Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!


திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஆறாம் திருமுறை - முதற் பகுதி பாடல்கள் (3267 -3871)


திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஆறாம் திருமுறை - முதற் பகுதி பாடல்கள் (3267 -3871)

    உள்ளுறை
    1. பரசிவ வணக்கம் 3 3267 - 3269
    2. திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை 13 3270 - 3282
    3. ஆற்றாமை 10 3283 - 3292
    4. பிறப்பவம் பொறாது பேதுறல் 10 3293 - 3302
    5. மாயைவலிக் கழுங்கல் 10 3303 - 3312
    6. முறையீடு 10 3313 - 3322
    7. அடியார் பேறு 20 3323 - 3342
    8. ஆன்ம விசாரத் தழுங்கல் 10 3343 - 3352
    9. அவா அறுத்தல் 13 3353 - 3365
    10. தற் சுதந்தரம் இன்மை 10 3366 - 3375
    11. அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு 10 3376 - 3385
    12. பிள்ளைச் சிறு விண்ணப்பம் 24 3386 - 3409
    13. பிள்ளைப் பெரு விண்ணப்பம் 133 3410 - 3542
    14. மாயையின் விளக்கம் 10 3543 - 3552
    15. அபயத் திறன் 28 3553 - 3580
    16. ஆற்றமாட்டாமை 10 3581 - 3590
    17. வாதனைக் கழிவு 20 3591 - 3610
    18. அபயம் இடுதல் 10 3611 - 3620
    19. பிறிவாற்றாமை 10 3621 - 3630
    20. இறை பொறுப்பியம்பல் 10 3631 - 3640
    21. கைம்மாறின்மை 10 3641 - 3650
    22. நடராபதி மாலை 34 3651 - 3684
    23. சற்குருமணி மாலை 25 3685 - 3709
    24. தற்போத இழப்பு 10 3710 - 3719
    25. திருமுன் விண்ணப்பம் 10 3720 - 3729
    26. இனித்த வாழ்வருள் எனல் 10 3730 - 3739
    27. திருவருள் விழைதல் 20 3740 - 3759
    28. திருக்கதவந் திறத்தல் 10 3760 - 3769
    29. சிற்சபை விளக்கம் 10 3770 - 3779
    30. திருவருட் பேறு 10 3780 - 3789
    31. உண்மை கூறல் 10 3790 - 3799
    32. பிரியேன் என்றல் 11 3800 - 3810
    33. சிவ தரிசனம் 11 3811 - 3821
    34. அனுபோக நிலயம் 10 3822 - 3831
    35. சிவயோக நிலை 10 3832 - 3841
    36. பெற்ற பேற்றினை வியத்தல் 10 3842 - 3851
    37. அழிவுறா அருள்வடிவப் பேறு 10 3852 - 3861
    38. பேரருள் வாய்மையை வியத்தல் 10 3862 - 3871
அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு
    1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
    2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
    3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
    4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
    5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை
திருச்சிற்றம்பலம்

ஆறாம் திருமுறை - முதற் பகுதி

1. பரசிவ வணக்கம்

குறள்வெண்பா

3267 எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே

எல்லாம்வல் லான்தனையே ஏத்து.197

1
197. எல்லாம்வல் லான்தாளை ஏத்து - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3268 திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்

சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே

திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க

உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க

வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.198

2
198. 2500 ஆம் பாடலின் உத்தரவடிவம்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3269 அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே.
3

திருச்சிற்றம்பலம்

2. திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3270 அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்

அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்

பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்
இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்

எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்
சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.

1
3271 வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா

வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி
எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்

இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்
அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்

அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்
திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.

2
3272 சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்

தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி
நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி

நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்
பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்

பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்
சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.

3
3273 இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக

இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்

சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்

ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.

4
3274 எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்

எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்
சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்

துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த
வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்

மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.

5
3275 அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்

அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்
மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை

மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்
துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்

துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்
உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

6
3276 அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்

ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே
கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்

கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்
கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்

கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்
ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

7
3277 பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்

பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான
ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்

இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்
நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்

நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்
ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

8
3278 இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்

இலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம்
பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்

பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்
விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி

விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய்
உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

9
3279 ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்

அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம்
பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்

பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ
டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்

இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த
ஊற்றமதாம் சமரசஆ னந்தசபை தனிலே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

10
3280 வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்

வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்
புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே

புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி
மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்

விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி
உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

11
3281 இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்

ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்

திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்

மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்
உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

12
3282 ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்

உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்

ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்

யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

13

திருச்சிற்றம்பலம்

3. ஆற்றாமை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3283 எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார்

ஈயினும் நாயினும் இழிந்தேன்
புழுவினும் சிறியேன்பொய்விழைந் துழல்வேன்

புன்மையேன் புலைத்தொழிற்கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன்

மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன்

குறிப்பினுக் கென்கட வேனே.

1
3284 கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன்

கலகர்தம் உறவினிற் களித்தேன்
உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன்

உலகியற் போகமே உவந்தேன்
செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன்

தெய்வம்ஒன் றெனும்அறி வறியேன்
குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன்

குறிப்பினுக் கென்கட வேனே.

2
3285 கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக்

கண்மனக் குரங்கனேன் கடையேன்
நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன்

நீசனேன் பாசமே உடையேன்
நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த

நச்சுமா மரம்எனக்கிளைத்தேன்
கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன்

குறிப்பினுக் கென்கட வேனே.

3
3286 நிலத்திலும்பணத்தும் நீள்விழிமடவார்

நெருக்கிலும்பெருக்கிய நினைப்பேன்
புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப்

போக்கிவீண் போதுபோக் குறுவேன்
நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய

நாயினுங் கடையனேன் நவையேன்
குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன்

குறிப்பினுக் கென்கட வேனே.

4
3287 செடிமுடிந் தலையும்மனத்தினேன் துன்பச்

செல்லினால்அரிப்புண்டசிறியேன்
அடிமுடி அறியும் ஆசைசற் றறியேன்

அறிந்தவர் தங்களை அடையேன்
படிமுடி வழித்துக் கடிகொளும் கடையர்

பணத்திலும் கொடியனேன் வஞ்சக்
கொடிமுடிந் திடுவேன் அம்பலக் கூத்தன்

குறிப்பினுக் கென்கட வேனே.

5
3288 அரங்கினிற் படைகொண் டுயிர்க்கொலை புரியும்

அறக்கடை யவரினுங் கடையேன்
இரங்கில்ஓர் சிறிதும் இரக்கம்உற் றறியேன்

இயலுறு நாசியுட் கிளைத்த
சிரங்கினிற் கொடியேன் சிவநெறி பிடியேன்

சிறுநெறிச் சழக்கையே சிலுகுக்
குரங்கெனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன்

குறிப்பினுக் கென்கட வேனே.

6
3289 வாட்டமே உடையார் தங்களைக் காணின்

மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன்
கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன்

கூற்றினும் கொடியனேன் மாயை
ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன்

அச்சமும் அவலமும் இயற்றும்
கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன்

குறிப்பினுக் கென்கட வேனே.

7
3290 கலைத்தொழில் அறியேன் கள்உணுங் கொடியேன்

கறிக்குழல் நாயினும் கடையேன்
விலைத்தொழில் உடையேன் மெய்எலாம் வாயாய்

விளம்புறும் வீணனேன் அசுத்தப்
புலைத்தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம்

பொங்கிய மனத்தினேன் பொல்லாக்
கொலைத்தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன்

குறிப்பினுக் கென்கட வேனே.

8
3291 பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப்

பணம்பறித் துழல்கின்ற படிறேன்
எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை

இயற்றுவேன் எட்டியே அனையேன்
மணமிலா மலரிற் பூத்தனன் இருகால்

மாடெனத் திரிந்துழல் கின்றேன்
குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன்

குறிப்பினுக் கென்கட வேனே.

9
3292 கடியரில் கடியேன் கடையரில் கடையேன்

கள்வரில் கள்வனேன் காமப்
பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன்

பொய்யரில் பொய்யனேன் பொல்லாச்
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன்

தீயரில் தீயனேன் பாபக்
கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன்

குறிப்பினுக் கென்கட வேனே.

10

திருச்சிற்றம்பலம்

4. பிறப்பவம் பொறாது பேதுறல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3293 குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்

குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன்
மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்

வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்
நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா

நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன்
நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்

நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.

1
3294 விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது

விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்

அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்

கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ

கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.

2
3295 அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும்

அதிகரித்துத் துன்மார்க்கத் தரசுசெயுங் கொடியேன்
குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன்

கொல்லாமை என்பதைஓர் குறிப்பாலும் குறியேன்
செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன்

சினத்தாலும் மதத்தாலும் செறிந்தபுதல் அனையேன்
எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன்

இதயமறி யேன்மன்றில் இனித்தநடத் திறையே.

3
3296 இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர்

இழிவிலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம்ஒன்றும் இல்லேன்
அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த

அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன்
பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன்

பாதகமும் சூதகமும் பயின்றபெறும் படிறேன்
தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது

தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே.

4
3297 ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன்

ஏதமெலாம் நிறைமனத்தேன் இரக்கமிலாப் புலையேன்
சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன்

செய்வகைஒன் றறியாத சிறியரினும் சிறியேன்
மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன்

வஞ்சம்எலாம் குடிகொண்ட வாழ்க்கைமிக உடையேன்
வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது

மெய்க்கருத்தை அறிந்திலேன் விளங்குநடத் தரசே.

5
3298 அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ

டால்எனவே மிகக்கிளைத்தேன் அருளறியாக் கடையேன்
புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன்

புங்கெனவும் புளிஎனவும் மங்கிஉதிர் கின்றேன்
பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன்

பசைஅறியாக் கருங்கல்மனப் பாவிகளிற் சிறந்தேன்
விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்

வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே.

6
3299 பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே

பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்

வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்
வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்

வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன்
தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது

திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடந் தவனே.

7
3300 தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்

தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்

பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்

ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது

நல்லதிரு வுளம்அறியேன் ஞானநடத் திறையே.

8
3301 இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்

இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை

புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்
நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த

நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன்
கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது

கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே.

9
3302 காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்

களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்

நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்

அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது

குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.

10

திருச்சிற்றம்பலம்

5. மாயைவலிக் கழுங்கல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3303 தாவு மான்எனக் குதித்துக்கொண் டோ டித்

தைய லார்முலைத் தடம்படுங் கடையேன்
கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும்

கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன்
ஓவு றாதுழல் ஈஎனப் பலகால்

ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்
சாவு றாவகைக் கென்செயக் கடவேன்

தந்தை யேஎனைத் தாங்கிக்கொண் டருளே.

1
3304 போக மாதியை விழைந்தனன் வீணில்

பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
தேக மாதியைப் பெறமுயன் றறியேன்

சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்

காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
ஆக மாதிசொல் அறிவறி வேனோ

அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.

2
3305 விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்

விருந்தி லேஉண வருந்திஓர் வயிற்றுக்
குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன்

கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன்

மாய மேபுரி பேயரில் பெரியேன்
பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன்

பரம னேஎனைப் பரிந்துகொண் டருளே.

3
3306 மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன்

வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன்
இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன்

ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன்
குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன்

கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன்
சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன்

தெய்வ மேஎனைச் சேர்த்துக்கொண் டருளே.

4
3307 கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்

கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த

கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன்
விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்

வேட னேன்முழு மூடரில் பெரியேன்
அடிய னாவதற் கென்செயக் கடவேன்

அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.

5
3308 தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன்

சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன்
ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன்

இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால்
வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன்

வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்
ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன்

உடைய வாஎனை உவந்துகொண்ட ருளே.

6
3309 வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து

வாடும் ஓர்பொதி மாடென உழன்றேன்
பருத்த ஊனொடு மலம்உணத் திரியும்

பன்றி போன்றுளேன் நன்றியொன் றறியேன்
கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த

கடைய நாயினிற் கடையனேன் அருட்குப்
பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன்

புண்ணி யாஎனைப் புரிந்துகொண் டருளே.

7
3310 துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்

சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன்
தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்

சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன்
திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன்

தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான்
உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்

உடைய வாஎனை உவந்துகொண் டருளே.

8
199. வெருக்கு - பூனை. ககரமெய் விரிக்கும் வழி விரித்தல். முதற்பதிப்பு
3311 கான மேஉழல் விலங்கினிற் கடையேன்

காம மாதிகள் களைகணிற் பிடித்தேன்
மான மேலிடச் சாதியே மதமே

வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன்
ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன்

இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்
ஞான மேவுதற் கென்செயக் கடவேன்

நாய காஎனை நயந்துகொண் டருளே.

9
3312 இருளை யேஒளி எனமதித் திருந்தேன்

இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன்
மருளை யேதரு மனக்குரங் கோடும்

வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்
பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன்

பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன்
அருளை மேவுதற் கென்செயக் கடவேன்

அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.

10

திருச்சிற்றம்பலம்

6. முறையீடு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3313 மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்

மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்

செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்

எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

1
3314 அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்

அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன்
நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்

நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன்
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்

மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

2
3315 கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த

கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன்
நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்

நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்
சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்

திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ
இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

3
3316 தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்

சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன்
யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்

உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன்
ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே

அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ
ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

4
3317 வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன்

மெய்வகையும் கைவகையும் செய்வகையும் அறியேன்
நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன்

நான்ஆர்என் றறியேன்எங் கோன்ஆர்என் றறியேன்
போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான

பூரணா காயம்எனும் பொதுவைஅறி வேனோ
ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

5
3318 கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும்

கதிஅறியேன் கதிஅறிந்த கருத்தர்களை அறியேன்
கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன்

கொடுங்காமக் கடல்கடக்கும் குறிப்பறியேன் குணமாம்
மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும்

மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

6
3319 சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்

சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்

ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்

நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

7
3320 சாகாத தலைஅறியேன் வேகாத காலின்

தரம்அறியேன் போகாத தண்ணீரை அறியேன்
ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்

அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்

மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

8
200. ஏகம் - முத்தி, ஈறுதொக்கு நின்றது, முதற்பதிப்பு.
3321 தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்

சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்
அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை

அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்
சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே

தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ
எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

9
3322 வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்

மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே

தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே

ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

10

திருச்சிற்றம்பலம்

7. அடியார் பேறு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3323 அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம்
நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ
கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே.
1
3324 பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள்
ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே
மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன்
நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே.
2
3325 பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிதளிப்பான்
ஊழை அகற்றும் பெருங்கருணை உடையான் என்பார் உனைஐயோ
மோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா யாகி மொத்துண்ணும்
ஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல் அழகோ எங்கோவே.
3
3326 மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று
பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே
இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே.
4
3327 முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய
உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே
மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக்
கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ.
5
3328 அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ
இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல்
செங்கேழ் இதழிச் சடைக்கனியே201 சிவமே அடிமைச் சிறுநாயேன்
எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே.
6
201. செங்கேழ் வண்ணத் தனிக்கனியே - முதற்பதிப்பு, பொ. சு; பி. இரா. பாடம்.
3329 அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான
வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்
தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்
எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே.
7
3320 தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து
வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்
சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே.
8
3331 பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக்
கதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப
திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ
எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே.
9
3332 வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள்
பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான்
நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.
10
3333 கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலேநான்
அல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த் திங்கே அயர்கின்றேன்
கொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர் மனம்போலச்
சொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே ஐயோ துணிந்தாயோ.
11
3334 படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக்
கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே
பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன்
அடிமேல் ஆசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே.
12
3335 நாயேன் உலகில் அறிவுவந்த நாள்தொட் டிந்த நாள்வரையும்
ஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த் திருந்தேன் என்னுடைய
தாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே தயவு தாராயேல்
மாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங் கிருக்கத் துணிவேனே.
13
3336 நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை
உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற் பின்னர் உலகத்தே
வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற
பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே.
14
3337 இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார்
வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன்
அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத்
துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே.
15
3338 எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ
அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன்
சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ
முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே.
16
3339 எந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ
அந்த வகையை நான்அறியேன் அறிவிப் பாரும் எனக்கில்லை
இந்த வகைஇங் கையோநான் இருந்தால் பின்னர் என்செய்வேன்202
பந்த வகைஅற் றவர்உளத்தே நடிக்கும் உண்மைப் பரம்பொருளே203.
17
202. என்செய்கேன் - ச மு க. பதிப்பு.
203. பரஞ்சுடரே - படிவேறுபாடு. ஆ பா.
3340 அடுக்குந் தொண்டர் தமக்கெல்லாம் அருளீந் திங்கே என்னளவில்
கொடுக்குந் தன்மை தனைஒளித்தால் ஒளிக்கப் படுமோ குணக்குன்றே
தடுக்குந் தடையும் வேறில்லை தமியேன் தனைஇத் தாழ்வகற்றி
எடுக்குந் துணையும் பிறிதில்லை ஐயோ இன்னும் இரங்கிலையே.
18
3341 எல்லாம் உடையாய் நின்செயலே எல்லாம் என்றால் என்செயல்கள்
எல்லாம் நினது செயல்அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல்
வல்லாய் என்னைப் புறம்விடுத்தால் புறத்தும் உன்றன் மயம்அன்றே
நல்லார் எங்கும் சிவமயம்என் றுரைப்பார் எங்கள் நாயகனே.
19
3342 கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும்
பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில்
ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே.
20

திருச்சிற்றம்பலம்

8. ஆன்ம விசாரத் தழுங்கல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3343 போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன்

பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன்
ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின்

இச்சையால் எருதுநோ வறியாக்
காகமே எனப்போய்ப் பிறர்தமை வருத்திக்

களித்த பாதகத்தொழிற் கடையேன்
மோகமே உடையேன் என்னினும் எந்தாய்

முனிந்திடேல் காத்தருள் எனையே.

1
3344 பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப்

புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார்
பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த

பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும்
ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன்

அன்பினால் அடுத்தவர் கரங்கள்
கூப்பினுங் கூப்பாக் கொடுங்கையேன் எனினும்

கோபியேல் காத்தருள் எனையே.

2
3345 விழுத்தலை நெறியை விரும்பிலேன் கரும்பின்

மிகஇனிக் கின்றநின் புகழ்கள்
வழுத்தலை அறியேன் மக்களே மனையே

வாழ்க்கையே துணைஎன மதித்துக்
கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன்

கொக்கனேன் செக்கினைப் பலகால்
இழுத்தலை எருதேன் உழத்தலே உடையேன்

என்னினும் காத்தருள் எனையே.

3
3346 புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து

பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில்
தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த

தயவிலாச் சழக்கனேன் சழக்கர்
உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில்

உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன்
இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன்

என்னினும் காத்தருள் எனையே.

4
3347 கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன்

கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த

கடையனேன் கங்குலும் பகலும்
அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை

அறவுண்டு குப்பைமேற் போட்ட
நெட்டிலை அனையேன் என்னினும் வேறு

நினைத்திடேல் காத்தருள் எனையே.

5
3348 நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில்

நெருக்கிய மனத்தினேன் வீணில்
போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன்

புனைகலை இலர்க்கொரு கலையில்
ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள

உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன்
ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன்

என்னினும் காத்தருள்எனையே.

6
3349 அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன்

அசடனேன் அறிவிலேன்உலகில்
குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க்

குழியிலே குளித்தவெங் கொடியேன்
வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க

மனங்கொணட சிறியேனன் மாயைக்
களத்திலே பயின்ற உளத்திலே பெரியன்

என்னினும் காத்தருள் எனையே.

7
3350 தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத்

துதித்திலேன் தூய்மைஒன் றறியேன்
கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில்

கலந்துணக் கருதிய கருத்தேன்
பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த

பாவியேன் தீமைகள் சிறிதும்
எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன்

என்னினும் காத்தருள் எனையே.

8
3351 வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை

மனைகவர் கருத்தினேன் ஓட்டைச்
சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன்

தயவிலேன் சூதெலாம் அடைத்த
பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில்

பெரியவர் மனம்வெறுக் கச்செய்
எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன்

என்னினும் காத்தருள் எனையே.

9
3352 உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந்

தோதிய வறிஞருக் கேதும்
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில்

குணம்பெரி துடையநல் லோரை
அடுத்திலேன் அடுத்தற் காசையும் இல்லேன்

அவனிமேல் நல்லவன் எனப்பேர்
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன்

றிருக்கின்றேன் காத்தருள் எனையே.

10

திருச்சிற்றம்பலம்

9. அவா அறுத்தல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3353 தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம்

தக்கமுப் போதினும் தனித்தே
சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார்

சிறியனேன் தவஞ்செய்வான் போலே
ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே

நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே
காலையா தியமுப் போதினும் சோற்றுக்

கடன்முடித் திருந்தனன் எந்தாய்.

1
3354 சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன்

துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி
ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என்

றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில்

பொருந்திய காரசா ரஞ்சேர்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை

தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.

2
3355 விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி

விளைவிலா தூண்எலாம் மறுத்த
கருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக்

கருத்துவந் துண்ணுதற் கமையேன்
நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும்

நீரிடாத் தயிரிலே நெகிழ்ந்த
பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை

பற்றினேன் என்செய்வேன் எந்தாய்.

3
3356 உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என்

றொருவனை உரைப்பதோர் வியப்போ
குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக்

கொண்டுபோய் உண்டனன் பருப்புக்
கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக்

கறியிலே கலந்தபே ராசை
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு

வீங்கிட உண்டனன் எந்தாய்.

4
3357 கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த

கீரையே விரும்பினேன் வெறுந்தண்
நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின்

நீரையே விரும்பினேன் உணவில்
ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன்

அய்யகோ அடிச்சிறு நாயேன்
பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம்

பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்.

5
3358 பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே

பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை

தகுபலா மாமுதற் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும்

சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க

வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.

6
3359 உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த

உண்டியே உண்டனன் பலகால்
கடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன்

கட்டிநல் தயிரிலே கலந்த
தடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்

சம்பழச் சோற்றிலே தடித்தேன்
திடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில்

செருக்கினேன் என்செய்வேன் எந்தாய்.

7
3360 மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில்

விருப்பெலாம் வைத்தனன்உதவாச்
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த

துவையலே சுவர்க்கம்என் றுண்டேன்
இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில்

எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன்
குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை

கொண்டனன் என்செய்வேன்எந்தாய்.

8
3361 தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும்

தவறவிட் டிடுவதற் கமையேன்
கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக்

கொட்டினேன் குணமிலாக் கொடியேன்
வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப

மலங்கொட்ட ஓடிய புலையேன்
பண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த

பாவியேன் என்செய்வேன் எந்தாய்.

9
3362 வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி

வைத்தலே துவட்டலில் சுவைகள்
உறுத்தலே முதலா உற்றபல் உணவை

ஒருமல வயிற்றுப்பை உள்ளே
துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன்

துணிந்தரைக் கணத்தும்வன் பசியைப்
பொறுத்தலே அறியேன் மலப்புலைக் கூட்டைப்

பொறுத்தனன் என்செய்வேன் எந்தாய்.

10
3363 பருப்பிடி யரிவா லிடிகளா திகளால்

பண்ணிய பண்ணிகா ரங்கள்
உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம்

ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன்
கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய

கடையரில் கடையனேன் உதவாத்
துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து

தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்.

11
3364 அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள்

அடுக்கிய இடந்தொறும் அலைந்தே
தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத்

தவம்புரிந் தான்என நடித்தேன்
பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப்

பொங்கினேன் அய்யகோ எனது
முடிக்கடி புனைய முயன்றிலேன் அறிவில்

மூடனேன் என்செய்வேன் எந்தாய்.

12
3365 உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை

உடையவா அடியனேன் உனையே
அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன்

அப்பநின் ஆணைநின் தனக்கே
தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன்

தூயனே துணைநினை அல்லால்
கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண்

கைவிடேல் கைவிடேல் எந்தாய்.

13

திருச்சிற்றம்பலம்

10. தற் சுதந்தரம் இன்மை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3366 இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற்

கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே
எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை

அருட்சோதி இயற்கை என்னும்
துப்பாய உடலாதி தருவாயோ

இன்னும்எனைச் சோதிப் பாயோ
அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ்

வடியேனால் ஆவ தென்னே.

1
3367 என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந்

திலன்என்றே ஏங்கி ஏங்கி
மன்னேஎன் மணியேகண் மணியேஎன்

வாழ்வேநல் வரத்தாற் பெற்ற
பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன்

புகலேமெய்ப் போத மேஎன்
அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி

அடியேனால் ஆவ தென்னே.

2
3368 பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி

எடுத்தரையில் புனைவேன் சில்லோர்
தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி

ஓடுவனித் தரத்தேன் இங்கே
முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின்

அருள்இலதேல் முன்னே வைத்த
அடிஎடுக்க முடியாதே அந்தோஇச்

சிறியேனால் ஆவ தென்னே.

3
3369 பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால்

பணிகின்றேன் பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்

குழைகின்றேன் குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால்

உறங்குகின்றேன் உறங்கா தென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச்

சிறியேனால் ஆவ தென்னே.

4
3370 உடுப்பவனும் உண்பவனும் நானேஎன்

னவும்நாணம் உறுவ தெந்தாய்
தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும்

பிறப்பிறப்புத் தன்னை நீக்கி
எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு

பவஉருவாய் என்னுள் ஓங்கி
அடுப்பவனும் நீஎன்றால் அந்தோஇச்

சிறியேனால் ஆவ தென்னே.

5
3371 சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற

பெரும்பாவம் தன்னை எண்ணி
நோவதின்று புதிதன்றே என்றும்உள

தால்இந்த நோவை நீக்கி
ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே

ஆகும்மற்றை இறைவ ராலே
ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச்

சிறியேனால் ஆவ தென்னே.

6
3372 இசைத்திடவும் நினைத்திடவும் பெரிதரிதாம்

தனித்தலைமை இறைவா உன்றன்
நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி

ஐந்தொழில்செய் நாத ராலும்
தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத்

தங்கள்சுதந் தரத்தால் இங்கே
அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச்

சிறியேனால் ஆவ தென்னே.

7
3373 கல்லாய மனத்தையும்ஓர் கணத்தினிலே

கனிவித்துக் கருணை யாலே
பல்லாரும் அதிசயிக்கப் பக்குவந்தந்

தருட்பதமும் பாலிக் கின்றோய்
எல்லாஞ்செய் வல்லோய்சிற் றம்பலத்தே

ஆடல்இடு கின்றோய் நின்னால்
அல்லால்ஒன் றாகாதேல் அந்தோஇச்

சிறியேனால் ஆவ தென்னே.

8
3374 கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய்

குற்றமெலாம் கருதி மாயைத்
திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே

துணைஎனநான் சிந்தித் திங்கே
உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என்

உறவேஎன் உயிரே என்றன்
அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச்

சிறியேனால் ஆவ தென்னே.

9
3375 இன்பேநன் றருளிஅருள் இயற்கையிலே

வைத்தாலும் இங்கே என்னைத்
துன்பேசெய் வித்தாலும் என்செய்வேன்

நின்னருளே துணைஎன் றந்தோ
என்பேதை மனமடங்கி இருப்பதன்றி

எல்லாங்கண் டிருக்கும் என்றன்
அன்பேஎன் அம்மேஎன் அப்பாஇச்

சிறியேனால் ஆவ தென்னே.

10

திருச்சிற்றம்பலம்

11. அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3376 திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்

திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான

உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்

பொங்கிஅகம் புறங்காணா தெங்கு நிறைந்திடுமோ
அருத்தகும்அவ் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்

அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.

1
3377 கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ

கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ

அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்

வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்

தனதுதிரு உளம்எதுவோ சற்றுமறிந் திலனே.

2
3378 நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ

ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ
போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ

புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ

வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ
பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்

பரமர்திரு உளம்எதுவோ பரமம்அறிந் திலனே.

3
3379 சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்

சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்

பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத

நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்

வள்ளல்குரு நாதர்திரு உள்ளம்அறி யேனே.

4
3380 களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்

கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ

வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ

குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ

ஜோதிதிரு உளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.

5
3381 திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம்

சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள்
கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர்

காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ
விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம்

விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ
தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ

தடைபடுமோ திருஉளந்தான் சற்றும்அறிந் திலனே.

6
3382 ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே

அருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந்த ததுதான்
கானந்த மதத்தாலே காரமறை படுமோ

கடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ
ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ

உணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ
நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ

நல்லதிரு உளம்எதுவோ வல்லதறிந் திலனே.

7
3383 தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்

சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை
காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ

கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம்
பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ

பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ
வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை

மறந்திடுமோ திருஉளத்தின் வண்ணம்அறிந் திலனே.

8
3384 தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச்

செல்கின்றேன் சிறியேன்முன் சென்றவழி அறியேன்
காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ

கால்இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ

விவேகம்எனும் துணையுறுமோ வேடர்பயம் உறுமோ
ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ

எப்படியோ திருஉளந்தான் ஏதும்அறிந் திலனே.

9
3385 ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே

நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ

உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ

இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ
ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ

ஐயர்திரு உளம்எதுவோ யாதுமறிந் திலனே.

10

திருச்சிற்றம்பலம்

12. பிள்ளைச் சிறு விண்ணப்பம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3386 தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்

தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப்

பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும்

புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்

அம்மைஅப் பாஇனி ஆற்றேன்.

1
3387 பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம்

பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற

வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான்

குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என் றனைநீ

முனிவதென் முனிவுதீர்ந் தருளே.

2
3388 வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை

விரும்பினும் அங்ஙனம் புரியச்
சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற

தந்தைதாய் மகன்விருப் பாலே
இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ

என்றனை விழைவிக்க விழைந்தேன்
செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின்

திருவுளம் அறியுமே எந்தாய்.

3
3389 பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர்

புல்முனை ஆயினும் பிறர்க்கு
நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால்

நண்ணிய கருணையால் பலவே
கைபிழை யாமை கருதுகின் றேன்நின்

கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ

திருவுளம் அறியுமே எந்தாய்.

4
3390 அப்பணி முடி204என் அப்பனே மன்றில்

ஆனந்த நடம்புரி அரசே
இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட்

டிந்தநாள் வரையும்என் தனக்கே
எப்பணி இட்டாய் அப்பணி அலதென்

இச்சையால் புரிந்ததொன் றிலையே
செப்புவ தென்நான் செய்தவை எல்லாம்

திருவுளம் அறியுமே எந்தாய்.

5
204. அப்பணிசடை - ச. மு. க. பதிப்பு.
3391 முன்னொடு பின்னும் நீதரு மடவார்

முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன்

புணர்ப்பலால் என்புணர்ப் பலவே
என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே

எந்தைவே றியம்புவ தென்னோ
சொன்னெடு வானத் தரம்பையர் எனினும்

துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே.

6
3392 இன்னுமிங் கெனைநீ மடந்தையர் முயக்கில்

எய்துவித் திடுதியேல் அதுவுன்
தன்னுளப் புணர்ப்பிங் கெனக்கொரு சிறிதும்

சம்மதம் அன்றுநான் இதனைப்
பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப்

பால்உணும் காலையே உளதால்
மன்னும்அம் பலத்தே நடம்புரி வோய்என்

மதிப்பெலாம் திருவடி மலர்க்கே.

7
3393 அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே

அருந்தலில் எனக்குள வெறுப்பைப்
பிறிவிலா தென்னுட் கலந்ததீ அறிதி

இன்றுநான் பேசுவ தென்னே
செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன்

திருவருள் அமுதமே விழைந்தேன்
எறிவிலாச் சுவைவே றெவற்றினும் விழைவோர்

எட்டுணை யேனும்இன் றெந்தாய்.

8
3394 இன்சுவை உணவு பலபல எனக்கிங்

கெந்தைநீ கொடுப்பிக்கச் சிறியேன்
நின்சுவை உணவென் றுண்கின்றேன் இன்னும்

நீதரு வித்திடில் அதுநின்
தன்சுதந் தரம்இங் கெனக்கதில் இறையும்

சம்மதம் இல்லைநான் தானே
என்சுதந் தரத்தில் தேடுவேன் அல்லேன்

தேடிய தும்இலை ஈண்டே.

9
3395 செறிவதில் மனத்தேன் காசிலே ஆசை

செய்திலேன் இந்தநாள் அன்றி
அறிவதில் லாத சிறுபரு வத்தும்

அடுத்தவர் கொடுத்தகா சவர்மேல்
எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள்

இருக்கின்ற நீ அறிந் ததுவே
பிறிவதில் லாநின் அருட்பெரும் பொருளைப்

பெற்றனன் பேசுவ தென்னே.

10
3396 பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான்

படைத்தஅப் பணங்களைப் பலகால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன்

கேணியில் எறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை

எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக்

கண்டனன் இனிச்சொல்வ தென்னே.

11
3397 கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் ளளவும்

கிளைத்திலேன் பசிஅற உணவு
திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன்

இன்றுமே வெறுப்பில்உண் கின்றேன்
தளைத்திடு முடைஊன் உடம்பொரு சிறிதும்

தடித்திட நினைத்திலேன் இன்றும்
இளைத்திட விழைகின் றேன்இது நான்தான்

இயம்பல்என் நீஅறிந் ததுவே.

12
3398 இவ்வுல கதிலே இறைஅர சாட்சி

இன்பத்தும் மற்றைஇன் பத்தும்
எவ்வள வெனினும் இச்சைஒன் றறியேன்

எண்ணுதோ றருவருக் கின்றேன்
அவ்வுலக கதிலே இந்திரர் பிரமர்

அரிமுத லோர்அடை கின்ற
கவ்வைஇன் பத்தும் ஆசைசற் றறியேன்

எந்தைஎன் கருத்தறிந் ததுவே.

13
3399 சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும்

சாற்றிடும் யோகமோர் நான்கும்
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது

புந்தியில் ஆசைசற் றறியேன்
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை

பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
உறியதோர் இச்சை எனக்கிலை என்றன்

உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.

14
3400 இறக்கவும் ஆசை இல்லைஇப் படிநான்

இருக்கவும் ஆசைஇன் றினிநான்
பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம்

பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள்

செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து

தூங்கவும் ஆசைஒன் றிலையே.

15
3401 சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித்

தனித்தபே ரன்புமெய் அறிவும்
நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா

நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே
சிற்சபை நடமும் பொற்சபை நடமும்

தினந்தொறும் பாடிநின் றாடித்
தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம்

செய்வதென் இச்சையாம் எந்தாய்.

16
3402 உருமலி உலகில் உன்னைநான் கலந்தே

ஊழிதோ றூழியும் பிரியா
தொருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன்

உன்னையே பாடி நின்றாடி
இருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக்

கிடுக்கணுற் றால்அவை தவிர்த்தே
திருமணிப் பொதுவில் அன்புடை யவராச்

செய்யவும் இச்சைகாண் எந்தாய்.

17
3403 எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே

எண்ணிநல் இன்புறச் செயவும்
அவ்வுயிர் களுக்கு வரும்இடை யூற்றை

அகற்றியே அச்சநீக் கிடவும்
செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச்

சிவசிவ என்றுகூத் தாடி
ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே

ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்.

18
3404 உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி

உன்அறி வடையும்நாள் வரையில்
இலகிஎன் னோடு பழகியும் எனைத்தான்

எண்ணியும் நண்ணியும் பின்னர்
விலகிய மாந்தர் அனைவரும் இங்கே

மெய்யுறக் கூடிநின் றுனையே
அலகில்பே ரன்பில் போற்றிவாழ்ந் திடவும்

அடியனேற் கிச்சைகாண் எந்தாய்.

19
3405 திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும்

சிதம்பரம் எனும்பெருங் கோயில்
உருவளர் மறையும் ஆகமக் கலையும்

உரைத்தவா றியல்பெறப் புதுக்கி
மருவளர் மலரின் விளக்கிநின் மேனி

வண்ணங்கண் டுளங்களித் திடவும்
கருவளர் உலகில் திருவிழாக் காட்சி

காணவும் இச்சைகாண் எந்தாய்.

20
3406 தங்கமே அனையார் கூடிய ஞான

சமரச சுத்தசன் மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம்

சார்திருக் கோயில்கண் டிடவும்205
துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி

துலங்கவும் சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிர நின்றனைப் பாடி

ஆடவும் இச்சைகாண் எந்தாய்.

21
205. சங்கம் சார்திருக்கோயில் - வடலூர் ஞானசபை. ச . மு. க.
3407 கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த

கடுந்துயர் அச்சமா திகளைத்
தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம்

தரவும்வன் புலைகொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க

உஞற்றவும் அம்பலந் தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை

வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்.

22
3408 மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும்

வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்

கணமும்நான் சகித்திடமாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால்

இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான்

நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.

23
3409 இவையலால் பிறிதோர் விடயத்தில் இச்சை

எனக்கிலை இவைஎலாம் என்னுள்
சிவையொடும் அமர்ந்த பெருந்தயா நிதிநின்

திருவுளத் தறிந்தது தானே
தவம்இலேன் எனினும் இச்சையின் படிநீ

தருதலே வேண்டும்இவ் விச்சை
நவைஇலா இச்சை எனஅறி விக்க

அறிந்தனன் நவின்றனன் எந்தாய்.

24

திருச்சிற்றம்பலம்

13. பிள்ளைப் பெரு விண்ணப்பம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3410 தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது

தந்தையே திருச்சிற்றம் பலத்தே
கனிப்பெருங் கருணைக் கடவுளே அடியேன்

கருதிநின் றுரைக்கும்விண் ணப்பம்
இனிப்புறும் நினது திருவுளத் தடைத்தே

எனக்கருள் புரிகநீ விரைந்தே
இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன்

இணைமலர்ப் பொன்னடி ஆணை.

1
3411 திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே

திகழ்கின்ற தெய்வமே அன்பர்
பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும்

பண்பனே பரையிடப் பாகா
பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற

பேரருட் சோதியே எனக்கே
உரியநல் தந்தை வள்ளலே அடியேன்

உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே.

2
3412 தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத்

தலைவனே திருச்சிற்றம் பலத்தே
வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப

வயங்கிய மெய்யின்ப வாழ்வே
ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும்

உவப்புற இனிக்குந்தெள் ளமுதே
ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன்

நவில்கின்றேன் கேட்டருள் இதுவே.

3
3413 என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை

எழுமையும் காத்தருள் இறைவா
என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே

எனக்கறி வுணர்த்திய குருவே
என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே

எனக்கருள் புரிந்தமெய் இன்பே
என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன்

இசைக்கின்றேன் கேட்கஇம் மொழியே.

4
3414 கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே

கனிந்தசிற் றம்பலக் கனியே
வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி

வயங்கிய வள்ளலே அன்பர்
தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத்

தெய்வமே திருவருட் சிவமே
தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே

தரித்தருள் திருச்செவிக் கிதுவே.

5
3415 என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த

இறைவனே திருச்சிற்றம் பலத்தே
என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங்

கீகுதும் என்றஎன் குருவே
என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி

எனக்குளே விளங்குபே ரொளியே
என்னைஈன் றளித்த தந்தையே விரைந்திங்

கேற்றருள் திருச்செவிக் கிதுவே.

6
3416 இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென்

இதயத்தில் எழுந்திருந் தருளி
விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு

விளங்கிட விளக்கியுட் கலந்தே
கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன்

கலந்தென இனிக்கின்றோய் பொதுவில்
அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே

அடைத்தருள் என்மொழி இதுவே.

7
3417 மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி

மன்னிய வடிவளித் தறிஞர்
குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக்

கொடுத்துளே விளங்குசற் குருவே
பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம்

பலத்திலே அன்பர்தம் அறிவாம்
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது

தந்தையே கேட்கஎன் மொழியே.

8
3418 விண்டபோ தகரும் அறிவரும் பொருளே

மெய்யனே ஐயனே உலகில்
தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர்

சூழ்ந்தவர் உறவினர் தாயர்
கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக்

குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம்

கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.

9
3419 சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது

தெய்வமே என்பெருஞ் சிறப்பே
ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர்

அடுத்தவர் உறவினர் நேயர்
வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால்

மெய்யுளம் வெதும்பிய வெதுப்பைப்
பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம்

பதைத்ததுன் உளம்அறி யாதோ.

10
3420 பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும்

பரமனே அரும்பெரும் பொருளே
தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச்

சங்கடப் பாவியால் வருந்தி
நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர்

நண்பன்என் றவரவர் குறைகள்
உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம்

உடைந்ததுன் உளம்அறி யாதோ.

11
3421 அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென்

ஐயனே இவ்வுல கதிலே
பொன்னையே உடையார் வறியவர் மடவார்

புகலும்ஆ டவர்இவர் களுக்குள்
தன்னையே அறியாப் பிணியினால் ஆவி

தளர்கின்றார் தருணம்ஈ தெனவே
சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த

சோபத்தை நீஅறி யாயோ.

12
3422 உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும்

ஒருவனே சிற்சபை உடையாய்
விண்டபே ருலகில் அம்மஇவ் வீதி

மேவும்ஓர் அகத்திலே ஒருவர்
ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என்

றொருவரோ டொருவர்தாம் பேசிக்
கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம்

குலைநடுங் கியதறிந் திலையோ.

13
3423 காவிநேர் கண்ணாள் பங்கனே206 தலைமைக்

கடவுளே சிற்சபை தனிலே
மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர்

வீதிஆ திகளிலே மனிதர்
ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத

அழுகுரல் கேட்டபோ தெல்லாம்
பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப்

பதைத்ததுன் உளம்அறி யாதோ.

14
206. காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
3424 நாதனே என்னை நம்பிய மாந்தர்

ஞாலத்தில் பிணிபல அடைந்தே
ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன்

எய்திய சோபமும் இளைப்பும்
ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும்

உற்றபேர் ஏக்கமா திகளும்
தீதனேன் இன்று நினைத்திட உள்ளம்

திடுக்கிடல் நீஅறிந் திலையோ.

15
3425 கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும்

கண்ணுதற் கடவுளே என்னைப்
பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர்

பெருகிய பழக்கமிக் குடையோர்
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து

மறைந்திட்ட தோறும்அப் பிரிவை
உற்றுநான் நினைக்குந் தோறும்உள் நடுங்கி

உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்.

16
3426 என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும்

எந்தையே என்றனைச் சூழ்ந்தே
நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை

நாயினேன் கண்டுகேட் டுற்ற
அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும்

அளவிலை அளவிலை அறிவாய்
இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும்

எய்திடும் துயரும்நீ அறிவாய்.

17
3427 நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில்

நெறியலா நெறிகளில் சென்றே
கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என்

றயலவர் குறித்தபோ தெல்லாம்
உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே

உற்றென நடுநடுக் குற்றே
துலைபுரிந்207 தோடிக் கண்களை மூடித்

துயர்ந்ததும் நீஅறிந் ததுவே.

18
207. தொலைபுரிந்து ஖ முதற்பதிப்பு, பொ.சு, ச.மு.க.
3428 ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற

ஒருவனே உலகியல் அதிலே
மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின்

வல்லொலி கேட்டபோ தெல்லாம்
காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம்

கடவுள்நீ யேஅறிந் திடுவாய்
ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய்

என்னுளம் நடுங்குவ தியல்பே.

19
3429 மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை

வள்ளலே உலகர சாள்வோர்
உறைமுடி208 வாள்கொண் டொருவரை ஒருவர்

உயிரறச் செய்தனர் எனவே
தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம்

தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்
இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய்

என்னுளம் நடுங்குவ தியல்பே.

20
208. உறைஉறு - முதற்பதிப்பு, பொ.சு., ச. மு. க.
3430 தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர்

தாய்க்குநால் என்பதை இரண்டாய்
வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன்

நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில்

சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்
காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன்

கலங்கினேன் அதுநினைத் தெந்தாய்.

21
3431 எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே

இலகிய இறைவனே உலகில்
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால்

பரதவிக் கின்றனர் என்றே
ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம்

உளம்பகீர் எனநடுக் குற்றேன்
இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய்

என்னுளம் நடுங்குவ தியல்பே.

22
3432 பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும்

பகரும்நேர் முதற்பல வயினும்
சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச்

சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே
மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை

வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்209
வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல

வருந்தினேன் எந்தைநீ அறிவாய்.

23
209. எந்தாய் கூகை வெங்குரல் செயுந்தோறும் - முதற்பதிப்பு, பொ.சு.,பி. இரா.
3433 காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின்

கடுங்குரல் கேட்டுளங் குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன்

சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய்

வீக்களால் மயங்கினேன் விடத்தில்210
ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம்

ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.

24
210. விடத்தின் - ச. மு. க.
3434 வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு

வெருவினேன் வெய்யநாய்க் குழுவின்
சீறிய குரலோ டழுகுரல் கேட்டுத்

தியங்கினேன் மற்றைவெஞ் சகுனக்
கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங்

கோள்செயும்211 ஆடவர் மடவார்
ஊறுசெய் கொடுஞ்சொல் இவைக்கெலாம் உள்ளம்

உயங்கினேன் மயங்கினேன் எந்தாய்.

25
211. செறும் - பி. இரா. பதிப்பு.
3435 நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும்

நிறைஉடம் பிற்சில உறுப்பும்
உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும்

உன்னிமற் றவைகளை அந்தோ
பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று

பேதுற்று மயங்கிநெஞ் சுடைந்தேன்
நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே

நடுங்கினேன் எந்தைநீ அறிவாய்.

26
3436 மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும்

மயங்கிநாம் இவரொடு முயங்கி
இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே

இன்னல்உற் றிடும்நமக் கின்னல்
தங்கிய பிறர்தம் துயர்தனைக்212 காண்டல்

ஆகும்அத் துயருறத் தரியேம்
பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம்

பயந்ததும் எந்தைநீ அறிவாய்.

