமலர்ப் பூம்பொழில் புகலும் பொம்மென
மதுமலர் பொழிதர மழலை வண்டினம்
கதுமல ரினையொடு கலவி யார்த்தவே. 192


மந்திரசாலைச் சருக்கம் முற்றிற்று
-----------------
ஆறாவது
தூதுவிடு சருக்கம்


பொழிலிலுள்ள மரங்கள், மகிழ், தேமா, சுரபுன்னை, புன்கு முதலியன

மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம்
திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா
வரிமருவிய மதுகரமுண மணம்விரிவன நாகம்
பொரிவிரிவன புதுமலரென புன்குதிர்வன புறனே


சந்தனம் சண்பகம் குரா அசோகம் ஆகிய மரங்கள்

நிழனகுவன நிமிர்தழையன நிறைகுளிர்வன சாந்தம்
எழினகுவன விளமலரென வெழுசண்பக நிகரம்
குழனகுவன மதுகரநிரை குடைவனபல குரவம்
அழனகுவன வலர்நெரிதர வசை நிலையவ சோகம்


இரதம் இருப்பை தாழை புன்னை ஆகியவை

எழுதுருவின வெழுதளிரென விணரணிவன விரதம்
இழுதுருவின கொழுமலரிடை யெழில்பொலிவன மதுகம்
கழுதுருவின கஞலிலையன கழிமடலின் கைதை
பொழுதுருவின வணிபொழிலின பொழி தளிரென புன்னை


மல்லிகை முல்லை முதலிய கொடி வகைகளின் மாண்பு

வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மெளவல்
நளிர்கொடியன நறுவிரையக நறுமலரன நறவம்
குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி
ஒளிர்கொடியன வுயர்திரளினோ டொழு கிணரன வோடை


கோங்கு முதலியன

குடையவிவன கொழுமலரின் குளிர்களின கோங்கம்
புடையவிழ்வன புதுமலரன புன்னாகமொ டிலவம்
கடியவிழ்வன கமழ் பாதிரி கலிகளிகைய சாகம்
இடையவிழ்வன மலரளவில விதுபொழிலின தியல்பே


பொழிலில் வாழும் வண்டு ,புள் முதலியவற்றின் சிறப்பு

மதுமகிழ்வன மலர்குடைவன மணிவண்டொடு தும்பி
குதிமகிழ்வன குவிகுடையன நுகிகோதுபு குயில்கள்
புதுமகிழ்வன பொழிலிடையன புணர்துணையன பூவை
விதிமகிழ்பவர் மதிமகிழ்வுற விரவுற்றன விரிவே


மரீசி பூங்காவில் உள்ள பொய்கைக்கரையை அடைதல்

அதுவழகுத கைமகிழ்வுற வலர்தாரவ னடைய
இதுவழகிய திவண்வருகென வெழுபுள்ளொலி யிகவா
விதிவழகுடை விரியிலையிடை வெறிவிரவிய வேரிப்
பொதியவிழ்வன புதுமலரணி பொய்கைக்கரை புக்கான்


பொய்கைக்கரை மரீசியை வரவேற்றல்

புணர்கொண்டெழு பொய்கைக்கரை பொரு திவலைகள் சிதறாத்
துணர்கொண்டன கரைமாநனி தூறுமலர்பல தூவா
வணர்கொண்டன மலலுற்றலை வளர்வண்டின மெழுவா
இணர்கொண்டெதி ரெழுதென்றலி னெதிர்கொண்டதவ் விடமே


விஞ்சையர் தூதுவனாகிய மரீசி அசோகமரம் ஒன்றைக் காணுதல்

புனல்விரவிய துளிர்பிதிர்வது புரிமுத்தணி மணல்மேல்
மினல்விரவிய சுடர்பொன்னொளிர் மிளிர்வேதிகை மிகையொண்
கனல்விரவிய மணியிடைகன கங்கணியணி திரளின்
அனல்விரவிய வலரணியதொ ரசோகம்மது கண்டான்


மரீசி அசோகமரத்தின் நிழலையடைந்ததும், துருமகாந்தன் கல்லிருக்கையைக் காட்ட மரீசி
திகைத்தல்

அதனின்னிழ லவனடைதலு மதுகாவல னாவான்
பொதியின்னவிழ் மலர்சிதறுபு பொலிகென் றுரை புகலா
மதீயின்னொளி வளர்கின்றதொர் மணியின்சிலை காட்ட
இதுவென்னென இதுவென்னென வினையன்பல சொன்னான் 10


வேறு - நிலாநிழற்கல்லில் அமர்ந்திருக்குமாறு துருமகாந்தன் மரீசியை வேண்டிக்கொள்ளுதல்

மினற்கொடி விலங்கிய விலங்கன்மிசை வாழும்
புனற்கொடி மலர்த்தொகை புதைத்தபொலி தாரோய்
நினக்கென வியற்றிய நிலாநிழன் மணிக்கல்
மனக்கினிதி னேறினை மகிழ்ந்திருமி னென்றான்


இதுபொழிற்கடவுளுக்காக ஆக்கப் பெற்ற பொன்னிடம் அன்றோ? என்று மரீசி கேட்டல்

அழற்கதி ரியங்கற வலங்கிண ரசோகம்
நிழற்கதிர் மரத்தகைய தாக நினை கில்லேன்
பொழிற்கடவுள் பொன்னிடமி தென்னைபுகு மாறென்
றெழிற்கதிர் விசும்பிடை யிழிந்தவன் மொழிந்தான்


துருமாந்தகன் மரீசிக்குப் பதிலுரத்தல்

நிலாவளர் நிழற்கதிர் நிமிர்ந்தொளி துளும்பும்
சிலாதல மிதற்குரிய தெய்வமெனல் வேண்டா
அலாதவ ரிதற்குரிய ரல்லரவ ராவிர்
உலாவிய கழற் றகையி னீரென வுரைத்தான்


அங்கத நிமித்திகன் கூறியவற்றைக் கூறத்தொடங்குதல்

என்னவிது வந்தவகை யென்னினிது கேண்மின்
நன்னகரி தற்கிறைவன் முன்னநனி நண்ணித்
தன்னிகரி கந்தவ னங்கத னெனும் பேர்ப்
பொன்னருவி நூல்கெழுபு ரோகித னுரைத்தான்


தூதன் வருவான் என்று கூறியதைச் சொல்லுதல்

மின்னவிர் விளங்குசுடர் விஞ்சையுல காளும்
வின்னவி றடக்கைவிறல் வேலொருவன் வேண்டி
மன்னநின் மகற்கொரு மகட்கரும முன்னி
இன்னவ னினைப்பகலு ளீண்டிழியு மென்றான்

அச்சுவக்கிரீவனைக் கொல்வான் என்று அங்கத நிமித்திகன் கூறியதாகக் கூறல்

மடங்கலை யடுந்திற னெடுந்தகைதன் மாறாய்
அடங்கல ரடங்கவடு மாழியஃ தாள்வான்
உடங்கவ னுடன்றெரி துளும்பவரும் வந்தால்
நடந்தவ னடுங்கவடு நம்பியிவ னென்றான்


தன்னை அரசன் அங்கு இருக்குமாறு அமர்த்தியதைக் கூறுதல்

ஆங்கவன் மொழிந்தபி னடங்கலரை யட்டான்
தேங்கமழ் பொழிற்றிகழ் சிலாதலமி தாக்கி
ஈங்கவ னிழிந்தபி னெழுந்தெதிர்கொ ளென்ன
நீங்கல னிருந்தன னெடுந் தகையி தென்றான்


மரீசி தூது வந்து பொழிலில் தங்கியுள்ளமையை யுணர்ந்த அரசன் தூதுவனின் வழிப்பயணத்
துன்பை மாற்றுமாறு நான்கு நங்கையரை அனுப்புதல்

என்றவன் மொழிந்தபி னருந்தன னிருப்பச்
சென்றவன் வழிச் சிரமை தீர்மினென நால்வர்
பொன்றவழ் பொருந்திழை யணங்கினனை யாரை
மின்றவழ் விளங்குகொடி வேந்தனும் விடுத்தான்


பயாபதி மன்னன் விடுத்த பாவையர் புட்பமாகரண்டப் பூங்காவை நோக்கிப் புறப்படுதல்

பொன்னவிர் மணிக்கலை சிலம்பொடு புலம்ப
மின்னவிர் மணிக்குழை மிளிர்ந்தொளி துளும்பச்
சின்னமலர் துன்னுகுழ றேறலொடு சோர
அன்னமென வல்லவென வன்னண நடந்தார்

நலங்கனி மடந்தையர் நடத்தொறு மிணர்ப்போ
தலங்கலள கக்கொடி யயற்சுடர வோடி
விலங்குபுரு வக்கொடி முரிந்துவெரு வெய்த
மலங்கின விலங்கின மதர்த்தவவர் வாட்கண் 20

அலத்தக மலைத்தன வடித்தல மரற்றும்
கலைத்தலை மலைத்து விரி கின்றகடி யல்குல்
முலைத்தலை முகிழ்த்தொளி துளும்பி யுள முத்தம்
மலைத்தலை மயிற்கண் மருட்டுவர் சாயல்


வண்டுகள் ஒலித்தல்
கணங்கெழு கலாவமொளி காலுமக லல்குல்
சுணங்கெழு தடத்துணை முலைசுமை யிடத்தாய்
வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்
கிணங்குதுணை யாய்ஞிமி றிரங்கின வெழுந்தே


இடையின் வருத்தங் கண்டு வண்டுகள் இரங்கியெழுந்தனவென்க

முலைத்தொழில் சிலைத்தொழிலி னாருயிர் முருக்கும்
நிலைத்தொழில் வென்றுள நினைத்தொழுக வின்பக்
கலைத்தொழில்கள் காமனெய் கணைத்தொழில்க ளெல்லாம்
கொலைத்தொழில்கொள் வாட்கணி னகத்தகுறி கண்டீர்

துடித்ததுவர் வாயொடுது ளும்புநகை முத்தம்
பொடித்தவியர் நீரொடுபொ லிந்தசுட ரோலை
அடுத்ததில கத்தினொட ணிந்தவள கத்தார்
வடித்தசிறு நோக்கொடுமு கத்தொழில்வ குத்தார்


வண்டுகள் மயக்கம்

பூவிரிகு ழற்சிகைம ணிப்பறவை போகா
வாவிகொள கிற்புகையுள் விம்மியவ ரொண்கண்
காவியென வூதுவன கைத்தலம் விலங்க
மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார்

சுரும்பொடு கழன்றுள குழற்றொகை யெழிற்கை
கரும்பொடு கலந்துள களித்தவவர் தீம்பண்
நரம்பொடு நடந்துள விரற்றலை யெயிற்றேர்
அரும்பொடு பொலிந்ததுவர் வாயமிர்த மன்றே

கணங்குழை மடந்தையர் கவின்பிற ழிருங்கண்
அணங்குர விலங்குதொ றகம்புலர வாடி
மணங்கம ழலங்கலுடை மைந்தர்த மனந்தாழ்
வணங்கிடை வணங்குதொ றணங்கென வணங்கும்


மைந்தர்கள் கலங்கி மெலிதல்

நெய்யலர் குழற்றொகை நெருப்பினடு மென்பார்
மையலர் நெடுங்கணிவை வல்லகொலை யென்பார்
தொய்யலிள மென்முலையி னீர்சுடுதி ராயின்
உய்யல மெனத்தொழுது மைந்தர்க ளுடைந்தார்


வேறு--
நாம நூற்கலை விச்சை யினன்னெறி யிவைதாம்
தாம நீள்குழற் றளர்நடை யுருவுகொண் டனையார்
வாம மேகலை மடவர லிவர்களை வளர்த்தார்
காம நூலினுக் கிலக்கியங் காட்டிய வளர்த்தார்


அம்மாதர்களின் தன்மை

இனிய வீங்கிய விளமுலை யிவர்களை வளர்த்தார்
பனியின் மென்மல ரலர்ந்தன வுவகையிற் பயில்வார்
கனிப வேலிவர் கடல்விளை யமிர் தெனக் கனிவார்
முனிப வேலிவ ரனங்கனைங் கணையென முனிவார் 30

புலவி தானுமோர் கலவியை விளிப்பதோர் புலவி
கலவி தானுமோர் புலவியை விளைப்பதோர் கலவி
குலவுவார் சிலை மதனனைங் கணையொடு குலவி
இலவு வாயுடை யிளையவ ருடையன விவையே 31

மன்னு வார்சிலை மதனனோர் வடிவுகொண் டிலாதான்
தன்னை நாமுமோர் தகைமையிற் றணத்துமென் றிருப்பார்
என்னை பாவமிங் கிவர்களைப் படைத்தன னிதுவால்
பின்னை யாங்கவன் பிறவிக்கு முதல் கண்ட வகையே.

வாம மேகலை முதனின்று வயிற்றிடை வளைர்ந்த
சாம லேகைகண் மயிர்நிரை யலதல மீது
காம நீரெரி யகத்து கனன்றெழ நிமிர்ந்த
தூம லேகைகள் பொடித்தன துணை முலை யுறவே


சூசுகக் கருமைக்கோர் காரணஞ் சொல்லுதல்

சனங்க டாஞ்சில தவங்களைத் தாங்குது மெனப்போய்
வனங்கள் காப்பவ ருளரென முனிவமற் றன்றேல்
தனங்க டாழ்ந்தவழ் சந்தனக் குழம்பிடை வளர்ந்த
கனங்கொள் வெம்முகங் கறுப்பதென் காரண முரையீர்

தூம மென்புகை துழாவிவண் டிடை யிடை துவைக்கும்
தாம வோதியர் தம்முகத் தனபிறர் மனத்த
காம நீள்சிலை கணையொடு குனிவகண் டாலும்
யாமெ மின்னுயி ருடையமென் றிருப்பதிங் கெவனோ


மங்கையர் மலர்ப்பொழிலை அடைதல்

என்று மைந்தர்க ளிடருற வெழுதிய கொடிபோற்
சென்று கற்பக வனமன செறிபொழி லடைந்தார்
இன்று காமுகர் படையினை யிடர்பட நடந்த
வென்றி காமனுக் குரைத்துமென் றிரைத்தளி விரைந்த


வேறு - பணிப்பெண்கள் கொண்டுவந்த பலவகைப் பொருள்கள்

ஆடைகைத் தலத்தொருத்தி கொண்டதங் கடைப்பைதன்
மாடுகைத் தலத்தொருத்தி கொண்டது மணிக்கலம்
சேடிகைத் தலத்தன செறிமணித் திகழ்வசெங்
கோடிகைத் தலத்தன குளிர்மணிப் பிணையலே


மற்றும் பலர் பலபொருள்களைக் கொண்டுசெல்லுதல்

வண்ணச் சந்தங்க ணிறைந்தன மணிச்செப்பு வளர்பூங்
கண்ணிச் சந்தங்க ணிறைந்தன கரண்டகங் கமழ்பூஞ்
சுண்ணச் சந்தங்க ணிறைந்தன சுடர்மணிப் பிரப்போ
டெண்ணச் சந்தங்கள் படச்சுமந் திளையவ ரிசைந்தார்


மகளிர் பலரின் வருகையைக் கண்ட மரீசி இது விண்ணுலகமே யென்று வியத்தல்

தகளி வெஞ்சுட ரெனத்திகழ் மணிக்குழை தயங்க
மகளிர் மங்கல வுழைக்கலஞ் சுமந்தவர் பிறரோ
டுகளு மான்பிணை யனையவ ருழைச் செல வொளிர்தார்த்
துகளில் விஞ்சையன் றுணிந்தனன் றுறக்கமீ தெனவே


மரீசிக்கு வேண்டுவன புரிதல்

துறக்கம் புக்கவர் பெறுவன விவையெனத் துணியா
வெறிக்கண் விம்மிய விரைவரி தாரவ னிருப்பச்
சிறைக்க ணோக்கமுஞ் சிறுநகைத் தொழில்களுஞ் சுருக்கி
அறைக்கண் மாந்தனுக் கதிதியந் தொழிலினி லமைந்தார்


மங்கையர் வழிபாட்டைப் பெறும் மரீசி தேவனைப்போலத் திகழ்தல்

ஆட்டி னார்வெறி கமழ்வன வணிகிளர் நறுநீர்
தீட்டி னார்நறுஞ் சாந்தமுஞ் சிறிதுமெய் கமழச்
சூட்டி னார்சிலர் நறுமல ரறுசுவை யடிசில்
ஊட்டி னாரவ னமரரு ளொருவனொத் தொளிர்ந்தான்


மாதர்கள் மாட்சிமையை எண்ணி மரீசி மகிழ்ந்திருத்தல்

வயந்த முன்னிய திலகைகல் லியாணிகை வடிவார்
வியந்த சேனைமென் கமலமா லதையென விளம்பும்
இயங்கு பூங்கொடி யனையவ ரியல்புக ணினையா
வயங்கு தொல்புக ழம்பர சரன்மகிழ்ந் திருந்தான்


வேறு - பயாபதி மன்னனுடைய கட்டளைப்படி மரீசியை அழைத்ததற்கு விசய திவிட்டர்கள் புறப்படுதல்

ஆங்கெழிற் பொலிந்தவன் னிருந்தபின் னலங்குதார்
வீங்கெழிற் பொலிந்தானை வேந்தனேவ வீவில்சீர்ப்
பூங்கழற் பொலங் குழைந் திவிட்டனோடு போர்க்கதந்
தாங்கெழிற் பெருங்கையானை சங்க வண்ண னேறினான்


யானைமீது விசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு

தம்பியோடு ங்கவிசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு
பைம்பொ னோடை வீழ்மணிப் பகட்டெருத்த மேறினான்
செம்பொன்மா மலைச்சிகைக் கருங்கொண்மூவி னோடெழூஉம்
வம்பவெண்ணி லாவிங்கு திங்கள்போல மன்னினான்


விசய திவிட்டர்களுடன் பலவகைப் படைகள் புறப்படுதல்

ஆர்த்தபல்லி யக்குழா மதித்தகுஞ்ச ரக்குழாம்
தேர்த்தவீரர் தேர்க்குழாந் திசைத்தபல்ச னக்குழாம்
போர்த்தசா மரக்குழாம் புதைத்தவெண் கொடிக்குழாம்
வேர்த்தவேந்தர் பல்குழாம் விரைந்தகூந்தல் மாக்குழாம்


விசய திவிட்டர்கள் கண்ட விளங்கிழையார் மயக்கம்

பாடுவார்வ ணங்குவார்ப லாண்டுகூறி வாழ்த்துவார்
ஆடுவாரோ டார்வமாந்த ரன்னரின்ன ராயபின்
சூடுமாலை சோரவுந் தொ டாரமாலை வீழவும்
மாடவாயின் மேலெலாம டந்தைமார்ம யங்கினார்

கொண்டலார்ந்த பொன்னொளிக் குழற்கொடிக்கு ழாமனார்
மண்டலந்நி றைந்ததிங்கள் வட்டமொத்த வாண்முகம்
குண்டலங்கொ ழும்பொனோலை யென்றிரண்டு கொண்டணிஇ
வண்டலர்ந்து மாலைதாழ்ந்து மாடவாய்ம றைந்தவே

கூடுதும்பி யூடுதோய்கு ழற்றொகைத்து ணர்துதைந்
தோடுமேலெ ருத்திடைக்கு லைந்தகோதை யோடுலாய்
மாடவாயின் மாலைஞால மாடமேறு மாதரார்
ஆடுமஞ்ஞை கோடுகொள்வ தென்னலாவ தாயினார்

தொண்டைவாய் மடந்தைமார்கள் சுடிகைவட்ட வாண்முகம்
கொண்டகோல நீரவாய கோடிமாட மேலெலாம்
வண்டுசூழ்ந்த பங்கயம லர்க்குழாமி ணைப்படூஉக்
கெண்டையோடு ந்ன்றலைந்த கேழவாய்க்கி ளர்ந்தவே


விசயதிவிட்டர்களை நகரத்து மாதர்கள் காணுதல்

மாலைதாழு மாடவாய் நிலத்தகத்து மங்கைமார்
வேலவாய நெடியகண் விலங்கிநின் றிலங்கலால்
சாலவாயி றாமெலாமொர் தாமரைத் தடத்திடை
நீலமாம லர்க்குழாநி ரந்தலர்ந்த நீரவே


சுண்ணமாரி தூவுவார் தொடர்ந்துசேர்ந்து தோழிமார்
வண்ணவார வளைதயங்கு முன்கைமேல்வ ணங்குவார்
நண்ணிநா ணொழிந்துசென்று நம்பிமார்கள் முன்னரே
கண்ணிதம்மி னென்றிரந்து கொண்டுந்ன்று கண்ணுவார்

பாடுவார்மு ரன்றபண்ம றந்தொர்வாறு பாடியும்
ஆடுவார்ம றந்தணிம யங்கியர்மை யாடியும்
சூடுவான்றொ டுத்த கோதை சூழ்குழன்ம றந்துகண்
நாடுவாய்நி ழற்கணிந்து நாணுவாரு மாயினார்

இட்டவில்லி ரட்டையுமி ரண்டுகெண்டை போல்பவும்
விட்டிலண்க்கு தொண்டையங் கனிப்பிழம்பொ டுள்விராய்ச்
சுட்டிசூட்ட ணிந்துசூளி மைமணிசு டர்ந்துனீள்
பட்டம்வேய்ந்த வட்டமல்ல தில்லைநல்ல பாங்கெலாம்

அலத்தகக்கு ழம்புதம்ம டித்தலத்தொர் பாகமா
நிலத்தலத்தொர் பாகமா நீடுவாயில் கூடுவார்
கலைத்தலைத்தொ டுத்தகோவை கண்ணெகிழ்ந்து சிந்தலான்
மலைத்தலைத்த ழற்சிதர்ந்த போன்றமாட வாயெலாம்

பாடகந்து ளங்கவும்பு சும்பொனோலை மின்னவும்
சூலகந்து ளும்பவஞ் சு ரும்புகழ்ந்து பாடவும்
ஊடகங்க சிந்தொசிந்து நின்றுசென்று வந்துலாய்
நாடகங்க ணன்னர்க்க ணங்கைமார்ந விற்றினார்


மாதர்கள் மயக்கம்

மாலையால்வி ளங்கியும்பொன் வாசச்சுண்ணம் வீசியும்
சாலவாயி லாறுசந்த னக்குழம்பு சிந்தியும்
நீலவாணெ டுங்கணார்நி ரந்து நெஞ்சு தாழொரீஇ
ஞாலமாளு நம்பிமாரின் மாலுமாகி நண்ணினார்

வேய்மறிந்த தோள்விளர்த்து வெவ்வுயிர்ப்பொ டுள்விராய்த்
தோமறிந்த சூழ்துகின்னெ கிழ்ந்துடுத்து வீழ்ந்தசைஇப்
பூமறிந்த தேங்குழன் முடிப்பொதிந்து வீழ்த்துலாய்த்
தாமறிந்த முல்லைவாய தாதுகுத்து டங்கினார்


விசயதிவிட்டர்களுடைய படை பொழிலை அடைதல்

கொங்குவார்ம லர்த்தடத்த மர்ந்தகோதை மார்களோ
டங்கராகம் வீற்றிருந்த ணிந்தவார மாகுலாய்
மங்கைமார்கள் கண்ணும்வண்டு மாலையும னங்களும்
தங்குமார்பி னம்பிமார்க டானைசோலை சார்ந்ததே


விசயதிவிட்டர்கள் பொழிலை அடைதல்

மானளாய நோக்கினார்ம னங்கலந்து பின்செல
வானளாய சோலைவாயின் மன்னவீரர் துன்னலலும்
கானளாய போதணிந்து காவிவிம்மு கள்ளளைஇத்
தேனளாவு வண்டுகொண்டு தெறல்சென் றெழுந்ததே


விசயதிவிட்டர்கள் வேழத்தினின்று இறங்குதல்

செம்முகப்ப சும்பொ னோடை வெண்மருப்பி ணைக்கரு
வெம்முகத்து வீழ்கடாத்து வேழநின்றி ழிந்தபின்
கைம்முகத்து வேலிலங்கு காமர் தாங்கொ லென்றுசென்
றம்முகத்து தும்பிவண்டு தேனொடாடி யார்த்தவே


பொழிலின் காட்சி

தாதுநின்ற தேறனீர் தளித்திவற்றின் மேலளி
கோதுகின்ற போதுகொண்டு சிந்திநம்பி மார்களை
மாதுநின்ற மாதவிக் கொடிகடந் தளிர்க்கையால்
போதுகென்றி டங்கள்காட்டு கின்றபோற்பொ லிந்தவே


பூங்காவின் பொதுக்காட்சி

போதுலாய வேரிமாரிஇ சாரலாய்ப்பொ ழிந்துதேன்
கோதலா னெரிந்துதாது கால்குடைந்து கொண்டுறீஇ
மாதுலாய வண்டிரைத்து மங்குல்கொண்டு கண்மறைத்
தேதிலார்க்கி யங்கலாவ தன்றுசோலை வண்ணமே


தென்றல் வீசுதல்

போதுலாய பூம்பொதும்பர் மேலதென்றல் வீசலால்
தாதுலாய போதணிந்து தாழ்ந்துதாம வார்குழல்
மாதரார்கள் போலவல்லி மார்புபுல்லி மைந்தரைக்
காதலால்வ ளைப்பபோன்று காவினுட்க லந்தவே


விசயதிவிட்டர்கள் அசோகமரத்தின் இடத்தை அடைதல்

புல்லிவண்ட மர்ந்துகங்கு பூந்தழைப்பொ தும்பிடை
மல்லிகைக்கொ டிக்கலந்து மெளவல்சூட வெளவுநீர்
வல்லிமண்ட பங்கள்சென்று மாதவிக் கொழுந்தணி
அல்லிமண்ட பத்தயல சோகமாங்க ணெய்தினார்


விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டர்களை வணங்குதல்

பஞ்சிலங்கு மல்குலார்ப லாண்டுகூற வாண்டுபோய்
மஞ்சிலங்க சோகநீழன் மன்னவீரர் துன்னலும்
விஞ்சையன்ம கிழ்ந்தெழுந்து வென்றிவீரர் தங்களுக்
கஞ்சலித்த டக்கைகூப்பி யார்வமிக்கி றைஞ்சினான்


நீர் எம்மை வணங்குவது ஏன்? என்று விசயன் மரீசியைக் கேட்டல்

ஆங்கவனி றைஞ்சலு மலர்ந்ததிங்க ணீளொளிப்
பூங்கழற்பொ லங்குழைப்பொ லிந்திலங்கு தாரினான்
நீங்கருங்கு குணத்தினீவிர் நீடுகுரவ ராதலில்
ஈங்கெமக்கு நீர்பணிந்த தென்னையென்றி யம்பினான்


விசயதிவிட்டர்களை மரீசி வியந்து நோக்குதல்

பானிறக்க திர்நகைப ரந்தசோதி யானையும்
நீனிறக்க ருங்கட னிகர்க்குமேனி யானையும்
வானெறிக்கண் வந்தவன்ம கிழ்ந்துகண்ம லர்ந்துதன்
நூனெறிக்கண் மிக்கநீர்மை யொக்கநின்று நோக்கினான்


மேலும் விசயதிவிட்டர்களை நன்கு பார்த்தல்

வேல்கொடானை வீரர்தம்மை விஞ்சையன் வியந்துநீள்
நூல்கொள்சிந்தை கண்கடாவ நோக்கிநோக்கி யார்காலன்
கால்கள்கொண்டு கண்ணிகாறு முண்மகிழ்ந்து கண்டுகண்
மால்கொள்சிந்தை யார்கள்போல மற்றுமற்று நோக்கினான்


மரீசி விசயதிவிட்டர்களைப் பார்த்துப் பேசத் தொடங்குதல்

வேரிமாலை விம்மவும்வி ளங்குபூண்டு ளும்பவுந்
தாரொடார மின்னவுந்த யங்குசோதி கண்கொள
வாரநோக்க கில்லனன்ன னரசநம்பி மார்களைச்
சாரவாங்கொர் கற்றலத்தி ருந்துகான்வி ளம்பினான்


விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டரின் மேம்பாட்டைக் கூறுதல்

செம்பொன்வான கட்டிழிந்து தெய்வ யானை யுண்மறைஇ
வம்புநீர்வ ரைப்பகம்வ ணக்கவந்த மாண்புடை
நம்பிமீர்க ணுங்கள்பாத நண்ணிநின் றி றைஞ்சுவார்
அம்பொன்மாலை மார்பினீர ருந்தவஞ்செய் தார்களே

திங்கள்வெண் கதிர்ச்சுடர்த் திலதவட்ட மென்றிரண்
டிங்கண்மா லுயிர்க்கெலாமெ ளிய்யவென்று தோன்றலும்
தங்கள்சோதி சாரலாவ வல்லவன்ன நீரவால்
எங்கண்முன்னை நுடங்கடன்மை யென்றுபின்னை யேத்தினான்


தந்தையைக் காணச்செல்வோம் என்று விசயதிவிட்டர்கள் மரீசியை அழைத்தல்

இமைகள்விட்ட நோக்கமேற வின்னபோல்வ சொல்லலு
மமைகமாற்றம் நூம்மை யெங்க ளடிகள்காண வேகுவாம்
சுமைகொண்மாலை தொடுகளிற்றெ ருத்தமேறு கென்றனர்
சிமைகொடேவர் போலநின்று திகழுகின்ற சோதியார்


மரீசியும் விசயதிவிட்டர்களும் யானைகள்மீது தனித்தனியே அரண்மனைக்குப் புறப்படுதல்

அம்பொன்மாலை கண் கவர்ந்த லர்ந்தசெல்வ வெள்ளமேய்
வெம்புமால்க ளிற்றெருத்தம் விஞ்சையாளன் மேல்கொளப்
பைம்பொன்மாலை வார்மதப்ப ரூஉக்கை யீரு வாக்கண்மீச்
செம்பொன்மாலை மார்பசேர்ந்து தேவரிற்று ளும்பினார்


மகளிர் எதிர்கொள்ள நகரஞ் சேர்தல்

கதிர்நகைக் கபாட வாயிற் கதலிகைக் கனக நெற்றி
மதிநக வுரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதிப்
புதுநக ரிழைத்து முத்து பொலங்கலத் தொகையும் பூவும்
எதிர்நகைத் துகைத்து மாத ரெதிர்கொள நகரஞ் சேர்ந்தார்


மருசியும் விசயதிவிட்டரும் சேர்ந்திருந்ததன் வருணனை

விரைக்கதி ரலங்கற் செங்கேழ் விண்ணியங் கொருவ னோடும்
வரைக்கெதிர்ந் திலங்கு மார்பின் மன்னவ குமரச் செல்வர்
எரிக்கதி ரேற்றைக் கால மெழுநிலாப் பருவ மேக
நிரைத்தெழு மிருது மன்று நிரந்ததோர் சவிய ரானார்


தெருவிற் செல்லுதல்

வார்கலந் திலங்கு கொம்மை வனமுலை மகளி ரிட்ட
ஏர்கலந் தெழுந்த தூம வியன்புகை கழுமி நான
நீர்கலந் துகுத்த மாலை நிறமதுத் திவலை சிந்தக்
கார்கலந் திருண்ட போலுங் கண்ணகன் தெருவுட் சென்றார் 75


அரண்மனையின் வாயிலை அடைதல்

தெளிர்முத்த மணலுஞ் செம்பொற் சுண்ணமுஞ் சிதர்ந்து தீந்தேன்
தளிர்முத்த மலரும் போதும் சாந்தமு வண்டார்
ஒளிர்முத்த முறுவ லார்த முழைக்கலங் கலந்து மாலைக்
குளிர்முத்த நிழற்றுங் கோயிற் பெருங்கடை குறுகச் சென்றார்


பயாபதி மன்னன் பொற்கூடத்தில் அமருதல்

மற்றவை ரடைந்த போழ்கின் வாயிலோ ருணர்த்தக் கேட்டு
கொற்றவ னருவி தூங்குங் குளிர்மணிக் குன்றம் போல
முற்றிநின் றிலங்குஞ் செம்பொன் முடிமிசை முத்த மாலைக்
கற்றைகள் தவழச் சென்றோர் கனககூ டத்தி ருந்தான்


பயாபதி மன்னன் மூவரையும் அமரச் செய்தல்

மன்னவ குமர ரோடும் விஞ்சையன் மகிழ்ந்து வையத்
தின்னருள் புரிந்த வேந்த னிடையறிந் தினிதி னெய்திக்
கன்னவில் தோளி னான்றன் கழலடி தொழுது நின்றான்
அன்னவர்க் கிருக்கைத் தான மரசனு மருளிச் செய்தான்


பயாபதி அம்மன்னன் வீற்றிருக்கும் காட்சி

வீரியக் குமர ரொடும் விஞ்சையஞ் செல்வ னோடும்
காரியக் கிழவர் சூழக் கவின்றுகண் குளிரத் தோன்றி
ஆரியன் னலர்ந்த சோதி யருங்கலப் பீட நெற்றிக்
தாரகை யணிந்து தோன்றுஞ் சந்திர சவிய னானன்


மன்னவன் விஞ்சையனுக்கு முகமன் கூறியிருத்தல்

அலகையில் தானை வேந்த னம்பர சரனை நோக்கி
உலகுப சார மாற்ற முரைத்தலுக் குரிய கூறி
விலகிய கதிர வாகி விளங்கொளிக் கடகக் கையான்
மலரகங் கழுமப் போந்து மனமகிழ்ந் திருந்த போழ்தின் 80


மருசி கொண்டுவந்த திருமுகத்தை மதிவரன் வாங்குதல்

விஞ்சைய னெழுந்து தங்கோன் வெள்ளிவே தண்ட நோக்கி
அஞ்சலித் தடக்கை கூப்பி யரக்கிலச் சினையின் வைத்த
எஞ்சலி லோலை காட்ட விறைமகன் குறிப்பு நோக்கி
வஞ்சமில் வயங்கு கேள்வி மதிரவன் கரத்தில் வாங்கி


மதிவரன் திருமுகவோலையைப் படித்தல்

நிகரிகந் தழகி தாகி நெரிவடுப் படாத வேழப்
புகர்முகப் பொறிய தாய புகழ்ந்தசொல் லகத்துப் போகா
மகரவாய் மணிகட் செப்பின் மசிகலந் தெழுதப் பட்ட
பகரரும் பதங்கள் நோக்கிப் பயின்று பின் வாசிக் கின்றான்


இதுவும் அடுத்த பாடலும் திருமுகச் செய்தி

போதனத் திறைவன் காண்க விரதநூ புரத்தை யாளும்
காதுவேன் மன்ன னோலை கழலவன் றனக்கு நாளும்
ஆதிய வடிசி லொண்கே ழஞ்சன முள்ளிட் டெல்லாம்
தீதுதீர் காப்புப் பெற்றுச் செல்கென விடுத்த தன்றே

அல்லதூஉங் கரும தலங்குதா ரிவுளித் திண்டேர்
வல்லக னிளைய நம்பிக் குரியளா வழங்கப் பட்டாள்
மல்லக மார்பி னன்றான் மருமக ளிவளைக் கூவி
வல்லிதிற் கொடுக்க மன்னன் வாழ்கதன் கண்ணி மாதோ


திருமுகச்செய்திகேட்ட பயாபதிமன்னன் யாதுங் கூறாதிருத்தல்

என்றவ னோலைவாசித் திருந்தன னிறைவன் கேட்டு
வென்றியம் பெருமை விச்சா தரரென்பா ரெம்மின் மிக்கார்
இன்றிவன் விடுத்த திவ்வா றென்கொலோ வென்று சிந்தித்
தொன்றுமற் றுரைக்க மாட்டா திருந்தன னுரங்கொ டோ ளான்


மருசி சினத்துடன் கூறத்தொடங்குதல்

தீட்டருந் திலதக் கண்ணிச் செறிகழ லரசர் கோமான்
மீட்டுரை கொடாது சால விம்மலோ டிருப்ப நோக்கி
வாட்டரும் பெருமை யெங்கோ னோலையை மதியா வாறென்
றோட்டருங் கதத்த னாகிக்கேசர னுரைக்க லுற்றான்


மருசி சினந்து கூறுவன

முன்னமோர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர் தம்மால்
என்னவ ரேனு மாக விகழ்ந்திடப் படுப போலாம்
அன்னதே யுலக வார்த்தை யாவதின் றறியும் வண்ணம்
மின்னவின் றிலங்கும் வேலோய் நின்னுழை விளங்கிற் றன்றே

பூவிரி யுருவக் கண்ணிப் பொலங்குழை யிலங்கு சோதித்
தேவரே யெனினுந் தோறச் சில்பகல் செல்ப வாயில்
ஏவரே போல நோக்கி யிகழ்ந்துரைத் தெழுவ தன்றே
மாவிரி தானை மன்னா மனிதர தியற்கை யென்றான்

வரைமலி வயங்கு தோளாய் வியாதியான் மயங்கி னார்க்குச்
சுரைமலி யமிர்தத் தீம்பால் சுவைதெரிந் துண்ண லாமோ
விரைமலி விளங்கு பைந்தார் விஞ்சையர் செல்வந் தானும்
நுரைமலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகர லாமோ

அறவிய மனத்த ரன்றி யழுங்குத லியல்பி னார்க்குப்
பிறவியை யறுக்குங் காட்சிப் பெருநிலை யெய்த லாமோ
வெறிமயங் குருவக் கண்ணி விஞ்சையர் விளங்கு தானம்
மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்த லாமோ 90

அருங்கடி கமழுந் தாரை யழிமதக் களிற்றி னாற்றல்
மரங்கெடத் தின்று வாழுங் களபக்கு மதிக்க லாமோ
இரங்கிடு சிறுபுன் வாழ்க்கை யிந்நிலத் தவர்கட் கென்றும்
வரங்கிடந் தெய்த லாமோ மற்றெமர் பெருமை மன்னா

உள்ளிய மரங்கொள் சோலை மண்மிசை யுறையு மாந்தர்
ஒள்ளிய ரேனுந் தக்க துணர்பவ ரில்லை போலாம்
வெள்ளியஞ் சிலம்பி னென்கோன் விடுத்தே யேது வாக
எள்ளியோ ருரையு மீயா திருந்தனை யிறைவ வென்றான்


பயாபதி மன்னன் பதில் உரைத்தல்

ஆங்கவ னுரைப்பக் கேட்டே யம்பர சரனை நோக்கித்
தேங்கம ழலங்கன் மார்ப சிவந்துரை யாடல் வேண்டா
ஓங்கிய வோலை மாற்றக் குரியவா றுரைக்க மாட்டா
தீங்கியா னிருந்த தென்றா னெரிசுடர் வயிரப் பூணான்

வெஞ்சுடர் தெறுதீ விச்சா தரரென்பார் மிக்க நீரார்
செஞ்சுடர்த் திலதக் கண்ணித் தேவரே தெரியுங் காலை
மஞ்சிடை மண்ணுள் வாழும் மக்களுக் கவர்க டம்மோ
டெஞ்சிய தொடர்ச்சி இன்ப மெய்துதற் கரிது மாதோ

ஈட்டிய வூன்செய் யாக்கை யெம்முழை யின்ன வாறு
வாட்டமில் வயங்கு கண்ணி மணிமுடி மன்ன னோலை
காட்டிநீ யுரைத்த வெல்லாங் கனவெனக் கருதி னல்லான்
மீட்டது மெய்ம்மை யாக வியந்துரை விரிக்க லாமோ

இன்னவ னின்ன நீரா னின்னவே யெய்து கென்று
முன்னவன் செய்த மொய்ம்பின் வினைகளே முயல்வ தல்லால்
பின்னவன் பிறந்து தன்னாற் பெறுதலுக் குரிய வாய
துன்னுவ தென்றுக் கான்று துணியுமோ சொல்ல வென்றான்

மெய்ப்புடை தெரிந்து மேலை விழுத்தவம் முயன்று நோற்றார்க்
கொப்புடைத் துங்கள் சேரி யுயர்நிலைச் செல்வ மெல்லாம்
எப்படி முயறு மேனு மெங்களுக் கெய்த லாகா
தப்படி நீயு முன்னர் மொழிந்தனை யன்றே யென்றான்


விஞ்சைச் சாரணான் நாணிச் சினம் மறுதல்

இறைவனாங் குரைத்த சொற்கேட் டென்னைபா வம்பொ ருந்தாக்
கறையவா மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற் றோரேன்
பொறையினாற் பெரியன் பூபன் சிறியன்யா னென்று நாணி
அறிவினாற் பெரிய நீரா னவிந்தன கதத்த னானான்


பயாபதியின் ஐயத்தை மருசி அகற்றுதற்கு உரைக்கத் தொடங்கல்

கிளர்ந்தொளி துளும்பும் மேனிக் கேசர ரோடு மண்மேல்
வளர்ந்தொளி திவளும் பூணோர் மணவினை முயங்க லில்லென்
றளந்தறி வரிய சீரோற் கையமீ தகற்று கென்றாங்
குளர்ந்துன னுணர்வி னூக்கி யுரைக்கிய வெடுத்துக் கூறும்


விஞ்சையரும் மனிதரே என்பதை மருசி விளக்கிக் கூறுதல்

மஞ்சிவர் மணங்கொள் சோலை மணிவரைச் சென்னி வாழும்
விஞ்சையர் விச்சை யாலே விழுமிய ரென்ப தல்லால்
அஞ்சலில் தானை வேந்தே மனிதரே யவரும் யாதும்
வெஞ்சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை யின்மை கேண்மோ 100


விஞ்சையன் தன்னை விளக்கிக் கூறுதல்

மண்ணவில் முழவின் மாநீர்ப் பவபுர முடைய மன்னன்
பண்ணவில் களிதல் யானைப் பவனவே கற்குத் தேவி
கண்ணவில் வடிவிற் காந்தி மதியவள் பாவை
வண்ணவிற் புருவ வாட்கண் வாயுமா வேகை யென்பான்

மற்றவ ளோடும் வந்தேன் மன்னன்யான் மருசி யென்பேன்
அற்றமில் கேள்வி யெந்தை யஞ்சுமா னென்னும் பேரான்
பெற்றதா யருசி மாலை பெருமக னருளினால் யான்
கற்றநூல் பல்ல வாகுங் கருமணிக் கடகக் கையான்

அலகைசா லாதி காலத் தரசர்கள் தொடர்ச்சி யெல்லாம்
உலகநூல் பலவு மோதி யுணர்ந்தன னுரைப்பக் கேண்மோ
விலகிய கதிர வாகி விடுசுடர் வயிரக் கோலத்
திலகம்வீற் றிருந்த கண்ணித் திருமுடிச் செல்வ என்றான்


மருசி நமியின் வரலாறு கூறுகின்றான்

ஆதிநா ளரசர் தங்க ளருங்குல மைந்து மாக்கி
ஓதநீ ருலகின் மிக்க வொழுக்கமுந் தொழிலுந் தோற்றித்
தீதுதீர்ந் திருந்த பெம்மான் திருவடி சாரச் சென்று
நீதி நூற் றுலகம் காத்து நிலத்திரு மலர நின்றான்

முசிநாச் சுரும்பு பாய முருகுடைத் துருக்குஞ் சோலைக்
காசிநாட் டரசன் செங்கோற் கதிர்முடிக் கச்ச னென்பான்
மாசினாற் கடலந் தானை மன்னவற் றவற்குத் தேவி
தூசினாற் றுளும்பு மல்குல் சுதஞ்சனை சுடரும் பூணாய்

வேய்ந்தக நிழற்றுங் கோதை மிளிர்மணிக் கலாப வட்டம்
போந்தகந் திகழ்ந்து மின்னுப் பூந்துகில் பொலிந்த வல்குல்
வாய்ந்தகங் கமழுங் கோதை யவள்பெற்ற வரச சிங்க
நாந்தகக் கிழவர் கோவே நமியென்பான் நலத்தின் மிக்கான் 106

அங்கவ னரசு வேண்டா னற்கடல் படைத்த நாதன்
பங்கயங் கமழு மேனி பவித்திர பரம யோகி
தங்கிய தியானப் போழ்தி றாழ்ந்துதன் றடக்கை கூப்பிப்
பொங்கிய காதல் கூரப் பாடினன் புலமை மிக்கான்


அருகக் கடவுள் வணக்கம்

அலகிலா ஞானத் தகத்தடங்க நுங்கி
உலகெலாம் நின்று னொளித்தாயு நீயே
ஒளித்தாயு நீயே யுயிர்க்கெலாங் கண்ணா
யளித்தாயுங் காத்தாயு நீயேவாழி யறவேந்தே

அழனாறும் வெங்கதிரோ னாண வலராது
நிழனாறு மூர்த்தியாய் நின்றாயு நீயே
நின்றாயு நீயே நிறைபொரு ளெல்லைக்கட்
சென்றாயும் வென்றாயு நீயேவாழி திருமாலே

நிறைதரு கேவலத்தோய் நின்னடியார்க் கெல்லாங்
குறைதலி லின்பங் கொடுப்பயு நீயே
கொடுப்பயு நீயேயெங் குற்றவேல் வேண்டாய்
விடுத்தாயு நீத்தாயு நீயேவென்ற பெருமானே 110


நமிபாடிய இசையின் தன்மை

என்றவன் பாடக் கேட்டே யிறஞ்சின குறிஞ்சி யேகா
நின்றன விலங்கு சாதி நிலங்கொண்ட பறவை எல்லா
மன்றுமெய் மறந்து சேர்ந்தார் கின்னர ரமரர் தாழ்ந்தார்
வென்றவன் றியானத் துள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே


நமியின் இசைகேட்டு ஆதிசேடன் வருதல்

மணநிரைத் திலங்குந் தாரோய் மற்றவ னுலோக நாதன்
குணநிரைத் திசைத்த கீதங் கேட்டலு மணிகொள் கோவைக்
கணநிரைத் திலங்குங் காய்பொன் முடிமிசை யீரைஞ்ஞாறு
பணநிரைத் திலங்கப் புக்கான் பணதர ரரச னன்றே


நமியை வணங்குதல்

பன்னக ருலகங் காக்கும் பாய்கதிர்ப் பசும்பொன் மேனி
மின்னவிர் வயிரச் சூட்டு விடுசுடர் மணிப்பொற் பூணான்
தன்னிக ரிகந்த தோன்றல் சரணெனப் பரமன் பாதம்
மன்னர்கட் கரசன் முன்னை வலங்கொடு வணக்கங் செய்தான்


நமியின் இசையில் தேவர்கள் ஈடுபட்டமை

தேந்துண ரிலங்கு கண்ணித் தேவனத் தேவர் கோனைத்
தீந்தொடை நரம்பின் றெய்வச் செழுங்குரல் சிலம்ப வேத்தப்
பூந்துணர்க் கற்ப லோகம் புடைபெயர்ந் திட்ட போற்றா
வேந்துடை மான மெல்லாம் வேலினால் விடுத்த வேந்தே


ஆதிசேடன் நமியரசனை வினவுதல்

மாண்டதன் நிலைமை யுள்ளி வருபொருண் மெய்ம்மைநோக்கித்
தூண்டிய சுடரி னின்ற தியானத்தைத் துளங்கு வாய்போ
லீண்டுவந் திசைக்குற் றேவ லெம்மிறை யடிக்கட் செய்தாய்
வேண்டுவ தெவன்கொ லென்றான் மிடைமணிப் பூணினானே


நமியரசன் விடையிறுத்தல்

பண்மிசைப் படர்ந்த சிந்தைப் பணதரற் பணிந்து மாற்றத்
துண்மிசைத் தொடர்பு நோக்கி யுறுவலி யதனைக் கேளா
விண்மிசை யவர்கள் போல வேண்டிய விளைக்குஞ் செல்வ
மண்மிசைப் பெறுவ னாக மற்றிதென் மனத்த தென்றான்


ஆதிசேடன் நமிக்கு வரமளித்துச் செல்லுதல்

இச்சையங் குரைப்ப கேட்டாங் கிமைய வரியற்கை யெய்தும்
வீச்சையுந் துணையும் வெள்ளி விலங்கலுங் கொடுத்து வேந்தாய்
நிச்சமு நிலாக வென்று நிறுவிப்போய் நிலத்தின் கீழ்த்த
னச்சமி லுலகஞ் சேர்ந்தா னாயிரம் பணத்தி னானே


நமியின் வழித்தோன்றலே சடியரசன் என்று மரீசி பயாபதிக்குப் பகர்தல்

ஆங்கவன் குலத்து ளானெம் மதிபதி யவனோ டொப்பா
யோங்கிய குலமுஞ் செல்வப் பெருமையு முடைய நீயு
மீங்கிரு குலத்து ளீர்க்குங் கருமம்வந் திசைத்த போழ்தி
னீங்கரு நறுநெய் தீம்பால் சொரிந்தோர் நீர்மைத் தென்றான்


பயாபதியின் வரலாறு கூறத்தொடங்குதல்

தங்குலத் தொடர்ச்சி கூறித் தானவ னிருந்த போழ்தி
னுங்குல நிலைமை யெல்லா நூலினீ யுரைத்த வாறே
எங்குல நிலைமை யானு முரைப்பனென் றெடுத்துக் கொண்டு
பொங்கலர்ப் பிணைய லான்றன் புரோகிதன் புகல லூற்றான்


அங்கனிமித்திகன் கூறுதல்

யாவனாற் படைக்கப் பட்ட துலகெலாம் யாவன் பாத்த
தேவனால் வணக்கப்பட்ட தியாவன தகலஞ் சேர்ந்து
பூவினாள் பொறியொன் றானாள் புண்ணிய வுலகங் கான
ஏவினான் யாவ னம்மை யாவன துலக மெல்லாம் 120


மற்றவ னருளின் வந்தான் மரகத மணிக்குன் றொப்பச்
சுற்றி நின் றிலங்கு சோதித் தோள்வலி யெனும்பே ரானக்
கொற்றவ னுலகங் காத்த கோன்முறை வேண்டி யன்றே
கற்றவ ரின்று காறுங் காவனூல் கற்ப தெல்ல்லம்


வாகுவலி தவஞ்செய்யச் செல்லுதல்

கொடிவரைந் தெழுதப் பட்ட குங்குமக் குவவுத் தோளான்
இடிமுர சதிருந் தானை யிறைத்தொழில் மகனுக் கீந்து
கடிமண் மனுக்குந் தெய்வக் கழலடி யரசர் தங்கள்
முடிபொர முனிவிற் றான்போய் முனிவன முன்னினானால்


கயிலாயத்து முடியில் தவஞ்செய்தல்

விண்ணுயர் விளங்கு கோட்டு விடுசுடர் விளங்க மாட்டாக்
கண்ணுயர் கதலி வேலிக் கார்க்கயி லாய நெற்றிப்
புண்ணியக் கிழவன் போகிப் பொலங்கலம் புலம்ப நீக்கித்
திண்ணிய தியானச் செந்தீச் செங்சுடர் திகழ நின்றான்


வாகுவலியின் தவநிலைமை

கழலணிந் திலங்கு பாதங் கலந்தன கருங்கட் புற்றத்
தழலணிந் தெழுந்த வைவா யருமணி யாடு நாகம்
பொழிலணிந் தெழுந்த வல்லி புதைந்தன பூமி நாதன்
குழலணிந் தெழுந்த குஞ்சி குடைந்தன குருவிக் கூட்டம்

அருமுடி யரசர் தாழ்ந்த வடிமிசை யரவ மூரக்
கருவடி நெடுங்க ணல்லார் கலந்த தோள் வல்லி புல்ல
மருவுடை யுலகம் பாடல் வனத்திடைப் பறவை பாடத்
திருவுடை யடிக ணிண்ற திறமிது தெரிய லாமோ

வெண்டவாங் குவளைக் கண்ணி மன்னர்தம் மகுட கோடி
விண்டவாம் பிணைய லுக்க விரி மதுத் துவலை மாரி
உண்டவான் கழல்கள் சூழ்ந்த திருவடி யரவ மூரக்
கண்டவா றிங்க ணார்க்குங் கருதுவ தரிது கண்டாய்

அடுக்கிய வனிச்சப் பூவி னளிமே லரத்தச் செவ்வாய்
வடிக்கயல் நெடுங்க ணார்தம் வளிக்கையால் வளித்த மார்பில்
தொடுக்கிய தொடுத்த போலுந் துறுமலர்க் கத்தி மாதர்
கொடிக்கையா லிடுக்க றன்மேல் கொற்றவன் குலவப் பட்டன்

புல்லிய பொலங்கொம் பொப்பார் புலவியுட் கலவி சென்று
மெல்லிய மாலை தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு
மல்லுய ரலர்ந்த மார்பின் மாதவிப் பேதை யார்த்த
வல்லிகள் விடுக்க மாட்டா மனத்தினன் மன்ன னானான்


வாகுவலி தேவரினும் உயர்நிலை யடைதல்

ஓவலில் குணங்க ளென்னு மொளிர்மணிக் கலங்க டாங்கித்
தேவர்க ளுலக மெல்லாஞ் செழுமண மயர்ந்து கூட்டக்
கேவலப் பெண்ணென் பாளோர் கிளரரொளி மடந்தை தன்னை
ஆவியு ளடக்கிப் பின்னை யமரர்க்கு மரிய னானான்


வாகுவலியின் வழித்தோன்றலே பயாபதி மன்னன் என்றல்

எங்கள்கோ னிவன்க ணின்று மிக்குயர் குலத்து வேந்தர்
தங்களோர் புறஞ்சொல் வாராத் தன்மையா லுலகங் காத்தார்
அங்கவர் வழிக்கண் தோன்றி யகலிடம் வணங்க நின்ற
இங்கிவன் பெருமை நீயுமறிதியா லேந்த லென்றான் 130


மருசி மேலுங் கூறத்தொடங்குதல்

குடித்தொட ரிரண்டுங் கேட்டே குறுமயி ரெறிந்து கண்ணுள்
பொடித்தநீர்த் திவலை சிந்தப் புகழ்ந்தன ரிருந்த வேந்தர்
அடுத்தெரி யலர்ந்த செம்பொ னணிமணி முடியி னானங்
கெடுத்துரை கெடாத முன்னக் கேசர னிதனைச் சொன்னான்


வாகுவலி கச்சனுக்கு மருமகன் என்று கூறுதல்

இப்படித் தாயிற் பண்டை யிசைந்தது சுற்ற மென்னை
அப்படி யரிய செய்த வடிகளெம் மரச னாய
கைப்புடை யிலங்கு செவ்வேற் கச்சற்கு மருக னாரென்
றொப்புடைப் புராண நன்னூ லுரைப்பதியா னறிவ னென்றான்


மன்னவன் மனத்தி னாற்ற மிறைவனை வணங்கி வாழ்த்திப்
பின்னவன் ரன்னை நோக்கிப் பேசினன் பிறங்கு தாரோய்
முன்னிய வுலக நூலுங் குலங்களு முறையு முள்ளிட்
டின்னவா றறியு நீரோ ரில்லை நின் போல வென்றான் 133


அரசாட்சிப் பொறிக்கு வாய் தூதுவர் என்றல்

மந்திரக் கிழவர் கண்ணா மக்கடன் றாள்க ளாகச்
சுந்தர வயிரத் திண்டோ டோ ழராச் செவிக ளொற்றா
அந்தர வுணர்வ நூலா வரசெனு முருவு கொண்ட
எந்திர மிதற்கு வாயாத் தூதுவ ரியற்றப் பட்டார்


சிறந்த தூதுவன் சிறப்பு

ஆதிநூ லமைச்சர்க் கோது மாண்பொலா மமைந்து நின்றான்
தூதனாச் சொல்லிற் சொல்லாச் சூழ்பொரு ளில்லை போலா
மேதிலார்க் காவ துண்டோ வின்னன புகுந்த போழ்திற்
கோதிலாக் குணங்க டேற்றிக் கொழித்துரை கொளுத்த லென்றான்



பயாபதி மரிசியைப் பாராட்டல்

மற்றிம்மாண் புடைய நின்னை யுடையவம் மன்னர் மன்னன்
எற்றைநூற் றெய்த மாட்டா னிதன்றிற நிற்க வெம்மைச்
சுற்றமா நினைந்து நின்னைத் தூதனா விடுத்துச் செல்லப்
பெற்றியாம் பிறவி தன்னாற் பெறும்பயன் பெற்ற தென்றான்


பயாபதி மன்னன் மருசியை நோக்கிச் சில கூறுதல்

இன்றியா னின்னை முன்வைத் தினிச்சில வுரைக்கல் வேண்டா
ஒன்றியா னுரைக்கற் பால வுரையையு முணர்த்தி நீயே
வென்றியால் விளங்கு தானை விஞ்சையங் கிழவன் கண்ணா
நின்றியான் வாழ்வ தல்லா னினைப்பினி யில்லை மன்னோ

கொற்றவன் குறிப்பி தாயிற் கூவித்த னடியன் மாரை
உற்றதோர் சிறுகுற் றேவற் குரியராய்க் கருதித் தானே
அற்றமி லலங்கல் வேலோ னறிந்தருள் செய்வ தல்லான்
மற்றியா னுரைக்கு மாற்ற முடையனோ மன்னற் கென்றான்


மருசிக்குச் சிறப்புச் செய்தல்

தூதன்மற் றதனைக் கேட்டே தொழுதடி வணங்கிச் செங்கோல்
ஏதமில் புகழி னாயானடிவலங் கொள்வ னென்னப்
போதுசே ரலங்க லானும் பொலங்கலம் பொறுக்க லாகாச்
சோதிய சுடரச் சேர்த்திப் பெருஞ்சிறப் பருளிச் செய்தான்


மருசிக்கு நாடகங் காட்டி மறுநாள் அனுப்புதல்

அற்றைநா ளங்குத் தாழ்ப்பித் தகனகர்ச் செல்வந் தன்னோ
டுற்றவ னுவப்பக் கூறி யுரிமைநா டகங்கள் காட்டிப்
பிற்றைநாட் குரவர் தம்மைப் பின்சென்று விடுமி னென்று
மற்றவர்க் கருளிச் செய்தான் மருசியுந் தொழுது சென்றான்


மருசி தனது நகரத்தை அடைதல்

உலனல னடுதிண்டோ ளூழிவே லோடை யானைச்
சலநல சடியென்பேர்த் தாமரைச் செங்க ணான்றன்
குலநல மிகுசெல்கைக் கோவொடொப் பார்கள் வாழு
நலனமர் நளிசும்மைத் தொன்னகர் நண்ணி னானே 141


தூதுவிடு சருக்கம் முற்றிற்று
----------
ஏழாவது

சீயவதைச் சருக்கம்


மரீசி சடி மன்னனைக் காண்டல்

மற்ற மாநகர் மருசி புக்கபின்
கொற்ற வேலவன் கோயின் மாநெதி
முற்று வான்கடை மூன்றுஞ் சென்றுகோன்
சுற்று வார்கழ றெழுது துன்னினான் 7.1


விலங்கு வார்குழை மிளிர்ந்து வில்லிடக்
கலந்து மாமணிக் கடக மின்செய
அலங்கல் வேலினா னங்கை யாலவற்
கிலங்கு மாநிலத் திருக்கை யேவினான்


சடிமன்னன் மரீசியின் கருத்தைக் குறிப்பாலுணர்தல்

தொகுத்த மாண்புடைத் தூதன் மன்னவன்
வகுத்த மாமணித் தலத்தின் மேன்மனத்
தகத்தி னாலமர்ந் திருப்ப வாங்கவன்
முகத்தி னாற்பொருண் முடிவு கண்ணினான்


இதுவுமது

தூத னின்முகப் பொலிவி னாற்சுடர்க்
காது வேலினான் கரும முற்றுற
ஓதி ஞானிபோ லுணர்ந்த பின்னது
கோதில் கேள்வியான் றொழுது கூறினான்


இதுமுதல் உஅ செய்யுள்கள் மரீசியின் கூற்று

வெல்க வாழிநின் வென்றிவார்கழல்
செல்க தீயன சிறக்க நின்புகழ்
மல்க நின்பணி முடித்து வந்தனன்
பில்கு மும்மதப் பிணர்க்கை யானையாய்

இங்கு நின்றுபோ யிழிந்த சூழலும்
அங்கு வேந்தனை யணைந்த வாயிலும்
பொங்கு தானையான் புகன்ற மாற்றமுந்
தொங்கன் மார்பினாய் சொல்லு கேனெனா

அள்ளி லைச்செழும் பலவி னார்சுளை
முள்ளு டைக்கனி முறுகி விண்டெனக்
கள்ளு றைத்தொறுங் கழுமி யூற்றறா
வள்ளி லைப்பொழின் மகிழ்ந்து புக்கதும்

முள்ள ரைப்பசு முளரி யந்தடத்
துள்ளி ரைத்தெழு மொலிசெய் வண்டினம்
கள்ளி ரைத்துகக் கண்டு வண்சிறைப்
புள்ளி ரைப்பதோர் பொய்கை சார்ந்ததும்

நித்தி லம்மணி நிரந்து வெள்ளிவேய்
பத்தி சித்திரப் பலகை வேதிகை
சித்தி ரங்களிற் செறிந்து காமனார்
அத்தி ரம்மென அசோகங் கண்டதும்

தன்ணி ழற்சுடர்த் தமனி யத்தினான்
மன்ணி ழற்கொள மருங்கு சுற்றிய
வெண்ணி ழற்சுடர் விளங்கு கற்றலங்
கண்ணி ழற்கொளக் கண்ட காட்சியும்

சுரிந்த குஞ்சியன் சுடரு மேனியன்
எரிந்த பூணின னிலங்கு தாரினன்
வரிந்த கச்சைய னொருவன் வந்துவண்
டிரிந்து பாயவிங் கேறு கென்றதும்


மற்ற வன்றனக் குரைத்த மாற்றமுங்
கொற்ற வன்விடக் கொம்ப னார்சிலர்
உற்ற மங்கலக் கலங்க ளோடுடன்
முற்ற வூண்டொழின் முடிந்த பெற்றியும்

பங்கய யத்தலர்ச் செங்கண் மாமுடித்
திங்கள் வண்ணனுஞ் செம்பொ னீள்குழைப்
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனும்
அங்கு வந்தது மவர்கள் சொற்றதும்

நற்பு றத்தன நாற்ப தாம்வய
திப்பு ரத்தன விளங்க ருங்கைம்மா
மொய்ப்பு றத்துமேன் முழங்கு தானையோ
டப்பு றத்தர சவைய டைந்ததும்

மன்ன வன்கழல் வணங்கி நின்றதும்
பின்ன வன்றனா லிருக்கை பெற்றதும்
பொன்னி றப்பொறி புகழ்ந்த சாதகந்
துன்னி வாசகந் தொழுது கொண்டதும்

ஓட்டி றானையா னோலை வாசகங்
கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான்
மீட்டொர் சொற்கொடா விம்மி தத்தனா
யீட்டு மோனியா யிருந்த பெற்றியும்

இருந்த மன்னன்மே லெடுத்த மாற்றமும்
வருந்தி மற்றவன் மறுத்த வன்ணமும்
புரிந்து தொல்குலம் புகன்ற பெற்றியு
மருந் தகைத் தொடர் பமைந்த வாக்கமும்

பின்னை மன்னவன் பேணி நன்மொழி
சொன்ன வண்ணமுஞ் சுற்ற மாயதும்
பொன்ன கைக்குலம் பொலிந்து கண்கொள
வின்ன கைச்சிறப் பருளி யீந்ததும்

அருங்கல லக்குழாத் தரசன் றேவிமார்
பெருங்கு லத்தவர் பெயர்ந்து கண்டது
மொருங்கு மற்றுளோ ருரைத்த வார்த்தையுஞ்
சுருங்கில் கேள்வியான் றொழுது சொல்லினான்


இதுமுதல் எட்டுச் செய்யுள்கள், பயாபதி மன்னனின் பெருமையை மரீசி கூறல்

சொன்ன வார்த்தையிஃ திருக்கச் சொல்லுவ
தின்ன மொன்றுள வடிகள் யான்பல
மன்னர் தங்களை மகிழ்ந்து கண்டன
னன்ன னீர்மையா ரரச ரில்லையே 20

கற்ற நூல்பிறர் கற்ற நூலெலா
முற்ற நோக்கினு முற்ற நோக்கல
வுற்ற நூலெலா முற்ற நூல்களாய்ப்
பெற்ற நூலவன் பெற்றி வண்ணமே

எரியு மாணையான் குளிரு மீகையான்
பெரியன் பெற்றியாற் சிறிய னண்பினா
னரியன் வேந்தர்கட் கெளிய னாண்டையார்க்
குரிய னோங்குதற் கோடை யானையான்

எல்லை நீருல கினிது கண்பட
வெல்லும் வேலவன் விளங்கு தண்ணளி
யில்லை யேலுல கில்லை யாமென
நல்ல னேயவ னாம வேலினாய்

கற்ற நூலினார் கலந்த காதலா
லுற்ற போழ்துயிர் கொடுக்கு மாற்றலாற்
கொற்ற வேலவன் குடையி னீழலார்
சுற்ற மாண்பினர் சுடரும் வேலினாய்

கோதிலார் குல மக்கண் மாக்கண்மற்
றேதி லாரென வியைந்த தின்மையார்
ஆத லாற்றமர் பிறர்க ளாவதங்
கோதி லாரவர்க் குள்ளஃ தில்லையே

வைய மின்புறின் மன்ன னின்புறும்
வெய்ய தொன்றுறிற் றானும் வெய்துறுஞ்
செய்ய கோலினாய் செப்ப லாவதன்
றைய தாரினா னருளின் வண்ணமே

வீவில் வீங்குநீர் வேலி வாழ்பவர்க்
காவி யாபவ ரரச ராதலாற்
காவ லோவுங்கொ லென்று கண்படான்
மாவ றானையம் மன்னர் மன்னனே


இதுமுதல் ஐந்து செய்யுட்கள் விசயதிவிட்டரின் பண்பு கூறுவன

மங்குல் மாமழை மாரி வண்கையான்
பொங்கு காதலால் புதல்வர் தாமுமற்
றிங்கண் வேந்தர்கட் கேனை மான்கண்முன்
சிங்க வேறெனச் செப்பு நீரரே

கைய வாச்சிலைக் காம னிங்கிரு
மெய்யி னால் வெளிப் பட்ட நீரதால்
வைய மாள்பவன் புதல்வர் வார்கழ
லையன் மார்கடம் மழகின் வண்ணமே

சங்க வண்ணனார் தம்பி தானுநீர்
பொங்கு கார்முகில் புரையு மேனிய
னங்க ணிவ்வுல காள நாட்டிய
மங்க லப்பொறி மன்ன காண்டியால்

செங்கண் மாலவன் தெய்வ மார்பகம்
பங்க யத்துமேற் பாவை தன்னுட
னங்கு லக்கொடி நங்கை சேர்வதற்
கிங்கன் மாதவ மெவன்கொல் செய்ததே


மரீசி திவிட்டனும் சுயம்பிரபைக்கும் அமைந்த ஒப்பினை வியத்தல்

நங்கை யங்கவ னலத்திற் கொப்பவ
ளிங்கி வட்குவ றேந்த லில்லிவர்
பொங்கு புண்ணியம் புணர்த்த வாறிது
வெங்கண் யனையாய் வியக்கு நீரதே

சடி மன்னன் மரீசிக்குச் சிறப்பு செய்தல்

என்று கூறலு மேந்து நீண்முடி
வென்றி நீள்புகழ் வேக யானையா
னன்று மற்றவற் கருளி யீந்தன
னின்று மின்சுடர் நிதியின் நீத்தமே


சடிமன்னன் அமைச்சரை வினாதல்

மற்ற வன்றனை மனைபு கப்பணித்
துற்ற மந்திரத்தவர்க ளோடிருந்
தெற்று நாமினிச் செய்வ தென்றனன்
வெற்றி நீள்குடை வேந்தர் வேந்தனே


அமைச்சரின் விடை

செங்க ணீன்முடிச் செல்வ சென்றொரு
திங்கள் நாளினுட் டிவிட்ட னாங்கொரு
சிங்கம் வாய் பகத் தெறுவ னென்பது
தங்கு கேள்வியான் றான்முன் சொன்னதே


இதுவுமது

ஆதலா லஃதறியும் வாயிலா
வோது மாண்பினா னொருவ னெற்றனாய்த்
தீதி றானையாய் செல்ல வைப்பதே
நீதி யாமென நிகழ்த்தி னாரரோ


மன்னன் ஒற்றாய்தல்

உய்த்து ணர்ந்தவ ருரைத்த நீதிமேல்
வைத்த வொற்றினன் மன்ன னானபி
னத்தி றத்தனே யமர்ந்த சிந்தைய
னொத்த சுற்றமோ டுவகை யெய்தினான்


இனி அச்சுவகண்டன் செய்தியைக் கூறுவாம் எனல்

இத்தி சைக்கணிவ் வாறிது செல்லுநா
ளத்தி சைக்கணஞ் சப்படு மாழியா
னெத்தி சைக்கும் வெய் யோனியன் முன்னுற
வைத்தி சைத்தன மற்றதுங் கூறுவாம்


இதுமுடல் 6 செய்யுள்கள் அச்சுவக்சுண்டன் காமக் களியாட்டம் கூறுவன

பஞ்சி மேன்மிதிக் கிற்பனிக் குந்தகை
யஞ்சி லோதிய ரம்முலை நாஞ்சிலா
மஞ்சு தோய்வரை மார்ப மடுத்துழத்
துஞ்ச லோவுந் தொழிலின னாயினான்

முத்த வாணகை மோய்பவ ளத்துணி
யொத்த வாயமு தொண்கடி கைத்திரள்
வைத்த வாயின னாய்மட வார்கடஞ்
சித்த வாரிக ளுட்சென்று தங்கினான்

ஆரந் தங்கிய மார்பனு மந்தளிர்க்
காருங் கொம்பனை யாருங் கலந்துழித்
தாருங் கொங்கை ளும்பொரத் தாஞ்சில
வாரம் பட்டணி வண்டின மார்த்தவே

வண்டு தோய்மது வாக்கிவள் ளத்தினுட்
கொண்டு கொம்பனை யார்கள் கொடுப்பவஃ
துண்டு மற்றவ ரொண்டுவர் வாயொளித்
தொண்டை யங்கனி யின்சுவை யெய்தினான்

தாம மென்குழ லார்தடங் கண்ணெனுந்
தேம யங்கிய செங்கழு நீரணி
காம மென்பதொர் கள்ளது வுண்டரோ
யாம மும்பக லும்மயர் வெய்தினான்

சுற்று வார்முலை யார்தந் துகிற்றட
முற்று மூழ்கும் பொழுது முனிவவ
ருற்றபோழ் துணர்த் தும்பொழு தும்மலான்
மற்றொர் போழ்திலன் மன்னவ னாயினான்

மண்க னிந்த முழவின் மடந்தையர்
கண்க னிந்திடு நாடகக் காட்சியும்
பண்க னிந்தவின் றீங்குரற் பாடலும்
விண்க னிந்திட வேவிழை வேய்தினான்

வாவி யும்மது மண்டபச் சோலையுந்
தூவி மஞ்ஞை துதைந்தசெய் குன்றமும்
பாவும் வெண்மண லும்புனற் பட்டமு
மேவு நீர்மைய னாய்விளை யாடினான்

மின்னுஞ் செங்கதிர் மண்டிலம் வெய்தொளி
துன்னுஞ் திங்கட் பனிச்சுடர் தண்ணிது
என்னு மித்துணை யும்மறி யான்களித்
தன்ன னாயின னச்சுவ கண்டனே


அச்சுவக்கண்டனின் அரசியல்

சீறிற் றேந்துணர் வின்றிச் செகுத்திடு
மாறுகண் டென்பதோர் மாற்றம் பொறான்மனந்
தேறின் யாரையும் தேறுஞ் செருக்கொடிவ்
வாறு சென்ற தவற்கர சென்பவே


பூமகள் அச்சுவக்கண்டன் ஆட்சியிலிருந்தகலச் செவ்வி தேர்தல்

தோடு மல்கு சுரும்பணி கோதையர்
கோடி மென்றுகிற் குய்யத் தடம்படித்
தாடித் தன்னணை யாமையிற் பூமகள்
ஊட லுற்றிடம் பார்த்துள ளாயினாள்


சதவிந்து என்பான் அச்சுவகண்டற்கு அரசியலறம் கூறல்

ஆங்கொர் நாளிறை பெற்றறி வின்கடல்
தாங்கி னான்சத விந்துவென் பானுளன்
நீங்க லாப்புக ழான்ற னிமித்திகன்
வீங்கு வெல்கழ லார்கு விளம்பினான் 7.50


அரசர்க்குரிய அறுவகைப் பகைகள்

மன்ன கேள்வளை மேய்திரை மண்டிலந்
தன்னை யாள்பவர்க் கோதின் தங்கணே
பன்னி னாறு பகைக்குல மாமவை
முன்னம் வெல்கவென் றான்முகம் நோக்கினான்

தன்னை வென்றதண் டார்வய வேந்தனைப்
பின்னை வேறல பிறர்க்கரி தாதலான்
மன்ன மற்றவ னாளும் வரைப்பகம்
பொன்னின் மாரி பொழிந்திடு நன்றரோ

மாசி றண்டன்ன தோண்மன்ன மன்னிய
கோசி றண்டத்த னாய்விடிற் கொற்றவ
னேசி றண்டம் பரவவின் வையக
மாசி றண்டத்த னாயினி தாளுமே

பெற்ற தன்முத லாப்பின் பெறாததுஞ்
சுற்றி வந்தடை யும்படி சூழ்ந்துசென்
றுற்ற வான்பொருள் காத்துய ரீகையுங்
கற்ற வன்பிறர் காவல னாகுவான்

அருக்கன் றன்னறி வாக வலர்ந்தநீர்த்
திருக்க வின்றசெல் வச்செழுந் தாமரை
செருக்கெ னப்படுந் திண்பனி வீழுமேல்
முருக்கு மற்றத னைமுகத் தாரினாய்

இகழ்ச்சி யிற்கெடு வார்களை யெண்ணுக
மகிழ்ச்சி யுண்மதி மைந்துறும் போதெனப்
புகழ்ச்சி நூலுட் புகன்றனர் பூவினுட்
டிகழ்ச்சி செல்பொன் மணிமுடி மன்னனே


அரசே! நீ சினந்தாலும் நினக்கு ஓர் உறுதி கூறுவேன் எனல்

நெறியி னீதிக்க னேரிவை யொப்பவு
மறிதி நீயவை நிற்க வழன்று நீ
செறுதி யேனுஞ்செம் பொன்முடி மன்னவோர்
உறுதி யானுரைப் பானுறு கின்றதே


அச்சுவக்கண்டனும் அங்ஙனமாயின் அவ்வுறுதி யாது கூறுதி எனல்

என்ற லும்மிணர் வேய்முடி மாலையா
னன்று சொல்லுக வென்று நகைமணிக்
குன்ற மன்னதிண் டோ ண்மிசைக் குண்டலஞ்
சென்று மின்சொரி யச்செவி தாழ்த்தினான்


நிமித்திகன் கூறல்

பூமி மேற்புரி சைம்மதிற் போதன
நாம நன்னக ராளு நகைமலர்த்
தாம நீண்முடி யான்றன் புதல்வர்கள்
காம வேளனை யாருளர் காண்டியால்


இதுவுமது

ஏந்து தோளவ ருள்ளிளை யானமக்
காய்ந்த தொல்பகை யாகுமென் றேயுறப்
போந்தொர் புன்சொ னிமித்தம் புறப்பட
வேந்த யான்மனத் தின்மெலி கேனரோ 60


அச்சுவக்கண்டன் நிமித்திகன் கூற்றைத் தடுத்தல்

முத்த நிண்முடி யான்மூன்ன மற்றதற்
கொத்த வாறுணர்ந் தீயென வென்செயு
மைத்த கைமனத் தன்மணித் தன்னெனக்
கைத்த லங்கதிர் வீச மறித்தனன்


அச்சுவக்கண்டன் கூறுதல்

மிகையின் வந்தவிச் சாதர வேந்தர்தந்
தொகையை வென்றவென் றோளுள வாப்பிற
பகையி னிப்படர்ந் தென்செயு மென்றன
னகைகொ ணீண்முடி நச்சர வம்மனான்


அச்சுவக்கண்டனின் சினமொழிகள்

மாசி லாலவட் டத்தெழு மாதரும்
வீச விண்டொடு மேருத் துளங்குமோ
பேசின் மானிடப் பேதைக ளாற்றலா
லாசி றோளிவை தாமசை வெய்துமோ


இதுவுமது

வேழத் தின்மருப் புத்தடம் வீறுவ
வாழைத் தண்டினு ளூன்ற மழுங்குமோ
வாழித் தானவர் தானையை யட்டவென்
பாழித் தோள்மனித் தர்க்குப் பணியுமோ

வேக மாருதம் வீசவிண் பாற்சிறு
மேக சாலம் விரிந்தெதிர் செல்லுமோ
வேக மாயவென் சீற்றமஞ் சாதெதி
ராக மானுடர் தாமசை கிற்பவோ

குலிச மிந்திரன் கொண்டு பணிக்கு மேன்
மலையின் மாசிக ரங்களும் வீழ்த்திடு
நிலைய வெஞ்சுட ராழி நினைப்பனேற்
றொலைவில் வானவர் தோளுந் துணிக்குமே

விச்சை மற்றவர் தம்மை விடுப்பதோ
ரிச்சை யென்கணுண் டாமெனின் யாவரே
யச்ச மின்றி நிற் பாரந் நிமித்த நூல்
பொச்ச லாங்கொல் புலந் தெழு நீர்மையாய்

புலவர் சொல்வழி போற்றில னென்பதோ
ரலகிற் புன்சொலுக் கெஞ்சுவ னல்லதே
லுலக மொப்ப வுடன்றெழு மாயினு
மலைவன் மற்றதன் கண்மதிப் பில்லையே

ஆத லாலாதற் கேற்ற தமைச்சர்க
ளோதி யாங்குணர்ந் தீகவென் றொட்டினான்
யாதுந் தன்கணல் லார்செயற் கேன்றதோ
ரேத முண்டெனு மெண்ணமில் லாதவன்


அச்சுவக் கண்டன் அமைச்சர் கூறுதல்

அலங்க லாழியி னானது கூறலுங்
கலங்கு நூற்கரு மத்தொழின் மாக்கடம்
புலங்கொள் சூழ்ச்சிய ராகிப் புகன்றன
ருலங்கொள் தோளவ னுக்குணர் வாயினார்