27
212. துயர்களை - ச. மு. க.
3437 வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில்

மறைந்துவந் தடுத்தபின் நினைந்தே
மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால்

மயங்கிஉள் மகிழ்ந்தனம் எனிலோ
நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே

நடுங்குற வரும்எனப் பயந்தே
மெலிந்துடன் ஒளித்து வீதிவே றொன்றின்

மேவினேன் எந்தைநீ அறிவாய்.

28
3438 களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட

காலத்தும் உண்டகா லத்தும்
நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான்

நேர்ந்தபல் சுபங்களில் நேயர்
அளிப்புறு விருந்துண் டமர்கஎன் றழைக்க

அவர்களுக் கன்பினோ டாங்கே
ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே

பயத்தொடும் உற்றனன் எந்தாய்.

29
3439 இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம்

இச்சுகத் தால்இனி யாது
துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச்

சூழ்வெறு வயிற்றொடும் இருந்தேன்
அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்

ஐயகோ213 தெய்வமே இவற்றால்
வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து

வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்.

30
213. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா.
3440 உற்றதா ரணியில் எனக்குல குணர்ச்சி

உற்றநாள் முதல்ஒரு சிலநாள்
பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப்

பேருண வுண்டனன் சிலநாள்
உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம்

உறுவதற் கஞ்சினேன் உண்டேன்
மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள

மனநடுங் கியதுநீ அறிவாய்.

31
3441 தொழுந்தகை உடைய சோதியே அடியேன்

சோம்பலால் வருந்திய தோறும்
அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால்

அளவிடற் கெய்துமோ பகலில்
விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும்

விட்டிடா வன்மையால் தூங்கி
எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன்

என்செய்வேன் என்செய்வேன் என்றே.

32
3442 அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில்

அரும்பெருஞ் சோதியே அடியேன்
சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம்

தூக்கமே கண்டனன் தூக்கம்
வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன்

மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம்

தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்.

33
3443 உடையஅம் பலத்தில் ஒருவனே என்றன்

உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
கடையன்நான் நனவில் நடுங்கிய நடுக்கம்

கணக்கிலே சிறிதுறும் கனவில்
இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும்

எண்ணவும் எழுதவும் படுமோ
நடையுறு சிறியேன் கனவுகண் டுள்ளம்

நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.

34
3444 பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம்

தூக்கமாம் பாவிவந் திடுமே
இகலுறு கனவாம் கொடியவெம் பாவி

எய்துமே என்செய்வோம் என்றே
உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம்

உன்னுளம் அறியுமே எந்தாய்
நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம்

நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.

35
3445 தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும்

தொழிலிலே வந்தகோ பத்தில்
சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த

தருணம்நான் கலங்கிய கலக்கம்
வகுப்புற நினது திருவுளம் அறியும்

மற்றுஞ்சில் உயிர்களில் கோபம்
மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம்

மெய்யநீ அறிந்ததே அன்றோ.

36
3446 ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய

உயிர்கள்பால் தீமைகண் டாங்கே
அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால்

ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது

புந்தியில் அறிந்ததே எந்தாய்
வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே

வெதும்பிய நடுக்கம்நீ214 அறிவாய்.

37
214. நடுக்கமும் - படிவேறுபாடு. ஆ. பா.
3447 கோபமே வருமோ காமமே வருமோ

கொடியமோ கங்களே வருமோ
சாபமே அனைய தடைமதம் வருமோ

தாமதப் பாவிவந் திடுமோ
பாபமே புரியும் லோபமே வருமோ

பயனில்மாற் சரியம்வந் திடுமோ
தாபஆங் கார மேஉறு மோஎன்

றையநான் தளர்ந்ததும் அறிவாய்.

38
3448 காமமா மதமாங் காரமா திகள்என்

கருத்தினில் உற்றபோ தெல்லாம்
நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான்

நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்
சேமமார் உலகில் காமமா திகளைச்

செறிந்தவர் தங்களைக் கண்டே
ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும்

ஐயநின் திருவுளம் அறியும்.

39
3449 கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன்

காட்சியைக் கண்டபோ தெல்லாம்
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி

வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம்

நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப்

படுத்ததும் ஐயநீ அறிவாய்.

40
3450 புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில்

புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி

ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு

மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த

இளைப்பையும் ஐயநீ அறிவாய்.

41
3451 இந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ

டியல்கலைத் தருக்கஞ்செய் திடவே
வந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம்

மனம்மிக நடுங்கினேன் அறிவாய்
சந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத்

தமியனேன் மீளவுங் கண்டே
நொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம்

நொந்ததும் ஐயநீ அறிவாய்.

42
3452 முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ

தெரிந்திலேன் மோகமே லின்றித்
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்

ஒருத்தியைக் கைதொடச் சார்ந்தேன்
குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக்

கலப்பிலேன் மற்றிது குறித்தே
பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன்

பகர்வதென் எந்தைநீ அறிவாய்.

43
3453 பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய்

பண்பனே நண்பனே உலகில்
ஒதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால்

ஒருசில வாதங்கள் புரிந்தே
மதியிலா மையினால் அகங்கரித் ததன்பின்

வள்ளல்உன் அருளினால் அறிந்தே
விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம்

மெய்யனே நீஅறிந் ததுவே.

44
3454 அருளினை அளிக்கும் அப்பனே உலகில்

அன்புளார் வலிந்தெனக் கீந்த
பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம்

புழுங்கிய புழுக்கம்நீ அறிவாய்
மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து

மனமிக இளைத்ததும் பொருளால்
இருளுரும் எனநான் உளம்நடுங் கியதும்

எந்தைநின் திருவுளம் அறியும்.

45
3455 பொருளிலே உலகம் இருப்பதா தலினால்

புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்
மருவினால் பொருளின் இச்சையால் பலகால்

மருவுகின் றான்எனக் கருதி
வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும்

மேவிலேன் எந்தைநீ அறிவாய்
ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம்

உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.

46
3456 தகைத்தபே ருலகில் ஐயனே அடியேன்

தடித்தஉள் ளத்தொடு களித்தே
நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே

நல்லவா கனங்களில் ஏறி
உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே

ஓட்டிய போதெலாம் பயந்தேன்
பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப்

பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.

47
3457 சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில்

சஞ்சலம் உறும்எனப் பயந்தே
நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும்

நண்ணியும் பிறவிடத் தலைந்தும்
பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன்

பகலன்றி இரவும்அப் படியே
மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன்

விளம்பலென் நீஅறிந் ததுவே.

48
3458 உருவுள மடவார் தங்களை நான்கண்

ணுற்றபோ துளநடுக் குற்றேன்
ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர்

உவளகத் தொளித்தயல் இருந்தேன்
கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட

காலத்தில் நான்உற்ற கலக்கம்
திருவுளம் அறியும் உரத்தசொல் எனது

செவிபுகில் கனல்புகு வதுவே.

49
3459 பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும்

பராக்கிலே செலுத்திய போதும்
எண்ணிய மடவார் தங்களை விழைந்தே

இசைந்தனு பவித்தஅப் போதும்
நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும்

நவின்றசங் கீதமும் நடமும்
கண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும்

கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.

50
3460 நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது

நண்பினர் உடுத்திய போது
பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம்

பயந்தனர் வெய்யிலிற் கவிகை
வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம்

வெருவினேன் கைத்துகில் வீசி
அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி

அரைக்குமேல் வீக்கினன் எந்தாய்.

51
3461 கையுற வீசி நடப்பதை நாணிக்

கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால்

மெய்எலாம் ஐயகோ215 மறைத்தேன்
வையமேல் பிறர்தங் கோலமும் நடையும்

வண்ணமும் அண்ணலே சிறிதும்
பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப்

பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்.

52
215. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா
3462 வைகிய நகரில் எழிலுடை மடவார்

வலிந்தெனைக் கைபிடித் திழுத்தும்
சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால்

தனித்தெனைப் பலவிசை அறிந்தும்
பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும்

பொருள்முத லியகொடுத் திசைத்தும்
கைகலப் பறியேன் நடுங்கினேன் அவரைக்

கடிந்ததும் இல்லைநீ அறிவாய்.

53
3463 எளியரை வலியார் அடித்தபோ தையோ

என்மனம் கலங்கிய கலக்கம்
தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன்

திருவுளம் அறியுமே எந்தாய்216
களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான்

கடலினும் பெரியது கண்டாய்
அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை

அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார்.

54
216. அறியும் எந்தாயே - பி. இரா. பதிப்பு.
3464 இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த

இருப்பெலாம் கள்ளர்கள் கூடிக்
கரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது

காதிலே விழுந்தபோ தெல்லாம்
விரவிலே217 நெருப்பை மெய்யிலே மூட்டி

வெதுப்பல்போல் வெதும்பினேன் எந்தாய்
உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண்

டுளம்நடுக் குற்றனன் பலகால்.

55
217. விரைவிலே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. பதிப்பு.
3465 உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ

துள்ளகம் நடுங்கினேன் பலகால்
கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ

தையவோ கலங்கினேன் கருத்தில்
புரத்திலே அம்மா அப்பனே ஐயோ

எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம்

தந்தைநீ அறிந்தது தானே.

56
3466 மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை

மதித்துளம் வருந்திய பிறர்தம்
கண்ணினீர் விடக்கண் டையவோ நானும்

கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
நண்ணிநின் றொருவர் அசப்பிலே218 என்னை

அழைத்தபோ தடியனேன் எண்ணா
தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி

ஏன்எனல் மறந்தனன் எந்தாய்.

57
218. அசைப்பிலே - படிவேறுபாடு. ஆ. பா.
3467 தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால்

சிலுகுறும்219 என்றுளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே

நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க்

களத்திலே திரிந்துற்ற இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள்

எந்தைநீ அறிந்தது தானே.

58
219. சிறுகுறும் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு. க. பதிப்பு.
3468 என்புடை வந்தார் தம்முகம் நோக்கி

என்கொலோ என்கொலோ இவர்தாம்
துன்புடை யவரோ இன்புடை யவரோ

சொல்லுவ தென்னையோ என்றே
வன்புடை மனது கலங்கிஅங் கவரை

வாஎனல் மறந்தனன் எந்தாய்
அன்புடை220 யவரைக் கண்டபோ தெல்லாம்

என்கொலோ என்றயர்ந் தேனே.

59
220. இன்புடை - ச.மு க. பதிப்பு.
3469 காணுறு பசுக்கள் கன்றுக ளாதி

கதறிய போதெலாம் பயந்தேன்
ஏணுறு மாடு முதல்பல விருகம்221

இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
கோணுறு கோழி முதல்பல பறவை

கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
வீணுறு கொடியர் கையிலே வாளை

திர்த்தல்கண் டென்என வெருண்டேன்.

60
221. மிருகம் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க., பி. இரா. பதிப்பு.
3470 பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார்

பின்முன்நோக் காதுமேல் நோக்கி
அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன்

அவர்புகன் றிட்டதீ மொழிகள்
பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன்

புண்ணியா நின்துதி எனும்ஓர்
முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து

முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.

61
3471 வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்

நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா222 னிகளாய் ஏழைக ளாய்நெஞ்

சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.

62
222. ஈடு - ஒப்பு, முதற் பதிப்பு.
3472 நலிதரு சிறிய தெய்வமென் றையோ

நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள்

பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே

புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில்

கண்டகா லத்திலும் பயந்தேன்.

63
3473 துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்

தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக்

கண்டகா லத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி

வகைகளும் கண்டபோ தெல்லாம்
எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம்

எந்தைநின் திருவுளம்223 அறியும்.

64
223. திருவருள் - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
3474 நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை

நண்ணிடா அரையரை நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக்

கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம்

பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
விடுநிலை உலக நடைஎலாங் கண்டே

வெருவினேன் வெருவினேன் எந்தாய்.

65
3475 ஓங்கிய திருச்சிற் றம்பல முடைய

ஒருதனித் தலைவனே என்னைத்
தாங்கிய தாயே தந்தையே குருவே

தயாநிதிக் கடவுளே நின்பால்
நீங்கிய மனத்தார் யாவரே எனினும்

அவர்தமை நினைத்தபோ தெல்லாம்
தேங்கிய உள்ளம் பயந்தனன் அதுநின்

திருவுளம் அறியுமே எந்தாய்.

66
3476 காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன்

காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்
பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன்

பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து

நன்குறக் களித்துக் கால்கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப்பே சுதலை

நினைக்கவும் பயந்தனன் எந்தாய்.

67
3477 தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம்

சார்ந்திட முயலுறா தந்தோ
கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக்

கனிவுற வைத்தனர் ஆகிப்
புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள்

பொதுஎனக் கண்டிரங் காது
கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன்

எந்தைநான் கூறுவ தென்னே.

68
3478 இவ்வணஞ் சிறியேற் குலகியல் அறிவிங்

கெய்திய நாளது தொடங்கி
நைவணம் இற்றைப் பகல்வரை அடைந்த

நடுக்கமும் துன்பமும் உரைக்க
எவ்வணத் தவர்க்கும் அலகுறா224 தெனில்யான்

இசைப்பதென் இசைத்ததே அமையும்
செவ்வணத் தருணம் இதுதலை வாநின்

திருவுளம் அறிந்ததே எல்லாம்.

69
224. அலகுறாது - குறைவுபடாது. முதற் பதிப்பு.
3479 தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத்

தம்பிரான் அல்லையோ மனத்தைக்
கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த

கடவுள்நீ அல்லையோ எனைத்தான்
இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும்

எந்தைநீ அல்லையோ நின்பால்
உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன்

நீஅறி யாததொன் றுண்டோ .

70
3480 கைதலத் தோங்கும் கனியின்225 என் னுள்ளே

கனிந்தஎன் களைகண்நீ அலையோ
மெய்தலத் தகத்தும் புறத்தும்விட் டகலா

மெய்யன்நீ அல்லையோ எனது
பைதல்தீர்த் தருளுந் தந்தைநீ அலையோ

பரிந்துநின் திருமுன்விண் ணப்பம்
செய்தல்என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன்

திருவுளம் தெரிந்ததே226 எல்லாம்.

71
225. கனியில் - பி. இரா. பதிப்பு.
226. அறிந்ததே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க. பதிப்பு.
3481 இன்னவா றடியேன் அச்சமுந் துயரும்

எய்திநின் றிளைத்தனன் அந்தோ
துன்னஆ ணவமும் மாயையும் வினையும்

சூழ்ந்திடும் மறைப்பும்இங் குனைத்தான்
உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம்

என்பவால் என்செய்வேன் எனது
மன்னவா ஞான மன்றவா எல்லாம்

வல்லவா இதுதகு மேயோ.

72
3482 எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த

இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக்
கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என்

கூடவே அடுத்ததென் அந்தோ
வள்ளலே எனது வாழ்முதற் பொருளே

மன்னவா நின்னலால் அறியேன்
உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி

உன்னதே என்னதன் றெந்தாய்.

73
3483 என்சுதந் தரம்ஓர் எட்டுணை யேனும்

இல்லையே எந்தைஎல் லாம்உன்
தன்சுதந் தரமே அடுத்தஇத் தருணம்

தமியனேன் தனைப்பல துயரும்
வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும்

மாயையும் வினையும்ஆ ணவமும்
இன்சுவைக் கனிபோல் உண்கின்ற தழகோ

இவைக்கெலாம் நான்இலக் கலவே.

74
3484 அறிவொரு சிறிதிங் கறிந்தநாள் முதல்என்

அப்பனே நினைமறந் தறியேன்
செறிவிலாச் சிறிய பருவத்தும் வேறு

சிந்தைசெய் தறிந்திலேன் உலகில்
பிறிதொரு பிழையுஞ் செய்திலேன் அந்தோ

பிழைத்தனன் ஆயினும்என்னைக்
குறியுறக் கொண்டே குலங்குறிப் பதுநின்

குணப்பெருங் குன்றினுக் கழகோ.

75
3485 ஐயநான் ஆடும் பருவத்திற் றானே

அடுத்தநன் னேயனோ டப்பா
பொய்யுல காசை எனக்கிலை உனக்கென்

புகல்என அவனும்அங் கிசைந்தே
மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது

மெய்யருள் மீட்டிட மீண்டேம்
துய்யநின் உள்ளம் அறிந்ததே எந்தாய்

இன்றுநான் சொல்லுவ தென்னே.

76
3486 தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே

தெய்வமே தெய்வமே எனநின்
சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன்

தந்தையும் குருவும்நீ என்றேன்
பேர்விலா துளத்தே வந்தவா பாடிப்

பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன்
ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன்

இன்றுநான் உரைப்பதிங் கென்னே.

77
3487 பொறித்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை

புரிந்தது போலவே இன்றும்
செறித்துநிற் கின்றேன் அன்றிஎன் உரிமைத்

தெய்வமும் குருவும்மெய்ப் பொருளும்
நெறித்தநற் றாயுந் தந்தையும் இன்பும்

நேயமும் நீஎனப் பெற்றே
குறித்தறிந் ததன்பின் எந்தைநான் ஏறிக்

குதித்ததென் கூறுக நீயே.

78
3488 பரிந்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை

பணிபுரிந் தாங்கிது வரையில்
புரிந்துறு கின்றேன் அன்றிஎன் உயிரும்

பொருளும்என் புணர்ப்பும்என் அறிவும்
விரிந்தஎன் சுகமும் தந்தையுங் குருவும்

மெய்ம்மையும் யாவும்நீ என்றே
தெரிந்தபின் அந்தோ வேறுநான் செய்த

செய்கைஎன் செப்புக நீயே.

79
3489 மைதவழ் விழிஎன் அம்மைஓர் புடைகொள்227

வள்ளலே நின்னைஅன் பாலும்
வைதவர் தமைநான் மதித்திலேன் அன்பால்

வாழ்த்துகின் றோர்தமை வாழ்த்தி
உய்தவர் இவர்என் றுறுகின்றேன் அல்லால்

உன்அருள் அறியநான் வேறு
செய்ததொன் றிலையே செய்தனன் எனினும்

திருவுளத் தடைத்திடல் அழகோ.

80
227. மைதவழ் முகில்போன் றருள்பொழி கருணை - முதற் பதிப்பு,
பொ. சு., ச. மு. க. 'மைதவழ் விழியென் னம்மையோர் புடைகொள் வள்ளலே' என்றும் பாடம்
எனச் ச.மு.க. அடிக்குறிப்பிடுகிறார்.
3490 ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம்

ஆகமம் உரைவரைப் பெல்லாம்
காரண நினது திருவருட் செங்கோல்

கணிப்பருங் களிப்பிலே ஓங்கி
நாரணர் முதலோர் போற்றிட விளங்கி

நடக்கின்ற பெருமைநான் அறிந்தும்
தாரணி யிடைஇத் துன்பமா திகளால்

தனையனேன் தளருதல் அழகோ.

81
3491 பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப்

பாலும்அப் பாலும்அப் பாலும்
ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல்

உரைப்பரும் பெருமையின் ஓங்கிச்
சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில்

சிறந்தமெய்த் தந்தைநீ இருக்க
வார்கடல் உலகில் அச்சமா திகளால்

மகன்மனம் வருந்துதல் அழகோ.

82
3492 ஆர்ந்தவே தாந்தப் பதிமுதல் யோகாந்

தப்பதி வரையும்அப் பாலும்
தேர்ந்தருள் ஆணைத் திருநெறிச் செங்கோல்

செல்லஓர் சிற்சபை இடத்தே
சார்ந்தபே ரின்பத் தனியர சியற்றும்

தந்தையே தனிப்பெருந் தலைவா
பேர்ந்திடேன் எந்த விதத்திலும் நினக்கே

பிள்ளைநான் வருந்துதல் அழகோ.

83
3493 சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத்

திருச்சபை தன்னிலே திகழும்
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம்

தழைத்திடத் தனிஅருட் செங்கோல்
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும்

தனிமுதல் தந்தையே தலைவா
பித்தியல் உடையேன் எனினும்நின் தனக்கே

பிள்ளைநான் வாடுதல் அழகோ.

84
3494 சாற்றுபே ரண்டப் பகுதிகள் அனைத்தும்

தனித்தனி அவற்றுளே நிரம்பித்
தோற்றுமா பிண்டப் பகுதிகள் அனைத்தும்

சோதியால் விளக்கிஆ னந்த
ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில்

அரும்பெருந் தந்தையே இன்பப்
பேற்றிலே விழைந்தேன் தலைவநின் தனக்கே

பிள்ளைநான் பேதுறல் அழகோ.

85
3495 சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த்

திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம்
பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும்

பெருவெளி யாய்அதற் கப்பால்
நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும்

நீதிநல் தந்தையே இனிமேல்
பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன்

பிள்ளைநான் வாடுதல் அழகோ.

86
3496 எண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம்

இணையிலாத் தனிநெடுஞ் செங்கோல்
நண்ணிய திருச்சிற் றம்பலத் தமர்ந்தே

நடத்தும்ஓர் ஞானநா யகனே
தண்ணருள் அளிக்கும் தந்தையே உலகில்

தனையன்நான் பயத்தினால் துயரால்
அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும்

ஐயகோ வாடுதல் அழகோ.

87
3497 கலைஎலாம் புகலும் கதிஎலாம் கதியில்

காண்கின்ற காட்சிகள் எல்லாம்
நிலையெலாம் நிலையில் நேர்ந்தனு பவஞ்செய்

நிறைவெலாம் விளங்கிடப் பொதுவில்
மலைவிலாச் சோதி அருட்பெருஞ் செங்கோல்

வாய்மையான் நடத்தும்ஓர் தனிமைத்
தலைவனே எனது தந்தையே நினது

தனையன்நான் தளருதல் அழகோ.

88
3498 ஆதியே நடுவே அந்தமே எனும்இவ்

வடைவெலாம் இன்றிஒன் றான
சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே

தூயபே ரருள்தனிச் செங்கோல்
நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை

நிருத்தனே ஒருத்தனே நின்னை
ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே

உறுகணால் தளருதல் அழகோ.

89
3499 அத்தனே திருச்சிற் றம்பலத் தரசே

அரும்பெருஞ் சோதியே அடியார்
பித்தனே எனினும் பேயனே எனினும்

பெரிதருள் புரிதனித் தலைமைச்
சித்தனே எல்லாம் செய்திட வல்ல

செல்வனே சிறப்பனே சிவனே
சுத்தனே நினது தனையன்நான் மயங்கித்

துயர்ந்துளம் வாடுதல் அழகோ.

90
3500 உற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும்

ஒருதனித் தந்தையே நின்பால்
குற்றம்நான் புரிந்திங் கறிந்திலேன் குற்றம்

குயிற்றினேன் என்னில்அக் குற்றம்
இற்றென அறிவித் தறிவுதந் தென்னை

இன்புறப் பயிற்றுதல் வேண்டும்
மற்றய லார்போன் றிருத்தலோ தந்தை

வழக்கிது நீஅறி யாயோ.

91
3501 குற்றமோ குணமோ நான்அறி யேன்என்

குறிப்பெலாம் திருச்சிற்றம் பலத்தே
உற்றதா தலினால் உலகியல் வழக்கில்

உற்றன228 மற்றென தலவே
தெற்றென229 அருட்கே குற்றம்என் பதுநான்

செய்திடில் திருத்தலே அன்றி
மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை

மரபிது நீஅறி யாயோ.

92
228. உற்றிடின் - முதற்பதிப்பு; பொ. சு., ச. மு. க. பதிப்பு.
229. தெற்றென - விரைந்து. முதற்பதிப்பு.
3502 மாயையால் வினையால் அரிபிர மாதி

வானவர் மனமதி மயங்கித்
தீயகா ரியங்கள் செய்திடில் அந்தோ

சிறியனேன் செய்வது புதிதோ
ஆயினும் தீய இவைஎன அறியேன்

அறிவித்துத் திருத்துதல் அன்றி
நீயிவண் பிறர்போன் றிருப்பது தந்தை

நெறிக்கழ கல்லவே எந்தாய்.

93
3503 கருணையும் சிவமே பொருள்எனக் காணும்

காட்சியும் பெறுகமற் றெல்லாம்
மருள்நெறி எனநீ எனக்கறி வித்த

வண்ணமே பெற்றிருக் கின்றேன்
இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்

எய்திய தென்செய்வேன் எந்தாய்
தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்

சிறுநெறி பிடித்ததொன் றிலையே.

94
3504 கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில்

கருணையங் கடவுளே நின்பால்
இலங்கிய நேயம் விலங்கிய திலையே

எந்தைநின் உளம்அறி யாதோ
மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால்

மாயையால் வரும்பிழை எல்லாம்
அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ

டடிக்கடி அறைந்தனன் ஆண்டே.

95
3505 இரும்பினும் கொடிய மனஞ்செயும் பிழையும்

என்பிழை அன்றெனப் பலகால்
விரும்பிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன்

வேறுநான் செய்ததிங் கென்னே
அரும்பொனே திருச்சிற் றம்பலத் தமுதே

அப்பனே என்றிருக் கின்றேன்
துரும்பினுஞ் சிறியேன் புகல்வதென் நினது

தூயதாம் திருவுளம் அறியும்.

96
3506 வருமுயிர் இரக்கம் பற்றியே உலக

வழக்கில்என் மனஞ்சென்ற தோறும்
வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன்

விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும்
உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான்

ஒன்றதே இரண்டிலை இரக்கம்
ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத்

தொருவனே நின்பதத் தாணை.

97
3507 தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும்

தலைவனே இன்றும்என் உளமும்
மலைவில்என் அறிவும் நானும்இவ் வுலக

வழக்கிலே உயிர்இரக் கத்தால்
இலகுகின் றனம்நான் என்செய்வேன் இரக்கம்

என்னுயிர் என்னவே றிலையே
நிலைபெறும் இரக்கம் நீங்கில்என் உயிரும்

நீங்கும்நின் திருவுளம் அறியும்.

98
3508 ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில்

ஆடலே அன்றிஓர் விடயக்
காதலால் ஆடல் கருதிலேன் விடயக்

கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப்
போதலால் சிறிய போதும்உண் டதுநின்

புந்தியில் அறிந்தது தானே
ஈதலால் வேறோர் தீதென திடத்தே

இல்லைநான் இசைப்பதென் எந்தாய்.

99
3509 என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய்

இருக்கவே இசைவித் திவ்வுலகில்
மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை

வள்ளல்நீ நினக்கிது விடயம்
பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப்

பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்
இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா

திருந்ததோர் இறையும்இங் கிலையே.

100
3510 உறுவினை தவிர்க்கும் ஒருவனே உலகில்

ஓடியும் ஆடியும் உழன்றும்
சிறுவர்தாம் தந்தை வெறுப்பஆர்க் கின்றார்

சிறியனேன் ஒருதின மேனும்
மறுகிநின் றாடி ஆர்த்ததிங் குண்டோ

நின்பணி மதிப்பலால் எனக்குச்
சிறுவிளை யாட்டில் சிந்தையே இலைநின்

திருவுளம் அறியுமே எந்தாய்.

101
3511 தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில்

சழக்குரை யாடிவெங் காமச்
சிந்தைய ராகித் திரிகின்றார் அந்தோ

சிறியனேன் ஒருதின மேனும்
எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட்

டிவ்வுல கியலில்அவ் வாறு
தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ

திருவுளம் அறியநான் அறியேன்.

102
3512 அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப

அடிக்கடி அயலவர் உடனே
வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர்

வள்ளலே நின்பணி விடுத்தே
இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும்

ஏழையேன் பிறரொடு வெகுண்டே
வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ

மெய்யநின் ஆணைநான் அறியேன்.

103
3513 வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப

மக்கள்தாம் ஒழுக்கத்தை மறந்தே
கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக்

கடைதொறும் மயங்குதல் பொய்யே
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன்

மெய்யநின் திருப்பணி விடுத்தே
எள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ

எந்தைநின் ஆணைநான் அறியேன்.

104
3514 மலைவிலாத் திருச்சிற் றம்பலத் தமர்ந்த

வள்ளலே உலகினில் பெற்றோர்
குலைநடுக் குறவே கடுகடுத் தோடிக்

கொடியதீ நெறியிலே மக்கள்
புலைகொலை களவே புரிகின்றார் அடியேன்

புண்ணிய நின்பணி விடுத்தே
உலையஅவ் வாறு புரிந்ததொன் றுண்டோ

உண்பதத் தாணைநான் அறியேன்.

105
3515 தனிப்பெருஞ் சோதித் தந்தையே உலகில்

தந்தையர் பற்பல காலும்
இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட்

கேற்கவே பயிற்றிடுந் தோறும்
பனிப்புற ஓடிப் பதுங்கிடு கின்றார்

பண்பனே என்னைநீ பயிற்றத்
தினைத்தனை யேனும் பதுங்கிய துண்டோ

திருவுளம் அறியநான் அறியேன்.

106
3516 தன்னைநே ரில்லாத் தந்தையே உலகில்

தந்தையர் தங்களை அழைத்தே
சொன்னசொல் மறுத்தே மக்கள்தம் மனம்போம்

சூழலே போகின்றார் அடியேன்
என்னைநீ உணர்த்தல் யாதது மலையின்

இலக்கெனக் கொள்கின்றேன் அல்லால்
பின்னைஓர் இறையும் மறுத்ததொன் றுண்டோ

பெரியநின் ஆணைநான் அறியேன்.

107
3517 போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள்

பொருந்துதம் தந்தையர் தமையே
வேற்றுவாழ் வடைய வீடுதா பணந்தா

மெல்லிய சரிகைவத் திரந்தா
ஏற்றஆ பரணந் தாஎனக் கேட்டே

இரங்குவார் இவைகுறித் தடியேன்
தேற்றுவாய் நின்னைக் கேட்டதொன் றுண்டோ

திருவுளம் அறியநான் அறியேன்.

108
3518 குணம்புரி எனது தந்தையே உலகில்

கூடிய மக்கள்தந் தையரைப்
பணம்புரி காணி பூமிகள் புரிநற்

பதிபுரி ஏற்றபெண் பார்த்தே
மணம்புரி எனவே வருத்துகின் றார்என்

மனத்திலே ஒருசிறி தேனும்
எணம்புரிந் துனைநான் வருத்திய துண்டோ

எந்தைநின் ஆணைநான் அறியேன்.

109
3519 இகத்திலே எனைவந் தாண்டமெய்ப் பொருளே

என்னுயிர்த் தந்தையே இந்தச்
சகத்திலே மக்கள் தந்தையர் இடத்தே

தாழ்ந்தவ ராய்ப்புறங் காட்டி
அகத்திலே வஞ்சம் வைத்திருக் கின்றார்

ஐயவோ வஞ்சம்நின் அளவில்
முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ

முதல்வநின் ஆணைநான் அறியேன்.

110
3520 தன்மைகாண் பரிய தலைவனே எனது

தந்தையே சகத்திலே மக்கள்
வன்மைவார்த் தைகளால் தந்தையர் தம்மை

வைகின்றார் வள்ளலே மருந்தே
என்மனக் கனிவே என்னிரு கண்ணே

என்னுயிர்க் கிசைந்தமெய்த் துணையே
நின்மனம் வெறுப்பப் பேசிய துண்டோ

நின்பதத் தாணைநான் அறியேன்.

111
3521 ஒப்பிலா மணிஎன் அப்பனே உலகில்

உற்றிடு மக்கள்தந் தையரை
வைப்பில்வே றொருவர் வைதிடக் கேட்டு

மனம்பொறுத் திருக்கின்றார் அடியேன்
தப்பிலாய்230 நினைவே றுரைத்திடக் கேட்டால்

தரிப்பனோ தரித்திடேன் அன்றி
வெப்பில்என் உயிர்தான் தரிக்குமோ யாதாய்

விளையுமோ அறிந்திலேன் எந்தாய்.

112
230. தப்பிலா - முதற்பதிப்பு., பொ.சு., ச. மு. க. பதிப்பு.
3522 இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன்

எந்தைநின் திருப்பணி விடுத்தே
சித்தம்வே றாகித் திரிந்ததே இலைநான்

தெரிந்தநாள் முதல்இது வரையும்
அத்தனே அரசே ஐயனே அமுதே

அப்பனே அம்பலத் தாடும்
சித்தனே சிவனே என்றென துளத்தே

சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்.

113
3523 பொய்வகை மனத்தேன் என்னினும் எந்தாய்

பொய்யுல காசைசற் றறியேன்
நைவகை தவிரத் திருச்சிற்றம் பலத்தே

நண்ணிய மெய்ப்பொருள் நமது
கைவகைப் படல்எக் கணத்திலோ எனநான்

கருதினேன் கருத்தினை முடிக்கச்
செய்வகை அறியேன் என்செய்வேன் ஐயோ

தெய்வமே என்றிருக் கின்றேன்.

114
3524 அன்னையே என்றன் அப்பனே திருச்சிற்

றம்பலத் தமுதனே எனநான்
உன்னையே கருதி உன்பணி புரிந்திங்

குலகிலே கருணைஎன் பதுதான்
என்னையே நிலையாய் இருத்தஉள் வருந்தி

இருக்கின்றேன் என்உள மெலிவும்
மன்னும்என் உடம்பின் மெலிவும்நான் இருக்கும்

வண்ணமும் திருவுளம் அறியும்.

115
3525 பொய்படாப் பயனே பொற்சபை நடஞ்செய்

புண்ணியா கண்ணினுள் மணியே
கைபடாக் கனலே கறைபடா மதியே

கணிப்பருங் கருணையங் கடலே
தெய்வமே எனநான் நின்னையே கருதித்

திருப்பணி புரிந்திருக் கின்றேன்
மைபடா உள்ள மெலிவும்நான் இருக்கும்

வண்ணமும் திருவுளம் அறியும்.

116
3526 தன்னிகர் அறியாத் தலைவனே தாயே

தந்தையே தாங்குநற் றுணையே
என்னிறு கண்ணே என்னுயிர்க் குயிரே

என்னுடை எய்ப்பினில் வைப்பே
உன்னுதற் கினிய வொருவனே எனநான்

உன்னையே நினைத்திருக் கின்றேன்
மன்னும்என் உள்ள மெலிவும்நான் இருக்கும்

வண்ணமும் திருவுளம் அறியும்.

117
3527 திருவளர் திருஅம் பலத்திலே அந்நாள்

செப்பிய மெய்ம்மொழிப் பொருளும்
உருவளர் திருமந் திரத்திரு முறையால்

உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும்
கருவளர் அடியேன் உளத்திலே நின்று

காட்டிய மெய்ம்மொழிப் பொருளும்
மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும்

வண்ணமும் திருவுளம் அறியும்.

118
3528 உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம்

உறுமலை இலக்கென நம்பி
நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப

நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப்
பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே

பற்பல குறிகளால் அறிந்தே
சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள்

திகைப்பதும் திருவுளம் அறியும்.

119
3529 ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி

ஏகவும் ஏகவும் நுணுகித்
தேய்ந்தபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத்

தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை
வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே

மனங்களிப் புற்றுமெய் இன்பம்
தோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள்

சுழல்வதும் திருவுளம் அறியும்.

120
3530 வாட்டமோ டிருந்த சிறியனேன் தனது

வாட்டமும் மாயையா திகளின்
ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத் திரங்கி

என்னைஓர் பொருள்என மதித்தே
தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள்

செலுத்திய திருச்சிலம் பொலிநான்
கேட்டபோ திருந்த கிளர்ச்சியும் இந்நாள்

கிலேசமுந் திருவுளம் அறியும்.

121
3531 கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல்என்

காதிலே கிடைத்தபோ தெல்லாம்
மற்றவர் தமக்கென் உற்றதோ அவர்தம்

மரபினர் உறவினர் தமக்குள்
உற்றதிங் கெதுவோ என்றுளம் நடுங்கி

ஓடிப்பார்த் தோடிப்பார்த் திரவும்
எற்றரு பகலும் ஏங்கிநான் அடைந்த

ஏக்கமுந் திருவுளம் அறியும்.

122
3532 கருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம்

கருத்திலே கலந்ததெள் ளமுதம்
மருள்நெறி தவிர்க்கும் மருந்தெலாம் வல்ல

வள்ளல்சிற் றம்பலம் மன்னும்
பொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த

புண்ணியம் வருகின்ற தருணம்
தருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும்

தன்மையும் திருவுளம் அறியும்.

123
3533 இமையவர் பிரமர் நாரணர் முதலோர்

எய்துதற் கரியபே ரின்பம்
தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம்

தயாநிதி தனிப்பெருந் தந்தை
அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில்

ஐயர் தாம் வருகின்ற சமயம்
சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும்

தன்மையும் திருவுளம் அறியும்.

124
3534 அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென்

அமுதநின் மேல்வைத்த காதல்
நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள்

நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
படியஎன் தன்னால் சொலமுடி யாது

பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன்
செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம்

திருவுளங் கண்டதே எந்தாய்.

125
3535 பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப்

பகல்வரை அடைந்தவை எல்லாம்
உன்னிநின் றுரைத்தால் உலப்புறா ததனால்

ஒருசில உரைத்தனன் எனினும்
என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும்

இயல்புறப் புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும்நீ அறிந்த

வண்ணமே வகுப்பதென் நினக்கே.

126
3536 இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும்

இடர்களும் துன்பமும் எல்லாம்
பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால்

புலையனேன் பொருட்டல இதுநின்
மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய

வகுத்தனன் அடியனேன் தனக்கே
எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும்

இடரும்மற் றிலைஇலை எந்தாய்.

127
3537 என்னள விலையே என்னினும் பிறர்பால்

எய்திய கருணையால் எந்தாய்
உன்னுறு பயமும் இடருமென் தன்னை

உயிரொடும் தின்கின்ற தந்தோ
இன்னும்என் றனக்கிவ் விடரொடு பயமும்

இருந்திடில்231 என்உயிர் தரியா
தன்னையும் குருவும் அப்பனும் ஆன

அமுதனே அளித்தருள் எனையே.

128
231. இருக்கில் - பி. இரா. பதிப்பு,
3538 பயத்தொடு துயரும் மறைப்புமா மாயைப்

பற்றொடு வினையும்ஆ ணவமும்
கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது

கருத்திலே இனிஒரு கணமும்
வியத்திடத் தரியேன் இவையெலாந் தவிர்த்துன்

மெய்யருள் அளித்திடல் வேண்டும்
உயத்தரு வாயேல் இருக்கின்றேன் இலையேல்

உயிர்விடு கின்றனன் இன்றே.

129
3539 ஐயநான் பயத்தால் துயரினால் அடைந்த

அடைவைஉள் நினைத்திடுந் தோறும்
வெய்யதீ மூட்டி விடுதல்232 ஒப் பதுநான்

மிகஇவற் றால்இளைத் திட்டேன்
வையமேல் இனிநான் இவைகளால் இளைக்க

வசமிலேன் இவைஎலாம் தவிர்த்தே
உய்யவைப் பாயேல் இருக்கின்றேன் இலையேல்

உயிர்விடு கின்றனன் இன்றே.

130
232. விடுத்தல் - முதற்பதிப்பு, பொ. சு.,ச. மு. க., பி. இரா. பதிப்பு.
3540 பயந்துயர் இடர்உள் மருட்சியா தியஇப்

பகைஎலாம் பற்றறத் தவிர்த்தே
நயந்தநின் அருளார்233 அமுதளித் தடியேன்

நாடிஈண் டெண்ணிய எல்லாம்
வியந்திடத் தருதல் வேண்டும்ஈ தெனது

விண்ணப்பம் நின்திரு உளத்தே
வயந்தரக் கருதித் தயவுசெய் தருள்க

வள்ளலே சிற்சபை வாழ்வே.

131
233. அருளாம் - ச. மு. க. பதிப்பு.
3541 என்னுயிர் காத்தல் கடன்உனக் கடியேன்

இசைத்தவிண் ணப்பம்ஏற் றருளி
உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள்

உறுகண்மற் றிவைஎலாம் ஒழித்தே
நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம்

நிரப்பியாட் கொள்ளுதல் வேண்டும்
மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே

வள்ளலே சிற்சபை வாழ்வே.

132
3542 பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும்

பற்றறத் தவிர்த்தருள் இனிநான்
தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம்

தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ
புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும்

பொற்சபை அண்ணலே கருணை
வரிக்கணேர் மடந்தை பாகனே சிவனே234

வள்ளலே சிற்சபை வாழ்வே.

133
234. வரிக்கணேர் இன்ப வல்லியை மணந்த - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க. பதிப்பு.

திருச்சிற்றம்பலம்

14. மாயையின் விளக்கம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3543 திடுக்கற எனைத்தான் வளர்த்திடப் பரையாம்

செவிலிபாற் சேர்த்தனை அவளோ
எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள்

என்செய்வேன் இன்னும்என் னிடைப்பால்
மடுக்கநற் றாயும் வந்திலள் நீயும்

வந்தெனைப் பார்த்திலை அந்தோ
தடுக்கருங் கருணைத் தந்தையே தளர்ந்தேன்

தனையனேன் தளர்ந்திடல் அழகோ.

1
3544 தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர்

தாய்கையில் கொடுத்தனை அவளோ
வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று

மாயமே புரிந்திருக் கின்றாள்
கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும்

கேட்பதற் கடைந்திலன் அந்தோ
உளந்தரு கருணைத் தந்தையே நீயும்

உற்றிலை பெற்றவர்க் கழகோ.

3545 தாங்கஎன் தனைஓர் தாய்கையில் கொடுத்தாய்

தாயவள் நான்தனித் துணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள்

சூதையே நினைத்திருக் கின்றாள்
ஓங்குநற் றாயும் வந்திலாள் அந்தோ

உளந்தளர் வுற்றனன் நீயும்
ஈங்குவந் திலையேல் என்செய்கேன் இதுதான்

எந்தைநின் திருவருட் கழகோ.

3
3546 அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய்

ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள்
நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள்

நீலியோ தன்புடை ஆடும்
தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்

தனித்தனி அவர்அவர் எடுத்தே
கத்தவெம் பயமே காட்டினர் நானும்

கலங்கினேன் கலங்கிடல் அழகோ.

4
3547 வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற

மகள்கையில் கொடுத்தனள் எனைத்தான்
ஈங்கிவள் கருத்தில் எதுநினைத் தனளோ

என்செய்வேன் என்னையே உணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித்

தொட்டிலும் ஆட்டிடு கின்றாள்
ஏங்குறு கின்றேன் பிள்ளைதன் அருமை

ஈன்றவர் அறிவரே எந்தாய்.

5
3548 வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி

மக்கள்பால் காட்டிவிட் டிருந்தாள்
மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும்

வந்தெனை எடுத்திலார் அவரும்
இலத்திலே கூடி ஆடுகின் றனர்நான்

என்செய்வேன் என்னுடை அருமை
நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய்

நீயும்இங் கறிந்திலை யேயோ.

6
3549 தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே

சோர்ந்தழு திளைத்துமென் குரலும்
கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள்

காதுறக் கேட்டிருக் கின்றாள்
செம்மியே மடவார் கொம்மியே பாடிச்

சிரித்திருக் கின்றனர் அந்தோ
இம்மியே எனினும் ஈந்திடார் போல

இருப்பதோ நீயும்எந் தாயே.

7
3550 துருவிலா வயிரத் தொட்டிலே தங்கத்

தொட்டிலே பலஇருந் திடவும்
திருவிலாப் பொத்தைத் தொட்டிலிற் செவிலி

சிறியனைக் கிடத்தினள் எந்தாய்
பிரிவிலாத் தனிமைத் தலைவநீ பெற்ற

பிள்ளைநான் எனக்கிது பெறுமோ
கருவிலாய் நீஇத் தருணம்வந் திதனைக்

கண்டிடில் சகிக்குமோ நினக்கே.

8
3551 காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும்

னிவிலாள் காமமா திகளாம்
பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப்

பயம்புரி வித்தனள் பலகால்
தேய்ந்திடு மதிஎன் றெண்ணினாள் குறையாத்

திருமதி எனநினைந் தறியாள்
சாய்ந்தஇச் செவிலி கையிலே என்னைத்

தந்தது சாலும்எந் தாயே.

9
3552 ஞானஆ னந்த வல்லியாம் பிரியா

நாயகி யுடன்எழுந் தருளி
ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே

இன்னமு தனைத்தையும் அருத்தி
ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்

உறப்புரிந் தெனைப்பிரி யாமல்
வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க

மாமணி மன்றில்எந் தாயே.

10

திருச்சிற்றம்பலம்

15. அபயத் திறன்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3553 ஆடக மணிப்பொற் குன்றமே என்னை

ஆண்டுகொண் டருளிய பொருளே
வீடகத் தேற்றும் விளக்கமே விளக்கின்

மெய்யொளிக் குள்ளொளி வியப்பே
வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம்

தவிர்த்தருள் வழங்கிய மன்றில்
நாடகக் கருணை நாதனே உன்னை

நம்பினேன் கைவிடேல் எனையே.

1
3554 வட்டவான் சுடரே வளரொளி விளக்கே

வயங்குசிற் சோதியே அடியேன்
இட்டமே இட்டத் தியைந்துளே கலந்த

இன்பமே என்பெரும் பொருளே
கட்டமே தவிர்த்திங் கென்னைவாழ் வித்த

கடவுளே கனகமன் றகத்தே
நட்டமே புரியும் பேரரு ளரசே

நம்பினேன் கைவிடேல் எனையே.

2
3555 புல்லவா மனத்தேன் என்னினும் சமயம்

புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்
சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர்

சொப்பனத் தாயினும் நினையேன்
கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன்

கனகமா மன்றிலே நடிக்கும்
நல்லவா எல்லாம் வல்லவா உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

3
3556 புண்படா உடம்பும் புரைபடா மனமும்

பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண்படா திரவும் பகலும்நின் தனையே

கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்
உண்பனே எனினும் உடுப்பனே எனினும்

உலகரை நம்பிலேன் எனது
நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

4
3557 புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம்

புகுந்தெனைக் கலக்கிய போதும்
கண்ணிலே எனது கருத்திலே கலந்த

கருத்தனே நின்றனை அல்லால்
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை

மதித்திலேன் மதிக்கின்றார் தமையும்
நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

5
3558 ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்

ஊக்கமும் உண்மையும் என்னைத்
தான்பெறு தாயும் தந்தையும் குருவும்

தனிப்பெருந் தெய்வமுந் தவமும்
வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்

மக்களும் மனைவியும் உறவும்
நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே

நம்பினேன் கைவிடேல் எனையே.

6
3559 வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்தென்

வடிவமும் வண்ணமும் உயிரும்
தேட்டமும் நீயே கொண்டுநின் கருணைத்

தேகமும் உருவும்மெய்ச் சிவமும்
ஈட்டமும் எல்லாம் வல்லநின் னருட்பே

ரின்பமும் அன்பும்மெய்ஞ் ஞான
நாட்டமும் கொடுத்துக் காப்பதுன் கடன்நான்

நம்பினேன் கைவிடேல் எனையே.

7
3560 வம்பனேன் பிறர்போல் வையமும் வானும்

மற்றவும் மதித்திலேன் மதஞ்சார்
உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா

உலகமும் வாழ்கவென் றிருந்தேன்
செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்

செயவல்ல சித்தனே சிவனே
நம்பனே ஞான நாதனே உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

8
3561 ஆயகால் இருந்தும் நடந்திட வலியில்

லாமையால் அழுங்குவார் எனஉண்
மேயகால் இருந்தும் திருவருள் உறஓர்

விருப்பிலா மையின்மிக மெலிந்தேன்
தீயகான் விலங்கைத் தூயமா னிடஞ்செய்

சித்தனே சத்திய சபைக்கு
நாயகா உயிர்க்கு நயகா உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

9
3562 அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி

ஆடிய சிறுபரு வத்தே
குற்றமும் குணங்கொண் டென்னைஆட் கொண்ட

குணப்பெருங் குன்றமே குருவே
செற்றமும் விருப்பும் தீர்த்தமெய்த் தவர்தம்

சிந்தையில் இனிக்கின்ற தேனே
நற்றக வுடைய நாதனே உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

10
3563 படம்புரி பாம்பிற் கொடியனேன் கொடிய

பாவியிற் பாவியேன் தீமைக்
கிடம்புரி மனத்தேன் இரக்கம்ஒன் றில்லேன்

என்னினும் துணைஎந்த விதத்தும்
திடம்புரி நின்பொன் அடித்துணை எனவே

சிந்தனை செய்திருக் கின்றேன்
நடம்புரி கருணை நாயகா உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

11
3564 படித்தனன் உலகப் படிப்பெலாம் மெய்ந்நூல்

படித்தவர் தங்களைப் பார்த்து
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம

நோக்கினேன் பொய்யர்தம் உறவு
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப்

பெரியரில் பெரியர்போல் பேசி
நடித்தனன் எனினும் நின்னடித் துணையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

12
3565 பஞ்சுநேர் உலகப் பாட்டிலே மெலிந்த

பாவியேன் சாவியே போன
புஞ்செயே அனையேன் புழுத்தலைப் புலையேன்

பொய்யெலாம் பூரித்த வஞ்ச
நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில்

நெடியனேன் கொடியனேன் காம
நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

13
3566 கயந்துளே உவட்டும் காஞ்சிரங் காயில்

கடியனேன் காமமே கலந்து
வியந்துளே மகிழும் வீணனேன் கொடிய

வெகுளியேன் வெய்யனேன் வெறியேன்
மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை

மக்களை ஒக்கலை மதித்தே
நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

14
3567 ஓடினேன் பெரும்பே ராசையால் உலகில்

ஊர்தொறும் உண்டியே உடையே
தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து

தியங்கினேன் மயங்கினேன் திகைத்து
வாடினேன் சிறிய வாரியான் மகிழ்ந்தேன்

வஞ்சமே பொருளென மதித்து
நாடினேன் எனினும் பாடினேன் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

15
3568 காட்டிலே திரியும் விலங்கினிற் கடையேன்

கைவழக் கத்தினால் ஒடிந்த
ஓட்டிலே எனினும் ஆசைவிட் டறியேன்

உலுத்தனேன் ஒருசிறு துரும்பும்
ஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன்

எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக
நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

16
3569 துனித்தவெம் மடவார் பகல்வந்த போது

துறவியின் கடுகடுத் திருந்தேன்
தனித்திர வதிலே வந்தபோ தோடித்

தழுவினேன் தடமுலை விழைந்தேன்
இனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே

இடர்ப்பட்ட நாயென இளைத்தேன்
நனித்தவ றுடையேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

17
3570 தார்த்தட முலையார் நான்பல ரொடுஞ்சார்

தலத்திலே வந்தபோ தவரைப்
பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப்

பாதகப் பூனைபோல் இருந்தேன்
பேர்த்துநான் தனித்த போதுபோய் வலிந்து

பேசினேன் வஞ்சரிற் பெரியேன்
நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

18
3571 பெண்மையே விழைந்தேன் அவர்மனம் அறியேன்

பேய்எனப் பிடித்தனன் மடவார்க்
குண்மையே புகல்வான் போன்றவர் தமைத்தொட்

டுவந்தகங் களித்தபொய் யுளத்தேன்
தண்மையே அறியேன் வெம்மையே உடையேன்

சாத்திரம் புகன்றுவாய் தடித்தேன்
நண்மையே அடையேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

19
3572 வன்மையில் பொருள்மேல் இச்சைஇல் லவன்போல்

வாதிபோல் வார்த்தைகள் வழங்கி
அன்மையில் பிறர்பால் உளவினால் பொருளை

அடிக்கடி வாங்கிய கொடியேன்
இன்மையுற் றவருக் குதவிலேன் பொருளை

எனைவிடக் கொடியருக் கீந்தேன்
நன்மையுற் றறியேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

20
3573 கட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே

காசிலே ஆசையில் லவன்போல்
பட்டமே காட்டிப் பணம்பறித் துழன்றேன்

பகல்எலாம் தவசிபோல் இருந்தேன்
இட்டமே இரவில் உண்டயல் புணர்ந்தே

இழுதையிற் றூங்கினேன் களித்து
நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

21
3574 காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக்

காட்டிடா தம்பெலாம் அடங்கும்
தூணியே எனச்சார்ந் திருந்தனன் சோற்றுச்

சுகத்தினால் சோம்பினேன் உதவா
ஏணியே அனையேன் இரப்பவர்க் குமியும்

ஈந்திலேன் ஈந்தவன் எனவே
நாணிலேன் உரைத்தேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

22
3575 அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன்

அடிக்கடி பொய்களே புனைந்தே
எடுத்தெடுத் துரைத்தேன் எனக்கெதிர் இலைஎன்

றிகழ்ந்தனன் அகங்கரித் திருந்தேன்
கொடுத்தவர் தமையே மிகவுப சரித்தேன்

கொடாதவர் தமைஇகழ்ந் துரைத்தேன்
நடுத்தய வறியேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

23
3576 எளியவர் விளைத்த நிலமெலாங் கவரும்

எண்ணமே பெரிதுளேன் புன்செய்க்
களியுணும் மனையில் சர்க்கரை கலந்து

காய்ச்சுபால் கேட்டுண்ட கடையேன்
துளியவர்க் குதவேன் விருப்பிலான் போலச்

சுவைபெறச் சுவைத்தநாக் குடையேன்
நளிர்எனச் சுழன்றேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

24
3577 கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன்

கோடுறு குரங்கினிற் குதித்தே
அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம்

அறிந்தவன் போல்பிறர்க் குரைத்தேன்
மலைவுறு சமய வலைஅகப் பட்டே

மயங்கிய மதியினேன் நல்லோர்
நலையல எனவே திரிந்தனன் எனினும்

நம்பினேன் கைவிடேல் எனையே.

25
3578 ஈயெனப் பறந்தேன் எறும்பென உழன்றேன்

எட்டியே எனமிகத் தழைத்தேன்
பேயெனச் சுழன்றேன் பித்தனே எனவாய்ப்

பிதற்றொடும் ஊர்தொறும் பெயர்ந்தேன்
காயெனக் காய்த்தேன் கடையென நடந்தேன்

கல்லெனக் கிடந்தனன் குரைக்கும்
நாயெனத் திரிந்தேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

26
3579 ஒன்றியே உணவை உண்டுடல் பருத்த

ஊத்தையேன் நாத்தழும் புறவே
வென்றியே உரைத்து வினைகளே விளைத்த

வீணனேன் ஊர்தொறுஞ் சுழன்ற
பன்றியே அனையேன் கட்டுவார் அற்ற

பகடெனத் திரிகின்ற படிறேன்
நன்றியே அறியேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

27
3580 கவையெலாந் தவிர்ந்த வெறுமரம் அனையேன்

கள்ளனேன் கள்ளுண்ட கடியேன்
சுவையெலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன்

துட்டனேன் தீதெலாந் துணிந்தேன்
இவையெலாம் அந்நாள் உடையனோ அலனோ

இந்தநாள் இறைவநின் அருளால்
நவையெலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

28

திருச்சிற்றம்பலம்

16. ஆற்ற மாட்டாமை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3581 இப்பார் முதல்எண் மூர்த்தமதாய்

இலங்கும் கருணை எங்கோவே
தப்பா யினதீர்த் தென்னையும்முன்

தடுத்தாட் கொண்ட தயாநிதியே
எப்பா லவரும் புகழ்ந்தேத்தும்

இறைவா எல்லாம் வல்லோனே
அப்பா அரசே இனிச்சிறிதும்

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

1
3582 புரைசேர் துயரப் புணரிமுற்றும்

கடத்தி ஞான பூரணமாம்
கரைசேர்த் தருளி இன்னமுதக்

கடலைக் குடிப்பித் திடல்வேண்டும்
உரைசேர் மறையின் முடிவிளங்கும்

ஒளிமா மணியே உடையானே
அரைசே அப்பா இனிச்சிறிதும்

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

2

3583
கண்ணார் அமுதக் கடலேஎன்

கண்ணே கண்ணுட் கருமணியே
தண்ணார் மதியே கதிர்பரப்பித்

தழைத்த சுடரே தனிக்கனலே
எண்ணா டரிய பெரியஅண்டம்

எல்லாம் நிறைந்த அருட்சோதி
அண்ணா அரசே இனிச்சிறிதும்

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

3
3584 பொய்யா தென்றும் எனதுளத்தே

பொருந்தும் மருந்தே புண்ணியனே
கையார்ந் திலங்கு மணியேசெங்

கரும்பே கனியே கடையேற்குச்
செய்யா உதவி செய்தபெருந்

தேவே மூவாத் தெள்ளமுதே
ஐயா அரசே இனிச்சிறிதும்

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

4
3585 இத்தா ரணியில் என்பிழைகள்

எல்லாம் பொறுத்த என்குருவே
நித்தா சிற்றம் பலத்தாடும்

நிருத்தா எல்லாஞ் செயவல்ல
சித்தா சித்தி புரத்தமர்ந்த

தேவே சித்த சிகாமணியே
அத்தா அரசே இனிச்சிறிதும்

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

5
3586 எம்மே தகவும் உடையவர்தம்

இதயத் தமர்ந்த இறையவனே
இம்மே தினியில் எனைவருவித்

திட்ட கருணை எம்மானே
நம்மே லவர்க்கும் அறிவரிய

நாதா என்னை நயந்தீன்ற
அம்மே அப்பா இனிச்சிறிதும்

ஆற்ற மாட்டேன்கண்டாயே.

6
3587 செப்பார் கலைகள் மொழிந்தபொருள்

திறங்கள் அனைத்துந் தெரிந்துதெளிந்
திப்பா ரிடைநின் புகழ்பாடு

கின்ற பெரிய ரின்மொழிப்பாட்
டொப்பாச் சிறியேன் புன்மொழிப்பாட்

டெல்லாம் உவந்த உடையானே
அப்பா அரசே இனிச்சிறிதும்

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

7
3588 துப்பார் கனகப் பொதுவில்நடத்

தொழிலால் உலகத் துயர்ஒழிக்கும்
வைப்பாம் இறைவா சிவகாம

வல்லிக் கிசைந்த மணவாளா
ஒப்பார் உயர்ந்தார் இல்லாத

ஒருவா எல்லாம் உடையானே
அப்பா அரசே இனிச்சிறிதும்

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

8
3589 ஒப்பா ருரைப்பார் நின்பெருமைக்

கெனமா மறைகள் ஓலமிடும்
துப்பார் வண்ணச் சுடரேமெய்ச்

சோதிப் படிக வண்ணத்தாய்
வெப்பா னவைதீர்த் தெனக்கமுத

விருந்து புரிதல் வேண்டும்என்றன்
அப்பா அரசே இனிச்சிறிதும்

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

9
3590 வெப்பார் உள்ளக் கலக்கமெலாம்

இற்றைப் பொழுதே விலக்கிஒழித்
திப்பா ரிடைஎன் கருத்தின்வண்ணம்

எல்லாம் விரைவின் ஈந்தருள்க
ஒப்பால் உரைத்த தன்றுண்மை

உரைத்தேன் கருணை உடையானே
அப்பா அரசே இனிச்சிறிதும்

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

10

திருச்சிற்றம்பலம்

17. வாதனைக் கழிவு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3591 பாழுது விடிந்த தினிச்சிறிதும்

பொறுத்து முடியேன் எனநின்றே
அழுது விழிகள் நீர்துளும்பக்

கூவிக் கூவி அயர்கின்றேன்
பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள்

பட்ட திலையோ பலகாலும்235
உழுது களைத்த மாடனையேன்

துணைவே றறியேன் உடையானே.

1
235. பலநாளும் - ச. மு. க. பதிப்பு.
3592 உடையாய் திருஅம் பலத்தாடல்

ஒருவா ஒருவா உலவாத
கொடையாய் எனநான் நின்றனையே

கூவிக் கூவி அயர்கின்றேன்
தடையா யினதீர்த் தருளாதே

தாழ்க்கில் அழகோ புலைநாயிற்
கடையாய்த் திரிந்தேன் கலங்குதல்சம்

மதமோ கருணைக் கருத்தினுக்கே.

2
3593 கருணைக் கருத்து மலர்ந்தெனது

கலக்க மனைத்துந் தவிர்த்தேஇத்
தருணத் தருளா விடில்அடியேன்

தரியேன் தளர்வேன் தளர்வதுதான்
அருணச் சுடரே நின்னருளுக்

கழகோ அழகென் றிருப்பாயேல்
தெருணற் பதஞ்சார் அன்பரெலாம்236

சிரிப்பார் நானும் திகைப்பேனே.

3
236. அடியரெலாம் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
3594 திகைப்பார் திகைக்க நான்சிறிதும்

திகையேன் எனநின் திருவடிக்கே
வகைப்பா மாலை சூட்டுகின்றேன்

மற்றொன் றறியேன் சிறியேற்குத்
தகைப்பா ரிடைஇத் தருணத்தே

தாராய் எனிலோ பிறரெல்லாம்
நகைப்பார் நகைக்க உடம்பினைவைத்

திருத்தல் அழகோ நாயகனே.

4
3595 நாயிற் கடையேன் கலக்கமெலாம்

தவிர்த்து நினது நல்லருளை
ஈயிற் கருணைப் பெருங்கடலே

என்னே கெடுவ தியற்கையிலே
தாயிற் பெரிதும்237 தயவுடையான்

குற்றம் புரிந்தோன் தன்னையும்ஓர்
சேயிற் கருதி அணைத்தான்என்

றுரைப்பா ருனைத்தான் தெரிந்தோரே.

5
237. தாயிற் பெரிய - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா.
3596 தெரிந்த பெரியர்க் கருள்புரிதல்

சிறப்பென் றுரைத்த தெய்வமறை
திரிந்த சிறியர்க் கருள்புரிதல்

சிறப்பிற் சிறப்பென் றுரைத்தனவே
புரிந்தம் மறையைப் புகன்றவனும்

நீயே என்றால் புண்ணியனே
விரிந்த மனத்துச் சிறியேனுக்

கிரங்கி அருளல் வேண்டாவோ.

6
3597 வேண்டார் உளரோ நின்னருளை

மேலோ ரன்றிக் கீழோரும்
ஈண்டார் வதற்கு வேண்டினரால்

இன்று புதிதோ யான்வேண்டல்
தூண்டா விளக்கே திருப்பொதுவிற்

சோதி மணியே ஆறொடுமூன்
றாண்டா வதிலே முன்னென்னை

ஆண்டாய் கருணை அளித்தருளே.

7
3598 அருளே வடிவாம் அரசேநீ

அருளா விடில்இவ் வடியேனுக்
கிருளே தொலைய அருளளிப்பார்

எவரே எல்லாம் வல்லோய்நின்
பொருளேய் வடிவிற் கலைஒன்றே

புறத்தும் அகத்தும் புணர்ந்தெங்குந்
தெருளே யுறஎத் தலைவருக்குஞ்

சிறந்த அருளாய்த் திகழ்வதுவே.

8
3599 திகழ்ந்தார் கின்ற திருப்பொதுவில்

சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு
புகழ்ந்தார் தம்மைப் பொறுத்திடவும்

புன்மை அறிவால் பொய்உரைத்தே
இகழ்ந்தேன் தனைக்கீழ் வீழ்த்திடவும்

என்னே புவிக்கிங் கிசைத்திலைநீ
அகழ்ந்தார் தமையும் பொறுக்கஎன

அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே.

9
3600 எல்லாம் வகுத்தாய் எனக்கருளில்

஡ரே தடுப்பார் எல்லாஞ்செய்
வல்லான் வகுத்த வண்ணம்என

மகிழ்வார் என்கண் மணியேஎன்
சொல்லா னவையும் அணிந்துகொண்ட

துரையே சோதித் திருப்பொதுவில்
நல்லாய் கருணை நடத்தரசே

தருணம் இதுநீ நயந்தருளே.

10
3601 நயந்த கருணை நடத்தரசே

ஞான அமுதே நல்லோர்கள்
வியந்த மணியே மெய்யறிவாம்

விளக்கே என்னை விதித்தோனே
கயந்த மனத்தேன் எனினும்மிகக்

கலங்கி நரகக் கடுங்கடையில்
பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல்

அழகோ கடைக்கண் பார்த்தருளே.

11
3602 பார்த்தார் இரங்கச் சிறியேன்நான்

பாவி மனத்தால் பட்டதுயர்
தீர்த்தாய் அந்நாள் அதுதொடங்கித்

தெய்வந் துணைஎன் றிருக்கின்றேன்
சேர்த்தார்238 உலகில் இந்நாளில்

சிறியேன் தனைவெந் துயர்ப்பாவி
ஈர்த்தால் அதுகண் டிருப்பதுவோ

கருணைக் கழகிங் கெந்தாயே.

12
238. சேர்த்தாய் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
3603 தாயே எனைத்தான் தந்தவனே

தலைவா ஞான சபாபதியே
பேயேன் செய்த பெருங்குற்றம்

பொறுத்தாட் கொண்ட பெரியோனே
நீயே இந்நாள் முகமறியார்

நிலையில் இருந்தால் நீடுலகில்
நாயே அனையேன் எவர்துணைஎன்

றெங்கே புகுவேன் நவிலாயே.

13
3604 ஆயேன் வேதா கமங்களைநன்

கறியேன் சிறியேன் அவலமிகும்
பேயேன் எனினும் வலிந்தென்னைப்

பெற்ற கருணைப் பெருமானே
நீயே அருள நினைத்தாயேல்

எல்லா நலமும் நிரம்புவன்நான்
காயே எனினும் கனிஆகும்

அன்றே நினது கருணைக்கே.

14
3605 கருணா நிதியே என்இரண்டு

கண்ணே கண்ணிற் கலந்தொளிரும்
தெருணா டொளியே வெளியேமெய்ச்

சிவமே சித்த சிகாமணியே
இருணா டுலகில் அறிவின்றி

இருக்கத் தரியேன் இதுதருணம்
தருணா அடியேற் கருட்சோதி

தருவாய் என்முன் வருவாயே.

15
3606 வருவாய் என்கண் மணிநீஎன்

மனத்திற் குறித்த வண்ணமெலாம்
தருவாய் தருணம் இதுவேமெய்த்

தலைவா ஞான சபாபதியே
உருவாய்239 சிறிது தாழ்க்கில்உயிர்

ஒருவும் உரைத்தேன் என்னுடைவாய்
இருவாய் அலநின் திருவடிப்பாட்

டிசைக்கும் ஒருவாய் இசைத்தேனே.

16
239. ஒருவா - ச. மு. க.
3607 தேனே திருச்சிற் றம்பலத்தில்

தெள்ளா ரமுதே சிவஞான
வானே ஞான சித்தசிகா

மணியே என்கண் மணியேஎன்
ஊனே புகுந்தென் உளங்கலந்த

உடையாய் அடியேன் உவந்திடநீ
தானே மகிழ்ந்து தந்தாய்இத்

தருணம் கைம்மா றறியேனே.

17
3608 அறியேன் சிறியேன் செய்தபிழை

அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக்
குறியே குணமே பெறஎன்னைக்

குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க
நெறியே விளங்க எனைக்கலந்து

நிறைந்தாய் நின்னை ஒருகணமும்
பிறியேன் பிறியேன் இறவாமை

பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே.

18
3609 சுகமே நிரம்பப் பெருங்கருணைத்

தொட்டில் இடத்தே எனைஅமர்த்தி
அகமே விளங்கத் திருஅருளார்

அமுதம் அளித்தே அணைத்தருளி
முகமே மலர்த்திச் சித்திநிலை

முழுதும் கொடுத்து மூவாமல்
சகமேல்240 இருக்கப் புரிந்தாயே

தாயே என்னைத் தந்தாயே.

19
240. சகமே - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க.
3610 தந்தாய் இன்றும் தருகின்றாய்

தருவாய் மேலுந் தனித்தலைமை
எந்தாய் நினது பெருங்கருணை

என்என் றுரைப்பேன் இவ்வுலகில்
சிந்தா குலந்தீர்த் தருள்எனநான்

சிறிதே கூவு முன்என்பால்
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய்

எனது பொழுது வான்பொழுதே.

20

திருச்சிற்றம்பலம்

18. அபயம் இடுதல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3611 உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்

உலவா ஒருபேர் அருளார் அமுதம்
தருவாய் இதுவே தருணம் தருணம்

தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ
வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்

மதிசேர் முடிஎம் பதியே அடியேன்
குருவாய் முனமே மனமே இடமாக்

குடிகொண் டவனே அபயம் அபயம்.

1
3612 என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங்

கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம்
மன்னே அயனும் திருமா லவனும்

மதித்தற் கரிய பெரிய பொருளே
அன்னே அப்பா ஐயா அரசே

அன்பே அறிவே அமுதே அழியாப்
பொன்னே மணியே பொருளே அருளே

பொதுவாழ் புனிதா அபயம் அபயம்.

2
3613 கருணா நிதியே அபயம் அபயம்

கனகா கரனே அபயம் அபயம்
அருணா டகனே அபயம் அபயம்

அழகா அமலா அபயம் அபயம்
தருணா தவனே அபயம் அபயம்

தனிநா யகனே அபயம் அபயம்
தெருணா டுறுவாய் அபயம் அபயம்

திருவம் பலவா அபயம் அபயம்.

3
3614 மருளும் துயரும் தவிரும் படிஎன்

மனமன் றிடைநீ வருவாய் அபயம்
இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ்

சினன்என் றிகழேல் அபயம் அபயம்
வெருளும் கொடுவெம் புலையும் கொலையும்

விடுமா றருள்வாய் அபயம் அபயம்
அருளும் பொருளும் தெருளும் தருவாய்

அபயம் அபயம் அபயம் அபயம்.

4
3615 இனிஓர் இறையும் தரியேன் அபயம்

இதுநின் அருளே அறியும் அபயம்
கனியேன் எனநீ நினையேல் அபயம்

கனியே241 கருணைக் கடலே அபயம்
தனியேன் துணைவே றறியேன் அபயம்

தகுமோ தகுமோ தலைவா அபயம்
துனியே அறவந் தருள்வாய் அபயம்

சுகநா டகனே அபயம் அபயம்.

5
241. களியே - படிவேறுபாடு. ஆ. பா.
3616 அடியார் இதயாம் புயனே அபயம்

அரசே அமுதே அபயம் அபயம்
முடியா தினிநான் தரியேன் அபயம்

முறையோ முறையோ முதல்வா அபயம்
கடியேன் அலன்நான் அபயம் அபயம்

கருணா கரனே அபயம் அபயம்
தடியேல் அருள்வாய் அபயம் அபயம்

தருணா தவனே அபயம் அபயம்.

6
3617 மலவா தனைதீர் கலவா அபயம்

வலவா திருஅம் பலவா அபயம்
உலவா நெறிநீ சொலவா அபயம்

உறைவாய் உயிர்வாய் இறைவா அபயம்
பலஆ குலம்நான் தரியேன் அபயம்

பலவா பகவா பனவா அபயம்
நலவா அடியேன் அலவா அபயம்

நடநா யகனே அபயம் அபயம்.

7
3618 கொடியேன் பிழைநீ குறியேல் அபயம்

கொலைதீர் நெறிஎன் குருவே அபயம்
முடியேன் பிறவேன் எனநின் அடியே

முயல்வேன் செயல்வே றறியேன் அபயம்
படியே அறியும் படியே வருவாய்

பதியே கதியே பரமே அபயம்
அடியேன் இனிஓர் இறையும் தரியேன்

அரசே அருள்வாய் அபயம் அபயம்.

8
3619 இடர்தீர் நெறியே அருள்வாய் அபயம்

இனிநான் தரியேன் தரியேன் அபயம்
விடர்போல் எனைநீ நினையேல் அபயம்

விடுவேன் அலன்நான் அபயம் அபயம்
உடலோ டுறுமா பொருள்ஆ வியும்இங்

குனவே எனவே அலவே அபயம்
சுடர்மா மணியே அபயம் அபயம்

சுகநா டகனே அபயம் அபயம்.

9
3620 குற்றம் பலஆ யினும்நீ குறியேல்

குணமே கொளும்என் குருவே அபயம்
பற்றம் பலமே அலதோர் நெறியும்

பதியே அறியேன் அடியேன் அபயம்
சுற்றம் பலவும் உனவே எனவோ

துணைவே றிலைநின் துணையே அபயம்
சிற்றம் பலவா அருள்வாய் இனிநான்

சிறிதுந் தரியேன் தரியேன் அபயம்.

10

திருச்சிற்றம்பலம்

19. பிரிவாற்றாமை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3621 போக மாட்டேன் பிறரிடத்தே பொய்யிற் கிடந்து புலர்ந்துமனம்
வேக மாட்டேன் பிறிதொன்றும் விரும்ப மாட்டேன் பொய்யுலகன்
ஆக மாட்டேன் அரசேஎன் அப்பா என்றன் ஐயாநான்
சாக மாட்டேன் உனைப்பிரிந்தால் தரிக்க மாட்டேன் கண்டாயே.
1
3622 செல்ல மாட்டேன் பிறரிடத்தே சிறிதுந் தரியேன் தீமொழிகள்
சொல்ல மாட்டேன் இனிக்கணமுந் துயர மாட்டேன் சோம்பன்மிடி
புல்ல மாட்டேன் பொய்யொழுக்கம் பொருந்த மாட்டேன் பிறஉயிரைக்
கொல்ல மாட்டேன் உனைஅல்லால் குறிக்க மாட்டேன் கனவிலுமே242
2
242. கண்டாயே - முதற்பதிப்பு, பொ. க., ச.மு.க.
3623 வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும்
பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான்
சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை
மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.
3
3624 கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுட் கலந்தொளிரும்
தருணச் சுடரே எனைஈன்ற தாயே என்னைத் தந்தோனே
வருணப் படிக மணிமலையே மன்றில் நடஞ்செய் வாழ்வேநற்
பொருண்மெய்ப் பதியே இனித்துயரம் பொறுக்க மாட்டேன் கண்டாயே.
4
3625 திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித் துலவாச் சுயஞ்சோதி
வண்ணம் பழுத்த தனிப்பழமே மன்றில் விளங்கு மணிச்சுடரே
தண்ணம் பழுத்த மதிஅமுதே தருவாய் இதுவே தருணம்என்றன்
எண்ணம் பழுத்த தினிச்சிறியேன் இறையுந் தரியேன் தரியேனே.
5
3626 நாட்டுக் கிசைந்த மணிமன்றில் ஞான வடிவாய் நடஞ்செயருள்
ஆட்டுக் கிசைந்த பெருங்கருணை அப்பா என்றன் அரசேஎன்
பாட்டுக் கிசைந்த பதியேஓர் பரமா னந்தப் பழமேமேல்
வீட்டுக் கிசைந்த விளக்கேஎன் விவேகம் விளங்க விளக்குகவே.
6
3627 வேதந் தலைமேற் கொளவிரும்பி வேண்டிப் பரவு நினதுமலர்ப்
பாதந் தலைமேற் சூட்டிஎனைப் பணிசெய் திடவும் பணித்தனைநான்
சாதந் தலைமேல் எடுத்தொருவர் தம்பின் செலவும் தரமில்லேன்
ஏதந் தலைமேற் சுமந்தேனுக் கிச்சீர் கிடைத்த243 தெவ்வாறே.
7
243. கொடுத்த - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா. ச.மு.க.
3628 பொய்விட் டகலாப் புலைக்கொடியேன் பொருட்டா இரவில் போந்தொருநின்
கைவிட் டகலாப் பெரும்பொருள்என் கையிற் கொடுத்தே களிப்பித்தாய்
மைவிட் டகலா விழிஇன்ப வல்லி மகிழும் மணவாளா
மெய்விட் டகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய்யருளே.
8
3629 சாமத் திரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கந் தடுத்துமயல்
காமக் கடலைக் கடத்திஅருட் கருணை அமுதங் களித்தளித்தாய்
நாமத் தடிகொண் டடிபெயர்க்கும் நடையார் தமக்கும் கடையானேன்
ஏமத் தருட்பே றடைந்தேன்நான் என்ன தவஞ்செய் திருந்தேனே.
9
3630 பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்
சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.
10

திருச்சிற்றம்பலம்

20. இறை பொறுப் பியம்பல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3631 தேடிய துண்டு நினதுரு வுண்மை

தெளிந்திடச் சிறிதுநின் னுடனே
ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே

உரைத்ததும் உவந்ததும் உண்டோ
ஆடிய பாதம் அறியநான் அறியேன்

அம்பலத் தரும்பெருஞ் சோதி
கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்

கூறவுங் கூசும்என் நாவே.

1
3632 மடம்புரி மனத்தாற் கலங்கிய துண்டு

வள்ளலே நின்திரு வரவுக்
கிடம்புரி சிறியேன் கலங்கினேன் எனினும்

இறையும்வே றெண்ணிய துண்டோ
நடம்புரி பாதம் அறியநான் அறியேன்

நான்செயும் வகையினி நன்றே
திடம்புரிந் தருளிக் காத்திடல் வேண்டும்

சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே.

2
3633 நீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி

நின்றதே அன்றிநின் அளவில்
நோக்கிய நோக்கம் பிறவிட யத்தே

நோக்கிய திறையும் இங்குண்டோ
தூக்கிய பாதம் அறியநான் அறியேன்

துயரினிப் பொறுக்கலேன் சிறிதும்
தேக்கிய களிப்பில் சிறப்பவந் தென்னைத்

தெளிவித்தல் நின்கடன் சிவனே.

3
3634 ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும்

என்னுயிர்க் கின்பமும் பொதுவில்
ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன்

அன்றிவே றெண்ணிய துண்டோ
ஊன்றிய பாதம் அறியநான் அறியேன்

உறுகணிங் காற்றலேன் சிறிதும்
தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத்

துலக்குதல் நின்கடன் துணையே.

4
3635 மாயையாற் கலங்கி வருந்திய போதும்

வள்ளல்உன் தன்னையே மதித்துன்
சாயையாப்244 பிறரைப் பார்த்ததே அல்லால்

தலைவவே245 றெண்ணிய துண்டோ
தூயபொற் பாதம் அறியநான் அறியேன்

துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே

நன்றருள் புரிவதுன் கடனே.

5
244. சாயையாற்
245. தலைவரென் - படிவேறுபாடுகள். ஆ. பா.
3636 வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்

மன்னிய உண்மை ஒன்றென்றே
எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்

திறையும்வே றெண்ணிய துண்டோ
அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்

அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்

தெளிவித்துக் காப்பதுன் கடனே.

6
3637 ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்

உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்
வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்

மன்றினை மறந்ததிங் குண்டோ
ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்

ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்

பரிந்தருள் புரிவதுன் கடனே.

7
3638 உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம்

ஒருசிவ மயமென உணர்ந்தேன்
கள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும்

கருத்தயல் கருதிய துண்டோ
வள்ளலுன் பாதம் அறியநான் அறியேன்

மயக்கினிச் சிறிதும்இங் காற்றேன்
தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே

தெளிவித்தல் நின்கடன் சிவனே.

8
3639 எம்மத நிலையும் நின்னருள் நிலையில்

இலங்குதல் அறிந்தனன் எல்லாம்
சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால்

தனித்துவே றெண்ணிய துண்டோ
செம்மலுன் பாதம் அறியநான் அறியேன்

சிறிதும்இங் கினித்துயர் ஆற்றேன்
இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள

தியற்றுவ துன்கடன் எந்தாய்.

9
3640 அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே

அடுத்திடும் புறப்புறம் நான்கில்
இகந்ததும் இலைஓர் ஏகதே சத்தால்

இறையும்இங் கெண்ணிய துண்டோ
உகந்தநின் பாதம் அறியநான் அறியேன்

உறுகணிங் கினிச்சிறி துந்தான்
இகம்பெறல் ஆற்றேன் மயக்கெலாம் தவிர்த்திங்

கென்னைஆண் டருள்வ துன்கடனே.

10

திருச்சிற்றம்பலம்

21. கைம்மாறின்மை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3641 இழைஎலாம் விளங்கும் அம்மை இடங்கொள்நின் கருணை என்னும்
மழைஎலாம் பொழிந்தென் உள்ள மயக்கெலாம் தவிர்த்து நான்செய்
பிழைஎலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கென் புரிவேன் அந்தோ
உழைஎலாம் இலங்குஞ் சோதி உயர்மணி மன்று ளானே.
1
3642 போதுதான் வீணே போக்கிப் புலையனேன் புரிந்த பொல்லாத்
தீதுதான் பொறுத்த உன்றன் திருவருட் பெருமைக் கந்தோ
ஏதுதான் புரிவேன் ஓகோ என்என்று புகழ்வேன் ஞான
மாதுதான் இடங்கொண் டோ ங்க வயங்குமா மன்று ளானே.
2
3643 சிற்றறி வுடையன் ஆகித் தினந்தொறும் திரிந்து நான்செய்
குற்றமும் குணமாக் கொண்ட குணப்பெருங் குன்றே என்னைப்
பெற்றதா யுடனுற் றோங்கும் பெருமநின் பெருமை தன்னைக்
கற்றறி வில்லேன் எந்தக் கணக்கறிந் துரைப்பேன் அந்தோ.
3
3644 மையரி நெடுங்க ணார்தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே
பொய்யறி வுடையேன் செய்த புன்மைகள் பொறுத்தாட் கொண்டாய்
ஐயறி வுடையார் போற்றும் அம்பலத் தரசே நின்சீர்
மெய்யறி வறியேன் எந்த விளைவறிந் துரைப்பேன் அந்தோ.
4
3645 பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக் கெல்லை இல்லை
ஆயினும் பொறுத்தாட் கொண்டாய் அம்பலத் தரசே என்றன்
தாயினும் இனிய உன்றன் தண்அருட் பெருமை தன்னை
நாயினுங் கடையேன் எந்த நலமறிந் துரைப்பேன் அந்தோ.
5
3646 துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த
பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய்
அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற
கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் என்பேன் அந்தோ.
6
3647 வரைகடந் தடியேன் செய்த வன்பிழை பொறுத்தாட் கொண்டாய்
திரைகடந் தண்ட பிண்டத் திசைஎலாம் கடந்தே அப்பால்
கரைகடந் தோங்கும் உன்றன் கருணையங் கடற்சீர் உள்ளம்
உரைகடந் ததுஎன் றால்யான் உணர்வதென் உரைப்ப தென்னே.
7
3648 நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ
கனவினும் பிழையே செய்தேன் கருணைமா நிதியே நீதான்
நினைவினும் குறியா தாண்டாய் நின்னருட் பெருமை தன்னை
வினவினும் சொல்வார் காணேன் என்செய்வேன் வினைய னேனே.
8
3649 வன்செயல் பொறுத்தாட் கொண்ட வள்ளலே அடிய னேன்றன்
முன்செயல் அவைக ளோடு முடுகுபின் செயல்கள் எல்லாம்
என்செயல் ஆகக் காணேன் எனைக்கலந் தொன்றாய் நின்றோய்
நின்செயல் ஆகக் கண்டேன் கண்டபின் நிகழ்த்தல் என்னே.
9
3650 இருமையும் ஒருமை தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன்
பெருமைஎன் என்று நான்தான் பேசுவேன் பேதம் இன்றி
உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட
ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே.
10

திருச்சிற்றம்பலம்

22. நடராசபதி மாலை

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3651 அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ சுகாதீத வெளிநடுவிலே

அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம் அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடுவி ளங்கிஓங்கப்

புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல் பூரணா காரமாகித்
தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள் சிறப்பமுதல் அந்தம்இன்றித்

திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை தெளிந்திட வயங்குசுடரே
சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ சுந்தரிக் கினியதுணையே

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

1
3652 என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்தி லேதயவிலே

என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே என்இயற் குணம்அதனிலே
இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என்செவிப் புலன்இசையிலே

என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே என்அனு பவந்தன்னிலே
தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே தானே கலந்துமுழுதும்

தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பிநிறை கின்றஅமுதே
துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

2
3653 உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம் உள்ளனஎ லாங்கலந்தே

ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும் உதயாத்த மானம்இன்றி
இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய் ஏகமாய் ஏகபோக

இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே இலங்கிநிறை கின்றசுடரே
கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம் ககன்எலாம் கண்டபரமே

காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன் கண்காண வந்தபொருளே
தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த் துணையாய் விளங்கும்அறிவே

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

3
3654 மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது மேன்மேற் கலந்துபொங்க

விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம் விளங்கஅறி வறிவதாகி
உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந் துவட்டாதுள் ஊறிஊறி

ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே உள்ளபடி உள்ளஅமுதே
கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட கண்ணே கலாந்தநடுவே

கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே கணிப்பருங் கருணைநிறைவே
துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட் சுகபோக யோகஉருவே

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

4
3655 எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலேமேல்

ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிர டெய்துவடி வந்தன்னிலே
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மைதனிலே

கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக் கலந்தோங்கு கின்றபொருளே
தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச் சேர்ந்தனு பவித்தசுகமே

சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத் திருமாளி கைத்தீபமே
துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித் தொளிசெய்ஒளியே

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

5
3656 அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே அம்மண்ட லந்தன்னிலே

அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக் கானவடி வாதிதனிலே
விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட விளக்கும்அவை அவையாகியே

மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு மெய்ந்நிலையும் ஆனபொருளே
தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத் தலத்திலுற வைத்தஅரசே

சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம் தானாய்இ ருந்தபரமே
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச் சுகமும்ஒன் றானசிவமே

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

6
3657 நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற நிலையிலே நுண்மைதனிலே

நிகழ்விலே நிகழ்வுற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மைதனிலே
ஊரிலே அந்நீரின் உப்பிலே உப்பிலுறும் ஒண்சுவையி லேதிரையிலே

உற்றநீர்க் கீழிலே மேலிலே நடுவிலே உற்றியல் உறுத்தும்ஒளியே
காரிலே ஒருகோடி பொழியினும் துணைபெறாக் கருணைமழை பொழிமேகமே

கனகசபை நடுநின்ற கடவுளே சிற்சபைக் கண்ணோங்கும் ஒருதெய்வமே
தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற சுகசொருப மானதருவே

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

7
3658 ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா ஒளியிலே சுடரிலேமேல்

ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே உறும்ஆதி அந்தத்திலே
தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம் செயவல்ல செய்கைதனிலே

சித்தாய் விளங்கிஉப சித்தாய சத்திகள் சிறக்கவளர் கின்றஒளியே
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞானமயமே

மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன் வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே
துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச் சுகம்எனக் கீந்ததுணையே

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

8
3659 அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின் ஆதிநடு அந்தத்திலே

ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி ஆடும்அதன் ஆட்டத்திலே
உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின் உற்றபல பெற்றிதனிலே

ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட் குபகரித் தருளும்ஒளியே
குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம் கோடிகிர ணங்கள்வீசிக்

குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும் குலாவும்ஒரு தண்மதியமே
துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட சொருபமே துரியபதமே

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

9
3660 வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு வத்திலே வான்இயலிலே

வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே வண்ணத்தி லேகலையிலே
மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே

வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை வைத்தஅருள் உற்றஒளியே
தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித் திரளிலே தித்திக்கும்ஓர்

தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச் செப்பிடாத் தெள்ளமுதமே
தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த சொருபமே சொருபசுகமே

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

10
3661 என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே இயல்உருவி லேஅருவிலே

ஏறிட்ட சுடரிலே சுடரின்உட் சுடரிலே எறிஆத பத்திரளிலே
ஒன்றிரவி ஒளியிலே ஓங்கொளியின் ஒளியிலே ஒளிஒளியின் ஒளிநடுவிலே

ஒன்றாகி நன்றாகி நின்றாடு கின்றஅருள் ஒளியேஎன் உற்றதுணையே
அன்றிரவில் வந்தெனக் கருள்ஒளி அளித்தஎன் அய்யனே அரசனேஎன்

அறிவனே அமுதனே அன்பனே இன்பனே அப்பனே அருளாளனே
துன்றியஎன் உயிரினுக் கினியனே தனியனே தூயனே என்நேயனே

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

11
3662 அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே அவ்வுருவின் உருவத்திலே

அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியி஧ அவ்வொளியின் ஒளிதன்னிலே
பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே பக்கநடு அடிமுடியிலே

பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே பலித்தபர மானந்தமே
மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு வாழ்வே நிறைந்தமகிழ்வே

மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன் வரமே வயங்குபரமே
துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு துரியமே பெரியபொருளே

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

12
3663 அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல் ஆங்காரி யப்பகுதியே

ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்ந அடியினொடு முடியும்அவையில்
கண்டபல வண்ணமுத லானஅக நிலையும் கணித்தபுற நிலையும்மேன்மேல்

கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக் கலந்துநிறை கின்றஒளியே
கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட குறியே குறிக்கஒண்ணாக்

குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம் கொண்டதனி ஞானவெளியே
தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற சுகயோக அனுபோகமே

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

13
3664 கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற் கடையிலே கடல்இடையிலே

கடல்முதலி லேகடல் திரையிலே நுரையி கடல்ஓசை அதன்நடுவிலே
வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட வடிவிலே வண்ணம்அதிலே

மற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள் வயங்கிஅவை காக்கும் ஒளியே
புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே புகுந்தறி வளித்தபொருளே

பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத் திடாதபொன்னே
மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே மறுப்பிலா தருள்வள்ளலே

மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே.

14
3665 உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல் உற்றகரு வாகிமுதலாய்

உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்
பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம் பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்

பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன் பாங்கோங்கு சிற்சபையுமாய்த்
தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற சிவமாய் விளங்குபொருளே

சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத் தேற்றிஅருள் செய்தகுருவே
மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வேஎன் வாழ்வின்வரமே

மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே.

15
3666 எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாஞ்செய் வல்லதாகி

இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பமாகி
அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த அருளாகி அருள்வெளியிலே

அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள் அருட்பெருஞ் சோதியாகிக்
கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க் காட்சியே கருணைநிறைவே

கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற கதியே கனிந்தகனியே
வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னு வீற்றிருந் தருளும்அரசே

மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராசபதியே.

16
3667 நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம்உடனே

நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின் ஞானமெய்க் கொடிநாட்டியே
மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம் முன்னிப் படைத்தல்முதலாம்

முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம் மூர்த்திகளும் ஏவல்கேட்ப
வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர் வாய்ந்துபணி செய்யஇன்ப

மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல் வளத்தொடு செலுத்துமரசே
சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரியநடு நின்றசிவமே

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

17
3668 ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே உன்னமுடி யாஅவற்றின்

ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம் உற்றகோ டாகோடியே
திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா சிவஅண்டம் எண்ணிறந்த

திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம் சீரண்டம் என்புகலுவேன்
உறுவுறும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில் உறுசிறு அணுக்களாக

ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும் ஒருபெருங் கருணைஅரசே
மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா வரந்தந்த மெய்த்தந்தையே

மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே.

18
3669 வரவுசெல வற்றபரி பூரணா காரசுக வாழ்க்கைமுத லாஎனக்கு

வாய்த்தபொரு ளேஎன்கண் மணியேஎன் உள்ளே வயங்கிஒளிர் கின்றஒளியே
இரவுபகல் அற்றஒரு தருணத்தில் உற்றபேர் இன்பமே அன்பின்விளைவே

என்தந்தை யேஎனது குருவேஎன் நேயமே என்னாசை யேஎன் அறிவே
கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற கருணைஅமு தேகரும்பே

கனியே அருட்பெருங் கடலேஎ லாம்வல்ல கடவுளே கலைகள்எல்லாம்
விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான மெய்ம்மையே சன்மார்க்கமா

மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராசபதியே.

19
3670 பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும் பகுதியும் காலம்முதலாப்

பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த பரமாதி நாதம்வரையும்
சீராய பரவிந்து பரநாத முந்தனது திகழங்கம் என்றுரைப்பத்

திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு தெய்வமே என்றும்அழியா
ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே உயர்தந்தை யேஎன்உள்ளே

உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே உவப்பேஎன் னுடையஉயிரே
ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த அரசே அருட்சோதியே

அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை அமுதநட ராசபதியே.

20
3671 உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை உறுமவுன வெளிவெளியின்மேல்

ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம் ஒருங்கநிறை உண்மைவெளியே
திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய் சித்தே எனக்குவாய்த்த

செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை தெரித்தெனை வளர்த்தசிவமே
பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்றெனக்கே

பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப் பரமமே பரமஞான
வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த வண்ணநடம் இடுவள்ளலே

மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம் வல்லநட ராசபதியே.

21
3672 ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத் துயிர்க்கெலாம் தரினும்அந்தோ

ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற் குவப்பொடு கிடைத்தநிதியே
வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா வரந்தந்த வள்ளலேஎன்

மதியினிறை மதியே வயங்குமதி அமுதமே மதிஅமுதின் உற்றசுகமே
ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ தென்னைஎன் றதிசயிப்ப

இரவுபகல் இல்லாத பெருநிலையில் ஏற்றிஎனை இன்புறச் செய்தகுருவே
ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை யாடென் றுரைத்தஅரசே

அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிஒளிர் அபயநட ராசபதியே.

22
3673 பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என் புகல்வழிப் பணிகள்கேட்பப்

பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப் பொருள்கண்ட சத்தர்பலரும்
ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங் கிசைந்தெடுத் துதவஎன்றும்

இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற் றிருக்கஎனை வைத்தகுருவே
நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும் நலம்பெறச் சன்மார்க்கமாம்

ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல் நடத்திவரு நல்லஅரசே
வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய மாமதியின் அமுதநிறைவே

மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே.