எரியுந் தீத்திர ளெட்டுணைத் தாயினுங்
கரியச் சுட்டிடுங் காந்திக் கனலுமேற்
றெரியிற் றொல்பகை தான்சிறி தாயினும்
விரியப் பெற்றபின் வென்றிடு கிற்குமே

முட்கொணச்சு மரமுளை யாகவே
யுட்கி நீக்கி னுகிரினுங் கொல்லலாம்
வட்கி நீண்டதற் பின் மழு வுந்தறு
கட்கு டாரமுந் தாங்களை கிற்பவோ

சிறிய வென்றிக ழார்பகை சென்றுசென்
றறிய லாவவன் றாலணி மாமலர்
வெறியும் வேரியும் விம்மி விரிந்துதேன்
செறியுந் தொங்கற்செம் பொன்முடி மன்னனே


அரிமஞ்சு என்னும் அமைச்சன் கூறுதல்

அஞ்சி நின்றவர் கூறிய பின்னரி
மஞ்சு வென்பவன் சொல்லுமற் றாங்கவன்
செஞ்செ வேபகை யாமெனிற் றேர்ந்துகண்
டெஞ்சி றொல்புக ழாய்பின்னை யெண்ணுவாம்


இதுவுமது

பகைய லாதவ ரைப்பகை யாக்கலும்
நகையி றீமனத் தாமரை நண் பெண்ணலு
முகையின் வேய்ந்தமென் மொய்ம்மலர்க் கண்ணியாய்
மிகையின் மற்றவை பின்னை வெதுப்புமே


அரிமஞ்சு கூறும் சூழ்ச்சி

அறியத் தேறுந் திறத்ததெவ் வாறெனிற்
றிறையிற் கென்று விடுதும்விட் டாற்றிறை
முறையிற் றந்து முகமன் மொழிந்தெதிர்
குறையிற் கொற்றவ குற்றமங் கில்லையே


அச்சுவக்கண்டன் மகிழ்ந்து தூதுவிடுதல்

என்ற லும்மிது நன்றென வேந்தொளி
நின்ற நீண்முடி நீடிணர்க் கண்ணியான்
சென்று தூதுவர் தாந்திறை கொள்கென
வென்றி வேலவன் மேல்விடை யேயினான்


அத்தூதர்களின் பண்பு

ஊட்ட ரக்குண்ட கோலரொண் கோலத்த
ரோட்ட ரும்பொறி யொற்றிய வோலையர்
நாட்டி யம்முணர் வாரொரு நால்வர்சேண்
மோட்டெ ழின்முகில் சூழ்நெறி முன்னினார்


வேறு - தூதர் போதன நகரத்தை எய்துதல்

தீதறு தென்மலை மாதிர முன்னுபு
தூதுவர் சூழ்சுடர் சூடிய சூளிகை
யோதின ரோதி யுலப்பற வோங்கிய
போதன மாநகர் புக்கன ரன்றே


அந்நகரச் சிறப்பு

செஞ்சுடர் மின்னொளி சென்று பரந்திட
மஞ்சொடு வைகிய மாமணி மாளிகை
வெஞ்சுடர் வீதி விலக்குவ கண்டுதம்
விஞ்சையர் செல்வம் வெறுத்தன ரன்றே


இதுவுமது

முரி முழாவொலி விம்மி முரன்றெழு
காரி மிழார்கலி யான் மயி லாலுவ
சோரி முழாவிழ விற்றெரு துற்றபின்
சீரி மிழாற்பொலி வெய்தினர் சென்றே

சூளிகை சூடிய சூல விலைத்தலை
மாளிகை மேன்மழை மாமுகில் போழ்தலின்
னீளிய நீரரு வித்திரள் வீழ்வன
காளைக டாதைந கர்ப்பல கண்டார்

கூடுநர் கோவை மணிக்கலை யுக்கவு
மூடினர் சிந்திய வொண்சுடர் மாலையு
மூடிய மூரி நெடுந்தெரு வொப்பவு
மூடு செலற்கரி தாயிட ருற்றார்

மூரிநடைக்களி யானை மதத்தினொ
டேரி னடைக்கலி மாதம் விலாழியு
மோரி நுரைப்ப வுகுத்த பெருங்கடை
வேரி வெறிக்கள மொப்பது கண்டார்


தூதர்கள் அரண்மனையை அடைதல்

வண்டு படக்குவ ளைப்பிணை நக்கலர்
விண்ட மதுப்பரு கிக்களி யின்மதர்
கொண்டு நடைக்களி யன்ன மிரைப்பதொர்
மண்டு புனற்புரி சைப்பதி சார்ந்தார்

கோயின் முகத்தது கோடுயர் சூளிகை
வேயின் முகத்ததின் மாமழை வீழ்வது
ஞாயின் முகத்த நகைத்திரண் முத்தணி
வாயின் முகத்து மடுத்திது சொன்னார்


தூதர்கள் தம் வருகை அறிவிக்கும்படி வாயிலோனுக் குரைத்தல்

வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலி
னோய்தலி லொண்சுட ராழியி னான்றமர்
வாய்தலி னின்றனர் வந்தென மன்னன்முன்
நீதலை சென்றுரை நீள்கடை காப்போய்


பயாபதி தூதர்களை அழைத்துவரப் பணித்தல்

என்றவர் கூற விருங்கடை யானடி
னான்றென நாறொளி நீண்முடி யானடி
மன்ற வணங்கி மொழிந்தனன் மன்னனும்
ஒன்றிய போதக என்ப துரைத்தான்


தூதர் பயாபதிக்கு ஓலை கொடுத்தல்

பொன்னவிர் நீள்கடை காவலன் போதக
வென்னலி னெய்தி யிலங்கொளி நீண்முடி
மன்னவன் வார்கழல் வாழ்த்திமடக்கிய
சொன்னவி லோலைகை தொழுதன ரீந்தார்


அந்த ஓலையைப் படித்தல்

வாசகன் மற்றது வாசினை செய்தபின்
மாசக னீள்முடி மன்னவன் முன்னிவை
தேசக மூசிய வாழியன் சீர்த்தம
ரோசைக ளோலை கொடொப்ப வுரைத்தர்


இதுமுதல் 6 செய்யுள்கள் தூதர்கள் கூறும் செய்தி

ஊடக மோடி யெரிந்தொளி முந்தூறு
மாடக மாயிர கோடியு மல்லது
சூடக முன்கையர் தோடக மெல்லடி
நாடக ராயிர நாரியர் தம்மையும்

தெண்டிரை சிந்திய சங்கொடு செங்கதி
ரெண்டர னம்பவ ழக்கொடி யீட்டமும்
கண்டிரள் முத்தொடு காழகி லந்துகில்
பண்டரு நீரன வும்பல் பண்டமும்


வெண்கதிர் முத்தகில் வேழ மருப்பொடு
கண்கவர் சாமரை வெண்மயி ரின்கணம்
தண்கதிர் வெண்குடை யாய்தரல் வேண்டுமி
தொண்சுட ராழியி னானுரை யென்றார்

வேறு - பயாபதியின் மனநிலை

வேந்தன்மற் றதனைக் கேட்டே வெற்றுவ னெறிந்த கல்லைக்
காந்திய கந்த தாகக் கவுட்கொண்ட களிரு போலச்
சேந்தவ ருரைத்த மாற்றஞ் சிந்தையு ளடக்கி வைத்து
நாந்தகக் கிழவர் கோமா னயந்தெரி மனத்த னானான்

இதுமுதல் 5 செய்யுள்கள் பயாபதியின் சிந்தனை

கருத்துமாண் குலனுந் தேசுங் கல்வியும் வடிவுந் தம்மில்
பொருத்தினாற் பழிக்க லாகாப் புலைமைமிக் குடைய ரேனு
மொருத்தனுக் கொருத்தன் கூறக்கேட்டுற்றுச் செய்து வாழத்
திருத்தினா னிறைவ னேகாண் செய்வினைக் கிழவ னென்பான்

மதியினை மலரச் சூழ்ந்து வருந்தித்தாம் படைக்கப் பட்ட
நிதியினை நுகர்ந்து மென்று நினைத்தினி திருந்த போழ்திற்
பதியினைக் கலக்கிச் சென்று பறித்துத்தாம் பிறர்க்கு நீட்டும்
விதியினை விலக்க மாட்டா மெலிபவால் வெளிய நீரார்

ஓளியினாற் பெரிய னாய வொருவனுக் குவப்பச் செய்தோ
ரளியினால் வாழ்து மென்னும் மவாவினு ளழுந்து கின்றாம்
தெளியநா மிதனைக் கண்டும் செய்வினைத் திறங்க ளோரா
மளிய மோ வளியஞ் சால வறிவினாற் பெரிய மேகாண்

அன்றுநா முயலப் பட்ட வினைகள்மற் றனைய வானா
லின்று நா மவலித் தென்னை யினிச்செய்வ தெண்ணி னல்ல
வென்றியான் விளங்கு மாழி யவர்கட்கு மேலை வேந்த
ரொன்றியாங் குவப்பித் தாண்ட துரைப்பக்கேட் டுணர்ந்தா மன்றே


பயாபதி தூதர்க்கு முகமன் மொழிதல்

என்றுதன் மனத்தி னெண்ணி யிலங்குகோற் கைய ராகி
நின்றகே சரரை நோக்கி நிலமன்ன னனைய சொன்னர்க்
கொன்றியா மிங்க ணுள்ள தொருப்படுத் துய்ப்பக் கொண்டு
சென்றுறு மிறவர்க் கெம்வா யின்னுரை தெரிமி னென்றான்

பயாபதி தன் மக்களறியாதபடி திறைப்பொருள் செலுத்த நினைத்தல்

ஆளிகட் கரச னன்ன வரசர்கோ னதனைக் கூறி
வாளிவிற் றடக்கை வெம்போர் மணிவரை யனைய மார்பிற்
காளைக ளிதனைக் கேட்பிற் கனல்பவா லவரை யின்னே
மீளுமா றமைப்ப னென்று வேண்டுவ விதியி னீந்தான் 7. 100


இதுமுதல் ஐந்து செய்யுள்கள் ஒருதொடர், பயாபதி திறை நல்குதல்

செய்யவாய்ப் பசும்பொ னோலைச் சீறடிப் பரவை யல்கு
லையநுண் மருங்கு நோவ வடிக்கொண்ட குவவுக் கொங்கை
வெய்யவாய்த் தண்ணெ னீலம் விரிந்தென விலங்கி நீண்ட
மையவா மழைக்கட் கூந்தன் மகளிரை வருக வென்றான்

அணிமுழா வனைய தோளா னருளிய தறிந்த போழ்தின்
மணிமுழாச் சிலம்பக் கொண்ட மண்டல வரங்கி னங்கண்
குணிமுழாப் பெயர்த்த பணி குயிற்றுத லிலயங் கொண்ட
கணிமுழ மருங்குற் பாடற் கலிப்பிவை தவிர்த்துச் சென்றார்

மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான்குழா மென்ன வாங்கண்
வெஞ்சுடர் விளங்கு மாடத் திடைநிலை விரவித் தோன்றி
வஞ்சிநன் மருங்கு னோவ மணிநகைக் கலாவ மின்னச்
செஞ்சுடர் சிலம்பு பாடத் தேன்றிசை பரவச் சேர்ந்தார்

மாடெலா மெரிந்து மின்னும் வயிரக்குண் டலத்தோ டம்பொற்
றோடுலாந் துளங்கித் தோன்றுஞ் சுடிகைவாண் முகத்து நல்லார்
பாடலா னரம்பின் தெய்வம் படிவங்கொண் டனைய நீரா
ராடலா லரம்பை யொப்ப ரவரிலா யிரரை யீந்தான்

காய்ந்தொளிர் பவழச் சாதிக் கடிகைகள் காண மின்னுப்
பாய்ந்தெழு சுடர்ச்சங் கீன்ற பருமணித் தரளக்கோவை
யேந்தொழிற் காக துண்ட மருப்பிணை கவரிக் கற்றை
யாய்ந்தொழின் மகரப் பூணா னுவப்பன வனைத்து மீந்தான்


பயாபதி திறை நல்கியதை விசயதிவிட்டர்கள் காண்டல்

அஞ்சுடர் வயிரப் பூணா னருளினான் விடுப்ப வாங்கண்
விஞ்சையர் விமானத் தோற்ற மேலருங் கலங்க ளேற்றிச்
செஞ்சுடர் திலகச் செவ்வாய் மகளிரை விமானஞ் சேர்த்திக்
கஞ்சிகை மறைக்கும் போழ்திற் காளைக ளதனைக் கண்டார்


திவிட்டன் அந்நிகழ்ச்சியை வினாதல்

என்னிது விளைந்த வாறித் தூதுவர் யாவ ரென்று
கன்னவில் வயிரத் திண்டோ ட் கடல்வண்ணன் வினவ யாரும்
சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்கென்று துளங்க வாங்கோர்
கொன்னவில் பூதம் போலுங் குறண்மக னிதனைச் சொன்னான்


குறளன் கூற்று

அறைகழ லரவத் தானை யச்சுவக் கிரீவ னென்பா
னிறைபுக ழாழி தாங்கி நிலமெலாம் பணிய நின்றான்
திறைதர வேண்டும் என்று விடுதரச் செருவந் தானை
யிறைவனு மருளிச் செய்தா னிதுவிங்கு விளைந்த தென்றான்


இதுமுதல் மூன்று செய்யுள் ஒருதொடர் - திவிட்டன் சீற்றம்

வேறு -

திறைக்கட னென்னுமத் தீச்சொற் கேட்டலு
நிறைக்கட னிரம்பிய நெஞ்சத் தீக்கலுண்
முறைகெட முளைப்பதோர் முனிவி஢ னொள்ளெரி
கரைப்படு படையவன் கனல் மூட்டினான்

முடித்தலை முத்துதிர்ந் தாங்கு நெற்றிமேல்
பொடித்தன சிறுவியர்ப் புள்ளி யொள்ளெரி
யடுத்தெழு சுடரகத் துக்க நெய்த்துளி
கடுத்தசெங் கண்ணுநீர்த் திவலை கான்றவே

படத்திடைச் சுடர்மணி தீண்டப் பட்டெரி
கடுத்திடு மரவெனக் கனன்ற நோக்கமோ
டடுத்தெரிந் தழல்நகை நக்கு நக்கிவை
யெடுத்துரை கொடுத்தன னிளிய காளையே


இதுமுதல் 7 செய்யுள் ஒரு தொடர் - திவிட்டன் சினமொழிகள்

உழுதுதங் கடன்கழித் துண்டு வேந்தரை
வழிமொழிந் தின்னணம் வாழு மாந்தர்போ
லெழுதிய திறையிறுத் திருந்து வாழ்வதே
லழகிது பெரிதுநம் மரச வாழ்க்கையே

நாளினுந் திறைநுமக் குவப்பத் தந்துநா
டாளுது மன்றெனி லொழிது மேலெம
தோளினுந் தொடுகழல் வலியி னானுமிவ்
வாளினும் பயனெனை மயரி மாந்தர்காள்

விடமுடை யெரிக்கொடி விலங்கு நோக்குடை
யடைலுடைக் கடுந்தொழி லரவி னாரழற்
படமுடை மணிகொளக் கருதிப் பார்ப்பதோர்
மடமுடை மனத்தனும் மயரி மன்னனே

இருங்கலிப் படையினு மிகலி னாலுமெம்
மருங்கல் மிவைபெற்ற கரிய தாவதோர்
மருங்குள தெனினது மகளி ராற்சில
பெருங்கலத் தாங்கினாற் பெறலு மாகுமே

பாழியான் மெலிந்தவற் திறத்துப் பண்டெலா
மாழியால் வெருட்டி நின் றடர்த்தி போலுமஃ
தேழைகா ளினியொழித் திட்டுச் செவ்வனே
வாழுமா றறிந்துயிர் காத்து வாழ்மினே

அன்றெனிற் றிறைகொளக் கருதி னாங்கொடு
குன்றின்மேற் பெறுவதென் வந்து கொள்கையா
னின்றுத னெஞ்சக நிறைய வீழ்வன
வென்றியாம் பகழியும் விசும்பு மீவனே

இறைவனை மகளிர்போற் கழறி யென்னையெங்
குறையிது கூறுமின் சென்று தூதிர்காள்
திறையினை மறுத்தவர் திறத்துச் செய்வதோர்
முறையுள தெனினது முயன்று கொள்கவே


உட்கவாங் குரைத்தலு மொளிர்பொன் மாழையுங்
கட்கமழ் கோதையர் கணமு மீண்டது
வட்கிநம் மிறைவற்கு வலிது தெவ்வெனத்
துட்கெனு மனத்தினர் தூத ரேகினார்


தூதர்கள் அரிமஞ்சு என்பானிடம் சொல்லுதல்

போகிய தூதர் தங்கோன் பொலங்கழ றெழுத லஞ்சி
யாகிய தறிந்து சூழு மரிமஞ்சு லவனைக் கண்டே
யேகிய புகழி னானைக் கண்டது மீயப் பட்ட
தோகையஞ் சாய லார்தங் குழாங்களு நெதியுஞ் சொல்லி


இதுவுமது

மீட்டிளங் குமரர் கண்டு விடுசுட ரிலங்கு நக்கு
மோட்டிளங் கண்ணி தீய முனித்தழன் முழங்க நோக்கி
யூட்டிலங் குருவக் கோலோர் தங்களுக் குரைத்த வெல்லாம்
தோட்டிலங் குருவத் தொங்க லமைச்சற்குச் சொல்லி யிட்டார்


அரிமஞ்சு தனக்குள் சிந்தித்தல்

அரும்பெற லறிவின் செல்வ னரிமஞ்சு வதனைக்கேட்டே
பெரும்பகை யதனைக் கேட்டாற் பெரியவன் சிறிது நோனா
னிரும்பகை யிதனை யென்கொல் விலக்குமாறென்று தானே
சுரும்பிவர் தொடையன் மார்பன் சூழ்ச்சி கொண் மனத்தனானான்


இதுவுமது

மின்றொடர்ந் திலங்கு பூணான் விளைவுறா விளைமை தன்னா
னன்றுதீ தென்னுந் தேர்ச்சி நவின்றில னாத லால்யா
னொன்ற வோர் மாயங் காட்டி யுளைவித்துக் குறுக வோடிக்
குன்றிடைச் சீயந் தன்மேற் கொளப்புணர்த் திடுவனென்றான்


அரிமஞ்சு அரிகேதுவினை மாயச்சிங்கமாக்கி ஏவுதல்

அன்னண மனத்தி னாலே யிழைத்தரி கேது வென்னு
மின்னணங் குருவப் பைம்பூண் விஞ்சையன் றன்னைக் கூவிக்
கன்னவி றோளி னாற்குக் கருமமீ தென்று காட்டி
மன்னுமோர் மாயச் சீய மாகென வகுத்து விட்டான்


அம்மாயச்சிங்கத்தின் தன்மை

ஒள்ளெரி நெறிப்பட் டன்ன சுரியுளை மலைகண் போழும்
வள்ளுகிர் மதர்வைத் திங்கட் குழவிவா ளெயிற்றுப் பைங்க
ணுள்ளெரி யுமிழ நோக்கி வுருமென வதிரும் பேழ்வாய்க்
கொள்ளரி யுருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான்


அவ்வரிமாவின் செயல்

இலைத்தடஞ் சோலை வேலி யிமவந்த மடைந்து நீண்ட
சிலைத்தடந் தோளி னார்தஞ் சிந்துநா டதனைச் சேர்ந்து
மலைத்தடம் பிளந்து சிந்த மாண்புடை பெயர முந்நீ
ரலைத்துடன் கலங்கி விண்பா லதிரநின் றுரறி யிட்டான்


அப்பொழுது உலகில் ஏற்பட்ட குழப்பம்

பொடித்தலை புலம்பிக் கானம் போழ்ந்துமா நெரிந்து வீழ
வடித்தலை கலங்கி வேழம் பிடிகளோ டலறி யாழப்
புடைத்துழிப் பதடி போலத் துறுகற்கள் புரண்டு பொங்க
விடித்தலின் மனித்த ரெல்லா மெயிறுற விறுகிச் சோர்ந்தார்


அரிமஞ்சு திவிட்டன்பால் தூதுவிடல்

அப்படி யவனை யவ்வா றமைத்தபி னமைச்ச னாங்கண்
மெய்ப்படை தெரிந்து சொன்ன தூதுவ ரவரை மீட்டே
யிப்படி யிவைகள் சொல்லிப் பெயர்மினீ ரென்று வென்றிக்
கைப்படை நவின்ற வெம்போர்க் காளையைக் கனற்ற விட்டான்

ஆங்குத் தூதுவ ரதிர்முகி லாறுசென் றிழிந்து
பூங்கட் டேமொழிப் போதனத் திறைவன்றன் புதல்வர்
வீங்கு பைங்கழல் விடுசுடர் மிடைமணிப் பூணோர்
ஓங்கு தானையோ டுலாப்போந்த விடஞ்சென்றீ துரைத்தார்


தூதர்கள் திவிட்டனுக்கு இயம்புதல்

திரையின் மாற்றமுந் திறையினை விலக்கிய திறமும்
குறையென் றெங்களைக் குமரநீ பணித்ததுங் கூற
வரையும் பைங்கழ லாழியந் தடக்கையெ மரைச
னறையும் குஞ்சியா னன்றுநன் றெனச்சொல்லி நக்கான்


இதுவுமது

தளையின் விண்டுதேன் றயங்கிய தடங்கொடார் மார்ப
விளையை யென்பது மெங்கள்வாய்க் கேட்டபி னிறைவ
னொளியு மாற்றலும் தன்கணொன் றுள்ளது நினையா
னளியின் பிள்ளைதா னுரைத்தவென் றழன்றில னமர்ந்தான்


தூதுவர் திவிட்டனுக்கு அரிமா வுண்மை கூறல்

அறியு மாயிற்ற னரும்பெற னாட்டினை யரிய
வெறியு மின்னுரு மெனவிடித் திறுவரை முழையு
ளுறையுங் கோளரி யொழிக்கலா னமக்குவந் தீயுந்
திறையு மீட்கிய வலித்தவச் செருக்குடைச் சிறியோன் 133


திவிட்டன் வியந்து அயல் நின்றாரை வினாதல்

என்று மற்றது மொழிமின் றுரைத்தெமை விடுத்தா
னென்ற மாற்றமஃ திசைத்தலு மிளையவ னென்னே
சென்ற நாட்டகஞ் சிலம்பதின் றிடித்துயி ரலறக்
கொன்றொர் கோளரி கொடுமுடி யுறைவதோ வென்றான்


அயனின்றோர் அவ்வரிமா உளதெனல்

உனது வாழிநி னொலிபுனற் சிந்துநன் னாட்டிற்
களைதல் யாவர்க்கு மரியது கனமணிக் குன்றி
னுளது கோளரி யுருமென விடித்துயிர் பருகி
அளவி ணீன் முழை யுறைகின்ற தடிகளென் றுரைத்தார்


திவிட்டன் அவ்வரிமாவைக் கொல்வேன் என்று சூளுரைத்தல்

ஆயின் மற்றத னருவரைப் பிலமென வகன்ற
வாயைப் போழ்ந்துட லிருபிளப் பாவகுத் திடுவ
னேயிப் பெற்றியே விளை த்தில னாயினும் வேந்தன்
பேயிற் பேசிய பிள்ளையே யாகென்று பெயர்ந்தான்


இதுவுமது

புழற்கைத் திண்ணுதி மருப்பின் பொருகளி றிவைதா
நிழற்க ணோக்கித்தின் றழன்றன நிலையிடம் புகுக
வழற்க ணாறுப வடுபடை தொடுதலை மடியாத்
தொழிற்க ணாளருந் தவிர்கெனச் சூளுற்று மொழிந்தான்

இவரு மாமணிக் கொடுஞ்சிய விவுளித் தேர் காலாட்
கவரி நெற்றிய புரவிதங் காவிடம் புகுக
வெவரு மென்னொடு வரப்பெறார் தவிர்கென வெழில்சே
ருவரி நீர்வண்ண னுழையவ ரொழியுமா றுரைத்தான்


விசயன் திவிட்டனுடன் செல்ல நினைத்தல்

நகர மாசன மிரைப்பது தவிர்த்தபின் னளிநீர்ப்
பகரு மாகடல் படிவங்கொண் டனையவன் படரச்
சிகர மால்வரை தெளிந்தனன் திருவமார் பினன்பின்
மகர மாகடல் வளைவண்ன னுடன்செல வலித்தான்


இருவரும் அவ்வரிமா வதியும் இடம் எய்துதல்

புழற்கை மால்களிற் றெருத்திடைப் புரோசையிற் பயின்ற
கழற்கொள் சேவடி கருவரை யிடைநெறி கலந்த
வழற்கொள் வெம்பொடி யவைமிசை புதையவவ் வரிமான்
தொழிற்கொண் டாருயிர் செகுக்கின்ற சூழல்சென் றடைந்தார்


அம்மாய அரிமாவின் முழக்கம்

அடைந்த வீரரைக் காண்டலு மழலுளை யரிமா
வுடைந்த போகவோ ரிடியிடித் தெனவுடன் றிடிப்ப
விடிந்து போயின விறுவரைத் துறுகலங் குடனே
பொடிந்து போயின பொரியன நெரிவொடு புரளா


அவ்வரிமாவின் எதிரில் திவிட்டன் போர்க்கோலம் பூண்டு முழங்குதல்

காளி காளொளி முகில்வண்ணன் கழல்களை விசியாத்
தோளின் மேற்செலச் சுடர்விடு கடகங்கள் செறியாச்
சூளி மாமணித் தொடர்கொண்டு சுரிகுஞ்சி பிணியா
ஆளி மொய்ம்பனங் கார்த்தன னுடைத்ததவ் வரியே


அஞ்சி ஓடும் அரிமாவைத் திவிட்டன் தொடர்தல்

எங்குப் போவதென் றுடைநெறி யிறுவரை நெரியப்
பைங்கட் கோளரி யுருவுகொண் டவன்மிசைப் படர்ந்து
வெங்கட் கூற்றமுந் திசைகளும் விசும்பொடு நடுங்கச்
செங்கட் காரொளி நெடியவன் விசையினாற் சிறந்தான்


திவிட்டன் ஓடும் தன்மை

சுழலங் கார்த்தில காள்களு நிலமுறா முடங்கா
அழலுஞ் செஞ்சுடர்க் கடகக்கை யவைபுடை பெயரா
குழலுங் குஞ்சியு மாலையுங் கொளுவிய தொடரு
மெழிலுந் தோளிலு மெருத்திலுங் கிடந்தில வெழுந்தே


இதுவும் அது

மரங்கள் வேரொடுங் கீழ்ந்தென வழிதொடர்ந் தெழுந்த
நிரந்த மான்களும் பறவையும் நிலங்கொண்டு பதைத்த
வரங்கொள் வெம்பர லணிவரைக் கொடுமுடி யவைதா
முரங்கொ டோ ளவன் விரனுதி யுறவுடைந் தொழிந்த


அம்மாய அரிமா குகையிற் புக்கொளிதல்

மூடி யிட்டன முகிற்கண முரன்றிடை நொறுங்காய்க்
கூடி யிட்டன கொடுமுடித் துறுகற்கள் குளிர்ந்தாங்
காடி யிட்டன வனதெய்வ மரியுரு வுடையா
னோடி யிட்டன னொளிவரை முழையகத் தொளிந்தான்


அக்குகையில் உறைந்த மெய் அரிமா இவ்வாரவாரத்தே துயில் நீத்து எழுதல்

உலகத்தின் வீங்கிய வொளிமணிச் சுடரணி திணிதோ
ணலத்தின் வீங்கிய நளிர்புக ழிளையவன் விரையின்
நிலத்தின் கம்பமு நெடுவரை யதிர்ச்சியு மெழுவப்
பிலத்தின் வாழரி யரசுதன் றுயில்பெயர்ந் ததுவே


திவிட்டன் முழக்கம்

ஏங்கு வாழிய விருள்கெழு முழையகத் தொளித்தா
யோங்கு மால்வரை பிளந்திடு கெனவுளைந் துரவோ
னாங்க மாமுழை முகத்துல கதிரநின் றார்த்தான்
வீங்கு வாய்திறந் தொலித்தது விலங்கலிற் சிலம்பே


அக்குகைவாழ் அரிமாவின் முழக்கம்

அதிர வார்த்தலு மழன்றுத னெயிற்றிடை யலர்ந்த
கதிருங் கண்களிற் கனலெனச் சுடர்களுங் கனல
முதிர்வில் கோளரி முனிந்தெதிர் முழங்கலி னெரிந்து
பிதிர்வு சென்றது பெருவரை பிளந்ததப் பிலமே

எரிந்த கண்ணிணை யிறுவரை முழைநின்ற வனைத்தும்
விரிந்த வாயொடு பணைத்தன வெளியுகிர் பரூஉத்தாள்
சுரிந்த கேசரஞ் சுடரணி வளையெயிற் றொளியா
விரிந்த தாயிடை யிருணிண்றங் கெழுந்ததவ் வரியே


அவ்வரிமா வெளிப்படுதல்

தாரித் திட்டதன் றறுகண்மைக் குணங்களி னுலகை
வாரித் தீட்டிவண் வந்ததோ ரரியென மதியாப்
பூரித் திட்டதன் பெருவலி யொடுபுக ழரிமாப்
பாரித் திட்டது பனிவிசும் புடையவர் பனித்தார்


திவிட்டன் அவ்வரிமாவைப் பிளந்து கொல்லுதல்

அளைந்து மார்பினு ளிழிதரு குருதியைக் குடிப்பா
னுளைந்து கோளரி யெழுதலு முளைமிசை மிதியா
வளைந்த வாளெயிற் றிடைவலித் தடக்கையிற் பிடித்தான்
பிளந்து போழ்களாய்க் கிடந்ததப் பெருவலி யரியே


அமரர்களின் வியப்பு

சீய மாயிரஞ் செகுத்திடுந் திறலது வயமா
வாய வாயிர மாயிர மடுதிற லரிமா
ஏயெ னாமுனிங் கழித்தன னிவனெனத் தத்தம்
வாயின் மேல்விரல் வைத்துநின் றமரர்கண் மருண்டார்

அழிந்த கோளரிக் குருதிய தடுங்கடங் களிற்றோ
டொழிந்த வெண்மருப் புடைந்தவு மொளிமுத்த மணியும்
பொழிந்து கல்லறைப் பொலிவது குலிகச்சே றலம்பி
யிழிந்த கங்கையி னருவியொத் திழிந்தவவ் விடத்தே


திவிட்டனின் சால்புடைமை

யாது மற்றதற் குவந்திலன் வியந்தில னிகலோ
னோத நித்திலம் புரிவளை யொளியவற் குறுகி
யேத மற்றிது கடிந்தன னின்னினி யடிகள்
போதும் போதன புரத்துக்கென் றுரைத்தனன் புகழோன்

தம்பி யாற்றல்கண் டுவந்துதன் மனந்தளிர்த் தொளியால்
வம்பு கொண்டவன் போனின்று வளைவண்ணன் மொழிந்தா
னம்பி நாமினி நளிவரைத் தாழ்வார்கண் டல்லா
லிம்பர் போம்படித் தன்றுசெங் குருதிய திழிவே


இதுமுதல் 10 செய்யுள்கள் ஒருதொடர் -திவிட்டநம்பிக்கு விசயன் குறிஞ்சிநில வனப்பினை எடுத்துக் கூறல்

ஆங்கண் மால்வரை யழகுகண் டரைசர்கள் பரவும்
வீங்கு பைங்கழ லிளையவன் வியந்துகண் மலரச்
வீங்கி மாண்பின வினையன விவையென வினிதின்
வாங்கு நீரணி வளை வண்ண னுரைக்கிய வலித்தான் 154

புள்ளுங் கொல்லென வொலிசெயும் பொழில்புடை யுடைய
கள்ளி னுண்டுளி கலந்துகா லசைத்தொறுங் கமழு
வுள்ளுந் தாதுகொண் டூதுவண் டறாதன வொளிசேர்
வெள்ளென் றோன்றுவ கயமல்ல பளிக்கறை விறலோய்

காளை வண்ணத்த களிவண்டு கதிவிய துகளாற்
றாளை மூசிய தாமரைத் தடம்பல வவற்று
ளாளி மொய்ம்பவங் ககலிலை யலரொடுங் கிழிய
வாளை பாய்வன கயமல்ல வனத்திடர் மறவோய்

மன்னு வார்துளித் திவலைய மலைமருங் கிருண்டு
துன்னு மாந்தர்கள் பனிப்புறத் துணைமையோ டதிர்வ
இன்ன வாம்பல வுருவுக ளிவற்றினு ளிடையே
மின்னு வார்ந்தன முகிலல்ல களிறுகள் விறலோய்

உவரி மாக்கட் னுரையென வொளிர்தரு மயிர
அவரை வார்புனத் தருந்திமே யருவிநீர் பருகி
இவரு மால்வரை யிளமழை தவழ்ந்தென விவையே
கவரி மாப்புடை பெயர்வன கடல்வண்ண காணாய்


வேறு -

துள்ளிய ரும்புனற் றுளங்குபா றைக்கலத்
துள்ளுரா விக்கிடந் தொளிருமொண் கேழ்மணி
நள்ளிரா வின்றலை நகுபவா னத்திடைப்
பிள்ளைநா ளம்பிறை பிழற்தல்போ லுங்களே

வழையும்வா ழைத்தடங் காடுமூ டிப்புடங்
கழையும்வே யுங்கலந் திருண்டு காண் டற்கரு
முழையுமூ ரிம்மணிக் கல்லுமெல் லாநின
திழையினம் பொன்னொளி யெரிப்பத்தோன் றுங்களே

பருவமோ வாமுகிற் படல மூடிக்கிடந்
திரவுண்டே னைப்பக லில்லையொல் லென்றிழித்
தருவி யோ வாபுரண் டசும்புபற் றித்தட
வரையின்றாழ் வார்நிலம் வழங்கலா கார்களே

சூரலப் பித்தொடர்ந் தடர்துளங் கும்மரில்
வேரலோ டும்மிடைந் திருண்டுவிண் டுவ்விடார்
ஊரலோ வாதனன் றுயிரையுண் டிடுதலால்
சாரலா காதன சாதிசா லப்பல

பரியபா றைத்திரள் படர்ந்தபோ லக்கிடந்
திரியவே ழங்களை விழுங்கியெங் குந்தமக்
குரியதா னம்பெறா வுறங்கியூ றுங்கொளாப்
பெரியபாம் பும்முள பிலங்கொள்பேழ் வாயவே

அவைகள்கண் டாய்சில வரவமா லிப்பன
உவைகள்கண் டாய்சில வுளியமொல் லென்பன
இவைகள்கண் டய்சில வேழவீட் டம்பல
நவைகள்கண் டாயின நம்மலா தார்க்கெலாம்

குழல்கொடும் பிக்கணங் கூடியா டநகும்
எழில்கொடா ரோய்விரைந் தியங்கலிங் குள்ளநின்
கடில்களார்க் குங்களே கலங்கிமே கக்குழாம்
பொழில்கள்வெள்ள ளத்திடைப் புரளநூ றுங்களே

ஆக்கலா காவசும் பிருந்துகண் ணிற்கொரு
நீக்கநீங் காநிலம் போலத்தோன் றிப்புகிற்
காக்கலா காகளி றாழவா ழும்புறந்
தூக்கந்தூங் குந்தொளி தொடர்ந்துபொன் றுங்களே

இதுவித்தாழ் வார்நிலத் தியற்கைமே லாற்பல
மதியம்பா ரித்தன மணிக்கற் பாறையின்மிசை
நிதியம்பா ரித்தொளி நிழன்று துஞ் சன்னிலைக்
கதியின் வாழ் வாரையுங் கண்கள்வாங் குங்களே


வேறு

இருது வேற்றுமை யின்மையாற்
சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடங் கையினாய்

தொல்லுறு சுடர்போலுஞ் சூழொளி மணிப்பாறை
கல்லறை யவைகோங்கின் கடிமலர் கலந்துராய்
மல்லுறு வரைமார்ப வளரொளி யின்முளைக்கு
மெல்லுறு சுடர்வானத் தெழிலவா யினியவ்வே

திரைத்த சாலிகை
நிரைத்த போனிரந்
திரைப்ப தேன்களே
விரைகொண் மாலையாய்

வரைவாய் நிவத்த வடுமா வடுமா
விரைவாய் நிவந்து விரியா விரியா
புரைவா யசும்பு புலரா புலரா
இரவா யிருள்செ யிடமே யிடமே

இளையா ரிளையா ருடனாய் முலையின்
வளையார் வளையார் மனம்வேண் டுருவம்
விளையா விளையாட் டயருந் தொழிறான்
றளையார் தளையார் பொழிலின் றடமே

அளியாடு மமரங்க ளமரங்கள் மகிழ்ந்தானா
விளையாடும் விதமலர்ந்த விதமலர்ந்த மணிதூவும்
வளையார்கண் மகிழ்பவான் மகிழ்பவான் மலர்சோர்வ
இளையாரை யினையவே யினையவே யிடமெல்லாம்

தமரைத் திடத்திடை மலர்ந்த சாரல்வாய்த்
தாமரைத் துளையொடு மறலித் தாவில்சீர்த்
தாமரைத் தகுகுணச் செல்வன் சண்பகம்
தாமரைத் தடித்தலர் ததைந்து தோன்றுமே

நாகஞ் சந்தனத் தழைகொண்டு நளிர்வண்டு கடிவ
நாகஞ் சந்தனப் பொதும்பிடை நளிர்ந்துதா துமிழ்வ
நாகஞ் செஞ்சுடர் நகுமணி யுமிழ்ந்திருள் கடிவ
நாக மற்றிது நாகர்தம் முலகினை நகுமே

நகுமலரன நறவம் மவைசொரி வனநறவம்
தொகுமலரன துருக்கம் மவைதரு வனதுருக்கம்
மகமலரன வசோகம் மவைதருவ வசோகம்
பகுமலரன பாங்கர் பலமலையன பாங்கர்

அணங்கமர் வனகோட லரிதவை பிறர்கோடல்
வணங்கிளர் வனதோன்றி வகைசுடர் வனதோன்றி
இணங்கிணர் வனவிஞ்சி யெரிபொன் புடையிஞ்சி
மணங்கமழ் வனமருதம் வரையயல் வனமருதம்

சாந்துந் தண்டழை யுஞ்சுர மங்கையர்க்
கேந்தி நின்றன விம்மலை யாரமே
வாய்ந்த பூம்புடை யும்மலர்க் கண்ணியு
மீந்த சாகைய விம்மலை யாரமே

இயங்கு கின்னர ரின்புறு நீரவே
தயங்கு கின்றன தானமந் தாரமே
பயங்கொள் வார்பயங் கொள்பவ வனைத்தையும்
தயங்கு கின்றன தானமந் தாரமே


வேறு

பொன்விரிந் தனைய பூங் கோங்கும் வேங்கையு
முன்விரிந் துக்கன மொய்த்த கற்றல
மின்விரிந் திடையிடை விளங்கி யிந்திரன்
வின்முரிந் திருண்முகில் வீழ்ந்த போலுமே 180

நிழற்பொதி நீலமா மணிக்க லந்திரள்
பொழிற்பொதி யவிழ்ந்தபூப் புதைந்து தோன்றுவ
தழற்பொதிந் தெனத்துகி றரித்த காஞ்சியர்
குழற்பொதி துறுமலர்க் கொண்டை போலுமே

மேவுவெஞ் சுடரொளி விளங்கு கற்றலம்
தாவில்பூந் துகளொடு ததைந்து தோன்றுவ
பூவுக விளையவர் திளைத்த பொங்கணைப்
பாவுசெந் துகிலுடைப் பள்ளி போலுமே


வேறு

அழலணி யசோகஞ் செந்தா தணிந்துதே னரற்ற நின்று
நிழலணி மணிக்கன் னீல நிறத்தொடு நிமிர்ந்த தோற்றம்
குழலணி குஞ்சி மைந்தர் குங்குமக் குழம்பு பூசி
எழிலணி திகழ நின்றா லெனையநீ ரனைய தொன்றே

இணைந்துதேன் முழங்க விண்ட வேழிலம் பாலை வெண்பூ
மணந்துதா தணிந்து தோன்று மரகத மணிக்கற் பாறை
கணங்கெழு களிவண் டாலப் பாசடை கலந்த பொய்கை
தணந்தொளி விடாத வெண்டாமரை ததைந் தனையதொன்றே

காரிருட் குவளிக் கண்ணிக் கதிர்நகைக் கனபொற் றோட்டுக்
கூரிருள் சுரிபட் டன்ன குழலணி கொடிறுண் கூந்தல்
பேரிருள் கிழியத் தோன்றும் பிறையெயிற் றமர நோக்கிற்
சூரர மகளிர் வாழு மிடமிவை சுடர்ப வெல்லாம்

வாரிரு புடையும் வீக்கி வடஞ்சுமந் தெழுந்து வேங்கை
யேரிருஞ் சுணங்கு சிந்தி யெழுகின்ற விளமென் கொங்கைக்
காரிருங் குழலங் கொண்டைக் கதிர்நகைக் கனகப் பைம்பூண்
நீரர மகளிர் கண்டாய் நிறைபுனற் றடத்து வாழ்வார்

மேகமேற் றவழ்ந்து வேய்கண் மிடைத்துகீ ழிருண்ட தாழ்வர்
ஏகமா மலையி னெற்றி யிருஞ்சுனைத் தடங்க ளெல்லாம்
நாகமா மகளி ரென்னு நங்கையர் குடையப் பொங்கி
மாகமேற் றரங்கஞ் சிந்தி மணியறை கழுவு மன்றே

ஆவிவீற் றிருந்த காத லவரொடு கவரி வேய்ந்து
நாவின்வீற் றிருந்த நாறு நளிர்வரைச் சிலம்பின் மேயார்
காவிவீற் றிருந்த கண்ணார் கந்தர்வ மகளிர் கண்டாய்
பாவிவீற் றிருந்த பண்ணி னமுதினாற் படைக்கப் பட்டார்

அலங்கிண ரணிந்த விஞ்சை யரிவைய ரிடங்கள் கண்டாய்
விலங் கலின் விளங்கு கின்ற வெள்ளிவெண் கபாடமாடம்
இலங்கொளி மகரப் பைம்பூ ணியக்கிய ரிடங்கள் கண்டாய்
நலங்கிளர் பசும்பொற் கோயி னகுகின்ற நகர மெல்லாம்

போய்நிழற் றுளும்பு மேனிப் புணர்முலை யமிர்த னாரோ
டாய்நிழற் றுளும்பு வானோ ரசதியா டிடங்கள் கண்டாய்
சேய்நிழற் றிகழுஞ் செம்பொற் றிலதவே திகைய வாய
பாய்நிழற் பவழச் செங்காற் பளிக்கு மண் டபங்க ளெல்லாம்

எழின்மணிச் சுடர்கொண் மேனி யிமையவ ரிடங்கள் கண்டாய்
முழுமணிப் புரிசை வேலி முத்தமண் டபத்த வாய
கழுமணிக் கபாட வாயிற் கதிர்நகைக் கனக ஞாயிற்
செழுமணிச் சிகர கோடிச் சித்திர கூட மெல்லாம்

தும்பிவாய் துளைக்கப் பட்ட கீசகம் வாயுத் தன்னால்
வம்பவாங் குழலி னேங்க மணியரை யரங்க மாக
உம்பர்வான் மேக சால மொலிமுழாக் கருவி யாக
நம்பதேன் பாட மஞ்ஞை நாடக நவில்வ காணாய்

பொன்னவிர் மகரப் பைம்பூட் பொலங்குழை யிலங்கு சோதிக்
கன்னவில் வயிரத் திண்டோ ட் கடல்வண்ண னுவப்பக் காட்டி
மன்னவின் றிறைஞ்சுஞ் செய்கை வளைவண்ணன் மலையின் மேலால்
இன்னன பகர்ந்து சொல்லு மெல்லையு ணீங்க லுற்றார்


பாசிலைப் பாரி சாதம் பரந்துபூ நிரந்த பாங்கர்
மூசின மணிவண் டார்க்கு முருகறா மூரிக் குன்றம்
காய்சின வேலி னான்றன் கண்களி கொள்ளக் காட்டி
யோசனை யெல்லை சார்ந்து பின்னையிஃ துரைக்க லுற்றான்

வலிகற்ற மதர்வைப் பைங்கண் வாளொயிற் றரங்கச் சீயங்
கலிகற்ற களிறுண் பேழ்வாய்க் கலிங்கினா னிழிந்து போந்து
குலிகச்சே றலம்பிக் குன்றங் கொப்புளித் திட்ட தொப்ப
ஒலிகற்ற வுதிர நீத்த மொழுகுவ தின்ன நோக்காய்


இதுமுதல் 6 செய்யுட்கள் ஒரு தொடர் விசயன் திவிட்டனின் ஆற்றலை வியந்து பாராட்டுதல்

வெம்பவேங் குயிரை யெல்லாம் விழுங்கிய வெகுண்டு நோக்கிச்
கம்பமா வுலகந் தன்னைக் கண்டிடுங் களிகொள் சீயம்
நம்பநீ யழித்த தல்லா னகையெயிற் றதனை நண்ணல்
வம்பறா மகரப் பைம்பூண் வானவர் தமக்கு மாமோ

ஆங்குநீ முனிந்த போழ்தி னரிது வகல நோக்கி
வாங்குநீர் வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றே
னோங்குநீண் மலையின் றாழ்வா ரொலிபுன லுதிர யாறு
வீங்கிவந் திழிந்த போழ்து மெய்யென வியப்புச் சென்றேன்

குன்றிற்கு மருங்கு வாழுங் குழூஉக்களிற் றினங்க ளெல்லா
மன்றைக்கன் றலறக் கொன்றுண் டகலிடம் பிளப்பச் சீறி
வென்றிக்கண் விருப்பு நீங்கா வெங்கண்மா விதனைக் கொன்றா
யின்றைக்கொண் டுலக மெல்லா மினிதுகண் படுக்கு மன்றே


அரசரின் முதற் கடமை

உரைசெய்நீ ளுலகின் வாழு முயிர்களுக் குறுகண் கண்டால்
வரைசெய்தோண் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார்
திரைசெய்நீ ருலகங் காக்குஞ் செய்கை மேற் படைக்கப் பட்ட
அரசர்தம் புதல்வர்க் கையா வறம்பிறி ததனி லுண்டோ


யாக்கையால் எய்தும் பயன்

கற்றவர் கடவுட் டானஞ் சேர்ந்தவர் களைக ணில்லா
ரற்றவ ரந்த ணாள ரன்றியு மனைய நீரார்க்
குற்றதோ ரிடுக்கண் வந்தா லுதவுதற் குரித்தன் றாயில்
பெற்றவிவ் வுடம்பு தன்னாற் பெறுபய னில்லை மன்னா


இறவாது நிற்போர் இவர் எனல்

மன்னுயிர் வருத்தங் கண்டும் வாழ்வதே வலிக்கு மாயி
லன்னவ னாண்மை யாவ தலிபெற்ற வழகு போலா
மென்னையான் கொடுத்தும் வையத் திடுக்கணோய் கெடுப்ப னென்னும்
நின்னையே போலு நீரார் நிலமிசை நிலவி நின்றார்


ஒருவனுடைய இருவேறு யாக்கைகள்

ஒருவன திரண்டி யாக்கை யூன்பயி னரம்பின் யாத்த
உருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்து
மருவிய வுருவ மிங்கே மறைந்துபோ மற்ற யாக்கை
திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் னிற்கு மன்றே


வேறு - விசய திவிட்டர்கள் குறிஞ்சி நிலங்கடந்து பாலைநிலம் எய்துதல்


என்று தங்கதை யோடிரு நீண்முகிற்
குன்று சூழ்ந்த குழுமலர்க் கானகம்
சென்றொர் வெங்கடஞ் சேர்ந்தன ருச்சிமே
னின்று வெய்யவ னுநிலங் காய்த்தினான்


இதுமுதல் 8 செய்யுட்கள் ஒருதொடர்
விசயன் பாலைநிலத்தின் தன்மையை எடுத்தியம்பல்

ஆங்கவ் வெங்கடஞ் சேர்ந்த பினையகா
ணீங்கிவ் வெங்கடுங் கானகத் தீடென
ஏங்கு நீர்ககடல் வண்ணனுக் கின்னணம்
வீங்கு வெண்டிரை வண்ணன் விளம்பினான்

முழையு டைந்தழல் காலு முரம்பயற்
கழையு டைந்துகு கண்கவர் நித்திலம்
மழையு டைந்துகு நீரென வாய்மடுத்
துழையு டைந்துகு கின்றன வூங்கெலாம்

மிக்க நீள்கழை மேல்விளை வுற்றழ
லொக்க வோடி யுறைத்தலி னான்மிசை
உக்க நெற்பொரி யுற்றொரு சாரெலாம்
தொக்க கற்றல மேற்றுடிக் கின்றவே

ஏங்கு செங்கதி ரோனெ றிப்பநிழல்
வேங்கொ லென்றொளித் திட்டிபம் வீழ்ந்துசேர்
பாங்க லார்மனை போலப் பறைந்தரோ
ஓங்கி நின்றுல வுற்றன வோமையே

அற்ற நீரழு வத்திடை நெல்லியின்
வற்ற லஞ்சினை யூடு வலித்தரோ
மற்ற வெவ்வெயி லுந்நிழல் வாயழ
லுற்று வீழ்ந்தது போன்றுள வாங்கெலாம்

பைத்த லைப்பட நாக மழன்றுதம்
பொய்த்த ளைத்தலை போதரக் கார்செய்வான்
கைத்த லம்முகிற் கின்றன காந்தளென்
றத்த லைச்சிலை மானயர் வெய்துமே

விசையி னோடு வெண் டேர்செலக் கண்டுநீர்
தசையி னோடிய நவ்வி யிருங்குழா
மிசையில் கீழ்மகன் கண்ணிரந் தெய்திய
வசையின் மேன்மகன் போல வருந்துமே


துடியர் தொண்டகப் பாணியர் வாளியர்
கொடிய செய்துமு னைப்புலங் கூட்டுணுங்
கடிய நீர்மையர் கானகங் காக்குநி
னடிய ரல்லதல் லாரவ ணில்லையே


வேறு- விசய திவிட்டர்கள் பாலை கடந்து நாட்டின்கண் ஏகுதல்

அங்கவெங்க டங்கடந்த லங்குதாரி லங்குபூண்
சிங்கம் வென்ற செங்கண்மாலொ டம்பொன்மாலை வெண்கடாத்
திங்கள் வண்ணன் வெங்கண்யானை வேந்துசேர்ந்த நாடுசார்ந்
திங்கணின்ன இன்னகாணெ னப்புகழ்ந்தி யம்பினான்


முல்லை நிலத்தின் மாண்பு

மாலும்வாரி திங்கண்மூன்றும் வந்தறாத மாண்பினா
லாலுமாவ றானைநம்ம டிகளாளு நாட்டகம்
காலமாண்பி னன்றியுங் கார்கவின்ற நீரவே
போலுமாண்பி னேர்கலந்து பொங்குநீர புறணியே

கொண்டல்வாடை யென்னுங் கூத்தன் யாத்தகூத்தின் மாட்சியால்
விண்டமா மலர்ப்பொதும்ப ரங்கமா விரும்புநீர்
வண்டுபாட வல்லியென்னு மாதராடு நாடகங்
கண்டுகொன்றை பொன்சொரிந்த காந்தள்கை மறித்தவே

கைமலர்த்த காந்தளுங் கரியநீர்க் கருவிளை
மைம்மலர்த் தடங்கணேர் வகுத்தலர்ந்த வட்டமு
மொய்மலர்ப் பொதும்பின்மேன் முறுவலித்த முல்லையும்
கொய்மலர்க் குழற்றிரட்சி கொண்டு காய்த்த கொறையும்

தொண்டைவாய் நிறங்கொளக் கனிந்துதூங்கு கின்றவும்
வண்டுபாய வார்கொடி மருங்குலாய் வளர்ந்தவுங்
கண்டபாலெ லாங்கலந்து கண்கவற்று மாதலால்
விண்டுமாலை மாதராரின் மேவுநீர கானமே

தண்ணிலாவி ரிந்தமுல்லை தாதுசேர் தளிர்மிடைந்
தெண்ணிலாய சாயலம் மிடாமணற் பிறங்கன்மேற்
பண்ணிலாய வண்டுபாடு பாங்கரோடு பாங்கணிந்து
வெண்ணிலா விரிந்தவெல்லை போலுமிங்கொர் பாலெலாம்

தேனவாவி மூசுகின்ற தேம்பிறழ்பூ தாங்கலந்து
கானநாவல் கொம்பினிற் கனிந்துகா லசைந்தவற்
றேனைமாடு வண்டிருந் திருண்டகான மிங்கிதற்
கூனமா யிருட்பிழம் புறங்குகின்ற தொக்குமே

வாயிதழ் திறங்கொளக் கனிந்த தொண்டை வந்தொசிந்து
தூயிதழ்த் துணர்துதைந்து தோன்றுகின்ற தோன்றியின்
பாயிதழ்ப் பரப்பின்மே லரத்தகோப மூர்ந்தயற்
சேயிதழ்ப் பொலிந்தகாடு செக்கர்வான மொக்குமே

ஆடிணர்க் கொடிப்பட ரகிற்பொழுதும் பயற்பொலிந்த
கூடிணர்க் குழாநிலைக் கொழுமலர்க் குமிழ்மிசைக்
கோடிணர்க் குலைக்கொசிந்த கொன்றைவிண்ட தாதுசோர்ந்
தோடிணர்ச் சுடர்ப்பொனுக்க கானமொக்கு மூங்கெலாம்

பார்மகிழ்ந்த பைஞ்சுருட் பயிர்மிசைப் பயின்றெழுந்
தேர்கலந்து பாசிலைப் பரப்பினூ டிரைத்தரோ
கார்மகிழ்ந்த கார்மயிற் கலாபமொய்த்த கானக
நீர்மகிழ்ந்த நீர்க்கட னிரந்ததொக்கு நீரதே

ஏறுகொண்ட கோவல ரேந்து தன்ன வக்குரன்
மாறுகொண்ட கோடியர் மணிமுழா முழங்கலிற்
றாறுகொண்ட தோகைமஞ்ஞை யாடல்கண்டு கண்மகிழ்ந்து
சாறுகொண்டு மான்கணத் தயங்குநீர சாரெலாம்

கார்மணந்த கானயாறு கல்லலைத் திழிந்தொலிக்கு
நீர்மணந்த நீள்கரை நிரைத்தெழுந்த நாணல்சூழ்
வார்மணற் பிறங்கன்மாலை வல்லிவிண்ட தாதணிந்து
தார்மணந்த வாரமார்ப யாகசாலை போலுமே

கரவைகன்று வாய்மிகுந்த வமிழ்தினோடு கண்ணகன்
புறவின்மாம ரைம்முலைப் பொழிந்தபா றெகிழ்ந்தெழப்
பறவையுண்டு பாடவும் பால்பரந்த பூமியி
னறவுவிண்ட நாகுமுல்லை வாய்திறந்து நக்கவே


விசய திவிட்டர்கள் முல்லைநிலங்கடந்து மருதனிலம் எய்துதல்

வேரல்வேலி மால்வரைக் கவானின் வேய் விலங்கலிற்
சாரன்மேக நீர்முதிர்ந்து தண்டளந்து ளித்தலால்
மூரல்வா யசும்பறாத முல்லைவிள்ளு மெல்லைபோய்
நீரவாளை பூவின்வைகு நீள்பரப்பு நண்ணினார்


விசயன் மருதநிலத்தின் மாண்புரைத்தல்

புதுநாண் மலர்விண் டுபொழிந்த திழியு
மதுநா றுபுனன் மருதத் தினைமற்
றிதுகா ணெனவின் னனசொல் லினனே
விதுமாண் மிகுசோ திவிளங் கொளியான்

அயலோ தமிரட் டவலம் பொலிநீர்
வயலோ தமயங் கமயங் கவதிர்ந்
தியலோ தையிளஞ் சிறையன் னமெழக்
கயலோ டியொளிப் பனகாண் கழலோய்

வளவா சநிலப் பலவின் சுளையு
மிளவா ழையினின் னெழிலங் கனியும்
களமாங் கனியின் றிரளுங் கலவிக்
குளமா யினயோ சனை கொண் டனவே

வனமா வினிருங் கனியுண் டுமதர்த்
தினவா ளையிரைத் தெழுகின் றனகாண்
கனவா ழைமடற் கடுவன் மறையப்
புனவா னரமந் திபுலம் புவகாண்

வளமா நிலையே திமருப் பினிட
விளவா ழைநுதிக் கமழ்தே னொழுகிக்
குளமார் குளிர்தா மரைக்கொண் டநகைத்
தளவா யுகுகின் றனகாண் டகவோய்

இவைசெந் நெலிடை கருநீ லவன
மவையந் நெலிடை கழுநீ ரழுவ
முவையொண் டுறைவிண் டொளிவிம் முநகு
நகைவென் றனதா மரைநாண் மலரே

கழையா டுகரும் பினறைக் கடிகைப்
பொழிசா றடுவெம் புகைபொங் கியயற்
றழையோ டுயர்சோ லைகடாம் விரவி
மழையோ டுமலைத் தடமொத் துளவே


இதுமுதல் 5 செய்யுள் ஒரு தொடர்

மருத நிலத்தை ஒரு மகளாக உருவகித்தல்

கருநீ லமணிந் தகதுப் பினயற்
கருநீ லமணிந் தனகண் ணிணைகள்
கருநீ லமணிக் கதிர்கட் டியெனக்
கருநீ லமணிந் தகருங் குழலே

வளர்செங் கிடையி னெழில்வைத் தநுதல்
வளர்செங் கிடையி னொளிவவ் வியவாய்
வளர்செங் கிடையின் வளையா டும்வயல்
வளர்செங் கிடைமா மலர்மல் குசிகை

வயலாம் பனெறித் தவகைத் தழையன்
வயலாம் பன்மிலைத் தவடிச் சவியன்
வயலாம் பன்மலிந் தபரப் புடையன்
வயலாம் பன்மலர்த் தொகைமா லையினாள்

வளர்தா மரையல் லிமலர்த் தியகை
வளர்தா மரையல் லிமயக் குமொளி
வளர்தா மரையல் லிமகிழ்ந் தனள்போல்
வளர்தா மரையல் லிவனத் திடையாள்

நளிர்வார் கழலாய் புகழ்நா டிநயந்
தொளிர்வார் குழலா ளொருமா தவளு
ளுளர்வார் கனியும் மதுவுந் தெகிழத்
கிளர்பார் வையுறக் கிளர்கின் றதுகேள்

மதிகா ணநிமர்ந் தமதிற் சிகர
நுதிமா ளிகைமேல நுடங் குகொடி
கதிரோ ணொளிமாழ் கவெழுந் துகலந்
ததுகா ணமதா ரொளிமா நகரே

அறவே தியரா குதியம் புகையார்
உறவே திகைவிம் மியவொண் புறவ
நிறவே திகைமீ துநிமிர்ந் தபொழிற்
புரவே திகையே றுவகாண் புகழோய்


விசய திவிட்டர் போதனமாநகர் புகுதல்

இன்னன விளையவற் கியம்பு மெல்லையுட்
பொன்னக ரடைந்தனர் பொழுதுஞ் சென்றது
நன்னக ரிரைத்தது நரன்ற வின்னிய
மன்னவ குமரரும் வறுமை நீங்கினார்

இளங்களிக் குஞ்சர மிரட்டித் தாயிரம்
துளங்கொளிக் கலினமாத் தூளி யெல்லைய
வளங்கெழு குமரரை வலங்கொண் டெய்தின
அளந்தறிந் திலமகன் படையி னெல்லையே

துன்னிய துணரிளந் தோன்றி மென்கொடி
மன்னிய வனத்திடை மலர்ந்து நீண்டபோற்
கன்னியர் கைவிளக் கேந்தக் காவலன்
பொன்னியல் வளநகர் பொலியத் தோன்றினார்


காவியங் கருங்கணார் கமழ வூட்டிய
வாவியங் கொழும்புகை தழுவி யாய்மலர்க்
கோவையங் குழுநிலை மாடம் யாவையும்
பாவிய பனிவரைப் படிவங் கொண்டவே

மல்லிகை மனங்கமழ் மதுபெய் மாலையு
முல்லையம் பிணையலு மொய்த்த பூண்கடை
எல்லியங் கிளம்பிறைக் கதிர்கள் வீழ்ந்தன
தொல்லையங் கடிநகர் துயில்வ போன்றவே


பயாபதி மக்களைத் தன்பால் அழைத்தல்

செம்பொன்மா மணிநகர்ச் செல்வ வீதியுட்
கொம்பனா ரடிதொழக் கோயி லெய்தலு
நம்பிமார் வருகென நாறு நீரொளி
அம்பொன்மா மணிமுடி யரச னேயினான்


விசய திவிட்டர்கள் தந்தையை வணங்குதல்

அருளுவ தென்கொலென் றஞ்சி செஞ்சுடர்
இருளுக வெழுந்ததொத் திருந்த கோனடிச்
சுருளுறு குஞ்சிக டுதையத் தாழ்ந்தனர்
மருளுறு மனத்தினன் மன்னன் னாயினான்


பயாபதி மக்களைத் தழுவுதல்

திருவரை யனையதோட் சிழ்ருவர் தம்மையக்
கருவரை யனையவெங் களிதல் யானையா
னிருவரும் வருகென விரண்டு தோளினு
மொருவரை யகலத்தி னெடுங்கப் புல்லினான்


மானவா மதகளிற் றுழவன் மக்கடந்
தேனவாஞ் செழுமலர் செறிந்த குஞ்சியுட்
கானமா மலர்த்துகள் கழுமி வீழ்ந்தன
வானவாந் தடக்கையான் மகிழ்ந்து நோக்கினான்


என்னைநும் மீரலர்க் குஞ்சி தம்முளித்
துன்னிய வனத்துக டுதைந்த வாறென
மன்னவ னருளலு மகர வார்குழை
மின்னிவர் மணிக்கழல் விசயன் செப்பினான்


விசயன் தந்தைக்குத் திவிட்டன் அரிமாவினை அழித்தமை விளம்பல்

போற்றநம் புறணிசூழ் காடு பாழ்செய்வான்
சீற்றமிக் குடையதோர் சீயஞ் சேர்ந்தது
வேற்றுவன் றமர்கள்வந் துரைப்ப வெம்பியிவ்
வாற்றல்சா லடியன்சொன் றதனை நீக்கினான்


பயாபதியின் கழி பேருவகை

யானுமங் கிவனொடு மடிக ளேகினேன்
வானுய ரிமகரி மருங்கி லென்றுபூந்
தேனுய ரலங்கலான் சிறுவன் சொல்லலுந்
தானுயிர் தளிர்ப்பதோர் சவிய னாயினான்

சுடரொளி மிகுசோதி சூழ்கழற் காளை மார்தம்
அடரொளி முடிமன்ன னேவலா னாய்பொன் னாகத்
தொடரொளி சுடர்ஞாயிற் சூளிகை சூழு நெற்றிப்
படரொளி நெடுவாயிற் பள்ளிபம் பலங்கள் சேர்ந்தார் 7. 254

ஏழாவது சீயவதைச் சருக்கம் முற்றிற்று

முதல் பாகம் முற்றிற்று ------


சூளாமணி - பாகம் 2
(கல்யாணச் சருக்கம்,
அரசியற் சருக்கம்)
ஆசிரியர் : தோலாமொழித் தேவர்


சூளாமணி - பாகம் 2
ஆசிரியர் - தோலாமொழித் தேவர்

    உள்ளடக்கம்
      0. பாயிரம் (1- 6)
      1. நாட்டுச் சருக்கம் (7- 35)
      2. நகரச் சருக்கம் (36- 69)
      3. குமாரகாலச் சருக்கம் (70-118)
      4. இரதநூபுரச் சருக்கம் (119-238)
      5. மந்திரசாலைச் சருக்கம் (239- 430)
      6. தூதுவிடு சருக்கம் (431- 572)
      7. சீயவதைச் சருக்கம் (573- 826)
      8. கல்யாணச் சருக்கம் (827 - 1130)
      9. அரசியற் சருக்கம் (1131- 1554)
      10. சுயம்வரச் சருக்கம் (1555 - 1839)
      11. துறவுச் சருக்கம் (1840- 2068)
      12. முத்திச் சருக்கம் (2069 - 2130)

      (சருக்கங்கள் 1-7 அடங்கிய பாகம்-1 மின்பதிப்பு #0035-ஆக முன்பு வெளியிடப்பட்டுள்ளது).
    ------------

    8. கல்யாணச் சருக்கம் (827- 1130)

    கவிக்கூற்று

    செங்கண்மால் சிங்கம் வென்று செழுமலர்த் திலகக் கண்ணித்
    திங்கள்வாள் வண்ண னோடுந் திருநகர் பெர்ந்த பின்னை
    அங்கண்மாற் குரிய நங்கை யரும்பெற லவட்குத் தாதை
    வெங்கண்மாற் களிறன் னான்றன் றிறமினி விளம்ப லுற்றேன்.       827

    உற்றவான் குழவித் திங்க ளொளிமுழை யகட்டுப் போந்து
    முற்றுவான் முளைத்த போலு மெயிறுடை மூரிச் சிங்கம்
    மற்றம்மா லழித்த தல்லாம் வானமா றாகச் சென்ற
    ஒற்றனா லுணர்ந்து வேந்த னுவகையங் கடலு ளாழ்ந்தான்.      828

    சடிவேந்தன் மணவினைக்கு ஏற்பாடு செய்தல்

    கரியவாய் விலங்கி நீண்டு களிக்கய லிரண்டு தம்முட்
    பொரியபோ கின்ற போலும் பொங்கரித் தடங்கட் பேதைக்
    குரியமா லவற்குச் சென்று கொடுப்பனென் றுலகங் காக்கும்
    பெரியவன் றமரோ டெண்ணிக் கடிவினை பெருக்க லுற்றான்.      829

    சடிவேந்தன் மணவினையின் மேல் போதனபுரம் செல்லும் சமயம் தன் நகருக்குக்
    காவலாக வைத்த எண்மரின் விவரம்

    கிளரொளி மாடக் கோயிற் கின்னரர் கெழுவ லோவா
    வளரொளி வயங்கு தோன்றல் வருத்தமா னத்து மன்னன்
    உளரொளி யுமிழும் பூணான் பிரீதிதிமா வர்த்த தனனென் றோதும்
    தளரொளி தயங்கு மேனித் தாமரைச் செங்க ணானே.       830

    மண்ணலங் கனியுஞ் சாதி மணிமுழா வதிரு மாடக்
    கண்ணலங் கனியுந் தோன்றல் கந்தருவ நகரங் காப்பான்
    விண்ணலங் கனியுஞ் சீர்த்தி விருகவெல் கடிகொள் பேரான்
    பெண்ணலங் கனியு நீர்மை பெருகிய வுருவத் தோளான்.       831

    பூமரு பொலங்கொள் சோலைப் பொன்னணி புரிசை வேலிக்
    காமரு கபாட வாயிற் கந்தமா தனத்தைக் காப்பான்
    தேமரு திலதக் கண்ணித் திவாகர தேவ னென்பான்
    தாமரை தயங்கு சோதித் தாரணி துரகத் தேரான்.       832

    சுந்தரப் பொடியும் பூவுஞ் சுரும்பொடு துதைந்து வீசிச்
    சந்திரன் றவழு மாடச் சக்கிர வாள மன்னன்
    மந்தர மலைக்கும் யானை வச்சிர தாட னென்பான்
    அந்தரத் தமரர் கோமா னணிந்துபோந் தனைய நீரான்.       833

    காரணங் குருவ மேகங் கருவு கொண் டதிர்ந்து வெய்யோன்
    தேரணங் குறுக்கு மாடத் தேவர வனத்துச் செல்வன்
    ஏரணங் குறுக்கும் பைந்தா ரிரமிய தரனென் றேங்கும்
    சீரணங் குறுக்குஞ் செய்கைச் செஞ்சுடர்த் திலகப் பூணான்.       834

    கண்ணிலாங் கனக மாடக் கதலிகை முகிலோ டாடி
    விண்ணிலா விருண்டு தோன்றும் விசய கூடத்து மன்னன்
    வெண்ணிலா விரிந்த பூணான் வேகமா ரதனீண் முந்நீ்ர்
    மண்ணெலாம் வணங்க நின்ற மழகளிற் றரசோ டொப்பான்.       835

    மென்னரம் பனுக்குந் தீஞ்சொன் மெல்லிய லவர்கள் பாடல்
    கின்னரம் பிணிக்குஞ் செய்கைக் கிருதமா தனத்தைக் காப்பான்
    கைந்நவின் றிலங்குஞ் செவ்வேற் காவலன் கருடன் சேர்ந்த
    மெய்நவின் றிலங்குஞ் செம்பொ னங்கதம் விளைந்த பேரான்.       836

    ஓங்குநீர்ப் புரிசை வேலி யொண்டுறைக் குவளை வேய்ந்த
    தூங்குநீ ருடுத்த பாங்கிற் சோபன முடைய தோன்றல்
    தேங்குநீர்க் கடலந் தானைச் சித்திர தரனிவ் வையம்
    தாங்குநீ ரொளியோ டொன்றித் தண்ணளி தயங்க நின்றான்.       837

    என்றிவ ரெண்மர் தம்மை யிரதநூ புரத்து ளானா
    நின்றுநீர் காமி னென்று நிறீஇயபின் னீதி மன்னன்
    ஒன்றிய வுலக மெல்லா மொருங்குடன் விழுங்க லுற்றுச்
    சென்றுயர் கடலோ டொக்குஞ் சேனைபண் ணமைக்க வென்றான்.       838

    யானை

    வெண்ணிலாக் குழவித் திங்கண் மேகத்துப் பதித்த போலும்
    ஒண்ணிலா வுருவக் கோட்ட வோடைமால் களிற்றின் மேலோர்
    பண்ணெலா மணிந்து தோன்றப் பருமித்துக் கருவி யேற்றிக்
    கண்ணிலாம் பதாகை சேர்த்திக் காழகில் கழும விட்டார்.       839

    குதிரை

    கட்டிய கம்மச் செய்கைக் கதிர்மணிக் கனகச் சூலம்
    பட்டமொ டிலங்கப் பண்ணிப் பக்கரை பதைப்ப யாத்து
    மட்டவி ழலங்கல் வீரர் சேர்தலும் வலத்து முன்னாற்
    கொட்டிய குரத வாலித் தெழுந்தன குதிரைச் சேனை.       840

    தேர்

    மணித் தொழில் வளைந்த சூட்டின் மறுப்பறுத் தியற்றப் பட்ட
    அணித் தொழி லாரக் கோவை யாடகக் கொடிஞ்சி யம்பொன்
    துணித்திடை பதித்த தட்டிற் சுடர்மணித் துரகத் திண்டேர்
    கணித்தளப் பரிய நீர கல்லெனக் கலந்த வன்றே.       841

    காலாட்கள்

    ஒட்டிய கலிங்கந் தாண்மேற் றிரைத்துடுத் துருவக் கோடிப்
    பட்டிகை பதைப்ப யாத்துப் பரட்டைய நரல வீக்கிக்
    கட்டிய கழலர் தாரர் கதிரொடு கனலும் வாளர்
    மட்டுய ரலங்கல் சூடி மறங்கிளர் மள்ளர் சூழ்ந்தார்.       842

    சடிமன்னன் தம்பியின் புறப்பாடு

    இன்னிசை யமரர் பேகொண் டியன்றமா நகரங் காக்கும்
    பொன்னவில் கடகப் பைம்பூட் புரந்தர னனைய மாண்பின்
    மன்னவற் கிளைய வேந்தன் வயங்கெரிப் பெயர்கொ டேரான்
    கன்னியைக் காக்கு நீர்மைக் கடற்படை பரப்பிச் சென்றான்.       843

    சடிமன்னனுடைய மருகன் புறப்படுதல்

    அங்கல மலர்ந்த தோன்ற லரிபுரத் தவர்கள் கோமான்
    பொங்கல ரணிந்த பைந்தார்ப் புலிப்பெயர்ப் பொலங் கொ டேரான்
    மங்கலக் களிற்றி னான்றன் மருமகன் மகர முந்நீர்த்
    தங்கொலி மிகுத்த தானை யொடுகதி ரெறிப்பச் சார்ந்தான்.       844

    சடிவேந்தன் மகன் அருக்ககீர்த்தியின் புறப்பாடு

    வாரணி முரச மார்ப்ப வரிவளை வயிரொ டேங்கத்
    தாரணி மறவர் சூழத் தமனியக் கலங்க டாங்கி
    ஆரணி யுருவத் திண்டே ரானைமே லருக்க கீர்த்தி
    நீரணி கடலந் தானை நிலநெளி பரப்ப நின்றான்.       845

    சடிமன்னன் ஒரு விமானத்தை நிருமித்தல்

    சேனைபண் ணமைத்துச் சென்று திருக்கடை செறிந்த போழ்திற்
    றானையுள் படுநர் மாண்பிற் றாரவற் றொழுது கூற
    வேனவிற் றடக்கை வேந்தன் விண்ணியல் விமான மொன்று
    வானவில் லுமிழ்ந்து மின்ன மனத்தினா னிருமித் திட்டான்.       846

    விமான வருணனை

    மற்றதன் வடிவு கேட்பின் மரகத மணிக்க றன்மேல்
    பெற்றதன் னிலையிற் றாகிப் பெருகிய வளமை தோன்றிச்
    சுற்றிய பசும்பொற் சோதி சொரிந்துபோய்த் துறக்கங் காண
    முற்றிய முகட்டு நீலக் குவட்டிடை முடிந்த தன்றே.       847

    பாரித்த பவழத் திண்காற் பளிங்குபோழ் பலகை தன்மேற்
    பூரித்த சுடரின் செம்பொற் போதிகைப் புடங்க டோறு
    மூரித்தண் சுடர்வெண் முத்தின் பரூஉத்திரண் முயங்கி ஞான்ல
    வேரித்தண் டுவலை கால மாலைகள் விசித்த வன்றே.       848

    தடுத்துவில் லுமிழுஞ் செம்பொற் றண்டிகைத் திரள்க டாங்க
    மடுத்தன வயிரத் தம்ப மாடநீண் மதலை தோறும்
    தொடுத்தன சுரும்பு பாயுந் துணரணி தயங்கு மாலை
    அடுத்தன நிறத்த வாக வழுத்தின மணிக ளெல்லாம்.       849

    ஊன்றிய மகரப் பேழ்வா யொளிமுகந் தெளிப்ப வீழ்ந்து
    நான்றன மணிசெய் தாம நகைமுக நிறைந்த சோதி
    கான்றன கனக சாலங் கலந்தன கங்க ணீகம்
    தோன்றின பதாகை சூழ்ந்து சுடர்ந்தன சூல நாயில்.       850

    அஞ்சிறைப் பறவைச் சாதி யாவிப்ப வணிந்து மேலால்
    விஞ்சையர் மிதுனத் தேவர் விண்ணியங் குருவ மெல்லாம்
    செஞ்சுட ரெறிப்பச் சேர்ந்து செங்கதிர்ப் பரவை சிந்தி
    வெஞ்சுடர் விலங்க நீண்டு விண்ணிடை விரிந்த தன்றே..       851

    வாரணி பசும்பொன் வாழை மரகதக் கமுகொ டோங்கித்
    தோரணத் தூண்க டோறுஞ் சுடர்மணி சிலம்ப நான்று
    நீரணி நிழல்கொண் முத்த மணன்மிசை நிரந்து தோன்றிப்
    பூரண குடங்கள் செம்பொற் கொழுங்கதிர் புதைந்த கீழால்..       852

    கொழுந்திரள் வயிரக் கோடிக் கூர்முளை செறித்துச் செம்பொற்
    செழுந்திரட் புடகஞ் சேர்ந்த திருவளர் கபாட வாயிற்
    பொழிந்ததண் சுடர வாகிப் பொலந்தொடர் புலம்பத் தூங்கி
    எழுந்தொலி சிலம்ப விம்மி யிணர்கொண்ட மணிக ளெல்லாம்..       853

    பாய்கதிர்ப் பளிங்கிற் கோத்துப் பருமணி வயிரஞ் சூழ்ந்த
    வாய்கதிர்ச் சால வாயி லகிலயா வுயிர்த்த வாவி
    மாயிரு விசும்பின் மான்று மழைதவழ் குன்றம் போலச்
    சேயவர்க் குருவங் காட்டித் தேநிரை கொண்ட வன்றே..       854

    செம்பொனங் களியிற் செய்து சித்திரந் தெளிப்பத் தீட்டி
    வம்பவெண் முத்தச் சாந்தின் மட்டித்து மணிக ளெல்லாம்
    நம்பிய வொளிய வாகத் தெளித்துநன் கெழுதப்பட்டுத்
    தம்புலந் தெரிந்து தோன்றுந் தடத்தின தலங்க ளெல்லாம்..       855

    பாடக மிலங்கச் செங்கேழ்ச் சீறடிப் பரவை யல்குல்
    நாடக மகளி ராடு நாடக வரங்கு நன்பொன்
    மாடகந் தெளிப்ப வேய்ந்த மண்டபத் தலமும் வண்ண
    ஆடக மணிந்த கூட நிலைகளு மயல வெல்லாம்..       856

    மரகத மணிக ளீன்ற கதிரெனுந் தளிர்கள் வார்ந்து
    சொரிகதிர் வயிரங்கான்ற சுடரெனுங் கொழுந்து தோன்றிப்
    புரிகதிர் முத்த மென்னும் புதுநகை யரும்பு பம்பி
    விரிகதிர்ச் செம்பொன் பூத்து விண்ணணங் குறுப்ப வீங்கி..       857

    சயம்பவையை அழைத்துவர மன்னன் பணித்தல்

    கதிர்நகைக் கனபொற் சோதிக் கனகசா லங்க ளென்னு
    மதுநகப் பருகி மான்ற மணிவண்டு மயங்கி வானோர்
    விதிநகு விமான மென்னுங் கற்பகம் விரிந்த போழ்திற்
    பதிநகர்க் கிறைவன் பாவை சயம்பவை வருக வென்றான்..       858

    வேறு
    சயம்பவையின் செயல்

    இன்ன தருண் மன்னவன் தென்றுகடை காக்குங்
    கன்னிய ருணர்த்தலி னிணர்க்கொடி கடுப்பாள்
    பன்னிய பளிக்கறையொர் பஞ்சணையின் மேலாள்
    மன்னுமணி மாடமிசை மஞ்ஞையி னிழிந்தாள்..       859

    மாகமலை யன்னமணி மாடநிலை யுள்ளாற்
    போகமிகு பூந்தவிசின் மீதுபுதை வுற்ற
    வாகைவன மாலைபுனை மன்னன்மகள் செல்வாள்
    மேகபட லத்திடை மினற்கொடியொ டொத்தாள்..       860

    அங்கையி னயிற்படைய ராணுடையர் பூணர்
    கொங்கைவள ராதகுழ லார்கள்புடை காப்பப்
    பங்கயமு கத்தவர்ப லாண்டுபல கூறி
    நங்கையடி போற்றியென நங்கைநடை கற்றாள்.       861

    காவன்மிகு கன்னிநகர் கன்னியர்கள் காக்கும்
    வாவியகி னாறுமணி வாயிலவை நீங்கி்
    நாவிகமழ் கொம்பனைய நங்கைநகை வேலான்
    தேவியமர் கோயிலது செவ்வன மடைந்தாள்.       862

    மௌவன்மலர் வேய்ந்துமது நாறுமணி யைம்பாற்
    கொவ்வைதுயில் கொண்டதுவர் வாய்க்கொடியொ டொப்பா
    டெய்வமண நாறுதிரு மேனிபுறங் காக்கும்
    அவ்வையரொ டெய்திமுத லவ்வையடி சேர்ந்தாள்.       863

    வாயு வேகையின் செயல்

    வணங்கிய கணங்குழையை வாங்கிமுலை நோவக்
    குணங்கெழு குலத்தலைவி கொண்டுமிசை புல்லி
    மணங்கமழ் குழற்சிகையுள் வண்டிரிய மோந்தாங்
    கணங்கினனை யாளுவகை யாழ்கடலு ளாழ்ந்தாள்.       864

    செம்பொனணி சீரியன சேரினிடை நோமென்
    றம்பொனணி நொய்யன வணிந்தலர் மிலைச்சி
    வம்பினணி வாட்கணிடை மைபிறழ வைத்துக்
    கொம்பினனை யாள்குளிரு மாறுகுயில் வித்தாள்.       865

    சயம்பவை விமானமேற் கொள்ளல்

    அன்னவகை தேவிமக ளோடமரு மெல்லை
    முன்னுமுக வோரையொடு மூர்த்தநல நோக்கி
    மன்னுபுல வோர்கள்சொல மன்னன்மக டன்னை
    இன்னகைவி மானதல மேறுகினி தென்றான்.       866

    தொண்டைதொலை வித்ததுவர் வாய்மகளிர் சூழக்
    கண்டுவளர் தாயரொடு கஞ்சுகியர் காப்பா
    விண்டுவளர் சோதிகொள் விமானமது சேர்வாள்
    வண்டுவளர் கற்பமுறை வான்மகெளா டொத்தாள்.       867

    முன்னிமுடி வித்தமிகு விஞ்சையின் முதிர்ந்தார்
    அன்னநடை யாட்கடிமை யார்வமொ டடைந்தார்
    பின்னிவிடு கூந்தலர் பிடித்தவயில் வாளர்
    கன்னியரி ராயிரவர் கன்னிபுடை காத்தார்.       868

    அஞ்சுடர் மணிக்குழவி யாடுகழன் மாடம்
    பஞ்சுடைய பந்துகிளி பாவையொடு பூவை
    மஞ்சுடைய மின்னினனை யாண்மகிழு நீர
    செஞ்சுடர் விமானமது சேர்ந்தன செறிந்தே.       869

    கற்பக மலர்ப்பிணையல் சேர்ந்துகமழ் கின்ற
    பொற்பமைசெங் கோடிகமொ டாடைபுதை வுற்ற
    நற்புடைய பேழை நறுஞ் சாந்துநனி பெய்த
    செப்பொடு கடப்பக மடுத்தன செறிந்தே.       870

    பெருங்கல நிறைந்தமிகு பெட்டகமோ டெல்லா
    அருங்கலமு மார்ந்தவறை யாயினக ளாய்பொன்
    நெருங்கொளி நிறைந்தமிகு சோதிநிழல் சூழப்
    பெருங்கலி விமானமது சென்றது பெயர்ந்தே.       871

    வேறு
    பலவகைச் சம்பிரமங்கள்

    முரச மார்த்தன முரன்றன முரிவளை
            முகிலிடை வயிரேங்க
    அரியொ டாகுளி யாலித்த வதிர்ந்தன
            யணிமுழ வரு கெல்லாம்
    விரைசென் மாவொடு விரவின களிறும்தண்
            மிடைந்தன கடுமான் றேர்
    புரைசை யானையி னெருத்திடை யரசனும்
            புகழொடு பொலிவுற்றான்.       872

    சிகர யானையின் கவிழ்மணி சிலம்பின
            சிலம்பின பணிலங்கள்
    முகர வாயின பணவங்கண் முரன்றன
            முரன்றன முகிலெல்லா
    மகர மால்கடல் வரைமிசை யெழுந்தனெ
            வெழுந்தது படைமாற்ற
    நகர வாயிலின் புறம்பணை நடந்தது
            நடுங்கின கொடியெல்லாம்.       873

    ஒளிறு வாட்படை யுளர்ந்தது கிளர்ந்தன
            ருழைக்கல வுழையோர்கள்
    களிறு காத்திர முறுத்தலி னெறித்தலை
            கருமுகி னெரிவுற்ற
    குளிறு மின்னியங் குழுமலிற் செழுமலைக்
            கொடுமுடி யுடனார்த்த
    வெளிறில் கேள்வியான் பெரும்படை விசும்பிடை
            நிரந்தொளி விரிந்தன்றே       874

    சயம்பவைக்கு அவள்தோழி நாட்டுவளங் காட்டல்

    அமித மாகிய பெரும்படை யகன்கட லகல்விசும் பழகெய்த
    அமித மாகிய பெருவரை நிமிர்சிகை யதனய லமர்ந்தேக
    அமித மாகிய நிலைத்தலை மலையணி யருவிக ளவையெல்லாம்
    அமித மாபவை சயம்பவைக் கடிதொழு தவையவை யறிவித்தாள்.       875

    நங்கை காணிது நம்மலைக் கும்பரப் பொன்மலைப் புடைவீழுங்
    கங்கை யாறிதன் கரையன கற்பகக் காவுகளிவை கண்டாய்
    இங்கு நாமிரு விசும்பிடை யியங்கலிற் சிறியவொத் துளவேனும்
    அங்க ணார்க்குநம் முலகினை யளப்பவொத் துளவவை யறியுங்கால்.       876

    இரைக்கு மஞ்சிறைப் பறவைக ளெனப்பெய
            ரினவண்டு புடைசூழ
    நுரைக்க னென்னுமக் குழம்பு கொண்டெதிர்ந்தழெ
            நுடங்கிய விலையத்தாற்
    றிறைக்க ரங்களிற் செழுமலைச் சந்தனத்
            திரள்களைக் கரைமேல்வைத்
    தரைக்கு மற்றிது குணகடற் றிரையொடும்
            பொருதல தவியாதே.       877

    முந்து மற்றிதன் முதன்மலைப் பிறந்துநம்
            மலையது முழைப் பேருஞ்
    சிந்து வென்பது வலத்தது செழுங்கலஞ்
            சிதர்கின்ற திகழ்யாறு
    நுந்து பொன்னொளித் திரையெனுங் கரதலப்
            புடங்களி னுரையென்னும்
    பந்து பொங்கநின் றடித்திடத் திளைப்பதொத்
            துளததுப கருங்கால்.       878

    உயருஞ் சந்தனப் பொழிலலைத் தொளிர்மணிக்
            கலங்களை யுமிழ்ந் திட்டுப்
    பெயருந் தெண்டிரைப் பிறங்கலுட் பிணங்கிய
            பெருவரை யகிறேக்கி
    வயிர வேதிகை மலைவது கோபுர
            வாய்தலின் படிதீண்டி
    அயிரை வார்கரைக் குடகடற் றிரையொடு
            பொருதல தவியாதே.       879

    தேனெய் பாலொடு கலந்தன சின்மொழிச்
            சிறுநுதற் றிருவேநஞ்
    சேனை மாமுகிற் படலங்கண் மிசைச்செலச்
            சினைமுகில் முரலக் கேட்
    டேனை யானைக ளிணையென விருந்திட
            விருங்கைமா வினங்காக்கும்
    கான யானைகள் கருவரை யனையன
            கனல்வன விவை காணாய்.       880

    பேய்மை யானங்கொண் டிருந்தன்ன பெருவரை
            நெரிதரத் திரைசிந்தித்
    தீமை யானைகள் செவிபுகு செறிகடாந்
            திளைத்தலிற் றிசைநாறிப்
    போய்மை யானங்கொண் டிழிதரும் பெருந்திசைப்
            புடையன புனல்யாறு
    சேய்மையா னமக்கொளிர் முத்தின் பருவடந்
            தெளிப்பவொத் துளபாவாய்.       881

    கருவிவா னத்தி னகடுதொட் டனவென
            நிலத்திடைக் கவின் செய்ய
    மருவிநங் கட்கு மணிவட்டுச் சிதர்ப்ப வொத்
            துளசில மலை யெல்லாம்
    அருவி வெண்டிரை சொரிகின்ற வருவரைக்
            குவடுக ளவை முன்னாற்
    பரவை வெண்கொடி யெடுத்துநம் படைக்கெதி
            ரெழுவதொத் துளபாவாய்.       882

    அலங்கல் வார்குழ லிமிர்தன்ன சின்மொழி
            யரிவைநம் மருங்கெல்லாம்
    விலங்கல் போல்வன வெண்மருப் பிரட்டைய
            வேழங்கள் விளையாடி
    இலங்கு மால்வரை யிறுவரைத் தடங்குத்தி
            யிடந்திட விருபாலும்
    கலங்கொள் பேழைகள் கவிழ்ந்தனெக் கதிர்மணி
            சொரிகின்ற வவை காணாய்.       883

    அங்கண் மால்வரை யருவிதந் தடக்கையிற்
            புடைத்துநின் றமர்ந் தாடிப்
    பைங்கட் செம்முகப் பரூஉக்கையம் பகடுதம்
            பிடிக்கணம் புடை சூழச்
    செங்கற் றூளிதஞ் செவிப்புறத் தெறிதலிற்
            சிகரங்க ளிடையெல்லாம்
    பொங்கிக் குங்குமப் பொடியொத்துப் பொலிகின்ற
            பொலங்கொடி புடைநோக்காய்.       884

    துளங்கு வார்குழைத் துவரிதழ்த் துடியிடைச்
            சுடர்நுதற் சுரிகோதாய்
    விளங்கு வெங்கதிர் விலங்கிய விசும்பிடை
            யியங்குதல் புலன்கொள்ளாப்
    பளிங்கி னொள்ளறைப் பரப்பிடைப் பாய்வித்த
            பருமணி நெடுமான்றேர்
    வலங்கொ ணம்படைக் கடலிடை மறித்தவை
            சுழல்கின்ற வகை நோக்காய்.       885

    எடுத்த மாருத மெறிதலி னெகிழ்ந்தன
            சிகழிகை யிணரோடும்
    தொடுத்த மாலைகள் துணர்கொளப் புனைவன
            துகிலிடை புடைசோர
    உடுத்த காஞ்சியி னொளிமணிக் கதிர்நகைப்
            பட்டங்க ளுடையாக
    அடுத்து வீழுமொ ரணியிழை யிளையவள்
            படுகின்ற ததுகாணாய்.       886

    மல்கு மும்மத மதகளி றுழக்கலின்
            மயங்கிய மழைமேகம்
    பில்கு நுண்டுளி யுறைத்தலிற் பனித்தநம்
            பெரும்படை மடவார்கள்
    நல்கு காதல ரகலத்து ளொடுங்குதல்
            பலர்முன்னை நனிநாணி
    மெல்கு பூந்துகில் விரித்தவா வருகின்ற
            விதலைகண் மிகநோக்காய்.       887

    இலைய நாடகத் தெழில்கெழு விமானமஃ
            தியல்கின்ற விசைதன்னான்
    மலையி னம்மொடு வருவவொத் துளவவை
            வரவில மடனோக்கி
    உலைவில் வையகத் தொளிசெயும் பகலவ
            னுறுசுடர் சொரிகின்ற
    வலையங் கையல வருவது மற்றிதன்
            சலத்தது வலிகண்டாய்.       888

    யாவரும் போதன புரத்தை அடைதல்

    இன்ன போல்வன விளையவட் குழையவ ளினியன பலகாட்டிப்
    பன்னு மாயிடைப் பழனங்கள் வளாவிய படுகலி நெடுநீத்தம்
    துன்னு நீர்வயற் சுரமியத் தகணியுட் சுடரணி நகர்சார்ந்து
    தென்னென் றேனிமிர் திருநிலை யகமெனுஞ் செறிபொழி லதுசேர்ந்தார்.       889

    வேறு

    ஒரு சோலையில் யாவரும் தங்கிய வருணனை

    மோடு விட்டலர் மொய்ம்மலர்க் காவினுள்
    பாடி விட்டது பாவைதன் கோன்படை
    கூடி யிட்டிடை யாரன கோதைமேல்
    மூடி விட்டமர் தேன்முரி வித்தவே.       890

    ஆர்ந்த வெங்களி யானைக் கவுட்புடை
    வார்ந்து வீழ்மத மூசிய வண்டினம்
    சோர்ந்து வீங்கெருத் திற்றொடர் கண்ணிடைப்
    பேர்ந்து வீழ்வன போலப் பிறழ்ந்தவே.       891

    முந்தி நின்றிமிர் தேன்முரன் றாக்கிய
    மந்த வின்னிசை வாங்க வனத்திடைச்
    சந்த னத்தடந் தாளொடு சார்ந்தன
    கந்தெ னக்கன லுங்களி யானையே.       892

    குங்கு மக்குளிர் பூநெரி தூளிமேற்
    பொங்கு ளைக்கலி மாக்கள் புரண்டுவிற்
    றங்கொ ளிப்பல கைத்தலம் பாவிய
    மங்க லப்பெரும் பந்தியின் வந்தவே.       893

    பட்ட மார்நெடுந் தேர்பைம் பொனான்மிடை
    கொட்டில் சேர்ந்தன கோனுறை கோயிலும்
    வட்ட மாக வகுத்தனர் வானுல
    கிட்ட மாய்வந் திழிந்தது போலுமே.       894

    செம்பொன் மாளிகை யும்வயி ரத்திரட்
    டம்ப முற்ற தமனியக் கூடமும்
    அம்பொன் னாடரங் கும்மகிற் சேக்கையும்
    வம்பு நீர்மைய வாய்வளங் கொண்டவே.       895

    தெள்ளி வெண்பவ ழத்திர ளூன்றிய
    வெள்ளி மண்டப மும்விரை நாறுப
    பள்ளி யம்பல மும்பகற் கோயிலும்
    வள்ள றன்னகர் வாய்மலி வுற்றவே.       896

    வௌவு நீரென்ன வாவியு மாடெலாம்
    தெய்வ நாறுவ தேங்கொள்செய் குன்றமு
    மௌவன் மண்டப மும்மணற் றாழ்வரும்
    எவ்வ பாலு மிசைந்துள வென்பவே.       897

    கொற்ற வன்கொடிக் கோயிற் புறம்பணை
    சுற்றி விட்டது சுற்றும் பெரும்படை
    மற்றை மன்னரெல் லாம்வனத் தின்புடை
    முற்ற முன்னினர் முத்தணி மாலையார்.       898

    கன்னி மூதெயில் சூழ்கடி காவினுட்
    கன்னி தாதைகண் ணார்நக ரிஞ்சியுட்
    கன்னி மார்பலர் காக்குங் கடையதோர்
    கன்னி மாநகர் கன்னிக் கியற்றினார்.       899

    மின்னி னார்ந்த விமானத் தலத்திடைப்
    பொன்ன னார்பலர் போற்ற விழிந்துதன்
    மன்ன னாரரு ளான்மணி மாளிகைக்
    கன்னி மாநக ரெய்தினள் கன்னியே.       900

    வேறு

    சடிமன்னனுடைய வரவு கேட்ட பயாபதி செயல்

    மற்றவ ரிருத்தலு மருசி சென்றுபின்
    சுற்றுநீர் வளவயற் சுரமை நாடுடைக்
    கொற்றவன் கழலடி தொழுது கூறலும்
    வெற்றிவே லவனொளி துளும்ப வீங்கினான்.       901

    அயலிலுள்ளார்க்கு இட்ட கட்டளை

    ஏரணி மணிக்கல மணிக யாருமென்
    றாரணி வளநக ரறைக கோடணை
    தோரணந் திசைதொறுஞ் சுடர நாட்டுக
    பூரண பொற்குடம் பொலிய வைக்கவே.       902

    இரவல ரிருநெதி கவர்க வீண்டயற்
    புரவலர் வருகெனப் போக தூதுவர்
    திருவலர் சினகரன் செல்வப் பொன்னகர்
    விரவலர் மழையொடு விழவு செய்கவே.       903

    904. எரிமணிச் சுடரணி யிலங்கு நங்கைதன்
    திருமணிக் காவினுட் செல்லுஞ் செய்கையாற்
    புரிமணிப் பொலங்குழைப் பொம்மல் வெம்முலைக்
    குருமணிக் கொம்பனார் கோலஞ் செய்கவே.       904

    905. உழைக்கல மகளிரொ டுவந்து செல்வன
    புழைக்கைய விளம்பிடி புகுந்து பண்ணுக
    தழற்புகை நவின்றகைத் தானை வீரர்தம்
    அழற்படை யொடுபுகுந் தமைக காவலே.       905

    பயாபதி மருசிக்கு மரியாதை செய்தல்

    இன்னன வுழையவர்க் கருளி யேந்துதோண்
    மன்னவன் மருசியை மருளக் கட்டுரைத்
    தென்னொடும் பெயர்திநும் பாடிக் கென்றொரு
    பொன்னகர் மாளிகை புகுகென் றேயினான்.       906

    மந்திரக் கிழவருடன் ஆலோசித்தல்

    வேண்டுப வவன்றிறத் தருளி வேந்தர்கோன்
    ஈண்டிய மந்திரக் கிழவர்க் கென்னையாங்
    காண்டகு திறலவற் காணு மாறென
    ஆண்டகைக் கவர்களு மறியச் செப்பினார்.       907

    விண்ணியல் விஞ்சையர்க் கிறைவன் வேந்தராற்
    கண்ணிய பெருங்குலக் கடலுட் டோன்றினான்
    நண்ணிய தொடர்ச்சியு நமிக்கணண்ணுமால்
    எண்ணுவ வவன்றிறத் திறைவ வில்லையே.       908

    குலத்தினுங் குணத்தினுங் கொண்ட கோலமா
    நலத்தினு நின்னொடு நிகர்க்கு நன்மையன்
    மலைத்தலில் வயத்தினும் பெரியன் மல்லினும்
    உலத்தினும் பெருகிய வுருவத் தோளினான்.       909

    ஆதலா லவன்றிறத் தியாது செய்யினும்
    ஏதமாங் கில்லைகோ லிறைவ வென்றனர்
    கோதிலாக் குணம்புரி குன்ற னாற்கொரு
    நீதிநூற் கடலினின் றனைய நீர்மையார்.       910

    வேறு

    பயாபதி தன் அரண்மனையை அடைதல்

    ஆங்கவர் மொழியக் கேட்டே யறிவினுக் கரச ரென்று
    வாங்கிருங் கடலந் தானை மன்னவன் மகிழ்ந்து மற்றப்
    பூங்குழை மகளிர் காக்கும் பொன்னணி வாயில் போகித்
    தேங்கம ழலங்கன் மார்பன் றிருநகர் முற்றஞ் சேர்ந்தான்.       911

    மருசியை அனுப்ப அவன் செய்த ஏற்பாடுகள்

    அடுகடா மாவி நாறு மழிமதங் கருவி வீழத்
    தொடுகடா வயிரத் தோட்டி யுடையன தொடர்க ணூன்ற
    விடுகொடா வியாள நிற்ப மெல்லவன் பணிகள் செய்யும்
    படுகடாக் களிறுந் தேரும் புரவியும் பண்ணு கென்றான்.       912

    யானையின் வருகை

    பணித்தசொல் லதனைக் கேட்டே பகைநிலைக் கந்தி னோடும்
    பிணித்தபொற் றொடர்கண் விட்டுப் பெயர்ந்தகா னிகள நீக்கி
    மணித்தொடர் மருங்கின் வீழ்த்து வரிபுரிக் கச்சை வீக்கி
    அணித்தகைப் பாகர் பண்ணிக் கொடியெடுத் தருகு சேர்ந்தார்       913

    தேர்களின் வருகை

    செம்பொன்செய் கிடுகு கோத்துத்
            திகிரிவாய்ப் புளகஞ் சேர்த்திப்
    பைம்பொன்செய் பரவைத் தட்டிற்
            பருமணி பதித்த திண்டேர்
    கம்பஞ்செய் துலக மெல்லாங்
            கைவளைக் கொள்வ போல
    அம்பொன்செய் கொடுஞ்சி நெற்றி
            கொடியெடுத் தணைந்த வன்றே.       914

    புரவிகள் வருகை

    முற்றத்தா னெரியுஞ் செம்பொன் முகனனி கருவி சேர்த்திச்
    சுற்றத்தா தணிந்து காமர் சூழ்மணிக் கோவை சூழ்ந்து
    மற்றுத்தாம் வகுக்கற் பால மங்கல மரபிற் பண்ணிப்
    பொற்றத்தார்க் கவரி வேய்ந்து பொருகின்ற புரவி யெல்லாம்.       915

    காலாட்கள் வருகை

    ஒட்டிய வூழி னன்றி யுயிர்கொள லொழிக வென்று
    சுட்டினர் மொழிப வாயிற் கூற்றமுந் துளங்கு நீரார்
    கட்டிய கழலர் தாழ்ந்த கச்சையர் கனலும் வாளர்
    மட்டுய ரலங்கல் சூடி வயவரும் வந்து சூழ்ந்தார்.       916

    வரிசைகளுடன் மருசியை அனுப்புதல்

    அன்னணந் தானை பண்ணி யணைந்தபின் னமைச்சரோடு
    மன்னவன் மருங்கி னின்ற மருசியை வருக வென்று
    பொன்னுதல் வேழ மொன்று பொலங்கலம் புலம்ப வேற்றி
    முன்னுற நின்று காதன் முறுவலோ டருளிச் செய்தான்.       917

    பயாபதி சித்திரதரனுக்கு இட்டகட்டளை

    தேங்கம ழலங்கன் மார்பன் சித்திர தரனைக் கூவிப்
    பாங்கமை பஞ்சு பட்டுந் துகில்களும் பரப்பி மேலால்
    வீங்கிய சுடர வாய மிடைமணிக் கலன்கள் விஞ்சை
    நீங்கருந் திறலி னான்றன் னெடுநகர் நிறைக்க வென்றான்.       918

    பொன்னணி கலத்தின் குப்பை புரிமணிக் கோவைப் போர்வை
    மன்னிய வயிரக் குன்றம் வலம்புரி மணியின் கோவை
    பின்னிய பவழ வல்லிப் பிறங்கலோ டனைய வெல்லாம்
    கொன்னவில் வேலி னான்றன் கோயின்முன் குவிக்க வென்றான்.       919

    ஆண்டுற வணைந்து வேகித் தழல்கின்ற மதுவின் றண்டோ
    டீண்டிநின் றினவண் டார்க்கு மின்சுவை நறவின் சாதி
    வேண்டுநர் வேண்டு மாறு விருந்தயர்ந் துயரும் வண்ணம்
    தீண்டரும் விஞ்சை வேந்தன் றிருநகர்ச் செறிக்க வென்றான்.       920

    தேங்கனி குழவித் தீநீர் செம்பழத் திரளின் கண்ணி
    பாங்கமை பளிதச் சாதி பாசிலைத் தழையின் கற்றை
    தீங்கழைக் கரும்பின் கட்டி திரணறைக் கடிகை யின்ன
    தோங்கலந் திலாத சொல்லான் றொன்னகர்ச் சொரிக வென்றான்.       921

    கண்ணியுங் கமழுஞ் சூட்டுங் கற்றையாக் கட்டப் பட்ட
    தண்ணிய மலருந் தாம மாலையுஞ் சதங்கை தம்மோ
    டெண்ணிய வண்ண மாலை யெழினக ரெல்லை யெல்லாம்
    விண்ணியல் விமான வீதி வெறிகொள மிடைவி வேலோய்.       922

    குங்குமக் குழம்பு கொட்டிச் சந்தனத் தொளிகண் கூட்டி
    அங்கலுழ் விரையின் சேற்றோ டகநக ரளறு செய்து
    மங்குலாய் விசும்பு மூட வகிற்புகை மயங்க மாட்டிப்
    பொங்குபொற் சுண்ணம் வீசி மணவினை புனைவி யென்றான்.       923

    பயாபதி தன் மக்களை வரும்படி ஏவுதல்

    அனையன வவனை யேவி யரசிளங் குமரர் தம்மைப்
    புனைமலர்க் கண்ணி சூடிப் பொன்னெழி லாரந் தாங்கி்
    நனைகவுள் வேழ மேறி நம்மொடு வருக வென்றான்
    கனைகுரன் முரச மார்க்கும் கடிபடைக் கால வேலான்.       924

    தன் பட்டத்து யானையை வருவித்தல்

    திங்களை யிரண்டு கூறாச் செய்துமுன் செறித்த போல
    மங்கல வடிவின் வந்த வலனுயர் வயிரக் கோட்டுச்
    செங்களி விதிர்த்த போலுஞ் செம்பொறிச் சிறுகண் வேழம்
    வெங்களி வியாளம் வல்ல விறலது வருக வென்றான்.       925

    பட்டத்து யானையின் வருணனை

    அருளறிந் துழைய ரோடி யரசுவா வருக வென்ன
    மருளிவண் டுழலுந் தாரை மழகளி றதனை மேய்ப்பான்
    இருளிருங் குன்ற மேய்க்கு மிரும்பிண ரெருத்த மேறி
    வெருவரு மொழியிற் றேறி மேன்முறைத் தொழில னானான்.       926

    அரசுவா வதனோ டாடி யியலறிந் தணைந்த பாகன்
    புரைசைதா னெகிழ்த்து மற்றோர் புதுவடம் புரள வீக்கி
    உரைசெய்காற் சுவடு நுங்கச் செறித்தொன்று புறத்த தாக்கி
    நிரைசெய்கா னிகளம் விட்டு நிலத்தவ ரேறு கென்றான்.       927

    பின்னவ னேறித் தூசப்
            பெருவடம் பிடித்த பின்னைப்
    பொன்னவிர் தொடர்கண் விட்டுப்
            புறத்துக்காற் புரோசை கோத்து
    மன்னவ னருளு மாறு
            மங்கலக் கோலஞ் செய்வான்
    துன்னருங் கவைமுட் கோலோர்
            சூழ்ந்துவந் தணைக வென்றான்.       928

    கரும்பொடு முடித்த காய்நெற் கதிரணிக் கவளக் கற்றை
    இரும்புடை வயிரக் கோட்டி னிடையன பயிரி நீக்கிச்
    சுரும்பொடு மலர்கள் வாய்ந்த துகளையு மகல வாரி
    அரும்புடை யலங்கன் மார்ப னரத்தநீ ரெறிவித் தானே.       929

    குங்குமக் குழம்பு கொட்டிச் சந்தன வெள்ளை கொண்டு
    மங்கல வயிரக் கோட்டு வலங்கொள வரைந்து மற்றுச்
    சங்கின துருவி னாலும் வலம்புரிச் சவியி னாலும்
    அங்கதன் பாகத் தீரத் தருகெலா மணிவித் திட்டான்.       930

    பொற்றிரட் கடிகை பூட்டிப் புரிமணி யோடை சேர்த்தி
    முற்றிய புளகச் சூழி முகம்புதைத் திலங்க வீழ்த்துச்
    சுற்றிநின் றெரியுஞ் செம்பொற் சுடர்நிலைப் பட்டஞ் சேர்த்திக்
    கற்றையங் கவரிக் கண்ணி கருணமூ லத்து வைத்தான்.       931

    தாரணி தயங்கச் சாத்தித் தவிசின்மேல் விரித்து மஞ்சில்
    ஏரணி திருவில் லேய்ப்ப விருவடம் விலங்க வீக்கிச்
    சீரணி மணிகள் வீழ்த்துச் செம்பொன்செய் சுண்ணஞ் சிந்திக்
    காரணி மின்னிற் றோன்றக் கதலிகை நடுவித் தானால்.       932

    பயாபதி யானையின்மேல் ஏறுதல்

    வேழமாங் கணிந்த பின்னை வேந்தர்போற் றிசைப்ப வேறி்ச்
    சூழொளி யார மின்னச் சுடர்க்குழை திருவில் வீச
    ஏழையர் கவரி யேந்த வெரிகதிர் விரிவ தொத்தான்
    ஊழிநீ ருலகங் காக்கு முழவுத்தோ ளுருவத் தாரான்.       933

    ஒத்துநின் றுலக மெல்லா மொருங்குடன் குளிர வோம்பி
    வித்தகர் புகழு மேரார் வெள்ளிவெண் குடையொன் றோங்கி
    முத்தவெண் மாலை நான்று முடிமிசை நிழற்ற மூரி
    மத்தமால் களிறு நுந்தி வளநகர் மருளச் சென்றான்.       934

    பயாபதி சடிமன்னனைச் சந்திக்கப்புறப்பட்ட வருணனை

    அரசிறை யரசரொ டெழுதலு மதிர்தரு
    முரசெறி யிமிழிசை முழவொடு கழுமின
    திரைசெறி நெடுவரை கடைதொறு திசைதிசை
    கரைசெறி கடலொலி கடுகிய தனெவே.       935

    துளைபடு குழலிசை துடியொடு சிறுபறை
    கிளையொடு படலிகை கிளையொடு கிளர்தர
    வளையொடு வயிரிசை மருவின மழையென
    வளைபடு மணியர வறிவயர் வுறவே.       936

    சொரிவன மலர்மழை சுழல்வன வெழுபுகை
    இரிவன மதுகர மிருள்வன திசைமுகம்
    எரிவன சுடர்மணி யெழுவன கதலிகை
    தெரிவன வரியன தெருவொடு திசையே.       937

    கொடியொடு குடையிடை மிடைவன விருள்செய
    முடியொடு சுடர்குழை முளைவெயி லொளிசெய
    அடியொடு புனைகழ லரசிறை படையெழ
    இடையிடை யிரவொடு பகலிசை வனவே.       938

    புரவிய குரமுக மிடுதொறு பொடியெழு
    மருவிகொண் மதமழை பொழிதொறு மளறெழு
    மருவிய மனிதரு மனநனி யயர்வுறு
    தெருவுகள் படுவது சிலரிடை தெரிவார்.       939

    செருவியல் களிறுகள் செவிபுடை யரவமும்
    உருவிய லிவுளிக ளொலிகலி யரவமும்
    கருவிகொள் வயவர்கள் கழனர லரவமும்
    விரவிய செவிபிற விளிகொள லிலவே.       940

    வளையவர் மனநிறை யழிதரு வடிவுடை
    இளையவ ரிருபுற வுரைகளி னிடையிடை
    திளையொடு நகைநனி சிலபல கனிவன
    விளைவுடை யவர்களும் விழைவுறு தகவே.       941

    குயிலுவ ரொலியொடு குடமுழ வதிர்வொடு
    மயிலின மகளிர்த மவிநய மடநடை
    அயிலிய லரசர்த மருகவை பெருகலின்
    இயலிய வளநக ரிடமிட மிலவே.       942

    சடிமன்னன் எதிர்கொள வருதல்

    சுரமைய ரதிபதி வருமென மருசிசென்
    றருமைகொள் புகழற் கறைதலி னெதிர்கொள
    வரமிகு நெடுவரை மணிமுடி நெடியவன்
    உரமிகு படையெழு வுரைநனி யரிதே.       943

    கருவரை வருவன வெனவுள களிறுகள்
    பெருவரை யருவிக ளெனவுள பெயர்கொடி
    அருவரை யடுபுலி யெனவுள ரிளையவர்
    பருவரை யிறையுடை யெழுவதோர் படையே.       944

    இருபடைகளின் வருணனை

    நிலமிசை யவர்படை நிலநெளி வுறவரும்
    மலைமிசை யவர்படை மலைநெரி வுறவரும்
    அலைதிரை யொலிகட லவைபுடை பெயர்தரு
    நிலைபெரி தரிதிப நெடுவரை நிரைய.       945

    முகிலிடை புகுவன புரவிக ளெனினவை
    முகிலிடை புகுவதொர் முறைமையை யுடையன
    அகிலிடு நுழைபுகை யவைகமழ் வனவெனின்
    அகிலிடு நுழைபுகை யவர்புக ழதுவே.       946

    வனமலர் பொழிவன மழைமுகின் மழைமுகில்
    இனமல ரிடையிடை விரைமழை சொரிவன
    கனமலி மணிவரை யுடையவ னுழையவர்
    இனமலி யமரரி னிழிவது சிறிதே.       947

    அலர்மிசை யிளையவ ரடியிட வடியிடம்
    மலர்மிசை யியல்பவ ரியல்புக ளெனினல
    நிலமிசை யவரொடு நிலநடை படர்கென
    மலைமிசை யவரிறை யருளிய வகையே.       948

    வேறு

    சங்குபோ லொளியவன் றாதை தன்படை
    கங்கைபோற் படர்ந்தது கலக்குங் காதலால்
    இங்குநீர் யமுனையி னிழிவ தொத்தது
    மங்குல்சேர் மணிவரை மன்னன் றானையே.       949

    மாவியல் கடற்படை மயங்கி வானிடைப்
    பூவிய லிணரொடு கவரி பொங்கலாற்
    பாவிய பனித்திரைப் பரவை பாற்கடல்
    மேவிய விசும்பிடை விரிந்த தொத்ததே.       950

    கழுமிய முகிலொடு களிறு கான்மிடைந்
    தொழுகிய வருவிநீ ருகுக்கு மாதலால்
    மழைமுகின் மழகளி றென்னும் வேற்றுமை
    உழையவ ருழையவர்க் குணர்த்தல் வேண்டுமே.       951

    புண்ணிய மணிநிரை பரந்து பூவுதிர்ந்
    தெண்ணியல் கொடிமிடைந் திருண்டு பாங்கெலாம்
    கண்ணியல் கவரிமாக் கலந்து கானக
    மண்ணியல் பரவையாய் வருவ தொக்குமே.       952

    நந்திய சுடர்மணி நாக மீமிசைப்
    பைந்துகிற் கதலிகை பரந்து தோன்றுவ
    நந்திய சுடர்மணி நாக மீமிசைப்
    பைந்துகிற் கதலிகை பரந்த போலுமே.       953

    கணங்கெழு கவரிகள் கலந்து காழகில்
    அணங்கிவர் நாவிகா லளைந்து நாறலால்
    இணங்கிய கடற்படைப் பரவை யிவ்வழி
    மணங்கம ழிமகிரி வருவ தொக்குமே.       954

    காமரு பூங்குழைக் காம வல்லிகட்
    டாமரி யனையவர் தயங்கி யுண்மையாற்
    காமரு பூங்குழைக் காம வல்லிகட்
    டாமரி யனையதத் தானை வண்ணமே.       955

    மணிமருங் குடையன வயிரக் கோட்டின
    அணிமருங் கருவிய வரைக ளன்னவான்
    மணிமருங் குடையன வயிரக் கோட்டின
    அணிமருங் கருவிய வரச வேழமே.       956

    மஞ்சிவர் மணிவரை மகளிர் சீறடி
    விஞ்சையந் தொழிலிய விடுத்த மெல்லியற்
    பஞ்சின்மேன் மிதிப்பினும் பதைத்துப் பையவே
    அஞ்சிமே லிவர்வதற் கார்வஞ் செய்யுமே.       957

    மன்னர் இருவரும் சந்தித்தல்

    மணிவரை யரசனு மகர மால்கடல்
    அணிவரை நிலமுடை யாணை வேந்தனும்
    கணிவரை பொழுதினாற் கண்ணுற் றாரரோ
    பணிவரை யிலாத்தொழிற் பரவைத் தானையார்.       958

    வரவேற்பு

    அம்மல ரலங்கலான் றடக்கை யென்னுமம்
    பொய்ம்மலர்த் தாமரை முகிழ்க்கு மெல்லையுண்
    மைம்மலர் நெடுவரை மன்னன் மற்றவன்
    செம்மல ரங்கையிற் செறியப் புல்லினான்.       959

    வலம்புரி வண்ணனு மகர மால்கடல்
    நலம்புரி நல்லொளி நம்பி தானுமவ்
    வுலம்புரி தோளினா னொளிகொள் பைங்கழல்
    கலம்புரி தடக்கையாற் கதழக் கூப்பினார்.       960

    காமரு கவினொளிக் காளை மார்களைத்
    தாமரைச் செங்கணாற் றழுவிப் பின்னவர்
    பூமரு பொன்வரை யகலம் புல்லினான்
    சாமரை நன்னுதற் றடக்கை யானையான்.       961

    எழில்விரி நெடுவரை யிறைவன் றன்மகன்
    அழல்விரி சுடரொளி யருக்க கீர்த்தியும்
    பொழிலணி போதனத் திறைவன் பொன்னணிக்
    கழலவ னடியிணை கையிற் கூப்பினான்.       962

    ஆங்கவ னழகுகண் பருக மற்றவன்
    றாங்கெழு வனையதோ டழுவித் தன்னொடும்
    ஓங்கிய மழகளி றெருத்த மேற்றினான்
    வீங்கிய கனைகழல் வேந்தர் வேந்தனே.       963

    வேறு

    மன்னிய விஞ்சை வேந்தன் றம்பியு மருகன் றானுந்
    துன்னிய சுரமை நாடன் றொடுகழ றொழுத லோடும்
    பின்னிய காதல் வெள்ளம் பெருகிய விரிவிற் றாகிப்
    பொன்னியல் கழலி னாற்கோர் பொங்கொளி புணர்ந்த தன்றே.       964

    வெஞ்சுட ராழி யாளும் விறலவற் கிளைய தாதை
    மஞ்சுடை விஞ்சை நாடன் மலரடி வணங்கி மற்ற
    வஞ்சமில் புகழி னான்றன் மனத்தையும் வணக்கி யிட்டான்
    செஞ்சுட ரிலங்கு பூணான் றிறற் சிறீ பால னென்பான்.       965

    ஆய்ந்தசீ ரரச ராங்குக் கலந்தபின் னமிழ்த வெள்ளம்
    பாய்ந்தது பரவை நன்னீர்ப் பாற்கடல் பரந்த தேபோல்
    ஏந்திய காதல் கூர வெழினகர் பெயர்ந்து புக்கார்
    காந்திய கனகப் பைம்பூட் கருவரை யனைய தோளார்.       966

    எழில்கொள்கந் தனைய திண்டோ ளிளைய ரோடரசரீண்டிப்
    பொழிலகந் தழீஇய சோலைப் பொன்னர்க் கோயில் புக்குத்
    தழுமலர்க் கோதை நல்லார் பலாண்டிசை ததும்ப வாழ்த்தச்
    செழுமலர்த் திரள்க டாழுஞ் சித்திர கூடஞ் சேர்ந்தார்.       967

    இருவேந்தரும் குமரரோடு ஆசனத்தில் அமர்தல்

    வெள்ளொளி யெயிற்றுப் பேழ்வாய் விரியுளை யரச சீயம்
    ஒள்ளொளி தவழ வேந்து மொளிமணி யணையின் மேலோர்
    கள்ளொளி கமழுங் கோதை மகளிர்கள் கவரி வீசத்
    தெள்ளொளிக் குமர ரோடு மிருந்தனர் திருந்து வேலோர்.       968

    சடிமன்னன் வந்த காரியத்தைப் பயாபதி வினவல்

    காமரு மகளிர் வீசுங் கனமணிப் பவழத் திண்காற்
    சாமரை பயந்த தென்ற கைமுடித் தாது சிந்தப்
    பூமரு பொறிவண் டார்ப்பப் பொலிந்தவ ரிருந்த போழ்தின்
    ஏமரு கடலந் தானை யிருநிலக் கிழவன் சொன்னான்.       969

    வரவேற்பு

    விண்ணிடை யிழிந்து வந்த விண்ணவர் கிழவ னொப்பாய்
    மண்ணிடை யென்னை யிங்கோர் பொருளென மதித்து வந்த
    தெண்ணிடை யுணரு மாந்தர்க் கிடைதெரி வரிய தொன்றாற்
    கண்ணிடை யுமிழுஞ் செந்தீக் கடாக்களிற் றுழவ வென்றான்.       970

    சடிமன்னன் மறுமொழி

    ஏங்குநீர் வளாகங் காக்கு மிக்குவா மன்ன ரேறே
    தூங்குநீர் மருத வேலிச் சுரமைநா டுடைய தோன்றால்
    ஏங்குநீ ரமிழ்தின் றீர்த்தஞ் சென்றனர் தெளித்த லன்றே.
    ஓங்குநீ ருலகந் தன்னு ளுயர்ந்தவர்க் குரிய தென்றான்.       971

    வருதற்கு முதலு முன்பே மருசிவந் துணர்த்தக் கேட்டேன்
    பொருதற்கண் ணரிய வேலோய் புராணநூற் புலவர் யாரும்
    கருதற்கண் ணரிய கண்ணி கடல்வண்ணற் குரிய ளென்னத்
    தருதற்கு மகிழ்ந்து வந்தேன் றாழமீங் கொழிக வென்றான்.       972

    விசயதிவிட்டர் அருக்ககீர்த்தியுடன் புறப்படல்

    அன்னண மரசர் பேசி யிருந்தபின் னருக்க னோடும்
    பொன்னணி புரிசை வேலிப் புதுநகர் புகுக வென்று
    மன்னவ குமரர் தம்மை மணிவரை யரச னேவப்
    பின்னவர் வேழ மேறிப் பெயர்ந்தனர் போது கின்றார்.       973

    சயம்பவை திவிட்டனைக் காணல்

    ஆயிடை யரச சீய மனையவர் பெயரும் போழ்தின்
    வேயுடை யருவிச் சாரல் வெள்ளிவேய் விலங்க னாடன்
    தீயுடை யிலங்கு வேலான் றிருமக ளமிர்தின் சாயல்
    வீயுடை யலங்கன் ஞான்ற மிடைமணி விமானஞ் சேர்ந்தான்.       974

    பொலங்கலம் புலம்ப வாயம் புடைநின்று போற்றுக் கூவ
    அலங்கலுங் குழலுந் தாழ வணிஞிமி றரவஞ் செய்ய
    இலங்கலங் கனக மாடத் தெழுனிலை யேறி னாளே,
    விலங்கலின் குவடு சேரு மெல்லியற் றோகை போல்வாள்.       975

    அமிர்தப் பிரபை

    ஆயத்து ளலர்கொம் பன்னா ளமிர்தமா பிரபை யென்ற
    வேயொத்த பணைமென் றோளி மிடைமணிக் கபாட நீக்கி
    வாயிற்கண் வருக நங்கை வளநகர் காண்க வென்று
    கோயிற்க ணருகு செல்லுங் குமரரைக் காட்டினாளே.       976

    விண்ணதிர்த் தனைய வாகித் திசைமுகஞ் சிலம்ப வீங்கிக்
    கண்ணதிர் முரசுஞ் சங்கும் கடற்பெயர் முழக்க மாக
    மண்ணதிர் கொள்ளச் செல்லு மைந்தர்கள் யார்கொ லென்னும்
    எண்ணதிர் மனத்தி னாட்குத் தோழிமற் றிதனைச் சொன்னாள்.       977

    முன்னவ னம்பி வெய்யோன் பெயரவன் முழவுத் தோளான்
    பின்னவன் சுரமை வேந்தன் பெருமக னவற்குத் தம்பி
    கன்னவில் வயிரத் தோளான் கருமுகி லுருவக் காளை
    இன்னவ னென்ன லோடு மிலங்கொளி முறுவல் கொண்டாள்.       978

    சயம்பிரபை

    நீலமா மணிக்குன் றேய்ப்ப நிழலெழுந் திலங்கு மேனிக்
    கோலவா யரச காளை குங்குமக் குவவுத் தோளான்
    மேலவா நெடுங்க ணோட மீட்டவை விலக்க மாட்டாள்
    மாலைவாய்க் குழலி சால மம்மர்கொண் மனத்த ளானாள்.       979

    தாமரை யனைய கண்ணுந் தடக்கையும் பவழ வாயும்
    பூமரு பூவைக் கண்ணிப் புதுமல ரொளியுங் காட்டித்
    தூமரு நீல மென்னு மணிதுணர்ந் தனைய குஞ்சிக்
    காமரு காளை கன்னி கண்களைச் சிறைகொண் டிட்டான்.       980

    சிறையென்ப தில்லைச் செவ்வே செம்புனல் சிறக்கு மாயி்ன்
    நிறையென்ப தில்லைக் காம நேர்நின்று பெருகு மாயின்
    நிறைநின்ற துளதென் பார்க்கின் றரும்பெற லிவள துள்ள
    நறைநின்று கமழுங் குஞ்சி நம்பிபாற் பட்ட தன்றே.       981

    கோணின்ற மதியம் போலக் குழைமுகஞ் சுடரக் கோட்டித்
    தாணின்ற குவளைப் போதிற் றாதகங் குழைய மோந்து
    வாணின்ற நெடுங்கண் காளை வடிவினுக் கிவர மற்றை
    நாணின்று விலக்க நங்கை நடுவுநின் றுருகு கின்றாள்.       982

    அவ்வழி யமுதம் பூத்த அருங்கலக் கொம்பைத் தன்கோன்
    இவ்வழி வருக வென்ற தவடம ரிசைப்பக் கேட்டு்
    மைவழி நெடுங்க ணாளு மனம்புக்க குரிசி றன்னைச்
    செவ்வழி மழலை நாணே யெழினியா மறைத்துச் சென்றாள்.       983

    சடிமன்னன் சயம்பவையைப் பயாபதிக்குக் காட்டலும் அவன் பாராட்டலும்

    ஆயிரங் கண்ணி லாதார்க் கழகுகாண் பரிய நங்கை
    வேயிரும் பணைமென் றோளார் மெல்லடி பரவச் சென்று
    மாயிருஞ் செல்வத் தாதை மலரடி வணங்கி நின்றாள்
    சேயிருங் குன்ற மீன்ற செழுமணிச் சலாகை போல்வாள்.       984

    மங்கையை வலத்துக் கொண்டு மாலையுங் குழலுந் தோடும்
    அங்கையாற் றிருத்தி மாம னடிகளைப் பணிக வென்று
    செங்கயற் கண்ணி தாதை செவ்விரல் குவியப் பற்றிப்
    பங்கயப் பழன நாடன் பாதமூ லத்து வைத்தான்.       985

    மருமகள் வணங்க முன்னே வலப்புடைக் குறங்கி னேற்றிக்
    கருமைகொள் குவளைக் கண்ணி கழிநலக் கதிர்ப்பு நோக்கித்
    திருமக ளிவளைச் சேருஞ் செய்தவ முடைய காளை
    அருமைகொ டிகிரி யாள்தற் கையமொன் றில்லை யென்றான்.       986

    அருங்கல மகளிர்க் கேற்ற வழகெலாந் தொகுத்து மற்றோர்
    இருங்கலி யுலகங் காணப் படைத்தவ னியற்றி னான்கொல
    ஒருங்கல துலகின் மிக்க மகளிர துருவ மெல்லாம்
    பெருங்கல வல்கு றன்பாற் புகுந்துகொல் பெயர்ந்த தென்றான்.       987

    அருந்தவ முடையன் யானு மன்றெனி லணங்கு போலும்
    பெருந்தகை நங்கை தன்னைப் பெற்றவன் றாதை யென்னும்
    திருந்திய மொழியுந் தெய்வச் செல்வமுந் தெய்வ மன்னீர்
    பொருந்திய தொடர்பு மெய்தப் புணருமோ புவியி னென்றான்.       988

    சயம்பவை தன் இருப்பிடம் சேறல

    ஆங்கமர்ந் தரசர் பேசி யலர்மிசை யணங்கன் னாளைப்
    பூங்கமழ் சோலை வேலிப் பொன்னகர் புகுக வென்னத்
    தேங்கமழ் குழலி னாருந் தாயருஞ் செவ்வி காப்ப
    வீங்கொளி விமானத் துச்சி வெண்ணிலா முற்றஞ் சேர்ந்தாள்.       989

    சயம்பவையின் காதல் நோய்

    மதுநனைந் தலர்ந்த தாரான்
            திறத்தையான் மறப்ப னென்னின்
    விதிநனி துரப்ப மீட்டு
            நினைப்பதே விளைக்கு முள்ளம்
    இதுநனி யறியு மோவிவ்
            வுலகமென் றிதயத் தோடும்
    புதுநனை விரிந்த கோதைப்
            பொன்னனாள் புலம்ப கொண்டாள்.       990

    காதலார் திறத்துக் காத லாக்கிய காத லாரை
    ஏதிலார் போல நோக்கி னிருமடங் காக வெய்தும்
    போதுலாஞ் சிலையி னான்றன் பொருகணைக் கிலக்கஞ் செய்யும்
    ஆதலாற் காம நோய்க்கோ ரருமருந் தில்லை யன்றே.       991

    தேமிடை கானல் வேலிச் செழுமணற் குவாலுங் குன்றும்
    பூமிடை தடமுங் காவும் புக்கவர்க் கரண மாகா
    தாமுடை மனமுங் கண்ணு நிறைவுந்தம் பால வாகா
    காமுடை மனத்தி னார்கட் கியாருளர் களைக ணாவார்.       992

    திவிட்டனைச் சேர்ந்தோர் சயம்பவையைக் காணவருதல்

    அனையவ ளரச கன்னி யாகிய பொழுதி னிப்பாற்
    புனைமல ரலங்கன் மார்பிற் பூமியங் கிழவன் றேவி்
    வனமல ருருவக் கண்ணி மணிவண்ணன் மார்பு தோயும்
    கனமணிப் பூணி னாளைக் காண்கென விடுக்கப் பட்டார்.       993

    மதுகரி வயந்த சேனை யெனவிவ ராதி யாகப்
    புதுமலர்க் கொடியும் பூவுந் துணர்களும் புணர்ந்த பேரார்
    கதிரன கலங்க டாங்கிக் காப்புமங் கலங்க ளேந்தி
    எதிர்தரு மிளமை யாரோ ராயிரத் தெண்மர் சூழ்ந்தார்.       994

    மாதவக் குலத்து ளார்கண் மாதவ சேனை யுள்ளிட்
    டோதியபெயரின் மிக்கா ருலகறி கலையின் வல்லார்
    கோதையுங் குழையுந் தோடுங் குளிர்முத்த வடமுந் தாங்கிப்
    போதிவர் குழலி தாதை பொன்னகர் முன்னி னாரே       995

    நன்னுத லவரு நம்பி தாயரு நடக்க வல்ல
    பொன்னுதற் பிடியுந் தேரும் வையமு மிழிந்து புக்கு
    மன்னனை வணங்கி யன்னோன் பணிகொண்டு மடந்தை கோயில்
    இன்னிசை மகளிர் முன்சென் றெதிர்கொள வெய்தி னாரே.       996

    பொன்னிய லமளி மேலாள் பூவணை மருங்கு தீண்டக்
    கன்னியர் கவரிக் கற்றை கைவல னசைப்பக் காய்பொன்
    னின்னிசைக் குழைவில் வீச வினிதினங் கிருந்த நங்கை
    துன்னிய மகளிர் தம்மைத் தமர்தொழு துணர்த்தக் கண்டாள்.       997

    சயம்பவையின் புன்னகை

    வலங்கொண்டு தொழுது வாழ்த்தி
            மற்றவ ரடைந்த போதின்
    உலங்கொண்ட வயிரத் தோளா
            னுழைக்கல மகளி ரென்று
    நலங்கொண்டோ ரார்வங் கூர
            நகைமுக முறுவ றோன்றிப்
    புலங்கொண்ட ததனைக் காப்பான்
            பூவொன்று நெரித்து மோந்தாள்.       998

    கண்கொள்ளாக்காட்சி

    விண்விளக் குறுக்குந் திங்கட் சுடர்நுதல் விளக்கி னாலும்
    பெண்விளக் குறுக்கு மேனி பெருகிய வொளியி னாலும்
    பண்விளக் குறுக்கு மின்சொற் பாவையைப் பாவை மாரைக்
    கண்விளக் குறுக்கு மாற்றாற் காண்டலுக் கரிய ளானாள்.       999

    செஞ்சிலம் பொலிக்குஞ் செல்வச் சீறடித் தெய்வப் பாவை
    பஞ்சிலங் கணையின் மேலாள் பரந்தொளி திருவில் வீச
    மஞ்சிலங் குருவ வானின் மழையிடை நுடங்கு மின்போல்
    அஞ்சிலம் படியி னார்த மறிவினை யயர்வித் திட்டாள்.       1000

    மாதவ சேனை சயம்பவையின் உருவத்தைத் தீட்டல்

    மற்றவர் காணும் போழ்தின் மாதவ சேனை யென்பாள்
    சுற்றிய பளிங்கிற் சோதிச் சுவர்மிசை யெரித்துத் தோன்ற
    இற்றிவ ளுருவ மென்றாங் கிதயத்து ளெழுதி வைத்துப்
    பிற்றையோர் பலகை தன்மேற் பெய்வளை யெழுத லுற்றாள்.       1001

    மாதவ சேனையின் கூற்று

    பண்களை மருட்டு மின்சொற் பாவையைப் பருக லுற்ற
    கண்களை மருள நீருங் கண்களெங் கண்க ளாகப்
    பெண்களை மருட்டுஞ் சாயற் பேதையைக் காண்மி னென்று
    மண்களை மருட்டுஞ் சீர்நும் மாமியா ரடிகள் சொன்னார்.       1002

    ஆதலா லவர்க்குச் சொல்லு மாற்றமொன் றருளிச் செய்மின்
    மாதுலாஞ் சாய லென்ன மாதவ சேனை யென்பாள்
    ஏதமாங் கில்லை யன்றே யெங்கண்முன் மொழிய வென்றாள்
    கோதிலாக் குணக்கொம் பன்னாள் குறுநகை முறுவல் கொண்டாள்.       1003

    அமிர்தமா பிரபையின் கூற்று

    அங்கவள் குறிப்பு நோக்கி யமிமுதமா பிரபை யென்னு
    மங்கலத் தோழி கூறு மாமியா ரடிக டம்மை
    எங்களின் செய்கை யதாக விணையடி பணிமி னென்றாள்
    செங்கனி கனிந்த செவ்வாய்ச் சிறுநுதற் பெரிய கண்ணாள்.       1004

    மாதவசேனை திரும்புதல்

    ஆங்கவண் மொழிந்த போழ்தி னணங்கினை வணங்கி மற்றத்
    தீங்கனி யமிர்த மன்ன திருமொழிப் பண்ணி காரம்
    வாங்குநீ ருலகங் காக்கு மன்னவன் பட்டத் தேவி
    ஓங்கிருங் கற்பி னாளுக் குய்ப்பளென் றுணர்த்திப் போந்தாள்.       1005

    பளிங்கியல் பலகை தன்மேற் பாவைய துருவந் தான்முன்
    றெளிந்தவா றெழுதிக் கொண்டு செந்துகி லுறையின் மூடி
    வளந்தரு கோயின் முன்னி மணிவண்ணற் பயந்த தேவி்
    அளந்தறி வரிய கற்பி னமிர்தனா ளருகு சேர்ந்தாள்.       1006

    மாதவசேனை தான் வரைந்த ஓவியத்தைக் காட்டலும் திவிட்டன்தாயின் மகிழ்ச்சியும்

    மையகத் தலர்ந்த வாட்கண் மாதவ சேனை சென்று
    வையகத் தரசன் றேவி மலரடி வணங்க லோடும்
    மெய்யகத் துவகை கூர விரும்பித்தன் னருகு கூவிக்
    கையகத் திதுவென் னென்னக் கன்னிய துருவ மென்றாள்.       1007

    அணிகலம் பரிந்து நங்கை யணிமரு ளுருவந் தந்த
    மணிமருண் முறுவற் செவ்வாய் மாதவ சேனைக் கீந்து
    பணிவரும் பலகை தன்மேற் பாவையைக் காண்டு மென்றாள்
    துணிவரும் பவழத் துண்டந் துடிக்கின்ற தனைய வாயாள்.       1008

    மணிதெளித் தமைக்கப் பட்ட வண்ணமே வண்ண மாகத்
    துணியமுன் கலந்து செய்த துகிலிகைத் தொழில்க ணோக்கி
    அணியின தொளிக ளோவிவ் வணங்கின துருவ மோவிக்
    கணிநலங் கருத லாகாக் கண்கவர் சோதி யென்றாள்.       1009

    பழுதிய லிலாத பாவை யுருவமோர் படியி னாலும்
    எழுதுதற் கரிதி யார்க்கு மிலங்கொளி யுருவ மேனி
    மொழிதலுக் கரிதா லத்தை முருகுவேய் குழலி மற்றுன்
    றொழுதகை யருளி னன்றே துணிந்தியா னெழுதிற் றென்றாள்.       1010

    சயம்பவையின் குறிப்பை மாதவசேனை தெரிவிக்கத் திவிட்டன் தாய் மகிழ்தல்

    அல்லது மடந்தை தோழி யவளது முகத்தி னாலோர்
    சில்லணி மழலைச் செவ்வாய்த் திருமொழி பிறந்த துண்டு
    வல்லிதன் மொழிபோய் நீரெம் மாமியா ரடிகட் கெம்வாய்
    எல்லையில் கிழமை தன்னா லிறைஞ்சுக வென்ப தென்றாள்.       1011

    என்றவண் மொழிந்த போழ்தி னிலங்கொளிப் பலகை தன்மேல்
    மின்றவழ் மேனி யாளை மென்பணைத் தோளிற் புல்லி
    இன்றினி தாகு மன்றே யிருந்தவப் பயங்க ணம்பால்
    ஒன்றின விளைந்த வென்றாங் கொளியினாற் புதிய ளானாள்.       1012

    திவிட்டன் தாய் அவ்வோவியத்தைத் தன்மகனுக்குக் காட்டும்படி மாதவசேனையை ஏவலும் அவள் செயலும்

    போதவி ழலரி நாறும் புரிகுழ லுருவப் பாவை
    சோதிசூழ் வடிவு நம்பி சுடர்மணி வண்ணண் காண
    மாதவ சேனை காட்ட வல்லையோ வென்ன வையற்
    கோதுவ திவணை யன்றே யடிகள்யா முணரி னென்றாள்.       1013

    மற்றவ டொழுது போகி மணிவண்ணன் மகிழ்ந்த கோயிற்
    சுற்றிநின் றெரியுஞ் செம்பொற் சுடர்மணி வாயி னண்ணி
    இற்றென விசைத்துப் புக்காங் கிளையவன் கழல்கை கூப்ப
    எற்றுநீ வந்த தென்றாற் கிதுவெனா வெடுத்துச் சொன்னாள்.       1014

    அருங்கல முலகின் மிக்க வரசர்க்கே யுரிய வன்றிப்
    பெருங்கல முடைய ரேனும் பிறர்க்கவை பேச லாகா
    இருங்கலி முழவுத் தோளா யெரிமணிப் பலகை மேலோர்
    நெருங்கொளி யுருவங் கொண்டு நின்னையா னினைந்து வந்தேன்.       1015

    ஓவியத்தைக் கண்ணுற்ற திவிட்டன் செயல்

    அப்படித் தாயிற் காண்பா மென்றன னரச நம்பி
    மைப்புடை நெடுங்க ணாளு மருங்குநின் றவரை நீக்கிக்
    கைப்புடைப் பலகை மேலாற் கன்னிய துருவங் காட்ட
    மெய்ப்புடை தெரிய மாட்டான் விருந்துகொண் மனத்த னானான்.       1016

    திவிட்டன் வினாவும் மாதவ சேனையின் மறுமொழியும்

    வானவர் மகள்கொல் விஞ்சை மாதுகொள் மண்ணு ளாள்கொல்
    தேனிவர் குழலி மற்றித் திருநுதன் மடந்தை யென்ன
    மானிவர் நோக்கி யன்னோர் மகளல்லண் மற்று நின்ற
    ஊனிவ ரலங்கல் வேலோ யுய்த்துணர்ந் தருளு கென்றாள்.       1017

    திவிட்டன் சயம்பவை என அறிதல்

    மண்மிசை மகளி ரின்ன வடிவுடை யவர்க் ளில்லை
    விண்மிசை மடந்தை யல்ல ளாய்விடின் விஞ்சை வேந்தன்
    கண்மிசை நவிலுங் காதற் கன்னிய துருவ மாமென்
    றெண்மிசை யிவரும் போழ்தி னிதுவென வவளுஞ் சொன்னாள்.       1018

    திவிட்டன் காதல் நோயுற்றமை

    கன்னிய துருவங் காளை காண்டலுங் கேடில் காமன்
    பொன்னியல் கழலன் றாரன் பூட்டிய சிலைய னாகி
    மன்னிய விற்கை நோக்கி மலரணி கணையு நோக்கித்
    துன்னிய பொழுது நோக்கிச் சுடுசரந் தொடுக்க லுற்றான்.       1019

    மண்ணியல் வளாக மெல்லா
            மகிழ்ந்துடன் வணங்கும் போழ்தும்
    உண்ணனி மகிழ்தல் செல்லா
            வொளியுடை யுருவக் காளை
    கண்ணியற் காத லாடன்
            கண்ணின் னுருவங் கண்டே
    வெண்ணெயின் குன்றந் தீயால்
            வெதும்புகின் றதனோ டொத்தான்.       1020

    மாகத்து மதிய மன்ன வாணுதன் மடந்தை தன்னை
    ஆகத்து ளடக்கிப் பின்னு மணிநுத லழகு நோக்கி
    நாகத்தை நடுக்கு மல்கு னங்கைதன் றிறத்துக் காம
    வேகத்தை மெல்ல மெல்ல வில்வலான் பெருக்கி யிட்டான்.       1021

    குழலையான் றிருத்திக் கோதை சூட்டுவன் குறிப்புண் டாயின்
    மழலைவாய் திறந்தோர் மாற்ற மருளுக மடந்தை யென்னும்
    நிழலவாம் பகழி போலு நெடுங்கணோக் கென்னும் வெய்ய
    அழலினா லளிய னாவி யடுவதோ வழகி தென்னும்.       1022

    சீறடிப் பரடு தோயுஞ் சிலம்பிணை திருந்த வைப்பன்
    வீறுடை நங்கை யென்றன் கவான்மிசை யிருத்தி யென்னும்
    சேறுடைக் கோதை மேலாற் சிறந்துவார் கூந்தல் கையால்
    வேறிடத் துருவல் செய்ய விரும்பிய மனத்த னானான்.       1023

    அந்துகி லசைத்த தோர்கை யவிழ்ந்தசை கின்ற தென்னும்
    பைந்தளிர் மேனி தன்மேற் பன்மணிக் கலங்க டீண்டு்ம்
    செந்தளிர் புரையு மேனிச் சேயிழை திறத்திற் காம
    வெந்தழல் கனல மூட்டி வில்வலான் மெலிய லுற்றான்.       1024

    சூரியாத்தமன வருணனை

    வாளையா நெடுங்க ணல்லாண் மணவினை தொடங்குங் கால
    நாளையா னமர்க ளோடு சூழ்ந்துவந் தறிவ லென்று
    காளைபாற் பட்டு வெய்யோன் குடதிசைக் கனபொற் குன்றிற்
    சூளிவா யருவி மாலைச் சுடர்முடிச் சென்னி சேர்ந்தான்.       1025

    விண்ணிய லுருவ வீதி மேனின்று மிழிந் வெய்யோன்
    கண்ணியல் விலங்க னெற்றி கதிரென்னுங் கையி னூன்றி
    மண்ணியன் மரத்தின் சாகை நுதிபிடித் தவையும் விட்டுப்
    பண்ணியல் பிறிதொன் றாகிப் பையவே மறைந்து போனான்.       1026

    வெய்யவ னென்னுஞ் செந்தீச் சுடரினால் வெதும்பப் பட்டு
    மையொளி பரந்த போன்று கருகின திசைகண் மற்று
    மொய்யழல் மேல விழ்ந்த தழன்மீள மூள்வ தேபோற்
    செய்யதோ ருருவ மேல்பாற் றிசைமுகஞ் சிறந்த தன்றே.       1027

    மாலைக்கால வருணனை

    கள்ளுலாங் கழனி நீத்துக் கருங்கயல் கவுளுட் கொண்டு
    புள்ளெலாங் குடம்பை சேர்ந்து பார்ப்பினம் புறந்தந் தோம்பி
    உள்ளுலா வுவகை கூரத் துணைபுணர்ந் தொலித்து வைக
    வள்ளலார் மனத்துக் கெஃகாய் மாலைவந் திறுத்த தன்றே.       1028

    காதலா ரகன்ற போழ்திற் கற்புடை மகளிர் போலப்
    போதலொங் குவிந்த பொய்கைத் தாமரை பொலிவு நீங்க
    மீதுலாந் திகிரி வெய்யோன் மறைதலுஞ் சிறுவெள் ளாம்பல்
    தாதலொ மலர நக்குத் தம்மையே மிகுத்த வன்றே.       1029

    செய்யொளிச் செக்க ரென்னுஞ் செம்புனல் பரந்து தேறி
    வெய்யொளி நிறைந்த நீல விசும்பென்னு மணிகொள் பொய்கை
    மையிரு ளென்னுஞ் சேற்றுள் வளர்திங்கட் கதிர்க ளென்னு
    மொய்யிளங் கமல நாள வளையங்கண் முளைத்த வன்றே.       1030

    அங்கொளி விசும்பிற் றோன்றி யந்திவா னகட்டுக் கொண்ட
    திங்களங் குழவி பால்வாய்த் தீங்கதி ரமிழ்த மாந்தித்
    தங்கொளி விரிந்த வாம்ப றாமரை குவிந்த வாங்கே
    எங்குள ருலகுக்கெல்லாம் மொருவரா யினிய நீரார்.       1031

    வேறு

    மணவாய மல்லிகையின் மதுநனைந்து
            வண்கனிகண் மதர்ப்ப வீசி
    இணர்வாய வனமுல்லை யிதழ்வாரி
            யிளந்திங்கட் கதிர்கா லூன்றித்
    துணைவாய சுரும்பிரங்க வரவிந்த
            வனத்துதிர்ந்த துகளுஞ் சீத்துத்
    திணைவாய கருங்குவளை திளைத்தசைக்குந்
            தென்றலுமொன் றுடைத்தே மாலை.       1032

    மைபருகு நெடுங்கண்ணார் மணிமாட
            மிசையிட்ட வளைவாய்ப் பாண்டில்
    நெய்பருகு கொழுஞ்சுடரி னகிலாவி
            யிடைநுழைந்து நிழல்கால் சீப்பப்
    பைபருகு மணியுமிழ்ந்து பணநாக
            மிரைதேரும் பருவ மாலை
    கைபெருகு காமநோ யுடையவர்க்கோர்
            கனல்போல வருமே காணில்.       1033

    கணிமிடற்ற நறவேங்கை யவிர்சுணங்கின்
            மடவார்தங் கைமேற் கொண்டு
    பணிமிடற்று மொழிபயிற்றும் பைங்கிளியின்
            செவ்வழியி னிசைமேற் பாட
    மணிமிடற்ற செங்கண்ண பவழக்காற்
            கபோதங்கண் மதலை தோறு
    மணிமிடற்றி னாலகவ வனங்கனையு
            மனல்விக்கு மளிய மாலை.       1034

    சயம்பவை சினாலயத்தை அடைதல்

    வெஞ்சுடர்வே லிளையவனாங் கினையனவின்
            மெலிவெய்த விசும்பு செல்லும்
    விஞ்சையரை யன்மடமா மகணிலையா
            தனெவினவில் விளம்பக் கேண்மின்
    பஞ்சிலங்கு தேரல்குற் பாடகக்காற்
            பாவையர்கள் பலர்பா ராட்டச்
    செஞ்சுடரோன் மழைபொழுதிற் சினவரன்றன்
            றிருக்கோயில் சென்று சார்ந்தாள்.       1035

    சயம்பவையின் வழிபாடு

    திண்ணிலைய மணிக்கதவந் தாழ்திறந்து
            திருவிளக்குத் திகழ மாட்டி
    விண்ணியல நறும்புகையுங் காழகிலும்
            விசும்பிவர்ந்து விம்ம மூட்டிக்
    கண்ணியுடன் வெறிமலரு நறும்பொடியுங்
            கமழ்சாந்துங் கையி னேந்திப்
    பண்ணியல நரம்பிசைமேற் பரமனையே
            பணிமொழியாள் பரவா நின்றாள்.       1036

    வேறு
    வரிப்பாட்டு

    மணங்கமழுந் தாமரையின் மதுத்திவலை
            கொப்பளித்து மதர்த்து வாமன்
    அணங்கிவர்சே வடியினழ கெழிலேரோ
            ரொளிபருகி யலரும் போலும்
    அணங்கிவர்சே வடியினழ கெழிலேரோ
            ரொளிபருகி யலரு மாயின்
    வணங்கினவ ரொளிவிரிந்து களிசிறந்து
            மதிமகிழன் மருளோ வன்றே.       1037

    அரும்பிவரு மரவிந்த மறிவரன
            தடிநிழல தடைந்தோ மென்று
    சுரும்பிவரி யிசைபாடச் செம்மாந்து
            சுடருமிழ்ந்து துளும்பும் போலும்
    சுரும்பிவரி யிசைபாடச் செம்மாந்து
            சுடருமிழ்ந்து துளும்பு மாயின்
    விரும்பினராய்த் தொழுதெழுவார் மெய்ம்மறப்பு
            முண்மகிழ்வும் வியப்போ வன்றே.       1038

    அழலணங்கு தாமரையா ரருளாழி
            யுடையகோ னடிக்கீழ்ச் சேர்ந்து
    நிழலணங்கி முருகுயிர்த்து நிரந்தலர்ந்து
            தோடேந்தி நிழற்றும் போலும்
    நிழலணங்கி முருகுயிர்த்து நிரந்தலர்ந்து
            தோடேந்தி நிழற்று மாயிற்
    றொழிலணங்கு மனமுடையார் சூழொளியும்
            வீழ்களிப்புஞ் சொல்லோ வன்றே.       1039

    வேறு

    மணிமரு டிருமொழி வாமன் சேவடி
    அணிமரு ளுருவுடை யமிர்தின் சாயலாள்
    பணிமொழி பலவுடன் பரவி வாழ்த்தினாள்
    பிணிமொழி பிறவிநோய் பெயர்க வென்னவே.       1040

    சயம்பவை நிலாமுற்றத்தை அடைல்

    வென்றவன் றிருவடி வணங்கி மெல்லவே
    சென்றுதன் வளநகர்ச் செம்பொன் மாளிகை
    நின்றொளி விரிவதோர் நிலவு வேதிகை
    முன்றின்சென் றெய்தினாண் முகிழ்த்த வேட்கையாள்.       1041

    சந்திரோதய வருணணை

    செய்யவன் செங்கதிர் சுருக்கச் செக்கர்வான்
    பையவே கருகலும் பரவை பாற்கதிர்
    ஐயவே யவிர்கதி ரரும்பு வந்தது
    வையமே தொழப்படும் வளர்வெண் டிங்களே.       1042

    இருங்கயத் தெழின்மலர் நிரந்து மேலதோர்
    சுருங்கையங் கவிழ்ந்தனெத் தோன்று மீன்குழாம்
    அரும்பிய பசலைவா னகட்டுத் தாரகை
    ஒருங்கியன் றொளிநகை யுமிழ நோக்கினாள்.       1043

    சயம்பவை வருந்துதல்

    திங்களங் கொழுநனைச் சேர்ந்து தாரகை
    அங்கொளி முகிழ்நகை யரும்பு மாதலான்
    மங்கல மணமகன் மணந்த போதலால்
    எங்குள திளையவர்க் கிளைமை யின்பமே.       1044

    என்றுதன் னகம்புடை யியலக் காளையால்
    ஒன்றிய வுள்ளநோ யொளிக்க லுற்றனள்
    இன்றிவ ளகத்தது காம நோயெனப்
    பொன்றவழ் பசலைமெய் புகல லுற்றதே.       1045

    சயம்பவை நாணும்படி தோழியர் தனித்தனியே கூறுதல்

    ஆயின திருவனா ளாயத் தோழியர்
    வேயெனத் திரண்டதோள் விளங்கு மேனியாள்
    மேயின குறிப்பினை யறிந்து மெல்லவே
    பாயின பணிமொழி பலவுங் கூறினார்.       1046

    விஞ்சைய ருலகினு மினிது வீங்குநீர்
    மஞ்சிவர் பொழிலணி மண்ணென் றோதினாள்
    அஞ்சில மொழியவ ளொருத்தி யாங்கயர்
    பஞ்சிலங் ககலல்குற் பாவை பாங்கினே.       1047

    பனிவரைப் பாங்கரும் பருவச் சோலையும்
    தனியவர்க் கினனனி பயக்குந் தன்மனக்
    கினியவ ரெவ்வழி யிசைவ ரவ்வழித்
    துனிவர வில்லென வொருத்தி சொல்லினாள்.       1048

    காதலார் காதன்மை கலந்து காதலர்க்
    கேதிலா ரயலரா யியல்ப வாய்விடிற்
    சாதலும் பிறத்தலு மிலாத தானமும்
    கோதனெக் கொண்மினென் றொருத்தி கூறினாள்.       1049

    திணைவிராய்ப் பொய்கையுந் திகிரிப் புள்ளினுக்
    கிணையிராப் பிரிந்தபி னெரியொ டொக்குமாற்
    றுணைவராற் றனியவர் திறத்துச் சொல்லினோர்
    புணைவராம் படியவ ரில்லைப் பொன்னனீர்.       1050

    முல்லையின் முருகுகொப் புளித்து மூரல்வாய்
    மல்லிகை யிணர்த்துணர் மயக்கு மாருதத்
    தெல்லியு மிளம்பிறைக் கதிரு மென்பவான்
    மெல்லிய லவர்களை மெலிவு செய்யவே.       1051

    விரைசெறி புரிகுழல் வேற்க ணங்கைதன்
    புரைசெறி கடிவினை நாளைப் போழ்தனெ
    முரைசெறி யிமிழிசை முழங்கக் கேட்டனன்செறி
    மறுகிலென் றொருத்தி கூறினாள்.       1052

    நாளைநா ளென்பது நனித்துஞ் சேய்த்தனெ
    வாளையா நெடுங்கணீர் மயங்கி யென்னையிக்
    கோளையாம் விசும்பிடைக் குளிர்வெண் டிங்களார்
    தாளையாம் வணங்குபு தாழ்ந்து கேட்டுமே.       1053

    காமனுங் கணைப்பயன் கொண்டு கண்களால்
    நாமுநன் னல்வினை நுகரு நாளவாய்
    யாமமிங் கொருங்குட னகல வென்று போய்
    வாமன்ற னகருழை வரங்கொள் வாங்கொலோ.       1054

    இன்னன நகைமொழி யின்பக் கோட்டியோ
    டன்னமென் னடையவ ளமர வாயிடை
    மன்னவற் கேழிசைத் தெழுந்த தூரியம்
    கன்னியுங் கடிகம ழமளி யேறினாள்.       1055

    இரவு வருணனை

    மல்லிகை மணங்கமழ் மாலை போகலும்
    பல்லிய மவிந்தன பரந்த பாற்கதிர்
    மெல்லவே மெல்லவே சுருங்கி வீங்குநீர்
    எல்லைசென் றொளித்ததவ் விளவெண் டிங்களே.       1056

    நல்வினை கழிதலு நலியுந் தீவினை
    செல்வதே போலிருள் செறிந்து சூழ்ந்தது
    பல்வினை மடிந்தன படர்ந்த தாயிடை
    வல்வினைக் கயவரே வழங்குங் கங்குலே.       1057

    மாடவாய்ச் சுடரொளி மழுங்கி மங்கையர்
    ஆடுவார் முழவங்கண் ணயர்ந்த யாழொடு
    பாடுவார் பாணியுஞ் சுருங்கி நன்னகர்
    ஆடுநீர்க் கடற்றிரை யவிந்த தொத்ததே.       1058

    மடந்தையர் முலைமுக மடுத்த மார்பினர்
    அடைந்துதே னுறங்கிய வலங்கன் மாலையார்
    மிடைந்ததோ டழூஉப்பிணை நெகிழ மெல்லவே
    இடங்கழித் தொழிலொழிந் திளையர் துஞ்சினார்.       1059

    மதுக்கடை நறும்பிழித் திவலை நாவளைத்
    தொதுக்கமும் வெறியயர் களனு மூடுலாய்ச்
    செதுக்கமும் பலிபெறு தெருவுந் தேர்ந்துபோய்க்
    கதுப்புகுந் துறங்குபு கழுதுஞ் சோர்ந்தவே.       1060

    இடஞ்சிறை யிளம்பெடைக் கீந்து பார்ப்பின்மேற்
    றடஞ்சிறை வலத்தது கோலித் தாந்தம
    தொடுங்குதாண் முடங்கவைத் துறங்கு கின்றன
    புடங்கொள்பூம் பொழிலிடைப் புள்ளின் சேவலே.       1061

    கனைந்ததங் காதலி்ற் கனவிக் கண்டிறந்
    தினைந்தபோன் றிடையிடை நோக்கி யின்குரல்
    புனைந்தகம் புணர்பெடை புல்லி மெல்லவே
    அனந்தருண் முரன்றன வன்றிற் சேவலே.       1062

    தூங்காதோர் இருவர் என்றல்

    மன்னிய மணித்தடத் தாம்பல் வாய்குடைந்
    தின்னியன் மாருத மியங்குங் கங்குல்வாய்க்
    கன்னியுங் காளையு மொழியக் காரிரு
    டுன்னிய வுலகெலாந் துயில்கொண் டிட்டதே       1063

    வைகறைப் பொழுது

    நள்ளிரு ளிடையது நடப்ப வைகறை
    புள்ளிமி ழிசையொடு புகுந்து போம்வழித்
    தெள்ளிய மதியவன் செய்த தீமைபோன்
    மெள்ளவே கனையிருண் மெலிவு சென்றதே.       1064