23
3674 வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது மனமிக மயங்கிஒருநாள்

மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை மறந்துதுயில் கின்றபோது
நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை நன்றுற எழுப்பிமகனே

நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ நலிதல்அழ கோஎழுந்தே
ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண் டின்புறுக என்றகுருவே

என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே ரின்பமே என்செல்வமே
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்தசுகமே

மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராசபதியே.

24
3675 என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம் ஏதாக முடியுமோஎன்

றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின் றேங்கிய இராவில்ஒருநாள்
மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே வெளிநின் றணைத்தென்உள்ளே

மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே வீற்றிருக் கின்றகுருவே
நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட நல்குரவி னோன்அடைந்த

நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே நான்கண்டு கொண்டமகிழ்வே
வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை வலியவந் தாண்டபரமே

மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே. 25

3676 துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச் சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே

சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே சுதந்தரம தானதுலகில்
வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய் வாழ்வெலாம் பெற்றுமிகவும்

மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன் மனநினைப் பின்படிக்கே
அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை யாடுக அருட்சோதியாம்

ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோ ம் கைவிடோ ம் ஆணைநம் ஆணைஎன்றே
இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந் திசைவுடன் இருந்தகுருவே

எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில் இலங்குநட ராசபதியே. 26

3677 பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம் பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல பேதமுற் றங்கும்இங்கும்
போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண் போகாத படிவிரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப் பொருளினை உணர்த்திஎல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ என்பிள்ளை ஆதலாலே

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே றெண்ணற்க என்றகுருவே
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு நீதிநட ராசபதியே. 27

3678 சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம் தான்என அறிந்தஅறிவே

தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே தனித்தபூ ரணவல்லபம்
வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும் விளையவிளை வித்ததொழிலே

மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே வியந்தடைந் துலகம்எல்லாம்
மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை வானவர மேஇன்பமாம்

மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின் மரபென் றுரைத்தகுருவே
தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத் தேற்றிஅருள் செய்தசிவமே

சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே தெய்வநட ராசபதியே. 28

3679 நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின்வார்த்தை யாவும்நமது

நீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும் நெஞ்சம்அஞ் சேல் உனக்கே
ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும் அழியாத நிலையின்நின்றே

அன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீ ஆடிவாழ் கென்றகுருவே
நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம் நான்இளங் காலைஅடைய

நல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையே நண்பனே துணைவனேஎன்
ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனேஉள்

ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலே ஓங்குநட ராசபதியே.

29
3680 அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக் கன்புடன் உரைத்தபடியே

அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே இயற்றிவிளை யாடிமகிழ்க

என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி இயல்சுத்தம் ஆதிமூன்றும்
எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம் எய்திநின் னுட்கலந்தேம்

இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ தெம்மாணை என்றகுருவே
மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத வரமாகி நின்றசிவமே

மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே.

30
3681 காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங் கருணைஅமு தேஎனக்குக்

கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக் காட்சியே கனகமலையே
தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித் தலைவனே நின்பெருமையைச்

சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச் சார்கின்ற தோறும்அந்தோ
வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும் மதிஎலாந் தித்திக்கும்என்

மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில் வரும்இன்பம் என்புகலுவேன்
தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம் தோன்றிட விளங்குசுடரே

துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே.

31
3682 எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே எல்லாஞ்செய் வல்லசித்தாய்

என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை எழுமையும் விடாதநட்பே
கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக் கட்டியே கருணைஅமுதே

கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது கண்காண வந்தகதியே
மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன் வினைஎலாந் தீர்த்தபதியே

மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக விளைவேஎன் மெய்ம்மைஉறவே
துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே சுத்தசன் மார்க்கநிலையே

துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே.

32
3683 துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான் சோர்ந்தொரு புறம்படுத்துத்

தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால் தூயதிரு வாய்மலர்ந்தே
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இருகைமலர் கொண்டுதூக்கி

என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத் தியலுற இருத்திமகிழ்வாய்
வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி வைத்தநின் தயவைஅந்தோ

வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப வாரிஅமு தூறிஊறித்
துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச் சுகவண்ணம் என்புகலுவேன்

துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே.

33
3684 ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே ஒருமைநிலை உறுஞானமே

உபயபத சததளமும் எனதிதய சததளத் தோங்கநடு வோங்குசிவமே
பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய பருவத்தில் ஆண்டபதியே

பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம் படிவைக்க வல்லபரமே
ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வாய் ஆடுவோர்க் கரியசுகமே

ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி ஆகிநிறை கின்றநிறைவே
தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது தூக்கந் தொலைத்ததுணையே

துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே.

34

திருச்சிற்றம்பலம்

23. சற்குருமணி மாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3685 மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே

மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே
கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக்

கோயில் இருந்த குணப்பெருங் குன்றே
வேற்றறி யாதசிற் றம்பலக் கனியே

விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே
சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய்

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

1
3686 கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே

கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே
சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே

துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே
சிற்கரை திரையறு திருவருட் கடலே

தெள்ளமு தேகனி யேசெழும் பாகே
சர்க்கரை யேஅது சார்ந்தசெந் தேனே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

2
3687 என்னுயி ரேஎன தின்னுயிர்க் குயிரே

என்அறி வேஎன தறிவினுக் கறிவே
அன்னையில் இனியஎன் அம்பலத் தமுதே

அற்புத மேபத மேஎன தன்பே
பொன்னிணை அடிமலர் முடிமிசை பொருந்தப்

பொருத்திய தயவுடைப் புண்ணியப் பொருளே
தன்னியல் அறிவருஞ் சத்திய நிலையே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

3
3688 காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே

கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே
தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே

சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே
ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே

அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே
தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

4
3689 உருவமும் அருவமும் உபயமும் உளதாய்

உளதில தாய்ஒளிர் ஒருதனி முதலே
கருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே

கண்ணுடை யாய்பெருங் கடவுளர் பதியே
திருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே

சிவகுரு துரியத்தில் தெளிஅனு பவமே
தருவளர் பொழிவடல் சபைநிறை ஒளியே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

5
3690 ஆறந்த நிலைகளின் அனுபவ நிறைவே

அதுஅது வாய்ஒளிர் பொதுவுறு நிதியே
கூறெந்த நிலைகளும் ஒருநிலை எனவே

கூறிஎன் உள்ளத்தில் குலவிய களிப்பே
பேறிந்த நெறிஎனக் காட்டிஎன் தனையே

பெருநெறிக் கேற்றிய ஒருபெரும் பொருளே
சாறெந்த நாள்களும் விளங்கும்ஓர் வடல்வாய்த்

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

6
3691 சாகாத தலைஇது வேகாத காலாம்

தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே
போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே

பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே
ஆகாத பேர்களுக் காகாத நினைவே

ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே
தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

7
3692 தத்துவ மசிநிலை இதுஇது தானே

சத்தியம் காண்எனத் தனித்துரைத் தெனக்கே
எத்துவந் தனைகளும் நீக்கிமெய்ந் நிலைக்கே

ஏற்றிநான் இறவாத இயல்அளித் தருளால்
சித்துவந் துலகங்கள் எவற்றினும் ஆடச்

செய்வித்த பேரருட் சிவபரஞ் சுடரே
சத்துவ நெறிதரு வடல்அருட் கடலே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

8
3693 இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய்

இதுவழி எனஎனக் கியல்புற உரைத்தே
விதுஅமு தொடுசிவ அமுதமும் அளித்தே

மேனிலைக் கேற்றிய மெய்நிலைச் சுடரே
பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே

புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே
சதுமறை முடிகளின் முடியுறு சிவமே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

9
3694 என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம்

இருநிலை களும்ஒரு நிலைஎன அறிவாய்
முன்னிலை சிறிதுறல்246 இதுமயல் உறலாம்

முன்னிலை பின்னிலை முழுநிலை உளவாம்
இந்நிலை அறிந்தவண் எழுநிலை கடந்தே

இயனிலை அடைகஎன் றியம்பிய பரமே
தன்னிலை ஆகிய நன்னிலை அரசே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

10
சிறிதுற - பி. இரா.பதிப்பு. சிறிதுறில் - படிவேறுபாடு. ஆ. பா.
3695 காரணம் இதுபுரி காரியம் இதுமேல்

காரண காரியக் கருவிது பலவாய்
ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே

அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே
பூரண நிலைஅனு பவமுறில் கணமாம்

பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே
தாரணி தனில்என்ற தயவுடை அரசே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

11
3696 பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்
செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

12
247. சென்னெறி - முதற்பதிப்பு, பொ.,சு., பி. இரா., ச. மு. க.
3697 அடிஇது முடிஇது நடுநிலை இதுமேல்

அடிநடு முடியிலா ததுஇது மகனே
படிமிசை அடிநடு முடிஅறிந் தனையே

பதிஅடி முடியிலாப் பரிசையும் அறிவாய்
செடியற உலகினில் அருள்நெறி இதுவே

செயலுற முயலுக என்றசிற் பரமே
தடிமுகில் எனஅருள் பொழிவடல் அரசே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

13
3698 நண்ணிய மதநெறி பலபல அவையே

நன்றற நின்றன சென்றன சிலவே
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள்

அலைதரு கின்றனர் அலைவற மகனே
புண்ணியம் உறுதிரு அருள்நெறி இதுவே

பொதுநெறி எனஅறி வுறமுய லுதிநீ
தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய்

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

14
3699 அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே

அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே
துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே

சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே
விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே

விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய்
தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

15
3700 வேதத்தின் முடிமிசை விளங்கும்ஓர் விளக்கே

மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே
நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே

நவைஅறும் உளத்திடை நண்ணிய நலமே
ஏதத்தின் நின்றெனை எடுத்தருள் நிலைக்கே

ஏற்றிய கருணைஎன் இன்உயிர்த் துணையே
தாதுற்ற உடம்பழி யாவகை புரிந்தாய்

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

16
3701 சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்

தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே
வந்திர விடைஎனக் கருளமு தளித்தே

வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே
மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே

மாநிலத் திடைஎனை வருவித்த பதியே
தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

17
3702 அமரரும் முனிவரும் அதிசயித் திடவே

அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே
கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே

காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே
எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே

எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

18
3703 நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே

நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே
துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே

சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே
என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி

இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே
சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

19
3704 ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி

அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே

உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்

சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

20
3705 கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே

கலந்துகொண் டினிக்கின்ற கற்பகக் கனியே
அற்பனை யாண்டுகொண் டறிவளித் தழியா

அருள்நிலை தனில்உற அருளிய அமுதே
பற்பல உலகமும் வியப்பஎன் தனக்கே

பதமலர் முடிமிசைப் பதித்தமெய்ப் பதியே
தற்பர பரம்பர சிதம்பர நிதியே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

21
3706 பவநெறி செலுமவர் கனவினும் அறியாப்

பரம்பொரு ளாகிஎன் உளம்பெறும் ஒளியே
நவநெறி கடந்ததோர் ஞானமெய்ச் சுகமே

நான்அருள் நிலைபெற நல்கிய நலமே
சிவநெறி யேசிவ நெறிதரு நிலையே

சிவநிலை தனில்உறும் அனுபவ நிறைவே
தவநெறி செலும்அவர்க் கினியநல் துணையே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

22
3707 அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே

அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே
செறியாமல் செறிகின்ற செறிவினுட் செறிவே

திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே
பிரியாமல் என்னுளம் கலந்தமெய்க் கலப்பே

பிறவாமல் இறவாமல் எனைவைத்த பெருக்கே
தறியாகி உணர்வாரும் உணர்வரும் பொருளே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

23
3708 கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே

காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே
எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே

இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே
வருதாகந் தவிர்த்திட வந்ததெள் அமுதே

மாணிக்க மலைநடு மருவிய பரமே
தருதான முணவெனச் சாற்றிய பதியே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

24
3709 ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே

எட்டாத நிலையேநான் எட்டிய மலையே
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி

ஒருநிலை ஆக்கஎன் றுரைத்தமெய்ப் பரமே
ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே

இன்புறப் புரிகின்ற இயல்புடை இறையே
சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

25

திருச்சிற்றம்பலம்

24. தற்போத இழப்பு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3710 அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்

அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச்
செவ்வண்ணம் பழுத்ததனித் திருவுருக்கண் டெவர்க்கும்

தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன்
இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில்

இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ
மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன்

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

1
3711 கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம்

கண்டுகொண்டேன் சிறிதடியேன் கண்டுகொண்ட படியே
நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே

நாடறியா திருப்பம்என்றே நன்றுநினைந் தொருசார்
உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான்

உன்செயலோ பெருமாயை தன்செயெலோ அறியேன்
வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும்

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

2
3712 இகத்திருந்த வண்ணம்எலாம் மிகத்திருந்த அருட்பேர்

இன்பவடி வம்சிறியேன் முன்புரிந்த தவத்தால்
சகத்திருந்தார் காணாதே சிறிதுகண்டு கொண்ட

தரம்நினைந்து பெரிதின்னும் தான்காண்பேம் என்றே
அகத்திருந்த எனைப்புறத்தே இழுத்துவிடுத் ததுதான்

ஆண்டவநின் அருட்செயலோ மருட்செயலோ அறியேன்
மகத்திருந்தார் என்அளவில் என்நினைப்பார் அந்தோ

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

3
3713 கருங்களிறு போல்மதத்தால் கண்செருக்கி வீணே

காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்

உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்

பிறர்அறியா வகைபெரிதும் பெறுதும்என உள்ளே
மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

4
3714 நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று

நாணிஉரைத் தலமரவே நல்லமணி மன்றில்
ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில்

ஆடும்அன்பர் போல்நமக்கும் அருள்கிடைத்த தெனினும்
வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க

வேண்டும்என இருந்தஎன்னை வெளியில்இழுத் திட்டு
வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

5
3715 நதிகலந்த சடைஅசையத் திருமேனி விளங்க

நல்லதிருக் கூத்தாட வல்லதிரு அடிகள்
கதிகலந்து கொளச்சிறியேன் கருத்திடையே கலந்து

கள்ளம்அற உள்ளபடி காட்டிடக்கண் டின்னும்
பதிகலந்து கொளும்மட்டும் பிறர்அறியா திருக்கப்

பரிந்துள்ளே இருந்தஎன்னை வெளியில் இழுத் திட்டு
மதிகலந்து கலங்கவைத்த விதியைநினைந் தையோ

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

6
3716 மஞ்சனைய குழலம்மை எங்கள்சிவ காம

வல்லிமகிழ் திருமேனி வண்ணமது சிறிதே
நஞ்சனைய கொடியேன்கண் டிடப்புரிந்த அருளை

நாடறியா வகைஇன்னும் நீடநினைத் திருந்தேன்
அஞ்சனைய பிறர்எல்லாம் அறிந்துபல பேசி

அலர்தூற்ற அளியஎனை வெளியில்இழுத் திட்டு
வஞ்சனைசெய் திடவந்த விதியைநினைந் தையோ

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

7
3717 அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா

தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்
புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம்

பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா
துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை

உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால்
வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.

8
3718 விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களிற் சிறந்த

வினைக்கொடியேம் பொருட்டாக விரும்பிஎழுந் தருளிக்
கழற்கிசைந்த பொன்அடிநம் தலைமேலே அமைத்துக்

கருணைசெயப் பெற்றனம்இக் கருணைநம்மை இன்னும்
நிழற்கிசைத்த மேல்நிலையில் ஏற்றும்என மகிழ்ந்து

நின்றஎன்னை வெளியில்இழுத் துலகவியா பார
வழக்கில்வளைத் தலைக்கவந்த விதியைநினைந் தையோ

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

9
3719 அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்எலாம் காணா

அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக்
கொடிபிடித்த குருமணியைக் கூடுமட்டும் வேறோர்

குறிப்பின்றி இருப்பம்எனக் கொண்டகத்தே இருந்தேன்
படிபிடித்த பலர்பலவும் பகர்ந்திடஇங் கெனைத்தான்

படுவழக்கிட் டுலகியலாம் வெளியில்இழுத் தலைத்தே
மடிபிடித்துப் பறிக்கவந்த விதியைநினைந் தையோ

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.

10

திருச்சிற்றம்பலம்

25. திருமுன் விண்ணப்பம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3720 மாழை மாமணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற
வாழை வான்பழச் சுவைஎனப் பத்தர்தம் மனத்துளே தித்திப்போய்
ஏழை நாயினேன் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் செயல்வேண்டும்
கோழை மானிடப் பிறப்பிதில் உன்னருட் குருஉருக் கொளும்ஆறே.
1
3721 பொன்னின் மாமணிப் பொதுநடம் புரிகின்ற புண்ணியா கனிந்தோங்கி
மன்னு வாழையின் பழச்சுவை எனப்பத்தர் மனத்துளே தித்திப்போய்
சின்ன நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
இன்ன என்னுடைத் தேகம்நல் ஒளிபெறும் இயல்உருக் கொளும்ஆறே.
2
3722 விஞ்சு பொன்னணி அம்பலத் தருள்நடம் விளைத்துயிர்க் குயிராகி
எஞ்சு றாதபேர் இன்பருள் கின்றஎன் இறைவநின் அருள்இன்றி
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி அமைத்தருள் செயல்வேண்டும்
துஞ்சும் இவ்வுடல் இம்மையே துஞ்சிடாச் சுகஉடல் கொளும்ஆறே.
3
3723 ஓங்கு பொன்அணி அம்பலத் தருள்நடம் உயிர்க்கெலாம் ஒளிவண்ணப்
பாங்கு மேவநின் றாடல்செய் இறைவநின் பதமலர் பணிந்தேத்தாத்
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
ஈங்கு வீழுடல் இம்மையே வீழ்ந்திடா இயலுடல் உறும்ஆறே.
4
3724 இலங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற இறைவஇவ் வுலகெல்லாம்
துலங்கும் வண்ணநின் றருளுநின் திருவடித் துணைதுணை என்னாமல்
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
அலங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறா அருள்உடல் உறும்ஆறே.
5
3725 சிறந்த பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற
அறந்த வாதசே வடிமலர் முடிமிசை அணிந்தக மகிழ்ந்தேத்த
மறந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் செயல்வேண்டும்
பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெருநலம் பெறும்ஆறே.
6
3726 விளங்கு பொன்அணிப் பொதுநடம் புரிகின்ற விரைமலர்த் திருத்தாளை248
உளங்கொள் அன்பர்தம் உளங்கொளும் இறைவநின் ஒப்பிலாப் பெருந்தன்மை
களங்கொள் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
துளங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறாத் தொல்லுடல் உறும்ஆறே.
7
விளங்கு பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே விரைமலர்த் திருத்தாளை - முதற் பதிப்பு.
3727 வாய்ந்த பொன்அணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே மறைஎல்லாம்
ஆய்ந்தும் இன்னஎன் றறிந்திலா நின்திரு அடிமலர் பணியாமல்
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
ஏய்ந்த இவ்வுடல் இம்மையே திருவருள் இயல்உடல் உறும்ஆறே.
8
3728 மாற்றி லாதபொன் அம்பலத் தருள்நடம் வயங்கநின் றொளிர்கின்ற
பேற்றில் ஆருயிர்க் கின்பருள் இறைவநின் பெயற்கழல் கணிமாலை
சாற்றி டாதஎன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
காற்றில் ஆகிய இவ்வுடல் இம்மையே கதியுடல் உறும்ஆறே..
9
3729 தீட்டு பொன்அணி அம்பலத் தருள்நடம் செய்துயிர்த் திரட்கின்பம்
காட்டு கின்றதோர் கருணையங் கடவுள்நின் கழலிணை கருதாதே
நீட்டு கின்றஎன் விண்ணப்பம் திருச்செவி நேர்ந்தருள் செயல்வேண்டும்
வாட்டும்249இவ்வுடல் இம்மையே அழிவுறா வளமடைந் திடும்ஆறே.
10
249. ஆட்டும் - படிவேறுபாடு. ஆ. பா.

திருச்சிற்றம்பலம்

26. இனித்த வாழ்வருள் எனல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3730 உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி
புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம் பொறுத்தடி யேன்தனக் களித்த
வரத்தவா உண்மை வரத்தவா ஆக மங்களும் மறைகளும் காணாத்
தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில் தனித்தவா இனித்தவாழ் வருளே.
1
3731 முன்னவா திபர்க்கு முன்னவா வேத முடிமுடி மொழிகின்ற முதல்வா
பின்னவா திபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும்
சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும்
மன்னவா அமுதம் அன்னவா எல்லாம் வல்லவா நல்லவாழ் வருளே.
2
3732 விடையவா தனைதீர் விடையவா சுத்த வித்தைமுன் சிவவரை கடந்த
நடையவா ஞான நடையவா இன்ப நடம்புரிந் துயிர்க்கெலாம் உதவும்
கொடையவா ஓவாக் கொடையவா எனையாட் கொண்டெனுள் அமர்ந்தரு ளியஎன்
உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க் குரியவா பெரியவாழ் வருளே.
3
3733 வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனமுதல் கடந்த
புலத்தவா எனது புலத்தவா தவிர்த்துப் பூரண ஞானநோக் களித்த
நலத்தவா வரையா நலத்தவா மறைகள் நாடியும் காண்பதற் கரிதாம்
பலத்தவா திருஅம் பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்தவாழ் வருளே.
4
3734 உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உருவதாய் இன்பம்
புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண்
குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்
தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே.
5
3735 தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா
சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே
ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ் வருளே.
6
3736 மதம்புகல் முடிபு கடந்தமெய்ஞ் ஞான மன்றிலே வயங்கொள்நா டகஞ்செய்
பதம்புகல் அடியேற் கருட்பெருஞ் சோதிப் பரிசுதந் திடுதும்என் றுளத்தே
நிதம்புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்தநிற் குணமாம்
சிதம்புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞானவாழ் வருளே.
7
3737 மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்தென துடம்பும்
ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த அருட்பெருஞ் சோதிஅம் பலவா
ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும் உணர்ச்சியும் ஒளிபெறு செயலும்
மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூயவாழ் வருளே.
8
3738 பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
தங்கும்ஓர் சோதித் தனிப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா
துங்கம்உற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே.
9
3739 இனித்தசெங் கரும்பில் எடுத்ததீஞ் சாற்றின் இளம்பதப் பாகொடு தேனும்
கனித்ததீங் கனியின் இரதமும் கலந்து கருத்தெலாம் களித்திட உண்ட
மனித்தரும் அமுத உணவுகொண் டருந்தும் வானநாட் டவர்களும் வியக்கத்
தனித்தமெய்ஞ் ஞானஅமுதெனக் களித்த தனியவா இனியவாழ் வருளே.
10

திருச்சிற்றம்பலம்

27. திருவருள் விழைதல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3740 செய்வகை அறியேன் மன்றுள்மா மணிநின்

திருவுளக் குறிப்பையும் தெரியேன்
உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ

உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்

வினையனேன் என்செய விரைகேன்
பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுவேன்

புலையனேன் புகல்அறி யேனே.

1
3741 அறிவிலேன் அறிந்தார்க் கடிப்பணி புரியேன்

அச்சமும் அவலமும் உடையேன்
செறிவிலேன் பொதுவாம் தெய்வம்நீ நினது

திருவுளத் தெனைநினை யாயேல்
எறிவிலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன்

என்செய்வேன் யார்துணை என்பேன்
பிறிவிலேன் பிரிந்தால் உயிர்தரிக் கலன்என்

பிழைபொறுத் தருள்வதுன் கடனே.

2
3742 உன்கடன் அடியேற் கருளல்என் றுணர்ந்தேன்

உடல்பொருள் ஆவியும் உனக்கே
பின்கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த

பின்னும்நான் தளருதல் அழகோ
என்கடன் புரிவேன் யார்க்கெடுத் துரைப்பேன்

என்செய்வேன் யார்துணை என்பேன்
முன்கடன் பட்டார் போல்மனம் கலங்கி

முறிதல்ஓர் கணம்தரி யேனே.

3
3743 தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது

தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே
தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும்

தெரித்திடாய் எனில்இடர் எனைத்தான்
எரித்திடும் அந்தோ என்செய்வேன் எங்கே

எய்துகேன் யார்துணை என்பேன்
திரித்தநெஞ் சகத்தேன் சரித்திரம் அனைத்தும்

திருவுளம் தெரிந்தது தானே.

4
3744 தான்எனைப் புணரும் தருணம்ஈ தெனவே

சத்தியம் உணர்ந்தனன் தனித்தே
தேன்உறக் கருதி இருக்கின்றேன் இதுநின்

திருவுளம் தெரிந்ததெந் தாயே
ஆன்எனக் கூவி அணைந்திடல் வேண்டும்

அரைக்கணம் ஆயினும் தாழ்க்கில்
நான்இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே

நடம்புரி ஞானநா டகனே.

5
3745 ஞானமும் அதனால் அடைஅனு பவமும்

நாயினேன் உணர்ந்திட உணர்த்தி
ஈனமும் இடரும் தவிர்த்தனை அந்நாள்

இந்தநாள் அடியனேன் இங்கே
ஊனம்ஒன் றில்லோய் நின்றனைக் கூவி

உழைக்கின்றேன் ஒருசிறி தெனினும்
ஏனென வினவா திருத்தலும் அழகோ

இறையும்நான் தரிக்கலன் இனியே.

6
3746 இனியநற் றாயின் இனியஎன் அரசே

என்னிரு கண்ணினுண் மணியே
கனிஎன இனிக்கும் கருணைஆர் அமுதே

கனகஅம் பலத்துறும் களிப்பே
துனிஉறு மனமும் சோம்புறும் உணர்வும்

சோர்வுறு முகமும்கொண் டடியேன்
தனிஉளங் கலங்கல் அழகதோ எனைத்தான்

தந்தநற் றந்தைநீ அலையோ.

7
3747 தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும்

சாமியும் பூமியும் பொருளும்
சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும்

சுற்றமும் முற்றும்நீ என்றே
சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின்

திருவுளம் தெரிந்ததே எந்தாய்
நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல்

நீதியோ நின்அருட் கழகோ.

8
3748 அழகனே ஞான அமுதனே என்றன்

அப்பனே அம்பலத் தரசே
குழகனே இன்பக் கொடிஉளம் களிக்கும்

கொழுநனே சுத்தசன் மார்க்கக்
கழகநேர் நின்ற கருணைமா நிதியே

கடவுளே கடவுளே எனநான்
பழகநேர்ந் திட்டேன் இன்னும்இவ் வுலகில்

பழங்கணால் அழுங்குதல் அழகோ.

9
3749 பழம்பிழி மதுரப் பாட்டல எனினும்

பத்தரும் பித்தரும் பிதற்றும்
கிழம்பெரும் பாட்டும் கேட்பதுன் உள்ளக்

கிளர்ச்சிஎன் றறிந்தநாள் முதலாய்
வழங்குநின் புகழே பாடுறு கின்றேன்

மற்றொரு பற்றும்இங் கறியேன்
சழங்குடை உலகில் தளருதல் அழகோ

தந்தையுந் தாயும்நீ அலையோ.

10
3750 தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான

சபையிலே தனிநடம் புரியும்
தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன்

தூக்கமும் சோம்பலும் துயரும்
மாயையும் வினையும் மறைப்பும்ஆ ணவமும்

வளைத்தெனைப் பிடித்திடல் வழக்கோ
நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன்

நல்அருட் சோதிதந் தருளே.

11
3751 சோதியேல் எனைநீ சோதனை தொடங்கில்

சூழ்உயிர் விடத்தொடங் குவன்நான்
நீதியே நிறைநின் திருவருள் அறிய

நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே
ஓதியே உணர்தற் கரும்பெரும் பொருளே

உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
ஆதியே நடுவே அந்தமே ஆதி

நடுஅந்தம் இல்லதோர் அறிவே.

12
3752 இல்லைஉண் டெணும்இவ் விருமையும் கடந்தோர்

இயற்கையின் நிறைந்தபே ரின்பே
அல்லைஉண் டெழுந்த தனிப்பெருஞ் சுடரே

அம்பலத் தாடல்செய் அமுதே
வல்லைஇன் றடியேன் துயர்எலாம் தவிர்த்து

வழங்குக நின்அருள் வழங்கல்
நல்லைஇன் றலது நாளைஎன் றிடிலோ

நான்உயிர் தரிக்கலன் அரசே.

13
3753 அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின்

அருளர செனஅறிந் தனன்பின்
உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை

உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய்
வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி

வழிகின்ற தென்வசங் கடந்தே
இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை

ஈந்தருள் இற்றைஇப் போதே.

14
3754 போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த

புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும்
சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும்

தூயர்கள் மனம்அது துளங்கித்
தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ

தனிஅருட் சோதியால் அந்த
வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம்

வழங்குவித் தருளுக விரைந்தே.

15
3755 விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும்

விளம்பும்இத் தருணம்என் உளந்தான்
கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக்

கரைஎலாம் கடந்தது கண்டாய்
வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம்

வல்லவா அம்பல வாணா
திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித்

திகழ்வித்த சித்தனே சிவனே.

16
3756 சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும்

தெய்வம்ஒன் றேஎனும் திறமும்
நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும்

நன்மையும் நரைதிரை முதலாம்
துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச்

சுகவடி வம்பெறும் பேறும்
தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ

தந்தருள் தருணம்ஈ தெனக்கே.

17
3757 தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்

தனிநெறி உலகெலாம் தழைப்பக்
கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்

கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்

புண்ணியம் பொற்புற வயங்க
அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

18
3758 என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற்

றிருள்இர வொழிந்தது முழுதும்
மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன்

மங்கல முழங்குகின் றனசீர்ப்
பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப்

பூவையர் புணர்ந்திடப் போந்தார்
சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி

துலங்கவந் தருளுக விரைந்தே.

19
3759 வந்தருள் புரிக விரைந்திது தருணம்

மாமணி மன்றிலே ஞான
சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்

சுத்தசன் மார்க்கசற் குருவே
தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல

தனிஅருட் சோதியை எனது
சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே

செய்வித் தருள்கசெய் வகையே.

20

திருச்சிற்றம்பலம்

28. திருக்கதவந் திறத்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3760 திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே

திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்

ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே

கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

1
3761 மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே

மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே

கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ
தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே

தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே
திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

2
3762 உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே

உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி

என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது

கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
திரைகடந்த குருமணியே சிவஞான மணியே

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

3
3 763 உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ

உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ
அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன்

அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே
என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர்

என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன்
தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

4
3764 இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே

இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்

பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த

பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

5
3765 பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ

பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ
மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன்

விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாட்டே
பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது

பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே
செய்யுடைஎன் னொடுகூடி ஆடஎழுந் தருள்வாய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

6
3766 கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்

கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்

நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே

இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

7
3767 வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்

எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே
தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

8
3768 கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே

உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

9
3769 திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே

திருவருட்பே ரொளிகாட்டித் திருஅமுதம் ஊட்டிக்
கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து

கனிந்துயிரில் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும்
உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா

தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே
திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

10

திருச்சிற்றம்பலம்

29. சிற்சபை விளக்கம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3770 சோறு வேண்டினும் துகில்அணி முதலாம்

சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம்
வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி

மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கே
மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
சாறு வேண்டிய பொழில்வடல் அரசே

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.250

1
250. இஃது 1492 ஆம் பாடலின் உத்தர வடிவம்.
3771 எஞ்சல் இன்றிய துயரினால் இடரால்

இடுக்குண் டையநின் இன்னருள் விரும்பி
வஞ்ச நெஞ்சினேன் வந்துநிற் கின்றேன்

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
அஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும்

அப்ப நின்னலால் அறிகிலேன் ஒன்றும்
தஞ்சம் என்றவர்க் கருள்வடல் அரசே

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

2
3772 சூழ்வி லாதுழல் மனத்தினால் சுழலும்

துட்ட னேன்அருட் சுகப்பெரும் பதிநின்
வாழ்வு வேண்டினேன் வந்துநிற் கின்றேன்

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
ஊழ்வி டாமையில் அரைக்கணம் எனினும்

உன்னை விட்டயல் ஒன்றும்உற் றறியேன்
தாழ்வி லாதசீர் தருவடல் அரசே

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

3
3773 ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால்

அலைதந் தையவோ அயர்ந்துளம் மயர்ந்து
வாட்ட மோடிவண் வந்துநிற் கின்றேன்

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
நாட்டம் நின்புடை அன்றிமற் றறியேன்

நாயி னேன்பிழை பொறுத்திது251 தருணம்
தாட்ட லந்தரு வாய்வடல் அரசே

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

4
251. நயந்திது - படிவேறுபாடு. ஆ. பா.
3774 கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்

காடு மேடுழன் றுளம்மெலிந் தந்தோ
வருண நின்புடை வந்துநிற் கின்றேன்

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
அருணன் என்றெனை அகற்றிடு வாயேல்

ஐய வோதுணை அறிந்திலன் இதுவே
தருணம் எற்கருள் வாய்வடல் அரசே

சத்தி யச்சபைத் தனிபெரும் பதியே.

5
3775 கரண வாதனை யால்மிக மயங்கிக்

கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன்
மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன்

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர்

இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய
சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

6
3776 தூய நெஞ்சினேன் அன்றுநின் கருணைச்

சுகம்வி ழைந்திலேன் எனினும்பொய் உலக
மாயம் வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
ஈய வாய்த்தநல் தருணம்ஈ தருள்க

எந்தை நின்மலர் இணைஅடி அல்லால்
தாயம் ஒன்றிலேன் தனிவடல் அரசே

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

7
3777 சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும்

சேர்ந்தி லேன்அருட் செயலிலேன் சாகா
வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன்

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ

கைவி டேல்ஒரு கணம்இனி ஆற்றேன்
தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

8
3778 பத்தி யஞ்சிறி துற்றிலேன் உன்பால்

பத்தி ஒன்றிலேன் பரமநின் கருணை
மத்தி யம்பெற வந்துநிற் கின்றேன்

வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
எத்தி அஞ்சலை எனஅரு ளாயேல்

ஏழை யேன்உயிர் இழப்பன்உன் ஆணை
சத்தி யம்புகன் றேன்வடல் அரசே

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

9
3779 கயவு செய்மத கரிஎனச் செருக்கும்

கருத்தி னேன்மனக் கரிசினால் அடைந்த
மயர்வு நீக்கிட வந்துநிற் கின்றேன்

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
உயவு வந்தருள் புரிந்திடாய் எனில்என்

உயிர் தரித்திடா துன்அடி ஆணை
தயவு செய்தருள் வாய்வடல் அரசே

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

10

திருச்சிற்றம்பலம்

30. திருவருட் பேறு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3780 படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும்

பதியைஅடை வித்தீர்அப் பதிநடுவே விளங்கும்
கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக்

கொடுத்தீர்அக் கோயிலிலே கோபுரவா யிலிலே
செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித்

திரும்பவும்நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
அடிகள்இது தருணம்இனி அரைக்கணமும் தரியேன்

அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே.

1
3781 பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ

பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்

இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்

அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக
வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை

மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.

2
3782 கைக்கிசைந்த பொருள்எனக்கு வாய்க்கிசைந்துண் பதற்கே

காலம்என்ன கணக்கென்ன கருதும்இடம் என்ன
மெய்க்கிசைந்தன் றுரைத்ததுநீர் சத்தியம் சத்தியமே

விடுவேனோ இன்றடியேன் விழற்கிறைத்தேன் அலவே
செய்க்கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன்

தினந்தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும்
மைக்கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி

மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.

3
3783 பரிகலத்தே திருஅமுதம் படைத்துணவே பணித்தீர்

பணித்தபின்னோ என்னுடைய பக்குவம்பார்க் கின்றீர்
இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார்

இவர்பெரியர் இவர்சிறியர் என்னல்வழக் கலவே
உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்தீர்

உடல்பொருள்ஆ விகளைஎலாம் உம்மதெனக் கொண்டீர்
திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ

சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே.

4
3784 பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே

பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக்
கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத

கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத
மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர்

மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும்
மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி

மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.

5
3785 மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்

விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்

முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே

என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே

பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.

6
3786 எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே

எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே
இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்

வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும்
மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம்

வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில்
விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும்

வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ.

7
3787 கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும்

கொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
ஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே

அம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ்சோ தியனே
தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே

சந்தேகம் இல்லைஅந்தத் தனித்ததிரு வரவின்
நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது

நனவிடையா யினும்அன்றிக் கனவிடையா யினுமே.

8
3788 அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே

அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான்
கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற252 தரசே

கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம்
பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில்

புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ
இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின்253

றெழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே.

9
252. கலக்குகின்ற - ச. மு. க. பதிப்பு.
253. மிசையின் - ச. மு. க. பதிப்பு.
3789 இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம்

இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனனே நீதான்
மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி

வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய்
குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது

குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை
பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள்

புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.

10

திருச்சிற்றம்பலம்

31. உண்மை கூறல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3790 தனிப்பெருந் தலைவரே தாயவ ரேஎன்

தந்தைய ரேபெருந் தயவுடை யவரே
பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேஎம்

பார்வதி புரஞானப் பதிசிதம் பரரே
இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா

இறையவ ரேஉமை இங்குகண் டல்லால்
அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன்

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

1
3791 பெறுவது நுமைஅன்றிப் பிறிதொன்றும் விரும்பேன்

பேசல்நும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன்
உறுவதுநும் அருள்அன்றிப் பிரிதொன்றும் உவவேன்

உன்னல்உம் திறன்அன்றிப் பிரிதொன்றும் உன்னேன்
மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர்

வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன்

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

2
3792 கரும்பிடை இரதமும் கனியில்இன் சுவையும்

காட்டிஎன் உள்ளம் கலந்தினிக் கின்றீர்
விரும்பிநும் பொன்னடிக் காட்பட்டு நின்றேன்

மேல்விளை வறிகிலன் விச்சைஒன் றில்லேன்
துரும்பினும் சிறியனை அன்றுவந் தாண்டீர்

தூயநும் பேரருட் சோதிகண் டல்லால்
அரும்பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன்

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

3
3793 தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன்

தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே
தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத் தேனும்

தூயநும் திருவருள் நேயம்விட் டறியேன்
விடுத்திடில் என்னைநீர் விடுப்பன்என் உயிரை

வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர்
அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன்

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

4
3794 காசையும் பணத்தையும் கன்னியர் தமையும்

காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர்
நேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால்

நேசம்மற் றிலைஇது நீர்அறி யீரோ
ஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர்

இறையவ ரேஉமை இன்றுகண் டல்லால்
ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன்

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

5
3795 என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம்

ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானீர்
இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர்

என்செயல் ஒன்றிலை யாவும்நும் செயலே
வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர்

வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன்

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

6
3796 திருந்தும்என் உள்ளத் திருக்கோயில் ஞான

சித்தி புரம்எனச் சத்தியம் கண்டேன்
இருந்தருள் கின்றநீர் என்னிரு கண்கள்

இன்புற அன்றுவந் தெழில்உருக் காட்டி
வருந்தலை என்றெனைத் தேற்றிய வாறே

வள்ளலே இன்றுநும் வரவுகண் டல்லால்
அருந்தவர் நேரினும் பொருந்தவும் மாட்டேன்

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

7
3797 கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர்

கருணைக் கடற்குக் கரைக்கணஞ் செய்யீர்
உரைக்கண வாத உயர்வுடை யீர்என்

உரைக்கண விப்பல உதவிசெய் கின்றீர்
வரைக்கண எண்குண மாநிதி ஆனீர்

வாய்மையில் குறித்தநும் வரவுகண் டல்லால்
அரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன்

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

8
3798 மடுக்கநும் பேரருள் தண்அமு தெனக்கே

மாலையும் காலையும் மத்தியா னத்தும்
கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்

காலையி னுந்தந்தென் கடும்பசி தீர்த்து
எடுக்குநற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர்

இறையவ ரேஉம்மை இங்குகண் டல்லால்
அடுக்கவீழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன்

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

9
3799 கறுத்துரைக் கின்றவர் களித்துரைக் கின்ற

காலைஈ தென்றே கருத்துள் அறிந்தேன்
நிறுத்துரைக் கின்றபல் நேர்மைகள் இன்றி

நீடொளிப் பொற்பொது நாடகம் புரிவீர்
செறுத்துரைக் கின்றவர் தேர்வதற் கரியீர்

சிற்சபை யீர்எனைச் சேர்ந்திடல் வேண்டும்
அறுத்துரைக் கின்றேன்நான் பொறுத்திட மாட்டேன்

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

10

திருச்சிற்றம்பலம்

32. பிரியேன் என்றல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3800 அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன்

அச்சம்எலாம் துன்பம்எலாம் அறுத்துவிரைந் துவந்தே
இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி

எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின்

தாளிணைகள் அறிகஇது தயவுடையோய் எவர்க்கும்
துப்பாகித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே

சுத்தசிவா னந்தஅருட் சோதிநடத் தரசே.

1
3801 ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா

அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்

குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்

உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது

மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.

2
3802 படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே

பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்

உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்

மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான

நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.

3
3803 வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட

மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ

இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு

மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்

கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.

4
3804 செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்

திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே

பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே

எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்

அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே.

5
3805 முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு

முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்ந்திங் கிருந்தேன்
இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே

எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ
அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே

ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய்
என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே

என்னுயிர்க்குப் பெருந்துணையே என்னுயிர்நா யகனே.

6
3806 உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்

உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ
என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான்

என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும்

அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே
இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்

இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.

7
3807 நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது

நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும்
வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை

மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய
ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்

உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன்
பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே

பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.

8
3808 தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே

சிவமாலை அணிந்தனைஅச் சிறுவயதில் இந்த
உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்

ஓடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ
கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது

கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடிஅன் றதுதான்
வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி

விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே.

9
3809 பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்

பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே
துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை

துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த
அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்

அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே
உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்

உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே.

10
3810 கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே

கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே
சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த்

தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள்
தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து

தானாகி நானாடத் தருணம்இது தானே
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்

குருவேஎன் குற்றமெலாம் குணமாக்கொண் டவனே.

11

திருச்சிற்றம்பலம்

33. சிவ தரிசனம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3811 திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்

செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே
உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே

உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே
அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்

அப்பாலும் ஆய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே
மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா

வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.

1
3812 சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே

தூயவனே நேயவனே சோதிஉரு வவனே
நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே

நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
அல்லவனே ஆனவனே அம்மைஅப்பா என்னை

ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம்
வல்லவனே சிவகாம வல்லிமண வாளா

மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே.

2
3813 துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே

சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே
பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே

பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன்

கண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ
அரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே

அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.

3
3814 மறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே

மலைவறியா நிலைநிரம்ப வயங்கியசெம் பொருளே
இறப்பறியாத் திருநெறியில்254 என்னைவளர்த் தருளும்

என்னுடைய நற்றாயே எந்தாயே நினது
சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே

சித்தசிகா மணியேநீ சித்திஎலாம் விளங்கப்
பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய்

பெருங்கருணை அரசேநீ தருந்தருணம் இதுவே.

4
254. திருநிலையில் - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா.

3815
முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின்

முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன்
தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின்

தனதுசுதந் தரமேஇங் கெனதுசுதந் தரமோ
என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல்

யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார்
பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம்

பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே.

5
3816 விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்

விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே
மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும்

முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ
செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்

சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே

பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே.

6
3817 மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே

மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ
தேன்ஒருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ

தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள்செய் தேனோ
நானொருபா வமும்அறியேன் நன்னிதியே எனது

நாயகனே பொதுவிளங்கும் நடராஜ பதியே
ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ

என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.

7
3818 பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே

பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன்
ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பேர்

ஆசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன்
கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது

குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன்
தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா

தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே.

8
3819 கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே

கருதுகின்றேன் வேறொன்றும் கருதுகிலேன் இதுதான்
சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது

திருவுளமே அறிந்ததுநான் செப்புதல்என் புவிமேல்
விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ

விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளும் தருணம்
தொட்டதுநான் துணிந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே

சொல்வதலால் என்அறிவால் சொல்லவல்லேன் அன்றே.

9
3820 காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது

கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்
கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்

கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்
சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே

சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்
பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே

பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.

10
3821 சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்

செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த
இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற்

கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம்
சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல்

சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை
நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ்ந் தமைவாய்

நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.

11

திருச்சிற்றம்பலம்

34. அனுபோக நிலயம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3822 இனிப்பிரிந் திறையும் இருக்கலேன் பிரிவை

எண்ணினும் ஐயவோ மயங்கிப்
பனிப்பில்என் உடம்பும் உயிரும்உள் உணர்வும்

பரதவிப் பதைஅறிந் திலையோ
தனிப்படு ஞான வெளியிலே இன்பத்

தனிநடம் புரிதனித் தலைவா
கனிப்பயன் தருதற் கிதுதகு தருணம்

கலந்தருள் கலந்தருள் எனையே.

1
3823 பிரிந்தினிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப்

பேசினும் நெய்விடுந் தீப்போல்
எரிந்துளங் கலங்கி255 மயங்கல்கண் டிலையோ

எங்கணும் கண்ணுடை எந்தாய்
புரிந்தசிற் பொதுவில் திருநடம் புரியும்

புண்ணியா என்னுயிர்த் துணைவா
கரந்திடா256 துறுதற் கிதுதகு தருணம்

கலந்தருள் கலந்தருள் எனையே.

2
255. கருகி - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.
256. கரைந்திடாது - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க.
3824 மேலைஏ காந்த வெளியிலே நடஞ்செய்

மெய்யனே ஐயனே எனக்கு
மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்

வல்லனே நல்லனே அருட்செங்
கோலையே நடத்தும் இறைவனே ஓர்எண்

குணத்தனே இனிச்சகிப் பறியேன்
காலையே தருதற் கிதுதகு தருணம்

கலந்தருள் கலந்தருள் எனையே.

3
3825 பண்டுகொண் டெனைத்தான் பிழைகுறி யாத

பண்பனே திருச்சிற்றம் பலத்தே
தொண்டுகொண் டடியர் களிக்கநின் றாடும்

தூயனே நேயனே பிரமன்
விண்டுகண் டறியா முடிஅடி எனக்கே

விளங்குறக் காட்டிய விமலா
கண்டுகொண் டுறுதற் கிதுதகு தருணம்

கலந்தருள் கலந்தருள் எனையே.