    கிளர்த்தன கிலுகிலுப் பரவப் புட்குழாம்
    வளர்த்தன மகரயாழ் மருளி யின்னிசை
    தளர்த்தன கருங்கடற் றரங்கத் தன்னமே
    விளர்த்தது குணதிசை வேலை வட்டமே.       1065

    சூரியோதய வருணனை

    ஆணைசெய் தரசுவீற் றிருப்ப வாயிடைக்
    கோணைசெய் குறும்புகூர் மடங்கு மாறுபோற்
    சேணுயர் திகிரியான் கதிர்சென் றூன்றலும்
    பாணியாற் கரந்தன பரந்த சோதியே.       1066

    விளித்தன புலரிவெண் சங்கம் வேரியாற்
    களித்தன கயமலர்த் தொழுதி யம்மலர்
    ஒளித்துமுன் னுறங்கிய வொலிவண் டார்த்தன
    தெளித்தது செறிபொழிற் றேம்பெய் மாரியே.       1067

    தூண்டிய சுடர்விளக் கன்ன கன்னியோ
    டாண்டகை யழல்வலஞ் செய்யு மாரணி
    காண்டகை யுடைத்தது காண்டு நாமென
    ஈண்டிய கதிரவ னுதய மேறினான்.       1068

    உருகின பனிபொதி பாறை யுக்கநீர்
    பருகின பகலவன் பரவை வெங்கதிர்
    கருகின கயம்வள ராம்பல் கண்கொளப்
    பெருகின திசைமுகம் பெயர்ந்த தொத்தவே.       1069

    வேறு
    கவிக்கூற்று

    நிறைந்தார் கடிநல் வினைநீ தியினால்
    அறைந்தாங் கதுசென் றதுசென் றவகை
    சிறந்தா ளொடுகா ளைதிறத் துரையா
    மறந்தா மதுவல் லவர்சொல் லுகவே.       1070

    முரசறைதல்

    குருமா மணிவேய் குடைமும் மையுடைப்
    பெருமா னடிபே ணியபூ சனைநாள்
    கருமால் களியா னைகண்மேற் கனபொன்
    அருமா முரசார்ப் பவறைந் தனரே.       1071

    முரசும் முழவின் குழுவும் முடிசேர்
    அரசன் னகரின் குழுவுங் கெழுமி
    விரையும் புகையும் மலரும் பலியின்
    இரையுந் நெடுவீ திநிறைத் தனவே.       1072

    பிடியுங் களிறும் பிறவுந் நெரிவுற்
    றடியும் மிடலா மிடமின் றிலகும்
    கொடியுங் குடையுங் குளிர்சா மரமும்
    முடியின் சுடரும் மிசைமூ டினவே.       1073

    திருமண வருணனை

    வழுவின் னெறிவா மனமா நகர்வாய்
    விழவின் னணமா கவிதித் தனராய்க்
    கழுவும் மணிபோல் பவடன் கடிநாள்
    எழுவும் முரசெங் குமியம் பினவே.       1074

    நடைமா லைநடந் ததுநந் திமுகம்
    புடைமா லைபுகுந் தனர்புண் ணியநீர்
    இடைமா லைநிகழ்ந் ததொரேத் தரவம்
    கடைமா லைநிகழ்ந் ததுகாப் பணியே.       1075

    திரைசங் கொலியோ டுசிறந் தனபோன்
    முரைசங் கொலியோ டுமுழங் கியெழசங் கொலியோ டுணரா வகையால்
    அரைசங் கொலியோ டெழுவார்த் தனவே.       1076

    துணிமுத் தநகைத் துவர்வா யிளையார்
    கணிமுத் தணிசிந் தியகண் விரவி
    மணிமுத் தமணற் றிடலா கிமறைத்
    தணிமுத் துமிழ்வீ தியடுக் குநவே.       1077

    துகிலார் கொடிபொங் கினதொங் கனிமிர்ந்
    தகிலார் புகையா வியடுத் தமையாற்
    பகலா னொடுவந் திரவும் பகலே
    இகலா துடனா கியியைந் துளவே.       1078

    பலர்மன் னியபா டலுமா டலுமே
    வலமன் னிமயங் கிமுயங் குதலால்
    நிலமன் னவருந் நெடுமால் வரைமேற்
    குலமன் னவருங் குளிர்தூங் கினரே.       1079

    அகல்வா னிடையங் கிழிவா னவரும்
    முகிலா றிழிவிஞ் சையரும் முடுகி்ப்
    பகலா னொடுதா ரைபரந் தனபோற்
    புகலா ரொளிபோந் ததுபொன் னகரே.       1080

    வடமே ருமுகட் டலரும் மலரும்
    புடமே ருகலத் தலரும் மலருந்
    தடமே ருளபொன் னவிழ்தா மரையும்
    திடமே வியவிஞ் சையர்சிந் தினரே.       1081

    அணிவேண் டினர்கொள் ளவடுத் தனவும்
    மணிவேண் டினர்கொள் ளவகுத் தனவும்
    கணிவேண் டினநாள் கழியுந் துணையும்
    பணிவேண் டினர்வீ திபரந் தனவே.       1082

    நறவுண் டொருபா னகுவா ரொருபாற்
    புறவுண் டகலா வமிர்தம் புணர்வார்
    உறவுண் டமரத் தொருபா லுறைவார்
    பிறவுண் டையுமின் னனபின் னினவே.       1083

    இழிகின் றனர்விஞ் சையரெத் திசையும்
    பொழிகின் றதுபொன் மழையும் மழையுட்
    சுழிகின் றதுதொல் சனவெள் ளமதற்
    கொழிகின் றதுநா முரையா ததுவே.       1084

    வேறு

    தாமரை முகத்தம னியக்குட மவற்றாற்
    சாமரை முகத்தன மதக்களிறு தம்மேற்
    பூமரை முகத்தெறி புனற்றிரை முகந்து
    தூமரை முகத்தரசர் சென்றுபலர் சூழ்ந்தார்.       1085

    வண்டுபடு மாலையர் மடப்பிடிக டம்மேன்
    கொண்டய லுழைக்கல மழைக்கண்மட வார்கள்
    எண்டிசையு மெங்குமிட மின்றிமிடை வுற்றார்
    கண்டவரை மேல்விரவு கார்மயிலொ டொத்தார்.       1086

    திவிட்டன் மணவறைக்கு வருகை

    மாளிகை நிரைத்த மணி மாடநகர் முன்னால்
    ஆளியர சேந்துமணி யாசன மதன்மேற்
    காளைகழல் வேந்தர்பலர் சூழ்தர விருந்தான்
    நாளொடு பொலிந்தநகை மாமதிய மொத்தான்.       1087

    அங்கண யிராவண மிரண்டுட னெடுத்த
    மங்கல மணிக்கலச நீர்சொரிய வாடிப்
    பொங்குதிரை யொன்றிரு புயற்பொழிய வேந்தித்
    தங்குபுனல் பெய்ததட மால்வரையொ டொத்தான்.       1088

    மன்னர்கள் சொரிந்தமணி நீரருவி யாடிப்
    பின்னைமலர் மாரியகல் வானினவர் பெய்ய
    மின்னவிர் விளங்குசுடர் வேல்விடலை யாடிப்
    பொன்னணி புனைந்துபுது வேள்விநகர் புக்கான்.       1089

    சயம்பவையின் நீராட்டு

    மங்குன்மழை சூழுமணி மால்வரையின் மேலார்
    கங்கைமுத னீரருவி கொண்டுகலி வானம்
    எங்குமிட மின்றியெழில் விஞ்சைய ரிழிந்தார்
    நங்கைமண நீரணியை நாமொழிவ தென்னோ?       1090

    ஆறுகுல மால்வரையின் மேலருவி நீரும்
    வீறுபெறு மெல்லியலை யாட்டியபின் மீட்டு
    நாறுமலர் நந்தன வனத்தனவொ டெல்லா
    வேறுபடு பூமழையு மாடவிளை வித்தார்.       1091

    சாந்துசொரி மாரிபொழி கின்றதகை யோடும்
    தேந்துவலை வீசியுளர் கின்றதொரு தென்றல்
    வேந்தருல கோபிறிதொ ரூழிகொலி தென்று
    மாந்தர்மருள் வாருமகிழ் வாருமுள ரானார்.       1092

    சயம்பவை மணவரை அடைந்தமை

    மங்கல வனப்பினதொர் கோடிமடி தாங்கி
    அங்கொலி விசும்பினவர் தந்தவணி சேர்த்திப்
    பங்கய முகத்தவர் பலாண்டிசை பராவச்
    செங்கய னெடுங்கணவள் வேள்விநகர் சேர்ந்தாள்.       1093

    புரோகிதன் செயல்

    நங்கைமண வேள்விநக ரெய்துவதன் முன்னைப்
    பொங்குபுரி நூலனலர் தாமரை புனைந்தான்
    மங்கல வுழைக்கல நிரைத்தமண மாடம்
    அங்கது புகுந்தழல் வளர்க்கிய வமைந்தார்.       1094

    மங்கலச் சடங்கு

    சாந்துமெழு கிட்டதட மாமணி நிலத்தைச்
    சேர்ந்துதிகழ் பொன்னியல் சலாகைநுதி தீட்டிப்
    பேர்ந்துமொரு கால் விரையி னான்மெழுகு வித்தான்
    ஆய்ந்தமறை யோதியத னாரிட மறிந்தான்.       1095

    பருத்தமணி முத்தமண லாற்சதுர மாகத்
    திருத்தியொரு பால்பணிய வைத்ததிடர் சூழத்
    தருப்பையி னுனித்தலை வடக்கொடு கிழக்காய்ப்
    பரப்பின னதற்குமொரு பாவனை பயின்றான்.       1096

    நான்முகன் வலத்தவ னிடத்துமொரு காவல்
    மேன்முக மிருந்துகுண பால்வெறுவி தாகப்
    பான்முறை பயின்றபரு திக்கடிகை பாய்த்தித்
    தான்முறையி னோதுசமி தைத்தொழுதி சார்ந்தான்.       1097

    முகூர்த்தகாலத்தில் பலரும் வருதல்

    ஆயிடை நடுக்கட லுளானமர ராசான்
    ஏயுடைய னாயசுர மந்திரி யெழுந்தான்
    போயுடை விசும்பின்மதி யும்புகுது கின்றான்
    மேயுடை யணிந்தகணி வேலையிது வென்றான்.       1098

    மணவேள்வி

    அங்குமுன் வளர்த்தவழ லேகடவு ளாக
    மங்கையை மணக்குழுவின் முன்னைவரை வேந்தன்
    கொங்குவிரி தாரவற்கு நீரொடு கொடுத்தான்
    நங்கையொடு நாண்மலரு ளாளையு மடுத்தான்.       1099

    மன்னியழல் வேள்வியி லவற்குவல மாகப்
    பின்னிய தருப்பைகள் பிடித்தவை விடுத்தாங்
    கன்னமனை யாளொடயில் வேலவ னிருந்தான்
    கன்னியொ டியைந்தகதிர் மாமதிய மொத்தான்.       1100

    கந்துளுமி ழுங்கரிய சூழ்புகைகள் விம்ம
    வந்துசுட ரேந்திவல னேசுழல மாட்டி
    அந்தணனு மங்கழ லமைத்துமிக வேட்டான்
    மைந்தனு மடந்தையை மனத்தின்மிக வேட்டான்.       1101

    பொங்கழல்செய் வேள்விமுறை போற்றலு மெழுந்தான்
    அங்கையி னணங்கினணி மெல்விரல் பிடித்து
    மங்கையொடு காளைவல னாகவரு கின்றான்
    கங்கையொடி யைந்துவருகார்க் கடலொடொத்தான்.       1102

    கைம்மலரின் வீரனவள் கைமுகிழ் பிடிப்ப
    மெய்ம்மயி ரெறிந்துமணி வேர்நுத லரும்பிச்
    செய்யதன சீறடிகள் செவ்வனிட மாட்டா
    அம்மயிலி னாணதனை யாவரறை கிற்பார்.       1103

    தானத்தின் சிறப்பு

    பின்னுமுள வேள்விமுறை சென்றபல பேசி
    என்னையவை நிற்கவெரி யோம்புதொழி லார்க்குப்
    பொன்னொடு மணிக்குவியல் போந்துபொழி கின்றார்
    கன்னிதமர் காளைதம ரென்றிவர் கலந்தே.       1104

    அங்கமிரு மூன்றுமறை நான்கலகில் கற்பம்
    இங்குமுடி விஞ்சையென வின்னகரை கண்ட
    பொங்கெரிய வேள்விவல்பு ரோகித னவற்குச்
    சங்கநிதி யென்னநெதி மாரிதரு வித்தார்.       1105

    அருந்ததிகாட்டல்

    வானநெறி யெங்கும்வளர் சோதிவட மீனைக்
    கானமயி லன்னவடன் முன்னைநனி காட்ட
    யானுமிவள் போலுலகு காணவியல் வேனோ
    ஈனமொடு நாணமில னோவென விகழ்ந்தாள்.       1106

    வேறு
    வந்தவர் பாராட்டிச் செல்லல்

    எனமண வினைகள் செல்ல வின்னண மெய்து கென்று
    புனவரை கான முன்னி மாதவம் போகு வாரும்
    இனமலி செல்வ மற்று மிப்படி வருவ துண்டோ
    கனவினு மென்ன மாந்தர் கண்டுமீள் வாரு மானார்.       1107

    பள்ளியறையைச் சேர்தல்

    இடிபடு முரசிற் சாற்றி யேற்பவ ராசை தீரச்
    சுடர்விடு மணியின் மாரி பொன்னொடு சொரிய வேவிக்
    கடிபடு நெடிய மாடங் கன்னியோ டேறி னானால்
    முடிவுகொ ளுலக மெய்து மின்பமா மூர்த்தி யென்பான்.       1108

    காதல் வெள்ள வருணனை

    கழுமிய காக துண்டங் கமழ்தொறுங் காள மேகம்
    குழுமிய தனைய மாடக் குவட்டிடை யமளி சேர்வார்
    விழுமலர்ப் பிணைய லாளும் விடலையு மேரு நெற்றிச்
    செழுமணிச் சிலைசென் றேறுந் தெய்வமா மிதுன மொத்தார்.       1109

    பொன்னியல் கொடியி னொல்கிப்
            பூவணைப் பொருந்தும் பாவை
    கன்னிநா ணொடுக்கங் காளை
            கண்களி கொள்ள நோக்கிப்
    பின்னவ ளொடுங்க வாங்கி்ப்
            பெருவரை யகலஞ் சேர்த்தி
    இன்னகை மழலை கேட்பா
            னென்கொலோ வென்று சொன்னான்.       1110

    நின்றநா ணென்னுங் கன்னிச் சிறைவிண்டு காளை திண்டோட்
    குன்றினாற் செறிக்கப் பட்ட குமரிநீ ரமிர்த யாறு
    சென்றுதேன் பகர்ந்து செம்பொற் கலஞ்சிந்தித் திளைத்து விம்மி
    அன்றவ னார்வ வெள்ளக் கடலிடை யழுந்திற் றன்றே.       1111

    பருவத்தா லரும்பிப் போதாய்ப் பையவே யலர்ந்து முற்றி
    மருவித்தேங் கனிகொண் டுள்ளான் மனங்கொள வளிந்த காமத்
    திருவொத்த களியின் றீஞ்சா றாரவுண் டார மாட்டார்
    உருவத்தா லிருவ ராகி யுள்ளத்தா லொருவ ரானார்.       1112

    உலவிய வலங்கன் மாலை யொளிமல ருடைய மார்பிற்
    குலவிய மணிமுத் தோடுங் குவிமுலைக் குவடு பாயக்
    கலவியுங் களிப்புங் காமப் புலவியுங் கலந்து சால
    நிலவிய மதுவுண் டார்போ னெஞ்சுண மயங்கி யிட்டார்.       1113

    அடிக்கலந் திருத்தி யம்மென் புரிகுழற் சுருளை நீவி
    முடிக்கல ரணிந்து காதன் முகிழ்நகை முகிழ்ப்பப் புல்லிக்
    கடிக்கணி யாய காளை கவான்மிசை யிருத்திக் காமர்
    குடிக்கணி யாய கொம்பு கேட்கமற் றிதனைச் சொன்னான்.       1114

    வேறு
    திவிட்டன் சயம்பவையின் நலம்பாராட்டல்

    செங்குவளை நாறுந் திருமேனி செவ்வாயும்
    அங்குவளை யீரிதழு மாம்பலுமே நாறுமால்
    இங்கிவளை முன்படைத்த தேவனென் னின்னுயிரைப்
    பைங்குவளை மாலையாட் காளாய்ப் படைத்தானே.       1115

    அன்புருகு காமத் தீமாட்டி யளியவென்
    என்புருக வேவ விணைநெடுங்கட் பூம்பாவை
    முன்பெருகு முந்நீ ரமுதாய் விளைத்தினிய
    மின்பருகு நுண்ணிடையார் மெல்லுருவங்கொண்டதே.       1116

    பான னெடுங்க ணிவையே பகழியா
    வேனலுடை வேந்தன் வென்றிக்கு நோற்றானே
    யானு மளியற்றே னித்துணையோர் காலமும்
    தேனார் நறுமேனி தீண்டுதற்கு நோற்றேனே.       1117

    காவியா கின்ற கருமா மழைக்கண்ணி
    மேவியா னுண்ணு மமிர்தாய் விருந்தாகி
    ஆவியா கின்றா ளருமருந்து மாகின்றாள்
    பாவியேன் பாவைக்கோ ராளேயா கின்றேனே.       1118

    செம்பவழ மேய்ப்பத் திகழ்ந்திலங்கு சீறடியின்
    வம்பழகு நோக்கி வழிபடுவ தேசாலும்
    அம்பவழ வாயு மளகஞ்சேர் வாணுதலும்
    எம்பவமோ நுங்க யாமெம்மை யறியேமே.       1119

    வண்டே மடந்தை மணியைம்பான் மேவியிருந்
    துண்டே யெனநுடங்கு நுண்மருங்கு நோவியீர்
    தண்டேன் காணீருந் தளிர்மேனி நாற்றத்தாற்
    பண்டேபோல் வந்து பயிலாது போமினே.       1120

    கள்ள மடநோக்கி தன்னைக் கரந்தனெ
    துள்ளத்தின் வைப்பி னுருவ மதுகாணேன்
    மெள்ளவென் றோளணைவா ளென்னும் விருப்பாரா
    தெள்ளு மனத்தினுக் கெய்திற் றறியேனே.       1121

    காதலால் வந்தென் கவான்மே லிருப்பினும்
    ஏதிலாள் போலு மிமைப்பி னிமையாதே
    போதுலாம் வாண்முகமே நோக்கிப் பொலிவேனென்
    மாதரா ணாணும்யான் வாழுமா றோரேனே.       1122

    வேறு

    உலம்பா ராட்டுந் தோளவ னொண்பூங் குழலாளை
    நலம்பா ராட்டி நாகிள முல்லை நகுவிக்கும்
    வலம்பா ராட்டி வந்ததொர்மா ரிப்புய லொத்தான்
    குலம்பா ராட்டுங் கொம்புமொர் முல்லைக் கொடி யொத்தாள்.       1123

    காதலர் சோலையை அடைதல்

    தேனார் கோதைச் செங்கயல் வாட்கண் சிறைகொள்ள
    ஊனார் வேலா னுள்ள மிழந்தா னுழையாரை
    மேனாள் போல மெய்ப்பட மாட்டான் விளையாடும்
    கானார் சோலைக் காவகப் புக்கான் கமழ் தாரான்.       1124

    சோலையில் நிகழ்ந்தன

    தண்டாரீன்று செந்தளி ரேந்தித் தழல்பூத்த
    வண்டார் பிண்டி வார்தளிர் நீழன் மணிவட்டங்
    கண்டாங் கேறிக் காரிகையோடு விளையாடிப்
    பண்டான் கொண்ட பாவையார் பாடலிசை கேட்டான்.       1125

    வேறு
    மகளிர் வரிப்பாட்டு

    வரைவேந்தன் மடமகளை மணியேர் மேனிநிறங் கொண்டு
    விரையேந்து தளிரீனல் விழையாய் வாழி தேமாவே
    விரையேந்து தளிரீனில் வேனிற் றென்ற லலர்தூற்ற
    நிரையேந்து வடுநீயே படுதி வாழி தேமாவே.       1126

    அடிமருங்கி னரசிறைஞ்ச
            வாழியாள்வான் பெருந்தேவி
    கொடிமருங்கி னெழில்கொண்டுகு
            ழையல்வாழி குருக்கத்தி
    கொடிமருங்கி னெழில்கொண்டு
            குழைவா யாயிற் பலர்பறிப்பக்
    கடிமருங்கிற் புக்கலரே
            காண்டி வாழி குருக்கத்தி.       1127

    வணங்கி வையந் தொழநின்ற
            மன்னன் காதன் மடமகள்போல்
    மணங்க ணாறும் பூம்பாவை
            வளரல் வாழி நறுங்குரவே
    மணங்க ணாறும் பூம்பாவை
            வளர்த்தி யாயி லிளையராற்
    கணங்க ளோடு பறிப்புண்டி
            கண்டாய் வாழி நறுங்குரவே.       1128

    வேறு

    இன்னண மிளையவர் பாடக் கேட்டலும்
    மன்னவன் மடமகண் முகத்து வாணிலா
    மின்னியோ ரணிநகை முகிழ்த்து மீள்வது
    கன்னவி றோளவன் கண்கொண் டிட்டவே.       1129

    சோலையினின்று மீளுதல்

    உழையவ ரடிமுதல் பரவ வொண்சுடர்க்
    குழையவ ளொளிமனங் கவரக் கோடுயர்
    மழைதவழ் மதலைய மாட மேறினான்
    முழையம ரரியர சனைய மொய்ம்பினான்.       1130
    -------------

    9. அரசியற் சருக்கம் (1131 - 1154 )

    நாவியே கமழுந் தொங்க னகைமணி வயிரப் பூணான்
    ஆவியி னகத்து ளாளு மருவரை யகலத் தாளுந்
    தேவியே யாக வன்ன திருவொடு மிருவ ராவான்
    பூவினுண் மடந்தை வந்து புகுந்தவா றுரைக்க லுற்றேன்.       1131

    ஒற்றன் கூற்று

    கண்மிசை கனிந்த ஒற்றன்கூற்று காதற்
            களிப்படு செல்வ முந்நீர்
    உண்மிசை யுக்கோர் நச்சுத்
            துள்ளிவந் துறைப்ப தேபோல்
    விண்மிசை யிழிந்து வந்த
            வொற்றனோர் வெஞ்சொன் மாற்ற
    மண்மிசை யிருந்த விஞ்சை
            மன்னனை வணங்கிச் சொன்னான்.       1132

    விரைசெல லிவுளித் தேரோய் விஞ்சைய ருலக மாளும்
    அரைசர்க டிகிரி யாளும் அச்சுவ கண்ட னோடும்
    திரைசெல வுரறி ஞாலந் தின்னிய கடல்க ளேழுங்
    கரைசெல வருவ போனம் மேல்வரக் கருது கின்றார்.       1133

    சடிமன்னன் கூற்று

    அரைசர்கள் வருக போக வதுபண்டே யறிந்து தன்றே
    வரைசெறி சிங்க வேறு மணிவண்ண னழித்த ஞான்றே
    விரைசெறி பொழில்கொள் சோலை விஞ்சைய ருலகிற் பட்ட
    துரைசிறி தென்ன லோடு மொற்றனு முரைக்க லுற்றான்.       1134

    ஒற்றன் கூற்று

    அருளுமா றடிகள் கேண்மோ
            வரியர சதனை யாரு
    மருளுமா றிளைய காளை
            வாய்பிளந் திட்ட வார்த்தை
    தெருளுமா றொருவன் சொல்லக்
            கேட்டலுஞ் சேணில் வாழ்வார்
    வெருளுமா றுள்ள மெல்லாம்
            வெருண்டுமெய் விதலை கொண்டார்.       1135

    விஞ்சைய ருலக மெல்லாம் வெய்துற விரிந்த மாற்றம்
    அஞ்சினன் மறைத்துச் சின்னா ளமைச்சரி மஞ்சு வென்பான்
    வஞ்சனைச் சீய மாய வார்கழ லவனைக் கூவி
    எஞ்சலில் புகழி னானுக் கின்னண மிசைப்பித் தானே.       1136

    சொரிகதிர் வயிரப் பைம்பூ ணரசர்கள் பலருஞ் சூழ
    எரிகதி ராழி யாள்வா னினிதினங் கிருந்த போழ்தின்
    அரியது கேட்க வென்ன வரிகேது வென்பா னாங்குப்
    பெரியதோர் வியப்புச் சென்று பட்டது பேசி னானால்.       1137

    அச்சுவகண்டன் சினங்கொள்ளல்

    கரியவன் வளைந்த வெள்ளை
            யெயிற்றவன் காள மேகம்
    பெரியதொன் றிரண்டு கொம்மைப்
            பிறைகவ்வி யிருந்த தன்னான்
    அரியதங் கென்னை யென்னை
            யெனவரி கேதுசொன்ன
    உரையெதிர் கபில வட்டக்
            கண்ணெரி யுமிழ்ந்த மாதோ.       1138

    மடித்தவா யெயிறு கவ்வி மருங்கினோர் வயிரக் கற்றூண்
    அடித்தலி னசனி வீழ வருவரை நெரிவ தேபோற்
    படித்தலை நடுங்க மற்றப் பரூஉத்திரள் வயிரத் தம்பந்
    தொடித்தலை சிதைந்து நுங்கத் துகளெழுந் தொழிந்த தன்றே.       1139

    அரிகேதுவை அச்சுவகண்டன் இகழ்தல்

    விஞ்சைய ரதனைக் கண்டு மெய்பொதி ரெறிந்து விம்ம
    வெஞ்சினங் கனன்று மீட்டும் விஞ்சைய னவனை நோக்கி
    வஞ்சனை மனத்த ராய மனிசரை வலிய ரென்பாய்
    அஞ்சினை பெரிது மேடா வென்றன னசனி யொப்பான்.       1140

    நிலத்திடை மக்க ளாற்ற னின்னைப்போ லஞ்சு வார்க்கு
    மலைத்துணை பெருகிக் காட்டு மற்றதிங் கெம்ம னோர்க்கோர்
    இலைத்தது மில்லை மன்னோ வென்றன் னிரண்டு திங்கள்
    பிலத்திடை பொடித்த போலும் பிறழ்ந்திலங் கெயிற்றி னானே.       1141

    அரிகேதுவின் நினைப்பு

    கனைகதிர்க் கடகக் கையாற் கற்றிர ளுதிர வெற்றிச்
    சினவழ லெறிப்ப நோக்கிச் சிவந்தனன் றெழித்த லோடு
    மனநனி மயங்கி மற்ற விஞ்சைய ரஞ்ச நின்ற
    நனைமல ரலங்கற் கேது நகைகொண்ட மனத்த னானான்.       1142

    அடுகுர லரச சீய மதனையோ ராம்பற் றாள்போல்
    நொடிவரை யளவிற் கீறி நுனித்தது வியத்தல் செய்யாக்
    கடிவரை யலங்கன் மார்பிற் காளையே பெரிய னென்று
    தடவரை யனைய தோளான் றன்னுளே வியந்து நின்றான்.       1143

    இன்றிவ னனலும் போழ்தி னெதிர்நின்று கனற்றி யென்னை
    சென்றவ னாற்ற றானே கண்டபின் றேறு மன்னறே
    என்றுதன் மனத்தி லெண்ணி யியைந்தவா முகமன் சொல்லிக்
    குன்றுடை யரசன் முன்னைக் கூப்பிய கைய னானான்.       1144

    திவிட்டனைக் கட்டிக் கொணருங்கள் என்ற அச்சுவக்கிரீவன் கட்டளையிடுமளவில் ஒருவன் வந்து சயம்பவையின் திருமணச் செய்தியைக் கூறியது

    அமர்நனி தொடங்கு மேனும்
            ஆர்த்துநீர் கொணர்மி னென்று
    குமரனைக் குறித்த வெஞ்சொற்
            குறைசென்று முடியுமெல்லைத்
    தமருளங் கொருவன் வந்து
            சக்கிர வாளந் தன்னுள்
    நமரது நிலையு நங்கை
            போந்தது நடுங்கச் சொன்னான்.       1145

    அச்சுவகண்டன் மேன்மேலும் சினங்கொள்ளல்

    அடிகளிவ் வவனி தன்மே லிழிந்தது மணங்கோ டொப்பாள்
    கடிவினை நிலையு மன்றே கண்டுவந் தொருவன் கூறச்
    சுடுசொலிஃ தொழிக வென்று துணைச்செவி புதைத்து வல்லே
    முடிமுத றுளங்கத் தூக்கி முனிவினை முடிவு கொண்டான்.       1146

    பெருகினான் வெகுளி கண்ணுட்
            பிறந்தது பிறங்கு செந்தீ
    உருகினான் போன்று தோன்ற
            மயிர்த்துளை யுகுத்த தெண்ணீர்
    திருகினா னெயிறு செவ்வாய்
            கறித்தனன் றிசைக ளோடும்
    அருகினோர் நடுங்க நோக்கி
            யழனகை டுத்து நின்றான்.       1147

    மலைகளை மறித்து மற்றோர் மறிகட னடுவ ணிட்டவ்
    வலைதிரை மகர முந்நீ ரதுவிது வாக்கு வேன்கொல்
    உலகினை யுள்ளங் கைக்கொண் டுருளையா வுருட்டி யிட்டென்
    பலபுனை மடந்தை தன்கீழ்ப் பதித்திடு வேன்கொ லென்றான்.       1148

    அச்சுவக்கிரீவன் அரசர் பலரை வருவித்தல்

    அனன்றனன் றவைகள் பேசி யமையுமவ் வரசர் தீமை
    மனங்கொளப் படுவதாயின் மணிவரை யுலகின் வாழுஞ்
    சனங்களைத் திரட்டிப் பின்னைத் தக்கதொன் றறிவ னென்றான்
    சினங்கெழு காலன் மற்றோர் காலன்மேற் சிவந்த தொப்பான்.       1149

    அரசர் வடிவு

    சிறந்தெரி யனலோ டொப்பான்
            பணிகொண்டு திசைக ளோடி
    அறைந்தனர் முரசிற் சாற்றி
            யறைதலு மரச ரெல்லாம்
    மறைந்தன வுலக மென்ன
            மாய்ந்தன திசைக ளென்னப்
    பறந்தனர் விசும்பு போர்ப்பக்
            கடற்படை பரப்பி வந்தார்.       1150

    அரசரின் செயல்

    மற்றவ ரடைந்து வெய்யோன் மலரடி வணங்கி நின்று
    செற்றவ னிருந்த வாறுஞ் செங்கண்டீ யுமிழ்ந்த வாறும்
    எற்றிய வயிரத் திண்டூ ணெரிந்திடை கிடந்த வாறும்
    உற்றன பிறவு நோக்கி யுள்ளங்க ணடுங்கி யிட்டார்.       1151

    அரசர் கூற்று

    சுரியுளைத் துளைக ளாவி
            விடுகின்ற சுழலுஞ் செங்கண்
    கருமுகி னுடங்கு மின்போற்
            புருவங்கண் முரிந்து நீங்கான்
    பெரியதோர் முனிவு கொண்டான்
            பிறையெயிற் றரியோ டொப்பான்
    எரியினுள் விளிய லுற்றார்
            யார்கொலோ வளிய ரென்பார்.       1152

    ஞாலமேற் றிரிந்து நாளு முயிர்களை நடுங்கப் பார்க்குங்
    காலனைக் கதம்பட் டான்கொ லன்றெனிற் கற்ப மாள்வார்
    மேலெனக் கிருப்பார் போலு மெனவெகுண் டனல்கின் றான்கொல்
    வேலைநீ ருலகின் மற்றிவ் வெகுளிக்கு முதலென் னென்பார்.       1153

    ஊழிகள் பெயர்க்க லுற்றிவ் வுலகினைப் பிறிதொன் றாக்கி்
    வாழுயி ரொருங்கு வாரி மறிகட னடுவட் பெய்வான்
    சூழிய தொடங்கு கின்ற தாங்கொலோ சொல்லி னீடொன்
    றாழியான் வெகுளிக் குண்டோ யாரிரை யாவ தென்பார்.       1154

    தானவ ரரக்கர் பண்டே தஞ்சமா மிவற்கு மண்மேல்
    ஊனவர் மனித்த ரேக வுவனுக்கோர் துகளு மாகார்
    வானவ ரிவற்கு மாறாய் வருபவர் மதிப்பி னில்லை
    ஏனவர் முனிவு செய்வார் யார்பிற ருரைமி னென்பார்.       1155

    இற்றதிவ் வுலக மென்பா ரெரிந்தன திசைக ளென்பார்
    அற்றன மகர முந்நீ ரகம்புலர்ந் தொழியு மென்பார்
    மற்றினி மொழியல் வேண்டா வருவன வறிய லாகா
    உற்றபி னறிது மென்றாங் குரையொழி வாரு மானார்.       1156

    அச்சுவக்கிரீவன் கூற்று

    அச்சமோ டுலக மின்றே யவிந்தன போன்று மென்பார்
    நச்செரி நகையி னாலே நடுங்கின திசைக ளென்பார்
    இச்சைகள் பிறந்த வாற்றா லினையன நினையும் போழ்தி்ற்
    கச்சையங் களிநல் யானைக் காவலன் கனன்று சொன்னான்.       1157

    இரதநூ புரத்தை யாள்வான்
            புதல்வியை யுனைவஞ் சித்துப்
    புரிமனு சர்க்கீ வாக்கே
            புகன்றனன் போலு மென்ற
    உரைதனக் குரைத்த வாறே
            யுரைத்தன னுலக மெல்லாம்
    இரைதனக் கென்று மாற்றா
            வெரிபடு வெகுளித் தீயான்.       1158

    மன்னரின் வீரக்கூற்று

    முரைசொலி முழையி னுள்ளான்
            முழங்குகின் றதனோ டொப்ப
    விரையொலி விளங்கு தாரான்
            விளம்பிய வெகுளி மாற்றம்
    அரைசர்க ளதனைக் கேட்டே
            யிதனுக்கோ வடிக ளிவ்வா
    றுரைசெல முனிவ தென்றோ
            ரொல்லொலி யெழுந்த தன்றே.       1159

    செழுமல ரலங்கன் மார்பன் செங்கண்டீ யுமிழக் கண்டும்
    எழுமலர்ந் தனைய திண்டோ ளிவைசுமந் திருப்ப தென்னே
    கழுகுபோற் களத்து வென்று கதலிகை நடுது மன்றேல்
    விழவயர் விசும்பி னார்க்கு விருந்தின மாது மென்பார்.       1160

    ஏவது செய்து வாழும் யாமுள மாக வெங்கோ
    நோவது செய்து வேந்தர் நுனித்துயிர் வாழ்ப வாயிற்
    சாவது போக வாழ்க்கை தவந்தலை நிற்ற லொன்றோ
    வீவது செய்த லொன்றோ நமக்கினி விளைவ தென்பார்.       1161

    நாண்டொழின் மகளிர் முன்னும் நகைக்கிளை யாயத் துள்ளும்
    வீண்டொழில் விளம்பி யென்னை வீரங்கள் வெறிய வாக
    ஆண்டொழில் புகுந்த தம்மா வதோவினி தாயிற் றென்று
    தூண்டொழில் வளரத் தத்தந் தோள்களை நோக்கு கிற்பார்.       1162

    நாள்வடுப் படாமை நம்மைப் புறந்தந்தாற் குதவி நங்கள்
    டோள்வடுப் படாமை மன்னன் புகழ்வடுப் படுத லுண்டோ
    வாள்வடுப் பிளவு போலுங் கண்ணியை மகிழ்ந்த காளை
    கேள்வடுப் படரும் பூசல் கேட்டிரா நாளை யென்பார்.       1163

    இனியிருந் தென்னை பாவ மெழுமின் போய்ப் பொருது மென்பார்
    முனிவன செய்த வேந்தன் முடித்தலை கொணர்து மென்பார்
    கனிவளர் கிளவி யாளைக் கைப்பற்றித் தருது மென்பார்
    பனிவரை யரசர் மாற்றம் பற்பல பரிதி வேலோய்.       1164

    கனகசித்திரன் அச்சுவ கண்டனுக்கு கூறிய உறுதி

    சினமெனப் பட்ட தீயுட் பிறந்தது செருக்கு நன்னீர்
    மனவுண வுண்டு மானப் பூநின்ற வயிர வொள்வாள்
    அனலதொன் றகத்த தாக வாரமர் குருதி வேட்டுக்
    கனல்வதோர் கால வொள்வாள் கடைக்கணித் தொருவன் சொன்னான்.       1165

    தோள்களைத் தகர்த்து வீக்கித்
            துணைக்கரங் கொட்டி யார்த்து
    வாள்களைத் துடைத்து நோக்கி
            வகைசெய்வ தெளிதி யார்க்கும்
    நீள்கதி ரிமைக்கு மொள்வாண்
            முகம்பெற நெருப்புச் சிந்தித்
    தாள்களை வெதுப்பும் வெம்போர்
            தாங்குவ தரிய தென்றான்.       1166

    தானவ ரெனினு மிப்போ ரிழந்து போய்த் தரணி வாழும்
    ஊனம ருலக மாளு மூழியொன் றிதுவன் றாயில்
    வானவ ருலகு மண்ணும் வந்துநின் வாயில் பற்றி
    ஈனமொ டுறங்கக் காட்டி யிடுவன்யான் றெளியிய தென்றான்.       1167

    வாளினாற் செருவுண் டேனு மாயமற் றாகு மேனுந்
    தோளினா லாகு மேனுஞ் சொல்லெலா மொழிக மற்றக்
    காளைதன் னுயிரி னோடுங் கன்னியைக் கொணர்ந்து தந்து
    தாளிலே யிட்ட பின்றைத் தவிர்கநின் சீற்ற மென்றான்.       1168

    ஆளிகட் கரச னாங்கோர் குறுநரி யறிவில் லாத
    மீளிமை பொறாது வெம்பி வெகுண்டெழு கின்ற தென்றால்
    நாளினு நங்கள் போல்வார் நகைசெயப் படுவ தன்றே
    வாளொளி வயிர மின்னு மணிமுடி மன்னர் கோவே.       1169

    ஆதலா லெங்க ளாலங் காவதொன் றில்லை யாயிற்
    போதுலா மலங்கன் மார்ப பொருவது பொருந்திற் றென்னும்
    காதலான் கனக சித்திரன் கட்டுரை யதனைக் கேட்டே
    கோதிலா மாரி பெய்த கோடையங் குன்ற மொத்தான்.       1170

    வச்சிரகண்டன் கூற்று

    மற்றவ னுரைத்த போழ்தின் வச்சிர கண்ட னென்பான்
    கொற்றவற் கிளைய காளை கோத்தொழிற் பாகம் பூண்டான்
    இற்றதா லெங்க ளாண்மை யாங்களு மிழிந்து நிற்பச்
    செற்றதோர் படையுண் டாயிற் றென்றுகண் சிவந்திட்டானே.       1171

    மகரமால் கடலை யல்லாற் சிறுகய மதலை சேரா
    சிகரமால் யானை வேந்தே தானவர் செருவன் றாயின்
    நிகரலா நீசர் தம்மேல் நீசெலற் பால தென்று
    புகரெரி யவிக்க லுற்றான் பொழிமழை பொழிவ தொத்தான்.       1172

    அச்சுவகண்டன் கோபந் தணிந்தமை

    வேறுவே றாகி நின்று வெஞ்சினஞ் செருக்கி விஞ்சைக்
    கேறனான் றம்பி மாரு மக்களு மின்ன போல்வ
    கூறினார் கூற லோடுங் குரையழ லவிவ தேபோல்
    ஆறினா னென்னை செய்யு மாயபண் பதுவ தானால்.       1173

    அவன் மந்திரசாலையை அடைதல்

    அரசர்க ணெறியிற் கண்டீர்
            யாம்பிழைப் பிலாமை யென்று
    முரசென வதிரும் பேழ்வாய்
            முழங்கிசை மொழியிற் சாற்றி
    வரைசெறிந் தனைய தோளான்
            மந்திர சாலை சேர்ந்தான்
    உரைசெறிந் தங்குப் பட்ட
            சூழ்ச்சியு முணர்ந்து போந்தேன்.       1174

    அரிமஞ்சுவின் கூற்று

    கன்னிதன் றிறத்துச் சீறிக் காவலன் கனலக் கண்டீர்
    என்னினிக் கருது கின்ற தென்றன னெரியு மாழி
    மன்னவற் குணர்வுங் கண்ணு மாற்றலும் வலியுந் தோளும்
    அன்னவ னமைச்சர்க் கேறா மவனரி மஞ்சு வென்பான்.       1175

    தூமகேது கூறியது

    அணிநகர் மேக கூட மதனையாண் டரிய செய்கை
    துணிபவன் றூம கேது சொல்லுவா னென்ன சொன்னான்
    மணிவரைப் பிறந்து மாண்ட வருங்கல மன்னர் கோமான்
    பணிவரை யன்றி யாரே பெறுபவர் பகர்மி னென்றான்.       1176

    அங்கார வேகன் கூறியவை

    வரைதன்மேற் றழலின் பேரார்
            வளநக ரதனை யாளும்
    அரசனங் கார வேக
            னதனைக்கேட் டழன்று சொல்வான்
    இரதநூ புரத்தை யாள்வா
            னிகழ்ந்தனன் பெரிது நம்மைப்
    பொருதவன் கிளையை முந்நீர்ப்
            புறங்கரைப் படுத்து மென்றான்.       1177

    அரிசேனன் கூறியது

    மல்லினான் மலர்ந்த மார்பீர்
            மறைந்துநா மிருந்து வல்ல
    சொல்லினால் வெல்ல லாமேற்
            சொல்லுமி னின்னு மன்றி
    வில்லினால் விரவு தானைச்
            செருவினுள் வீரந் தன்னால்
    வெல்லலா மென்னி னென்னை
            விடுமின்போய்ப் பொருவ லென்றான்.       1178

    பூவினும் பொருதல் வேண்டா
            சூழ்ச்சியே பொருந்த நோக்கி
    யாவது காண்ட லாகு
            மரசர்க்கு நீதி யென்று
    சாவதை யஞ்சு வார்க்குந்
            தகைமையில் லவர்க்கு மன்றே
    ஓவுத லின்றி யோதி
            வைத்ததங் கொருவ னென்றான்.       1179

    அழலவி ரலங்கல் வேலோ
            னவ்வரி சேன னென்பான்
    கழலவன் காதற் றோழன்
            கனன்றவன் கருதிச் சொன்ன
    மொழியெதி ருலக மாள்வா
            னுவந்தவன் முகத்தை நோக்கிப்.
    பழிபெரி தொழியச் சொன்னான்
            படைத்திற லாள னென்றான்.       1180

    கருடத்துவசன் கூறியது

    பொருவதோ வெளிதி யாங்கள்
            பொருந்திற முரைமி னென்னை
    மருவிய மனிதப் போரோ
            வான்கெழு தெய்வப் போரோ
    இருமையி னியன்ற போரோ
            யாதுநாந் துணிவ தென்றான்
    விரிசிறை யுவணஞ் சேர்ந்த
            வென்றிநற் கொடியி னானே.       1181

    செப்பிய மாற்றங் கேட்டே
            திறற்சிரீ சேன னென்பான்
    திப்பியர் புகழுஞ் செல்வத்
            திருநிலை யகம தாள்வான்
    அப்படித் தாயிற் கேண்மி
            னறிந்தவ ரறைந்த வாறென்
    றிப்படை நிலைமை யோரா
            னெடுத்தெடுத் தியம்பு கின்றான்.       1182

    பொருப்படைத் தொகையோர் மூன்று
            போர்த்தொழி றானு மூன்றே
    மருவுடை மனுடந் தெய்வ
            மிருமையு மென்ன மற்ற
    வெருவுடைப் படையின் குப்பை
            மேலது நான்கு வீற்ற
    திருபடை யொழிந்து நின்ற
            விவையும்பாங் குடைய வென்றான்.       1183

    அத்திர மாதி யாக வோதிய நான்கு விஞ்சை
    தொத்தெரி சுடரு மொள்வா ளெனவிரண் டாகு முன்னாம்
    வைத்தவுட் கடைய தேனை யொழிந்தது பரம மாயை
    இத்திறத் தினைய வென்றா னெரிமணி யிமைக்கும் பூணான்.       1184

    படைக்கல விகற்பும் போரின்
            பகுதியும் பரப்பி னாங்கண்
    இடைப்புகுந் துரைப்பிற் சாலப்
            பெருகுமஃ திருக்க வென்று
    நடப்பது மக்க ளோடு
            மக்கட்போர் நல்ல வேனும்
    புடைப்பில புகுது மாயிற்
            புறனுரை புணர்க்கு மென்றான்.       1185

    விஞ்சையர் பொருவ ராயில் விஞ்சையிற் பொருது மன்றி்
    வஞ்சனை யின்றி மக்கள் பொருபவேன் மக்கட் போரே
    எஞ்சுத லின்றி யேற்ற பொருதுமென் றின்ன சூழ்ந்து
    நஞ்சனாற் குரைப்பக் கேட்டு நன்றது துணிமி னென்றான்.       1186

    ஆய்ந்தவ ரோடு போதந் தாழியா னருவிக் குன்றிற்
    காய்ந்துவந் திறுத்த பின்றைக் கடிநகர் நமது தன்மேற்
    சேந்தெரித் திடுது மென்று தென்மலை யரசர் சென்றார்
    வாய்ந்துமற் றொழிந்த மன்னர் மேல்வர வலித்து நின்றார்.       1187

    சடிமன்னன் ஒற்றன் மொழிகளை மற்றவருக்கு அறிவித்தல்

    ஒற்றனாங் குரைப்பக் கேட்டே யொளியவன் பெயர னோடு்ஞ்
    சுற்றமா யவருஞ் சூழ்நீர்ச் சுரமைநா டுடைய கோவும்
    மற்றவன் புதல்வர் தாமும் வருகென வந்தார் மாற்றம்
    உற்றவா றறியச் சொன்னா னொளிவரை யரசர் கோவே.       1188

    பயாபதியைச் சார்ந்தவர் சிந்தனை

    விச்சையின் செருக்கி னாலும் வீங்குதோட் டருக்கி னாலு
    கச்சையங் களிற்றோ டேனைக் கவனமா வலத்தி னாலுங்
    அச்சுவக் கிரீவ னாதி அரசர்க ளழன்று வெம்போர்
    நச்சிமேல் வருப வாயி னன்றது போல்வ துண்டோ.       1189

    எரியெனச் சுரிந்த கேசத் திருளெனத் திரண்ட மேனிப்
    பெரியன வளைந்த வெள்ளை யெயிற்றினர் பிலங்கொள் வாயர்
    அரியன செய்ப வன்றே யசுரரென் றுருவு கண்டே
    இரிவன ரோடு வாரு ணம்மையு மெண்ணிற் றென்பார்.       1190

    எரிபொங்க வெழுந்த வெள்ளை
            யெயிற்றிடை யிலங்க நக்குப்
    புருவங்க ணெறிய வேற்றிப்
            புகுந்துநாம் வெருட்டும் போழ்தில்
    உருவங்கள் பெரிய வாறு
            முள்ளங்கள் சிறிய வாறுஞ்
    செருவங்கண் விளைந்த போழ்திற்
            காட்டுதுந் தெருட்டி யென்பார்.       1191

    இமையவ ரரசன் றானு மிகல்செயக் கருதி வந்தால்
    அமையுமஃ தஞ்ச லாமோ யாண்கட னதுவ தானால்
    நவையின ருளரென் றஞ்சி நடுங்கினர் தமக்கு நாளுஞ்
    சுவைபெறு தோளும் வாளுஞ் சொல்லுமின் சுருங்க வென்பார்.       1192

    மானமர் நெடுங்க ணார்தம் மனமென வெஃகி மைந்தர்
    ஊனமி லகல மூழ்கி யுள்ளுறச் சிவந்த வொள்வாள்
    ஈனமா மருங்கி னாரா திரைக்கிடந் தனல்ப வின்று
    தானவர் குருதி மாந்தித் தம்பசி தணியு மென்பார்.       1193

    ஆள்வரை யனைய தானை யச்சுவக் கிரீவ னென்னு
    நீள்வரை மருங்கிற் றாழ்ந்த திருவெனு மருவி நீத்தந்
    தாள்வரை யிழிந்து வந்து தகைமணி நீல வண்ணன்
    வாள்வரை யகல மென்னுங் கருங்கடன் மடுக்கு மன்றே.       1194

    ஆதலா லதனு ணாமு மயிற்படைப் புணைகள் பற்றி
    யேதிலா மன்ன ரென்னு மிருமரக் கடப்பு வாரி
    மீதுலாம் வெகுளி யென்னும் வெவ்வழன் முழங்க மாட்டிக்
    காதலார் கண்கள் பூப்பக் காய்த்துதுங் கைகோ ளென்பார்.       1195

    அருக்க கீர்த்தி கூறியது

    உயிரினு மதிக்கற் பால
            துள்ளப்பே ருறையி னுள்ள
    தயிறரும் பனிக்குந் திண்மை
            யானநா ணதனை யேற்றி
    வயிரவின் மனத்த தாகக்
            கையது வையங் காக்குஞ்
    செயிரில்வில் லதனை நோக்கிச்
            செங்கதிர்ப் பெயரன் சொன்னான்.       1196

    அடுந்திறல் வெகுளிக் காற்றோ
            டருக்கப்பே ருடைய மேகங்
    கொடுஞ்சிலை குலவக் கோலிக்
            குருதிநீர் வெள்ள மோடக்
    கடுங்கணை யென்னுந் தாரை
            கலந்துமேற் பொழிய வேந்தர்
    நடுங்கினர் பனிக்கும் போழ்தி
            னம்மையு மறிவ தென்றான்.       1197

    விசயன் கூற்று

    அலைகடல் வண்ணன் றம்மு னலர்குழை புரளுங் காதிற்
    சிலைபடு வயிரத் தோளான் செங்கதிர் முறுவ றோன்றி்
    இலைபடு வயிரப் பைம்பூ ணிமையவ ரல்ல ராயின்
    மலைபடு கிருமி யோநம் மாறுநிற் பனக ளென்றான்.       1198

    வானவர் மருள நாஞ்சின் மற்றிது மடுத்து மாற்றார்
    தேனம ரகல மென்னுஞ் செறுவுசெஞ் சால்கள் போக்கி
    ஊனமர் குழம்பு பொங்க வுழுதிட்டு வென்றி வித்தி்
    ஏனவர் செவிக ளார விரும்புகழ் விளைப்ப னென்றான்.       1199

    திவிட்டன் கூற்று

    இன்னன பிறவு மேனை யிருநிலத் தரசர் பேச
    மன்னவ குமரன் மாமன் மலரடி வணங்கி வாழ்த்தி
    மின்னொடு விளங்கு வேலோ யுளங்கொடு விளம்பி யென்னை
    என்னொடு படுவ தன்றே யினியிப்பால் வருவ தென்றான்.       1200

    சடிமன்னன் திவிட்டனுக்கு மந்திரம் கொடுத்தது

    ஆங்கவன் மொழிந்த போழ்தி
            னமையுமிஃ தறிவ தன்றே
    தேங்கம ழலங்கன் மார்ப
            வினிச்சிறி துண்டு நின்ற
    தோங்கிய விஞ்சை நின்னா
            லுள்ளத்துக் கொள்ளற் பால
    ஈங்கிவை யென்ன லோடு
            மிறைவனைத் தொழுது கொண்டான்.       1201

    திவிட்டன் மந்திர தேவதைகளுக்கு இட்டபணி

    மந்திர வெழுத்து வள்ள
            லுள்ளத்துப் பொறித்த போழ்தே
    அந்தர விசும்பிற் றெய்வ
            மணுகின பணியென் னென்னா
    வெந்திறல் விஞ்சைக் கேற்ற
            வியன்சிறப் பியற்றி வேலோன்
    நுந்தொழில் புகுந்த போழ்தி
            னோக்குமி னெம்மை யென்றான்.       1202

    அச்சுவகண்டன் விடுத்த தூதுவர் வருகை

    ஓதிய விஞ்சை வாய்ப்ப வுலகடிப் படாது நின்ற
    வாதிசா லமர கற்ப மாமென வமருங் காலைத்
    தூதுவ ருருவக் காளை செவிசுடு சரம்பெய் தூணி
    மாதிரத் தொசிந்த வேபோல் வந்தொருங் கிருவர் நின்றார்.       1203

    தூதுவர் கூற்று

    பொன்னவிர் திகிரி யாளும்
            புரவல னுருவப் பைந்தார்
    மன்னவன் றமரம் யாமே
            வாய்மொழி கேண்மின் மன்னீர்
    கன்னியைத் தருதி ரோவக்
            கன்னியை மகிழ்ந்த காளை
    இன்னுயிர் தருதி ரோவிவ்
            விரண்டிலொன் றுரைமி னென்றார்.       1204

    திவிட்டன் கோபங் கொள்ளுதல்

    வேறு

    கடுத்தவர் கன்னிபே ருரைக்கக் கண்களுட்
    பொடித்தன புகைத்திரள் பொழிந்த தீப்பொறி
    அடுத்தெழு கின்றதோ ராவி யாரழன்
    மடுத்தது மனத்திடை மைந்தற் கென்பவே.       1205

    விசயனது சினம்

    கண்கன லுமிழ்ந்துதம் புலமுங் காணல
    வெண்கதிர் மணிமுத்தம் விதிர்க்கும் மேனியன்
    புண்களு ளெஃகெறிந் தனைய புன்சொலால்
    விண்களை வெதுப்பினன் வீர னென்பவே.       1206

    நகுதொறு மழற்கொடி நடுங்கு நுண்டுளி
    உகுதொறு மயிர்த்துளை யுயிர்க்கும் வெம்புகை
    புகுதொறுஞ் செவிசுடு புன்சொ லாரழன்
    மிகுதொறும் விசும்புற நிமிர்ந்து காட்டினான்.       1207

    தோற்றமுஞ் சுடரொளி வடிவு முன்னிலா
    வேற்றுமை யுடையவாய் விரிந்து தோன்றின
    மாற்றமஃ தொழிந்தனன் மனித்த னன்மையைத்
    தேற்றினன் றிருமகிழ் தெய்வக் காளையே.       1208

    அமரர் செயல்

    மாண்டன மாற்றலர் நாள்கள் பூமகள்
    ஈண்டுவந் திவனொடு திளைக்க லுற்றனள்
    காண்டுமிக் காளைதன் கன்னிப் போரெனா
    ஈண்டினர் விண்ணிடை யமர ரென்பவே.       1209

    திவிட்டனது கட்டளை

    தூதுவர் முறைப்படுந் தொன்மை யாலிவண்
    தீதுரை கொணர்ந்துநஞ் செவிகள் சுட்டவிப்
    பேதையர் பிழைத்தது பொறுக்கல் வேண்டுமாற்
    போதலே பொருளிவர் போக போகவே.       1210

    மற்ற வேந்தர் கூற்று

    வில்லவன் மொழிதலும் வீர வேந்தர்கள்
    ஒல்லென வொலித்தெழுந் துடன்று சொல்லுவார்
    கல்லுயர் கருவரை கருதி யாமிவை
    சொல்லிய தனெச்சிலர் சுருங்கச் சொல்லினார்.       1211

    ஆழியு மகலத்த திருவும் வாங்கியிப்
    பாழியந் தோளினான் பால வாக்கினால்
    ஏழையு மெம்மையு மறியு மென்றனர்
    வாழைமேல் வயிரங்கூர்த் தனைய மாண்பினார்.       1212

    வாணிலா மணிநகை முறுவ லாடிறத்
    தேணிலா ரியம்புவ தியம்பி னல்லது
    காணலா மெல்லையுட் புகுந்து கட்டுரை
    பேணலாம் பிறபிற பீடு காண்பதே.       1213

    கலைமிசை யினியசொற் கன்னி காளைதன்
    இலைமிசை யலங்கன்மார் பிசையக் கேட்டுமோர்
    மலைமிசை மறைந்துவா யுரைக்கும் வல்லதிற்
    சிலைமிசைத் தோளினான் சேவ கங்களே.       1214

    துன்னிவந் திவனடி தொழுவ னேலுயிர்
    தன்னதா மன்றெனிற் றனதன் றாதலான்
    மன்னுயி ருவக்குமோ மானம் வேண்டுமோ
    வென்னவ னுவப்பதென் றெண்ணி வம்மினே.       1215

    தூதுவர் செல்ல அசரீரி கூறியது

    என்றவர் மொழிதலு மெழுந்து தூதுவர்
    சென்றன ராயிடைத் தெய்வ வாய்மொழி
    வென்றுவீற் றிருக்குமிவ் விடலை யேயென
    நின்றது நிலமகள் பரிவு நீங்கினாள்.       1216

    வரிவளை முரன்றன வான துந்துபி
    திரிவன வறைந்தன செங்கண் டீப்பட
    முரிவன வீரர்தம் புருவ மூரிவிற்
    பரிவிறை யின்றிவன் பாடி வட்டமே.       1217

    நன்னிமித்தங்கள்

    ஆளியே றனையவ னணிபொன் மேனிமே
    னீளொளி தவழ்ந்தது நெடுங்க ணேழையர்
    தோளுமங் கிடவயிற் றுடித்த வீரர்கை
    வாளும்பூ நின்றன மலர்ந்த துள்ளமே.       1218

    பகைப்புலத்தில் தீயசகுனம்

    அரசிளங் குமரனை யனற்று மாற்றலர்
    முரசினுண் மணியர வுறைந்த முத்தணி
    நிரைசுடர் நெடுங்குடை யகடு நெய்கனி
    பிரசங்கள் புரைபுரை விலங்கப் பெய்தவே.       1219

    கதிர்மணித் தேர்க்கொடிஞ் சேறிக் காக்கைகள்
    எதிரெதிர் சிலம்பின வெரிந்த மாதிரம்
    உதிரநீர்ப் புதுமழை சொரிந்த துச்சியின்
    அதிர்தரு கவந்தங்க ளாடி யிட்டவே.       1220

    விடவரு மியல்புக டிரிந் மெல்லியன்
    மடவர லவரொடு மாறு பட்டனர்
    படவர வல்குலார் காதிற் பயெனச்
    சுடர்தரு குழகடா மழிந் "சார்ந்தவே.       1221

    தூவொளி மணிமுடி முகத்த கிம்புரி
    நாவளைக் கொண்டன நாம வென்றிவேல்
    பூவொளி மழுங்கின போர்செ யாடவர்
    ஏவிளை கொடுஞ்சிலை யிற்று வீழ்ந்தவே.       1222

    உள்ளடி யுமைத்துமைத் தழன்ற மேனியுங்
    கள்ளவிழ் கண்ணியுங் கரிந்த கண்களும்
    எள்ளுநர்க் கிடவயிற் றுடித்த வேழையர்
    வள்ளிதழ்க் கடுங்கணும் வலந்து டித்தவே.       1223

    பகைமன்னர் உறுதி

    வானமீ னுச்சியு ணின்ற மாற்றலர்
    தானையு ணடுவுவீழ்ந் ததிரத் தங்களுக்
    கூனமுண் டென்பதை யுணர்ந்து முள்ளிடை
    மானமஃ தொழிந்திலர் மறங்கொண் மன்னரே.       1224

    வேறு
    தூதுவர் உரைகேட்ட அச்சுவகண்டன் செயல்

    போகிய தூதுவர் பொன்னவி ராழியொ
    டேகிய நாளுடை யாற்கிது வாலென
    ஆகிய வாய்மொழி கூறலு மாயிடை
    நாகம ழன்றெறி நச்சென நக்கான்.       1225

    மண்டிணி மாநில மன்னரை மால்வரை
    ஒண்டொடி தாதையொ டூழுயிர் வௌவித்
    திண்டிறல் பேசிய வச்சிறி யானையுங்
    கொண்டனிர் கூடுதி ரோகடி தென்றான்.       1226

    படை எழுச்சி

    ஆழியி னானது கூறலு மாயிடை
    வாழிய ரோவென மால்வரை வாழ்பவர்
    சூழிய வானைகள் மாவொடு தேர்பல
    தாழலர் பண்ணினர் தாமு மெழுந்தார்.       1227

    காரணி கண்முர சார்த்த கறங்கின
    நீரணி சங்க நிரைந்தன வெம்பறை
    தாரணி தானை சிலம்பின தாழ்ந்தனர்
    போரணி விஞ்சையர் பூமியின் மேலே.       1228

    வேறு

    குடையுங் கொடியுங் குளிர்சா மரையும்
    படையும் முடியும் பலசின் னமுமே
    இடையும் புடையும் மிருபா லகமும்
    அடையும் படையும் மறிதற் கரிதே.       1229

    வேறு

    பொன்றவழ் தேர்கலி மாவொடு போதகம்
    என்றிவை யெங்கு மிடம்பி வின்றி
    நின்றன நின்றது வாட்படை யப்படை
    சென்று பெருந்திசை யார்த்திசை யார்த்தார்.       1230

    கொண்டல் கிளர்ந்து பரந்து பெருங்கடல்
    மண்டுவ போன்மண மாநகர் முன்னி
    விண்டவழ் மின்னிடு வாளினர் வில்லினர்
    எண்டிசை யும்மிருள் கூர விழிந்தார்.       1231

    வேறு
    இருபடையும் பொருதல்

    படையென் றலுமே படைபா ரதுவும்
    இடையின் றியெழுந் ததிரண் டுகடல்
    விடையின் றிவெகுண் டெழுகின் றனபோற்
    புடையின் றிநிரந் தனபோர்த் தொழிலே.       1232

    வேறு
    தேர், குதிரை

    காரொடு கார்கட லோடு கருங்கடல்
    சீரொடு சென்று திளைப்பது போலத்
    தேரொடு தேர்கலி மாவொடு மாபல
    போரொடு வந்து புகுந்தன வன்றே.       1233

    வேறு
    காலாள், யானைப்போர்

    இலையே ரயில்வா ளியொடெண் டிசையுஞ்
    சிலையே யெனவுண் டுசிலைத் தொழுதி்
    மலையே மலையோ டுமலைந் தனபோற்
    கொலைவே ழமொடேற் றனகுஞ் சரமே.       1234

    குதிரைகளின் செயல்

    கொடிமே லுடையா னைகள்கும் பமுதைத்
    தடிமே லனவா கவெழுந் தரசர்
    முடிமே லனவாய் முகின்மே லனவாய்ப்
    படிமே லனவா யினபாய் பரியே.       1235

    தேர்களின் செயல்

    ஒருபான் முடிமே லுருளா ழியுதைத்
    திருபா லுமெழுந் தெறிபா றுசெலப்
    பொருபா லவர்கண் சுழலப் பொருதேர்
    வருபா லறியா மைமயங் கினவே.       1236

    யானைகளின் செயல்

    நெறியார் நிரைமா வொடுதேர் களெடுத்
    தெறியா வகையா நுதலே றுகரம்
    பறியா முறியாப் படையோர் படையுட்
    செறியா மதயா னைதிரிந் தனவே.       1237

    காலாட்களின் செயல்

    கடுநீ ரவர்கண் ணெரிகொண் டுகனன்
    றிடிநீ ருருமின் னெதிரே யெறிய
    வடிநீ ரனவா ளிடையே முரியாப்
    படுமீ னெனவீழ்ந் துபதைத் தனவே.       1238

    வில் அறுபட்டமை

    வடிநூ னுதிகவ் வியவா ளையொடும்
    விடுமீ னெறிதூண் டில்விசைத் தனபோல்
    அடுநா ணிடையே றியவம் பினொடு
    நெடுநா ணறவிற் கணிமிர்ந் தனவே.       1239

    வேறு
    அருக்ககீர்த்தியின் போர்

    ஆரழ லான்பெய ரானணி வெஞ்சிலை
    போரழல் வார்கணை மாரி பொழிந்தது
    சீர்கெழு விஞ்சையர் செந்தடி நுந்துபு
    நீர்கெழு வெள்ள நிரந்ததை யன்றே.       1240

    தென்மலை யாரிள மன்னவன் மன்னிய
    வின்மலை வார்தனி யின்மையின் விஞ்சைய
    பொன்மலை யொன்றொடு போர்செய மேவிய
    மன்மலை போல வெழுந்து மலைந்தார்.       1241

    கோளென நாளென மின்னுபு குன்றெறி
    வேளனை யான்மிசை விஞ்சையர் வெஞ்சுடர்
    வாளினர் வில்லினர் மால்வரை போல்வன
    தோளினர் தாளினர் தோன்றின ரன்றே.       1242

    தோன்றிய விஞ்சையர் மேல்விடு வெங்கணை
    கான்றது திண்சிலை கான்றலு மேதிசை
    மான்றது மங்குல் பரந்தது காரிருள்
    நான்றது நண்ணலர் நண்ணல ரானார்.       1243

    தூணி முகத்தது கைத்தல மற்றையோர்
    பாணி முகத்தது வெஞ்சிலை நின்றது
    வேணு முகத்தது மண்டலம் வெங்கணை
    காணு முகத்தள வேயுள வாமே.       1244

    ஒன்று தொடுத்ததோ ராயிர மாம்பல
    என்று தொடுத்தன வெண்ணில வாஞ்சரம்
    அன்று தொடுத்தவ னெய்தன வையகம்
    நின்று தொடுத்து நிரந்தன வன்றே.       1245

    விண்மிசை யேறிய வெஞ்சரம் விஞ்சையர்
    கண்மிசை யேறின மேகடி மேதிசை
    எண்மிசை யின்றி யிருண்டன வோவென
    மண்மிசை வீழ்ந்து மயங்கின ரன்றே.       1246

    வேறு

    இருள்பா யினவா லிதுவென் னெனவே
    மருள்வார் வெருள்வார் மறைவார் மறிவார்
    தெருள்வார் திரிவார் செருவார் கணையால்
    உருள்வார் களுமா கியுடைந் தனரே.       1247

    வேறு

    உடைந்திடு படையிடை யொலிகொண் மால்வரை
    இடைந்திடும் படியெழுந் திடறி யேகினார்
    படந்தொடி னுடன்றெழு மரவு போற்பகை
    கடைந்திடுங் கடுந்திறற் கால வீரரே.       1248

    இடுதவி சொடுதொடர் பரிய வெந்தகத்
    தடுசரம் படுதொறு மலறி வாலதி
    நெடிதனெ நிறுத்திநீ ருகுத்து நீள்செவி
    மடிதர முடுகின மான யானையே.       1249

    முரசுக ளுடைந்தன முடிகண் மூழ்கின
    வரசுக ளவிந்தன வரவத் தேர்க்குழாம்
    விரைசெல விவுளிக ளிடறி வெந்தடி
    நிரைசெல விழிந்தது குருதி நீத்தமே.       1250

    அச்சுவக்கிரீவனுக்கு ஒரு தூதன் போரழிந்த செய்தியைத் தெரிவித்தல்

    காலெதிர் கடலுடைந் திட்ட தொப்பநம்
    பாலது படையுடைந் திட்ட தின்றென
    மாலெதிர் கடற்படை மான வேந்தனைக்
    கோலெதிர் கையவன் றொழுது கூறினான்.       1251

    நூற்பயம் பலவொடு நுணங்கு கேள்வியே
    போற்பயம் பலவொடு புகழ்க ளேதரும்
    வேற்பயங் கொண்டனர் தெவ்வர் நந்தமர்
    காற்பயங் கொண்டனர் கால வேலினாய்.       1252

    பூமியரசர் விஞ்சை வீரரை இகழ்ந்தமை.

    பெரியவாய் வளையெயி றிலங்க நக்குநக்
    குரியவா ளெரியெழ முறுக்கி நம்மொடு
    பொரியவந் தார்களும் புறந்தந் தாரினி
    அரியதென் னெனநக்கா ரவனி மன்னரே.       1253

    கலையினைக் கடந்தசொற் கன்னி காதலன்
    அலையினுக் குடைந்தில ரருக்கன் கையதோர்
    சிலையினுக் குடைந்துதஞ் சிறுமை நாணிநம்
    மலையினுக் கடைந்திலர் மான மன்னரே.       1254

    அச்சுவக்கிரீவன் செயல்

    ஒன்றுவில் லிரண்டுதோ ளொருவ னெய்யவே
    இன்றுநம் படையுடைந் திட்ட தாய்விடின்
    நன்றுபோர் நமர்கள தென்று நக்கனன்
    குன்றுபோற் பெருகிய குவவுத் தோளினான்.       1255

    வேறொரு தூதுவன் உரைத்தமை

    இரதநூ புரத்தின்மே லெழுந்த வேந்தரும்
    பொருதுதா மழிந்தமர் புறக்கிட் டோடினார்
    அரிதினின் விளைவதை யன்றி யாவருங்
    கருதிய முடிப்பவ ரில்லை காண்மினே.       1256

    பாழிப்போ ருடைந்தனர் பகைவர்க் கின்றென
    ஆழிப்போர்த் தடக்கையாற் கவர்க ணீர்மையைத்
    தாழிப்போர் விலன்றம னொருவன் கூறினான்
    ஊழிப்பே ரெரியுணெய் சொரிந்த தொப்பவே.       1257

    அச்சுவக்கிரீவனது வருத்தமும் கட்டளையும்

    விண்மிசை சென்றவர் மெலிவும் வேற்றவர்
    மண்மிசை சென்றவர் மறிந்த மாற்றமும்
    புண்மிசை யெஃகம்புக் கொளிப்ப போன்மனத்
    துண்மிசை யொழிபடை யாகி யூன்றவே.       1258

    இரதாவர்த்தம்

    இருந்தினி யென்னையீங் கெழுக வென்றுபோய்ப்
    பெருந்தகை யருங்கலப் பெயர்கொள் குன்றின்மேற்
    பரந்தன படையொடு பாடி விட்டனன்
    கருந்திரண் முகில்புரை காள மேனியான்.       1259

    அவன் தம்பியர் வருகை

    அச்சுவக் கிரீவனுக் கிளைய காளையர்
    கச்சையங் கருங்களி யானை வல்லவர்
    விச்சையர் கடற்படை பரப்பி விண்மிசை
    நச்செரி யுமிழ்தரு நகையர் தோன்றினார்.       1260

    நீலரதன் கூறியது

    இளையருட் பெரியவன் சொல்லு மெம்மிறைக்
    குளைவன செய்தவ ருயிரை மற்றவர்
    கிளையொடுங் கீண்டரசாடு மன்றெனில்
    வளையொடுந் தலைமுடித் திருந்து வாழ்துமே.       1261

    நீலகண்டன் கூறியது

    மாலுமாங் குடையர்கொன் மனிதர் நம்மொடு
    போலுமாற் பொரலுறு கின்ற தென்றுதன்
    கோலவால் வளையெயி றிலங்க நக்கனன்
    நீலமா மணிக்கண்ட னென்னுங் காளையே.       1262

    வைரகண்டன் கூறியது

    முளைந்தவா ளெயிற்றவர் முலைகள் பாய்ந்துதேன்
    விளைந்ததார் வெறிகொள வைகும் வேற்றவர்
    உளைந்தபோர் நிலத்தினுள் ளுருள்ப வென்றனன்
    வளைந்தவா ளெயிற்றவன் வயிர கண்டனே.       1263

    சுகண்டன் கூறியது

    ஒத்திலங் கொண்சிறை யுவணன் றன்னொடு
    பைத்திலங் கரவுகள் பகைப்ப போன்மெனக்
    கைத்தலங் கையொடு புடைத்து நக்கனன்
    தொத்திலங் கலங்கலான் சுகண்ட னென்பவே.       1264

    அச்சுவக் கண்டனது கட்டளை

    தம்பியர் மொழியெனுந் தயங்கு மாரியால்
    வெம்பிய கொடுமனங் குளிர்ந்து வெய்யவன்
    நம்பெயர் முனிந்தவர் நயந்த மண்மிசை
    நும்பெயர் நிறுத்துமி னென்று நோக்கினான்.       1265

    திவிட்டன் வந்த படையினை எதிர்த்தல்

    நஞ்சினை நஞ்சுசென் றெரிக்க லுற்றபோல்
    விஞ்சையர் வெஞ்சினம் பெருக்கி மேல்வர
    வஞ்சமின் மணியொளி வண்ணன் றானையும்
    எஞ்சலின் றெழுந்தெதி ரூன்றி யேற்றதே.       1266

    இருபடைகளும் பொரும் வருணனை

    விண்ணின தளவுமேல் வந்த வேற்படை
    மண்ணின தளவுமா றேற்ற வாட்படை
    கண்ணிய கடற்படை யிரண்டு தம்மையும்
    எண்ணிணி நமக்கெளி தாவ தில்லையே.       1267

    கடலிரண் டுளவெனிற் கடுக்கு மக்கடல்
    இடைநில முடையன ணென்னு மொப்பில
    அடலரும் படையவை யிரண்டு மவ்வழி
    யடலரும் படையவை யிரண்டு மொக்குமே.       1268

    திண்டிறற் றேர்களே செறிந்த வென்னவும்
    கொண்டபோர் வேழமே குழீஇய வென்னவும்
    விண்டவழ் புரவியே மிடைந்த வென்னவும்
    கண்டவர் கண்டுழிக் கலந்து தோன்றுமே.       1269

    கைவலப் படையினர் கழலர் கச்சையர்
    செவ்வலர்க் கண்ணியர் செங்க ணாடவர்
    இவ்வுல கிவர்க்கிட மில்லை முன்னிவர்
    எவ்வுல குடையவ ரென்னத் தோன்றினார்.       1270

    அன்றுபோர் மலைந்தது தானை யாயிடைச்
    சென்றுபோர் படுமிடந் திசைக ளின்மையா
    னின்றுபோ ராடவர் நேரொப் பார்கேளா
    டொன்றுபோ ருலகினை யூழி யொத்ததே.       1271

    பேரினும் பெருகிய சின்னந் தன்னினுந்
    தாரினு மாறுமா றெறிந்து தம்முளே
    தேரினுந் தேரினுந் திளைக்கின் றார்சிலர்
    காரினும் பெரிதவர் கணைபெய் மாரியே.       1272

    தாளிடை மிடைந்தன தாள்க டம்முளே
    தோளிடை மிடைந்தன தோள்க டோளிடை
    வாளிடை மிடைந்தன வாள்கண் மற்றிவை
    நாளிடைப் படுங்கொலோ நாங்கள் சொல்லினே.       1273

    குடைநில மறைப்பவுங் கொடிகள் போர்ப்பவு்
    மிடைநில மிருண்மெழுக் கிட்ட தாயிடைப்
    படைநில விலங்கவும் பணிகண் மின்னவும்
    இடைநில மிடையிடை யிலங்கித் தோன்றுமே.       1274

    கருப்புடைக் கைகளாற் புடைத்துக் கண்களு்
    ணெருப்பொடு நெருப்பெதி ரெறிப்ப யானைகண்
    மருப்பொடு மருப்பிடை மிடைந்து மான்றரேர்
    பொருப்பொடு பொருப்பவை பொருவ போன்றவே.       1275

    கறங்கெனக் காலசக் கரங்க டாமென்
    மறங்கிளர் மன்னவர்தம் மகுட நெற்றியும்
    உறங்கலில் கடாக்களிற் றுச்சி மேலுமாய்த்
    திறங்கிளர் புரவிக டிரிதர் கின்றவே.       1276

    செம்பியல் கிடுகின செம்பொற் றட்டின்
    அம்புபெய் தூணிய வரவத் தேர்க்குழாம்
    வெம்பிய கணைமழை விரவி வில்லொடு்
    வம்புபெய் மழைமுகில் பொருவ போன்றவே.       1277

    இன்னவ ரின்னுழி யின்ன செய்பவென்
    றென்னவ ரறிவுமங் கிடைபு காவகை
    மின்னவி ரெஃகினு மிடைந்த வாளினும்
    மன்னவர் செருத்தொழின் மயங்கி யிட்டவே.       1278

    வேறு

    அச்சமுடை யாரகல்க வாற்றுபவ ரேற்க்
    எச்சமில் குடித்தலைவர் போகவென வெங்குங்
    கச்சையர் கருங்கழலர் காலனையு நோனார்
    வெச்சென விழித்துவிறல் வீரர்திரி கின்றார்.       1279

    ஏற்றவ ரிமைப்பினு மிகழ்ந்தெறிதல் செய்யார்
    தோற்றவர் புறக்கெடையு நாணிமிக நோக்கார்
    வேற்றவரை வீரநெறி காண்மினிது வென்று்
    தேற்றுவனர் போலவுணர் சென்றுதிரி கின்றார்.       1280

    தாருடைய மார்புபக வார்கணை குளிப்ப்
    வேரொடுப றித்தன ரெழுத்துவரி நோக்கிப்
    பேரொடுறு காளையவ னாரெனவி னாவி்
    நேர்படுது மென்றுசிலர் நேடுபு திரிந்தார்       1281

    அரிசேனன் போரேற்று வருதல்

    கேடக மிடத்தது வலத்ததயி லொள்வாள்
    ஆடக மடுத்தவணி பூணனலர் தாரான்
    றோடக மடுத்ததுதை கண்ணியொடு துன்னார்
    ஊடக மடுத்தொருவ னுந்திநனி வந்தான்.       1282

    வெறிமின்விரி கின்றவிற லாழியிறை தோழன்
    அறிமின்பெயர் யானவ்வரி சேனனென நின்றே
    னெறிமினெதி ரென்னொடிகல் வல்லிருளி ராயின்
    மறிமினது வன்றியுயிர் வாழலுறி னென்றான்.       1283

    வியாக்கிரரதன் அவனை எதிர்த்தல்

    அங்கவன் மொழிந்தமொழி கேட்டலு மருக்கன்
    வெங்கணை தெரிந்தது விலக்கிவிறல் வெய்யோய்
    இங்கிவ னினக்குநிக ரோவென விசைத்தே
    பொங்குபுலித் தேர்ப்பெயரன் போந்துபொர லுற்றான்.       1284

    பொன்னையணி கொண்டபுனை கேடக மெடுத்து்
    மின்னையுமிழ் கின்றசுடர் வாண்மிளிர வீசி்
    நின்னையறி யாதவர்க ணின்றிரிய வந்தாய்
    என்னையறி யாயறியி னித்தவிர்தி யென்றான்.       1285

    நின்னையறி வன்பெரிது நின்முறைய ளாய்
    கன்னியையொர் காளைபிற னெய்துவது கண்டும்
    மன்னுமண வில்லுள்வயி றாரவயில் கின்றாய்க்
    கின்னுமுள வோபுதிய வென்றுமிக நக்கான்.       1286

    கன்னியர்தம் பான்மைவழி செல்பவது கண்டாய்
    முன்னிய மொழிப்புலவர் நூன்முறைமை யேடர்
    அன்னதறி யாதவ னயக்கிரிவ னன்றே
    என்னையறி யாமைநினக் கின்னுமுள தென்றான்.       1287

    வாயுரை யிருக்கநம் வாளினொளி வாயாற்
    றீயுரை செகுத்துமலை கென்றுசெயிர் கொண்டு்
    காயெரி விழித்தனர் களித்தனர் தெளிர்த்தார்
    மாயிரு விசும்பிடை மடுத்துமலை குற்றார்.       1288

    தங்கொளி தயங்குமணி கேடகமு மேனைச்
    செங்களி மயிர்ப்புளக சேடகமு மேந்தித்
    திங்கெளாடு ஞாயிறு திளைத்திரு விசும்பின்
    அங்கண்மலை கின்றவுள வேலவையு மொத்தார்.       1289

    போரிகலி யாரமொடு பூண்மணிகண் மின்ன்
    நேரிகலும் வாள்கெளாடு கேடக நிழற்றச்
    சாரிகை கறங்கென மலைந்துசுழல் கின்றார்
    நீரக வளாகமடு சக்கர நிகர்த்தார்.       1290

    ஓவிலயில் விசுமொரு வன்னது விலக்குங்
    காவலொடு மீளுமொரு வன்னவர் கருத்தின்
    ஆவதது வன்றியய னின்றவர்கள் காணும்
    பாவனைய ரல்லர்பல பாடியினி யென்னோ.       1291

    கொந்தெரி யிரும்பெறிஞர் கொற்செய்கள னொத்தும்
    வந்துவன வேங்கைமலர் கால்சிதர்வ போன்று்
    நுந்தியவர் வீசுமொளி வாணுதிக டாக்கிச்
    சிந்தின தழற்பொறி சிதர்ந்ததிசை யெல்லாம்.       1292

    ஆளடு மடற்றகைய னாயவரி சேனன்
    தோளொடு துதைந்தெறியும் வாளதனை நோக்கிக்
    கோளொடு மடுத்தகுளிர் மாமதிய மொப்ப்
    வாளொடு மடுத்துமணி கேடக மறைத்தான்.       1293

    ஆங்குமுன் னெறிந்துபெயர் கின்றவரி சேனன்
    பூங்கம ழலங்கலுடை மார்பமிரு போழாய்
    நீங்கவெறிந் தானெடிய மாற்கிளைய காளை
    ஓங்கிய விசும்பினவர் கொண்டன ரொளித்தார்.       1294

    வேறு

    அழலான்பெய ரவன்மைத்துன
            னரிசேனனை யெறியக்
    கழலான்கட லொளியான்றமர்
            கலந்தார்த்தனர் கரிய
    நிழலான்றமர் கரிந்தார்சில
            ரிரிந்தார்பலர் நெரிந்தார்
    தழலாரயில் வலனேந்துபு
            சார்ந்தார்தலை சரிந்தார்.       1295

    அரிசேனனங் கழிவாதல்கண் டயில்வாளொளி மிளிரர்
    விரிசீர்வட்ட மணிகேடகஞ் சுழலாநகு வருவான்
    பரிசேரணி யுயர்தேர்மிகு பலயானையு மெறியாத்
    திரிசாரிகை நிகரானவ ருளரோதிறல் வினவும்.       1296

    சிகரிம்முடி திருமாமணி செறிகுண்டல மிலங்கத்
    திகிரிப்படை யரசன்றிறல் சிறக்கவெனப் புகழ்ந்து்
    பகருந்நல குணசேனனும் பருவம்முகி லிடிபோற்
    புகரும்மத களிறென்னவும் புலியென்னவுந் திரிவான்.       1297

    வேறு

    அருக்க கீர்த்திதன், பெருக்கம் வாழ்த்தியே
    திருக்கை வேலினா, னெரிக்கு மாற்றலான்.       1298

    பொன்னங் குன்றவன், மின்னும் வாளினன்
    மன்னன் றோழனாழ், முன்னி வந்தனன்.       1299

    வந்த வன்பெய, ரிந்தி ரன்னெனுங்
    கந்து கொல்களி, றுந்து காமனே.       1300

    இருவ ரும்மெதிர், பொருதும் வேலையின்
    அருகு நின்றவர், வெருவி யோடினார்.       1301

    வாளி னாலொரு, தோளை வீழ்த்தவோர்
    தோளி னாலவன், வாளை யிட்டனன்.       1302

    வேறு

    குணசேனன் வீழக் கண்டு
    கூற்றினுங் கொடிய நீரான்
    இணைசேனை தன்னு ளுள்ளோ
    னியம்பிய களிப்பின் மிக்கான்
    கணைசேர்ந்த தூணித் தோளான்
    கைச்சிலை பிடித்துக் கொண்டு்
    திணைசேர வருக வென்று
    வரசேனன் றிகழ்ந்து நின்றான்.       1304

    மற்றவ னிற்ப தோர்ந்து
    மதகளி றனைய காளை
    கொற்றவ னருக்க கீர்த்தி
    குணம்புகழ்ந் தாடிப் பாடிக்
    கற்றவன் கலைக ளெல்லாங்
    காமுக னென்னும் பேரான்
    பற்றிய வில்லு மம்பும்
    பாங்குடன் பரித்து வந்தான்.       1305

    வில்லொரு கையி னேந்தி
    வெங்கணை குழைய வாங்கிச்
    சொல்லரு மாரி போலத்
    தொடுத்தவன் விடுத்த லோடும்
    மல்லுறு காளை தன்மேல்
    வராமலே விலக்கி யிட்டுக்
    கல்லெனக் கலங்கி வீழக்
    கைச்சிலை கணையே றிட்டான்.       1306

    கார்செயன் முழங்கி யார்ப்பக்
    காளையுங் கனன்று மிக்க
    வார்சிலை வணங்க வாங்கி
    வாய்புக விடுத்த லோடும்
    போர்செயுங் களத்து வீழ்ந்தான்
    புகழ்வர சேன னென்னத்
    தார்செய்தா னவர்க டம்முட்
    டானவ னொருவன் வந்தான்.       1307

    வேறு
    அரிகேதனன் செயல்

    குடர்மாலைக டலைசூடின குழவித்தலை குழையாப்
    படர்காதினுள் ளவைபெய்தன பகுவாயது குருதித்
    தொடர்மாமழை மதயானைகை துணியாவவை யிடையே
    சுடர்மாலைகள் விடுசூலமொ டொருவன்றிரி கின்றான்.       1308

    கள்ளாவது குருதிப்புனல் கலனாவது கையே
    நள்ளாதவ ருடலம்பிற கறியாவது நமக்கென்
    றுள்ளாதவ ருளராங்கொலிவ் வுலகின்னென வுரையர்
    விள்ளாதவர் சிலர்பின்செல விரல்வீளைகள் விளியா.       1309

    களியானையி னெயிறாயின பறியாவவை கறியர்
    அளியாதுபல் படையாளர்க ளடையார்களை யுடனே
    ஒளிவாளிடை யிடைவிட்டுட லுருவாவுயிர் பருகாத்
    தெளியாதெதிர் வருவாராயி லுருவாவவை செறியா.       1310

    எரிபோல்வன சுரிபங்கியொ டிருள்போலிருண் மெய்யேர்
    டரிபோலதி ரகல்வானுற நிமிராவடி புடையாப்
    பரிபோல்வன பிடியாவுட லடியாவிடை மறிதேர்
    பொரிபோலெழ வுதையாவிவன் வருகின்றதொர் பொலிவே.       1311

    ஆழிப்படை யுடையான்றம னரிகேதன னென்போன்
    பாழிப்படை பொருவாரொடு பொருவன்பல வறியேன்
    ஏழைப்படை யிதுவோவெனக் கெதிராகுவ தாயில்
    வாழிப்படை பொருதென்னென வையாநனி வந்தான்.       1312

    சார்த்தூலகன் அவனை எதிர்த்தல்

    கள்ளாற்களி யிலனாலிகல் களமண்டிய செருவின்
    உள்ளாற்களி யுற்றானிவ னுயிருண்கென வுருவி்
    நள்ளாதவர் தலைவவ்விய நகைவாளது வீசித்
    தள்ளாதவ னெதிரேமிகு சார்த்தூலக னேற்றான்.       1313

    அரிகேதனன் மாயச் செயல்கள்

    வரையாலென முகிலாலென விருளாலென மறியும்
    திரையார்கட லளவேசெல விரியுந்நனி சிறுகும்
    நிரையாமுகின் முடிதேய்தர நிமிருந்நில மிதனுட்
    புரையாரிட மறையும்மிது பொருகின்றதொர் பொலிவே.       1314

    மாலைத்தலை வளர்மாமதி நிகரும்வளை யெயிறுஞ்
    சோலைத்தலை மலைபோல்வன தோளும்மிவை யுடையான்
    காலைத்தலை யிளஞாயிறு புரைவான்மிசை யெறியாச்
    சூலத்தலை நுதியாலவ னாகந்துளை யிட்டான்.       1315

    சார்த்தூலகன் அவனைக் கொல்லல்

    இடுவானையவ் விடுசூலமொ டுடலும்மிரு துணியாப்
    படவீசின னயில்வாளது படலும்பல மாயன்
    அடவாமையி னுருவம்முத லதுவேதன தாகத்
    தடமால்வரை யெனவீழ்தலு முடைவார்தம ரானார்.       1316

    வேறு
    தூமகேதனன் போரேற்றல்

    வாழுநா ளுலந்து மற்றவன் மண்மேல்
    மலையென மறிதலு மலைமேல்
    ஆழியான் றமர்க ளஞ்சினா ரஞ்சு
    மாயிடை யடுதிற லுடையான்
    ஊழிநா ளெரியுங் கூற்றமு முருமு
    மொப்பவன் கைப்படை நவின்றான்
    சூழிமா லியானைத் துளைமதஞ் செறிப்பத்
    தோன்றினான் றூமகே தனனே.       1317

    மலையெ டுத்திடுகோ மாநிலம் பிளக்கோ
    மறிகட லறவிறைத் திடுகோ
    உலைமடுத் துலகம் பதலையா வூழித்
    தீமடுத் துயிர்களட் டுண்கோ
    சிலையிடத் துடையார் கணைவலத் துடையார்
    சிலர்நின்று செய்வதீங் கென்னோ
    நிலையிடத் தவரு ணிகரெனக் குளரே
    னேடுமின் சென்றென நின்றான்.       1318

    சுவலனரதன் தூமகேதனனை நெருங்குதல்

    வண்டினம் பாடு மாலையன் வரித்த
    கச்சினன் வயிரப்பூ ணிரைத்த
    தண்டினன் கழலன் றமனியத் தாரான்
    சார்ந்தனன் சார்தலு மவனைக்
    கண்டன னன்றே கடலொளி மேனிக்
    காளைதன் மாமனுக் கிளையான்
    உண்டினி நமக்கோர் போரென வெதிரே
    யுவந்துசென் றவற்கிவை யுரைத்தான்.       1319

    சுவலனரதன் கூறியது

    மலையெடுத் திடுவாய் மாநிலம் பிளப்பாய்
    மறிகட லறவிறைத் திடுவாய்
    உலைமடுத் துலகம் பதலையா வூழித்
    தீமடுத் துயிர்களட் டுண்பாய்
    நிலையிடத் துளரோ நிகரெனக் கென்பாய்
    நின்றனை நிகருனக் காகித்
    தொலைவிடத் தல்லாற் சொல்லிவை நுங்கட்
    கொழியுமோ தூமகே தனனே.       1320

    தூமகேதனன் செயல்

    என்றலு மதுகேட் டெரியுடைத் தேரோ
    னென்பவ னாமிவ னென்றே
    நன்றுநன் றென்று நக்கன னக்கே
    நாணிலர் நம்மலை வாழ்வார்
    இன்றெனக் கெதிராய் நீகொலோ பொருவா
    யென்றன னினையன மொழியாக்
    குன்றினும் பெரியான் கூற்றினும் வெய்யோன்
    கொண்டனன் றண்டுகை வலித்தே.       1321

    இருவரும் பொருதிறன்

    இன்றெனக் கெதிராய் நீகொலோ பொருவா
    யென்றிகழ்ந் துரைத்தனை யேடா
    நின்றெனக் கெதிரா நீர்மையர் நின்போ
    னிரம்பவாய் திறந்துரைப் பவரோ
    என்றன னெனலு மெதிர்தெழித் தவனு
    மெழுந்தன னெழுந்தன னிவனும்
    அன்றுபோர் மலைந்தா ரதிர்ந்ததிவ் வுலக
    மமரொழித் தரசரு நின்றார்.       1322

    ஆர்த்தன திசைக ளதிர்ந்ததிவ் வுலக
    மலைகடல் கலங்கின விருளாற்
    போர்த்தது விசும்பு புலம்பின விலங்கல்
    புரண்டன பொருவரைத் துறுகற்
    சார்த்தினர் புடைக்குந் தண்டின ரெதிரத்
    தாங்கியும் வாங்கியுந் தடுத்தும்
    வேர்த்தனர் மெய்யால் வெதும்பினர் மனத்தால்
    விசும்பினை மயங்கவே திரிந்தார்.       1323

    கண்டவர்க் கெல்லாங் கண்ணுளார் போல்வார்
    காண்டலுக் கரிதவ ருருவம்
    தண்டின தொளியர் தங்களார்ப் பிசையுந்
    தயங்குதா ராரமும் விரவி
    எண்டிசை மருங்கு மிடைநிலத் திடையு
    மிருள்கெழு விசும்பின தகமுங்
    கொண்டன சிலம்பு குலுங்கின விலங்கல்
    கூற்றமுந் தலைபனித் ததுவே.       1324

    தூமகேதுவீழ அவனைச் சார்ந்தார் நடுங்குதல்

    தட்டுப்போ ரதனுட் டமனியக் கடிப்புந்
    தாரினோ டாரமுஞ் சரியப்
    பட்டுப்போ யுருண்டா னவருளங் கொருத்தன்
    பருவரை கரியதொன் றனையான்
    துட்டப்போ ரியானைத் தூமகே தனனுந்
    தோற்குமோ வொருவனுக் கென்று
    மட்டுப்போ ரணிந்த மணிமுடி மன்னர்
    மயங்கினார் மானமு மிழந்தார்.       1325

    வேறு
    அங்காரவேகன் திவிட்டனது சேனையின் மேல் வருதல்

    பொருதாங் கழிந்து புகைகேது வீழ
    வரிகேது முன்ன முடிய
    எரிதாங்கு வேலொ டினியீங்கு நின்று
    பெறுகின்ற தென்னை யெழுகென்
    றரிதாங்க ணாவ தெளிதாகு மாறொ
    ரமர்செய்கை கொண்டு பிறர்முன்
    கரிதாங்க ளான கழன்மன்ன ரேறு
    வருமங்கொர் காளை கடிதே.       1326

    கணிகொண் டலர்ந்த நறவேங்கை யோடு
    கமழ்கின்ற காந்த ளிதழால்
    அணிகொண் டலர்ந்த வனமாலை சூடி
    யகிலாவி குஞ்சி கமழ
    மணிகுண்ட லங்க ளிருபாலும் வந்து
    வரையாக மீது திவளத்
    துணிகொண் டிலங்கு சுடர்வேலி னோடு
    வருவா னிததென்கொ றுணிவே.       1327

    தேவசேனன் அவனை எதிர்க்கச் செல்லுதல்

    அருமாலை வேல்வல் லழல்வேக னாகு
    மவனாயி லாக வமைக
    எரிமலை வேல்வ லிளையார்க ணிற்க
    விவனென்னொ டேற்க வெனவே
    பொருமாலை வாள்கை பொலிகே டகத்த
    னணிபோ திலங்கு முடியன்
    செருமாலை மன்ன ரிறைதேவ சேன
    னெதிரே சிவந்து செலவே.       1328

    அங்காரவேகன் கூறியது

    மலைமேலு மென்னை மதியாது வாழ்தி
    மனிசர்க் குவந்து படையாய்
    நிலமேலு நின்று பொருவா னினைந்து
    வருவாய் நினக்கி துறுமே
    சலமேலு மின்ன வுடையாயை வென்று
    தலைகொண்ட பின்னை நுமரைக்
    குலம்வேர் களைந்து குடிபொன்று விப்ப
    னிதுயான் மகிழ்ந்த குணனே.       1329

    தேவசேனனுடைய மறுமொழியும் இருவரும் பொருதலும்

    மலைமேலு நின்னை மதியாது வாழ்வன்
    மனிதர்க் குவந்து படையாய்
    நிலமேலு நின்று பொருவான் புகுந்த
    நிலைகண்டு நின்று மிஙனே
    சலமே யுரைத்தி யிதுவோவு னாண்மை
    தழல்வேக வென்ன வெதிரே
    உலமேசு தோளி னொளிவேலி னோடு
    மொருவா னெதிர்ந்து பொருவான்.       1330

    வாள்வீசு மாறும் வடிவேலின் வந்த
    வடிவேல் விலங்கும் வகையுந்
    தோள்வீசு மாறு மவைமீளு மாறு
    மிடைசொல்லும் வீர மொழியுந்
    தாள்வீசு போழ்து கழலோங்கு மாறு
    மெதிர்தாங்க ளார்க்கு மொலியுந்
    நாள்வீய லன்றி யுரைவீய யாவர்
    நவில்வார் நமக்கு மரிதே.       1331

    மாலா லெதிர்ந்து மலைவாயை நீடு
    பொரவைப்ப தென்னை யினியென்
    வேலா லழிப்ப னெனவே லெறிந்து
    விறல்வேக னார்ப்ப மறவோன்
    மேலா லிலங்கு மணிகேட கத்தி
    னொருபால் விலங்கி யொருபாற்
    றோலாத வாளி னெறியத் துணிந்து
    சுடர்கான்று வீழ்ந்த ததுவே.       1332

    எய்வே லறுத்து வறியானை நோக்கி
    யெறியாது நிற்ப வவனோர்
    நெய்வேல் பெயர்த்து நிருமித்த தேந்தி
    யுருமொத்து நேர்ந்து பொருதான்
    வெவ்வே றெருட்டி யொருதோ ணிமிர்த்தி
    விரலொன்று சுட்டி வரவே
    வைவேலி னோடு நிமிர்கின்ற தோளை
    யறவீசி னானம் மறவோன்.       1333

    அங்கார வேகன் இறத்தல்

    நெய்யுற்ற வேலு மொருதோளும் வீழ
    வொருதோளி னீடு செருவைச்
    செய்யுற்ற போழ்தி னெதிரே விலங்கி
    யிதுதேவ சேனன் மொழியும்
    கையுற்ற தொன்று கவலே னுனக்கி
    துறுமாறு போக வெனவும்
    மையுற்ற காளை வருவானை வாளி
    னுயிர்வவ்வி னானம் மறவோன்.       1334

    வேறு
    சுவணகேது தோன்றுதல்

    தாம மார்ந்த மணியைம்பாற்
    றைய றாதை மைத்துனனாஞ்
    சேம மார்ந்த தனிச்செங்கோற்
    றேவ சேனன் கைவாளாற்
    சாம வண்ணன் றழல்வேகன்
    சாய்ந்தான் சாய்ந்த பொழுதத்தே
    தூம மாரங் கமழ்குஞ்சிச்
    சுவண கேது தோன்றினனால்.       1335

    அவன் உறுதி

    அஃதே யஃதே யங்கார
    வேக னாங்கோ ரயில்வாளால்
    வெய்தாங் குற்று வீடினனா
    னன்றே நன்றே மறுமாற்றம்
    மைதோய் மலையும் மண்ணகமு
    நமதாச் செய்வென் செய்யேனேற்
    செய்தா ரமர ருலகாள்வ
    னிரண்டி லொன்று திண்ணமிதே.       1336

    சடிமன்னன் அவனை ஏற்றல்

    என்னா விரண்டு மருங்கினுமற்
    றிளநல் யானைக் குழாஞ்சூழப்
    பொன்னார் தேரும் புரவிகளு
    மிடைந்து பூமி பொறைகூர
    முன்னாற் செல்ல வருவானை
    முந்நீர் வண்ணன் றன்மாமன்
    மின்னார் விளங்கு விறல்வேலான்
    கண்டே வெகுண்டு மேற்சென்றான்.       1337

    கானற் புரவி கலிமாவோ
    டெதிர்ந்த கருங்கை மதவேழ
    மான யானை தம்மோடே
    மலைந்த தேரு மாறேற்ற
    ஈன மில்லா விளையாரோ
    டிளையார் திளைத்தா ரிவ்வகையே
    தானை தம்முட் டாக்கலுறத்
    தாமுந் தம்முட் டலைப்பெய்தார்.       1338

    சுவணகேதுவின் உரை

    அருவி யிலங்கு மதயானை
    யனல வூன்றி யணைபோழ்திற்
    குருவ ரோடு படைபொருதல்
    கூடிற் றன்று குலவேந்தே
    பொருவ ரென்னப் படுவாரங்
    கொருவர் போந்து பொரவொருவர்
    ஒருவி நிற்ற லுரங்கொல்லோ
    வென்றா னுவண மேந்தினான்.       1339

    சடிமன்னனின் மறுமொழி

    குரவ ரென்னு முபசார
    மிருக்கக் கோதை மிளிர்வேலாய்
    பொருவ ராயின் யாரோடும்
    பொருவர் பூமி வேண்டுபவர்
    ஒருவி நிற்ப துரங்கொல்லோ
    வென்னு முரையு முணர்தியிவண்
    இருவே முள்ளும் யார்பாலஃ
    துறுவ தென்றா னொளிமுடியான்.       1340

    ஆக வமைக வதுவேயவ்
    வரச நீதி யாகிவிடிற்
    போக பொருவ னெனப்புகைந்து
    பொருவெஞ் சிலையொன் றிடனேந்தி்
    வேக யானை செலவுந்திச்
    சிறுநா ணெறிந்து வெஞ்சரங்கண்
    மாக மெல்லா முடனடுங்கத்
    தொடங்கி னானம் மழைபோல்வான்.       1341

    தொடங்கு கின்ற சுடுசரங்கள்
            சுருங்கி யொருகை செவிகாறும்
    முடங்கு மொருகை சிலைவளையா
            நிமிருங் கண்ட தித்துணையே
    இடங்க ளின்றி விசும்பெல்லா
            மிருள வீர்க்கோ டீர்க்குதையத்
    தடங்க லின்றி யடுசரமே
            மிடைந்த தவனி வட்டமே.       1342

    சொல்லான் மலிந்த புகழினான்
            சுவண கேது சொரிகின்ற
    கல்லார் கொண்டற் பெயல்போலுங்
            கணையின் மாரி கழல்வேந்தன்
    வில்லாற் செய்த விசாலவட்ட
            மேலு நாலு மருங்கினுமாய்க்
    கொல்லாற் செய்த வேலாற்குக்
            குடையாய் நின்று கவித்ததே.       1343

    வில்லாற் செய்த விசாலவட்டந்
            தன்னா லந்தில் விலக்கப்பட்
    டெல்லாத் திசையுஞ் சரஞ்சிந்தி
            யிருள வீழு மெல்லைதன்னுட்
    சொல்லாற் புகழ்தற் கரியான்பாற்
            றூணி வறிய வாதலுந்திண்
    மல்லாற் செய்த தோளான்மேன்
            மாய வெம்போர் செய்குற்றான்.       1344

    செய்ய லுற்ற மாயமதுஞ்
            சிலையு நிலையுஞ் சுருங்கியவைத்.
    தெய்ய லுற்ற பகழியையு
            மெண்ணி வேந்த னென்செய்தான்
    மைய லுற்ற மதயானை
            மலைப்ப வுந்தி மாற்றானை
    நைய லுற்றா யெனவுரையா
            நாம வாளி சிந்தித்தான்.       1345

    தொடுத்த வாளி யதுபொழுதே
            சுவண கேது கையகத்து
    மடுத்த சிலையும் பகழியும்வெம்
            மனத்துக் கொண்ட மாயமதும்
    அடுத்துத் துணிசெய் தப்புறம்போ
            யரசர் குழாங்க ளிரியப்பாய்ந்
    துடுத்த தூவி தோன்றாமை
            நிலத்தி னுள்புக் கொளித்ததே.       1346

    அம்புஞ் சிலையுங் கைம்மறிய
            வகத்த விஞ்சை துணிப்புண்டு
    வம்புகின்ற மனத்தினனாய்
            வெய்யோன் மீட்டு விறலோன்மேல்
    வம்பு கொண்ட வளையங்கள்
            கணையம் விட்டு விட்டேறு
    செம்பொன் னாழி யிவையெல்லாஞ்
            சென்று பாயச் சிந்தித்தான்.       1347

    இப்பா லிவர்கள் பொரும்பொழுதி
            னியானை யிரண்டு மெதிர்தாக்கிக்
    கைப்பா லெடுத்துக் கறைமருப்பு
            மிடைந்து கண்க ளெரிசிந்தி
    மெய்ப்பா லெடுத்துக் குத்தியுமெய்
            விலங்கிப் பாய்ந்து மொன்றொன்றைப்
    பொய்ப்பா லின்றி யெடுத்திட்டுப்
            புடைத்தும் பெயர்த்தும் பொருதனவே.       1348

    துண்ட வேகப் புள்ளுயர்த்தான்
            துளைக்கை யானைச் சுடர்முடியான்
    புண்டரீகக் கொலையானைக்
            குடைந்து போகும் பொழுதகத்துக்
    கொண்ட வாளன் கேடகத்தன்
            குதிகொள் வான்போ லெழுந்தெதிரே
    மண்டு வானை வயவேந்தன்
            கண்டு வாளி சிந்தினான்.       1349

    சுவணகேது அழிதல்

    மடுத்த வாளுங் கேடகமுங்
            கவசக் கண்ணு மார்பகமு
    மடுத்துக் குத்தி னாற்போலக்
            கழிந்த தம்பு கழிதலுமே
    எடுத்து மறிக்கப் பட்டான்போ
            லிலங்கு பூணு மாரமுந்தேந்
    தொடுத்த தாம மாலையுமுன்
            சொரிய வீழ்ந்தான் சுடர்வேலான்.       1350

    வேறு
    அவன் படை சிதறிப்போதல்

    தூவி யார்சுவ ணக்கொடி
    மேவி னான்பட வேமிகை
    மாவி னார்கடற் றானைபோர்
    ஓவி யாங்குடை வுற்றதே.       1351

    சிரீசேனன் போர் மீது செல்லல்

    வென்று வேற்றவர் நின்றனர்
    என்ற மாற்ற மிசைத்தலும்
    நன்று நன்றென நக்குமேற்
    சென்ற னன்சிரீ சேனனே.       1352

    கடைந்த கார்க்கடல் போற்கலந்
    துடைந்த வாட்படை வெள்ளநீர்க்
    கடைந்த வான்சிறை யாயினான்
    மிடைந்த வேற்படை வீரனே.       1353

    ஓடும் தம்மினத்தார்க்கு அவன் கூறியது

    விஞ்சை வேந்தர்க ளேமிகை
    அஞ்சு வாரென வாயிடை
    நஞ்ச னார்களை நக்கிவை
    கொஞ்சி லான்சில கூறினான்.       1354

    வாளர் வார்கழல் வீக்கிய
    தாளர் தாமுடைந் தோடினால்
    நாளை நாணுடை நங்கைமார்
    தோளை நாணிலர் தோயவே.       1355

    பொன்று மிவ்வுட லின்பொருட்
    டென்று நிற்கு மிரும்புகழ்
    இன்று நீரிகந் தீர்களாற்
    குன்றின் மேற்குடை வேந்திர்காள்.       1356

    மான மாமணி வீழ்த்துயிர்க்
    கூன மாமென வோடுவீர்
    ஈன வார்மயிர்க் கேதமாங்
    கான மாவது கானுமே.       1357

    சிரீசேனன் ஆயுதத்தைப் பிரயோகித்தல்

    ஈண்ட வின்னன சொல்லலு
    மீண்டு விஞ்சைய ரேற்றனர்
    ஆண்ட கைச்சுட ராயிடைத்
    தூண்டி னான்சுடர் வேலினான்.       1358

    இருபடைகளும் பட்ட அவதி

    கொண்ட வாளினர் விஞ்சையர்
    மண்டி னாரெதிர் மண்டலுங்
    கண்டகள் கண்டங்க ளாயினார்
    விண்ட வாட்படை வீரரே.       1359

    கருவிப் புட்டிலின் கண்டமும்
    இருமிப் பக்கரைப் போழ்களும்
    விரவிப் போர்க்கள வாயெலாம்
    புரவித் துண்டங்கள் போர்த்தவே.       1360

    உருப்பு நீரவொள் வாள்களா
    னெருப்பு நீரவர் வீசலும்
    பொருப்பு வீழ்வன போன்றன
    மருப்பு நீண்மத யானையே.       1361

    சீர்மு கந்தசெஞ் சேற்றினுள்
    ளார்மு கம்புக வாழ்ந்தரோ
    நீர்மு கந்நில முற்றபொற்
    றேர்மு கஞ்சிதை வுற்றதே.       1362

    சிரீசேனன் முன்னணிக்கு வருதல்

    மாலும் வாட்படைப் போரினுள்
    ஆலு மாமிசை யானவன்
    கால னாமென வந்தனன்
    சீல மானசிரீ சேனனே.       1363

    அவன் கூறியது

    மண்ணின் மேலுறை வாரொடு
    மண்ணின் மேற்செரு வல்லனே
    விண்ணின் மேலுறை வாரொடு
    விண்ணின் மேற்செரு வல்லனே.       1364

    சிரீபாலன் சிரீசேனனொடு போர்செய வருதல்

    வாய்ந்த போரிவை வல்லிரேல்
    ஏந்து மின்படை போந்தனெக்
    காய்ந்த கட்டுரை கேட்டலுஞ்
    சேர்ந்த னன்சிரீ பாலனே.       1365

    சிரீபாலன் ஒரு குதிரை மேற்கொள்ளல்

    உவரி யோங்கு திரையெனக்
    கவரி வேய்ந்த கலினமா
    இவர வேறி னானரோ
    எவரு மஞ்சு மீட்டினான்.       1366

    இருவரும் போர் செய்தல்

    திரிவில் சாரி கைச்செயல்
    புரவி சேர்ந்து பொங்கின
    வரிவில் வாளி மன்னரும்
    மருவு போர்ம யங்கினார்.       1367

    வில்லும் வாளும் குந்தமும்
    சொல்லி னாற்றொ ழிற்கொளீஇ
    எல்லை யின்று பொருதலொந்
    தொல்ல மர்தொ டங்கினார்.       1368

    வெல்லு நீர விஞ்சையன்
    வில்லும் வீசு குந்தமும்
    வல்லி தின்ம டித்தனன்
    மல்ல மலர்ந்த மார்பினான்.       1369

    அற்ற குந்த மாண்டவச்
    செற்ற லன்றெ ழித்துமேற்
    கொற்ற வன்றன் கோகின்மேல்
    வெற்றி வாளின் வீசினான்.       1370

    ஒளித யங்கு தோளின்மேல்
    தெளித மாவெ றிந்தவாள்
    உளித மாக நீட்டினான்
    பளித நாறு மேனியான்.       1371

    தளித யங்கு தண்மதுக்
    களித யங்கு கண்ணியாற்
    குளித வாளி னுற்றபுண்
    ணெளித மாயி லங்குமே.       1372

    இட்ட வாள றுத்தபின்
    விட்ட மாவின் மேற்செலாத்
    துட்ட மாத்து ரந்தனன்
    மட்டு வார்த்த மாலையான்.       1373

    மாதி போகு மானமா
    மீது போக விட்டவன்
    சோதி கூடு சுடர்முடிக்
    கேத மாக வெண்ணினான்.       1374

    எண்ணி னன்னெ டுப்பலுங்
    கண்ணி யஃது கருதிமா
    மண்ணில் வாவி யாங்குமேல்
    விண்ணின் மேலு மிக்கதே.       1375

    கொண்ட தன்கு சைக்குறி
    கண்டு மன்னு கதியினால்
    விண்ட லத்தின் மீதுபோய்.
    அண்ட யத்த டுத்ததே.       1376

    சிரீசேனன் அழிதல்

    வானின் வாவு விஞ்சையன்
    மான மாம ணிம்முடி
    ஏனை மன்ன னேதியான்
    மீனின் வந்து வீழ்ந்ததே.       1377

    வேறு
    அவன் சேனை பின்னிட்டோடல்

    திருநிலை யகமுடைச் செல்வன் செங்கதிர்
    விரிநிலை மணிமுடி மிளிர்ந்து வீழ்தலும்
    பொருநிலை யழிந்துபிற் புறக்கொ டுத்தது
    பருநிலை மலையவர் பரவைத் தானையே.       1378

    வேயுடை வெள்ளிசேர் விலங்கல் வேந்தர்கள்
    ஆயிடை யுடைதலு மாழி யான்மகன்
    காய்வுடை மனத்தவன் கனக சித்திரன்
    சேயிடை புகுந்தன னின்று செப்பினான்.       1379

    கனகசித்திரன் வீர உரை

    உருவிய வாளின னுடுத்த கச்சினன்
    வெருவர விழித்தனன் வீர வேகமோ
    டொருவனை யொருவனங் கஞ்சி யோடுமேல்
    அருவருப் புடையதவ் வாண்மை யாகுமே.       1380

    மதிதொடு நெடுவரை மான விஞ்சையர்
    விதிபடு மனிசரை வெருவி மீண்டனர்
    அதிசய மிதுவென வலர நக்கனன்
    கதிர்விடு வளையெயி றுடைய காளையே.       1381

    உடைந்தவர் மனங்களை யுருவ வீழ்த்திடு
    மடந்தையர் வடிக்கணம் பல்ல வாய்விடின்
    மிடைந்தவர் தொடங்கிய வீரக் கோட்டியுள்
    அடைந்தவ ரடுபடைக் கஞ்சல் வேண்டுமோ.       1382

    தானுடம் பிறந்ததற் பின்னுந் தன்றிறல்
    வானுடன் புகழ்தர நிற்கு மண்மிசை
    மானுட ருயிர்கொள மானமில் லிர்காள்
    ஊனுடம் பிதன்பொருட் டுடையல் வேண்டுமோ.       1383

    நெய்யினா னிழன்றுநீர் நின்ற நீளொளி
    வெய்யவா ளமரிடை வெருவி யிட்டதங்
    கையினாற் கருனையின் கவளங் கொள்ளிய
    ஐயன்மார் போந்ததென் றசதி யாடினான்.       1384

    கனகசித்திரன் போரிடுதல்

    இன்னண மொழிந்தெதிர் தெழித்து மாற்றலர்
    மன்னிய கடற்படை மண்டி வாளினாற்
    கன்னவி றோளினான் கண்டங் கண்டமாத்
    துன்னிய துணிபல தொடரத் தோன்றினான்.       1385

    விலங்குவேல் கொண்டையை யுந்தி வேற்றவர்
    மலங்கமேற் செல்வது மான மாமெனப்
    பொலங்கலங் கழலொடு புலம்பப் பூமிமேல்
    அலங்கலா னடந்தம ரழுவந் தாங்கினான்.       1386

    பத்திரக் கடிப்பினன் பைம்பொற் றாரினன்
    சித்திர மணித்தொடர் திளைக்குந் தானையன்
    கத்திகைக் கண்ணியன் காணும் பாலெலாந்
    தொத்திணர்க் குஞ்சியான் காளை தோன்றினான்.       1387

    வம்பமா விருதுணி பட்ட மாவொடு
    செம்பொனா லியன்றதேர் சிந்தி வீழ்ந்தன
    கம்பமா வொழிந்தன களிறு காளைவாள்
    வெம்புலால் விரையினும் வெறுத்த தில்லையே.       1388

    வார்குலாங் கருங்குழன் மன்ன ரேற்றவர்
    நீர்குலாங் குருதியுட் குளிப்ப நேரினி
    ஆர்கொலேற் பவரென வஞ்ச வெஞ்சினக்
    கார்குலா முருமெனக் காளை தோன்றினான்.       1389

    காளைநங் கனைகழற் கனக சித்திரன்
    வாளம ரழுவத்து மண்டி னானெனக்
    கேளவர் மொழிதலுங் கிரீவன் றம்பிமார்
    ஆளிவர் கடற்படை யனன்றெ ழுந்ததே.       1390

    அச்சுவக்கிரீவன் தம்பிமார் போரிடுதல்

    வெருவிமுன் னுடைந்துபோய்ப் பெயர்ந்து வேற்றவர்
    ஒருவில்வா ளழுவம்வந் துந்து மற்படை
    உரவுநீ ரிருங்கட லோதம் போந்தபின்
    அரவநீர் வேலைமீ தலைப்ப தொத்ததே.       1391

    மன்னவற் கிளையவர் வயிர மால்வரை
    அன்னவ ரயிற்படை யரச வீரர்க
    டுன்னலர்க் கரும்படர் தோன்றத் தோன்றுபு
    முன்னினர் கனன்றுபோர் முறுக முட்டினார்.       1392

    கண்ணிடை சிவந்துகை சுட்டிக் காய்ந்துதம்
    பண்ணுடை மழகளி றுந்தி னார்படை
    எண்ணிடை யிடுமிட மின்றி யெங்கணு
    மண்ணிடை யவரொடு மயங்கி நின்றதே.       1393

    இருதிறப்போர் நிகழ்ச்சி

    இலைதடு மாறின பகழி யெங்கணுஞ்
    சிலைதடு மாறின சிலைத்த தேர்க்குழாம்
    மலைதடு மாறின போல மான்றரோ
    தலைதடு மாறின தடக்கை வேழமே.       1394

    முரிந்தன ,மணிநெடுந் தோள்கண் முத்துக
    நெரிந்தன களிறுடை மருப்பு நேர்முகஞ்
    சரிந்தன தலைபல தறுக ணில்லவர்
    இரிந்தன ரிழிந்தது குருதி நீத்தமே.       1395

    மரைமயி ரணிந்தன மான மாப்பல
    திரையென வுருண்டன திலக வெண்குடை
    நுரையென நிவந்தன நுந்து மப்புனற்
    கரையெனக் கிடந்தன களிற்றின் கூவையே.       1396

    பெருகிய குருதியுட் பிறக்கு செந்தடி
    அருகுடை யளற்றினு ளழுந்திப் பாகமே
    சொரிகதிர்க் கோடக முடிக டோன்றலாற்
    பொருகளம் புற்றெடுக் கின்ற தொக்குமே.       1397

    யானைப்போர்

    மாடடைந் தெதிர்ந்துதம் வயிரத் தண்டினாற்
    பீடடைந் தவர்பிடர் புடைப்ப வானையின்
    கோடுடைந் துதிர்ந்தன கொடுமுட் கேதகைத்
    தோடுடைந் தொருவழித் தொகுத்த லொத்தவே.       1398

    குழைசுடர்ந் திலங்குதா ரரசர் கோலமாண்
    இழைசுடர் தோள்களா லெறிய யானையின்
    தழைசெவி மதமுகத் தொளிக்குஞ் சக்கர
    மழைசொரி முகில்புகு மதிய மொத்தவே.       1399

    செருவரை யனையதோண் மன்னர் சேனையுள்
    அருவரை புகுமயி லனைய வாயின
    கருவரை யனையன களிநல் யானையின்
    பெருவரை முகம்புகும் பிண்டி பாலமே.       1400

    மண்ணியன் மன்னர்கை முறுக்கி விட்டிடக்
    கண்ணியன் யானைமேற் கணையம் பாய்வன
    திண்ணிய நெடுவரைச் சென்னி மீமிசை
    விண்ணியல் விளங்குமீன் வீழ்வ போன்றவே.       1401

    கடுத்துவீழ் கடாக்களிற் றுழவர் தந்தலை
    அடுத்தகீ சகந்தமோ டற்று வீழ்வன
    தொடுத்ததேன் றொடர்ந்த வீப் பிறங்க லோடுடன்
    உடுத்தமால் வரைமருங் குருவ மொத்தவே.       1402

    தேர்வீரர் செயல்

    அணியமு மாரமுங் கொடிஞ்சுங் கோலுமாத்
    துணிவினைக் கவனமாத் துரக்கும் பாகரா
    மணியவிர் தேரெனு மதலை நாயகர்
    பணிவருங் குருதிநீர்ப் பவ்வத் தோட்டினார்.       1403

    குருதிப் பெருக்கம்

    நுதலிய செருநிலக் குருதி நீரினுண்
    முதலையின் முதுகென நிவந்த தோற்பரங்
    கதலிகை காம்பொடு கடுகித் தாமரை
    மதலையந் தாளணை வாளை போன்றவே.       1404

    கைவரை யொழுகிய கணையம் பாய்ந்துதம்
    மெய்வரை நிரைத்திட விழுந்த யானைகள்
    நெய்வரை நீணிலத் தலத்து மேற்பல
    மொய்வரை முனையடிப் புண்ட வொத்தவே.       1405

    ஊடக மெரிமணி நாகங் கவ்விய
    நாடக விரிமதி நடுங்கி வீழ்வபோல்
    ஆடக மணிநகைக் கடகக் கையொடு
    கேடகந் திசைதிசை கிளர்ந்து வீழ்ந்தவே.       1406

    துளைப்படு புண்ணுமிழ் சோரி பாய்ந்தழெக்
    களிப்படு சிலம்பின கவந்த மாடுவ
    முளைப்புடை முடைத்திடை சுடர மூட்டிய
    விளக்கிடு குற்றியின் விரிந்து தோன்றுமே.       1407

    விசயன் வீரம்

    அஞ்சல ரமர்க்கள மென்னு மார்வயல்
    விஞ்சையர் குருதிநீர் வெள்ளந் தேர்த்தழெ
    வெஞ்சின நாஞ்சிலா லுழுது வெள்ளியான்
    தஞ்சமார் தன்புகழ் தயங்க வித்தினான்.       1408

    அச்சுவக்கிரீவனின் இளையோர் வினவுதல்

    வெளியவன் மிளிர்மரை புரையுஞ் செங்கணான்
    அளியில னமர்க்களங் கடாக்கொள் கின்றவவ்
    விளையவன் யாரென வினவிக் கேட்டனர்
    கிளையமர் கிரீவனுக் கிளைய வீரரே.       1409

    விசயனை எதிர்த்தல்

    சுரமைய ரதிபதி சிறுவன் மார்களுட்
    பெரியவ னிவனெனப் பிறந்த செற்றமோ
    டெரியவிர் வெகுளியா ரிளைய காளைய
    ரொருவன்மே னால்வரும் யானை யோட்டினார்.       1410

    இரத்தின கண்டனு மேனை வீரரும்
    வரைத்தனர் வருபடை வீதி வாயெலாம்
    எரித்தனர் நால்வரு மிளைய காளையை
    முரித்திடு முனிவின ராகி முற்றினார்.       1411

    விசயன் அடங்கினன் என்று ஒலி எழுந்தது

    அடங்கின னரசிளங் குமர னோவென
    உடங்கலந் தொல்லொலி யெழுந்த தாயிடை
    மடங்கலில் கருங்கடன் மலங்கிற் றொத்தது
    தடங்கமழ் சுரமைநாட் டரசன் றானையே.       1412

    புதிய உதவி விசயனுக்குக் கிடைத்தலும் அவன் போரிடுதலும்

    எரிபுரை யுளைகேளா டிலங்கு வெண்பிறை
    விரிவன வெனவிளங் கெயிற்றொ டாயிடை
    அரியர சடைந்ததொன் தவனை யேறினான்
    புரிவகை நாஞ்சிலும் புதிய தெய்தினான்.       1413

    செய்யவாய் நாஞ்சிலுஞ் செங்கட் சீயமும்
    ஐயனாங் கெய்தலு மதிர வார்த்தது
    வையமா ளிளையவன் றானை மற்றவர்
    மையன்மா யானைகண் மயங்கி யிட்டவே.       1414

    பொருபடை புகைந்தவர் வழங்கு மாயிடைச்
    செருவுடை யவரகன் செல்வ மார்பகம்
    உருவுடை நாஞ்சிலா லுழுதிட் டானரோ
    மருவுடை யவரையும் மயக்கு மைந்தனே.       1415

    கனகசித்திரன் போர்க்கு வருதல்

    ஒருவனோர் நாஞ்சிலா லூழித் தீப்புரை
    இருவரோ டிருவரை யானை நான்கொடு
    செருவினு ளமர்வெலக் கேட்டுச் சேர்ந்தனன்
    கருவரை யனையதோட் கனக நாமனே.       1416

    கனகசித்திரன் மாய்தல்

    காளையக் கனகசித் திரனுங் காய்ந்துதன்
    வாளைவாய் துடைத்தெதிர் மடுப்ப மற்றவன்
    தோளையுஞ் சுடர்கெழு நாஞ்சில் வாயினால்
    ஆளியே றனையவ னழுந்த வூன்றினான்.       1417

    இரத்தினகண்டன் நிலை

    வனைகதி ரிலங்குதோள் வயிர கண்டனோ
    டனைவரு மலாயுதற் கமர்தொ லைந்ததுங்
    கனகசித் திரனது பாடுங் கேட்டரோ
    அனல்படு மனத்தனங் கொருவ னாயினான்.       1418

    அவன் போரிடுதல்

    பொடித்தலை நிலத்தவர் போரு மாண்மையு
    முடித்திடு கெனமுனிந் தெழுந்து மூரிவான்
    மடுத்ததோர் வரைதனை வயிரக் கைகளால்
    எடுத்தன னிரத்தினக் கிரீவ னென்பவே.       1419

    வரிந்துவீழ் கச்சையன் வனைந்த தாடியன்
    முரிந்தெழு புருவத்தன் முழங்கு தீயென
    எரிந்தன னிறுவரை யெடுத்து மேற்செல
    இரிந்தது சுரமைய ரிறைவன் றானையே.       1420

    அருக்ககீர்த்தி அம்புவிடல்

    ஆங்கவ னடைதலு மருக்க கீர்த்திகை
    வாங்குவிற் புகுந்தது வாளி யொன்றவன்
    ஓங்கிருந் தூணியிற் சுடர்ந்த தொல்லெனத்
    தாங்கருந் திறலவன் சந்தித் தோட்டினான்.       1421

    தொடுத்ததுந் துரந்ததும் விடலை தோளிடை
    மடுத்ததுங் கிழித்தது மண்ணினுட்புகக்
    கடுத்ததும் கண்டுநின் றவர்க டம்மையும்
    படுத்தது பகலவன் பகழி யென்பவே.       1422

    இரத்தின கண்டன் மாய்தல்

    வரையொடு வரையென மறிந்து மண்ணின்மேல்
    விரையுடை யலங்கலான் வீழு மாயிடைத்
    திரையொடு கனைகடல் கலங்கிச் சிந்தின
    புரையுடை விலங்கலும் புலம்பு கொண்டவே.       1423

    வேறு
    அச்சுவகண்டனுக்கு அறிவித்தல்

    தம்பியர் பாடு மக்க ளிறந்ததுந் தனக்குப் பாங்காய்
    வெம்பிய வீரர் போருள் விளிந்ததும் விரைவி னோடிச்
    செம்பினை யுருக்கி வெய்தாய்ச் செவிமுதற் சொரிந்ததேபோ
    லம்பொன்செ யாழியானுக் குரைத்தன ரரக்குண் கோலோர்.       1424

    அவன் செயல்

    ஆங்கவர் மொழிந்த போழ்தி
            னருவரை கரிய தொப்பான்
    ஈங்கிவர் மாற்ற மாயி
            னிருந்தினி யென்னை யென்னா
    வாங்குநீ ருலகில் வாழு
            முயிர்களை வாரிக் கொண்டு
    வீங்குநீர்க் கடலுட் பெய்யும்
            விஞ்சையை விடுக்க நேர்ந்தான்.       1425

    சண்டவேகையிடம் கூறல்

    ஓர்ந்தவன் மனத்து விஞ்சை
            யொருபுடை யெய்த லோடுஞ்
    சார்ந்தது சண்ட வேகை
            பணிபணி யென்று சார
    வார்ந்தநீ ருலகின் வாழு
            மனிதரை வல்லை யாகில்
    தேர்ந்துகொண் டொருவ ரின்றித்
            தெய்வமே செகுத்தி டென்றான்.       1426

    சண்டவேகை கூற்றுவனிடம் கூறுதல்

    கொடியவன் விடுத்த போழ்திற்
            கூற்றுவன் றன்னைக் கூவி
    வடியெயி றிலங்க நக்கு
            வாழிய தோள்க ளின்று
    விடுகதி ராழி வெய்யோன்
            வேண்டவென் வாயுட் பட்டு
    முடியுமிவ் வுலக நீயு
            முறைத்தொழின் முடித்தி யென்ன.       1427

    பேய்களின் செயல்

    அணங்குகள் குழுமி யாமும்
            பெருவயி றார்து மென்று
    துணங்கைகோத் தாடி நக்குச்
            சுடரிலைச் சூல மேந்தி
    வணங்குபு சூழ மற்ற
            மாபெருந் தெய்வம் வந்து
    மணங்கமழ் சுரமை நாடன்
            றானைமேன் மடுத்த தம்மா.       1428

    பேய்களின் வருணனை

    பட்டடி நெடிய வீங்கு
            பரட்டின நொடிக்குங் கால
    ஒட்டிய வயிற்ற வற்ற
            லுகிரிடை மயிர முன்கை
    கட்டிய கண்ணி பீலித்
            தலையின கழற்காய் போல
    வட்டமா யுருளுங் கண்ண
            கணங்கள்வந் திரைத்த வன்றே.       1429

    சண்டவேகையின் செயல்

    வரைகளை யுருள வுந்தி
            வந்ததோர் சண்ட வாயு
    நிரைகிளர் சுடர தாகி
            நிமிர்ந்ததோ ருருவச் செந்தீ
    திரைகளை மறிய வீசிச்
            சிறந்ததோ ரழுவ முந்நீர்
    விரைகிள ருருவத் தெய்வ
            மிதுபடை விடுத்த வாறே.       1430

    வரைகளு மரனு மண்ணு
            மறித்திடும் வாயுச் செந்தீப்
    புரைகிளர் பொடிக ளாரப்
            புணர்த்திடும் புணர்ந்த போழ்திற்
    றிரைகிளர் பரவை முந்நீ்ர்
            திரைத்துக்கொண் டொழுகு மிஃதால்
    கிள ருலகைத் தெய்வ
            முண்ணிய வுடன்ற வாறே.       1431

    விசயன் சேனை மயக்குற்றது

    மருங்கவை புணர்த்த பின்னை
            வானக வளாக மெல்லாங்
    கருங்கலொன் றகன்ற மேலாற்
            கவித்தது கவித்த லோடும்
    இருங்கலி யுலக மெல்லா
            மிருள்கொள வெருவி நோக்கிப்
    பொருங்கலி யரசர் தானை
            போக்கிட மற்ற தன்றே.       1432

    வாளொடு வாள்கள் வீழா
            மைந்தரை மைந்த ருந்தித்
    தாளொடு தாள்க டாக்கித்
            தலையொடு தலைகண் முட்டித்
    தோளொடு தோள்க டேய்ப்பச்
            சுடரணி சுடர்ந்து சிந்த
    ஆளுடை யரசன் றானை
            யரவமோ டுடைந்த தன்றே.       1433

    திவிட்டன் உண்மை அறிதல்

    அன்னண முடைந்த போழ்தி
            னருக்கனை முகத்து நோக்கி
    என்னிது விளைந்த வாறென்
            றிருங்கடல் வண்ணன் கேட்பக்
    கன்னவில் வயிரத் தோளாய்
            காய்ந்தவன் விடுக்கப் பட்டு
    மன்னுயி ருண்ணுஞ் சண்ட
            வேகையாம் வருவ தென்றான்.       1434

    செற்றலன் விடுத்த பின்றைச்
            செகுத்துயிர் பருகி னல்லான்
    மற்றிது மறித லில்லை
            மறிப்பவர் பிறரு மில்லை
    இற்றிதன் நிலைமை யென்ன
            விருங்கடல் வண்ண னக்காங்
    கற்றமி லலங்கல் வேலோ
            யஞ்சினை போறி யென்றான்.       1435

    திவிட்டன் பேருருக் கொள்ளல்

    பேயெரி யுமிழ்ந்து நம்மேல்
            வருமெனப் பேசு கின்றாய்
    நீபெரி தினியை யென்னா
            நெடியவன் றன்னை நோக்கிக்
    காயெரி சுடர்விட் டாங்குக்
            கனன்றனன் கனலலோடு
    மாயிரு விசும்பு மஞ்சும்
            வடிவினன் வள்ள லானான்.       1436

    நலம்புரி செய்கை மேனாட்
            பெற்றநற் றோழ னேபோல்
    உலம்புரி யுருவத் தோளாற்
            குற்றபோழ் துதவ லுற்று
    வலம்புரி வலத்த தாக
            விடத்ததோர் வயிர வல்விற்
    கலம்புரி கனபொற் பூணான்
            கைவந்து புகுந்த வன்றே.       1437

    திவிட்டன் தோற்றம்

    நெதிசொரி சங்க மேந்தி
            நெடுஞ்சிலை யிடங்கைக் கொண்டு
    விதிதரு நீல மேனி
            விரிந்தொளி துளும்ப நின்றான்
    மதியொரு பால தாக
            வானவின் மருங்கு கோலிப்
    புதியதோர் பருவ மேகம்
            போந்தெழு கின்ற தொத்தான்.       1438

    திவிட்டன் உரப்பலும் சண்டவேகை தாழ்தலும்

    வலம்புரி சிலம்ப வாய்வைத்
            திருஞ்சிலை வளைய வேற்றிக்
    கலம்புரி கனபொன் னாழிக்
            கைவிரல் கதிர்ப்பச் சூட்டி
    உலம்புரி வயிரத் தோளா
            னுரப்பினா னுரப்ப லோடுஞ்
    சலம்புரி தெய்வ மஞ்சித்
            தன்னுரு வடைந்த தன்றே.       1439

    நிலத்திடை நின்று வான
            முடியுற நிமிர்ந்து கண்ணின்
    புலத்தின தளவு நீங்கிப்
            பொம்மென வுயிர்த்து விம்மிப்
    பிலத்தின தளவிற் பேழ்வாய்
            பிறழ்ந்திலங் கெயிற்ற தாகிச்
    சலத்தினைப் புரிந்த தெய்வந்
            தலைபனித் துடைந்த தன்றே.       1440

    அச்சுவகண்டன் போர்க்கெழுதல்

    தெய்வமாங் குடைந்து தன்பாற்
            படையினைத் திரைத்துக் கொண்டு
    மையிரு விசும்பி னேறக்
            கண்டபின் மாற்று வேந்தன்
    கையினைப் புடைத்துக் கண்கள்
            சிவந்துவா யெயிறு கவ்வி
    வையக நடுங்க நோக்கி
            மழகளி றணைக வென்றான்.       1441

    திவிட்டன் அச்சுவகண்டனுடன் போரிடல்

    மாலுமால் களிறு நுந்தி
            மற்றவன் வருத லோடு
    மாலுமால் புரவித் திண்டே
            ரரசர தரவத் தானை
    வேலினா னுடங்கு நில்லா
            துடைந்திட வெகுண்டு நோக்கி
    நீலமா மணிக்குன் றொப்பா
            னெடுஞ்சிலை யிடங்கைக் கொண்டான்.       1442

    கருடன் வருகை

    வாய்ந்தநல் வயிரத் துண்டம்
            வளைந்தொளி துளும்ப வள்ளாற்
    சேந்தன சிறுக ணோடு
            திசைமுகஞ் சிறகு தம்மால்
    வேய்ந்தனெ விரித்து வீசி
            விசும்பிடை யிழிந்து வந்து
    காய்ந்தெரி கணையி னாற்குக்
            கருடனு முழைய னானான்.       1443

    அச்சுவகண்டன் உரை

    கருடனை வலங்கொண் டேறிக் கார்முகங் கையி னேந்தி்
    மருடரு விசும்பி னேறி மணிவண்ண னெதிர்ந்த போழ்தின்
    இருடனக் கெய்திற் றோரா னெரிகதி ராழி வேந்தன்
    பொருடனக் கினியி லாத புகழ்ச்சிகள் புகல லுற்றான்.       1444

    தானவர் நின்னைப் போலத் தந்திற லறிவி லாதார்
    ஈனவ ரிரங்கி வீழ்ந்தா ரேனையர் தொழுது வாழ்ந்தார்
    வானவ ரென்னை யஞ்சி வானிடை மறைந்து செல்வார்
    ஊனவர் தம்மு ணீயே யுயிரெனக் கிழக்க லுற்றாய்.       1445

    மண்ணுள்வாழ் சிதலைச் சாதி மற்றவை வாழு நாள்கள்
    எண்ணியாங் கிகந்த பின்னை யிறகுபெய் தெழுங்கள் போலாம்
    கண்ணினா லதனை நீயுங் கருடப்புள் ளதனை யேறி
    விண்ணினா றெதிர்ந்து வந்தாய் வேற்கிரை யாகி யென்றான்.       1446

    மாறலா மனிதர் தம்மேல் வண்சுட ராழி யானுஞ்
    சீறினா னென்ற போழ்திற் சிறுசொலாய் நிற்கு மென்று
    தேறினார் மொழிகள் கொண்டு செவிசுடு சொற்கள் கேட்டு
    மாறினே னென்ப தோரா யளியற்றா யனல்விக் கின்றாய்.       1447

    திவிட்டன் விடை

    என்றலு மதனைக் கேட்டே யிருங்கடல் வண்ண னக்கு
    நன்றுநன் றுரைத்தி மீட்டு நல்லையே பெரிது மேடா
    குன்றின்மே லிருந்து நீநின் குழுவினுண் மொழிவ தல்லால்
    இன்றுவந் தென்மு னின்று மிதுகொலோ கருதிற் றென்றான்.       1448

    அச்சுவகண்டன் சரமழை பொழிதல்

    சிறியவ னுரைகள் வந்தென் செவிசுடும் பொறுக்க லாற்றேன்
    எறிகடல் வளாகந் தன்னு ளிவன்பெய ரொழிப்ப னென்று
    செறிமணிக் கடகக் கையாற் றிண்சிலை குழைய வாங்கிப்
    பொறிநுதல் யானை மேலான் சரமழை பொழிவிக் கின்றான்.       1449

    கடுத்தவ னெய்த போழ்திற்
            கருடன்றன் சிறகு தன்னாற்
    புடைத்திட நெரிந்துப் பொங்கிச்
            சரங்கள்போய்ப் புரள நோக்கி
    விடைத்திறல் விடலை தன்மேல்
            வெம்பிய மனத்த னாகிப்
    படைத்திற லாளன் றெய்வப்
            படைத்தொழில் பறைக்க லுற்றான்.       1450

    அச்சுவகண்டன் நாகாத்திரம் விடுதல்

    காயிரும் பனைய வெய்யோன் கருமணி வண்ணன் றன்மேல்
    ஆயிரம் பணத்த தாய வருமணி யாடு நாக
    மாயிரும் புகழி னான்றன் வன்சிலை வாங்கி யெய்யச்
    சேயிருஞ் சுடர்கள் சிந்தித் தீயுமிழ்ந் தோடிற் றன்றே.       1451

    திவிட்டன் கருாடத்திரம் விடுதல்

    கண்டன னதனை மற்றக் கருங்கடல் வண்ணன் கண்டே
    ஒண்டிற லுவணப் புள்ளி னுருவினோர் தெய்வ வம்பு
    கொண்டனன் றொடுத்த லோடுங் கொடுஞ்சிறை நுடங்க வீசித்
    துண்டமா நாகந் தன்னைத் துண்டத்தாற் றுணித்த தன்றே.       1452

    அச்சுவகண்டன் ஆக்னேயாஸ்திரம் விடுதல்

    ஆயிடை யனன்று மீட்டு மழலுமி ழாழி வேந்தன்
    தீயொடு புணர்த்த போழ்தத் தெய்வவம் பெய்த லோடும்
    வேயுடை விலங்கல் சுட்டு விசும்பிடை வெம்ப வெம்பிச்
    சேயிடை யெரிந்து சிந்திச் செல்வன்மேற் சென்ற தன்றே.       1453

    திவிட்டன் வருணாத்திரம் விடுதல்

    காரணி வண்ணன் கண்டே கதிர்மணிக் கடகக் கையால்
    வாருண மென்னு மம்பு வாங்கினன் றொடுத்த லோடுஞ்
    சீரணி விசும்பு மண்ணுந் திசைகளு மிருள வீழ்ந்து
    நீரணி புயலின் றாரை நிரந்துவீழ்ந் தவித்த தன்றே.       1454

    அச்சுவகண்டன் நித்திராபாணத்தை விடுதல்

    விண்களை வெதுப்பு நீர்மை
            வெய்யவன் வெகுண்டு மீட்டுங்
    கண்களைத் துயிற்று மம்பு
            தொடுத்தனன் றொடுத்தலோடும்
    மண்களை மயக்கி மாக்க
            டுயில்கொள மரங்கள் சாயப்
    புண்களை யணையும் வேலான்
            படைமுகம் புக்க தன்றே.       1455

    திவிட்டன் அதற்கு மாறாக ஓர் அம்பு விடுதல்

    அயிலுடை யனல்செய் வேலோ
            னதனையு மறிந்து மற்றுத்
    துயில்விடை செய்யு மம்பு
            தொடுத்தனன் றொடுத்த லோடும்
    வெயிலிடை விரிந்து விண்பால்
            விளங்கிவீ ழிருளை நீக்கப்
    பயிலுடை யுலகந் தேறிப்
            பட்டது முணர்ந்த தன்றே.       1456

    அச்சுவக்கிரீவன் ஆழிவிடுதல்

    சீற்றமொ டிரியுஞ் செல்வத் தெய்வவம் பெய்த வெல்லா
    மாற்றின னறுப்ப நோக்கி மற்றவன் மாற்ற லான்பே
    ராற்றலை யறிந்து வெய்ய வாழிகை யேந்தி யின்னும்
    ஏற்றனை பொருதி யோவென் றிலங்கெயி றிலங்க நக்கான்.       1457

    திவிட்டன் கூற்று

    தாழியா தெய்யுந் தெய்வப் படைமுத லறுத்துச் சாலப்
    பாழியான் மெலிந்தும் பண்டைப் பாவனை பயிற்றி யென்னை
    ஆழியால் வெருட்ட லுற்றா யலந்தனை பெரிது மென்றான்
    சூழிமால் யானை வல்ல சுரமைநாட் டிளைய கோவே.       1458

    ஆழியின் செயல்

    புனைகதி ரார மார்பன்
            புகைந்துகை முறுக்கி விட்ட
    கனைகதிர்த் திகிரி கான்ற
            கனசுடர் வளைக்கப் பட்டு
    முனைகதிர் கானச் செந்தீ
            முழங்கிமேன் மூடப்பட்ட
    வனைகதிர்க் குன்றம் போல
            மணிவண்ணன் மறைந்து போனான்.       1459

    உலங்கொண்ட வயிரத் தோளாற்
            குற்றதை யுணர மாட்டார்
    நிலங்கொண்டு மனித ராழ
            நிரந்தழ லுமிழ்ந்து நேமி்
    புலங்கொண்ட வயிரக் குன்றின்
            புடைவரும் பரிதி போல
    வலங்கொண்டு வந்து மைந்தன்
            வலப்புடை நின்ற தன்றே.       1460

    திவிட்டன் ஆழியைத் திருப்பிவிடல்

    கன்னவில் கடகத் தோளான் கண்டுகை தொழுது கொண்டு
    மின்னவிர் விளங்கு நேமி விட்டனன் விடுத்த லோடும்
    மன்னனை மார்பு கீண்டு மணிமுடி யெறிந்து மற்றைப்
    பொன்னவி ரோடை யானைப் புகர்நுதற் புக்க தன்றே.       1461

    அச்சுவகண்டன் அழிவு
    வேறு

    கழலவன் கனன்று விட்ட கதிர்நகை நேமி போழ
    மழகளி யானை தன்மேன் மறிந்துவீழ் கின்ற மன்னன்
    நிழலவிர் விலங்க னெற்றி நிமிர்ந்ததோர் காள மேகம்
    அழலவன் றிகிரி பாய வற்றுவீழ் கின்ற தொத்தான்.       1462

    நெறிதலை திரிவி லான்மே னினைவிலான் மொழியப் பட்ட
    மறுதலை முடிக்கு மேது வாய்வழி யழிப்ப தேபோற்
    பொறிதலை மணந்த காளை மேல்வரப் புணர்த்த நேமி
    செறிதலை யிலாத மன்னன் றன்னையே செகுத்த தன்றே.       1463

    அச்சுவகண்டன் வீழ்ச்சியைக் கண்டோர் கூறுதல்
    வேறு

    கொலையானை மேலோர் குளிர்வெண் குடைக்கீழ்ப்
    பலயானை மன்னர் பலர்போற்ற வந்தான்
    மலையாகம் போழாக மற்றிவனோ சாய்ந்தான்
    நிலையாமை சால நிலைபெற்ற தன்றே.       1464

    நெருநல் நெடுங்குடைக்கீழ் நேமிமுன் செல்லப்
    பொருநல் வயவேந்தர் போற்றிசைப்ப வந்தான்
    செருநன் மறநேமி சென்றதுவே போழ
    எரிபொன் மணிமுடியா னின்றிவனோ சாய்ந்தான்.       1465

    தானெறிந்த நேமி தனக்கே பகையாகத்
    தேனெறிந்த தாரான் சிறுவரைக்கண் வீடினான்
    யானறிந்த வாற்றா லெளிய வுலகத்தில்
    வானறிந்த வாழ்க்கையு மாயமே போலுமால்.       1466

    வலியு மடுதிறனும் வாழ்வும் வனப்பும்
    பொலிவுங் கடைபோகா பூமிமேல் வாழ்வீர்
    கலியன்மி னென்றிதனைக் காட்டுவான் போல
    மலிபொன் மணிமுடியான் மற்றிவனோ மாய்ந்தான்.       1467

    மாக மழைவண்ணன் மாற்றான்மேல் விட்டெறிந்த
    வேக விறலாழி மீட்டே பெயர்ந்துதன்
    போக வரைமார்பம் போழ்படுப்பப் பொன்றினான்
    ஆகுவ தாமதனை யாவ ரறிகிற்பார்.       1468

    இறந்தவனை அவன் தேவியர் காணல்

    இன்னன கண்டார் மொழிந்திரங்கு மாயிடை
    அன்ன மனையா ரயகண்டன் றேவிமார்
    பொன்னவிர் பூங்குழையார் பொங்கேந் திளமுலையார்
    மின்னவிர் நுண்ணிடையார் மேல்வந் தணுகினார்.       1469

    பெருந்தேவி உயிர்நீத்தல்

    வண்டார் மணிமுடியான் மார்பு துணிகிடப்பக்
    கண்டாள் பெருந்தேவி கண்டேதன் கைசோர்ந்து
    வெண்டாரை வேனெடுங்க ணீர்மூழ்கி மேற்பிறழ
    விண்டா ளுயிர்பின்னும் வெற்றுடல மாயினாள்.       1470

    பிறமகளிர் செயல்

    கோதை சரியக் கொடிமருங்கு லேரழிய
    மாதர் மடமஞ்ஞை மாநிலத்து வீழ்வனபோற்
    காதலன் மார்பகலங் கண்டேதங் கண்புடைத்துப்
    பேதை மடமகளிர் வீழ்ந்தார் பிணையன்னார்.       1471

    வாங்கு கொடிமுறுக்கி மாநிலத்து விட்டனபோல்
    தாங்கார் புரண்டுதலை தடுமாறாய்க் கிடந்தங்
    கேங்கினா ரெத்துணையோர் போழ்தங் கழிந்தெழுந்து
    நீங்காத வாருயிரார் நீரா யுருகினார்.       1472

    வேறு

    அரைச ரேறே யடலாழி
            வலவ வார்க்குந் தோலாதாய்
    புரிசை நகரநூற் றொருபதுடையாய்
            பூமி முழு தாண்டாய்
    செய் துலகம் பாராட்டு
            மொளியா யோடை யானையாய்
    வரைசெய் தனைய திரடோளாய்
            மறிதல் பொருளோ வயவேந்தே.       1473

    வானு மண்ணு முடனஞ்சும்
            வகையாய் மன்னர் மணிமுடிமேல்
    தேனும் வண்டும் பலசென்று
            திளைக்குஞ் செம்பொற் செறிகழலாய்
    நான மண்ணி யகிறேக்கி
            நாவி கமழு மெழிலாகம்
    ஈன மண்ணி லிவர்காணக்
            கிடத்த லினிதோ விகல்வேந்தே.       1474

    குழவி நாயிற் றெழிலேய்க்குங்
            குழம்பார் கோலக் குங்குமமே
    மெழுகி மீதோர் மணியாரம்
            வீசிக் கிடந்த விரையாகம்
    ஒழுகு குருதிச் சேறாடி
            யோடை யானை நுதன்மீது
    வழுவி வீழ்ந்த வகைநாடின்
            மாயம் போலு மறவேந்தே.       1475

    பொன்னி னாய வமளிமேற்
            பூவி னாய வணைபொருந்தி
    அன்ன மனையா ரடிவருட
            வமரும் பள்ளி யமராதே
    மன்னு மிங்கோர் மதயானை
            நுதன்மேல் மறிந்து மணிமுடிசாய்த்
    தென்னு முரையாய் துயில்கோட
            லிசையோ வங்கள் பெருமானே.       1476

    மகரப் பைம்பூண் மடவார்கள்
            வயிரக் குழையும் பொற்றோடுந்
    தகரக் குழலு மளகமுந்
            திருத்திப் பயின்ற தாழ்தடக்கை
    சிகர மனைய மதயானைச்
            செவிமேற் சரிந்து செங்குருதி
    பகரக் கழுகு பாராட்டக்
            கிடத்த றகுமோ படைவேந்தே.       1477

    வெய்ய சுடரோன் றண்கதிரோ
            னெனவீங் கிவர்கண் மதிலியங்கார்
    பைய வந்து தாமரையின்
            பரவைத் தடத்து மாளிகைமேல்
    ஐய தலத்து மெலவிரிந்த
            தலராச் செல்லு மாணையாய்
    செய்ய குருதிச் சேறாடிச்
            சிறுமா னிடர்க்கே தோற்றாயே.       1478

    பணங்கொ ணாகம் பலசூழ்ந்து
            பகல்செய் மணியின் சுடரேந்தி
    அணங்கி யகலா துழைநிற்கு
            மாணை யுடைய வடல்வேந்தே
    வணங்கி வந்து பலதெய்வம்
            வழிபா டாற்று மறநேமிக்
    குணங்கொள் படையாய் கூடாரு
            முளரோ நினக்குக் கோமானே.       1479

    பெருமா மழைக்கண் மாதேவி
            பிணையின் மாழ்கி யிவணழிய
    வருமா முரசம் பிறர்பேர்கொண்
            டறைய வாழி யயனீங்கத்
    திருமா நகருஞ் செல்வமுற்றுஞ்
            சிதையக் கண்டுஞ் சீறாயால்
    உருமா லென்னுந் திறலினா
            யுலகம் வேண்டா தொழிந்தாயோ.       1480

    மூரி முந்நீ ருலகங்கண்
            முழுதுங் காவன் முனிந்தாயோ
    யாரு மில்லா வடியோங்கள்
            வழிபா டாற்ற மாட்டாயோ
    சீரின் மன்னும் வளநாடுந்
            தெய்வப் படையுஞ் செல்வமுநீ
    பாரின் மன்னர் பிறர்கொள்ளப்
            பணித்த தென்னோ படைவேந்தே.       1481

    தொழுதுஞ் சூழ்ந்து மடிபற்றித்
            தொடர்ந்துஞ் சுரும்புண் கோதையும்
    வழுவ மயங்கி மாழாந்து
            மருண்டுந் தெருண்டு மடவார்கள்
    அழுத கண்ணீ ரகன்ஞாலத்
            தரச ருருக வருவியாய்
    ஒழுக நெடுமான் முனிவென்னு
            மூழித் தீயு மவிந்ததே.       1482

    அச்சுவக்கிரீவனைத் தகனம் செய்தல்

    மஞ்சு தோயும் வரையார்தம்
            மன்னன் றன்னை மதயானை
    மஞ்சு தோன்ற நுதலினிழித்
            தந்த ணாளார் மெய்தீண்டிப்
    பஞ்சுந் துகிலும் பூம்பட்டும்
            பாயப்பள்ளி படுத்ததன்மேல்
    வஞ்ச மில்லாப் புகழானை
            வயங்கு செந்தீ வாய்ப்பெய்தார்.       1483

    தம்பியர் முதலியோர்களைத் தகனம் செய்தல்

    மன்னன் றம்பி மார்களையு
            மக்க டமையு மற்றொழிந்த
    பொன்னம் புனைதார் வேந்தரையும்
            பொருது பட்ட போர்க்களமீ
    தென்னுஞ் சாடு மெரிவாய்ப்பெய்
            திரங்கி யழுதாங் கேகினரால்
    உன்னி வந்த முடிக்ககிலா
            துடைந்த வேந்த னுழையாரே       1484

    உரிமை மகளிர் தாபத நிலை எய்தல்

    ஆவி யாய வயக்கிரீவற்
            கமிழ்தம் பூத்த வஞ்சாயற்
    றேவி மார்கள் கலனழித்துச்
            சேணி யுலகஞ் சென்றெய்தி
    வீவில் காமன் வருவீதி
            கற்பு வேலி யால்விலக்கித்
    தாவி னிறையின் றாழதனாற்
            பொறியின் வாயி றாழ்ப்பெய்தார்.       1485

    வேறு
    திவிட்டனைத் தேவரும் பிறரும் கொண்டாடுதல்

    எரிவள ரொளிதரு நேமி யெய்திய
    திருவளர் படரொளிச் செங்கண் மாலவன்
    கரிவளர் குஞ்சிமேற் சொரிந்த பூமழை
    வரிவளை முரசொடு மயங்கி யார்த்தவே.       1486

    விசும்பிடை அசரீரி

    அரிதினி னவனெய்த தெய்வ வம்புகள்
    உரிதினி னறுத்தொளிர் நேமி கொண்டது
    பெரிதிது சித்திர மென்று பேரொலி
    விரிதரு விசும்பிடை விரவி நின்றதே.       1487

    எஞ்சிய விஞ்சையரின் வேண்டுகோள்

    வெஞ்சினஞ் செருக்கொடு வீய மானமும்
    விஞ்சைய ரொழிந்தன ரொழிந்து வீரனை
    மஞ்சிவர் மணிவரை வண்ண வாழிய
    அஞ்சினம் பெரிதனெ வடிவ ணங்கினார்.       1488

    திவிட்டன் அருளுதல்

    அஞ்சிய மன்னர்கட் கருளி யாயிடைத்
    துஞ்சிய மன்னவன் றமரந் தோமில்சீர்
    விஞ்சைய ருலகினின் மீண்டு வாழ்கென
    எஞ்சலில் கடிமுரசு அறைய ஏயினான்.       1489

    அவன் தன் பாடி வீடடைதல்

    கருமுகில் வண்ணனுங் கருடன் மேலிழிந்
    துருமென வதிர்தரு மோடை யானைமேற்
    பொருமிகல் வேந்தர்போற் றிசைப்பப் போந்தரோ
    பரிமிகு படைவிடு பாடி நண்ணினான்.       1490

    விசயனும் திவிட்டனும் தந்தையை வணங்கல்

    விரிதரு திங்களின் விளங்கு மேனியன்
    பெரியவன் றன்னொடும் பெயர்ந்து தாதைதன்
    றிருவமர் சேவடி சென்று தாழ்ந்தனன்
    கருவரை யனையதோட் கனபொற் றாரினான்.       1491

    பாயபதி அருகில் நின்ற அரசரிடம் கூறுதல்

    மக்கள தாற்றலான் மலர்ந்த கண்ணினன்
    மிக்குமேல் விரிந்தொளி துளும்பு மேனியன்
    தொக்கநீர்ச் சுரமைநா டுடைய கோனிவை
    பக்கநின் றரசர்கள் பணியச் சொல்லினான்.       1492

    அரசன் மக்களுக்கு முடிகூட்டக் கருதல்

    தீதறு மணிமுடிச் செல்வக் காளையர்
    தாதையென் றியலுரை தவத்தி னெய்தினேன்
    ஆதலா லிவர்தம தரச கோலமெங்
    காதலங் கண்ணிவை காண லாகுமே.       1493

    என்றவன் மொழிதலு மிலங்கு நீண்முடி
    மின்றவ ழவிரொளி விஞ்சை வேந்தனோ
    டொன்றிய வரசர்க ளுவந்து சூட்டினார்
    அன்றவர்க் கரசியன் முரச மார்த்தவே.       1494

    அரசர்கள் அபிஷேகம் செய்தல்

    கங்கையுஞ் சிந்துவு மென்னு மாநதி
    தங்குநீ ரெனையவுந் தந்து தாமரை
    பொங்கிய முகத்தபொற் குடங்க ளாற்பல
    மங்கல மரபினான் மன்ன ராட்டினார்.       1495

    தேவர் அபிஷேகம் செய்தல்

    திருமணி நிழலொளித் தெய்வ வான்படை
    பருமணிப் பாற்கடற் பரவை நீர்முகந்
    தெரிமணிக் குடங்களி னேந்தி யேந்தறன்
    சுரிமணிக் குஞ்சிமேற் சொரிந்த தென்பவே.       1496

    வித்தியாதரர் அபிஷகம் செய்தல்

    வெந்திறல் விறலொளி விஞ்சை வேந்தரு
    மந்தர மணிமலை மலரு மம்மலை
    அந்தர வருவியும் விரவி யாட்டினார்
    இந்திர னனையவற் கிறைஞ்சி யென்பவே.       1497

    காப்பணிவித்தல்

    திருமகள் பரிவொடு சென்று சார்தரு
    முருவினு மொளியினு முலகந் தன்னின்மேன்
    மருவிய நூலது மரபி னானுமக்
    கருமுகில் வண்ணனைக் காவ னாட்டினார்.       1498

    முடிசூட்டுதல்

    விட்டெரி மணிவரை நேமி வேந்தனை
    அட்டிவ னெய்தினா னாழி யாதலான்
    மட்டிவ ரலங்கலான் வாசு தேவனென்
    றொட்டிய வொளிமுடி யொன்று சூட்டினார்.       1499