4
3826 தனித்துணை எனும்என் தந்தையே தாயே

தலைவனே சிற்சபை தனிலே
இனித்ததெள் ளமுதே என்னுயிர்க் குயிரே

என்னிரு கண்ணுள்மா மணியே
அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே

அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
கனித்துணை தருதற் கிதுதகு தருணம்

கலந்தருள் கலந்தருள் எனையே.

5
3827 துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே

சோதியுட் சோதியே அழியா
இன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை

ஈன்றநல் தந்தையே தாயே
அன்பெலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே

அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
பொன்பதந் தருதற் கிதுதகு தருணம்

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.

6
3828 ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்

தென்னைஆட் கொண்டெனை உவந்தே
ஓதும்இன் மொழியால் பாடவே பணித்த

ஒருவனே என்னுயிர்த் துணைவா
வேதமும் பயனும் ஆகிய பொதுவில்

விளங்கிய விமலனே ஞான
போதகம் தருதற் கிதுதகு தருணம்

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.

7
3829 எண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத்

திசைந்தபேர் இன்பமே யான்தான்
பண்ணிய தவமே தவத்துறும் பலனே

பலத்தினால் கிடைத்தஎன் பதியே
தண்ணிய மதியே மதிமுடி அரசே

தனித்தசிற் சபைநடத் தமுதே
புண்ணியம் அளித்தற் கிதுதகு தருணம்

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.

8
3830 மலப்பகை தவிர்க்கும் தனிப்பொது மருந்தே

மந்திர மேஒளிர் மணியே
நிலைப்பட எனைஅன் றாண்டருள் அளித்த

நேயனே தாயனை யவனே
பலப்படு பொன்னம் பலத்திலே நடஞ்செய்

பரமனே பரமசிற் சுகந்தான்
புலப்படத் தருதற் கிதுதகு தருணம்

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.

9
3831 களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த

கற்பகத் தீஞ்சுவைக் கனியே
வெளிப்புறத் தோங்கும் விளக்கமே அகத்தே

விளங்கும்ஓர் விளக்கமே எனக்கே
ஒளிப்பிலா தன்றே அளித்தசிற் பொதுவில்

ஒருவனே இனிப்பிரி வாற்றேன்
புளிப்பற இனித்தற் கிதுதகு தருணம்

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.

10

திருச்சிற்றம்பலம்

35. சிவயோக நிலை

நேரிசை வெண்பா

3832 மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே
பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய
நவநேய மாக்கும் நடராச னேயெஞ்
சிவனே கதவைத் திற.
1
3833 இந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே
நந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே
கோவே எனது குருவே எனையாண்ட
தேவே கதவைத் திற.
2
3834 சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க
நாகா திபர்சூழ் நடராசா - ஏகா
பவனே பரனே பராபரனே எங்கள்
சிவனே கதவைத் திற.
3
3835 அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி
மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந்
தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
சிவனே கதவைத் திற.
4
3836 வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற
ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத்
திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா
சிறப்பா கதவைத் திற.
5

3837
எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல்
நல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு
நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு
செல்வா கதவைத் திற.
6
3838 ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
தேவா கதவைத் திற.
7
3839 ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே
ஞான அமுதமது நானருந்த - ஞான
உருவே உணர்வே ஒளியே வெளியே
திருவே கதவைத் திற.
8
3840 திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே
வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது
வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில்
தேனே கதவைத் திற.
9
3841 சோதிமலை மேல்வீட்டில் தூய திருஅமுதம்
மேதினிமேல் நான்உண்ண வேண்டினேன் - ஓதரிய
ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான
தேகா கதவைத் திற.
10

திருச்சிற்றம்பலம்

36. பெற்ற பேற்றினை வியத்தல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3842 சீரிடம் பெறும்ஓர் திருச்சிற்றம் பலத்தே

திகழ்தனித் தந்தையே நின்பால்
சேரிடம் அறிந்தே சேர்ந்தனன்257 கருணை

செய்தருள் செய்திடத் தாழ்க்கில்
யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன்

யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
போரிட முடியா தினித்துய ரொடுநான்

பொறுக்கலேன் அருள்கஇப் போதே.

1
257. சேரிடம் அறிந்து சேர் - ஆத்திசூடி.
3843 போதுதான் விரைந்து போகின்ற தருள்நீ

புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ
யாதுதான் புரிவேன் யாரிடம் புகுவேன்

யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
தீதுதான் புரிந்தேன் எனினும்நீ அதனைத்

திருவுளத் தடைத்திடு வாயேல்
ஈதுதான் தந்தை மரபினுக் கழகோ

என்னுயிர்த் தந்தைநீ அலையோ.

2
3844 தந்தைநீ அலையோ தனயன்நான் அலனோ

தமியனேன் தளர்ந்துளங் கலங்கி
எந்தையே குருவே இறைவனே முறையோ

என்றுநின் றோலிடு கின்றேன்
சிந்தையே அறியார் போன்றிருந் தனையேல்

சிறியனேன் என்செய்கேன் ஐயோ
சந்தையே புகுந்த நாயினில் கடையேன்

தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரே.

3
3845 யாரினும் கடையேன் யாரினும் சிறியேன்

என்பிழை பொறுப்பவர் யாரே
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே

பாவியேன் பிழைபொறுத் திலையேல்
ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி

உடம்பைவைத் துலாவவும் படுமோ
சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம்

தெய்வத்துக் கடாதவன் என்றே.

4
3846 அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும்

அப்பநீ அடியனேன் தன்னை
விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன்

விடுதியோ விட்டிடு வாயேல்
உடாதவெற் றரைநேர்ந் துயங்குவேன் ஐயோ

உன்னருள் அடையநான் இங்கே
படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப்

பாடெலாம் நீஅறி யாயோ.

5
3847 அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே

அழைத்தனன் அப்பனே என்னை
எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய்

எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்

பெருந்திறல் சித்திகள் எல்லாம்
சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன்

சென்னிதொட் டுரைத்தனை களித்தே.

6
3848 களித்தென துடம்பில் புகுந்தனை எனது

கருத்திலே அமர்ந்தனை கனிந்தே
தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில்

சிறப்பினால் கலந்தனை உள்ளம்
தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும்

தடைபடாச் சித்திகள் எல்லாம்
அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை

அடியன்மேல் வைத்தவா றென்னே.

7
3849 என்நிகர் இல்லா இழிவினேன் தனைமேல்

ஏற்றினை யாவரும் வியப்பப்
பொன்இயல் வடிவும் புரைபடா உளமும்

பூரண ஞானமும் பொருளும்
உன்னிய எல்லாம் வல்லசித் தியும்பேர்

உவகையும் உதவினை எனக்கே
தன்னிகர் இல்லாத் தலைவனே நினது

தயவைஎன் என்றுசாற் றுவனே.

8
3850 சாற்றுவேன் எனது தந்தையே தாயே

சற்குரு நாதனே என்றே
போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும்

பூரணா எனஉல கெல்லாம்
தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த

தூயபேர் உதவிக்கு நான்என்
ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம்

அப்பநின் சுதந்தரம் அன்றோ.

9
3851 சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது

தூயநல் உடம்பினில் புகுந்தேம்
இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே

இன்புறக் கலந்தனம் அழியாப்
பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்

பரிசுபெற் றிடுகபொற் சபையும்
சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்

தெய்வமே வாழ்கநின் சீரே.

10

திருச்சிற்றம்பலம்

37. அழிவுறா அருள்வடிவப் பேறு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3852 சிவங்க னிந்தசிற் றம்பலத் தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே
நவங்க னிந்தமேல் நிலைநடு விளங்கிய நண்பனே அடியேன்றன்
தவங்க னிந்ததோர் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் புரிந்தாயே
பவங்க னிந்தஇவ் வடிவமே அழிவுறாப் பதிவடி வாமாறே.
1
3853 விளங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
களங்க மில்லதோர் உளநடு விளங்கிய கருத்தனே அடியேன்நான்
விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி வியந்தருள் புரிந்தாயே
உளங்கொள் இவ்வடி விம்மையே மந்திர ஒளிவடி வாமாறே.
2
3854 விஞ்சு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
எஞ்சல் அற்றமா மறைமுடி விளங்கிய என்னுயிர்த் துணையேநான்
அஞ்சல் இன்றியே செய்தவிண் ணப்பம்ஏற் றகங்களித் தளித்தாயே
துஞ்சும் இவ்வுடல் அழிவுறா தோங்குமெய்ச் சுகவடி வாமாறே.
3
3855 ஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே
தேங்கு லாவிய தெள்ளமு தேபெருஞ் செல்வமே சிவமேநின்
பாங்க னேன்மொழி விண்ணப்பம் திருச்செவி பதித்தருள் புரிந்தாயே
ஈங்கு வீழுடல் என்றும்வீ ழாதொளிர் இயல்வடி வாமாறே.
4
3856 இலங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் இடுகின்ற பெருவாழ்வே
துலங்கு பேரருட் சோதியே சோதியுள் துலங்கிய பொருளேஎன்
புலங்கொள் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தனைஇஞ்ஞான்றே
அலங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறா அருள்வடி வாமாறே.
5
3857 சிறந்த பேரொளித் திருச்சிற்றம் பலத்திலே திகழ்கின்ற பெருவாழ்வே
துறந்த பேருளத் தருட்பெருஞ் சோதியே சுகப்பெரு நிலையேநான்
மறந்தி டாதுசெய் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் புரிந்தாயே
பிறந்த இவ்வுடல் என்றும்இங் கழிவுறாப் பெருமைபெற் றிடுமாறே.
6
3858 வயங்கு கின்றசிற் றம்பலந் தன்னிலே வளர்கின்ற பெருவாழ்வே
மயங்கு றாதமெய் அறிவிலே விளங்கிய மாமணி விளக்கேஇங்
கியங்கு சிற்றடி யேன்மொழி விண்ணப்பம் ஏற்றருள் புரிந்தாயே
தயங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாத் தனிவடி வாமாறே.
7
3859 தீட்டு கின்றசிற் றம்பலந் தன்னிலே திகழ்கின்ற பெருவாழ்வே
காட்டு கின்றதோர் கதிர்நடு விளங்கிய கடவுளே அடியேன்நான்
நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி நிறைத்தருள் புரிந்தாயே
பூட்டும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.
8
3860 தடையி லாதசிற் றம்பலந் தன்னிலே தழைக்கின்ற பெருவாழ்வே
கடையி லாப்பெருங் கதிர்நடு விளங்கும்ஓர் கடவுளே அடியேன்நான்
இடைவு றாதுசெய் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தாயே
புடையின் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.
9
3861 கையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே
மெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான்
ஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே
செய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே.
10

திருச்சிற்றம்பலம்

38. பேரருள் வாய்மையை வியத்தல்

கட்டளைக் கலித்துறை

3862 நன்றே தருந்திரு நாடகம் நாடொறும் ஞானமணி
மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார்கழலோய்
இன்றே அருட்பெருஞ் சோதிதந் தாண்டருள் எய்துகணம்
ஒன்றே எனினும் பொறேன்அருள் ஆணை உரைத்தனனே.
1
3863 தற்சோதி என்னுயிர்ச் சத்திய சோதி தனித்தலைமைச்
சிற்சோதி மன்றொளிர் தீபக சோதிஎன் சித்தத்துள்ளே
நற்சோதி ஞானநல் நாடக சோதி நலம்புரிந்த
பொற்சோதி ஆனந்த பூரண சோதிஎம் புண்ணியனே.
2
3864 திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும்
கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த
உரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற
வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.
3
3865 மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை
தனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம்
எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா
இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே.
4
3866 வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச்
சேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம்
போதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும்
சாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே.
5
3867 செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே
இத்தா ரணியில் அருட்பெருஞ் சோதி எனக்களித்தாய்
எத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள்நின்னை
வைத்தாய் மணிமன்ற வாணநின் பேரருள் வாய்மையென்னே.
6
3868 ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட
வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ
ஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே
ஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே.
7
3869 என்னேஎன் மீதெம் பெருமான் கருணை இருந்தவண்ணம்
தன்னேர் இலாத அருட்பெருஞ் சோதியைத் தந்துலகுக்
கன்னே எனவிளை யாடுக என்றழி யாதசெழும்
பொன்னேர் வடிவும் அளித்தென் உயிரில் புணர்ந்தனனே.
8
3870 அச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான்
எச்சோ தனையும் இயற்றாதென் னுட்கலந் தின்னருளாம்
மெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக் கேற்றி விரைந்துடம்பை
இச்சோதி ஆக்கிஅழியா நலந்தந்த விச்சையையே.
9
3871 வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்
வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்
வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு
வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே.
10

திருச்சிற்றம்பலம்




திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி
பாடல்கள் (3872 - 4614)


திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி பாடல்கள் (3872 - 4614)

    உள்ளுறை
    39 பொதுநடம் புரிகின்ற பொருள் 20 3872 - 3891
    40. ஆனந்தானுபவம் 12 3892 - 3903
    41. பரசிவ நிலை 10 3904 - 3913
    42. பேரானந்தப் பெருநிலை 10 3914 - 3923
    43. திருவடி நிலை 10 3924 - 3933
    44. காட்சிக் களிப்பு 10 3934 - 3943
    45. கண்கொளாக் காட்சி 10 3944 - 3953
    46. இறை திருக்காட்சி 30 3954 - 3983
    47. உளம் புகுந்த திறம் வியத்தல் 10 3984 - 3993
    48. வரம்பில் வியப்பு 10 3994 - 4003
    49. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல் 10 4004 - 4013
    50. ஆண்டருளிய அருமையை வியத்தல் 10 4014 - 4023
    51. இறைவனை ஏத்தும் இன்பம் 10 4024 - 4033
    52. பாமாலை ஏற்றல் 12 4034 - 4045
    53. உத்தர ஞான சிதம்பரமாலை 11 4046 - 4056
    54. செய்பணி வினவல் 10 4057 - 4068
    55. ஆன்ம தரிசனம் 10 4069 - 4078
    56. சுத்த சன்மார்க்க வேண்டுகோள் 11 4079 - 4089
    57. அருள் விளக்க மாலை 100 4090 - 4189
    58. நற்றாய் கூறல் 104190 - 4199
    59. பாங்கி தலைவி பெற்றி கூறல் 10 4200 - 4209
    60. தலைவி வருந்தல் 24 4210 - 4233
    61. ஞான சிதம்பர வெண்பா 9 4234 - 4242
    62. சிவபதி விளக்கம் 104243 - 4252
    63. ஞானோபதேசம் 104253 - 4262
    64. ஆரமுதப்பேறு 134263 - 4275
    65. உபதேச வினா 114276 - 4286<
    66. நெஞ்சொடு நேர்தல் 104287 - 4296
    67. அஞ்சாதே நெஞ்சே 234297 - 4319
    68. ஆடிய பாதம் 174320 - 4336
    69. அபயம் அபயம் 164337 - 4352
    70. அம்பலவாணர் வருகை 1054353 - 4457
    71. அம்பலவாணர் ஆடவருகை124458 - 4469
    72. அம்பலவாணர் அனையவருகை 124470 - 4481
    73. வருவார் அழைத்துவாடி 54482 - 4486
    74. என்ன புண்ணியம் செய்தேனோ 94487 - 4495
    75. இவர்க்கும் எனக்கும் 54496 - 4500
    76. இது நல்ல தருணம் 64501 - 4506
    77. ஆனந்தப் பரிவு 114507 - 4517
    78. ஞான மருந்து 344518 - 4551
    79. சிவசிவ ஜோதி 334552 - 4584
    80. ஜோதியுள் ஜோதி 304585 - 4614
அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு
    1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
    2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
    3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
    4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
    5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை
திருச்சிற்றம்பலம்

ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி

39. பொதுநடம் புரிகின்ற பொருள்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3872 அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்

அளித்தெனை வளர்த்திட அருளாம்
தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த

தெய்வமே சத்தியச் சிவமே
இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல்

ஏற்றிய இன்பமே எல்லாப்
பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே

பொதுநடம் புரிகின்ற பொருளே.

1
3873 சித்தெலாம் வல்ல சித்தனே ஞான

சிதம்பர ஜோதியே சிறியேன்
கத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த

கடவுளே கருணையங் கடலே
சத்தெலாம் ஒன்றே சத்தியம் எனஎன்

தனக்கறி வித்ததோர் தயையே
புத்தெலாம் நீக்கிப் பொருளெலாம் காட்டும்

பொதுநடம் புரிகின்ற பொருளே.

2
3874 கலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக்

கற்பங்கள் கணக்கில கடப்ப
நிலைகளோர் அனந்தம் நேடியுங் காணா

நித்திய நிற்குண(258) நிறைவே
அலைகளற் றுயிருக் கமுதளித் தருளும்

அருட்பெருங் கடல்எனும் அரசே
புலைகள வகற்றி எனக்குளே நிறைந்து

பொதுநடம் புரிகின்ற பொருளே.

3
(258). நிர்க்குண - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா., ச. மு. க.
3875 தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே

சத்திய சாத்தியக் கனலே
ஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே

உலகெலாந் தழைக்கமெய் உளத்தே
நண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே

நல்கிய ஞானபோ னகமே
புண்ணிய நிதியே கண்ணிய நிலையே

பொதுநடம் புரிகின்ற பொருளே.

4
3876 அற்புத நிறைவே சற்புதர்259 அறிவில்

அறிவென அறிகின்ற அறிவே
சொற்புனை மாயைக் கற்பனை கடந்த

துரியநல் நிலத்திலே துலங்கும்
சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச்

செல்வமே சித்தெலாம் புரியும்
பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே

பொதுநடம் புரிகின்ற பொருளே.

5
(259). சற்புதர் - நல்லறிவுடையவர்.
3877 தத்துவ பதியே தத்துவம் கடந்த

தனித்ததோர் சத்திய பதியே
சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்

தமக்குளே சார்ந்தநற் சார்பே
பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்

பெறல்அரி தாகிய(260) பேறே
புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து

பொதுநடம் புரிகின்ற பொருளே.

6
(260). பெரிதரிதாகிய - பொ. சு. பதிப்பு.
3878 மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த

விளைவெலாம் காட்டிமெய் வேத
நூல்வழி காட்டி என்னுளே விளங்கும்

நோக்கமே ஆக்கமும் திறலும்
நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்

நாயகக் கருணைநற் றாயே
போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே

பொதுநடம் புரிகின்ற பொருளே.

7
3879 அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே

அரும்பெருஞ் சோதியே சுடரே
மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே

மருந்தெலாம் பொருந்திய மணியே
உலப்பறு கருணைச் செல்வமே எல்லா

உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே
புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே

பொதுநடம் புரிகின்ற பொருளே.

8
3880 பரம்பர நிறைவே பராபர வெளியே

பரமசிற் சுகந்தரும் பதியே
வரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில்

வயங்கிய பெருஞ்சுடர் மணியே
கரம்பெறு கனியே கனிவுறு சுவையே

கருதிய கருத்துறு களிப்பே
புரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே

பொதுநடம் புரிகின்ற பொருளே.

9
3881 வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி

மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே

கருணைவான் அமுதத்தெண் கடலே(261)
அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி

ஆனந்த மாம்அனு பவமே
பொற்புறு பதியே அற்புத நிதியே

பொதுநடம் புரிகின்ற பொருளே.

10
(261). தண்கடலே - படிவேறுபாடு. ஆ. பா.
3882 தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம்

தரவல்ல சம்புவே சமயப்
புன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த

புண்ணியர் நண்ணிய புகலே
வன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா

வயங்குவித் தமர்ந்தமெய் வாழ்வே
பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப்

பொதுநடம் புரிகின்ற பொருளே.

11
3883 மூவிரு முடிபின் முடிந்ததோர்(262) முடிபே

முடிபெலாம் கடந்ததோர் முதலே
தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச்

சத்தியத் தனிநடு நிலையே
மேவிய நடுவில் விளங்கிய விளைவே

விளைவெலாம் தருகின்ற வெளியே
பூவியல் அளித்த புனிதசற் குருவே

பொதுநடம் புரிகின்ற பொருளே

12
(262). முடிந்தவோர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க., ஆ. பா.
3884 வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும்

விளம்பிய அனுபவ விளைவும்
போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள்

போனது மாய்ஒளிர் புலமே
ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ்

விருநிலத் தியல்அருள் ஒளியால்
பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே

பொதுநடம் புரிகின்ற பொருளே.

13
3885 அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை

அருள்வடி வெடுத்தெழுந் தருளி
நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி

நிலைஎலாம் அளித்தமா நிதியே
மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்

வயங்கநல் வரந்தந்த வாழ்வே
பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே

பொதுநடம் புரிகின்ற பொருளே.

14
3886 என்பிழை அனைத்தும் பொறுத்தருள் புரிந்தென்

இதயத்தில் இருக்கின்ற குருவே
அன்புடை அரசே அப்பனே என்றன்

அம்மையே அருட்பெருஞ் சோதி
இன்புறு நிலையில் ஏற்றிய துணையே

என்னுயிர் நாதனே என்னைப்
பொன்புனை மாலை புனைந்தஓர் பதியே

பொதுநடம் புரிகின்ற பொருளே.

15
3887 சத்திய பதியே சத்திய நிதியே

சத்திய ஞானமே வேத
நித்திய நிலையே நித்திய நிறைவே

நித்திய வாழ்வருள் நெறியே
சித்திஇன் புருவே சித்தியின் கருவே

சித்தியிற் சித்தியே எனது
புத்தியின் தெளிவே புத்தமு தளித்துப்

பொதுநடம் புரிகின்ற பொருளே.

16
3888 சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே

சிவபத அனுபவச் சிவமே
மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே

மதிநிறை அமுதநல் வாய்ப்பே
சதத்திரு நெறியே தனிநெறித் துணையே

சாமியே தந்தையே தாயே
புதப்பெரு வரமே புகற்கருந் தரமே

பொதுநடம் புரிகின்ற பொருளே.

17
3889 கலைவளர் கலையே கலையினுட் கலையே

கலைஎலாம் தரும்ஒரு கருவே
நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும்

நித்திய வானமே ஞான
மலைவளர் மருந்தே மருந்துறு பலனே

மாபலம் தருகின்ற வாழ்வே
புலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு

பொதுநடம் புரிகின்ற பொருளே.

18
3890 மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான

விளக்கமே விளக்கத்தின் வியப்பே
கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த

கருணையே கரிசிலாக் களிப்பே
ஐம்மையே அதற்குள் அதுஅது ஆகும்

அற்புதக் காட்சியே எனது
பொய்ம்மையே பொருத்துப் புகலளித் தருளிப்

பொதுநடம் புரிகின்ற பொருளே.

19
3891 காரண அருவே காரிய உருவே

காரண காரியம் காட்டி
ஆரண முடியும் ஆகம முடியும்

அமர்ந்தொளிர் அற்புதச் சுடரே
நாரண தலமே(263) நாரண வலமே

நாரணா காரத்தின் ஞாங்கர்ப்
பூரண ஒளிசெய் பூரண சிவமே

பொதுநடம் புரிகின்ற பொருளே.

20
(263). தரமே - முதற்பதிப்பு. பொ. சு., ஆ. பா.

40. ஆனந்தானுபவம்

நேரிசை வெண்பா

3892 கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம்
வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே
காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற(264)
வாணா நினக்கடிமை வாய்த்து.
1
(264). ஓங்குமறை - படிவேறுபாடு. ஆ. பா.
3893 காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்
சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்
ஏகா நினக்கடிமை ஏற்று.
2
3894 மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம்
யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை
நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந்
தாய்க்குத் தனிஇயற்கை தான்.
3
3895 கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்
தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
எந்தாய் கருணை இது.
4
3896 கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன்
அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும்
அழியாச்சிற் றம்பலத்தே யான்.
5
3897 பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம்
போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின்
றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை
நாடுகின்றேன் சிற்சபையை நான்.
6
3898 எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் - நண்ணுதிருச்
சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என்
குற்றம் பலபொறுத்துக் கொண்டு.
7
3899 கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும்
கண்டான்(265) களித்தான் கலந்திருந்தான் - பண்டாய
நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில்
வான்மயத்தான் என்னை மகிழ்ந்து.
8
(265). கண்டே - முதற்பதிப்பு. பி. இரா.
3900 கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
உண்டேன் அழியா உரம்(266) பெற்றேன் - பண்டே
எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம்
தனைஉவந்து கொண்டான் தனை.
9
(266). வரம் - படிவேறுபாடு. ஆ. பா.
3901 தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
மணவாளன் பாத மலர்.
10
3902 திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக்
குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின்
தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ்
மாப்பிள்ளை பாத மலர்.
11
3903 என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின்
தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச்
சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை
மாலைஇட்டான் பாதமலர்.
12

41. பரசிவ நிலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3904. அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம்

எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

1
3905 எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்

என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்

நற்சபையில் ஆடுகின்ற நடராசத் தெய்வம்
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்

காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

2
3906 தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்

கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.

3
3907 என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்

என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்

பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம்
அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்

அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம்
சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

4
3908 எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்

எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்

நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்

பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

5
3909 இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்

இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்

எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்

பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

6
267. செச்சைமலர் - வெட்சிமலர். முதற்பதிப்பு.
3910 சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்

சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்

மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்

எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

7
3911 தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்

துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்

மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்

ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

8
3912 எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்

எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்
அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்

அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்
ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்

ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்
செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

9
3913 சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்

சத்திகள்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்
நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா

நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்

பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்
சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

10

42. பேரானந்தப் பெருநிலை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3914. அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்

ஆனந்த போகமே அமுதே
மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே

மன்னும்என் ஆருயிர்த் துணையே
துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே

தூயவே தாந்தத்தின் பயனே
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே

பழுத்தபே ரானந்தப் பழமே.

1
3915 திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும்

தெய்வமே மெய்ப்பொருட் சிவமே
உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே

ஓங்கும்என் உயிர்ப்பெருந் துணையே
ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே

உவந்தர சளிக்கின்ற அரசே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே

பழுத்தபே ரானந்தப் பழமே.

2
3916 துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்

சோதியுட் சோதியே எனது
மதிவளர் மருந்தே மந்திர மணியே

மன்னிய பெருங்குண மலையே
கதிதரு துரியத் தனிவெளி நடுவே

கலந்தர சாள்கின்ற களிப்பே
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே

பழுத்தபே ரானந்தப் பழமே.

3
3917 சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ்

செல்வமே என்பெருஞ் சிறப்பே
நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே

நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே
ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத்

திருந்தர சளிக்கின்ற பதியே
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே

பழுத்தபே ரானந்தப் பழமே.

4
3918 உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்

ஒள்ளிய தெள்ளிய ஒளியே
வரைவளர் மருந்தே மவுனமந் திரமே

மந்திரத் தாற்பெற்ற மணியே
நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்

நிறைந்தர சாள்கின்ற நிதியே
பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே

பழுத்தபே ரானந்தப் பழமே.

5
3919 மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்

மெய்யறி வானந்த விளக்கே
கால்வளர் கனலே கனல்வளர் கதிரே

கதிர்நடு வளர்கின்ற கலையே
ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப்

பால்அர சாள்கின்ற அரசே
பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே

பழுத்தபே ரானந்தப் பழமே.

6 <
3920 இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்

இன்பமே என்னுடை அன்பே
திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும்

திகழுறத் திகழ்கின்ற சிவமே
மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல்

வெளிஅர சாள்கின்ற பதியே
பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே

பழுத்தபே ரானந்தப் பழமே.

7
3921 அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்

அரும்பெருஞ் சோதியே எனது
பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப்

புறம்விடா தாண்டமெய்ப் பொருளே
மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில்

மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே

பழுத்தபே ரானந்தப் பழமே.

8
3922 வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்

மாபெருங் கருணைஎம் பதியே
ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா

உலகமும் நிறைந்தபே ரொளியே
மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்

வயங்கும்ஓர் வெளிநடு மணியே
பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே

பழுத்தபே ரானந்தப் பழமே.

9
3923 தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்

தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே
நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே

நண்புகொண் டருளிய நண்பே
வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து

வயங்கிய தனிநிலை வாழ்வே
பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே

பழுத்தபே ரானந்தப் பழமே.

10

43. திருவடி நிலை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3924. உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள்

உவப்பிலா அண்டத்தின் பகுதி
அலகுகாண் பரிய பெரியகூட் டத்த

அவைஎலாம் புறத்திறைச் சார்பில்
விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற்

றிருந்தென விருந்தன மிடைந்தே
இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத்

தென்பர்வான் திருவடி நிலையே.

1
3925 தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா

யேச்சுரன் சதாசிவன் விந்து
நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி

நவில்பர சிவம்எனும் இவர்கள்
இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்

இடதுகாற் கடைவிரல் நகத்தின்
கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்

கண்டனன் திருவடி நிலையே.

2
3926 அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்

அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
படர்தரு விந்து பிரணவப் பிரமம்

பரைபரம் பரன்எனும் இவர்கள்
சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்

துணையடிப் பாதுகைப் புறத்தே
இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே

ஏத்துவன் திருவடி நிலையே.

3
3927 இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்

பிரமன்ஈ சானனே முதலாம்
மகத்துழல் சமய வானவர் மன்றின்

மலரடிப் பாதுகைப் புறத்தும்
புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய

புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்

தெரிந்தனன் திருவடி நிலையே.

4
3928 பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம்

போந்தவான் முடியதாங் கதன்மேல்
மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா

வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல்
என்வணச் சோதிக் கொடிபர நாதாந்

தத்திலே இலங்கிய ததன்மேல்
தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத்

தழுவினன் திருவடி நிலையே.

5
3929 மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான்

மற்றவற் றுட்புறங் கீழ்மேல்
அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின்

அமைந்தன சத்திகள் அவற்றின்
கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும்

கருதுரு முதலிய விளங்க
நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று

நவின்றனர் திருவடி நிலையே.

6
3930 தொகையள விவைஎன் றறிவரும் பகுதித்

தொல்லையின் எல்லையும் அவற்றின்
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே

மன்னிஎங் கணும்இரு பாற்குத்
தகையுறு முதலா வணங்கடை யாகத்

தயங்கமற் றதுவது கருவிச்
சிகையுற உபயம் எனமன்றில் ஆடும்

என்பரால் திருவடி நிலையே.

7
3931 மன்றஓங் கியமா மாயையின் பேத

வகைதொகை விரிஎன மலிந்த
ஒன்றின்ஒன் றனந்த கோடிகோ டிகளா

உற்றன மற்றவை எல்லாம்
நின்றஅந் நிலையின் உருச்சுவை விளங்க

நின்றசத் திகளொடு சத்தர்
சென்றதி கரிப்ப நடித்திடும் பொதுவில்

என்பரால் திருவடி நிலையே.

8
3932 பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்

பெரியஓங் காரமே முதலா
ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்

என்றவற் றவண்அவண் இசைந்த
மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து

மன்அதி காரம்ஐந் தியற்றத்
தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும்

என்பரால் திருவடி நிலையே.

9
3933 பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்

பதிவரை நிறுவிஆங் கதன்மேல்
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட

வெறுவெளி எனஉல குணர்ந்த
புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர்

திருவுருக் கொண்டுபொற் பொதுவில்
திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற

என்பரால் திருவடி நிலையே.

10

44. காட்சிக் களிப்பு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3934. அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை

அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்

சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட

பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

1
3935 பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்

பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்
காலானைக் கலைசாகாத் தலையி னானைக்

கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா
மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை

மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி
ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

2
3936 உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண

உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்

கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்
தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்

தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி
எள்ளானை இடர்தவிர்த்திங் கென்னை ஆண்ட

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

3
3937 உறவானை என்னுயிர்க்குள் உயிரா னானை

உறுபிழைகள் செயினும்அவை உன்னி என்னை
மறவானை அறவாழி வழங்கி னானை

வஞ்சகர்க்குத் திருக்கோயில் வழிக்க பாடந்
திறவானை என்னளவில் திறந்து காட்டிச்

சிற்சபையும் பொற்சபையும் சேர்வித் தானை
இறவானைப் பிறவானை இயற்கை யானை

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

4
3938 அகத்தானைப் புறத்தானை அணுவா னானை

அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை
மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை

மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
சகத்தானை அண்டமெலாம் தானா னானைத்

தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை
இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும்

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

5
3939 செய்யானைக் கரியானைப் பசுமை யானைத்

திகழ்ந்திடுபொன் மையினானை வெண்மை யானை
மெய்யானைப் பொய்யானை மெய்பொய் இல்லா

வெளியானை ஒளியானை விளம்பு வார்க்குக்
கையானை என்னையெடுத் தணைத்துக் கொண்ட

கையானை என்னைஎன்றும் கையா தானை
எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை

ஈன்றானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

6
3940 மருந்தானை மணியானை வழுத்தா நின்ற

மந்திரங்க ளானானை வான நாட்டு
விருந்தானை உறவானை நண்பி னானை

மேலானைக் கீழானை மேல்கீழ் என்னப்
பொருந்தானை என்னுயிரில் பொருந்தி னானைப்

பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும்
இருந்தானை இருப்பானை இருக்கின் றானை

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

7
3941 ஆன்றானை அறிவானை அழிவி லானை

அருட்பெருஞ்ஜோ தியினானை அலர்ந்த ஜோதி
மூன்றானை இரண்டானை ஒன்றானானை

முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில்
தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச்

சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை
ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

8
3942 தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால்

சூழ்ந்தானை யான்தொடுத்த சொற்பூ மாலை
வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை

வேதாந்த முடிமுடிமேல் விளங்கி னானை
வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை

மணிமன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம்
ஈய்ந்தானை(268) ஆய்ந்தவர்தம் இதயத் தானை

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

9
(268). ஈந்தானை - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.
3943 நன்றானை மன்றகத்தே நடிக்கின் றானை

நாடாமை நாடலிவை நடுவே ஓங்கி
நின்றானைப் பொன்றாத நிலையி னானை

நிலைஅறிந்து நில்லாதார் நெஞ்சி லேசம்
ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றா னானை

ஒருசிறியேன் தனைநோக்கி உளம்நீ அஞ்சேல்
என்றானை என்றும்உள இயற்கை யானை

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

10

45. கண்கொளாக் காட்சி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3944. அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்

காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்

தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்

குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே

ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

1
3945 விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்

விதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்(269)
தெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச்

சிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம்
தரித்தானைத் தானேநா னாகி என்றும்

தழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம்
எரித்தானை என்உயிருக் கின்பா னானை

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

2
(269). விரைத்தானை மெய்யே என்னை - பி. இரா.பதிப்பு.
3946 நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே

நம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி
தொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத்

துன்பமெலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க
ஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள்

உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள
எட்டானை என்னளவில் எட்டி னானை

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

3
3947 சோற்றானைச்270 சோற்றில்உறும் சுகத்தி னானைத்

துளக்கம்இலாப் பாரானை நீரா னானைக்
காற்றானை வெளியானைக் கனலா னானைக்

கருணைநெடுங் கடலானைக் களங்கர் காணத்
தோற்றானை நான்காணத் தோற்றி னானைச்

சொல்லறியேன் சொல்லியபுன் சொல்லை யெல்லாம்
ஏற்றானை என்னுளத்தில் எய்தி னானை

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

4
(270). சோறு - முத்தி. முதற்பதிப்பு. ஈண்டு சோறு என்பது உண்ணும் சோறே.
3948 சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு

செறியாத மனஞ்செறியச் செம்பொற் றாளில்
ஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற

ஆனந்த நடத்தானை அருட்கண் நோக்கம்
பார்த்தானைப் பாராரைப் பாரா தானைப்

பார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை
ஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

5
3949 முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே

முளைத்தானை மூவாத முதலா னானைக்
களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்

காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்
விளையானைச் சிவபோகம் விளைவித் தானை

வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்
இளையானை மூத்தானை மூப்பி லானை

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

6
3950 புயலானை மழையானை அதிர்ப்பி னானைப்

போற்றியமின் ஒளியானைப் புனித ஞானச்
செயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத்

திருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே
அயலானை உறவானை அன்பு ளானை

அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி
இயலானை எழிலானைப் பொழிலா னானை

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

7
3951 தாயானைத் தந்தைஎனக் காயி னானைச்

சற்குருவு மானானைத் தமியேன் உள்ளே
மேயானைக் கண்காண விளங்கி னானை

மெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன
வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை

வரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி
ஏயானைத் துரியநடு விருக்கின் றானை

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

8
3952 தழைத்தானைத் தன்னைஒப்பார் இல்லா தானைத்

தானேதா னானானைத் தமிய னேனைக்
குழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக்

குறைகொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி
அழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை

அச்சமெலாம் தவிர்த்தானை அன்பே என்பால்
இழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

9
3953 உடையானை அருட்சோதி உருவி னானை

ஓவானை மூவானை உலவா இன்பக்
கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு

கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை
அடையானைத் திருசிற்றம் பலத்தி னானை

அடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின்
இடையானை என்னாசை எல்லாந் தந்த

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

10

46. இறை திருக்காட்சி

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3954. அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை

அருட்பெருஞ் ஜோதியை அரசை
மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை

வள்ளலை மாணிக்க மணியைப்
பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த

புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத்
தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான

தீபத்தைக் கண்டுகொண் டேனே.

1
3955 துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத்

துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை
என்பொலா மணியை என்சிகா மணியை

என்னிரு கண்ணுள்மா மணியை
அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை

அருட்பெருஞ் ஜோதியை அடியேன்
என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த

எந்தையைக் கண்டுகொண் டேனே.

2
3956 சிதத்திலே(271) ஊறித் தெளிந்ததெள் ளமுதைச்

சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப்
பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப்

பரம்பர வாழ்வைஎம் பதியை
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த

மருந்தைமா மந்திரந் தன்னை
இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட

இறைவனைக் கண்டுகொண் டேனே.

4
(271). 271. சிதம் - ஞானம்
3957 உணர்ந்தவர் உளம்போன் றென்னுளத் தமர்ந்த

ஒருபெரும் பதியைஎன் உவப்பைப்
புணர்ந்தெனைக் கலந்த போகத்தை எனது

பொருளைஎன் புண்ணியப் பயனைக்
கொணர்ந்தொரு பொருள்என் கரத்திலே கொடுத்த

குருவைஎண் குணப்பெருங் குன்றை
மணந்தசெங் குவளை மலர்எனக் களித்த

வள்ளலைக் கண்டுகொண் டேனே.

4
3958 புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட

பொற்சபை அப்பனை வேதம்
சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட

ஜோதியைச் சோதியா தென்னை
மல்லிகை மாலை அணிந்துளே கலந்து

மன்னிய பதியைஎன் வாழ்வை
எல்லியும் இரவும் என்னைவிட் டகலா

இறைவனைக் கண்டுகொண் டேனே.

5
3959 பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய்

பதியுமாம் ஒருபசு பதியை
நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி

நல்கிய கருணைநா யகனை
எண்ணிய படியே எனக்கருள் புரிந்த

இறைவனை மறைமுடி இலங்கும்
தண்ணிய விளக்கைத் தன்னிக ரில்லாத்

தந்தையைக் கண்டுகொண் டேனே.

6
3960 பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும்

பிறங்கிய பொதுமையைப் பெரிய
தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த

சாமியைத் தயாநிதி தன்னை
வண்மையை அழியா வரத்தினை ஞான

வாழ்வைஎன் மதியிலே விளங்கும்
உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள்

ஒருவனைக் கண்டுகொண் டேனே.

7
3961 ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்

அறிவித்த அறிவைஎன் அன்பைச்
சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்

சுத்தசன் மார்க்கத்தின் துணிபை
நீதியை எல்லா நிலைகளும் கடந்த

நிலையிலே நிறைந்தமா நிதியை
ஓதியை ஓதா துணர்த்திய வெளியை

ஒளிதனைக் கண்டுகொண் டேனே.

8
3962 என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி

என்னைவாழ் விக்கின்ற பதியைப்
பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே

பொருந்திய மருந்தையென் பொருளை
வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க

வைத்தசன் மார்க்கசற் குருவைக்
கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்

கோயிலில் கண்டுகொண் டேனே.

9
3963 புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில்

போந்தருள் அளித்தசற் குருவைக்
கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த

கருணையங் கடவுளைத் தனது
சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே

தோளுறப் புனைந்தமெய்த் துணையைத்
தன்னிக ரில்லாத் தலைவனை எனது

தந்தையைக் கண்டுகொண் டேனே.

10
3964 ஏங்கலை மகனே தூங்கலை எனவந்

தெடுத்தெனை அணைத்தஎன் தாயை
ஓங்கிய எனது தந்தையை எல்லாம்

உடையஎன் ஒருபெரும் பதியைப்
பாங்கனில் என்னைப் பரிந்துகொண் டெல்லாப்

பரிசும்இங் களித்ததற் பரத்தைத்
தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத்

தலைவனைக் கண்டுகொண் டேனே.

11
3965 துன்புறேல் மகனே தூங்கலை எனஎன்

சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை
அன்புளே கலந்த தந்தையை என்றன்

ஆவியைப் பாவியேன் உளத்தை
இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி

இனிதமர்ந் தருளிய இறையை
வன்பிலாக் கருணை மாநிதி எனும்என்

வள்ளலைக் கண்டுகொண் டேனே.

12
3966 நனவினும் எனது கனவினும் எனக்கே

நண்ணிய தண்ணிய அமுதை
மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி

வழங்கிய பெருந்தயா நிதியைச்
சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த

சிவகுரு பதியைஎன் சிறப்பை
உனலரும் பெரிய துரியமேல் வெளியில்

ஒளிதனைக் கண்டுகொண் டேனே.

13
3967 கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக்

கருதுகோற் றேன்நறுஞ் சுவையை
அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை

ஆவியை ஆவியுட் கலந்த
பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப்

பேசுதற் கரும்பெரும் பேற்றை
விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும்

விளக்கினைக் கண்டுகொண் டேனே.

14
3968 களங்கொளுங் கடையேன் களங்கெலாந் தவிர்த்துக்

களிப்பெலாம் அளித்தசர்க் கரையை
உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா

துள்ளகத் தூறும்இன் அமுதை
வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்

மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக்
குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்

குருவையான் கண்டுகொண் டேனே.

15
3969 சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்

சிதம்பர நடம்புரி சிவத்தைப்
பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்

பதிசிவ பதத்தைத்தற் பதத்தை
இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை

யாவுமாய் அல்லவாம் பொருளைச்
சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச்

சாமியைக் கண்டுகொண் டேனே.

16
3970 ஆரண முடிமேல் அமர்பிர மத்தை

ஆகம முடிஅமர் பரத்தைக்
காரண வரத்தைக் காரிய தரத்தைக்

காரிய காரணக் கருவைத்
தாரண நிலையைத் தத்துவ பதியைச்

சத்திய நித்திய தலத்தைப்
பூரண சுகத்தைப் பூரண சிவமாம்

பொருளினைக் கண்டுகொண் டேனே.

17
3971 சுத்தவே தாந்த பிரமரா சியத்தைச்

சுத்தசித் தாந்தரா சியத்தைத்
தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச்

சமரச சத்தியப் பொருளைச்
சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில்

தெளிந்தபே ரானந்தத் தெளிவை
வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின்

மெய்மையைக் கண்டுகொண் டேனே.

18
3972 சமயமும் மதமும் கடந்ததோர் ஞான

சபைநடம் புரிகின்ற தனியைத்
தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச்

சத்துவ நித்தசற் குருவை
அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா

ரமுதளித் தமர்ந்தஅற் புதத்தை
நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார

நீதியைக் கண்டுகொண் டேனே.

19
3973 அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும்

அருட்பெருஞ் சோதியை உலகக்
களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும்

காட்சியைக் கருணையங் கடலை
உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல

ஒளியையும் உதவிய ஒளியைக்
குளவயின் நிறைந்த குருசிவ பதியைக்

கோயிலில் கண்டுகொண் டேனே.

20
3974 சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த

சமரச சத்திய வெளியைச்
சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்

துலங்கிய ஜோதியைச் சோதிப்
பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த

பரமசன் மார்க்கமெய்ப் பதியைச்
சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்

தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.

21
3975 அடிநடு முடியோர் அணுத்துணை யேனும்

அறிந்திடப் படாதமெய் அறிவைப்
படிமுதல் அண்டப் பரப்பெலாங் கடந்த

பதியிலே விளங்குமெய்ப் பதியைக்
கடியஎன் மனனாங் கல்லையும் கனியிற்

கடைக்கணித் தருளிய கருணைக்
கொடிவளர் இடத்துப் பெருந்தயா நிதியைக்

கோயிலில் கண்டுகொண் டேனே.

22
3976 பயமும்வன் கவலை இடர்முதல் அனைத்தும்

பற்றறத் தவிர்த்தருட் பரிசும்
நயமும்நற் றிருவும் உருவும்ஈங் கெனக்கு

நல்கிய நண்பைநன் னாத
இயமுற வெனது குளநடு நடஞ்செய்

எந்தையை என்னுயிர்க் குயிரைப்
புயனடு விளங்கும் புண்ணிய ஒளியைப்

பொற்புறக் கண்டுகொண் டேனே.

23
3977 கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக்

ககனத்தைக் காற்றினை அமுதை
நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா

நின்மல நிற்குண நிறைவை
மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை

வரவுபோக் கற்றசின் மயத்தை
அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை

அன்பினிற் கண்டுகொண் டேனே.

24
3978 மும்மையை எல்லாம் உடையபே ரரசை

முழுதொருங் குணர்த்திய உணர்வை
வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம்

வியப்புற அளித்தமெய் விளைவைச்
செம்மையை எல்லாச் சித்தியும் என்பால்

சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை
அம்மையைக் கருணை அப்பனை என்பே

ரன்பனைக் கண்டுகொண் டேனே.

25
3979 கருத்தனை எனது கண்அனை யவனைக்

கருணையா ரமுதெனக் களித்த
ஒருத்தனை என்னை உடையநா யகனை

உண்மைவே தாகம முடியின்
அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற்

றம்பலத் தருள்நடம் புரியும்
நிருத்தனை எனது நேயனை ஞான

நிலையனைக் கண்டுகொண் டேனே.

26
3980 வித்தெலாம் அளித்த விமலனை எல்லா

விளைவையும் விளைக்கவல் லவனை
அத்தெலாங்(272) காட்டும் அரும்பெறல் மணியை

ஆனந்தக் கூத்தனை அரசைச்
சத்தெலாம் ஆன சயம்புவை ஞான

சபைத்தனித் தலைவனைத் தவனைச்
சித்தெலாம் வல்ல சித்தனை ஒன்றாந்

தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.

27
(272). அத்து - செந்நிறம். முதற்பதிப்பு.
3981 உத்தர ஞான சித்திமா புரத்தின்

ஓங்கிய ஒருபெரும் பதியை
உத்தர ஞான சிதம்பர ஒளியை

உண்மையை ஒருதனி உணர்வை
உத்தர ஞான நடம்புரி கின்ற

ஒருவனை உலகெலாம் வழுத்தும்
உத்தர ஞான சுத்தசன் மார்க்கம்

ஓதியைக் கண்டுகொண் டேனே.

28
3982 புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப்

புணர்த்திய புனிதனை எல்லா
நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில்

நிறுத்திய நிமலனை எனக்கு
மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா

வாழ்க்கையில் வாழவைத் தவனைத்
தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத்

தந்தையைக் கண்டுகொண் டேனே.

29
3983 பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த

பரமனை என்னுளே பழுத்த
கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக்

கடவுளைக் கண்ணினுள் மணியைப்
புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப்

பொருள்எனக் களித்தமெய்ப் பொருளைத்
தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத்

தந்தையைக் கண்டுகொண் டேனே.

30

47. உளம் புகுந்த திறம் வியத்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3984. வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்

மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே

திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்
நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே

நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்

உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.

1
3985 படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப்

பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே
அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும்

அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த
வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும்

மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக்
குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர்

கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே.

2
3986 உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்

ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய்
வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்

வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்

வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபேர் இன்பம்
கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே

கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

3
3987 தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்

தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே

விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த
நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது

நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய்
கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்

குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.

4
3988 இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்

இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய்
மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய்

மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த
நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன்

நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே
குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே

கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

5
3989 உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்

உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்
மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த

வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே
திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே

சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய்
குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்

குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.

6
3990 மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்

வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஒரு வெளியில்

மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்

இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே

கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

7
3991 சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்

செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்

பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது

சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ

கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

8
3992 பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்

பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
உற்றறிதற்(273) கரியஒரு பெருவெளிமேல் வெளியில்

ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே

பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்(274) அரசே
கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்

குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.

9
(273). உற்றிடுதற் - படிவேறுபாடு. ஆ. பா.
(274). பிறங்கவைத்த - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க.
3993 கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல்

காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து
ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த

உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில்
மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள்

மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே
குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ

கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

10

48. வரம்பில் வியப்பு

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3994. பொன்புனை புயனும் அயனும்மற் றவரும்

புகலரும் பெரியஓர் நிலையில்
இன்புரு வாகி அருளொடும் விளங்கி

இயற்றலே ஆதிஐந் தொழிலும்
தன்பொதுச் சமுகத் தைவர்கள் இயற்றத்

தனிஅர சியற்றும்ஓர் தலைவன்
அன்பெனும் குடிசை நுழைந்தன னானால்

அவன்தனை மறுப்பவர் யாரே.

1
3995 மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள்

மன்னுருத் திரர்களே முதலா
ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்

குறுபெருந் தொழில்பல இயற்றி
இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி

இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன்
அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ

அவன்தனை மறுப்பவர் யாரே.

2
3996 தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித்

தனித்தனி மறைகள்ஆ கமங்கள்
உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா

ஒருதனிப் பெரும்பதி உவந்தே
புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள்

பொறுத்தருட் பூரண வடிவாய்
என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ

எந்தையைத் தடுப்பவர் யாரே.

3
3997 பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்

பாலதோ பால்உறா அதுவோ
ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி

இயற்கையோ ஆதியின் இயல்போ
மேல்வகை யாதோ எனமறை முடிகள்

விளம்பிட விளங்கும்ஓர் தலைவன்
மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்

வள்ளலைத் தடுப்பவர் யாரே.

4
3998 வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா

வருபர உணர்ச்சியும் மாட்டாப்
பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்

பராபர உணர்ச்சியும் பற்றா
உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்

உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன்
கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்

கடவுளைத் தடுப்பவர் யாரே.

5
3999 படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும்

பரம்பர ஒளிஎலாம் அணுவில்
கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக்

கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம்
அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த

அருட்பெருஞ் ஜோதியாம் ஒருவன்
கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான்

கடவுளைத் தடுப்பவர் யாரே.

6
4000 அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட

அடுக்கெலாம் அம்மஓர் அணுவின்
பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப்

பேசநின் றோங்கிய பெரியோன்
களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக்

கருணையா ரமுதளித் துளமாம்
வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ

வள்ளலைத் தடுப்பவர் யாரே.

7
4001 உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்

உளவுயிர் முழுவதும் ஒருங்கே
கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்

குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்
கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்

கருத்தெலாம் இனிதுதந் தருளித்
தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்

தந்தையைத் தடுப்பவர் யாரே.

8
4002 அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா

தையகோ ஐயகோ அறிவின்
மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம்

வாய்குழைந் துரைத்துரைத் துரையும்
முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர்

மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன்
செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன்

திருவுளம் தடுப்பவர் யாரே.

9
4003 கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க்

கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க்
குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த

கொள்கையாய்க் கொள்கையோ டளவா
அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால்

அருட்பெருஞ் ஜோதியாந் தலைவன்
மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன்

வண்மையைத் தடுப்பவர் யாரே.

10

49. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4004. அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன்

அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்
தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்

செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த

வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

1
4005 திருத்தகுவே தாந்தமொடு சித்தாந்த முதலாத்

திகழ்கின்ற அந்தமெலாம் தேடியுங்கண் டறியா
ஒருத்தனைஉள் ளொளியைஒளிர் உள்ளொளிக்குள் ஒளியை

உள்ளபடி உள்ளவனை உடையபெருந் தகையை
நிருத்தனைமெய்ப் பொருளான நின்மலனைச் சிவனை

நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது
கருத்தனைச்சிற் சபையோங்கு கடவுளைஎன் கண்ணால்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

2
4006 பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப்

பசுபதியைக் கனகசபா பதியைஉமா பதியைத்
தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம்

செய்யவல்ல தனிப்பதியைத் திகழ்தெய்வப் பதியை
ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை

ஆனந்த நாட்டினுக்கோர் அதிபதியை ஆசை
காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

3
4007 மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணியை

வயங்கியபே ரொளியுடைய வச்சிரமா மணியைத்
துதித்திடுவே தாகமத்தின் முடிமுடித்த மணியைச்

சுயஞ்சோதித் திருமணியைச் சுத்தசிவ மணியை
விதித்தல்முதல் தொழில்இயற்று வித்தகுரு மணியை

விண்மணியை அம்மணிக்குள் விளங்கியமெய்ம் மணியைக்
கதித்தசுக மயமணியைச் சித்தசிகா மணியைக்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

4
4008 மாற்றைஅளந் தறிந்திலம்என் றருமறைஆ கமங்கள்

வழுத்தமணி மன்றோங்கி வயங்கும்அருட் பொன்னை
ஆற்றல்மிகு பெரும்பொன்னை ஐந்தொழிலும் புரியும்

அரும்பொன்னை என்தன்னை ஆண்டசெழும் பொன்னைத்
தேற்றமிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான

சிதம்பரத்தே விளங்கிவளர் சிவமயமாம் பொன்னைக்
காற்றனல்ஆ காயம்எலாம் கலந்தவண்ணப் பொன்னைக்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

5
4009 ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும்

அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை
வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க

விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச்

சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக்
காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

6
4010 திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்

சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும்
அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும்

அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும்
பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்

பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம்
கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

7
4011 கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும்

கூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில்
ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி

உறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித்
தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த

தூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும்
காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

8
4012 நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும்

நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும்
ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம்

ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும்
வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற

வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக்
காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

9
4013 மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல

வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத்
தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த

தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப்
பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்

புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக்
கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே.

10

50. ஆண்டருளிய அருமையை வியத்தல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4014. அம்பலத் தாடும் அமுதமே என்கோ அடியனேன் ஆருயிர் என்கோ
எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ என்னிரு கண்மணி என்கோ
நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ
இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி என்னைஆண் டருளிய நினையே.
1
4015 அம்மையே என்கோ அப்பனே என்கோ அருட்பெருஞ் சோதியே என்கோ
செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ திருச்சிற்றம் பலத்தமு தென்கோ
தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ தமியனேன் தனித்துணை என்கோ
இம்மையே அழியாத் திருஉரு அளித்திங் கென்னைஆண் டருளிய நினையே.
2
4016 எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ

என்னுயிர்க் கின்பமே என்கோ
துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ

சோதியுட் சோதியே என்கோ
தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ

தனிப்பெருந் தலைவனே என்கோ
இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங்

கென்னைஆண் டருளிய நினையே.

3
4017 அச்சம்நீக் கியஎன் ஆரியன் என்கோ

அம்பலத் தெம்பிரான் என்கோ
நிச்சலும் எனக்கே கிடைத்தவாழ் வென்கோ

நீடும்என் நேயனே என்கோ
பிச்சனேற் களித்த பிச்சனே என்கோ

பெரியரிற் பெரியனே என்கோ
இச்சகத் தழியாப் பெருநலம் அழித்திங்

கென்னைஆண் டருளிய நினையே.

4
4018 அத்தம்நேர் கிடைத்த சுவைக்கனி என்கோ

அன்பிலே நிறைஅமு தென்கோ
சித்தெலாம் வல்ல சித்தனே என்கோ

திருச்சிற்றம் பலச்சிவம் என்கோ
மத்தனேன் பெற்ற பெரியவாழ் வென்கோ

மன்னும்என் வாழ்முதல் என்கோ
இத்தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி

என்னைஆண் டருளிய நினையே.

5
4019 மறப்பெலாம் தவிர்த்த மதிஅமு தென்கோ

மயக்கநீத் தருள்மருந் தென்கோ
பறப்பெலாம் ஒழித்த பதிபதம் என்கோ

பதச்சுவை அனுபவம் என்கோ
சிறப்பெலாம் எனக்கே செய்ததாய் என்கோ

திருச்சிற்றம் பலத்தந்தை என்கோ
இறப்பிலா வடிவம் இம்மையே அளித்திங்

கென்னைஆண் டருளிய நினையே.

6
4020 அன்பிலே பழுத்த தனிப்பழம் என்கோ

அறிவிலே அறிவறி வென்கோ
இன்பிலே நிறைந்த சிவபதம் என்கோ

என்னுயிர்த் துணைப்பதி என்கோ
வன்பிலா மனத்தே வயங்கொளி என்கோ

மன்னும்அம் பலத்தர சென்கோ
என்புரி அழியாப் பொன்புரி ஆக்கி

என்னைஆண் டருளிய நினையே.

7
4021 தடையிலா தெடுத்த அருளமு தென்கோ

சர்க்கரைக் கட்டியே என்கோ
அடைவுறு வயிரக் கட்டியே என்கோ

அம்பலத் தாணிப்பொன் என்கோ
உடைய மாணிக்கப் பெருமலை என்கோ

உள்ளொளிக் குள்ளொளி என்கோ
இடைதல்அற் றோங்கும் திருஅளித் திங்கே

என்னைஆண் டருளிய நினையே.

8
4022 மறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ

மன்னும்ஆ கமப்பொருள் என்கோ
குறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ

குணப்பெருங் குன்றமே என்கோ
பிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ

பெரியஅம் பலத்தர சென்கோ
இறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங்

கென்னைஆண் டருளிய நினையே.

9
4023 என்உளம் பிரியாப் பேர்ஒளி என்கோ

என்உயிர்த் தந்தையே என்கோ
என்உயிர்த் தாயே இன்பமே என்கோ

என்உயிர்த் தலைவனே என்கோ
என்உயிர் வளர்க்கும் தனிஅமு தென்கோ

என்னுடை நண்பனே என்கோ
என்ஒரு(275) வாழ்வின் தனிமுதல் என்கோ

என்னைஆண் டருளிய நினையே.

10
(275).என்பெரு - பி. இரா. பதிப்பு.

51. இறைவனை ஏத்தும் இன்பம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4024. கருணைமா நிதியே என்னிரு கண்ணே

கடவுளே கடவுளே என்கோ
தருணவான் அமுதே என்பெருந் தாயே

தந்தையே தந்தையே என்கோ
தெருள்நிறை மதியே என்குரு பதியே

தெய்வமே தெய்வமே என்கோ
அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி

ஆண்டவ நின்றனை அறிந்தே.

1
4025 ஒட்டியே என்னுள் உறும்ஒளி என்கோ

ஒளிஎலாம் நிரம்பிய நிலைக்கோர்
வெட்டியே என்கோ வெட்டியில்(276) எனக்கு

விளங்குறக் கிடைத்தஓர் வயிரப்
பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே

பெரியவர் வைத்ததோர் தங்கக்
கட்டியே என்கோ அம்பலத் தாடும்

கருணையங் கடவுள்நின் றனையே.

2
(276) கெட்டியே என்கோ கெட்டியில் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு.
4026 துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ

சோதியுட் சோதியே என்கோ
அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ

அம்மையே அப்பனே என்கோ
இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ

என்உயிர்க் கின்அமு தென்கோ
என்பொலா மணியே என்கணே என்கோ

என்னுயிர் நாதநின் றனையே.

3
4027 கருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த

கணவனே கணவனே என்கோ
ஒருத்தனே எல்லாம் உடையநா யகனே

ஒருதனிப் பெரியனே என்கோ
திருத்தனே எனது செல்வமே எல்லாம்

செயவல்ல சித்தனே என்கோ
நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ

நிறைஅருட் சோதிநின் றனையே.

4
4028 தாயனே எனது தாதையே ஒருமைத்

தலைவனே தலைவனே என்கோ
பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த

பெருந்தகைப் பெரும்பதி என்கோ
சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ

சித்தெலாம் வல்லசித் தென்கோ
தூயனே எனது நேயனே என்கோ

சோதியுட் சோதிநின் றனையே.

5
4029 அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்

ஆனந்தத் தனிமலர் என்கோ
கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ

கடையனேன் உடையநெஞ் சகமாம்
இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி

இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ
துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ

சோதியுட் சோதிநின் றனையே.

6
4030 தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த

சர்க்கரை அமுதமே என்கோ
மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த

முகநகைக் கணவனே என்கோ
போகமுள் விரும்பும் போதிலே வலிந்து

புணர்ந்தஓர் பூவையே என்கோ
ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த

அம்பலத் தாடிநின் றனையே.

7
4031 தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த

தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்

தனில்உறும் அனுபவம் என்கோ
ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்

ஓங்கிய ஒருமையே என்கோ
சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ

திருச்சிற்றம் பலத்தவ நினையே.

8
4032 யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில்

ஓங்கிய காட்சியே என்கோ
ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள்

இசைந்தபே ரின்பமே என்கோ
சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச்

சார்ந்தசற் குருமணி என்கோ
மாகமும் புவியும் வாழ்வுற மணிமா

மன்றிலே நடிக்கின்றோய் நினையே.

9
4033 இரவிலா தியம்பும் பகலிலா திருந்த

இயற்கையுள் இயற்கையே என்கோ
வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்(277)

வயங்கிய வான்பொருள் என்கோ
திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே

செய்ததோர் சித்தனே என்கோ
கரவிலா தெனக்குப் பேரருட் சோதி

களித்தளித் தருளிய நினையே.

10
(277) நிலைக்கும் - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.

52. பாமாலை ஏற்றல்

நேரிசை வெண்பா

4034. நான்புனைந்த சொன்மாலை நன்மாலை என்றருளித்
தான்புனைந்தான் ஞான சபைத்தலைவன் - தேன்புனைந்த
சொல்லாள் சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த
நல்லான்தன் தாட்கே நயந்து.
1
4035 சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும்
வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ
காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச்
சேமநட ராஜன் தெரிந்து.
2
4036 ஏதாகு மோஎனநான் எண்ணி இசைத்தஎலாம்
வேதாக மம்என்றே மேல்அணிந்தான் - பாதார
விந்தம் எனதுசிர மேல்அமர்த்தி மெய்அளித்த
எந்தைநட ராஜன் இசைந்து.
3
4037 இன்உரைஅன் றென்றுலகம் எல்லாம் அறிந்திருக்க
என்உரையும் பொன்உரைஎன் றேஅணிந்தான் - தன்உரைக்கு
நேர்என்றான் நீடுலகில் நின்போல் உரைக்கவல்லார்
ஆர்என்றான் அம்பலவன் ஆய்ந்து.
4
4038 என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என்
தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்
காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச்
சாலையிலே வாஎன்றான் தான்.
5
4039 என்னே அதிசயம்ஈ திவ்வுலகீர் என்னுரையைப்
பொன்னே எனமேற் புனைந்துகொண்டான் - தன்னேரில்
நல்ஆ ரணங்கள்எலாம் நாணியவே எல்லாஞ்செய்
வல்லான் திருக்கருணை வாய்ப்பு.
6
4040 முன்பின்அறி யாது மொழிந்தமொழி மாலைஎலாம்
அன்பின் இசைந் தந்தோ அணிந்துகொண்டான் - என்பருவம்
பாராது வந்தென் பருவரல்எல் லாம்தவிர்த்துத்
தாரா வரங்களெலாம் தந்து.
7
4041 பொன்னொப்ப தாம்ஒருநீ போற்றியசொன் மாலைஎன்றே
என்னப்பன் என்சொல் இசைந்தணிந்தான் - தன்ஒப்பில்
வல்லான் இசைந்ததுவே மாமாலை அற்புதம்ஈ
தெல்லாம் திருவருட்சீ ரே.
8
4042 பின்முன்அறி யேன்நான் பிதற்றியசொன் மாலைஎலாம்
தன்முன்அரங் கேற்றெனவே தான்உரைத்தான் - என்முன்
இருந்தான்என் னுள்ளே இருக்கின்றான் ஞான
மருந்தான்சிற் றம்பலத்தான் வாய்ந்து.
9
4043 நீயேஎன் பிள்ளைஇங்கு நின்பாட்டில் குற்றம்ஒன்றும்
ஆயேம்என் றந்தோ அணிந்துகொண்டான் - நாயேன்செய்
புண்ணியம்இவ் வானிற் புவியின் மிகப்பெரிதால்
எண்ணியஎல் லாம்புரிகின் றேன்.
10
4044 எண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க
நண்ணுகின்ற தென்புகல்வேன் நானிலத்தீர் - உண்ணுகின்ற
உள்ளமுதோ நான்தான் உஞற்றுதவத் தாற்கிடைத்த
தெள்ளமுதோ அம்பலவன் சீர்.
11
4045 ஆக்கி அளித்தல்முதல் ஆந்தொழில்ஓர் ஐந்தினையும்
தேக்கி அமுதொருநீ செய்என்றான் - தூக்கி
எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம்
கொடுத்தான்சிற் றம்பலத்தென் கோ.
12

53. உத்தரஞானசிதம்பர மாலை

கட்டளைக் கலித்துறை

4046. அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன்
மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே
பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும்
தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே.
1
4047 இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல
துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை
அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில்
திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே.
2
4048 உலகம் எலாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே
இலக எலாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும்
கலகம் இலாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த்
திலகம் எனாநின்ற துத்தர ஞான சிதம்பரமே.
3
4049 பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல்
தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே
உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த
சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே.
4
4050 ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு
மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு
வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல்
செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
5
4051 எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல
சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த
தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும்
செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே.
6
4052 குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக் கொடுத்தது கூறரிதாம்
பெருநெறிக் கேசென்ற பேர்க்குக் கிடைப்பது பேய்உலகக்
கருநெறிக் கேற்றவர் காணற் கரியது காட்டுகின்ற
திருநெறிக் கேற்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
7
4053 கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார்
சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல
கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும்
செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே.
8
4054 காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது காலமெல்லாம்
வீணாள் கழிப்பவர்க் கெய்தரி தானது வெஞ்சினத்தால்
கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று
சேணாடர் வாழ்த்துவ துத்தர ஞான சிதம்பரமே.
9
4055 சொல்வந்த வேத முடிமுடி மீதில் துலங்குவது
கல்வந்த நெஞ்சினர் காணற் கரியது காமம்இலார்
நல்வந் தனைசெய நண்ணிய பேறது நன்றெனக்கே
செல்வந்தந் தாட்கொண்ட துத்தர ஞான சிதம்பரமே.
10
4056 ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே
மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின்
மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன்
தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே.
11

54. செய்பணி வினவல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4057. அருளே பழுத்த சிவதருவில்அளிந்த பழந்தந் தடியேனைத்
தெருளே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
மருளே முதலாம் தடைஎல்லாம்தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன்
பொருளே இனிநின் தனைப்பாடிஆடும் வண்ணம் புகலுகவே.
1
4058 ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே
திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே.
2
4059 அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளார் அமுதம் மிகப்புகட்டிச்
சிவமே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே நின்பால் வளர்கின்றேன்
நவமே அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
3
4060 பல்வா தனையும் தவிர்த்தெனக்கே பரமா னந்த அமுதளித்துச்
செல்வா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
வல்வா தனைசெய் மனச்செருக்கை மாற்றி நின்பால் வளர்கின்றேன்
நல்வாழ் வளித்தாய் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
4
4061 ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத்
தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன்
நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
5
4062 இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித்
தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன்
தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
6
4063 மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச்
சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே.
7
4064 ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித்
தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன்
தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
8
4065 ஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச்
சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன்
தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே.
9
4066 மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே
தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன்
பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே.
10
4067 . ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
நாரா யணனு நான்முகனு நயந்து வியக்க நிற்கின்றேன்
ஏரார் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை இயம்புகவே.
11
4068 பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து
சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளுகவே.278
12
4067, 4068. இவ்வொன்றரைப் பாட்டும் பெருமான் கையெழுத்தில்
இருப்பதாகக் கூறி ஆ. பா. இவற்றைத் தனிப்பாசுரப் பகுதியில் சேர்த்துள்ளார்.
பொருளமைதி கருதி இவை ஈண்டு இப்பதிகத்துடன் சேர்க்கப்பெற்றன.
13

55. ஆன்ம தரிசனம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4069. திருஎலாம் தரும்ஓர் தெய்வமாம் ஒருவன்

திருச்சிற்றம் பலந்திகழ் கின்றான்
உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி

உளஎலாம் ஆங்கவன் தனக்கே
தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு

செயலிலேன் எனநினைத் திருந்தேன்
அருஎலாம் உடையாய் நீஅறிந் ததுவே

அடிக்கடி உரைப்பதென் நினக்கே.

1
4070 நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன்

நினைப்பற நின்றபோ தெல்லாம்
எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன்

என்செயல் என்னஓர் செயலும்
தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம்

சிவன்செய லாம்எனப் புரிந்தேன்
அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே

அடிக்கடி உரைப்பதென் நினக்கே.

2
4071 களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே

களித்தனன் கண்கள்நீர் ததும்பித்
துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைத்தே

துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத்
தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே

தெளித்தனன் செய்கைவே றறியேன்
ஒளித்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்

உரைப்பதென் அடிக்கடி உனக்கே.

3
4072 உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல்
கொண்டதும் நின்னோ டன்றிநான் தனித்தென் குறிப்பினில் குறித்ததொன் றிலையே
ஒண்தகும் உனது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
4
4073 களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான்களித் தறியேன்
உளவிலே உவந்த போதும்நீ தானே உவந்தனை நான்உவந் தறியேன்
கொளஇலே சமும்ஓர் குறிப்பிலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே
அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
5
4074 திலகவாள் நுதலார் தமைக்கன விடத்தும் சிறிதும்நான் விழைந்திலேன் இந்த
உலகவாழ் வதில்ஓர் அணுத்துணை எனினும் உவப்பிலேன் உலகுறு மாயைக்
கலகவா தனைதீர் காலம்என் றுறுமோ கடவுளே எனத்துயர்ந் திருந்தேன்
அலகிலாத் திறலோய் நீஅறிந் ததுநான் அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
6
4075 சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான் உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
7
4076 பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப் பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ
சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன் மார்க்க சங்கம்என் றோங்குமோ தலைமைச்
சித்தெலாம் வல்ல சித்தன்என் றுறுமோ தெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன்
ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
8
4077 ஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ ஊழிதோ றூழிசென் றிடினும்
என்றும்இங் கிறவா இயற்கைஎன் றுறுமோ இயல்அருட் சித்திகள் எனைவந்
தொன்றல்என் றுறுமோ அனைத்தும்என் வசத்தே உறுதல்என் றோஎனத் துயர்ந்தேன்
உன்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும் உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
9
4078 கள்ளவா தனையைக் களைந்தருள் நெறியைக் காதலித் தொருமையில் கலந்தே
உள்ளவா றிந்த உலகெலாம் களிப்புற் றோங்குதல் என்றுவந் துறுமோ
வள்ளலே அதுகண் டடியனேன் உள்ளம் மகிழ்தல்என் றோஎனத் துயர்ந்தேன்
ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
10

56. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4079 அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே

எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்

தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.

1
4080 ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்

புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத(279) அருட்சோதி என்கையுறல் வேண்டும்

இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்

நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே.

2
(279). எய்யாத - அறியாத. முதற்பதிப்பு.
4081 அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
கண்ணார நினைஎங்கும் கண்டுவத்தல் வேண்டும்

காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்

பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்

உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே.

3
4082 அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்

திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்

எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.

4
4083 அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்
வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்

மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்

பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.

5
4084 அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அண்டம்எலாம் பிண்டம்எலாம் கண்டுகொளல் வேண்டும்
துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்

சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்

படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.

6
4085 அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே

இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்

ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்

சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.

7
4086 அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்

எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்

உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.

8
4087 அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்

சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்

எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்

பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.

9
4088 அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான

மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்

திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்

புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.

10
4089 அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்

எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
கமையாதி(280) அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்

காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்

விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.

11
(280). கமை - பொறுமை. முதற்பதிப்பு.

57. அருள் விளக்க மாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4090 அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே

அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே

என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே

மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா

தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே.

1
4091 கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே

மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

2
4092 இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே

ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே
அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே

அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே

இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே
துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே

தூயதிரு அடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே.

3
4093 ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே

உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே

பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே
நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே

நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே

களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே.

4
4094 மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து

வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே
சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்

சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே

அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
இனம்எனப்பேர் அன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே

என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே.

5
4095 கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே

காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை

சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா
எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி

என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே

சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.

6
4096 கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து

கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே

மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்

திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே

மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.

7
4097 கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில்

கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே
விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே

மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே

மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே
துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே

சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.

8
4098 அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில்

அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும்
கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்

காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே

விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம்
தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்

தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே.

9
4099 நல்லார்சொல் யோகாந்தப் பதிகள்பல கோடி

நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி
வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி

வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள்பல கோடி
இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி

இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி
எல்லாம்பேர் அருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்

என்அரசே என்மாலை இனிதுபுனைந் தருளே.

10
4100 நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா

ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள்
ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி

எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச்

சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே
நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்

நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே.

11
4101 தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது

தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்

நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார்
அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்

அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே
என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே

யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே.

12
4102 உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ

டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே

ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி
எண்ணியஎன் எண்ணம்எலாம் எய்தஒளி வழங்கி

இலங்குகின்ற பேர்அருளாம் இன்னமுதத் திரளே
புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே

புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.

13
4103 நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே

நடுஇருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா
பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே

பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே
கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா

கோவேஎன் கணவாஎன் குரவாஎன்(281) குணவா
நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும்

நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே.

14
(281). எண் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
4104 கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே

கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா
மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே

மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே
நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே

நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்
பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே

புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.

15
4105 கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே

கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசை

வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே

என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே
தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே

தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.

16
4106 தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்

சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின்

தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
இனித்தநறு நெய்அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே.

17
4107 மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே

மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே

விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே
கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங்

கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே

நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே.

18
4108 கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்

கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே

பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே
மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம

வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப்
பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது

பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே.

19
4109 உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே

உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே
பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே

பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே
மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே

மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே
திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே

சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே.

20
4110 நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்

ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்

ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்

தேகமும்உள் உயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே
வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்

வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.

21
4111 எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே

எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே

சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்

மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே

தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.

22
4112 சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்

தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகிர் அண்டம்

ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்

ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்

தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே

23
4113 அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி

அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே
படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல்

பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே
பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப்

பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே
அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே

ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

24
4114 அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்

அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத்
துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்

தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே

மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும்

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

25
4115 பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்

பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்

இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே
வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே

மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே
தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும்

தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

26
4116 பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்

படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே
உற்றொளிகொண் டோ ங்கிஎங்கும் தன்மயமாய் ஞான

உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே

சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே

முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே.

27
4117 ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே

அடுத்திடுநந் நான்கும்அவை அகம்புறமேல் நடுக்கீழ்
கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க்

காணும்அவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே
செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள்

செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே
வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில்

விளங்கும்நடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.

28
4118 வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும்

வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால்
ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே

ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும்

சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே
போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில்

புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.

29
4119 பகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்

பரவிஎலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித்
தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே

தனிஒளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே
மிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம்

விளங்கஅருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும்

துரியநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

30
4120 மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே

வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி
ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே

அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே
தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம்

தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே
தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும்

தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

31
4121 சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்

தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே
நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய்

நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே
வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும்

விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில்

தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

32
4122 சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும்

தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும்

உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும்

துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும்

பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.

33
4123 நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும்

நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி
ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க

இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே
கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம்

குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே
பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும்

பரமநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.

34
4124 மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள்

வகுத்தநிலை யாதிஎலாம் வயங்கவயின் எல்லாம்
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள்

பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே
துன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம்

சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே
உன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே

ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

35
4125 விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள்

விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக்
களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான்

காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே
உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும்

ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே
வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே

மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே.

36
4126 தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே

சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே

பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
விரிந்தமகா சுத்தபர லோகஅண்ட முழுதும்

மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே

புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.

37
4127 வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள்

மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம்

ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பேர் ஒளியே
தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச்

சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே

விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே.

38
4128 கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே

என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.

39
4129 காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்

கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்

தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்

மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே

ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

40
4130 திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும்

சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய்
விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே

மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப்
பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே

படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே
உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில்

ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

41
4131 கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும்

கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில்
சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே

தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப்
பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம்

படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே
ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய்

ஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே.

42
4132 தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்

திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி

உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்

பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே
பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்

பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.

43
4133 தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்(282) தில்லைத்

தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்

வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே

கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்

சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

44
(282). தாய் முதலோரோடு சிறு பருவமதில் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு, க.
4134 ஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே

உயர்ந்தஒட்டுத் திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன்
தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே

தூக்கிஎடுத் தணைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே
தாங்கியஎன் உயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே

சற்குருவே நான்செய்பெருந் தவப்பயனாம் பொருளே
ஏங்கியஎன் ஏக்கமெலாம் தவிர்த்தருளிப் பொதுவில்

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

45
4135 தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத்

தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே
பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே

பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே
இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால்

இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே
கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில்

கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.

46
4136 ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர்

உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்

பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச்

செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்

காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.

47
4137 இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே

இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்

போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே
மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி

மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே
அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

48
4138 நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி

நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே

ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்

வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்

திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

49
4139 நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி

நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே
கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும்

கிளர்ந்தொளிகொண் டோ ங்கியமெய்க் கிளைஎனும்பேர் ஒளியே
படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே

பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே
கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த

ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.

50
4140 நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே

நேர்காண வந்தனம்என் றென்முடிமேல்(283) மலர்க்கால்
தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்

தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே
ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே

எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே
தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே

தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

51
(283). முடிமேல் - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க., மடிமேல் - பி. இரா., ஆ. பா.
4141 மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய

முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே
ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்

அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப்

பரநாத நாட்டரசு பாலித்த பதியே
ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே

என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே.

52
4142 இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே

இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித்
தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்

தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே
எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே

இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே
முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும்

முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே.

53
4143 கையாத தீங்கனியே கயக்காத அமுதே

கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே

போகாத புனலேஉள் வேகாத காலே
கொய்யாத நறுமலரே கோவாத மணியே

குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே

தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

54
4144 எண்ணாத மந்திரமே எழுதாத மறையே

ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே
பண்ணாத பூசையிலே படியாத படிப்பே

பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே

நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே

அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே.

55
4145 சாகாத கல்வியிலே தலையான நிலையே

சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே

ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்

குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்

மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.

56
4146 சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித்

தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய்
நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி

நீயாகி நானாகி நின்றதனிப்பொருளே
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே

சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே
புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில்

புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.

57
4147 நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி

நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித்
தான்அளக்கும் அளவதிலே முடிவதெனத் தோற்றித்

தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே
வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி

வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத்
தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில்

திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

58
4148 திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத்

தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி
நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து

நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே
வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே

வான்நடுவே இன்பவடி வாய்இருந்த பொருளே
பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப்

பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.

59
4149 என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே

இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே

தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே
மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த

மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே
மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே

மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.

60
4150 மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்

வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப்

பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே

ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே

மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.

61
4151 நன்மைஎலாம் தீமைஎனக் குரைத்தோடித் திரியும்

நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும்
புன்மைஎலாம் பெருமைஎனப் பொறுத்தருளிப் புலையேன்

பொய்உரைமெய் உரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித்
தன்மைஎலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும்

தரித்தருளி ஐந்தொழில்செய் சதுர்அளித்த பதியே
இன்மைஎலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப் பொதுவில்

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

62
4152 விழுக்குலத்தார் அருவருக்கும் புழுக்குலத்தில் கடையேன்

மெய்யுரையேன் பொய்யுரையை வியந்துமகிழ்ந் தருளி
முழுக்குலத்தோர் முடிசூட்டி ஐந்தொழில்செய் எனவே

மொழிந்தருளி எனையாண்ட முதற்றனிப்பேர் ஒளியே
எழுக்குலத்தில் புரிந்தமனக் கழுக்குலத்தார் தமக்கே

எட்டாத நிலையேநான் எட்டியபொன் மலையே
மழுக்குலத்தார் போற்றமணி மன்றில்நடம் புரியும்

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.

63
4153 கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன்

கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி
மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி

மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே
புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப்

பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே

விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.

64
4154 மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்

மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்
பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்

பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த
விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே

வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே
சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்

தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

65
4155 என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே

எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித்
தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத்

தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே
அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே

ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே
பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே

புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே.

66
4156 தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்

தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற

முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும்
என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி

இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே
என்அரசே என்உயிரே என்இருகண் மணியே

இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே.

67
4157 பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே

பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும்

மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்

ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க்
கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே

கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.

68
4158 வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே

மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே
மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே

வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து

கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

69
4159 கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது

குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே
மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்

வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே
நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா

நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே
புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்

புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.

70
4160 உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்

உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக

பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்

நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
மயர்ப்பறுமெய்த்(284) தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.

71
(284). மயர்ப்பு - சோர்வு. முதற்பதிப்பு.
4161 வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும்

மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில்
அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக

அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே
இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான்

ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே
துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றுதிருப் பொதுவில்

தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

72
4162 கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்

குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்

பயந்தீர்த்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே

நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

73
4163 தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்

சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி
நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி

நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே
உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில்

ஓங்கியபேர் அன்பேஎன் அன்பிலுறும் ஒளியே
மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில்

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.

74
4164 அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்

அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்

செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே

போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்

வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.

75
4165 வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்

மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
பெம்மான்என் றடிகுறித்துப் பாடும்வகை புரிந்த

பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே
செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்

செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே
அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

76
4166 ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை

அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து
நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி

நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து
மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய

மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே
ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

77
4167 பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே

பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய

வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே

விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே

ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

78
4168 மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்

விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும்
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக

எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே
அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா

ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்

பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே.

79
4169 அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்

அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்

கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன

வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே

குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.

80
4170 சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்

தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி

எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா

தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே

தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

81
4171 பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப்

புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச்
செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச்

செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க
அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும்

ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே

நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே.

82
4172 உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும்

ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய

பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே

நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

83
4173 கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்

கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளம்உறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்

காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே

பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்

தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

84
4174 நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ

விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே

காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே
மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற

வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.

85
4175 எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே

என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ

திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி

அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே
ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்

ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

86
4176 இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்

இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்

மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக
செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே

திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

87
4177 தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்

சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்

உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்
ஆன்றதிரு அருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே

ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே
ஏன்றதிரு அமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

88
4178 நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்

நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம்
வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து

வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற

சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால்
தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே

சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

89
4179 தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்

சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்

இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா

தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே

சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

90
4180 ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே

அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி
வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி

வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே

சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்

ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

91
4181 காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே

களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே

சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்

மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.

92
4182 சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்

சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே
சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே

துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே
நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே

நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே
பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்

பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே.

93
4183 ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த

அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே
வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்

மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம்
சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை

தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்
நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்

நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே.

94
4184 கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே

கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே
இணக்கம்உறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்

இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே
மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே

வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே
பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில்

பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.

95
4185 அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி

அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து
கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக்

கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே
வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே

மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே
படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில்

பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.

96
4186 எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்

ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே
மெய்த்துணையாம் திருவருட்பேர் அமுதம்மிக அளித்து

வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்

துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே

சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

97
4187 இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை

எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி
அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே

அதிசயிக்கத் திருஅமுதும் அளித்தபெரும் பதியே
திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்

திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே
பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்

பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.

98
4188 குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்

கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து

மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித்
தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்

தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே
அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

99
4189 தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனைத்

தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்த்தே
மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி

வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து
நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய்

நிறையநிறை வித்துயர்ந்த நிலைஅதன்மேல் அமர்த்தி
அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

100

58. நற்றாய் கூறல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4190. காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ

கண்டுகொள் கணவனே என்றாள்
ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்

உவந்திலேன் உண்மையீ தென்றாள்
பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த

பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்
மாதய வுடைய வள்ளலே என்றாள்

வரத்தினால் நான்பெற்ற மகளே.

1
4191 மயங்கினேன் எனினும் வள்ளலே உனைநான்

மறப்பனோ கனவினும் என்றாள்
உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ

உயிர்தரி யாதெனக் கென்றாள்
கயங்கினேன் கயங்கா வண்ணநின் கருணைக்

கடலமு தளித்தருள் என்றாள்
வயங்குசிற் சபையில் வரதனே என்றாள்

வரத்தினால் நான்பெற்ற மகளே.

2
4192 அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே

அன்பினால் அணைத்தருள் என்றாள்
பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம்

படமுடி யாதெனக் கென்றாள்
செஞ்செவே எனது கருத்தெலாம் உனது

திருவுளம் அறியுமே என்றாள்
வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள்

வரத்தினால் நான்பெற்ற மகளே.

3
4193 பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப்

புணர்ந்திட விரும்பினேன் என்றாள்
காமிஎன் றெனைநீ கைவிடேல் காமக்

கருத்தெனக் கில்லைகாண் என்றாள்
சாமிநீ வரவு தாழ்த்திடில் ஐயோ

சற்றுநான் தரித்திடேன் என்றாள்
மாமிகு கருணை வள்ளலே என்றாள்

வரத்தினால் நான்பெற்ற மகளே.

4
4194 அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க

ஆசைமேற் பொங்கிய தென்றாள்
தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும்

தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால்

சொலமுடி யாதெனக் கென்றாள்
மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள்

வரத்தினால் நான்பெற்ற மகளே.

5
4195 தடுத்திடல் வல்லார் இல்லைநின் அருளைத்

தருகநற் றருணம்ஈ தென்றாள்
கொடுத்திடில் ஐயோ நின்னருட் பெருமை

குறையுமோ குறைந்திடா தென்றாள்
நடுத்தய விலர்போன் றிருத்தலுன் றனக்கு

ஞாயமோ நண்பனே என்றாள்
வடுத்தினும் வாயேன் அல்லன்நான் என்றாள்

வரத்தினால் நான்பெற்ற மகளே.

6
4196 பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்

பொங்கிய தாசைமேல் என்றாள்
என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ

என்னள வன்றுகாண் என்றாள்
கொன்செயும் உலகர் என்னையும் உனது

குறிப்பையும் குறித்திலார் என்றாள்
வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள்

வரத்தினால் நான்பெற்ற மகளே.

7
4197 மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு

மேவிலை என்னையோ என்றாள்
நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல்

நல்லவர்க் கடுப்பதோ என்றாள்
மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற

வைத்தல்உன் மரபல என்றாள்
வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள்

வரத்தினால் நான்பெற்ற மகளே.

8
4198 ஒன்றிலேன் பிறிதொன் றுன்னருட் சோதி

ஒன்றுற ஒன்றினேன் என்றாள்
நன்றிலேன் எனினும் நின்திரு வடியை

நம்பினேன் நயந்தருள் என்றாள்
குன்றிலே இருத்தற் குரியநான் துயரக்

குழியிலே இருந்திடேன் என்றாள்
மன்றிலே நடஞ்செய் வள்ளலே என்றாள்

வரத்தினால் நான்பெற்ற மகளே.

9
4199 ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான்

அன்பினால் கூடினன் என்றாள்
கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக்

கூடுதல் கூடுமோ என்றாள்
பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப்

பரிசெலாம் புரிந்தனன் என்றாள்
வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள்

வரத்தினால் நான்பெற்ற மகளே.

10

59. பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4200. அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான்

அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள்
இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த

ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும்
எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல்

இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே
சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்

சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.

1
4201 அங்கலிட்ட(285) களத்தழகர் அம்பலவர் திருத்தோள்

ஆசையெனும் பேய்அகற்றல் ஆவதிலை எனவே
பொங்கலிட்ட தாயர்முகம் தொங்கலிட்டுப் போனார்

பூவைமுகம் பூமுகம்போல் பூரித்து மகிழ்ந்தாள்
எங்களிட்டம் திருவருள்மங் கலஞ்சூட்டல் அன்றி

இரண்டுபடா தொன்றாக்கி இன்படைவித் திடவே
தங்களிட்டம் யாதுதிரு வாய்மலர வேண்டும்

சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.

2
(285). அங்கு அல் எனப்பிரித்து அவ்விடத்துஇருள் எனப்
பொருள்கொள்க - முதற்பதிப்பு. இருள் - நஞ்சு.
4202 பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும்

பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள்
இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால்

எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம்
மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள்

மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள்
தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்

சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.

3
4203 புல்லவரே பொய்உலக போகம்உற விழைவார்

புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார்
கல்லவரே மணிஇவரே என்றறிந்தாள் அதனால்

கனவிடையும் பொய்யுறவு கருதுகிலாள் சிறிதும்
நல்லவரே எனினும்உமை நாடாரேல் அவரை

நன்குமதி யாள்இவளை நண்ணஎண்ணம் உளதோ
வல்லவரே நுமதுதிரு வாய்மலர வேண்டும்

வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.

4
4204 தத்துவரும் தத்துவஞ்செய் தலைவர்களும் பிறரும்

தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார்
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாராள்

இருவிழிகள் நீர்சொரிவாள் என்னுயிர்நா யகனே
ஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என் றுமையே

ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது
சித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும்

சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே.

5
4205 அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்

அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே
என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்

இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை
முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்

முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல்
மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்

வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.

6
4206 கரவறியா அம்பலத்தென் கணவரைக்கண் டலது

கண்துயிலேன் உண்டிகொளேன் களித்தமரேன் என்பாள்
இரவறியாள் பகலறியாள் எதிர்வருகின் றவரை

இன்னவர்என் றறியாள்இங் கின்னல்உழக் கின்றாள்
வரவெதிர்பார்த் துழல்கின்றாள் இவள்அளவில் உமது

மனக்கருத்தின் வண்ணம்எது வாய்மலர வேண்டும்
விரவும்ஒரு கணமும்இனித் தாழ்க்கில்உயிர் தரியாள்

மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.

7
4207 ஊராசை உடலாசை உயிர்பொருளின் ஆசை

உற்றவர்பெற் றவராசை ஒன்றுமிலாள் உமது
பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும்

பிச்சிஎனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர்கேட் டிடிலோ
நாராசஞ் செவிபுகுந்தால் என்னநலி கின்றாள்

நாடறிந்த திதுஎல்லாம் நங்கைஇவள் அளவில்
நீர்ஆசைப் பட்டதுண்டேல் வாய்மலர வேண்டும்

நித்தியமா மணிமன்றில் நிகழ்பெரிய துரையே.

8
4208 என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க

இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித்
தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும்

தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள்
அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில்

அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள்
மின்னிவளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும்

மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.