    விசயனுக்கு முடி சூட்டுதல்

    பெருகிய மிகுதிறற் பெரிய நம்பி்யை
    மருவிய புகழ்பல தேவ நீண்முடி
    கருவிய மரபினாற் கவித்துக் காவலன்
    றிருவமர் சேவடி சிலம்ப வாழ்த்தினார்.       1500

    திவிட்டனிடம் ஆழியொழிந்த படைகளும் வந்து சேர்ந்தன

    இருங்கலி விழவினோ டரசி யற்றலும்
    பெருங்கலி விழவின தெய்வம் பேணுவ
    சுருங்கலில் சுடரொளி துளும்பத் தோன்றல்பால்
    அருங்கல மொழிந்தவு மடைந்த வென்பவே.       1501

    சக்கரந் தண்டுவாள் சங்கு விற்குடை
    மிக்கெரி மணியிவை யெய்தி வீரியன்
    மக்களு ளரசர்கள் வணங்குந் தெய்வமாத்
    தொக்கெரி சுடரொளி துளும்பத் தோன்றினான்.       1502

    பின்னும் அடைந்தவை

    சென்றுயர் வலம்புரி செம்பொற் றாமரை
    என்றியல் பெயரின விரண்டு மாநிதி
    ஒன்றல மணிகளு மொளிபொன் மாழையு
    நின்றிவை சொரிந்தொளி நிழற்று கின்றவே.       1503

    சக்கராயுதம் கோயிலைச் சார்தல்

    மிக்கெரி சுடர்முடி சூடி வேந்தர்க
    டொக்கவ ரடிதொழத் தோன்றுந் தோன்றலால்
    அக்கிரப் பெருஞ்சிறப் பெய்தி யாயிடைச்
    சக்கரப் பெருஞ்செல்வச் சாலை சார்ந்தவே.       1504

    பிறவும் கோயில்களைச் சார்தல்

    அருங்கலப் பெருந்தெய்வ மவையுந் தத்தமக்
    கொருங்குசெய் வளநக ரடைந்த வொண்சிறை
    சுருங்கலில் கருடற்குச் சுடருந் தோன்றலாற்
    பெருங்கலி மாளிகை பேணப் பட்டதே.       1505

    புலவர் திவிட்டனது வரலாறு கூறுதல்

    முரசுவீற் றிருந்ததிர் மூரித் தானையன்
    அரசுவீற் றிருந்தனன் பின்னை யாயிடைக்
    கரைசெய்நீர்க் கருங்கடல் வேலி காவலற்
    குரைசெய்நூற் சரிதைகள் புலவ ரோதினார்.       1506

    ஆதிநா ளரசிய னீதி யாங்கெடுத்
    தோதினார் புலவர்க ளோது மாயிடைத்
    தீதிலார் திகிரியஞ் செல்வர் செய்கைமேற்
    கோதிலாத் திறல்சில கூறப் பட்டவே.       1507

    எழுவகை யருங்கல மிரண்டு மாநிதி
    தழுவின சனபத மீரெண் ணாயிரம்
    விழவணி நகர்களும் வேந்தர் கூட்டமும்
    எழுவின முரைப்பினிவ் வெண்ண வென்பவே.       1508

    கோடிக்குன்ற வரலாறு கூறுதல்

    வன்றிறன் மலிபல தேவர் தம்மொடு
    சென்றவர் செற்றலர்ச் செகுத்துப் பின்னரே
    குன்றமொன் றெடுத்தலுங் கொணர்ந்து கூறினார்
    பொன்றலில் புராணநூற் புலவ ரென்பவே.       1509

    திவிட்டன் கூற்று

    ஆங்கவர் மொழிதலு மருங்க லக்குழாம்
    ஈங்கிவை யென்னினு முன்ன மெய்தினார்
    வாங்குநீர் மணலினும் பலர்கொ லோவென
    வீங்கிய செருக்கிலன் வீர னாயினான்.       1510

    திவிட்டன் கோடிக்குன்றத்தைப் பெயர்த்து உயர்த்தல்

    அறிபவ ரவையவை மொழியக் கேட்டலும்
    நெறிபடு நிதியமே நிறைந்த சிந்தையன்
    எறிகடற் படையினோ டெழுந்து சென்றரோ
    குறுகினன் கோடிமா சிலைவன் குன்றமே.       1511

    எரிமணிக் கடகக்கை யிரண்டு மூன்றியப்
    பெருமணி நிலம்பில மாகக் கீழ்நுழைத்
    தருமணி நெடுவரை யதனை யேந்தினான்
    திருமணி நெடுமுடிச் செல்வ னென்பவே.       1512

    கைந்நிலம் புகநுழைந் தெடுப்பக் கல்லென
    மைந்நில நெடுவரை மறிய மற்றதன்
    செந்நில முழைமுகஞ் சிலம்புஞ் சீரினால்
    அந்நிலம் வாய்திறந் தழைப்ப தொத்ததே.       1513

    குன்றம் பெயர்ந்த தோற்றம்

    பிலங்களு ளுறைவன பெரிய நாகத்தின்
    புலங்கெழு தாட்சிய புச்சந் தாழ்வன
    அலங்கலா னெடுத்திட வகழ்ந்தெ ழுந்தவவ்
    விலங்கலின் விழுகதிர் வேர்க ளொத்தவே.       1514

    குழுவிய குவளையங் குண்டு மாச்சுனை
    ஒழுகிய வருவிநீ ருக்கு வீழ்வன
    கழுமிய நிலம்விட வெடுப்பக் கார்வரை
    அழுவதன் கண்ணுணீ ரழிவ தொத்ததே.       1515

    தழுவிய தடவரைத் தாழ்வர் வாயெலாங்
    குழுமிய கொழுமுகில் வழுவி வீழ்வன
    செழுவரை செறியமுன் னுடுத்த செந்துகில்
    அழிவன வருகுவந் தசைந்த தொத்தவே.       1516

    திவிட்டன் குன்றுடன் நின்ற கோலம்

    ஒன்றுதன் செறிகுறங் கூன்றிக் கைத்தலம்
    ஒன்றினா னொளிவரை யுயர வேந்துபு
    நின்றன னெடியவ னீல மாமணிக்
    குன்றமோர் குன்றங்கொண் டெழுந்த தொப்பவே.       1517

    வேறு

    பொருமாலை வேலரசர் போற்றிசைப்பப் பூவின்
    அருமா மழைபெய் தமருலக மார்ப்பக்
    கருமா னெடுவரையோர் கைத்தலத்தி னேந்தித்
    திருமா மணிவண்ணன் செம்மாந்து நின்றான்.       1518

    அடிமேல் பூங்கழல்க ளம்பொன் னிலங்கு
    முடிமேல் சூளா மணிமுளைத்த சோதி
    கடிமேல் விரிதாரோன் கைத்தலத்த தன்று
    படிமேன் மணியருவி பாரித்த குன்றமே.       1519

    வரையெடுத்த மாணிக்க நீள்கடகக் கையால்
    யெடுப்பான் போனிமிர்ந்து நோக்காது நிற்ப
    விரையெடுத்த பூந்தார் விறல்வேந்த ரஞ்சிப்
    புரையெடுத்த மாமகரப் பொன்முடிகள் சாய்த்தார்.       1520

    வேறு
    திவிட்டன் கோடிக்குன்றை அது முன்னிருந்த இடத்தில் வைத்துத் தன் யானையின் மீது ஏறிக் கொள்ளல்

    கோடிக் குன்றங் கோடியல் போலுங் குவவுத்தோள்
    கோடிக் குன்றங் கொண்டது மீட்டே கொளநாட்டிக்
    கோடிக் குன்றம் போந்தனெ நின்ற கொலைவேழங்
    கோடிக் குன்ற மன்னவ னேறிக் குளிர்வித்தான்.       1521

    தாமரை தங்குந் தண்புனல் வேலித் தடநீந்தித்
    தாமரை தங்குந் தண்புன னன்னாட் டகமெய்தித்
    தாமரை தங்குந் தண்சுட ரொண்பொற் கலைநல்லார்
    தாமரை தங்குந் தண்புகழ் பாடத் தகைபெற்றார்.       1522

    மாலைத் தண்கேழ் மாமதி போலும் வளர்சோதி
    மாலைத் தண்கேழ் மாமணி முத்தக் குடைநீழன்
    மாலைத் தண்கேழ் வண்புன னாடார் மகிழ்வெய்து
    மாலைத் தண்கேழ் மால்கடல் வட்டம் வளாயிற்றே.       1523

    மையார் சென்னி மாளிகை முன்றின் மலர்மேயும்
    மையார் பொய்கைத் தண்புன னாடன் வரலோடும்
    மையார் கண்ணி னாம்பய மெல்லா மடவாரிம்
    மையா நின்றே யெய்தின மென்றே மகிழ்வுற்றார்.       1524

    திவிட்டன் முதலியோர் நகர்புக்கது

    ஆம்பன் னாணுஞ் செந்துவர் வாயா ரமிழ்தூறி
    ஆம்பன் னாணுந் தேமொழி நல்லா ரலர்தூவி
    ஆம்பன் னாணும் விட்டன ரார்வக் களிகூர
    ஆம்பன் னாணும் பல்புக ழானந் நகர்புக்கான்.       1525

    தாமரை நாறுந் தண்பணை யெல்லா மகிழ் நாறச்
    சாமரை வீசத் தாழ்குழை செம்பொன் சுடர்வீசத்
    தேமரை யாளுஞ் சேயிழை யாளுந் திருமாலும்
    பூமரை வேலிப் போதன மென்னுந் நகர்புக்கார்.       1526

    வேறு
    நகரையலங்கரித்தல்

    சூழிணர்மென் மல்லிகையும் வளையமுமின்
            சூட்டுமெழி றுதையச் சூட்டி
    யாழகவி மணிவண்டு மணிஞிமிறு
            மதுகரமு மிசைப்பச் செய்ய
    காழகிலு நறுஞ்சாந்துங் கடிவாசப்
            பூம்பொடியுங் கமழ்ந்து கைபோய்
    ஏழுலகு மணங்கொடுப்ப வெழினகரா
            ரெதிர்கொள்ள விறைவன் புக்கான்.       1527

    நகரார் எதிர்கொள்ளுதல்

    சூழிணர்மென் மல்லிகையும் வளையமுமின்
            சூட்டுமெழி றுதையச் சூட்டி
    யாழகவி மணிவண்டு மணிஞிமிறு
            மதுகரமு மிசைப்பச் செய்ய
    காழகிலு நறுஞ்சாந்துங் கடிவாசப்
            பூம்பொடியுங் கமழ்ந்து கைபோய்
    ஏழுலகு மணங்கொடுப்ப வெழினகரா
            ரெதிர்கொள்ள விறைவன் புக்கான்.       1528

    மாளிகைக் கதவம் திறந்தது

    கோபுரமுங் கழிந்துகுளிர் நகரைவலங்
            கொடுவீதி குடையோன் செல்ல
    நூபுரமு மேகலையுங் கலந்தொலிப்ப
            நுண்மருங்கு னுடங்க வோடி
    மாபுரத்து மாளிகைதம் மணிக்கதவந்
            தாழ்திறந்து மனத்தின் றாழும்
    வேய்புரையு மென்பணைத்தோண் மெல்லியலார்
            மெல்லவே திறந்தா ரன்றே.       1529

    புகழ்ச்சி

    போர் மேக மன்னதிறற் பொருகளிற்று
            மேலரசர் போற்றிக் கூவச்
    சீர்மேக மெனச்செறிக ணிடி முரசங்
            கடிததிர்ந்து திசைமே லார்ப்ப
    நீர்மேக முத்தினெடுந் தண்குடைக்கீழ்
            நிழற்றுளும்பு நேமி தாங்குங்
    கார்மேக வண்ணனிவன் வருவானைக்
            காண்மினோ கண்க ளார.       1530

    செந்தாஅ மரைபுரையுஞ் செழுங்கண்ணுந்
            தடக்கையும் பவள வாயும்
    அந்தாஅ மரைநாறு மடியிணையு
            மவையவையே காண்மின் காண்மின்
    நந்தாஅ மரைநாட னகையிலங்கு
            மணியார நவின்ற மார்பம்
    பைந்தாஅ மரை மடந்தை பாராட்டப்
            பொலிந்திலங்கும் படியுங் காண்மின்.       1531

    உரற்கால முறச்செவிய வோங்கெருத்தி
            னோடைமால் யானைமே லொளிசூழ் மாலை
    நிரற்கால மணிநிரைத்த நெடுங்குடைக்கீழ்
            முடிநிழற்ற நெடுமால் பின்னே
    சரற்கால சந்திரனோர் தடவரைமேல்
            வெண்முகிற்கீழ்த் தயங்கி யாங்கே
    யரக்காம்பல் வாயினிரிவ் வருநனலர்
            தாரா ன்மற் றவன்சீர் காண்மின்.       1532

    சேதாம்பல் வீழ்ந்தனைய செவ்வாயுஞ்
            செங்குவளை திளைத்த கண்ணு
    மீதார்ந்த வெண்ணிலாச் சுடரொளியும்
            வெள்ளிக்குன் றனைய தோளும்
    போதார்ந்த கருங்குஞ்சி மணிதொடர்ந்தாற்
            போற்புறந்தாழ்ந் திருண்ட வாறுங்
    காதார்ந்த குழைதாழக் கதிருமிழ்ந்த
            திருமுகத்தின் கதிர்ப்புங் காண்மின்.       1533

    சயம்பிரபையின் தோற்றம்

    வேய்காயு மென்பணைத் தோள் வெண்செந்
            தனமெழுகி முத்தந் தாங்கி
    ஏகாய மிட்ட வெண்டுகிலின்
            மகளி ருழைநின் றேத்த
    ஆகாய மியல்கின்ற வருமணிநல்
            ளிமானத்தி னகத்தாள் போலு
    மாகாய வரையாளு மன்னர்கோன்
            மடமகளை வம்மின் காண்பாம்.       1534

    கூந்தல்

    அருமணி நீள்விமானத்தி னாகாயப்
            பளிங்கியன்ற விளிம்பி னாலுந்
    திருமணியி னொளிமேனி நிழலெறிப்பத்
            திக்ழ்ந்திலங்கு தெய்வப் பாவை
    கருமணியின் கதிர்குழற்றிக் கடைசுருட்டிக்
            கைசெய்து வளர்த்த போலும்
    புரிமணிபொண் குழறிகழப் பொன்னணைமே
            லினிதிருந்த பொலிவு காண்மின்.       1535

    கண்

    மாநீல மிடைபதித்து வெண்பளிங்கிற்
            செவ்வரத்த விரேகை வாங்கிப்
    பானீர வேல்வடிவு படத்திருத்தித்
            தாமரையுட் பாரித் தன்ன
    தூநீல வாணெடுங்கண் குழைமுகத்தி
            னுள்ளி லங்கத் தோன்றுகின்ற
    வாய்நீல மணியைம்பா லிவ்வணங்கு
            வரையணங்கோ வன்றோ காண்மின்.       1536

    ஒப்பனைகள்

    எழுதாது மையொளிரு மிருமருங்கு
            மெறித்திடையே செங்கே ழோடித்
    தொழுதார்க்கு வரங்கொடுக்குந் தடங்கண்ணி்
            துணைமுலையின் வளாகஞ் சூழ
    விழுதாய குங்குமத்தா லிலதையையுங்
            கொழுந்தினையு மிழைத்தார் பின்னு
    முழுதார முத்தணிந்தார் நுண்மருங்கு
            லுளதாக முயன்றா ரல்லர்.       1537

    போதாவி யேகமழ்ந்து புரைவட்டம்
            பொன்னிழையாற் பொலிந்து தோன்றி
    ஊதாவி யானுடங்கு மொள்ளரத்த
            நுண்கலிங்க மொன்று சேர்த்தி
    மீதாடி வில்லுமிழு மிடைமணியொண்
            கலாபங்கண் மிளிர வீக்கி
    யாதானு மிவரடக்க மிவளல்கு
            லகலாமை யறிந்து செய்தார்.       1538

    கந்தாரங் கொளவீக்கிக் கடிவிரிந்து
            பூம்பாளை கமழுங் காலை
    நந்தாஅ வனத்திளையா ரெழுவியாழ்
            நரம்பினுக்கு நலஞ்சா லின்சொன்
    மந்தார மலர்கமழு மணியைம்பான்
            மைமதர்த்த மழைக்கண் மாதர்
    செந்தாஅ மரையடியின் செவ்வியுமற்
            றிதுவாயிற் றெய்வ மேயாம்.       1539

    வேறு
    நகரமாந்தரின் செயல்

    இன்னன பலவுங் காட்டி
            யிளையவர் காணும் போழ்தின்
    மன்னவ ரரசர் தன்மேல்
            மாலையு மலருஞ் சிந்தி
    மின்னவிர் சிவிறி தம்மால்
            விரைபொழி தாரை வீக்கித்
    தொன்னக ரார்வ மென்னுங்
            களித்தொழி றொடங்கிற் றன்றே.       1540

    செம்பொன்செய் பொடியி னாலுஞ்
            சிவிறியின் றாரை யாலும்
    அம்பொன்செய் மலரி னாலு
            மகிற்புகை யாவி யாலும்
    பைம்பொன்செய் பதாகை யாலும்
            பரந்திருள் பட்ட வீதி
    கம்பஞ்செய் யானை யானைக்
            கண்விளக் குறுத்த வன்றே.       1541

    கன்னியர் செயல்

    மன்னிய புகழி னான்மேல்
            வாங்குவிற் புருவ மாக
    மின்னவிர் பகழி கண்ணாப்
            புரிசைவெண் மாட மாகத்
    துன்னிய சால வாயிற்
            றுளைகளே துளைக ளாகக்
    கன்னிய ரெய்து தத்தங்
            கடிநகர் காவல் கொண்டார்.       1542

    நகரமாந்தர் செயல்

    ஆடுவா ரணங்கு கொள்வா
            ரார்வஞ்செய் கருவி வீக்கிப்
    பாடுவார் கண்டு கூறிப்
            பரவுவார் பணிந்து முன்னாற்
    கூடுவார் கொற்றங் கொள்ளக்
            கூறுவா ராகி யெங்கும்
    ஊடுபோக் கரிய தாக
            வொளிநக ருழையர் சூழ்ந்தார்.       1543

    சூரியாத்தமனம்

    அங்குலாங் கொடியி னாலு
            மகிற்புகை யாலு மெங்கு
    மங்குலாய் விசும்பு மூட
            மழுங்கிய சுடர னாகி
    இங்குலா விளங்க மாட்டே
            னினியென வெண்ணி வெய்யோன்
    கொங்குலாங் குளிர்கொள் சோலைக்
            குடவரைக் குவடு சேர்ந்தான்.       1544

    உடன் வந்தவர் ஆங்காங்குச் சென்று உறைதல்

    மணிவரை யரசன் மற்றை
            வாழ்நகர்க் கோயில் புக்கான்
    பணிவரை யுழைய ராகிப்
            பயாபதி பக்க நின்றார்
    தணிவரை யிலாத செய்கைத்
            தத்தமக் கியன்ற கோயில்
    அணிவரை யனைய திண்டோ
            ளருக்கனோ டரசர் சேர்ந்தார்.       1545

    திவிட்டன் சயம்பிரபையின் கோயிலை அடைதல்

    மஞ்சுடை மாடக் கோயில்
            வளைவண்ன் புக்க பின்னைச்
    செஞ்சுடர் மகரப் பூணான்
            றிருவெதிர் கொள்ளச் சென்று
    விஞ்சையம் பாவை மேய
            விடைமணி விமானஞ் சேர்ந்தான்
    எஞ்சலில் செல்வந் தன்னா
            லிந்திர னிரட்டி யுள்ளான்.       1546

    சயம்பிரபையைப் பட்டத்துத் தேவியாக்க முரசறைதல்

    மாலையாங் கடைந்த போழ்தின்
            மங்கலத் தேவிப் பட்டங்
    காலையா மணிவ தென்று
            கண்ணதிர் முரசிற் சாற்றிப்
    பாலையாழ் மழலை யாளைக்
            காப்பணி பயின்ற செல்வம்
    வேலைசூ ழுலக மெல்லாம்
            விம்முற விளைந்த தன்றே.       1547

    விடியல் வருணனை

    அங்கொளி விளக்கி னாலு
            மணிகலச் சுடரி னாலுந்
    திங்களை யனைய செல்வி
            திருநுத லொளியி னாலு
    மங்கல மரபிற் றல்லா
            மயங்கிருண் மறைந்து போகக்
    கங்குலு மெல்ல மெல்லக்
            கையகன் றிட்ட தன்றே.       1548

    திவிட்டன் தேவியின் மாளிகையை அடைதல்

    காரிரு ளகன்ற போழ்திற்
            கமலினி யென்னுஞ் செல்விக்
    கோருரு ளாழி வெய்யோ
            னருளிய வுதயஞ் சேர்ந்தான்
    ஆரிரு ளனைய கூந்தற்
            கருளிய மனத்த னாகிப்
    பேரரு ளாழி யானும்
            பெயர்ந்துபொன் மாடஞ் சேர்ந்தான்.       1549

    தேவிப்பட்டம் கொண்டது

    விஞ்சைய ருலகு மண்ணும்
            விண்ணுமொன் றாயதே போற்
    செஞ்சுடர் மணியும் பொன்னு
            மாலையும் விரையுஞ் சேர்த்தி
    அஞ்சுடர் வயிரப் பைம்பூ
            ணலைகடல் வண்ணன் றன்னாற்
    பஞ்சுடை யல்குல் பாக
            வரசொடு பட்டங் கொண்டாள்.       1550

    சுவலனசடி விடைபெற்றுப் போதல்

    தேவிதன் றாதைக் கேற்ற
            பெருஞ்சிறப் பியற்றிச் செல்வன்
    வேய்விரி வெள்ளிக் குன்றின்
            விஞ்சைய ருலக மெல்லாம்
    ஓவில புகழி னானுக்
            குடன்கொடுத் துரிமை யோடும்
    பூவிரி யுருவத் தாரான்
            பின்சென்று விடுத்துப் போந்தான்.       1551

    திவிட்டன் கவலையற்ற நிலை

    தெவ்வரங் கின்மை யாலுந் திசையினில் வணக்கற் பால
    வவ்வழி யின்மை யாலு மருமணி வண்ண னாங்கு
    மௌவலங் குழலியாலு மணிநில மடந்தை யாலுஞ்
    செவ்வலர்த் திருவினாலுஞ் செருக்கிய களிய னானான்.       1552

    வேறு

    தேவர்க டிசைமுகங் காப்பா மாநிதி
    ஓவல விரண்டுநின் றொருங்கு வீழ்தர
    மேவிய வருங்கலம் விளங்க நோக்கிய
    காவலன் செல்வநீர்க் கடலுண் மூழ்கினான்.       1553

    திருவமர் தாமரைச் செம்பொ னாயிதழ்
    மருவிய திருவடி வாமன் பொன்னகர்
    விரவிய விழவொடு வேள்விக் கொத்தரோ
    கருவிய வளநகர் கண்கு ளிர்ந்ததே.       1554
    -------------
    அரசியற் சருக்கம் முற்றிற்று


சூளாமணி - பாகம் 3
சருக்கம் 10-12, பாடல்கள் 1555-2130
ஆசிரியர் : தோலாமொழித் தேவர்


சூளாமணி - பாகம் 3
சருக்கம் 10-12, பாடல்கள் 1555-2130
ஆசிரியர் - தோலாமொழித் தேவர்

    உள்ளடக்கம்
      0. பாயிரம் (1- 6)
      1. நாட்டுச் சருக்கம் (7- 35)
      2. நகரச் சருக்கம் (36- 69)
      3. குமாரகாலச் சருக்கம் (70-118)
      4. இரதநூபுரச் சருக்கம் (119-238)
      5. மந்திரசாலைச் சருக்கம் (239- 430)
      6. தூதுவிடு சருக்கம் (431- 572)
      7. சீயவதைச் சருக்கம் (573- 826)
      8. கல்யாணச் சருக்கம் (827 - 1130)
      9. அரசியற் சருக்கம் (1131- 1554)
      10. சுயம்வரச் சருக்கம் (1555 - 1839)
      11. துறவுச் சருக்கம் (1840- 2068)
      12. முத்திச் சருக்கம் (2069 - 2130)
    ------------

    10. சுயம்வரச் சருக்கம் (1555- 1839)

    கவிக்கூற்று

    தேவரு மனிதர் தாமுஞ்
            செறிகழல் விஞ்சை யாரு
    மேவருந் தகைய செல்வம்
            விருந்துபட் டனக டோற்ற
    மாவர சழித்த செங்கண்
            மணிவண்ணன் மகிழ்ந்த காலைத்
    தாவருஞ் செல்வ மொன்று
            தலைவந்த துரைக்க லுற்றேன்.       1555

    திவிட்டன் மகளிர் வலைப்படுதல்

    பானிலா நிறைவெண் டிங்கள்
            பனிக்கதிர் பரப்பி யாங்கு
    மேனிலா விரியும் வெள்ளி
            வெண்குடை விசும்பு காப்பக்
    கோனுலா வுலக மோம்ப
            நிறீஇயபின் குவளை வண்ணன்
    மானுலா மடக்க ணோக்கின்
            மகளிர்தம் வலையிற் பட்டான்.       1556

    திவிட்டன் உயர்ந்து விளங்குதல்

    திருமணி நிழற்றுஞ் செம்பொ
            னெடுமுடி முகட்டோர் தெய்வக்
    குருமணி யுமிழுஞ் சோதி
            குலவிய வொளிகொள் வட்டம்
    புரிமணி யோத வேலிப்
            புதையிரு ளிரியல் செய்யக்
    கருமணி வண்ணன் றானே
            கதிரவன் றொழிலும் பூண்டான்.       1557

    தேங்கமழ் தெய்வச் செம்பொற்
            றாமரை சுரிவெண் சங்கம்
    ஈங்கிவை நெதிக ளாக
            வேழர தனங்க ளெய்தி
    ஆங்கமர் செல்வந் தன்னா
            லற்றைக்கன் றமர்ந்த மாதோ
    ஓங்கின னுருவத் தாலும்
            வில்லெண்ப துயர்ந்த தோளான்.       1558

    தெய்வங்கள் செப்பி னீரெண் ணாயிரந் திசைநின் றோம்ப
    மையறு மன்னரீரெண் ணாயிரர் வணங்க வான்மேல்
    னொய்தியல் விஞ்சை வேந்தர் நூற்றொரு பதின்மர் தாழக்
    கையமை திகிரி யானைக் காமனே கலவிக் கின்றான்.       1559

    மன்னவர் மகளிரீரெண் ணாயிரர் மயிலொ டொப்பார்
    அன்னவ ரமிழ்தச் செப்பே ரணிமுலைக் குவடு பாயப்
    பின்னிய தாது மல்கப் பில்கிய தேம்பெய் மாரி
    துன்னிய சுரும்பொ டேங்கத் துணருடை கின்ற வன்றே.       1560

    பாரிசாதத்துக்கு மணஞ்செய்விக்க எண்ணல்

    அன்னண மியலு நாளு ளக்கிரத் தேவி தங்கோன்
    பொன்னணி யுலகின் வந்த பூவிரி பாரி சாத
    மன்னிய லரும்பு வைப்ப மற்றத னோடு சேர்த்திக்
    கன்னிய காம வல்லிக் கடிவினை காண லுற்றாள்.       1561

    திவிட்டனுக்கு அறிவித்தல்

    சுரும்பிவர் சோலை வேலித்
            துணர்விரி பாரி சாதம்
    அரும்பிய பருவச் செல்வ
            மடிகளுக் கறிவி யென்று
    பெரும்பிணா வொருத்தி தன்னைப்
            பெய்வளை விடுத்த லோடும்
    விரும்பினள் சென்று வேந்தற்
            கிறைஞ்சிவிண் ணப்பஞ் செய்தாள்.       1562

    அடிகண்முன் னடித்தி யாரா
            லங்கைநீர் குளிர வூட்டி
    வடிவுகொ டளிர்கண் முற்றி
            மகனென வளர்க்கப் பட்ட
    கடிகமழ் பாரி சாத
            மதனோடொர் காம வல்லிக்
    கொடிமணம் புணர்க்க லுற்ற
            குறிப்பறி நீசென் றென்றார்.       1563

    விண்ணப்பத்துக்குத் திவிட்டன் இசைதல்

    என்றவண் மொழிந்த போழ்தி
            னிலங்கொளி முறுவ றோற்றி
    நன்றது பெரிதி யாமு
            நங்கைதன் மகனைக் காண்டும்
    என்றவ னருளக் கேட்டே
            யிளையவள் பெயர்ந்து போக
    மின்றவழ் வேலி னாற்கு
            விதூடக னுழைய னானான்.       1564

    விதூடகன் தோற்றம்

    காதுபெய் குழையுஞ் செம்பொற்
            சுருளையுங் கலந்து மின்னப்
    போதலர் குஞ்சி யாங்கோர்
            பூந்துணர் வடத்தின் வீக்கி
    ஓதிய மருங்கு றன்மே
            லொருகைவைத் தொருகை தன்னால்
    மீதியல் வடகம் பற்றி
            வெண்ணகை நக்கு நின்றான்.       1565

    அவன் செயல்

    மூடிய புகழி னாற்கு முகிழ்நகை பயந்து காட்டுங்
    கோடிய நிலையின் முன்னாற் குஞ்சித்த வடிவ னாகிப்
    பாடிய சாதிப் பாடல் பாணியோ டிலயங் கொள்ள
    ஆடிய லெடுத்துக் கொண்டாங் கந்தணனாடு கின்றான்.       1566

    விதூடகன் கூத்தாடல்
    வேறு

    பாடு பாணியி லயம்பல தோற்றி
    ஆடி யாடிய சதித்தொழில் செய்ய
    நாடி நாடிநனி நன்றென நக்கான்
    நீடு நீடுமுடி யானெடி யானே.       1567

    காது கொண்டன கனபொற் குழைசோர
    மீது கொண்ட வடகம் புடைசூழ
    ஊதி யூதிமு ழுகும்வயி றென்னாப்
    பூதி மீதுபு ரளாநரல் கின்றான்.       1568

    மாத வன்வயி றுபற்றி நரன்றாற்
    கேத மென்னையென வேந்தல் வினாவ
    ஊதி யூதிவயி றுள்ளள வெல்லா
    மோத கங்கண்மு ழுகும்பல வென்றான்.       1569

    மன்னனும் விதூடகனும் உரையாடல்

    என்று தின்றனைபன் மோதக மென்ன
    என்று தின்றனவு மல்ல வினிப்போய்ச்
    சென்று தேவிகடி காவின் விழாவில்
    நின்று தின்னலுறு கின்றன வென்றான்.       1570

    மாதவன் மொழிய மன்னவ னக்காங்
    கேத மென்னைபெரி தெய்தினை யென்றே
    வேத நாவின்விறல் வேதியர்க் கல்லால்
    ஈத லில்லையினி யென்செய்தி யென்றான்.       1571

    வேதம் வல்லவரை வென்றிடு கிற்கும்
    வாதம் வல்லன தனாற்பெறு கிற்பன்
    வாதம் வெல்லும் வகையும்மென் மாண்பு
    மாதர் பண்டுமறி யும்மற வேலோய்.       1572

    வாதம் வெல்லும்வகை யாதது வென்னில்
    ஓதி வெல்லலுறு வார்களை யென்கை
    கோதில் கொண்டவடி விற்றடி யாலே
    மோதி வெல்வனுரை முற்றுற வென்றான்.       1573

    திவிட்டன் பொழிலினுட் புகுதல்

    நன்று வாதமிது காண்டு மெனப்போய்ச்
    சென்று சோலைமதில் வாயில தெய்தி
    ஒன்று காவலுழை யாரொடு கூடிப்
    பொன்றி லாதபுக ழான்பொழில் புக்கான்.       1574

    விதூடகன் கனி காண்டல்

    நீடு செம்பொன்முடி யாற் கெதிர் நிந்தா
    வேட மேவிய விதூடக னோடி
    ஓடி யாடி வருவா னுயர்காவிற்
    கூடி வீழ்வன கொழுங்கனி கண்டான்.       1575

    அவன் உரை

    கண்டு கண்டுதன கண்கனி தம்மேன்
    மண்டி மண்டிவர வாயெயி றூறக்
    கொண்டு கொண்டுகுவி யாவிவை காணாய்
    உண்டு முண்டுமென வோடி யுரைத்தான்.       1576

    மன்னன் விடை

    நல்ல வல்லகனி முன்னைய நாமிவ்
    வெல்லை செல்லவுறு மென்னலு மாயின்
    வல்லை வல்லைவரு வாயென முன்னால்
    ஒல்லை யொல்லையொலி பாடி நடந்தான்.       1577

    பொழில் வருணனை

    சந்து மாவொடு தடாயிட மெல்லாங்
    கொந்து தேனொடு குலாயிணர் கூடி
    வந்து தாழ்ந்து மதுமாரி தயங்கித்
    தந்து தாதுபொழி யும்பொழி றானே.       1578

    மாவின் மேல்வளர மாதவி வைத்த
    தாவி லாததழை தழைவன நோக்கிக்
    காவு காமர்கனி கண்டது கையாறிற்
    கூவு மோடியவை கொள்குவ மென்றான்.       1579

    கனி சிந்தியது கண்டு முனிவடைதல்

    கூடி வண்டு குடையுங் குளிர்காவில்
    ஓடி மண்டிவரு வானொரு பாலாற்
    சேடு கொண்ட கனி சிந்தின கண்டு
    மூடு கொண்ட மதியன் முனிவுற்றான்.       1580

    விதூடகன் வினா

    ஏவ லின்றியெரி வெங்கதி ரோணும்
    போவ லென்று நினையாப் புனைகோயில்
    ஓவ லின்றி யுடையாய் சிறிதேனுங்
    காவ லின்றுகடி காவிது வென்றான்.       1581

    பொன்னி னாய புரிசைத் தளமேலும்
    மன்னு வாளர் மறவோர் பலர்காப்பர்
    என்னை காவலிஃ தில்வகை யென்றான்
    மின்னு வார்ந்து மிளிருஞ் சுடர் வேலோன்.       1582

    திவிட்டன் கூற்று

    அருமுகத் தகனி யாயின வெல்லாம்
    ஒருமுகத் தனக ளன்றி யுதிர்த்துத்
    தருமுகத் தர்வரு வார்தறு கண்ணார்
    கருமுகத் தருளர் காவல்களி லென்றான்.       1583

    விதூடகன் செயல்

    யாவர் யாவரவ ரெங்குள ரென்னக்
    காவு மேவுமுசு வின்கலை காட்ட
    வாவர் கள்வரத னாலெழு நாம்போய்த்
    தேவி காவுநனி சேர்குவ மென்றான்.       1584

    கள்வர் தாம்பல ரெனக்கடல் வண்ணன்
    உள்வி ராவுநகை சேருரை கேட்டே
    வெள்கி வேந்தனரு கேயிரு பாலும்
    பள்கி நோக்குபு பயிர்த்து நடந்தான்.       1585

    தமாலிய வீதியைக்கண்டு விதூடகன் மருளல்

    தாழ்தளிர் பொளிய தமால வீதிய
    ஏழகண் டிருளென வெருள யாவஞ்
    சூழிரு ளன்றி "சால காணென
    வீழிணர்க் கண்ணியான் வெருவு நீக்கினான்.       1586

    விதூடகன் மேலும் மருண்டு வினாதல்

    வாலிதழ் வீழ்தரு மகிழ்தன் றாண்முதல்
    சாலிகை புக்கது தயங்கு தாரினாய்
    சோலையு மமர்த்தொழி றொடங்கு மோவென
    வேலைநீர் வண்ணனை வெருண்டு நோக்கினான்.       1587

    அஞ்சலிங் கமர்த்தொழி லில்லை யாவதும்
    மஞ்சிவர் மகிழந்தன் வயவு நோய்கெடூஉப்
    பஞ்சிவ ரல்குலார் பவழ வாயினால்
    அஞ்சுவை நறவமீங் குமிழ ஆனதே.       1588

    திவிட்டன் தன் நண்பன் மருட்சியை நீக்கல்

    ஆங்கத னாவியா லரவத் தேனெழா
    ஈங்கிதன் றாண்முத லிருள மொய்த்தன
    ஓங்கிய கேள்வியா யுணர்ந்து கொள்கென
    வீங்கிய கழலவன் விளங்கச் சொல்லினான்.       1589

    பின்னும் விதூடகன் கேட்டலும் மன்னன் விடையிறுத்தலும்

    முள்ளரை முருக்கினோ டெழுந்த மல்லிகை
    வள்ளிதழ் குருதியின் வடிவி லூழ்த்தன
    கள்ளவிழ் கண்ணியாய் விரியு நாளெனத்
    தெள்ளிதி னவற்றையுந் தெளியச் செப்பினான்.       1590

    கடிமிசை விரிதருங் காமர் கொம்பரின்
    முடிமிசை யெழுதரு முறிகொ ளீர்ந்தளிர்
    அடிமிசை யீன்றதிவ் வசோக மென்கொலோ
    கொடிமிசை யெழுதிய குவவுத் தோளினாய்.       1591

    இலைத்தலை யீர்ந்தளி ரல்ல வீங்கிதன்
    மலைத்தகு வயவு நோய் தீர வைத்தன
    கலைத்தலை மகளிர்தங் காமர் சீறடி
    அலத்தகச் சுவடென வறியக் காட்டினான்.       1592

    விதூடகன் கூற்று

    காவிவாய் விலங்கிய கருங்கண் வெம்முலைத்
    தேவியார் சீறடி சென்னி சேர்த்தலும்
    மேவியாங் கலர்ந்திடு நின்னை வென்றதால்
    ஆவியா ரசோகின தமைதி வண்ணமே.       1593

    மன்னன் விதூடகனுடன் விளையாடினான்

    மாதவன் மொழிதலு மன்ன னாங்கொரு
    போதினாற் புடைத்தனன் புடைத்த லோடுமிங்
    கேதிலா ளொருத்திக்கா வென்னைச் செய்தவித்
    தீதலொந் தேவிக்குத் தெரியச் செப்புவேன்.       1594

    திவிட்டன் ஒரு சிலாவட்டத்தின் மீது ஏறினான்

    என்றலு மெரிமணிக் கடகக் கையினால்
    அன்றவன் கைத்தலம் பிடித்தங் கியாவதும்
    இன்றிற லினிச் செய்த லில்லெனச் சொலிச்
    சென்றொரு மணிச்சிலா வட்ட மேறினான்.       1595

    விதூடகன் செயல்

    சொரிகதிர் மணிச்சிலா வட்டஞ் சேர்ந்தனன்
    அருகுநின் றந்தண னமர்ந்து நோக்கியே
    வெருவிய மனத்தினன் விதலை மேனியன்
    பெருகிய தலையினன் பெயர்ந்து பின்றினான்.       1596

    விதூடகன் பூதங் காண்டலும் திவிட்டன் அவன் மயக்கம் தீர்த்தலும்

    யாதுகண் டனையென விதனுள் வாழ்வதோர்
    பூதமுண் டதுபுடைத் துண்ணு மாதலால்
    ஏதமுண் டிங்கினி யிருப்பின் வல்லையே
    போதவென் றந்தணன் புலம்பிக் கூறினான்.       1597

    யாதத னுருவென வலர்பொன் னோலையுஞ்
    சோதிசூழ் சுடர்மணிக் குழையுந் துன்னிய
    காதொடு கண்பிறழ்ந் துளது கைகுறி
    தூதிய வயிற்றதென் றுருவ மோதினான்.       1598

    மின்னிழற் பூணவன் மெல்ல நக்கது
    நின்னிழற் காணது நிற்க நின்னுரை
    என்னிழ லென்னொடு மியங்கி னல்லது
    கன்னிழ லுள்புகிற் காண்ட லாகுமோ.       1599

    நின்னிழ லாவது தெளிய நின்றொழில்
    இந்நிழற் காணென விறைஞ்சி நோக்குபு
    தன்னிழ றான்செய்வ செய்யத் தான்றெளிந்
    தின்னிழ லிருந்தன னிலங்கு நூலினான்.       1600

    திருந்திய மணிநகைத் தேவி யிவ்வழி
    வருந்துணைப் பொழுதுமிம் மணிச்சி லாதலம்
    பொருந்தின பொழினலங் காண்டு மென்றரோ
    இருந்தன ரிருவரு மினிதி னென்பவே.       1601

    சயம்பிரபை சோலைக்கு வருதல்
    வேறு

    மின்னவிர் விளங்குமணி மேகலை மிழற்றப்
    பொன்னவிர் சிலம்பொலி போந்துபுடை சாற்றக்
    கன்னியர் நிரந்துபலர் காவலொடு சூழ
    வன்னமென வந்தரசி யார்பொழி லடைந்தாள்.       1602

    அவள் தன்னை மறைத்துக் கொண்டு நிற்றல்

    மாலையமர் சிந்தையொடு வார்பொழின் மருங்கின்
    வேலையமர் கண்ணிவிளை யாடுதல் விரும்பி
    மேலையமர் விஞ்சையின் மறைந்துவிரை நாறுஞ்
    சோலையமர் தோகையென வேதொழுது நின்றாள்.       1603

    திவிட்டன் இருக்கை

    மாதவன் மருட்டமழை வண்ணன்மணி வட்டம்
    சோதிவிடு சூழ்சுடர் வளாவ வதன்மேலாற்
    தாதுபடு போதுதவி சாமென வடுத்த
    மீதுபடு பொங்கணையின் மெல்லென விருந்தான்.       1604

    கவிக்கூற்று

    பந்தணையு மெல்விரலி பாடக மொடுக்கி
    வந்தணையு மெல்லையுண் மயங்கியொரு மாற்றம்
    அந்தணன்வி னாவவமிழ் தூரமொழி கின்றான்
    கந்தணைவி லாதகளி யானைபல வல்லான்.       1605

    விதூடகன் வினா

    நிலத்தவள்கொ லன்றிநெடு மால்வரையு ளாள்கொல்
    அலத்தக வடிச்சுவ டசோகின்மிசை வைத்தாள்
    உலத்தகைய தோளணிகொண் மார்பவுரை யென்ன
    வலத்தகைய னாயமணி வண்ணன் மொழிகின்றான்.       1606

    திவிட்டன் விடை

    செய்யன செறிந்தன திரண்டவிரல் சால
    வையதசை யார்ந்தவடி யின்னழகி னாலே
    மெய்யுமறி வன்வினவில் விஞ்சையன் மடந்தை
    வையமுடை யாற்குரிய மாதரவ ளென்றான்.       1607

    சயம்பிரபையின் செயல்

    என்றலு மிரண்டுகரு நீலமலர்க் கண்ணுஞ்
    சென்றுகடை சேந்துசிறு வாணுதல் வியர்த்தாள்
    அன்றரச னாவியுரு கும்படி யனன்று
    மின்றவழு மேனியொடு தேவிவெளிப் பட்டாள்.       1608

    அரசியைக் கண்ட அந்தணன் செயல்

    தாதிவர் கருங்குழலி தன்னைமுக நோக்கி
    மாதவ னடுங்கிவளர் பூம்பொழின் மறைந்தான்
    காதலனு மங்குரிய கட்டுரை மறந்திட்
    டேதமினி யென்கொல்விளை கின்றதனெ நின்றான்.       1609

    மன்னன் வேண்டுகோள்

    மன்னன்மக ளேமகர வார்குழன் மடந்தாய்
    அன்னமனை யாயமிழ்தின் மேலுமமிழ் தொப்பாய்
    என்னையிவ ணுற்றதனெ வென்னுமிலை யென்னா
    முன்னுபுரு வக்கொடி முரிந்துமுனி வுற்றாள்.       1610

    தேவியின் கூற்று

    அரசன் அவளடி தாழ்தல்

    ஆங்கவெளா டீங்குவிளை யாடுநனி நீயான்
    பூங்கமழு மாடமென தேபுகுவ னென்றாள்
    தாங்கல னெழுந்துதகை நீலமணி வண்ணன்
    ஒங்குமுடி சீறடியின் மேலொளிர வைத்தான்.       1611

    அரசி குற்றஞ்சாட்டுதலும் அரசன் இரங்கலும்

    மற்றநெடு மான்மகர மாமுடி வணங்கக்
    கற்றனை யினிப்பெரிது கைதவமு மென்ன
    உற்றதொர் பிழைப்புடைய னாய்விடி னுணர்ந்து
    முற்றமுறை செய்தருளு மொய்குழலி யென்றான்.       1612

    விதூடகனை இழுத்துவரச் செய்தல்

    மன்னனொர் பிழைப்புமிலன் மாதவனை நாடி
    இன்னினி யிவண்கொணர்மி னென்னவுழை யோர்கள்
    முன்னவன் மறைந்தமுரு கார்பொழிலி னுள்ளே
    துன்னுபு தொடர்ந்துதுகில் பற்றுபு கொணர்ந்தார்.       1613

    தேவிசினம்தீர்தல்

    பேதைமை கலந்துபிறழ் கண்ணினொ டொடுங்கு
    மாதவனை நோக்கிமணி வாய்முறுவ றோற்றிக்
    கோதைகளில் யாத்திவனை நீர்கொணர்மி னென்றாள்
    போதுவிரி தேங்குழலி பூம்பொழி லணைந்தாள்.       1614

    மன்னவன் மருட்டமணி யாழ்மழலை மாதர்
    முன்னிய முகத்துமுறு வற்கதிர் முகிழ்ப்ப
    இன்னவருள் பெற்றன னினிப்பெரிது மென்னா
    அன்னமனை யாளையணி மார்பினி லணைத்தான்.       1615

    விதூடகன் விடுதலை பெறுதல்

    போதிவ ரலங்கலொடு பூண்முலை ஞெமுங்கக்
    காதலன் முயங்குபு கலந்தினி திருந்து
    மாதவனு மேதமில னாதலின் மடந்தாய்
    தீதுபடு சீற்றமொழி யென்றுதெளி வித்தான்.       1616

    அவன் செயல்

    இட்டதளை தம்மொடிரு தோளுமிடை வீக்கிக்
    கட்டிவிடு பூம்பிணையல் கைவிடலு மெய்யுள்
    ஒட்டிவிடு காதலொடு வந்துருவு கொண்டு
    பட்டபல பாடலினொ டாடல்பல செய்தான்.       1617

    கனிகளைக் கண்டு அவன் பாடுதல்
    வேறு

    ஓடு மேமன மோடுமே
    கூடு மோதணி கோதையாய்
    காடு சேர்கனி காண்டொறு
    மோடு மேமன மோடுமே.       1618

    ஊறு மேயெயி றூறுமே
    வீறு சேர்விரி கோதையாய்
    சேறு சேர்கனி காண்டொறு
    மூறு மேயெயி றூறுமே.       1619

    வேண்டு மேமனம் வேண்டுமே
    பூண்ட பொன்னணி மார்பினாய்
    நீண்ட மாங்கனி காண்டொறும்
    வேண்டு மேமனம் வேண்டுமே.       1620

    பாரிசாத காமவல்லி திருமணத் தொடக்கம்
    வேறு

    இன்னன பாடி யாட வீர்ங்கனி பலவுங் கூவி
    முன்னவ னார வூட்டி முறுவலோ டமர்ந்த பின்னை
    மன்னிய பாரி சாத மணமக னாக நாட்டிக்
    கன்னியங் காம வல்லி கடிவினை தொடங்க லுற்றார்.       1621

    திருமணி நிழற்றுஞ் செம்பொற் றிலதமா முடியி னானுங்
    குருமணிக் கொம்ப ரன்ன கொழுங்கய னெடுங்கணாளும்
    பருமணி பதித்த பைம்பொன் வேதிகைப்பாரி சாதம்
    அருமணி யரும்பித் தாழ்ந்த வந்தளிர்ப் பொதும்பர் சார்ந்தார்.       1622

    தேவியர் யாவரும் அருகே வருதல்

    வரிவளை வயிரொ டேங்க வாரணி முரச மார்ப்பக்
    கருவளர் கனபொற் சோலைக் கறங்கிசை பரந்தபோழ்தில்
    திருவள ரலங்கன் மார்பிற் செங்கணான் றேவி மார்கள்
    உருவளர் கொம்ப ரன்னா ளருளறிந் துழைய ரானார்.       1623

    அவர்களினிடையே நின்ற திவிட்டன் நிலை

    செங்கய லுருவ வாட்கட்
          டேவிதன் குறிப்பிற் சேர்ந்த
    மங்கையர் வனப்பு நோக்கி
          மணிவண்ணன் மகிழ்ந்து மற்றப்
    பொங்கிய விளமென் கொங்கை
          மகளிர்தம் புருவ வில்லால்
    அங்கய னெடுங்க ணென்னும்
          பகழியா லழுத்தப் பட்டான்.       1624

    குடங்கையி னகன்று நீண்டு குவளையின் பிணையல் செற்று
    மடங்களி மதர்வைச் செங்கண் மான்பிணை மருட்டி மையாற்
    புடங்கலந் திருள்பட் டுள்ளாற் செவ்வரி பரந்த வாட்கண்
    இடங்கழி மகளிர் சூழ விந்திர னிருந்த தொத்தான்.       1625

    பாரிசதத்திற்குக் கோலம் செய்யக் கட்டளையிடுதல்

    ஆங்கவ ரோடு மற்ற வணிபொழிற் கரச னாய
    பாங்கமை பாரி சாதம் பருவஞ்செய் பொலிவு நோக்கி
    ஈங்கிவற் கிசைந்த கோல மினிதினி னியற்று கென்றான்
    ஓங்கிய வுருவத் தார்மே லொளிநிலா வுமிழும் பூணான்.       1626

    பாரிசாதத்தை அலங்கரித்தல்

    எந்திர மிழிந்த தாரை
          யருவிநீ ரினிதி னாட்டிக்
    கந்தனெத் திரண்ட திண்டோட்
          கனகசா லங்கள் காட்டிப்
    பைந்தழைப் பொழிலுக் கெல்லா
          மரசெனப் பட்டஞ் சேர்த்தி
    அந்தளிர்க் கொம்பர் தோறு
          மணிபல வணிந்தா ரன்றே.       1627

    காமவல்லிக்கு மணக்கோலம் செய்து அதன் மணமகனோடு சேர்த்தல்

    கன்னியங் காம வல்லிக்
          கனங்குழை மடந்தை தன்னை
    மன்னவன் றேவி மார்கண்
          மணவினைக் கோலஞ் செய்து
    பின்னத னோடு சேர்த்திப்
          பெருகிய களிய ரானார்
    இன்னகைப் புதல்வர் செல்வம்
          யாவரே யினிதென் னாதார்.       1628

    திவிட்டன் சயம்பிரபை ஆகிய இருவர் மனத்துள் காமம் செறிதல்

    மாதரார் மனத்தி னுள்ளும்
          மணிவண்ண னினைப்பி னுள்ளுங்
    காதலுஞ் செறிந்த தாகக்
          காமனு முழைய னாகப்
    போதலர் பருவச் சோலைப்
          பொழினல நுகரும் போழ்தில்
    ஓதநீர் வண்ண னங்கோ
          ருபாயத்தா லொளிக்க லுற்றான்.       1629

    திவிட்டன் தன்னை மறைத்துக் கொள்ளல்

    பொன்னவிர் குழையி னாரைப்
          பொழில்விளை யாட லேவி
    மன்னவன் மதலை மாட
          வளநக ரணுகு வான்போற்
    றன்னைமெய் மறைத்தோர் விஞ்சை
          தாழிரு ளெழினி யாகப்
    பின்னைமா தவனுந் தானும்
          பிணையவ ருழைய னானான்.       1630

    தேவியர் பொழில் விளையாடல்

    மன்னவன் மறைந்த தெண்ணி்
          மாபெருந் தேவி மற்றப்
    பொன்னவிர் கொடியன் னாரைப்
          பொழில்விளை யாட லேவக்
    கன்னியங் கோலஞ் செய்து
          கதிர்மணிக் கலங்க டாங்கி
    இன்னகை மழலை தோற்றி
          யிளையவ ரினைய ரானார்.       1631

    அவர்கள் செய்து கொண்ட ஒப்பனைகள்

    அம்பொன்செய் கலாப வல்கு
          லந்தழை புனைந்த வஞ்சிக்
    கொம்பஞ்சு மருங்கு னோவக்
          குவிமுலை முறிகொண் டப்பிச்
    செம்பொன்செய் சுருளை மின்னச்
          செவிமிசைத் தளிர்கள் சேர்த்திக்
    கம்பஞ்செய் களிற்றி னான்றன்
          கண்களைக் களிப்பித் திட்டார்.       1632

    விரவம்பூந் தளிரும் போது
          மிடைந்தன மிலைச்சு வாரும்
    அரவம்பூஞ் சிலம்பு செய்ய
          வந்தளிர் முறிகொய் வாரும்
    மரவம்பூம் கவரி யேந்தி
          மணிவண்டு மருங்கு சேர்த்திக்
    குரவம்பூங் பாவை கொண்டு
          குழவியோ லுறுத்து வாரும்.       1633

    மாலை சூடுதல்

    பாவையும் விலங்கு சாதிப்
          படிமமும் பறப்பை தாமுங்
    கோவையு முகத்து மாக்கிக்
          குலவிய விதழ தாக
    ஓவியர் புனைந்த போலு
          மொளிமலர்ப் பிணையன் மாலை
    தேவியர் மருளச் செய்து
          சிகழிகை சேர்த்து வாரும்.       1634

    தேவியர் சயம்பிரபையைக் கொண்டாடுதல்

    சிகரமா யிலங்கு சென்னித் தென்மலைச் சாந்து மூழ்கிப்
    பகருமா மணிவண் டோவாப் பணைமுலைப் பாரந் தாங்கித்
    தகரவார் குழல்பின் றாழத் தாழ்குழை திருவில் வீச
    மகரயா ழெழுவி மன்னன் வண்புகழ் பாடு வாரும்.       1635

    அரசனைப்பாடுதல்

    அருமலர்த் தழையும் போது
          மடியுறை யாக வேந்தித்
    திருமலர்ப் பாவை யன்ன
          தேவியைச் செவ்வி காண்பார்
    உருமல ரிழைத்த பாவை
          யொளிமண நயந்து மாதோ
    குருமலர்க் கொம்பி னொல்கிக்
          குரவையின் மயங்கு வாரும்.       1636

    வட்டிகைத் தொழில்

    வட்டிகைப் பலகை தன்மேன்
          மணிவண்ணன் வடிவு தீட்டி
    ஒட்டிய வடிவிற் றம்மை
          யூடலோ டிருப்பக் கீறித்
    திட்டமிட் டுருவ நுண்ணூற்
          றுகிலிகை தெளிர்ப்ப வாங்கிப்
    பட்டமுங் குழையுந் தோடும்
          பையவே கனிவிப் பாரும்.       1637

    செய்யுளின்பம் ஊட்டல்

    மாம்பொழின் மருங்கு சூழ்ந்த
          மணிச்சிலா தலத்து மேலாற்
    காம்பழி பணைமென் றோண்மேற்
          கருங்குழ றுவண்டு வீழப்
    பூம்பொழில் விளங்கத் தோன்றும்
          பொன்னிதழ் மறிந்து நோக்கித்
    தேம்பொழி செய்யு ளின்பஞ்
          செவிமுதற் சேர்த்து வாரும்.       1638

    ஊசலாடல்

    கோதையுங் குழைவின் பட்டின்
          கொய்சகத் தலையுந் தாழ
    மாதர்வண் டொருங்கு பேர
          மழையிடை நுடங்கு மின்போற்
    போதலர் பொதும்பிற் றாழ்ந்த
          பொன்னெழி லூச றன்மேல்
    ஓதநீர் வண்ணற் பாடி
          நூழிலூ ழியங்கு வாரும்.       1639

    வாழைக்குருத்தில் உகிரால் உருவம் கிள்ளல்

    கள்ளுமிழ்ந் துயிர்க்குஞ் சோலைக்
          கனமடற் குமரி வாழை
    உள்ளெழு சுருளை வாங்கி
          யொளியுகிர் நுதியி னூன்றிப்
    புள்ளெழு தடமும் போர்மான்
          றொழுதியு மிதுன மாய
    ஒள்ளெழி லுருவுங் கிள்ளி்
          யுழையவர்க் கருளு வாரும்.       1640

    பிற விளையாடல்கள்

    மயிலுடை யாடல் கண்டு
          மகிழ்ந்துமெய்ம் மயங்கி நிற்பார்
    குயிலொடு மாறு கொள்வார்
          குழைமுகஞ் சுடரக் கோட்டிக்
    கயிலொடு குழல்பின் றாழக்
          கண்டுநீர் கொண்மி னென்றாங்
    கயிலுடைப் பகழி வாட்க
          ணங்கையின் மறைத்து நிற்பார்.       1641

    செழுமலர்த் தாது கொய்து
          மெல்விரல் சிவந்த வென்பார்
    விழுமலர்த் துகள்வந் தூன்ற
          மெல்லடி மெலிந்த வென்பார்
    கொழுமலர்ப் பிணைய றாங்கிக்
          கொடியிடை யொசிந்த வென்பார்
    எழுமலர்த் தனைய தோளான்
          றேவிய ரினைய ரானார்.       1642

    மகளிரும் சோலையும்

    கொடிமருங் குறாமே கொடியாய் நுடங்க
    வடிநெடுங் கண்ணோக்க மணிவண்டா யோட
    அடிமலருங் கைத்தலமு மந்தளிராய்த் தோன்றக்
    கடிநறும்பூஞ் சோலையைக் காரிகையார் வென்றார்.       1643

    மணங்கமழும் பூமேனி வாசங் கமழ
    வணங்கி வருஞ்சோலை யலர்நாற்ற மெய்திக்
    கணங்குழையீர் யாமுமக்குக் கைமாறி லேமென்
    றிணங்கிண ரும்போது மெதிரேந்தித் தாழ்ந்த.       1644

    அந்தா ரசோக மசோக மவர்க்கீந்த
    செந்தார்த் திலகந் திலகமாய்ச் சேர்ந்தன
    வந்தார்க்கு மாவாது மென்பனபோன் மாதழைந்த
    கொந்தார்பூஞ் சோலைக் குலகறிவோ கூடின்றே.       1645

    தேவியர் ஒரு செய்குன்றம் சேர்தல்

    வெள்ளித் திரண்மேற் பசும்பொன் மடற்பொதிந்
    தள்ளுறு தேங்கனிய தாம்பொற் றிரளசைந்து
    புள்ளுறு பொன்வாழைக் கானம் புடையணிந்த
    தெள்ளு மணியருவிச் செய்குன்றஞ் சேர்ந்தார்.       1646

    கஞ்சுகி மாந்தருங் காவல் முதியாரும்
    மஞ்சிவர் சாரல் மணியறையும் வார்பொதும்பும்
    துஞ்சு மழைதவழுஞ் சோலைகளுஞ் சோதித்துச்
    செஞ்சொ லவர்போய்த் திசைகாவல் கொண்டாரே.       1647

    தோகை மடமஞ்ஞை சோலைப் பரப்பின்போன்
    மாக மழைவண்ணன் காதன் மடந்தையர்கள்
    ஆக மணி சூழ்சார றைவிரும் பொழில்வாய்ப்
    போகமணி புரளக் கலைபுலம்பப் புக்கார்.       1648

    செய்குன்றிற் செயல்

    அரையிலங்கு மேகலை யார்ப்பி னயல
    வரையிலங்கு மேகலை மாறேநின் றார்க்கும்
    புரையிலங்கு பொற்சிலம்பு தான்சிலம்பும் போழ்தில்
    நிரையிலங்கு பொற்சிலம்பு நேரே சிலம்பும்.       1649

    கொங்குண் குழலார் குழலோர் மணிமழலை
    தங்கினவை கொண்டு தானுமெதிர் மிழற்றும்
    அங்கணவர் செய்வசெய் தசதியா டின்றே
    செங்க ணெடியான் கடிகாவிற் செய்குன்றே.       1650

    நகரும் சிற்றிலும் இழைத்தல்

    மருவி மழைதவழு மையோங்கு சாரல்
    அருவி கொழித்த வருமணிகள் வாரித்
    தெருவுபடத் திருத்திச் சீலம் புனைவார்
    உருவ நகரிழைப்பா ரொண்ணுதலா ரானார்.       1651

    மரகத வீர்ங்கதிரை வார்புற் றளிரென்
    றுரைதரு காரிகையா ரூன்றி மிதித்துத்
    திரைதவழச் சீறடிக ணோவ நடந்து
    விரைதரு பூம்படைமேன் மெல்ல வசைந்தார்.       1652

    அருவியாடல்

    வெம்பரிய தண்சாரல் வேரூரி யக்கொழுந்து
    தம்பருவச் சோலை தழைத்த தகைநோக்கி
    எம்பெருமான் போலு மெழில விவையென்று
    வம்புருவந் தோன்ற மணியருவி யாடுவார்.       1653

    சந்திரகாந்தக் கல் துளித்தலும் மகளிர் மழையென மருளலும்

    செங்களிதோய்ந் துள்சிவந்த சீறடியார் வாண்முகத்தின்
    றங்கொளிபாய்ந் துள்ளெறித்த தண்காந்த மாமணி
    திங்க ளொளிகருதித் தெண்ணீர்த் துளிசிதற
    மங்குன் மழையயிர்த்து வார்பொழிலின் வாய்மறைவார்.       1654

    மாணிக்கக் கதிரை அசோகந்தளிரென்று அயிர்த்தல்

    வம்பத் திரளுருவின் மாணிக்கச் செங்கதிரை
    அம்பொற் சிலம்பி னசோகந் தளிரென்று
    தம்பொற் சுடராழி மெல்விரலாற் றைவந்து
    கொம்பிற் குழைந்து குறுமுறுவல் கொண்டகல்வார்.       1655

    மாணிக்கத்தைக் காயா என்று மயங்குதல்

    விண்டு சுடர்தயங்கு மேதகுமா மாணிக்கம்
    கண்டு கவின்விரிந்த காயாந் துணரிவை
    கொண்டு குழற்கணிது மென்று கொளலுறுவார்
    வண்டு வழிபடர வாட்கண் புதைத்தியல்வார்.       1656

    ஆயோ என்று கூவிக் கிளிகளை மகிழ்வித்தல்

    வேயோங்கு சாரல் விளைபுனங் காவல்கொண்
    டாயோ வெனமொழியு மம்மழலை யின்னிசையால்
    போயோங்கு பூஞ்சோலை வாழும் புனக்கிளிக
    மாயோன் மடந்தைமார் கூவி மகிழ்விப்பார்.       1657

    சிலர் மாணிக்கப்பாறை மீதேறுதல்

    பூந்தளிர் தாழ்ந்த பொழிறயங்கு பொன்வரைவாய்
    ஈர்ந்தளிர் மேனியா ரிவ்வா றினிதியலக்
    காந்தளங் குன்றின் கனபொன் மணியறைமேல்
    ஏந்திளங் கொங்கை மகளிர் சிலரியைந்தார்.       1658

    வள்ளி பாடுதல்

    பைம்பொ னறைமேற் பவழ முரலாக
    வம்ப மணிபெய்து வான்கேழ் மருப்போச்சி
    அம்பொன் மலைசிலம்ப வம்மனை வள்ளையுடன்
    கம்பஞ்செய் யானைக் கரியவனைப் பாடினார்.       1659

    வேறு

    கோடி சிலையெடுத்தான் கோளரிமா வாய்போழ்ந்தான்
    ஆடியல் யானை யயக்கிரீவ னையடித்தான்
    வீடின் மணியருவி வெண்மலையுங் கைப்பிடித்தான்
    வாடலில் பூங்கண்ணி மாமேக வண்ணனே.       1660

    வலம்புரி வாய்வைத்தான் வார்சிலை கைக்கொண்டான்
    சலம்புரி சண்டை தலைபனிப் புக்கண்டான்
    பொலம்புரி தாமரையாள் பொன்னாகந் தோய்ந்தான்
    கலம்புரி வண்டடக்கை கார்மேக வண்ணனே.       1661

    செம்பொன்செய் யாழியான் சேதாம்ப னீண்முடியான்
    அம்பொ னிதியு மருங்கலமுங் கைப்படுத்தான்
    நம்பு மணிமேனி நங்கை நலநுகர்ந்தான்
    கம்பஞ்செய் யானைக் கருமேக வண்ணனே.       1662

    திவிட்டன் தெய்வமொன்றினை வேழமாகி வரச் செய்தல்
    வேறு

    மடந்தையர் பாட வாங்கு
          மாபெருந் தேவி நிற்ப
    அடைந்தவ ரோடு மாடு
          மார்வநீர் வெள்ளம் வாங்க
    உடைந்தழி மனத்தன் வேந்த
          னுழையதோர் தெய்வங் கூவிப்
    படந்தவா முகத்தோர் வேழ
          மாகெனப் பணித்து விட்டான்.       1663

    மைவரை யொன்று கோல
          மணிதயங் கருவி தாழ
    ஐவனங் கலந்த சார
          லருகுவந் தணைவ தேபோற்
    றெய்வமோர் வேழ மாகிச்
          செய்கடாந் திரண்டு வீழ
    மைவரு நெடுங்க ணல்லார்
          நடுங்கவந் தணைந்த தன்றே.       1664

    மடந்தையர் நடுக்கம்

    கயில்கலந் திருண்டு தாழ்ந்த
          கருங்குழன் மருங்கு சோர
    வெயில்கலந் திலங்குஞ் செம்பொன்
          மிடைமணிக் குழைவில் வீச
    அயில்கலந் திலங்கு வேற்க
          ணையரி பிறழ வேட்டி
    மயில்கலந் திரிந்த போல
          மடந்தையர் நடுங்கி னாரே.       1665

    திவிட்டன் சுயம் பிரபையின் அச்சம் தீர்த்தல்

    நாண்டனா னிறைந்த நங்கை
          நடுங்குபு நுடங்கி நோக்கி
    யாண்டையா ரடிக ளென்னு
          மாயிடை யஞ்சல் பொன்னே
    ஈண்டையே னென்னை பட்ட
          தென்றுசென் றணுகி னானால்
    வேண்டிய விளைத்துக் கொள்ளும்
          விழுத்தவம் விளைத்து வந்தான்.       1666

    திவிட்டன் தேவியைத் தேற்றல்

    மலைமுக மதநல் யானை
          மற்றது மறித்து நங்கை
    முலைமுக நெருங்கப் புல்லி
          முருகுவேய் கோதை சூட்டிக்
    கலைமுகந் திருத்திக் காதிற்
          கனபொன்செய் சுருளை நீவி
    இலைமுகங் கலந்த செம்பொற்
          கலங்களை யிலங்க வைத்தான்.       1667

    கதிரவன் உச்சியை அடைதல்

    மங்கையர் தம்மை யெல்லா
          மணிவண்ணன் மருட்டி மற்றிக்
    கொங்கவிழ் குளிர்கொள் சோலைக்
          குன்றினின் றிழிந்த போது
    வெங்கதிர் விரிந்த வெய்யோன்
          விசும்பிடை வெதும்ப வெம்பிச்
    செங்கதிர்க் கூடங் குத்திச்
          செந்நடு வாக நின்றான்.       1668

    அவர்கள் வாவி சார்தல்

    அணங்கனார் நுதலின் மேலி்
          லரும்பிய வாரத் தெண்ணீர்
    மணங்கம ழலங்கன் மார்பன்
          மனத்தினை வாங்க மற்றக்
    கணங்குழை மடந்தை மாரைக்
          கடிபுன லாடல் காண்பான்
    மணங்கொள்பூந் துணர்கொள் சோலை
          மண்டுநீர் வாவி சார்ந்தான்.       1669

    வாவிகளின் வருணனை

    சாந்துநீர் நிறைந்த வாவி
          தயங்குசெங் குவளை வாவி
    பூந்துக ளவிழ்ந்த பொற்றா
          மரைமலர் புதைந்த வாவி
    தேந்துண ரகன்ற தெண்ணீர்த்
          திருமணி யுருவ வாவி
    வாய்ந்தவை போலக்காட்டி காட்டி
          யுழையவர் வணங்கி நின்றார்.       1670

    மன்னவன் தன் தேவியரோடு வாவியுட்புகுதல்

    அன்னவா றமைந்த தெண்ணீ
          ரலைபுன லாடும் போழ்தில்
    இன்னவா றியற்று கென்றாங்
          குழையரை மறைய வேவிப்
    பொன்னவாஞ் சுணங்கு போர்த்த
          புணர்முலை மகளி ரோடு
    மன்னவாம் வயிரத் தோளான்
          வலஞ்சுழி வாவி புக்கான்.       1671

    வாவியின் தன்மை

    மலங்குபாய் தயங்கு பொய்கை
          மணக்கல்வா யடுத்த செம்பொற்
    கலங்கினா றிழிந்து கீழே
          கலந்துவந் தெழுந்த தெண்ணீர்
    அலங்கலான் மடந்தை மார்த
          னரும்புணை யாக வீங்கி
    வலங்குலாய்ச் சுழித்து வாய்த்த
          வாவி வாய் மடுத்த தன்றே.       1672

    நீர் விளையாடல்

    அலைபுனல் பெருக லோடு
          மலைகடல் வண்ணன் றன்னை
    மலைபுனை கொடியிற் புல்லி
          மடந்தையர் மயங்கு வாரும்
    மிலைபுனை கோதை சோர
          விடுபுணை தழுவு வாரும்
    கலைபுனை துகிலுந் தோடு
          மொழியப்போய்க் கரைகொள் வாரும்.       1673

    ஆர்புனல் சுழித்து வாங்க
            வனையரா யணிபொன் வாவி
    நீர்புனை தடத்தி னுள்ளா
            னிலைகொண்டு நெடுங்கண் சேப்பத்
    தார்புனை மார்பன் றன்மேற்
            றரங்கநீர் தயங்கத் தூவி
    வார்புனை முலையி னல்லார்
            மயங்கமர் தொடங்கி னாரே.       1674

    திரளிருஞ் சிவிறி வீக்கிச்
            செழுமழைத் தாரை பெய்வார்
    மருளிரும் பிணையன் மாலைப்
            படைபல வழங்கிச் சூழ்வார்
    சுருளிருந் தோடு வாங்கித்
            தோண்மிசை துளங்கி வீழ்ப்பார்
    இருளிருங் குழலி னார்க
            ளிறைவன்மே லினைய ரானார்.       1675

    மன்னன் தோற்று நிற்றல்

    சாந்தெழு சிவிறித் தாரை
            சதுர்முக மாக வீக்கிப்
    பாய்ந்தன பவழச் செங்கே
            ழங்கையான் முகந்த தெண்ணீர்
    வேய்ந்தன திவலை யாகி
            விழுந்தன வேரி மாலை
    நாந்தகக் கிழவன் பொய்யே
            நங்கைமார்க் குடைந்து நின்றான்.       1676

    காரையார் வண்ணன் மாலைக்
            காற்படை யுடைந்த போழ்தி்ல்
    தரையாய்க் குறளுஞ் சிந்து
            மிதந்தன சில்ல சிந்தி
    வேரியார் குவளை வேய்ந்த
            மெல்லிய லவர்க்குத் தோற்ற
    ஒரையாய் முதலை யாகிக்
            கூன்மடை யொளித்த வன்றே.       1677

    வாலி வற்றி விடுதல்

    வென்றனம் வீரன் றன்னை
            வீக்குமின் சிவிறித் தாரை
    சென்றெனச் சிறந்த காதற்
            றேவியர் திளைக்கும் போழ்தில்
    ஒன்றிய வுழையர் கீழ்நீ
            ரோப்பறித் திடுத லோடு
    நின்றகஞ் சுழிந்த தெண்ணீர்
            நெரேலென விழிந்த தன்றே.       1678

    மகளிர் நாணமுறல்

    மாலையுந் துகிலும் வார்
            வார்புன லொழுகும் போழ்தின்
    ஆலையின் கரும்பி னின்சொ
            லணங்கனா ரவிழத் தத்தம்
    கோலமென் றுகில்க டாங்கிக்
            குழைமுகஞ் சுடரக் கோட்டி
    வேலைநீர் வண்ணன் முன்னர்
            நாணினான் மெலிவு சென்றார்.       1679

    அருமணிக் கலாப வல்கு
            லவிழ்துகி லசைத்து மீட்டும்
    திருமணி வண்ண னோடுந்
            தேவியர் திளைத்துத் தெண்ணீர்ப்
    புரிமணிப் பொன்செய் வாவிப்
            புணைபுறந் தழுவிப் புக்கார்
    கருமணி வண்டுந் தேனுங்
            கையுறக் கலந்த தன்றே.       1680

    வேறு விளையாடல்
    வேறு

    கொங்கைக டுளும்பநீர் குடைந்துங் கொய்தளிர்
    அங்கையி னோன்புணை தழுவி யாடியுஞ்
    செங்கயற் கண்மலர் சிவப்ப மூழ்கியு
    மங்கையர் புனற்றொழின் மயங்கிற் றென்பவே.       1681

    புனல் இருள் பட்டது

    அடித்தலத் தலத்தகங் கழுமிக் குங்குமப்
    பொடிக்கலந் தந்திவான் படைத்த பூம்புனல்
    வடிக்கலந் திலங்குவா ணெடுங்கண் மைக்குழம்
    பிடிக்கலந் திருளுமங் கியற்றப் பட்டதே.       1682

    புனல் அளறுபடல்

    கொங்கைவாய்க் குங்குமக் குழம்புங் கோதைவாய்
    மங்கைமார் சிதர்ந்தன வாசச் சுண்ணமும்
    செங்கண்மா லகலத்து விரையுந் தேர்த்தரோ
    அங்கண்மா லிரும்புன லளறு பட்டதே.       1683

    திரைகள் இளைத்துத் தோன்றின

    அணங்கனா ரகலல்கு லலைத்து மாங்கவர்
    சுணங்குசூ ழிளமுலை துளும்பத் தாக்கியும்
    வணங்குபூங் கொடியிடை வளைத்தும் வாவிவாய்
    இணங்குநீர்த் திரையவை யிணைப்ப வொத்தவே.       1684

    தாமரையின் செயல்

    வடந்தவ ழிளமுலை விம்ம மங்கையர்
    குடைந்திட வெழுந்தநீர் குளித்த தாமரை
    மடந்தையர் குளித்தெழும் போழ்தின் வாண்முகம்
    அடைந்ததோர் பொலிவினை யறிவித் திட்டவே.       1685

    புனல் கரையேறி மீண்டது

    வளைத்தகை யொண்பணைத் தோளி மாரொடு
    திளைத்தகங் கழுமிய தரங்கத் தெண்புனல்
    இளைத்தவர் மணிக்கரை யேறச் சீறடி
    திளைத்துமுன் சிறிதிடஞ் சென்று மீண்டதே.       1686

    அரசன் முதலியோர் ஒரு மண்டபமடைதல்

    பொழுதுசென் னாழிகை யெல்லை பூங்கழல்
    தொழுதுவந் திளையவ ருணர்த்தத் தொண்டைவாய்
    எழுதிய கொடியனார் சூழ வீர்ம்பொழில்
    பழுதுழை யிலாப்பகற் கோயி லெய்தினான்.       1687

    தேவியின் செயல்

    தேவியர் திருமணி மேனி நீர்துடைத்
    தாவியம் புனைதுகி லல்குன் மேலுடீஇக்
    காவியங் கண்ணினார் காக துண்டத்தின்
    ஆவியா லீர்ங்குழ லாவி யூட்டினார்.       1688

    தண்ணிறத் தண்கழு நீரி னெய்தலின்
    கண்ணிறக் கருங்கடை யிதழும் பெய்திடை
    தண்ணறுந் தமனகக் கொழுந்துஞ் சார்த்திய
    ஒண்ணிறப் பிணையலன் றுவக்கப் பட்டதே.       1689

    பொன்மலைக் காவியற் றிமிர்ந்து பூங்கமழ்
    தென்மலைச் சந்தன மெழுதித் தாமரை
    நன்மலர்த் தாதுமீ தப்பி நங்கைமார்
    மென்முலைத் தடங்களும் விருந்து பட்டவே.       1690

    கண்ணகங் குளிர்ப்பக் கல்லாரக் கற்றையும்
    தண்ணறுங் குவளைதா மெறித்த தாமமும்
    ஒண்ணிறத் தாமரை யொலிய லுந்தழீஇ
    எண்ணரும் பெருங்கவி னிளைய ரெய்தினார்.       1691

    காமரு நிறத்தகல் லாரக் கற்றைகள்
    சாமரை யெனத்தம ரசைப்பத் தாமரை
    தேமரு குடையிலை கவிப்பத் தேவியர்
    பூமரு மடந்தையர் போன்று தோன்றினார்.       1692

    தேவர்க டிசைமுகங் காப்பத் தீஞ்சுவை
    ஆவியா ரமிழ்தயின் றிருந்த வாயிடைப்
    பாவையர் கருங்கணாற் பருகு வார்கள்போன்
    மாவர சழித்தவன் மருங்கு சுற்றினார்.       1693

    ஆங்கோர் விஞ்சையன் தோன்றல்
    வேறு

    வஞ்சியங் கொம்ப னாரு மன்னனு மிருந்த போழ்தின்
    விஞ்சைய னொருவன் றோன்றி விசும்பினா றிழிந்து வந்து
    மஞ்சிவர் சோலை வாயில் வாயிலோன் வாயி லாக
    அஞ்சன வண்ணன் செந்தா மரையடி வணங்கி னானே.       1694

    வந்தவனை உபசரித்தல்

    வந்தவன் வணங்க லோடு
            மாமனை நுவலி யென்னை
    கந்தணை யானை வேந்தன்
            கழலடி செவ்வி யோவென்
    றந்தமி லாழி யாள்வான்
            வினவலி னருளு மாறென்
    றிந்திர னனைய நீராற்
            கிறைஞ்சலு மிருக்க வென்றான்.       1695

    விஞ்சையன் கொண்டுவந்த நிருபம்

    உரிமையோ டிருந்த போழ்தி
            னுணர்த்துதற் குரித்தென் றெண்ணித்
    திருமுகந் தொழுது காட்டத்
            தேவிதன் மருங்கு நின்ற
    உரிமைகொ ளுழைய ருள்ளா
            ளொருத்திவா சித்து ணர்த்த
    அருமுடி யொழிய வெல்லா
            வணிகளு மவனுக் கீந்தான்.       1696

    விஞ்சையின் செய்தி கூறல்

    கனிவளர் கிளவி யாருங்
            கதிர்மணிக் கலங்கள் வாங்கிப்
    பனிமதி விசும்பின் வந்தான்
            பால்வரப் பணித்த பின்னை
    இனியிது பெயர்த்து நீயே
            யுரையென வெடுத்துக் கொண்டு
    துனிவள ரிலங்கு வேலான்
            கழலடி தொழுது சொன்னான்.       1697