9
4209 அம்பலத்தே நடம்புரியும் எனதுதனித் தலைவர்

அன்புடன்என் உளங்கலந்தே அருட்பெருஞ்சோ தியினால்
தம்பலத்தே பெரும்போகந் தந்திடுவார் இதுதான்

சத்தியஞ்சத் தியமதனால் சார்ந்தவர்தாம் இருக்க
எம்பலத்தே மலரணையைப் புனைகஎனப் பலகால்

இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்துநும தருளாம்
செம்பலத்தே உறுதருணம் வாய்மலர வேண்டும்

சிற்சபைபொற் சபைஓங்கித் திகழ்பெரிய துரையே.

10

60. தலைவி வருந்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4210. பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ

பழக்கமிலா மையினாலோ படிற்றுவினை யாலோ
இருவகைமா யையினாலோ ஆணவத்தி னாலோ

என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன்
சருவல்ஒழிந் தென்மனமாம் பாங்கிபகை யானாள்

தனித்தபரை எனும்வளர்த்த தாயும்முகம் பாராள்
நிருவமடப் பெண்களெலாம் வலதுகொழிக் கின்றார்

நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.

1
4211 அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்

அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி
எம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான்

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
வம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள்

வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள்
நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம்

நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.

2
4212 கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்

கனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி
எண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன்

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள்

பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள்
மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்

வள்ளல்நட ராயர்திரு உள்ளம்அறிந் திலனே.

3
4213 எல்லாஞ்செய் வல்லதுரை என்கணவர் என்றால்

எனக்கும்ஒன்று நினக்கும்ஒன்றா என்றஅத னாலோ
இல்லாமை எனக்கில்லை எல்லார்க்குந் தருவேன்

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கல்லார்போல் என்னைமுகம் கடுத்துநின்றாள் பாங்கி

களித்தெடுத்து வளர்த்தவளும் கலந்தனள்அங் குடனே
செல்லாமை சிலபுகன்று சிரிக்கின்றார் மடவார்

சித்தர்நட ராயர்திருச் சித்தமறிந் திலனே.

4
4214 இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்

ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்

நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்

அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே.

5
4215 வஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா

வாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி
எஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன்

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
அஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த

அன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள்
நெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார்

நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.

6
4216 அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மலர் அடித்தேன்

அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி
என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்

துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள்
நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்

நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.

7
4217 பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்

புன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி
இதுவரையும் வரக்காணேன் தடைசெய்தார் எவரோ

எனப்புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
புதுமுகங்கொண் டெனதுதனித் தோழிமனந் திரிந்தாள்

புரிந்தெடுத்து வளர்த்தவளும் புதுமைசில புகன்றாள்
மதுவுகந்து களித்தவர்போல் பெண்கள்நொடிக் கின்றார்

வள்ளல்நட ராயர்திரு உள்ளமறிந் திலனே.

8
4218 கண்கலந்த கள்வர்என்னைக் கைகலந்த தருணம்

கரணம்அறிந் திலன்என்றேன் அதனாலோ அன்றி
எண்கலந்த போகமெலாம் சிவபோகந் தனிலே

இருந்ததென்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
விண்கலந்த மதிமுகந்தான் வேறுபட்டாள் பாங்கி

வியந்தெடுத்து வளர்த்தவளும் வேறுசில புகன்றாள்
பண்கலந்த மொழிமடவார் பழிகூற லானார்

பத்தர்புகழ் நடராயர் சித்தம்அறிந் திலனே.

9
4219 மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்

வள்ளலொடு நானென்றேன் அதனாலோ அன்றி
ஈடறியாச் சுகம்புகல என்னாலே முடியா

தென்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
ஏடவிழ்பூங் குழற்கோதைத் தோழிமுகம் புலர்ந்தாள்

எனைஎடுத்து வளர்த்தவளும் இரக்கமிலாள் ஆனாள்
நாடறியப் பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்

நல்லநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.

10
4220 கற்பூரம் மணக்கின்ற தென்மேனி முழுதும்

கணவர்மணம் அதுவென்றேன் அதனாலோ அன்றி
இற்பூவை அறியுமடி நடந்தவண்ணம் எல்லாம்

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
பொற்பூவின் முகம்வியர்த்தாள் பாங்கிஅவ ளுடனே

புரிந்தெடுத்து வளர்த்தவளும் கரிந்தமுகம் படைத்தாள்
சொற்பூவைத் தொடுக்கின்றார் கால்கள்களை யாதே

துன்னுநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.

11
4221 மன்னுதிருச் சபைநடுவே மணவாள ருடனே

வழக்காடி வலதுபெற்றேன் என்றஅத னாலோ
இன்னும்அவர் வதனஇள நகைகாணச் செல்வேன்

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
மின்னும்இடைப் பாங்கிஒரு விதமாக நடந்தாள்

மிகப்பரிவால் வளர்த்தவளும் வெய்துயிர்த்துப் போனாள்
அன்னநடைப் பெண்களெலாம் சின்னமொழி புகன்றார்

அத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.

12
4222 கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே

கண்டதலால் உண்டதிலை என்றஅத னாலோ
எள்ளுண்ட மற்றவர்போல் என்னைநினை யாதீர்

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
உள்ளுண்ட மகிழ்ச்சிஎலாம் உவட்டிநின்றாள் பாங்கி

உவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ணள் ஆனாள்
துள்ளுண்ட பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்றார்

சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.

13
4223 காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது

கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி
ஏரிகவாத் திருஉருவை எழுதமுடி யாதே

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி

கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே
நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார்

நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.

14
4224 கண்ணேறு படும்எனநான் அஞ்சுகின்றேன் எனது

கணவர்வடி வதுகாணற் கென்றஅத னாலோ
எண்ணாத மனத்தவர்கள் காணவிழை கின்றார்

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நண்ணாரில் கடுத்தமுகம் தோழிபெற்றாள் அவளை

நல்கிஎனை வளர்த்தவளும் மல்கியவன் படுத்தாள்
பெண்ணாயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே

பெரியநட ராயர்உள்ளப் பிரியம்அறிந் திலனே.

15
4225 கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்

கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
வற்பூத வனம்போன்றாள் பாங்கியவள் தனைமுன்

மகிழ்ந்துபெற்றிங் கெனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள்
விற்பூஒள் நுதல்மடவார் சொற்போர்செய் கின்றார்

விண்ணிலவு நடராயர் எண்ணம்அறிந் திலனே.

16
4226 மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது

வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ
இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன்

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி

புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார்

பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே.

17
4227 தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது

தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி
ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம்

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த

கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள்
சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார்

சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.

18
4228 தனித்தலைவர் வருகின்ற தருணம்இது மடவீர்

தனிக்கஎனை விடுமின்என்றேன் அதனாலோ அன்றி
இனித்தசுவை எல்லாம்என் கணவர்அடிச் சுவையே

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
பனித்தகுளிர் காலத்தே சனித்தசலம் போன்றாள்

பாங்கிஎனை வளர்த்தவளும் தூங்குமுகங் கொண்டாள்
கனித்தபழம் விடுத்துமின்னார் காய்தின்னு கின்றார்

கருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.

19
4229 அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம்

அகலநின்மின் அணங்கனையீர் என்றஅத னாலோ
இரும்புமணம் ஆனாலும் இளகிவிடுங் கண்டால்

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கரும்பனையாள் பாங்கியும்நாய்க் கடுகனையாள் ஆனாள்

களித்தென்னை வளர்த்தவளும் புளித்தின்றாள் ஒத்தாள்
விரும்புகின்ற பெண்களெலாம் அரும்புகின்றார் அலர்தான்

வித்தகர்என் நடராயர் சித்தம்அறிந் திலனே.

20
4230 மணவாளர் வருகின்ற தருணம்இது மடவீர்

மறைந்திருமின் நீவிர்என்றேன் அதனாலோ அன்றி
எணமேது நுமக்கெனைத்தான் யார்தடுக்கக் கூடும்

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
குணநீடு பாங்கிஅவள் எம்மிறையை நினையார்

குணங்கொண்டாள் வளர்த்தவளும் பணம்விண்டாள் ஆனாள்
மணநீடு குழன்மடவார் குணநீடு கின்றார்

வள்ளல்நட ராயர்திரு உள்ளம்அறிந் திலனே.

21
4231 பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்

பார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ
எதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால்

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
மதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள்

மகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள்
துதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார்

சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.

22
4232 மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது

வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ
இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன்

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள்

முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள்
ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார்

ஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.

23
4233 கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக்

கூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ
ஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள்

நண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள்
தேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார்

திருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.

24

61. ஞானசிதம்பர வெண்பா: தில்லையும் பார்வதிபுரமும்

நேரிசை வெண்பா

4234. அன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால்
தென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை
யாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையே
ஆவகைஐந் தாய்ப்பதம்ஆ றார்ந்து.
1
4235 நீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர்
போர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே
ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி
மன்றொன்று வானை மகிழ்ந்து.
2
4236 ஈற்றில்ஒன்றாய் மற்றை இயல்வருக்க மாகியபேர்
ஏற்ற பறவை இருமைக்கும் - சாற்றுவமை
அன்றே தலைமகட்கா அம்பலவர் தம்பால்ஏ(கு)
என்றே எனக்குநினக் கும்.
3
4237 கைத்தலைமே லிட்டலையிற் கண்ணுடையான் கால்மலர்க்குக்
கைத்தலைமே லிட்டலையிற் கண்ணீர்கொண் - டுய்த்தலைமேல்
காணாயேல் உண்மைக் கதிநிலையைக் கைக்கணியாக்
காணாயே நெஞ்சே களித்து.
4
4238 கல்லோ மணலோ கனியோ கரும்போஎன்(று)
எல்லோமும் இங்கே இருக்கின்றோம் - சொல்லோம்
அதுவாய் அதன்பொருளாய் அப்பாலாய் யார்க்கும்
பொதுவாய் நடிக்கின்ற போது.
5
4239 அதுபார் அதிலே அடைந்துவதி மற்றாங்(கு)
அதில்ஏழை யைப்புரமெய் யன்பால் - அதிலே
நலமே வதிலேநின் னாவூர் திருவம்
பலமேவக் காட்டும் பரிசு.
6
4240 நம்பார் வதிபாக னம்புரத்தில் நின்றுவந்தோன்
அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் - வெம்பாது
பார்த்தால் அளிப்பான் தெரியுஞ் சிதம்பரம்நீ
பார்த்தாய்இப் பாட்டின் பரிசு.
7
4241 நடிப்பார் வதிதில்லை நற்கோ புரத்தின்
அடிப்பாவை யும்(286)வடக்கே ஆர்ந்து - கொடிப்பாய
நின்று வளர்மலைபோல் நெஞ்சேபார்த் தால்தெரியும்
இன்றெவ்விடத் தென்னிலிப்பாட் டில்.
8
(286). அடிப்பார்வையும் - முதற்பதிப்பு, சிவாசாரியர் அகவற் பதிப்பு., பொ. சு., பி. இரா.,
4242 பூமி பொருந்து புரத்தே(287) நமதுசிவ
காமிதனை வேட்டுக் கலந்தமர்ந்தான் - நேமி
அளித்தான்மால் கண்மலருக் கானந்தக் கூத்தில்
களித்தான் அவன்றான் களித்து.
9
(287). பூமிபொருந்துபுரம் - பார்வதிபுரம். பூமி - பார், பொருந்து - வதி.

62. சிவபதி விளக்கம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4243. உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே
விரைவளர் மலரே மலர்வளர் விரையே விரைமலர் வளர்தரு நறவே
கரைவளர் தருவே தருவளர் கரையே கரைதரு வளர்கிளர் கனியே
பரைவளர் ஒளியே ஒளிவளர் பரையே பரையொளி வளர்சிவ பதியே.
1
4244 ஒளிவளர் உயிரே உயிர்வளர் ஒளியே ஒளியுயிர் வளர்தரும் உணர்வே
வெளிவளர் நிறைவே நிறைவளர் வெளியே வெளிநிறை வளர்தரு விளைவே
வளிவளர் அசைவே அசைவளர் வளியே வளியசை வளர்தரு செயலே
அளிவளர் அனலே அனல்வளர் அளியே அளியனல் வளர்சிவ பதியே.
2
4245 அடிவளர் இயலே இயல்வளர் அடியே அடியியல் வளர்தரு கதியே
முடிவளர் பொருளே பொருள்வளர் முடியே முடிபொருள் வளர்சுக நிதியே
படிவளர் விதையே விதைவளர் படியே படிவிதை வளர்பல நிகழ்வே
தடிவளர் முகிலே முகில்வளர் தடியே தடிமுகில் வளர்சிவ பதியே.
3
4246 சிரம்வளர் முதலே முதல்வளர் சிரமே சிரமுதல் வளர்தரு செறிவே
தரம்வளர் நிலையே நிலைவளர் தரமே தரநிலை வளர்தரு தகவே
வரம்வளர் நிறையே நிறைவளர் வரமே வரநிறை வளர்தரு வயமே
பரம்வளர் பதமே பதம்வளர் பரமே பரபதம் வளர்சிவ பதியே.
4
4247 திருவளர் வளமே வளம்வளர் திருவே திருவளம் வளர்தரு திகழ்வே
உருவளர் வடிவே வடிவளர் உருவே உருவடி வளர்தரு முறைவே
கருவளர் அருவே அருவளர் கருவே கருவரு வளர்நவ கதியே
குருவளர் நெறியே நெறிவளர் குருவே குருநெறி வளர்சிவ பதியே.
5
4248 நிறைவளர் முறையே முறைவளர் நிறையே நிறைமுறை வளர்பெரு நெறியே
பொறைவளர் புவியே புவிவளர் பொறையே புவிபொறை வளர்தரு புனலே
துறைவளர் கடலே கடல்வளர் துறையே துறைகடல் வளர்தரு சுதையே
மறைவளர் பொருளே பொருள்வளர் மறையே மறைபொருள்வளர்சிவபதியே.
6
4249 தவம்வளர் தயையே தயைவளர் தவமே தவநிறை தயைவளர் சதுரே
நவம்வளர் புரமே புரம்வளர் நவமே நவபுரம் வளர்தரும் இறையே
துவம்வளர் குணமே குணம்வளர் துவமே துவகுணம் வளர்தரு திகழ்வே
சிவம்வளர் பதமே பதம்வளர் சிவமே சிவபதம் வளர்சிவ பதியே.
7
4250 நடம்வளர் நலமே நலம்வளர் நடமே நடநலம் வளர்தரும் ஒளியே
இடம்வளர் வலமே வலம்வளர் இடமே இடம்வலம் வளர்தரும் இசைவே
திடம்வளர் உளமே உளம்வளர் திடமே திடவுளம் வளர்தரு திருவே
கடம்வளர் உயிரே உயிர்வளர் கடமே கடமுயிர் வளர்சிவ பதியே.
8
4251 அதுவளர் அணுவே அணுவளர் அதுவே அதுவணு வளர்தரும் உறவே
விதுவளர் ஒளியே ஒளிவளர் விதுவே விதுஒளி வளர்தரு செயலே
மதுவளர் சுவையே சுவைவளர் மதுவே மதுவுறு சுவைவளர் இயலே
பொதுவளர் வெளியே வெளிவளர் பொதுவே பொதுவெளி வளர்சிவ பதியே.
9
4252 நிதிவளர் நிலமே நிலம்வளர் நிதியே நிதிநிலம் வளர்தரு நிறைவே
மதிவளர் நலமே நலம்வளர் மதியே மதிநலம் வளர்தரு பரமே
கதிவளர் நிலையே நிலைவளர் கதியே கதிநிலை வளர்தரு பொருளே
பதிவளர் பதமே பதம்வளர் பதியே பதிபதம் வளர்சிவ பதியே.
10

63. ஞானோபதேசம்

கலிவிருத்தம் ; பண்: நட்டராகம்

4253. கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே
விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே
தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே
உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
1
4254 வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே
வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே
அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே
ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
2
4255 அன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே
இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே
உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
3
4256 தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே
அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே
இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே
உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
4
4257 துப்பார் செஞ்சுடரே - அருட் - சோதி சுகக்கட லே
அப்பா என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
இப்பா ரிற்பசிக் கே - தந்த - இன்சுவை நல்லுண வே
ஒப்பாய் ஒப்பரி யாய் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
5
4258 என்றே யென்று ளுறுஞ் - சுட - ரேஎனை ஈன்றவ னே
நன்றே நண்பெனக் கே - மிக - நல்கிய நாயக னே
மன்றேர் மாமணி யே - சுக - வாழ்க்கையின் மெய்ப்பொரு ளே
ஒன்றே யென்றுணை யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
6
4259 திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே
கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே
மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம்
உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
7
4260 தடையா வுந்தவிர்த் தே - எனைத் - தாங்கிக்கொண் டாண்டவ னே
அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங்
கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்டகு ணக்குன்ற மே
உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
8
4261 பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே
அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய்
எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம்
உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
9
4262 நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே
பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே
என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்
உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
10

64. ஆரமுதப் பேறு

கலிவிருத்தம் ; பண்: நட்டராகம்

4263. விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே
கரைசேர் முக்கனி யே - கனி - யிற்சுவை யின்பய னே
பரைசேர் உள்ளொளி யே - பெரும் - பற்றம்ப லநடஞ் செய்
அரைசே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
1
4264 விண்ணார் செஞ்சுட ரே - சுடர் - மேவிய உள்ளொளி யே
தண்ணார் வெண்மதி யே - அதில் - தங்கிய தண்ணமு தே
கண்ணார் மெய்க்கன லே - சிவ - காமப்பெண் காதல னே
அண்ணா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
2
4265 துப்பார் செஞ்சடை யாய் - அருட் - சோதிச் சுகக்கட லே
செப்பா மேனிலைக் கே - சிறி - யேனைச் செலுத்திய வா
எப்பா லும்புக ழும் - பொது - இன்ப நடம்புரி யும்
அப்பா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
3
4266 மெய்யா மெய்யரு ளே - என்று - மேவிய மெய்ப்பொரு ளே
கையா ருங்கனி யே - நுதற் - கண்கொண்ட செங்கரும் பே
செய்யாய் வெண்ணிறத் தாய் - திருச் - சிற்றம்ப லநடஞ் செய்
ஐயா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
4
4267 பொறிவே றின்றி நினை - நிதம் - போற்றும் புனிதரு ளே
குறிவே றின்றி நின்ற - பெருஞ் - சோதிக் கொழுஞ்சுட ரே
செறிவே தங்களெ லாம் - உரை - செய்ய நிறைந்திடும் பேர்
அறிவே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
5
4268 முத்தா முத்தரு ளே - ஒளிர் - கின்ற முழுமுத லே
சித்தா சித்திஎ லாந் - தர - வல்ல செழுஞ்சுட ரே
பித்தா பித்தனெ னை - வலிந் - தாண்ட பெருந்தகை யே
அத்தா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
6
4269 தன்னே ரில்லவ னே - எனைத் - தந்த தயாநிதி யே
மன்னே மன்றிடத் தே - நடஞ் - செய்யுமென் வாழ்முத லே
பொன்னே என்னுயி ரே - உயி - ருள்நிறை பூரண மே
அன்னே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
7
4270 ஒளியே அவ்வொளி யின் - நடு - உள்ளொளிக் குள்ளொளி யே
வெளியே எவ்வெளி யும் - அடங் - கின்ற வெறுவெளி யே
தளியே அம்பலத் தே - நடஞ் - செய்யுந் தயாநிதி யே
அளியே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
8
4271 மருளேய் நெஞ்சக னேன் - மன - வாட்டமெ லாந்தவிர்த் தே
தெருளே யோர்வடி வாய் - உறச் - செய்த செழுஞ்சுட ரே
பொருளே சிற்சபை வாழ் - வுறு - கின்றவென் புண்ணிய னே
அருளே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
9
4272 முன்பே என்றனை யே - வலிந் - தாட்கொண்ட முன்னவ னே
இன்பே என்னுயி ரே - எனை -ஈன்ற இறையவ னே
பொன்பே ரம்பல வா - சிவ - போகஞ்செய் சிற்சபை வாழ்
அன்பே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
10
4273 பவனே வெம்பவ நோய் - தனைத் - தீர்க்கும் பரஞ்சுட ரே
சிவனே செம்பொரு ளே - திருச் - சிற்றம் பலநடிப் பாய்
தவநே யம்பெறு வார் - தமைத் - தாங்கி யருள்செய வல்
லவனே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
11
4274 தேனாய்த் தீம்பழ மாய்ச் - சுவை - சேர்கரும் பாயமு தம்
தானாய் அன்பரு ளே - இனிக் - கின்ற தனிப்பொரு ளே
வானாய்க் காலன லாய்ப் - புன - லாயதில் வாழ்புவி யாய்
ஆனாய் தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
12
4275 பொடியேற் கும்புய னே - அருட் - பொன்னம் பலத்தர சே
செடியேற் கன்றளித் தாய் - திருச் - சிற்றம் பலச்சுட ரே
கடியேற் கன்னையெ னுஞ் - சிவ - காமக் கொடையுடை யாய்
அடியேற் கின்றளித் தாய் - அரு - ளாரமு தந்தனை யே.
13

65. உபதேச வினா

கலித்தாழிசை

4276. வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும்

மேவும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
நாதாந்தத் திருவீதி நடப்பாயோ தோழி

நடவாமல் என்மொழி கடப்பாயோ தோழி.

1
4277 தொம்பத உருவொடு தத்பத வெளியில்

தோன்றசி பதநடம் நான்காணல் வேண்டும்
எம்பதமாகி இசைவாயோ தோழி

இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி.

2
4278 சின்மய வெளியிடைத் தன்மய மாகித்

திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
என்மய மாகி இருப்பாயோ தோழி

இச்சை மயமாய் இருப்பாயோ(288) தோழி.

3
(288). மயமாய்ப் பொருப்பாயோ - ஆ. பா. பதிப்பு.
4279 நவநிலை மேற்பர நாதத் தலத்தே

ஞானத் திருநடம் நான்காணல் வேண்டும்
மவுனத் திருவீதி வருவாயோ தோழி

வாராமல் வீண்பழி தருவாயோ தோழி.

4
4280 ஆறாறுக் கப்புற மாகும் பொதுவில்

அதுவது வாநடம் நான்காணல் வேண்டும்
ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி

ஏறி இழிந்திங் கிறப்பாயோ(289) தோழி.

5
(289). இழிந்திங் கிருப்பாயோ - முதற்பதிப்பு.
4281 வகார வெளியில் சிகார உருவாய்

மகாரத் திருநடம் நான்காணல் வேண்டும்
விகார உலகை வெறுப்பாயோ தோழி

வேறாகி என்சொல் மறுப்பாயோ தோழி.

6
4282 நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு

நடுவாம் பொதுநடம் நான்காணல் வேண்டும்
சூதாந்தற் போதத்தைச் சுடுவாயோ தோழி

துட்டநெறியில் கெடுவாயோ தோழி.

7
4283 அறிவில் அறிவை அறியும் பொதுவில்

ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்
செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி

செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி.

8
4284 என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில்

இன்பத் திருநடம் நான்காணல் வேண்டும்
நின்னைவிட் டென்னோடே நிலைப்பாயோ தோழி

நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி.

9
4285 துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொதுவில்

ஜோதித் திருநடம் நான்காணல் வேண்டும்
கரியைக்கண் டாங்கது காண்பாயோ தோழி

காணாது போய்ப்பழி(290) பூண்பாயோ தோழி.

10
(290) பொய்ப்பணி - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா.,
4286 தத்துவத் துட்புறந் தானாம் பொதுவில்

சத்தாந் திருநடம் நான்காணல் வேண்டும்
கொத்தறு வித்தைக் குறிப்பாயோ தோழி

குறியா துலகில் வெறிப்பாயோ தோழி

11

66. நெஞ்சொடு நேர்தல்

கலித்தாழிசை

4287. அடங்குநாள் இல்லா தமர்ந்தானைக் காணற்கே(291)
தொடங்குநாள் நல்லதன் றோ - நெஞ்சே
தொடங்குநாள் நல்லதன் றோ.
1
(291) காணவே - பி. இரா., பதிப்பு
4288 வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே
நல்லநாள் எண்ணிய நாள் - நெஞ்சே
நல்லநாள் எண்ணிய நாள்.
2
4289 காலங் கடந்த கடவுளைக் காணற்குக்
காலங் கருதுவ தேன் - நெஞ்சே
காலங் கருதுவ தேன்.
3
4290 ஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக்
காலங் கருதுவ தேன் - நெஞ்சே
காலங் கருதுவ தேன்.
4
4291 தடையாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே
தடையாதும் இல்லைகண் டாய் - நெஞ்சே
தடையாதும் இல்லைகண் டாய்.
5
4292 கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப்
பையுள்(292) உனக்கென்னை யோ - நெஞ்சே
பையுள் உனக்கென்னை யோ.
6
(292). பையுள் - வருத்தம். முதற்பதிப்பு.
4293 என்னுயிர் நாதனை யான்கண் டணைதற்கே
உன்னுவ தென்னைகண் டாய் - நெஞ்சே
உன்னுவ தென்னைகண் டாய்.
7
4294 நான்பெற்ற செல்வத்தை நான்பற்றிக் கொள்ளற்கே
ஏன்பற்று வாயென்ப தார் - நெஞ்சே
ஏன்பற்று வாயென்ப தார்.
8
4295 தத்துவா தீதத் தலைவனைக் காணற்குத்
தத்துவ முன்னுவ தேன் - நெஞ்சே
தத்துவ முன்னுவ தேன்.
9
4296 ஒக்க அமுதத்தை உண்டோ ம் இனிச்சற்றும்
விக்கல் வராதுகண் டாய் - நெஞ்சே
விக்கல் வராதுகண் டாய்.
10

67. அஞ்சாதே நெஞ்சே

சிந்து

பல்லவி
4297. அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே.
1
கண்ணிகள்
4298 வஞ்சமி லார்நாம்(293) வருந்திடில் அப்போதே
அஞ்சலென் பார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 1
(293). வஞ்சமிலா நாம் - முதற்பதிப்பு., பொ. சு; பி. இரா. பதிப்பு.
4299 துய்யர் அருட்பெருஞ் ஜோதியார் நம்முடை
அய்யர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 2
4300 மண்ணில் நமையாண்ட வள்ளலார் நம்முடை
அண்ணல் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 3
4301 இப்புவி யில்நம்மை ஏன்றுகொண் டாண்டநம்
அப்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 4
4302 சித்தர் எலாம்வல்ல தேவர் நமையாண்ட
அத்தர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 5
4303 சோதி அருட்பெருஞ் சோதியார் நம்முடை
ஆதி இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 6
4304 தாண்டவ னார்என்னைத் தான்தடுத் தாட்கொண்ட
ஆண்டவ னார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 7
4305 வன்பர் மனத்தை மதியா தவர்நம
தன்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 8
4306 தெருளுடை யார்எலாஞ் செய்யவல் லார்திரு
அருளுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 9
4307 நம்மை ஆட்கொள்ள நடம்புரி வார்நம
தம்மை யினோடிதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 10
4308 தன்னைஒப் பார்சிற் சபைநடஞ் செய்கின்றார்
அன்னைஒப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 11
4309 பாடுகின் றார்க்கருட் பண்பினர் ஞானக்கூத்
தாடுகின் றார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 12
4310 காதரிப் பார்கட்குக் காட்டிக் கொடார்நம்மை
ஆதரிப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 13
4311 நீளவல் லார்க்குமேல் நீளவல்லார் நம்மை
ஆளவல் லார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 14
4312 இன்புடை யார்நம் இதயத் தமர்ந்தபே
ரன்புடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 15
4313 உபய பதத்தைநம் உச்சிமேற் சூட்டிய
அபயர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 16
4314 வேண்டுகொண் டார்என்னை மேல்நிலைக் கேற்றியே
ஆண்டுகொண் டார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 17
4315 எச்சம்பெ றேல்மக னேஎன்றென் னுள்உற்ற
அச்சம் தவிர்த்தவர் அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 18
4316 நமுதன் முதற்பல நன்மையு மாம்ஞான
அமுதர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 19
4317 செடிகள் தவிர்த்தருட் செல்வ மளிக்கின்ற
அடிகள் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 20
4318 விரசுல கெல்லாம் விரித்தைந் தொழில்தரும்
அரசுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 21
4319 செறிவுடை யார்உளத் தேநடஞ் செய்கின்ற
அறிவுரு வார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 22
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
அஞ்சா தே நெஞ்சே
அஞ்சா தே


68. ஆடிய பாதம்

சிந்து

பல்லவி
4320. ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம்.
1
கண்ணிகள்
4321 பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர்(294) நேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம்
ஆடிய 1
(294) மாதவன் - ஆ. பா. பாதிப்பு.
4322 தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம்
வாரா வரவாகி வந்தபொற் பாதம்
வஞ்ச மனத்தில் வசியாத பாதம்.
ஆடிய 2
4323 ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்
நாரா யணன்விழி நண்ணிய பாதம்
நான்புனை பாடல் நயந்தபொற் பாதம்.
ஆடிய 3
4324 நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம்
மந்திர யந்திர தந்திர பாதம்.
ஆடிய 4
4325 எச்சம யத்தும் இலங்கிய பாதம்
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்
ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம்
ஆடிய 5
4326 தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
தெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம்
மூவரும் காணா முழுமுதற் பாதம்
முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம்.
ஆடிய 6
4327 துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
சுகமய மாகிய சுந்தரப் பாதம்
பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்
பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம்.
ஆடிய 7
4328 சாகா வரந்தந்த தாரகப் பாதம்
சச்சிதா னந்த சதோதய பாதம்
தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம்.
ஆடிய 8
4329 ஓங்கார பீடத் தொளிர்கின்ற பாதம்
ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்
துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம்.
ஆடிய 9
4330 ஐவண்ண முங்கொண்ட அற்புதப் பாதம்
அபயர்(295) எல்லார்க்கும் அமுதான பாதம்
கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம்
கண்ணும் கருத்தும் கலந்தபொற் பாதம்.
ஆடிய 10
(295) ஐயர் - ச. மு. க. பதிப்பு.
4331 ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம்
சத்திய ஞான தயாநிதி பாதம்.
ஆடிய 11
4332 தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
தந்தையு மாகித் தயவுசெய் பாதம்
ஓங்கிஎன் னுள்ளே உறைகின்ற பாதம்
உண்மை விளங்க உரைத்தபொற் பாதம்.
ஆடிய 12
4333 எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
இறவா நிலையில் இருத்திய பாதம்
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம்.
ஆடிய 13
4334 ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்
ஆதி அனாதியும் ஆகிய பாதம்
மாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம்
மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம்.
ஆடிய 14
4335 அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்
பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம்.
ஆடிய 15
4336 நாரண னாதியர் நாடரும் பாதம்
நான்தவத் தாற்பெற்ற நற்றுணைப் பாதம்
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்
ஆசைவிட் டார்க்கே அணிமையாம் பாதம்.
16
ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம்.


69. அபயம் அபயம்

சிந்து

பல்லவி
4337. அபயம் அபயம் அபயம். 1
கண்ணிகள்
4338 உபயம தாய்என் உறவாய்ச் சிதம்பரச்
சபையில் நடஞ்செயும் சாமி பதத்திற்கே(296)
அபயம் 1
(296) பாதத்திற்கே - பி. இரா., ஆ. பா.
4339 எம்பலத் தால்எம்மை ஏன்றுகொ ளத்தில்லை
அம்பலத் தாடும்எம் ஐயர் பதத்திற்கே
அபயம் 2
4340 தவசிதம் பரமாகித் தன்மய மாய்ச்செயும்
சிவசிதம் பரமகா தேவர் பதத்திற்கே
அபயம் 3
4341 ஒன்றும் பதத்திற் குயர்பொரு ளாகியே
என்றும்என் உள்ளத் தினிக்கும் பதத்திற்கே
அபயம் 4
4342 வானந்த மாந்தில்லை மன்றிடை என்றுநின்
றானந்தத் தாண்டவ மாடும் பதத்திற்கே
அபயம் 5
4343 நாரா யணனொடு நான்முக னாதியர்
பாரா யணம்செயும் பதும பதத்திற்கே
அபயம் 6
4344 அன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத்
தின்ப மளிக்குநம் ஈசர் பதத்திற்கே
அபயம் 7
4345 குற்றம் செயினும் குணமாகக் கொண்டுநம்
அற்றம் தவிர்க்குநம் அப்பர் பதத்திற்கே
அபயம் 8
4346 செம்பொருள் ஆகிச் சிதம்பரத் தேஎன்றும்
நம்பொருள் ஆன நடேசர் பதத்திற்கே
அபயம் 9
4347 வெச்சென்ற மாயை வினையாதி யால்வந்த
அச்சம் தவிர்க்குநம் ஐயர் பதத்திற்கே
அபயம் 10
4348 எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்
புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே
அபயம் 11
4349 மன்னம் பரத்தே வடிவில் வடிவாகிப்
பொன்னம் பலத்தாடும் பொன்னடிப் போதுக்கே
அபயம் 12
4350 நாத முடியில்/(297) நடம்புரிந் தன்பர்க்குப்
போதம் அளிக்கின்ற பொன்னடிப் போதுக்கே
அபயம் 1313
(297) முடிவில் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
4351 உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான
சச்சி தானந்தத் தனிநடப் போதுக்கே
அபயம் 14
4352 சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற
புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே
அபயம் 15
அபயம் அபயம் அபயம்.


70. அம்பலவாணர் வருகை

சிந்து

பல்லவி
4353. வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
வல்லி மணாளரே வாரீர்
மணிமன்ற வாணரே வாரீர்.
1
கண்ணிகள்
4354 அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு

அம்பல வாணரே வாரீர்

அன்புடை யாளரே வாரீர்.

வாரீர் 1
4355 அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய

அந்தண ரேஇங்கு வாரீர்

அம்பலத் தையரே வாரீர்.

வாரீர் 2
4356 அன்புரு வானவர் இன்புற உள்ளே

அறிவுரு வாயினீர் வாரீர்

அருட்பெருஞ் ஜோதியீர் வாரீர்.

வாரீர் 3
4357 அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்

அரும்பெருஞ் சித்தரே வாரீர்

அற்புத ரேஇங்கு வாரீர்.

வாரீர் 4
4358 அம்மையு மாய்எனக் கப்பனு மாகிஎன்

அன்பனு மாயினீர் வாரீர்

அங்கண ரேஇங்கு வாரீர்.

வாரீர் 5
4359 அல்லல் அறுத்தென் அறிவை விளக்கிய

அம்பல வாணரே வாரீர்

செம்பொரு ளாயினீர் வாரீர்.

வாரீர் 6
4360 அப்பணி பொன்முடி அப்பனென் றேத்துமெய்

அன்பருக் கன்பரே வாரீர்

இன்பம் தரஇங்கு வாரீர்.

வாரீர் 7
4361 அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும்

அடிக்கம லத்தீரே வாரீர்

நடிக்கவல் லீர்இங்கு வாரீர்.

வாரீர் 8
4362 அண்டர்க் கரும்பதந் தொண்டர்க் கெளிதில்

அளித்திட வல்லீரே வாரீர்

களித்தென்னை ஆண்டீரே வாரீர்.

வாரீர் 9
4363 அம்பர மானசி தம்பர நாடகம்

ஆடவல் லீர்இங்கு வாரீர்

பாடல்உ வந்தீரே(298) வாரீர்.

வாரீர் 10
(298) பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
4364 ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்

அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்

ஆனந்த நாடரே வாரீர்.

வாரீர் 11
4365 ஆகம வேதம் அனேக முகங்கொண்

டருச்சிக்கும் பாதரே வாரீர்

ஆருயிர் நாதரே வாரீர்.

வாரீர் 12
4366 ஆசறும் அந்தங்கள் ஆறும் புகன்றநல்

ஆரிய ரேஇங்கு வாரீர்

ஆனந்தக் கூத்தரே வாரீர்

. வாரீர் 13
4367 ஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல்

ஆரிய ரேஇங்கு வாரீர்

ஆனந்தக் கூத்தரே வாரீர்.

வாரீர் 14
4368 ஆரமு தாகிஎன் ஆவியைக் காக்கின்ற

ஆனந்த ரேஇங்கு வாரீர்

ஆடல்வல் லீர்இங்கு வாரீர்.

வாரீர் 15
4369 ஆதர வாய்என் அறிவைத் தெளிவித்

தமுதம் அளித்தீரே வாரீர்

ஆடிய பாதரே வாரீர்.

வாரீர் 16
4370 ஆதார மீதானத் தப்பாலும் காண்டற்

கரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்

கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர்.

வாரீர் 17
4371 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்

ஜோதிய ரேஇங்கு வாரீர்

வேதிய ரேஇங்கு வாரீர்.

வாரீர் 18
4372 ஆடல்கொண் டீர்திரு வம்பலத் தேஎன்றன்

பாடல்கொண் டீர்இங்கு வாரீர்

கூடவல் லீர்இங்கு வாரீர்.

வாரீர் 19
4373 ஆக்கம் கொடுத்தென்றன் தூக்கம் தடுத்தஎன்

ஆண்டவ ரேஇங்கு வாரீர்

தாண்டவ ரேஇங்கு வாரீர்.

வாரீர் 20
4374 ஆபத்தை நீக்கிஓர் தீபத்தை ஏற்றிஎன்

ஆணவம் போக்கினீர் வாரீர்

காணவந் தேன்இங்கு வாரீர்.

வாரீர் 21
4375 இதுதரு ணம்தரு ணம்தரு ணம்என்

இறையவ ரேஇங்கு வாரீர்

இடர்தவிர்த் தாட்கொண்டீர் வாரீர்.

வாரீர் 22
4376 இச்சையின் வண்ணம் எனக்கருள் செய்ய

இதுதரு ணம்இங்கு வாரீர்

இன்னமு தாயினீர் வாரீர்.

வாரீர் 23
4377 இன்பம் கொடுத்தேஎன் துன்பம் கெடுத்துள்

இருக்கின்ற நாதரே வாரீர்

இருக்கின் பொருளானீர் வாரீர்.

வாரீர் 24
4378 இரவும் பகலும் இதயத்தி லூறி

இனிக்கும் அமுதரே வாரீர்

இனித்தரி யேன்இங்கு வாரீர்.

வாரீர் 25
4379 இன்னும்தாழ்த் தங்கே இருப்ப தழகன்று

இதுதரு ணம்இங்கு வாரீர்

இருமையும் ஆயினீர் வாரீர்.

வாரீர் 26
4380 இடர்தவிர்த் தின்பம் எனக்களித் தாளற்

கிதுதரு ணம்இங்கு வாரீர்

இனியவ ரேஇங்கு வாரீர். வாரீர்

27
4381 இறையும் பொறுப்பரி தென்னுயிர் நாதரே

இத்தரு ணம்இங்கு வாரீர்

இதநடஞ் செய்கின்றீர் வாரீர்.

வாரீர் 28
4382 இம்மையி லேஎனக் கம்மையின் இன்பம்

இதுஎன் றளித்தீரே வாரீர்

இதயத் திருந்தீரே வாரீர்.

வாரீர் 29
4383 இங்கங்கென் னாமலே எள்ளுக்குள் எண்ணெய்போல்

எங்கும் நிறைந்தீரே வாரீர்

இந்தெழில் வண்ணரே வாரீர்.

வாரீர் 30
4384 இணைஒன்றும் இல்லா இணையடி என்தலை

ஏறவைத் தீர்இங்கு வாரீர்

இறுதியி லீர்இங்கு வாரீர்.

வாரீர் 31
4385 ஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக்

கின்பமும் ஆயினீர் வாரீர்

அன்பருக் கன்பரே வாரீர்.

வாரீர்32
4386 ஈனம் அறுத்துமெய்ஞ் ஞான விளக்கென்

இதயத்தில் ஏற்றினீர் வாரீர்

உதயச் சுடரினீர் வாரீர்.

வாரீர் 33
4387 ஈடறி யாதமெய் வீடுதந் தன்பரை

இன்புறச் செய்கின்றீர் வாரீர்

வன்பர்க் கரியீரே வாரீர்.

வாரீர் 34
4388 ஈதியல் என்றுநின் றோதிய வேதத்திற்

கெட்டா திருந்தீரே வாரீர்

நட்டார்க் கெளியீரே வாரீர்.

வாரீர்35
4389 ஈசர் எனும்பல தேசர்கள் போற்றும்ந

டேசரே நீர்இங்கு வாரீர்

நேசரே நீர்இங்கு வாரீர்.

வாரீர் 36
4390 ஈசர் பலிக்குழல்(299) நேசர்என் றன்பர்கள்

ஏசநின் றீர்இங்கு வாரீர்

நாசமில் லீர்இங்கு வாரீர்.

வாரீர் 37
(299) ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா,
4391 ஈறறி யாமறை யோன்என் றறிஞர்

இயம்பநின் றீர்இங்கு வாரீர்

வயந்தரு வீர்இங்கு வாரீர்.

வாரீர் 38
4392 ஈதல்கண் டேமிகக் காதல்கொண் டேன்எனக்

கீதல்செய் வீர்இங்கு வாரீர்

ஓதரி யீர்இங்கு வாரீர்.

வாரீர் 39
4393 ஈடணை அற்றநெஞ் சூடணை உற்றுமற்

றீடணை யீர்இங்கு வாரீர்

ஆடவல் லீர்இங்கு வாரீர்.

வாரீர்40
4394 ஈண்டறி வோங்கிடத் தூண்டறி வாகிஉள்

ஈண்டுகின் றீர்இங்கு வாரீர்

ஆண்டவ ரேஇங்கு வாரீர்.

வாரீர் 41
4395 உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக்

குள்ள துரைசெய்தீர் வாரீர்

வள்ளல் விரைந்திங்கு வாரீர்.

வாரீர் 42
4396 உருவாய் அருவாய் உருவரு வாய்அவை

ஒன்றுமல் லீர்இங்கு வாரீர்

என்றும்நல் லீர்இங்கு வாரீர்.

வாரீர் 43
4397 உறவும் பகையும் உடைய நடையில்

உறவும்எண் ணேன்இங்கு வாரீர்

பிறவுநண் ணேன்இங்கு வாரீர்.

வாரீர் 44
4398 உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென்

உள்ளத் திருந்தீரே வாரீர்

விள்ளற் கரியீரே வாரீர்.

வாரீர் 45
4399 உய்யவல் லார்க்கருள் செய்யவல் லீர்நானும்

உய்யவல் லேன்இங்கு வாரீர்

செய்யவல் லீர்இங்கு வாரீர்.

வாரீர் 46
4400 உடையவ ரார்இக் கடையவ னேனுக்

குடையவ ரேஇங்கு வாரீர்

சடையவ ரே(300) இங்கு வாரீர்.

வாரீர்47
(300) தடை தவிர்ப்பீர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
4401 உறங்கி இறங்கும் உலகவர் போலநான்

உறங்கமாட் டேன்இங்கு வாரீர்

இறங்கமாட் டேன்இங்கு வாரீர்.

வாரீர் 48
4402 உண்டுடுத் தின்னும் உழலமாட் டேன்அமு

துண்டி விரும்பினேன் வாரீர்

உண்டி தரஇங்கு வாரீர்.

வாரீர் 49
4403 உன்னுதோ றுன்னுதோ றுள்ளே இனிக்கின்ற

உத்தம ரேஇங்கு வாரீர்

உற்ற துணையானீர் வாரீர்.

வாரீர் 50
4404 உம்மாணை உம்மாணை உம்மைஅல் லால்எனக்

குற்றவர் மற்றிலை வாரீர்

உற்றறிந் தீர்இங்கு வாரீர்.

வாரீர் 51
4405 ஊன நடந்தவிர்த் தான நடங்காட்டு

மோன நடேசரே வாரீர்

ஞான நடேசரே வாரீர்.

வாரீர் 52
4406 ஊருமில் லீர்ஒரு பேருமில் லீர்அறி

வோருமில் லீர்இங்கு வாரீர்

யாருமில் லீர்இங்கு வாரீர்.

வாரீர் 53
4407 ஊறு சிவானந்தப் பேறு தருகின்ற

வீறுடை யீர்இங்கு வாரீர்

நீறுடை யீர்இங்கு வாரீர்.

வாரீர் 54
4408 ஊன்றுநும் சேவடி சான்று தரிக்கிலேன்

ஏன்றுகொள் வீர்இங்கு வாரீர்

ஆன்றவ ரேஇங்கு வாரீர்.

வாரீர் 55
4409 ஊற்றை உடம்பிது மாற்றுயர் பொன்னென

ஏற்றம் அருள்செய்வீர் வாரீர்

தேற்றம் அருள்செய்வீர் வாரீர்.

வாரீர் 56
4410 ஊடல்இல் லீர்எனைக் கூடல்வல் லீர்என்னுள்

பாடல்சொல் வீர்இங்கு வாரீர்

ஆடல்நல் லீர்இங்கு வாரீர்.

வாரீர் 57
4411 ஊக்கம் கொடுத்தென்றன் ஏக்கம் கெடுத்தருள்

ஆக்க மடுத்தீரே வாரீர்

தூக்கம் தவிர்த்தீரே வாரீர்.

வாரீர் 58
4412 ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்துண்டென்

றோமை அறிவித்தீர் வாரீர்

சேமஞ் செறிவித்தீர் வாரீர்.

வாரீர் 59
4413 ஊக மிலேன்பெற்ற தேகம் அழியாத

யோகம் கொடுத்தீரே வாரீர்

போகம் கொடுத்தீரே வாரீர்.

வாரீர் 60
4414 ஊதியம் தந்தநல் வேதிய ரேஉண்மை

ஓதிய நாதரே வாரீர்

ஆதிஅ னாதியீர் வாரீர்.

வாரீர் 61
4415 என்குறை தீர்த்தென்னுள் நன்குறை வீர்இனி

என்குறை என்முன்னீர் வாரீர்

தன்குறை இல்லீரே வாரீர்.

வாரீர் 62
4416 என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர்

இன்னுயிர் ஆயினீர் வாரீர்

என்னுயிர் நாதரே வாரீர்.

வாரீர் 63
4417 என்கண் அருள்செய்தென் புன்கண் விலக்கிய

என்கண் ணனையீரே வாரீர்

மின்கண் ணுதலீரே வாரீர்.

வாரீர் 64
4418 எல்லா உயிர்களும் நல்லார் எனத்தொழும்

எல்லாம்வல் லீர்இங்கு வாரீர்

சொல்லா நிலையினீர் வாரீர்.

வாரீர் 65
4419 எட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல்

எட்டும் படிசெய்தீர் வாரீர்

எட்டுரு வாயினீர் வாரீர்301.

வாரீர்66
(301) எட்டும் இரண்டும் - பத்து (ய). ய - ஆன்மா.
எட்டுரு - அஷ்டமூர்த்தம் எட்டு உரு-(எட்டு தமிழில் எழுத `அஒ ஆகும்)
அகர வடிவம். எட்டுரு - அரு. ச. மு. க
4420 என்று கண்டாய்இது(302) நன்றுகொண் டாளுக

என்றுதந் தீர்இங்கு வாரீர்

அன்றுவந் தீர்இன்று வாரீர்.

வாரீர் 67
(302) கண்டாமிது - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
4421 எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர்

இச்சம யம்இங்கு வாரீர்

மெய்ச்சம யந்தந்தீர் வாரீர்.

வாரீர் 68
4422 என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை

இன்பால் பெறுகென்றீர் வாரீர்

தென்பால் முகங்கொண்டீர் வாரீர்.

வாரீர் 69
4423 எச்ச உரையன்றென் இச்சைஎல் லாம்உம

திச்சைகண் டீர்இங்கு வாரீர்

அச்சம்த விர்த்தீரே வாரீர்.

வாரீர் 70
4424 எண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர்

எண்ணம் எனக்கில்லை வாரீர்

வண்ணம் அளிக்கின்றீர் வாரீர்.

வாரீர் 71
4425 ஏராய நான்முகர் நாராய ணர்மற்றும்

பாராய ணம்செய்வீர் வாரீர்

ஊராயம் ஆயினீர் வாரீர்.

வாரீர் 72
4426 ஏம மிகுந்திரு வாம சுகந்தரும்

ஏம சபேசரே வாரீர்

சோம சிகாமணி வாரீர்.

வாரீர் 73
4427 ஏத மிலாப்பர நாத முடிப்பொருள்

ஏதது சொல்லுவீர் வாரீர்

ஈதல் உடையீரே வாரீர்.

வாரீர் 74
4428 ஏக பராபர யோக வெளிக்கப்பால்

ஏக வெளிநின்றீர் வாரீர்

ஏகர் அனேகரே வாரீர்.

வாரீர் 75
4429 ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல்

ஏறவைத் தீர்இங்கு வாரீர்

தேறவைத் தீர்இங்கு வாரீர்.

வாரீர் 76

4430
ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளதென்

றேகாந்தம் சொல்லினீர் வாரீர்

தேகாந்தம் இல்லீரே வாரீர்.

வாரீர் 77
4431 ஏகாத கல்விதான் சாகாத கல்வியென்

றேகாத லாற்சொன்னீர் வாரீர்

வேகாத காலினீர் வாரீர்.

வாரீர்78
4432 ஏடா யிரமென்னை கோடா மொழிஒன்றே

ஏடாஎன் றீர்இங்கு வாரீர்

ஈடாவார் இல்லீரே வாரீர்.

வாரீர் 79
4433 ஏசாத தந்திரம் பேசாத மந்திரம்

ஈசான மேலென்றீர் வாரீர்

ஆசாதி இல்லீரே வாரீர்.

வாரீர் 80
4434 ஏனென்பார் வேறிலை நான்அன்பாற் கூவுகின்

றேன்என்பால் ஏனென்பீர் வாரீர்

ஆனின்பால் ஆடுவீர் வாரீர்.

வாரீர் 81
4435 ஐந்து மலங்களும் வெந்து விழஎழுத்

தைந்துஞ் செயும்என்றீர் வாரீர்

இந்து சிகாமணி வாரீர்.

வாரீர் 82
4436 ஐயமுற் றேனைஇவ் வையங் கரியாக

ஐயம் தவிர்த்தீரே வாரீர்

மெய்யம் பலத்தீரே வாரீர்.

வாரீர் 83
4437 ஐயர் நடம்புரி மெய்யர்என் றேஉணர்ந்

தையர் தொழநின்றீர் வாரீர்

துய்யர் உளநின்றீர் வாரீர்.

வாரீர் 84
4438 ஐவணங் காட்டுநும் மெய்வணம் வேட்டுநின்

றைவணர் ஏத்துவீர் வாரீர்

பொய்வணம் போக்குவீர் வாரீர்.

வாரீர் 85
4439 ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும்

ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர்

நன்றேநின் றீர்இங்கு வாரீர்.

வாரீர் 86
4440 ஒப்பாரில் லீர்உமக் கிப்பாரில் பிள்ளைநான்

ஒப்பாரி அல்லகாண் வாரீர்

முப்பாழ் கடந்தீரே வாரீர்

. வாரீர் 87
4441 ஒத்த இடந்தன்னில் நித்திரை செய்என்றீர்

ஒத்த இடங்காட்ட வாரீர்(303)

சித்த சிகாமணி வாரீர்.

வாரீர் 88
(303) 'ஒத்த இடத்தில் நித்திரை செய்' என்பது ஔவையார் அருளிய கொன்றை
வேந்தன்.'ஒத்த இடம் - மேடுபள்ள மில்லாத இடம், மனம் ஒத்த இடம், நினைப்பு
மறப்பு அற்ற இடம், தனித்த இடம், தத்துவாதீதநிலை,' என்பது ச. மு. க. குறிப்பு.
இருவினையும் ஒத்த இடம், இருவினைஒப்புநிலை என்பதே பொருத்தமாம்.
4442 ஒட்டுமற் றில்லைநான் விட்டுப் பிரிகலேன்

ஒட்டுவைத் தேனும்மேல் வாரீர்

எட்டுக் குணத்தீரே வாரீர்.

வாரீர் 89
4443 ஒருமை நிலையில் இருமையும் தந்த

ஒருமையி னீர்இங்கு வாரீர்

பெருமையி னீர்இங்கு வாரீர்.

வாரீர் 90
4444 ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர்

உண்மைசொன் னேன்இங்கு வாரீர்

பெண்மை(304) இடங்கொண்டீர் வாரீர்.

வாரீர் 91
(304) வண்மை - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.,
4445 ஓங்கார நாடகம் பாங்காகச்(305) செய்கின்ற

ஓங்கார நாடரே வாரீர்

ஆங்கார நீக்கினீர் வாரீர்.

வாரீர் 92
(305) பாங்காரச் - பி. இரா.
4446 ஓங்கும்பிண் டாண்டங்கள் தாங்கும் பெருவெளி

ஓங்கு நடேசரே வாரீர்

பாங்குசெய் வீர்இங்கு வாரீர்.

வாரீர் 93
4447 ஓசையின் உள்ளேஓர் ஆசை(306) உதிக்கமெல்(307)

ஓசைசெய் வித்தீரே வாரீர்

பாசம் அறுத்தீரே வாரீர்.

வாரீர் 94
(306) ஓசை - பிரதிபேதம். ஆ. பா.
307. மேல் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
4448 ஓரா துலகினைப் பாரா திருநினக்

கோரா வகைஎன்றீர் வாரீர்

பேரா நிலைதந்தீர் வாரீர்.

வாரீர் 95
4449 ஓடாது மாயையை நாடாது நன்னெறி

ஊடா திருஎன்றீர் வாரீர்

வாடா திருஎன்றீர் வாரீர்.

வாரீர்96
4450 ஓலக் கபாடத்தைச் சாலத் திறந்தருள்

ஓலக்கங் காட்டினீர் வாரீர்

காலக் கணக்கில்லீர் வாரீர்.

வாரீர் 97
4451 ஓடத்தின் நின்றொரு மாடத்தில் ஏற்றிமெய்

யூடத்தைக் காட்டினீர் வாரீர்

வேடத்தைப் பூட்டினீர் வாரீர்.

வாரீர் 98
4452 ஓமத்தி லேநடுச் சாமத்தி லேஎனை

ஓமத்தன்(308) ஆக்கினீர் வாரீர்

சாமத்த(309) நீக்கினீர் வாரீர்.

வாரீர் 99
(308) ஓமத்தன் - உருவருவ வடிவம்., பிரணவதேகம். ச. மு. க.
சாமத்தை - பொ. சு., ச. மு. க; சாமத்தை - சாகுந்தன்மையை., ச. மு. க.
4453 ஓமென்ப தற்குமுன் ஆமென் றுரைத்துடன்

ஊமென்று(310) காட்டினீர் வாரீர்

நாமென்று நாட்டினீர் வாரீர்.

வாரீர்100
(310) ஓம் - ஆம் - ஊம் - ஓம் ஹாம் ஹும். பீஜாக்கரங்கள்.
4454 ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே

செவ்வியன் ஆக்கினீர் வாரீர்

ஒவ்விஒன் றாக்கினீர் வாரீர்.

வாரீர் 101
4455 கண்ணனை யீர்உம்மைக் காணஎன் ஆசை

கடல்பொங்கு கின்றது வாரீர்

உடல்தங்கு கின்றது வாரீர்.

வாரீர் 102
4456 கண்டணைந் தால்அன்றிக் காதல் அடங்காதென்

கண்மணி யீர்இங்கு வாரீர்

உண்மணி யீர்இங்கு வாரீர்.

வாரீர் 103
4457 கட்டிக்கொண் டும்மைக் கலந்து கொளல்வேண்டும்

காரண ரேஇங்கு வாரீர்

பூரண ரேஇங்கு வாரீர்.

104
வாரீர் சிதம்பர வல்லி சிவகாம

வல்லி மணாளரே வாரீர்

மணிமன்ற வாணரே வாரீர்.


71. அம்பலவாணர் ஆடவருகை

சிந்து

பல்லவி
4458. ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்

அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.

1
கண்ணிகள்
4459 தன்மைபிறர்க் கறிவரியீர் ஆடவா ரீர்

தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
வன்மைமனத் தவர்க்கரியீர் ஆடவா ரீர்

வஞ்சமிலா நெஞ்சகத்தீர் ஆடவா ரீர்
தொன்மைமறை முடியமர்ந்தீர் ஆடவா ரீர்

துரியபதங் கடந்தவரே ஆடவா ரீர்
இன்மைதவிர்த் தெனைமணந்தீர் ஆடவா ரீர்.

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்

ஆடவா ரீர் 1
4460 திருவாளர் போற்ற என்னோ டாடவா ரீர்

திருவனையார் வாழ்த்தஇங்கே ஆடவா ரீர்
பெருவாய்மைப் பெருந்தகையீர் ஆடவா ரீர்

பேராசை பொங்குகின்றேன் ஆடவா ரீர்
உருவாகி ஓங்குகின்றீர் ஆடவா ரீர்

உத்தமரே இதுதருணம் ஆடவா ரீர்
இருவாணர் ஏத்தநின்றீர் ஆடவா ரீர்

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர்2
4461 வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர்

வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர்
மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர்

மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர்
கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர்

கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர்
ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர்

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர் 3
4462 இல்லாமை நீக்கிநின்றீர் ஆடவா ரீர்

என்னைமண மாலையிட்டீர் ஆடவா ரீர்
கொல்லாமை நெறிஎன்றீர் ஆடவா ரீர்

குற்றமெலாங் குணங்கொண்டீர் ஆடவா ரீர்
நல்லார்சொல் நல்லவரே ஆடவா ரீர்

நற்றாயில் இனியவரே ஆடவா ரீர்
எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர் 4
4463 ஆசைகொண்டேன் ஆடஎன்னோ டாடவா ரீர்

ஆசைவெட்கம் அறியாதால் ஆடவா ரீர்
ஓசைகொண்ட தெங்குமிங்கே ஆடவா ரீர்

உம்ஆணை உம்மைவிடேன் ஆடவா ரீர்
காசுபணத் தாசையிலேன் ஆடவா ரீர்

கைபிடித்தாற் போதும்என்னோ டாடவா ரீர்
ஏசறல்நீத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர் 5
4464 சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவா ரீர்

சாகாத வரந்தந்தீர் ஆடவா ரீர்
கன்மார்க்க மனங்கரைத்தீர் ஆடவா ரீர்

கண்ணிசைந்த கணவரேநீர் ஆடவா ரீர்
சொன்மார்க்கப் பொருளானீர் ஆடவா ரீர்

சுத்தஅருட் சோதியரே ஆடவா ரீர்
என்மார்க்கம் உளத்துகந்தீர் ஆடவா ரீர்

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர் 6
4465 அண்டமெலாம் கண்டவரே ஆடவா ரீர்

அகண்டபரி பூரணரே ஆடவா ரீர்
பண்டமெலாம் படைத்தவரே ஆடவா ரீர்

பற்றொடுவீ டில்லவரே ஆடவா ரீர்
கொண்டெனைவந் தாண்டவரே ஆடவா ரீர்

கூத்தாட வல்லவரே ஆடவா ரீர்
எண்தகுபொற் சபையுடையீர் ஆடவா ரீர்

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர் 7
4466 பேதநினை யாதுவிரைந் தாடவா ரீர்

பின்பாட்டுக் காலையிதே ஆடவா ரீர்
ஓதஉல வாதவரே ஆடவா ரீர்

உள்ளாசை பொங்குகின்ற தாடவா ரீர்
சாதல்அறுத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்

தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
ஏதமறுத் தவர்க்கினியீர் ஆடவா ரீர்

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர் 8
4467 கள்ளமொன்றும் அறியேன்நான் ஆடவா ரீர்

கைகலந்து கொண்டீர்என்னோ டாடவா ரீர்
உள்ளபடி உரைக்கின்றேன் ஆடவா ரீர்

உம்மாசை பொங்குகின்ற தாடவா ரீர்
தள்ளரியேன் என்னோடிங்கே ஆடவா ரீர்

தாழ்க்கில்இறை யும்தரியேன் ஆடவா ரீர்
எள்ளல்அறுத் தாண்டுகொண்டீர் ஆடவா ரீர்

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர் 9
4468 நச்சுகின்றேன் நிச்சலிங்கே ஆடவா ரீர்

நாணமச்சம் விட்டேனென்னோ டாடவா ரீர்
விச்சையெலாம் தந்துகளித் தாடவா ரீர்

வியந்துரைத்த தருணமிதே ஆடவா ரீர்
எச்சுகமும் ஆகிநின்றீர் ஆடவா ரீர்

எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்.
இச்சைமய மாய்இருந்தேன் ஆடவா ரீர்

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர் 10
4469 என்உயிருக் குயிரானீர் ஆடவா ரீர்

என்அறிவுக் கறிவானீர் ஆடவா ரீர்
என்னுடைஎன் பிற்கலந்தீர் ஆடவா ரீர்

என்னுடைஉள் ளத்திருந்தீர் ஆடவா ரீர்
என்உரிமைத் தாயனையீர் ஆடவா ரீர்

எனதுதனித் தந்தையரே ஆடவா ரீர்
என்ஒருமைச் சற்குருவே ஆடவா ரீர்

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர் 11
ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.


72. அம்பலவாணர் அணையவருகை

சிந்து

பல்லவி
4470. அணையவா ரீர் என்னை அணையவா ரீர்
அணிவளர்(311)சிற் றம்பலத்தீர் அணையவா ரீர்.
1
(311) அணிகிளர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.
கண்ணிகள்
4471 இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்

எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்
இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்

எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்
இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்

இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்
இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர் 1
4472 உலகமெல்லாம் உடையவரே அணையவா ரீர்

உண்மைஉரைக் கின்றவரே அணையவா ரீர்
கலகமறுத் தாண்டவரே அணையவா ரீர்

கண்ணனைய காதலரே அணையவா ரீர்
அலகறியாப் பெருமையரே அணையவா ரீர்

அற்புதப்பொற் சோதியரே அணையவா ரீர்
இலகுசபா பதியவரே அணையவா ரீர்

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர் 2
4473 பொதுவில்நடிக் கின்றவரே அணையவா ரீர்

பொற்புடைய புண்ணியரே அணையவா ரீர்
மதுவில்இனிக் கின்றவரே அணையவா ரீர்

மன்னியஎன் மன்னவரே அணையவா ரீர்
விதுவின்அமு தானவரே அணையவா ரீர்

மெய்யுரைத்த வித்தகரே அணையவா ரீர்
இதுதருணம் இறையவரே அணையவா ரீர்

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர் 3
4474 வினைமாலை நீத்தவரே அணையவா ரீர்

வேதமுடிப் பொருளவரே அணையவா ரீர்
அனைமாலைக் காத்தவரே அணையவா ரீர்

அருட்பெருஞ்சோ திப்பதியீர் அணையவா ரீர்
புனைமாலை வேய்ந்தவரே அணையவா ரீர்

பொதுவில்நிறை பூரணரே அணையவா ரீர்
எனைமாலை யிட்டவரே அணையவா ரீர்

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர் 4
4475 சிறுவயதில் எனைவிழைந்தீர் அணையவா ரீர்

சித்தசிகா மணியேநீர் அணையவா ரீர்
உறுவயதிங் கிதுதருணம் அணையவா ரீர்

உண்மைசொன்ன உத்தமரே அணையவா ரீர்
பொறுமைமிக உடையவரே அணையவா ரீர்

பொய்யாத வாசகரே அணையவா ரீர்
இறுதிதவிர்த் தாண்டவரே அணையவா ரீர்

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர் 5
4476 சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்

தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்
ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர்

ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர்
ஓதியுணர் வரியவரே அணையவா ரீர்

உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர்
ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர்

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர் 6
4477 அன்பாட்டை விழைந்தவரே அணையவா ரீர்

அருட்சோதி வடிவினரே அணையவா ரீர்
துன்பாட்டை ஒழித்தவரே அணையவா ரீர்

துரியநிறை பெரியவரே அணையவா ரீர்
பின்பாட்டுக் காலையிதே அணையவா ரீர்

பிச்சேற்று கின்றவரே அணையவா ரீர்
என்பாட்டை ஏற்றவரே அணையவா ரீர்

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர் 7
4478 அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர்

ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணையவா ரீர்
புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர்

பொன்மேனிப் புண்ணியரே அணையவா ரீர்
வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர்

மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
இரைக்கணவு தருணமிதே அணையவா ரீர்

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர் 8
4479 கருணைநடஞ் செய்பவரே அணையவா ரீர்

கண்மணியில் கலந்தவரே அணையவா ரீர்
அருள்நிறைசிற் சபையவரே அணையவா ரீர்

அன்பர்குறை தீர்த்தவரே அணையவா ரீர்
தருணமிது விரைந்தென்னை அணையவா ரீர்

சத்தியரே நித்தியரே அணையவா ரீர்
இருள்நிறைந்தார்க் கறிவரியீர் அணையவா ரீர்

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர் 9
4480 சேரஉம்மேல் ஆசைகொண்டேன் அணையவா ரீர்

திருவுளமே அறிந்ததெல்லாம் அணையவா ரீர்
ஆரெனக்கிங் கும்மையல்லால் அணையவா ரீர்

அயலறியேன் ஆணைஉம்மேல் அணையவா ரீர்
ஈரகத்தேன் அல்லஇங்கே அணையவா ரீர்

என்னாசை பொங்குகின்ற தணையவா ரீர்
ஏரகத்தே அமர்ந்தருள்வீர் அணையவா ரீர்

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர் 10
4481 கலந்துகொள வேண்டுகின்றேன் அணையவா ரீர்

காதல்பொங்கு கின்றதென்னை அணையவா ரீர்
புலந்தறியேன் விரைகின்றேன் அணையவா ரீர்

புணர்வதற்குத் தருணமிதே அணையவா ரீர்
அலந்தவிடத் தருள்கின்றீர் அணையவா ரீர்

அரைக்கணமும் இனித்தரியேன் அணையவா ரீர்
இலந்தைநறுங் கனியனையீர்அணையவா ரீர்

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர் 11
அணையவா ரீர்என்னை அணையவா ரீர்
அணிவளர்(312) சிற் றம்பலத்தீர் அணையவா ரீர்.
(312) அணிகிளர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.


73. வருவார் அழைத்துவாடி

சிந்து

பல்லவி
4482. வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
1
பல்லவி எடுப்பு
4483 திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங்குஞ் சிதபாதர்
சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர்
வருவார் 1
கண்ணிகள்
4484 சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு
இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே
இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே
வருவார் 1
4485 இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை(313)என்றுசொன்னால்
வருவார் 2
(313) உன்மேலாணை - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
4486 மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து
எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது
வருவார் 3
வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல வரமே.


74. என்ன புண்ணியம் செய்தேனோ

சிந்து

பல்லவி
4487. என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்

என்ன புண்ணியம் செய்தே னோ.

1
பல்லவி எடுப்பு
4488 மன்னர்நாதர் அம்பலவர் வந்தார்வந்தார் என்றுதிருச்

சின்னநாதம் என்னிரண்டு செவிகளினுள் சொல்கின்றதே.

என்ன 1
கண்ணிகள்

4489
பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும்

போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய்
அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை

ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே.

என்ன 1
4490 பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார்

பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில்
ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை

அணையவந்தார்வந்தார்என்றேஇணையில்நாதம்சொல்கின்றதே.

என்ன 2
4491 எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர்

எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார்
மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை

மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே.

என்ன 3
4492 ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார்

ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார்
ஆதியந்தம் காண்பரிய ஜோதிசுயஞ் ஜோதிஉன்னோ

டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே.

என்ன 4
4493 அற்புதப்பே ரழகாளர் சொற்பதம் கடந்துநின்றார்

அன்பரெலாம் தொழமன்றில் இன்பநடம் புரிகின்றார்
சிற்பரர்எல் லாமும்வல்ல தற்பரர் விரைந்திங்குன்னைச்

சேரவந்தார் வந்தார்என்றோங் காரநாதம் சொல்கின்றதே.

என்ன 5
4494 ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற

ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர்
காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக்

காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே.

என்ன 6
4495 பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும்

பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர்
வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க

வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே.

என்ன 7
என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
என்ன புண்ணியம் செய்தே னோ.


75. இவர்க்கும் எனக்கும்

சிந்து

பல்லவி
4496. இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது

என்றும் தீரா வழக்குக் காண டி.

1
பல்லவி எடுப்பு
4497 எவர்க்கும் பெரியவர்பொன் னம்பலத் தேநடம்

இட்டார் எனக்குமாலை இட்டார் இதோவந்தார்.

இவர்க்கும் 1
கண்ணிகள்
4498 அன்றிதோ வருகின்றேன் என்று போனவர்அங்கே

யார்செய்த தடையாலோ இருந்தார்என் கையிற்சங்கை
இன்றுதம் கையிற்கொண்டே வந்துநிற் கின்றார்இங்கே

இந்தக் கதவைமூடு இவர்போவ தினிஎங்கே.

இவர்க்கும் 1
4499 அவரவர் உலகத்தே அறிந்தலர் தூற்றப்பட்டேன்

அன்றுபோ னவர்இன்று வந்துநிற் கின்றார்கெட்டேன்
இவர்சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன்

இந்தக் கதவைமூடு இனிஎங்கும் போகஒட்டேன்.

இவர்க்கும் 2
4500 சின்ன வயதில்என்னைச் சேர்ந்தார்புன் னகையோடு

சென்றார் தயவால்இன்று வந்தார் இவர்க்கார்ஈடு
என்னைவிட் டினிஇவர் எப்படிப் போவார்ஓடு

இந்தக் கதவைமூடு இரட்டைத்தாட் கோலைப்போடு.

3
இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது

என்றும் தீரா வழக்குக் காண டி.


76. இது நல்ல தருணம்

சிந்து

பல்லவி
4501. இதுநல்ல தருணம் - அருள்செய்ய

இதுநல்ல தருணம்.

1
பல்லவி எடுப்பு
4502 பொதுநல்ல நடம்வல்ல புண்ணிய ரேகேளும்

பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன்.

இதுநல்ல 1
கண்ணிகள்
4503 மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது

வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது

கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது.

இதுநல்ல 1
4504 குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று

குதித்த(314) மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது

விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது.

இதுநல்ல 2
(314) கொதித்த - முதற்பதிப்பு., பொ சு, பி. இரா., ச. மு. க.
4505 கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று

கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று
தாபமும் சோபமும் தான்தானே சென்றது

தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது.

இதுநல்ல 3
4506 கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது

கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது
புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று

பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று.

4
இதுநல்ல தருணம் - அருள்செய்ய

இதுநல்ல தருணம்.


77. ஆனந்தப் பரிவு

தாழிசை

4507. நானந்த மடையாதெந் நாளினும்உள் ளவனாகி நடிக்கும் வண்ணம்
ஆனந்த நடம்புரிவான் ஆனந்த அமுதளித்தான் அந்தோ அந்தோ.
1
4508 சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக
ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
2
4509 துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்
கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.
3
4510 மருட்பெருஞ்சோ தனைஎனது மட்டுமிலா வணங்கருணை வைத்தே மன்றில்
அருட்பெருஞ்சோ திப்பெருமான் அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
4
4511 துன்பமெலாம் ஒருகணத்தில் தொலைத்தருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க
அன்புடையான் அம்பலத்தான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
5
4512 பந்தமெலாம் தவிர்த்தருளிப் பதந்தருயோ காந்தமுதல் பகரா நின்ற
அந்தமெலாம் கடந்திடச்செய் தருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
6
4513 பேராலும் அறிவாலும் பெரியரெனச் சிறப்பாகப் பேச நின்றோர்
ஆராலும் பெறலரிய தியாததனைப் பெறுவித்தான் அந்தோ அந்தோ.
7
4514 தினைத்தனையும் அறிவறியாச் சிறியனென நினையாமல் சித்தி யான
அனைத்துமென்றன் வசமாக்கி அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
8
4515 பொதுவாகிப் பொதுவில்நடம் புரிகின்ற பேரின்பப் பொருள்தான் யாதோ
அதுநானாய் நான்அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ.
9
4516 மருள்வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலு மாய்வி லாத
அருள்வடிவாய் இம்மையிலே அடைந்திடப்பெற் றாடுகின்றேன்அந்தோஅந்தோ
10
4517 எக்கரையும் காணாதே இருட்கடலில் கிடந்தேனை எடுத்தாட் கொண்டு
அக்கரைசேர்த்தருளெனுமோர்சர்க்கரையும்எனக்களித்தான்அந்தோஅந்தோ(315).
11
(315) இப்பதினோராம் செய்யுள் ஒரு தனிப்பாடல். பொருள் ஒற்றுமை கருதி

இப்பதிகத்தில் சேர்க்கப்பெற்றது.


78. ஞான மருந்து

சிந்து

பல்லவி
4518. ஞான மருந்திம் மருந்து - சுகம்
நல்கிய சிற்சபா நாத மருந்து.
1
கண்ணிகள்
4519 அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை

ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து
பொருட்பெரும் போக மருந்து - என்னைப்

புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து.

ஞான 1
4520 எல்லாம்செய் வல்ல மருந்து - என்னுள்

என்றும் விடாமல் இனிக்கு மருந்து
சொல்லால் அளவா மருந்து - சுயஞ்

ஜோதி அருட்பெருஞ் ஜோதி மருந்து.

ஞான 2
4521 காணாது காட்டு மருந்து - என்றன்

கையிற்பொற் கங்கணம் கட்டு மருந்து
ஆணாகிப் பெண்ணாம் மருந்து - அது

வாகி மணிமன்றில் ஆடு மருந்து.

ஞான 3
4522 சுத்தசன் மார்க்க மருந்து - அருட்

சோதி மலையில் துலங்கு மருந்து
சித்துரு வான மருந்து - என்னைச்

சித்தெலாம் செய்யச்செய் வித்த மருந்து.

ஞான 4
4523 அன்பர்க் கெளிய மருந்து - மற்றை

ஐவர்க்கும் காண்டற் கரிய மருந்து
என்பற்றில் ஓங்கு மருந்து - என்னை

இன்ப நிலையில் இருத்து மருந்து.

ஞான 5
4524 நாதாந்த நாட்டு மருந்து - பர

ஞான வெளியில் நடிக்கு மருந்து
போதாந்தர்க் கெய்து மருந்து - என்னுள்

பொன்னடி காட்டிப் புணர்ந்த மருந்து.

ஞான 6
4525 ஆதி அனாதி மருந்து - திரு

அம்பலத் தேநட மாடு மருந்து
ஜோதி மயமா மருந்து - என்னைச்

சோதியா தாண்ட துரிய மருந்து.

ஞான 7
4526 ஆறந்தத் தோங்கு மருந்து - அதற்

கப்பாலுக் கப்பாலும் ஆன மருந்து
ஊறந்த மில்லா மருந்து - எனக்

குள்ளே கலந்த உறவா மருந்து.

ஞான 8
4527 என்னுயிர்க் கன்பா மருந்து - கலந்

தென்னுயிர்க் குள்ளே இருந்த மருந்து
என்னுயிர் காக்கு மருந்து - என்றும்

என்னுயி ராகிய இன்ப மருந்து.

ஞான 9
4528 என்னறி வுட்கொள் மருந்து - என்றும்

என்னறி வாகி இலங்கு மருந்து
என்னறி வின்ப மருந்து - என்னுள்

என்னறி வுக்கறி வென்னு மருந்து

ஞான 10
4529 என்குரு வான மருந்து - என்றும்

என்தெய்வ மாகி இருக்கு மருந்து
என்அன்னை யென்னு மருந்து - என்றும்

என்தந்தை யாகிய இன்ப மருந்து.

ஞான 11
4530 என்பெரு வாழ்வா மருந்து - என்றும்

என்செல்வ மாகி இருக்கு மருந்து
என்னுயிர் நட்பா மருந்து - எனக்

கெட்டெட்டுச் சித்தியும் ஈந்த மருந்து.

ஞான 12
4531 என்னிறை யான மருந்து - மகிழ்ந்

தெனக்குத்தன் பொன்மேனி ஈந்த மருந்து
தன்னறி வாகு மருந்து - என்னைத்

தந்த மருந்தென்றன் சொந்த மருந்து.

ஞான 13
4532 உள்ளத்தி னுள்ளா மருந்து - என்றன்

உயிருக் கனாதி உறவா மருந்து
தெள்ளத் தெளிக்கு மருந்து - என்னைச்

சிவமாக்கிக் கொண்ட சிவாய மருந்து.

ஞான 14
4533 மெய்ப்பொரு ளென்னு மருந்து - எல்லா

வேதா கமத்தும் விளங்கு மருந்து
கைப்பொரு ளான மருந்து - மூன்று

கண்கொண்ட என்னிரு கண்ணுள் மருந்து.

ஞான 15
4534 மதியில் விளைந்த மருந்து - யார்க்கும்

மதிக்கப்ப டாதபொன் வண்ண மருந்து
கதிதரும் இன்ப மருந்து - அருட்

கண்ணால்என் றன்னைக் கலந்த மருந்து.

ஞான 16
4535 கற்பூர ஜோதி மருந்து - பசுங்

கற்பூர நன்மணங் காட்டு மருந்து
பொற்பூவின் ஓங்கு மருந்து - என்தற்

போதம் தவிர்த்தசிற் போத மருந்து.

ஞான 17
4536 மேலை வெளியா மருந்து - நான்

வேண்டுந்தோ றெல்லாம் விளையு மருந்து
சாலை விளக்கு மருந்து - சுத்த

சமரச சன்மார்க்க சங்க மருந்து.

ஞான 18
4537 என்னைத்தா னாக்கு மருந்து - இங்கே

இறந்தாரை எல்லாம் எழுப்பு மருந்து
துன்னுமெய்ச் சோதி மருந்து - அருட்

சோதியால் என்னைத் துலக்கு மருந்து.

ஞான 19
4538 பொய்யர்க் கரிதா மருந்து - என்னைப்

புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து
கையிற் கிடைத்த மருந்து - சிவ

காமக் கொடியைக் கலந்த மருந்து.

ஞான 20
4539 ஆணவம் தீர்க்கு மருந்து - பர

மானந்தத் தாண்டவ மாடும் மருந்து
மாணவ வண்ண மருந்து - என்னை

வலிய அழைத்து வளர்க்கு மருந்து.

ஞான 21
4540 வானடு வான மருந்து - என்னை

மாமணி மேடைமேல் வைத்த மருந்து
ஊனம் தவிர்த்த மருந்து - கலந்

துள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து.

ஞான 22
4541 மலையிலக் கான மருந்து - என்றன்

மறைப்பைத் தவிர்த்தமெய் வாழ்க்கை மருந்து
கலைநலம் காட்டு மருந்து - எங்கும்

கண்ணாகிக் காணும் கனத்த மருந்து.

ஞான 23
4542 அற்புத ஜோதி மருந்து - எல்லாம்

ஆகியன் றாகி அமர்ந்த மருந்து
தற்பதம் தந்த மருந்து - எங்கும்

தானேதா னாகித் தனித்த மருந்து.

ஞான 24
4543 தன்னை அளித்த மருந்து - என்றும்

சாகாத நல்வரம் தந்த மருந்து
பொன்னடி ஈந்த மருந்து - அருட்

போனகம் தந்த புனித மருந்து.

ஞான 25
4544 கண்ணுக் கினிய மருந்து - என்றன்

கைப்பொரு ளாந்தங்கக் கட்டி மருந்து
எண்ணுக் கடங்கா மருந்து - என்னை

ஏதக்குழிவிட் டெடுத்த மருந்து.

ஞான 26
4545 சுட்டப் படாத மருந்து - என்றன்

தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து
எட்டுதற் கொண்ணா மருந்து - நான்

எட்டிப் பிடிக்க இசைந்த மருந்து.

ஞான 27
4546 உன்னற் கரிதா மருந்து - எனக்

குள்ளும் புறத்தும் உலாவு மருந்து
தன்னந் தனித்த மருந்து - சுத்தச்

சாக்கிரா தீதச் சபேச மருந்து.

ஞான 28
4547 ஒன்றில்ஒன் றான மருந்து - அந்த

ஒன்றில் இரண்டாகி ஓங்கு மருந்து
அன்றிமூன் றான மருந்து - நான்

காகிஐந் தாகி அமர்ந்த மருந்து.

ஞான 29
4548 வெளிக்குள் வெளியா மருந்து - எல்லா

வெளியும் கடந்து விளங்கு மருந்து
ஒளிக்குள் ஒளியா மருந்து - எல்லா

ஒளியும்தா னாகிய உண்மை மருந்து.

ஞான 30
4549 ஆறாறுக் கப்பால் மருந்து - அதற்

கப்புறத் தீராறுக் கப்பால் மருந்து
ஈறாதி இல்லா மருந்து - என்னை

எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து.

ஞான 31
4550 ஆரணத் தோங்கு மருந்து - அருள்

ஆகம மாகிஅண் ணிக்கு மருந்து
காரணம் காட்டு மருந்து - எல்லாம்

கண்ட மருந்தென்னுள் கொண்ட மருந்து.

ஞான 32
4551 மலமைந்து நீக்கு மருந்து - புவி

வானண்ட மெல்லாம் வளர்க்கு மருந்து
நலமிக் கருளு மருந்து - தானே

நானாகித் தானாளு நாட்டு மருந்து.

33
ஞான மருந்திம் மருந்து - சுகம்

நல்கிய சிற்சபா நாத மருந்து.


79. சிவசிவ ஜோதி

சிந்து

பல்லவி
4552. சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
சிவசிவ சிவசிவ ஜோதி.
1
கண்ணிகள்
4553 சிற்பர மாம்பரஞ் ஜோதி - அருட்

சித்தெல்லாம் வல்ல சிதம்பர ஜோதி
தற்பர தத்துவ ஜோதி - என்னைத்

தானாக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி.

சிவசிவ 1
4554 சித்துரு வாம்சுயஞ் ஜோதி - எல்லாம்

செய்திட வல்ல சிதம்பர ஜோதி
அத்துவி தானந்த ஜோதி - என்னை

ஆட்கொண் டருளும்சிற் றம்பல ஜோதி.

சிவசிவ 2
4555 சின்மய மாம்பெருஞ் ஜோதி - அருட்

செல்வ மளிக்கும் சிதம்பர ஜோதி
தன்மய மாய்நிறை ஜோதி - என்னைத்

தந்தமெய் ஜோதி சதானந்த ஜோதி.

சிவசிவ 3
4556 ஆதிஈ றில்லாமுற் ஜோதி - அரன்

ஆதியர் தம்மை அளித்தபிற் ஜோதி
ஓதி உணர்வரும் ஜோதி - எல்லா

உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி.

சிவசிவ 4
4557 மன்னிய பொன்வண்ண ஜோதி - சுக

வண்ணத்த தாம்பெரு மாணிக்க ஜோதி
துன்னிய வச்சிர ஜோதி - முத்து

ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி.

சிவசிவ 5
4558 பார்முதல் ஐந்துமாம் ஜோதி - ஐந்தில்

பக்கமேல் கீழ்நடுப் பற்றிய ஜோதி
ஓர்ஐம் பொறியுரு ஜோதி - பொறிக்

குள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஜோதி.

சிவசிவ 6
4559 ஐம்புல மும்தானாம் ஜோதி - புலத்

தகத்தும் புறத்து மலர்ந்தொளிர் ஜோதி
பொய்ம்மயல் போக்கும்உள் ஜோதி - மற்றைப்

பொறிபுலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி.

சிவசிவ 7
4560 மனமாதி எல்லாமாம் ஜோதி - அவை

வாழ அகம்புறம் வாழ்கின்ற ஜோதி
இனமான உள்ளக ஜோதி - சற்றும்

ஏறா திறங்கா தியக்குமோர் ஜோதி.

சிவசிவ 8
4561 முக்குண மும்மூன்றாம் ஜோதி - அவை

முன்பின் இயங்க முடுக்கிய ஜோதி
எக்குணத் துள்ளுமாம் ஜோதி - குணம்

எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி.

சிவசிவ 9
4562 பகுதிமூன் றாகிய ஜோதி - மூலப்

பகுதிகள் மூன்றும் படைத்தருள் ஜோதி
பகுதி பலவாக்கும் ஜோதி - சற்றும்

விகுதிஒன் றின்றி விளக்கிய ஜோதி.

சிவசிவ 10
4563 கால முதற்காட்டும் ஜோதி - கால

காரணத் தப்பால் கடந்தொளிர் ஜோதி
கோலம் பலவாகும் ஜோதி - ஒன்றும்

குறிக்கப் படாச்சிற் குணப்பெருஞ் சோதி.

சிவசிவ 11
4564 தத்துவம் எல்லாமாம் ஜோதி - அந்தத்

தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி
அத்துவி தப்பெருஞ் ஜோதி - எல்லாம்

அருளில் விளங்க அமர்த்திய ஜோதி.

சிவசிவ 12
4565 சத்தர்கள் எல்லாமாம் ஜோதி - அவர்

சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி
முத்தர் அனுபவ ஜோதி - பர

முத்தியாம் ஜோதிமெய்ச் சித்தியாம் ஜோதி.

சிவசிவ 13
4566 ஆறந்தத் தேநிறை ஜோதி - அவைக்

கப்புறத் தப்பாலும் ஆகிய ஜோதி
வீறும் பெருவெளி ஜோதி - மேலும்

வெட்ட வெளியில் விளங்கிய ஜோதி.

சிவசிவ 14
4567 பேரருட் ஜோதியுள் ஜோதி - அண்ட

பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி
வாரமுற் றோங்கிய ஜோதி - மன

வாக்குக் கெட்டாததோர் மாமணி(316) ஜோதி.

சிவசிவ 15
(316) மாணிக்க - ச. மு. க. பதிப்பு.
4568 ஒன்றான பூரண ஜோதி - அன்பில்

ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஜோதி
என்றா ஒளிர்கின்ற ஜோதி - என்னுள்

என்றும் விளங்கிய என்னுயிர் ஜோதி.

சிவசிவ 16
4569 மெய்யேமெய் யாகிய ஜோதி - சுத்த

வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி
துய்ய சிவானந்த ஜோதி - குரு

துரியத் தலத்தே துலங்கிய ஜோதி.

சிவசிவ 17
4570 சிவமய மாம்சுத்த ஜோதி - சுத்த

சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
உவமையில் லாப்பெருஞ் ஜோதி - என

துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி.

சிவசிவ 18
4571 என்னைத்தா னாக்கிய ஜோதி - இங்கே

இறந்தாரை எல்லாம் எழுப்புமோர் ஜோதி
அன்னைக்கு மிக்கருட் ஜோதி - என்னை

ஆண்டமு தம்தந்த ஆனந்த ஜோதி.

சிவசிவ 19
4572 சித்தம் சிவமாக்கும் ஜோதி - நான்

செய்த தவத்தால் தெரிந்தஉட் ஜோதி
புத்தமு தாகிய ஜோதி - சுக

பூரண மாய்ஒளிர் காரண ஜோதி.

சிவசிவ 20
4573 தம்பத்தில் ஏற்றிய ஜோதி - அப்பால்

சார்மணி மேடைமேல் தான்வைத்த ஜோதி
விம்பப் பெருவெளி ஜோதி - அங்கே

வீதியும் வீடும் விளக்கிய ஜோதி.

சிவசிவ 21
4574 சுகமய மாகிய ஜோதி - எல்லா

ஜோதியு மான சொரூபஉட் ஜோதி
அகமிதந் தீர்த்தருள் ஜோதி - சச்சி

தானந்த ஜோதி சதானந்த ஜோதி.

சிவசிவ 22
4575 நித்த பரானந்த ஜோதி - சுத்த

நிரதிச யானந்த நித்திய ஜோதி
அத்துவி தானந்த ஜோதி - எல்லா

ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி.

சிவசிவ 23
4576 பொய்யாத புண்ணிய ஜோதி - எல்லாப்

பொருளும் விளங்கப் புணர்த்திய ஜோதி
நையா தருள்செய்த ஜோதி - ஒரு

நானும்தா னும்ஒன்றாய் நண்ணிய ஜோதி.

சிவசிவ 24
4577 கண்ணிற் கலந்தருள் ஜோதி - உளக்

கண்ணுயிர்க் கண்ணருட் கண்ணுமாம் ஜோதி
எண்ணிற்ப டாப்பெருஞ் சோதி - நான்

எண்ணிய வண்ணம் இயற்றிய ஜோதி.

சிவசிவ 25
4578 விந்து ஒளிநடு ஜோதி - பர

விந்து ஒளிக்குள் விளங்கிய ஜோதி
நம்துயர் தீர்த்தருள் ஜோதி - பர

நாதாந்த நாட்டுக்கு நாயக ஜோதி.

சிவசிவ 26
4579 தான்அன்றி ஒன்றிலா ஜோதி - என்னைத்

தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி
நான்இன்று கண்டதோர் ஜோதி - தானே

நானாகி வாழ்ந்திட நல்கிய ஜோதி.

சிவசிவ 27
4580 தன்னிகர் இல்லதோர் ஜோதி - சுத்த

சன்மார்க்க சங்கம் தழுவிய ஜோதி
என்னுள் நிறைந்தமெய் ஜோதி - என்னை

ஈன்றைந் தொழில்செய்என் றேவிய ஜோதி.

சிவசிவ 28
4581 அச்சம் தவிர்த்தமெய் ஜோதி - என்னை

ஆட்கொண் டருளிய அம்பல ஜோதி
இச்சை எலாம்தந்த ஜோதி - உயிர்க்

கிங்குமங் கென்னாமல் எங்குமாம் ஜோதி.

சிவசிவ 29
4582 காலையில் நான்கண்ட ஜோதி - எல்லாக்

காட்சியும் நான்காணக் காட்டிய ஜோதி
ஞாலமும் வானுமாம் ஜோதி - என்னுள்

நானாகித் தானாகி நண்ணிய ஜோதி.

சிவசிவ 30
4583 ஏகாந்த மாகிய ஜோதி - என்னுள்

என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி
சாகாத வரந்தந்த ஜோதி - என்னைத்

தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஜோதி.

சிவசிவ 31
4584 சுத்த சிவமய ஜோதி - என்னை

ஜோதி மணிமுடி சூட்டிய ஜோதி
சத்திய மாம்பெருஞ் ஜோதி - நானே

தானாகி ஆளத் தயவுசெய் ஜோதி.

32
சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
சிவசிவ சிவசிவ ஜோதி.


80. ஜோதியுள் ஜோதி

சிந்து

பல்லவி
4585. ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
1
கண்ணிகள்
4586 சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்

சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 1
4587 வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில்

விளைவு பலபல வேறென்று காட்டிச்
சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 2
4588 சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு

சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும்
செல்வம் கொடுத்தது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 3
4589 தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த

சமரச சத்திய சன்மார்க்க நீதிச்
செங்கோல் அளித்தது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 4
4590 ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும்

அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
தீபத்தை வைத்தது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 5
4591 மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும்

விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான்
செய்யென்று தந்தது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 6
4592 என்பால் வருபவர்க் கின்றே - அருள்

ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே(317)
தென்பால் இருந்தது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 7
(317) ஈகின்றோம் ஈகின்றோம் ஈகின்றோம் என்றே - ச. மு. க.
4593 துரியத் தலமூன்றின் மேலே - சுத்த

துரியப் பதியில் அதுஅத னாலே
தெரியத் தெரிவது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 8
4594 பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி

பரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே
திரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 9
4595 தற்பர மேவடி வாகி - அது

தன்னைக் கடந்து தனிஉரு வாகிச்
சிற்பரத் துள்ளது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 10
4596 நவவெளி நால்வகை யாதி - ஒரு

நடுவெளிக் குள்ளே நடத்திய நீதிச்
சிவவெளி யாம்இது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 11
4597 மேருவெற் புச்சியின் பாலே - நின்று

விளங்குமோர் தம்பத்தின் மேலுக்கு மேலே
சேருமோர் மேடைமேல் பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 12
4598 ஆரண வீதிக் கடையும் - சுத்த

ஆகம வீதிகள் அந்தக் கடையும்
சேர நடுக்கடை பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 13
4599 பாடல் மறைகளோர் கோடி - அருட்

பாத உருவ சொரூபங்கள் பாடி
தேட இருந்தது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 14
4600 நீடு சிவாகமங் கோடி - அருள்

நேருறப் பாடியும் ஆடியும் ஓடித்
தேட இருந்தது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 15
4601 பத்தி நெறியில் செழித்தே - அன்பில்

பாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே
தித்தித் திருப்பது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 16
4602 பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்

பிரம வெளியினில் பேரரு ளாலே
சித்தாடு கின்றது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 17
4603 தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த

சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோ ங்கும்
திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 18
4604 எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்

எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
செம்பொருள் என்பது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 19
4605 சைவ முதலாக நாட்டும் - பல

சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
தெய்வம் இதுவந்து பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 20
4606 எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு

தெல்லாம் இதிலோர் இறையள வென்னும்
தெள்ளமு தாம்இது பாரீர் -திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 21
4607 எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே

எல்லா உலகும் இயம்புதல் சும்மா
செத்தாரை மீட்பது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 22
4608 பிறந்து பிறந்துழன் றேனை - என்றும்

பிறவா திறவாப் பெருமைதந் தூனைச்
சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 23
4609 வருவித்த வண்ணமும் நானே - இந்த

மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே
தெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 24
4610 பாரிடம் வானிட மற்றும் - இடம்

பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
சேரிட மாம்இது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 25
4611 உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே

உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல்
செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 26
4612 உருவும் உணர்வும்செய் நன்றி - அறி

உளமும் எனக்கே உதவிய தன்றித்
திருவும் கொடுத்தது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 27
4613 எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்

எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத்
திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 28
4614 பேருல கெல்லாம் மதிக்கத் - தன்

பிள்ளைஎன் றென்னைப் பெயரிட் டழைத்தே
சீருறச் செய்தது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி 29
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
திருச்சிற்றம்பலம்