    சுடர்மலைத் திருண்ட சோலைச்
            சுரேந்திர காந்த மென்னும்
    வடமலை நகர மாளு
            மன்னவன் றேவி பெற்ற
    தடமலர்ப் பெரிய வாட்கட்
            டையன்மற் றவளை யெங்கோன்
    விடமலைத் திலங்கு செவ்வேல்
            வெய்யவன் பெயரன் வேட்டான்.       1698

    அதனைக் கேட்டுத் திவிட்டன் மகிழ்தல் ; சூரியாத்தமனம்

    என்றவன் பெயர்த்துஞ் சொல்ல
            வின்பநீர் வெள்ள மூழ்கி
    மின்றவ ழிலங்கும் வேலான்
            விஞ்சைய னவனைப் போக்கிச்
    சென்றுதன் கோயில் சேர்ந்தான்
            செங்கதிர்த் திகிரி யானு
    மன்றழல் சுருங்க முந்நீ
            ரலைகட லழுவம் பாய்ந்தான்.       1699

    மாலை

    அழலவன் குளித்த பின்னை
            யணங்கிவ ரந்தி யென்னும்
    மழலையங் கிளவிச் செவ்வாய்
            மடந்தையு மடைந்த போழ்தில்
    குழலமர் கிளவி யார்தங்
            கூந்தலுட் குளித்து விம்மி
    எழிலகி லாவி போர்ப்ப
            விருவிசும் பிருண்ட தன்றே.       1700

    இரவு

    விரவின பரவைப் பன்மிமீன்
            மிடைமணிக் கலாப மாக
    மருவின பரவை யல்குன்
            மயங்கிருட் டுகிலை வாங்கிப்
    புரிவணன் மதிய மென்பான்
            பொழிகதிர்த் தடக்கை நீட்டி
    இரவெனு மடந்தை செல்வ
            நுகரிய வெழுந்து போந்தான்.       1701

    திவிட்டன் இன்பம் நுகர்தல்

    ஏரணி விசும்பி னங்கே
            ழெழுநிலா விரிந்த போழ்தில்
    சீரணி மணிவண் டார்க்குஞ்
            சிகழிகைப் பவழ வாயார்
    காரணி வண்ண னென்னுங்
            கருங்களி வேழந் தன்னை
    வாரணி யிளமென் கொங்கை
            வாரியுள் வளைத்துக் கொண்டார்.       1702

    பங்கய முகத்து நல்லார்
            பவழவாய்க் கவளங் கொண்டு
    பொங்கிய களிய தாகி்
            மயங்கிய பொருவில் வேழம்
    குங்குமப் பொடிநின் றாடிக்
            குவட்டிளங் கொங்கை யென்னும்
    தங்கொளி மணிமுத் தேந்துந்
            தடத்திடை யிறைஞ்சிற் றன்றே.       1703

    வேய்மரு ளுருவத் தோளார்
            வெம்முலைத் தடங்க ளென்னும்
    பூமரு தடத்துட் டாழ்ந்து
            பொற்பொடி புதைய வாடிக்
    காமரு காம மென்னுங்
            கருங்கயம் படிந்து சென்று
    தேமரு குழலஞ் சாயற்
            றேவிகைப் பட்ட தன்றே.       1704

    காதலா லுரிமை பாங்கிற்
            கடிகமழ் காம வல்லித்
    தாதலொந் ததர்ந்து சிந்தத்
            திளைத்தவத் தடக்கை வேழம்
    மாதரா ளமிழ்தின் சாயற்
            றோட்டியால் வணக்கப் பட்டுப்
    போதுலாம் புணர்மென் கொங்கைக்
            குவட்டிடைப் பூண்ட தன்றே.       1705

    சுயம்பிரபையின் வாயினுள் மதி புகுதல்

    செங்கயற் கண்ணி னாளுஞ்
            செல்வனுந் திளைத்துத் தீந்தேன்
    பொங்கிய வமளி மேலாற்
            புணர்முலை நெருங்கப் புல்லித்
    தங்கிய பொழுதிற் றாழ்ந்து
            தண்கதிர் மதியந் தானே
    மங்கைதன் பவழச் செவ்வாய்
            மடுத்தக மடைந்த தன்றே.       1706

    தேவி அஞ்சியலறல்

    அடைந்தது மதிய மாக
            வாயிடை யரசன் றிண்டோள்
    மிடைந்ததோ ணெகிழ விம்மி
            மெல்லியல் வெருவ லோடு்
    மடங்கலை யலைக்கு நீரான்
            மருட்டினன் வினவ மாதோ
    வடந்தவ ழிளமென் கொங்கை
            மெல்லவே மிழற்றி னாளே.       1707

    மன்னன் அவளைத் தேற்றல்

    வணங்கியிவ் வுலக மெல்லா
            மகிழ்ந்துகண் பருகு நீர்மை
    அணங்கிவர் சிறுவன் வந்துன்
            அணிவயிற் றகத்துப் பட்டான்
    கணங்குழை யஞ்ச லென்று
            கருமணி வண்ணன் றேற்றப்
    பணங்குலாம் பரவை யல்குற்
            பாவையும் பரிவு தீர்ந்தாள்.       1708

    சூரியோதயம்

    கங்குல்வாய் மடந்தை கண்ட
            கனவுமெய் யாகல் வேண்டி
    மங்குல்வா னகட்டுச் சென்று
            மதியவன் மறைந்த பின்னை
    அங்குலா யிருளை நீக்கு
            மாயிரங் கதிரி னானும்
    கொங்குலாங் குழலி காணுங்
            குழவிய துருவங் கொண்டான்.       1709

    சுயம்பிரபையின் கருப்பப் பொலிவு

    குலம்புரி சிறுவனைத் தரித்துக் கோலமா
    நிலம்புரி நிழலொளி நிரந்து தோன்றலால்
    வலம்புரி மணிக்கரு விருந்த தன்னதோர்
    நலம்புரி திருவின ணங்கை யாயினாள்.       1710

    மின்னிலங் கவிரொளி மேனி மெல்லவே
    தொன்னலம் பெயர்ந்துபொன் சுடர்ந்து தோன்றலான்
    மன்னிலங் கருமணி வளர வாளுமிழ்
    பொன்னிலம் புரைவதோர் பொலிவு மெய்தினாள்.       1711

    புதல்வற் பேறு

    கோணலம் பொலிந்துவிண் குளிரக் குங்குமத்
    தோணலம் பொலிந்ததோர் தோன்ற லோடுதன்
    கேணலம் பொலிதரக் கிளருஞ் சோதிய
    நாணலம் பொலிதர நம்பி தோன்றினான்.       1712

    நகரமாந்தர் மகிழ்ச்சி

    பொலிகெனு மொலிகளும் பொன்செய் மாமணி
    ஒலிகல வொலிகளும் விரவி யூழிநீர்
    கலிகெழு கனைகடல் கலங்கி யன்னதோர்
    பலிகெழு முரசொலி பரந்தொ லித்ததே.       1713

    துளைபடு குழலிசை துடியொ டார்ப்பவும்
    வளைபடு கறங்கிசை வயிரொ டேங்கவும்
    தளைபடு தகைமலர் மாலை தாதுகக்
    கிளைபடு வளநகர் கிலுகி லுத்ததே.       1714

    தொத்திளங் கடிமலர் துதைந்த கோதையார்
    மொய்த்திளங் குமரரோ டாடு முன்கடை
    மத்தளப் பாணியு மதன கீதமும்
    கைத்தலத் தாளமுங் கலந்தி சைத்தவே.       1715

    சிறைநகர் சீத்தன திலத முக்குடை
    இறைநகர் விழவணி யியன்ற நீண்டுநீர்த்
    துறைநகர் சுண்ணநெய் நாவி தூங்கின
    நிறைநக ரவர்தொழி னினைப்பி கந்தவே.       1716

    சினகரத்திற் செய்தவை

    சுண்ணநெய் யெழுபக லாடித் தொன்னகர்
    நண்ணிய நானநீ ராடி நம்பியைப்
    புண்ணியா வாசனை செய்து புங்கவன்
    திண்ணிய வடிமலர்ச் சேடஞ் சேர்த்தினார்.       1717

    சுற்றத்தார் வருதல்

    வழுவலி னாஞ்சிலான் வண்பொ னாழியான்
    தழுமல ரலங்கலான் றாதை தானெனச்
    செழுமல ரணிகுழற் றேவி மாரென
    எழுபெருங் கிளைகளு மினிதி னீண்டினார்.       1718

    அவர்கள் குழவியைத் தழுவி மோந்து மகிழ்தல்

    எழுதரு பரிதியங் குழவி யேய்ப்பதோர்
    தொழுதகை வடிவொடு நம்பி தோன்றலும்
    தழுவினர் முயங்கினர் முயங்கித் தம்முளே
    ஒழிவிலா வுவகைநீர்க் கடலுண் மூழ்கினார்.       1719

    அந்தணர் முதலியோர் வாழ்த்துதல்

    அறத்தகை யந்தணர் குழுவு மாடல்வேன்
    மறத்தகை மன்னவர் குழுவு மாநகர்த்
    திறத்தகு முதியரு மீண்டிச் செல்வனைப்
    பொறுத்தவர் பொலிவுரை புடைபொ ழிந்ததே.       1720

    திவிட்டன் அந்தணர் முதலியோருக்கு அரதன முதலியவை அளித்தல்

    குருமணிக் கோவையுங் குளிர்பொற் குன்றமும்
    அருமணிக் கலங்களு மரத்த வாடையும்
    புரிமணி வளநகர் புகுந்து கொள்கெனக்
    கருமணி யொளியவன் கவரக் காட்டினான்.       1721

    நாமகரணம்

    திருவொடு திசைமுகந் தெளிர்ப்பத் தோன்றினான்
    திருவொடு வென்றியிற் சேரு மாதலால்
    திருவொடு திகழ்தர விசய னென்றரோ
    திருவுடை மார்பனை நாமஞ் சேர்த்தினார்.       1722

    விமானம் வருகை

    விஞ்சைய ருலகிற்கும் விடுத்து மோகையென்
    றஞ்சன வண்ணனங் கருளு மாயிடை
    மஞ்சுடை விசும்பினின் றிழிந்து வந்தது
    செஞ்சுட ருமிழ்வதோர் செம்பொன் மானமே.       1723

    மணிநகு விமானமொன் றிழிந்து வந்துநம்
    அணிநக ரணுகின தடிக ளென்றலும்
    பணிவரை கொணர்மினீர் பாங்கி னென்றனன்
    துணிநகு சுடரொளி துளும்பும் வேலினான்.       1724

    மஞ்சுசூழ் மழைநுழை மானந் தன்னுளோர்
    விஞ்சையர் மடந்தையர் விளங்கு மேனியர்
    கஞ்சுகி யவரொடு மிழிந்து காவலன்
    இஞ்சிசூழ் நகரணி யிருக்கை யெய்தினார்.       1725

    பொலிகெனப் புரவலன் பொன்செய் நீண்முடி
    மலிதரு நறுநெயம் மகளிர் பெய்தலுங்
    கலிதரு கனைகட லன்ன காதலோ
    டொலிதரு நகையொலி யுவந்தெ ழுந்ததே.       1726

    நாவிகா றழுவிமன் னறுநெய் யாடிய
    பாவைமார் தங்களைப் பாவை கோயிலுக்
    கேவியாங் கிருந்தபி னிறைவற் கின்னணம்
    தேவிகோன் றமன்றொழு தொருவன் செப்பினான்.       1727

    தூதன் கூறிய செய்தி

    எங்கள்கோ னெறிகதிர்ப் பெயர னீர்மலர்க்
    கொங்குசே ரலங்கலான் குளிரத் தங்கினாள்
    மங்குறோய் மணிவரை மன்னன் றன்மகள்
    தொங்கல்சூழ் சுரிகுழற் சோதி மாலையே.       1728

    மங்குல்வான் மழைகெழு மின்னின் மன்னவன்
    தொங்கல்வாய் மடந்தைகண் டுயிலு மாயிடைக்
    கங்குல்வாய்க் கதிர்மதி கவானின் மேலிருந்
    தங்கண்மால் விசும்பக மலர்வித் திட்டதே.       1729

    தெண்கதிர்த் திருமணி கனவிற் சேர்ந்தபின்
    கண்கதிர்த் திளமுலை கால்ப ணைத்தன
    தண்கதிர்த் தமனியப் பாவை போல்வதோர்
    ஒண்கதிர்த் திருமக ளுருவ மெய்தினாள்.       1730

    வயா

    வானிவர் மணிநகை விமான மேறவும்
    கானிவர் கற்பகச் சோலை காணவும்
    மானிவர் நோக்கினாள் வயாவி னாளது
    தேனிவ ரலங்கலாய் தீர்க்கப் பட்டதே.       1731

    அமிதசேனன் பிறப்பு

    மாணிக்க மரும்பிய வண்பொன் மாநிலத்
    தாணிப்பொன் னனையவ ளனைய ளாயபின்
    கோணிற்கும் விசும்பிடைக் குழகித் திங்களும்
    நாணிப்போ முருவொடு நம்பி தோன்றினான்.       1732

    தேமரு செங்கழு நீரின் செவ்விதழ்
    காமரு பவழவாய் கமழுங் கண்மலர்
    தாமரை யகவிதழ் புரையுந் தானுமோர்
    பூமரு தமனியக் குழவி போலுமே.       1733

    வானிடை மணிவிளக் கெரிந்த வண்டொடு
    தேனுடை மலர்மழை சிதர்ந்த தவ்வழி
    மீனுடை விரிதிரை வெண்சங் கார்த்தன
    தானுடை யொளிதிசை தவழ்ந்தெ ழுந்ததே.       1734

    பெயரிடுதல்

    அளப்பருந் திறலுடை யரசர் தொல்குடை
    அளப்பருந் திறலினோ டலரத் தோன்றினான்
    அளப்பருந் திறலின னமித தேசனென்
    றளப்பருந் திறற்பெய ரமரக் கூறினார்.       1735

    ஐயன தழகுகண் பருக வவ்வழி் மையணி
    மழைமுகில் வண்ணன் மாமனார்
    வையக முடையவற் குணர்த்தி வாவென
    நெய்யொடு வந்தன னிலைமை யின்னதே.       1736

    தூதனை யுபசரித்தல்

    என்றவன் மொழிதலு மிலங்கு நேமியான்
    நின்றகஞ் சுடர்தரு நிதியி னீத்தமங்
    கன்றவற் கருளின னரச செல்வமோ
    டொன்றின னுவந்துதன் னுலக மெய்தினான்.       1737

    வேறு

    விண்டா ரில்லா வெந்திற லோன்பொற் சுடராழித்
    தண்டார் மார்பன் றன்மக னன்மா மணியேபோல்
    கண்டார் கண்களி கூருஞ் செல்வக் கவினெய்தி்
    வண்டா ரைம்பான் மங்கையர் காப்ப வளர்கின்றான்.       1738

    கண்கவர் சோதிக் காமரு தெய்வம் பலகாப்பத்
    தண்கமழ் போதிற் றாமரை யாளுந் தகைவாழ்த்த
    விண்கவர் சோதித் தண்கதி ரோன்போல் விரிவெய்தி
    மண்கவர் சோதித் தண்கதிர் வண்ணன் வளர்கின்றான்.       1739

    தவழ்தல்

    செம்பொற் கோவைக் கிண்கிணி யேங்கத் திலகஞ்சேர்
    அம்பொற் கோவைப் பன்மணி மின்னிட் டரைசூழப்
    பைம்பொற் கோவைப் பாடக மென்சீ றடிநல்லார்
    தம்பொற் கோவைப் பூண்முலை முன்றிற் றவழ்கின்றான்.       1740

    போதார் பொய்கைப் போதவிழ் பொற்றா மரைகாட்டி
    மாதார் சாயன் மங்கையர் கூவ மகிழ்வெய்திக்
    காதார் செம்பொற் றாழ்குழை மின்னின் கதிர்வீசத்
    தாதார் பூவின் றண்டவி சேறித் தவழ்கின்றான்.       1741

    கண்ணின் செல்வங் கண்டவர் கண்டே மனம்விம்ம
    மண்ணின் செல்வம் வைகலும் வைகன் மகிழ்வெய்தி
    விண்ணின் செல்வச் செங்கதி ரோன்போல் விளையாடித்
    தண்ணென் செல்கைப் பொன்னுருள் வாங்கித் தளர்கின்றான்.       1742

    கல்வி கற்பித்தல்

    ஐயாண் டெல்லை யையன ணைந்தா னவனோடு
    மையா ரின்பக் காதலி நாவின் மகளாகப்
    பொய்யாக் கல்விச் செல்வர்க டம்மாற் புணர்வித்தான்
    நெய்யார் செவ்வே னீளொளி நேமிப் படையானே.       1743

    மகள் பிறப்பு

    காமச் செல்வ னென்றுல கெல்லாங் களிதூங்கும்
    ஏமச் செல்வ நம்பியொ டின்னு மிளையாகச்
    சேமச் செல்வன் றேவி பயந்தா டிசையெல்லாம்
    ஓமச் செல்வங் கொண்டினி தேத்து மொளியாளே.       1744

    பெயரிடுதல்

    பாரார் செல்கைப் பல்கிளை யெல்லா முடனீண்டிப்
    பேரா வென்றிக் கொன்றிய வாறு பெயரிட்டுச்
    சீரா ரோகை விஞ்சையர் சேணி செலவிட்டுக்
    காரார் வண்ணன் காதலொ டின்பக் கடலாழ்ந்தான்.       1745

    ஐயன் றானு மவ்வகை யாலே வளர் வெய்த
    மையுண் கண்ணி மாபெருந்தேவி மகிழ் தூங்கத்
    தெய்வம் பேணிப் பெற்றனர் பேணுந் திருவேபோல்
    மெய்யின் சோதி சூழொளி மின்னின் பெயராளும்.       1746

    தேதா வென்றே தேனொடு வண்டு திசைபாடும்
    போதார் சாயற் பூங்கொடி போலப் பொலிவெய்தித்
    தாதார் கோதைத் தாயரொ டாயம் புடைசூழ
    மாதார் சாயன் மாமயி லன்னாள் வளர்கின்றாள்.       1747

    வேறு

    மழலைக் கனிவாய் மணிவண்டு
            வருடி மருங்கு பாராட்ட
    அழனக் கலர்ந்த வரவிந்த
            வமளி சேர்ந்த விளவன்னம்
    கழனிச் செந்நெற் கதிரென்னுங்
            கவரி வீசக் கண்படுக்கும்
    பழனக் குவளை நீர்நாடன்
            பாவை வார்த்தை பகருற்றேன்.       1748

    செம்பொற் சிலம்புங் கிண்கிணியுஞ்
            செல்வச் செஞ்சீ றடிபோற்ற
    வம்பத் துகிலின் வடஞ்சூழ்ந்த
            வல்குன் மணிமே கலை மருட்ட
    அம்பொற் சுருளை யிருபாலு
            மளக வல்லி யருகிலங்கப்
    பைம்பொற் சுடிகை நிழறுளங்கப்
            படர்ந்தா டாயம் படிந்தாளே.       1749

    பந்தாடல்

    நங்கை நல்லார் பாராட்ட
            நகையாட் டாயம் புகலோடு
    மங்கை மடவார் பந்தாடன்
            மயங்கி யாடன் மணிநிலத்துக்
    கொங்கை சேர்ந்த குங்குமத்தின்
            குழம்புங் கோதை கொய்தாதும்
    அங்க ராகத் துகளும்பாய்ந்
            தந்தி வான மடைந்ததுவே.       1750

    காவி நாணுங் கண்ணார்தங்
            கையி னேந்துங் கந்துகங்கள்
    ஆவி தாமு முடையனபோ
            லடிக்குந் தோறு மடங்காது
    பூவி னார்ந்த மணிநிலத்துப்
            பொங்கி யெழுந்து பொன்னேந்தி
    நாவி நாறு மிளங்கொங்கைத்
            தடங்கள் சென்று நணுகியவே.       1751

    கரிய குழலும் பொற்றோடுஞ்
            செய்ய வாயுங் கதிர்முறுவல்
    மரிய திசையு மதிமயங்கு
            மம்பொன் முகத்து மடவார்கள்
    திரியத் தம்மைப் புடைத்தாலுஞ்
            சென்று சேர்ந்து திளைக்குமால்
    அரிய செய்யுங் காமுகர்போ
            லளிய வந்தோ வடங்காவே.       1752

    செம்பொற் சுருளை மெல்விரலாற்
            றிருத்திச் செறிந்த தேரல்குல்
    வம்பத் துகிலின் வடஞ்சூழ்ந்து
            மணிமே கலையுந் தானேற்றி
    அம்பொற் குரும்பை மென்முலைமே
            லணிந்த பொன்ஞா ணருகொடுக்கிப்
    பைம்பொற் றிலத நுதலொதுக்கிப்
            பாவை பந்து கைக்கொண்டாள்.       1753

    வேறு

    கந்தாடு மாலியானைக் கார்வண்ணன் பாவை
            கருமேகக் குழன்மடவார் கைசோர்ந்து நிற்பக்
    கொந்தாடும் பூங்குழலுங் கோதைகளு மாடக்
            கொய்பொலந் துகிலசைத்த கொய்சகந் தாழ்ந்தாட
    வந்தாடுந் தேனுமுரல் வரிவண்டு மாடமணி
            வடமும் பொன்ஞாணும் வார்முலைமே லாடப்
    பந்தாடு மாடேதன் படைநெடுங்க ணாடப்
            பணைமென்றோ ணின்றாடப் பந்தாடு கின்றாள்.       1754

    கந்துகங்கள் கைத்தலத்தா லேறுண்டு பொங்கிக்
            கருங்கண்ணுந் தாமுமுறக் கலந்தெழுந்த போழ்தின்
    வந்தனவுஞ் சென்றனவும் வானத்தின் மேலு
            மணிநிலத்து மீதுநெறி மறிகுவன வாகி
    அந்துகிலி னிடைத்தோயு மகலல்கு றீண்டு
            மணிமருங்கு சூழுமணியார் வடமுந் தாக்கும்
    கொந்தவிழும் பூங்குழ்லுங் கோதைகளு மூழ்குங்
            குவளை வாட் கண்ணிவருங் குறிப்பறிய மாட்டாள்.       1755

    நறுமாலை வந்தலைப்ப நன்மேனி நோமா
            னங்காயிப் பந்தாட னன்றன்றா மென்பார்
    இறுமாலிம் மின்மருங்கு லென்பாவ மென்பார்
            இளமுலைமே லேர்வடம்வந் தூன்றுமா லென்பார்
    செறுமாலிங் கிவைகாணிற் றேவிதா னென்பார்
            செங்கண்மால் காணுமேற் சீறானோ வென்பார்
    பெறுமாறு தாயருந் தோழியரு நின்று
            பிணையனா டன்மேற் பன்மொழி மிழற்றுகின்றார்.       1756

    நீராலிக் கட்டி நிரந்தெழுந்து பொங்கி
            நிழறயங்கும் பொன்னறைமே னின்றாடுகின்ற
    காராலி மஞ்ஞை களிசிறந்தாற் போலக்
            கருங்குழலி பந்தாடல் காதலித்த போழ்தில்
    சீராலி மால்வண்ணன் றேவியுந் தானும்
            செவ்வரத்த நுண்ணெழினி சேர்ந்தொருங்கு நோக்கி்
    வாராலி மென்கொங்கை மையரிக்கண் மாதர்
            வருந்தினா ணங்கையினி வருகவீங் கென்றார்.       1757

    வேறு

    அருமணி முடியவ னருளி தென்றலும்
    பருமணிப் பந்துகை விட்டுப் பாவைதன்
    புரிமணிக் குழல்புறந் தாழப் போந்தரோ
    கருமணி யொளியவன் கழல்சென் றெய்தினாள்.       1758

    மங்கையை வலப்புடைக் குறங்கின் மேலிரீஇ
    அங்கையா லணிநுத லரும்பு நீர்துடைத்
    தெங்குமி லுவகையோ டினிதி ருந்தபின்
    நங்கைத னலங்கிளர் மேனி நோக்கினான்.       1759

    இளமையா லெழுதரு மிணைமென் கொங்கையின்
    வளமையாற் பொலிதரும் வனப்பின் மாட்சியால்
    குளமையா னறவிரி குவளைக் கண்ணியான்
    உளமயா வுயிர்ப்பதோ ருவகை யெய்தினான்.       1760

    செல்வியைத் திருக்குழ றிருத்தித் தேவிதன்
    அல்குன்மே லினிதினங் கிருவி யாயிடை
    மல்குபூ மந்திர சாலை மண்டபம்
    பில்குபூந் தெரியலான் பெயர்ந்து போயினான்.       1761

    அருத்தநூ லவரொடு மாய்ந்து மற்றவர்
    கருத்தொடு பொருந்திய கருமச் சூழ்ச்சியான்
    திருத்தகு சயம்வர முரசந் திண்களிற்
    றெருத்தின்மே லறைகென விறைவ னேயினான்.       1762

    வாலிய சந்தமென் சேறு மட்டித்துப்
    பீலியந் தழையொடு பிணையல் வேய்ந்தன
    பாலியல் பலிபெறு முரசம் பன்மையில்
    ஆலியங் கதிர்கொள வதிர்ந்த றைந்தவே.       1763

    வாழ்கநம் மன்னவன் வாழ்க வையகம்
    ஆழ்கநம் மரும்பகை யலர்க நல்லறம்
    வீழ்கதண் புனல்பயிர் விளைக மாநிலம்
    தாழ்கமற் றருந்துயர் சாற்றக் கேண்மினே.       1764

    புள்ளணி வார்பொழிற் பொன்செய் மாநகர்
    உள்ளணி பரப்புமி னுயர்மின் றோரணம்
    வெள்ளணி விரும்புமின் விருந்து போற்றுமின்
    கள்ளணி மலரொடு கலங்கள் பெய்ம்மினே.       1765

    இன்றைநா ளுள்ளுறுத் தீரைஞ் ஞாள்களும்
    மன்றலஞ் சயமரம் வரைந்த தாதலால்
    ஒன்றிவா ழரசரோ டுலக மீண்டுக
    வென்றுதா னிடிமுர சறைந்த தென்பவே.       1766

    கொடிபடு நெடுநகர்க் கோயில் வீதிவாய்
    இடிபடு மழைமுகி லென்ன வின்னணம்
    கடிபடு முரசுகண் ணதிர்ந்த காரென
    மடிபடு மாடவாய் மயில்கண் மான்றவே.       1767

    முர்சொடு வரிவளை மூரித் தானையோ
    டரசரு மரசரல் லாரு மாயிடைத்
    திரைசெறி கனைகடல் சென்று தேர்த்தனெப்
    புரைசெறி புரிசையின் புறணி முற்றினார்.       1768

    வெண்மலைச் சென்னிமேல் விஞ்சை வேந்தரும்
    கண்மலைத் திழிதருங் கடலந் தானையர்
    விண்மலைத் திழிதரும் விளங்கு சோதியர்
    எண்மலைச் சிலம்பிடை யிறைகொண் டீண்டினார்.       1769

    அவ்வரை யரைசர்கோ னருக்கன் றன்மகன்
    செவ்வரை யனையதோட் செல்வன் றன்னொடும்
    மைவரை நெடுங்கணம் மடந்தை தன்னொடும்
    இவ்வரை யரைசெதிர் கொள்ள வெய்தினான்.       1770

    பொன்னகர்ப் புறத்ததோர் புரிசை வார்பொழி்ல்
    தன்னகத் தியற்றிய தயங்கு பொன்னகர்
    மன்னர்கட் கிறைவன்வந் திருப்ப மண்மிசை
    இந்நகர்க் கிறைவனு மெதிர்கொண் டெய்தினான்.       1771

    கண்சுட ரிலங்குவேற் காள வண்ணனும்
    வெண்சுட ரொளியவன் றானும் விஞ்சையர்
    தண்சுடர்த் தமனிய வண்ணன் றன்னொடும்
    மண்சுட ருறுப்பதோர் வகைய ராயினார்.       1772

    இருபுடைக் கிளைகளும் விரவி யின்னணம்
    தெருவுடைத் திசைமுகந் தெளிப்பத் தேர்த்தரோ
    மருவுடை மகரநீர் வளாகம் வானவர்
    உருவுடை யுலகம்வந் திழிந்த தொத்ததே.       1773

    சிகைமணி யழுத்திய செம்பொற் சென்னிய
    நகைமணிக் கோபுர வாயி னான்கொடு
    வகைமணித் தலத்ததோர் மதலை மாளிகை
    தொகைமணித் தொழில்பல தொடரத் தோற்றினார்.       1774

    பளிங்கியல் பலகையும் பவழத் தூண்களும்
    விளங்குபொற் கலங்களும் வெள்ளி வேயுளும்
    இளங்கதிர் முத்தமு மியற்றி யின்னணம்
    வளங்கவின் றனையதம் மதலை மாடமே.       1775

    மீன்முக விசும்பிடை விரிந்த வெண்ணிலாப்
    பான்முகந் தொகுப்பன பனிக்கும் வேதிகை
    மேன்முகந் திருத்திய வெள்ளி முன்றிலான்
    நான்முக மருங்கினு நகுவ தொக்குமே.       1776

    அங்கதற் கைந்துகோ லளவி னாடரங்
    கிங்குவந் திறுத்தன வென்னு மீட்டன
    செங்கதிர்ப் பவழக்கா னிரைத்த செம்பொனான்
    மங்கலச் செய்கைய மஞ்சு சூழ்ந்தவே.       1777

    விளிம்பிடை மரகத வேதி கட்டிய
    வளம்பெறு மணிநகை மஞ்ச மீமிசை
    இளம்பெருஞ் சுரியுளை யரிநின் றேந்திய
    உளம்பொலி யாசன முயர விட்டவே.       1778

    மண்டங்கு மகரவா சனத்து மென்மயில்
    கண்டங்கள் புரைவன கனபொற் கொட்டைய
    அண்டங்கொ ளன்னமென் றூவி யார்த்தன
    எண்டங்கு மணியன வியற்றப் பட்டவே.       1779

    வாரித்தண் கதிர்மணி முத்த மாலையும்
    பாரித்த பளிங்கெழிற் பழித்த கோவையும்
    பூரித்த பொழிகதிர்ப் பொன்செய் தாமமும்
    வேரித்தண் பிணையலு மிடையப் பட்டவே.       1780

    மஞ்சுடை மாளிகை மிடைம ணித்தலம்
    பஞ்சுடைத் தவிசுகள் பரப்பிப் பூவடுத்
    தஞ்சுட ரிடுபுகை யடர்ந்தெ ழுந்தரோ
    வெஞ்சுடர்க் கடவுளை விருந்து செய்தவே.       1781

    சயமர மாளிகை யியற்றிச் சந்தனப்
    பயமர நிழலொளி மஞ்சம் பாவின
    வியமரத் தொழிலவர் வினைமுடிந் ததென்
    றியமரத் தொழுதிக ளெழுந்தி சைத்தவே.       1782

    மங்கல நாழிகை வந்த மன்னர்கள்
    இங்குவந் தேறுக வென்று சாற்றலும்
    சங்கொலி பரந்தன தயங்கு மாமுர(சு)
    சங்கொலித் தெழுந்தன வரசர் தோன்றினார்.       1783

    வேற்றரசர்
    வேறு

    எரிமணி வயிரப் பூணா
            னிக்குவா குலத்துட் டோன்றி
    அருமணிப் புரிசை வேலி்
            யயோத்தியாள் கின்ற வேந்தன்
    திருமணி நிழற்றுஞ் செம்பொன்
            னெடுமுடி திருவில் வீசப்
    புரிமணி யாரந் தாழப்
            பொன்னகர் பொலியப் புக்கான்.       1784

    குழவியம் பருகி போல்வான்
            குருகுலங் குளிரத் தோன்றி்
    அழுவநீர்ப் புரிசை வேலி
            யத்தின புரம தாள்வான்
    முழவங்க ளிரண்டு செம்பொன்
            முளைக்கதிர்க் கனக வல்லி
    தழுவிய தனைய தோளான்
            றன்னொளி தயங்கச் சார்ந்தான்.       1785

    நண்டுபொன் கிளைக்கு நாட
            னாதவன் குலத்துட் டோன்றிக்
    குண்டல புரம தாளுங்
            குங்குமக் குவவுத் தோளான்
    கண்டிகை தவழப் பூண்டு
            கதிர்மணி முடியின் மேலால்
    வண்டுகள் பரவச் சென்று
            வளநகர் மருளப் புக்கான்.       1786

    ஊழிகாண் பரிய தோன்ற லுக்கிர குலத்து வேந்தன்
    வாழைதாழ் சோலை வேலி வாரண வாசி மன்னன்
    சூழிமா லியானை யுந்திச் சுடர்குழை திருவில் வீச
    ஏழையர் கவரி வீச வெழினக ரிசைப்பச் சென்றான்.       1787

    சொரிமது கலந்த சோலைச் சூரிய புரம தாளும்
    அரிகுலத் தரசர் கோமா னவிர்மணி யாரந் தாங்கிப்
    பொருமலைப் பகடு நுந்திப் புயலலைத் திருண்டு வீழ்ந்த
    புரிமலர்க் குஞ்சி தாழப் பொன்னகர் புகழப் புக்கான்.       1788

    சொன்மலர்ந் துலக மேத்துஞ்
            சுடரவன் மருகன் றோலா
    மன்மலர்ந் திலங்கு செய்கை
            வளங்கெழு மதுரை யாள்வான்
    தென்மலை வளர்ந்த தெய்வச்
            சந்தனந் திளைத்த மார்பன்
    மின்மல ராரந் தாங்கி
            வியனகர் விரும்பப் புக்கான்.       1789

    ஐம்பெருங் குலத்த ராய வரசரும் பிறரு மாங்கண்
    கம்பெறி களிநல் யானைக் கடற்படை புறத்த தாக
    வம்பெறி வளாகஞ் செம்பொன் மஞ்சங்கண் மலிர வேறி
    வெம்பரி விளங்குந் தானை வேலவர் விளங்கு கின்றார்.       1790

    திருந்திய திலதக் கண்ணித்
            தேவிளங் குமரன் போலும்
    அருந்தகை யரச நம்பி
            யடுதிற லமித தேசன்
    பரந்தபின் பசலை கூரப்
            பனிக்கதிர் வருவ தேபோல்
    விரிந்தொளி சுடர வேந்தர்
            விளங்கொளி மழுங்கச் சென்றான்.       1791

    மழைபுரை மதத்த தாய
            மழகளி யானை தன்மேல்
    வழைவளர் சோலை சேர்ந்த
            மணிவண்டு மறிவ வேபோல்
    எழுதெழி லழகன் றன்மே
            லிளையவர் கருங்கண் வீழ்ந்து
    விழவயர் நகரின் வந்த
            வேந்தரை விட்ட வன்றே.       1792

    வரைசெறிந் தனைய செம்பொன்
            மஞ்சங்கண் மலிரத் தோன்றி
    அரைசர்க ளிருந்த போழ்தி
            னாழியந் தடக்கை வேந்தன்
    விரைசெறி குழலங் கூந்தன்
            மெல்லியல் வருக வென்றான்
    முரைசொலி கலந்த சங்கு
            வயிரொடு முரன்ற வன்றே.       1793

    இளவரசர் வருகை
    வேறு

    மன்னவன் மடந்தை மணிமாட நிலையுள்ளால்
    பொன்னமளி மேலடுத்த பொங்கணையின் மேலாட் (கு)
    கன்னமனை யாரடிக ளாரருளி தென்றார்
    இன்னகைய பூந்தவிசி னின்றினி திழிந்தாள்.       1794

    வஞ்சியனை யார்மணிதொ டர்ந்தசுடர் ஞாணால்
    அஞ்சில விருங்குழல சைத்தயில் பிடித்தார்
    கஞ்சுக முகத்தமுலை கச்சுமிக வீக்கி
    மஞ்சிவரு மாமயில னார்மருங்கு சூழ்ந்தார்.       1795

    ஆயமொடு தாயரிடை யாளரசர் தங்கள்
    ணேயமிகு நெஞ்சினிடை யாளுமட வாளாய்ப்
    பாயமதி தாரகையொ டோரைபட வேகித்
    தூயமணி நீர் நிலைக டோறிவர்வ தொத்தாள்.       1796

    வண்டுவழி செல்லவய மன்னர்மதி செல்லக்
    கண்டவர்கள் கண்கள்களி கொண்டருகு செல்ல
    எண்டிசையு மேத்தொலியொ டின்னொலிகள் செல்ல
    விண்டமல ரல்லிமிசை மெல்லநனி சென்றாள்.       1797

    அம்மெலடி தாமரைச ராவியொடு நோவச்
    செம்மெலிதழ் வாயொடவர் சிந்தனை துடிப்ப
    வெம்முலைக ளோடவர்கள் காதன்மிக வீங்க
    மைம்மலர் நிகர்க்குமணி மாளிகை யடைந்தாள்.       1798

    பொன்னேநன் மணிக்கொம்பே பூமிமே
            லாரணங்கே போற்றி போற்றி
    அன்னேயெம் மரசர்குலத் தவிர்விளக்கே
            யாரமிர்தே போற்றி யுன்றன்
    மின்னேர்நுண் ணிடைநோமான் மென்மலர்மேன்
            மென்மெலவே யொதுங்கா யென்று
    மன்னேர்சே யயினெடுங்கண் மங்கைமார்
            போற்றிசைப்ப மாடம் புக்காள்.       1799

    அணிதயங்கு சோபான வீதிவா
            யணங்கனையா ரடியீ டேத்த
    மணிதயங்கு மாளிகைமேல் வாணிலா
            வளர்முன்றின் மருங்கு சூழ்ந்து
    கணிதயங்கு வினைநவின்ற கண்டத்
            திரைமகளிர் கையி னீக்கித்
    துணிதயங்கு வேலரசர் மனந்துளங்கச்
            சுடர்ந்திலங்கித் தோன்றி னாளே.       1800

    வடியரத்த மிடைவழித்துக் கருங்கண்ணுஞ்
            செம்பொன்னால் வளைத்த சூரல்
    கொடியரத்த மெல்விரலாற் கொண்டரசர்
            குலவரவு கொழிக்கு நீராள்
    முடியரக்குப் பூங்கண்ணி மூரித்தேர்
            வேந்தர்தமை முறையாக் காட்டிப்
    படியரக்கும் பாவைக்குப் பைபையவே
            யினையமொழி பகரா நின்றான்.       1801

    இக்குவா குலத்தரசன்

    அங்கார வலர்கதிர மணிசுடரு
            மரியணைமே லமர்ந்து தோன்றித்
    தங்கார மணிநிழற்றுந் தடவரையா
            ரகலத்தான் றகர நாறுங்
    கொங்கார வார்குழலார் குவிமுலைகண்
            முகம்பொருத குவவுத் தோளான்
    இங்காரு நிகரில்லா விக்குவா
            குலத்திறைவ னிருந்த கோவே.       1802

    ஆதியா னருளாழி தாங்கினா
            னாயிரச்செங் கதிரோ னாணுஞ்
    சோதியான் சுரர்வணங்கு திருவடியான்
            சுடுநீறா நினையப் பட்ட
    காதியா னருளியபொற் கதிர்கொள்முடி
            கவித்தாண்டார் மருகன் கண்டாய்
    ஓதியா மொழியினிவ னுறு வலிக்கு
            நிகராவா ருளரோ வேந்தர்.       1803

    ஆழித்தே ரொன்றேறி யலைகடலி
            னடுவோட்டி யமரர் தந்த
    மாழைத்தேர் மருங்கறா மணிமுடியு
            மணிகலமுந் திறையா வவ்வி
    ஊழித்தே ரரசிறைஞ்ச வுலகெலா
            மொருகுடைக்கீ ழுறங்கக் காத்த
    பாழித்தோட் பரதன்பி னிவனிவனா
            னிலமடந்தை பரிவு தீர்ந்தாள்.       1804

    இன்னவன துயர்குலமு மிளமையுமிங்
            கிவன்வடிவுஞ் சொல்ல வேண்டா
    மன்னவன்றன் மடமகளே மற்றிவனுக்
            கிடமருங்கின் மஞ்சஞ் சேர்ந்து
    பொன்னவிரு மணியணைமேற் பொழிகதிரீண்
            டெழுந்ததுபோற் பொலிந்து தோன்றுங்
    கொன்னவின்ற வேற்குமரன் குருகுலத்தார்
            கோனிவனே கூறக் கேளாய்.       1805

    அருளாழி யறவரச னருளினா
            லகன்ஞாலம் பரிவு தீர்த்தான்
    உருளாழி யுடையரிவ னடைவின்மிக்க
            கடைப்பணிகொண் டுழையோர் போல
    இருளாழி நிழற்று ளும்பு மெரிபொன்மணி்
            நெடுமுடிசாய்த் திறைஞ்சப் பட்டான்
    மருளாழுங் கழிவனப்பின் மற்றிவனே
            குலமுதற்கண் வயவோன் கண்டாய்.       1806

    சூழிருங் கடற்றானை யுடன்றுளங்கச்
            சுரர்கொணர்ந்து சொரிந்த மாரித்
    தாழிரும்பல் புயறாங்கிச் சரகூடஞ்
            சந்தித்த தகையோ னன்னோன்
    யாழிரங்கு மணிவண்டு மிலங்கிழையார்
            கருங்கண்ணு மருங்கு நீங்கா
    வீழிரும்பொற் சுடரார வரைமார்ப
            னிவன்சீர்யான் விளம்ப வேண்டா.       1807

    இங்கிவன திடமருங்கி னெழில்றயங்கு
            மணிமஞ்ச மிலங்க வேறிச்
    சங்கிவர்வெண் சாமரையுந் தாழ்குழையின்
            நீள்சுடருந் தயங்கி வீசக்
    குங்குமஞ்சேர் கொழும்பொடியிற் புரண்டுதன்னி
            னிறஞ்சிவந்த குளிர்முத் தாரம்
    செங்கதிரோ னொளிபருகுஞ் செவ்வரைநே
            ரகலத்தான் றிறமுங் கேளாய்.       1808

    தகரநா றிருஞ்சோலைச் சயம்பூறான்
            றுறவரசாய் நின்ற காலை
    மகரயாழ் நரம்பியக்கி வரங்கொண்டு
            வடமலைமே லுலக மாண்ட
    சிகரமா லியானையான் வழிமருகன்
            செந்தாமந் தவழ்ந்து தீந்தேன்
    பகருமா மணிமுடியா னமரருமே
            பாராட்டும் படியன்பாவாய்.       1809

    சக்கரர்தாம் பிறந்துவரித் தரங்கநீர்
            வளாகமெல்லாந் தங்கீழ்க் கொண்ட
    உக்கிரமெய்க் குலத்தரச னொளிவேலிவ்
            விளையவன துருவே கண்டாய்
    அக்கிரநற் பெருந்தேவி மடமகளே
            யரசணங்கு மணங்கே யின்னும்
    விக்கிரமக் கடற்றானை விறல்வேந்த
            ரிவர்சிலரை விளம்பக் கேளாய்.       1810

    குண்டலபுரத்தார் கோமான்

    ஏலஞ்செய் பைங்கொடியி னிணர்ததைந்து
            பொன்னறைமேற் கொழுந்தீன் றேறிக்
    கோலஞ்சேர் வரைவேலிக் குண்டலத்தார்
            கோமானிக் கொலைவேற் காளை
    ஞாலங்க ளுடன் பரவு நாதவன்றன்
            குலவிளக்கு நகையே னம்பி
    போலிங்க ணரசில்லை பொன்னார
            வரைமார்பன் பொலிவுங் காணாய்.       1811

    சூரியத்தார் கோமான்

    சொரிமலர்த்தண் மலரணிந்த சோலைசூழ்
            சூரியத்தார் கோமான் றோலா
    அரிகுலத்தார் போரேறிவ் வரியேறு
            போலிருந்த வரச காளை
    வரிமலர்த்து மணிவண்டு புடைவருடு
            மாலையார் மகளிர் வட்கண்
    புரிமலர்த்தண் வரையகலம் புராதார்
            புண்ணியங்கள் புணரா தாரே.       1812

    பாண்டியன்

    வேலைவாய்க் கருங்கடலுள் வெண்சங்கு
            மணிமுத்தும் விரவி யெங்கும்
    மாலைவாய்க் கரும்பறா வகன்பண்ணை
            தழீஇயருகே யருவி தூங்கும்
    சோலைவாய் மலரணிந்த சூழ்குழலா
            ரியாழிசையாற் றுளைக்கை வேழம்
    மாலைவாய் நின்றுறங்கும் மதுரைசூழ்
            வளநாடன் வடிவுங் காணாய்.       1813

    கண்சுடர்கள் விடவனன்று
            கார்மேக மெனவதிருங் களிநல்யானை
    விண்சுடரு நெடுங்குடைக்கீழ் விறல்வேந்தன்
            றிறமிதனை விளம்பக் கேளாய்
    தண்சுடரோன் வழிமருகன் றென்மலைமேற்
            சந்தனமுஞ் செம்பொன் னாரத்
    தொண்சுடரும் விரவியநல் வரைமார்ப
            னுலகிற்கோர் திலதங் கண்டாய்.       1814

    கரபுரத்தரசன்

    மழைக்கரும்புங் கொடிமுல்லை மருங்கேற
            வரம்பணைந்து தடாவி நீண்ட
    கழைக்கரும்பு கண்ணீனுங் கரபுரத்தார்
            கோமானிக் கதிர்வேற் காளை
    இழைக்கரும்பு மிளமுலையா யெரிகதிரோன்
            வழிமருக னிவனீரீர்ந்தண்
    தழைக்கரும்பின் முருகுயிர்க்குந் தாரகலஞ்
            சார்ந்தவர்க டவஞ்செய் தாரே.       1815

    உறந்தைக்கோன்

    வண்டறையு மரவிந்த வனத்துழாய்
            மதர்த்தெழுந்த மழலை யன்னம்
    உண்டுறைமுன் விளையாடி யிளையவர்க
            ணடைபயிலு முறந்தைக் கோமான்
    கொண்டறையு மிடிமுரசுங் கொடிமதிலுங்
            குளிர்புனலும் பொறியும் பூவும்
    ஒண்டுறையு மும்மூன்று முடையகோ
            வேயிவன தெழிலுங் காணாய்.       1816

    ஏமாங்கத நாடன்

    தழலவாந் தாமரையி னீரிதழுஞ்
            செங்குவளைத் தாதும் வாரி
    அழலவாஞ் செந்தோகை யலங்குபொலங்
            கதிர்ச்செந்நெ லலைத்த வாடை
    பழனவாய்ப் பைங்கரும்பின் வெண்போது
            பவழக்காற் செம்பொன் மாடத்
    தெழினிவாய்க் கொணர்ந் தசைக்கு
            மியலேமாங் கதநாட னிவனேகண்டாய்.       1817

    மகதைகோ

    காந்தளங்கட் கமழ்குலையாற் களிவண்டு
            களிறகற்றுங் கலிங்க நாடன்
    பூந்தளவங் கமழ்சாரற் பொன்னறைசூழ்
            தண்சிலம்ப னன்றே பொன்னே
    ஏந்திளஞ்சிங் காதனத்தி னினிதிருந்த
            விளவரச னிப்பா லானோன்
    மாந்தளிர்கண் மருங்கணிந்த மணியருவிக்
            குன்றுடைய மகதைக் கோவே.       1818

    அங்கநா டுடையவர்கோ னவ்விருந்தா
            னிவ்விருந்தா னவந்திக் கோமான்
    கொங்குவார் பொழிலணிந்த கோசலத்தார்
            கோமானிக் குவளை வண்ணன்
    கங்கைதா னிருகரையுங் கதிர்மணியும்
            பசும்பொன்னுங் கலந்து சிந்தி
    வங்கவாய்த் திரையலைக்கும் வளநாட
            னிவன்போலும் வைவேற் காளை.       1819

    வஞ்சியின்மெல் லிடையவளை வானிலா
            வளர்முன்றில் வலமாய்ச் சூழ்ந்து
    பஞ்சியின்மெல் லடிநோவ நடைபயிற்றிப்
            படைவேந்தர் பலரைக் காட்டி
    மஞ்சிவரு மாளிகையின் வடமருங்கின்
            மணிமஞ்ச மலிரத் தோன்றும்
    விஞ்சையர்த முலகாளும் விறல்வேந்தர்
            குழாங்காட்டி விரித்துச் சொன்னாள்.       1820

    வித்தியாதர அரசர்

    மாடிலங்கு மழைதவழ்ந்து மணியருவி
            பொன்னறைமேல் வரன்றி வம் பூந்
    தோடிலங்கு கற்பகமுஞ் சுரபுன்னை
            வனங்களுமே துதைந்து வெள்ளிக்
    கோடிலங்கு நெடுவரைமேற் குடைவேந்த
            ரிவர்குணங்கள் கூறக் கேட்பின்
    ஏடிலங்கு பூங்கோதா யிமையவரின்
            வேறாய திமைப்பே கண்டாய்.       1821

    அங்கவவர் வளநகருங் குலவரவு
            மவையவற்றோடறையும் போழ்தின்
    வெங்கதிரோன் பெயரவனுக் கிளவரசிவ்
            வேந்தனெனொ முன்னந் தானே
    கொங்கிவருங் கருங்குழலி பெருந் தடங்கண்
            இருங்குவளை பிணையல் போலச்
    செங்கதிரோ னெனவிருந்த திருந்துவே
            லிளையவன்மேற் றிளைத்த வன்றே.       1822

    வேறு

    கடாமிகு களிநல் யானைக்
            கவுளிழி கான வீதி
    விடாமிகை சுழன்று வீழும்
            விரைகவர் மணிவண் டேபோல்
    படாமுகக் களிற்றி னான்றன்
            பவழக்குன் றனைய மார்பில்
    தடாமுகை யலங்க றன்மேற்
            றையல்கண் சரிந்த வன்றே.       1823

    ஏட்டினார் குழலி னாளுக்
            குழையவ ளின்ன னென்று
    காட்டினா ளாவ தல்லாற்
            காரிகை தன்னின் முன்னம்
    ஓட்டினா ணிறையுங் கண்ணு
            முள்ளமுங் களித்த தங்கே
    பாட்டினா லென்னை போக
            பான்மையே பலித்த தன்றே.       1824

    விண்டழி நிறைய ளாகி
            மெல்லவே நடுங்கி நாணி
    வண்டிவர் மாலை நோக்கி
            மாதராள் மறைத லோடும்
    கொண்டதோர் குமரன் போலக்
            குங்குமக் குவவுத் தோண்மேல்
    ஒண்டொடி மாலை வீழ்த்தா
            ளுலகொலி படைத்த தன்றே.       1825

    ஆர்த்ததங் கரவத் தானை
            யாலித்த முரசுஞ் சங்கும்
    தேர்த்தன மலருஞ் செம்பொற்
            சுண்ணமுந் திசைக ளெல்லாம்
    போர்த்தன பதாகை பொங்கிப்
            பூமியங் கிழவ ருள்ளம்
    வேர்த்தன வேர்த்துத் தாமே
            வெய்துயிர்த் தொழிந்த வன்றே.       1826

    புனைவுதா னிகந்த கோதைப்
            பொன்னனாள் பூமி பாலர்
    நினைவுதா னிகந்து காளை
            வடிவெனு நிகளஞ் சேர
    வினைகடாம் விளையு மாறியாம்
            வேண்டிய வாறு வாரா
    வினையதால் வினையின் றன்மை
            யெனநினைந் தாறி னாரே.       1827

    நெய்த்தலைப் பாலுக் காங்கு
            நெடுவரை யுலகின் வந்த
    மைத்துன குமரன் றன்னை
            மடமொழி மாலை சூட்ட
    இத்தலை யென்ன செய்தா
            னெரிகதி ராழி வேந்தன்
    கைத்தலை வேலி னாற்குக்
            கடிவினை முடிவித் தானே.       1828

    விண்ணகம் புகழு நீர்மை
            விழுக்கலம் பரப்பி யார
    மண்ணக வளாகத் துள்ள
            மன்னரான் மண்ணு நீர்தந்
    தெண்ணகன் புகழி னாரை
            யெழிலொளி துளும்ப வாட்டிப்
    புண்ணகங் கமழும் வேலான்
            பொன்மழை பொழிவித் தானே.       1829

    தருமணன் மணிமுத் தாகத்
            தண்டுல மியற்றிக் கான்யாற்
    றருமணற் றருப்பை சூழ்ந்தாங்
            கதன்மிசை பரிதி பாய்த்திப்
    பெருமண மன்னற் கேற்ற
            சமிதையாற் பெருக்கப் பட்ட
    திருமணி யுருவிற் செந்தீச்
            செல்வத்திற் சிறந்த தன்றே.       1830

    தங்கழல் வேள்வி முற்றித்
            தையலக் காளை யோடும்
    பொங்கழல் வலஞ்செய் போழ்திற்
            குழைமுகம் பொறித்த தெண்ணீர்
    பைங்கழ லமரர் பண்டு
            படைத்தநீ ரமிழ்தப் புள்ளி
    அங்கெழு மதியந் தன்மே
            லரும்பியாங் கணிந்த வன்றே.       1831

    மன்னவ குமர னாங்கு
            மடந்தையைப் புணர்ந்து மாடத்
    தின்னகி லமளி மேலா
            லிளமுலைத் தடத்து மூழ்க
    அன்னவன் றாதை செங்கோ
            லாணைவே லருக்க கீர்த்தி
    தன்னமர் மடந்தைக் கேற்ற
            சயமர மறைவித் தானே.       1832

    சயமர மறைந்த நன்னாட்
            டமனிய மஞ்சம் பாவி
    இயமரந் துவைப்ப வேறி
            யிகன்மன்ன ரிருந்த போழ்தில்
    பயமலை மன்னன் பாவைக்
            கவரவர் பண்பு கூறிக்
    கயமலர் நெடுங்க ணாளோர்
            காரிகை காட்டி னாளே.       1833

    வரிகழன் மன்ன ரென்னு
            மணிநெடுங் குன்ற மெல்லாம்
    சுரிகுழன் மடந்தை யென்னுந்
            தோகையம் மஞ்ஞை நோக்கி
    எரிகதி ராழி வேந்தன்
            றிருமக னென்னுஞ் செம்பொன்
    விரிகதிர் விலங்கற் றிண்டோட்
            குவட்டினை விரும்பிற் றன்றே.       1834

    மாதராள் சுதாரை வாட்கண்
            மலரொடு மணிவண் டார்க்கும்
    போதுலாம் பிணையல் வீரன்
            பொன்வரை யகலஞ் சூழ
    ஏதிலா மன்னர் வாட
            விருபுடைக் கிளைஞ ரெல்லாம்
    காதலாற் களித்துச் செல்வக்
            கடிவினை முடிவித் தாரே.       1835

    கழல்வலம் புரிந்த நோன்றாட்
            கடல்வண்ணன் புதல்வன் காமர்
    குழல்வலம் புரிந்த கோதை
            குழைமுகம் வியர்ப்ப வேட்டான்
    அழல்வலம் புரிந்து சூழ்ந்தாங்
            கத்தொழின் முடித்த பின்னைத்
    தழல்வலம் புரிந்த வேலான்
            றடமுலை வாரி சார்ந்தான்.       1836

    மாதரஞ் சாய லாளு
            மணிவண்ணன் சிறுவன் றானும்
    ஓதநீ ரின்ப மென்னு
            மொலிகடற் றரங்க மூழ்கச்
    சோதியம் பெயரி னாளுஞ்
            சுடரவன் புதல்வன் றானுங்
    காதலிற் களித்துத் தங்கள்
            கனவரை யுலகஞ் சார்ந்தார்.       1837

    வேறு

    எரிவிசயங் கோவேந்தி மன்னரென்னும்
    அரிவிசயங் கெடநின்ற வாணை வேலான்
    திருவிசயன் றிருவன்ன செல்வி யோடும்
    மருவிசயங் கெழுகோயின் மலர்ந்து புக்கான்.       1838

    இனையனவா மிகுசெல்வ மிங்கு மாக்கிப்
    புனைமலர்வா னவர்போகம் புணர்க்கும் பெற்றி.
    வினையதனின் விளைவின்ன தென்று நாளும்
    நினைமின்மோ நெறிநின்று நீர்மை மிக்கீர்.       1839
    -------------

    11.துறவுச் சருக்கம் (1840- 2068)


    மன்னிய புகழி னான்றன்
            மகன்வழிச் சிறுவர் வாயுள்
    இன்னகை மழலை கேட்டாங்
            கினிதினி னிருந்த காலைப்
    மன்னுமெய்த் துறவிற் புக்கான்
            பயாபதி மன்னர் மன்னன்
    அன்னதன் பகுதி தன்னை
            யறியுமா பகர லுற்றேன்.       1840

    திவிட்டனும் அவன் மக்களும் பயாபதியை அணுகுதல்

    திருமகி ழலங்கன் மார்பிற்
            செங்கணான் வணங்கச் செல்வப்
    பெருமகிழ் வெய்தி வேந்தன்
            பிரசாபதி பெரிய வாட்கண்
    உரிமையோ டிருந்த போழ்தி
            னொலிகல னொலிப்ப வோடி
    அருமைகொ டிகிரி யாள்வான்
            சிறுவர்சென்ற ணுகி னாரே.       1841

    தவத்தின் பயனைப் பயாபதி உணர்தல்

    ஆங்கவ ரணைந்த போழ்தி
            னமிழ்துகொப் புளித்த போலும்
    தேங்கமழ் பவழச் செவ்வாய்
            முறுவனீர் பருகித் தேங்கி
    ஈங்கிவை யனைய தோற்றி்
            யின்பமே பருக நின்ற
    வீங்கிய தவத்திற் கின்னும்
            வித்திடற் பால தென்றான்.       1842

    நல்வினை

    அலகுடன் விளங்கு மம்பொற்
            குடைநிழ லரசர் சூழ
    உலகுடன் வணங்க வோடை
            யுயர்களிற் றெருத்த மேலால்
    பலகுடை பணியச் செல்லும்
            பண்பிது நமக்குத் தந்த
    நலனுடைத் தளிய நங்க
            ணல்வினைத் தெய்வ மன்றே.       1843

    மேலும் அவன் எண்ணுதல்

    தன்னையோ ரரச னாக்கித்
            தரங்கநீர் வளாக மாள்வித்
    தின்னுயி ராகிச் செல்லு
            நல்வினை யென்னு மின்ன
    முன்னுப காரி தன்னை
            முதல்கெட முயலுங் கீழ்மை
    நன்னரின் மாந்த ரன்றே
            நரகங்கட் கரச ராவார்.       1844

    சென்றநாள் பெயரு மேனுஞ்
            செல்வமுஞ் செருக்கு மாக்கி
    நின்றநா ணிலவு மேனு
            நெறிநின்று வருந்த வேண்டா
    இன்றுபோல் வாழ்து மன்றே
            யிப்படித் தன்றி யாங்கள்
    பொன்றுநாள் வருவ தாயின்
            வாழ்க்கையோர் பொருள தன்றே.       1845

    வாழ்வு நிலையற்றது

    எரிபுரை யெழில தாய
            விளந்தளி ரிரண்டு நாளின்
    மரகத வுருவ மெய்தி
            மற்றது பசலை கொண்டு
    சருகிலை யாகி வீழ்ந்த
            கரிந்துமண் ணாதல் கண்டும்
    வெருவிலர் வாழ்து மென்பார்
            வெளிற்றினை விலக்க லாமோ.       1846

    தவம் சிறந்தது எனத் துணிதல்

    பிறந்தனர் பிறந்து சாலப்
            பெருகினர் பெருகிப் பின்னை
    இறந்தன ரென்ப தல்லா
            லியாவரு மின்று காறு
    மறைந்துயிர் வாழா நின்றா
            ரில்லையால் வாழி நெஞ்சே
    சிறந்தது தவத்தின் மிக்க
            தின்மையே சிந்தி கண்டாய்.       1847

    உடலின் இழிவு

    பிறந்துநாம் புறஞ்செய் கின்ற
            பேதையிவ் வுடலந் தானும்
    இறந்தநாள் போல்வ தின்றா
            யிற்றையின் னாளை வேறாய்ப்
    பறைந்துநாம் பற்றப் பற்றப்
            பற்றுவிட் டகலு மாகிற்
    சிறந்தனர் பிறர்க கள்யாரே
            சிந்தைநீ சிந்தி யென்றான்.       1848

    தொகைமல ரலங்கல் சூடித்
            தூநறுஞ் கண்ண மப்பிப்
    புகைநனி கமழ வூட்டிப்
            புறஞ்செயப் பட்ட மேனி
    சிகையினோர் சிறுமுட் டீண்டச்
            சிதைந்தழுக் கொழுகு மாயி்
    நகைபெரி துடைத்து நாணா
            மிதனைநா மகிழ்த னெஞ்சே.       1849

    ஒழுகிய முடையு நீரு
            முதலகை யிகப்ப வூறும்
    அழுகலிவ் வள்ளல் யாக்கை
            யகம்புற மாயிற் றாயில்
    கழுகொடு கவருங் காக்கை
            கைத்தடி கொண்டு காத்தும்
    அழகுள சுழலு மன்னோ
            வாயிரச் சாதி மாதோ.       1850

    வல்வினை விளைத்த மாந்தர்
            மற்றதன் வித்து மாட்டிப்
    புல்வினை கான மண்டிப்
            புலியின்வாய்ப் பட்ட தேபோல்
    நல்வினை யினிதி னூட்டு
            நல்வினை முதல்கண் மாறி
    இல்வினை யின்பம் வெஃகி
            யிறுபவே யறிவி லாதார்.       1851

    பயாபதி தன் அமைச்சருடன் ஆராய்தல்

    இன்னன பலவுஞ் சிந்தித்
            திருந்தது மிகையென் றெண்ணி
    மன்னவ னுழையர் தம்மான்
            மந்திரத் தவரைக் கூவிப்
    பொன்னவிர் பவழத் திண்காற்
            புரிமணிக் கூட மெய்திக்
    தன்னம ரமைச்ச ரோடு
            தானமர்ந் திருந்து சொன்னான்.       1852

    நிலைத்த செல்வத்துக்கு வரும் ஊனங்கள் யாவை? என்று அவன் வினாதல்

    மலைபயில் களிநல் யானை
            மன்னரால் வவ்வ லின்றாய்க்
    கலைபயில் மகளிர் கண்போற்
            கள்வர்கைப் படாது நாளும்
    நிலையின செல்வக் கூனம்
            வருவன வுரைமி னென்றான்
    இலைபயின் மகரப் பைம்பூ
            ணெரிமணிக் கடகக் கையான்.       1853

    அமைச்சர் இறுத்த விடை

    ஆள்வினை மாட்சி யென்னு
            மிரண்டினு மரசு காத்துத்
    தோள்வினைக் களவு காவ
            லுள்வழித் துன்னல் செல்லா
    வாள்வினைத் தடக்கை வேந்தே
            வருவது மற்று முண்டோ
    கோள்வினை பயின்ற கூற்றங்
            குறுகல தாயி னென்றார்.       1854

    கூற்றத்தார் கொள்ளற்பாலன யாவை என்ற வினாவும் அதற்கு விடையும்

    கோள்வினை பயின்ற கூற்ற
            வரசனாற் கொள்ளற் பால
    கேள்வினை பயின்ற நூலிற்
            கிளர்ந்துநீ ருரைமி னென்ன
    வாள்வினை புரிந்த தோளான்
            மனத்ததை யுணர்ந்து மாதோ
    நாள்வினை புரிந்து நங்க
            ளுயிர்நிறை கொள்ளு மென்றார்.       1855

    கூற்றுவனை வெல்லும் உபாயம் யாது? என்று வினவல்

    சந்தினாற் றவிர்க்க லாமோ சார்பினா லொழிக்க லாமோ
    பந்தியா முன்னந் தாமே பகைத்திருந் துய்ய லாமோ
    வெந்திறற் காலன் றன்னை மேற்சென்று வெல்ல லாமோ
    உய்ந்துயிர் யாங்கள் வாழு முபாயநீ ருரைமி னென்றான்.       1856

    அமைச்சர் விடை

    பீழைமை பலவுஞ் செய்து பிணிப்படை பரப்பி வந்து
    வாழுயிர் வாரி வவ்வி வலிந்துயிர் வாங்கி யுண்ணுங்
    கூழைமை பயின்ற கூற்ற வரசனைக் குதிக்குஞ் சூழ்ச்சி
    பாழியந் தடக்கை வேந்தே பயின்றிலம் யாங்களென்றார்.       1857

    அரசன் கூறுதல்

    ஆயினக் காலன் பாணி யாம்பிற வரச செல்வம்
    மேயினங் களித்தி யாங்கள் விழைந்துயிர்வாழும் வாழ்க்கை
    பாயிய வெழுந்த வேங்கை பாரிக்கு மளவிற் பைம்புன்
    மாயிருஞ் சுருளை மேயு மான்மறி போலு மென்றான்.       1858

    குரவர் கூற்று

    அருங்களி யானை வேந்தே யத்துணைப் பாணியுண்டோ
    கருங்களி மதநல்யானை வாய்புகு கவள மேபோல்
    பெருங்களி யாளன் காலன் பிறையெயி றணிந்துநின்ற
    இருங்களி யாணர் வாழ்விற் கிமைப்பிடை பெரிது கண்டாய்.       1859

    காலனைக் கடப்பதற்கு மார்க்கம் கூறுகழு என்று அரசன் அமைச்சரை வினாதல்

    இன்னுயி ரழியும் போழ்து மிறைவனுக் குறுதியல்லான்
    முன்னிய முகமன் மாட்டா முற்றிய வறிவி னாரை
    மன்னவன் மகிழ்ந்து நோக்கி வாழுயிர் வவ்வுங் காலன்
    தன்னைநா மிகந்து சேருஞ் சரண்பிறி துரைமி னென்றான்.       1860

    முனிவரைக் கேட்குமாறு அமைச்சர் கூறல்

    இனியன போன்று தோன்றி நுகர்ந்தவற் கிறுதி செய்யும்
    கனிபுரை கிளவி நீக்கிக் கண்ணனார் கருத்துட் கொண்டு
    துனிவன நினையுங் காலன் றுணிவன துணியுஞ் சூட்சி
    முனிவரை வணங்கிக் கேட்டு முயறுமோ வடிக ளென்றார்.       1861

    குருகயா வுயிர்க்குஞ் சோலைக் குளிரணிப் பழன நாட
    முருகயா வுயிர்க்கும் பூவார் முறிமிடை படலை மாலைத்
    திருவயா வுயிர்க்கு மார்பற் செறிதவர் சரண மூலத்
    தருகயா வுயிர்ப்பி னல்லா லரண்பிறி தாவ துண்டோ.       1862

    பயாபதி துயர்நீங்கிய மனத்தனாதல்

    எரிகின்ற சுடரி னெய்பெய் திடுதிரி தூண்டி யாங்கு
    விரிகின்ற புலமை வீரர் மொழிதலும் விசோதி யன்னாற்
    பரிகின்ற வுரிமை வல்ல படரொழி மனத்த னானான்
    சொரிகின்ற மதுவின் மாரித் துவலையி னனைந்த தாரான்.       1863

    கரும்பணி மொழியி னார்தங்
            கருந்தடங் கண்ணும் வண்டும்
    சுரும்பணை முலையி னாருந்
            தொடையலுந் துதைந்த மார்பன்
    அரும்பணி யசோக நீழ
            லடிகள தணிபொற் கோயில்
    விரும்பணி விழவு சாற்றி
            வியன்முர சறைக வென்றான்.       1864

    அருகன் விழா

    ஒளியவ னுலகம் தன்னுட்
            கரந்தவ னுயிர்க ளுய்யும்
    அளியவ னருள்செய் யாழி
            யுடையவ னடிமை செய்வார்க்
    கெளியவ னெந்தை பெம்மாற்
            கியற்றிய விழவின் மிக்க
    களியவ ரென்ப செம்பொற்
            கதிர்முடி சூடு வாரே.       1865

    அருள்புரி யழலஞ் சோதி
            யாழியா னாதி யில்லான்
    மருள்புரி வினைகட் கென்று
            மறுதலை யாய வாமன்
    இருள்புரி யுலகஞ் சேரா
            வியனெறி பயந்த பெம்மான்
    பொருள்புரி விழவு காண்பார்
            புண்ணிய வுலகங் காண்பார்.       1866

    கண்ணிய வறிவன் செல்வ
            விழவினுட் களித்த மாந்தர்
    புண்ணியத் துகள்க ளென்னும்
            பொற்சுண்ணம் புதைய வாடிப்
    பண்ணியன் மொழியி னார்தங்
            கருங்கண்ணாற் பருகு நீர்மை
    விண்ணிய லுருவ மெய்தி
            விளங்கிவீற் றிருப்ப ரன்றே.       1867

    நகரம் விழவணி காண்டல்

    எல்லைசான் முரசிற் சாற்றி
            யின்னன வறைத லோடும்
    மல்லன்மா நகரங் கேட்டே
            வானுல கிழிந்த தேபோன்
    முல்லைவான் கண்ணி சூடி
            முகிழ்நகைக் கலங்க டாங்கிச்
    செல்லும்வாய் தோறுஞ் செல்வ
            விழவணி தேர்த்த தன்றே.       1868

    இன்னிசை முரசங் கேட்டே
            மெய்பெரி தினிய கேட்டா
    மன்னிய நங்கள் வாணாள்
            வாழ்கநம் மிறைவ னென்னாப்
    பொன்னியன் மலருஞ் சாந்துஞ்
            சுண்ணமும் புகையும் பொங்கத்
    துன்னிய நகர மாந்தர்
            துறக்கம்பெற் றவர்க ளொத்தார்.       1869

    திருவிழா நடைபெறல்
    வேறு

    பூரண மணிக்குட நிரைத்த பொன்னணி
    தோரண மெடுத்தன துதைந்த வெண்கொடி
    வாரணி முரசொடு வளைக ளார்த்தரோ
    காரணி கடலொலி கைத விர்த்ததே.       1870

    விரையினான் மெழுகிய வீதி வாயெலாம்
    திரையினார் செழுமணி முத்தஞ் சிந்தினார் யினா
    லென்னையவ் வொளிகொண் மாநகர்
    புரையினாற் பொன்னுல கிழிந்த தொத்ததே.       1871

    அகிற்புகை மாளிகைகளைச் சூழ்தல்

    கழுமிய காழகி லாவி காமரு
    செழுமணி மாளிகைச் சென்னி சூழ்வது
    விழுமணி விளங்கிய விலங்கன் மீமிசைத்
    தழுவிய விளமழை தவழ்வ தொத்ததே.       1872

    அந்தணர்

    வெண்டுகி லுடுத்துவெண் சாந்து மெய்வழித்
    தொண்டிரண் மல்லிகை யொலியல் சூடினார்
    வண்டிரண் மணிமுத்தும் வயிரச் சாதியும்
    கொண்டிய லணியொடு கோலந் தாங்கினார்.       1873

    வெண்மருப்பி ரட்டைய வேழ மீமிசைக்
    கண்மருட்டு றுப்பன கமலப் பூப்பலி்
    விண்மருட்டு றுப்பன வேந்தி வேதியர்
    மண்மருட்டு றுப்பதோர் வகையின் மன்னினார்.       1874

    வேந்தர்

    செம்மலர்க் கண்ணியர் செம்பொற் றாரினர்
    கொய்ம்மலர்க் குங்குமங் குழைந்த சாந்தினர்
    கைம்மலர் மணிநகைக் கடகம் வில்லிட
    மெய்ம்மல ரணியினர் வேந்த ராயினார்.       1875

    செய்ந்நிறக் குவளைகை செய்த சூட்டினர்
    அந்நிறந் தழுவிய வரத்த வாடையர்
    மெய்ந்நிறஞ் செய்யன வேழ மீமிசைக்
    கைந்நிற மலரொடு கலந்து தோன்றினார்.       1876

    வணிகர்

    பொன்மலர்க் கண்ணியர் பொன்செய் சுண்ணமொய்
    மின்மலர் மேனிமேல் விளங்க வப்பினார்
    மென்மல ரணிநகை மிளிருங் கோலமோ
    டின்மல ரிருநிதிக் கிழவரீண்டினார்.       1877

    போரொளிப் பீதக வுடையர் பைம்பொனால்
    ஆரொளி தழுவிய வலர்செய் பூப்பலி
    போரொளி யானைமே னிரைத்துப் போந்தனர்
    வாரணி வனமுலை யவரொ டென்பவே.       1878

    அரசன் விழாவிற்கெழுதல்

    நகரமாங் கெழுந்தபி னரலுஞ் சங்கொடு்
    முகுரவாய் மணிமுர சதிரு மூரிநீர்
    மகரமால் கருங்கடன் மருளுந் தானையான்
    சிகரமால் யானைமேற் செல்வன் றோன்றினான்.       1879

    குதிரைகள் பல

    வேல்புரை கண்ணியர் கவரி வீசவெண்
    பால்புரை பவழக்காற் குடையி னீழலான்
    மால்புரை கருங்கடல் வளாகங் காவலன்
    கால்புரை புரவியங் கடலுட் தோன்றினான்.       1880

    களிறு ஈட்டம்

    புதமெழு புரவிகள் புடைப ரந்திடை
    மதமழை பொழிவன வயிரக் கோட்டன
    கதமழ லெழவுமிழ் தகைய காணில
    விதமெழு களிறுகள் பலமி டைந்தவே.       1881

    பிற விழாச் செய்திகள்

    ஆர்த்தன பல்லிய மதிர்ந்த குஞ்சரம்
    தேர்த்தன தேர்க்குழாந் திசைத்த பல்லுயி்ர்
    போர்த்தன கொடிமிடை பொழிந்த பூமழை
    வேர்த்தன விளிந்தன வினைக ளென்பவே.       1882

    விரிந்துயர் வெள்ளிவெண் குடையின் மாடெலாம்
    திருந்திய சாமரை திசைக டேர்த்தன
    பரந்தெழு பாற்கடற் பரவை வெண்டிரை
    நிரைந்தெழு நுரையொடு நிரைத்த வொத்தவே.       1883

    பீலியந் தழைபிணித் திட்ட வட்டமு
    மாலியங் கசைப்பன வால வட்டமு
    மேலியங் கொளியவன் மறைய வேய்ந்தரோ
    காலியங் கிடவிடங் காண்கி லாரரோ.       1884

    சந்தனஞ் செறிந்தன செப்புந் தண்புகைக்
    கந்தமே நிறைந்தன கரண்ட கங்களும்
    கொந்துமொய்ம் மலர்நிறை கோடி கங்களும்
    உந்தியொன் றொன்றினை யூன்று கின்றவே.       1885

    நிரந்தன பூப்பலி நிரைகொண் மாரியாய்ச்
    சொரிந்தன சுரும்பிவர் துணர்கொள் பூமழை
    பரந்தன மங்கலப் பதாகை யவ்வழிக்
    கரந்தன கருவினைக் குழாங்க ளென்பவே.       1886

    பாடுவார் பலாண்டிசை பரவு வார்பரந்
    தாடுவா ரறிவனைப் பரவி யார்களும்
    கூடுவார் குழுவுமெய் குழுமி யெங்கணும்
    ஊடுதான் வியலிட முள்ள தில்லையே.       1887

    பயாபதியின் செயல்

    நொவ்வகை வினைப்பகை யகற்றி நூனெறி
    செவ்வகை மொழிந்தவன் செல்வச் சேவடிக்
    கிவ்வகை யெழுவகை விழவு செல்வுழி
    நெய்வகை வேலவ னிலைமை கேட்கவே.       1888

    சினகரம் சேர்தல்

    நீர்ப்பலி விரைப்பலி நிரந்து தேனிமிர்
    பூப்பலி யெனவிவை நிரைத்துப் புண்ணியன்
    சீர்ப்பொலி சினகரஞ் சென்று சேர்ந்தனன்
    ஆர்ப்பொலி தழுவிய வரவத் தானையான்.       1889

    நகர் வலம்

    கோடுயர் கோபுர வாய்தல் சேர்ந்துதன்
    நீடுயர் மழகளி றிருவித் தானிழிந்
    தேடுய ரினமல ரேந்தி யீர்ம்பொழின்
    மாடுயர் வளநகர் வலங்கொண் டெய்தினான்.       1890

    அருகக் கடவுள் தரிசனம்

    மன்னவ னணைதலு மலர்ந்த வாணிலாப்
    பொன்னணி வளநக ரகத்துப் பொங்கரி
    துன்னிய வணைமிசைத் துளங்குஞ் சோதியோ
    டன்னணம சோகமர்ந் தடிக டோன்றினார்.       1891

    ஆசனம்

    குஞ்சரத் தடக்கைய குழைச் சென்னிய
    மஞ்சிவர் தோற்றத்து மகர வாயொடு
    செஞ்சுடர் மணிநிரை யழுத்திச் செம்பொனால்
    அஞ்சுட ருமிழ்வதவ் வணையின் வண்ணமே.       1892

    ஏழிய லுலகிலுள்ளி ருளுங் கையகன்
    றாழியல் வினைகேளா டவிய வாயிரம்
    தாழொளி சுடரவன் றன்னைக் காணவோர்
    சூழொளி மண்டிலஞ் சுடரத் தோன்றுமே.       1893

    கவரி

    கழுமிய பானிலாக் கதிரின் கற்றைகள்
    செழுமணித் திரண்மிசைச் செறிந்த போல்வன
    எழுவளர்த் தனையதோ ளியக்க ரேந்தின
    தொழுதகை யுருவின கவரி தோன்றுமே.       1894

    குடை

    பருகலாம் பானிலாப் பரந்த மாமணி
    அருகெலா மணிந்தக டம்பொ னார்ந்துமேற்
    பெருகலாஞ் சுடரொளி பிறங்கி நின்றதம்
    முருகுலாம் பிண்டியான் குடையின் மும்மையே.       1895

    அழல்வளர்த் தனையன தழையு மவ்வழல்
    தழல்வளர்த் தனையன மலருந் தாமரைப்
    பொழில்வளர் வளையமும் பொதுளி வண்டினம்
    குழைவள ரசோகின்மேற் குளிர்செய் கின்றவே.       1896

    மாமழைக் கண்ணியர் மருங்கு போல்வன
    தூமழை வளர்கொடி துவன்றிப் பத்திகள்
    பாமழை யுருவுகள் பலவுந் தோன்றவே
    பூமழை பொன்னிலம் புதைய வீழ்ந்தவே.       1897

    வானவர் வாத்தியவொலி

    மொய்த்திலங் கலர்மழை முருகு லாவிய
    மைத்தலை விசும்பிடை மயங்க வானவர்
    கைத்தலம் பரவிய காம ரின்னியம்
    எத்திசை மருங்கினு மிரங்கித் தோன்றுமே.       1898

    கின்னரர்

    மைஞ்ஞலம் பருகிய கருங்கண் மாமணிப்
    பைஞ்ஞலம் பருகிய பரும வல்குலார்
    மெய்ஞ்ஞலம் விஞ்சையர் விரவ மேலெலாம்
    கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே.       1899

    எரிமணி நெடுமுடி யிமைப்பிற் செங்கணப்
    புரிமணி வண்ணனும் பொன்செ யாழியத்
    திருமணி வண்ணனுந் தேவி மார்களும்
    அருமணி வண்ணனுக் கருகு தோன்றினார்.       1900

    ஒண்டமர் மணிகளு மொளிர்பொற் சாதியும்
    கொண்டன ரியற்றிய கோலச் செய்கையால்
    கண்டவர் கண்கவர் நகரங் காண்டலும்
    விண்டுதிர் வினையினன் வேந்த னாயினான்.       1901

    பணியொடு நறுவிரை மெழுகிப் பன்மலர்
    அணியுடை யனையன பலவுஞ் செய்தபின்
    மணிமுடி நிலமுற வணங்கி வாமன்மேற்
    றுணிபடு வினையினன் றுதிதொ டங்கினான்.       1902

    வேறு

    மூவடிவி னாலிரண்டு சூழ் சுடரு நாண
            முழுதுலக மூடியெழின் முளைவயிர நாற்றித்
    தூவடிவி னாலிலங்கு வெண்குடையி னீழற்
            சுடரோ யுன்னடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால்
    சேவடிக டாமரையின் சேயிதழ்க டீண்டச்
            சிவந்தனவோ சேவடியின் செங்கதிர்கள் பாயப்
    பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து
            புலங்கொளா வாலெமக்கெம் புண்ணியர்தங் கோவே.       1903

    கருமாலை வெவ்வினைகள் காறளர நூறிக்
            கடையிலா வொண்ஞானக் கதிர்விரித்தா யென்றும்
    அருமாலை நன்னெறியை முன்பயந்தா யென்றும்
            அடியேமுன் னடிபரவு மாறறிவ தல்லால்
    திருமாலே தேனாரு மரவிந்த மேந்துந்
            திருவணங்கு சேவடியாய் தேவாதி தேவ
    பெருமானே நின்பெருமை நன்குணர மாட்டார்
            பிணங்குவார் தம்மைவினைப் பிணக்கொழிக்க லாமே.       1904

    ஒளியாகி யுலகாகி நீவிரிந்தா யென்கோ
            உலகெலா நின்னொளியி னுள்ளடங்கிற் றென்கோ
    அளியார யுலகநீ யாள்கின்றா யென்கோ
            அமருலகு தானின்ன தடியடைந்த தென்கோ
    விளியாத மெய்ப்பொருளை நீவிரித்தா யென்கோ
            நீவிரித்த வாறேமெய்ப் பொருள்விரிந்த தென்கோ
    தெளியாம லில்லைநின் றிருவடிகண் மெய்ம்மை
            தெளிந்தாலுஞ் செவ்வனே தெரிந்துரைக்க லாமே.       1905

    களியானை நாற்கோட்ட தொன்றுடைய செல்வன்
            கண்ணொரா யிரமுடையான் கண்விளக்க மெய்தும்
    ஒளியானை யூழி முத லானானை யோங்கி
            உலகளவு மாகியுயிர் தமக்குறுகண் செய்யா
    அளியானை யாரழலஞ் சோதிவாய் சூழ்ந்த
            அருளாழி யானையிணை யடிபரவு வார்கட்
    கெளியானை யெந்தை பெரு மானையே யல்லால்
            இறையாக வீங்கொருவ ரெண்ணுமா றென்னே.       1906

    தெருளாமை யால் வினவற் பாலதொன் றுண்டு
            திருவடிகள் செம்பொனா ரரவிந்த மேந்த
    இருளாழி யேழுலகுஞ் சூழொளியின் மூழ்க
            இமையாத செங் கண்ணி னிமையோர்வந் தேத்த
    உருளாழி யானு மொளி மணிமுடிமேற் கைவைத்
            தொருபாலில் வரவுலக நின்னுழைய தாக
    அருளாழி முன்செல்லப் பின்செல்வ தென்னோ
            அடிப்படா தாய்நின்ற வான்ஞால முண்டோ.       1907

    வானோர்த முலகுடைய மானீல வண்ணன்
            மகிழ்ந்திறைஞ்சு மாலையணி மணிமுடிமேல் வைகா
    ஊனாரு மறவாழி யோடைமால் யானை
            உடையான்ற னொளிமுடியின் மேலுரையோ நிற்கத்
    தேனாரு மரவிந்தஞ் சென்றேந்தும் போழ்து
            திருவடிகள் செந்தோடு தீண்டாவே யாகில்
    ஆனாவிம் மூவுலகு மாளுடைய பெம்மான்
            அடியுறுவா ரின்மைதா மறிவுண்ட தன்றே.       1908

    தேனருளி மந்தாரச் செந்தாமந் தாழ்ந்து
            திரளரைய செம்பவளம் வம்பாக வூறி
    வானருளி மாணிக்கச் செங்கதிர்கள் வீசி
            மதிமருட்டும் வெண்குடையோர் மூன்றுடைய வாமன்
    யானருள வேண்டியடி யிணைபணியும் போழ்து
            இமையவர்கோ னாயிரச் செங்கணான் வந்து
    தானருளு மாறென்று தாள்பணியும் போழ்துந்
            தகையொன்ற தேலிறைமை தக்கதே யன்றே.       1909

    விண்டாங்கு வெவ்வினை வெரூஉவுதிர நூறி
            விரிகின்ற மெய்ஞ்ஞானச் சுடர் விளக்கு மாட்டிக்
    கண்டார்க ணின்னிலைமை கண்டொழுக யானின்
            கதிர்மயங்கு சோதியாற் கண்விளக்கப் பட்டுத்
    தண்டாஅ மரைமலரின்மே னடந்தா யென்றுந்
            தமனீயப் பொன்னணையின் மேலமர்ந்தா யென்றும்
    வண்டார சோகி னிழல் வாயமர்ந்தா யென்றும்
            வாழ்த்தினால் வாராயோ வானவர்தங்கோவே.       1910

    கருவார்ந்த பொருணிகழ்வுங் காலங்கண் மூன்றுங்
            கடையிலா நன்ஞானக் கதிரகத்த வாகி
    ஒருவாதிங் கவ்வொளியி னின்னுள்ள வாகில்
            உலகெல்லா நின்னுளத் தேயொளிக்க வேண்டா
    திருவார்ந்த தண்மார்ப தேவாதி தேவ
            திரளரைய செந்தளி ரசோகமர்ந்த செல்வ
    வருவாரும் வையகமு நீயும்வே றாகி
            மணிமேனி மாலே மயக்குவதிங் கென்னோ.       1911

    செங்க ணெடுமாலே செறிந்திலங்கு சோதித்
            திருமுயங்கு மூர்த்தியாய் செய்யதா மரையின்
    அங்கணடி வைத்தருளு மாதியா யாழி
            அறவரசே யென்றுநின் னடிபணிவ தல்லால்
    எங்க ணிட ரகலுமா றிந்நிலைமை யெய்தி
            இருளுலக நீக்குமரு டருகநீ யென்று
    வெங்கணிரு வினையையற வென்றாய்முன்னின்று
            விண்ணப்பஞ் செய்யும் விழுத்தகைமை யுண்டோ.       1912

    வேறு

    என்றுநன் கேத்தி யிறைஞ்சி யிறைவனைச்
    சென்றுயர் சேவடிச் சேடந் தலைவைத்து
    வென்றவன் கோயில் வலங்கொண்டு மீண்டுமொர்
    பொன்றவழ் வேதிகை மண்டபம் புக்கான்.       1913

    சாரணர்

    ஆங்கொர் முனிவ னருந்தவப் பல்குணந்
    தாங்கிய மாமலை யன்ன தகையவன்
    பூங்கமழ் சேவடிப் போதுதன் பொன்முடி
    தாங்கிய தாம நுதியாற் றுடைத்தான்.       1914

    ஆற்றி லமைந்த வருந்தவத் தால்வினை
    ஊற்றுச் செறித்த வொருபெயர் மாதவன்
    மாற்றரு மந்திர வாய்மொழி யாயிடை
    ஏற்றன கொண்டாங் கிறைவ னிருந்தான்.       1915

    அமைச்சர் வேண்டுகோள்

    வணங்கி மணிமுடி மன்ன னிருப்ப
    மணங்கமழ் கண்ணியர் மந்திர மாந்தர்
    அணங்கு மறவமிழ் தூட்டி யடிகள்
    பிணங்கும் பிறவிகள் பேர்த்துய்மி னென்றார்.       1916

    முனிவன் கூற்று

    வன்ன மணிமுடி மன்ன னிருந்திட
    இன்னியற் செல்வ மெனைப்பல வெய்திய
    மன்ன னறியுந் திருவற மாண்பினை
    என்னை வினவிய தென்னைகோ லென்றான்.       1917

    அமைச்சர் கூற்று

    அடிக ளடிசி லமைந்த தயில்வான்
    முடிய முயலு முறைமை யறியான்
    நெடிதின துவறு நீர்மையு மோரான்
    வடிவமர் செல்வன் வகையு மதுவே.       1918

    முனிவன் செயல்

    மந்திர மாந்தர் மொழிதலும் வானிடை
    அந்தரம் வாழு மமரர் வழிபடும்
    தந்திர ஞான்ற தவத்திற் கரசனும்
    இந்திர னன்னாற் கெடுத்துரைக் கின்றான்.       1919

    முனிவர் உபதேசம்

    கதியுங் கதியினுட் டுப்புமத் துப்பின்
    விதிசெய் வினையும் வினைவெல் வகையு
    மதியவர் காமுறும் வீட்டது மாண்பும்
    அதிபதி கேளென் றருந்தவன் சொன்னான்.       1920

    ஓடுஞ் சகடத் துருளு மொளிகொள
    வீடி லொருவன் விசிறும் வளையமும்
    ஆடுந் துகளு மெனச்சுழன் றாருயிர்
    நாடுங் கதியவை நான்குள கண்டாய்.       1921

    நரகர் விலங்கு மனிதர்நற் றேவர்
    விரவி னவர்தம் விகற்ப முரைப்பிற்
    பெருகு முரையென்று பெய்ம்மலர்த் தாரோன்
    உருக வொருவா றுறுவ னுரைத்தான்.       1922

    நரகர் கதி

    கீழா நரகங் கிளத்தும் படலங்கள்
    ஏழா யிருபத் திரட்டியோ டொன்பது
    போழா மவற்றுள் ளவர்கள் புகலிடம்
    பாழா மிலக்கமெண் பஃதுட னான்கே.       1923

    நரகங்களின் பெயர்

    இருளி னிருளு மிருளும் புகையும்
    அருளி லளறு மணலும் பரலும்
    மருளின் மணியு மெனவிப் பெயர
    பொருளி னரகங்கள் போதரக் கொண்ணீ.       1924

    ஆங்க ணரக மடைந்தார் படுதுயர்
    ஈங்க ணுரைப்பி னெமக்கும் பனிவரும்
    வாங்கி யவற்றின் முதலதன் வார்த்தைகள்
    பாங்கின் மொழிவன் பனிமலர்த் தாரோய்.       1925

    பத்தடம் பத்தொடு மூன்றா மவற்றிடை
    ஒத்த வுறையு ளிலக்கமொர் முப்பது
    கொத்தெரி வெம்பவர் கும்பிக் குழியவை
    இத்துணை யென்பதொ ரெல்லை யிலவே.       1926

    பேழைப் பிளவும் பிலத்தின் முகங்களும்
    தாழிப் பதலையும் போலுந் தகையன
    ஆழப் பரந்த வழுக லளறவை
    பீழைப் பதகர் பிறக்கு மிடமே.       1927

    வேதனைகள்

    குழிபடு கும்பிக் கருவாய் பெருகி
    அழுக லுடம்பிவை யங்கு நிறைந்தால்
    வழுவி யனல்படு பாறைக் கண் வைகிப்
    புழுவி னுருள்வ பொரிவ பொடிவ.       1928

    புழுவி னுருண்டு பொடிந்தவர் பொங்கி
    எழுவர் புகையைந் தெழுந்தபின் மீட்டும்
    வழுவினர் வீழ்வர் மறிந்துமவ் வாறே
    ஒழிவிலா வேதனை யுள்ளள வெல்லாம்.       1929

    அந்தோ வறனே வெனவழைப் பார்களை
    வந்தோ மெனச்சொல்லி வாங்குபவ ரில்லை
    வெந்தே விளிந்து மொழியார் விழுத்துயர்
    முந்தே வினைய முயன்றனர் புக்கார்.       1930

    அன்னணம் வேதனை யெய்து மவர்களைத்
    துன்னி யுளர்சிலர் தூர்த்தத் தொழிலவர்
    முன்னதிற் செய்த வினையின் முறைபல
    இன்னண மெய்துமி னென்றிடர் செய்வார்.       1931

    தங்கிருட் போதிற் றலைச்சென் றயன்மனை
    அங்கு மகிழ்ந்தா ளவளிவள் காணெனச்
    செங்கன லேயென வெம்பிய செம்பினில்
    பொங்கனற் பாவைகள் புல்லப் புணர்ப்பார்.       1932

    கொள்ளு மிவையெனக் கூட்டில் வளர்த்ததம்
    வள்ளுகிர்ப் பேழ்வாய் ஞமலி வடிவுகள்
    அள்ளிக் கதுவ வலறி யயலது
    முள்ளிற் புனைமர மேற முயல்வார்.       1933

    மேயப் பருவம் விரும்பிய மீனினம்
    காயப் பெருந்தடி காண்மி னிவையெனத்
    தீயைப் பருகிய செப்புத் திரளவை
    வாயைப் பெருகப் பிளந்து மடுப்பார்.       1934

    மறிப்பல கொன்று மடப்பிணை வீழ்த்துங்
    கறிப்பல வெஃகிக் கறித்தவர் தம்மை
    உறுப்புறுப் பாக வரிந்தரிந் தூட்டி
    ஒறுப்பர் சிலரை யவரு மொருபால்.       1935

    இடைப்பல சொல்லி யெளியவர் தம்மை
    உடைப்பொருள் வெஃகி யொறுத்த பயத்தான்
    முடைப்பொலி மேனியை முண்மத் திகையாற்
    புடைப்ப நடுங்கிப் புரள்வ ரொருசார்.       1936

    வெறுப்பன வேசெய்து மேலா யவரைக்
    குறிப்பல சொல்லிய நாவைக் கொடிற்றால்
    பறிப்பர் பரிய வயிரமுட் கொண்டு
    செறிப்ப ருகிர்வழி யேறச் சிலரே.       1937

    பொரிப்பர் சிறைசெய்து பொங்கெரி மாட்டிக்
    கரிப்பர் கனல்படு காரக லேற்றித்
    திரிப்பர் பலரையுஞ் செக்குர லுட்பெய்
    துரிப்ப ருடலை யவரு மொருபால்.       1938

    பழுப்பல பற்றிப் பறிப்பர் பதைப்ப
    மழுப்பல கொண்டவர் மார்பம் பிளப்பர்
    கழுப்பல வேற்றி யகைப்பர் கடிதே
    விழுப்பெரும் பூணோய் வினையின் விளைவே.       1939

    பறிப்பர் பலரவர் கைகளைப் பற்றிச்
    செறிப்பர் விரல்களைச் சீவுவர் மேனி
    நெறிப்ப ரெலும்பு நிரந்துடன் வீழ
    மறிப்பர் மலைமிசை மற்று மொருசார்.       1940

    சாவ நலிந்திடுந் தண்ணீர்ப் பிணிபெரி(து)
    ஆவென் றலறு மவரையரு நஞ்சின்
    வாவிகள் காட்டலின் மண்டி மடுத்துண்டு
    நாவு மழுக நரல்வ ரொருசார்.       1941

    அழலிவை யாற்றோ மெனவழன் றோடி
    நிழலிவை யாமென நீள்பொழிற் புக்கால்
    தழல்வளி தாமே தலைவழி சிந்தக்
    கழல்வனர் வீழ்ந்து கரிவ ரொருசார்.       1942

    முல்லை முகைமலர்த் தாரோய் முதற்புரை
    அல்ல லெனைப்பல வாயிர கோடிகள்
    எல்லையி றுன்ப மிவற்றி னிருமடி
    புல்லினர் கீழ்க்கீழ்ப் புரைபுரை தோறும்.       1943

    விளிவி றுயரொடு மேற்பொங்கி வீழும்
    அளவு மவர்கண் முறையும் பிறவும்
    அளவில் கீழ்க்கீ ழிரட்டி யறைந்தேன்
    உளரொளி ஞானமஃ தொன்று மொழித்தே.       1944

    பெய்யா வருநஞ்சும் பேரழற் குட்டமும்
    செய்யாக் குழிகளுஞ் சீநீர்த் தடங்களும்
    நையா நரக ரிடமிவை நாறினும்
    உய்யா பிறவுயி ரோசனைக் கண்ணே.       1945

    எழுவின் முழமூன் றறுவிர லென்ப
    வழுவின் முதலதன் கீழ்ப்புரை வாழ்வார்
    ஒழிவில பொங்குவ ரோசனை யேழ்மேன்
    முழுவிலைஞ் ஞூற்றொடு முக்கா வதமே.       1946

    ஆண்டுச் சிறுமை பதினா யிரமுள
    நீண்டவர் வாழ்நா ணிறைவு கடலெல்லை
    ஈண்டிதன் கீழ்க்கீழ்ப் பெருகிவரு மெங்கும்
    வேண்டிற் சிறுமைதம் மேலோர் நிறைவே.       1947

    மூன்று மொரேழு மொழிபஃதும் பத்தினோடே
    ஏன்ற நல்லேழு மிருபத் திரண்டுமென்
    றான்ற வலைகடன் முப்பத்து மூன்றுமென்
    றூன்றின கீழ்க்கீ ழுயர்ந்தன வாழ்நாள்.       1948

    முடைகொண் முழுச்செவி மொண்பற் பதகர்
    உடையந் தலியிருப் புண்பது நஞ்சே
    புடையவர் காணிய போர்நனி மூட்ட
    மிடைவர் படுகொண்டு வேதனை மிக்கார்.       1949

    வேவா ரழலுள் விளியா ரளற்றினுள்
    ஓவார் புகையு ளுகையா வுழல்பவர்
    ஆவா வளிய நரகர் படுதுயர்
    ஏவார் சிலையா யிரங்குந் தகைத்தே.       1950

    ஆங்குண் டெனப்படு மாழ்துயர் வீழ்பவர்
    தேங்கொண்ட பைந்தார்த் திறன்மன்ன யாரெனில்
    தாங்கொண்ட தார மறுத்துப் பிறன்வரைப்
    பூங்கொண்டை மாரைப் புணரு மவரும்.       1951

    உள்ளங் கொடியா ருயிர்க்கொலை காதலர்
    வெள்ளங் கொடியன மேவிப் பிறன்பொருள்
    கொள்ளுங் கொடுமைக் குணத்தின் மனித்தரும்
    நள்ளலர்ச் சாய்த்தோய் நரக மடைவார்.       1952

    நல்லறங் காய்ந்து நலிந்து பொருள்படைத்
    தில்லறஞ் செய்யா திறுகு பவர்களும்
    புல்லறம் புல்லாப் புலவரை வைதுரைத்
    தல்லறஞ் செய்யு மறிவில் லவரும்.       1953

    தெண்டிரை வாழுந் திமிலுங் கலங்களுங்
    கொண்டிரை யாகவுயிர் கொல்லுஞ் சாதியும்
    கண்டிடு காதனை நின்னாற் செயப்படும்
    தண்டிக டம்மொடுஞ் சார்த்தினை கொண்ணீ.       1954

    ஆறா நரக வழலினு ளாழ்பவர்
    தேறார் திருவறந் தேறினு நல்வத
    மேறார் சிலர்நனி யேறினு நில்லலர்
    வேறா யினிச்சொல்ல வேண்டுவ துண்டோ.       1955

    விலங்குகதித்துன்பம்

    விலங்குடன் சாதி விரிப்பிற் பெருகும்
    உலங்கொண்ட தோண்மன்ன வோரறி வாதி
    புலங்கொண்ட வைம்பொறி யீறாப் புணர்ந்த
    நலங்கொண்ட ஞாலத்தி னாடி யுணர்நீ.       1956

    நின்று வருந்து நிகோதப் பிறவியுள்
    ஒன்றறி வெய்தி யுழக்கு முயிர்பல
    அன்றிச் சிறிதுண் டவற்றினு மவ்வழிச்
    சென்று பெயர்வ சிலவுள கண்டாய்.       1957

    ஓரறி வாகி யுழக்கு முயிர்களைப்
    பேரறி வாரும் பிறரில்லை யின்னவை
    யாரறி வாரழி யுந்திறம் யாதெனில்
    கூரறி வில்லவர் கொன்றிடு கின்றார்.       1958

    உயிர்தொகை யாறனு ளொன்றொழித் தேனைப்
    பெயர்த்தொகை பெற்ற பிறவிக டம்மைப்
    பயிர்த்தலு மின்றி யுலகம் பதைப்பச்
    செயிர்த்தவர் போலச் செகுத்திடுங் கண்டாய்.       1959

    ஏனை யொழிந்த வியங்குநற் சாதிகள்
    ஆனை முதலா வளிய விலங்குகள்
    மானுடர் பற்றி வலிந்து நலிந்திட
    ஊனெய் யுருகு முழக்கு மொருபால்.       1960

    ஊர்ந்து முழுது முறுபார மேந்தியும்
    சாய்ந்த விலங்குக டாளுடைந் தாழ்தர
    வீர்ந்து மறுத்து மிறைச்சி யுவப்பவர்
    தேர்ந்து செகுப்பவுந் தேயுஞ் சிலவே.       1961

    தடிவிலை வாழ்நர் தடிந்திடப் பட்டு
    முடிவிலை வாழ்நர் முருக்க முரிந்தும்
    கொடுவி லெயினர்கள் கொல்லக் குறைந்தும்
    விடலில வேதனை வேந்த விலங்கே.       1962

    அந்தோ வளிய விலங்குகள் யார்கண்ணும்
    நொந்தோ மெனச்சென்று நோக்கி னுனிப்பொடு
    வந்தோ மெனநின்ற மாண்புடை யார்களும்
    உய்ந்தோய்ந் தொழிய முயன்றிடு கின்றார்.       1963

    முனிவரே அறிபவை

    கன்னியர் வேட்கை கடவு ளரும்பிணி
    துன்னிய துன்ப விலங்கின் சுடுதுயர்
    என்னு மிவற்றினை யெம்போல் பவரன்றி்
    மன்ன வறிபவர் மற்றில்லை மன்னோ.       1964

    வலிய முழங்கினு நாறினும் வட்கி
    நலியு மிவை யென நையு மொருபால்
    பலிபெறு தெய்வங்கண் மேலிட்டுப் பாற்றும்
    கலியவர் கையுட் கழியு மொருபால்.       1965

    கண்களி னோக்கியுங் காதலி னுள்ளியும்
    மண்க ளிடைவிட்டு வைகியும் புல்லியும்
    தண்கமழ் தார்மன்ன தாயர் வளர்ப்புழி
    எண்களை யின்றிட ரெய்து மொருபால்.       1966

    இன்னன துன்பமோ டிவ்விலங் காகுநர்
    என்னவ ரென்னி னிவைநனி கேளினி
    மன்னிய மாதவ மேற்கொண்டு மாயங்கள்
    பின்னை முயல்வார் பிறப்பு மதுவே.       1967

    பொருளிடை மாயம் புணர்த்தும் பிறரை
    மருளிக ளாக மயக்கு மவரும்
    இருளுடை யுள்ளமொ டேதங்க ளெண்ணா
    அருளி லவரு மவைநனி யாவார்.       1968

    பற்றொடு பற்றி முனிந்தார் பலபல
    செற்ற நவின்றார் செறுப்பொடு சென்றவர்
    சுற்ற மழிக்குந் துவர்ப்பகை துன்னினர்
    மற்றிவ் விலங்கெய்து மன்னுயிர் மன்னா.       1969

    இல்லையுயி ரென்று மில்லைபிறப் பென்று
    நல்லன தீயன நாடி லிலவென்றும்
    பல்லன சொல்லிப் படுத்துண்ணும் பாவிகள்
    நில்லாது செல்வர் நிகோத கதியே.       1970

    மக்கட்கதி

    மாக மழைவண்கை மன்னவ மக்களும்
    மேக கதியின ரநேக விகற்பினர்
    சேகர் மிலைச்சர் மனிதர் கடிப்பியர்
    போக மனித ரெனப்பொருட் பட்டார்.       1971

    சேகர்

    பத்து வகைய பரதவி ரேவதத்
    தத்தகு கால விழிவி னகத்தவர்
    சித்தந் தெளிவிலர் சீல மடைவிலர்
    செத்த வறிவினர் சேக ரவரே.       1972

    மிலேச்சர்

    தீவினுள் வாழுங் குமானுடர் தேசத்து
    மேவி யுறையு மிலைச்ச ரெனப்பெயர்
    ஆவ ரவருண் மிலைச்ச ரவரையும்
    வீவருந் தாரோய் விலங்கினுள் வைப்பாம்.       1973

    வாலு நெடியர் வளைந்த வெயிற்றினர்
    காலு மொரோவொன் றுடையர் கலையிலர்
    நாலுஞ் செவியர் நவைசெய் மருப்பினர்
    சீல மடைவிலர் தீவினுள் வாழ்வார்.       1974

    மக்கட் பிறப்பெனு மாத்திர மல்லது
    மிக்க வெளிற்று விலங்குக ளேயவர்
    நக்க வுருவினர் நாணா வொழுக்கினர்
    தொக்கனர் மண்ணே துளைத்துண்டு வாழ்வார்.       1975

    பூவும் பழனு நுகர்ந்து பொழின்மரம்
    மேவி யுறையு மிலைச்சர் மிகப்பலர்
    ஓவலர் வாழ்வ தொருபளி தோபமென்
    றேவல் சிலைமன்ன வெண்ணி யுணர்நீ.       1976

    மனிதர்

    தேச மிலைச்சரிற் சேர்வுடை யாரவர்
    மாசின் மனிதர் வடிவின ராயினும்
    கூசின் மனத்தர் கொடுந்தொழில் வாழ்க்கையர்
    நீச ரவரையு நீரி னிழிப்பாம்.       1977

    கூடன் மிலைச்சர் குமானுட ரென்றிவர்
    ஏடவிழ் தாரோ யெவரா பவரெனில்
    கோடிக் குதர்க்க முரைத்துக் குணங்களை
    நாடினர் கொள்ளா நலமி லவரும்.       1978

    அடங்கா மரபி னவர்கட் கடங்கார்
    விடங்கார் மணந்த விடக்கும் பிறவும்
    உடங்காய்ந் துணக்கொடுப் பாரு முயர்ந்தோர்
    தொடங்கா வினைக டொடங்கு மவரும்.       1979

    அன்ன பிறவியு ளாங்கவ ராபவர்
    இன்னுஞ் சிலவ ரிழிகதிப் பாற்பட்டுத்
    துன்னிய போழ்தே சுருங்கி யொழிபவர்
    என்னும் பிறர்க ளறிவிற் கிகந்தார்.       1980

    மக்கள் வதியு மிரண்டரைத் தீவினுள்
    தக்க நிலத்துப் பிறந்தவர் தம்முளும்
    முக்குலத் தாரொடுங் கூடா முயற்சியர்
    ஒக்கலைப் போல்வார் பலரு முளரே.       1981

    முக்குலத் தாரொடு மூடத் தொழுதியர்
    தக்க தகாவென்ப தோராத் தகையவர்
    மக்க ளெனப்படு வாரலர் மற்றவர்
    பக்கங் கிடக்கும் பதரெனக் கொண்ணீ.       1982

    நல்ல நிலங்க ணலங்கொள் வடிவுகள்
    இல்லை யமர்ந்துழித் தோன்ற லெனவிவை
    எல்லையில் யோனிக ளெல்லா மிகந்தெய்தல்
    அல்லியந் தாரோ யரிது பேரிதே.       1983

    அண்ணை யலிகுரு டாதி யவர்களை
    மண்ணுயர் ஞாலத்து மானுட ராகவைத்
    தெண்ணுநர் யாருள ரெல்லா மமையினும்
    பெண்ணின் பிறவியும் பீடுடைத் தன்றே.       1984

    எண்பத்து நான்கெனு நூறா யிரமுள
    பண்பொத்த சாதிப் பதமென்ப மற்றவை
    கண்பற்றுந் தாரோய் களிப்பதொர் நல்வினைத்
    திண்பற் றுடையவ ரிவ்வுடல் சேர்வார்.       1985

    சார்ந்த பொழுதே தலைநாட் கருவினுள்
    வார்ந்து வழுவா தமைந்து வளரினும்
    மீர்ந்தண் கமழ்நறுந் தாரோ யிடர்பல
    கூர்ந்து வருபயாங் கூற வுலவா.       1986

    குழவி யருஞ்சுரஞ் சென்று குமர
    வழுவ வடவி யரிதி னிகந்தால்
    கிழவெனு மெல்லை கெழீஇயினர் சார்ந்து
    வழுவினர் செல்வது மற்றோர் கதியே.       1987

    மனித வின்பம் தாழ்ந்தது

    யானை துரப்ப வரவுறை யாழ்குழி
    நானவிர் பற்றுபு நாலு மொருவனோர்
    தேனெய் யழிதுளி நக்குந் திறத்தது
    மானுய ரின்ப மதித்தனை கொண்ணீ.       1988

    அன்பும் பிறவு மமைந்தாங் ககத்திருந்
    தின்பங் கருது மிருவர்க் கிடைபல
    துன்பங்க டோன்றுந் தொடர்ப்பா டுளவெனில்
    முன்பவை யில்லெனின் முற்றுந் தொழிலே.       1989

    நன் மாண்பு

    இன்ன நிலைமை யிதனுட் பிறந்தவர்
    மன்னுமொன் றுண்டு வதத்தாற் பெறுவது
    பொன்னியல் சேர்கற்ப போக நிலங்களிற்
    துன்னு முயற்சி துணியுந் திறமே.       1990

    முயற்சி துணி திறம்

    துன்னு முயற்சி துணியுந் திறமவை
    பன்னி யுரைப்பிற் பலவாய்ப் பெருகினும்
    தன்னிய றானந் தவமொடு பூசனை
    என்னுமிந் நான்கென வெண்ணி யுணர்நீ.       1991

    தலையு மிடையுங் கடையுமாச் சாற்றும்
    நிலைமைய தான நிழன்மணிப் பூணோய்
    உலைவி லேற்போ னுடனீ பவனீயும்
    மலைவில் பொருளின்ன மாட்சிய மன்னா.       1992

    ஐமை யமைந்தார்க் கெழுமை யமைந்தவர்
    இம்மை நினையா ரிமைபத மீவழி
    மும்மைக்கு மும்மடங் காய முறைமையில்
    பொய்ம்மையில் புண்ணியம் போர்க்கும் புகுந்தே.       1993

    இரப்போர்

    துறவி யடக்கை பிறர்க்குநன் றாற்றல்
    உறவினர்க் கோம்புதன் மெய்த்தலைப் பாடென்
    றறிவ ரறைந்தாங் கறைந்தனன் றானங்
    குறைவில னேற்பவற் கேற்ற குணனே.       1994

    வள்ளல்

    போதிசை வாற்றல் பொன்றுதறு கட்பம்
    ஈதற் கிவறுத லேற்பவர் மாட்டெழு
    காதல் கழிபற்றி லாமை தெரிந்தறி
    வேதமின் றீவான் குணமிவை யேழே.       1995

    தன்னியல்

    தானு மடங்கி யடங்கினர்க் கேந்திய
    ஊன முயிர்களுக் கெல்லா முணர்வது
    ஞான வொழுக்கம் பெருகு நலத்ததை
    ஈனமி லின்ப நிலங்கட் குவித்தே.       1996

    கடைநின் றவருறு கண்கண் டிரங்கி
    உடையதம் மாற்றலி லுண்டி கொடுத்தோர்
    படைகெழு தானையர் பல்களி யானைக்
    குடைகெழு வேந்தர்க ளாகுவர் கோவே.       1997

    பொருள்

    ஊறுபல செய்துயிர் கட்கிடர் செய்யும்
    வீறில் பொருளை வினையவர்க் கீந்தவன்
    ஏறும் பயனிஃ தென்றினி யான்சொல்லி
    நாறிணர்த் தாரோய் நகுவ துடைத்தே.       1998

    தன்கைப் பொருளு மிழந்து தனக்கொரு
    புன்கட் கதிசெல்லும் வாயில் புணர்ப்பவன்
    வன்கட் பதகர்க்கு வான்பொருள் கைக்கொடுத்
    தென்கைப் பணிகொண்மி னென்பவ னொத்தான்.       1999

    தானப்பயன்

    ஒத்த குணங்க ளமைந்தாங் குறுவர்க்குத்
    தத்துவந் தேறி யவன்செய்த தானங்கள்
    முத்திறத் துள்ளும் படாது முடிமன்ன
    உத்தம தேவரு ளுய்க்கு முணர்நீ.       2000

    மிக்க விரதம் விரிபல வாயினும்
    தொக்கன வைந்திற் சொலுமூன்றி னான்கினில்
    ஒக்க வவற்றி னுறுபயஞ் சொல்லிடில்
    தக்கவர்க் கொத்ததிற் றன்னங் குறைவே.       2001

    விரதம்

    எல்லா விரத மியல்பொக்கு மாயினும்
    அல்லா விரத மனையா யவர்கட்குக்
    கொல்லா விரதங் குடைமன்ன வாமெனின்
    வெல்லா வகையில்லை வீங்கெழிற் றோளாய்.       2002

    தவத்தின் இயல்பு

    தம்மை யுடையவர் தாங்குந் தவத்தியல்
    எம்மை வினவி னெமக்கு முரைப்பரி
    தும்மையுலகத் தொளிபடு மூக்கமோ
    டிம்மை யிகந்தார்க் கிசையு மதுவே.       2003

    தவஞ்செய்து வந்தார் தவநிலை நிற்பார்
    அவஞ்செய்து வந்தார்க் கரிது பெரிதும்
    பவஞ்செய்து மாக்கள் பரியு மதுதான்
    எவன் செய்து மென்னை யீர்மலர்த் தாரோய்.       2004

    தெருண்டவர் மேற்கொளுஞ் செய்தவச் செல்வம்
    இரண்டும் பலவு மியலாய்ப் பெருகு
    மருண்டினி யென்னவை வந்த பொழுதே
    முரண்டரு தோண்மன்ன முற்ற வுணர்நீ.       2005

    பூசனைப்பயன்

    உலகங்கண் மூன்று முடைய பெருமாற்
    கலகையில் பூசனை யாற்ற முயன்றால்
    திலக மிவரெனத் தேவர்க ளாவர்
    விலகுஞ் சுடரொளி வீங்கெழிற் றோளாய்.       2006

    புண்ணிய வாயில் ஏழ்

    புண்ணிய வாயி லெனநாம் புகழ்ந்துரை
    கண்ணிய நான்கா யடங்கு மடங்கினும்
    நுண்ணிய நூல்வழி நோக்கி நுனித்தவர்
    எண்ணிய வாயில்க ளின்னு முளவே.       2007

    அருளுந் தெருளுங் குணத்தின்க ணார்வமும்
    பொருளொன்று சேரும் புகழ்ச்சி நிகழ்வும்
    மருளி றவமும் வாலிய ஞானமும்
    இருளறு தியான நிகழ்வுமென் றேழே.       2008

    அருள்

    ஆருயிர் யாதொன் றிடருறு மாங்கதற்
    கோருயிர் போல வுருகி யுயக்கொள்ள
    நேரி னதுமுடி யாதெனி னெஞ்சகத்
    தீர முடைமை யருளி னியல்பே.       2009

    தெருள்

    வையினும் வாழ்த்தினும் வாளா விருப்பினும்
    வெய்ய முனிதல் குளிர்தல் வெறுப்பொடு
    மையன் மும் மூடப் பகுதி மயக்கின்மை
    செய்ய மனத்தோர் தெருளின் றிறமே.       2010

    குணத்தின்கண் ஆர்வம்

    அறிவ ரடிமுத லார்வம் பெருக்கல்
    உறுவ ரொழுக்க முவத்தன் முதலா
    இறுதியில் பல்குண நோக்கமென் றின்ன
    செறிதலி லார்வங்கள் செல்வந் தருமே.       2011

    புகழ்

    ஆற்றல் வகையா லருந்தவ மேற்கொண்டு
    நோற்று நுனித்த லொழுக்கந் தலைநிற்றல்
    போற்றி யுரைத்தல் புகழ்ச்சி நிகழ்விஃ
    தேற்று மிருவிசும் பீர்மலர்த் தாரோய்.       2012

    தவம்

    அற்ற துவர்ப்பின ராகு மருநிலை
    உற்றவர்க் கிவ்வா றொழுக்கந் தலைநிற்றல்
    நற்றவ மென்றிங்கு நாங்கண் மொழிந்தது
    மற்றிது வானுல காள்விக்கு மன்னா.       2013

    ஞானம்

    நூற்பொருள் கேட்டு நுனித்தோ ருணர்வது
    மாற்படை கூட்டு மயங்கிரு டீர்ப்பது
    மேற்படை மெய்ம்மை விளக்கும் விளக்கது
    நாற்படை யோய்நல்ல ஞான நிகழ்வே.       2014

    தியானம்

    சென்று பெருகுந் தியான நிகழ்ச்சியும்
    ஒன்ற வுரைப்பி னொருநால் வகைப்படும்
    நன்றியின் மாற்றினை நல்குமிரண் டல்லன
    வென்றி விசும்பொடு வீடுந் தருமே.       2015

    போற்றிய புண்ணியப் பொற்சுண்ண முன்புகழ்
    வாற்றி முயல்வார்க் ககநிகழ் வாமவை
    மாற்றிய வற்றை மறுதலை யாக்கொளிற்
    பாற்றி யுழப்பிக்கும் பாக நிகழ்வே.       2016

    காட்சி யெனும்பெயர்க் கதிர்விளக் கேற்றிய
    மாட்சி யுடையார் வதமில ராயினும்
    ஆட்சி கரிதன் றமருல கல்லது
    மீட்சியில் பேரின்ப வெள்ளத் துழவே.       2017

    மெய்ப்பொரு டேறுதல் காட்சி விளக்கது
    செப்படு மாயின் வினையெனுந் தீயிருள்
    அப்படி மானு நிலையன் றதனைநின்
    கைப்பொரு ளாக்கொள் கதிர்மணிப் பூணோய்.       2018

    தெய்வ மனிதர்

    தெய்வ மனித ரவரைத் தெளிவுறின்
    ஐய விசயனு மாழி வலவனும்
    எய்த விவர்முத லீரொன்ப தின்மரிவ்
    வைய மருள வருந ருளரே.       2019

    பிரதி வாசுதேவர்

    ஆழி யிழந்த வயகண்ட னாதியாப்
    பாழி வலவன் பகைவர்மும் மூவரும்
    வீழ வுரைத்தேன் வியன்பெரு ஞாலத்துள்
    ஊழிதொ றூழி யுலப்பில கண்டாய்.       2020

    சக்கரவர்த்திகள்

    தேய வினைவெல்லுந் தெய்வ மனிதருள்
    நீயு மொருவனை நின்குலத் தாதிக்கட்
    பாய விழுச்சீர்ப் பரதனை யுள்ளுறுத்
    தாய திகிரி யவரு மவரே.       2021

    தீர்த்தங்கரர்

    தீர்த்தஞ் சிறக்குந் திருமறு மார்பரும்
    பேர்த்துப் பிறவாப் பெருமை பெறுநரும்
    ஓர்த்திவ் வுலகினு ளுத்தமர் மற்றவர்
    தார்த்தங்கு மார்ப தவத்தின் வருவார்.       2022

    போக மனிதர்
    வேறு

    தக்கமிகு தானமுத லாயதலை நிற்கும்
    மக்களிவ ராவர்மத யானைமற வேலோய்
    புக்கவரு ளேபடுவர் போகநிலஞ் சார்ந்தார்
    ஒக்கவவர் தன்மையு முரைக்கவுல வாவே.       2023

    உத்தமர்க ளேனையிடை யோர்கள்கடை யோராம்
    முத்தகைய ராவரவர் மூரிநெடு வேலோய்
    பத்துவகை பாதவ மியற்றிய பயத்தால்
    அத்தகைய செய்கையு மவர்க்கனைய கண்டாய்.       2024

    அங்கிருவர் தம்பதிகள் செய்கையை யறைந்தால்
    இங்கிருவர் செய்கைதமை யெண்ணியறி வாய்நீ
    தங்குரவ ரோடிருவர் மாறிருவர் தாமாய்
    இங்கிருவர் தேவர்கள் வளர்ப்பவியல் கின்றார்.       2025

    நக்ககுழ விப்பருவ நாற்பதினொ டொன்பான்
    ஒக்கவரு நாள்கள்கலை யோடுட னிறைந்தால்
    மிக்கவொளி சூழ்ந்துமிளிர் மேனியவ ராகித்
    தக்கவிள மைப்பருவ மெய்தினர்க டாமே.       2026

    கொம்பழகு கொண்டகுழை நுண்ணிடை நுடங்க
    வம்பழகு கொண்டமணி மென்முலை வளர்ந்தாங்
    கம்பவழ வாயுளணி முள்ளெயி றிலங்கச்
    செம்பவழ மேனியவள் கன்னிமை சிறந்தாள்.       2027

    நீலமணி கண்டனைய குஞ்சிக ணிறைந்தான்
    ஞாலமளி கொண்டநளிர் தாமரை முகத்தான்
    கோலமணி மால்குவடு குங்கும மடுத்தால்
    போலுமணி மேனியொடு காளை பொலிவுற்றான்.       2028

    தாதுபடு சண்பக மிகந்த நறுமேனிக்
    காதுபுனை காமர்குழை பொற்சுருளை மின்ன
    மீதுபடு கற்பக விளந்தளிர் மிலைச்சிப்
    போதுபுனை கோதையவள் பூம்பொழி லணைந்தாள்.       2029

    பவழவரை யன்னதிர டோட்பரவை மார்பன்
    றவழுமணி யாரமொடு தார்மணி தயங்கக்
    கவழமனை மேவுகளி யானையென வந்தாங்
    கவிழுமல ரீர்ம்பொழிலு ளையனு மணைந்தான்.       2030

    கன்னியவள் மேலிளைய காளையிரு கண்ணும்
    மன்னுகமழ் தாமரையின் வாயித ழலங்கல்
    பின்னியென வீழ்ந்த பிணை யன்னவவள் கண்ணும்
    துன்னுமிரு நீலமென வந்தெதிர் துதைந்த.       2031

    நையுமென நின்றவிடை யாள்குணமோர் நான்கும்
    வையமகிழ் காளையிவன் மாண்டகுண நான்கும்
    ஐயென வகன்றன வணைந்தனர் கனிந்தார்
    மெய்யுமிடை வுற்றவிது வால்விதியின் வண்ணம்.       2032

    அன்றுமுதன் மூன்றளவு மல்லமுடி காறும்
    சென்றுபெரு கிக்களி சிறந்துநனி காமம்
    என்றுமிடை யின்றியிமை யாரினுகர் வார்க்கு
    நின்றது பிராயமது வேநிழலும் வேலோய்.       2033

    போகநிலம்

    கங்குலவ ணில்லைகலி யில்லைநலி வில்லை
    அங்கவர்க ணாளிடைக ழித்தமிழ் தயின்றால்
    எங்குமில வின்பவெழி லெய்தறரு மீதால்
    தங்கிய தவத்தரசர்க் கீந்தபயன் றானே.       2034

    அன்னமிகு போகமவ ரெய்திவிளை யாடி
    முன்னமுடி பல்லமவை மூன்றுடன் முடித்தால்
    பின்னுமவர் தம்வழி பிறந்தவரை நோக்கி
    மின்னுமினி தேறுவது வானுலக மன்னா.       2035

    பல்லமுத லோர்பகுதி மூன்றிரண்டு மொன்றும்
    அல்லவிரு வர்க்க மிழ்து மம்முறையி னேறும்
    நல்லநிலங் காலமுயர் வென்றிவைக ணாடிச்
    சொல்லவுல வா விவர்கள் செய்கைசுடர் வேலோய்.       2036

    செம்பவழம் வெண்பளிங்கு பைந்தளிர் சிறக்கும்
    வம்பழகு கொண்டமணி மேனியவர் பூவார்
    கொம்பவிழுஞ் சண்பகங்கண் முல்லையிணர்க் கோங்கம்
    அம்பவழ வண்ண முதலானவர்மெய் நாற்றம்.       2037

    நலங்கண்மிகு நம்முலகி னன்மைமிகு நீரால்
    புலங்கண்மிகு போகமொடு போகநிலத் துள்ளால்
    விலங்கொடுள வாழ்பறவை யவ்வுடம்பு விட்டால்
    கலங்கண்மிகு கற்பநில மேறுவன கண்டாய்.       2038

    தேவர்கதித் துன்பம்
    வேறு

    பூவிரியு நறுமேனிப் பொன்னிலங்கு நிமிர்சோதித்
    தேவர்கடந் திறமுரைத்த றேவருக்கு மரிதெனினும்
    நாவிரவி நாமுரைப்ப நால்வகையாய் விரியுமவை
    ஓவரிய பெரும்புகழா யொருவகையா லுரைப்பக்கேள்.       2039

    ஈரைவர் பவணர்களு மிருநால்வர் வியந்தரரும்
    ஒரைவர் சோதிடரு மொருபதின்மே லறுவரெனுங்
    காரைய முறுவகையாய் கற்பகரு மீயுலகிற்
    சீரைய மில்லாத திருமலர்த்தார்த் தேவரே.       2040

    உற்றவர்க்கு மேலவர்க ளொன்பதின்ம ரொன்பதின்மர்
    மற்றவர்க்கு மேலவரை வகையரவர் மேலவர்கள்
    இற்றவர தெண்வகையா மிவர்க்கென்று மில்லாத
    செற்றநோய் செயிர்பகையென் றிவைமுதலசெல வுணர்நீ.       2041

    பவணர்

    அருமணியி னொளிநிழற்று மாயிரமாம் பணமணிந்த
    திருமணிசேர் முடியவருந் தீயொழுகு சிகையருமாப்
    பருமணிய படலஞ்சேர் பவணத்துப் பதின்மர்கெளாண்
    குருமணிகொ ணெடுமுடியாய் கூறுபா டுடையவரே.       2042

    வியந்தரர்

    கின்னரர்கண் முதலாய வியந்தரரைக் கிளந்துரைப்பின்
    இன்னநர ருலகத்து ளெவ்வழியு முளராகி
    மென்னரம்பி னிசைகேட்டும் வெறியயர்வு கண்டுவந்தும்
    மன்னவரை வணங்கியுந்தம் மனமகிழ்வ ரொருசாரார்.       2043

    குலகிரியு மலையரசுங் குளிர்பொழிலு நளிர்கயமும்
    பலகிரியுந் தீவகமும் படுகடலும் படிநகரும்
    உலகிரிய வெளிப்பட்டு மொளிகரந்து முறைந்தியல்வர்
    அலகிரியும் பலகுணத்தோ யமரர்களே னைப்பலரே.       2044

    சோதிடர்

    சந்திரருஞ் சூரியருந் தாரகையு நாண்மீனும்
    வெந்திறல கோட்களுமா மெனவிளங்கி விசும்பாறா
    மந்தரத்தை வலஞ்சூழ்ந்து வருபவரு நிற்பவரும்
    சுந்தரஞ்சேர் மணிமுடியாய் சுடர்பவருஞ் சோதிடரே.       2045

    எண்ணியமுத் தேவர்களு மிவர்மடந்தை யவருமாய்க்
    கண்ணியறூ நற்காட்சிக் கதிர்விளக்குத் தூண்டினார்
    நண்ணுபவோ வெனினண்ணார் நல்விரதந் தலைநின்று
    புண்ணியங்கள் படைத்தாரக் குழுவினிடைப் பொலிவாரே.       2046

    காதலரிற் பிழையாராய்க் கள்ளூன்றேன் கடிந்தகற்றி
    ஈதலோ டில்லிருக்கு மிளம்பிடியர் முதலாயார்
    ஓதினமுத் தேவரா யுயர்ந்தவர்க்கு ளுயர்ந்துளராய்ச்
    சோதியும்பே ரெண்குணனுந் துப்புரவுந் துன்னுவரே.       2047

    கற்பகர்

    மந்தரமா நெடுமலையின் மத்தகத்து மேற்கூற்றின்
    அந்தரப்பே ருலகத்து ளமரரைமற் றறையுங்கால்
    இந்திரவில் லெனவெளிப்பட் டிமையவர்க டொழுதேத்தச்
    சுந்தரநன் மணிப்படிவ மெனச்சுடர்ந்து தோன்றுவரே.       2048

    அலர்மாரி மேற்சொரிவா ரமிழ்தநீ ராட்டுவார்
    பலர்மாண்ட கலனணிந்து பலாண்டிசைப்பார் பாடுவார்
    மலர்மாண்ட மணிக்கவரி மருங்கசைப்பார் மடந்தையரைச்
    சிலர்மாணச் சேர்த்துவார் தேவரா யதுபொழுதே.       2049

    ஆடாது மொளிதிகழு மாரணங்கு திருமேனி
    வாடாத கண்ணியினர் மழுங்காத பூந்துகிலர்
    ஏடார்ந்த தொங்கலரா யின்பநீர்ப் பெருவெள்ளம்
    நீடாரக் குளித்தாடு நிலைமையரே யவரெல்லாம்.       2050

    பொன்மாட நெடுநிலத்தார் புகலமளி யணைமேலார்
    கன்மாடு பொன்வளருங் கதிர்மணிக்குன் றதன்மேலார்
    மின்மாடு மிளிர்ந்திலங்கு விமானத்தா ரெனினல்லால்
    சொன்மாடு பிறிதில்லைச் சுவர்க்கஞ்சேர்ந் தவர்கட்கே.       2051

    கந்தருவக் கோட்டியுள்ளார் கண்கனிய நாடகங்கண்
    டிந்திரனோ டினிதினிருந் திளம்பிடியார் பாராட்டச்
    சுந்தரமா மணிமாடச் சூளிகைய ரெனினல்லால்
    அந்தரமேற் பிறிதில்லை யமரருல கடைந்தவர்க்கே.       2052

    கந்தாரங் களித்தனைய பனிமொழியார் கண்கவர
    மந்தார வனத்திடையார் மணிமுழவி னிசைவாங்க
    மந்தார மணியரங்கி னெனும்வார்த்தை யவையல்லாற்
    செந்தாரோய் தேவர்கள் செய் திறற்றொழின்மற் றுடையரே.       2053

    தீர்த்தங்க டிறந்தவர்க்குச் சிறப்போடு திசையெல்லாந்
    தேர்த்தங்க ணொளிபரப்பச் செல்பொழுதுந் தம்முலகில்
    கார்த்தங்கு மயிலனையார் காமஞ்சேர் கனிகோட்டி
    தார்த்தங்கு வரைமார்ப தம்முருவி னகலாரே.       2054

    இமையாத செங்கண்ண ரிரவறியார் பகலறியார்
    அமையாத பிறப்பறியா ரழலறியார் பனியறியார்
    சுமையாகி மணிமாலை சுடர்ந்திலங்கு நெடுமுடியார்
    அமையாத நல்லுலகி னகைமணிப்பூ ணமரரே.       2055

    தேவர் குணஞ் செய்தல்

    அணுவளவாய்ச் சிறுகுதன்மற் றதிநுட்ப மிகப்பெருகல்
    நணியவர்போ னினைத்துழியே நண்ணுறுதல் விழைதகைமை
    பணியினமைத் திடல்குறிப்பிற் பலவுருவு நனிகோடல்
    துணிவமையு நெடுவேலோய் சுரருடைய குணங்களே.       2056

    தேவர் அடையும் துன்பம்

    அளிதருஞ்செங் கோலுடையோ யமரருக்குமந்தரமுண்
    டொளியோடு பேரின்ப முயர்ந்தவர்க்கே யுயர்ந்துளவாம்
    தெளிதரு நற் காட்சியது திருந்தியமே னெடுந்தகையோர்க்
    கெளிதகவும் பெரும்பாலும் பெறலேனோர்க் கரியவே.       2057

    கனைகதிராக் கதிர்கலந்து கண்ணிலங்கு திருமூர்த்தி
    புனைகதிரொண் மணிப்படிவம் பொழிந்ததுபோற் பொலிந்ததன்மேல்
    வனைகதிரின் மணிமுடியும் மாணிக்கக் கடகமுமென்
    றினமுதலாச் சிடர்ந்தினிதி னியல்பாய்நின் றெரியுமே.       2058

    செழுந்திரட்பூம் பாவைகளுந் திகழ்மணியின் சுடர்க்கொழுந்தும்
    எழுந்திலங்கு மேனியரா யெரியுமணிக் கலந்தாங்கி
    மொழிந்துலவாக் காரிகையார் முலைமுற்றா விளமையார்
    அழிந்தலராக் காரிகைமா ரமரரசர் தேவியரே.       2059

    இன்பமே பெரிதாகி யிடையறவின் றிமைப்பளவும்
    துன்பமொன் றில்லாத துறக்கத்திற் பெருஞ்செல்வம்
    மன்பெருமா தவத்தினால் வருமொருநா ளீறுடைய
    தன்பதன்கண் மிசையேயென் றடிகடரு பொரு டெளிந்தார்.       2060

    பவணத்தார்க் கொருகடலா மிகையமரும் பல்லமொன்றாம்
    இவணொத்த வமரருக்கு மிருவிசும்பிற் சுடரவர்க்கும்
    சிவணொத்த வுயர்வாழ்நாள் சென்றபினர்ச் செல்கதியும்
    அவணொத்த தத்தமது விதிவகையா மதிபதியே.       2061

    இரண்டாகு முதலவர்கட் கேழீரைந் தீரேழாய்த்
    திரண்டிரண்டாய் மூவுலகத் தொழிந்தவர்சேர் பிரண் டிரண்டாய்
    அரண்டகவந் தேறிப்பின் னாரணவச் சுதருலகின்
    மருண்டாய மணிமுந்நீர் பதினொன்றற் கிருமடியே.       2062

    ஆங்கவர்மே லமரரசர் மும்மூவர்க் கொரோவொன்றாய்
    ஓங்கினர்மே லொன்பதின்மர்க் கொன்றொன்றா யவர்மேலார்
    பாங்கினுறப் பெறுகுவன பதினைந்திற் கிருமடிமேல்
    வாங்கொலிநீ ரொருமூன்று வாழ்வென்ப மணிமுடியாய்.       2063

    ஆயிடைய வமரரசர் திறம்வினவி னணங்கனையார்
    வேயிடைமென் பணைப்பொற்றோள் விழைவின்றிப் பெரிதாகி
    ஏயிடையோ ரறவின்றா வின்பஞ்செய் திருமூர்த்தி
    சேயிடையொள் ெளாளிநிழற்றச் செம்மாந்தா ரிருந்தாரே.       2064

    ஊனிலா வுறுப்பமையா வொளியமா யுலகெல்லாம்
    பானிலாப் பரந்தெறிப்பப் பளிங்கினது படிவம்போன்
    மேனிலா மணியனையார் வெண்சங்கே ரிலைச்சையாம்
    கோனிலா வவரின்மிக் கவரில்லைக் குடைவேந்தே.       2065

    அப்பால தத்திதியா மதனிலமைந் தாலூணின்
    றொப்பாரும் பிறிதிவணின் றூழிநாட் பெயர்ந்திழிவின்
    றெப்பாலுந் திரிவின்றோ ரியல்பாய வின்பத்தான்
    மெய்ப்பால தவ்வரைசர் வீற்றிருக்கும் வியனுலகே.       2066

    அறவுரை

    கதிநான்குங் கதிசேரும் வாயிலுமிவ் விவையிதனால்
    விதிமாண்ட நரகமும்புன் விலங்குகளுஞ் சேராமை
    மதிமாண்ட நற்காட்சி வழிநின்று தவந்தாங்கில்
    நிதிமாண்ட பெருஞ்செல்வ நீங்காத வியல்பென்றான்.       2067

    உறுதிகணன் குரைக்குங்கா லுபசார முரைப்பதோ
    அறுதியில்பே ரருளீரென் றரசனாங் கடிதொழலும்
    இறுதியிலாப் பேரின்ப மெய்துமா றெடுத்துரைத்தான்
    மறுதரவில் கதிபடரு மாதவத்து வரம்பாயோன்.       2068
    ----------------

    12. முத்திச் சருக்கம் (2069-2130)

    வீடுபேற்றுக்குரிய நெறி

    இருவகை வினைகளு மில்ல திவ்வழி
    வருவகை யிலாதது மறுவின் மாதவர்
    பெருவழி யாச்செலும் பெயர்வில் சூளிகைக்
    கொருவழி யல்லதிங் குரைப்ப தில்லையே.       2069

    பிறப்பின் பெற்றி

    பிறந்தவன் பொறிப்புலக் கிவரு மப்புலம்
    சிறந்தபின் விழைவொடு செற்றஞ் செய்திடும்
    மறைந்தவை வாயிலா வினைக ளீட்டினால்
    இறந்தவன் பின்னுமவ் வியற்கை யெய்துமே.       2070

    தூயோர் மாட்சி

    பிறவிச்சக் கரமிது பெரிது மஞ்சினான்
    துறவிக்கட் டுணிகுவன் றுணிந்து தூயனாய்
    உறவிக்க ணருளுடை யொழுக்க மோம்பினான்
    மறவிக்க ணிலாததோர் மாட்சி யெய்துமே.       2071

    வீடடையும் வீரர்

    காட்சியு ஞானமுங் கதிர்த்துத் தன்பொறி்
    மாட்சியை வெலீஇமனந் தூய னாயபின்
    நாட்செய்து நவிற்றிய தியான வீதியான்
    மீட்சியில் வீட்டுல கெய்தும் வீரனே.       2072

    வீட்டின் இயல்பு

    கடையிலெண் குணத்தது காம ராகர்கள்
    இடைநனி யிலாத தில் லியற்கை யில்லது
    மிடையொடு விழைவுவே ரறுத்த வீரர்கள்
    அடைவதோர் நிலைபிறர்க் கறிய லாகுமோ.       2073

    மணிமலர்ந் துமிழ்தரு மொளியுஞ் சந்தனத்
    துணிமலர்ந் துமிழ்தருந் தண்மைத் தோற்றமும்
    நணிமலர் நாற்றமு மென்ன வன்னதால்
    அணிவரு சிவகதி யடைய தின்பமே.       2074

    பயாபதியின் மனவுறுதி

    வடுவறு மாதவ னுரைப்ப மாண்புடை
    அடிகள தறவமிழ் துண்ட வாற்றலான்
    முடிவுகொ ளுலகெய்த முயல்வ னென்றனன்
    விடுகதிர் மணிமுடி வென்றி வேந்தனே.       2075

    மிக்கெழு போதிகை விலக்க றக்கதன்
    றொக்கநன் றுடன்பட லுலக மேன்றெனத்
    தக்கவாய் மொழிந்தவத் தரச னேர்ந்திலன்
    தொக்கவான் புகழவற் கமைச்சர் சொல்லினார்.       2076

    இருட்பிலத் தரும்பட ரெய்திப் பல்புகழ்
    வருட்டதை யிலனலிந் துண்ண வாழ்பவன்
    பொருட்டகு வாயில்பெற் றுய்ந்து போம்வழி
    உருட்டுவா னொருவனை யுவந்து நாடுமோ.       2077

    அமைச்சர் கூற்று

    அருஞ்சிறைப் பிணியுழந் தலைப்புண் டஞ்சுவான்
    பெருஞ்சிறை தனைப்பிழைத் துய்ந்து போயபின்
    கருஞ்சிறைக் கயவர்கைப் பட்டு வெந்துயர்
    தருஞ்சிறைக் களமது சென்று சாருமோ.       2078

    பிணிபடு பிறவிநோய் பெயர்க்கு மாதவம்
    துணிபவன் றன்னொடு தொடர்ச்சி நோக்குமோ
    அணிமுடி துறமினெம் மடிக ளென்றனர்
    மணிமுடி மன்னவற் கமைச்ச ரென்பவே.       2079

    புத்திமதி

    எனவவர் மொழிதலு மெழுந்து போதியின்
    சினைமல ரிலங்குவேற் சிறுவர் தங்களை
    வனமலர்க் கண்ணியான் கூவி மற்றவர்க்
    கினலிலா னிவ்வுரை யெடுத்துச் செப்பினான்.       2080

    திருமகள் இயல்பு

    பொருளிலார்க் கிவ்வழிப் பொறியின் போகமும்
    அருளிலார்க் கறத்தினாம் பயனு நூல்வழி
    உருள்விலா மனத்தவர்க் குணர்வும் போன்மனம்
    தெருளிலார்க் கிசைவில டிருவின் செல்வியே.       2081

    திருமக ணிலைமையுஞ் செல்வர் கேட்டிரேல்
    மருவிய மனிதரை யிகந்து மற்றவள்
    பொருவறு புகழினிர் புதிய காமுறும்
    ஒருவர்கண் ணுறவில ளுணர்ந்து கொண்மினே.       2082

    புண்ணிய முலந்தபின் பொருளி லார்களைக்
    கண்ணிலர் துறந்திடுங் கணிகை மார்கள்போல்
    எண்ணில ளிகழ்ந்திடும் யாவர் தம்மையும்
    நண்ணிய நண்பில ணங்கை வண்ணமே.       2083

    உற்றுநின் றொருவர்கண் ணிற்கு மாய்விடின்
    மற்றவர் குணங்களை மறைத்து மாண்பிலாச்
    செற்றமுஞ் சினங்களுஞ் செருக்குஞ் செய்திடும்
    கற்றவர் தம்மையுங் கழற நோக்குமே.       2084

    அம்பென நெடியகட் கணிகை யார்தமை
    நம்பிய விளையவர் பொருளு நையுமால்
    வம்பின மணிவண்டு வருடுந் தாமரைக்
    கொம்பினை மகிழ்ந்தவர் குணங்க ளென்பவே.       2085

    ஆதலா லவடிறத் தன்பு செய்யன்மின்
    ஏதிலா ரெனவிகழ்ந் தொழியும் யாரையும்
    காதலா ராபவர் கற்ற மாந்தரே
    போதுலா மலங்கலீர் புரிந்து கேண்மினே.       2086

    பூமகளியல்பு

    நிலமக ணிலைமையு நெறியிற் கேட்டிரேல்
    குலமிலர் குணமில ரென்னுங் கோளிலள்
    வலமிகு சூழ்ச்சியார் வழியண் மற்றவள்
    உலமிகு வயிரத்தோ ளுருவத் தாரினீர்.       2087

    தன்னுயர் மணலினும் பலர்க டன்னலம்
    முன்னுகர்ந் திகந்தவர் மூரித் தானையீர்
    பின்னும்வந் தவரொடுஞ் சென்று பேர்ந்திலள்
    இன்னுமஃ தவடன தியற்கை வண்ணமே.       2088

    வெற்றிவேன் மணிமுடி வேந்தர் தம்மொடும்
    உற்றதோ ருரிமைக ளில்லள் யாரொடும்
    பற்றிலள் பற்றினர் பால ளன்னதால்
    முற்றுநீர்த் துகிலிடை முதுபெண் ணீர்மையே.       2089

    அடிமிசை யரசர்கள் பணிய வாண்டவன்
    பொடிமிசை யப்புறம் புரள விப்புறம்
    இடிமுர சதிரவொ ரிளவ றன்னொடு
    கடிபுகு மவளது கற்பின் வண்ணமே.       2090

    இன்னன விவடன தியற்கை யாதலால்
    அன்னவள் பொருளென வார்வஞ் செய்யன்மின்
    மன்னுயிர் காவனும் மக்க டாங்கினால்
    பின்னைநுங் கருமமே பேணற் பாலிரே.       2091

    பயாபதி துறவு

    மீனிவர் விரிதிரை வேலி காவன்மேல்
    ஊனிவர் வேலினீ ருங்கள் பாலதால்
    யானினி யெனக்கர சாக்க லுற்றனன்
    தேனிவ ரலங்கலீர் செவ்வி காண்மினே.       2092

    உற்றநாள் சிலநுமக் கென்னொ டல்லது
    மற்றநாள் பலவவை வருவ வாதலால்
    கற்றமாண் சிந்தையீர் கவற்சி நீங்குமின்
    இற்றையான் றுணிந்ததென் றிறைவன் செப்பினான்.       2093

    மக்கள் கூற்று

    என்றலு மிளையவ ரிறைஞ்சிக் கைதொழு
    தின்றியா மடிகளைப் பிழைத்த தென்னென
    ஒன்றுநீ ரிலீரென வுரையொ ழிந்தரோ
    அன்றவர்க் கயலவ னாகிச் செப்பினான்.       2094

    ஆவியா யரும்பெற லமிழ்த மாகிய
    தேவிமார் தங்களைக் கூவிச் செவ்வனே
    காவியாய் நெடுங்கணீர் கருதிற் றென்னென
    மேவினார் தவமவர் வேந்தன் முன்னரே.       2095

    அமைச்சர் துறத்தல்

    இமைப்பதும் பெருமிகை யினியி ருந்தனெ
    நமைப்புறு பிறவிநோய் நடுங்க நோற்கிய
    அமைச்சரு மரசர்கோ னருளி னாற்றம
    சுமைப்பெரும் பாரத்தின் றொழுதி நீக்கினார்.       2096

    அணிமுடி யமரர்தந் தாற்றப் பாற்கடல்
    மணிமுடி யமிழ்தநீ ராடி மாதவர்
    பணியொடு பன்மணிக் கலங்க ணீக்கினான்
    துணிவொடு சுரமைநா டுடைய தோன்றலே.       2097

    முடியைக் கடலில் எறிதல்

    அருமுடி துறந்தன னரச னாயிடைத்
    திருமுடி மணித்துணர் தேவர் கொண்டுபோய்ப்
    பருமுடி நிரையனப் பரவைப் பாற்கடல்
    பெருமுடி யமைகெனப் பெய்யப் பட்டதே.       2098

    முரைசதிர் முழங்கொலி மூரித் தானையும்
    திரைசெறி வளாகமுஞ் சிறுவர்க் கீந்துபோய்
    அரைசரு மாயிர ரரைசர் கோனொடு
    விரைசெறி மணிமுடி விலங்க நீக்கினார்.       2099

    முடிகளுங் கடகமு முத்தி னாரமும்
    சுடர்விடு குழைகளுந் துளும்பு பூண்களும்
    விடுசுடர்க் கலங்களும் விட்டெ றிந்தவை
    படுசுடர் தாமெனப் பரந்தி மைத்தவே.       2100

    வரிவளை வண்ணனு மறங்கொ ணேமியத்
    திருவளர் மார்பனுஞ் செல்வன் சென்னிமேல்
    எரிவளர் மணிமுடி யிழியு மாயிடைப்
    புரிவளைக் கடலெனப் புலம்பு கொண்டனர்.       2101

    விசய திவிட்டர் துயரம்

    காதல ராயினுங் காதல் கையிகந்
    தேதில ராயின மடிகட் கின்றென
    ஊதுலை மெழுகினின் றுருகி னாரவர்
    போதலர் கண்களும் புனல்ப டைத்தவே.       2102

    முடிகெழு மன்னர்முன் னிறைஞ்ச நம்மைத்தம்
    கடிகம ழகலத்துக் கொண்ட காதலெம்
    அடிகளு மயலவர் போல வாயினார்
    கொடிதிது பெரிதனெக் குழைந்து போயினார்.       2103

    தாதுக வகலத்துத் தாமம் வாங்கியும்
    மீதுவந் தேறியு மேவல் செய்யுநம்
    கோதுக மியாவர்கொண் டாடு வாரெனப்
    போதுக முடியினர் புலம்பொ டேகினார்.       2104

    முனிவர் சமாதானங் கூறல்

    நின்றிலா நிலைமையி னீங்கி நின்றதோர்
    வென்றியா லுலகுடன் வணக்கும் வீரியம்
    இன்றுகோன் புரிந்ததற் கிரங்கல் வேண்டுமோ
    என்றுதா னிளையரை முனிவர் தேற்றினார்.       2105

    அணங்குசா லடிகள தருள தாய்விடில்
    பிணங்கிநாம் பிதற்றிய பேதை வாய்மொழி
    குணங்கடா மல்லகோன் குறிப்பு மன்றென
    வணங்கினார் மணிமுடி மான வீரரே.       2106

    மன்னர் நகருக்கு ஏகல்

    திருவுடை யடிகடஞ் சிந்தைக் கேதமாம்
    பரிவொடு பன்னிநாம் பயிற்றி லென்றுதம்
    எரிவிடு சுடர்முடி யிலங்கத் தாழ்ந்துபோய்
    மருவுடை வளநகர் மன்னர் துன்னினார்.       2107

    வேற்படைப் பிரிவு

    பாற்படு செல்வமும் பரவை ஞாலமும்
    காற்பொடி யாகவுங் கருதிற் றின்மையால்
    ஏற்புடைத் தன்றுநம் மடிமை யீண்டென
    வேற்படை வீரனைத் தொழுது மீண்டதே.       2108

    பயாபதி தவம் மேற்கொள்ளல்

    வேற்படை விடுத்து வீரத்
            தவவர சதனை மேவி
    நூற்படை முனிவர் கண்ணா
            னோக்கிய நயத்த னாகிப்
    பாற்படு விரத நோன்மைப்
            படைப்பெருந் தலைவ ரைவர்
    மேற்படை செய்யச் செல்லும்
            வினைவரை விலக்க வைத்தான்.       2109

    குணப்படை யிலக்க மெண்பான்
            குலவுநான் காகுஞ் சீலக்
    கணப்படை பதினெட் டாகு
            மாயிரங் கருவி யாகத்
    துணைப்படை பிறர்க்குச் செய்யுந்
            துருநயத் தளவு நீக்கி
    மணப்புடை சிந்தை யென்னு
            மடந்தையைச் செறிய வைத்தான்.       2110

    செறிவெனப் படுவ மூன்று
            செழுமதில் செறியச் செய்து
    பொறியெனும் வாயி லைந்து
            பொற்கத வடைத்து மாற்றி
    அறிவமை சிந்தை யின்மாட்
            டகம்படி யுழைய ராக்கிக்
    கறையிலீ ரறுவர் நிற்ப
            விறைவராக் காக்க வைத்தான்.       2111

    படைகெழு புரிசை வெல்வார்
            புறநின்று பதின்மர் காக்க
    விடையவர் தம்மு ளாரே
            யுழையரீ ரறுவ ராக
    உடையதன் னுலக மூன்று
            மொருவழிப் படுக்க லுற்று
    மிடைகெழு வினைவர் தானை
            மெலியமேற் சென்று விட்டான்.       2112

    பின்னணி யோகு நான்மை
            யபரகாத் திரம்பெற் றேனைத்
    தன்னவ யவங்கண் முற்றித்
            தயங்குநூன் மனங்க ளோவா
    துன்னிய திசையி னுய்க்கு
            முணர்வெனும் வயிரத் தோட்டி
    இன்னியன் ஞான வேழத்
            தெழிலெருத் தேறி னானே.       2113

    தருக்கெயில் காப்பு வாங்கத்
            தடக்கைமால் பகடு நுந்தித்
    திருக்கிளர் குணமேற் சேடிச்
            செழுமலைக் குவட்டி னோட்டி
    முருக்கிய வுருவு வேட்கை
            முனைப்புல மகற்றி முற்றிச்
    செருக்கிய வினைவர் வாழுந்
            திண்குறும் பழிக்க லுற்றான்.       2114

    நிறையிலார் பொறுத்த லாற்றா
            நிலையிது நிறைந்த நோன்மைக்
    கறையி லீராறுக் கொத்த
            கண்ணியர் கவரி வீச
    முறையினாற் பெருகு முள்ளச்
            சமாதிநீர் முறுக வுண்ட
    குறைவிலாத் தியான மென்னுங்
            கொற்றவா ளுருவிக் கொண்டான்.       2115

    விண்கடாஞ் செய்யும் வெய்ய
            வினைவர்கட் கரண மாகிக்
    கண்கடா மிறைக்கு மோரேழ்
            கடிவினை பொடிசெய் திட்டே
    கொண்கடா நவின்ற வீரெண்
            கொடிமதிற் கோட்டை குட்டி
    எண்கடா முடைய வெண்மர்
            குறும்பரை யெறிந்து வீழ்த்தார்.       2116

    ஈடிலர் வெகுளி யுள்ளிட்
            டெண்மரை யெறியத் தீயுட்
    பேடுவந் தொன்று பாய்ந்து
            முடிந்தது முடிந்த பின்னை
    ஓடிவந் தொருத்தி வீழ்ந்தா
            ளுழையவ ரறுவர் பட்டார்
    ஆடவன் றானும் போழ்து
            கழித்துவந் தொருவ னாழ்ந்தான்.       2117

    பின்னுமோர் நால்வர் தெவ்வர்
            முறைமுறை பிணங்கி வீழ்ந்தார்
    அன்னவர் தம்மு ளானே
            குறைப்பிண மொருவ னாகித்
    தன்னைமெய் பதைப்ப நோக்கி
            யவனையுந் தபுப்ப நோனார்
    துன்னிய துயிலு மேனைத்
            துளக்கஞ்செய் திருவர் பட்டார்.       2118

    ஆங்கவ ரழிந்த பின்னை
            யரசரை யிருவரோடும்
    தாங்கியீ ரிருவர் தாக்கித்
            தலைதுணிப் புண்ட பின்னை
    வீங்கிய வனந்த ஞான்மை
            விழுநிதி முழுதுங் கைக்கொண்
    டோங்கிய வுலகிற் கெல்லா
            மொருபெருங் கிழவ னானான்.       2119

    பயாபதி கேவலமடந்தையை மணத்தல்

    நெடிதுட னாய தெவ்வர்
            நால்வரை நீறு செய்திட்
    டடிகள்பின் முடிவென் பாளை
            யகப்படுத் தனைய ராக
    இடிமுர சதிருந் தானை
            யரசரோ டிங்க ணீண்டிக்
    கடிகம ழமரர் வீரன்
            கடிவினை முடிவித் தாரே.       2120

    கொடிகளுங் குடையுங் கோலக்
            கவரியு மமரர் தங்கள்
    முடிகளு மடந்தை மாரு
            முகிழ் நகைக் கலங்க ளுஞ்செற்
    றடியிடு மிடமின் றாகி
            மூடியா காய மெல்லாம்
    கடிகமழ் மலருஞ் சாந்துஞ்
            சுண்ணமுங் கலந்த வன்றே.       2121

    பொன்னரி மாலை பூவின்
            பொழிமதுப் பிணையன் முத்தின்
    மின்னிவர் விளங்குந் தாம
            மெனவிவை விரவி வீசித்
    துன்னிய வினைவர் கூட்டந்
            துணித்துவீற் றிருந்த கோனைப்
    பன்னிய துதிய ராகி
            யமரர்கள் பரவு கின்றார்.       2122

    பயாபதியை அமரர் பரவுதல்
    வேறு

    கருமால் வினையரசு காறளர நூறிப்து
    பெருமான் முடிவென்னும் பெண்ணரசி தன்னை
    ஒருவாமை வேட்டெய்தி யூழி பெயர்ந்தாலும்
    வருமா றிலாத வளநகரம் புக்கானே.       2123

    சிந்தை மடவா டொடுத்த தியானவாள்
    வெந்து வினைவேந்தர் வீடியபின் விட்டெறிந்து
    முந்து முடிவென்னுங் கன்னி முலைமுயங்கி
    வந்து பெயரா வளநகரம் புக்கானே.       2124

    அலகில் பெருங்குணத்தோ னாவரண நீக்கி
    உலக மலோக முடனே விழுங்கிப்
    புலவன் முடிவென்னும் ங்கொடியுந் தானும்
    நிலவு சிவகதியு ணீங்காது நின்றான்.       2125

    வேறு

    இனையன பலபரவி யிறைஞ்சி யேத்தி யிமையவர்கள்
    கனையெரி மிகுவேள்வி கலந்து செய்து களிப்பெய்தி
    அனையவ ரறவாழி யமிழ்த நீங்கா தகத்தாடிப்
    புனையவிர் சுடரொளியார் புகழ்ந்து தத்த மிடம்புக்கார்.       2126

    பயாபதி சூளாமணியாய்த் திகழ்தல்

    களங்காண் வகையுடைந்து
            காலர் காமர் கையகல
    விளங்காத் திசையின்றி
            விளங்க வீரன் மெய்ப்பொருளை
    உளங்காண் கேவலப்பே
            ரொளியா லிம்ப ருலகெல்லாம்
    துளங்கா துயர்ந்துலகின்
            முடிக்கோர் சூளா மணியானான்.       2127

    அருமால் வினையகல அமரர் நாளு மடிபரவப்
    பெருமான் பிரசாபதி பிரம லோக மினிதாளத்
    திருமால் பெரு நேமி திகழ்ந்த செந்தா மரைத்தடக்கைக்
    கருமால் கடல்வரைத்த கண்ணார் ஞாலங் காக்கின்றான்.       2128

    தங்கோ னமருலக மினிதி னாளத் தரங்கநீர்ப்
    பொங்கோதம் புடையுடுத்த பூமியெல்லாம் பொது நீக்கிச்
    செங்கோ லினிதோச்சித் தேவர் காப்பத் திருமாலும்
    அங்கோல வேலரச ரடிபா ராட்ட வாள்கின்றான்.       2129

    விசய திவிட்டரை வாழ்த்துதல்

    வலம்புரி வண்ணனு மகர முந்நீர் மணிமேனி்
    உலம்புரி தோளினனு முலக மெல்லா முடன்வணங்கச்
    சலம்புரி வினைவென்ற தங்கோன் செந்தா மரையடிக்கீழ்
    நலம்புரி விழவியற்றி நாளு நாளு மகிழ்கின்றார்.       2130
    ----------------